மாஸ்டரின் திகைப்பும் குழப்பமும் அவர் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. ”நீ என்ன சொல்றே க்ரிஷ்?”
க்ரிஷ் சொன்னான். “நீங்களும் ரொம்பவே நல்லவர். உங்க மனசுலயும் இது வரை எந்தக் களங்கத்தையும் நான் பார்த்ததில்லை…..
உங்க அறிவும் சாதாரணமானதல்ல. இது வரைக்கும் நீங்க அடைஞ்சிருக்கிற சக்திகளே அதுக்கும் உங்க மன உறுதிக்கும் உதாரணமா சொல்லலாம். அதனால அந்த அமானுஷ்ய சக்தி படைச்ச எதிரி கைப்பாவையா பயன்படுத்தறது உங்களையாக்கூட இருக்கலாம் இல்லையா?”
“ஆனா என்னை அது பயன்படுத்தலையே!”
“எப்படித் தெரியும்? இல்லாட்டி பயன்படுத்தப் போறது இனிமேயா கூட இருக்கலாம்…..
அந்தக் கோணத்திலேயே இது வரை சிந்தித்திருக்காத மாஸ்டருக்கு என்ன சொல்வது என்று உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் எந்தவொரு புதிய கோணத்தையும், அது எந்த அளவு முட்டாள்தனமான ஒன்றாக இருந்தால் கூட, சிந்தித்தே பார்க்காமல் தவறு என்று ஒதுக்கி வைப்பது ஞானமல்ல என்று உள்ளுணர்வு சொன்னது. அதனால் அவன் சொன்னதை உடனடியாக மறுக்காமல் “எனக்கு அப்படித் தோணலை, ஆனாலும் நீ சொன்னதை நிதானமா பிறகு யோசிச்சு சொல்றேன்” என்று புன்னகையுடன் சொன்னார்.
க்ரிஷ் அவருடைய பக்குவமான அணுகுமுறையை மனதிற்குள் சிலாகித்தான். சிறிதே
நேரத்தில் மறுபடி அவன் மனதில் ஹரிணியே நிறைந்தாள். எங்கிருக்கிறாள்…. என்ன செய்கிறாள்…… என்ன நினைக்கிறாள்…..
என்றெல்லாம் யோசிக்க யோசிக்க மறுபடி மனம் கனமாக ஆரம்பித்தது.
அவன் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த மாஸ்டர் மென்மையாகச் சொன்னார். ”பிரச்னைன்னு ஒன்னு இருந்தா தீர்வும் கண்டிப்பா இருந்து தானாகணும்…. ஆரம்பத்துல தீர்வு சரியா புலப்படாம இருக்கலாம். ஆனா நிதானமா யோசிக்க யோசிக்க நமக்கு அது அகப்படாம போகாது. க்ரிஷ்ங்கற தனிமனிதனாய் இருந்து பார்க்கறத நிறுத்து. பிரபஞ்ச சக்தியோட அங்கமா எல்லாத்தையும் சந்திக்கப் பார். அந்த அலைவரிசையில் யோசி. அந்த அலைவரிசைகள்ல சிக்காத ரகசியம் இல்லை. விலகாத புதிர் இல்லை……”
அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் காலகட்டத்தில் தான் விதி இப்படியொரு இடியை அவன் தலையில் போட்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதே பெரிய காரியமாக இருக்கையில், அப்படி மீண்டு மீண்டும் பயிற்சிகளில் ஈடுபடுவது முடியுமா? பயிற்சிகளிலும் அவன் இப்போது ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறான். முழுவதும் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற காலம் எத்தனை ஆகும்? அந்த அளவு அவகாசம் நமக்கிருக்கிறதா என்று க்ரிஷ் மனம் யோசித்தது.
அவன் அவரிடம் கேட்டான். “மாஸ்டர் உங்க கணக்குப்படி இந்த ரகசியக் கலையில் நான் நிபுணன் ஆக எத்தனை காலம் ஆகும்?’
“சில வினாடிகளில் இருந்து பல யுகங்கள் வரைக்கும் தேவைப்படலாம்.” பட்டென்று வந்தது பதில். அந்தப் பதிலில் க்ரிஷ் திகைத்துப் போனான். என்ன பதிலிது!
