முக்தானந்தா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ஷ்ரவனுக்கு அவர் பழைய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது போல்
தெரிந்தது. சித்தானந்தாவும் உடன் இல்லாததால் அவரைப் பேச வைத்து மேலும்
தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஷ்ரவன் மெல்லச் சொன்னான். “நீங்கள்
பிரம்மானந்தா நிறைய மாறி விட்டதாய் சொன்னீர்கள். காலத்திற்கு
ஏற்ற மாதிரி எத்தனையோ மாற்றங்கள் எல்லாத் துறையிலும் தேவைப்படுகின்றன. ஆன்மீகமும்
அதற்கு விதிவிலக்கல்ல. மாற மாட்டேன் என்று சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அடித்துச்
செல்லப் படுவார்கள் அல்லது புறக்கணிப்படுவார்கள் அல்லவா சுவாமிஜி. அதனால்
தான் அவர் மாறியிருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”
முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். ”காலத்தின்
ஓட்டத்தில் எல்லாமே
மாறிவிடுவதில்லை ஷ்ரவன். காலத்தால் மாறாத, மாறக்கூடாத
விஷயங்களும் இருக்கின்றன. ஆதி மனிதன் வாயில் சாப்பிட்டான். இப்போதும்
நாம் வாயிலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமா, மூக்கிலே
சாப்பிட்டால் என்ன என்று யாரும் புரட்சி செய்ய நினைப்பதில்லை. இயற்கை
மனிதனை எப்படிப் படைத்திருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி
தான் மனிதன் இயங்க வேண்டும். ஆன்மீகவாதி முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். சத்தியம், நேர்மை, தர்மம், எல்லாம்
அவனால் பின்பற்றப்பட வேண்டும். மற்றவை
எல்லாமே அதற்கடுத்தது தான். ஆனால் இந்தப் பத்து வருடங்களில் பிரம்மானந்தா பேசிய எல்லாப்
பேச்சுகளையும் கேட்டுப் பார். எத்தனை பேச்சில் நேர்மையை, சத்தியத்தை, தர்மம்
தவறாமல் வாழ்வதை உயர்த்திப் பேசியிருக்கிறார் என்பதை நீ சல்லடை போட்டுத் தேடினாலும்
அதிகம் கிடைக்காது...”
ஷ்ரவன் யோசித்துப் பார்த்தான். அவன் பிரம்மானந்தாவின்
பேச்சுகளை சமீப காலத்தில் நிறையவே கேட்டிருக்கிறான். முக்தானந்தா
சொன்னது போல் நல்லவனாக இருப்பதையும், சத்தியம், நேர்மை, தர்மம்
பற்றியும் அவர் அதிக முக்கியத்துவம் தந்து பேசியது எதுவும் நினைவுக்கு வரவில்லை. தன்னுடைய அருமை பெருமைகளுக்கு அடுத்தபடியாக அவர் அதிகம் பேசியது
விஞ்ஞானம், வெற்றி, சக்திகள் பற்றி தான். ஞானிகள்
பற்றிப் பேசும் போது கூட பலரும் கேள்விப்படாத அவருடைய கற்பனைப் புனைவுகளும், அதிரடிக்
கருத்துக்களுமே அதிகம்.
ஆனால் முக்தானந்தாவைப் பேச வைக்க, பிரம்மானந்தா
பக்கத்து நியாயங்களைச் சொல்வது தான் பலனளிக்கும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஷ்ரவன்
சொன்னான். “சுவாமிஜி. நீங்கள் சொல்வது
உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அவர் நிறைய நல்ல விஷயங்களையும், அறிவுபூர்வமாக
அலசியிருக்கிறார் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல
காரியங்களையும் யோகாலயத்தின் மூலம் அவர் செய்திருக்கிறார். அவருடைய
நல்லதை எல்லாம் ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு, குறைபாடுகளை
மட்டும் விமர்சிப்பது சரியல்லவே.”
முக்தானந்தா சொன்னார். “நீ சொல்வது
எப்படி இருக்கிறது தெரியுமா ஷ்ரவன்? ஒரு அரசியல்வாதி, மக்களுக்கு
நல்லது செய்ய ஒதுக்கிய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கை, ஊழல் செய்து
திருடிக் கொள்கிறான் என்று வைத்துக் கொள். அதைச் சுட்டிக்
காட்டினால், மூன்றில் ஒரு பங்கை அவன் திருடிக் கொண்டாலும், இரண்டு
பங்கை அந்த நல்ல காரியத்துக்குத் தானே அவன் செலவு செய்திருக்கிறான், அதைச் சொல்ல
மாட்டேன் என்கிறீர்களே என்று ஒருவன் ஆதங்கப்படுவதற்கு இணையாக இருக்கிறது. ஏமாற்றாமல், ஒதுக்கப்பட்ட
பணத்தை முழுவதுமாக மக்கள் நலனுக்குச் செலவு செய்வதற்காகத் தானே அவனை மக்கள் தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள்? பிரம்மானந்தாவும் ஆன்மீகத்தை நிலைநாட்டத் தான் யோகாலயத்தை
ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு ஆன்மீகத்தை விட அவர் தன்னைத் தான் அதிகம்
நிலைநாட்டுகிறார்.”
அவர் வாதத்திறமையை ஷ்ரவன் ரசித்தாலும்
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான். ”ஆனால் இன்று இந்தியாவுக்குள்
மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் போய் அவர் நம் ஆன்மீகப் பெருமைகளைப் பேசிப்
பலரைக் கவர்கிறார். அந்த வகையில் வெற்றிகரமான ஆன்மீகவாதி என்றே அவரைச் சொல்லத்
தோன்றுகிறது சுவாமிஜி.”
முக்தானந்தா உடனே சொன்னார். “ஆன்மீகத்தில்
வெற்றி ஆத்மஞானம் அடைவதே ஒழிய பிரபலமாக இருப்பதும், கூட்டம், புகழ் சேர்ப்பதுமல்ல
ஷ்ரவன். ஓராயிரம் வார்த்தைகளைச் சொல்ல முடிவதை விட, உதாரணமாய்
வாழ்ந்து காட்டுவதையே ஆன்மீகத்தில் வெற்றியாக நான் நினைக்கிறேன். அப்படி
வாழ்ந்து காட்டுபவனையே நான் யோகியாகப் பார்க்கிறேன்...”
”அருமையாகச்
சொன்னீர்கள் சுவாமிஜி. வெற்றிகரமான ஆன்மீகவாதி என்று சொன்னதை நான் வாபஸ் வாங்கிக்
கொள்கிறேன். நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் ஒரு உண்மையான யோகியைப்
பார்த்திருக்கிறீர்களா?” ஷ்ரவன் ஆவலுடன் கேட்டான்.
முக்தானந்தா ஆதங்கத்துடன் சொன்னார். ”அந்தப்
பாக்கியம் எனக்கு இதுவரையில் கிடைக்கவில்லை ஷ்ரவன். இங்கே எந்த
யோகியும் இல்லை. நான் இங்கேயே சிறைப்பட்டு விட்டதால் வெளியுலகிற்குப் போகும்
வாய்ப்பு இல்லை. அதனால் வெளியே பார்க்கும் பாக்கியமும் இல்லை.”
ஷ்ரவன் யோசித்தான். ‘ஒரு யோகியைக்
கண்டால் உடனே கண்டுபிடித்து விடும் ஆன்மீகத் தெளிவில் தான் இவர் இருக்கிறார். அப்படி
இருக்கையில் யோகாலயத்திலேயே இருக்கும் இவரும் எந்த யோகியையும் பார்க்கவில்லை என்றால்
சைத்ராவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? எங்கே கிடைத்தது?’
ஷ்ரவன் கேட்டான். “பிரம்மானந்தா
எப்போதாவது ஒரு நிஜ யோகியைப் பார்த்ததாய், உங்களிடம்
நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் சொல்லியிருக்கிறாரா?”
முக்தானந்தா சற்று சிரமப்பட்டு நினைவுபடுத்திக்
கொண்டது போலிருந்தது. சிறிது யோசித்து விட்டு முக்தானந்தா சொன்னார். ”ஒரே ஒரு
தடவை அது பற்றிப் பேசியதாய் ஞாபகம். யாரோ ஒருவர் இன்னொருவரை
யோகி என்று அடையாளம் காட்டியதாகவும், பிரம்மானந்தாவும்
மிகவும் ஆர்வத்துடன் அவரைப்
போய்ப் பார்த்ததாகவும் சொல்லியிருந்தார். ஆனால் சொல்லுமளவு
அந்த நபர் இருக்கவில்லை என்று பிரம்மானந்தா சொன்னதாக நினைவு.”
ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “சில நேரங்களில்
நம் எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருப்பதால் யதார்த்தத்தை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை. பிரம்மானந்தா
நிறைய எதிர்பார்த்துப் போயிருக்கலாம்.
ஆனால் நிஜத்தில் பார்க்கையில் இவ்வளவு தானா என்று தோன்றியிருக்கலாம்…
நீங்கள் பிரம்மானந்தாவிடம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததைப் போல…”
முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். “இருக்கலாம். சொத்தையே
எழுதிக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்து கடைசியில் ஏமாறும் போது ஏற்றுக் கொள்வது
சுலபமாய் இருப்பதில்லை. அதுவும் இங்கிருந்து கொண்டே நடப்பதை எல்லாம் பார்க்கும் போது
மனம் சீக்கிரம் ஆறுவதில்லை....”
“உண்மை தான். என்னவெல்லாம்
நடக்கிறது என்பதை இரவு பகலாகப் பார்க்கிறீர்கள். நிறையப்
பார்த்திருப்பீர்கள்.” என்று ஷ்ரவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
முக்தானந்தா அவனைப் புன்னகையுடன் கூர்ந்து
பார்த்தார். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஷ்ரவன் விடுவதாக இல்லை. அவன் கேட்டான். “அப்படிப்
பார்த்ததில் உங்களை அதிர்ச்சியடையச் செய்ததோ, ஆச்சரியப்படுத்தியதோ
சமீபத்தில் எதாவது இருக்கிறதா சுவாமிஜி.”
முக்தானந்தா சொன்னார். “சில நாட்களுக்கு
முன் யாரோ ஒரு மந்திரவாதி யோகாலயத்துக்கு வந்திருந்தார். அவர் இங்கே
ஒரு ராத்திரியெல்லாம் பூஜை செய்த மந்திரங்கள் என் காதில் விழுந்தன. அவர் போன
பிறகு பார்த்தால் பாண்டியனின் கையில் தாயத்து ஒன்று இருந்தது. எனக்கு
என் கண்களையே நம்ப முடியவில்லை. எனக்குத் தெரிந்த பாண்டியன், கோடி ரூபாயே
கொடுத்தாலும் தாயத்து எல்லாம் கையில் கட்டிக் கொள்ளும் ரகமல்ல. பணத்தையும்
நீயே வைத்துக் கொள். உன் தாயத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொல்லக்கூடியவன்
அவன். அதனால் நான் என்னையே கிள்ளிப் பார்த்துத் தான் கனவல்ல என்று
உறுதிப்படுத்திக் கொண்டேன்.”
ஷ்ரவன் தெரியாதது போல் ஆர்வத்துடன்
கேட்டான். “என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சுவாமிஜி?”
“தெரியவில்லை. ஆனால் இங்கே
எதோ ஒரு அற்புதம் நடந்திருக்கிறது. ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது
என்பது மட்டும் புரிந்தது. அப்போதே இனியும் ஏதாவது தொடர்ந்து நடக்கும் என்று என் மனம்
எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போல நீ வந்து சேர்ந்திருக்கிறாய்”
(தொடரும்)
என்.கணேசன்
முக்தானாந்தா லேசு பட்ட ஆளில்லை...
ReplyDeleteபிரம்மானந்தா என்ற பெயர் மட்டுமே கற்பனை...மற்றபடி அவருடைய செயல்கள் அனைத்தும் 100க்கு 100சதவீதம்... தற்போது நிஜ வாழ்வில் உலாவிக் கொண்டுள்ள அந்த நபரையே சுட்டிக் காட்டுகிறது...
ReplyDeleteஅந்த நபரை கண்மூடித்தனமாக பின்பற்றும் இக்காலத்தவர்கள்...இந்த நாவலை கண்டிப்பாக படிக்க வேண்டும்....
'பட்ஜெட் உதாரணம்' மற்றும் 'ஆன்மீகத்தின் வெற்றி' இதற்கான விளக்கங்கள் அற்புதமாக இருந்தது ஐயா🙏🙏👏👏
ReplyDelete