சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, November 24, 2020

அச்சில் வெளிவந்த அற்புதங்கள்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்19 

 

மனிதர்களின் நோக்கம் நல்லதாக இருக்குமானால், அவர்கள் நல்ல கர்மாக்களைச் சேர்த்து வைத்திருப்பார்களேயானால், அவர்களுடைய கஷ்ட காலங்களில்  உயர் ஆத்மாக்களின் உதவி ஏதாவது வகையில் வந்து சேரும் என்பதற்கு இன்னொரு உதாரணம் பார்ப்போம். ’ஆன்மிக விஞ்ஞானி (Spiritual Scientist)’ என்ற பெயரில் ஒரு ஆன்மிகப் பத்திரிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்காவில் வெளிவந்து கொண்டிருந்தது. ஆன்மிகப் பெரியோர்களால் நடத்தப்பட்டு வந்த அந்தப் பத்திரிக்கையில் அறிவார்ந்த ஆன்மிகத்திற்கும் விஞ்ஞான உண்மைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை விளக்கப்பட்டு ஆன்மிகத்தைப் பரப்பும் பத்திரிக்கையாக அது இருந்தது.

 

இலாப நோக்கு இல்லாமல் சேவை நோக்கிலேயே வெளியிடப்பட்டு வந்த அந்தப் பத்திரிக்கை ஆன்மிகப் பெரியோரின் பண ஆதரவுடன் நடத்தப்பட்டது. ஒரு காலக்கட்டத்தில் அதைத் தொடர்ந்து நடத்தப் பணம் போதவில்லை. ஆனாலும் எப்படியோ சமாளித்துப் பத்திரிக்கையை நடத்திய அதன் ஆசிரியர்  பெரும்  பணக்கஷ்டத்தில் சிக்கிக் கொண்டார். முடிவில் ஒரு கூட்டத்தில் அந்தப் பத்திரிக்கையை நிறுத்திக் கொள்ளும் நிலைமை வந்து விட்டது என்று வருத்தத்துடன் தெரிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியும் அந்தப் பத்திரிக்கையில் வெளியானது.

 

அந்தச் செய்தி வெளியான சில நாட்களில் வெஸ்டர்ன் யூனியன் தந்தி ஆபிசில் இருந்து அந்தப் பத்திரிக்கையின் மேலாளருக்குப் போன் வந்தது. ”உங்களுக்குத் தந்தி மூலம் பணம் வந்திருக்கிறது.   உங்கள் அடையாள ஆதாரங்களைச் சமர்ப்பித்து அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்

 

அந்த மேலாளருக்கு ஒன்றும் புரியவில்லை. தந்தி மூலம் பணம் அனுப்பும் அளவுக்கு அவருக்கு செல்வந்தர் நண்பர்கள் யாருமில்லை. ஆனால் தந்தி ஆபிசிலிருந்து போன் செய்து சொன்ன பெயரும் விலாசமும் அவருடையது தான். உடனே திகைப்புடன் அவர் அங்கே சென்றார்.    

 

தந்தி ஆபிசிற்குப் பணம் அனுப்பியிருந்த நபரின் பெயரைச் சொன்னார்கள். அது 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தர்மவானின் பெயராய் இருந்தது. அந்தப் பத்திரிக்கையை நடத்த அவர்களுக்குத் தேவையாக இருந்த பணத்துடன்ஆன்மிக விஞ்ஞானிபத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்துமாறும் அதற்காக அந்தத் தொகை அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்த ஒரு குறிப்பும் இருந்தது.

