என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 8, 2025

சாணக்கியன் 160

 


“ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போல் தோன்றுகிறது பிரபு. அதற்கான சூழலை என் உள்ளுணர்வால் உணர முடிகிறது. ஆனால் எது என்னவாக இருக்கும் என்று குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியவில்லை” என்று ஒற்றர் தலைவன் சொன்ன போது ராக்‌ஷசரால் அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. காரணம் அந்த ஒற்றர் தலைவன் மிக நீண்ட கால அனுபவம் கொண்டவன். அவனுடைய வேலையில் உள்ளுணர்வு மிக முக்கியமான அம்சம். அப்படிப்பட்ட அனுபவஸ்தனின் உள்ளுணர்வு ஒன்றைச் சொல்கிறது என்றால் அது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை.

 

“எதனால் அப்படித் தோன்றுகிறது? அப்படித் தோன்றும்படியாக இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று ராக்‌ஷசர் கேட்டார்.

 

“இளவரசர் சுதானு அரண்மனைக் காவல் வீரர்களில் பெரும்பானவர்களை மாற்றி விட்டார். புதிதாக வந்திருக்கும் எல்லாருமே அவருடைய ஆட்களாக இருக்கிறார்கள் பிரபு”

 

“புதிய பொறுப்பை எடுத்துக் கொண்டவன் தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களை நியமிப்பது இயல்பேயல்லவா?”

 

“உண்மை பிரபு. ஆனால் ஏதோ ஒரு ரகசிய சதி நடக்கவிருப்பதற்கான சூழலை அந்தப் புதியவர்கள் கண்களிலும், செயல்களிலும் என்னால் காண முடிகிறது”

 

ராக்‌ஷசர் நாளை காலையே சென்று ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். திடீரென்று இன்னொரு பாதுகாப்பு நிலவரமும் அறிந்து கொள்ள நினைத்து அவர் கேட்டார். “எதிரிகளின் முற்றுகையை நம் வீரர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்.”

 

“இதுவரை திறமையாகவே சமாளித்து வருகிறார்கள் பிரபு. இருபக்கமும் சிறுசிறு தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன என்றாலும் எதிரிகள் கை இன்னும் ஓங்கவில்லை. அவர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்த எதற்கோ காத்துக் கொண்டிருக்கிறாற் போல் இருக்கின்றது. ஆனால் அப்படி அவர்கள் தாக்கினாலும் திருப்பித் தாக்க நம்மவர்கள் தயார்நிலையில் தான் இருக்கிறார்கள்.”

 

“சந்திரகுப்தனும், விஷ்ணுகுப்தரும் வெளிப்பட்டு விட்டார்களா?

 

“இல்லை பிரபு”

 

அது தான் ராக்‌ஷசருக்கு நெருடலாக இருந்தது. ஏன் இன்னும் மறைந்தே இருக்கிறார்கள்? தீவிரமாகத் தாக்குதல் ஆரம்பிக்கும் முன் வெளிப்படலாம் என்று காத்திருக்கிறார்களோ? இல்லை வேறெதாவது உத்தேசம் இருக்குமா?

 

இன்று காலை தான் ராக்‌ஷசர் கலிங்க மன்னனிடம் தூதனுப்பியிருக்கிறார். கலிங்கத்துடன் போர் புரியும் உத்தேசம் தங்களிடம் சிறிதும் இல்லையென்றும், எதிரிகள்  தவறான தகவலைக் கசிய விட்டதால் தற்காப்பு நடவடிக்கையாகத் தான் அங்குள்ள எல்லையில் படைகளை நிறுத்தியதாகவும், இப்போது உண்மையை அறிந்து கொண்டு விட்டதால் படைகளைத் திருப்பிக் கொள்வதாகவும், அவர்களும் அப்படியே செய்து இரு தேசங்களுக்கிடையே இருக்கும் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார். கலிங்க மன்னன் அதை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கிருக்கிறது. கலிங்க எல்லையிலிருந்து அவர்கள் படை திரும்பி வரும் வரை எதிரிகளின் முற்றுகையைத் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். அது முடியும் என்றும், அதற்கு முன் எதிரிகள் தாக்கினாலும் கூட அவர்களைச் சமாளிக்க முடியும் என்றும் பத்ரசால் உறுதி கூறியிருந்தான்....

 

“மற்ற நம் எல்லைகளில் என்ன நிலவரம்?”

 

”அங்கு போர் துவங்கி விட்டது பிரபு. மேற்கில் காஷ்மீர மன்னனுடனான போரில் நம் கை ஓங்கியிருக்கிறது. வடக்கில் சிராவஸ்தி அருகிலான போரில் இரு பக்கங்களும் சரிசமமாக இருக்கின்றன.”

 

சுதானுவிடமும், பத்ரசாலிடமும் சின்ஹரன் சொல்லிக் கொண்டிருந்தான். “எந்தவொரு வெற்றியும், தகுந்த சமயத்தில் சரியாகச் செயல்படுவதிலேயே இருக்கிறது. செயல்படும் போதும் கண நேரங்களும் மிக முக்கியமானவை தான். சிறிது தாமதமானாலும் நம் முயற்சிகள் தோற்றுப் போய் விளைவுகள் நமக்கு எதிராக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு. அதனால் நாம் நிச்சயித்த வேலையை நிச்சயித்த நேரத்தில் முடித்து விடுவது முக்கியம்.”

 

சுதானு சொன்னான். “அதை நான் வீரர்களிடம் பல முறை சொல்லி அவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறேன் நண்பரே. தந்தையும், ராக்ஷசரும் எனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடியான திட்ட ஏற்பாடுகளை நீங்கள் சொல்லி விட்டீர்கள். இப்போது என் கவலையெல்லாம் வெளியே முற்றுகை இட்டிருக்கும் எதிரிகளை எப்படிச் சமாளிப்பது என்பதில் தான் இருக்கிறது. இங்கே வெற்றி பெற்று அவர்களிடம் நான் தோற்று விட்டால் எல்லாமே பறிபோய் விடுமே.”

