தனநந்தன் முந்தைய நாளிரவின் நிகழ்வுகள் அனைத்தையும் காவலர்கள் தலைவன் ஜீவசித்தி மூலமாகத் தான் கடைசியில் தெரிந்து கொண்டான். ஜீவசித்தி தன்னுடன் சுகேஷின் காவலனையும் அழைத்துச் சென்றிருந்தான். அந்தக் காவலன் சுதானுவும், வேறொரு புதிய ஆளும் சில வீரர்களும் சுகேஷைக் காண வந்ததையும், பின் அவர்கள் திரும்பிச் சென்ற போது சுகேஷ் கொல்லப்பட்டிருந்ததையும் விரிவாகச் சொன்னான். தனநந்தன் அதிர்ச்சியடைந்து பெருந்துக்கத்தில் ஆழ்ந்து, சுதானு மீது சீற்றம் கொண்ட போது ஜீவசித்தி அந்தக் காவலனை அனுப்பி விட்டு வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான். “இளவரசர் சுதானுவும், இந்தக் காவலன் சொன்ன புதிய ஆளும், சேனாதிபதி பத்ரசாலும் இளவரசர் சுதானுவின் இருப்பிடத்தில் இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் சடலங்களைப் பார்க்கையில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது அரசே. எதிரிகளின் படைகள் சந்திரகுப்தனின் தலைநகருக்குள் நுழைந்து விட்டார்கள் என்ற செய்தி சற்று முன் கிடைத்தது. அவர்கள் எந்த நேரத்திலும் நம் அரண்மனையைச் சூழ்ந்து விடுவார்கள் போல் தெரிகிறது. எங்களுக்கு என்ன கட்டளை அரசே?”
ஜீவசித்தி தெரிவித்த ஒவ்வொரு தகலும்
தனநந்தனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான தகவல்களாக இருந்தன. அவன் மகன்களும், சேனாதிபதியும்
இறந்து விட்டார்கள். எதிரிப்படைகள் தலைநகருக்குள் உள்ளே நுழைந்து விட்டன. கடைசியாக
அவனுடைய காவலர்கள் தலைவன் “எங்களுக்கு என்ன கட்டளை அரசே?” என்று கேட்கிறான். அனேகமாக இது தான் அவன் இடப் போகும் கடைசிக்
கட்டளையாக இருக்கும். இனி அவனும் அடுத்தவர்கள் கட்டளைக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.
குறிப்பாக அவனுக்குக் கட்டளையிடப் போவது சாணக்கின் மகனாக இருக்கலாம்….
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துக்கத்தையும், அவமானத்தையும், செயலற்ற நிலையையும் உணர்ந்த தனநந்தன்
தன் வாழ்வு அஸ்தமித்து விட்டது என்பதைத் திகைப்புடன் உணர்ந்தான்.
முதல் முறையாக இப்போதைய நிலையை விட மரணம் எத்தனையோ மேலானது என்று அவனுக்குத்
தோன்றியது.
“ராக்ஷசர்?” என்ற ஒற்றை வார்த்தையைத் தான் கடைசியில் அவனால் கஷ்டப்பட்டு கேட்க முடிந்தது. இதுவரை மகதத்தின் மிக முக்கியமான கட்டங்களில் அவனை வழிநடத்தியவர் அவர் தான் . அவர் சொல்வது தான் அவன் கட்டளையாக வெளிப்படும்….
ஜீவசித்தி சொன்னான்.
“நேற்றிரவு அவர் வீட்டில் காவலை அதிகப்படுத்தி இருந்தோம். ஆனால் இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை அரசே”
தனநந்தன் உயிரற்ற குரலில் கஷ்டப்பட்டு
சொன்னான். “அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தால் அவரிடம் கேட்டுக்கொள். இனியும்
ஏதாவது செய்ய முடியும் என்றால் அவராலே மட்டும் தான் முடியும்”
வெளியே சந்திரகுப்தன் படையினரின் வெற்றி
முழக்கம் கேட்க ஆரம்பித்தது. தனநந்தன் கண்களை மூடிக் கொண்டான். எல்லாம்
முடிவுக்கு வந்து விட்டது.
ஜீவசித்தி தனநந்தனை ஒரு கணம் பார்த்து விட்டு வெளியே விரைந்தான். சாணக்கியர் அவனிடம் அவர்களுடன் முன்பு எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவனாகவே தொடர்ந்து நடந்து கொள்ளும்படி சொல்லியிருந்தார். அவன் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றன….
ராக்ஷசரிடமும் வாயு வேகத்தில்
வந்து, தனநந்தனிடம் தெரிவித்த தகவல்களை அவசரமாகவும் சுருக்கமாகவும்
தெரிவித்த ஜீவசித்தி தனநந்தன் சொன்னதையும்
சொல்லிவிட்டுத் தொடர்ந்தான். ”எதிரிகள்
அரண்மனையைச் சூழ்ந்து விட்டார்கள் பிரபு. நான் அரண்மனையின் பின் வாயில் வழியாக தப்பித்து வந்திருக்கிறேன். இனி நீங்கள் இங்கிருப்பது தங்கள் உயிருக்கு ஆபத்து. தாங்கள் உடனே ரகசியமாகத் தப்பித்துச் சென்று எங்காவது
மறைந்து இருப்பது நல்லது.”
ராக்ஷசர் கேள்விப்பட்ட
தகவல்களால் மனமுடைந்து போயிருந்தார். சுதானுவும் பத்ரசாலும்
நெருக்கமானதில் அவர் உணர்ந்த இனம் புரியாத ஆபத்து இப்படிப்பட்ட ஆபத்தாக இருக்கலாம்
என்று அவர் கனவிலும் எண்ணி இருக்கவில்லை. சுகேஷையும் கொன்று
விட்டு அவர்களும் கொல்லப்பட்டது எதிரிகளின் மிக மோசமான சதியாக அவருக்குத் தோன்றியது. எல்லாம்
அவர் பிரதம அமைச்சராக இருக்கும் போதே நடந்தேறியிருப்பது அவர் திறமையைக் கேள்விக்குறியாக்கி
விட்டதாக நினைத்தார். மன்னரை எண்ணுகையிலோ அவர் இதயத்தில் ரத்தம் கசிந்தது. ஏக காலத்தில்
பிள்ளைகளையும், இராஜ்ஜியத்தையும் இழந்து விட்ட தனநந்தனின் நிலைமை கொடுமையிலும்
கொடுமையாக அவருக்குத் தோன்றியது. சாணக்கின் மகன் தனநந்தனுடனான தன் கணக்கை இனி எப்படித் தீர்ப்பாரோ
தெரியவில்லை. அவர் தனக்குள் பேசிக் கொள்வது போலவும், அவனிடம்
கேட்பது போலவும் மெல்லக் கேட்டார். “மன்னரைக் காப்பாற்ற
வழி ஏதாவது இருக்கிறதா?”
ஜீவசித்தி அவசரமாகச் சொன்னான். “எதிரிகள்
இப்போது அரண்மனையைச் சூழ்ந்து விட்டதால் அதற்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள்
தப்பித்துச் செல்ல முடியும் பிரபு. சிறிது நேரத்தில்
எதிரிகள் இங்கும் வந்து விடலாம்.”
ராக்ஷசர் வருத்தத்தோடு
சொன்னார். “தாயகத்தைக் காப்பாற்ற முடியவில்லை. மன்னரையும்
காப்பாற்ற முடியவில்லை. இப்படி இருக்கையில் என்னைக் காப்பாற்றிக் கொள்வதில் என்ன
அர்த்தம் இருக்கிறது.”
ஜீவசித்தி சொன்னான். “பிரபு அப்படிச்
சொல்லாதீர்கள். சீக்கிரமாக மாறுவேடத்தில் இங்கிருந்து தப்பிக்கும் வழியை
யோசியுங்கள். நீங்கள் தப்பித்தால் பின் மறைவிடத்திலிருந்து கொண்டு நிதானமாக
வேறு வழிகளை யோசிக்கலாம்.”
ராக்ஷசர் காவலன்
தலைவன் சொல்வதில் அர்த்தமுள்ளது என்பதை உணர்ந்தார். அவரும்
சிறைப்பட்டு விட்டால் மன்னனையும், மகதத்தையும் மீட்கும் வழிகள் நிரந்தரமாக அடைப்பட்டு விடும்
ஆபத்திருக்கிறது. இங்கிருந்து
தப்பித்துச் சென்று எங்கே மறைந்திருப்பது என்பதைக் கண நேரத்தில் அவர் முடிவெடுத்தார்.
சந்திரகுப்தனுக்கும், சாணக்கியருக்கும்
சின்ஹரனின் மரணம் பெருந்துக்கத்தைத் தந்தது. சாணக்கியர்
தத்துவார்த்த சிந்தனைகள் மூலம் தன் துக்கத்தை
இலகுவாக்கிக் கொண்ட போதிலும், சந்திரகுப்தனுக்கு
சின்ஹரன் நண்பனாக மட்டுமல்லாமல் பல பயிற்சிகளைப் படிப்பித்த குருவாகவும் இருந்திருந்ததால்
துக்கத்தை அடக்கிக் கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. ”எல்லாம்
நம் திட்டத்தின்படியே நடந்திருக்கிறது. ஆனால் அவர் மரணத்தை
நாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லையே ஆச்சாரியரே?”
சாணக்கியர் வருத்தத்துடன் சொன்னார். “எத்தனை
கச்சிதமாகத் திட்டமிட்டாலும் எதிர்பார்க்கின்ற விஷயங்களுடன் ஒருசில எதிர்பாராத விஷயங்களும்
நடந்து விடுவது இயற்கையே சந்திரகுப்தா.”
சந்திரகுப்தன் கேட்டான். “என்ன நடந்திருக்கும்
என்று நினைக்கிறீர்கள் ஆச்சாரியரே?”
“சுதானுவின்
வயிற்றில் குறுவாள் சொருகிய காயமிருக்கிறது. ஆனால் குறுவாள்
அவன் உடலில் இல்லை. ஆனால் பத்ரசாலின் உடலில் சின்ஹரனின் குறுவாள் பாய்ந்திருக்கிறது. பத்ரசாலின்
குறுவாள் சின்ஹரனின் உடலில் பாய்ந்திருக்கிறது. இதை வைத்து
யோசிக்கையில் சின்ஹரன் முதலில் சுதானுவைக் கொன்றிருக்க வேண்டும். அந்த சமயத்தில்
பத்ரசால் வந்து அதைக் கண்டிருக்க வேண்டும். அவன் தன்
குறுவாளை வீசியிருக்க வேண்டும். உடனே சின்ஹரனும் தன் குறுவாளை அவன் மீது வீசியிருப்பான் என்று
தோன்றுகிறது. அப்படித் தான் மூவரும் இறந்திருப்பார்கள்”
சின்ஹரனின் தியாகத்தை எண்ணும் போது
சந்திரகுப்தன் கண்களிலிருந்து அருவியாய் நீர் வழிய ஆரம்பித்தது. அவன் பெருந்துக்கத்துடன்
சொன்னான். ”இறக்கும் போதும் அவர் புன்னகையுடன் இறந்திருக்கிறார் கவனித்தீர்களா
ஆச்சாரியரே”
சாணக்கியர் மென்மையாகச் சொன்னார். “இந்த மரணத்திலும்
ஏதோ முடிந்த வரை நல்ல காரியத்தைச் சாதித்திருக்கிறோம் என்ற எண்ணமோ கடைசி நேரத்தில்
அவன் மனதில் தோன்றியிருக்கும் சந்திரகுப்தா. ஒவ்வொரு
கர்ம யோகியும் இந்த மாதிரியான நிறைவிற்காகவே ஆசைப்படுகிறான். சின்ஹரன்
சாதாரணமாக இறந்து போகாமல் சாதித்து விட்டு இறந்து போயிருக்கிறான். நாம் அவனுக்கு
வீரவணக்கம் செலுத்த வேண்டுமேயொழிய துக்கத்தில் ஆழ்வது சரியல்ல. நாம் செய்ய
வேண்டியது நிறைய இருக்கிறது.”
எந்தவொரு உணர்ச்சிகரமான சூழ்நிலையில்
ஆழ்ந்தாலும் அதிலிருந்து வேகமாக மீண்டு அடுத்தது ஆக வேண்டியது என்ன என்று யோசிக்கும்
ஆச்சாரியரின் பக்குவத்தை அடைவது மிகவும் கஷ்டம் என்று சந்திரகுப்தன் நினைத்தான். எத்தனையோ
அவரிடமிருந்து கற்றிருந்தும் இந்த ஒரு கலையைக் கற்று செயல்படுத்துவது அவனுக்கு இப்போதும்
கஷ்டமாகவே இருக்கிறது.
நடந்திருப்பது எதையும் ஜீரணிக்க முடியாமல் கடும் விரக்தியுடன்
தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த தனநந்தன் அவன் அறைக்கு வெளியே சிறு சலசலப்பைக் கேட்டுத்
தலைநிமிர்ந்தான். அறை வாயிலில் சாணக்கியர் நின்று கொண்டிருந்தார்.
அவரைக் கண்டவுடன் அவன் காவலனும் பணியாட்களும்
அவரை வணங்கி விட்டு அங்கிருந்து அகன்றார்கள். அவன் கண்ணசைவிலும்
கையசைவிலும் மட்டுமே நடக்கும் இந்தச் சின்ன விஷயம் கூட அதிகாரம் கைமாறி விட்டது என்பதை
வெளிப்படுத்தியது. அவனது இருப்பிடத்தில் அவன் காவலனுக்கும், பணியாட்களுக்கும்
கூட இன்று அவன் அரசனல்ல. சில வருடங்களுக்கு முன் அவன் அரசவையில் கைகூப்பி வணங்கி
வேண்டுகோள் விடுத்த சாணக்கின் மகன் இன்று அவன் தலையெழுத்து உட்பட அனைத்தையும் நிர்ணயிக்கும்
சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டு எதிரில் நிற்கிறான். சாணக்கின் மகன் சாணக்கியனாகச்
சபதம் இட்டு அன்று அவிழ்த்த கூந்தல் இன்னும் முடியப்படாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் அவன் மிகவும் துச்சமாய் நினைத்த
மனிதன் இன்று வல்லமையின் உச்சத்தில்...
சாணக்கியர் அவனைப் பார்த்து கைகூப்பினார். “வணக்கம்
தனநந்தனே”
(தொடரும்)
என்.கணேசன்
தனநந்தனுடன் தன் கணக்கை சாணக்கியர் எப்படி தீர்த்துக்கொள்ளப் போகிறார்? என்பதை அறிய ஆவலாக உள்ளது.
ReplyDelete