என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 10, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 2



மைத்ரேய புத்தர் பெயரை தலாய் லாமாவும் எதிர்பார்த்திருக்கவில்லை. தானாக அவர் குரலும் தாழ்ந்தது. கவலையுடன் கேட்டார். “அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று?

ஆசான் புன்னகையுடன் சொன்னார். “டென்சின், இப்போது அது குழந்தை இல்லை. பத்து வயது சிறுவன். அவர் நன்றாகவே இருக்கிறார்

தலாய் லாமா ஆர்வமாகக் கேட்டார். “மைத்ரேயனை சமீபத்தில் பார்த்தீர்களா..?.

“போன மாதம் பார்த்தேன்.... அதுவும் தூரத்திலிருந்து...ஆசான் குரலில் லேசாக மனத்தாங்கல் இருந்தது.

தலாய் லாமா மைத்ரேய புத்தரைப் பற்றியே யோசித்தபடி ஆசானைப் பார்த்தார்.

ஆசான் தாழ்ந்த குரலிலேயே தொடர்ந்தார். “இது வரை மூன்றே முறை தான் அவரைப் பார்த்திருக்கிறேன். மூன்று வயதில், ஏழு வயதில், போன மாதம்..... மூன்று முறையும் தூரத்தில் நின்று கொண்டு இரண்டு நிமிடங்களுக்குள் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாமல் பார்த்தேன். அதை விட அதிகமாயோ நெருக்கத்திலோ பார்த்தால் கூட சீன ஒற்றர்களுக்கு சந்தேகம் வந்து, கண்டுபிடித்து, மைத்ரேயனைக் கொன்று விடும் அபாயம் இருக்கிறது.... மைத்ரேயன் என்று சந்தேகப்பட்டு சீனா இது வரை மூன்று குழந்தைகளைக் கொன்றிருக்கிறது...

தலாய் லாமா மனம் இறந்த குழந்தைகளுக்காக உருகியது. என்ன கொடுமை இது!... மைத்ரேய புத்தரும் நலமாக இருக்கிறார் என்றால் இப்போது அவர் விஷயமாக ஏன் ஆசான் வந்திருக்கிறார் என்ற கேள்வி மனதில் எழ ஆசான் அவர் கேட்காமலேயே காரணம் சொன்னார்.

“அவர் சம்பந்தமாக மௌன லாமா ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார்” 

அந்தப் பெயரைக் கேட்டதும் தலாய் லாமா இதயத் துடிப்புகள் ஒரு கணம் நின்று தொடர்ந்தன. ஆசான் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். தலாய் லாமா அதைப் படித்துப் பார்த்தார் கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் படர்ந்தன. தலாய் லாமா ஆயாசத்துடன் எழுந்தார். வெளியே மறுபடியும் பலத்த மழை ஆரம்பித்த சத்தம் கேட்டது. ஜன்னல் அருகே சென்று பெய்யும் பேய் மழையை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்தார்.

மௌன லாமா என்ற திபெத்திய புத்த துறவி தன் பதினாறாம் வயதில் மௌன விரதம் பூண்டவர். அதற்குப் பின் அவர் வாய் திறந்து பேசியதில்லை. திபெத்தின் ஒரு பழங்கால புத்த மடாலயத்தில் வசிக்கும் அவருக்கு தற்போது வயது என்ன என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நூறிலிருந்து நூற்றி இருபது வரை பல எண்களை வயதாகச் சொல்கின்றனர். பெரும்பாலும் தியான நிலையில் இருக்கும் அவர் ஒரு நாளுக்கு ஒரு முறை தான் உணவு உண்பார். சில நாட்களில் ஆழ்நிலை தியானங்களில் மூழ்கிப் போனால் அந்த உணவும் வைத்த இடத்திலேயே இருக்கும். தியான நிலையில் இல்லாத போது புனித நூல்களைப் படித்துக் கொண்டும், மடாலய வேலைகள் ஏதாவது செய்து கொண்டும் இருப்பார்.

அவர் திடீர் என்று எச்சரிக்கைகளை மற்றவர்களுக்கு எழுதிக்காட்டுவதுண்டு. அவை அப்படியே பலிக்கும் என்பது மற்றவர்களின் அனுபவம். ஒரு முறை பல மைல் தொலைவில் உள்ள ஒரு மடாலயத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பிக்குவிடம் இரண்டு நாட்கள் போக வேண்டாம் என்று மௌன லாமா எச்சரித்தார். இரண்டாவது நாள் அந்த மடாலயம் நிலச்சரிவில் நாசமாகிய செய்தி வந்து சேர்ந்தது. இன்னொரு முறை புகழ் பெற்ற பழைய புனித நூல்களைப் பாதுகாத்து வரும் இன்னொரு மடாலயத்தினரை அந்தப் புத்தகங்களை வேறு ஒரு அறைக்கு மாற்றச் சொன்னார். அப்படியே அவர்கள் செய்தனர். அன்று இரவே நூல்கள் முன்பிருந்த அறை தீக்கிரையாகியது. இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.

அப்படி ஒரு எச்சரிக்கை 1959 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி தலாய் லாமாவுக்கு மௌன லாமாவால் அனுப்பப்பட்டது. உடனடியாக அதை ஏற்க தலாய் லாமாவால் முடியவில்லை. சீன அரசாங்கத்தை எதிர்த்து அவர் தலைமையில் திபெத்தியர்கள் போராடிக் கொண்டிருந்த காலம் அது. தன் தாய்நாடான திபெத்தை அந்த இக்கட்டான நிலையில் விட்டு வெளியேற அவர் விரும்பவில்லை. ஆனால் அவருடன் இருந்த அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் உடனே வெளியேற தலாய் லாமாவை அறிவுறுத்தினார்கள். கடைசியில் அடுத்த நாள் மார்ச் 17 ஆம் தேதி இரவு லாசா அரண்மனையில் இருந்து தலாய் லாமா சாதாரண சிப்பாய் வேடமிட்டு ரகசிய வழியில் வெளியேறினார். மறு நாள் காலை லாசா அரண்மணையை சீன ராணுவம் சுற்றி வளைத்தது.

31 நாட்கள் பயணம் செய்து 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி இந்தியாவை அடைந்த தலாய் லாமாவுக்கு இப்போதும் அந்த நாட்கள் பசுமையாக நினைவில் உள்ளன. அன்று அவர் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து அங்கேயே இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம் அல்லது இன்றும் சீன சிறையில் அடைபட்டுக் கிடந்திருக்கலாம்.

