என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 16, 2025

சாணக்கியன் 183

 

ழ்ந்த உறக்கத்திலிருந்த மலைகேதுவை சுசித்தார்த்தக் உலுக்கி எழுப்பினான். வயிற்றுப்போக்கின் காரணமாக உடல் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் உணர்ந்திருந்த மலைகேது இரவு சற்று தாமதமாகத் தான் உறங்க ஆரம்பித்திருந்தான். அதனால் நடுநிசியில் எழுப்பப்பட்டது அவனுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. கண்களைத் திறந்தவன் சுசித்தார்த்தக்கைப் பார்த்து முறைத்தான். “என்ன விஷயம்?”

 

உங்கள் தந்தை கொல்லப்பட்டு விட்டார் இளவரசேஎன்று சுசித்தார்த்தக் வருத்தத்துடன் தெரிவித்தான்.

 

மலைகேது முழுமையாக விழித்துக் கொண்டான். “என்ன உளறுகிறாய்?”

 

சுசித்தார்த்தக் குரல் தழுதழுக்கச் சொன்னான். “உளறவில்லை இளவரசே. உண்மையைத் தான் சொல்கிறேன். பராக்கிரமசாலியும், பேரரறிவு படைத்தவருமான தங்கள் தந்தை தற்போது உயிரோடு இல்லை....”

 

மலைகேது தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்தான். பலவிதமான உணர்ச்சிகள் அலைமோத சிலை போல் செயலற்று அமர்ந்திருந்த அவனிடம் சுசித்தார்த்தக் பதற்றமும், பரபரப்பும் காட்டிச் சொன்னான். “நடன நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு என்னையும், காவலர்களையும் அரசர் போகச் சொல்லி விட்டார். ”நீங்கள் செல்லுங்கள். நான் பின்பு வருகிறேன்என்று சொல்லி விட்டதால் நாங்களும் வந்து விட்டோம். அவர் மீது நான் வைத்திருக்கும் அன்பை அறிந்த என் நண்பன் ஒருவன் அரண்மனையில் காவலனாக இருக்கிறான். அவன் சற்று முன் என்னிடம் வந்துஹிமவாதகூட அரசர் இறந்து விட்டார். நடன அரங்கில் ஒரு மூலையில் இறந்து விழுந்திருந்த அவர் உடலில் விஷம் பரவியிருப்பது போல் தெரிகிறது. நடன அரங்கின் விளக்குகளை அணைக்கச் சென்றிருந்த பணியாள் அதைப் பார்த்துப் பதறி சாணக்கியரிடம் செய்தியைத் தெரிவிக்க ஓடிச் சென்றிருக்கிறான்அரண்மனைக் காவலனாக இருக்கும் என் நண்பனும் அதைக் கேள்விப்பட்டு ஓடி வந்து என்னிடம் தெரிவித்ததால் தான் இதை நானும் அறிய நேர்ந்தது....”

 

குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்திருந்த மலைகேது முடிவில் துக்கமும் கோபமும் கொண்டான். “என் தந்தையைக் கொல்லும் துணிச்சல் யாருக்கு வந்தது என்று எனக்கு உடனே தெரிய வேண்டும்... இது தான் நீங்கள் நிர்வாகம் புரியும் இலட்சணமா என்று ஆச்சாரியரையும் கேட்க வேண்டும்.... உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்ததற்கு இது தான் நீங்கள் எங்களுக்குச் செய்யும் கைம்மாறா என்று நான் கேட்கப் போகிறேன்... என் தந்தையைக் கொன்றவர்களை நான் தண்டிக்காமல் விட மாட்டேன். வா உடனே நடன அரங்கிற்கு நாமும் போவோம்...” என்று சொன்னபடி எழுந்து நின்ற மலைகேதுவை சுசித்தார்த்தக் இரக்கத்துடன் பார்த்தானேயொழிய இம்மியும் நகரவில்லை.

 

இரண்டடி எடுத்து வைத்த மலைகேது சுசித்தார்த்தக் நகராமல் நிற்பதைப் பார்த்து விட்டுக் கேட்டான். “ஏன் மரம் போல் நிற்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?”

 

சுசித்தார்த்தக் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சொன்னான். “உங்கள் உயிருக்கும் ஆபத்திருக்கிறது என்று நான் பயப்படுகிறேன் இளவரசே

 

மலைகேது அதிர்ந்தான். “என்ன உளறுகிறாய்?”.

 

ஒருவேளை உங்கள் தந்தையின் மரணம் ஆச்சாரியரின் நடவடிக்கையாகவே இருந்தால்..?”

