சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 8, 2024

சாணக்கியன் 121

 

ம்பி குமாரனை க்ளைக்டஸால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு காலத்தில் அறிவு முதிர்ச்சியின் அடிமட்டத்தில் இருந்த அவனிடம் பிறகு தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் புத்திசாலித்தனமாக இருந்தன. அதே சமயம், ஒரு காலத்தில் நல்ல அடிமையாக இருந்த அவனிடம் ஆளுமை மெல்ல எழுந்து வளர ஆரம்பித்து விட்டது. சத்ரப்பாக நியமிக்கப்பட்டவுடன் அலட்சியமும் அவனிடம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அவனுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி அவன் நடக்க ஆரம்பித்து விட்டான். அலெக்ஸாண்டரோடு யவன அதிகாரம் போய்விட்டது என்று நம்பி தன் விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு அவனுக்கு வந்து விட்டது. செல்யூகஸை சந்தித்து விட்டு வந்த பிறகு நிலமை மாறியிருக்கிறது என்பதை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எத்தனையோ விதங்களில் க்ளைக்டஸ் உணர்த்தினான். அதிகாரத்திற்கு செல்யூகஸ் வந்து விட்டான், அலெக்ஸாண்டரின் இடத்தில் இப்போது அவனிருக்கிறான் என்று தெரிவித்தாகி விட்டது. ஆம்பி குமாரனை சத்ரப் என்றழைப்பதை க்ளைக்டஸ் நிறுத்தி விட்டதை வைத்து ஆம்பி குமாரன் தன் தற்போதைய நிலைமையை யூகித்திருக்க வேண்டும். ஆனால் புத்திசாலியாக மாற ஆரம்பித்திருப்பது போலத் தோன்றும் ஆம்பி குமாரன் பழைய அலட்சியத்தோடு இருப்பது தான் க்ளைக்டஸைக் குழப்பியது.

 

ஆம்பி குமாரனின் சில நடவடிக்கைகளைப் பார்த்து ‘இதையெல்லாம் செல்யூகஸ் விரும்ப மாட்டான்’ என்று க்ளைக்டஸ் ஆரம்பத்தில் சூசகமாகச் சொல்லிப் பார்த்தான். யவனர்களின் சட்ட திட்டங்கள் கண்டிப்பானவை, அவற்றைப் பின்பற்றா விட்டால் தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்று க்ளைக்டஸ் பேச்சோடு பேச்சாகத் தெரிவித்தும் பார்த்தான்.  ஆனால் அந்தச் சமயங்களில் ஆம்பி குமாரன் செவிடனைப் போல நடந்து கொண்டான்.

 

இனி இவனிடம் சூசகமாகவோ, பேச்சோடு பேச்சாகவோ எதையும் சொல்லிப் பயனில்லை என்று முடிவெடுத்த க்ளைக்டஸ் நேரடியாகவே யவன அதிகாரி என்ற முறையில் ஆம்பி குமாரனிடம் ஒரு நாள் சொன்னான். “காந்தார அரசே. நீங்கள் முன்பு சத்ரப்பாக இருந்த போது மலயகேதுவையும், சந்திரகுப்தனையும் எதிர்க்காமல் யூடெமஸின் உதவிக்கும் செல்லாமல் இருந்தது தளபதி செல்யூகஸுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு நீங்கள் துணை போகிறீர்களோ என்று கூட சந்தேகத்தை அவரிடம் ஏற்படுத்தியுள்ளது. அதனால் செல்யூகஸ் இங்கே வரும் வரை காத்திருக்காமல் அவர் வரும் முன்பே நீங்கள் அவரது நம்பிக்கையை மீட்டெடுக்க உடனடியாக எதாவது செய்வது மிக நல்லது. ஏனென்றால் எங்கள் யவனச் சட்டத்தில் மேலான பொறுப்புகளில் இருப்பவர்கள் கடமை தவறுவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.”

 

ஆம்பி குமாரன் தனக்குள் எழுந்த கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டான். ”நான் ஏன் உங்கள் யவனச் சட்டத்தையும், செல்யூகஸின் அபிப்பிராயத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டும் க்ளைக்டஸ்?”

