என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 23, 2025

யோகி 108

 

முக்தானந்தா ஷ்ரவனின் முகத்தில் தெரிந்த சுவாரசியத்தைப் பார்த்துக் கேட்டார். “உனக்கு அவனைத் தெரியுமா?”

 

இங்கு வந்த பிறகு தான் அவரைப் பார்த்தேன்

 

ஒருவிதத்தில் அவனைக் குறை சொல்ல முடியாது. அவன் சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்தையோ, கடவுளையோ நம்பாதவன். அவன் அன்றைக்கும் அதை மறைத்ததில்லை. இன்றைக்கும் அதை மறைப்பதில்லை. எங்களுக்கும் இங்கே பொது நிர்வாகத்திற்கு ஆன்மீகத்தை விட நிர்வாகத் திறமையே தேவையாய் இருந்தது. பாண்டியன் ஆட்களை எடை போடுவதிலும், அவர்களிடம் வேலை வாங்குவதிலும் மிகவும் கெட்டிக்காரன். அவன் அப்பாவும் அவனுக்கு எதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி என்னைப் பார்க்கும் போதெல்லாம் அப்போது சொல்லிக் கொண்டிருந்தார். திமிர் பிடித்தவன் என்றாலும், ஏற்றுக் கொண்ட வேலையை சிறப்பாகச் செய்பவன் அவன் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் அவனை இங்கே சேர்த்தேன். வரும் போதே அவன்சம்பளம் ஒழுங்காய் தரும் வரை கொடுத்த வேலையை ஒழுங்காய் செய்வேன். ஆனால் என்னை தியானம் செய். சாமி கும்பிடு என்றெல்லாம் சொல்லக்கூடாதுஎன்று என்னிடம் கறாராய்ச் சொல்லி விட்டு தான் வந்தான். நானும் பிரம்மானந்தாவிடம்ஆள் நாத்திகன், அதிகம் படிக்காதவன் என்றாலும், திறமையானவன்என்று சொல்லி தான் சேர்த்தேன். ஆரம்பத்தில் அவருக்கு அவன் மீது பெரிதாய் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அவர் அவனை நம்பும் அளவுக்கு வேறு யாரையும் நம்புவதில்லை...”

 

முக்தானந்தா ஜன்னல் வழியே வெறித்த பார்வை பார்த்தபடி ஒரு நிமிடம் மௌனமாய் இருந்து விட்டுத் தொடர்ந்தார்.

 

பல சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். பாண்டியன் நல்லவன் அல்ல என்றாலும், ஆரம்பத்திலிருந்தே அவன் விரும்பிய வாழ்க்கையை, அவன் நினைத்தபடியே வாழ்கிறான். என்றுமே தன்னை அவன் யாரிடமும் உத்தமனாகச் சொல்லிக் கொண்டதுமில்லை. அடுத்தவர் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை. அவன் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை. மாற்றிக் கொண்டவன் போல நடித்ததுமில்லை. அவனுக்குச் சரி என்று தோன்றியதைச் செய்யாமல் விட்டதுமில்லை. ஒருவிதத்தில் அவன் அவனுக்கு உண்மையாய் வாழ்கிறான். கெட்டவனானாலும் போலி வாழ்க்கை வாழவில்லை.”

 

அவர் சொல்வது உண்மை என்றே ஷ்ரவனும் நினைத்தான். அபூர்வமாக அவர் பேசும் மனநிலையில் இருப்பதால் அவரிடம் கூடுமான அளவு தகவல்களைத் தெரிந்து கொள்ள நினைத்த அவன் கேட்டான். “எப்போதாவது நீங்களும், பிரம்மானந்தாவும் சந்தித்துப் பேசுவதுண்டா?”

 

இல்லை. அதை அவரும் விரும்புவதில்லை. நானும் விரும்புவதில்லை. நான் எப்போதாவது தூரத்தில் அவரைப் பார்ப்பதுண்டு. ஆனால் அவர் கண்ணுக்கு நான் தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.”

 

உங்களுடன் இங்கு ஆரம்பத்தில் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் இன்னும் இங்கே இருக்கிறார்கள்?”

 

கல்பனானந்தா இருக்கிறாள். என்னைப் போல் சொத்தை எழுதிக் கொடுத்தவர்கள் மூன்று பேர். எங்களுக்குப் போக்கிடம் வேறு இல்லை என்பதால் இங்கேயே தங்க வேண்டியதாகி விட்டது. மூவரில் இரண்டு பேர் காலப் போக்கில் இறந்து விட்டார்கள். நான் மட்டும் இன்னும் இருக்கிறேன். மற்றவர்கள், பிரம்மானந்தாவின் போக்கு மாறியவுடனேயே, இங்கிருந்து போய் விட்டார்கள்.”

