பத்ரசால் சுதானுவைச் சந்தித்த போது பரபரப்புடன் கேட்டான்.
“என்ன ஆயிற்று இளவரசே?”
சுதானு புன்னகையுடன்
சொன்னான். “எல்லாம் நம் திட்டப்படியே நடந்தேறி விட்டது சேனாதிபதி. சுகேஷ் என்ற தடையை
நான் என் வழியிலிருந்து வெற்றிகரமாக நீக்கி விட்டேன்.”
பத்ரசால் நிம்மதியை
உணர்ந்தான். கார்த்திகேயன் சுதானுவுக்காகப் போட்டிருந்த திட்டத்தில் சிறிய குளறுபடி
நிகழ்ந்திருந்தாலும் மற்ற எல்லா திட்டங்களும், முயற்சிகளும் வியர்த்தமாகியிருக்கும்....
பத்ரசால் அடுத்த பிரச்சினையாக தனநந்தனை நினைத்திருந்தான். மூத்த மகன் மரணத்தை தனநந்தன்
எப்படி எடுத்துக் கொள்வான், எப்படி எதிர்வினையாற்றுவான் என்று தெரியவில்லை. என்ன தான்
கார்த்திகேயன் சுகேஷின் மரணத்தை, அரண்மனையில் ஊடுருவிய எதிரிகள் செய்த சதிவேலை என்று
ஆக்கி விடலாம் என்று சொல்லியிருந்தாலும் தனநந்தன் அதைத் தீர விசாரிக்காமல் அப்படியே
ஏற்றுக் கொள்வானா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது.
ஆனால் கார்த்திகேயன்
தன் கச்சிதமான திட்டத்தை அவர்களிடம் சொல்லியிருந்தான். “கடைசியில் கண்டிப்பாக அரண்மனையில்
ஓரிரு வீர்ர்களின் பிணங்கள் விழுந்து கிடக்கும். அவற்றில் ஒரு பிணத்தைக் காட்டி ‘இவன்
தான் எதிரிகளின் சதியில் எப்படியோ கூட்டு சேர்ந்திருக்கிறான். இவன் சுகேஷைக் கொன்று
விட்டு வரும் போது இவனை நாங்கள் தீர்த்துக்கட்டி விட்டோம். சதிகாரர்களின் அடுத்த திட்டம்
மன்னரைக் கொல்வதாக இருந்தது. அந்தத் திட்டம் நிறைவேறாதபடி மன்னரைப் பாதுகாத்து விட்டோம்.”
என்று சொல்லி விடலாம். மன்னரையும், அவரது பாதுகாவலர்களையும் வெளியே விடாதபடி வெளியில்
காவல் இருந்ததைக் கூட அந்தக் காரணம் காட்டியே நம் புத்திசாலித்தனமான செயலாகச் சித்தரித்து
விடலாம்.”
சுதானு அங்கு என்ன
நடந்தது என்பதை விவரித்து விட்டு ராக்ஷசரை பத்ரசால் எப்படி சமாளித்தான் என்று கேட்டான்.
பத்ரசால் சொன்னான். “கார்த்திகேயன் சொன்னபடி நம் சில ஆட்களை அவர் வீட்டு முன் குதிரைகளில்
அங்குமிங்கும் போகும்படியும், சில ஆட்களை ஓடும்படியும் சொல்லி விட்டு அந்த சத்தங்கள்
கேட்டு அவர் வெளியே வருவதற்குள் போய் விட்டேன்...” அங்கு என்ன சொன்னான் என்பதை விவரித்து
விட்டுச் சொன்னான். “அங்கேயும் பலத்த காவலை ஏற்படுத்தி விட்டு வந்திருக்கிறேன். அவர்
வெளியே வந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளியே விட அனுமதி இல்லை என்று
சொல்லச் சொல்லியிருக்கிறேன். அதனால் இப்போதைக்கு அவரிடமிருந்தும் பிரச்னை எதுவும் வர
வாய்ப்பில்லை.... கார்த்திகேயன் எங்கே?”
சுதானு சொன்னான்.
“அவருக்காகத் தான் நானும் காத்திருக்கிறேன். இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போனார்.
இன்னும் வரக் காணோம்.”
