என்னுடைய ‘ ஆழ்மனதின் அற்புத சக்திகள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...
என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, November 26, 2025
Monday, November 24, 2025
யோகி 131
ஷ்ரவன் எதிரிகளை அவன் வகுத்த பாதையில் ஓட விட்டிருக்கிறான். அவனுடைய வேலையை இப்போது அவர்களுடைய வேலையாக அவன் மாற்றியிருக்கிறான். நிஜ யோகியை இனி அவர்களும் தேட ஆரம்பிப்பார்கள். சைத்ரா மட்டுமல்லாமல் கல்பனானந்தாவும் பார்த்திருக்கும் நிஜ யோகி கிடைத்தால், எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடும் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர் கிடைப்பதன் மூலம் இப்போதிருக்கும் பல குழப்பங்கள் தெளியும் என்பது நிச்சயம்.
ஆரம்பத்தில், நிஜ யோகியைப்
பற்றி இளைஞனான அவன் எதாவது பேசினால், அவர்களும் இரண்டையும்
சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அவனுடைய அடையாளம் வெளிப்பட்டு விடலாம் அல்லது அவன் மீது அவர்களுக்கு
சந்தேகம் எழுந்து விடலாம் என்ற பயம் அவனுக்கு இருந்தது. இப்போது
அவனுடைய அபூர்வ சக்தி மீது அவனை விட அவர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், அவனால்
இந்த ஆபத்தான செயலில் ஈடுபட முடிந்திருக்கிறது. இப்போது
அவனல்லாத வேறு ஒரு இளைஞனை அவர்களே எதிரியாக கண்டுபிடித்து விட்டது போல் ஆகி விட்டது. அவர்கள்
அந்த இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி ஷ்ரவனிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும் நிலைமை வந்திருக்கிறது. அந்த இளைஞன்
நிஜ யோகியைத் தேடுவதும் அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மை. அதனால்
அவர் காலடி மண் பற்றியும், விசேஷ பூஜை பற்றியும் சொல்லி நிறுத்திக் கொண்டான்.
யோகாலயம் வருவதற்கு முன் அவன் படித்த, மாந்திரீகம்
குறித்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில், யோகி, சித்தர்களின்
காலடி மண்ணை, செய்வினை, பில்லி சூனியம்
ஆகியவற்றிலிருந்து காப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழிபாட்டு முறைகள் பற்றி எழுதியிருந்ததைப்
படித்திருந்தான். இந்தியா, திபெத், எகிப்து
போன்ற நாடுகளில் இந்த வழிமுறைகள் இருக்கின்றன என்று அந்த ஆராய்ச்சியாளர் எழுதியிருந்தார். அப்படியானால்
அதைக் கண்டிப்பாக தேவானந்தகிரியும்
அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் யோகியின் காலடி மண், பூஜை என்று
சொல்லி நிறுத்திக் கொண்டான். இரண்டும், இரண்டும் என்று
சொல்லி அவன் நிறுத்திக் கொண்டால் நான்கு என்ற பதிலை அவர்களுக்குக் கணிதம் தெரியா விட்டாலும், தெரிந்தவரோடு
பேசி எட்டி விடுவார்கள் என்று அவன் கணக்கிட்டான். அதன்படியே
அவர்கள் அவன் சொன்னதை வைத்து தேவானந்தகிரியிடம் பேசி அந்த முடிவை எட்டி விட்டார்கள். செய்வினையிலிருந்து
தப்பிக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் இந்த மிகப்பெரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ளத் தவற மாட்டார்கள் என்று அவன் கணக்கிட்டது சரியாகப் போய் விட்டது.
அடுத்ததாய் மோகன் ராவுக்குப் பதிலாய்
அந்த வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஷ்ரவன் இறங்கினான். அவன் ஏற்றுக்
கொள்ளும் ஆபத்தான, ரகசியமான வேலைகளில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள
ஆட்களையே அவன் நம்பினான். ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொருவர் என்று அவர்களுடைனேயே அவன் எப்போதும்
ஒரு குழுவாகச் செயல்பட்டவன். அவர்களுடைய அரசுத் துறையில் எத்தனையோ வல்லுனர்கள் இருந்தாலும்
அவன் அவர்களுடைய உதவியை நாடியது கிடையாது. காரணம், அவர்கள்
திறமைக்கு இணையாக நேர்மை இருக்கிறதா என்பதை அவன் தனிப்பட்ட முறையில் சோதித்துத் தெளிந்து
கொண்டதில்லை. மோகன் ராவ் போன்ற அவன் குழு ஆட்கள் முன்பே அவனால் சோதிக்கப்பட்டு
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவன் தன்னை நம்பும் அளவுக்கே முழுமையாக
நம்பினான். அதனால் இப்போது மோகன் ராவை இந்த வேலையில் ஈடுபடுத்த முடியாததை அவன் கையுடைந்ததைப் போல உணர்ந்தான்.