 

கல்பனானந்தா போயிருக்கலாமே?”

 

அது அவரைத் தான் கேட்க வேண்டும்.”

 

கல்பனானந்தாவும், நீங்களும் சந்தித்துப் பேசிக் கொள்வதுண்டா?”

 

கல்பனானந்தா பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முக்தானந்தா விரும்பவில்லை போல் தோன்றியது. அவர் சொன்னார். “நீ என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாயே ஒழிய நீ நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.”

 

ஷ்ரவன் அவரைப் பற்றி அவனுக்கு முழுமையாகத் தெரியும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் பழைய நிலையையே தொடர நினைத்துச் சொன்னான். “சுவாமிஜி நீங்கள் பிரம்மானந்தாவோடு ரமண மகரிஷியை ஒப்பிட்டு பிரம்மானந்தாவைக் குறை சொல்கிறீர்கள். பிரம்மானந்தா சொல்வதில் உண்மையோடு கற்பனையும் கூடக் கலந்து இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ரமண மகரிஷி இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால் நான் கண்டிப்பாக இங்கு வந்திருக்க மாட்டேன். ரமணாசிரமம் போயிருப்பேன். இந்த மதம் மட்டுமல்ல, இன்றைக்கு எல்லா மதங்களிலுமே தூய்மையைச் சிறிதும் இழக்காத உன்னத மத குருக்கள் மிகவும் குறைவே. இருப்பவர்களில் எவர் பரவாயில்லை என்று பார்த்துப் பின்பற்ற வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலேயே எல்லா மதங்களும் இருக்கின்றன. அந்தப் போதனைகளிலும் கூட உண்மையை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்கிற பக்குவமும், பொறுப்பும் தனிமனிதனைச் சேர்ந்தது. அந்த மனநிலையில், உண்மையைத் தேடி தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.”

 

முக்தானந்தா சிரித்துக் கொண்டே சொன்னார். “கேள்விக்குப் பதில் சொல்வதில் நீ பிரம்மானந்தாவையே மிஞ்சி விடுவாய் போல் இருக்கிறதே. நான் ஒரு கேள்வி கேட்டால், என் கேள்வி எனக்கே மறந்து விடுகிற மாதிரி என்னென்னவோ பதில் சொல்கிறாயே! நான் எளிமையான கேள்வி தானே கேட்டேன்.”

 

ஷ்ரவனும் சிரித்து விட்டான். பின் கைகளைக் கூப்பியபடி ஷ்ரவன் சொன்னான். “நானும் எளிமையான பதில் சொல்கிறேன். உண்மையைத் தேடி வந்திருக்கிறேன்.”

 

முக்தானந்தாவும் அசரவில்லை. “எந்த உண்மையைத் தேடி வந்திருக்கிறாய்?”

 

எல்லா உண்மையும் தான்.”

 

நான் உன்னைச் சாமர்த்தியசாலி என்று தான் நினைத்தேன். இப்போது புரிகிறது. நான் உன்னைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். நீ அதிசாமர்த்தியசாலி.”

 

அந்த அடைமொழிக்கெல்லாம் நான் பொருத்தமானவன் இல்லை. என்னைச் சொல்லி விட்டு, நீங்களும் நான் கேட்டதற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கிறீர்களே

 

நீ என்ன கேட்டாய்?”

 

கல்பனானந்தாவும், நீங்களும் சந்தித்துப் பேசிக் கொள்வதுண்டா?”

 

அவர் புன்னகையுடன் சொன்னார். “நீ என் கேள்விக்குத் தெளிவான பதில் தரும் வரை நானும் இனி நீ கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை

 

ஷ்ரவன் அவரைப் பார்த்துக் கைகூப்பியபடி சொன்னான். ”சுவாமிஜி. என்னை மட்டும் சம்பந்தப்பட்ட உண்மைகளை உங்களிடம் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் மற்றவர்களைப் பாதிக்கும் உண்மைகளை நான் உங்களிடம் சொல்வது நியாயமல்ல என்பதால் தான் தவிர்க்கிறேனே ஒழிய கெட்ட எண்ணத்தாலோ, அதிசாமர்த்தியத்தாலோ அல்ல. இது சத்தியம்.”

 

அவர் உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார். அவன் இப்போது ஆத்மார்த்தமாய்த் தான் சொன்னது போல் அவருக்குத் தோன்றியது.

