என் நூல்களிலிருந்து சில சிந்தனை அட்டைகள்...
என்.கணேசன்
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, March 26, 2025
Monday, March 24, 2025
யோகி 95
ஷ்ரவன் குமரேசனிடம் கேட்டான். “அந்த ஆடிட்டர்
தனியாய் வர்றாரா, இல்லை அவரோட சேர்ந்து வேற ஆட்களும் வர்றாங்களா?”
குமரேசன் சொன்னான். ”பெரும்பாலும்
அவர் தனியாய் தான் வர்றார். ஆனால் சில சமயங்களில் அவர் கூட வேறு யாராவது ஒருத்தர் அல்லது
இரண்டு பேர் வர்றதுண்டு.”
ஷ்ரவன் ஆடிட்டர் திவாகரனைப் பற்றிய
தகவல்களைச் சேகரித்தான். அவர் சென்னையில் மிகப் பிரபலமான ஆடிட்டர் என்பதும், பல முன்னணி
நிறுவனங்களின் ஆடிட்டராக இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. செல்வந்தராக
இருக்கும் அவரை அவர் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார் என்றும், அவரது ஒரே
மகள், தன் தாயுடன் வசிக்கிறாள் என்பதும் தெரிந்தது.
திவாகரன் யோகாலயத்துக்கு வெறும் ஆடிட்டர்
மட்டும் தானா, இல்லை கூடுதலாய் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடிட்டர்
திவாகரன் மீது இதுவரை எந்தப் புகாரும், சட்டவிரோதத்திற்கான
நடவடிக்கையும் இல்லை. ஷ்ரவன் ஒரு நபருக்குப் போன் செய்து ஆடிட்டர் திவாகரன், யோகாலயம்
தவிர யாருக்கெல்லாம் ஆடிட்டராக இருக்கிறார் என்ற தகவல்களை அனுப்பச் சொன்னான்.
இரண்டு மணி நேரத்தில் விரிவான தகவல்கள் ஷ்ரவனுக்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன. ஆடிட்டர் திவாகரனின் “திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்” அவர் ஏழு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்கள் கொண்ட குழு. திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸில் 23 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 15 பேர் சி.ஏ.இண்டர் முடித்தவர்கள். “திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்” தமிழ்நாட்டின் பெரிய நிறுவனங்கள் சிலவற்றுக்கும், சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பலருக்கும் ஆடிட்டர்களாக இருக்கிறார்கள் என்று ஆரம்பித்து மிகச்சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தவிர அவர்களுடைய மற்ற எல்லா வாடிக்கையாளர்களின் பெயர்கள் விலாசங்கள் அந்த மின்னஞ்சலில் இருந்தன.
அவற்றை எல்லாம் ஷ்ரவன் நிதானமாகப் படித்தான். டாக்டர் சுகுமாரனின் செவென்
ஸ்டார்ஸ் மருத்துவமனையும் அந்தப் பட்டியலில் இருந்தது. அந்தப் பட்டியலில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக
எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆடிட்டர் திவாகரனின் வாடிக்கையாளர்களை
ஆராய்வது யோகாலய வழக்குக்கு உதவுமா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் குற்றவாளிகளுடன் நெருக்கமாய்
இருக்கும் ஒரு நபர் பற்றிய புதிய தகவல் வரும் போது, அந்த நபரின்
சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், எல்லா கோணங்களிலிருந்தும்
சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவசியம் என்பது அவன் தனது துறையில் கற்ற ஆரம்பப் பாடம்.
எல்லா விசாரணைகளிலும் ஒரு அதிமுக்கியமான தடயம் அல்லது ரகசியம் அறிய, ஆயிரம் குப்பைகளையும் சேர்ந்து அலச வேண்டியிருக்கிறது. எது குப்பை, எது அதிமுக்கியமான தகவல் என்பதை முன்கூட்டியே யாரும் தெரிந்து கொள்ள முடியாது. சில சமயங்களில் ஒரு குப்பைத் தகவல் மூலம் இன்னொரு நல்ல தகவல் கிடைக்கலாம். அதனால் எதையும் அலட்சியப்படுத்தி விட முடியாது.
சற்று முன் போன் செய்து பேசிய நபர் ஷ்ரவனை அலைபேசியில் அழைத்து
இன்னொரு மிக முக்கியமான தகவலைச் சொன்னார்.
அவருக்கு அந்தத் தகவலைத் தந்தவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வரை
“திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்”ல் வேலை செய்து
கொண்டிருந்த ஒரு இளைஞனாம். அவன் அவருக்கு மிகவும் பரிச்சயமானவனாம்.
ஆடிட்டர் திவாகரன் தனிப்பட்ட முறையில் கையாளும் வாடிக்கையாளர்கள் சுமார்
இருபது பேராவது இருப்பார்களாம். அவர்கள் ஆபிசுக்கு வந்தால் ஆடிட்டர்
திவாகரனிடம் மட்டும் தான் பேசுவார்களாம். மற்ற ஆடிட்டர்களிடமோ,
வேலையாட்களிடமோ தாங்கள் வந்த விஷயம் பற்றிப் பேச மாட்டார்களாம். ஒருவேளை
ஆடிட்டர் திவாகரன் அங்கு இல்லாவிட்டால் அவர் வரும் வரைக்கும் அவர்கள் காத்திருப்பார்களாம்.
ஒருவேளை அவர் அன்று வரவில்லை என்றால், போய் விட்டு இன்னொரு நாள் வருவார்களாம்.
அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் பற்றிய எந்த விவரமும், கணக்குகளும் மற்ற ஆடிட்டர்களுக்கோ, வேலை செய்பவர்களுக்கோ
எப்போதுமே தெரிய வராதாம். அந்த இருபதில் யோகாலயம் இல்லை.
யோகாலயத்தின் வழக்கமான கணக்கு வழக்குகளை மற்ற இரண்டு ஆடிட்டர்கள் தான்
பார்த்துக் கொள்கிறார்களாம். ஆனால் ஆடிட்டர் திவாகரன் செய்யும்
ஒரே வேலை அந்த இருபது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தானாம்.
அந்த வாடிக்கையாளர்கள் ஓரிரு வருடங்களில் வருவதை நிறுத்தி, வேறு சில புதிய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிப்பார்களாம். இப்படி அவரை மட்டுமே சந்திக்க வரும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம்.
இந்தத் தகவல் ஷ்ரவனை சந்தேகம் கொள்ள
வைத்தது. சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கென ஒரு ஆடிட்டரைத் தேர்ந்தெடுத்து
வைத்துக் கொண்டு, அவரிடம் மட்டுமே நம்பிக்கையுடன் தங்கள் கணக்கு வழக்குகளை
வைத்திருப்பது பொதுவாக எல்லா இடங்களிலும் வாடிக்கை தான். ஆனால் அந்த
ரக வாடிக்கையாளர்கள் ஓரிரு வருடங்களில் மாறிக் கொண்டேயிருப்பதும், மாறி புதிதாக
வருபவர்களும் சிலரும் திவாகரனிடமே வருவதும் இயல்பாக இல்லை. பொதுவாக
இது போன்ற இடங்களில் தலைமை ஆடிட்டர் மிக முக்கியமான சில பெரிய வாடிக்கையாளர்களிடம்
மட்டும் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். அவர்களிடமே கூட
அதிமுக்கிய விஷயங்களைப் பற்றி பேசித் தீர்மானிக்கும் விஷயங்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்குவார்களே
ஒழிய மற்றபடி அந்த வாடிக்கையாளர்களின் வழக்கமான வருடாந்திரக் கணக்குகளை எல்லாம் ஆபிசில்
உள்ள மற்றவர்கள் தான் பார்த்துக் கொள்வார்கள். அப்படியல்லாமல்
அனைத்தையும் தலைமை ஆடிட்டரே பார்த்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருப்பது
விசித்திரம் தான். சேலம் தொழிலதிபர் சந்திரமோகன் சம்பந்தப்பட்ட மர்மம் போல இதிலும்
ஏதோ மர்மம் இருக்கிறது என்றாலும் இதுவும் சைத்ரா வழக்கிற்கு சம்பந்தப்பட்ட மர்மமா, இல்லை வேறா
என்று தெரியவில்லை....
மனதில் இப்படியொரு எண்ணம் வந்தவுடன்
ஷ்ரவனின் மூளையில் ஒரு சிறு பொறி
தட்டியது. ஒருவேளை
தொழிலதிபர் சந்திரமோகனுக்கும், ஆடிட்டர் திவாகரனுக்கும் இடையே
ஏதாவது சம்பந்தம் இருக்க வாய்ப்புண்டோ?
சேலத்தில் தொழிலதிபர் சந்திரமோகனின்
மனைவி அலைபேசி அடிப்பதை திகிலுடன் பார்த்தாள். இப்போது அழைப்பது யார் என்று தெரியவில்லை.
இப்போதெல்லாம் ஒவ்வொரு முறை அலைபேசி அடிக்கும் போதும், அவளுக்குத் திகிலாகவே இருக்கின்றது. சந்திரமோகன் காணாமல்
போகும் வரை அவர்களைப் போல் அதிர்ஷ்டசாலிகள் யாருமில்லை என்றே அவள் நினைத்து இருந்தாள்.
ஆனால் விதி குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.
அவள் கணவன் காணாமல் போனதில் இருந்து அவளும் அவளுடைய மகளும் அனுபவிக்கும்
பயமும், துயரமும் கொஞ்ச நஞ்சமல்ல.
கைநடுங்கியபடி அவள் மெல்ல அலைபேசியை எடுத்தாள். “ஹலோ”
‘ஹலோ நான் மாயவரம் மாதவன் பேசறேன்ம்மா. பத்து நாளுக்கு
முன்னாடி சேலத்துக்கு ஒரு வேலையாய் வந்தப்ப உங்க வீட்டுக்குக் கூட அவரைத் தேடிட்டு
வந்தேனே, ஞாபகம் இருக்கா.”
“உம்… சொல்லுங்க சார்”
“அப்பறம் சந்திரமோகனைப் பற்றி வேறெதாவது தகவல் தெரிஞ்சுதா?”
“இல்லைங்க…”
“இன்னும் போலீசுக்கும் ஒரு துப்பும் கிடைக்கலையாக்கும்.”
“அப்படி தான் தெரியுதுங்க. அவங்க எந்த தகவலும் தரலை.”
“எனக்கு அங்கேயிருந்து வந்ததுலயிருந்து சந்திரமோகன் யோசனையே தான். என்னடா மனுசன் இப்படி யாருகிட்டயும் சொல்லிக்காமயே போயிட்டாரு. எங்கே போயிருப்பார், என்ன சமாச்சாரம்னு ஒரே யோசனை…”
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“எனக்கு திடீர்னு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு. நம்ம ஆடிட்டர் சென்னையில தானே இருக்கார். ஒருவேளை சந்திரமோகன்
அவரைப் பார்க்கப் போயிருப்பாரோ? போனவர் அவர் கிட்ட ஏதாவது சொல்லியிருப்பாரோன்னு
திடீர்னு யோசனை வந்துச்சு. அந்த ஆடிட்டர் பெயர் ஞாபகம் வரலை. ஹா…. திவாகரன்….
திவாகரன் தானே அவர் பெயர்?”
சந்திரமோகன் மனைவியின் இதயம் சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்தன. “ஆமா… அங்கேயும் விசாரிச்சுட்டேன். அங்கேயும் இவர் போகலையாம்….
ஏதாவது தகவல் கிடைச்சால் நானே உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்.”என்று சொல்லி அலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு, பேசியவர்
எண்ணை அவள் உடனடியாகத் தடை செய்தாள். இந்த ஆள் வில்லங்கமான ஆள்
போல் தான் தெரிகிறது!
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனின் நூல்களை வாங்க வாட்சப்பில் 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
Thursday, March 20, 2025
சாணக்கியன் 153
ராக்ஷசர் சற்று முன் ஒற்றன் சொல்லி விட்டுப் போன தகவலினால் மேலும் அதிக மன அமைதியைத் தொலைத்திருந்தார். சந்திரகுப்தனிடம் பாரசீகக் குதிரைகள் முன்பை விட அதிகமிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று ஒற்றன் சொல்லியிருந்தான். இங்கு குறைந்திருப்பதும், அங்கு அதிகமாகியிருப்பதும் என்ன நடந்திருக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்தது. இந்தத் திருட்டில் சேனாதிபதி பத்ரசாலுக்குக் கண்டிப்பாகப் பங்கு இருக்க வேண்டும், அப்படி இருந்திருக்கா விட்டால் அவன் முன்பு அறிந்திருக்கா விட்டாலும் குதிரைகள் அணிவகுப்பின் சமயத்திலாவது அறிந்து அவர் போல பதறியிருப்பான் என்று எண்ணியிருந்தார். அப்போதும் கூட அவன் திருடன் என்ற அளவில் தான் அவர் அபிப்பிராயம் இருந்தது. இப்போதோ எதிரியுடன் அவன் கைகோர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் போரையே தலைமை தாங்கி நடத்தக்கூடியவன் எதிரியுடன் சேர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமே அவரை நிலைகுலைய வைத்தது.
இது வரை ஆலோசனைக்
கூட்டங்களின் போதெல்லாம் அவன் எப்படி நடந்து கொண்டான், என்னவெல்லாம் சொன்னான் என்பதை
அவர் யோசித்துப் பார்த்தார். அந்தச் சமயத்தில் அவன் இயல்பாகவே இருந்தான். நடித்தது
போல் தெரியவில்லை. ஆயுதங்கள்
தயாரிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளிலும் அலட்சியமாக அவன் இருக்கவில்லை. எதிரியுடன் கைகோர்த்திருந்தால்
அந்த அளவு ஈடுபாடு அவன் காண்பித்திருக்க வழியில்லை. அதை யோசித்துப் பார்க்கையில் அவன்
திருட்டில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் பலனடைவது எதிரி என்று அறிந்திருக்காமல் இருக்கலாம் என்று தோன்றியது.
அவன் யாருடன் இந்த விஷயத்தில் சேர்ந்திருந்தானோ அந்த ஆள் உண்மையை அவனிடமிருந்து மறைத்திருக்கலாம்
என்றும் தோன்றியது.. இந்த எண்ணம் சிறிது அவரை ஆசுவாசப்படுத்தியது.
குதிரைகள்
மாற்றப்பட்ட விஷயத்தை அவர் தனநந்தனிடம் சொல்ல முற்படவில்லை. ஏற்கெனவே பித்துப் பிடித்தது
போல் இருக்கும் மன்னன் இதைக் கேட்டால் கோபம் அதிகமாகி மீண்டும் கத்த ஆரம்பிக்கும் வாய்ப்பிருக்கிறது.
இப்போது ஓரளவாவது தணிந்திருக்கும் கோபத்தை மறுபடி அதிகமாக்குவது ஏற்கெனவே இருக்கும்
சிக்கல்களையும் அதிகமாக்கும்.
நேற்று
சேனாதிபதியும், சுதானுவும் அதிக நேரம் பேசிக் கொண்டார்கள் என்ற செய்தியையும் அவர் கேள்விப்பட்டிருந்தார்.
இருவரும் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் அல்ல, ஒருசில வார்த்தைகளுக்கு மேல் முன்பு பேசிக்
கொண்டதில்லை என்பதால் இதுவும் அவருக்கு நெருடலாக இருந்தது. இருவருமே பிரச்சினை செய்ய
முடிந்தவர்கள்…. இதையெல்லாம் யாருடனும் மனம் விட்டு அவர் பகிர்ந்து கொள்ளவோ, ஆலோசிக்கவோ
முடியாத நிலை இருப்பதால் அவர் மனதில் கனத்தையும், களைப்பையும் உணர்ந்தார்.
சாணக்கியர் சொன்னார். “மகதப் படைகள் கிளம்பிச்
செல்லும் திசைகளை வைத்துப் பார்க்கையில் மகதத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் சம இடைவெளிகளில்
மூன்று இடங்களில் படைகள் நிறுத்தப்படும் போலத் தெரிகிறது. அவர்கள் நிலையில் நாம் இருந்திருந்தாலும்
அதைத் தான் செய்திருப்போம்.”
“இனி
நாம் என்ன செய்வது ஆச்சாரியரே. நம் திட்டம் என்ன?” என்று பர்வதராஜன் கேட்டான்.
”நாம்
இரண்டு இடங்களில் அவர்களது எல்லையை ஊடுருவுவோம். அந்த இடங்கள் அவர்கள் படையை நிறுத்தாத இடங்களாக இருக்கும்படி
பார்த்துக் கொள்வோம். அவர்கள் கண்டிப்பாக இருக்குமிடத்திலிருந்து வேகமாக நகர்ந்து வந்து
நம்மைத் தாக்குவார்கள். அங்கு போர் புரிவோம்….”
அந்த
இரண்டு இடங்களுக்கு எந்தப் படைகளை அனுப்புவது என்று அவர்கள் ஆலோசித்த போது பர்வதராஜன்
கூர்ந்து கவனித்தான். அந்த இரண்டு இடங்களுக்கும் சாணக்கியரோ, சந்திரகுப்தனோ அவர்கள்
படைகளோ செல்லப் போவதில்லை என்பதை அவன் அறிந்து கொண்டு நேபாள, குலு, காஷ்மீரப்படைகளை
அனுப்பலாம் என்று அவன் ஆலோசனை சொன்னான். என்னவானாலும் சரி சாணக்கியர், சந்திரகுப்தன்
இருவர் எங்கிருக்கிறார்களோ அங்கே தானும் இருப்பது என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான்.
அப்படி உடன் இருந்தால் தான் அவர்களைக் கண்காணிக்க முடியும், அவனறியாமல் அவர்கள் எந்த
முக்கிய முடிவுகளையும் எடுத்து விட முடியாதபடி இருக்கும் என்று அவன் கணக்கிட்டான்.
எந்த
அளவில் செல்ல வேண்டும், எத்தனை வேகத்தில் செல்ல வேண்டும், போர் யுக்திகளை எப்ப்டி வகுக்க
வேண்டும் என்பதை சந்திரகுப்தன் விரிவாக அவர்களுக்கு விளக்க ஆரம்பித்த போது சின்னச்
சின்ன விஷயங்களையும் அவன் தொலைநோக்குப் பார்வையுடன் யோசித்து வைத்திருந்தது புலனாகியது.
குலு, நேபாள, காஷ்மீர மன்னர்கள் அவனை வெளிப்படையாகவே பாராட்டினார்கள்.
பர்வதராஜன்
பெருமை பொங்கும் குரலில் “ஆச்சார்யரின் சீடன் அதையெல்லாம் யோசிக்காமல் இருந்திருந்தால்
தான் அது ஆச்சரியம்” என்று சொல்லி விட்டு “நாம் எங்கே போகப் போகிறோம்?” என்று கேட்டான்.
சந்திரகுப்தன்
சொன்னான். “நாம் மகதத்தின் வடபகுதியில் எல்லைகளைத் தொடாமல் மெல்லப் போய்க் கொண்டிருப்போம்.
நம் திட்டம் தயாரான பின் எங்கே தாக்கத் தீர்மானிக்கிறோமோ அங்கே தாக்குவோம்”
இப்போதும்
அவன் எங்கே என்று சொல்லாமல் இருந்தது பர்வதராஜனுக்கு எரிச்சலாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்
தலையசைத்தான்.
அனைவரும்
சென்று விட்டு இருவர் மட்டும் தனியாக இருக்கையில் சந்திரகுப்தன் சொன்னான். “பர்வதராஜன்
எவ்வளவு விவரமாக அவர்களைத் தூரங்களுக்கு அனுப்பி விட்டு நம்முடனேயே ஒட்டிக் கொண்டு
விட்டான் பார்த்தீர்களா ஆச்சாரியரே”
சாணக்கியர்
புன்னகைத்தார். ”நமக்கும் அது நல்லது தான். பிரச்சினையான மனிதர்கள் நம் பார்வையிலேயே
இருப்பது நல்லது சந்திரகுப்தா. அப்போது தான் நமக்கும் அவர்கள் மீது கட்டுப்பாடு இருக்கும்.”
சந்திரகுப்தன்
சிரித்துக் கொண்டே சொன்னான். “அவனும் நம்மைப் பற்றி அப்படித் தான் நினைப்பான் என்று
தோன்றுகிறது ஆச்சாரியரே”
சாணக்கியரும்
சிரித்தார். “இருக்கலாம்”
அவர்கள் திட்டப்படியே நிச்சயித்த நாளில் நிச்சயித்த
பாதைகளில் அவர்கள் படைகள் கிளம்பின.
ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு பெரும்படை வாஹிக் பிரதேசத்திலிருந்து முந்தைய
படைகள் போன வழியில் அல்லாது வேறு வழியில் கிளம்பிப் போக ஆரம்பித்தது பர்வதராஜனுக்கோ
மற்ற மன்னர்களுக்கோ தெரியவில்லை.
முன்பு கிளம்பிய படைகளில் மற்ற படைகள் வேகமாகச் சென்றாலும் சந்திரகுப்தன் படைகளும், பர்வதராஜன் படைகளும் சற்று வேகம் குறைந்தே செல்ல ஆரம்பித்தன. நாட்கள் நகர நகர பொறுமை இழந்த பர்வதராஜன் பல விதங்களில் சாணக்கியரின் திட்டத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்தான். “இப்போது நாம் மட்டும் தானே இருக்கிறோம். நம் ரகசியம் நம்மை விட்டுப் போக வழியில்லை ஆச்சாரியரே. இனி நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். என் மீது நம்பிக்கை இல்லையா?”
“நான்
சந்திரகுப்தனிடமே கூட இன்னும் தெரிவிக்கவில்லை பர்வதராஜனே. இது நம்பிக்கை சம்பந்தமான
விஷயமல்ல. எந்த விதத்திலும் நம் திட்டம் மகதத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை
நடவடிக்கை. வெற்றியைத் தான் நீயும் விரும்புகிறாய், உனக்கும் தோல்விக்கான சிறு சாத்தியக்கூறையும்
ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் நம் இருவரின் உத்தேசமும் ஒன்றல்லவா. அதனால் பொறுமையாக
இரு.” என்று சாணக்கியர் சொல்ல வேறு வழி தெரியாமல் தலையசைத்தான்.
அவன்
சென்ற பிறகு சந்திரகுப்தன் தங்கள் திட்டத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகத்தைக் கேட்டான்.
“சுதானு நம் திட்டப்படி தான் நடந்து கொள்வான் என்று எப்படி நம்புகிறீர்கள் ஆச்சாரியரே?
நாம் அவன் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அவனுக்கு வழங்கவில்லையே.
உத்தேசமாக அல்லவா சொல்லியிருக்கிறோம். அப்படி இருக்கையில் வளர்பிறை ஏகாதசி அன்று நீங்கள்
எதிர்பார்க்கிறபடியே கண்டிப்பாக நடந்து கொள்வானா? பத்ரசாலும் அவனுக்குச் சரியாகத் துணை
நிற்பானா?”
