என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 23, 2025

யோகி 108

 

முக்தானந்தா ஷ்ரவனின் முகத்தில் தெரிந்த சுவாரசியத்தைப் பார்த்துக் கேட்டார். “உனக்கு அவனைத் தெரியுமா?”

 

இங்கு வந்த பிறகு தான் அவரைப் பார்த்தேன்

 

ஒருவிதத்தில் அவனைக் குறை சொல்ல முடியாது. அவன் சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்தையோ, கடவுளையோ நம்பாதவன். அவன் அன்றைக்கும் அதை மறைத்ததில்லை. இன்றைக்கும் அதை மறைப்பதில்லை. எங்களுக்கும் இங்கே பொது நிர்வாகத்திற்கு ஆன்மீகத்தை விட நிர்வாகத் திறமையே தேவையாய் இருந்தது. பாண்டியன் ஆட்களை எடை போடுவதிலும், அவர்களிடம் வேலை வாங்குவதிலும் மிகவும் கெட்டிக்காரன். அவன் அப்பாவும் அவனுக்கு எதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி என்னைப் பார்க்கும் போதெல்லாம் அப்போது சொல்லிக் கொண்டிருந்தார். திமிர் பிடித்தவன் என்றாலும், ஏற்றுக் கொண்ட வேலையை சிறப்பாகச் செய்பவன் அவன் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் அவனை இங்கே சேர்த்தேன். வரும் போதே அவன்சம்பளம் ஒழுங்காய் தரும் வரை கொடுத்த வேலையை ஒழுங்காய் செய்வேன். ஆனால் என்னை தியானம் செய். சாமி கும்பிடு என்றெல்லாம் சொல்லக்கூடாதுஎன்று என்னிடம் கறாராய்ச் சொல்லி விட்டு தான் வந்தான். நானும் பிரம்மானந்தாவிடம்ஆள் நாத்திகன், அதிகம் படிக்காதவன் என்றாலும், திறமையானவன்என்று சொல்லி தான் சேர்த்தேன். ஆரம்பத்தில் அவருக்கு அவன் மீது பெரிதாய் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அவர் அவனை நம்பும் அளவுக்கு வேறு யாரையும் நம்புவதில்லை...”

 

முக்தானந்தா ஜன்னல் வழியே வெறித்த பார்வை பார்த்தபடி ஒரு நிமிடம் மௌனமாய் இருந்து விட்டுத் தொடர்ந்தார்.

 

பல சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். பாண்டியன் நல்லவன் அல்ல என்றாலும், ஆரம்பத்திலிருந்தே அவன் விரும்பிய வாழ்க்கையை, அவன் நினைத்தபடியே வாழ்கிறான். என்றுமே தன்னை அவன் யாரிடமும் உத்தமனாகச் சொல்லிக் கொண்டதுமில்லை. அடுத்தவர் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை. அவன் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை. மாற்றிக் கொண்டவன் போல நடித்ததுமில்லை. அவனுக்குச் சரி என்று தோன்றியதைச் செய்யாமல் விட்டதுமில்லை. ஒருவிதத்தில் அவன் அவனுக்கு உண்மையாய் வாழ்கிறான். கெட்டவனானாலும் போலி வாழ்க்கை வாழவில்லை.”

 

அவர் சொல்வது உண்மை என்றே ஷ்ரவனும் நினைத்தான். அபூர்வமாக அவர் பேசும் மனநிலையில் இருப்பதால் அவரிடம் கூடுமான அளவு தகவல்களைத் தெரிந்து கொள்ள நினைத்த அவன் கேட்டான். “எப்போதாவது நீங்களும், பிரம்மானந்தாவும் சந்தித்துப் பேசுவதுண்டா?”

 

இல்லை. அதை அவரும் விரும்புவதில்லை. நானும் விரும்புவதில்லை. நான் எப்போதாவது தூரத்தில் அவரைப் பார்ப்பதுண்டு. ஆனால் அவர் கண்ணுக்கு நான் தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.”

 

உங்களுடன் இங்கு ஆரம்பத்தில் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் இன்னும் இங்கே இருக்கிறார்கள்?”

 

கல்பனானந்தா இருக்கிறாள். என்னைப் போல் சொத்தை எழுதிக் கொடுத்தவர்கள் மூன்று பேர். எங்களுக்குப் போக்கிடம் வேறு இல்லை என்பதால் இங்கேயே தங்க வேண்டியதாகி விட்டது. மூவரில் இரண்டு பேர் காலப் போக்கில் இறந்து விட்டார்கள். நான் மட்டும் இன்னும் இருக்கிறேன். மற்றவர்கள், பிரம்மானந்தாவின் போக்கு மாறியவுடனேயே, இங்கிருந்து போய் விட்டார்கள்.”

 

கல்பனானந்தா போயிருக்கலாமே?”

 

அது அவரைத் தான் கேட்க வேண்டும்.”

 

கல்பனானந்தாவும், நீங்களும் சந்தித்துப் பேசிக் கொள்வதுண்டா?”

 

கல்பனானந்தா பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முக்தானந்தா விரும்பவில்லை போல் தோன்றியது. அவர் சொன்னார். “நீ என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாயே ஒழிய நீ நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.”

 

ஷ்ரவன் அவரைப் பற்றி அவனுக்கு முழுமையாகத் தெரியும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் பழைய நிலையையே தொடர நினைத்துச் சொன்னான். “சுவாமிஜி நீங்கள் பிரம்மானந்தாவோடு ரமண மகரிஷியை ஒப்பிட்டு பிரம்மானந்தாவைக் குறை சொல்கிறீர்கள். பிரம்மானந்தா சொல்வதில் உண்மையோடு கற்பனையும் கூடக் கலந்து இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ரமண மகரிஷி இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால் நான் கண்டிப்பாக இங்கு வந்திருக்க மாட்டேன். ரமணாசிரமம் போயிருப்பேன். இந்த மதம் மட்டுமல்ல, இன்றைக்கு எல்லா மதங்களிலுமே தூய்மையைச் சிறிதும் இழக்காத உன்னத மத குருக்கள் மிகவும் குறைவே. இருப்பவர்களில் எவர் பரவாயில்லை என்று பார்த்துப் பின்பற்ற வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலேயே எல்லா மதங்களும் இருக்கின்றன. அந்தப் போதனைகளிலும் கூட உண்மையை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்கிற பக்குவமும், பொறுப்பும் தனிமனிதனைச் சேர்ந்தது. அந்த மனநிலையில், உண்மையைத் தேடி தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.”

 

முக்தானந்தா சிரித்துக் கொண்டே சொன்னார். “கேள்விக்குப் பதில் சொல்வதில் நீ பிரம்மானந்தாவையே மிஞ்சி விடுவாய் போல் இருக்கிறதே. நான் ஒரு கேள்வி கேட்டால், என் கேள்வி எனக்கே மறந்து விடுகிற மாதிரி என்னென்னவோ பதில் சொல்கிறாயே! நான் எளிமையான கேள்வி தானே கேட்டேன்.”

 

ஷ்ரவனும் சிரித்து விட்டான். பின் கைகளைக் கூப்பியபடி ஷ்ரவன் சொன்னான். “நானும் எளிமையான பதில் சொல்கிறேன். உண்மையைத் தேடி வந்திருக்கிறேன்.”

 

முக்தானந்தாவும் அசரவில்லை. “எந்த உண்மையைத் தேடி வந்திருக்கிறாய்?”

 

எல்லா உண்மையும் தான்.”

 

நான் உன்னைச் சாமர்த்தியசாலி என்று தான் நினைத்தேன். இப்போது புரிகிறது. நான் உன்னைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். நீ அதிசாமர்த்தியசாலி.”

 

அந்த அடைமொழிக்கெல்லாம் நான் பொருத்தமானவன் இல்லை. என்னைச் சொல்லி விட்டு, நீங்களும் நான் கேட்டதற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கிறீர்களே

 

நீ என்ன கேட்டாய்?”

 

கல்பனானந்தாவும், நீங்களும் சந்தித்துப் பேசிக் கொள்வதுண்டா?”

 

அவர் புன்னகையுடன் சொன்னார். “நீ என் கேள்விக்குத் தெளிவான பதில் தரும் வரை நானும் இனி நீ கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை

 

ஷ்ரவன் அவரைப் பார்த்துக் கைகூப்பியபடி சொன்னான். ”சுவாமிஜி. என்னை மட்டும் சம்பந்தப்பட்ட உண்மைகளை உங்களிடம் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் மற்றவர்களைப் பாதிக்கும் உண்மைகளை நான் உங்களிடம் சொல்வது நியாயமல்ல என்பதால் தான் தவிர்க்கிறேனே ஒழிய கெட்ட எண்ணத்தாலோ, அதிசாமர்த்தியத்தாலோ அல்ல. இது சத்தியம்.”

 

அவர் உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார். அவன் இப்போது ஆத்மார்த்தமாய்த் தான் சொன்னது போல் அவருக்குத் தோன்றியது.

 

இங்கே ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் சந்தித்துப் பேச அனுமதி கிடையாது என்றாலும் நான் முன்பே சொன்னபடி கல்பனானந்தாவுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. அவள் நினைத்தால் யாரையும் சந்தித்துப் பேசலாம். ஆனால் அவளும் என்னைச் சந்திக்கும் வாய்ப்பு வரும் போது கூட என்னிடம் பேசுவதில்லை. காரணம் அவளும் மாறி விட்டது தானா, இல்லை பேசுவது ஆபத்து என்று அவள் நினைக்கிறாளா என்று தெரியவில்லை. நானும் அவளிடம் பேச முற்பட்டதில்லை. பேசினால் கடந்த காலத்தைப் பற்றித் தான் நாங்கள் பேச வேண்டியிருக்கும். மாறிப் போனதையும், மாற்ற முடியாததையும் பேசுவது மனக்கசப்பைத் தான் அதிகப்படுத்தும் என்பதால் நானும் அவளோடு பேசுவதைத் தவிர்க்கிறேன். பொதுவாகவே இங்கே துறவிகளும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதை நீ கவனித்திருப்பாய். இப்போது நீயே சித்தானந்தாவுடன் வெளியிலும் பேசுகிறாய். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகிறாய். இனியும் நீங்கள் தொடர்ந்து நெருக்கமாய் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உங்களில் ஒருவர் வேறு அறைக்கு மாற்றப்படலாம். அதாவது 130 எண் அறையிலிருந்து 115ஆம் எண்ணுக்கோ, 145ஆம் எண்ணுக்கோ மாற்றப்படலாம்.”

 

ஏன் அப்படி?”

 

துறவறம் பூண்டவர்கள் அவர்களுக்குள்ளும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், துறவறம் என்பதே அர்த்தமில்லாமல் போய் விடும் என்பது அவர்களுடைய வாதம்.”

 

அதுவும் சரி தான்என்றான் ஷ்ரவன். “கல்பனானந்தாவும் பிரம்மானந்தாவைப் போல் முழுவதுமாக மாறி விட்டார் என்று நினைக்கிறீர்களா, சுவாமிஜி?”

 

தெரியவில்லை. ஆனால் மாறாமல் இருந்தால் இப்போதும் பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இருக்க வாய்ப்பு இல்லை.” என்று சொல்கையில் முக்தானந்தா வேறெதையோ மனதில் அசைபோடுவது போல் இருந்தது. அவளைக் குறித்து அவர் எதையோ நினைவுபடுத்திப் பார்ப்பது போலவும் தோன்றியது. 

 

இவர் கல்பனானந்தா பற்றி முழுவதுமாக வெளிப்படையாகச் சொல்லி விடவில்லை. எதையோ மறைக்கிறார். என்ன அது?’ என்று ஷ்ரவன் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.


(தொடரும்)

என்.கணேசன் 





என்.கணேசனின் நூல்களை வாங்கிப் படிக்க 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

1 comment:

  1. முக்தானந்தாவிடம் எப்படியாவது சைத்ரா பற்றி... ஷர்வன் விசாரித்து விடுவான்... என்று நினைக்கிறேன்....

    ReplyDelete