சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 21, 2023

யோகி 10

வாசுதேவன் முகத்தில் அதிர்ச்சியைத் தொடர்ந்து குழப்பமும், தெளிவும், வருத்தமும் வரிசையாகத் தெரிந்தன. வருத்தத்துடனே மெல்ல தண்ணீர் பாட்டிலை மேசையில் வைத்தபடிசாரி கிருஷ்ணாஎன்று தாழ்ந்த குரலில் அவர் சொன்னார்.

 

கிருஷ்ணமூர்த்திக்கு இன்று காலை வீட்டை விட்டுக் கிளம்பிய போது உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்திருக்கவில்லை. சைத்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்குக் கிடைத்திருந்தாலாவது  ஏதாவது முயற்சி செய்யும் வாய்ப்பிருந்தது. சாம்பல் கிடைத்து அதையும் கடலில் கரைத்து விட்ட பின்பு எதையும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. மரணச் செய்தி கிடைத்தவுடனேயே சந்தேகம் இருக்கிறது என்று ஆர்ப்பாட்டம் செய்து பிரேத பரிசோதனைக்கு முயற்சி செய்திருக்கலாமோ என்று நேற்றிரவு தான் அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. மகளின் மரணம், அதனால் ஏற்பட்ட தாங்க முடியாத துக்கம், அதிர்ச்சி எல்லாமாகச் சேர்ந்து அந்தக் கணத்தில் எதையும் யோசிக்கும் நிலைமையில் அவரை வைத்திருக்கவில்லை. இப்போது யோசித்துப் பயனில்லை என்று புரிந்தாலும் எதற்கும் விசாரித்துப் பார்ப்போம் என்று தான் காலையில் அவர் கிளம்பி வந்திருக்கிறார். இங்கு நண்பனைப் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை துளிர் விட்டது.

 

வாசுதேவன் சொன்னார். “இறந்த சன்னியாசி உன் மகள்னு எனக்கு இப்ப தான் தெரியும். நீ கேஸ் போட்ட விஷயம் தொடர்ந்து டிவிலயும், பத்திரிக்கைகள்லயும் வந்துட்டு இருந்ததால அப்ப தெரிஞ்சிருந்துது. அப்பறமா நானும் மறந்துட்டேன். இங்கே அட்மிட் ஆனபிறகும் என்னோட பேஷண்ட்டா இருந்திருந்தா பெயரைப் பார்த்து நான் கண்டுபிடிச்சிருப்பேன்....” அதற்கு மேல் சொல்ல விரும்பாதவர் போல் வாசுதேவன் நிறுத்திக் கொண்டார். 

 

கிருஷ்ணமூர்த்தி நண்பனிடம் ஆழ்ந்த துக்கத்துடன் சொன்னார்என் மகள் எப்படிச் செத்தான்னு நான் தெரிஞ்சுக்க வந்திருக்கேன் வாசு. உன்னைப் பார்க்கற வரைக்கும், உண்மையைத் தெரிஞ்சுக்க முடியும்னு எனக்குப் பெருசா நம்பிக்கை இருக்கலை. உன்னைப் பார்த்த பிறகு நம்பிக்கை வந்துருக்கு...”

 

வாசுதேவனுக்கு நண்பனின் முகத்தில் தெரிந்த துக்கத்தையும், வேதனையையும் பார்க்க முடியவில்லை. அவர் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார். ”கிருஷ்ணா. நீ என்ன செஞ்சாலும் உன் மகள் உயிரோட திரும்பி வரப் போகிறதில்லை. உண்மையைத் தெரிஞ்சுகிட்டா கூட உன்னால எதையும் நிரூபிக்க முடியாது. உன்னால அவங்கள ஒன்னும் செய்யவும் முடியாது. அவங்க நீ நெருங்க முடியாத உயரத்துல இருக்காங்க கிருஷ்ணா. பணம், செல்வாக்கு, ஆள்பலம் எல்லாமே அவங்க கிட்ட எக்கச்சக்கமா இருக்கு. யாரையும் பயமுறுத்தியோ, விலைக்கு வாங்கியோ அடிபணிய வைக்க அவங்களால முடியும்.... இந்த வீண் முயற்சியை விட்டுடு கிருஷ்ணா

 

கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் எதுவும் சொல்லாமல் சோகமாக அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் அவசரமாக உள்ளே நுழைந்த நர்ஸ் வாசுதேவனிடம் சொன்னாள். “... ரூம் 125 பேஷண்ட் பழையபடி மூச்சு விடறதுக்கு சிரமப்படறார் டாக்டர்

 