சாணக்கியர்
சொன்னார். “தண்ணீர் எப்போதும் பள்ளத்தை நோக்கியே செல்கிறது சந்திரகுப்தா. எத்தனை காலம்
கழிந்தாலும் தண்ணீரின் அந்தப் போக்கு மாறப் போவதில்லை. இங்கே ஊற்றியிருக்கிறோமே அங்கே
போய்ச் சேருமா என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. சுதானுவைப் போன்றவனின் மனமும் அப்படியே
நாம் உத்தேசித்த விஷயத்தை நோக்கியே திட்டமிட்டு நகரும் என்பதில் எனக்குச் சந்தேகமே
இல்லை. பத்ரசாலும் அவனுக்கு உதவ வேண்டிய அவசியத்திலேயே இருக்கிறான். இருவருக்கும் ஏதாவது
தயக்கம் இருந்தால் அந்தத் தயக்கத்தைத் தாண்ட வைக்க சின்ஹரன் அங்கிருக்கிறான் என்பதால்
நமக்கு விளைவுகள் குறித்த சந்தேகம் வேண்டியதில்லை”
சந்திரகுப்தனுக்கு
இப்போதும் ஆச்சாரியரை நினைக்கையில் பிரமிப்பு குறைவதில்லை. பல சமயங்களில் அவனுக்கு
முயற்சிகள் எந்த அளவு பலன் தரும் என்பதில் சந்தேகம் வருவதுண்டு. ஆனால் அவர் பெரும்பாலான
சமயங்களில் இது இப்படித் தான் முடியும் என்று தீர்மானித்து நிச்சலனமாக இருக்க முடிந்தவர்.
அப்படி உறுதியாகச் சொல்ல முடிந்த அளவு மனித மனதையும், இயல்பையும் அவர் புரிந்து வைத்திருந்தது
அவர் திறமைகளில் உச்சத்திறமை என்று அவனுக்குத் தோன்றியது.
“அடுத்தது என்ன
ஆச்சாரியரே?”
“முக்கியமான ஒரு
ஓலையை நாம் ரகசியமாக அனுப்ப வேண்டும் சந்திரகுப்தா.”
(தொடரும்)
என்.கணேசன்
என்.கணேசனின் நூல்களை வாங்க 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.
Monday, March 17, 2025
யோகி 94
ஸ்ரேயாவுக்கு உடனடியாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஷ்ரவன்
எதற்குமே உணர்ச்சிவசப்படுபவனாகவோ, நிதானம் இழப்பவனாகவோ தெரியவில்லை. அவன் நேர்மையும், நியாயமும்
தவறாதவன் என்பது மட்டுமல்ல, அவனுடைய இதயம் எப்போதும் அவனுடைய அறிவின் கட்டுப்பாட்டிலேயே
இருக்கும் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அதனால்
தான் காதலைத் தெரிவிக்கும் போது கூட அதில் உள்ள சிக்கல்களையும், ஆபத்தையும்
சேர்த்தே சொல்கிறான். ஒருவேளை அவன் திரும்பி வராவிட்டால் அவனையும் இந்தக் காதலையும்
மறந்துட்டு, ஒரு நல்ல பையனாய் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு புதிய வாழ்க்கையை
ஆரம்பிக்கச் சொல்கிறான். உலகத்தில், காதலைத் தெரிவிக்கும்
போதே, வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளும் நிலைமை வரை யோசித்துப்
பேச முடிந்தவன் இவன் ஒருவனாகத் தான் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தன்னையுமறியாமல்
புன்னகைத்தாள். ‘மிகவும் வித்தியாசமான காதலன்’
ஷ்ரவன் கேட்டான். “ஏன் சிரிக்கிறாய்
ஸ்ரேயா?”
ஸ்ரேயா காரணத்தைச் சொன்னாள். அதைக் கேட்டு, அவனும்
புன்னகைத்து விட்டுச் சொன்னான். “நிறைய காதல் பொய்யான அனுமானங்களோடும், அசாத்திய
எதிர்பார்ப்புகளோடும் ஆரம்பிக்குது ஸ்ரேயா. அதனால கல்யாணத்துல
முடிஞ்சாலும் அந்த மாதிரியான காதல் உண்மையில் தோற்று தான் போகுது. நம்ம காதல்
அப்படியிருக்க வேண்டாம்னு தான், கசந்தாலும் நான் நிஜத்தையே சொன்னேன்.”
அவன் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் சிரித்துக்
கொண்டே அவனிடம் சொன்னாள். “அதெல்லாம் சரி,
நீ என்னைக் காதலிக்கிறாயான்னு கூட நீங்க கேட்கலை. நானும்
உங்களை காதலிக்கிறேன்னு நீங்களே சொல்லிக்கறீங்க.”
ஷ்ரவனும் சிரித்து விட்டான். “சாரி...
சந்தேகம் இருக்கற விஷயத்தை தானே கேட்கணும். நூறு சதவீதம்
தெரிஞ்ச விஷயத்தைக் கேட்க என்ன இருக்குன்னு கேட்கலை.”
