சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 1, 2018

இருவேறு உலகம் – 107



செந்தில்நாதன் ஹரிணி எப்படிக் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை க்ரிஷிடம் விவரித்தார். அவனுக்கும் அவர் சொன்னபடி தான் நடந்திருக்கும் என்று தோன்றியது.

“அந்த ஏரியால ஆள்நடமாட்டம் குறைவு. கடத்தின ஆள்களும் வேகமாவே கடத்திட்டு போயிருக்கணும். அவங்க ஆளே யாராவது அவளோட ஸ்கூட்டியை ஓட்டிகிட்டும் போயிருப்பாங்க. அதனால தான் யார் கவனத்துக்கும் அது வரலன்னு நினைக்கிறேன். எந்த வண்டில கடத்துனாங்க, ஆளுக எப்படி இருந்தாங்கங்கற விவரம் எதுவுமே நமக்குத் தெரியல. அது தெரிஞ்சா அத வச்சு நாம அடுத்ததா என்ன செய்யறதுங்கறத தீர்மானிக்கலாம். அதில்லாததால இனிமே நமக்கு இருக்கற ஒரே வழி கடத்தல்காரங்க உங்களைத் தொடர்பு கொள்றத வச்சு தான்….”

க்ரிஷ் மெல்லச் சொன்னான். “இன்னொரு வழி இருக்கு. ஹரிணி அங்க இருந்து ஏதாவது தகவல் அனுப்பினா அதை வெச்சு நீங்க ஏதாவது கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு”

செந்தில்நாதன் கேள்விக்குறியோடு பார்த்தார். ஹரிணியாக தகவல் அனுப்ப கடத்தல்காரர்கள் விடுவார்களா என்ன?

க்ரிஷ் தானும் அவளும் இதற்கு முன் செய்த தகவல் அனுப்பும் ஆராய்ச்சிகள் பற்றிச் சொன்னான். செந்தில்நாதனுக்குப் பிரமிப்பாக இருந்தது. எதிரியின் சக்திகளைப் பற்றி மவுண்ட் அபுவில் இருந்து இமயமலை வரை போய் அறிந்து கொண்டதெல்லாம் அவருக்கு இந்த அமானுஷ்ய சக்திகள் பற்றி ஒரு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது இவனும் அது பற்றிச் சொல்கிறான். அது ஒரு தனி உலகம் போல் இருக்கிறது. அப்படி ஒரு உலகம் இருப்பது தெரியாமலேயே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…..

க்ரிஷ் குரல் கரகரக்கச் சொன்னான். “ஹரிணியப் பொருத்த வரைக்கும் அவ தைரியமானவ. முடிஞ்ச வரைக்கும் அவ சமாளிப்பா. ஆனா அவ அம்மா ரொம்பவே உடைஞ்சு போயிருக்காங்க. நானும் அம்மாவும் இன்னிக்கு காலைல கூடப் போய் தைரியம் சொல்லிட்டு வந்தோம். ஆனா சொல்ற அளவுக்கு தைரியமா இருக்கறது சுலபம் இல்லை….. என்னால அவங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துடுச்சேன்னு எனக்கு ரொம்பவெ வருத்தமாய் இருக்கு….”

செந்தில்நாதன் புரிதலுடன் தலையசைத்தார். க்ரிஷ் காணாமல் போனதற்கு விசாரிக்க வந்த போது பத்மாவதி அழுத அழுகை அவருக்கு இன்னமும் நினைவிருக்கிறது. அவளோடு சேர்ந்து உதயும், கமலக்கண்ணனும் கூட கண்கலங்கினார்கள்…. அன்பான குடும்பத்தின் இயல்பான வெளிப்பாடு அது. ஹரிணியின் தாய் விதிவிலக்காகி விட முடியாது.

“ஹரிணி மயக்க நிலைல இல்லாம இருந்தா போதும். அவ ஏதாவது கண்டுபிடிச்சு எப்படியாவது தகவல் அனுப்புவான்னு நம்பறேன். ஆனா அவளுக்கு மயக்க மருந்து குடுத்திருந்தாலோ சித்திரவதை செஞ்சாலோ அவளால ஒன்னும் பண்ண முடியாது. நான் கடவுள் கிட்ட அப்படி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு வேண்டிகிட்டிருக்கேன்…..”

சொல்லும் போதே அவன் குரலில் எல்லையில்லாத வலி தெரிந்தது. வெளியே கட்டுப்பாட்டுடன் தெரிந்தாலும் உள்ளே இவனும் உருகிக் கொண்டு தான் இருக்கிறான் என்பதை செந்தில்நாதனுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.

“அப்படி எல்லாம் ஆகாது. உன் கிட்ட அவங்க பேசி நீ அதுக்கு என்ன சொல்றே, எப்படி நடந்துக்கறேன்னு  தெரிகிற வரைக்கும் அவங்க அவளுக்கு எந்தத் தொந்திரவும் தரமாட்டாங்கன்னு நினைக்கிறேன். அவங்க போன் செஞ்சா என்ன செய்யச் சொன்னாலும் ஒத்துக்கோ. ஒத்துக்கறதை எல்லாம் நாம் செஞ்சாகணும்னு கட்டாயம் இல்லை. அதுக்குள்ள அவ இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டா நல்லது.  ஏதாவது தகவல் கிடைச்சா உடனே எனக்குத் தெரிவி”.

செந்தில்நாதன் போய் விட்டார். க்ரிஷின் மனம் கதறியது. “ஹரிணி…. ஹரிணி….. நீ எங்கே இருக்கே….. ஏதாவது தகவல் அனுப்பு ஹரிணி…. ப்ளீஸ்”  க்ரிஷ் மனதை கஷ்டப்பட்டு ஒருநிலைப்படுத்தினான். மனம் எல்லாம் நிறைந்திருந்த அவள் மீது கவனத்தைக் குவித்து அவள் அனுப்பும் தகவலுக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தான்.


ரிணி தங்கியிருந்த அறையில் ஜன்னல் இல்லை. கூரைச்சுவர் பத்தடிக்கும் மேல் இருந்தது. அந்தக் கூரைச்சுவரை ஒட்டியபடி மேலே சின்னதாய் ஒரு வெண்டிலேட்டர் இருந்தது. பாத்ரூமிலும் அப்படித்தான் இருந்தது. கடத்தி வருபவர்களைத் தங்க வைக்கவே கட்டியது போல் இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள். அறையில் ஒரு இரும்புக்கட்டில், தலையணை, போர்வை இருந்தது. நாற்காலி கூட இல்லை. ஒருபக்கச் சுவற்றில் ஒரு அலமாரி இருந்தது. அதில் சில ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. அலமாரிக்கு மேலே நல்ல உயரத்தில் ஒரு சிசிடிவி கேமரா….

எந்த இடத்தில் இருக்கிறோம் என்று அவளால் யூகிக்க முடியவில்லை. அதைத் தெரிந்து கொண்டு க்ரிஷுக்கு அத்தகவலை அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தாள். கண்டிப்பாக அவன் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பான். துடித்துப் போய் விட்டான் என்று எக்ஸ் சொன்னது நினைவுக்கு வர அவனுக்காக அவள் வருத்தப்பட்டாள். பாவம் அவனால் தான் அவளைக் கடத்தியிருக்கிறார்கள் என்று யூகித்து மனம் நொந்திருப்பான்….. பரவாயில்லைடா…. கவலைப்படாதே…. என்று மானசீகமாகச் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து அறைக்குள் மனோகர் வந்தான். உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான்.  அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை. அவளாகவும் அவனிடம் பேசப் போகவில்லை. சாப்பிட்டு விட்டு, கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தாள். வெளியே இருந்து கேட்கும் சத்தங்களைக் கவனமாகக் கேட்டாள். வாகனங்கள் செல்லும் ஓசை, ஹாரன் சத்தம் கேட்டது. ஆட்கள் நடமாட்டமோ, பேச்சு சத்தமோ கேட்கவில்லை. வாகன சத்தங்களை வைத்துப் பார்த்தால் அவள் முதல் மாடியில் இருப்பது போல் இருந்தது. கீழேயும் மேலேயும் யாரோ ஒரு நபர் நடமாடுவது போல் மட்டும் கேட்டது. வேறு எந்தச் சத்தமும் இல்லை. சாயங்காலம் மசூதியில் இருந்து தொழுகைச் சத்தம் கேட்டது. பக்கத்தில் எங்கேயோ மசூதி இருக்கிறது.

ஹரிணி அமைதியாக அமர்ந்து க்ரிஷுக்கு இந்த இரண்டு தகவல்களையும் அனுப்பத் தீர்மானித்தாள். முத்தத்திலிருந்து ஆரம்பித்தாள். முத்தம் மூலமாக அவனை நெருங்குவது சுலபமாக இருக்கிறது. இதற்கு அவன் திட்டுவான்…. இல்லையில்லை கடத்தப்பட்டிருப்பதால் திட்ட மாட்டான்….. என்று நினைத்தபடி புன்னகைத்தாள். முதல் மாடியில் இருக்கும் தகவலை எப்படி அனுப்புவது என்று அவளுக்குத் தெரியவில்லை. யோசித்து விட்டு படிகளை நினைத்தாள். படியேறுவது போல் நினைத்தாள். பின் மனதில் பெரிதாக எண் ஒன்றை நினைத்தாள். படியேறுவதும் ஒன்றும் முதல் மாடியாக அவனை நினைக்க வைக்கலாம். அடுத்ததாக மசூதியை நினைத்தாள். மனதிற்குள் முடிந்த வரை தத்ரூபமாக நினைத்தாள். பின் மசூதி மேல் ஒரு ஒலிப்பெருக்கி இருப்பது போல் நினைத்தாள். மசூதியும் ஒலிப்பெருக்கியும் சேர்த்துப் பார்க்கும் போது மசூதி தொழுகைச் சத்தம் கேட்கிற இடம் என்று அவனுக்குப் புரிய வைக்கலாம்…..

அடுத்த அறையில் இருந்து கொண்டு சிசிடிவி கேமரா ஒளிப்பதிவை மனோகர் பார்த்துக் கொண்டிருந்தான். சிலர் அடுத்தவர் முன்னால் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு தனியாக இருக்கையில் அழுது விடுவார்கள். இவள் தனியாக இருக்கையிலும் கலங்குவது போல் தெரியவில்லை. இவள் கண்களை மூடித் தியானத்தில் இருக்கிறாளா இல்லை ஏதாவது கற்பனையில் இருக்கிறாளா என்று தெரியவில்லை. புன்னகைப்பதைப் பார்த்தால் கற்பனையில் இருப்பது போலத்தான் இருக்கிறாள். இந்தப் பெண் பைத்தியம் போல் இருக்கிறதே!

க்ரிஷ் திடீரென்று தன் உதடுகளில் அவள் உதடுகளின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். க்ரிஷ் உதடுகள் புன்னகைத்தன. கண்கள் கலங்கின. ஹரிணி தொடர்பு கொள்கிறாள்….

அடுக்கடுக்காக இருப்பது போல் ஏதோ செய்தி அனுப்புகிறாள்…. ஒரு சின்னக் கோடும் தெரிகிறது. இரண்டையும் அவன் கிடைத்தபடியே ஒரு தாளில் வரைந்து கொண்டான். ஆனால் ஒன்றும் புரியவில்லை.

அடுத்ததாக தாஜ்மஹால் போல் எதோ தெரிந்தது. இதற்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா இல்லை காதலின் சின்னமாக இதை அனுப்புகிறாளா என்று தெரியவில்லை. அதோடு கூடுதலாக எதையோ அனுப்புகிறாள் என்று தெரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. அதையும் தாளில் வரைந்து கொண்டான். வரைந்து பின் அதைப் பார்க்கும் போது அது மசூதியாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. அருகே ஏதோ மசூதி இருக்கிறது என்று சொல்கிறாள் போலத் தெரிந்தது.

முதலில் அனுப்பியது அடுக்கு மாடியாகக் கூட இருக்கலாம். அந்தச் சிறு கோடு ஒன்று ஆகவும் இருக்கலாம். அப்படியானால் அடுக்குமாடியில் முதல் மாடியாக இருக்கலாமோ?

(தொடரும்)
என்.கணேசன்

(தீபாவளி போனஸாக அடுத்த அத்தியாயம் 6.11.2018 அன்றே பதிவிடப்படவுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)


7 comments:

  1. Very interesting. Thanks for Deepavali Bonus.

    ReplyDelete
  2. ஹரிணியும் கிரிஷ்-ம்.... தகவல் அனுப்பிய முறையும் ..அதனை பெற்றக் கெள்ளும் விதமும்...அருமையாக கூறீனீர்கள்... மிகவும் உபயோகமான பகுதியாக இது இருந்தது..‌

    விஸ்வம் இருந்திருந்திருந்தால்...! இதை தடுத்திருப்பான்...அல்லது இந்த தகவல் பறிமாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருப்பான்...
    இருந்தாலும் கடைசி நேரத்துல இதனை கண்டுபிடிச்சி ...எங்களை 'பரபரப்படைய செய்வான்' என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  3. நான் எதிர்பார்த்த படியே, க்ரிஷ்,ஹரிணி தொடர்பு கொள்கிறார்கள்...

    Thanks for Deepavali gift....
    Happy Deepavali G.....

    ReplyDelete
  4. Thanks you for the deepavali bonud sir

    ReplyDelete
  5. Really on Tuesday ... am waiting..

    ReplyDelete