 

இங்கே ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் சந்தித்துப் பேச அனுமதி கிடையாது என்றாலும் நான் முன்பே சொன்னபடி கல்பனானந்தாவுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. அவள் நினைத்தால் யாரையும் சந்தித்துப் பேசலாம். ஆனால் அவளும் என்னைச் சந்திக்கும் வாய்ப்பு வரும் போது கூட என்னிடம் பேசுவதில்லை. காரணம் அவளும் மாறி விட்டது தானா, இல்லை பேசுவது ஆபத்து என்று அவள் நினைக்கிறாளா என்று தெரியவில்லை. நானும் அவளிடம் பேச முற்பட்டதில்லை. பேசினால் கடந்த காலத்தைப் பற்றித் தான் நாங்கள் பேச வேண்டியிருக்கும். மாறிப் போனதையும், மாற்ற முடியாததையும் பேசுவது மனக்கசப்பைத் தான் அதிகப்படுத்தும் என்பதால் நானும் அவளோடு பேசுவதைத் தவிர்க்கிறேன். பொதுவாகவே இங்கே துறவிகளும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதை நீ கவனித்திருப்பாய். இப்போது நீயே சித்தானந்தாவுடன் வெளியிலும் பேசுகிறாய். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகிறாய். இனியும் நீங்கள் தொடர்ந்து நெருக்கமாய் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உங்களில் ஒருவர் வேறு அறைக்கு மாற்றப்படலாம். அதாவது 130 எண் அறையிலிருந்து 115ஆம் எண்ணுக்கோ, 145ஆம் எண்ணுக்கோ மாற்றப்படலாம்.”

 

ஏன் அப்படி?”

 

துறவறம் பூண்டவர்கள் அவர்களுக்குள்ளும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், துறவறம் என்பதே அர்த்தமில்லாமல் போய் விடும் என்பது அவர்களுடைய வாதம்.”

 

அதுவும் சரி தான்என்றான் ஷ்ரவன். “கல்பனானந்தாவும் பிரம்மானந்தாவைப் போல் முழுவதுமாக மாறி விட்டார் என்று நினைக்கிறீர்களா, சுவாமிஜி?”

 

தெரியவில்லை. ஆனால் மாறாமல் இருந்தால் இப்போதும் பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இருக்க வாய்ப்பு இல்லை.” என்று சொல்கையில் முக்தானந்தா வேறெதையோ மனதில் அசைபோடுவது போல் இருந்தது. அவளைக் குறித்து அவர் எதையோ நினைவுபடுத்திப் பார்ப்பது போலவும் தோன்றியது. 

 

இவர் கல்பனானந்தா பற்றி முழுவதுமாக வெளிப்படையாகச் சொல்லி விடவில்லை. எதையோ மறைக்கிறார். என்ன அது?’ என்று ஷ்ரவன் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.


(தொடரும்)

என்.கணேசன் 





என்.கணேசனின் நூல்களை வாங்கிப் படிக்க 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 19, 2025

சாணக்கியன் 166


சாணக்கியர் அமைதியாக பர்வதராஜனுக்கு விளக்கமளித்தார். மகதத்தின் அரசனாக தனநந்தன் இருந்த போதிலும் உண்மையில் ஆட்சி செய்து வந்தது ராக்ஷசர் தான் பர்வதராஜனே. தனநந்தனை அவன் இருக்கும் இடத்திலேயே சிறைப்படுத்தியிருக்கிறோம். ஆனால் ராக்ஷசர் தப்பித்து விட்டார். அவரை நாம் சிறைப்படுத்தும் வரும் வரை நம் வெற்றி பூரணமாகாது. ஏனென்றால் மகதத்தில் அவர் விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் வெளியே இருக்கும் வரை அவர் ரகசியமாக அவர்களை நமக்கு எதிராக இயக்கும் சாத்தியமிருக்கிறது.”

 

நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை ஆச்சாரியரே. ராக்ஷசரைச் சிறைப்படுத்த நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். அதைச் செய்வோம். அதன் கூடவே நம் பங்கீட்டைப் பற்றியும் பேச ஆரம்பிப்போம்.”

 

மகதமும், தனநந்தனின் நிதியும் எங்கும் போய் விடப்போவதில்லை. ராக்ஷசரைக் கண்டுபிடித்து சிறைப்படுத்துவதற்கு முன் பங்கீட்டைப் பற்றிப் பேசுவது அர்த்தமில்லாதது. நான் ஏற்கெனவே ராக்ஷசரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறேன். அதற்கு சில நாட்களில் பலன் கிடைத்து விடும். அது வரை பொறு.”

 

பர்வதராஜன் பொறுமையிழந்து சொன்னான். “அந்த முயற்சிகள் பற்றி என்னிடமும் சொல்லுங்கள். சேர்ந்து செயல்பட்டால் சீக்கிரமாகவே அவரைப் பிடித்து விடலாம்.”

 

சாணக்கியர் சொன்னார். “சுவர்களுக்கும் காதுகள் உண்டு என்பதை மறந்து விடாதே பர்வதராஜனே. ரகசியங்கள் கசிவது நம் தோல்விக்கு மூல காரணமாகி விடலாம்.”

 

பர்வதராஜன் சலிப்போடும், கோபத்தோடும் மறுத்துப் பேச முற்பட்ட போது சந்திரகுப்தன் குறுக்கிட்டுச் சொன்னான். “நண்பரே. ஆச்சாரியர் மகதத்தை வெற்றி பெற எடுத்த திட்டங்களைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவர் திட்டப்படி நாம் எளிதாக வெற்றியை அடைந்து விடவில்லையா? இவ்வளவு காலம் பொறுத்தீர்கள். இனி சில நாட்கள் பொறுப்பதில் என்ன நஷ்டமாகிவிடப் போகிறது?”

 

பர்வதராஜனுக்குப் பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை. சாணக்கியர் அவன் பக்கம் சாய்ந்து தாழ்ந்த குரலில் சொன்னார். “இன்னமும் நாலா பக்கங்களிலும் நம்மை ஆபத்து சூழ்ந்து கொண்டு தானிருக்கிறது பர்வதராஜனே. நாம் பங்கீட்டில் மும்முரமாக இருக்கையில் மொத்தமாக இழந்து விடும் ஆபத்தும் இருப்பது என் கவனத்திற்கு வந்திருக்கிறது. முள் மீது நடப்பது போல மிக எச்சரிக்கையாகவும், சாதுரியமாகவும் நாம் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

 

சந்திரகுப்தனும் தாழ்ந்த குரலில் பர்வதராஜனிடம் சொன்னான். “போர் புரிய எல்லைகளுக்குச் சென்றிருக்கும் மகதப்படைகளைத் திரும்பி வர ஆணையிட்டு இருக்கிறோம். எல்லாம் ஒரு சீரான நிலைமைக்கு வரும் வரை முடிவுகளை ஆச்சாரியர் புதிய பிரதம அமைச்சராக இருந்து எடுக்கட்டும். அவர் ஒருவரே முடிவெடுப்பது பல சிக்கல்களைத் தவிர்க்கும். ஆபத்துகள் நீங்கி அனைத்தும் சரியானவுடன் நாம் பங்கீடு பற்றிப் பேசி முடிவெடுப்போம். அது வரை நீங்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே

 

பர்வதராஜனுக்கு என்ன சொல்வது என்று சட்டென்று தெரியவில்லை. அவன் அதை யோசிப்பதற்குள் அவர்கள் இருவரும் எழுந்து விட்டார்கள். சாணக்கியர் சொன்னார். “வேலைகள் நிறைய இருக்கின்றன பர்வதராஜனே. சீக்கிரமே அவற்றை முடித்து விட்டால் நாம் பங்கிட்டுக் கொள்வதும் துரிதமாகும்சீக்கிரமே நல்ல தகவலுடன் வருகிறேன்.”

 

இருவரும் சென்று விட்டார்கள். பர்வதராஜன் வாயடைத்துப் போய் அமர்ந்திருப்பதைக் கண்டு மலைகேது சிரித்தான். பர்வதராஜன் மகனை முறைத்து அவனைத் திட்ட முற்பட்ட போது அவன் கண்களில் மறைவில் நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் ஒரு பணியாளின் உடை சுவரைத் தாண்டி தெரிந்தது. பர்வதராஜன் எச்சரிக்கையடைந்து மகனிடம் ஏதாவது பேசு என்று சைகை காண்பித்தான்.

 

மலைகேது தந்தையின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்த போது அவனுக்கும் பணியாளின் ஆடை தெரிந்தது. அவனும் எச்சரிக்கையடைந்து  ”நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் பற்றி  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தந்தையே?...” என்று ஆரம்பித்து பல கேள்விகளைக் கேட்க ஆரம்பிக்க பர்வதராஜன் சத்தமில்லாமல் எழுந்து வேகமாகச் சென்று அந்தப் பணியாளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.

 

ட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பணியாள் அதிர்ச்சியில் உறைந்து போய் திருதிருவென்று விழித்தான். பர்வதராஜன் கடுங்கோபத்துடன் கேட்டான். “ஒட்டுக் கேட்கிறாயா?”

 

அந்தப் பணியாள் சுதாரித்துக் கொண்டு சொன்னான். “இல்லை பிரபு. என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் சுவரில் தூசியைக் கவனித்து துடைத்துக் கொண்டிருந்தேன்.”

 

அவன் கையில் துடைக்கும் துணி இருந்தது. சுவரில் தூசியும் இருந்தது. பர்வதராஜன் அந்தப் பணியாள் சொன்னதை நம்பவில்லை என்றாலும் அந்தப் பணியாளின் சமயோசிதத்தை மனதிற்குள் ரசித்தான். இத்தனை வேகமாகச் சமாளித்துக் கொள்பவன் சாதாரண பணியாளாக இருக்க முடியாது. பர்வதராஜனின் பார்வை கூர்மையாகியது. அவன் குரலில் கடுமையைக் காட்டிக் கேட்டான். “உன் பெயர் என்ன?”

 

சுசித்தார்த்தக் பிரபு

 

பர்வதராஜன் கோபம் குறையாமல் சொன்னான். “ஒட்டுக் கேட்டது மட்டுமல்லாமல் மரியாதை தெரியாதவனாகவும் இருக்கிறாயே நீ. அரசனான என்னை நீ பிரபு என்று குறைத்து அழைத்து அவமானப்படுத்துகிறாயே. உனக்கு என்ன தண்டனை தந்தால் தகும்?”

 

சுசித்தார்த்தக் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “நான் புதியவன் என்பதால் அறியாமல் தவறிழைத்து விட்டேன் பிரபு, மன்னிக்கவும், அரசே. பணியாட்களான எங்களிடம் சந்திரகுப்தரை அரசர் என்று சொன்னார்கள். தங்களை யார் என்று சொல்லியிருக்கவில்லை. இனி உங்களையும் அரசர் என்றே அழைக்கிறேன்

 

பர்வதராஜன் அவன் கேலி செய்கிறானா என்று ஆழமாகப் பார்த்தான். முகபாவனையைப் பார்க்கையில் ஏளனம் செய்வதாகத் தெரியவில்லை. பர்வதராஜன் இறுக்கிப் பிடித்த பிடியைத் தளர்த்தினான். சாணக்கியர் சூட்சுமமான விதங்களில் அவனைப் பலவீனப்படுத்துவதாக பர்வதராஜனுக்குத் தோன்றியது. ஹிமவாதகூடப் படைகளை அதிக அளவில் சிராவஸ்திக்கு அனுப்பி இங்கு பர்வதராஜனின் படைபலத்தை வெகுவாகக் குறைத்து, எல்லா அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டு பணியாட்களிடமும் கூட சந்திரகுப்தனை அரசனாகச் சொல்லி, பர்வதராஜன் யாரென்றும் சொல்லாமல் தவிர்த்து சின்னச் சின்ன விஷயங்களில் கூட தந்திரமாக அவனைத் தாழ்த்துகிறார் ஆச்சாரியர்....

 

பர்வதராஜன் சாணக்கியர் மேலிருந்த மனக்கசப்பை தள்ளி வைத்து விட்டு சுசித்தார்த்தக்கை ஆராய்ந்தான். அவன் முன்பு சந்தேகப்பட்டது போல சுசித்தார்த்தக்கின் கண்களில் தெரிந்த புத்திசாலித்தனம் அவன் சாதாரணப் பணியாள் அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. அப்படியானால் யாரவன்? ஒற்றனாக இருக்கலாம் என்று தோன்றியது. அவன் சாணக்கியருடனும், சந்திரகுப்தனுடனும் பேசிய பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததால் சாணக்கியரின் ஒற்றனாக இருக்க வழியில்லை. அப்படியானால் யாருடைய ஒற்றன் அவன்?

 

பர்வதராஜன் நிதானமாகக் கேட்டான். “யாருடைய ஒற்றன் நீ? இங்கு ஒட்டுக் கேட்பதை நீ யாருக்குத் தெரியப்படுத்துகிறாய்?”

 

சுசித்தார்த்தக் அதிர்ச்சியைக் காட்டினான். “அரசே. ஒரு சாதாரணப் பணியாள் நான். சுவரைத் துடைத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லியும் என்னைச் சந்தேகப்படுகிறீர்களே?”

 

உன்னை எப்படி நம்புவது? இதற்கு முன் நீ எங்கே பணிபுரிந்தாய்?” என்று பர்வதராஜன் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

 

நான்.... பிரதம அமைச்சர் ராக்ஷசரின் இல்லப் பணியாளாக இருந்தேன் அரசே

 

... நீ ராக்ஷசரின் ஆளா?”

 

ஐயோ அப்படிச் சொல்லாதீர்கள் அரசே. எங்களுக்கு எங்கே பணியை ஒதுக்குகிறார்களோ அங்கே பணி செய்யக் கடமைப்பட்டவர்கள் நாங்கள். பணிபுரியும் இடத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கில்லை. இப்போது உங்களிடம் பணி செய்வதால் உங்கள் ஆள் என்று என்னைச் சொல்லிவிட முடியுமா?”

 

அப்படியானால் நீ என்னுடைய ஆள் அல்லவா?”

 

சுசித்தார்த்தக் அழாத குறையாகச் சொன்னான். ”நான் உங்களுடைய ஆள் தான் அரசே. ஏன், என்னை உங்கள் அடிமை என்றே சொல்லிக் கொள்ளலாம். பிரதம அமைச்சர் ராக்ஷசரின் ஆள் அல்ல என்று சொல்ல வந்தேன், அவ்வளவு தான்.”

 

இப்போதும் ராக்ஷசரையே பிரதம அமைச்சர் என்று சுசித்தார்த்தக் அழைப்பதைப் பார்த்தால் இவன் ராக்ஷசரின் விசுவாசியாகவே பர்வதராஜனுக்குத் தோன்றியது. ஒருவேளை இவன் ராக்ஷசரின் ஒற்றனாக இருக்கலாமோ? எதற்கும் இவன் மேல் ஒரு கண் எப்போதும் வைத்திருப்பது நல்லதென்று பர்வதராஜன் தீர்மானித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




 என்.கணேசனின் நூல்களை வாங்க, பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Monday, June 16, 2025

யோகி 107

 

ஷ்ரவனுக்குத் தன்னைச் சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவன் புன்னகையுடன் சொன்னான். ”முதல் நாள் நீங்கள் கேட்டது, “உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?” சரி தானா?”

 

முக்தானந்தா அவனை சுவாரசியமாகப் பார்த்தது போலிருந்தது. “சரி தான்என்றார்.

 

என்ன கேள்விகள் இவை? உண்மையில் நீங்கள் யாரோ, அது தான் நானும். இருவரும் ஆத்மாக்களே! நீங்கள் எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதே நோக்கத்திற்காக நானும் வந்திருக்கிறேன். நம் இருவர் நோக்கமும் மெய்ஞானம் தான்.”

 

முக்தானந்தா கலகலவென்று சிரித்து விட்டார். “நீ சாமர்த்தியக்காரன். புத்திசாலி. அதனால் தான் நான் சந்தேகப்பட்டேன்.”

 

என்ன சந்தேகம்?”

 

இத்தனை புத்திசாலியாக இருப்பவன் எப்படி பிரம்மானந்தாவின் பரம பக்தனாக முடியும்?”

 

அதிலென்ன தவறு?”

 

நீ சில நாட்களுக்கு முன் பிரம்மானந்தாவின் பேச்சைக் கேட்டாயல்லவா? சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருள் அந்த ஆளுக்குக் கிடைத்த பிறகு அவர் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் அவரைப் பார்த்தவர்களுடைய கண்கள் கூசுமாம். அவர்கள் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொள்வார்களாம். அந்த அளவு அவருடைய யோகசக்தி அவரை ஒளிமயமாக்கி இருந்ததாம். அது அவருக்கே தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் அவர் கடவுளை வேண்டி அவரது யோகசக்தியின் வீச்சை குறைத்துக் கொண்டாராம். அவர் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால் அவர் எதிரே யாராலும் உட்கார்ந்திருக்க முடியாதாம். அறிவுள்ளவன் எவனாவது அதை நம்புவானா?”

 

ஷ்ரவன் சிரிக்காமல் முகத்தை இயல்பாய் வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி நடந்தும் இருக்கலாம் அல்லவா?”

 

அப்படி நடந்திருந்தால் முப்பது வருஷத்துக்கு முன்னால் கண்கூசியவர்களே இந்த ஆளைப் பற்றிச் சொல்லியிருப்பார்களே. இத்தனை வருஷங்கள் கழித்து இந்த ஆளே அதைச் சொல்ல வேண்டியதில்லையே? ரமண மகரிஷியிடம் யோகசக்தி இருந்தது. பலர் அதை உணர்ந்தார்கள். அவர் இருந்த இடம் தேடி எங்கிருந்தெல்லாமோ வந்தார்கள். இங்கிலாந்தில் இருந்து எல்லாம் வந்து, அவர் பக்கத்தில் இருந்து, அந்தச் சக்தியை அனுபவித்துப் போய் எழுதினார்கள், பேசினார்கள். அவராக ஒரு வார்த்தை அதைப் பற்றிப் பேசவில்லை. அவர் இருக்கும் இடத்தை விட்டு எங்கேயும் போகவில்லை. போக்குவரத்தே மிகவும் கஷ்டமாக இருந்த காலம் அது. அப்போதே வாய் வார்த்தையாலேயே கடல் கடந்தும் அவருடைய யோக சக்தி பற்றிய புகழ் பரவி இருந்தது.  அவர் எங்கே! நூறு வருஷம் கழித்து இந்த விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்தும் சுயதம்பட்டம் அடித்தே  புகழ் பரப்ப வேண்டிய அவலநிலையில் இருக்கும் இவர் எங்கே! அதுவும் வரவரப் புதுப்புது கதைகளாய் அவர் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இப்படிப்பட்ட ஆளின் நிழலில் மெய்ஞானம் கிடைக்கும் என்று வந்திருப்பதாய், புத்திசாலியாகத் தெரிகிற நீ சொல்கிறாய். அதனால் தான் சந்தேகமாயிருக்கிறது.”