சொந்த வாழ்க்கையிலேயே அனுபவம் பெற்றிருந்த அவர் இன்று இந்த எச்சரிக்கையை எப்படி அலட்சியம் செய்ய முடியும்!

தலாய் லாமா ஜன்னலருகேயே மழையைப் பார்த்துக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் நிற்பதைக் கண்ட ஆசான் தானும் எழுந்து ஜன்னல் அருகே சென்றார்.

மௌன லாமா ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார் என்று ஆசான் சொன்னதற்குப் பின் அவர்கள் பேசியது எதுவும் சோடென்னுக்குக் கேட்கவில்லை. மழையின் சத்தம், அவர்கள் அந்த சோபாவிலிருந்து தூர இருந்தது, தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டது எல்லாமாகச் சேர்ந்து அர்த்தமில்லாத முணுமுணுப்புகளாக மட்டுமே கேட்டது. சோடென் பொறுத்து பொறுத்துப் பார்த்தான். அவர்கள் பழையபடி இருக்கைகளுக்குத் திரும்புவதாக இல்லை.

அவன் பொறுமையிழந்தான். அவனை உளவிற்காக ஆயத்தப்படுத்தியவன் ஆரம்பத்திலேயே சொன்னான். “ஒரு நல்ல ஒற்றனுக்குத் தேவையான முதல் முக்கிய மூன்று தகுதிகள் – பொறுமை, பொறுமை, பொறுமை”.  அதுவே அவன் பொறுமையைச் சோதித்தது. இதற்கு ஒரு நல்ல ஒற்றனுக்குத் தேவையான முதல் தகுதி பொறுமை என்றே சொல்லி விட்டுப் போகலாமே என்று நினைத்தான். போகப் போக பொறுமை எவ்வளவு முக்கியம் என்று புரிந்தாலும் அவனிடம் அது வந்து சேரவில்லை.

மற்ற உளவாளிகள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்று அடிக்கடி அவன் யோசித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் அதை நேரில் கண்டு கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் நேரில் பார்த்த ஒரே உளவாளி அவனை ஆயத்தப்படுத்திய பீஜிங் ஆசாமி தான். அவனையும் அவன் இது வரை ஐந்தாறு முறை தான் நேரில் சந்தித்திருக்கிறான். இங்கேயே கூட வேறு உளவாளிகள் இருக்கிறார்கள் என்பதை அவன் அறிவான். அவர்களில் அவனுக்கு அடிக்கடி குறுந்தகவல் அனுப்பும் ஆளும் ஒருவன். ஆனால் அவனும் யார், எப்படி இருப்பான் என்பது சோடென்னுக்குத் தெரியாது. தர்மசாலாவிலேயே இருக்கும் அந்த நபர் ஏதாவது பிக்குவாகவோ, பாதுகாப்பு காவலாளிகளில் ஒருவனாகவோ இருக்கக்கூடும்....

அவன் தான் சற்று முன் கூட "வந்திருக்கும் புதிய ஆளைக் கவனிஎன்று குறுந்தகவல் அனுப்பியிருந்தவன். அவனுக்கு இந்த ஆசான் கிழவனை முன்பே தெரியுமா, இல்லை இந்த கிழவன் ஏதாவது சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டானா என்று சோடென்னால் யூகிக்க முடியவில்லை. இந்த சேட்டைக் கிழவன் எதாவது செய்திருப்பான். முதல் முறை பார்க்கையிலேயே ஒரு புதிய ஆளைப் பார்த்து கண்ணடிக்கும் கிழவன் என்ன தான் செய்ய மாட்டான்....

நிமிடங்கள் வேகமாகக் கழிந்தன. காத்திருந்தே சோடென்னுக்கு அலுப்பு தட்டியது. திரும்பவும் அவர்கள் இருக்கைகளுக்குத் திரும்பியது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்த பின்பு தான். இப்போது தலாய் லாமாவின் குரல் தெளிவாகக் கேட்டது.  

இந்த ஆளை நம்மால் நேரடியாகத் தேட முடியாதா?


சான் சொன்னார். முடிந்த வரை விசாரித்து விட்டோம். கண்டுபிடிக்க முடியவில்லை.

தலாய் லாமா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பின் சொன்னார். “நான் பேசிப் பார்க்கிறேன் ஆசானே!

“சாதகமான பதில் வந்தால் உடனே தெரிவி டென்சின். உன் பதில் கிடைக்கும் வரை நான் சொன்ன இடத்தில் தான் இருப்பேன்.

‘ஒருவேளை பதில் பாதகமாக இருந்தால்?என்று கேட்க நினைத்த தலாய் லாமா வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். அப்படி ஒரு பாதக நிலையே வரக்கூடாது. கருணையே உருவான போதிசத்துவர் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட மாட்டார்.

தலாய் லாமா கேட்டார். “என்ன சாப்பிடுகிறீர்கள் ஆசானே?

“ஒன்றும் வேண்டாம் டென்சின்..... நான் கிளம்புகிறேன்

இந்த மழையிலா?

“மழை, வெயில் - இதெல்லாம் நம் வேலையை பாதிக்க விட்டால் எத்தனையை முடிக்க முடியும் டென்சின்.... நான் சீக்கிரம் போயாக வேண்டும்?

“அவ்வளவு அவசரமாய் போய் என்ன செய்யப் போகிறீர்கள்?

“மூன்று நாள் விரதம் இருக்கப் போகிறேன் டென்சின்

ஆசானின் விரதம் தலாய் லாமா நன்றாக அறிந்த ஒன்று. தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி இருப்பார். ஆசானின் விளையாட்டிற்கு எதிர்மாறான குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. விரத நாட்களில் முழு நேரமும் இறைவனின் தியானத்திலும், இறைவழிபாட்டிலும் தான் அவர் கழிப்பார்.

“உங்கள் இந்த வயதில் இந்த விரதமெல்லாம் வேண்டுமா ஆசானே. போதிசத்துவர் இதை உங்களிடம் எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறீர்களா?

“அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை டென்சின்... நான் தான் அவரிடம் எதிர்பார்க்கிறேன்.... நீ பேசப்போகும் போது உன்னுடன் என் பிரார்த்தனை கூட வரும்...

ஆசான் கிளம்பி விட்டார். அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அறிந்த தலாய் லாமா தானும் எழுந்தார். அவர் மடியில் இருந்த சிறு தாள் கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்த தலாய் லாமா சற்று முன் ஆசான் அதைத் தந்த போது தோன்றியதை இப்போது வாய் விட்டுச் சொன்னார்.

