என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்...
என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, May 14, 2025
Monday, May 12, 2025
யோகி 102
சேதுமாதவன் வீட்டுக்கு ஒரு பெரிய காரில், சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு நபர் வந்திறங்கினார். காரில் ’போலீஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. கம்பீரமான தோற்றமும், மிடுக்கான நடையும் கொண்ட அந்த நபர் சேதுமாதவனிடம் தன்னை குற்றவியல் சிறப்புப் பிரிவு டி.எஸ்.பி குணசேகரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய அடையாள அட்டையையும் காட்டினார். சேதுமாதவன் வணக்கம் தெரிவித்து, அவரை அமரச் சொன்னார்.
நாற்காலியில் அமர்ந்த குணசேகரன் கேட்டார். “நீங்க தான்
டாக்டர் கிருஷ்ணமூர்த்தியா?”
“இல்லை. அது என்
மகன். இப்ப அவன் உயிரோட இல்லை. சில மாசங்களுக்கு
முன்னாடி தற்கொலை பண்ணிகிட்டான்.” என்று சேதுமாதவன் சொன்னார்.
குணசேகரன் முகத்தில் அதிர்ச்சியும், இரக்கமும்
கலந்து தெரிந்தன. பின் மெல்லச் சொன்னார். “க்ரைம்
ப்ராஞ்ச் ஸ்பெஷல் விங்ல ஒவ்வொரு வருஷமும், போலீஸ்
ஸ்டேஷன்கள்ல கொடுக்கப்பட்ட கேஸஸ்ல சிலதை எடுத்து அதெல்லாம் சரியாய் விசாரிக்கப்பட்டிருக்கான்னு
இன்ஸ்பெக்ஷன் பண்றது வழக்கம். அந்த வகைல
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் மகள் சைத்ரா உயிருக்கு ஆபத்துன்னு சந்தேகப்பட்டு கொடுத்த
புகாரும் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கு. அதனால அதை விசாரிக்க
தான் நான் வந்திருக்கேன்.”
சேதுமாதவன் வறண்ட குரலில் சொன்னார். “கிருஷ்ணமூர்த்தியும்
உயிரோட இல்லை. சைத்ராவும் உயிரோட இல்லை.”
குணசேகரன் ஒரு குறிப்பேடும் பேனாவும்
எடுத்துக் கொண்டே கேட்டார். “என்ன ஆச்சு?”
சேதுமாதவன் சொன்னார். “கோர்ட்ல
ஹேபியஸ் கார்பஸ் கேஸ் போட்டோம். சைத்ராவை அவங்க கோர்ட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. தனக்கு
ஆபத்து எதுவும் இல்லைன்னு அவள் கோர்ட்டில் சொன்னாள். அதோட அந்தக்
கேஸ் முடிஞ்சுடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு கோவிட்ல அவள் இறந்துட்டாள். அந்த துக்கம்
தாங்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தியும் இறந்துட்டான்.”
குணசேகரன் தன் குறிப்பேட்டில் எதையோ
எழுதிக் கொண்டே கேட்டார். “உங்கள் பேத்தி மரணத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“இல்லை”
குணசேகரன் சொன்னார். “ஏதாவது
கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீங்கள் என் கிட்ட தாராளமாய் சொல்லலாம். நாங்க மேல்மட்டத்துல
ரகசியமாய் மறுவிசாரணை செய்ய முடியும். சந்தேகம் ஏதாவது
வந்து தனிப்பட்ட முறையில உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் தனியார் யாரையாவது ஏற்பாடு
செய்திருந்தாலும் அதை மறைக்காமல் சொல்லணும். அப்படி
ஏதாவது இருந்து நீங்கள் சொல்லலைன்னா அது, போலீஸ் கிட்ட உண்மையை
மறைக்கற மாதிரியாயிடும். சட்டப்படி அது குற்றம்.”
சேதுமாதவன் விரக்தியாகச் சொன்னார். “வழக்கு, விசாரணைக்கெல்லாம்
ஏற்பாடு செய்ய எனக்கு மனசு, பணம், காலம் மூனுமே இல்லை. எனக்கும்
சாவு வந்து அவங்க கூட நானும் போய்ச் சேர்ந்துக்கணும்கிற ஒரு ஆசை மட்டும் தான் இப்ப
இருக்கு.”
குணசேசகரன் முகத்தில் இரக்கத்தைக் காட்டி
விட்டுச் சொன்னார். “உங்களுக்குப் பதிலாய், உங்கள்
சார்பாய், வேற யாராவது அது சம்பந்தமான முயற்சி எடுத்துகிட்டு இருக்காங்களா?”
“என்னைத்
தவிர வேற யாருமே இங்க இல்லையே”
குணசேகரன் யோசனையுடன் சில வினாடிகள்
மௌனமாய் இருந்துவிட்டுக் கேட்டார். ”உங்களுக்கு அந்த
வழக்கு சம்பந்தமாய் ஏதாவது சந்தேகம் இருக்கா?”
“இல்லை.”
குணசேகரன் சொன்னார். “அப்படின்னா, அந்த வழக்கு
விசாரணை சம்பந்தமாய் உங்களுக்கு யார் மேலயும், புகாரோ, சந்தேகமோ
இல்லைன்னும் மறு விசாரணைக்கு அவசியம் இல்லைன்னும் நான் எழுதிக்கலாமா?”
“தாராளமாய்
எழுதிக்கலாம்.”
குணசேகரன் வணக்கம் தெரிவித்து விட்டுக்
கிளம்பினார். அவர் கார் ஏறிக் கிளம்புகையில் சேதுமாதவன் அந்தக் காரின்
எண்ணை மனதில் குறித்துக் கொண்டார். பின் வீட்டுக்குள்
வந்தமர்ந்து முதல் வேலையாக ஷ்ரவன் கொடுத்திருந்த அலைபேசி எண்ணுக்குப் போன் செய்தார்.
நான்கைந்து முறை அடித்த பிறகு போன்
எடுக்கப்பட்டது. மறுபக்கத்திலிருந்து எந்தச் சத்தமும் இல்லை. மறுபக்கத்திலிருந்து
பதில் எதுவும் வராது என்று ஷ்ரவன் முன்பே சொல்லி இருந்ததால் சேதுமாதவன் நேரடியாக விஷயத்தை
விரிவாகச் சொல்லி, அந்தப் போலீஸ் வாகனத்தின் எண்ணையும் சொல்லி வைத்து விட்டார்.
வந்து விசாரித்த காரணம் தெரியா விட்டாலும், வந்து போன
ஆள் போலி என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை.
பாண்டியனிடம் கண்ணன், தங்கள்
ஆள் சேதுமாதவனிடம் போய்ப் பேசி விட்டு வந்த பேச்சின் ஒலிப்பதிவைத் தந்தார். அதை முழுவதுமாகக்
கேட்டு விட்டு பாண்டியன் சொன்னார். “கிழவன் அழுத்தக்காரனாய்
இருப்பான் போலருக்கு”
“அப்படி
இல்லாட்டி மகன், பேத்தி இறந்ததுக்கப்பறமும் கிழவன் உயிரோட இருக்க முடியுமா?” கண்ணன்
சொன்னார்.
ஆமென்று தலையசைத்த பாண்டியன் கேட்டார். “நம்ம யோகாலயத்தை
வேவு பார்க்கறது யார்னு ஏதாவது துப்புக் கிடைச்சுதா?”
“இல்லை. அவங்க போலீஸ், சிபிஐ, பெரிய துப்பறியும்
நிறுவனம் இதில் ஏதாவது ஒன்றாய் இருக்கலாம். அவங்க வேவு
பார்க்கும் விதத்துல அந்த அளவு புத்திசாலித்தனம் தெரியுது”
அந்தத் தகவல் பாண்டியனை யோசிக்க வைத்தது. அவர் சொன்னார். “ஆனால் அந்தக்
கிழவன் மேல நாம சந்தேகப்படறதுலயும் அர்த்தமில்லை. இந்த அளவு
செல்வாக்கு உள்ள ஆளாய் அவன் இருந்திருந்தால் அவன் ஆரம்பத்துல பேத்தி, மகன் இருக்கறப்பவே
பயன்படுத்தியிருக்கலாமே?”
கண்ணன் சொன்னார். “அது தான்
குழப்பமாயிருக்கு.”
பாண்டியன் பற்களைக் கடித்துக் கொண்டு
சொன்னார். “வேவு பார்க்கறதுல எவனாவது ஒருத்தன் நம்ம கைல கிடைச்சாலும்
போதும். கண்டுபிடிச்சுடலாம்”
கண்ணன் சொன்னார். “எல்லாருக்கும்
தெரியற மாதிரி பிடிக்கறதா இருந்தா எப்படியாவது பிடிச்சிரலாம். ஆனால் இப்ப
ரோட்டுல போறவன் வர்றவன் கைல எல்லாம் மொபைல் ஃபோன் இருக்கு. என்ன நடந்தாலும்
வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போட்டு விட்டுடறான்க. அதனால தான்
ரொம்ப யோசிக்க வேண்டியதாயிருக்கு. இதுவே யோகாலயத்துக்கு உள்ளேன்னு சொன்னால் நாம் யோசிக்கவே
வேண்டியதில்லை.”
அன்று மாலை ஷ்ரவன் தோட்ட வேலை முடிந்து வந்த பின், மூவரும்
சத்சங்கத்திற்குக் கிளம்பினார்கள். ஒரே சமயத்தில் செல்வதால், பக்கத்து
அறைகளிலிருந்து வரும் துறவிகளும் சற்று முன்னும் பின்னும் அவர்களுடன் வந்தாலும் துறவிகளுக்கு
இடையே புன்னகையைத் தவிரக் கூடுதலாக பேச்சுகள் இருக்கவில்லை. சித்தானந்தாவே
கூட அறைக்குள்ளே அவனுடன் இயல்பாகப் பேசினாலும் அறைக்கு வெளியே அவனுடன் அதிகம் பேசுவதைத்
தவிர்த்தார். பேசினால் அழைத்துக் கண்டிப்பார்களோ என்னவோ என்ற சந்தேகம்
ஷ்ரவனுக்கு வந்தது.
