சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 4, 2019

இல்லுமினாட்டி 3

ந்தப் போலீஸ்காரர்களுக்கு கிதார் இசை கேட்ட விஷயம் எக்ஸ் சம்பந்தப்பட்டது போலத் தோன்றவில்லை. ஆனாலும் விடை தெரியாத கேள்விகளை விடை தெரியாததாகவே விட்டு விட விரும்பாமல் அங்கிருந்த சில மருத்துவர்கள், நர்ஸ்கள், நோயாளிகளை எல்லாம் அது குறித்துக் கேட்டார்கள். அவர்கள் விசாரித்த எல்லோரும் அந்த இசையைக் கேட்டிருந்தார்கள். அந்த இசை மருத்துவமனைக்குள் இருந்து கேட்பது போலவே உணர்ந்தும் இருந்தார்கள். ஆனால் யாரும் கிதாரை வாசித்ததாக ஒத்துக் கொள்ளவும் இல்லை, எங்கிருந்து கேட்டது என்பதைக் கண்டுபிடித்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் எல்லோரும் எங்கிருந்து அந்த இசை கேட்கிறது என்று யோசித்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

மூன்றாம் மாடியில் இருந்த ஒரு நோயாளி மாரடைப்பு பிரச்னைக்காக அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். அவர் இசைப்பிரியர். பத்திரிக்கைகளில் இசைக்கட்டுரைகள் நிறைய எழுதியிருப்பவர். மற்றவர்களிடம் கேட்ட கேள்வியைப் போலீஸ்காரர்கள் அவரிடம் கேட்ட போது  அவர் சொன்னார். “நானும் அந்த இசையைக் கேட்டேன். அதை யார் வாசித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அந்த இசை என்ன இசை என்று எனக்குத் தெரியும்”

அது என்ன இசை என்று தெரிந்து கொள்வதில் போலீஸ்காரர்களுக்கு ஆர்வம் இருக்கவில்லை. ஆனாலும் “என்ன இசை அது?” என்று கேட்டு வைத்தார்கள்.

“அது வூடுவின் திகில் நடனத்தில் இசைக்கும் இசை. வூடூ சடங்குகளில் இறந்தவர்களின் ஆவியை வரவழைக்கும் போது அந்த இசையைத் தான் எழுப்புவார்கள்….”

அந்த இசை அமானுஷ்யமாய்த் தனக்குத் தோன்றியதில் வியப்பில்லை என்று தலைமை மருத்துவர் நினைத்தார். அந்த இசைப்பிரியர் தொடர்ந்து சொன்னார். “ …. ஆனால் அந்தச் சடங்குகளில் அதிகமாய் மத்தளங்களைத் தான் பயன்படுத்துவார்கள். மற்ற இசைக்கருவிகள் அந்த மத்தளங்களோடு சேர்ந்து தான் இசைக்கப்படும். ஆனால் நேற்று அதே இசை கிதாரில் இசைக்கப்பட்டதைக் கேட்டேன்”

ஒரு போலீஸ்காரர் கேட்டார். ”உங்களுக்கு எப்படி இந்த இசை நுணுக்கங்கள் எல்லாம் தெரியும்?”

அப்போது தான் தன் இசை ஈடுபாட்டையும், அது குறித்த கட்டுரைகளைப் பிரபல பத்திரிக்கைகளில் எழுதியிருப்பதையும் அவர் தெரிவித்தார். ”அது மட்டுமல்ல. ஹைத்தியில் நான் வூடூ சடங்கு ஒன்றை நேரிலேயே பார்த்து இந்த இசையைக் கேட்டுமிருக்கிறேன்…..”

போலீஸ்காரர்கள் அதற்குப்பின் மருத்துவமனையில் அதிக நேரம் இருக்கவில்லை. கிளம்புவதற்கு முன் ஒரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். “இன்றைய பத்திரிக்கைகளிலும் எக்ஸின் படத்தோடு செய்தி வரும். அதைப் பார்த்து விட்டு யாராவது போன் செய்கிறார்களா என்று பார்ப்போம். நாங்கள் டிவியிலும் இன்னொரு முறை அந்த ஆளைப் பற்றி அறிவிப்பு வெளியிட ஏற்பாடு செய்கிறோம்…..”

காலை ஒன்பதரை மணிக்கு அவர்கள் எதிர்பார்த்த போன்கால் வந்தது. கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசினாள். “இன்று பத்திரிக்கையில் என் முன்னாள் கணவரின் ஃபோட்டோ பார்த்தேன். அவர் உடல்நிலை மோசமாகி உங்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கும் செய்தியைப் பார்த்தேன்….. அவர் செத்து விட்டாரா என்ன?”

டெலிபோன் ஆபரேட்டர் சொன்னாள். “இல்லை மேடம். அவர் இறந்து விடவில்லை…..”

“அவரிடம் நிறைய பணம் இருந்ததே அதை அவருடன் வைத்திருக்கிறாரா இல்லை தொலைத்து விட்டாரா?”

“பணம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை மேடம்…. நீங்கள் உங்கள் பெயர் விலாசம் சொன்னால் குறித்துக் கொள்கிறோம்….”

பணம் இல்லை என்றவுடன் எல்லா அக்கறையையும் அந்தப் பெண் இழந்து விட்டாள் போலத் தெரிந்தது. அவள் கறாராகச் சொன்னாள். “அந்த ஆளுடன் வாழ்ந்த போது நரகத்தைத் தான் அனுபவித்தேன். விவாகரத்து வாங்கிய பின் தான் கொஞ்சமாவது நிம்மதியாக நானும் என் மகளும் இருக்கிறோம். அதனால் எதையும் நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் இப்போது எனக்கும் அந்த ஆளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை….”

அவள் போனை வைத்து விட்டாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட தலைமை மருத்துவர் ஒரு போலீஸ்காரருக்குப் போன் செய்து இதைச் சொன்னார்.

போலீஸ்காரர் சொன்னார். “அந்த ஆளின் பெயர் என்ன, விலாசம் என்ன என்று கண்டுபிடிப்பதற்கு இனி கஷ்டமில்லை. வந்த போன்கால் நம்பரைக் குறித்துக் கொண்டால் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு அதெல்லாம் தெரிந்து கொண்டு நம் ரெக்கார்டுகளில் குறித்துக் கொள்ளலாம். அதற்கு மேல் செய்ய இதில் ஒன்றுமில்லை. ஏனென்றால் குற்றம் எதுவும் நடக்கவில்லை. ஆளும் சாகவில்லை…..”

எத்தனையோ வழக்குகளைப் பார்க்க வேண்டியிருந்த அந்தப் போலீஸ்காரர் அப்படிச் சொன்னது தலைமை மருத்துவருக்குத் தப்பாகத் தோன்றவில்லை. ஆனால் அவரையும் அப்படிப் பெயர் விலாசத்தோடு திருப்தியடைய விடாமல் தடுத்தது எக்ஸின் ஸ்கேன் ரிப்போர்ட்கள். அவனைச் சேர்த்த போது எடுத்ததும், பின்பு எடுத்ததும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்ததை அவரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

முக்கியமாய் எக்ஸின் மூளை ஸ்கேன் ரிப்போர்ட்கள் முன்னுக்குப் பின் முரணாக அவரை அலைக்கழித்தது. அவருக்கு அந்த நகரிலேயே வசித்து வந்த மூளை விஞ்ஞானியான ஜான் ஸ்மித்திடம் அந்த அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களின் அதிசயத்தைக் காட்டி அவர் கருத்தைக் கேட்கத் தோன்றியது. அவர் ஜான் ஸ்மித்தைச் சில முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால் ஜான் ஸ்மித் அடிக்கடி உலகநாடுகளுக்குப் பயணம் செய்தபடி இருப்பவர். அவர் இப்போது இங்கு இருக்கிறாரோ இல்லையோ, அவருடன் விரிவாகப் பேச முடியுமோ முடியாதோ…

அவர் ஜான் ஸ்மித்துக்குப் போன் செய்த போது நல்ல வேளையாக அவர் உள்ளூரிலேயே இருந்தார். தலைமை மருத்துவர் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னவுடன் ஸ்கேன் ரிப்போர்ட்களின் வித்தியாசத்தை அவரும் அதிசயம் என்று ஒப்புக் கொண்டார்.  அவர் சொன்னார். “சில போதை மருந்துகள் மனித மூளையில் விதவிதமான வித்தியாசமான செயல்பாடுகளை ஏற்படுத்த முடிந்தவை. அதை எத்தனையோ ஆராய்ச்சிகள் பதிவு செய்தும் இருக்கின்றன. ஆனால் போதை அதிகமாகி மரணம் வரை போன பிறகு எந்தச் சிகிச்சையும் இல்லாமல் இப்படிக் குணமாகி மூளையில் இத்தனை வேகமாகச் செயல்பாடுகள் அதிகரிப்பது இது வரை நடக்காத ஒன்று. இது எப்போது நடந்தது என்று சொன்னீர்கள்?”

“நேற்று தான். அவன் காலையில் சேர்க்கப்பட்டான். மாலையில் சாக ஆரம்பித்தான். ஆனால் திடீரென்று பிழைத்துக் கொண்டான்….”

“நேற்று மாலையிலா… அப்போது சுமார் எத்தனை மணி இருக்கும்?”

ஜான் ஸ்மித் ஸ்கேன் ரிப்போர்ட்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுத்து அவன் பிழைக்க ஆரம்பித்த நேரத்தைக் கேட்டது அவருக்கு விசித்திரமாய் இருந்தது. அதை வெளிக்காட்டாமல் சொன்னார். “மிகச் சரியாகத் தெரியவில்லை. சுமார் ஆறு மணி இருக்கும்”

ஜான் ஸ்மித் மௌனமாக யோசிப்பது போல் தெரிந்தது. அவரிடமிருந்து உடனடியாகப் பதில் எதுவும் வரவில்லை. பின் மெல்லச் சொன்னார். “ஆச்சரியம் தான்…..”

அந்த நேரத்தை ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்க வழியில்லை. அந்த நேரத்தில் என்ன இருக்கிறது? அவர் ஸ்கேன் ரிப்போர்ட்களைத் தான் ஆச்சரியம் என்று குறிப்பிடுகிறார் என்று தலைமை மருத்துவர் நினைத்தார். “ஆமாம். அது மட்டுமல்ல. அவனுக்குக் காய்ச்சல் அபாயக்கட்டமான 106, 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டி விட்டும் கூட உடல்நிலை பாதிக்கப்பட்டு விடவில்லை. அதுவும் ஆச்சரியமே அல்லவா?”

ஜான் ஸ்மித் திகைப்போடு கேட்டார். “107 டிகிரி வரை போனதா?”

”ஆமாம். நானும் அதைப் பார்த்து அதிர்ந்து தான் போனேன். நேற்று என்னவோ எல்லாமே விசித்திரமாகவும் அமானுஷ்யமாகவும் நடந்தது. அவன் விஷயத்தோடு சேர்ந்து இன்னொன்றும் நடந்தது. கிதார் இசையை யாரோ வாசித்தார்கள். ஆஸ்பத்திரிக்குள் இருந்தே வாசிப்பது போல இருந்தது. ஆனால் யாரும் வாசித்ததைப் பார்க்க முடியவில்லை. எங்கள் மருத்துவமனையில் இருந்த இசைஞானம் உள்ள ஒரு நோயாளி சொல்கிறார் அந்தக் கிதார் இசை வூடூ திகில் நடனத்தில் ஆவிகளை வரவழைக்கையில் வாசிக்கும் இசை மாதிரியாம். அவர் ஹைத்தியில் நேரடியாகவே அந்த இசையைக் கேட்டிருக்கிறாராம்….”

ஜான் ஸ்மித்திடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. போன் இணைப்பில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் வர தலைமை மருத்துவர் சந்தேகத்துடன் ”ஹலோ….” என்றார்.

ஜான் ஸ்மித் சொன்னார். “நான் எதற்கும் வந்து அந்த ரிப்போர்ட்களைப் பார்க்கிறேனே. நீங்கள் என்ன தான் விளக்கினாலும் நேரில் பார்த்தால் ஒரு முடிவுக்கு வருவது சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது போன்ற அதிசயங்கள் அடிக்கடிப் பார்க்கக் கிடைப்பதில்லை…”

“நல்லது. எப்போது வருகிறீர்கள்?”

“இப்போதே ஓய்வாகத் தான் இருக்கிறேன். இப்போதே வரட்டுமா?”

அவர் உடனடியாக வருவதற்கு அவர் சொன்னதைத் தவிர வேறு பிரத்தியேகக் காரணங்கள் இருப்பதாகத் தலைமை மருத்துவருக்குத் தோன்றவில்லை… அவர் ஜான் ஸ்மித் வர ஆவலுடன் காத்திருந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

10 comments:

  1. Reading this novel I feel like watching thriller English movie. Fantastic.

    ReplyDelete
  2. சுஜாதாJuly 4, 2019 at 6:36 PM

    பொதுவா த்ரில்லர் நாவல்ல க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க தான் செம டென்ஷனா இருக்கும். இதில் ஆரம்பத்துலயே இப்படி டென்ஷன் ஏத்தறீங்களே சார். வியாழன் வரைக்கும் எப்படி தாங்கறது?

    ReplyDelete
  3. Is John Smith part of illuminati

    ReplyDelete
  4. அவன் தான் அமானுஷ்ய மனிதனா?
    அடுத்த வியாழன் வரை காத்திருக்கணுமா ?

    ReplyDelete
  5. அப்போ‌ விஸ்வத்தோட‌ ஆவிதான் Mr.X உடற்குள்ள போயிருக்குமோ??

    ReplyDelete
  6. John smith illuminati
    MrX viswam’s soul
    But who called viswam through voodoo song????

    ReplyDelete
  7. அப்ப விஸ்வம் திரும்ப வந்துட்டான்.... அப்ப ஜான் ஸ்மித் இல்லுமினாட்டியாக இருக்க வேண்டும்...

    வூடு தொடரை படிக்கும் போதே திகிலா இருக்கும்... இப்ப இந்த நாவலிலும் திகில அதிகப்படுத்த வந்துடுச்சா.‌‌..?

    ReplyDelete
  8. He s gypsy man who guided vishwam.i thought this by reading u r all episode by past 5 years sir..☺

    ReplyDelete
  9. namma ninakira mathuri ellam story kondu poida en.ganeshen sir story ippdi yarum thedi padikamatanga

    sir waiting for u r suspense

    ReplyDelete