“வித்தியாசமான பெயர்

ஆசான் புன்னகைத்தார். “பெயர் மட்டுமல்ல ஆளும் அப்படித்தான்

அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் ஆசான் கடைசியாக எச்சரித்தார். “நம்மிடம் காலம் அதிகமில்லை டென்சின்

“உடனடியாகப் பேசுகிறேன் ஆசானே”  

ஆசான் அறையை விட்டு வெளியே வந்தார். சோடென் தன் அறையில் இருந்த ரகசிய ஒலிபரப்புக்கருவியை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக வெளியே வந்தான். இருவரும் வரவேற்பறையில் சந்தித்துக் கொண்டார்கள். சோடென் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவர் போகும் இடம் எங்கே என்று அறிய விரும்பினான். அதனால் பிடிக்கா விட்டாலும் அவரிடம் திபெத்திய மொழியில் பேசினான்.

“வணக்கம் பெரியவரே. கிளம்பி விட்டீர்களா?

“ஆமாம்என்ற ஆசான் அவனைப் பார்த்துக் கண்ணடித்தார். சோடென்னுக்கு அவர் கழுத்தை நெறிக்க வேண்டும் போல இருந்தது. ஆசான் அவனைக் கேட்டார். “உன் பெயர் என்ன இளைஞனே?

“சோடென்

சோடென் என்றால் பக்தியானவன் என்று அர்த்தம். நீ பக்தி மிகுந்தவனா?

பிரார்த்தனை நேரத்தில் நீயும் வேடிக்கை பார்த்தாய், நானும் வேடிக்கை பார்த்தேன். என்னைப் பார்த்து பக்தி மிகுந்தவனா என்று கேட்கிறாயே கிழவாஎன்று மனதில் கொதித்த சோடென் அதற்குப் பதில் சொல்லாமல் அவரிடம் கேட்டான். “இந்த மழையில் எப்படிப் போவீர்கள்?

ஆசான் புன்னகையுடன் “இப்படித்தான்என்று சொல்லி கண்ணடித்து விட்டு ஒரே ஓட்டமாக தெருவை அடைந்தார். மழையில் நனைந்தபடி தெருவில் வேகமாகச் செல்லும் ஆசானைத் திகைப்புடன் பார்த்து நின்றான் சோடென்.  மனதில் அந்தக் கிழ பிக்குவை சபித்துக் கொண்டே தனதறைக்குத் திரும்பிய சோடென் பதிவு செய்திருந்த சம்பாஷணையை தன் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தான்.

(தொடரும்)
-          என்.கணேசன்


Monday, July 7, 2014

உலகப் பழமொழிகள் – 5


41) கடவுள் பேரால் பிச்சை எடுப்பவன் இரண்டு பேருக்கு பிச்சை எடுக்கிறான்.

42) கவலை பரிகாரமல்ல.

43) இரத்தத்தில் கையை நனைத்தவன் அதைக் கண்ணீரால் தான் கழுவ வேண்டும்.

44) தன் பாவங்களைப் பற்றி பெருமையாய் பேசுபவன் இரண்டு பாவங்கள் செய்தவனாகிறான்.

45) செயல் தான் மிகச் சுருக்கமான அழகான பதில்.

46) நாம் இழைக்கும் தீங்குகளும், நமக்கு இழைக்கப்படும் தீங்குகளும் ஒரே தராசில் நிறுத்தப்படுவதில்லை.

47) சொற்ப கவலை பேசும். பெருங்கவலை மௌனமாக இருக்கும்.

48) ஏழைக்கு தான் செல்வந்தனாவோம் என்ற நம்பிக்கையும், செல்வந்தனுக்கு ஏழையாகி விடுவோமோ என்ற பயமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

49) மலர்ந்த முகம் சாதாரண உணவையே விருந்தாக்கி விடும்.

50) சுறுசுறுப்பான தேனீக்கு துக்கப்பட நேரமில்லை.

-          தொகுப்பு : என்.கணேசன்


Thursday, July 3, 2014

புத்தம் சரணம் கச்சாமி! - 1

(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்களே ஒழிய மற்றபடி இந்த நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் என் கற்பனையே. – என்.கணேசன்)

ட்சுக்லகாங்க் திருக்கோயில், தர்மசாலா, ஹிமாசலப்பிரதேசம்.

பெருமழை பெய்து அப்போது தான் ஓய்ந்திருந்தது. ஆனால் எந்த நிமிடமும் மழை மீண்டும் பெய்ய ஆரம்பிக்கலாம். ஜுலையில் ஆரம்பித்து செப்டம்பர் இரண்டாம் வார இறுதி வரைக்கும் இப்பகுதியில் மழைக்காலம் தான். இந்த தொடர் மழை, தலாய் லாமாவின் உதவியாளனாக பணிபுரியும் சோடென்னுக்கு சிறிதும் பிடித்தமானதல்ல. சொல்லப் போனால் சகிக்க முடியாதது. ஜூன் மாதம் முடிவு வரை சீதோஷ்ண நிலை மிக ரம்மியமாக இருக்கும். இங்கு நிறைய ஆட்கள் வருவார்கள். அதனால் பொழுதும் நன்றாகப் போகும். மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலோ அதில் பாதி ஆட்கள் கூட வர மாட்டார்கள்.

இப்போது கூட ட்சுக்லகாங்க் கோயிலில் புத்தர் சிலை முன் தலாய் லாமாவுடன் பிரார்த்தனைக்குக் கூடியிருந்தவர்கள் 20 பேர் தான். அதிலும் 7 பேர் கோயிலைச் சேர்ந்த புத்த பிக்குகள். மீதி 13 பேரில் 5 பேர் வெளிநாட்டுப் பயணிகள். அமெரிக்கர்களாகவோ, ஐரோப்பியர்களாகவோ இருக்கலாம். 2 பேர் உள்ளூர்வாசிகள். 6 பேர் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து வந்திருந்த புத்த பிக்குகள்....

திடீரென்று 21 வது ஆள் திருக்கோயிலுக்குள் நுழைந்தார். நாலரை அடி உயரம் தான் இருக்கும். பழுத்த கிழவர். புத்தபிக்கு. திபெத்தியர். அவன் நாட்டைச் சேர்ந்தவர். பொதுவாக எல்லோருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போது தங்கள் நாட்டவரைக் கண்டால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சோடென் அதற்கு விதிவிலக்கானவன். அவனுக்கு அவனுடைய நாட்டு மக்களைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் தரித்திரவாசிகள். இப்போது வந்திருந்த கிழ புத்த பிக்குவின் சிவப்பாடைகளிலும் இரண்டு கிழிசல்கள் தைக்கப்பட்டிருந்தது அவன் கண்களுக்குத் தென்பட்டது. ‘கிழியாத உடை கூடப் போட்டுக் கொள்ள முடியாத ஆட்கள் எதற்காக யாத்திரைக்குக் கிளம்ப வேண்டும்? தங்கள் தரித்திரத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவா?என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.  அவர் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். பண உதவி ஏதாவது கேட்டாலும் கேட்கலாம்’.  புன்னகை செய்வதே ஆபத்து!