அன்றைய சத்சங்கத்தில் துறவி யாரும்
பேசுவதற்குப் பதிலாக பிரம்மானந்தா ஐ ஐ டி டில்லியில் பேசிய பேச்சு ஒன்றை ஒளிபரப்பினார்கள். தலைப்பு “யோகாவும், தியானமும்
நவீன காலத்திற்கு எந்த அளவு உதவும்?”. அதுகுறித்து, யோக சூத்திரங்களிலும், மற்ற நூல்களிலும்
சொல்லப்பட்டவற்றை அதில் அழகாகப் பேசியிருந்தார் பிரம்மானந்தா. ஆனால் வழக்கமாகவே
தன் பராக்கிரமங்களையும், அசாதாரண சக்திகளையும் கூச்சமில்லாமல் பறைசாற்றும் பிரம்மானந்தா
அந்தக் காணொலியில் தன் கற்பனையைப் பறக்க விட்டிருந்தார்.
“நான் கோரக்கரால்
அழைக்கப்பட்டு சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருளால் நனைக்கப்பட்ட அந்த சம்பவத்திற்குப்
பின், நான் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் என்னைப் பார்த்தவர்களுடைய
கண்கள் கூசும். அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத்
தாழ்த்திக் கொள்வார்கள். அந்த அளவு என்னுடைய யோகசக்தி என்னை ஒளிமயமாக்கி இருந்தது. இது எனக்கே
தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் என் இறைவன் சுந்தர மகாலிங்கத்தை வேண்டி என் யோகசக்தியின்
வீச்சை குறைத்துக் கொண்டேன். என் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால்
என் எதிரே நீங்கள் இத்தனை பேர் உட்கார்ந்திருக்க முடியாது. இதை ஏன்
சொல்கிறேன் என்றால் யோகசக்தியின் வலிமை எல்லையில்லாதது. அந்த யோகசக்தியை
மட்டும் நீங்கள் பெற்று விட்டால் எதிலும் உங்களுக்கு உங்கள் கற்பனை தான் எல்லையாக இருக்க
முடியும்...”
இந்தக் காணொளியை ஷ்ரவன் இதுவரை பார்த்திருக்கவில்லை. இது அவர்
சில நாட்களுக்கு முன் பேசியதாக இருக்க வேண்டும். ஷ்ரவன்
மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அதை உணர்ந்தவர் போல் அவனுக்கு இரண்டு வரிசை முன்பாக அமர்ந்திருந்த
முக்தானந்தா திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தார். அவன்
பிரம்மானந்தாவின் காணொளியில் மூழ்கியிருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அவர் மறுபடி திரும்பிக்
கொண்டார்.
சாதாரணமாக எதையும் அதிகமாய் லட்சியம் செய்பவராகத் தோன்றாத அவர், பிரம்மானந்தரின் அந்தப்
பேச்சை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்த்தது போல் தான் அவனுக்குத் தோன்றியது.
புதிராய் மட்டுமல்லாமல், வில்லங்கமாகவும் இருக்கிறாரே
என்று ஷ்ரவன் மனதில் எண்ணிக் கொண்டான்.
Thursday, May 8, 2025
சாணக்கியன் 160
“ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போல் தோன்றுகிறது பிரபு. அதற்கான சூழலை என் உள்ளுணர்வால் உணர முடிகிறது. ஆனால் எது என்னவாக இருக்கும் என்று குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியவில்லை” என்று ஒற்றர் தலைவன் சொன்ன போது ராக்ஷசரால் அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. காரணம் அந்த ஒற்றர் தலைவன் மிக நீண்ட கால அனுபவம் கொண்டவன். அவனுடைய வேலையில் உள்ளுணர்வு மிக முக்கியமான அம்சம். அப்படிப்பட்ட அனுபவஸ்தனின் உள்ளுணர்வு ஒன்றைச் சொல்கிறது என்றால் அது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை.
“எதனால் அப்படித்
தோன்றுகிறது? அப்படித் தோன்றும்படியாக இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று ராக்ஷசர்
கேட்டார்.
“இளவரசர் சுதானு
அரண்மனைக் காவல் வீரர்களில் பெரும்பானவர்களை மாற்றி விட்டார். புதிதாக வந்திருக்கும்
எல்லாருமே அவருடைய ஆட்களாக இருக்கிறார்கள் பிரபு”
“புதிய பொறுப்பை
எடுத்துக் கொண்டவன் தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களை நியமிப்பது இயல்பேயல்லவா?”
“உண்மை பிரபு. ஆனால்
ஏதோ ஒரு ரகசிய சதி நடக்கவிருப்பதற்கான சூழலை அந்தப் புதியவர்கள் கண்களிலும், செயல்களிலும்
என்னால் காண முடிகிறது”
ராக்ஷசர் நாளை
காலையே சென்று ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். திடீரென்று
இன்னொரு பாதுகாப்பு நிலவரமும் அறிந்து கொள்ள நினைத்து அவர் கேட்டார். “எதிரிகளின் முற்றுகையை
நம் வீரர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்.”