 

க்ளைக்டஸ் அதிர்ந்து போனான். என்ன ஒரு திமிர்ப்பேச்சு! ஆம்பி குமாரன் புரிந்து தான் பேசுகிறானா இல்லை புரியாமல் பேசுகிறானா, இல்லை புத்தி தான் பிசகி விட்டதா? க்ளைக்டஸ் சற்று கடுமையாகவே ஆம்பி குமாரனுக்கு உண்மையைப் புரிய வைக்க ஆசைப்பட்டான். “காந்தார அரசே. நீங்கள் இங்கே சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் பிரதிநிதியாகத் தான் காந்தாரத்தை ஆண்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பது தங்களுக்கு மறந்து விட்டதா? தாங்கள் சற்று கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது நல்லது.”

 

ஆம்பி குமாரனும் கடுமையான குரலில் சொன்னான். “க்ளைக்டஸ். எனக்கு வரலாறு சரியாகவே நினைவிருக்கிறது. அதனால் நீ கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது நல்லது. அலெக்ஸாண்டர் கேகயத்தை வென்றது போல் காந்தாரத்தை வெல்லவில்லை. நானாக நட்புக் கரம் நீட்டி அலெக்ஸாண்டரை இங்கே வரவழைத்தேன். தட்சசீலத்தின் எல்லையில் நின்று நண்பனாக நானே தான் கூட்டிக் கொண்டு வந்தேன். நீயும் அந்தச் சமயத்தில் தான் இங்கே வந்தவன் என்பதால் அந்த நிகழ்வை நீ மறந்திருக்க முடியாது. நான் காட்டிய நட்புக்கு இணையாக அலெக்ஸாண்டரும் நட்பு காட்டினார். நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து தான் கேகயத்தை வென்றோம். என் எதிரி புருஷோத்தமனின் வீரத்தை மெச்சி அலெக்ஸாண்டர் கேகயத்தைத் தன் பெயரில் ஆளும் அதிகாரத்தைத் திருப்பி அவனுக்கே தந்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் என் நண்பன் அலெக்ஸாண்டரின் முடிவுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு என் நண்பன் மீது அன்பு வைத்திருத்தேன். நான் நட்பினால் அலெக்ஸாண்டரோடு இணைந்து கொண்டு அந்த நட்பிற்கு அடிபணிந்திருந்ததை நீங்கள் அடிமைத்தனமாக நினைத்து விட்டது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. ஆனால் அலெக்ஸாண்டர் அப்படி நினைக்கவில்லை என்பது பிலிப்பின் மரணத்திற்குப் பின் யூடெமஸை மட்டும் நம்பாமல் பாரதப்பகுதிகளுக்கு என்னையும் சேர்த்து சத்ரப்பாக நியமித்ததை வைத்து நீ புரிந்து கொள்ளலாம்.”

 

“:நட்பின் காரணமாக நான் அலெக்ஸாண்டருக்குத் தந்த அனுமதி நான் யவனர்களுக்குத் தந்த நிரந்தர அனுமதியாகி விடாது. அந்த அனுமதி அலெக்ஸாண்டரின் மரணத்தோடு முடிவுக்கு வந்து விட்டது. இனி நானாக நட்பு பாராட்ட விரும்பினால் மட்டும் தான் எதுவும் தொடர முடியும். செல்யூகஸ் இங்கே என் நண்பன் அலெக்ஸாண்டரோடு வந்தவன். அதே பாவனையோடு இங்கே வந்தால் மட்டுமே என் நட்பையும் எதிர்பார்க்க முடியும். என் தலைவனாக இங்கே வந்து அதிகாரம் செலுத்தும் எண்ணம் இருந்தால் நான் என் நட்பை மறுபரீசீலனை செய்ய வேண்டி வரும்.”

 