கிழ பிக்கு புத்தர் விக்கிரகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் கண்களை மூடி நின்று விட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவர்கள் பின்னால் தானும் உட்கார்ந்து கொண்டார். அந்த நேரத்தில் அவன் கைபேசியில் (மொபைல் போனில்) ஒரு குறுந்தகவல் வந்தது - வந்திருக்கிற புதிய ஆளைக் கவனி”.

சோடென் சுறுசுறுப்பானான். கிழ பிக்குவை கூர்மையாய் கவனித்தான். தரித்திரத்தைத் தவிர இந்த ஆளிடம் வேறெதோ விஷயமும் இருக்கும் போல் தெரிகிறதே! கிழவருக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். மற்றவர்கள் எல்லாரும் செய்து கொண்டிருக்கும் பிரார்த்தனையில் கிழ பிக்கு ஈடுபாடு காண்பிக்கவில்லை. சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்து சோடென்னையும் அவர் சுவாரசியத்துடன் பார்த்தார். சோடென் தன்னை அந்த ஆள் கூர்ந்து பார்ப்பதை ரசிக்கவில்லை. அவர் இவனைப் பார்க்கும் போது இவன் அவரைக் கவனிப்பது கஷ்டமான காரியம் என்பதால் அவரிடம் இருந்து பார்வையைத் திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தான். ஒரு நிமிடம் கழித்து மெள்ள பார்வையைத் திருப்பிய போதும் கிழ பிக்கு இவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்க்க வந்தீரா, புத்தரைப் பார்க்க வந்தீரா முட்டாள் பிக்குவே. புத்தரைப் பார்த்து வணங்கி போகிற காலத்திற்கு புண்ணியம் சேர்த்துக் கொண்டு போக வேண்டியது தானே’  என்று சோடென் மனதில் கறுவினான். யாரையாவது கண்காணிப்பது அவர்கள் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கையில் சாத்தியமல்லவே. அப்படியும் அவன் அவரைப் பார்க்கையில் அவர் அவனைப் பார்த்து புன்னகை செய்தார். ஒரு புன்னகையே இவ்வளவு எரிச்சலைக் கிளப்ப முடியும் என்பதை அவன் அன்று தான் உணர்ந்தான்...

பிரார்த்தனை கால் மணி நேரத்தில் முடிந்தது. கூடியிருந்தவர்கள் தலாய் லாமாவுடன் சிறிது பேசினார்கள். ஆசிகள் வாங்கினார்கள். கிழ பிக்குவும் எழுந்து நின்று கொண்டார்.

தலாய் லாமாவின் இருப்பிடம் திருக்கோயிலுக்கு நேர் எதிரே உள்ள மாளிகை தான். அவர் தன்னிடம் பேசி ஆசி வாங்கினவர்களைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்து விட்டு இருபக்கங்களிலும் இரு பிக்குகளுடன் தன் மாளிகைக்குக் கிளம்பினார். அப்போது தான் அவர் அந்த கிழ பிக்குவைக் கவனித்தார். ஒரு கணம் அப்படியே சிலை போல நின்று விட்ட தலாய் லாமா பின் அந்தக் கிழ பிக்குவைப் பார்த்து பெரிதாகப் புன்னகைத்தார்.

“ஆசானே இது என்ன ஆச்சர்யம்என்று வியப்புடன் கூறிய தலாய் லாமா அந்த கிழவரை ஆரத்தழுவிக் கொண்டார். தன்னருகே இருந்த பிக்குகளிடமும், அருகே வந்த சோடென்னிடமும் புன்னகையுடன் அறிமுகம் செய்தார். “இவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர்....

அருகே இருந்த பிக்குகள் தலைதாழ்த்தி அந்த கிழ பிக்குவை வணங்க சோடென் வேண்டா வெறுப்பாக தானும் வணக்கம் தெரிவித்தான். மறு வணக்கம் செலுத்திய கிழ பிக்கு சோடென்னைப் பார்த்து மட்டும் ரகசியமாய் கண்ணடித்தார். நெருங்கிய நண்பர்களுக்குள் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டு கண்ணடிப்பார்களே அது போல. சோடென்னுக்குச் சே என்றாகி விட்டது. ‘என்ன விவஸ்தை இல்லாத கிழவர் இவர்’.  அவன் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

தலாய் லாமா அதைக் கவனிக்கவில்லை. அவர் தன் ஆசானிடம் யார் யாரைப் பற்றியோ திபெத்திய மொழியில் குசலம் விசாரித்துக் கொண்டே அவரைக் கூட்டிக் கொண்டு தன் மாளிகைக்கு நடக்க ஆரம்பித்தார். பின்னால் தொடர்ந்து போகும் போது சோடென்னுக்குக் கிழ பிக்குவைக் கவனிப்பது சுலபமாக இருந்தது. நிச்சயமாக தலாய் லாமாவை விட வயதில் மூத்தவராக இருக்கக் கூடிய கிழ பிக்குவின் நடையில் வயதின் தாக்கம் தெரியவில்லை. மற்றபடி கவனிக்க வேண்டிய வேறெந்த விஷயமும் இந்த ஆளிடம் இருப்பதாகத் தெரியவில்லை-சேட்டையைத் தவிர.

தலாய் லாமா தன் ஆசானை நேராகத் தன் தனியறைக்கு அழைத்துச் செல்ல, கூட வந்த பிக்குகள் தங்கள் இடங்களுக்குப் போனார்கள். சோடென் இங்கு வேலைக்குச் சேர்ந்து முடிந்த இந்த பதினோராண்டு காலத்தில் தலாய் லாமா தன் தனியறைக்கு எந்த விருந்தினரையும் அழைத்துச் சென்றதில்லை. எத்தனை பெரிய ஆளானாலும் வரவேற்பறையோடு சரி. இப்போது குறுந்தகவல் அர்த்தமுள்ளதாகியது. என்னவோ இருக்கிறது!  

சோடென் வேகமாய் தனதறைக்குப் போனான். அறைக்கதவையும் ஜன்னலையும் சாத்தி விட்டு தன் மேஜையின் கீழ் இருந்த ரகசிய பட்டனை அழுத்தினான். தலாய் லாமாவின் சோபாவின் அடியில் ரகசியமாய் பதிக்கப்பட்டிருந்த நூதனமான கருவி அங்கு பேசப்படுவதைப் பதிவு செய்து அவன் அறையில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பித்தது. தலாய் லாமாவின் குரல் பரபரப்புடன் கேட்டது.

“ஆசானே. நீங்களே வந்திருக்கிறீர்கள்.... ஏதாவது முக்கிய விஷயமா?

லாய் லாமா தன் பிள்ளைப் பருவ ஆசிரியரைப் பார்த்து பரபரப்புடன் கேட்ட கேள்விக்கு கிழ பிக்கு புன்னகையுடன் பதில் சொன்னார்.

“என்னை மறந்து விட்டு யாரும் நிம்மதியாய் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடன் வாழ்கிறவன் நான் டென்சின்

தலாய் லாமா பேரன்புடன் தன் ஆசானைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். இன்னமும் அவரை பெயர் சொல்லிக் கூப்பிடும் உரிமை படைத்த ஒரே மனிதர் இந்த ஆசிரியர் தான். அவரை மட்டுமல்ல திபெத்திய புத்தமதத்தின் முக்கிய நான்கு பிரிவின் தற்போதைய தலைமை லாமாக்களும் இந்த ஆசிரியரிடம் படித்தவர்கள் தான். திபெத்திய புத்தமத புனித நூல்களை கரைத்துக் குடித்தவராக கருதப்படும் இவரிடம் படித்த திபெத்திய பிக்குகளும், அறிஞர்களும் ஏராளம். அதனாலேயே இவரை ஆசான் என்று பலர் அழைக்க பின் அந்தப் பெயரே இவருக்கு சாசுவதமாகியது.

ஆசானுக்கு 93 வயதாகிறது. தலாய் லாமா இவரை இது வரையில் சோகமாக ஒரு முறை கூட பார்த்ததில்லை. உலகில் மாறாத விஷயங்களில் ஆசானின் புன்னகையும் ஒன்று என்று தலாய் லாமா நினைத்துக் கொண்டார்.

ஆசான் சுவாரசியமானவர். பார்க்கிறவர்களுக்கு அவரிடம் நிறைய முரண்பாடுகள் தெரியும். புனிதநூல்களைக் கரைத்துக் குடித்த அவர் சம்பிரதாயமான ஆசிரியர் பாத்திரத்திற்குப் பொருந்த மாட்டார். சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால் அவர் தன் மாணவர்களுடன் தெரு விளையாட்டுகளில் கலந்து கொள்வதும் உண்டு. திபெத்திய புத்தமதத்தின் இன்னொரு பிரிவின் தலைமை லாமாவான பஞ்சென் லாமா தன்னை இந்த ஆசான் நிறையவே தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதாக ஒரு முறை தலாய் லாமாவிடம் சொன்னார். ”...நான் வணங்கும் ஒரு ஆள் சின்னப் பையன்கள் கூட சேர்ந்து தெருவில் விளையாடுவது நிஜமாகவே என்னால் சகிக்க முடியவில்லை....

அது போன்ற எத்தனையோ விசித்திர குணாதிசயங்கள் ஆசானின் மீதிருக்கும் மரியாதையை சிறிது குறைத்தாலும் அதற்குப் பதிலாக அன்பையும் நெருக்கத்தையும் எல்லோரிடமும் அதிகப்படுத்தி இருந்தது. அவரைப் பார்க்கும் போதோ அவர் பற்றிப் பேசும் போதோ எல்லோரிடமும் ஒரு சின்ன சிரிப்பு தெரியும்.

அப்படிப்பட்ட ஆசானின் இன்னொரு முகம் பலர் அறியாதது. ரகசியங்களைக் காப்பதிலும், சில விஷயங்களில் மிக உறுதியாக இருக்க முடிவதிலும் அவருக்கு நிகர் அவரே. தோற்றத்திற்கு எதிர்மாறாக மிக ஆழமானவர்.  

ஆசானின் முகத்தில் சிரிப்பு போய் சிந்தனையின் ஆழம் தெரிய ஆரம்பித்தது. ஏதோ மிக முக்கியமான காரியமாய் அவர் வந்திருக்கிறார் எனபது தலாய் லாமாவுக்குப் புரிந்தது. ஆசானை தன் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அன்புடன் அமர வைத்து விட்டு தலாய் லாமா சொன்னார்.

“சொல்லுங்கள் ஆசானே. என்ன விஷயம்?

ஆசான் குரல் தாழ்ந்தது. “மைத்ரேய புத்தர்...

சோடென் மின்சாரக் கம்பியை வெறும் கையால் பிடித்தவன் போல் அதிர்ந்தான். உளவாளியாக ஆன புதிதில் சீன உளவுத்துறை இந்த வார்த்தை தலாய் லாமா யாருடனாவது பேசும் போது வருகிறதா என்று கவனிக்கச் சொன்னார்கள். அப்போதெல்லாம் தினம் கேட்பார்கள். ஆனால் அப்போதெல்லாம் அந்த வார்த்தையை தலாய் லாமா சொன்னதில்லை. யாரும் தலாய் லாமாவிடமும் சொன்னதில்லை. அன்றில் இருந்து நேற்று வரை சீன உளவுத் துறைக்கு அவன் அனுப்பிய விஷயங்கள் எத்தனையோ இருந்தன. சில சில்லறை விஷயஙகள். சில பெரிய விவகார விஷயஙகள். ஆனால் அவற்றில் மைத்ரேய புத்தர் சம்பந்தமாக எதுவும் இருந்ததில்லை. மைத்ரேய புத்தர் என்கிற சொல் எதைக் குறிக்கிறது என்றோ, சீனா எதற்கு அதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்றோ சோடென் அறியான்.

இன்று முதல் முறையாக கேள்விப்படுகிறான் என்பதால் சோடென்னின் இதயத்துடிப்புகள் வேகம் பிடித்தன. பரபரப்புடன் சோடென் காதுகளைக் கூர்மையாக்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

இந்த நாவல் அமேசான் கிண்டிலிலும் 2021 டிசம்பரில் வெளியாகி உள்ளது. அதில் படிக்க விரும்பும் வாசகர்கள் 
https://www.amazon.in/dp/B09NMHSGR3 ல் படிக்கலாம்.

  

Monday, June 30, 2014

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 10



·         தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

·         தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

·         காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
(காணும் போதே கும்பிட வேண்டியது தானே? காண ஒரு முறை போய் விட்டு கும்பிட ஒரு முறை போக வேண்டுமா?)

·         செக்கென்றும் சிவலிங்கம் என்றும் தெரியாது நக்குகிற நாய்க்கு.


·         திகம்பர சாமியாருக்கு வண்ணான் உறவு ஏன்?
(திகம்பர சாமியார் ஆடைகளே அணியாமல் இருப்பவர். அவருக்கு ஏன் வண்ணான் உறவு தேவைப்படுகிறது?)

·         சாகிற வரையில் வைத்தியன் விடான். செத்தாலும் விடான் பஞ்சாங்கக் காரன்.

·         தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

·         துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது?

·         நல்ல வீடென்று பிச்சைக்கு வந்தேன். கரியை வழித்து கன்னத்தில் தடவினார்கள்.

·         நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

·         தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

தொகுப்பு: என்.கணேசன்




Thursday, June 26, 2014

உங்கள் வாழ்க்கை நிறைவானதாய் இருக்கிறதா?



நிறைவான வாழ்க்கை தான் எல்லோரும் வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் அது எப்படி என்பது தான் நமக்கு புரிவதில்லை. வாழ்க்கையில் சேர்க்கவும், அனுபவிக்கவும், செய்யவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அத்தனையும் முடிவது இந்த குறுகிய வாழ்க்கையில் சாத்தியமா? ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரம் தானே இருக்கின்றது. நமக்கு இருக்கும் சக்தியும் ஒரு எல்லைக்குட்பட்டது தானே? அப்படியானால் என்ன தான் செய்வது? எப்படித் தான் வாழ்வது என்ற ஆயாசம் நமக்கு ஏற்படலாம். அப்படி குழம்பிய தன் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஒரு நல்ல உதாரணத்துடன் வழி காட்டுகிற கதையை சமீபத்தில் இணையத்தில் படிக்க நேர்ந்தது. அதைப் பார்ப்போமா?

அந்த ஆசிரியர் ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒன்றில் கோல்ஃப் பந்துகளை நிரப்பி விட்டு தன் மாணவர்களிடம் கேட்டார். “ஜாடி நிறைந்திருக்கிறதா?மாணவர்கள் ஆம் என்றார்கள். அடுத்ததாக மிகச்சிறியதான கற்களை எடுத்து ஜாடியில் போட்டார். ஜாடியை சற்று ஆட்டியவுடன் அந்த கோஃல்ப் பந்துகளுக்கு இடையில் அந்த சிறிய கற்கள் போய் சேர்ந்து கொண்டன. இப்போது ஜாடி நிறைந்திருக்கிறதா?என்று அவர் கேட்டார். மாணவர்கள் ஆம் என்றார்கள். ஆசிரியர் ஒரு பெட்டியில் வைத்திருந்த மணலை அந்த ஜாடியில் போட்டு மறுபடியும் குலுக்கினார்.  அந்த மணல் ஜாடியில் மீதமிருந்த இடைவெளியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. “இப்போது ஜாடி நிறைந்திருக்கிறதா?என்று ஆசிரியர் கேட்டார். மாணவர்கள் ஆம் என்றார்கள். கடைசியில் இரண்டு கப் காபி எடுத்து அந்த ஜாடியில் ஊற்றினார். காபி அந்த ஜாடியில் மிச்சம் மீதி இருந்த நுண்ணிய இடைவெளியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. மாணவர்களுக்கு ஒரே சிரிப்பு. ஆம் என்றார்கள்.

ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார். “அன்பு மாணவர்களே! இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைப் போல. கோல்ஃப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயங்கள் போல். குடும்பம், உத்தியோகம், வியாபாரம், நண்பர்கள், ஆரோக்கியம், உங்களுக்கு மிகவும் பிடித்த அர்த்தமுள்ள விஷயங்கள் எல்லாம் இந்த வரிசையில் சேர்க்கலாம். முதலில் இந்த விஷயங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடம் தாருங்கள். வேறெதுவும் இல்லா விட்டாலும் கூட இவை உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றால் அந்த வாழ்க்கை நிறைவாகவே இருக்கும். அடுத்ததாக வீடு, வாகனம், மற்ற பொருள்கள், சௌகரியங்கள் எல்லாம் அந்த சிறிய கற்கள் போன்றவை. அவற்றை அடுத்தபடியாகவே உங்கள் வாழ்க்கையில் சேருங்கள். மற்றவை எல்லாம் அந்த மணல் போல. அவற்றை கடைசியாக வாழ்க்கையில் புகுத்த முடிந்தால் புகுத்துங்கள். முடியா விட்டாலும் வாழ்க்கை நிறைவாகவே இருக்கும்

அவர் காபியைப் பற்றி சொல்லாமல் போகவே ஒரு மாணவர் அதைப் பற்றிக் கேட்டார். ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார். “எத்தனை தான் வாழ்க்கை வேறெதற்கும் இடமில்லாமல் நிறைந்திருந்தாலும் கூட நண்பனுடன் சேர்ந்து காபி குடித்தபடி சிறிது நேரம் பேச கண்டிப்பாக இடம்/நேரம் இருக்கும். அதைக் காட்டுவது தான் அந்த காபி

வாழ்க்கையில் முதலில் மிக முக்கியமான விஷயங்களுக்கு நம் நேரத்தையும் கவனத்தையும் செலுத்துவது அவசியம். அதை விட்டு அதிமுக்கியம் அல்லாத, குறைவான முக்கியத்துவம் அல்லது முக்கியத்துவமே இல்லாதவற்றிற்கு வாழ்க்கையில் இடம் கொடுத்தால் பின் முக்கியமானவற்றிற்கு நம் வாழ்க்கையில் இடம் இருக்காது. வாழ்க்கை நிறைவற்றதாகவே தங்கி விடும்.

இந்த ஜாடி உதாரணத்திலேயே முதலில் சிறிய கற்களையும், மணலையும் நிரப்பி இருந்தால் கோல்ஃப் பந்துகளை நிரப்பி இருக்க முடியாது. கோல்ஃப் பந்துகள், சிறு கற்கள், மணல் போன்ற அத்தனையும் அந்த ஜாடியில் அந்த அளவில் புகுத்த வேண்டும் என்றால் அதே வரிசையில் போட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். வாழ்க்கையிலும் அது போலத்தான்.