ராவ் வரும் வரை அவனால் காத்திருக்க
முடியாது. அவனுக்கு முழு நம்பிக்கை இல்லாதவர்களிடம் அவனால் இந்த வேலையை
ஒப்படைக்கவும் முடியாது. காரணம் யோகாலயத்திற்கு எதிரான எதாவது தகவல்களைக் கண்டுபிடிக்கும்
திறமைசாலிகள், கண்டுபிடித்ததை அவனிடம் சொல்வதற்குப் பதிலாக யோகாலயத்திடம்
சொல்லி, அதை அவர்களுக்கு விற்று, பல கோடிகள்
சம்பாதித்து விட முடியும். அது அவர்களுடைய பேரம் பேசும் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.
ஆயிரங்களில் விலை போகாதவர்கள், இலட்சங்களில்
விலை போகலாம். இலட்சங்களில் விலை போகாதவர்கள். கோடிகளில்
விலை போகலாம். சில கோடிகளில் விலை போகாதவர்கள், பல கோடிகளில்
விலை போகலாம். ஒரே ஒரு முறை நேர்மை தவறினால், பின் வாழ்நாள்
முழுதும் வேலை எதுவும் செய்யாமல் ஆடம்பரமாய் வாழ முடியும் என்றால் எத்தனை நேர்மையாளர்கள்
மிஞ்சுவார்கள் என்பது கேள்விக்குறியே. அதனால் பல கோடிகளுக்கும்
விலை போகாதவர் என்று அவன் நம்பி இந்த வேலையை யாரிடம் தருவது என்ற பெருங்குழப்பத்தில்
ஷ்ரவன் இருந்தான். திறமையும் நேர்மையும் சேர்ந்து உச்சத்தில்
இருக்கும்படியான, ராவுக்கு நிகரான நபரை இங்கிருந்து கொண்டு அவன் எப்படித் தேடுவது?
நீண்ட நேரம் யோசித்துச் சலித்த போது தான் அவனுக்கு ஸ்ரேயாவின்
நினைவு வந்தது. அவளும் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவள். அவளுடைய வேலையும்
கிட்டத்தட்ட அவன் வேலை சார்ந்ததே. கூடுதலாக சூட்சும உள்ளுணர்வும்
இருக்க வேண்டும். அதுவும் அவளிடம் இருக்கிறது. அவளிடம் கொடுத்தால் என்ன? அவளும் இந்த வழக்கில் ஏதாவது
வேலை செய்யும் ஆவலை அன்று சொல்லியிருக்கிறாள்… அலுவலக வேலை வேறு,
இது போன்ற துப்பறியும் வேலை வேறு…. இருந்தாலும்
ஆர்வம் இருந்தால் இந்த வேலையும் அவளுக்கு முடியாதது அல்ல. நேர்மை
விஷயத்தில், அவளை அவன் தனக்கு நிகராக நம்பினான். அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
மறுநாள் காலை சித்தானந்தா குளிக்கச்
சென்றிருக்கும் போது ஷ்ரவன் அவசர அவசரமாக ஒரு சிறிய காகிதத்தில் எதோ ஒரு அலைபேசி எண்ணை
எழுதுவதை முக்தானந்தா கவனித்தார். அவர் அவனிடம் எதையும் கேட்கவில்லை. சித்தானந்தா
காய்ச்சல் குணமாகி அறைக்குத் திரும்பி வந்ததிலிருந்தே அவர் முன்பு போலவே மாறி விட்டிருந்தார். சித்தானந்தா
முன்னிலையில் அவர் ஷ்ரவனிடம் மிக அபூர்வமாகவே பேசினார். அப்படி
எதாவது பேசியதும் ஓரிரு வார்த்தைகளுக்கு உள்ளாகவே இருந்தது. ஷ்ரவனும்
முக்தானந்தாவிடம் நெருக்கமாகி விட்டதை வெளிக் காட்டவில்லை.
ஷ்ரவன் அந்தச் சிறிய காகிதத்தை மறைத்து
வைத்துக் கொண்டு காலையில் தோட்ட வேலைக்குப் போனான். குமரேசன்
தொலைவில் ஒரு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று எப்படியாவது
இந்தக் காகிதத்தை அவனிடம் கொடுத்துப் பேசிவிட வேண்டும் என்று ஷ்ரவன் உறுதியாய் இருந்தான். கல்பனானந்தா
அவனுக்கு எங்கே வேலையைத் தருகிறாளோ, தெரியவில்லை. யோசனையுடன்
கல்பனானந்தாவை அவன் நெருங்கிய போது அவள் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது
தெரிந்தது. குமரேசனை அவன் பார்த்து நின்றதைக் கவனித்திருப்பாளோ?
