என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 19, 2025

சாணக்கியன் 166


சாணக்கியர் அமைதியாக பர்வதராஜனுக்கு விளக்கமளித்தார். மகதத்தின் அரசனாக தனநந்தன் இருந்த போதிலும் உண்மையில் ஆட்சி செய்து வந்தது ராக்ஷசர் தான் பர்வதராஜனே. தனநந்தனை அவன் இருக்கும் இடத்திலேயே சிறைப்படுத்தியிருக்கிறோம். ஆனால் ராக்ஷசர் தப்பித்து விட்டார். அவரை நாம் சிறைப்படுத்தும் வரும் வரை நம் வெற்றி பூரணமாகாது. ஏனென்றால் மகதத்தில் அவர் விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் வெளியே இருக்கும் வரை அவர் ரகசியமாக அவர்களை நமக்கு எதிராக இயக்கும் சாத்தியமிருக்கிறது.”

 

நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை ஆச்சாரியரே. ராக்ஷசரைச் சிறைப்படுத்த நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். அதைச் செய்வோம். அதன் கூடவே நம் பங்கீட்டைப் பற்றியும் பேச ஆரம்பிப்போம்.”

 

மகதமும், தனநந்தனின் நிதியும் எங்கும் போய் விடப்போவதில்லை. ராக்ஷசரைக் கண்டுபிடித்து சிறைப்படுத்துவதற்கு முன் பங்கீட்டைப் பற்றிப் பேசுவது அர்த்தமில்லாதது. நான் ஏற்கெனவே ராக்ஷசரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறேன். அதற்கு சில நாட்களில் பலன் கிடைத்து விடும். அது வரை பொறு.”

 

பர்வதராஜன் பொறுமையிழந்து சொன்னான். “அந்த முயற்சிகள் பற்றி என்னிடமும் சொல்லுங்கள். சேர்ந்து செயல்பட்டால் சீக்கிரமாகவே அவரைப் பிடித்து விடலாம்.”

 

சாணக்கியர் சொன்னார். “சுவர்களுக்கும் காதுகள் உண்டு என்பதை மறந்து விடாதே பர்வதராஜனே. ரகசியங்கள் கசிவது நம் தோல்விக்கு மூல காரணமாகி விடலாம்.”

 

பர்வதராஜன் சலிப்போடும், கோபத்தோடும் மறுத்துப் பேச முற்பட்ட போது சந்திரகுப்தன் குறுக்கிட்டுச் சொன்னான். “நண்பரே. ஆச்சாரியர் மகதத்தை வெற்றி பெற எடுத்த திட்டங்களைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவர் திட்டப்படி நாம் எளிதாக வெற்றியை அடைந்து விடவில்லையா? இவ்வளவு காலம் பொறுத்தீர்கள். இனி சில நாட்கள் பொறுப்பதில் என்ன நஷ்டமாகிவிடப் போகிறது?”

 

பர்வதராஜனுக்குப் பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. சாணக்கியர் அவன் பக்கம் சாய்ந்து தாழ்ந்த குரலில் சொன்னார். “இன்னமும் நாலா பக்கங்களிலும் நம்மை ஆபத்து சூழ்ந்து கொண்டு தானிருக்கிறது பர்வதராஜனே. நாம் பங்கீட்டில் மும்முரமாக இருக்கையில் மொத்தமாக இழந்து விடும் ஆபத்தும் இருப்பது என் கவனத்திற்கு வந்திருக்கிறது. முள் மீது நடப்பது போல மிக எச்சரிக்கையாகவும், சாதுரியமாகவும் நாம் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

 

சந்திரகுப்தனும் தாழ்ந்த குரலில் பர்வதராஜனிடம் சொன்னான். “போர் புரிய எல்லைகளுக்குச் சென்றிருக்கும் மகதப்படைகளைத் திரும்பி வர ஆணையிட்டு இருக்கிறோம். எல்லாம் ஒரு சீரான நிலைமைக்கு வரும் வரை முடிவுகளை ஆச்சாரியர் புதிய பிரதம அமைச்சராக இருந்து எடுக்கட்டும். அவர் ஒருவரே முடிவெடுப்பது பல சிக்கல்களைத் தவிர்க்கும். ஆபத்துகள் நீங்கி அனைத்தும் சரியானவுடன் நாம் பங்கீடு பற்றிப் பேசி முடிவெடுப்போம். அது வரை நீங்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே

 

பர்வதராஜனுக்கு என்ன சொல்வது என்று சட்டென்று தெரியவில்லை. அவன் அதை யோசிப்பதற்குள் அவர்கள் இருவரும் எழுந்து விட்டார்கள். சாணக்கியர் சொன்னார். “வேலைகள் நிறைய இருக்கின்றன பர்வதராஜனே. சீக்கிரமே அவற்றை முடித்து விட்டால் நாம் பங்கிட்டுக் கொள்வதும் துரிதமாகும்சீக்கிரமே நல்ல தகவலுடன் வருகிறேன்.”

 

இருவரும் சென்று விட்டார்கள். பர்வதராஜன் வாயடைத்துப் போய் அமர்ந்திருப்பதைக் கண்டு மலைகேது சிரித்தான். பர்வதராஜன் மகனை முறைத்து அவனைத் திட்ட முற்பட்ட போது அவன் கண்களில் மறைவில் நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் ஒரு பணியாளின் உடை சுவரைத் தாண்டி தெரிந்தது. பர்வதராஜன் எச்சரிக்கையடைந்து மகனிடம் ஏதாவது பேசு என்று சைகை காண்பித்தான்.

 

மலைகேது தந்தையின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்த போது அவனுக்கும் பணியாளின் ஆடை தெரிந்தது. அவனும் எச்சரிக்கையடைந்து  ”நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் பற்றி  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தந்தையே?...” என்று ஆரம்பித்து பல கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க பர்வதராஜன் சத்தமில்லாமல் எழுந்து வேகமாகச் சென்று அந்தப் பணியாளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.

 

ட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பணியாள் அதிர்ச்சியில் உறைந்து போய் திருதிருவென்று விழித்தான். பர்வதராஜன் கடுங்கோபத்துடன் கேட்டான். “ஒட்டுக் கேட்கிறாயா?”

 

அந்தப் பணியாள் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “இல்லை பிரபு. என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் சுவரில் தூசியைக் கவனித்து துடைத்துக் கொண்டிருந்தேன்.”

 

அவன் கையில் துடைக்கும் துணி இருந்தது. சுவரில் தூசியும் இருந்தது. பர்வதராஜன் அந்தப் பணியாள் சொன்னதை நம்பவில்லை என்றாலும் அந்தப் பணியாளின் சமயோசிதத்தை மனதிற்குள் ரசித்தான். இத்தனை வேகமாகச் சமாளித்துக் கொள்பவன் சாதாரண பணியாளாக இருக்க முடியாது. பர்வதராஜனின் பார்வை கூர்மையாகியது. அவன் குரலில் கடுமையைக் காட்டிக் கேட்டான். “உன் பெயர் என்ன?”

 

சுசித்தார்த்தக் பிரபு

 

பர்வதராஜன் கோபம் குறையாமல் சொன்னான். “ஒட்டுக் கேட்டது மட்டுமல்லாமல் மரியாதை தெரியாதவனாகவும் இருக்கிறாயே நீ. அரசனான என்னை நீ பிரபு என்று குறைத்து அழைத்து அவமானப்படுத்துகிறாயே. உனக்கு என்ன தண்டனை தந்தால் தகும்?”

 

சுசித்தார்த்தக் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “நான் புதியவன் என்பதால் அறியாமல் தவறிழைத்து விட்டேன் பிரபு, மன்னிக்கவும், அரசே. பணியாட்களான எங்களிடம் சந்திரகுப்தரை அரசர் என்று சொன்னார்கள். தங்களை யார் என்று சொல்லியிருக்கவில்லை. இனி உங்களையும் அரசர் என்றே அழைக்கிறேன்

 