ஜாடிக்கென்று ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு இருப்பது போல வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட கால அளவே தரப்பட்டிருக்கிறது. அதை எதற்கெல்லாம் எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்ற பிரக்ஞை ஒரு மனிதனுக்கு என்றுமே இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சியோ, நடையோ, கவனம் தருதலோ செய்ய வேண்டிய நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டோ, வம்பு பேசிக் கொண்டோ கூட பொழுதைப் போக்கலாம். அது கோல்ஃப் பந்துகளுக்கு பதிலாக ஜாடியில் மணலை நிரப்புவதற்கு சமம். குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்திலும் கூடுதலாக பணத்தையும், பொருள்களையும் சேர்த்துக் கொண்டே போக நேரத்தைச் செலவழித்தால் கோல்ஃப் பந்துகளுக்கு பதிலாக சிறுகற்களை ஜாடியில் போடுவதற்கு சமம்.

ஒவ்வொரு கணமும் நாம் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டே இருக்கிறோம். வாழ்க்கையை எதை வைத்து நிரப்புகிறோம் என்பது தான் முக்கியம். நிறைவான வாழ்க்கை என்று கருதுவது முக்கியமானவை எல்லாமே நிறைந்த வாழ்க்கையைத் தான். அதை விட்டு கேளிக்கைகளையும், பொருள்களையும் வைத்து நிரப்பி விட்டு அதை விட முக்கியமான அர்த்தமுள்ள விஷயங்களை இழந்து விடாதீர்கள்!

-          என்.கணேசன்
   

Monday, June 23, 2014

கபீர் கற்பிக்கும் ஆன்மிகம்!

அறிவார்ந்த ஆன்மிகம்-43

இறைவனை அடைய உதவும் நோக்கத்துடன் தான் மதங்கள் தோன்றின. மதங்கள் என்ற வழிகள் பலவானாலும் போய்ச் சேர்கிற இலக்கு இறைவனாகத் தான் இருக்கிறது. ஆனால் மக்களின் அறியாமையால் இலக்கான இறைவன் மறக்கப்பட்டு வழிகளான மதங்கள் பிரதானமாகி விட்டன. அது ஒற்றுமையின்மைக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் காரணமாகி விடும் அவலம் எல்லா கால கட்டங்களிலும் நம்மால் பார்க்க முடிந்தது தான். ஆனால் அந்தக் காலக்கட்டங்களில் எல்லாம் உண்மையை உணர்ந்த ஞானிகள் பிறப்பதும், இந்தப் பிரிவினைகளின் உக்கிரத்தைக் குறைப்பதும் கூட நடைபெறுவது ஆறுதலான விஷயம்.

அந்த வகையில்  பதினைந்தாம் நூற்றாண்டில் வாரணாசியில் தோன்றிய ஞானி கபீர் தாசர்.  இவர் பிறப்பு பற்றி இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. நெசவுத் தொழில் செய்யும் ஒரு மகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாரார் கூறுகின்றனர்.  ஒரு பார்ப்பன விதவைக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து ஊர் அவச்சொல்லுக்குப் பயந்து அவளால் கைவிடப்பட்டார் என்றும் பிறகு `நீரு' என்ற பெயருடைய ஒரு மகமதிய நெசவுக்காரரால் இவர் எடுத்து வளர்க்கப் பட்டார் என்றும் மற்றொரு சாரார் கூறுகின்றனர். ஆனால் வளர்க்கப்பட்டது ஏழை மகமதிய நெசவுக் குடும்பத்தில் தான் என்பதில் ஒருமித்த கருத்து நிலவுகின்றது.

சிறுவனாக இருக்கையிலேயே ராமானந்தர் என்ற  துறவியின் போதனைகளால் கபீர் ஈர்க்கப்பட்டார். திருமணம் செய்து கொண்டு ஏழை நெசவாளியாகவே வாழ்ந்த போதும் ஆன்மிகத்தில் மிக உயர்ந்த நிலையை இளமையிலே கபீர் எட்டி இருந்தார். இறைவன் ஒருவரே, சாதி சமயப் பிரிவினைகள் கூடாது, ஆன்மிகத்தில் மேற்போக்காய் போதனைகளைப் பின்பற்றுவதில் பயன் எதுவுமில்லை, உண்மையாய் ஆத்மார்த்தமாய் இறைவழியில் நடக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் அவர் போதனைகளில் மிக முக்கியமாய் இருந்தன. அவரது ஆன்மிக தத்துவக் கருத்துக்கள் அதிகமாக தோஹா என்ற ஈரடிக் கவிதை வடிவில் இருந்தன.

கபீரின் நேர்மையான ஆணித்தரமான போதனைகள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும் கவர்வதாகவும் இருந்தன. அவர் தெள்ளத் தெளிவாகச் சொன்னார்.  நமது கர்ம வினைகளுக்கானப் பலனை நாமே தான் தீர்த்தாக வேண்டும். நமது நோக்கம் நேர்மையாக இருக்கும் போது பிறருடைய ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி வருந்த வேண்டியதில்லை. அவர்களுடைய பயனற்ற செயல்களின்  விளைவுகளை அவர்களே சந்திப்பர்.

மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்த கபீரிடம் இருந்த உண்மையான ஞான சக்தி இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலாரையும் அவரிடம் ஈர்த்தது. இரண்டு மதங்களிலும் அறிவுக்குப் பொருந்தியவற்றை அவர் ஆதரித்தும், அறிவுக்குப் பொருத்தமற்றதாய் தோன்றியதை மறுத்தும் அவர் வெளிப்படையாகப் பேசினார். அதனால் இரு மதங்களில் இருந்தும் எதிர்ப்பு அவருக்கு இருந்த போதும் அவர் போதனைகளைக் கேட்க அவர் குடிசைக்குப் பலர் சென்ற வண்ணம் இருந்தனர்.

அவர் குடிசைக்குச் செல்ல கசாப்புக் கடைத் தெரு வழியாகப் போக வேண்டும் என்பதால் அக்காலத்தில் சில உயர்ஜாதி இந்துக்களுக்குத் தயக்கம் இருந்தது. அதே நேரத்தில் ஒரு மகானிடம் இருந்து ஞான வாக்கியங்களைக் கேட்டறியவும் அவர்களுக்கு பேரார்வம் இருந்தது. தங்கள் தயக்கத்தை அவர்கள் கபீரிடம் வெளிப்படையாகவே சொன்ன போது கபீர் பாடினார்.

மனையொட்டி மாமிசக் கடை என வருந்துவது எதற்கு? 
வினையொட்டி வருவதே வாழ்வு, அவரவர் வினை அவர்க்கு!

வெளி உலக அடையாளங்களை விட உள்மனம் செயல் ஒட்டியதே ஆன்மிக வாழ்க்கை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

அவரது தோஹாக்களின் ஆழமான ஆன்மிகக் கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

கபீரான நான் மிக ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன்: நான் அது (இறைவன்) ஒன்றெனச் சொன்னால், அது இல்லை (தவறாகிப் போகும்), நான் இரண்டு எனச் சொன்னாலும் அதுவும் நிந்தனையாகப் போகும், அது எப்போதும் எப்படி இருக்கிறதோ அது அப்படியே இருக்கட்டும். இறைவன் பற்றிய விவாதங்கள் அனாவசியம் என்கிற தொனியில் இருக்கிறது இந்த தோஹா.