கல்பனானந்தா அவனுக்கு குமரேசன் வேலை
பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுமார் நூறடி தள்ளி இருந்த தோட்டத்திலேயே வேலையை
ஒதுக்கினாள். அவன் தேவையைப் புரிந்து கொண்டு அந்த வேலையை ஒதுக்குகினாளா, இல்லை தற்செயலாக
ஒதுக்கினாளா என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை
தெரிந்தே அதைச் செய்தாள் என்றால், நேற்று வரை கூடுதல் உதவி எதுவும் செய்யத் தயாராக இருக்காத
அவளுடைய மனமாற்றத்திற்கு எதாவது காரணம் இருக்க
வேண்டும். “நன்றி சுவாமினி” என்று ஆத்மார்த்தமாக
அவன் சொன்ன போது அவள் புன்னகையுடன் தலையசைத்தாள்.
குமரேசன் ஷ்ரவன் வருவதைக் கவனித்தான். அருகிலிருக்கும்
கண்காணிப்பாளன் யார் என்பதைப் பார்த்தான். இருபதடி
தள்ளி நின்று கொண்டு எதிர்ப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்காணிப்பாளன் மிகவும்
கூர்மையான பார்வை உடையவன் என்பது குமரேசனின் அனுபவம். ஷ்ரவனுக்கு
எச்சரிக்க வேண்டியதேயில்லை. அவன் கவனமாகத் தான் இருப்பான்… குமரேசன்
தன் வேலையை அமைதியாய் பார்க்க ஆரம்பித்தான்.
ஷ்ரவனும் அருகிலிருந்த தோட்டத்தில்
தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். களைகளைப் பிடுங்கிப் போட்டவன், கண்காணிப்பாளன்
வேறு ஒரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, களைகளோடு
சேர்ந்து அந்தச் சிறிய காகிதத்தையும் போட்டான். அதை குமரேசன்
கவனித்தான்.
கண்காணிப்பாளன் வேறொரு துறவியை நோக்கி
நடப்பதைப் பார்த்து அவன் அவசரமாக ஷ்ரவன் போட்ட களைகளை எடுக்க வந்தான். ஷ்ரவன்
வேலை பார்த்துக் கொண்டே குமரேசனிடம் சொன்னான். “இது ஸ்ரேயாவின் போன் நம்பர். அவ கிட்டே இந்த வேலையை ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன். நம்ம அவசியம் என்னங்கறத மட்டும் ராகவன் சார் அவ கிட்ட சொன்னால் போதும்…”
ஷ்ரவன் சற்று தள்ளி உள்ள செடிகளைப் பராமரிக்கப் போனான். குமரேசன் அந்தச் சிறிய காகிதத்தை
எடுத்து அதில் உள்ள அலைபேசி எண்ணை மனப்பாடம் செய்து கொண்டிருக்கையில் பின்னாலிருந்து
கண்காணிப்பாளன் குரல் பின்னால் இருந்து கேட்டது. ”என்ன காகிதம்
அது?”
Thursday, November 20, 2025
சாணக்கியன் 188
சுசித்தார்த்தக் மூச்சிறைக்க ஓடி வந்து சொன்னான். “இளவரசே, நேபாள, குலு, காஷ்மீர மன்னர்கள் பாடலிபுத்திரம் போகக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.”
மலைகேது திகைத்தான். யோசிக்க அவகாசம் கேட்டவர்கள் இப்படி திடீரென்று முடிவெடுத்துச்
செல்ல என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை. என்ன தான்
ராக்ஷசர் மீது அவனுக்குச் சந்தேகம் வந்திருந்த போதும் அவனால்
இப்போதும் சாணக்கியரிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. அவர் அவனுக்கு
எழுதிய கடிதம் இப்போதும் இதயத்தில் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. அவனுடைய
தந்தையின் அதிசாமர்த்தியமும் ஆச்சாரியரிடம் பலிக்காமல் போனதை அவனால் சகிக்க முடியவில்லை.
அவன் வேகமாக நட்பு மன்னர்கள் தங்கியிருந்த
முகாம்களை நோக்கிச் செல்ல சுசித்தார்த்தக் பின் தொடர்ந்தான்.
மலைகேதுவுக்கு முதலில் காணக் கிடைத்தவன்
காஷ்மீர மன்னன். அவன் தன் ரதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அவனிடம்
மலைகேது விஷயம் தெரியாதவன் போலவே கேட்டான். “காஷ்மீர
மன்னரே, எங்கே கிளம்பிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்?”
காஷ்மீர மன்னன் சொன்னான். “பாடலிபுத்திரத்துக்கு”
மலைகேது திகைப்பை முகத்தில் காட்ட காஷ்மீர
மன்னன் அமைதியாக சாணக்கியரின் கடிதத்தை அவனிடம் நீட்டினான். அந்தக்
கடிதத்தை வாங்கிப் படித்த மலைகேதுவின் திகைப்பு இருமடங்காகியது.