“இதுவரை திறமையாகவே
சமாளித்து வருகிறார்கள் பிரபு. இருபக்கமும் சிறுசிறு தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன
என்றாலும் எதிரிகள் கை இன்னும் ஓங்கவில்லை. அவர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்த எதற்கோ
காத்துக் கொண்டிருக்கிறாற் போல் இருக்கின்றது. ஆனால் அப்படி அவர்கள் தாக்கினாலும் திருப்பித்
தாக்க நம்மவர்கள் தயார்நிலையில் தான் இருக்கிறார்கள்.”
“சந்திரகுப்தனும்,
விஷ்ணுகுப்தரும் வெளிப்பட்டு விட்டார்களா?
“இல்லை பிரபு”
அது தான் ராக்ஷசருக்கு
நெருடலாக இருந்தது. ஏன் இன்னும் மறைந்தே இருக்கிறார்கள்? தீவிரமாகத் தாக்குதல் ஆரம்பிக்கும்
முன் வெளிப்படலாம் என்று காத்திருக்கிறார்களோ? இல்லை வேறெதாவது உத்தேசம் இருக்குமா?
இன்று காலை தான்
ராக்ஷசர் கலிங்க மன்னனிடம் தூதனுப்பியிருக்கிறார். கலிங்கத்துடன் போர் புரியும் உத்தேசம்
தங்களிடம் சிறிதும் இல்லையென்றும், எதிரிகள் தவறான தகவலைக் கசிய விட்டதால் தற்காப்பு நடவடிக்கையாகத்
தான் அங்குள்ள எல்லையில் படைகளை நிறுத்தியதாகவும், இப்போது உண்மையை அறிந்து கொண்டு
விட்டதால் படைகளைத் திருப்பிக் கொள்வதாகவும், அவர்களும் அப்படியே செய்து இரு தேசங்களுக்கிடையே
இருக்கும் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார்.
கலிங்க மன்னன் அதை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கிருக்கிறது. கலிங்க எல்லையிலிருந்து
அவர்கள் படை திரும்பி வரும் வரை எதிரிகளின் முற்றுகையைத் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும்.
அது முடியும் என்றும், அதற்கு முன் எதிரிகள் தாக்கினாலும் கூட அவர்களைச் சமாளிக்க முடியும்
என்றும் பத்ரசால் உறுதி கூறியிருந்தான்....
“மற்ற நம் எல்லைகளில்
என்ன நிலவரம்?”
”அங்கு போர் துவங்கி
விட்டது பிரபு. மேற்கில் காஷ்மீர மன்னனுடனான போரில் நம் கை ஓங்கியிருக்கிறது. வடக்கில்
சிராவஸ்தி அருகிலான போரில் இரு பக்கங்களும் சரிசமமாக இருக்கின்றன.”
சுதானுவிடமும், பத்ரசாலிடமும் சின்ஹரன்
சொல்லிக் கொண்டிருந்தான். “எந்தவொரு வெற்றியும், தகுந்த
சமயத்தில் சரியாகச் செயல்படுவதிலேயே இருக்கிறது. செயல்படும்
போதும் கண நேரங்களும் மிக முக்கியமானவை தான். சிறிது
தாமதமானாலும் நம் முயற்சிகள் தோற்றுப் போய் விளைவுகள் நமக்கு எதிராக மாறிவிடும் வாய்ப்புகள்
உண்டு. அதனால் நாம் நிச்சயித்த வேலையை நிச்சயித்த நேரத்தில் முடித்து
விடுவது முக்கியம்.”
சுதானு சொன்னான். “அதை நான்
வீரர்களிடம் பல முறை சொல்லி அவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறேன் நண்பரே. தந்தையும், ராக்ஷசரும்
எனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடியான திட்ட ஏற்பாடுகளை
நீங்கள் சொல்லி விட்டீர்கள். இப்போது என் கவலையெல்லாம் வெளியே முற்றுகை
இட்டிருக்கும் எதிரிகளை எப்படிச் சமாளிப்பது என்பதில் தான் இருக்கிறது. இங்கே வெற்றி
பெற்று அவர்களிடம் நான் தோற்று விட்டால் எல்லாமே பறிபோய் விடுமே.”
“அதைப் பற்றிய
கவலையை விடுங்கள் இளவரசே. இங்கு அரியணையில் அமரும் ஆள் மாறுவதால் வெளியே உள்ள எதிரிகளைச்
சமாளிக்கும் விதத்தில் எந்த மாறுதலும் ஏற்பட்டு விடப் போவதில்லை. எதிரிகள் பெரும்படையுடன்
வெளியே வந்திருந்தாலும் நம்மைத் தீவிரமாகத் தாக்காமல் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்
அவர்கள் சந்திரகுப்தனின் வருகைக்காகக் காத்திருப்பது போல் தெரிகிறது. சந்திரகுப்தன்
சிராவஸ்தியில் தான் இருக்கிறான் என்று தோன்றுகிறது. அவன் உங்கள் படைகளை அங்கு வென்று
விட்டு இங்கே வரும் வரை எதிரிப்படை இங்கு மும்முரமாகத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், அப்படி அவர்கள்
தாக்க ஆரம்பித்தாலும் சிறிது காலம் சமாளிக்க இப்போதிருக்கும் உங்கள் படை தாராளமாகப்
போதும். கலிங்க எல்லையிலிருந்தும் உங்கள் படை வந்ததும் நாமே கூட தீவிரத் தாக்குதலை
ஆரம்பிக்கலாம். அதனால் இப்போதைக்கு அது பற்றிய கவலையை விடுங்கள். இப்போது
நம் முழு கவனமும் நீங்கள் அரியணையில் அமர்வதற்கான இலக்கிலேயே இருப்பது தான்
புத்திசாலித்தனம்..”
பத்ரசாலுக்கும், சுதானுவுக்கும் அவன்
சொன்னது சரியாகவே பட்டது. எல்லாக் கோணங்களிலிருந்தும் தெளிவாகச் சிந்திக்கும் கார்த்திகேயனைப்
போன்ற ஒருவன் இந்தச் சமயத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருப்பது தங்கள் பாக்கியம் என்றே
அவர்கள் நினைத்தார்கள். அரண்மனையில் முன்கூட்டியே
சில வீர்ர்களைத் தயார் நிலையில் நிறுத்தியாகி விட்டது. நடுநிசியில்
தான் தங்கள் திட்டத்தை ஆரம்பிப்பது என்று அவர்கள் தீர்மானித்திருந்ததால் நடுநிசியாகும்
வரை பொறுமையாகக் காத்திருந்தார்கள்.
சுகேஷின் அறைக்கதவு மெல்ல தட்டப்பட்ட போது அவன் மதுமயக்கத்தில்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். கனவில் எங்கோ கதவு தட்டப்படுவது போல் அவனுக்குக் கேட்டது. உட்கார்ந்தபடியே
உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய தனிக்காவலன்
மெல்ல எழுந்து யாரென்று பார்க்கச் சென்றான்.
அவன் கதவைத் திறந்து பார்த்த போது வெளியே
சுகேஷின் காவலர்கள் இருக்கவில்லை. சுதானுவும் சின்ஹரனும் வேறு சில வீர்ர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சுதானு
சைகையாலேயே அவனை வெளியே போகுமாறு கட்டளையிட்டான். ஏதோ முக்கியமாய்
சகோதரர்கள் பேசப் போகிறார்கள் என்று நினைத்தபடியே அந்தக் காவலன் வெளியே சென்றான். சுதானுவும், சின்ஹரனும்
இரண்டு வீரர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றார்கள்.
இரண்டு வீரர்களும் இருபக்கங்களிலும் சுகேஷின் கை கால்களை இறுக்கப்
பிடித்துக் கொள்ள சுகேஷ் அரைமயக்கத்துடன் கண்விழித்துப் பார்த்தான். எதிரே சுதானு தெரிந்தான்.
அவன் என்னவென்று கேட்க வாயைத் திறக்க முற்பட்டான். அவன் தலைமாட்டில் இருந்த சின்ஹரன் அவன் வாயை இறுக்க மூடினான். அப்போது தான் சுகேஷ் ஆபத்தை உணர்ந்து கண்களை விரித்துப் பார்த்தான்.
சுதானு தன் இடுப்பில் இருந்த கூரிய குறுவாளை எடுத்து சுகேஷின் மார்பில்
வேகமாகக் குத்த, சுகேஷின் இதயத்தில் அந்த வாள் ஊடுருவியது.
அவனுடைய பலத்த திமிறல்களை அடக்க அந்த வீரர்களும், அவனுடைய கூக்குரலை அடக்க சின்ஹரனும் தங்கள் முழுபலத்தையும் பிரயோகிக்க வேண்டியிருந்தது. வேகமாக சுகேஷ் உயிரிழந்தான்.
தனநந்தனின் உறக்கம் வெளியே ஏற்பட்டிருந்த
சத்தங்களால் கலைந்தது. அவன் படுத்திருந்தபடியே காதுகளைக் கூர்மையாக்கினான். வெளியே வீரர்கள் அங்குமிங்கும் ஓடும் சத்தம் கேட்டது. நள்ளிரவு
நேரத்தில் இப்படி வீரர்கள் ஓடுவது இயல்பானதாக இல்லாததால் அவன் துணுக்குற்றான். இனம்
புரியாத பயம் ஒன்று அவன் மனதைக் கவ்வியது. என்ன நடக்கிறது?...
இதயம்
படபடக்க அவன் சாமரம் வீசிக் கொண்டிருந்த பணிப்பெண்களிடம் சொன்னான்.
”காவலர்களிடம் என்ன சத்தம் என்று பார்க்கச் சொல்”
ஒரு பணிப்பெண் சென்று அவன் அறைக்கு வெளியே இருந்த காவலர்களிடம்
மன்னரின் கட்டளையைச் சொன்னாள். அந்தக் காவலர்களில் ஒருவன் வெளிக்கதவைத்
திறந்த போது வெளியே சுதானு நின்றிருந்தான். அவன் தாழ்ந்த குரலில்
மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாவனையில் சொன்னான். ”எதிரியின் வீரர்கள் சிலர் அரண்மனைக்குள் ரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள்.
அவர்களைச் சிறைப்படுத்தும் வரை அரசரைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.
யார் கதவைத் தட்டினாலும் என் குரல் கேட்காமல் கதவைத் திறக்காதீர்கள்.
யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள். அரசரிடமும்
எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் சொல்லும் வரை வெளியே வரவேண்டாம் என்று சொல்லுங்கள்.”
காவலன் கலவரமடைந்து தலையசைத்து வேகமாகக் கதவைச் சாத்தி தாளிட்டான். அவன் சென்று தகவலைச் சொல்ல
தனநந்தன் திகைத்தான். எதிரியின் ஆட்கள் அவன் அரண்மனைக்குள் வரை
வந்து விட்டது அவனை அதிர வைத்தது. ஆனால் சுதானு அதைக் கண்டுபிடித்து
எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவது அவனுக்குத் திருப்தி
அளித்தது. “சுதானு கோபக்காரன் என்றாலும் சுறுசுறுப்பாகவும்,
புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறான்” என்று மனதிற்குள்
இளைய மகனை சிலாகித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
Monday, May 5, 2025
யோகி 101
அன்று காலை உணவுக்குப் பின் முக்தானந்தாவும், சித்தானந்தாவும்
தங்களுடைய வேலைகளுக்குச் செல்ல, ஷ்ரவன் அலுவலகத்திற்குச் சென்றான். அது பெரிய
அலுவலகம். வாசலிலேயே இருந்த இளம் துறவி ஒருவர் முதலில் உள்ள அறையிலேயே
அவனை உட்காரச் சொன்னார். அதற்குப் பின்னும் இரண்டு அறைகளும், ஒரு பெரிய
ஹாலும் அவற்றில் நிறைய கம்ப்யூட்டர்களும் இருப்பதை ஷ்ரவன் கவனித்தான்.
சிறிது நேரத்தில் பாண்டியனும், கண்ணனும்
வந்தார்கள். பெரும்பாலும் இது போன்ற வேலைகள் ஒதுக்கும் வேலைக்கெல்லாம்
பாண்டியன் வருவதில்லை. கண்ணன் தான் அதைச் செய்வார். ஆனால் ஷ்ரவனை
நேரில் பார்த்துப் பேசும் ஆர்வம் பாண்டியனுக்கு வந்திருந்தது. என்ன தான்
காமிராவில் பார்த்தாலும் நேரில் பார்த்துப் பேசுவதற்கு ஈடாகிவிடாது என்று அவர் உறுதியாக
நம்பினார். மனிதர்களை துல்லியமாக எடை போட நேரில் பார்த்துப் பேசுவது
மட்டுமே உதவும் என்பது அவருடைய அபிப்பிராயமாக இருந்தது. அதனால்
தான் அவர் மற்ற வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு வந்தார்.
ஷ்ரவன் எழுந்து நின்று இருவரையும் வணங்கினான். கண்ணன்
பாண்டியனை ஷ்ரவனுக்கு அறிமுகப்படுத்தினார். “இங்கே பொது
நிர்வாகம் செய்வது ஐயா தான்” என்றார். ஷ்ரவன் மீண்டும்
கைகூப்பினான். பாண்டியன் பார்வை அவனை ஊடுருவிப் பார்த்தது.
ஒரு படிவம் தந்து அதை நிரப்பித் தரும்படி
கண்ணன் சொன்னார். அதில் ஷ்ரவனுக்கு இருக்கும் திறமைகளும், விருப்பங்களும்
கேட்கப்பட்டிருந்தன. ஷ்ரவன் முதல் திறமையாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு என எழுதினான். இணைய வைரஸ்
மற்றும் ஹேக்கிங்கிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழிந்த
டேட்டாக்களை மீட்டுத் தருவதில் திறமையுள்ளதாக எழுதினான். அவனுடைய இதற்கு முந்தைய உத்தியோகம் அதுவாகத் தான் இருந்தது
என்றும் எழுதினான்.
அடுத்ததாக கடிதப்போக்குவரத்தில் தனக்கு
அனுபவம் நிறைய இருப்பதாய் எழுதினான். கடைசியாக தோட்ட
வேலை அவனுக்கு மிகப்பிடித்த பொழுதுபோக்கு என்று எழுதினான்.
அவனிடமிருந்து அந்தப் படிவத்தை வாங்கியபடி
கண்ணன் சொன்னார். “நீங்கள் எழுதியிருக்கும் வேலைகளில் ஒன்றைத் தர முயற்சி செய்வோம். ஆனால் அதையே
தான் தருவோம் என்று உத்தரவாதம் தரமுடியாது. எங்களுக்கு
ஆட்கள் தேவைப்படும் வேலையைத் தான் தரமுடியும்”
ஷ்ரவன் தலையசைத்து விட்டுச் சொன்னான். “எனக்கு
நீங்கள் கூட்டித் துடைக்கும் வேலையையோ, கழிவறை கழுவும்
வேலையையோ தந்தால் கூட அந்த வேலையையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்.”