பர்வதராஜன் அவன் கேலி செய்கிறானா என்று ஆழமாகப் பார்த்தான். முகபாவனையைப் பார்க்கையில் ஏளனம் செய்வதாகத் தெரியவில்லை. பர்வதராஜன் இறுக்கிப் பிடித்த பிடியைத் தளர்த்தினான். சாணக்கியர் சூட்சுமமான விதங்களில் அவனைப் பலவீனப்படுத்துவதாக பர்வதராஜனுக்குத் தோன்றியது. ஹிமவாதகூடப் படைகளை அதிக அளவில் சிராவஸ்திக்கு அனுப்பி இங்கு பர்வதராஜனின் படைபலத்தை வெகுவாகக் குறைத்து, எல்லா அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டு பணியாட்களிடமும் கூட சந்திரகுப்தனை அரசனாகச் சொல்லி, பர்வதராஜன் யாரென்றும் சொல்லாமல் தவிர்த்து சின்னச் சின்ன விஷயங்களில் கூட தந்திரமாக அவனைத் தாழ்த்துகிறார் ஆச்சாரியர்....

 

பர்வதராஜன் சாணக்கியர் மேலிருந்த மனக்கசப்பை தள்ளி வைத்து விட்டு சுசித்தார்த்தக்கை ஆராய்ந்தான். அவன் முன்பு சந்தேகப்பட்டது போல சுசித்தார்த்தக்கின் கண்களில் தெரிந்த புத்திசாலித்தனம் அவன் சாதாரணப் பணியாள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. அப்படியானால் யாரவன்? ஒற்றனாக இருக்கலாம் என்று தோன்றியது. அவன் சாணக்கியருடனும், சந்திரகுப்தனுடனும் பேசிய பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததால் சாணக்கியரின் ஒற்றனாக இருக்க வழியில்லை. அப்படியானால் யாருடைய ஒற்றன் அவன்?

 

பர்வதராஜன் நிதானமாகக் கேட்டான். “யாருடைய ஒற்றன் நீ? இங்கு ஒட்டுக் கேட்பதை நீ யாருக்குத் தெரியப்படுத்துகிறாய்?”

 

சுசித்தார்த்தக் அதிர்ச்சியைக் காட்டினான். “அரசே. ஒரு சாதாரணப் பணியாள் நான். சுவரைத் துடைத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லியும் என்னைச் சந்தேகப்படுகிறீர்களே?”

 

உன்னை எப்படி நம்புவது? இதற்கு முன் நீ எங்கே பணிபுரிந்தாய்?” என்று பர்வதராஜன் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

 

நான்.... பிரதம அமைச்சர் ராக்ஷசரின் இல்லப் பணியாளாக இருந்தேன் அரசே

 

... நீ ராக்ஷசரின் ஆளா?”

 

ஐயோ அப்படிச் சொல்லாதீர்கள் அரசே. எங்களுக்கு எங்கே பணியை ஒதுக்குகிறார்களோ அங்கே பணி செய்யக் கடமைப்பட்டவர்கள் நாங்கள். பணிபுரியும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கில்லை. இப்போது உங்களிடம் பணி செய்வதால் உங்கள் ஆள் என்று என்னைச் சொல்லிவிட முடியுமா?”

 

அப்படியானால் நீ என்னுடைய ஆள் அல்லவா?”

 

சுசித்தார்த்தக் அழாத குறையாகச் சொன்னான். ”நான் உங்களுடைய ஆள் தான் அரசே. ஏன், என்னை உங்கள் அடிமை என்றே சொல்லிக் கொள்ளலாம். பிரதம அமைச்சர் ராக்ஷசரின் ஆள் அல்ல என்று சொல்ல வந்தேன், அவ்வளவு தான்.”

 

இப்போதும் ராக்ஷசரையே பிரதம அமைச்சர் என்று சுசித்தார்த்தக் அழைப்பதைப் பார்த்தால் இவன் ராக்ஷசரின் விசுவாசியாகவே பர்வதராஜனுக்குத் தோன்றியது. ஒருவேளை இவன் ராக்ஷசரின் ஒற்றனாக இருக்கலாமோ? எதற்கும் இவன் மேல் ஒரு கண் எப்போதும் வைத்திருப்பது நல்லதென்று பர்வதராஜன் தீர்மானித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




 என்.கணேசனின் நூல்களை வாங்க, பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment