என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 30, 2025

யோகி 109

 

முக்தானந்தா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ஷ்ரவனுக்கு  அவர் பழைய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது போல் தெரிந்தது. சித்தானந்தாவும் உடன் இல்லாததால் அவரைப் பேச வைத்து மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஷ்ரவன் மெல்லச் சொன்னான். “நீங்கள் பிரம்மானந்தா நிறைய மாறி விட்டதாய் சொன்னீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி எத்தனையோ மாற்றங்கள் எல்லாத் துறையிலும் தேவைப்படுகின்றன. ஆன்மீகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மாற மாட்டேன் என்று சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுவார்கள் அல்லது புறக்கணிப்படுவார்கள் அல்லவா சுவாமிஜி. அதனால் தான் அவர் மாறியிருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”

 

முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். ”காலத்தின் ஓட்டத்தில்  எல்லாமே மாறிவிடுவதில்லை ஷ்ரவன். காலத்தால் மாறாத, மாறக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. ஆதி மனிதன் வாயில் சாப்பிட்டான். இப்போதும் நாம் வாயிலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமா, மூக்கிலே சாப்பிட்டால் என்ன என்று யாரும் புரட்சி செய்ய நினைப்பதில்லை. இயற்கை மனிதனை எப்படிப் படைத்திருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி தான் மனிதன் இயங்க வேண்டும். ஆன்மீகவாதி முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். சத்தியம், நேர்மை, தர்மம், எல்லாம் அவனால் பின்பற்றப்பட வேண்டும்.  மற்றவை எல்லாமே அதற்கடுத்தது தான். ஆனால் இந்தப் பத்து வருடங்களில் பிரம்மானந்தா பேசிய எல்லாப் பேச்சுகளையும் கேட்டுப் பார். எத்தனை பேச்சில் நேர்மையை, சத்தியத்தை, தர்மம் தவறாமல் வாழ்வதை உயர்த்திப் பேசியிருக்கிறார் என்பதை நீ சல்லடை போட்டுத் தேடினாலும் அதிகம் கிடைக்காது...”

 

ஷ்ரவன் யோசித்துப் பார்த்தான். அவன் பிரம்மானந்தாவின் பேச்சுகளை சமீப காலத்தில் நிறையவே கேட்டிருக்கிறான். முக்தானந்தா சொன்னது போல் நல்லவனாக இருப்பதையும், சத்தியம், நேர்மை, தர்மம் பற்றியும் அவர் அதிக முக்கியத்துவம் தந்து பேசியது எதுவும் நினைவுக்கு வரவில்லை.  தன்னுடைய அருமை பெருமைகளுக்கு அடுத்தபடியாக அவர் அதிகம் பேசியது விஞ்ஞானம், வெற்றி, சக்திகள் பற்றி தான். ஞானிகள் பற்றிப் பேசும் போது கூட பலரும் கேள்விப்படாத அவருடைய கற்பனைப் புனைவுகளும், அதிரடிக் கருத்துக்களுமே அதிகம்.

 

ஆனால் முக்தானந்தாவைப் பேச வைக்க, பிரம்மானந்தா பக்கத்து நியாயங்களைச் சொல்வது தான் பலனளிக்கும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஷ்ரவன் சொன்னான். “சுவாமிஜி. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அவர் நிறைய நல்ல விஷயங்களையும், அறிவுபூர்வமாக அலசியிருக்கிறார் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல காரியங்களையும் யோகாலயத்தின் மூலம் அவர் செய்திருக்கிறார். அவருடைய நல்லதை எல்லாம் ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு, குறைபாடுகளை மட்டும் விமர்சிப்பது சரியல்லவே.”

 

முக்தானந்தா சொன்னார். “நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா ஷ்ரவன்? ஒரு அரசியல்வாதி, மக்களுக்கு நல்லது செய்ய ஒதுக்கிய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கை, ஊழல் செய்து திருடிக் கொள்கிறான் என்று வைத்துக் கொள். அதைச் சுட்டிக் காட்டினால், மூன்றில் ஒரு பங்கை அவன் திருடிக் கொண்டாலும், இரண்டு பங்கை அந்த நல்ல காரியத்துக்குத் தானே அவன் செலவு செய்திருக்கிறான், அதைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே என்று ஒருவன் ஆதங்கப்படுவதற்கு இணையாக இருக்கிறது. ஏமாற்றாமல், ஒதுக்கப்பட்ட பணத்தை முழுவதுமாக மக்கள் நலனுக்குச் செலவு செய்வதற்காகத் தானே அவனை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்? பிரம்மானந்தாவும் ஆன்மீகத்தை நிலைநாட்டத் தான் யோகாலயத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு ஆன்மீகத்தை விட அவர் தன்னைத் தான் அதிகம் நிலைநாட்டுகிறார்.”

