சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 8, 2019

சத்ரபதி 80


சிவாஜி நள்ளிரவு வரை அடிக்கடி பன்ஹாலா கோட்டையின் உள்ளிருந்து வெளியே நிலவும் சூழலைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பீஜாப்பூர் படையினர் இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் இரவு வரை அளவளாவிக் கொண்டிருந்தார்கள். நாளை பேச்சு வார்த்தை ஏதாவது ஒருவிதத்தில் முடிவடையும் என்ற நம்பிக்கையில் போர் மனநிலை போய் தங்கள் வீடு போய் சேரும் மனநிலை அவர்களுக்குள் உருவாகி இருந்தது. நள்ளிரவு நெருங்க ஆரம்பித்த போது யாருமே விழிப்பான காவலில் இருக்கவில்லை. அனைவரும் உறங்கி விட்டிருந்தார்கள்.

சிவாஜி பாஜி தேஷ்பாண்டேக்குச் சைகை காண்பித்தான். அடுத்த அரை மணி நேரத்தில் சிவாஜி, பாஜி தேஷ்பாண்டே, அவர்களுடன் சில வீரர்கள் பன்ஹாலா கோட்டையின் வட கோடிச் சுவரில் இருந்து கயிற்றைக் கட்டி சத்தமில்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தார்கள். கோட்டைக் கதவு திறக்கப்பட்டால் கண்டிப்பாகச் சத்தம் எழாமல் இருக்க வழியில்லை. அந்தச் சத்தமே பீஜாப்பூர் வீரர்களை எழுப்பி உஷார்ப்படுத்தி விடும். அதை அவர்கள் விரும்பாமல் தான் இப்படி கோட்டையில் இருந்து வெளிப்பட்டார்கள். சத்தமில்லாமல் மெல்ல பீஜாப்பூர் வீரர்களைக் கடந்தார்கள். பன்ஹாலா கோட்டையிலிருந்து விஷால்கட் கோட்டைக்கு குறுகிய மலைத்தடம் ஒன்று இருந்தது. அந்தப் பாதையில் வேகமாகப் பயணிக்க ஆரம்பித்தார்கள்.

ஃபசல்கான் நள்ளிரவில் எழுந்து தன் கூடாரத்திலிருந்து வெளியே வந்த போது சிவாஜியின் கடைசி வீரன் ஒரு கணம் அவன் கண்பார்வையில் பட்டு மறைந்தான். தூக்கக் கலக்கத்தில் யாரோ அந்த மலைப்பாதையில் சென்று மறைந்தது போலத் தோன்றியது வெறும் தோணலா இல்லை நிஜமா என்று ஃபசல்கானால் உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை. முன்னே நடந்தவன் கோட்டை வாசல் வரை வந்து பார்த்தான். யாருமே காவலில் இல்லை. வீரர்கள் எல்லாரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். திகைத்தவனாக கோட்டையைச் சுற்றி வந்த போது தான் கோட்டைக்குள் இருந்த வீரர்கள் அந்தக் கயிறை அவசர அவசரமாக மேலே இழுத்துக் கொண்டிருந்தார்கள்.   கயிற்றின் நுனி மேல் நோக்கி நகர்வதை நிலவொளியில் பார்த்த ஃபசல்கான் கூக்குரலிட்டான். சிதி ஜோஹரும், பீஜாப்பூர் படையினரும் விழிப்படைந்து விரைந்து வெளியே கூடினார்கள்.

ஃபசல்கான் தான் கண்டதைச் சொன்ன போது சிதி ஜோஹர் அதிர்ந்தான். அவன் உள்ளுணர்வு சிவாஜி அங்கிருந்து தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்று சொன்னது. அவன் உடனே ஃபசல்கானை அந்த மலைப்பாதை வழியாக, தப்பித்துச் சென்றவர்களைப் பின் தொடரச் சொன்னான். ஃபசல்கான் ஆவேசத்துடன் தன் படைவீரர்கள் பலருடன் அந்த மலைப்பாதையில் வேகமாகச் சென்றான்.

அந்தக்கரடு முரடான மலைப்பாதையில் பயணம் சுலபமாக இல்லை. எனினும் சிவாஜியைத் தப்ப விடக்கூடாது என்கிற வெறியால் ஃபசல்கான் வேகமாகப் பயணித்தான். அவன் வீரர்களும் சோர்வில்லாமல் வேகமாகச் சென்றார்கள். அவர்கள் கண்களில் சிவாஜியும் அவன் ஆட்களும் தென்பட்ட போது அதிகாலை ஆகி விட்டிருந்தது. விஷால்கட்டிற்கு இன்னும் ஆறு மைல்கள் தொலைவில் இருக்கும் போதே அவர்களைக் கண்டு விட்ட ஃபசல்கான் வரும் போது எறிகுண்டுகளைக் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தாமதமாக உணர்ந்தான். ஆனாலும் சிவாஜியைத் தப்பவிடப்போவதில்லை என்று உறுதியுடன் படை வீரர்களுடன் அதி வேகமாக ஓடி அவர்களை நெருங்க ஆரம்பித்து விட்டான்.

முதலில் அவர்களைக் கவனித்தது பாஜி தேஷ்பாண்டே தான். ஃபசல்கானுடன் வரும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் கண்ட அவன் அவர்களைச் சமாளித்து சிவாஜி முன்னேறுவது சுலபமல்ல என்பதை உணர்ந்தான்.

“மன்னா. ஃபசல்கான் வீரர்களுடன் பின் தொடர்ந்து வருகிறான். நீங்கள் சில வீரர்களுடன் தப்பித்துச் செல்லுங்கள். நாங்கள் அவர்களைச் சமாளிக்கிறோம்” என்று அவன் சிவாஜியை அழைத்துச் சொன்னான்.

தொலைவில் ஃபசல்கானையும் வீரர்களையும் பார்த்த சிவாஜி அவர்களது எண்ணிக்கைக்கு மொத்தமாக இவர்கள் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு தான் இருக்கிறது என்பதைக் கவனித்தான். அதனால் பாஜி தேஷ்பாண்டே சொன்னது போல் தப்பித்துச் செல்ல முனையாமல் “சேர்ந்தே சமாளிக்கலாம் தேஷ்பாண்டே” என்றான்.

பாஜி தேஷ்பாண்டே மறுத்தான். “மன்னா நீங்கள் இங்கிருந்து போராடுவது ஆபத்து. தயவு செய்து நீங்கள் வேகமாக விஷால்கட் போய்ச் சேருங்கள். நாங்கள் சமாளிக்கிறோம்….”

சிவாஜி அப்போதும் அங்கிருந்து செல்லவில்லை. ”ஆபத்தை அனைவரும் சேர்ந்தே சந்திப்போம் தேஷ்பாண்டே. உன்னை மட்டும் ஆபத்தில் விட்டு விட்டுப் போகும் அளவு உன் மன்னன் அற்பனல்ல” என்று சொன்னான்.

பாஜி தேஷ்பாண்டே சிவாஜியிடம் கெஞ்சிய குரலில் சொன்னான். “மன்னா. நான் உங்களுக்காகச் சொல்லவில்லை. நம் அனைவரின் கனவான சுயராஜ்ஜியத்துக்காகச் சொல்கிறேன். உங்கள் பாதுகாவலில் நம் சுயராஜ்ஜியத்தின் எதிர்காலமே இருக்கிறது. உங்களுக்கு எதாவது நேர்ந்தால் என்னால் என்னையே மன்னிக்க முடியாது. போய் விடுங்கள்…”

சிவாஜி அப்போதும் நகர மறுத்தான். பாஜி தேஷ் பாண்டே தன் வீரர்களிடம் சொன்னான். “பாதி பேர் என்னுடன் வாருங்கள். மீதி பேர் மன்னருடன் செல்லுங்கள். அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள். அங்கே சென்று சேர்ந்தவுடன் பீரங்கியால் வெடிச்சத்தம் ஏற்படுத்துங்கள். அதன் பின் நாங்களும் தப்பித்து வரப் பார்க்கிறோம். இப்போது செல்லுங்கள் மன்னா. நம் சுயராஜ்ஜியக் கனவின் மீது ஆணை! சென்று விடுங்கள்” என்று சொல்லியபடியே திரும்பி ஃபசல்கானை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனுடன் பாதி வீரர்கள் ஓட சிவாஜி வேறு வழியில்லாமல் மற்ற வீரர்களுடன் விஷால்கட்டை நோக்கி விரைந்தான். ஆனால் அவன் மனம் மட்டும் பின்னாலேயே தங்கி இருந்தது.

சிவாஜியைத் தவற விட்டு விடுவோமோ என்ற பயத்தில் ஃபசல்கான் ஆக்ரோஷமாக பாஜி தேஷ்பாண்டே மற்றும் அவன் வீரர்களுடன் போராடி சீக்கிரமாகவே அவர்களை நிராயுதபாணியாக்கினான். ஆனாலும் பாஜி தேஷ்பாண்டேயும் அவன் வீரர்களும் ஃபசல்கானை முன்னேற விடவில்லை. அங்கு கையில் கிடைத்த கட்டைகளையும், கற்களையும் வீசிப் போராடினார்கள்.

ஃபசல்கான் பொறுமையிழந்தான். ”விரைவாக இவர்களைக் கொன்று குவியுங்கள். நம் இலக்கு இவர்களல்ல. சிவாஜி தான். அவன் கேல்னா கோட்டையைச் சென்றடைவதற்கு முன் அவனைப் பிடிக்க வேண்டும்” என்று கத்தினான்.

ஃபசல்கானின் வீரர்கள் வாளோடு முன்னேறி மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். முடிந்த வரை தாக்குப் பிடித்த சிவாஜியின் வீரர்கள் ஒவ்வொருவராக மடிந்து விழுந்தார்கள். கடைசியில் படுகாயங்களுடன் பாஜி தேஷ்பாண்டேயும் அவனுடைய இரு வீரர்களுமே மிஞ்சியிருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து வழி மறித்து நின்று பெரிய கட்டை ஒன்றைச் சுழற்றி பாஜி தேஷ்பாண்டே போராடினான். ஆனால் ஃபசல்கானின் வீரர்கள் அனைவரும் அவனையே குறி வைத்துத் தாக்கியதில் அவனால் நிறைய நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெட்டப்பட்டு கீழே விழுந்த பாஜி தேஷ்பாண்டே இறப்பதற்கு முன் கடைசியாகக் கேட்ட சத்தம் விஷால்கட்டில் இருந்து வெடித்த பீரங்கிச் சத்தமாக இருந்தது. சிவாஜி விஷால்கட் சென்று சேர்ந்து விட்டான். பாஜி தேஷ்பாண்டே முகத்தில் விரிந்த புன்னகை நிரந்தரமாகத் தங்கி விட்டது.

ஃபசல்கான் தன் வாழ்க்கையில் படுகாயப்பட்டு இறக்கையிலும் புன்னகையுடன் இறக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. தூரத்தில் கேட்ட பீரங்கிச் சத்தம் சிவாஜி கேல்னா கோட்டைக்குச் சென்று சேர்ந்து விட்டதன் அறிகுறியே என்பதை பாஜி தேஷ்பாண்டேயின் கடைசிப் புன்னகையை வைத்தே அனுமானித்தான். ஃபசல்கானின் முகம் சுருங்கிப் போனது. 

தன் இன்னொரு கோட்டையைச் சென்று சேர்ந்து விட்ட சிவாஜி பலமடங்கு ஆபத்தானவன் என்பதை உணர்ந்த ஃபசல்கான் முன்னேறி செல்ல முயன்ற தன் வீரர்களைத் தடுத்து நிறுத்தினான். “இனி சிவாஜியை ஒன்றும் செய்ய முடியாது. வாருங்கள் திரும்புவோம்”

ஆறாத மனத்துடனும், கடுத்த முகத்துடனும் ஃபசல்கான் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பிக்க அவன் வீரர்களும் பின் தொடர்ந்தார்கள். இன்னும் உயிரோடிருந்த சிவாஜியின் வீரர்கள் பாஜி தேஷ்பாண்டேயின் வீர உடலை எடுத்துத் தோளில் சுமந்து கொண்டு விஷால்கட் கோட்டையை நோக்கி சோகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.



(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

  1. Very touching episode. This country owes its prestige to the heroeslike Baji Despande.

    ReplyDelete
  2. சுஜாதாJuly 8, 2019 at 5:21 PM

    சிவாஜி எப்படி வீர்ர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறான் என்பதை உணர முடிந்தது. தேஷ்பாண்டேயின் தியாகம் என் மனம் நெகிழச் செய்து விட்டது.

    ReplyDelete
  3. கார்த்திக்ராஜாJuly 8, 2019 at 9:33 PM

    பாஜி தேஷ்பாண்டே போன்ற வீரர்களாளேயே பாரதம் இன்றும் செழிப்புடன் உள்ளது

    ReplyDelete
  4. சிவாஜி தப்பிச் செல்லும் விதம் அருமை...
    பாஜி தேஷ்பாண்டே செய்த தியாகம் நெகிழச்செய்து விட்டது...

    ReplyDelete