அந்த சமயத்தில்
இரவுப் பறவை ஒன்றின் கூக்குரல் சற்று வித்தியாசமாகக் கேட்டது. அது இரவுப் பறவையின் கூக்குரல் அல்ல, ‘இனி உள்ளே
நுழையலாம். அதற்கு வேண்டிய வேலைகளை நாங்கள் செய்து முடித்து விட்டோம்’ என்று சின்ஹரன்
சாணக்கியருக்கும், சந்திரகுப்தனுக்கு அறிவித்த அறிவிப்பு என்று அறியாத சுதானுவும்,
பத்ரசாலும் கார்த்திகேயனுக்காகக் காத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் அரண்மனைக்கு
வெளியிலேயும் சலசலப்புகள் கேட்க ஆரம்பிக்கவே பத்ரசால் எழுந்தான். “என்ன என்று நான்
பார்த்து விட்டு வருகிறேன்.”
பத்ரசால் வெளியே
வந்து பார்த்த போது ஒரு வீரன் குதிரையில் விரைந்து வந்து கொண்டிருந்தான். தூரத்தில்
சில வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதும் தெரிந்தது.
குதிரையில் விரைந்து
வந்த வீரன் இறங்கி வணங்கி மூச்சிறைக்கச் சொன்னான். “சேனாதிபதி எதிரிகளின் படை உள்ளே
நுழைந்து விட்டது.”
பத்ரசாலுக்குத்
தன் காதுகளை நம்ப முடியவில்லை. “என்ன உளறுகிறாய்?” என்றான்.
“உளறவில்லை சேனாதிபதி....
உள்ளேயிருந்து சில வீரர்கள் நம் காவல் வீரர்கள் மீது பாய்ந்து தாக்கிச் சாய்த்து விட்டு
கதவுகளைத் திறந்து விட்டார்கள்.”
பத்ரசால் திகைத்தான்.
மேலும் கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும் இப்போது ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானது
என்பதால் “நம் படையினரை உடனடியாக வரச் சொல். அவசரம் என்று நான் சொன்னதாகச் சொல். அருகில்
செல்லும் போதே கூக்குரலிட்டுக் கொண்டு போ. அவர்களில் சிலராவது விழித்துக் கொண்டு என்ன
என்று கேட்க வருவார்கள். கால தாமதத்தை ஓரளவு தவிர்க்கலாம்.”
“உத்தரவு சேனாதிபதி”
என்று சொல்லி விட்டு மீண்டும் குதிரை ஏறிய வீரன் பறந்தான். பத்ரசால் குதிரையேறி முன்னோக்கி
விரைந்தான். அங்கே சில மகத வீரர்கள் முடிந்த வரை எதிரி வீரர்களுடன் போராடிக் கொண்டிருந்தார்கள்.
முடிந்த வரை சில வீரர்கள் பிரதான வாயிற்கதவை மூட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாதென்பதை பத்ரசால் உணர்ந்தான். நகரக்
காவல் தலைவன் உக்கிரமாக இரண்டு வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பத்ரசால்
வாளை உருவியபடி பாய்ந்து சென்று அந்த இரண்டு வீரர்களையும் வெட்டிச் சாய்த்து விட்டு
அவசரமாக நகரக் காவல் தலைவனிடம் கேட்டான். “எப்படி ஆரம்பித்தது?”
நகரக் காவல் தலைவன்
மூச்சு வாங்க சொன்னான். “முற்றுகை ஆரம்பித்து நாம் பிரதானக் கதவைச் சாத்துவதற்கு முன்பே
இங்கே வந்து சேர்ந்திருந்த வணிகர்களில் பலர் எதிரியின் வீரர்களாக இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் வந்து தாக்க ஆரம்பித்த பின் தான் அந்த உண்மை விளங்கியது சேனாதிபதி. அது மட்டுமல்ல
நேற்று முதல் உங்களுடன் இருந்த வணிகர் தான் அவர்களுக்குத் தலைமை தாங்கி தாக்குதல் நடத்தினார்.
பின் வினோதமாய் ஒரு பறவை போல் கூக்குரலிட்டு வாயிற்கதவைத் திறந்து விட்டவர் அவர் தான்....”