 

அவர் வாதத்திறமையை ஷ்ரவன் ரசித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான். ”ஆனால் இன்று இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் போய் அவர் நம் ஆன்மீகப் பெருமைகளைப் பேசிப் பலரைக் கவர்கிறார். அந்த வகையில் வெற்றிகரமான ஆன்மீகவாதி என்றே அவரைச் சொல்லத் தோன்றுகிறது சுவாமிஜி.”

 

முக்தானந்தா உடனே சொன்னார். “ஆன்மீகத்தில் வெற்றி ஆத்மஞானம் அடைவதே ஒழிய பிரபலமாக இருப்பதும், கூட்டம், புகழ் சேர்ப்பதுமல்ல ஷ்ரவன். ஓராயிரம் வார்த்தைகளைச் சொல்ல முடிவதை விட, உதாரணமாய் வாழ்ந்து காட்டுவதையே ஆன்மீகத்தில் வெற்றியாக நான் நினைக்கிறேன். அப்படி வாழ்ந்து காட்டுபவனையே நான் யோகியாகப் பார்க்கிறேன்...”

 

அருமையாகச் சொன்னீர்கள் சுவாமிஜி. வெற்றிகரமான ஆன்மீகவாதி என்று சொன்னதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் ஒரு உண்மையான யோகியைப் பார்த்திருக்கிறீர்களா?” ஷ்ரவன் ஆவலுடன் கேட்டான்.

 

முக்தானந்தா ஆதங்கத்துடன் சொன்னார். ”அந்தப் பாக்கியம் எனக்கு இதுவரையில் கிடைக்கவில்லை ஷ்ரவன். இங்கே எந்த யோகியும் இல்லை. நான் இங்கேயே சிறைப்பட்டு விட்டதால் வெளியுலகிற்குப் போகும் வாய்ப்பு இல்லை. அதனால் வெளியே பார்க்கும் பாக்கியமும் இல்லை.”

 

ஷ்ரவன் யோசித்தான். ‘ஒரு யோகியைக் கண்டால் உடனே கண்டுபிடித்து விடும் ஆன்மீகத் தெளிவில் தான் இவர் இருக்கிறார். அப்படி இருக்கையில் யோகாலயத்திலேயே இருக்கும் இவரும் எந்த யோகியையும் பார்க்கவில்லை என்றால் சைத்ராவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? எங்கே கிடைத்தது?’

 

ஷ்ரவன் கேட்டான். “பிரம்மானந்தா எப்போதாவது ஒரு நிஜ யோகியைப் பார்த்ததாய், உங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில்  சொல்லியிருக்கிறாரா?”

 

முக்தானந்தா சற்று சிரமப்பட்டு நினைவுபடுத்திக் கொண்டது போலிருந்தது. சிறிது யோசித்து விட்டு முக்தானந்தா சொன்னார். ”ஒரே ஒரு தடவை அது பற்றிப் பேசியதாய் ஞாபகம். யாரோ ஒருவர் இன்னொருவரை யோகி என்று அடையாளம் காட்டியதாகவும், பிரம்மானந்தாவும் மிகவும் ஆர்வத்துடன்  அவரைப் போய்ப் பார்த்ததாகவும் சொல்லியிருந்தார். ஆனால் சொல்லுமளவு அந்த நபர் இருக்கவில்லை என்று பிரம்மானந்தா சொன்னதாக நினைவு.”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “சில நேரங்களில் நம் எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருப்பதால் யதார்த்தத்தை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை. பிரம்மானந்தா நிறைய எதிர்பார்த்துப் போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் பார்க்கையில் இவ்வளவு தானா என்று தோன்றியிருக்கலாம்நீங்கள் பிரம்மானந்தாவிடம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததைப் போல…”

 

முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். “இருக்கலாம். சொத்தையே எழுதிக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்து கடைசியில் ஏமாறும் போது ஏற்றுக் கொள்வது சுலபமாய் இருப்பதில்லை. அதுவும் இங்கிருந்து கொண்டே நடப்பதை எல்லாம் பார்க்கும் போது மனம் சீக்கிரம் ஆறுவதில்லை....”