காஷ்மீர மன்னன் அவனிடம் இரக்கத்துடன்
சொன்னான். “மலைகேது தவறு உன் தந்தை மீது இருப்பதாகத் தான் நாங்கள் நினைக்கிறோம். ராக்ஷசருடன்
சேர்ந்து கொண்டு உன் தந்தை திட்டமிட்டதை ராக்ஷசரின்
கடிதமும் உறுதிப்படுத்துகிறது. எதிரியோடு சேர்ந்து கொண்டு நண்பர்களுக்குத் துரோகம் செய்வதை
எங்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”
மலைகேது மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக்
கொண்டு சொன்னான். “காஷ்மீர மன்னரே. என் தந்தை
அப்படியொரு முடிவை எடுக்கக் காரணமே சாணக்கியர் வெற்றியில் நமக்குப் பங்கெதுவும் தர
மறுத்தது தான். புத்தி சுவாதீனமுள்ள யாரும் காரணமில்லாமல் எதிரியோடு சேர்ந்து
நண்பர்களை எதிர்க்க மாட்டார்கள். அதை மறந்து விடாதீர்கள்.”
அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த
நேபாள மன்னன் சொன்னான். “மலைகேது, சாணக்கியர் உன்
தந்தையிடம் பங்கு எதுவும் தர மறுத்திருந்தால் எங்களுக்கும் அதை மறுத்திருப்பார்.”
அதற்குள் அங்கே வந்து சேர்ந்த குலு
மன்னன் சொன்னான். “பங்கு தருவது பற்றி நாங்கள் சாணக்கியருடன் எதுவும் பேசியதில்லை, நாங்கள்
பேசியதெல்லாம் உன் தந்தையுடன் தான் என்ற போதிலும் சாணக்கியர் அதை எங்களுக்குத் தரும்
பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
நேரடியாகப் பேசாத எங்களிடமே அவர் அதை மறுக்காத போது, நேரடியாகப் பேசியிருக்கும் உன் தந்தையிடம் அவர் மறுத்திருப்பார் என்று எங்களுக்கு
நம்ப முடியவில்லை”
நேபாள மன்னன் சொன்னான். “மலைகேது, உன் தந்தையைக்
கொன்றதும் ராக்ஷசரின் சதியாகவே இருக்கும் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். ராக்ஷசர் அவரைக்
கொன்றதோடு திருப்தியடையாமல் உன்னையும், எங்களையும் சேர்ந்து
பழிவாங்கவே உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது.”
காஷ்மீர மன்னன் சொன்னான். “வயதிலும், அனுபவத்திலும்
மூத்தவர்கள் என்பதால் உனக்கு அறிவுரை கூறுகிறோம். நீ சாணக்கியரையும், சந்திரகுப்தனையும்
எதிர்ப்பது முட்டாள்தனம். நீயும் எங்களோடு அங்கு வா. சந்திரகுப்தனின்
திருமணமும், பட்டாபிஷேகமும் முடிந்து நாம் நம்முடைய தேசங்களுக்குத் திரும்புவோம்.”
மலைகேது அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவனுக்கு
அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அழைப்பு கூட இல்லை என்பதை அவர்களிடம் அவன் எப்படிச் சொல்வான்? அவன் தன்
சேனையுடன் நாடு திரும்ப மட்டுமே அவர் அனுமதி தந்திருக்கிறார் என்பதையும் அவன் எப்படிச்
சொல்வான்?
அவர்கள் அவன் பேச்சிழந்து நிற்பதை இரக்கத்துடன்
பார்த்து விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள். அவன்
தந்தையின் அதிபுத்திசாலித்தனமான திட்டங்கள் அனைத்தும் இப்படி பிசுபிசுத்துப் போய் அவர்
மரணத்தில் முடிந்து போகும் என்றோ,
அவரைத் தவிர அவர் நண்பர்கள் சாணக்கியரின் நண்பர்களாக மாறி விடுவார்கள்
என்றோ அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஒரு விதத்தில் வாழ்க்கை
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருந்து விடுகிறது என்று எண்ணியவனாய் விரக்தியுடன்
தன் முகாம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். சுசித்தார்த்தக்
மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தான்.
சிறிது நேரத்தில் ஹிமவாதகூட வீரன் ஒருவன்
வந்து சொன்னான். “இளவரசே பாடலிபுத்திரத்திலிருந்து நம் படை வந்து கொண்டிருக்கிறது.”
சாணக்கியர் அவன் படையைத் திருப்பி அனுப்பி
விட்டார். யோசிக்கையில்
சாணக்கியர் ஆரம்பத்திலிருந்தே அவன் தந்தையின் எதிர்பார்ப்பின் படியெல்லாம் நடந்து கொள்ளவில்லையே
ஒழிய அநியாயம் என்று குற்றம் சாட்டுகிறபடி எப்போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் மறைத்தும் பேசவில்லை.