“நீ எங்கள் யவனச் சட்டத்தில் மேலான பொறுப்புகளில் இருப்பவர்கள் கடமை தவறுவது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது என்று சொன்னாய். அதை யூடெமஸிடம் சொல்லி  அவன் தவறு செய்யாமல் காத்திருந்தால் அது உங்கள் யவனர் பெருமையை உணர்த்தியிருக்கும். அலெக்ஸாண்டர் நட்பு பாராட்டிய புருஷோத்தமனை யூடெமஸ் விஷம் வைத்துக் கொன்ற போது உனக்கு யவன சட்டமும் நினைவிருக்கவில்லை, வரலாறும் நினைவிருக்கவில்லை, சரி, தவறு என்ற பிரக்ஞையும் இருக்கவில்லை. நீயும் யூடெமஸும் சேர்ந்து நிகழ்த்திய சதிக்கு நான் அங்கீகாரம் தரும் வகையில்  உதவி செய்து இருக்க வேண்டும் என்று செல்யூகஸ் எதிர்பார்த்ததாகச் சொன்னாய். ஒரு யானை திருடிக்கு, ஒரு கொலைகாரனுக்கு உதவி செய்து என் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. புருஷோத்தமன் என் எதிரி தான் என்றாலும் என் நண்பன் அலெக்ஸாண்டர் அவனிடம் அன்பு காட்டிய பிறகு நான் அவனை ஒரு போதும் எதிர்த்ததில்லை. அவன் கொலையையும் அலெக்ஸாண்டர் உயிரோடு இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பானோ அப்படியே தான் நானும் பார்க்கிறேன். எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் யூடெமஸ் குற்றவாளியாகவே எனக்கு இப்போதும் தெரிகிறான். அலெக்ஸாண்டரின் ஆட்கள் என்று சொல்லிக் கொள்ளும் உங்களால் அது முடியாமல் போவது எனக்கு மனவருத்தத்தைத் தருகிறது. நம்பிக்கைத் துரோகம் செய்து உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் ஆட்களுக்கே விஷம் வைத்துக் கொல்லும் உங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க எனக்கு விருப்பமில்லை. அதை எதிர்பார்க்கும் அளவு உங்களுக்கு யோக்கியதையும் இல்லை.”

 

க்ளைக்டஸ் திகைத்து சிலையாக அமர்ந்திருந்தான். அந்தப் பைத்தியக்கார யூடெமஸ் இப்படியெல்லாம் ஆம்பி குமாரன் வாயிலிருந்து என்னைக் கேட்கும்படி செய்து விட்டானே என்று ஒரு கணம் அவன் மனம் நொந்தான்.  ஆம்பி குமாரனின் சாமர்த்தியமான பேச்சுக்குப் பதிலளிக்க அவனிடம் எந்த சாமர்த்தியமான பதிலும் இல்லை. அதனால் அவன் சொன்ன எதையும் பொருட்படுத்திப் பேசாமல் க்ளைக்டஸ் முடிவான கேள்வியொன்றைக் கேட்டான். “அப்படியானால் யவனர் தலைமையை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்களா காந்தார அரசே?”

 

“அலெக்ஸாண்டரின் நண்பன் என்ற உயர்ந்த பதவியிலிருந்து யவனர்களின் அடிமை என்ற இழிநிலைக்கு இறங்க நான் மறுக்கிறேன்.”

 

இது என்ன பதில், இதை எப்படி எடுத்துக் கொள்வது? “யவன பிரதிநிதி என்ற முறையில் தங்கள் மனமாற்றத்தை நான் தளபதி செல்யூகஸுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் காந்தார அரசே. நான் அவரிடம் முடிவாக என்ன தெரிவிக்க வேண்டும்?”

 

“நான் சொன்னதை அப்படியே செல்யூகஸிடம் சொல். முடிவை செல்யூகஸ் தான் எடுக்க வேண்டும்”

 

“இங்கே நீண்ட காலம் இருந்த நெருக்கத்தின் காரணமாக ஒரே ஒரு கேள்வியைக் கேட்க நான் விரும்புகிறேன் காந்தார அரசே. தங்களை எதிர்க்கும் முடிவை எடுத்து தளபதி செல்யூகஸ் பெரும்படையோடு வந்தால் அதை எதிர்க்குமளவு தங்களிடம் படைபலம் இருக்கிறதா?”

 

“என் படைபலம் போதாவிட்டால் நான் என் மீது அக்கறை கொண்டவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வேன். ஆனால் உங்கள் அடிமையாக இருக்க எனக்கு விருப்பமில்லை.”

 

தீர்க்கமாகச் சொன்ன ஆம்பி குமாரனைத் திகைப்புடன் பார்த்தபடி ஒரு கணம் நின்று விட்டு உடனே அங்கிருந்து வெளியேறினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




   

3 comments:

  1. ஆம்பிக்குமாரன் ... யூடெமஸின் சதியை சுட்டிக்காட்டி நியாயத்தை எடுத்துக்கூறிய விதம் அருமை... ஆம்பிக்குமாரனின் புத்திசாலித்தனத்தை பார்க்கும் போது செல்யூக்கஸை எல்லையிலேயே துரத்தி அடித்து விடுவான் போலுல்லது...

    ReplyDelete
  2. NG rocks by Ambi's clever oration. 🤭🤭

    ReplyDelete
  3. பலே ஆம்பி குமாரா

    ReplyDelete