 

உண்மை தான். என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இரவு பகலாகப் பார்க்கிறீர்கள். நிறையப் பார்த்திருப்பீர்கள்.” என்று ஷ்ரவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

 

முக்தானந்தா அவனைப் புன்னகையுடன் கூர்ந்து பார்த்தார். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

 

ஷ்ரவன் விடுவதாக இல்லை. அவன் கேட்டான். “அப்படிப் பார்த்ததில் உங்களை அதிர்ச்சியடையச் செய்ததோ, ஆச்சரியப்படுத்தியதோ சமீபத்தில் எதாவது இருக்கிறதா சுவாமிஜி.”

 

முக்தானந்தா சொன்னார். “சில நாட்களுக்கு முன் யாரோ ஒரு மந்திரவாதி யோகாலயத்துக்கு வந்திருந்தார். அவர் இங்கே ஒரு ராத்திரியெல்லாம் பூஜை செய்த மந்திரங்கள் என் காதில் விழுந்தன. அவர் போன பிறகு பார்த்தால் பாண்டியனின் கையில் தாயத்து ஒன்று இருந்தது. எனக்கு என் கண்களையே நம்ப முடியவில்லை. எனக்குத் தெரிந்த பாண்டியன், கோடி ரூபாயே கொடுத்தாலும் தாயத்து எல்லாம் கையில் கட்டிக் கொள்ளும் ரகமல்ல. பணத்தையும் நீயே வைத்துக் கொள். உன் தாயத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொல்லக்கூடியவன் அவன். அதனால் நான் என்னையே கிள்ளிப் பார்த்துத் தான் கனவல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.”

 

ஷ்ரவன் தெரியாதது போல் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சுவாமிஜி?”

 

தெரியவில்லை. ஆனால் இங்கே எதோ ஒரு அற்புதம் நடந்திருக்கிறது. ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அப்போதே இனியும் ஏதாவது தொடர்ந்து நடக்கும் என்று என் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போல நீ வந்து சேர்ந்திருக்கிறாய்


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, June 26, 2025

சாணக்கியன் 167

 

மச்சடங்குகளின் போது தனநந்தன் தன் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், வார்த்தையையும் கவனித்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனின் காவலர்களுக்கு முன் அவனுக்கு எதையும் பேசப் பிடிக்கவில்லை. அவனது மூத்த மனைவியும், சுகேஷின் தாயுமான பட்டத்தரசி அமிதநிதா அவனிடம் கதறியழுதபடி கேட்டாள். “எப்படி நம் பிள்ளைகள் இறந்தார்கள்?”

 

தனநந்தன் என்னவென்று சொல்வான். இளைய மகன் மூத்த மகனைக் கொன்றான் என்று ஆரம்பிக்கும் நிஜத்தை அவளிடம் சொல்ல முடியாமல் அவன் ஒரே வார்த்தை சொன்னான். “தெரியவில்லை

 

ஈமச்சடங்குகள் முடிந்து சென்ற அவன் அங்கிருந்து வெளியே வரவும், யாரையும் காணவும் அனுமதிக்கப்படவுமில்லை. நடந்ததை ஓரளவு யூகத்தால் அறிந்திருந்த தாரிணி தன் மகன் சுதானுவின் குற்றம் வெளியே வந்து விடக்கூடாது என்று ஆசைப்பட்டாள். இறந்தவன் புகழுக்குக் களங்கம் வந்து விடக்கூடாது என்று கவலைப்பட்டாள். சாணக்கியரின் கட்டுப்பாட்டுக்குள் எல்லாம் வந்து விட்ட பின் நடந்ததை அறிந்த காவலர்கள் வெகுசிலரும் அதுகுறித்து வெளிப்படையாகப் பேச பயந்தார்கள்அதனால் அமிதநிதாவும் இளவரசி துர்தராவும் சுகேஷ், சுதானு மரணம் குறித்த தகவல்கள் எதுவும் அறியாமல் இருந்தார்கள்.