 

அந்த அதிசயச் செய்தியையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டது. ”தொலைதூர நகரத்தில் இருந்து ஒரு காலஞ்சென்ற தர்மவான் பெயரில் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தத் தந்திக் குறிப்பைப் பலரிடம் காண்பித்தோம். ஆன்மிக ஆர்வலர் யாரோ இந்தப் பெரிய நற்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்றே அனைவரும் அபிப்பிராயப்பட்டார்கள். அது யாரேயானாலும் நன்றி. இப்படியே எதிர்காலத்திலும் நாங்கள் வழிநடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறோம்

 

உண்மையில் அந்தப் பெருந்தொகையை அனுப்பியவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர்களே என்பதை கர்னல் ஓல்காட் அறிவார். உடன் இருப்பவர் என்பதால் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை என்பதையும் அவர் அறிவார். அப்படி இருக்கையில் அந்தப் பணத்தை அவரிடம் தந்து அனுப்பச் சொல்லியிருப்பது ஒரு மகாத்மாவாகவே இருக்க வேண்டும் என்று கர்னல் ஓல்காட் அனுமானித்தார்.

 

இன்னொரு சுவாரசியமான சம்பவம் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் (Incidents in the Life of Madame Blavatsky) என்ற நூலில் வெளியாகியுள்ளது. ஒரு சமயம் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும், இன்னொரு கனவானும் பேசி ஒரு முக்கிய விஷயமாக இன்சூரன்ஸ் செய்ய முடிவெடுத்தார்கள். அது குறித்த வேலையை அவர்களுக்குத் தெரிந்த ஒரு இன்சூரன்ஸ் ப்ரோக்கரிடம் ஒப்படைப்பது என்று தீர்மானித்தார்கள். அது குறித்த விவரங்களை பில்டெல்பியாவில் உள்ள அந்தப் ப்ரோக்கருக்கு அனுப்ப அவர்கள் எண்ணிய போது கர்னல் ஓல்காட்டுக்கும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கும் அந்த விலாசம் சரியாக நினைவுக்கு வரவில்லை.

 

அந்த ப்ரோக்கரிடம் இருந்து வாங்கிய விலாசத்தை பிலடெல்பியாவில் இருக்கும் அவர்கள் வீட்டு மேசையில் வைத்திருந்த நினைவு அவர்களுக்குப் பிறகு வந்தது. அவர்கள் இப்போது இருக்கும் இடமும் பிலடெல்பியா வீடும் பல நூறு மைல்கள் இடைவெளியில் இருந்தன. போய் எடுத்து வரும் தூரமல்ல அது. ”என்ன செய்வது?”  என்று கர்னல் ஓல்காட் கேட்ட போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு அகலமான பேனாக்கத்தியை அங்குள்ள மேசையில் இருந்து எடுத்து அதைச் சிறிது தட்டித் தடவி மேசை மீது வைத்தார். பின் அதன் மீது ஒரு வெற்றுத் தாளை வைத்தார். பின் அந்தத் தாளின் மீதுத் தன் கையை வைத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அந்தத் தாளை எடுத்த போது அந்த அகலமான பேனாக் கத்தியில் அந்த இன்சூரன்ஸ் ப்ரோக்கரின் விலாசம் அச்சாகி இருந்தது. கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அவர்களுடைய பிலடெல்பியா வீட்டில் இருந்த தாளில் அந்த விலாசம் எப்படி எழுதப்பட்டிருந்ததோ அப்படியே அச்சு அசலாக பேனாக்கத்தியிலும் பதிவாகி இருந்தது. அதைப் பார்த்து விலாசம் எழுதி அவர்கள் அந்த இன்சூரன்ஸ் ப்ரோக்கருக்குக் கடிதம் அனுப்பி வைத்தார்கள்.

 

இதில் கர்னல் ஓல்காட்டுக்குத் திகைப்பு என்னவென்றால் இது வரை ஒரு தாளில் இருந்தது இன்னொரு தாளில் பதிவாகி அவர் பார்த்திருக்கிறார். ஒன்றையே இரண்டாக்குவதும் பலவாக்குவதும் கூடப் பார்த்திருக்கிறார். ஆனால் ஒரு ஊரில் ஒரு காகிதத்தில் இருந்தது இன்னொரு ஊரில் ஒரு பேனாக்கத்தியில் அதே எழுத்துக்களில் எப்படி வந்திருக்க முடியும், இந்த அம்மையார் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுமையை ஏற்படுத்தி அசத்துகிறாரே என்ற வியப்பு அவருக்கு மேலிட்டது.