 

அதைப் பற்றிய கவலையை விடுங்கள் இளவரசே. இங்கு அரியணையில் அமரும் ஆள் மாறுவதால் வெளியே உள்ள எதிரிகளைச் சமாளிக்கும் விதத்தில் எந்த மாறுதலும் ஏற்பட்டு விடப் போவதில்லை. எதிரிகள் பெரும்படையுடன் வெளியே வந்திருந்தாலும் நம்மைத் தீவிரமாகத் தாக்காமல் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் சந்திரகுப்தனின் வருகைக்காகக் காத்திருப்பது போல் தெரிகிறது. சந்திரகுப்தன் சிராவஸ்தியில் தான் இருக்கிறான் என்று தோன்றுகிறது. அவன் உங்கள் படைகளை அங்கு வென்று விட்டு இங்கே வரும் வரை எதிரிப்படை இங்கு மும்முரமாகத் தாக்குதல் நடத்தும்  வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், அப்படி அவர்கள் தாக்க ஆரம்பித்தாலும் சிறிது காலம் சமாளிக்க இப்போதிருக்கும் உங்கள் படை தாராளமாகப் போதும். கலிங்க எல்லையிலிருந்தும் உங்கள் படை வந்ததும் நாமே கூட தீவிரத் தாக்குதலை ஆரம்பிக்கலாம். அதனால் இப்போதைக்கு அது பற்றிய கவலையை விடுங்கள். இப்போது நம் முழு கவனமும் நீங்கள் அரியணையில் அமர்வதற்கான இலக்கிலேயே இருப்பது தான் புத்திசாலித்தனம்..”

 

பத்ரசாலுக்கும், சுதானுவுக்கும் அவன் சொன்னது சரியாகவே பட்டது. எல்லாக் கோணங்களிலிருந்தும் தெளிவாகச் சிந்திக்கும் கார்த்திகேயனைப் போன்ற ஒருவன் இந்தச் சமயத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருப்பது தங்கள் பாக்கியம் என்றே அவர்கள் நினைத்தார்கள். அரண்மனையில் முன்கூட்டியே சில வீர்ர்களைத் தயார் நிலையில் நிறுத்தியாகி விட்டது. நடுநிசியில் தான் தங்கள் திட்டத்தை ஆரம்பிப்பது என்று அவர்கள் தீர்மானித்திருந்ததால் நடுநிசியாகும் வரை பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

 

சுகேஷின் அறைக்கதவு மெல்ல தட்டப்பட்ட போது அவன் மதுமயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். கனவில் எங்கோ கதவு தட்டப்படுவது போல் அவனுக்குக் கேட்டது. உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய  தனிக்காவலன் மெல்ல எழுந்து யாரென்று பார்க்கச் சென்றான்.

 

அவன் கதவைத் திறந்து பார்த்த போது வெளியே சுகேஷின் காவலர்கள் இருக்கவில்லை. சுதானுவும் சின்ஹரனும் வேறு சில வீர்ர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சுதானு சைகையாலேயே அவனை வெளியே போகுமாறு கட்டளையிட்டான். ஏதோ முக்கியமாய் சகோதரர்கள் பேசப் போகிறார்கள் என்று நினைத்தபடியே அந்தக் காவலன் வெளியே சென்றான். சுதானுவும், சின்ஹரனும் இரண்டு வீரர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றார்கள்.

 

இரண்டு வீரர்களும் இருபக்கங்களிலும் சுகேஷின் கை கால்களை இறுக்கப் பிடித்துக் கொள்ள சுகேஷ் அரைமயக்கத்துடன் கண்விழித்துப் பார்த்தான். எதிரே சுதானு தெரிந்தான். அவன் என்னவென்று கேட்க வாயைத் திறக்க முற்பட்டான். அவன் தலைமாட்டில் இருந்த சின்ஹரன் அவன் வாயை இறுக்க மூடினான். அப்போது தான் சுகேஷ் ஆபத்தை உணர்ந்து கண்களை விரித்துப் பார்த்தான். சுதானு தன் இடுப்பில் இருந்த கூரிய குறுவாளை எடுத்து சுகேஷின் மார்பில் வேகமாகக் குத்த, சுகேஷின் இதயத்தில் அந்த வாள் ஊடுருவியது. அவனுடைய பலத்த திமிறல்களை அடக்க அந்த வீரர்களும், அவனுடைய கூக்குரலை அடக்க சின்ஹரனும் தங்கள் முழுபலத்தையும் பிரயோகிக்க வேண்டியிருந்ததுவேகமாக சுகேஷ் உயிரிழந்தான்.

 

னநந்தனின் உறக்கம் வெளியே ஏற்பட்டிருந்த சத்தங்களால் கலைந்தது. அவன் படுத்திருந்தபடியே காதுகளைக் கூர்மையாக்கினான். வெளியே வீரர்கள் அங்குமிங்கும் ஓடும் சத்தம் கேட்டது. நள்ளிரவு நேரத்தில் இப்படி வீரர்கள் ஓடுவது இயல்பானதாக இல்லாததால் அவன் துணுக்குற்றான். இனம் புரியாத பயம் ஒன்று அவன் மனதைக் கவ்வியது. என்ன நடக்கிறது?...

 

இதயம் படபடக்க அவன் சாமரம் வீசிக் கொண்டிருந்த பணிப்பெண்களிடம் சொன்னான். ”காவலர்களிடம் என்ன சத்தம் என்று பார்க்கச் சொல்

 

ஒரு பணிப்பெண் சென்று அவன் அறைக்கு வெளியே இருந்த காவலர்களிடம் மன்னரின் கட்டளையைச் சொன்னாள்அந்தக் காவலர்களில் ஒருவன் வெளிக்கதவைத் திறந்த போது வெளியே சுதானு நின்றிருந்தான். அவன் தாழ்ந்த குரலில் மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாவனையில் சொன்னான். ”எதிரியின் வீரர்கள் சிலர் அரண்மனைக்குள் ரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்படுத்தும் வரை அரசரைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. யார் கதவைத் தட்டினாலும் என் குரல் கேட்காமல் கதவைத் திறக்காதீர்கள். யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள். அரசரிடமும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் சொல்லும் வரை வெளியே  வரவேண்டாம் என்று சொல்லுங்கள்.”

 

காவலன் கலவரமடைந்து தலையசைத்து வேகமாகக் கதவைச் சாத்தி தாளிட்டான். அவன் சென்று தகவலைச் சொல்ல தனநந்தன் திகைத்தான். எதிரியின் ஆட்கள் அவன் அரண்மனைக்குள் வரை வந்து விட்டது அவனை அதிர வைத்தது. ஆனால் சுதானு அதைக் கண்டுபிடித்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவது அவனுக்குத் திருப்தி அளித்தது. “சுதானு கோபக்காரன் என்றாலும் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறான்என்று மனதிற்குள் இளைய மகனை சிலாகித்தான்.

 

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, May 5, 2025

யோகி 101

 

ன்று காலை உணவுக்குப் பின் முக்தானந்தாவும், சித்தானந்தாவும் தங்களுடைய வேலைகளுக்குச் செல்ல, ஷ்ரவன் அலுவலகத்திற்குச் சென்றான். அது பெரிய அலுவலகம். வாசலிலேயே இருந்த இளம் துறவி ஒருவர் முதலில் உள்ள அறையிலேயே அவனை உட்காரச் சொன்னார். அதற்குப் பின்னும் இரண்டு அறைகளும், ஒரு பெரிய ஹாலும் அவற்றில் நிறைய கம்ப்யூட்டர்களும் இருப்பதை ஷ்ரவன் கவனித்தான்.

 

சிறிது நேரத்தில் பாண்டியனும், கண்ணனும் வந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற வேலைகள் ஒதுக்கும் வேலைக்கெல்லாம் பாண்டியன் வருவதில்லை. கண்ணன் தான் அதைச் செய்வார். ஆனால் ஷ்ரவனை நேரில் பார்த்துப் பேசும் ஆர்வம் பாண்டியனுக்கு வந்திருந்தது. என்ன தான் காமிராவில் பார்த்தாலும் நேரில் பார்த்துப் பேசுவதற்கு ஈடாகிவிடாது என்று அவர் உறுதியாக நம்பினார். மனிதர்களை துல்லியமாக எடை போட நேரில் பார்த்துப் பேசுவது மட்டுமே உதவும் என்பது அவருடைய அபிப்பிராயமாக இருந்தது. அதனால் தான் அவர் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு வந்தார்.

 

ஷ்ரவன் எழுந்து நின்று இருவரையும் வணங்கினான். கண்ணன் பாண்டியனை ஷ்ரவனுக்கு அறிமுகப்படுத்தினார். “இங்கே பொது நிர்வாகம் செய்வது ஐயா தான்என்றார். ஷ்ரவன் மீண்டும் கைகூப்பினான். பாண்டியன் பார்வை அவனை ஊடுருவிப் பார்த்தது.

 

ஒரு படிவம் தந்து அதை நிரப்பித் தரும்படி கண்ணன் சொன்னார். அதில் ஷ்ரவனுக்கு இருக்கும் திறமைகளும், விருப்பங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஷ்ரவன் முதல் திறமையாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு என எழுதினான். இணைய வைரஸ் மற்றும் ஹேக்கிங்கிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழிந்த டேட்டாக்களை மீட்டுத் தருவதில் திறமையுள்ளதாக எழுதினான்.  அவனுடைய இதற்கு முந்தைய உத்தியோகம் அதுவாகத் தான் இருந்தது என்றும் எழுதினான்.

 

அடுத்ததாக கடிதப்போக்குவரத்தில் தனக்கு அனுபவம் நிறைய இருப்பதாய் எழுதினான். கடைசியாக தோட்ட வேலை அவனுக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு என்று எழுதினான்.

 

அவனிடமிருந்து அந்தப் படிவத்தை வாங்கியபடி கண்ணன் சொன்னார். “நீங்கள் எழுதியிருக்கும் வேலைகளில் ஒன்றைத் தர முயற்சி செய்வோம். ஆனால் அதையே தான் தருவோம் என்று உத்தரவாதம் தரமுடியாது. எங்களுக்கு ஆட்கள் தேவைப்படும் வேலையைத் தான் தரமுடியும்

 

ஷ்ரவன் தலையசைத்து விட்டுச் சொன்னான். “எனக்கு நீங்கள் கூட்டித் துடைக்கும் வேலையையோ, கழிவறை கழுவும் வேலையையோ தந்தால் கூட அந்த வேலையையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்.”

 

பாண்டியனுக்கு ஷ்ரவனின் பதில் மிகவும் பிடித்திருந்தது. படித்தவர்கள் நிறைய பேர் இப்படிச் சொல்ல முடிந்தவர்களாய் இருப்பதில்லை. ஆனால் அவர் சிலாகித்தது அவர் முகத்தில் வெளிப்படவில்லை. ஆரம்பத்தில் பைத்தியக்காரனாகத் தெரிந்த இந்த இளைஞன், அவர் நினைத்த அளவு பைத்தியக்காரன் இல்லையோ என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

கண்ணன் ஷ்ரவன் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். பாண்டியன் தலையசைத்தார்.

 

முதல் வேலையை அவர் அவருடைய முழுநம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருசில ஆட்களுக்கு மட்டுமே தரமுடியும். அதனால் அதை அவர் ஷ்ரவனுக்குத் தர வாய்ப்பே இல்லை. கம்ப்யூட்டர் பயன்படுத்திச் செய்யும் சில அன்றாட வேலைகளை வேண்டுமானால் அவனிடம் தரலாம். யார் யாருக்கு என்னென்ன வேலையை இன்று ஒதுக்கியிருக்கிறார்கள் என்று பதிவு செய்து கொள்வது போன்ற வேலைகளில் ரகசியம் காக்க எதுவும் இல்லை. மேலும் அது தனி கம்ப்யூட்டரில் செய்யும் வேலை. மற்ற கம்ப்யூட்டர்களுடன் அது தொடர்பில் இல்லை. அதனால் அதில் வேலை செய்யும் போது மற்ற முக்கிய கம்ப்யூட்டர்களின் டேட்டாக்களைப் பார்க்க வழியில்லை. இப்போதைக்கு அதைச் செய்ய வேறு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வேலை தரும்போதோ, அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத போதோ வேண்டுமானால் ஷ்ரவனுக்கும் அந்த வேலையை ஒதுக்கலாம்.

 

இரண்டாவது வேலை முதல் வேலை அளவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த வேலை அல்ல என்றாலும் அந்த வேலையையும் அவரால் புதியவர்களுக்குத் தர முடியாது. அவர்களுடைய எத்தனையோ முக்கியத் தகவல்களைத் தெரிவித்துவிடக்கூடிய வேலை அது. மூன்றாவதான தோட்ட வேலையில் பிரச்சினை இல்லை.

 

அதனால் இப்போதைக்கு ஷ்ரவனுக்குத் தோட்ட வேலை ஒதுக்கப்பட்டது. அதைத் தெரிவித்த கண்ணன் ஷ்ரவனிடம் தொடர்ந்து சொன்னார். “சில குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு வேறு ஒரு வேலைக்கு ஆள் தேவைப்படும். அப்படி வேலை மாறுபடும் நாட்களில் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடுவோம். நீங்கள் அந்த நாட்களில் அந்த வேலையைச் செய்ய வேண்டி வரும்.”

 

ஷ்ரவன் தலையசைத்தான். அவன் பாண்டியன் தன்னிடம் எதையாவது கேட்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் பாண்டியன் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததோடு நிறுத்திக் கொண்டார்.

 

கண்ணன் சொன்னார். “முற்பகல் வேலையில் பாதி நேரம் முடிந்து விட்டது. அதனால் நீங்கள் மதியத்திற்கு மேல் ஆரம்பிக்கும் வேலையில் சேர்ந்து கொள்ளலாம். தோட்ட வேலை சுவாமினி கல்பனானந்தாவின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. மதியத்திற்கு மேல் நீங்கள் போய் அவரைப் பாருங்கள்.”

 

ஷ்ரவன் நன்றி தெரிவித்து, இருவரையும் வணங்கி விட்டு ஷ்ரவன் தங்கள் அறைக்குத் திரும்பினான். சித்தானந்தாவும், முக்தானந்தாவும் தங்கள் முற்பகல் வேலை முடிந்து இன்னும் வரவில்லை. ஒருவிதத்தில் அதுவும் நல்லதாகத் தோன்றியது. ஷ்ரவன் அறையை ஆராய்ந்தான். அறைக்குள் காமிராக்கள் இல்லை. வெளியே வராந்தாவில் தான் காமிராக்கள் இருக்கின்றன.

 

முக்தானந்தாவின் கட்டிலில் அமர்ந்து ஜன்னல் வழியாகப் பார்த்தான். அந்த ஜன்னலிலிருந்து பார்க்கையில் மைதானமும், பாண்டியனின் இருப்பிடம் வரையும் நன்றாகத் தெரிந்தது. அதைத் தாண்டி இருக்கும் பிரம்மானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. இங்கிருந்து இரவெல்லாம் முக்தானந்தா பார்த்துக் கொண்டிருப்பது பாண்டியனின் இடத்திற்கு யார் போய் வருகிறார்கள், அவர் எப்போது வெளியே போய் எப்போது வருகிறார் என்பதையெல்லாம் தானோ?

 

இதையெல்லாம் யோசித்துப் பார்க்கையில், சைத்ராவுக்கு ஆபத்து என்ற மொட்டைக் கடிதத்தை எழுதியது முக்தானந்தா தானோ என்ற சந்தேகமும் ஷ்ரவனுக்கு வந்தது. அவர் பிரச்சினையான எதையாவது பார்த்திருக்கலாம்ஆனால் அவருக்கு சைத்ராவின் வீட்டு விலாசம் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? அவளே அவருக்குத் தந்திருப்பாளோ? குழப்பமாக இருந்தது.

 

சிறிது நேரத்தில் சித்தானந்தாவும், முக்தானந்தாவும் வந்தார்கள். சித்தானந்தா அவனுக்கு என்ன வேலையை ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதை ஆர்வத்துடன் கேட்டார். அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை முக்தானந்தாவும் ஆர்வத்துடன் கவனிப்பது ஷ்ரவனுக்குத் தெரிந்தது.

 

ஷ்ரவன் சொன்னான். “தோட்ட வேலை. அது எனக்குப் பிடிக்கும். ஆனால் அந்த வேலைகளை மேற்பார்வை பார்ப்பது சுவாமினி கல்பனானந்தா என்று கண்ணன் சுவாமிஜி சொன்னார். ஆனால் ஆண் துறவிகள், பெண் துறவிகள் இடையே எந்தத் தொடர்பும் இங்கு இருக்கக்கூடாது என்றும் அவர் தான் சொன்னார். அது எப்படி?”

 

ஆச்சரியமாக சித்தானந்தாவுக்குப் பதிலாக முக்தானந்தாவே பதிலைச் சொன்னார். ”யோகாலயத்தில் எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன. சுவாமினி கல்பனானந்தா மாதிரியான ஒரு சிலர் ஆண் துறவிகளைச் சந்திக்கவோ, பேசவோ, வேலை வாங்கவோ தடையில்லை. அதே போல் சுவாமிஜி கண்ணன் போன்றவர்கள் பெண் துறவிகளைச் சந்தித்துப் பேசி வேலை வாங்க எந்தத் தடையும் இல்லை.”

 

சித்தானந்தா மறுபடியும் திகைப்புடன் முக்தானந்தாவைப் பார்த்ததை ஷ்ரவன் கவனித்தான். அதிகமாகப் பேசாத முக்தானந்தா இப்படி நீண்ட பதில் சொன்னது சித்தானந்தாவை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

 

ஷ்ரவன் புன்னகையுடன்அப்படியா?” என்று கேட்டுக் கொண்டான். பத்து நிமிடங்கள் அவர்கள் களைப்பாறியிருப்பார்கள். மதிய உணவுக்கான மணி அடித்தது. மூவரும் கிளம்பினார்கள். போகும் போது அவர்களுடனேயே போனாலும் உணவு உண்ண அவர்களுடன் முக்தானந்தா அமரவில்லை.    

 

உணவருந்தி விட்டு சிறிது இளைப்பாறி விட்டு ஷ்ரவன் தோட்ட வேலைக்குச் சென்றான். கல்பனானந்தா அவனைப் பார்த்ததும் சற்று திகைத்தது போல் இருந்தது. 

 

ஷ்ரவன் அவளைக் கைகூப்பி வணங்கினான். திகைப்பிலிருந்து மீண்ட கல்பனானந்தா லேசாகப் புன்னகைத்தாள். “நீங்கள் சொன்னபடியே துறவியாக இங்கே இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?” என்றாள்.

 

நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடுவது நல்லதல்லவே சுவாமினிஎன்று ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான்.

 

அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். அவனுக்குத் தோட்டக்கலை பற்றி எந்த அளவு தெரியும் என்பதை அவள் விசாரித்தாள். ஷ்ரவன் அதற்குத் தன்னை நன்றாகவே தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தான். அதனால் அவன் சொன்ன பதில்கள் அவளைத் திருப்திப்படுத்தியது போல் தோன்றியது. அவள் அவனுக்கு அன்றைய வேலை என்ன என்பதைச் சொன்னாள். ஏற்கெனவே அங்கே மூன்று துறவிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஷ்ரவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

 

குமரேசன் மதியம் இரண்டு மணிக்கே போயிருப்பான் என்பதால் அவனை ஷ்ரவனால் சந்திக்க முடியவில்லை. நாளை காலை கண்டிப்பாக அவனைச் சந்திக்க முடியும். இந்த வேலையை ஷ்ரவனுக்கு அவர்கள் ஒதுக்கியிருப்பதில் சாதகமான அம்சம் அது தான். ஆனால் அவர்களுக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படாத விதத்தில் குமரேசனுடன் பேச முடிவது கஷ்டமே. இப்போதும் கூட கல்பனானந்தாவின் பார்வை அவன் மீதே இருந்தது. அவள் இன்னும் அவனை முழுமையாக நம்பி விடவில்லையோ?


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, May 1, 2025

சாணக்கியன் 159

சுதானு இன்றிரவே அந்த வணிகனை அழைத்து வாருங்கள் என்று சொன்னவுடன் பத்ரசால் சரியென்று உடனே தெரிவித்தாலும் நண்பனான கார்த்திகேயனை எப்படி சந்திப்பது, சுதானுவின் வேண்டுகோளைச் சொல்வது என்ற யோசனை எழுந்தது. ஆனால் நல்ல வேளையாக அன்று மாலையே பத்ரசாலைக் காண சின்ஹரன் வந்தான்.

 

பத்ரசால் அவனைக் கண்டவுடன் மகிழ்ந்தவனாகச் சொன்னான். “உங்களை நான் எப்படியாவது இன்று கண்டு பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன் நண்பரே. நல்ல வேளையாக நீங்களே வந்து விட்டீர்கள்.”

 

சின்ஹரன் சொன்னான். “என்ன விஷயமாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தீர்கள் நண்பரே.”

 

பத்ரசால் தாழ்ந்த குரலில் சொன்னான். “நீங்கள் சொல்லியிருந்தபடியே இளவரசர் சுதானுவுக்கு நான் நெருக்கமாகி விட்டேன் நண்பரே. எதிரிகள் இங்கே முற்றுகை இட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த மகான் சுதானுவிடம் நாளை இரவுக்குள் தடைகளை நீக்கி விட்டால் நினைப்பது நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறாராம். நீங்களும் அந்த மகானின் பக்தர் தான் என்று தெரிந்தவுடன்  அவர் உங்களுடைய ஆலோசனையையும் இந்த விஷயத்தில் பெற விரும்புகிறார்

 

சின்ஹரன் சிறிது தயக்கம் காட்டி விட்டு பின் சம்மதித்தான். அன்று இரவு அவன் ரகசியமாய் சுதானுவைச் சந்திப்பதற்கு பத்ரசால் ஏற்பாடு செய்தான்.

 

பத்ரசால் சின்ஹரனை அறிமுகப்படுத்தியவுடன் சுதானு பார்வையால் சின்ஹரனை அளந்தான். இவனை எந்த அளவுக்கு நம்பலாம் என்று அவன் யோசித்தது போல் இருந்தது.

 

சின்ஹரன் சொன்னான். “நீங்கள் பாக்கியம் செய்தவர் இளவரசே. இல்லா விட்டால் அந்த மகானை நீங்கள் சந்தித்திருக்க முடியாது. அவர் எப்போதுமே அரண்மனைகளைத் தேடிச் சென்றது கிடையாது.”

 

சுதானுவுக்கு அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றி யாராவது உறுதிப்படுத்த வேண்டியதாக இருந்ததால் அவன் உடனே உச்சி குளிர்ந்தான்.  இப்போது பேசிக் கொண்டிருப்பவன் தான் மகான்  வேடத்தில் முன்பு வந்தவன் என்ற சந்தேகம் அவனுக்குச் சிறிதும் வரவில்லை. ஏனென்றால் அந்த மகானின் குரலும் தோற்றமும் இப்போது வந்திருப்பவனுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாததாகவே இருந்தன.

 

சுதானு சொன்னான். “நானும் அவரைச் சந்தித்ததை என் பாக்கியமாகவே உணர்கிறேன். அவர் சொன்னபடியே எல்லாம் நடந்து வருகின்றன. எதிரிகளின் முற்றுகையும் நடந்து விட்டது.  நாளை நான் தடைகளை நீக்கிக் கொண்டால் என் நோக்கம் நிறைவேறுவது உறுதி என்று அவர் சொல்லி இருக்கிறார்....”

 

சொல்லி விட்டு அவன் பத்ரசாலைப் பார்க்க பத்ரசால் சின்ஹரனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “நீங்கள் அறியாதது எதுவுமில்லை நண்பரே. இவர் அரியணை ஏறத் தடைகள் என்னென்ன என்பது உங்களுக்கும் தெரியும்.   என் கனவிலும் மகான் வந்து இவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று சொன்னதை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா? இப்போது என்ன செய்வது எப்படிச் செய்வது என்பது பற்றித் தான் நாங்கள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம்....திடீரென்று உங்கள் நினைவு வந்தது. உங்களிடமிருந்து நல்ல புத்திசாலித்தனமான ஆலோசனை கிடைக்கும் என்று சொல்லி தான் உங்களை இவரிடம் அழைத்து வந்தேன்.”

  

சின்ஹரன் இருவரையும் யோசனையுடன் பார்த்தான். பின் சொன்னான். “முதலில் பேச்சு வார்த்தையாலோ, உபாயத்தாலோ தடையை நீக்க முடிகிறதா என்று பார்ப்பது தான் புத்திசாலித்தனம். முதலில் பொறுமையாக மன்னரிடம் பேசிப் பாருங்கள்..”

 

சுதானு சொன்னான். “அதை முயன்று பார்த்து விட்டேன். மன்னர் ஒத்துக் கொள்ளவில்லை.”

 

சின்ஹரன் தாழ்ந்த குரலில் சொன்னான். ”அப்படியானால் நீங்கள் பலம் பிரயோகித்தே ஆக வேண்டியிருக்கும்.  மன்னரே ஒத்துக் கொள்ளவில்லை என்றால், ராக்‌ஷசரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அவர் மன்னரை விட அதிக இடைஞ்சலாகலாம். எதைச் செய்வதானாலும், அவர் இடைஞ்சலாகி விடாதபடி பார்த்துக் கொள்வது முக்கியம். அரண்மனைக்குள் உங்களுக்கு மிக  நம்பிக்கையான வீர்ர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியே நகரப் பாதுகாவல் வேலைக்கு அனுப்பி விடுங்கள். உள்ளே நடப்பது எதுவும் வேலை முடிகிற வரை வெளியே இருப்பவர்களுக்கு - முக்கியமாக மன்னருக்கும், ராக்‌ஷசருக்கும் - தெரியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். வேலை முடிகிற வரை இருவரையும் தனிமைப்படுத்தி வைப்பது புத்திசாலித்தனம்….”

 

சுதானுவுக்கு அவன் விரைவில் நிலைமையைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாகப் பேசிய விதம் பிடித்திருந்தது.


சின்ஹரன் தொடர்ந்து சொன்னான். “இதெல்லாம் முடியும், நீங்களும் இடையில் மனம் மாறி முயற்சியைக் கைவிட்டுவிட மாட்டீர்கள் என்ற உறுதி உங்களுக்கு இருந்தால் மட்டுமே இதில் இறங்குங்கள். ஏனென்றால் அரைகுறை முயற்சிகள் ஆபத்தானவை… அப்படி உங்களுக்கே உறுதியில்லா விட்டால் அல்லது தைரியம் போதா விட்டால் ஆரம்பத்திலேயே இந்த யோசனையைக் கைவிட்டு உங்களுக்கு விதித்தது அவ்வளவு தான் என்று இருந்து விடுவது நல்லது…”

 

அப்படி இருந்து விட முடியாத சுதானுவுக்கு அந்தக் கடைசி அறிவுரை கசந்தது.

 

சின்ஹரன் சொன்னான். “பழைய கார்த்திகேயனாக இருந்திருந்தால் நானே உங்களுக்கு உதவியாக இதில் இறங்கியிருப்பேன் இளவரசே. ஏனென்றால் ஒரு காலத்தில் நானே மாளவத்தின் சிறு படைத்தலைவனாக இருந்தவன் தான். இப்போதும் வீரத்தழும்புகள் என் உடலில் இருக்கின்றன…” அவன் தன் மேலாடையைத் தளர்த்தி தன் வலிமையான தோளில் இருந்த போர்த்தழும்புகளை அவர்களுக்குக் காட்டி மறுபடி ஆடையை சரிப்படுத்திக்  கொண்டு விட்டுத் தொடர்ந்து சொன்னான். “ஆனால் பின்பு எனக்கு போர் சலித்து விட்டது. வீரத்தை விடச் செல்வத்தில் ஈடுபாடு அதிகமாகி விட்டது. அதனால் வணிகனாகி விட்டேன்….”

 

சுதானுவுக்கு நினைத்த வேலை முடியும் வரை இவனைப் போன்றவன் உடனிருப்பது மிக உதவியாக இருக்கும் என்று தோன்றியது. அவன் பத்ரசாலைப் பார்க்க அவனும் அதையே நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சுதானு சொன்னான். ”நண்பரே. நீங்கள் எனக்காக பழைய கார்த்திகேயனாக மாற வேண்டும். எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நம் முயற்சிகள் வெற்றி பெற்றால் வாணிபம் மூலம் தங்களுக்குக் கிடைப்பதை விடப் பல மடங்கு செல்வத்தை நான் உங்களுக்கு அளிப்பேன்…”

 

தயக்கம் காட்டிய சின்ஹரனை சுதானுவும், பத்ரசாலும் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தார்கள்.

 

தாரிணி ஏகாதசி நாளில் காலையிலேயே இனம் புரியாத அச்சத்தை உணர்ந்தாள். எதிரிகளின் பெரும்படை ஒன்று வெளியே முற்றுகை இட்டிருக்கிற இந்த வேளையில் மகனின் ரகசிய சதியாலோசனைகள் பேராபத்தை விளைவிக்கலாம் என்று அவள் பயந்தாள். மகன் புதிய புதிய மனிதர்களுடன் மணிக்கணக்கில் ரகசியமாகப் பேசுவதும், தந்தைக்கும், தமையனுக்கும் எதிராகக் களம் இறங்கியிருப்பதும் அவள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தன.  அவனுடைய திட்டங்கள் தோல்வி அடைந்தால் அழிவை ஏற்படுத்திவிடும் என்று பயந்தாள்.

 

அதனால் அவள் தன் பயத்தைச் சொல்லி அவனை எச்சரித்தாள். அவன் அவளிடம் சொன்னான். “தாயே என் பாட்டனார் ஆபத்து என்று முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் அவர் மட்டுமல்ல, என் தந்தையும், நானுமே இப்போதும் சவரத்தொழிலாளிகளாக இருந்திருப்போம். எல்லா பெரிய வெற்றிகளுக்கும், செல்வத்திற்கும் பின்னால் பேராபத்து இருந்திருக்கிறது. அந்த ஆபத்தைத் தாண்டியே பெரும்வெற்றி அடைவதும், பெருஞ்செல்வம் சேர்ப்பதும்  சாத்தியமாகிறது. அந்த மகான் இன்று முயன்றால் என் வெற்றி உறுதி என்று சொன்னதை நீ மறந்து விட்டாயா?”

 

அதற்கு என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் என்ன செய்யப் போகிறான் என்றோ அதை எப்படிச் செய்யப் போகிறான் என்றோ  அவள் கேட்கவில்லை.  கேட்டுத் தெரிந்து கொண்டால் இருக்கிற அச்சம் இரட்டிப்பாகிவிடும் என்று பயந்தவளாக மௌனமானாள்.


ராக்‌ஷசருக்கும் சுதானுவும், பத்ரசாலும் அடிக்கடி ஒன்றுகூடிக் கலந்தாலோசிக்கிறார்கள் என்றும் நேற்றிரவு புதிய யாரோ ஒருவனும் ஆலோசனையில் இணைந்து கொண்டிருக்கிறான் என்றும் தகவல் வந்து சேர்ந்தது. வழக்கமாக அவர் அவர்களிருவர் கூடிப் பேசுவதில் சந்தேகம் கொள்வார் என்றாலும் இந்த முறை அவர் சந்தேகிக்கவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் அரண்மனைக் காவலை சுதானுவும், பாடலிபுத்திரத்தின் காவலை பத்ரசாலும் ஏற்றுக் கொண்டு இருப்பதால் அது குறித்து ஒன்று சேர்ந்து பேசுகிறார்கள் என்று அவர் எண்ணிக் கொண்டார். புதிதாய் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் இது போல் தங்கள் புதிய வேலையில் அதீத ஆர்வம் காட்டுவதும், தாங்கள் திறமையானவர்கள் என்று நிரூபிக்க பல விதமாய் ஆலோசிப்பதும் அவர் அடிக்கடி காணும் ஒன்று தான். உடன் புதிய யாரோ ஒருவன் இணைந்திருப்பது தான் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றாலும் எந்த வெளியாளும் இந்த முற்றுகைக் காலத்தில் வெளியிலிருந்து வந்து இணையும் வாய்ப்பு இல்லை என்பதால் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

 

ஒருவிதத்தில் சுகேஷை விட சுதானு பரவாயில்லை என்று அவருக்குத் தோன்றியது. சுதானு ஏதோ புதிய முயற்சிகளையாவது எடுக்கிறான். சுகேஷ் நேற்று எதிரிகளைத் தாக்கும் யுக்திகள் பற்றி அவருடன் சேர்ந்து ஆலோசிக்க வந்திருந்தான். ஒரு புதிய ஆலோசனை கூட அவன் வாயிலிருந்து வரவில்லை. நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்டுக் கொள்கிறேன், அப்படியே செய்வோம் என்பது போல் இருந்தது அவன் செயல்பாடு. அவனை ஒப்பிடுகையில் தனநந்தன் எவ்வளவோ தேவலை!...

 

அன்று மாலையில் கவலை தரும் செய்தியோடு ஒற்றர் தலைவன் அவரிடம் வந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




என்.கணேசனின் நாவல்கள், நூல்கள் வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 28, 2025

யோகி 100


 

முக்தானந்தாவும், சித்தானந்தாவும் மாலை ஆறு மணிக்கு, அறைக்குத் திரும்பி வந்தார்கள். 6.15 முதல் 7.15 மணி வரை சத்சங்கம். ஒரு ஹாலுக்குச் சென்று அங்கே ஒரு மூத்த துறவியின் உரையைக் கேட்டார்கள். அங்கும் முக்தானந்தா அவர்களுடன் அமராமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டார். அந்த மூத்த துறவி பேசியது நன்றாக இருந்தாலும் தேவையே இல்லாமல் அவர் பிரம்மானந்தரின் பெயரை அங்கங்கே சேர்த்துப் பேசினார். அங்கிருந்து வந்த பின் எட்டு மணி வரை தியான நேரம்.  முக்தானந்தாவும், சித்தானந்தாவும் தியான விரிப்பை விரித்து அதில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்கள். ஷ்ரவனும் அப்படியே தியான விரிப்பு விரித்து அமர்ந்தான். ஆனால் அவர்கள் சொல்லித் தந்திருந்த தியானம் செய்யாமல் பரசுராமன் உபதேசித்திருந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். 

 

அவன் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து விட்டுக் கண் திறந்த போதும் சித்தானந்தா தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் முக்தானந்தா தியானம் செய்யாமல் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் அவரைப் பார்ப்பது தெரிந்ததும் மறுபடியும் அவர் கண்களை மூடிக் கொண்டார்.

 

ஷ்ரவனுக்கு அந்த மனிதர் புதிராய்த் தெரிந்தார். இரவு உணவுக்கு மணி அடிக்கும் வரை அவர் கண்களைத் திறக்கவில்லை. மணி அடித்ததும் மூவரும் சாப்பிடும் ஹாலுக்குப் போனார்கள். போய் விட்டு வந்து சற்று இளைப்பாறி விட்டு உறங்கினார்கள்.

 

ஷ்ரவனுக்கு பயணம் செய்த களைப்பும் அன்று இருந்ததால் அவன் சீக்கிரமே உறங்கி விட்டான். எத்தனை நேரம் அவன் அப்படி ஆழ்ந்து உறங்கியிருப்பான் என்று அவனுக்குத் தெரியவில்லை. யாரோ பேசும் சத்தம் கேட்டு அவனுக்கு விழிப்பு வந்தது.

 

உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?” – முக்தானந்தாவின் குரல் கேட்டது. அவர் குரல் தாழ்ந்திருந்தது.

 

ஷ்ரவன் அதிர்ந்தான். ஒரேயடியாக அவனுக்கு வியர்த்தது. அவன் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. ஆனால் நிதானத்துக்கு வர அவனுக்கு நிறைய நேரம் ஆகவில்லை.  அவன் விழித்துக் கொண்டதைச் சிறிதும்  வெளிக்காட்டாமல் அசையாமல் படுத்திருந்தான். சித்தானந்தா நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவரை இவர் குரல் எழுப்பி விடவில்லை.

 

மறுபடியும் முக்தானந்தாவின் குரல் கேட்டது. “உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?”

 

ஷ்ரவன் அசையவில்லை. மிக லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான். அறையில் விளக்கு அணைந்திருந்தாலும் வெளியேயிருந்து வந்த நிலா வெளிச்சத்தின் தயவால் முக்தானந்தா அவருடைய கட்டிலில் அமர்ந்திருப்பது தெரிந்தது. 

 

அவருடைய கட்டில் ஜன்னல் ஓரமாகத் தான் இருந்தது. அவருக்கு நேரெதிர் கட்டில் ஷ்ரவனுடையது. பக்கவாட்டுக் கட்டில் சித்தானந்தாவுடையது. முக்தானந்தா கால்களைத் தொங்கப் போட்டு, ஷ்ரவனைப் பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார்.  அவருக்குப் பின்னால் இருந்து நிலவொளி வந்ததால் அவருடைய முகம் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஷ்ரவன் சிலை போல் அசைவில்லாமல் படுத்திருந்தான்.

 

முக்தானந்தா ஜன்னல் பக்கம் திரும்பினார். கால்களை மடக்கி கட்டிலில் நேராக வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

 

ஷ்ரவனுக்கு தற்போது நள்ளிரவா, அதிகாலையா என்பது தெரியவில்லை. ‘இந்த நேரத்தில் வெளியே வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது? இதுவே தெருவோர ஜன்னலாக இருந்திருந்தால் போக்குவரத்து வாகனங்களையும், தெருவில் நடப்பவர்களையுமாவது பார்த்து இவர் பொழுதைப் போக்கலாம். யோகாலயத்திற்குள் இந்த நேரத்தில் வேடிக்கை பார்க்க கட்டிடங்களைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?   கண்ணன் சொன்னது போல் அல்லாமல் இரவு பத்து மணிக்கு மேலும் இங்கே ஆள் நடமாட்டமும், செயல்களும் இருக்குமோ?

 

அவர் மறுபடியும் ஏதாவது பேசுவாரோ  அல்லது கேட்பாரோ என்று ஷ்ரவன் காத்திருந்து பார்த்தான். வெளியேயும், உள்ளேயும் அமைதியே நிலவியது. சிறிது நேரத்தில் ஷரவன் மறுபடியும் உறங்கி விட்டான்.

 

மறுநாள் காலை ஐந்து மணிக்கு அடித்த மணியோசை கேட்டு தான் அவன் கண்விழித்தான். அவன் எழுந்த போது மற்ற இருவருமே விழித்திருந்தனர். முக்தானந்தா எப்போது தூங்கி எப்போது எழுந்தாரோ தெரியவில்லை. 