 

உண்மை யாருக்கும் தெரியாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தாரிணி நினைத்தாள். மகனுடைய பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக சேனாதிபதியும், அவன் வணிக நண்பனும் சதி செய்து சுகேஷையும், சுதானுவையும் கொல்ல முயன்றதாகவும், அவர்களை எதிர்த்துப் போராடி அவர்களைக் கொன்று விட்டு தாங்களும் இறந்து போனதாகவும் ஒரு கதையை உருவாக்கி அந்தப்புரத்தில் பரவ விட்டாள். இருவரும் மகன்களைப் பறிகொடுத்திருந்ததாலும், எதிரிகளால் அந்தப்புரத்தில் சேர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்ததாலும் பரஸ்பர துக்கம் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து தனநந்தன் மனைவிகளை பரஸ்பர அன்னியோன்னியத்திற்கு மாறி விட்டது. முன்பெல்லாம் கீரியும், பாம்புமாக இருந்து தனநந்தனுக்குப் பெரிய தலைவலியாக இருந்த அவர்கள் கஷ்ட காலத்தை ஒருமித்து அனுபவிக்க நேரிட்டதில் உடன்பிறவா சகோதரிகளாகி விட்டார்கள்ஈமச்சடங்குகள் முடிந்து சென்ற தனநந்தன் பின் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படாததால்  இறந்த மகன்களுக்காக அழுது தீர்ந்த அவர்கள் கணவனுக்காகக் கவலைப்பட்டார்கள். எதிரிகள் அவனைக் கொன்று விடுவார்களோ என்ற பயமும் தனநந்தனின் மனைவிகளை அலைக்கழித்தது.

 

அமிதநிதா தாரிணியிடம் கவலையோடு கேட்டாள். “இனி என்ன ஆகும் என்று நீ நினைக்கிறாய் தாரிணி?

 

தாரிணி சொன்னாள். “தெரியவில்லை அக்கா. எல்லா முடிவுகளையும் சாணக்கியர் தான் எடுப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள். சில மாதங்களாக  “சாணக்கின் மகன், சாணக்கின் மகன்என்று கனவிலும் கூட மன்னர் புலம்புவதுண்டுஅவர் கனவில் வந்து கலங்கடித்த மனிதர் நிஜத்திலும் வந்து இப்படி பிரச்சினையாவார் என்று நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை....”

 

அமிதநிதா விரக்தியோடு சொன்னாள். “சாணக்கை மன்னர் கைது செய்து, சாணக் சிறையிலேயே உயிரை விட நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள். அதனால் சாணக்கின் மகன் மன்னரிடம் கருணை காட்ட வழியில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். ராக்ஷசர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவர் இருந்திருந்தாலாவது தப்பிக்க ஏதாவது வழி கண்டுபிடித்திருப்பார்...”

 

ராக்ஷசர் தலைமறைவாகி விட்டார் என்கிறார்கள். அவர் இன்னமும் எதிரிகளிடம் அகப்படவில்லை என்பது நல்ல செய்தியாக இருக்கிறது. அது தான் ஒரு சிறிய நம்பிக்கையை நமக்குத் தருகிறது

 

அமிதநிதா பெருமூச்சு விட்டாள். “எனக்கு எதற்குத் துக்கப்படுவது என்று தெரியவில்லை. நம் பிள்ளைகள் இறந்ததற்குத் துக்கப்படுவதா, மன்னர் சிறைப்பட்டிருப்பதற்குத் துக்கப்படுவதா, துர்தராவின் எதிர்காலம் குறித்து எண்ணி துக்கப்படுவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அரசர்கள் துர்தராவை மணமுடிக்க ஆசைப்பட்டுக் கேட்டார்கள். மன்னர் யார் மீதும் திருப்தியடையாமல் தட்டிக்கழித்துக் கொண்டே வந்து விட்டார். அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தால் அவளாவது தப்பித்திருப்பாள். நாமாவது வாழ்ந்து முடிந்து விட்டோம். அவள் இன்னமும் வாழவே ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்கும் முன்பே எல்லாம் முடிந்து விடும் போலிருக்கிறதே...”

 

அவள் விழிகளில் படர்ந்த நீர்த்திரையைப் பார்க்கையில் தாரிணிக்கும் கண்கலங்கியது. அவளுக்கு முன்பிருந்தே துர்தரா மீது பாசம் இருந்தது. ஒரு மகனை மட்டுமே பெற்றிருந்த அவள் துர்தராவைத் தன் மகளைப் போலவே பாவித்திருந்தாள். அமிதநிதாவிடமும் சுகேஷிடமும் இருந்த வெறுப்பு துர்தராவிடம் என்றும் நீண்டதில்லை.   ”கவலைப்படாதீர்கள் அக்கா. அவள் பிறந்த நேரம் மிக அதிர்ஷ்டமான நேரம் என்றும், ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசியாக இருப்பாள் என்றும் ஜோதிடர்கள் சொன்னதை மறந்து விட்டீர்களா?” என்று அவள் ஆறுதல் சொன்னாள்.

 

இரு தாய்களும் பேசிக் கொண்டது துர்தரா காதுகளில் விழுந்தது. ஜோதிடர்கள் சொன்னதாக எல்லோரும் தெரிவித்ததை வைத்து அவளும் தான் நிறைய கனவுகள் கண்டிருந்தாள். கனவுகள் கற்பனையாகவே தங்கி விடும் என்று அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் விரக்தியுடன் நகர்ந்தாள்.

 

அந்தச் சமயத்தில் அவளுடைய தோழி ஓடி வந்தாள். “துர்தரா... புதிய மன்னரையும், சாணக்கியரையும் பார்த்தேன். அரசவையில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்....” என்று சொன்னாள் .

 

அந்தப்புரத்திலிருந்து அரசவை மாடத்திற்குச் செல்லும் பாதை இதுவரை எதிரிகளால் அடைக்கப்படவில்லை. அரசவையில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை அந்தப்புரப் பெண்களும் காண வசதியாகத் தான் அந்த அரசவைக்கு மேல் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து தான் தோழி அவர்களைப் பார்த்திருக்க வேண்டும்.

 

மகதத்தை வென்று அவர்களைச் சிறைப்படுத்தியிருக்கும் எதிரிகள் பற்றி நிறைய தகவல்கள் வந்தபடி இருந்தாலும் துர்தராவுக்கு எதிரிகளைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்திருக்கவில்லை. ஆனால் மனதில் நிறைந்திருந்த வெறுப்பு காரணமாக அவர்களைக் காணவும் அவள் பிரியப்படவில்லை.

 

தோழி இரகசியமாக அவள் காதுகளில் சொன்னாள். “நீ உன் வருங்காலக் கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று என்னிடம் இதுவரை சொல்லி இருக்கிறாயோ அப்படியெல்லாம் இருக்கிறார் புதிய மன்னர்.... மிக அழகாக இருக்கிறார்

 

எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எதிரிகளைப் பற்றி என்னிடம் பேசாதேஎன்று கோபத்துடன் துர்தரா சொன்னாள். ஆனால் தோழி சொன்ன விஷயங்கள் அவள் மனதில் மெள்ள ஆர்வத்தைக் கிளப்பி விட்டது.

 

கற்பனை செய்து சொன்னபடியெல்லாம் நிஜத்தில் யாரும் இருக்க வாய்ப்பில்லை.” என்று மெல்ல துர்தரா சொன்னாள்.

 

நீ வந்து ஒரு முறை பார்த்து விட்டுச் சொல். என்னுடன் வா. காட்டுகிறேன்.” என்று தோழி சொன்னாள்.

 

மனதின் ஒரு பாதி மறுக்க, மறு பாதி போய்ப் பாரேன் என்று சொன்னது. பார்ப்பதால் எதிரி நண்பனாகிவிட வேண்டியதில்லை என்று மனம் தர்க்கம் செய்தது. துர்தரா யோசனையுடன் தோழியைப் பார்த்தாள்.

 

தோழி பார்வையால் அழைத்து விட்டு முன் செல்ல துர்தரா அரைமனதுடன் அவளுடன் போனாள்.

 

துர்தரா மேல் மாடத்திற்குச் சென்று சற்று மறைந்து நின்று பார்த்த போது சந்திரகுப்தனும் சாணக்கியரும் அரசவை இருக்கைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த மாளிகையில் அமர்ந்து பேசினால் பர்வதராஜன் எப்படியாவது வந்து சேர்ந்து கொள்வான் என்பதால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். காலியாக இருக்கும் அரசவை அவர்களது இன்றைய தேர்வாக இருந்தது.

 

துர்தரா தோழி சொன்னதில் மிகை இல்லை என்பதை சந்திரகுப்தனைப் பார்த்தவுடனேயே உணர்ந்தாள். எப்படியெல்லாம் கணவன் இருக்க வேண்டும் என்று அவள் கனவுகள் கண்டிருந்தாளோ அந்தக் கனவுகளுக்கெல்லாம் ஒரு உருவம் கொடுத்தது போலிருந்த அவனிடம் முதல் பார்வையிலேயே அவளுடைய மனதை பறி கொடுத்தாள். அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தாலும் சந்திரகுப்தன் அவர்களது எதிரி, அவன் இப்போது அவர்களைச் சிறை வைத்திருக்கிறான் என்றெல்லாம் அறிவு எச்சரித்ததை அவள் மனம் பொருட்படுத்தவில்லை. அவனை மேலும் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் சற்று மறைவில் இருந்தவள் தன்னை அறியாமல் நகர்ந்து அவனைப் பார்த்தபடி நின்றாள்.