 

மலைகேதுவின் முகம் பீதியில் வெளுத்தது. அவன்விளக்கமாகச் சொல்என்று சொல்ல நினைத்தான். ஆனால் நாக்கு நகர மறுத்தது. சுசித்தார்த்தக் அவனுக்கு விளக்கினான். “ஒருவேளை சந்திரகுப்தனைக் கொல்ல நாம் போட்ட திட்டத்தை அவர் அறிந்து விட்டிருந்தால்? அறிந்து கோபம் கொண்டு அவர் எடுத்த நடவடிக்கையாகவே இது இருந்திருந்தால்? நீங்கள் நியாயம் கேட்கப் போனால்எப்போது எங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினீர்களோ அப்போதே நீங்கள் குற்றவாளிகளாகவும், எங்களுக்கு எதிரியாகியும் விட்டீர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்களேஎன்கிற வகையில் பேசினால்? உங்களையும் அந்த வகையிலேயே சேர்த்தால் உங்கள் உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?”

 

மலைகேதுவுக்குத் தலை சுற்றியது. எப்போதோ சாணக்கியர் சொல்லி இருந்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. “கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டேன். ஆனால் அதையே என் பலவீனமாக நினைத்து யாராவது எதிராகச் சதியில் ஈடுபட்டால் அதே வழியில் அவர்களைக் கையாளத் தயங்க மாட்டேன்” என்று அவர் ஆணித்தரமாகப் பேசியிருந்தார். இப்போது அவன் தந்தை சதியில் ஈடுபட்டதால் அதே வழியில் அவனைக் கையாண்டு விட்டாரோ? அவன் மெல்ல மஞ்சத்தில் உட்கார்ந்தபடி  பலவீனமாகக் கேட்டான். “இனி என்ன செய்வது?”

 

சுசித்தார்த்தக் சற்று யோசிப்பது போல் பாவனை காட்டி விட்டுச் சொன்னான். “எதற்கும் பிரதம அமைச்சர் ராக்ஷசரிடம் ஆலோசனை கேட்டு விட்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம் இளவரசே. எப்படியும் விடிவதற்கு முன் சாணக்கியர் எதுவும் செய்வதற்கில்லை.... அதற்குள் ஒரு முடிவெடுத்துச் செயல்படுவோம். நீங்கள் பொறுத்திருங்கள். நான் இத்தகவலை அவருக்குத் தெரிவித்து அவரது ஆலோசனையைப் பெற்று வருகிறேன்....”

 

சொல்லி விட்டு சுசித்தார்த்தக் வேகமாக அங்கிருந்து சென்றான். மலைகேதுக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. இது அவன் தாங்க முடிந்த கனமல்ல. சற்று யோசித்து விட்டு அவன் தந்தையின் காவலர்களை அழைத்துப் பேசினான். சுசித்தார்த்தக் சொன்னது போல் தான் நடந்திருக்கிறதா என்பதை அவன் அறிய விரும்பினான். காவலர்களும் சுசித்தார்த்தக் சொன்னதையே சொன்னார்கள். ’அரசர் தான் எங்களைப் போகச் சொன்னார், அதனால் தான் கிளம்பி வந்தோம்என்றும் அங்கிருந்து கிளம்புகையில் அனைவரும் கிளம்பிப் போயிருந்தார்கள். நடன அரங்கில் அரசரைத் தவிர வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லைஎன்றும் சொன்னார்கள்.   

 

தந்தை ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அவர்களை அங்கிருந்து அனுப்பி இருக்க வேண்டும் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் திட்டம் பிசுபிசுத்து விட்டதோ? சாணக்கியர் அதை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாரோ? சந்திரகுப்தன் உட்பட அனைவரும் சென்ற பின் தன் காவலர்களையும், சுசித்தார்த்தக்கையும் அனுப்பி விட்டு நடன அரங்கில் ஏன் தங்கினார் என்பது தெரிந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்கவாவது செய்யலாம். இப்போதோ குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது.

 

காலம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல் அவனுக்குத் தோன்றியது. என்னேரமும் எதிரிகள் வந்து அவனைத் தாக்கலாம் என்ற பயம் அவனுக்குள் எழ ஆரம்பித்தது. பயம் பலவிதமான கற்பனைகளால் கூடிக் கொண்டே போனது.

 

சிறிது நேரத்தில் சுசித்தார்த்தக் மூச்சிறைக்க ஓடி வந்தான். அவன் முகம் பேயறைந்ததைப் போல் இருந்தது. அவன் வந்து எதுவும் சொல்லாமல் மூச்சு வாங்கியபடியே நிற்க சுசித்தார்த்தக் பொறுமையிழந்து கேட்டான். “ராக்ஷசர் என்ன சொன்னார்?”

 

சுசித்தார்த்தக் மூச்சு வாங்கியபடியே சொன்னான். “அவரை.... அவரைப் பார்க்க முடியவில்லை இளவரசே

 

ஏன்?”    

 

அவரும் சற்று முன் தான் அவர் ஒளிந்திருந்த மறைவிடத்திலிருந்து தப்பித்துச் சென்றாராம்

 

ஏன்?”

 

அது தெரியவில்லை இளவரசே. அவர் இருக்குமிடம் பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார் என்று தெரிகிறது. அதனால் அவரும் ஆபத்தை உணர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.”

 

மலைகேது அதிர்ந்தான். அவனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவனுக்குப் புரியாமல் என்னென்னவோ இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு மறுபடியும் மண்டை வெடிப்பது போலிருந்தது. அவன் பரிதாபமாகக் கேட்டான். “இனி என்ன செய்வது?”

 

சுசித்தார்த்தக் சொன்னான். “என்ன செய்வதென்று நிதானமாக யோசிப்போம் இளவரசே, முதலில் உங்கள் உயிரை நீங்கள் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். உயிர் இருந்தால் தான் நீங்கள் எதாவது செய்ய முடியும். பிரதம அமைச்சரே உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பிச் செல்கிறார் என்கிற போது நீங்களும் அப்படியே செய்வது உத்தமம் என்று எனக்குத் தோன்றுகிறது இளவரசே

 

மலைகேது குழப்பத்துடன் யோசித்து விட்டுக் கேட்டான். “எப்படி இங்கிருந்து நான் தப்பிப்பது?”

 

அந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் இளவரசே. பாடலிபுத்திரத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பாகத் தப்பிக்க வைப்பது என் பொறுப்பு. முதலில் நீங்கள் மாறுவேடமிட வேண்டும். உண்மை உருவத்தோடு வெளிப்பட்டால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். நீங்கள் வணிகர் வேடமிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் முழு நம்பிக்கைக்குரிய காவலர்களை மட்டும் நம்முடன் அழைத்துச் செல்வோம். அவர்களும் நானும் பணியாட்கள் வேடத்தில் உங்களுடன் வருகிறோம். பாடலித்திர நகர வாயில் அதிகாலையில் திறந்தவுடன் முதல் ஆட்களாக இங்கிருந்து வெளியேறித் தப்பிப்போம்

 

மலைகேதுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யோசிக்கையில் உயிர் முதல் முக்கியம் என்று அவனுக்கும் தோன்றியது. ராக்ஷசரே இனி இங்கிருப்பது ஆபத்து என்று தப்பியோடுகையில் அவனும் அதையே செய்வது புத்திசாலித்தனம் என்று தோன்றியது. அவன் சம்மதித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்       

 




Monday, October 13, 2025

யோகி 124

 

டிட்டர் திவாகரனின் அலுவலகத்தை தினமும் சுத்தம் செய்யும் வேலைக்காரி வழக்கம் போல் காலை ஏழரை மணிக்கு வந்து அலுவலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சுமார் எட்டு மணியளவில் ஒரு முதியவரும், இளைஞனும் அங்கே வந்தார்கள். முதியவர் வேட்டி, சட்டை, தோளில் துண்டு என கிராமத்து உடையில் இருந்தார். உடன் வந்திருந்த இளைஞன் பேண்ட், ஷர்ட் அணிந்திருந்தான்.

 அலுவலகத்திற்குள் நுழைந்த அவர்களைப் பார்த்த வேலைக்காரி, அலுவலகத்தைக் கூட்டுவதை நிறுத்திஎன்ன வேண்டும்?’ என்பதைப் போல் பார்த்தாள்இளைஞன் அவளிடம் கேட்டான். “ஆபிஸ்ல எல்லாம் எத்தனை மணிக்கு வருவாங்க?”

 ஸ்டாஃப் எல்லாம் ஒன்பதரைக்கு வருவாங்க. ஆடிட்டர்கள் வர்றப்ப பத்து மணியாயிடும்என்று அவள் சொன்னதும் அந்த இளைஞன் முதியவரைப் பார்த்தான். முதியவர் யோசிப்பதாகக் காட்டிக் கொண்டு அலுவலகத்தை ஆராய்ந்தார். வலது புறம் வரிசையாக ஏழு நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாற்காலியில் தான் அலுவலகத்தின் பெரிய பூட்டோடு சாவிக் கொத்தையும் வேலைக்காரி வைத்திருந்தாள்.