தனநந்தனிடம் பேசியதைக் கூட அவர் மறைக்கவில்லை. அவன் கொண்டு செல்ல அனுமதித்த செல்வத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளக்கூட அவர் பர்வதராஜனை
அழைத்திருந்தார். அதை அவர் பங்கிலிருந்து குறைத்துக் கொள்ளவும்
சம்மதித்திருந்தார். சரியாகப் பங்கு தரும் உத்தேசமில்லாதவர் அப்படியெல்லாம்
செய்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை…
எல்லாவற்றையும் முழுமையாக அடைய ஆசைப்பட்டு அவன் தந்தை முடிவில்
உயிர் உட்பட அனைத்தையும் இழந்து விட்டதை வேதனையுடன் எண்ணியபடி மலைகேது பெருமூச்சு விட்டான். அவன் தந்தை இந்த மூன்று
மன்னர்களுக்குக் கூட சாமர்த்தியமாக மிகக்குறைவாகவே வாக்களித்திருந்தது இப்போது சாணக்கியருக்கு மிக வசதியாகப்
போயிருக்கும். இவர்களுக்குக் குறைவாகத் தந்தது போக மீதமுள்ள அனைத்தும்
இனி சந்திரகுப்தனுக்கே என்று நினைக்கையில் அவன் மிக மனவேதனையை உணர்ந்தான்.
கனத்த மௌனத்துடன் நடந்த அவன் முன் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக
நின்றது. இனி
என்ன செய்வதென்று அவனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. சமீபத்திய
எல்லா கஷ்ட காலங்களிலும் தன்னுடன் இருந்த சுசித்தார்த்தக்கிடம் மலைகேது மெல்ல கேட்டான். “இனி நான்
என்ன செய்வது நல்லது என்று நினைக்கிறாய் சுசித்தார்த்தக்?”
சுசித்தார்த்தக் இரக்கத்துடன் சொன்னான். “இனி யாரை
நம்பியும் பலனில்லை என்றான பின் நீங்கள் ஹிமவாதகூடத்திற்குத் திரும்பிச் செல்வதே நல்லது
என்று இந்த அடியவனுக்குத் தோன்றுகிறது இளவரசே. நீங்கள்
அங்கு முடிசூடிக் கொண்டு ஆட்சி புரியுங்கள்.”
மலைகேது ஆற்றாமையுடன் கேட்டான். “வெறுங்கையுடன்
திரும்பிப் போவதற்கா இத்தனை தூரம் இத்தனை படையுடன் வந்தோம் சுசித்தார்த்தக்?”
”வெறுங்கையுடனாவது
திரும்பிப் போக முடிவதே இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவருக்குப் பாக்கியமாகி விடுகிறது
இளவரசே. தங்கள் தந்தையால் அதுவும் முடியவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.”
அதுவும் உண்மை தான் என்று நினைத்துப்
பெருமூச்சு விட்டபடி மலைகேது கேட்டான். “நீயும் எங்களுடன்
வருகிறாயா சுசித்தார்த்தக்?”
“இல்லை இளவரசே”
“நீ எங்கே
செல்லப் போகிறாய்?”
”மகதம் என்
தாய் மண் இளவரசே. அங்கேயே நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்.”
மலைகேது அவனை வற்புறுத்தி அழைத்துச்
செல்ல விரும்பவில்லை. ஒருவிதத்தில் சுசித்தார்த்தக் அவனுடன் வராமல் இருப்பது நல்லது
தான் என்று தோன்றியது. அவன் உடனிருந்தால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கசப்பான
சம்பவங்கள் நினைவுக்கு வரும்....
சந்திரகுப்தனும், சாணக்கியரும்
பேசிக் கொண்டிருக்கையில் சாரங்கராவ் வந்து சொன்னான். “நேபாள, காஷ்மீர
மன்னர்கள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ஆச்சாரியரே. மலைகேது
ஹிமவாதகூடம் சென்று கொண்டிருக்கிறான்.”
சந்திரகுப்தன் புன்னகைத்தபடி சாணக்கியரிடம்
சொன்னான். “நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடந்திருக்கிறது ஆச்சாரியரே.”
சாணக்கியர் திருப்தியுடன் புன்னகைத்தார். சந்திரகுப்தன்
சொன்னான். “பர்வதராஜனிடமிருந்து இவ்வளவு எளிதாக விடுபட முடியும் என்று
நான் எதிர்பார்க்கவில்லை ஆச்சாரியரே. ஒருவேளை அவன் நமக்கு
எதிராகச் சதியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?”
சாணக்கியர் சொன்னார். “நான் கொடுத்த
வாக்கைக் காப்பாற்ற வேண்டியிருந்திருக்கும். ஆனால் என்
பாரதத்தைப் பிரிக்க அனுமதித்திருக்க மாட்டேன். ’நிதியை நீ வேண்டுமளவு எடுத்துக் கொள். பூமியை
எங்களுக்குக் கொடுத்து விடு’ என்று அவன் காலில் விழுந்து கெஞ்சியிருப்பேன். பிரிவினையால்
இழந்த பெருமையை எல்லாம் நம் பாரதம் ஒற்றுமையால் தான் மீட்க வேண்டும் என்று புரிய வைக்க
முயற்சி செய்திருப்பேன்.”