அதிபுத்திசாலித்தனத்துடன், ஒரு குழந்தையின்
வெகுளித்தனமும் கலந்த கலவையாக அவனிருப்பது போல் அவளுக்குத் தோன்றியதால் அவளுக்கு அவன்
சொன்னதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ‘அவனுடைய அபத்தங்களைக்
கூட ரசிக்கும் அளவுக்கு அவனைக் காதலிக்கிறாய் முட்டாளே’ என்று அவள்
அறிவு அவளைக் கடிந்து கொண்டது.
அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து
விட்டு ஸ்ரேயா சொன்னாள். “உங்க காதலை, யோகாலயத்திலிருந்து
உங்க வேலையை வெற்றிகரமாய் முடிச்சுட்டு வந்து சொல்லியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.”
ஷ்ரவன் சொன்னான். “நான் அதையும்
கூட யோசிச்சேன் ஸ்ரேயா. ஆனால் நான் அப்படி வர்றதுக்குள்ளே உனக்கு வேறெதாவது வரன்
அமைஞ்சு, உங்க வீட்டுல நிச்சயம் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு எனக்கு
பயமாயிருந்துச்சு. அதனால் தான் உடனே வந்து பேசறேன்.”
யோகாலயத்திலிருந்து திரும்பி வருவதற்குள் அவளை இழந்து விடுவோமோ என்று அவன் பயந்ததாகச்
சொன்னது, இதுவரை அவன் காட்டிய அலட்சியத்தில் நொந்திருந்த அவளுடைய மனதுக்கு
மிகவும் இதமாய் இருந்தது.
அவள் புன்னகையுடன் கேட்டாள். “நான் காதலிக்கிறது
உட்பட எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க. நான் இனி
எதாவது சொல்ல பாக்கி இருக்கா?”
ஷ்ரவனும் புன்னகைத்தபடி சொன்னான். “நான் சைத்ரா
வழக்கை முடிச்சுட்டு வர்ற வரைக்கும் காத்திருப்பேன்னு மட்டும் எனக்கு வாக்குக் கொடு
ஸ்ரேயா.”
ஸ்ரேயா கேட்டாள். “ஆனால் நமக்கு
கல்யாணம் ஆன பிறகு கூட நீங்க உங்க வேலையிலிருந்து ராஜினாமா செய்ய மாட்டீங்க. ஆபத்தான
வேலைகள் இனியும் வரும். கடைசி வரைக்கும் அது தொடரும் இல்லையா?”
ஷ்ரவன் குற்ற உணர்வுடன் ஆமென்று தலையசைத்து
விட்டு, அவன் மென்மையாகச் சொன்னான். ”ஸ்ரேயா அதை நான் மறுக்கலை. இராணுவத்துல
இருக்கிற வீரனோட நிலைமை தான் என் நிலைமையும். ஆனால் இதையெல்லாம்
யாராவது செஞ்சு தானே ஆகணும் ஸ்ரேயா? நாடும், சமூகமும்
நல்லபடியாய் இருக்கறதுக்கு இந்த வேலைகள் அத்தியாவசியம் இல்லையா? அதெல்லாம்
வேற யாராவது செஞ்சுக்கட்டும், நானும், என் குடும்பமும் பாதுகாப்பாய் இருக்கணும்னு நினைக்கிறது, வடிகட்டின
சுயநலம் இல்லையா? அப்புறம்,
எதுல ஆபத்தில்லை ஸ்ரேயா? தினம் ஆபிஸ் போயிட்டு வர்றதுல கூட ஆபத்தில்லையா? நாம விபத்துல
சிக்கிக்கிறதுக்கு வாய்ப்பில்லையா. சரி அப்படியே வேலையை
ராஜினாமா பண்ணிட்டு வீட்டுலயே இருந்தால் கூட ஏதாவது பெரிய வியாதி வர வாய்ப்பில்லையா? விபத்துலயோ, வைரஸ்லயோ, வியாதிலயோ
வர முடிஞ்ச ஆபத்து தான் என் வேலைலயும் இருக்கும். அதிகமாகவும்
இல்லை, குறைவாகவும் இல்லை.”
அவள் பெருமூச்சு விட்டாள். அவன் கேட்டான். “என்ன ஸ்ரேயா?”
அவள் சொன்னாள். “கல்யாணமானால்
உங்க கிட்டே பேசிகூட ஜெயிக்க முடியாது போலருக்கே.”
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அப்படியெல்லாம்
இல்லை ஸ்ரேயா. கல்யாணத்துக்கு முன்னாடி தான் எங்க பேச்சு எடுபடும். கல்யாணத்துக்குப்
பிறகு மனைவி கிட்ட பேசி ஜெயிக்க முடிஞ்ச ஆளை நான் இதுவரைக்கும் எங்கேயும் பார்க்கலை.”