 அதைப் பார்த்து விட்டு அவர்ஆடிட்டர் கிட்ட பேசிட்டு முடிவு செய்யலாம்என்று சொன்னபடியே அலைபேசியை எடுத்து அதைப் பார்த்தபடியே போய் சாவிக் கொத்து இருக்கும் நாற்காலிக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் தோளில் இருந்த துண்டை அவர் அந்த சாவிக் கொத்தின் மீது வைத்தார். பின் அலைபேசியில் அவர் எண்களை அழுத்த ஆரம்பித்தார். வேலைக்காரி மறுபடியும் கூட்ட ஆரம்பித்தாள்.

 ஹலோ சார்... நாங்க உங்க ஆபிஸ்க்கு வந்திருக்கோம்.... என்ன... சரியாய் கேட்கலை.... இருங்க வெளியே வர்றேன் என்று சொன்னபடி துண்டை எடுக்கும் சாக்கில் கொத்தாக அந்த சாவிக்கொத்தையும் இன்னொரு கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் பின்னாலேயே வெளியே வந்த இளைஞன் அவன் கையில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு சதுரப் பெட்டியை எடுத்தான்அதில் இளகிய மெழுகு இருந்தது. அவன் அவருக்கு எதிர்ப்பக்கம் நின்று கொண்டு அவர் நீட்டிய சாவி கொத்தை வாங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் அந்த இளகிய மெழுகில் பதிக்க ஆரம்பித்தான். உள்ளேயிருக்கும் வேலைக்காரி பார்த்தால் முதியவரின் முதுகுப் பக்கம் தான் தெரியும்படி அவர் மறைத்து நின்றிருக்க, தெருவில் போகும் ஓரிருவர் பார்த்தாலும் தெரியாதபடி மறைத்து இளைஞன் நின்றிருந்தான். ஒரு நிமிடத்தில் நான்கு சாவிகளின் அச்சை அவன் எடுத்து விட்டு, வேகமாக முதியவரின் துண்டினால் சாவிகளை நன்றாகத் துடைத்து மறுபடியும் அவரிடமே தந்தான்

 அவர் துண்டோடு அதை வாங்கிக் கொண்டு அலைபேசியில் பேசிக் கொண்டே மறுபடியும் உள்ளே வந்தார். “அப்படின்னா நாங்க ரெண்டு பேரும் டிபன் சாப்ட்டுட்டு பத்தரை மணிக்கு வர்றோம். எங்களுக்கு வேலையை முடிச்சுட்டு மூனு மணி பஸ்ல ஊர் போய் சேரணும்...” என்று சொல்லியபடி முன்பு அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்து துண்டோடு பக்கத்து நாற்காலியில் முன்பிருந்தபடியே சாவியைத் துண்டுடன் வைத்தார். திரும்பவும் துண்டை மட்டும் எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டபடி அவர் அந்த இளைஞனிடம் சொன்னார். “ஆடிட்டர் பத்தரைக்கு வரச் சொல்றார்...”

 அந்த இளைஞன் தலையசைத்தான். வேலைக்காரியிடம் அந்த இளைஞன் சொன்னான். “சரிம்மா. நாங்க அப்பறமா வர்றோம்.”

 அவள் தலையசைக்க அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். வேலைக்காரிக்கு எல்லாமே இயல்பாய் தான் தெரிந்தது. அவர்கள் வரவும், பேச்சும், நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

 

பிரம்மானந்தாவைச் சந்திக்க கல்பனானந்தா சென்ற போது அவர் தன் வெளியூர் பயணப் பிரதாபங்களை சமூக வலைத்தளப் பொறுப்பாளரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தத் துறவி தான் பிரம்மானந்தாவின் புகழை சமூக ஊடகங்களில் பரப்பும் குழுவின் தலைவர். அந்தக் குழுவினர் தான்கோபமூட்டும் கேள்விக்கு யோகிஜி அலட்டிக் கொள்ளாமல் பதிலடி’, ‘விஷமத்தனமான விமர்சகருக்கு மூக்குடைப்பு’, ’கடவுள் போல் சர்வசக்தி பெற யோகிஜி கூறும் சூட்சும வழிகள்’, ’யோகிஜியின் பக்தர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்கள்’ ’வெளிநாட்டில் பரவும் யோகிஜியின் புகழ்போன்ற தலைப்புகளில் இணையத்தில் கட்டுரைகளும், காணொலிகளும் வெளியிடுபவர்கள்.

 கல்பனானந்தா சென்ற போதும் அது போன்ற ஒரு காணொலிக்கான தகவலைத் தான் பிரம்மானந்தா அந்தத் துறவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அன்றிரவுக்குள் அந்தக் காணொலி வெளியாகிவிடும். அந்தக் குழுவினரே பல புனைப்பெயர்களில் நூற்றுக் கணக்கில் அந்தக் காணொலிக்கு உடனடியாகப் பாராட்டும், பிரமிப்பும் தெரிவிப்பார்கள். அதைப் பார்த்து விட்டு, இத்தனை பேர் பாராட்டும், பிரமிப்பும் தெரிவித்திருக்கிறார்கள் என்றால் அது உண்மையாகத் தானிருக்கும் என்று மற்றவர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவிப்பார்கள். சிலர் அவரைச் சந்திக்கத் துடிப்பார்கள். புகழ் சேர்ந்து பெருகுவது இப்படித்தான்...

 கல்பனானந்தாவைப் பார்த்ததும் பிரம்மானந்தர் அவரை அமரும்படி சைகை செய்து விட்டு அந்தத் துறவியிடம் அதுவரை சொல்லிக் கொண்டிருந்ததை, சுருக்கமாகச் சொல்லி அனுப்பி வைத்தார். அந்தத் துறவி போகும் போது கல்பனானந்தாவுக்கும் சேர்த்து வணக்கம் தெரிவித்து விட்டுப் போனார்

 கல்பனானந்தாவிடம் பிரம்மானந்தா தன் பயண விஷயங்களை ஒரு நிமிடம் சொல்லி விட்டு, ஷ்ரவனைப் பற்றி விசாரித்தார். பாண்டியனிடம் சொன்ன தகவல்களை கல்பனானந்தா அவரிடமும் சொன்னாள். பாண்டியன் விரிவாகவே அதைச் சொல்லியிருக்கிறார் என்பது, பிரம்மானந்தா அதைக் கேட்ட விதத்திலேயே அவளுக்குப் புரிந்தது. எல்லாவற்றையும் கேட்டு விட்டு பிரம்மானந்தா சொன்னார். “இன்றைக்கு சத்சங்க நேரத்தில் என்னைச் சந்திக்க அவனை இங்கே வரச் சொல்

 கல்பனானந்தா தலையசைத்தாள்இது புதிய துறவிகள் யாருக்கும் இதுவரை கிடைத்திருக்காத கௌரவம். ஷ்ரவன் உண்மையாக துறவறம் பூண்டு அமைதி காண யோகாலயம் வந்தவன் அல்ல என்பதும் அவளுக்கு நாளுக்கு நாள் உறுதியாகிறது. ஏதோ ஒரு  சக்தி அவன் வசமாகியிருக்கின்றது என்று அவள் நம்பினாள். அதோடு, துறவு அல்லாமல் வேறெதோ உத்தேசத்துடன் அவன் வந்திருக்கிறான் என்பதையும் அவளால் யூகிக்க முடிந்தது. அது என்ன என்பது தெரியா விட்டாலும், திட்டமிட்டு படிப்படியாக அவன் முன்னேறுவதை அவள் பார்க்கிறாள்வந்த முதல் வாரத்திலேயே அவன் பாண்டியனைச் சந்தித்துப் பேசியது மட்டுமல்லாமல், பிரம்மானந்தாவையும் சந்தித்துப் பேசப் போகிறான். இதெல்லாம் எதில் போய் முடியுமோ?

 மாலையில் ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது வந்த கல்பனானந்தா பிரம்மானந்தா அவனை வரச் சொன்னதைத் தெரிவித்தாள்வழக்கமாக அவளிடம் நடிக்கும் ஷ்ரவன், அவள் எதிரிகளின் ஆள் அல்ல என்பதால், அப்போது நடிக்க முற்படவில்லை. அவளுடைய முழு நம்பிக்கையையும் பெற விரும்பியதால் அவன் நடிக்காமல் வெறுமனே தலையசைத்தான். அவளுடைய நம்பிக்கையை முழுதாய்ப் பெற முக்தானந்தாவின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும் நல்லது என்று அவனுக்குத் தோன்றியதால் அவன் சொன்னான். “சுவாமி முக்தானந்தா உங்களைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்.”

 அவன் முக்தானந்தாவின் பெயரைச் சொன்னது அவளை மிகவும் பாதித்தது. பழைய நினைவுகளில் ஆழ்ந்தபடி அவள்மிக நல்ல மனிதர் அவர்என்று சொன்ன போது, அவள் குரல் கரகரத்தது. ஒருகாலத்தில் மணிக்கணக்கில் அவருடன் பேசிக் கொண்டிருந்தவள் அவள். ஆனால் அவருடன் பேசி நீண்ட காலம் ஆகிறதுஅதிகம் பேசாத அவர் அவனிடம் அவளைப் பற்றிச் சொல்லும் அளவு குறுகிய காலத்தில் அவனுடன் நெருக்கமாகி விட்டது அவளுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் அவனிடம் கேட்க நினைத்தாள். ’எப்படியிருக்கிறார் அவர்?’ ஆனால் யோகாலயத்திலேயே இருக்கும் அவள், சமீபத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்த அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்பது அபத்தம் என்று தோன்ற, அவள் மௌனமாக இருந்தாள்.

 கண்காணிக்கும் ஆள் சுமார் நூறடி தூரத்தில் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை நிமிடங்கள், எத்தனை வினாடிகள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைக் கூட அவன் பாண்டியனிடம் தெரிவிப்பான் என்பது கல்பனாவுக்குத் தெரியும். அதை ஷ்ரவனும் அறிவான் என்பதையும் அவள் யூகித்தாள்.

 ஷ்ரவன் செடிகளைக் காட்டிக் கொண்டே அவளிடம் தாழ்ந்த குரலில் கேட்டான். “நிஜ யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று நான் கேட்டதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை சுவாமினி.”

 செடிகளைப் பற்றி ஷ்ரவன் எதோ கேள்வி கேட்டதாகத் தான் கண்காணிப்பவனுக்குத் தோன்றும். கல்பனானந்தா சொன்னாள். “பார்த்திருக்கிறேன்.”

 (தொடரும்)

என்.கணேசன்

(வரும் தீபாவளியை ஒட்டி போனஸாக அடுத்த அத்தியாயம் 19.10.2025 மாலையில் வெளிவரும். வழக்கம் போல் திங்கள் அன்று அதற்கு அடுத்த அத்தியாயமும் வெளியாகும்)








Thursday, October 9, 2025

சாணக்கியன் 182

 

மாலையில் நடக்கவிருந்த நடன நிகழ்ச்சிக்கு மலைகேதுவால் செல்ல முடியவில்லை. காரணம் வயிற்றுப்போக்கு. மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரத்தில் ஆரம்பித்தது மாலை வரை நிற்கவேயில்லை. மதிய உணவு உண்டதில் ஏதாவது பிரச்சினை இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்தாலும் பர்வதராஜனும் அதே உணவைத் தான் உண்டான் என்பதும், அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்பதும் அந்தச் சந்தேகத்தை நிராகரித்தன. மலைகேது உணவில் சுசித்தார்த்தக் வயிற்றுப் போக்குக்கான மருந்துகளைக் கலந்திருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.

 

மலைகேது அந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு மிகவும் வருந்தினான். சுசித்தார்த்தக் நர்த்தகி விஷாகாவின் அழகு குறித்தும், நாட்டியம் குறித்தும் சொல்லியிருந்தவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில் அவன் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. அவன் முகவாட்டத்தைப் பார்த்து பர்வதராஜன் வாய்விட்டுச் சிரித்தான். ”நாம் எண்ணியது போல எல்லா சமயங்களிலும் நடந்து விடுவதில்லை மகனே. சிறிய விஷயங்களுக்கு எல்லாம் நாம் வருத்தப்பட ஆரம்பித்தால் நம் வருத்தங்களுக்கு ஒரு முடிவு இருக்காது. நீ இன்று ஓய்வெடுத்துக் கொண்டு இளைப்பாறு. நாளைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.”   

 

மலைகேது தலையசைத்தான். அவனை சுசித்தார்த்தக்கும் இரக்கத்துடன் பார்த்துச் சொன்னான். “ஆம் இளவரசே. மேலும் நீங்கள் அரியணை ஏறிய பிறகு எந்த நேரம் வேண்டுமானாலும் விஷாகாவின் நடனத்தைக் கண்டு களிக்கலாம்....”

 

மலைகேதுவுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. அவன் மீண்டும் தலையசைத்தபடி கழிவறைக்கு விரைந்தான்.

 

ர்வதராஜன் தனநந்தனின் நடன அரங்கைக் கண்டு மலைத்தான். இத்தனை அழகாய் இருக்கும் ஒரு அரங்கத்தை அவன் இது வரை பார்த்ததில்லை. செல்வத்தை இது போன்ற அழகுபடுத்தலுக்கெல்லாம் செலவழிப்பதில் தனநந்தன் கணக்குப் பார்ப்பதில்லை என்பது அரங்கைப் பார்க்கையிலேயே புரிந்தது.

 

நடன அரங்கில் அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் சரிசமமாக ஆசனங்களை வைத்திருந்தது அவனுக்குத் திருப்தியளித்தது. மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எனவே அவர்களது சில படைத்தலைவர்களும், முக்கிய அதிகாரிகளும் மட்டுமே வந்திருந்தார்கள். அனைவரும் அவன் வருவதைப் பார்த்து எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள்.  அவன் அமர்ந்த பின்னரே அமர்ந்தார்கள்.

 

இன்னும் சந்திரகுப்தன் அரங்கிற்கு வந்திருக்கவில்லை. தன் இருக்கையில் அமர்ந்தபடியே பர்வதராஜன் பார்வையைச் சுழல விட்டான். சந்திரகுப்தனைக் கொல்லப் போகிறவன் இந்த அரங்கிலேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நடன அரங்கின் மேல் மாடத்தில் துர்தராவும், அவளது தாயும் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் அவனை அங்கீகரிக்கவில்லை. அது அவனுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

சந்திரகுப்தன் அரங்கில் நுழைந்தான். பர்வதராஜனைத் தவிர அனைவரும் எழுந்து நின்றார்கள். ராஜகம்பீரத்தோடு அவன் நடந்து வருவதைப் பார்க்க பர்வதராஜனுக்குப் பொறாமையாக இருந்தது. ’மாடு மேய்ப்பவனுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரேன்என்று மனதில் அங்கலாய்த்தான். அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரசனானவனைப் போலவே சந்திரகுப்தன் நடந்து கொள்கிறான் என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. எல்லாம் ஓரிரு நாட்கள் தான் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.

 

அவனுக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவித்த சந்திரகுப்தன் தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.  ஆசனத்தில் அமர்ந்தவுடன் அவன் பார்வை மேல் மாடத்திற்குப் போனதையும், அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவளுடைய பார்வையுடன் பூட்டிக் கொண்டதையும் பர்வதராஜன் கவனித்தான். அதை அவனால் சகிக்க முடியவில்லை. “நடனம் ஆரம்பிக்கட்டும்என்று உரத்த குரலில் ஆணையிட்டான்.

 

சந்திரகுப்தன் பார்வையை விடுவித்துக் கொண்டான். தங்கப்பதுமை போல் விஷாகா நடந்து வர அரங்கில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அனைவரும் அவளை வைத்த கண் அகற்றாமல் பார்த்தார்கள். அழகு என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவள் போல் ஒய்யாரமாய் நடந்து வந்த விஷாகாவிடம் பலரும் மனதைப் பறி கொடுத்தார்கள். அவர்களில் பர்வதராஜனும் ஒருவனாக இருந்தான்.  சுசித்தார்த்தக் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டான்.

 

விஷாகாவுடன் ஆறு நடன அழகிகள் கூடவே வந்தாலும் அவள் அழகுக்கு முன் அவர்கள் அழகு பொலிவிழந்தது போலவே அவனுக்குத் தோன்றியது. அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு விஷாகா நடனமாட ஆரம்பித்தாள். பர்வதராஜன் அவள் அழகிலும் நடனத்திலும் தன்னை மறந்தாலும் இடையிடையே சந்திரகுப்தனைக் கவனிக்கத் தவறவில்லை. சந்திரகுப்தன் பாதி நடனத்தையும் பாதி துர்தராவையும் ரசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.


விஷாகாவின் பார்வையோ பர்வதராஜன் மேலேயே நிலைத்திருந்தது. அது மகிழ்ச்சியாக இருந்தாலும் பர்வதராஜனுக்கு ஆச்சரியத்தையும் அளித்தது.

 

மதுக்கோப்பைகளை ஏந்தி வந்த சுசித்தார்த்தக்கிடமிருந்து பர்வதராஜன் ஒரு மதுக்கோப்பையை வாங்கிக் கொண்ட போது சுசித்தார்த்தக் தாழ்ந்த குரலில்  சொன்னான். ”விஷாகா உங்களுக்காகவே நடனமாடுவது போலிருக்கிறது அரசே. எதிர்கால அரசர் நீங்கள் தான் என்று தெரிந்து கொண்டு உங்கள் மனதில் இடம் பிடிக்க அவள் முயற்சி செய்கிறாள் என்று நினைக்கிறேன்.”

 

அதைக் கேட்க பர்வதராஜனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. திடீரென்று இளமை திரும்பியது போல் அவன் உணர்ந்தான். சுசித்தார்த்தக் சொல்வது போல அவள் அவனையே பார்த்தபடி தான் ஆடுகிறாள். அவள் அழகனும், இளைஞனுமான சந்திரகுப்தனைக் கூட கண்டுகொள்ளாமல் அவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. அவள் அழகும், நளினமும் பர்வதராஜனை என்னென்னவோ செய்தன.  நீண்ட காலமாக போர் ஆயத்தங்களிலேயே கழித்து வந்ததால் சரச சல்லாபங்களுக்கு அவனுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. அவன் மற்ற அனைத்தையும் மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்.    