பாண்டியனுக்கு ஷ்ரவனின் பதில் மிகவும்
பிடித்திருந்தது. படித்தவர்கள் நிறைய பேர் இப்படிச் சொல்ல முடிந்தவர்களாய்
இருப்பதில்லை. ஆனால் அவர் சிலாகித்தது அவர் முகத்தில் வெளிப்படவில்லை. ஆரம்பத்தில்
பைத்தியக்காரனாகத் தெரிந்த இந்த இளைஞன், அவர் நினைத்த அளவு
பைத்தியக்காரன் இல்லையோ என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.
கண்ணன் ஷ்ரவன் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததைப்
படித்து விட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். பாண்டியன்
தலையசைத்தார்.
முதல் வேலையை அவர் அவருடைய முழுநம்பிக்கைக்குப்
பாத்திரமான ஒருசில ஆட்களுக்கு மட்டுமே தரமுடியும். அதனால்
அதை அவர் ஷ்ரவனுக்குத் தர வாய்ப்பே இல்லை. கம்ப்யூட்டர்
பயன்படுத்திச் செய்யும் சில அன்றாட வேலைகளை வேண்டுமானால் அவனிடம் தரலாம். யார் யாருக்கு
என்னென்ன வேலையை இன்று ஒதுக்கியிருக்கிறார்கள் என்று பதிவு செய்து கொள்வது போன்ற வேலைகளில்
ரகசியம் காக்க எதுவும் இல்லை. மேலும் அது தனி கம்ப்யூட்டரில் செய்யும் வேலை. மற்ற கம்ப்யூட்டர்களுடன்
அது தொடர்பில் இல்லை. அதனால் அதில் வேலை செய்யும் போது மற்ற முக்கிய கம்ப்யூட்டர்களின்
டேட்டாக்களைப் பார்க்க வழியில்லை. இப்போதைக்கு அதைச் செய்ய வேறு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு
வேறு வேலை தரும்போதோ, அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத போதோ வேண்டுமானால் ஷ்ரவனுக்கும்
அந்த வேலையை ஒதுக்கலாம்.
இரண்டாவது வேலை முதல் வேலை அளவுக்கு
அதிமுக்கியத்துவம் வாய்ந்த வேலை அல்ல என்றாலும் அந்த வேலையையும் அவரால் புதியவர்களுக்குத்
தர முடியாது. அவர்களுடைய எத்தனையோ முக்கியத் தகவல்களைத் தெரிவித்துவிடக்கூடிய
வேலை அது. மூன்றாவதான தோட்ட வேலையில் பிரச்சினை இல்லை.
அதனால் இப்போதைக்கு ஷ்ரவனுக்குத் தோட்ட
வேலை ஒதுக்கப்பட்டது. அதைத் தெரிவித்த கண்ணன் ஷ்ரவனிடம் தொடர்ந்து சொன்னார். “சில குறிப்பிட்ட
நாட்களில் எங்களுக்கு வேறு ஒரு வேலைக்கு ஆள் தேவைப்படும். அப்படி
வேலை மாறுபடும் நாட்களில் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடுவோம். நீங்கள்
அந்த நாட்களில் அந்த வேலையைச் செய்ய வேண்டி வரும்.”
ஷ்ரவன் தலையசைத்தான். அவன் பாண்டியன்
தன்னிடம் எதையாவது கேட்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால் பாண்டியன்
அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததோடு நிறுத்திக் கொண்டார்.
கண்ணன் சொன்னார். “முற்பகல்
வேலையில் பாதி நேரம் முடிந்து விட்டது. அதனால் நீங்கள்
மதியத்திற்கு மேல் ஆரம்பிக்கும் வேலையில் சேர்ந்து கொள்ளலாம். தோட்ட வேலை
சுவாமினி கல்பனானந்தாவின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. மதியத்திற்கு
மேல் நீங்கள் போய் அவரைப் பாருங்கள்.”
ஷ்ரவன் நன்றி தெரிவித்து, இருவரையும்
வணங்கி விட்டு ஷ்ரவன் தங்கள் அறைக்குத் திரும்பினான். சித்தானந்தாவும், முக்தானந்தாவும்
தங்கள் முற்பகல் வேலை முடிந்து இன்னும் வரவில்லை. ஒருவிதத்தில்
அதுவும் நல்லதாகத் தோன்றியது. ஷ்ரவன் அறையை ஆராய்ந்தான். அறைக்குள்
காமிராக்கள் இல்லை. வெளியே வராந்தாவில் தான் காமிராக்கள் இருக்கின்றன.
முக்தானந்தாவின் கட்டிலில் அமர்ந்து
ஜன்னல் வழியாகப் பார்த்தான். அந்த ஜன்னலிலிருந்து பார்க்கையில் மைதானமும், பாண்டியனின்
இருப்பிடம் வரையும் நன்றாகத் தெரிந்தது. அதைத் தாண்டி இருக்கும்
பிரம்மானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. இங்கிருந்து
இரவெல்லாம் முக்தானந்தா பார்த்துக் கொண்டிருப்பது பாண்டியனின் இடத்திற்கு யார் போய்
வருகிறார்கள், அவர் எப்போது வெளியே போய் எப்போது வருகிறார் என்பதையெல்லாம்
தானோ?