 

ஷ்ரவன் சொன்னான். “சுவாமிஜி. அதை ஐஐடி மாணவர்கள் முன் யோகிஜி பேசியிருக்கிறார். அவர் தன் பெருமையைச் சொல்வதற்காக அதை அங்கே சொல்லவில்லை. யோக சக்தியின் பெருமையைச் சொல்வதற்காகத் தன் சொந்த அனுபவத்தையே சொல்லி அந்த மாணவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”

 

இந்த ஆள் உண்மையான யோகியாய் இருந்தால் எதையும் சொல்ல வேண்டியதே இல்லையே. ரமண மகரிஷி அருகே போனவர்கள் உணர்ந்தது போல, இவர் அங்கு போனவுடனே வார்த்தைகள் இல்லாமலேயே அதை அந்த மாணவர்கள் உணர்ந்திருப்பார்களே.”

 

அவருடைய யோக வீச்சை இறைவனிடம் வேண்டிக் கொண்டு குறைத்திருப்பதாகத் தான் அவரே சொன்னாரே சுவாமிஜி. அப்படி அவர்  குறைத்திருக்காமல் இருந்திருந்தால் நீங்கள் சொன்னபடியே வார்த்தைகள் இல்லாமல் அந்த மாணவர்களை உணர வைத்திருக்கலாம்.”

 

முக்தானந்தா சிரித்தார். “சீக்கிரமாகவே பிரம்மானந்தாவின் பிரதான சீடன் ஆவதற்கு எல்லாத் தகுதிகளும் உனக்கிருக்கிறது. நீ அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறாயா?”

 

இல்லை சுவாமிஜி.”

 

முயற்சி செய்து பார். சுந்தர மகாலிங்கத்தைக் கூட நேராக நீ தரிசித்து விடலாம். ஆனால் அந்த சுந்தர மகாலிங்கத்தின் அருளைப் பெற்ற இவரை நீ அவ்வளவு சீக்கிரம் தரிசித்து விட முடியாது. நீ கடவுளைக் கண்டபடி திட்டலாம், வாயிற்கு வந்த பெயரை வைத்துக் கூப்பிடலாம். கடவுள் கோபப்படவோ, உன்னை விலக்கி வைக்கவோ மாட்டார். ஆனால் இந்த ஆளை நீ திட்ட வேண்டியதில்லை. யோகி என்ற அடைமொழி இல்லாமல் சும்மா பிரம்மானந்தா என்று கூப்பிட்டுப் பார். பின் உன்னால் யோகாலயத்தில் இருக்க முடியாது.”

 

என்ன சுவாமிஜி இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று ஷ்ரவன் முகத்தில் திகைப்பைக் காட்டினான். “நீங்கள் இங்கே நீண்ட காலமாய் துறவியாய் இருக்கிறீர்கள். யோகாலயம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே வந்து சேர்ந்தவர் என்று உங்களை சித்தானந்தா சொன்னார். அப்படிப்பட்ட நீங்களே யோகிஜியைக் கடுமையாய் விமர்சிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.”

 