 

ஒரு நடனம் முடிந்து அவள் சற்று இளைப்பாறச் சென்று விட வேறு நர்த்தகிகளின் நடனங்கள் தொடர்ந்தன. ஆனால் அவளைப் பார்த்து ரசித்த பர்வதராஜன் கண்களுக்கு மற்ற நடனங்கள் சோபை தரவில்லை. மறுபடி அவள் ஆட வரும் வரை அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. மறுபடி அவள் ஆட ஆரம்பித்தவுடன் அவளைப் பார்த்தபடியே பர்வதராஜன் காலத்தை மறந்தான். மறுபடி அவள் சென்று மற்றவர்கள் ஆட ஆரம்பிக்க மறுபடி பர்வதராஜன் இருப்பு கொள்ளாமல் தவித்தான்.

 

அடுத்த மதுக்கோப்பையைக் கொண்டு வந்து தந்த சுசித்தார்த்தக் அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “மன்னர் தனநந்தர் இருந்த வரை விஷாகாவின் நடனத்தை இத்தனை பேர் பார்க்க அனுமதித்ததே இல்லை. அந்த அளவு அவள் மேல் அவர் மையல் கொண்டிருந்தார். இந்த நடன அரங்கில் வலது புற மூலையில் ஒரு கதவு தெரிகிறதல்லவா? அது இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பின் மன்னர் தங்கி இளைப்பாறும் அறையின் கதவு. நடனம் முடிந்த பின் அவளும் அங்கே சென்று விடுவாள்….”

 

பர்வதராஜன் அவனை அர்த்தத்தோடு பார்க்க சுசித்தார்த்தக் மெலிதாகப் புன்னகைத்தான். சிறிது நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள். விஷாகா பர்வதராஜனை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். பர்வதராஜனின் பார்வை அவள் பின்னாலேயே சென்றது. அவள் நடன அரங்கின் வலப்புற மூலைக் கதவைத் திறந்து சென்று மறைந்த போது அவன் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.

 

சந்திரகுப்தன் அவனருகே வந்து சொன்னான். “நீங்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி மிக அருமை பர்வதராஜனே. கண்களையும் மனதையும் குளிர வைத்து விட்டீர்கள். நான் இப்படியொரு அழகான நடன நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை.”

 

பர்வதராஜன் புன்னகைத்தான். ’சாவதற்கு முன் இது போன்ற சில சந்தோஷங்களையும் அனுபவித்து விடு சந்திரகுப்தாஎன்று மனதிற்குள் முணுமுணுத்தான். ஆனால் வாய் விட்டு எதாவது பேச ஆரம்பித்தால் சந்திரகுப்தன் சற்று அதிக நேரம் அங்கு தங்கி விட வாய்ப்பிருப்பதால் அவன் அதைத் தவிர்த்தான். சந்திரகுப்தன் விடைபெற்றுச் செல்ல சிறிது நேரத்தில் சுசித்தார்த்தக்கும், பர்வதராஜனின் சில காவலர்களும் மட்டும் தான் அங்கிருந்தார்கள்.

 

பர்வதராஜன் சொன்னான். “நீங்கள் நம் அரண்மனைக்குச் செல்லுங்கள். நான் பின்பு வருகிறேன்.”

 

அவர்களும் சென்று விட பர்வதராஜன் வலது மூலை கதவு நோக்கி வேகமாக நடந்தான். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த போது அங்கிருந்த மஞ்சத்தில் தங்கப் பதுமை போல் பேரழகோடு மெல்லிய ஆடை அணிந்து விஷாகா அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவனைப் பார்த்து அவள் நாணத்தோடு எழுந்து நிற்க, பர்வதராஜன் அருகே சென்று அவளை அணைத்துக் கொண்டபடி மஞ்சத்தில் அமர்ந்தான். அங்கிருந்த விளக்கொளியில் அவள் கண்கள் ஜொலித்தன. அவள் இதழ்களின் ஈரம் அவனை மயக்கின. ஆசையுடன் அவள் இதழ்களில் முத்தமிட்ட பர்வதராஜன் காலத்தை மறந்தான். சிறிது நேரத்தில் தொண்டையில் ஏதோ கசப்பையும், எரிச்சலையும் அவன் உணர்ந்தான். பின் உடலெல்லாம் அந்த எரிச்சல் பரவி உடல் படுவேகமாகப் பலவீனமடைய ஆரம்பித்தது. பர்வதராஜன் பீதியடைந்து அவளிடமிருந்து விலகி எழுந்திருக்க முயன்றான். அவனால் முடியவில்லை. அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தபடி மஞ்சத்தில் சரிந்த அவன் உடல் துடிக்க சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

 

  

(தொடரும்)

என்.கணேசன்