 

சந்திரகுப்தனின் பார்வை சாணக்கியர் மீதிருந்து மேல் நகர்ந்து அவள் மீது நிலைத்தது. அவனும் இப்படி ஒரு அழகுச்சிலை போல் இருக்கும் பெண்ணை இது வரை பார்த்ததில்லை. பலரும் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்த மகத இளவரசி இவள் தானா?

 

சந்திரகுப்தன் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவன் தான் என்றாலும் முதல் முறையாக அவள் மீது நிலைத்த பார்வையை மீண்டும் சாணக்கியர் முகத்துக்கு நகர்த்த அவன் மிகவும் பாடுபட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 23, 2025

யோகி 108

 

முக்தானந்தா ஷ்ரவனின் முகத்தில் தெரிந்த சுவாரசியத்தைப் பார்த்துக் கேட்டார். “உனக்கு அவனைத் தெரியுமா?”

 

இங்கு வந்த பிறகு தான் அவரைப் பார்த்தேன்

 

ஒருவிதத்தில் அவனைக் குறை சொல்ல முடியாது. அவன் சிறுவயதில் இருந்தே ஆன்மீகத்தையோ, கடவுளையோ நம்பாதவன். அவன் அன்றைக்கும் அதை மறைத்ததில்லை. இன்றைக்கும் அதை மறைப்பதில்லை. எங்களுக்கும் இங்கே பொது நிர்வாகத்திற்கு ஆன்மீகத்தை விட நிர்வாகத் திறமையே தேவையாய் இருந்தது. பாண்டியன் ஆட்களை எடை போடுவதிலும், அவர்களிடம் வேலை வாங்குவதிலும் மிகவும் கெட்டிக்காரன். அவன் அப்பாவும் அவனுக்கு எதாவது ஒரு வேலை வாங்கித் தரும்படி என்னைப் பார்க்கும் போதெல்லாம் அப்போது சொல்லிக் கொண்டிருந்தார். திமிர் பிடித்தவன் என்றாலும், ஏற்றுக் கொண்ட வேலையை சிறப்பாகச் செய்பவன் அவன் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் அவனை இங்கே சேர்த்தேன். வரும் போதே அவன்சம்பளம் ஒழுங்காய் தரும் வரை கொடுத்த வேலையை ஒழுங்காய் செய்வேன். ஆனால் என்னை தியானம் செய். சாமி கும்பிடு என்றெல்லாம் சொல்லக்கூடாதுஎன்று என்னிடம் கறாராய்ச் சொல்லி விட்டு தான் வந்தான். நானும் பிரம்மானந்தாவிடம்ஆள் நாத்திகன், அதிகம் படிக்காதவன் என்றாலும், திறமையானவன்என்று சொல்லி தான் சேர்த்தேன். ஆரம்பத்தில் அவருக்கு அவன் மீது பெரிதாய் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அவர் அவனை நம்பும் அளவுக்கு வேறு யாரையும் நம்புவதில்லை...”

 

முக்தானந்தா ஜன்னல் வழியே வெறித்த பார்வை பார்த்தபடி ஒரு நிமிடம் மௌனமாய் இருந்து விட்டுத் தொடர்ந்தார்.

 

பல சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். பாண்டியன் நல்லவன் அல்ல என்றாலும், ஆரம்பத்திலிருந்தே அவன் விரும்பிய வாழ்க்கையை, அவன் நினைத்தபடியே வாழ்கிறான். என்றுமே தன்னை அவன் யாரிடமும் உத்தமனாகச் சொல்லிக் கொண்டதுமில்லை. அடுத்தவர் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை. அவன் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை. மாற்றிக் கொண்டவன் போல நடித்ததுமில்லை. அவனுக்குச் சரி என்று தோன்றியதைச் செய்யாமல் விட்டதுமில்லை. ஒருவிதத்தில் அவன் அவனுக்கு உண்மையாய் வாழ்கிறான். கெட்டவனானாலும் போலி வாழ்க்கை வாழவில்லை.”