வாசுதேவன் மெல்ல எழுந்தார். “சாரி கிருஷ்ணா. இன்னொரு நாள் சாவகாசமாய் சந்திப்போம்.... நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்.... டேக் கேர்

 

கிருஷ்ணமூர்த்தி விரக்தியுடன் வீடு வந்து சேர்ந்தார். வாசுதேவனை மருத்துவமனையில் சந்தித்ததையும் அவர் சொன்னதையும் தந்தையிடம் துக்கம் பொங்கச் சொன்னார். கடைசியில் சேதுமாதவனிடம் கேட்டார். “அப்பா, நிஜமாவே கடவுள்னு ஒருத்தர் இருக்கிறாராப்பா

 

சேதுமாதவன் சிறிதும் யோசிக்காமல் சொன்னார். “இருக்கிறார் கிருஷ்ணா

 

பின்ன ஏம்ப்பா இப்படியெல்லாம் நடக்குது? இதையெல்லாம் அவர் எப்படிப்பா அனுமதிக்கிறார்? நாம யாருக்கும் எந்த துரோகமும் செஞ்சதில்லையேப்பா...”

 

சேதுமாதவன் மகனிடம் கனிவாகச் சொன்னார். “இந்தப் பிறவில நாம தப்பாய் எதுவும் செய்யாம இருக்கலாம். போன பிறவிகளோட கணக்கு யாருக்கு கிருஷ்ணா தெரியும்? என்னென்ன கர்மங்களை நாம சம்பாதிச்சு வெச்சிருக்கோமோ? சைத்ராவைக் கொன்னவங்களும் கண்டிப்பா அதன் பலனை ஒரு நாள் அனுபவிப்பாங்க. தெய்வம் நின்று கொல்லும்...”

 

ஆனாலும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் அமைதியடைய மறுத்தது. “இப்படி எல்லாம் சொல்லி நம்மளை நாம தேத்திக்க வேண்டியிருக்கேயொழிய, நிஜம்னு எனக்கு தோணலைப்பா. கர்மா தியரி தான் சரின்னா கடவுளோட பங்கு என்னப்பா? அவரு ஏன் இதையெல்லாம் அனுமதிக்கணும்? நீங்க படிச்சுகிட்டிருக்கிற தத்துவ புஸ்தகங்கள் எல்லாம் என்ன சொல்லுது?”

 

எல்லாமே நாடகம் அல்லது கனவுன்னு சொல்லுது. கனவுல நீ பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறேன்னு வெச்சுக்கோ. கனவுல வேணும்னாகடவுளே, எனக்கு ஏன் நீ கஷ்டங்களுக்கு மேல கஷ்டங்கள் தர்றே? இது நியாயமான்னு நீ கேட்கலாம். ஆனா முழிச்சதுக்கப்பறம் நீ கேட்க மாட்டாய் இல்லையா? ஏன்னா எதுவுமே நிஜத்துல உன்னை பாதிக்கலை. அதே மாதிரி தான் இதுவும். கனவுல துக்கப்படற மாதிரி தான் நாம துக்கப்படறோம். உண்மைல நம்ம ஆத்மாவுக்கு எந்தப் பாதிப்புமில்லை...”

 

கிருஷ்ணமூர்த்திக்கு சேதுமாதவன் சொன்ன தத்துவங்கள் மனதைத் தேற்றவில்லை. இந்தக் கஷ்டங்கள் நிஜம். அவர் மகள் சைத்ரா கொல்லப்பட்டது நிஜம். கொன்றவர்கள் இன்று எந்தப் பாதிப்புமில்லாமல் இருக்கிறார்கள் என்பது நிஜம். அவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது நிஜம். பாதிக்கப்படாத ஆத்மா அவருக்கு அறிமுகம் ஆகவில்லை.

 

இரண்டு நாட்கள் கழித்து செய்திகளில் செவென் ஸ்டார் மருத்துவமனையில் டாக்டர் வாசுதேவன் கொரோனா தொற்றால் மரணமடைந்த செய்தியும் வந்தது. கிருஷ்ணமூர்த்தியும், சேதுமாதவனும் பேரதிர்ச்சி அடைந்தார்கள். சிறிது நேரம் பேச்சிழந்து அப்படியே அமர்ந்திருந்தார்கள்.

 

பின் அப்பா வாசுவையும் அவங்க கொன்னுட்டாங்கன்னு தான்ப்பா நான் நினைக்கிறேன்.” என்று கண்கலங்கிய கிருஷ்ணமூர்த்தியை எப்படித் தேற்றுவது என்று சேதுமாதவனுக்குப் புரியவில்லை.

 

ஆஸ்பத்திரில என்ன நடந்திருக்குன்னு அவனுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். அவன் என் நண்பன்னு தெரிஞ்சவுடனே அவனை உயிரோடு விடறது ஆபத்துன்னு அவனையும் கொன்னுட்டாங்கப்பா. பாவம் அவன். லேட்டாய் தான் கல்யாணம் பண்ணிகிட்டான். அவன் மகன் இன்னும் படிச்சே முடிச்சிருக்க மாட்டான். என் நண்பன்கிறதே வாசுவுக்கு எமனாயிடுச்சு…” கிருஷ்ணமூர்த்தி புலம்பினார்.

 

அன்றிலிருந்து கிருஷ்ணமூர்த்தி நடைப்பிணமானார். வாழ்க்கையில் இருந்த எல்லாப் பற்றுகளையும் அவர் இழக்க ஆரம்பித்தார். க்ளினிக்குக்கு அவர் செல்வதும் மெல்ல மெல்லக் குறைந்தது. கைபேசியில் நேரம் செலவழிப்பது கூட முற்றிலும் நின்று விட்டது. அது எங்கோ இருக்கும். அவர் எங்கோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பார். சேதுமாதவன் ஏதாவது பேசினால் கூட தந்தி வாசகம் போலத் தான் பதில் வரும். மகனுக்கு எப்படி ஆறுதல் சொல்லி, பழைய கிருஷ்ணமூர்த்தியாக மாற்றுவது என்று சேதுமாதவனுக்குப் புரியவில்லை.

 

ஒரு நாள் தொலைக்காட்சியில்அமெரிக்காவிலிருந்து விமானப் போக்குவரத்து  இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் முதலமைச்சர் அருணாச்சலம் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு வந்த பின்னரும் அவர் சில மாதங்களாவது பூரண ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிகிறது...” என்று செய்தி வாசிக்கப்பட்ட போது மட்டும் கிருஷ்ணமூர்த்தி முகத்தில் சிறிது ஒளி வந்தது.

 

முதலமைச்சர் அப்பவே இங்கே இருந்திருந்தா நாம ஏதாவது செஞ்சிருக்கலாம். இல்லையாப்பாஎன்று அவர் கேட்டார்.

 

ஆமா கிருஷ்ணா

 

அவர் அமெரிக்கால இருந்து வந்த பிறகு நீங்க கண்டிப்பாய் அவரைப் போய்ப் பார்க்கணும். நம்ம சைத்ராவைக் கொன்னவங்க கண்டிப்பா தண்டிக்கப்படணும். நீங்க போய் சொன்னா அவர் கண்டிப்பா செய்வார், எனக்காகவும், உங்க பேத்திக்காகவும் நீங்க அவரைப் போய்ப் பார்க்கணும். சரியா?”

 

சரி கிருஷ்ணா

 

அன்றிரவு கிருஷ்ணமூர்த்தி சாப்பிடவில்லை. சேதுமாதவன் வற்புறுத்திய போது அவர் சொன்னார். “சாப்பிடப் பிடிக்கலப்பா

 

நான் மட்டும் பிடிச்சா சாப்பிடறேன். யாரோடயும் நம்ம வாழ்க்கை முடிஞ்சுடறதில்லை கிருஷ்ணா. நம்ம வேலைகள் முடியற வரைக்கும் நாம இந்த பூமில இருந்தாகணும். அதுக்கு நாம சாப்பிட்டாகணும்…”

 

எனக்கென்னவோ சைத்ரா கூடவே என் வாழ்க்கையும் முடிஞ்ச மாதிரி தான் தோணுதுப்பா.”

 

அது தான் கிருஷ்ணமூர்த்தி தந்தையிடம் கடைசியாகப் பேசிய வார்த்தைகள். சேதுமாதவன் சொன்னதற்காக ஏதோ சிறிது சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற அவர் மகன் உறங்கிய அந்த உறக்கம் கடைசி உறக்கமாக இருந்தது. மறுநாள் காலை சேதுமாதவன் மகனை எழுப்பப் போன போது கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டு இறந்திருந்தார். அவர் உடல் அருகில்என் மகள் மரணத்திற்குப் பின் நான் வாழ விரும்பாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்என்று எழுதியிருந்த கடிதத்தின் மேல், காலி செய்யப்பட்டிருந்த தூக்க மாத்திரை பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. 


(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. அடக் கொடுமையே...அவங்க அப்பாவா பற்றி யோசிக்காம இப்படி செய்துட்டாரே...டாக்டர் வாசுவும் பாவம்..

    ReplyDelete
  2. நல்லவங்களுக்கு இப்படிப்பட்ட சோதனையா.... சேதுமாதவனுக்கு இப்படிப்பட்ட தண்டனை கொடுமையானது....

    ReplyDelete