என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 26, 2025

சாணக்கியன் 167

 

மச்சடங்குகளின் போது தனநந்தன் தன் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், வார்த்தையையும் கவனித்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனின் காவலர்களுக்கு முன் அவனுக்கு எதையும் பேசப் பிடிக்கவில்லை. அவனது மூத்த மனைவியும், சுகேஷின் தாயுமான பட்டத்தரசி அமிதநிதா அவனிடம் கதறியழுதபடி கேட்டாள். “எப்படி நம் பிள்ளைகள் இறந்தார்கள்?”

 

தனநந்தன் என்னவென்று சொல்வான். இளைய மகன் மூத்த மகனைக் கொன்றான் என்று ஆரம்பிக்கும் நிஜத்தை அவளிடம் சொல்ல முடியாமல் அவன் ஒரே வார்த்தை சொன்னான். “தெரியவில்லை

 

ஈமச்சடங்குகள் முடிந்து சென்ற அவன் அங்கிருந்து வெளியே வரவும், யாரையும் காணவும் அனுமதிக்கப்படவுமில்லை. நடந்ததை ஓரளவு யூகத்தால் அறிந்திருந்த தாரிணி தன் மகன் சுதானுவின் குற்றம் வெளியே வந்து விடக்கூடாது என்று ஆசைப்பட்டாள். இறந்தவன் புகழுக்குக் களங்கம் வந்து விடக்கூடாது என்று கவலைப்பட்டாள். சாணக்கியரின் கட்டுப்பாட்டுக்குள் எல்லாம் வந்து விட்ட பின் நடந்ததை அறிந்த காவலர்கள் வெகுசிலரும் அதுகுறித்து வெளிப்படையாகப் பேச பயந்தார்கள்அதனால் அமிதநிதாவும் இளவரசி துர்தராவும் சுகேஷ், சுதானு மரணம் குறித்த தகவல்கள் எதுவும் அறியாமல் இருந்தார்கள்.

 

உண்மை யாருக்கும் தெரியாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தாரிணி நினைத்தாள். மகனுடைய பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக சேனாதிபதியும், அவன் வணிக நண்பனும் சதி செய்து சுகேஷையும், சுதானுவையும் கொல்ல முயன்றதாகவும், அவர்களை எதிர்த்துப் போராடி அவர்களைக் கொன்று விட்டு தாங்களும் இறந்து போனதாகவும் ஒரு கதையை உருவாக்கி அந்தப்புரத்தில் பரவ விட்டாள். இருவரும் மகன்களைப் பறிகொடுத்திருந்ததாலும், எதிரிகளால் அந்தப்புரத்தில் சேர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்ததாலும் பரஸ்பர துக்கம் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து தனநந்தன் மனைவிகளை பரஸ்பர அன்னியோன்னியத்திற்கு மாறி விட்டது. முன்பெல்லாம் கீரியும், பாம்புமாக இருந்து தனநந்தனுக்குப் பெரிய தலைவலியாக இருந்த அவர்கள் கஷ்ட காலத்தை ஒருமித்து அனுபவிக்க நேரிட்டதில் உடன்பிறவா சகோதரிகளாகி விட்டார்கள்ஈமச்சடங்குகள் முடிந்து சென்ற தனநந்தன் பின் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படாததால்  இறந்த மகன்களுக்காக அழுது தீர்ந்த அவர்கள் கணவனுக்காகக் கவலைப்பட்டார்கள். எதிரிகள் அவனைக் கொன்று விடுவார்களோ என்ற பயமும் தனநந்தனின் மனைவிகளை அலைக்கழித்தது.

 

அமிதநிதா தாரிணியிடம் கவலையோடு கேட்டாள். “இனி என்ன ஆகும் என்று நீ நினைக்கிறாய் தாரிணி?

 

தாரிணி சொன்னாள். “தெரியவில்லை அக்கா. எல்லா முடிவுகளையும் சாணக்கியர் தான் எடுப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள். சில மாதங்களாக  “சாணக்கின் மகன், சாணக்கின் மகன்என்று கனவிலும் கூட மன்னர் புலம்புவதுண்டுஅவர் கனவில் வந்து கலங்கடித்த மனிதர் நிஜத்திலும் வந்து இப்படி பிரச்சினையாவார் என்று நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை....”