சாரங்கராவ் சிரித்தபடி சொன்னான். “ஆனால் அதற்கெல்லாம்
பர்வதராஜன் சம்மதித்திருக்க மாட்டான். ”பிரிக்க வேண்டாம்
என்றால் முழுவதுமாக எனக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள்” என்று சொல்லக்
கூடியவன் அவன் ஆச்சாரியரே”
சாணக்கியர் புன்னகைத்தார். “உண்மை சாரங்கராவ்.
உயர்ந்த உணர்வுகள் இருப்பது போல் எத்தனை தான் அவன் நடித்தாலும்
அவை எதுவும் அவனிடம் எப்போதும் இருந்ததில்லை. அதனால்
தான் பேராசையும், நயவஞ்சகமும் நிறைந்திருந்த அவன் சதித்திட்டங்கள் வெற்றி பெறும்
சூழல் இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளச் சிறிதும் தயங்க மாட்டான் என்று அறிந்த
நான் அவனுக்கு அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆர்வமாக அவன் பங்கெடுத்துக் கொண்டான்....”
(தொடரும்)
என்.கணேசன்
Monday, November 17, 2025
யோகி 130
பாண்டியன் அன்றிரவு பிரம்மானந்தாவைச் சந்திக்கச் சென்ற போது
ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையில் அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றை
அவர் பெருமையுடன் படித்துக் கொண்டிருந்தார்.
“வா பாண்டியன். உட்கார்” என்று மகிழ்ச்சியுடன்
அவரை உட்காரச் சொன்னார். அந்தப் பத்திரிக்கையை பாண்டியனிடம் காட்டி அது அமெரிக்காவிலிருந்து
வெளியாகும் பத்திரிக்கை என்றும், அதில் அவரைப் பற்றியும், யோகாலயம்
பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொன்னார்.
பாண்டியனைப் பற்றியே பெருமையாக அந்தப்
பத்திரிக்கை எழுதியிருந்தாலும் அதில் பாண்டியன் புளங்காகிதம் அடைந்து விடப் போவதில்லை. அதனால்
என்ன லாபம் என்று மட்டுமே யோசிக்கக்கூடியவர் அவர். நிச்சயமாக
அந்தக் கட்டுரையைப் படித்து பல அமெரிக்கர்கள் பிரம்மானந்தரைப் பெருமையாக நினைக்கலாம், சிலர் அவரைப்
பார்க்கவென்றே இந்தியாவுக்கும் வரலாம் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், இப்போது
பிரம்மானந்தா இருக்கிற உச்ச நிலைக்கு அது சில்லறை இலாபம் தான் என்று பாண்டியன் நினைத்தார்.
அதனால் சம்பிரதாயத்துக்காக அந்தக் கட்டுரையைப்
புரட்டிப் பார்த்து “அருமை” என்று சொல்லி அந்தப் பத்திரிக்கையை பாண்டியன் மூடி வைத்தார். பிரம்மானந்தாவுக்கு சப்பென்று ஆகி விட்டது. இது போன்ற
விஷயங்களில் பாண்டியனுக்கு நடிக்கவும் வருவதில்லை என்பது அவருடைய கசப்பான அனுபவம்.
பாண்டியன் ஷ்ரவன் புதிதாய் கண்டுபிடித்துச்
சொன்னதையும், அதைத் தெரிவித்த பின் தேவானந்தகிரி சொன்னதையும் விரிவாகச்
சொன்னார். தேவானந்தகிரி சொன்னதைக் கேட்ட போது பிரம்மானந்தாவின் முகம்
கருத்தது. அதைப் பார்த்த போது பாண்டியனின் சந்தேகம் ஊர்ஜிதமாகியது.
பாண்டியன் நேரடியாகவே கேட்டார். “உங்களுக்கு
அப்படிப்பட்ட யோகி யாராவது தெரியுமா யோகிஜி?”
பிரம்மானந்தா அரை நிமிடம் மௌனமாகவே
இருந்தார். அவர் இதுவரையில் பாண்டியன் கேட்கும் கேள்வி எதற்கும் பொய்
சொன்னதில்லை. பாண்டியனும் அவரிடம் அப்படியே தான் இருந்தார். சிறு மனப்போராட்டத்திற்குப்
பின் பிரம்மானந்தா சொன்னார். ”யார் யோகிங்கறது
பதில் சொல்லக் கஷ்டமான கேள்வி பாண்டியன். ஒரு காலத்துல நானும்
உண்மையான யோகியைத் தேடி இருக்கேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொருத்தரை
யோகின்னு அடையாளம் காட்டியிருக்காங்க. பல பேரை அப்படிப்
போய் பார்த்து நான் ஏமாந்து போயிருக்கேன். கடைசில
நானே யோகியாயிட்ட பிறகு தேடறதை நிறுத்திட்டேன்.” சொல்லி
விட்டு பிரம்மானந்தா வாய்விட்டுச் சிரித்தார்.
பாண்டியன் கேட்டார். “தேவானந்தகிரி
பரிசுத்தமான யோகின்னு சொன்னாரே, அப்படி யாரையாவது பார்த்திருக்கீங்களா யோகிஜி?”
எத்தனையோ விஷயங்களுக்கு நடுவே, குறைவான
நேரத்தில் முக்கியமானதைத் தேர்ந்தெடுப்பதில் பாண்டியனுக்கு இணையாக ஒருவரை இதுவரை பிரம்மானந்தா
பார்த்ததில்லை. இந்தக் கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் சொல்ல முடியாது. பிரம்மானந்தா
பெருமூச்சு விட்டபடி வேண்டா வெறுப்பாகச் சொன்னார். “சிவசங்கரன்னு
ஒரு பேராசிரியர் இருந்தார். எல்லா தத்துவங்களையும் கரைச்சு குடிச்சவர் அவர். அவர் பரிசுத்தமான
ஒரு ஆளை நிஜமான யோகின்னு ரொம்ப காலத்துக்கு முன்னால், எனக்கு
அடையாளம் காட்டினார். அந்த ஆள் வெறும் தோட்டக்காரன் தான். செருப்பு
கூட போட மாட்டார். எந்தத் தத்துவமும் பேச மாட்டார். எந்த அற்புதத்தையும்
செஞ்சு காட்டியதில்லை. ஷ்ரவன் அளவுக்குக் கூட நாம பிரமிக்கற மாதிரி அந்த ஆள் எதுவும்
செஞ்சதில்லை. அமைதியான ஆள். பரிசுத்தமான ஆள்ங்கறதுலயும்
சந்தேகம் இல்லை. ஆனா யோகின்னு என்னால அவரை ஏத்துக்க முடியலை...”
“அப்புறம்
ஏன் அந்தப் பேராசிரியர் அந்த ஆளை யோகின்னு சொன்னார். அதற்கு
அவர் ஏதாவது காரணம் வெச்சிருப்பாரில்லையா?”
இந்தக் கசப்பான விஷயத்தைப் பேச வேண்டியிருப்பதை
பிரம்மானந்தா சங்கடமாக உணர்ந்தார். ”அந்த ஆள் கிட்ட
மாறாத அமைதி இருந்துச்சு. செய்யறது தோட்ட வேலைன்னாலும் அவர் அதையும் ரொம்ப அனுபவிச்சு, சலிப்பு
இல்லாமல் செய்வார். அது அந்தப் பேராசிரியரை ரொம்பவே கவர்ந்துடுச்சுன்னு நினைக்கறேன்.”
“நீங்க அவர்
கிட்ட பேசியிருக்கீங்களா யோகிஜி?”
“ம். ஒரு தடவை
போய்ப் பேசியிருக்கேன். அந்த ஆள் அதிகம் பேசற ரகம் இல்லை. கேட்டதுக்கு
மட்டும் பதில் சொல்றவராய் இருந்தார். சொல்ற அளவுக்கு
பெருசா ஒன்னுமிருக்கலை. எனக்கு ஏன் போனோம்னு ஆயிடுச்சு. பத்து நிமிஷத்துல
குட் பை சொல்லிட்டேன்.”
“சமீபத்துல
அந்த ஆளை எப்பவாவது பார்த்தீங்களா?”
“உம். கொஞ்ச நாளுக்கு
முன்னால் ஒரு நாள் பார்த்தேன். கொதிக்கிற வெயில்ல செருப்பில்லாமல் நடந்து போய்கிட்டிருந்தார். அப்பவும்
அமைதியாய், எந்த சங்கடமுமில்லாமல் சந்தோஷமாய் மனுஷன் போய்கிட்டு இருந்தார். புத்தி
சுவாதீனம் இருக்கற எவனாலயும் அப்படி போக முடியுமா பாண்டியன்? நம்மளால
அப்படி போக முடியாது தான். ஆனா அப்படி நம்மால முடியாததைச் செய்யறவனை எல்லாம் நாம யோகியாய்
எடுத்துக்க முடியுமா?”
பாண்டியனுக்கு உடனடியாக நினைவு வந்தது. பிரம்மானந்தா
முதல்வரைச் சந்தித்து வந்த அன்று தான் அந்த ஆளையும் பார்த்திருக்க வேண்டும். பிரம்மானந்தாவின்
டிரைவர் வர்ணித்த ஆள் அவர் தான்.
பாண்டியன் எதுவும் சொல்லாமல் யோசிப்பது
பிரம்மானந்தாவுக்கு என்னவோ போல் இருந்தது. அவர் சொன்னார். “அமைதியாய்
இருக்கிறதும், எதனாலேயும் பாதிக்கப்படாமல் இருக்கிறதும் மட்டும் தான் ஒரு
யோகியோட லட்சணம்கிற மாதிரி சிவசங்கரன் சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்லை. பிணம் கூட
அமைதியாய், எதிலும் பாதிக்கப்படாமல் தான் இருக்கு. அதுக்குன்னு
நாம பிணமாயிட முடியுமா என்ன?”