அவர் புன்னகையுடன் சொன்னார். “சரியா சொல்லப் போனா நாம எதையுமே புதுசா கத்துக்கறதில்லை க்ரிஷ். மறந்ததை நினைவுபடுத்திக்கறோம் அவ்வளவு தான். ஆத்மாவுக்குப்
புதுசா கத்துக்க என்ன இருக்கு? எத்தனையோ உண்மைகளை மறந்திருக்கோம். எத்தனையோ பொய்களை உண்மைகளாய் மனசில் ஆழமா பதிவு பண்ணியிருக்கோம். அதனால பிரபஞ்ச சக்தியின் அலைவரிசையில் இருந்து நாமளாகவே ரொம்ப தூரம்
விலகியிருக்கோம். இந்தப் பயிற்சிகள் எல்லாம் தப்பா கத்துகிட்ட அஞ்ஞானத்தை
இழக்கறதுக்குத் தான். நீ எவ்வளவு ஆத்மார்த்தமா ஆசப்படறியோ அவ்வளவு வேகமா உன்னால
முன்னேறிட முடியும். ஏன்னா போன பிறவியிலயே நீ இந்த விஷயத்துல ரொம்பவே முன்னேறியிருக்கணும்.
அதனால தான் கூர்மையான அறிவு, இந்த நல்ல மனசு எல்லாம் உனக்கு வாய்ச்சிருக்கு. பிரச்சினைகளைத்
தர்ற விதி அதை சமாளிக்கற வழியையும் தராமப் போயிடறதில்ல. நம்பிக்கையோட இரு.
சக்திகளை கவலையில் விரயம் பண்ணாம தீர்வுகள் பக்கம் திருப்பு. நல்லதே நடக்கும்”
க்ரிஷ் அவர் சொன்னதை
மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டு மனதில் மறு ஒலிபரப்பு
செய்து கேட்டான். அவன் மனம் ஓரளவு தைரியம்
பெற்றது. அவரை சாஸ்டாங்கமாய் விழுந்து வணங்கி விடைபெற்றான். மாஸ்டர் மானசீகமாய்
தன் சிஷ்யனை ஆசிர்வதித்தார்.
ஹரிணி காணாமல் போனதை மாணிக்கம் குடும்பத்தினர் மூவரும் மூன்று விதமாக எடுத்துக்
கொண்டார்கள். சங்கரமணி சந்தோஷப்பட்டார். அவர் பேரனைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு
இது சரியான தண்டனை என்று நினைத்தார். மாணிக்கம் விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில்
இருந்தார். மனோகர் சொன்னது போல அவள் ஒன்றும் அவர் மருமகள் அல்ல. அதே நேரத்தில் போலீஸ்
துறையின் விசாரணையை அவராக தாமதப்படுத்தவோ, துரிதப்படுத்தவோ முனையவில்லை. சட்டம் தனது
கடமையைச் செய்யும் என்று விட்டு விட்டார். மணீஷுக்கு ஹரிணி காணாமல் போனதை ஏனோ சகிக்க
முடியவில்லை. க்ரிஷுக்கு மனவருத்தம், துக்கம் ஏற்படும் என்பது அவனுக்குச் சந்தோஷமே.
ஆனால் ஹரிணிக்கு நேரும் ஆபத்து மூலமாக அது நிகழ்வது அவனுக்குச் சம்மதம் இல்லை. அவள்
அவனைக் காதலிக்கா விட்டாலும் கூட அவளைக் காதலிப்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. அவளுக்கு
ஆபத்து வருவது அவனுக்கு சகிக்கவில்லை. க்ரிஷின் எதிரி தான் அவளைக் கடத்தி இருக்கவேண்டும்
என்பது தெளிவாகவே தெரிந்தது. அந்தப் பகை எந்த வகையில் வந்தது என்று தெரியவில்லை. சங்கரமணி
நாளுக்கு ஒரு யூகத்தைச் சொன்னார் என்றாலும் அவற்றில் எது சரியாக இருக்கக்கூடும் என்று
அனுமானிக்க முடியவில்லை…..
நீண்ட யோசனைக்குப் பிறகு க்ரிஷுக்குப் போன் செய்தான். “க்ரிஷ்
ஹரிணி பத்தி எதாவது தகவல் கிடைச்சுதா?”
அவன் போன் வந்த போது க்ரிஷ் மாஸ்டர் வீட்டிலிருந்து தன் வீட்டுக்குப்
போய்க் கொண்டிருந்தான். ”இல்லையே மணீஷ்”
“யாராவது போன் செஞ்சாங்களா?”
“இல்லையே”
“மாஸ்டரால எதாவது கண்டுபிடிக்க முடிஞ்சுதா?”