இதையெல்லாம் யோசித்துப் பார்க்கையில், சைத்ராவுக்கு
ஆபத்து என்ற மொட்டைக் கடிதத்தை எழுதியது முக்தானந்தா தானோ என்ற சந்தேகமும் ஷ்ரவனுக்கு
வந்தது. அவர் பிரச்சினையான எதையாவது பார்த்திருக்கலாம்… ஆனால் அவருக்கு
சைத்ராவின் வீட்டு விலாசம் எப்படிக் கிடைத்திருக்க முடியும்? அவளே அவருக்குத்
தந்திருப்பாளோ? குழப்பமாக இருந்தது.
சிறிது நேரத்தில் சித்தானந்தாவும், முக்தானந்தாவும்
வந்தார்கள். சித்தானந்தா அவனுக்கு என்ன வேலையை ஒதுக்கியிருக்கிறார்கள்
என்பதை ஆர்வத்துடன் கேட்டார். அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை முக்தானந்தாவும்
ஆர்வத்துடன் கவனிப்பது ஷ்ரவனுக்குத் தெரிந்தது.
ஷ்ரவன் சொன்னான். “தோட்ட வேலை. அது எனக்குப்
பிடிக்கும். ஆனால் அந்த வேலைகளை மேற்பார்வை பார்ப்பது சுவாமினி கல்பனானந்தா
என்று கண்ணன் சுவாமிஜி சொன்னார். ஆனால் ஆண் துறவிகள், பெண் துறவிகள்
இடையே எந்தத் தொடர்பும் இங்கு இருக்கக்கூடாது என்றும் அவர் தான் சொன்னார். அது எப்படி?”
ஆச்சரியமாக சித்தானந்தாவுக்குப் பதிலாக
முக்தானந்தாவே பதிலைச் சொன்னார். ”யோகாலயத்தில் எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கின்றன. சுவாமினி
கல்பனானந்தா மாதிரியான ஒரு சிலர் ஆண் துறவிகளைச் சந்திக்கவோ, பேசவோ, வேலை வாங்கவோ
தடையில்லை. அதே போல் சுவாமிஜி கண்ணன் போன்றவர்கள் பெண் துறவிகளைச் சந்தித்துப்
பேசி வேலை வாங்க எந்தத் தடையும் இல்லை.”
சித்தானந்தா மறுபடியும் திகைப்புடன் முக்தானந்தாவைப் பார்த்ததை ஷ்ரவன் கவனித்தான். அதிகமாகப் பேசாத முக்தானந்தா இப்படி நீண்ட பதில் சொன்னது சித்தானந்தாவை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.
ஷ்ரவன் புன்னகையுடன்
“அப்படியா?” என்று கேட்டுக் கொண்டான். பத்து நிமிடங்கள் அவர்கள் களைப்பாறியிருப்பார்கள். மதிய
உணவுக்கான மணி அடித்தது. மூவரும் கிளம்பினார்கள். போகும் போது அவர்களுடனேயே போனாலும் உணவு உண்ண அவர்களுடன் முக்தானந்தா அமரவில்லை.
உணவருந்தி விட்டு சிறிது இளைப்பாறி
விட்டு ஷ்ரவன் தோட்ட வேலைக்குச் சென்றான். கல்பனானந்தா
அவனைப் பார்த்ததும் சற்று திகைத்தது போல் இருந்தது.
ஷ்ரவன் அவளைக் கைகூப்பி வணங்கினான். திகைப்பிலிருந்து
மீண்ட கல்பனானந்தா லேசாகப் புன்னகைத்தாள். “நீங்கள்
சொன்னபடியே துறவியாக இங்கே இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்களே?” என்றாள்.
“நல்ல விஷயங்களைத்
தள்ளிப்போடுவது நல்லதல்லவே சுவாமினி” என்று ஷ்ரவன் புன்னகையுடன்
சொன்னான்.
அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். அவனுக்குத்
தோட்டக்கலை பற்றி எந்த அளவு தெரியும் என்பதை அவள் விசாரித்தாள். ஷ்ரவன்
அதற்குத் தன்னை நன்றாகவே தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தான். அதனால்
அவன் சொன்ன பதில்கள் அவளைத் திருப்திப்படுத்தியது போல் தோன்றியது. அவள் அவனுக்கு
அன்றைய வேலை என்ன என்பதைச் சொன்னாள். ஏற்கெனவே அங்கே
மூன்று துறவிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஷ்ரவனும்
அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
குமரேசன் மதியம் இரண்டு மணிக்கே போயிருப்பான்
என்பதால் அவனை ஷ்ரவனால் சந்திக்க முடியவில்லை. நாளை காலை
கண்டிப்பாக அவனைச் சந்திக்க முடியும். இந்த வேலையை ஷ்ரவனுக்கு
அவர்கள் ஒதுக்கியிருப்பதில் சாதகமான அம்சம் அது தான். ஆனால் அவர்களுக்குச்
சிறிதும் சந்தேகம் ஏற்படாத விதத்தில் குமரேசனுடன் பேச முடிவது கஷ்டமே. இப்போதும்
கூட கல்பனானந்தாவின் பார்வை அவன் மீதே இருந்தது. அவள் இன்னும்
அவனை முழுமையாக நம்பி விடவில்லையோ?
(தொடரும்)
என்.கணேசன்