பிரம்மானந்தா தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு, தானே வாய்
விட்டுச் சிரித்தார். பாண்டியனும் புன்னகை செய்ய, பிரம்மானந்தா
திருப்தியுடன் தொடர்ந்தார். “ஒரு காலத்துல யோகிகளை அப்படி இப்படின்னு வர்ணிச்சுட்டு இருந்தவர்
சிவசங்கரன். சாதாரணமாய் பார்க்கக்கூட கிடைக்க மாட்டாங்க, அப்படி
இப்படின்னு பெருசா பேசிகிட்டிருந்த அவர் கடைசில இவர் தான் அந்த மாதிரி யோகின்னு, அந்த தோட்டக்காரனை
அடையாளம் காட்டின பிறகு எனக்கு சீய்னு ஆயிடுச்சு. நான் அதற்கப்பறம்
சிவசங்கரனைப் பார்க்கவே போகலை.....”
பாண்டியன் சொன்னார். “ஷ்ரவனும்
அந்த நிஜ யோகி ஏதோ தோட்டத்தில் இருக்கிற மாதிரி தான் தெரியிதுன்னு சொன்னானே யோகிஜி.”
“ஆனாலும்
அது இந்த ஆளாய் இருக்காது. சௌகரியமாய் வாழக்கூட முடியாத ஆளை சர்வசக்தி படைச்ச யோகின்னு
எப்படி நம்பறது?... நான் நேற்று பேசின ஆன்மீகக் கூட்டத்தில் ’இந்தியா
பூரா கோசாலைகள் ஆரம்பிக்கப் போகிறோம்’னு சொல்லியிருக்கேன். அதற்கு
ஏற்பாடுகள் செய்யணும். இல்லாட்டி சில அதிகப்பிரசங்கிகள், ‘சொன்னது
என்னாச்சு’ன்னு கிண்டல் பண்ணுவாங்க. அவசரமில்லை. மெள்ளமா ஆரம்பிச்சாலும்
போதும். ஒன்னுமே செய்யலைன்னு புகார் வராம இருந்தா சரி”
யோகியிலிருந்து கோசாலைகளுக்குப் பேச்சை
மாற்றியதன் மூலம், யோகி பற்றிய பேச்சு முடிந்தது என்று பிரம்மானந்தா சொல்லாமல்
சொன்னது பாண்டியனுக்குப் புரிந்தது. அவருக்கும் அதற்கு
மேல் யோகி பற்றிக் கேட்க ஒன்றுமிருக்கவில்லை. அவர் தலையசைத்து
விட்டுக் கிளம்பினார்.
பாண்டியன் சென்ற பின்பும் அந்த யோகியின் நினைவு பிரம்மானந்தாவின் மனதை
என்னவோ செய்து கொண்டிருந்தது. அது என்னவென்பதை அவரால் தெளிவாய் வார்த்தைப்படுத்த முடியவில்லை. பாண்டியனிடம்
ஜாடையாய் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டதைப் போல், மனதில்
அந்த யோகியின் நினைவுகளை முடித்துக் கொள்ள முடியவில்லை. தகிக்கும்
உச்சி வெயிலில் செருப்பில்லாமல் அவர் வசந்த காலத்தில் பூப்படுக்கையின் மீது நடப்பது
போல் அமைதியாகவும், ஆனந்தமாகவும் நடந்து போய்க் கொண்டிருந்த காட்சி மனதில் திரும்பத்
திரும்ப ஒளிபரப்பாகியது. பிரம்மானந்தாவுக்குத் தன் மீதே கோபம் வந்தது. ‘அந்தப்
பைத்தியத்தை நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது?’
பாண்டியன் பிரம்மானந்தாவின் டிரைவரை
அழைத்து, பிரம்மானந்தா முதல்வரைச் சந்திக்க சென்ற நாளில் பார்த்த முதியவரை
நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு விவரிக்கச் சொன்னார். செருப்பு கூட இல்லாமல் உச்சி வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்த
பெரியவரை முடிந்த வரை நினைவுபடுத்திக் கொண்டு டிரைவரும் விவரித்தான். டிரைவர்
விவரிக்கையில் கண்ணனும் பாண்டியனுடன் இருந்தார்.
டிரைவர் சென்ற பிறகு பாண்டியன் கண்ணனிடம்
சொன்னார். “அந்தக் கிழவர் சுமார் முப்பது நாற்பது மைல் சுற்றுவட்டாரத்தில்
தான் எங்கேயோ இருக்கார் போலத் தெரியுது. இப்போதும் அவரோட
தொழில் தோட்ட வேலையாய் தான் இருக்கணும்.
எங்கே தங்கி இருக்கார், எங்கே வேலை செய்யறார்ங்கற விவரங்களை உடனடியாய் கண்டுபிடிக்கணும்.”
(தொடரும்)
என்.கணேசன்
இன்று மாலை வெளியீடு!

