முக்தானந்தா முகத்தில் விரக்தி வெளிப்பட்டது. ”ஆமாம். நான் நெடுநாள் ஏமாளி. கிட்டத்தட்ட நானும், கல்பனானந்தாவும் ஒரே சமயத்தில் யோகாலயத்தில் சேர்ந்தோம். பிரம்மானந்தா பேச்சால் நாங்கள் கவரப்பட்டோம். அவரைத் தினமும் சந்திக்கும் அளவுக்கு நாங்கள் சுமார் இருபது பேர் நெருக்கமாகவே இருந்தோம். அப்போதெல்லாம் அவர் இந்த அளவு கதை விட்டதில்லை. அவர் அடக்கி வாசித்த காலம் அது. அவர் யோகா, தியானம் இரண்டையும் பத்மநாப நம்பூதிரியிடம் கற்றுக் கொண்டதையும், அதைத்தான் சொல்லிக் கொடுப்பதையும் வெளிப்படையாய் ஒத்துக் கொண்ட காலம் அது. அதை மேலும் மெருகேற்றி, கூடுதல் சிறப்புகளைச் சேர்த்து எல்லோருக்கும் கற்றுத்தர வேண்டும் என்று அவர் விரும்பினார். யோகாலயம் வளர்ச்சியடைந்தால் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று அவர் எத்தனையோ நல்ல காரியங்களைச் சொன்னார். அதனால் நாங்கள் பரிபூரணமாய் அவரை நம்பினோம். நானும் வேறுசிலரும் எங்கள் சொத்தை எல்லாம் யோகாலயத்திற்கு எழுதி வைத்து விட்டுத் தான் இங்கே வந்து சேர்ந்தோம். ஒரு மகத்தான இயக்கத்தில் எங்களை ஈடுபடுத்திக் கொண்ட நிறைவு எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது. இந்த யோகாலயம் விரிவடைய விரிவடைய ஆன்மீகம் செழிக்கும், கோடிக்கணக்கானவர்கள் பலன் அடைவார்கள் என்ற கனவெல்லாம் எங்களுக்கு இருந்தது.”

 

இப்போது சத்சங்கம் என்று ஒன்று நடக்கிறதே. அது அன்றைக்கும் இங்கே நடந்தது. அப்போது இது மிகச்சிறிய இடம். ஆனால் எங்கள் மனம் பரந்திருந்தது. பிரம்மானந்தாவும், நாங்களும் சரிசமமாக உட்கார்ந்து பேசுவோம். நாங்கள் ஒவ்வொருவரும் படித்த, கேட்ட உயர்வான விஷயங்களைப் பற்றிச் சொல்வோம். புத்தர், ரமண மகரிஷி, ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், அன்னை, ஆதிசங்கரர், ராமானுஜர், வேதங்கள், உபநிஷத்துக்கள் பற்றி எல்லாம் பேசுவோம், அலசுவோம், விவாதிப்போம். அத்தனை ஞானமும் சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆன்மீகத்தின் ஆழம் சாதாரண மனிதனுக்குத் தெரியாததால் தான் அவன் தாழ்ந்து கிடக்கிறான், மோசமான வாழ்க்கை வாழ்கிறான். அவனுக்கும் அந்த ஞானத்தின் ருசி கிடைத்து விட்டால் பின் அவன் உயர ஆரம்பித்து விடுவான் என்று நம்பினோம். பிரம்மானந்தாவுக்கு யோகா பயிற்சிகள் தெரிந்த அளவுக்கு தத்துவங்களில் ஆழம் போதாது. ஆனாலும் அந்தக் காலத்தில் அவருக்கு அதையெல்லாம் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. வேத உபநிஷத்துக்களில் சொல்லப்படும் யோகியாக மாற வேண்டும் என்ற ஆசை உண்மையிலேயே இருந்தது என்று கூடச்  சொல்லலாம். அவருக்குப் பணமும், புகழும் வந்து சேர ஆரம்பித்த பிறகு ஆள் நேரெதிராக மாறிப்போனார்.”

 

திடீரென்று முக்தானந்தா மௌனமானார். அவர் அந்தப் பழைய காலத்தில் சஞ்சரித்ததை ஷ்ரவன் உணர்ந்தான். இந்த முதியவர் யோகாலயம் ஆரம்பித்த காலத்தில் பிரம்மானந்தாவுடன் சரிசமமாக அமர்ந்து பேசியவர்களில் ஒருவர் என்பதை நம்புவது அவனுக்கே சுலபமாக இல்லை.

 

இந்த யோகாலயமும் மாறிவிட்டது. இப்போது இந்த யோகாலயம் அவர் நினைத்தபடியும் இல்லை. நாங்கள் நினைத்தபடியும் இல்லை. பாண்டியன் நினைத்தபடி நடக்கிறது. இதில் என் பங்கும் இருக்கிறது. யோகாலயத்தை  நிர்வாகம் செய்ய ஒரு ஆள் வேண்டும் என்று பிரம்மானந்தா சொன்ன போது பாண்டியனைக் கூட்டிக் கொண்டு வந்தது நான் தான். அவன் எங்கள் ஊர்ப் பையன்….” என்று தொடர்ந்து முக்தானந்தா சொன்ன போது ஷ்ரவன் கண்கள் விரிய சுவாரசியத்துடன் அவரைப் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்