 

ஆனால் பொருட்களில் மட்டுமல்லாமல் தன் உடலிலேயே அற்புதத்தை ஏற்படுத்திக் காட்ட முடியும் என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் முயற்சி செய்ய முனைந்த போது மறுபடியும் கர்னல் ஓல்காட்டுக்கு அது முடியுமா என்ற சந்தேகம் வராமல் இல்லை. அந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்.

 

திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதைநூலை எழுதுகின்ற காலத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை எழுதிக் கொண்டே இருப்பார். அதிகபட்சமாய் அவர் நடப்பதே பாத்ரூமுக்கும், அவர் அறைக்கும் மட்டும் தான். அவர் நன்றாக சாப்பிடுபவருமானதால் அவர் எடை மிக அதிகமாகக் கூடி விட்டது. அளவுக்கு அதிகமாக பருமனாகி விட்ட அவர் ஒரு நெடும் பயணம் செல்லத் தீர்மானித்த போது அவருடைய மருத்துவர் முதலில் எடையைப் பாதுகாப்பான அளவுக்குக் குறைத்து விட்டுப் பயணம் போவது தான் நல்லது என்று சொல்லி விட்டார். அப்போது அவர் எடை 245 பவுண்டுகளாக இருந்தது.

 

எது எனக்குப் பாதுகாப்பான எடைஎன்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்ட போது மருத்துவர் “156 பவுண்டுகள்என்றார்.

 

நான் போவதற்குள் 156 பவுண்டுகளாக என் எடையைக் குறைத்துக் கொள்கிறேன்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்ன போது கர்னல் ஓல்காட்டுக்கு வேடிக்கையாக இருந்தது. காரணம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒழுங்காக உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்யும் நபர் அல்ல. பின் எப்படிக் குறைக்கப் போகிறார், அவருடைய அபூர்வ சக்திகளை வைத்தா என்று தனக்குள் கேட்டுக் கொண்டார். அவருக்கு அம்மையார் என்ன, எப்படிச் செய்யப் போகிறார் என்பதை அறிய மிக ஆர்வமாக இருந்தது.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தினமும் ஒவ்வொரு நேர உணவும் சாப்பிட்டுப் பத்து நிமிடங்கள் கழிந்த பின் ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் எடுத்து அதைத் தன் உள்ளங்கையால் மூடி அதையே உற்றுப் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருப்பார். பின் அதைக் குடித்து விடுவார். இப்படியே அவர் செய்து வந்ததில் அவர் எடை குறைய ஆரம்பித்தது தான் மிக ஆச்சரியம். கடைசியாக ஒருநாள் சென்று அவர் எடை பார்த்த போது அவர் சொன்னபடியே 156 பவுண்டுகள் எடை இருந்தது தான் பேராச்சரியம். சில காலம் கழித்து எடை மறுபடியும் கூடி மரணம் வரை பருமனாகவே அவர் இருந்த போதிலும் தேவைப்பட்ட போது எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தன் எடையை அந்த அளவு குறைத்துக் கொள்ள முடிந்தது உண்மையில் அற்புதமே அல்லவா?

 

(தொடரும்)

என்.கணேசன் 

நன்றி: தினத்தந்தி 13.08.2019




2 comments:

  1. அனைத்து அற்புதங்களும் சுவாஸ்யமாக உள்ளது...

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு... நான் திரைவிலக்கப்பட்ட ஐசிஸ் - ISIS Unveiled pdf நூலினை பதிவிறக்கம் செய்து படிக்க முயற்சி செய்தேன்.. முழுவதும் படித்து முடிக்க இயலவில்லை.. ஆனால். அந்த நூலை படிக்கும் போது அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் கண்டிப்பாக பல பேர் பல வருட அனுபவத்தில் எழுதியது போல் இருந்தது.. இந்த நூல் தமிழில் மொழி மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete