சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, February 12, 2020

மறுபிறவித் தத்துவமும், மகாத்மாக்களின் ஆதிக்கமும்!



திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதைநூல் வெளியான பிறகு அந்த நூல் ஒரு சாராரிடம் பெரும் வரவேற்பையும், இன்னொரு சாராரிடம் கடும் விமர்சனத்தையும் பெற்றது. மேற்கத்திய மதங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கு அந்த நூலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பல புரியாததாகவும், புரட்சிகரமான எதிர்க்கருத்துகளாகவும் தோன்றியதால் மேலை நாடுகளின் சில பிரபல பத்திரிக்கைகள் அந்த நூலை முட்டாள்தனம், அதீத கற்பனை என்றெல்லாம் விமர்சனம் செய்தன. ஆனால் சில பத்திரிக்கைகள் அந்த நூலை ஆன்மிக இலக்கியத்தின் புதுமையான கருத்துக்களுக்காகப் பாராட்டவும் செய்தன. ஆனால்திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதைநூலின் முதல் பதிப்பு வெளியான சில நாட்களிலேயே முற்றிலும் விற்றுத் தீர்ந்து ஆன்மிக இலக்கியத்தில் சாதனை படைத்தது.

ஒரு வக்கீல் கர்னல் ஓல்காட்டிடம்உங்கள் நூலால் எனக்கு என் வேலை எல்லாம் பாழாகி விட்டதுஎன்று புகார் செய்தார். ”எப்படிஎன்று கேட்ட போதுஉங்கள் நூலைப் படிக்க ஆரம்பித்த பின் முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. அதனால் என் வழக்குகளைச் சரியாக என்னால் கவனிக்க முடியவில்லை. அதனால் வழக்குகள் தேங்கி விட்டனஎன்று சொன்னார்.

எதிர்மறை விமர்சனங்களையும் மீறி நூல்கள் உடனடியாக விற்றுத் தீர்ந்ததால் கவரப்பட்ட ஒரு பதிப்பாளர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஐசிஸ் தேவதை வெளிப்படுத்திய ஆன்மிகத் தகவல்கள் குறித்து மேலும் ஒரு நூல் எழுதித் தரும்படியும் அதற்கு 5000 அமெரிக்க டாலர்கள் தருவதாகவும் சொன்னார். அவர் நூறே நூல்கள் பதிப்பித்து ஒவ்வொரு நூலுக்கும் நூறு டாலர்கள் விலை வைத்து இரட்டிப்பாகச் சம்பாதித்து விட முடியும் என்று நம்புவதாகவும் சொன்னார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் 5000 அமெரிக்க டாலர்கள் என்பது மிகப்பெரிய தொகை என்ற போதும், உண்மையாகவே பணத்தேவை அதிகமாக அவருக்கு இருந்த போதும் கூட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அப்படி ஒரு நூல் எழுதுவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. “அந்த நூலை நான் தெய்வீகக் கட்டளையால் தான் எழுதினேன். இன்னொரு கட்டளை வராமல் நான் நூலை எழுத மாட்டேன்என்று மறுத்து விட்டார்.

ஆனால் அடுத்தபடியாக ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சில ஆன்மிகக் கட்டுரைகள் எழுதினார். அந்தக் கட்டுரைகள் இந்தியாவின் வேதாந்தக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன. மகாத்மாக்கள் எத்தனையோ அற்புதங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மூலம் செய்து காட்டிய போதும் அவராகவே உணர்ந்து இயல்பாக அடைய வேண்டிய மாற்றங்களுக்கும், தீர்க்க வேண்டிய கர்ம வினைகளுக்கும் தீர்வுகளை வெளியே இருந்து இயற்கைக்கு மாறாக அவர் வாழ்க்கையில்  திணிக்கவில்லை என்பதை நாம் பார்த்தோம். அதற்குக் காரணம் நம் பாரதத்தின் இந்த ஆன்மிகத் தத்துவங்களை ஒட்டியே இருந்தது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஞானத்திற்கான மார்க்கத்தை முன்பே ஞானம் பெற்றவர்கள் காட்டலாமே ஒழிய ஒருவரை இருக்கும் நிலையில் இருந்துத் தூக்கிக் கொண்டு போய் யாரையும் இலக்கில் சேர்த்து விட முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துப் பயணித்து உணர்ந்து தெளிந்து அடைய வேண்டிய மெய்ஞானத்திற்கு குறுக்கு வழி என்பது கிடையாது. குறுக்கு வழி ஒன்று இருக்குமானால் பெற்ற ஞானம் குறைபாடுடையதாகவே இருக்கும். பரிபூரணத்துவம் என்பது தனிமனிதப் புரிதலாலும், முயற்சியாலுமே பெற வேண்டியது என்பதில் நம் ஞானிகளுக்கு இருவிதமான கருத்துகள் கிடையாது.

பெரும்பாலான சமயங்களில் ஒரு மனிதனின் ஆன்மிகப் பயணம் ஒரு வாழ்நாளில் பூரணமடைந்து விடுவதில்லை. மனிதன் தன் சஞ்சல மனதை வைத்துக் கொண்டு செய்யும் மெய்ஞானம் அடைய இந்தப் பிறவியில் எடுக்கும் முயற்சிகளில் சறுக்கி விடுவதும், பாதியில் நின்று விடுவதும் தான் பெரும்பாலும் நடக்கிறது. அப்படியானால் அந்த மனிதனின் கதி என்ன, இப்பிறவியில் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீண் தானா, என்ற சந்தேகம் அர்ஜுனனிற்கு நியாயமாக வர பகவத் கீதையில் ஆறாவது அத்தியாயமான தியான யோகத்தில் அவன் பகவானிடம் கேட்கிறான்.

கிருஷ்ணா! நம்பிக்கை உள்ளவன் யோகத்தில் நிலை பெறாமல் அலையும் மனம் காரணமாக முயற்சிக் குறைவினால் யோகத்தில் பூரண நிலையை அடையாவிட்டால் அவன் கதி என்ன?"

அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகப் பதில் சொல்கிறார்.

““பார்த்தா! இந்த உலகத்திலோ, பரலோகத்திலோ அவனுக்கு அழிவே கிடையாது. நல்லதைச் செய்பவன் எவனும் துர்க்கதி அடைய மாட்டான். அப்படி யோகத்திலிருந்து நழுவியவன், புண்ணியம் செய்தவர்கள் அடையக் கூடிய லோகங்களை எய்தி நீண்ட காலம் வாழ்ந்து பின் மெய்ஞானம் பெறத் தகுந்த சூழலில் மறுபடி பிறப்பான்.”

அந்தப் பிறவியில் அதற்கு முந்திய பிறவியில் இருந்த புத்தியைப் பெறுவான். பிறகு யோக சித்திக்காக மறுபடி முயற்சி செய்வான். அவன் முற்பிறவிகளின் பயிற்சிகளின் தொடர்ச்சியாக தன்னை அறியாமலே யோகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறான். மாசுக்கள் நீங்கப்பெற்று அவன் உறுதியாக முயன்றால், பல பிறவிகளின் முயற்சிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்பிறவியில் அடைகிறான்.

ஆன்மிகப் பயணத்தில் ஒரு மனிதன் எடுக்கும் ஆத்மார்த்தமான முயற்சிகளின் முடிவில் ஒரு மனிதன் பாதி வரை தான் செல்ல முடிந்தாலும் அடுத்த பிறவியில் அவன் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து மீதி தூரத்தைக் கடக்க முடியும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது மறுபிறவித் தத்துவத்தின் ஆன்மிக சாராம்சமாக இருக்கிறது.

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் இந்த மறுபிறவி உள்ளிட்ட வேதாந்தத் தத்துவங்களால் மிகவும் கவரப்பட்டிருந்தார்கள். மனிதனான ஜீவாத்மா மெய்ஞானம் பெற்றுப் பரம்பொருளான பரமாத்மாவை அடைய தனக்குக் கிடைக்கும் மனிதப்பிறவியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை அந்தக் கட்டுரைகளில் வலிமையாக இடம் பெற்றது. ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் ஆன்மிக எழுத்துப் பணிக்கு மகாத்மாக்கள் செய்த உதவி தகுதி வாய்ந்த ஜீவாத்மாக்களுக்கு வழிகாட்டுவதற்காக இருந்தது.

ஒரு உடலுக்குள் மகாத்மாக்கள் இரண்டு விதமாக அதிகாரம் செலுத்த முடியும் என்பதை கர்னல் ஓல்காட் தன் அனுபவத்தின் மூலமாகவே கண்டார். ஒன்று முழுமையாக ஒரு உடலில் புகுந்து ஆட்கொள்ளுதல். இன்னொன்று பகுதியாக ஆட்கொள்ளுதல். முதல் வகையில் அந்த உடலின் உரிமையாளர் என்ன நடக்கிறது என்ற முழு நினைவை இழந்து விடுவார். ஆட்கொண்ட மகாத்மா தன் வேலையை முடித்துக் கொண்டு விடைபெற்ற பின்பு தான் உடலின் உரிமையாளர் நினைவு மறுபடி திரும்பும். அந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தது எதுவும் நினைவில் இருக்காது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதைநூல் எழுதும் போது சில முழு அத்தியாயங்கள் மகாத்மாக்களால் எழுதப்பட்டிருந்ததை கர்னல் ஓல்காட் உணர்ந்ததை உதாரணம் சொல்லலாம்.

இரண்டாவது வகையில் உடலின் உரிமையாளர் முழு நினைவோடு தான் இருப்பார். மகாத்மாக்கள் அவருக்குத் தேவையான நேரத்தில் அவர்கள் அறிவிலும், எண்ணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி தேவைப்பட்ட உதவிகளைச் செய்து தருவார்கள். உடலின் உரிமையாளரால் புரிந்து கொள்ள முடியாத புரிய வைத்தும், தெரிந்திராத விஷயங்களைத் தெரிய வைத்தும், உதவுவதும் இந்த வகையைச் சேரும். அந்த நூல் எழுதப்பட்ட தேவைப்பட்ட நூல்களை வரவழைத்துக் கொடுத்தது போன்ற உதவிகளை உதாரணமாகச் சொல்லலாம். சில நேரங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கட்டுரைகள் எழுதும் போது தேவைப்பட்ட புதிய தகவல்கள் மகாத்மாக்கள் யாராவது சொல்லச் சொல்ல எழுதுவதையும் கர்னல் ஓல்காட் கண்டிருக்கிறார். ஒரு முறை தலைப்பாகை அணிந்த ஒரு மகாத்மாவின் நெஞ்சுக்கு மேற்பகுதி உடல் மட்டும் நிழலாகத் தோன்றி மறைந்ததையும் அருவ நிலையில் அவர் சொன்னதைக் கேட்டபடி சில பக்கங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதிக்கொண்டே போனதையும் கர்னல் ஓல்காட் வியப்புடன் பார்த்திருக்கிறார்.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி தினத்தந்தி: 11.6.2019

இந்தத் தொடர் நூலாக வெளிவந்து விட்டது.




1 comment:

  1. அருமை... தொடர் சுவாரஸ்யமாக செல்கிறது...

    ReplyDelete