பத்ரசால் அதிர்ச்சியில்
உறைந்து போனான். அவனால் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. சாவகாசமாக யோசித்துப் பார்க்க
நேரமும் இல்லை. எதிரே அவன் வீரர்கள் பிரதான வாயிற்கதவருகே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவன் படை வீரர்கள் செய்தி கிடைத்து வரும் வரையாவது அவன் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க
வேண்டும். அந்த முடிவெடுத்து அவன் அங்கு செல்வதற்கு முன் நகரக் காவல் தலைவனிடம் கேட்டான்.
“அந்த நயவஞ்சக வணிகன் தற்போது எங்கே?”
“அவர் அரண்மனைப்
பக்கம் சென்றதைப் பார்த்தேன் சேனாதிபதி”
பத்ரசால் மனம் மாபெரும்
குற்றவுணர்ச்சியால் நிறைந்தது. அவனுக்குப் பிரச்னை நிதிப்பற்றாக்குறை. அது தனநந்தனின் கஞ்சத்தனத்தால் வந்தது என்று அவன்
நினைத்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவன் தன் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இந்தக்
குறுக்கு வழியைத் தேடிக் கொண்டானேயொழிய அது அவன் தாயகத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்
என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மகதம் எதிரிகளிடம் வீழும் என்றும், அதற்கு
அவன் காரணமாக இருப்பான் என்றும் நிச்சயமாகச் சிறிதும் எதிர்பார்த்ததுமில்லை. தனநந்தனை
விட நிச்சயம் சுதானு சிறந்த அரசனாக இருப்பான் என்று அவன் இப்போதும் நம்பினான். சுகேஷை
விட எல்லா விதங்களிலும் சுதானு சிறந்த அரசனாக இருப்பான் என்பதில் அவனுக்குச் சந்தேகமேயில்லை.
அதற்கு உதவுவதில் தவறில்லை என்ற எண்ணமே சமீப கால நடவடிக்கைகளில் எந்தக் குற்றவுணர்ச்சியுமில்லாமல்
அவனை ஈடுபட வைத்திருக்கின்றது. ஆனால் நடப்பதெல்லாம் வேறாக இருக்கிறது.
இங்கே வாயிற்கதவைத்
திறந்து விட்டு கார்த்திகேயன் என்ற சாமர்த்தியமான வஞ்சகன் அரண்மனைப் பக்கம் போயிருக்கிறான்
என்றால் அங்கே சுதானுவின் உயிருக்கும், தனநந்தன் உயிருக்கும் ஆபத்து காத்துக் கொண்டு
இருக்கிறது என்று தான் அர்த்தம். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவனே அவர்கள் உயிருக்கு
உலை வைத்தது போல் ஆகி விட்டது. பத்ரசாலுக்குத் தன் மீதே கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது.
எல்லாவற்றையும்
ஒதுக்கி விட்டு இப்போது என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான். உள்ளே நுழையவிருக்கும்
பெரும்படையைத் தடுப்பதும் முக்கியம். தனநந்தன் மற்றும் சுதானு இருவரின் உயிரையும் காப்பதும்
முக்கியம். இந்த இறுதி வேளையில் அவனால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
ஆனால் அவனால் முடிந்த வரை ஏதாவது செய்யா விட்டால் அவனையே அவனால் மன்னிக்க முடியாது....
இப்போதைக்கு மிக முக்கியம் எதிரிப்படை முழுவதுமாக உள்ளே வந்து விடாமல் தடுத்து நிறுத்துவது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் வேகமாகப் பாய்ந்து முன்னேறிச் செல்ல, அவன் வருவதைக் கண்டதும் வாயிற்கதவருகே போராடிக் கொண்டிருந்த அவன் வீரர்கள் உற்சாகமடைந்தார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனின் நூல்கள் வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
What a surprise, Episode is published in morning!
ReplyDeleteசாணக்கியர், மாவீரனான சின்ஹரனை படையில் சேர்த்துக் கொள்ளாமல் நடித்து ஏமாற்ற ஏன் அனுப்பியுள்ளார்? என்பது இப்போது தான் புரிகிறது...
ReplyDeleteYeah pleasant surprise in the morning itself 😊
ReplyDeleteWhen the new books available in kindle sir.
ReplyDeleteIt will not be soon.
Delete