 

அவர் சொல்வது உண்மை என்றே ஷ்ரவனும் நினைத்தான். அபூர்வமாக அவர் பேசும் மனநிலையில் இருப்பதால் அவரிடம் கூடுமான அளவு தகவல்களைத் தெரிந்து கொள்ள நினைத்த அவன் கேட்டான். “எப்போதாவது நீங்களும், பிரம்மானந்தாவும் சந்தித்துப் பேசுவதுண்டா?”

 

இல்லை. அதை அவரும் விரும்புவதில்லை. நானும் விரும்புவதில்லை. நான் எப்போதாவது தூரத்தில் அவரைப் பார்ப்பதுண்டு. ஆனால் அவர் கண்ணுக்கு நான் தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.”

 

உங்களுடன் இங்கு ஆரம்பத்தில் சேர்ந்தவர்களில் எத்தனை பேர் இன்னும் இங்கே இருக்கிறார்கள்?”

 

கல்பனானந்தா இருக்கிறாள். என்னைப் போல் சொத்தை எழுதிக் கொடுத்தவர்கள் மூன்று பேர். எங்களுக்குப் போக்கிடம் வேறு இல்லை என்பதால் இங்கேயே தங்க வேண்டியதாகி விட்டது. மூவரில் இரண்டு பேர் காலப் போக்கில் இறந்து விட்டார்கள். நான் மட்டும் இன்னும் இருக்கிறேன். மற்றவர்கள், பிரம்மானந்தாவின் போக்கு மாறியவுடனேயே, இங்கிருந்து போய் விட்டார்கள்.”

 

கல்பனானந்தா போயிருக்கலாமே?”

 

அது அவரைத் தான் கேட்க வேண்டும்.”

 

கல்பனானந்தாவும், நீங்களும் சந்தித்துப் பேசிக் கொள்வதுண்டா?”

 

கல்பனானந்தா பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முக்தானந்தா விரும்பவில்லை போல் தோன்றியது. அவர் சொன்னார். “நீ என்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாயே ஒழிய நீ நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.”

 

ஷ்ரவன் அவரைப் பற்றி அவனுக்கு முழுமையாகத் தெரியும் வரை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் பழைய நிலையையே தொடர நினைத்துச் சொன்னான். “சுவாமிஜி நீங்கள் பிரம்மானந்தாவோடு ரமண மகரிஷியை ஒப்பிட்டு பிரம்மானந்தாவைக் குறை சொல்கிறீர்கள். பிரம்மானந்தா சொல்வதில் உண்மையோடு கற்பனையும் கூடக் கலந்து இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ரமண மகரிஷி இப்போது உயிரோடு இல்லை. இருந்திருந்தால் நான் கண்டிப்பாக இங்கு வந்திருக்க மாட்டேன். ரமணாசிரமம் போயிருப்பேன். இந்த மதம் மட்டுமல்ல, இன்றைக்கு எல்லா மதங்களிலுமே தூய்மையைச் சிறிதும் இழக்காத உன்னத மத குருக்கள் மிகவும் குறைவே. இருப்பவர்களில் எவர் பரவாயில்லை என்று பார்த்துப் பின்பற்ற வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலேயே எல்லா மதங்களும் இருக்கின்றன. அந்தப் போதனைகளிலும் கூட உண்மையை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்கிற பக்குவமும், பொறுப்பும் தனிமனிதனைச் சேர்ந்தது. அந்த மனநிலையில், உண்மையைத் தேடி தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.”

 

முக்தானந்தா சிரித்துக் கொண்டே சொன்னார். “கேள்விக்குப் பதில் சொல்வதில் நீ பிரம்மானந்தாவையே மிஞ்சி விடுவாய் போல் இருக்கிறதே. நான் ஒரு கேள்வி கேட்டால், என் கேள்வி எனக்கே மறந்து விடுகிற மாதிரி என்னென்னவோ பதில் சொல்கிறாயே! நான் எளிமையான கேள்வி தானே கேட்டேன்.”

 

ஷ்ரவனும் சிரித்து விட்டான். பின் கைகளைக் கூப்பியபடி ஷ்ரவன் சொன்னான். “நானும் எளிமையான பதில் சொல்கிறேன். உண்மையைத் தேடி வந்திருக்கிறேன்.”

 

முக்தானந்தாவும் அசரவில்லை. “எந்த உண்மையைத் தேடி வந்திருக்கிறாய்?”

 

எல்லா உண்மையும் தான்.”

 

நான் உன்னைச் சாமர்த்தியசாலி என்று தான் நினைத்தேன். இப்போது புரிகிறது. நான் உன்னைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன். நீ அதிசாமர்த்தியசாலி.”

 

அந்த அடைமொழிக்கெல்லாம் நான் பொருத்தமானவன் இல்லை. என்னைச் சொல்லி விட்டு, நீங்களும் நான் கேட்டதற்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கிறீர்களே

 

நீ என்ன கேட்டாய்?”

 

கல்பனானந்தாவும், நீங்களும் சந்தித்துப் பேசிக் கொள்வதுண்டா?”

 

அவர் புன்னகையுடன் சொன்னார். “நீ என் கேள்விக்குத் தெளிவான பதில் தரும் வரை நானும் இனி நீ கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை

 

ஷ்ரவன் அவரைப் பார்த்துக் கைகூப்பியபடி சொன்னான். ”சுவாமிஜி. என்னை மட்டும் சம்பந்தப்பட்ட உண்மைகளை உங்களிடம் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் மற்றவர்களைப் பாதிக்கும் உண்மைகளை நான் உங்களிடம் சொல்வது நியாயமல்ல என்பதால் தான் தவிர்க்கிறேனே ஒழிய கெட்ட எண்ணத்தாலோ, அதிசாமர்த்தியத்தாலோ அல்ல. இது சத்தியம்.”

 

அவர் உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார். அவன் இப்போது ஆத்மார்த்தமாய்த் தான் சொன்னது போல் அவருக்குத் தோன்றியது.

 

இங்கே ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் சந்தித்துப் பேச அனுமதி கிடையாது என்றாலும் நான் முன்பே சொன்னபடி கல்பனானந்தாவுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. அவள் நினைத்தால் யாரையும் சந்தித்துப் பேசலாம். ஆனால் அவளும் என்னைச் சந்திக்கும் வாய்ப்பு வரும் போது கூட என்னிடம் பேசுவதில்லை. காரணம் அவளும் மாறி விட்டது தானா, இல்லை பேசுவது ஆபத்து என்று அவள் நினைக்கிறாளா என்று தெரியவில்லை. நானும் அவளிடம் பேச முற்பட்டதில்லை. பேசினால் கடந்த காலத்தைப் பற்றித் தான் நாங்கள் பேச வேண்டியிருக்கும். மாறிப் போனதையும், மாற்ற முடியாததையும் பேசுவது மனக்கசப்பைத் தான் அதிகப்படுத்தும் என்பதால் நானும் அவளோடு பேசுவதைத் தவிர்க்கிறேன். பொதுவாகவே இங்கே துறவிகளும் தங்களுக்குள் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதை நீ கவனித்திருப்பாய். இப்போது நீயே சித்தானந்தாவுடன் வெளியிலும் பேசுகிறாய். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகிறாய். இனியும் நீங்கள் தொடர்ந்து நெருக்கமாய் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் உங்களில் ஒருவர் வேறு அறைக்கு மாற்றப்படலாம். அதாவது 130 எண் அறையிலிருந்து 115ஆம் எண்ணுக்கோ, 145ஆம் எண்ணுக்கோ மாற்றப்படலாம்.”

 

ஏன் அப்படி?”

 

துறவறம் பூண்டவர்கள் அவர்களுக்குள்ளும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், துறவறம் என்பதே அர்த்தமில்லாமல் போய் விடும் என்பது அவர்களுடைய வாதம்.”

 

அதுவும் சரி தான்என்றான் ஷ்ரவன். “கல்பனானந்தாவும் பிரம்மானந்தாவைப் போல் முழுவதுமாக மாறி விட்டார் என்று நினைக்கிறீர்களா, சுவாமிஜி?”

 

தெரியவில்லை. ஆனால் மாறாமல் இருந்தால் இப்போதும் பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இருக்க வாய்ப்பு இல்லை.” என்று சொல்கையில் முக்தானந்தா வேறெதையோ மனதில் அசைபோடுவது போல் இருந்தது. அவளைக் குறித்து அவர் எதையோ நினைவுபடுத்திப் பார்ப்பது போலவும் தோன்றியது. 

 

இவர் கல்பனானந்தா பற்றி முழுவதுமாக வெளிப்படையாகச் சொல்லி விடவில்லை. எதையோ மறைக்கிறார். என்ன அது?’ என்று ஷ்ரவன் தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.


(தொடரும்)

என்.கணேசன் 





என்.கணேசனின் நூல்களை வாங்கிப் படிக்க 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.