அவள் வாய் விட்டுச் சிரித்தாள். அவன் அவளைக்
கவர்ந்து விட்டான். அவன் மீது காதலோடு, மதிப்பும், மரியாதையும்
கூடியது. நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்
தாய், தந்தையரைப் பற்றிச் சொன்னான். அவர்களது
காதல் திருமணம் பற்றிச் சொன்னான். அடிக்கடி அன்பாய் அவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டைகள் பற்றிச்
சொன்னான். அவன் தாய் ஒரு தமிழ்ப் பெண்ணைத் தான் அவன் திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வதைச் சொன்னான்.
அவளும் தன் பெற்றோரைப் பற்றிச் சொன்னாள். அவளுடைய
அன்பான பாட்டியைப் பற்றியும், சுட்டித் தம்பியைப் பற்றியும் பெருமையாகச் சொன்னாள். இருவரும்
நேரம் போவதறியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். பூங்காவிலிருந்து
கிளம்பிய போது நெடுங்காலம் பழகிய காதலர்கள் போல் இருவரும் உணர்ந்தார்கள்.
ஸ்ரேயா அவனிடம் கேட்டாள். “ஷ்ரவன், நானும்
ஏதாவது விதத்துல உங்களோட இந்த வழக்குல உதவட்டுமா? எனக்கும்
இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.”
அவன் அவசரமாய்ச் சொன்னான். “வேண்டாம்
ஸ்ரேயா. இதெல்லாம் ஆபத்தான சமாச்சாரங்கள். நீ இதுல
வராம இருக்கறது நல்லது.”
அவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு
சொன்னாள். “ஷ்ரவன், ஆபத்து எதுல இல்லை. வண்டியில
போறப்ப இல்லையா, வீட்டுலயே இருந்தாலும் இல்லையா...?”
ஷ்ரவன் சிரித்துக் கொண்டே அவள் கையை
அழுத்தியபடி சொன்னான். “சரி ஏதாவது உதவி தேவைப்படறப்ப கண்டிப்பாய் சொல்றேன்.”
ஓட்டல் அறைக்குத் திரும்பி வந்த போது ஷ்ரவன் மனம் நிறைந்திருந்தது. எல்லாம்
அவன் எதிர்பார்த்ததை விட இனிமையாகவே போய் விட்டது. ஸ்ரேயா
அவனுக்கு எல்லா விதங்களிலும் பொருத்தமானவளாகத் தெரிந்தாள். வேலையில்
இருக்கும் புத்திசாலித்தனம் அவனுக்கு இந்த காதல் விவகாரத்தில் போதாது.
‘”நான் உன்னைக் காதலிக்கிறேன். நீயும் என்னைக்
காதலிக்கிறாயா?” என்று கேட்கும் சாதாரண அறிவு கூட இல்லாமல், அவளுக்கும்
சேர்த்து அவனே தீர்மானமாய் சொல்லி விட்டதை, அவளைத்
தவிர வேறெந்தப் பெண்ணும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள். அந்த நல்ல
பெண் அதையும் கூடப் பெரிதுபடுத்தாமல், அவனை ஏற்றுக் கொண்டது
பெரிய விஷயம் தான். அந்தப் பெருந்தன்மைக்கு அவன் நன்றி கூடத் தெரிவிக்கவில்லை. ’நான் கற்றுக் கொள்ள வேண்டியது. இன்னும்
நிறைய இருக்கிறது!’
ஷ்ரவன் மனதை அடுத்ததாய் செய்ய வேண்டிய
காரியங்களுக்கு நகர்த்தினான். குமரேசனைத்
தொடர்பு கொண்டு, யோகாலயத்தில் அவன் கவனத்திற்கு வந்திருக்கும் முக்கியத் தகவல்
ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான்.
குமரேசன் சொன்னான். “வாரம் ஒரு
தடவையாவது ஒரு ஆள் அங்கே வர்றார். அவர் கார் நம்பரை வெச்சு செக் பண்ணினப்ப அவர் ஆடிட்டர் திவாகரன்னு
தெரிஞ்சுது. அவருக்கும் அங்கே ரொம்ப செல்வாக்கு இருக்கு. அவர் அதிகமாய்
பாண்டியன் கிட்ட தான் பேசிட்டு போறார். சில சமயங்கள்ல பிரம்மானந்தாவும்
அவங்க கூட சேர்ந்து பேசறதுண்டு.”
யோகாலயத்தில் செல்வாக்கு உள்ளவர், அடிக்கடி
அங்கு போய் பாண்டியனையும், பிரம்மானந்தாவையும் சந்தித்துப் பேசுபவர் என்றால் அந்த நபர்
கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆராயப்பட வேண்டிய நபர் என்று ஷ்ரவன் முடிவு செய்தான்.
(தொடரும்)
என்.கணேசன்