 

அமிதநிதா விரக்தியோடு சொன்னாள். “சாணக்கை மன்னர் கைது செய்து, சாணக் சிறையிலேயே உயிரை விட நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள். அதனால் சாணக்கின் மகன் மன்னரிடம் கருணை காட்ட வழியில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். ராக்ஷசர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவர் இருந்திருந்தாலாவது தப்பிக்க ஏதாவது வழி கண்டுபிடித்திருப்பார்...”

 

ராக்ஷசர் தலைமறைவாகி விட்டார் என்கிறார்கள். அவர் இன்னமும் எதிரிகளிடம் அகப்படவில்லை என்பது நல்ல செய்தியாக இருக்கிறது. அது தான் ஒரு சிறிய நம்பிக்கையை நமக்குத் தருகிறது

 

அமிதநிதா பெருமூச்சு விட்டாள். “எனக்கு எதற்குத் துக்கப்படுவது என்று தெரியவில்லை. நம் பிள்ளைகள் இறந்ததற்குத் துக்கப்படுவதா, மன்னர் சிறைப்பட்டிருப்பதற்குத் துக்கப்படுவதா, துர்தராவின் எதிர்காலம் குறித்து எண்ணி துக்கப்படுவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அரசர்கள் துர்தராவை மணமுடிக்க ஆசைப்பட்டுக் கேட்டார்கள். மன்னர் யார் மீதும் திருப்தியடையாமல் தட்டிக்கழித்துக் கொண்டே வந்து விட்டார். அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தால் அவளாவது தப்பித்திருப்பாள். நாமாவது வாழ்ந்து முடிந்து விட்டோம். அவள் இன்னமும் வாழவே ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்கும் முன்பே எல்லாம் முடிந்து விடும் போலிருக்கிறதே...”

 

அவள் விழிகளில் படர்ந்த நீர்த்திரையைப் பார்க்கையில் தாரிணிக்கும் கண்கலங்கியது. அவளுக்கு முன்பிருந்தே துர்தரா மீது பாசம் இருந்தது. ஒரு மகனை மட்டுமே பெற்றிருந்த அவள் துர்தராவைத் தன் மகளைப் போலவே பாவித்திருந்தாள். அமிதநிதாவிடமும் சுகேஷிடமும் இருந்த வெறுப்பு துர்தராவிடம் என்றும் நீண்டதில்லை.   ”கவலைப்படாதீர்கள் அக்கா. அவள் பிறந்த நேரம் மிக அதிர்ஷ்டமான நேரம் என்றும், ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசியாக இருப்பாள் என்றும் ஜோதிடர்கள் சொன்னதை மறந்து விட்டீர்களா?” என்று அவள் ஆறுதல் சொன்னாள்.

 

இரு தாய்களும் பேசிக் கொண்டது துர்தரா காதுகளில் விழுந்தது. ஜோதிடர்கள் சொன்னதாக எல்லோரும் தெரிவித்ததை வைத்து அவளும் தான் நிறைய கனவுகள் கண்டிருந்தாள். கனவுகள் கற்பனையாகவே தங்கி விடும் என்று அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் விரக்தியுடன் நகர்ந்தாள்.

 

அந்தச் சமயத்தில் அவளுடைய தோழி ஓடி வந்தாள். “துர்தரா... புதிய மன்னரையும், சாணக்கியரையும் பார்த்தேன். அரசவையில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்....” என்று சொன்னாள் .

 

அந்தப்புரத்திலிருந்து அரசவை மாடத்திற்குச் செல்லும் பாதை இதுவரை எதிரிகளால் அடைக்கப்படவில்லை. அரசவையில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை அந்தப்புரப் பெண்களும் காண வசதியாகத் தான் அந்த அரசவைக்கு மேல் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து தான் தோழி அவர்களைப் பார்த்திருக்க வேண்டும்.

 

மகதத்தை வென்று அவர்களைச் சிறைப்படுத்தியிருக்கும் எதிரிகள் பற்றி நிறைய தகவல்கள் வந்தபடி இருந்தாலும் துர்தராவுக்கு எதிரிகளைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்திருக்கவில்லை. ஆனால் மனதில் நிறைந்திருந்த வெறுப்பு காரணமாக அவர்களைக் காணவும் அவள் பிரியப்படவில்லை.

 

தோழி இரகசியமாக அவள் காதுகளில் சொன்னாள். “நீ உன் வருங்காலக் கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று என்னிடம் இதுவரை சொல்லி இருக்கிறாயோ அப்படியெல்லாம் இருக்கிறார் புதிய மன்னர்.... மிக அழகாக இருக்கிறார்

 

எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எதிரிகளைப் பற்றி என்னிடம் பேசாதேஎன்று கோபத்துடன் துர்தரா சொன்னாள். ஆனால் தோழி சொன்ன விஷயங்கள் அவள் மனதில் மெள்ள ஆர்வத்தைக் கிளப்பி விட்டது.

 

கற்பனை செய்து சொன்னபடியெல்லாம் நிஜத்தில் யாரும் இருக்க வாய்ப்பில்லை.” என்று மெல்ல துர்தரா சொன்னாள்.

 

நீ வந்து ஒரு முறை பார்த்து விட்டுச் சொல். என்னுடன் வா. காட்டுகிறேன்.” என்று தோழி சொன்னாள்.

 

மனதின் ஒரு பாதி மறுக்க, மறு பாதி போய்ப் பாரேன் என்று சொன்னது. பார்ப்பதால் எதிரி நண்பனாகிவிட வேண்டியதில்லை என்று மனம் தர்க்கம் செய்தது. துர்தரா யோசனையுடன் தோழியைப் பார்த்தாள்.

 

தோழி பார்வையால் அழைத்து விட்டு முன் செல்ல துர்தரா அரைமனதுடன் அவளுடன் போனாள்.

 

துர்தரா மேல் மாடத்திற்குச் சென்று சற்று மறைந்து நின்று பார்த்த போது சந்திரகுப்தனும் சாணக்கியரும் அரசவை இருக்கைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த மாளிகையில் அமர்ந்து பேசினால் பர்வதராஜன் எப்படியாவது வந்து சேர்ந்து கொள்வான் என்பதால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். காலியாக இருக்கும் அரசவை அவர்களது இன்றைய தேர்வாக இருந்தது.

 

துர்தரா தோழி சொன்னதில் மிகை இல்லை என்பதை சந்திரகுப்தனைப் பார்த்தவுடனேயே உணர்ந்தாள். எப்படியெல்லாம் கணவன் இருக்க வேண்டும் என்று அவள் கனவுகள் கண்டிருந்தாளோ அந்தக் கனவுகளுக்கெல்லாம் ஒரு உருவம் கொடுத்தது போலிருந்த அவனிடம் முதல் பார்வையிலேயே அவளுடைய மனதை பறி கொடுத்தாள். அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தாலும் சந்திரகுப்தன் அவர்களது எதிரி, அவன் இப்போது அவர்களைச் சிறை வைத்திருக்கிறான் என்றெல்லாம் அறிவு எச்சரித்ததை அவள் மனம் பொருட்படுத்தவில்லை. அவனை மேலும் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் சற்று மறைவில் இருந்தவள் தன்னை அறியாமல் நகர்ந்து அவனைப் பார்த்தபடி நின்றாள்.

 

சந்திரகுப்தனின் பார்வை சாணக்கியர் மீதிருந்து மேல் நகர்ந்து அவள் மீது நிலைத்தது. அவனும் இப்படி ஒரு அழகுச்சிலை போல் இருக்கும் பெண்ணை இது வரை பார்த்ததில்லை. பலரும் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்த மகத இளவரசி இவள் தானா?

 

சந்திரகுப்தன் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவன் தான் என்றாலும் முதல் முறையாக அவள் மீது நிலைத்த பார்வையை மீண்டும் சாணக்கியர் முகத்துக்கு நகர்த்த அவன் மிகவும் பாடுபட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




3 comments:

  1. "எதிர்களால்" அந்தப்புரத்தில் சேர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்ததாலும்.....இதில் "எதிரிகளால்"... என்று வரும் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். மாற்றி விட்டேன்.

      Delete
  2. இந்த காதல் தனநந்தனுக்கு தெரிந்தால் பாதி உயிர் போய் விடுமே..!
    அடுத்து, பர்வதராஜனுக்கு தெரிந்தால் நொந்து விடுவாரே...!!!

    ReplyDelete