“இல்லை”
மணீஷுக்கு மாஸ்டராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவல்
ஆச்சரியமாக இருந்தது. அவன் மெல்லச் சொன்னான். “கடத்தினவன் ஒருவேளை போன் செய்தா, அவன்
என்ன சொன்னாலும் ஒத்துக்கோ. நமக்கு ஹரிணி தான் முக்கியம்”
க்ரிஷ் அவன் குரலில் உண்மையான அக்கறையை உணர்ந்தான். நடிப்பே
வாழ்க்கையாக இருப்பவனும் கூட நடிக்காத இடம் ஒன்றிருக்கிறது…. “அவன் என்ன சொல்றான்னு
முதல்ல பார்க்கலாம்” என்று க்ரிஷ் சொன்னான்.
மணீஷ் பெருமூச்சுடன் போனை வைத்தான். அவளுக்காக எதையும் செய்யத்
தயாராக இருக்கும் மணீஷை அவள் காதலிக்கவில்லை. கடத்தியவன் என்ன சொல்கிறான் என்று தெரிந்த
பின் தான் முடிவு செய்வேன் என்று அவள் ஆபத்தில் இருக்கும் கட்டத்தில் கூடச் சொல்லும்
க்ரிஷை அவள் காதலிக்கிறாள். பெண்கள் மனதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை…..
பத்மாவதி இளைய மகனின் அறையை எட்டிப் பார்த்தாள். அவன் இன்னும் மாஸ்டர் வீட்டிலிருந்து
வரவில்லை. அவள் மூத்த மகன் அறைக்கு வேகமாகப் போனாள்.
உதய் தாயைக் கேள்விக்குறியோடு பார்த்தான். “என்ன விஷயம்?”
“ஹரிணியைக் கடத்தினவன் போன் செஞ்சானாடா?”
”இல்லைம்மா”
“ஒருவேளை போன் செஞ்சா அவன் எத்தனை கோடி கேட்டாலும் குடுத்துடு.
கணக்குப் பாக்காதே……”
“எவ்வளவு கோடி கேட்டாலுமா?” உதய் அம்மாவைப் பார்த்துச் சிரிக்காமல்
இருக்க மிகவும் கஷ்டப்பட்டான். அவளுக்கு கணவனும், மூத்த மகனும் அரசியலில் எத்தனை சம்பாதிக்கிறார்கள்,
அதை எப்படி சேமிக்கிறார்கள், எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. அவள்
அதைக் கேட்டுக் கொள்வதும் கிடையாது. ஆனால் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்
என்பது மட்டும் அனுமானம் போலிருக்கிறது.
உதய் சிரிக்காமல் சொன்னான். “கோடியெல்லாம் யார் கிட்ட இருக்கு”
”ஏண்டா. எனக்கு படிப்பறிவு கிடையாது. ஒத்துக்கறேன். உலக நடப்புமாடா
தெரியாது. தம்பி சந்தோஷத்துக்கு இல்லாத காசு என்னத்துக்குடா”
“எதுக்கும் தம்பியக் கேட்டுட்டு செய்யலாம்…”
“கிழிஞ்சுது போ. அவன் வேதாந்தம் பேசுவான். காதலிக்கிற பொண்ணுன்னும்
பார்க்க மாட்டான். நாம தாண்டா அவனுக்குத் தெரியாம காதும் காதும் வச்ச மாதிரி இதைச்
செய்யணும்.”
“இரு இரு….. நீ அன்னைக்கு ஒரு மஞ்சள்துணிய மூணா கிழிச்சு அதுல
நூத்தியொரு ரூபாய் வச்சு இனிமே எல்லாம் கடவுள் பார்த்துக்குவார்னு தானே சொன்னே. இப்ப
என்ன நம்பிக்கை போயிடுச்சா”
“கடவுள் எதையும் நேர்ல வந்து செய்ய மாட்டார்டா, மனுஷன் செய்ய
வழியமைச்சுக் கொடுப்பார். அதை மனுஷன் பயன்படுத்திக்கணும். கடவுள் உங்களுக்குக் கோடி
கோடியா தரலயாடா”
“கிழவி…. எங்களுக்கு உன்னைத் தவிர வேறு எதிரியே வேண்டாம்…. ”
என்று உதய் சிரித்தான்.
ஆனால் பணம் கேட்டுக் கூட கடத்தியவன் போன் செய்யவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்