 

அடுத்து, தியானத்திற்கான மணியோசை அடித்து மூவரும் தியானம் செய்ய அமர்ந்தனர். ஷ்ரவன் அந்தச் சமயத்தில் தன் மந்திர ஜபத்தை முடித்து விட்டான். அதிகாலை நடைப்பயிற்சிக்கு அவன் கிளம்பிய போது சித்தானந்தாவும் அவனோடு வந்தார். அவன் முக்தானந்தாவையும்வருகிறீர்களா?” என்று கேட்ட போது அவர்  வயதாகி விட்டதால் கால்கள் ஒத்துழைப்பதில்லைஎன்று சொன்னார். ஷ்ரவனும், சித்தானந்தாவும் கிளம்பினார்கள்.

 

நடக்கையில், இப்போதும் யாராவது தன்னைப் பின் தொடர்கிறார்களா என்று ஷ்ரவன் பார்த்தான். யாரும் பின் தொடரவில்லை. அவர்கள் அவன் மீது சந்தேகம் தெளிந்து விட்டார்களா, இல்லை சித்தானந்தாவே அவருடன் அவன் பேசுவதை அவர்களிடம் போய்ச் சொல்லுவாரா என்று தெரியவில்லை.

 

அங்குள்ள மைதானம் பெரியதாக இருந்தது. மைதானத்தைச் சுற்றிலும் அழகான செடிகள் மரங்கள் இருந்தன. பல துறவிகள் அங்கே நடந்து கொண்டிருந்தார்கள். நடக்கும் போது ஷ்ரவன் சித்தானந்தாவிடம் சொன்னான். “நேற்றிரவு திடீரென்று யாரோ பேசும் சத்தம் கேட்டு கண்விழித்தேன். பார்த்தால் சுவாமி முக்தானந்தா தான் தனியாக எதோ சொல்லிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவர் என்ன பேசினார் என்பது சரியாகக் காதில் விழவில்லை. நல்ல வேளையாக நீங்கள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தீர்கள்.”

 

சித்தானந்தா புன்னகையுடன் சொன்னார். “நானும் ஆரம்பத்தில் அவர் பேசி அப்படி கண்விழித்துக் கொண்டு தான் இருந்தேன். இப்போது பழகி விட்டதால் அது தூக்கத்தைப் பாதிப்பதில்லை.”

 

அவர் என்ன பேசுவார்?” ஷ்ரவன் தெரியாதது போல் கேட்டான்.

 

எல்லாம் தத்துவம் தான். சில சமயம் புரியும். சில சமயங்களில் தலைகால் புரியாது.”

 

ஷ்ரவன் சற்று நிம்மதி அடைந்தான். அவர் பேசியதன் அர்த்தம் இப்படியாகவும் இருக்கலாம். ’உண்மையில் யார் நீ?(உடலா, மனமா, ஆத்மாவா? எந்த நோக்கத்துக்காக இங்கே (இந்த உலகிற்கு) வந்திருக்கிறாய்?’

 

ஷ்ரவன் கேட்டான். “அவர் நீண்ட நேரம் தூங்கவில்லை போலிருக்கிறதே?”

 

அவர் எப்போது தூங்குவார் என்று பல சமயங்களில் எனக்கும் தெரிந்ததில்லை.”

 

அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்ததை ஷ்ரவன் சொல்லவில்லை. சித்தானந்தாவுக்கு அது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதை ஷ்ரவன் தவிர்த்தான்.

 

சித்தானந்தா சொன்னார். ”பல சமயங்களில் அவர் பித்தர் போலவே நடந்து கொள்வார். யாரையும் பெரிதாக மதிக்க மாட்டார். நேற்று உங்களைப் பார்த்து அவர் கைகூப்பியதே எனக்கு ஆச்சரியம் தான். ஏனென்றால் நான் மூன்று வருஷங்களாய் இங்கே இருக்கிறேன். ஆனால் அவர் யாரையும் கைகூப்பி நான் பார்த்ததில்லை. நீங்கள் மரணம் விடுவிக்கும் வரை நாம் செல்வதெல்லாம் சிறைச்சாலை என்று சொன்ன தத்துவம் அவரை நிறைய கவர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.”

 

ஷ்ரவன் ஏற்கெனவே யோகாலயத்தின் வரைபடத்தை அலசியிருக்கிறான் என்றாலும் புதிதாக வருபவன் கேட்கும் இயல்பான கேள்வியை அவரிடம் கேட்டான். “யோகிஜி எங்கே தங்கியிருக்கிறார் சுவாமிஜி?”

 

சித்தானந்தா விரிவாகவே பதில் சொன்னார். “நாம் தங்கியிருக்கும் இந்தக் கட்டிடம் தாண்டி சாப்பாட்டு அறை இருக்கிறது அல்லவா? அதையும் தாண்டி இருக்கும் பெரிய கட்டிடம் பெண் துறவிகள் தங்கியிருக்கும் கட்டிடம். வலதுபுறமிருக்கும் இந்த மூன்று கட்டிடங்களுக்கு எதிரில், அதாவது இடப்புறம் இருப்பது முதலில் நூலகம், இரண்டாவது அலுவலக அறை, மூன்றாவது மேலாளர் பாண்டியன் இருப்பிடம்+அலுவலகம், அதற்கு அடுத்தது யோகிஜியின் இருப்பிடம். இடது புறம் யோகிஜியின் இருப்பிடம் தாண்டி விருந்தினர் தங்குமிடமும், அதையும் தாண்டி சில ஹால்களும் இருக்கின்றன. வலது புறம் பெண் துறவியர்கள் தங்கும் கட்டிடம் தாண்டி, ஒரு சிறிய ஆஸ்பத்திரி, ஒரு சிறிய மைதானம், அதையும் தாண்டி வெளிநாட்டிலிருந்து வந்து துறவியானவர்கள் தங்கியிருக்கும் கட்டிடமும் இருக்கின்றது

 


அவன் மிகக்கூர்மையாக அந்தச் சூழலை கவனித்துக் கொண்டே நடந்ததால் அவன் அவரிடம் தொடர்ந்து பேசவில்லை. கவனத்தில் பதித்துக் கொள்ள முக்கிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன


(தொடரும்) 

என்.கணேசன்





என்.கணேசனின் நூல்கள் வேண்டுபவர்கள் 94863 09351 எண் வாட்சப்பில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.