எதுவரை, “நான்” “என்என்று (அகந்தை என்னுள்) இருந்ததோ, “ஹரிஅங்கு வரவில்லை, எப்போது ஹரிஅங்கு வந்துவிட்டாரோ, அப்போது, “நான்” “என்என்று என்னுள் இருந்த அகந்தையைக் காண முடியவில்லை. கடவுள் இருக்கும் இடத்தில் கர்வம் இருக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.

கையிலுள்ள ஜபமாலையோ, முறைப்படி தன்னியக்கமாக சுழற்றப்படுகிறது; நாக்கோ உதட்டைச் சுழற்றி சுழற்றி மந்திரங்களை உச்சரிப்பதாகக் காண்பித்துக் கொள்கிறது. ஆனால், மனமோ எங்கெங்கோ போய் தடுமாறுகிறது.  இதனைத் தான் இறையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனைஎனச் சொல்வதா?”. பெரும்பாலான நம்முடைய பிரார்த்தனை மற்றும் தியான நேரங்களின் தன்மை எப்படி இருக்கின்றன என்று அருமையாக கபீர் சுட்டிக் காட்டுகிறார்.

அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு, வழியில் காணும் பருப்புக்கும் ஆசைப்பட்டால் அதற்கு இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டுஅதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடும் என்று கபீர் எச்சரிக்கிறார். எறும்பின் சக்திக்கு பருப்பு அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் மாயையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே அவர் அறிவுரை.

கபீரின் பக்தி இயக்கம் கபீர் பந்த் என்றழைக்கப்படுகிறது. அவரது சீடர்களும், பின்பற்றுவோரும் அந்த இயக்கத்தின் மூலம் அவர் போதனைகளைப் பரப்பினார்கள். அம்பேத்கரின் குடும்பம் கூட  கபீர் பந்த் இயக்கத்தின் தொடர்பில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அதனால் சிறுவயதில் இருந்தே அம்பேத்கர் கபீர் பந்த் பாடல்கள் கேட்டே வளர்ந்தார். அவர் பௌத்த மதத்துக்கு மாறிய பிறகு, அவரது மரணத்துக்குச் சிறிது நேரம் முன்னால்கூட, அவர் கபீர் பாடல்களைத் தனக்குள் பாடிக்கொண்டிருந்தார் என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்ஜய் கீர்.

மத ஒற்றுமையை வலியுறுத்தி வாழ்ந்த கபீர் தாசரின் மறைவுக்குப் பின் அவர் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சண்டை அவர் உடலுக்கு உரிமை கொண்டாடிய இந்து முஸ்லீம்களிடம் ஏற்பட்டது தான் வேடிக்கை. கடைசியில் அவர் பிணத்தின் மீதிருந்த துணியை விலக்கிப் பார்த்த போது மலர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவற்றை அவர்கள் பாதியாகப் பிரித்துக் கொண்டு அவரவர் முறைப்படி அந்திமக் கிரியைகள் செய்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இன்றும் காசியில் அவருடைய கோயிலும், அவர் சமாதியில் மசூதியும் இடம் பெற்று அவர் போதித்த மத ஒற்றுமைக்கு சான்றாய் விளங்குகின்றன. 

-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 31-12-2013




Thursday, June 19, 2014

விரைவில் என் புதிய நாவல் “புத்தம் சரணம் கச்சாமி!”



அன்பு வாசகர்களுக்கு,

வணக்கம்.

பரம(ன்) இரகசியத்தைத் தொடர்ந்து பல வாசகர்கள் புதிய நாவல் ஒன்றை எழுதச் சொல்லி என்னை வற்புறுத்தி வருகிறார்கள். பரம(ன்) இரகசியம் நாவல் பெற்ற வரவேற்பு அபாரமானது, நான் இந்த அளவில் எதிர்பாராதது. அதற்கு அடுத்ததாக ஒரு நாவல் என்றால் கண்டிப்பாக அது பரம(ன்) இரகசியத்தோடு ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த நாவலைப் படைத்து விட்டு அதை விடச் சிறந்ததாக இல்லா விட்டாலும் ஓரளவு இணையாகவாவது ஒரு நாவலைப் படைக்கா விட்டால் அது சோபை இழந்து விடும் அபாயம் இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டே வாசகர்களின் அன்பான கட்டளைக்கு இணங்க புத்தம் சரணம் கச்சாமி!என்ற புதியதொரு நாவலை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். இந்த நாவலிலும் ஆன்மிகம், குடும்பம், காதல், பாசம், சதி, சாகசம், திகில், அமானுஷ்யம், மர்மம், ஆகிய எல்லாமும் உண்டு.

இந்த நாவலின் ஒரு முக்கிய கதாபாத்திரம் என் பழைய வாசகர்களுக்கு மிகவும் பிடித்த, பரிச்சயமான கதாபாத்திரம் தான். அமானுஷ்யன் அக்‌ஷய் தான் அது.  அமானுஷ்யனின் அக்‌ஷய் மற்றும் சில கதாபாத்திரங்கள் இதில் இடம் பிடிக்கிறார்கள். ஆனால் இந்த நாவல் தனிக்கதைக்களம் தான். அதனால் அமானுஷ்யன் படித்து தான் இதைப் படிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. தேவைப்படும் ஒருசில இடங்களில் பழைய சம்பவங்கள் புதிய நாவலிலும் சாரம் குறையாமல் சுருக்கமாக சொல்லப்படும் என்பதால் புதிய வாசகர்களுக்கு சிறிதும் சிரமம் இருக்காது.

பரம(ன்) இரகசியத்தைப் போலவே இந்த நாவலும் ஒவ்வொரு வியாழனும் 2014 ஜுலை 3 ஆம் தேதி முதல் இந்த வலைப்பூவில் பதிவிடப்படும். அடுத்தது என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வண்ணம் நாவல் மிக சுவாரசியமாக இருக்கும் என்று மட்டுமல்லாமல் உங்கள் எண்ண அலைவரிசைகளை மேம்படுத்தக்கூடியதாகவும், மேலான உண்மைகளைக் கதை வடிவில் நுட்பமாகக் கற்றுக் கொடுக்கும்படியாகவும் இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன்.

அன்புடன்
உங்கள் (என்) கணேசன்