என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 2, 2025

சாணக்கியன் 181

 

சாணக்கியரைப் பார்த்ததும் விஷாகா அடிவயிற்றில் கலக்கத்தை உணர்ந்தாள். இதயம் படபடவென்று அடிக்கத் தொடங்கியது. நாக்கு வாயிற்குள் ஒட்டிக் கொண்டது. அவர்கள் திட்டம் தெரிந்து கொண்டு வந்திருக்கிறார் என்று உள்மனம் அவளை எச்சரிக்க சிலை போல் சில கணங்கள் நின்றவள் பின் கஷ்டப்பட்டுச் சுதாரித்துக் கொண்டு கைகூப்பினாள். வார்த்தைகளாலும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவு அவசரப்படுத்தினாலும் நாக்கு அசைய மறுத்தது.  

 

சாணக்கியர் நிதானமாக அவளைக் கூர்ந்து பார்த்தார். தனநந்தனின் விசேஷ விஷ நர்த்தகி அவர் கேள்விப்பட்டதை விடவும்  பேரழகாய் இருப்பதைக் கண்டார். அங்கிருந்த இருக்கையில் நிதானமாக அமர்ந்தபடி அவர் மெல்லக் கேட்டார். ”எல்லா ஏற்பாடுகளையும் நீ கச்சிதமாகச் செய்து விட்டாயிற்றா பெண்ணே?”

 

அவர் எந்த ஏற்பாடுகளைக் கேட்கிறார் என்பதை அவர் முகத்தை வைத்து அவளால் ஊகிக்க முடியவில்லை. இரட்டை அர்த்தத்துடன் அவர் கேட்ட கேள்வி அவர் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் வந்திருக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது போல் அவளுக்குத் தோன்றியதால் அதிர்ச்சி கூடியது. இதயம் வெடித்து விடுவது போல அவள் உணர்ந்தாள். ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் தலையசைத்தாள். நடன ஏற்பாடுகளையே அவர் கேட்பதாக அவள் எடுத்துக் கொண்டதாக இருக்கட்டும் என்று நினைத்தாள்.

 

ஆனால் அவர் அவள் உத்தேசத்தை முழுதும் தெரிந்து கொண்டதை அடுத்த கேள்வியில் உறுதிப்படுத்தினார். “அரசனைக் கொல்ல முயற்சிப்பதற்கு என்ன தண்டனை என்பது உனக்குத் தெரியுமா பெண்ணே?”

 

அவள் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று மீண்டும் வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. எல்லாம் அறிந்து கொண்டு வந்திருக்கும் மனிதரிடம் மறுக்க வழியில்லை. அது அவரை மேலும் கோபமூட்டலாம்... அவள் பலவீனமான குரலில் சொன்னாள். “இந்த அபலையை மன்னித்து விடுங்கள் பிரபு.”

 

அவர் ஒன்றும் சொல்லாமல் அவளையே அமைதியாகக் கூர்ந்து பார்த்தார். அவருடைய அமைதி அவளை மேலும் அதிகமாய் பயமுறுத்தியது. இனி இவரிடம் எதையும் மறைக்க முடியாது என்பது தெளிவாகப் புரிந்ததால் அவள் கனத்த மனதுடன் உண்மையைச் சொன்னாள். “நடந்திருப்பதை நான் தவறாகப் புரிந்து கொண்டதால் தான் இதற்குச் சம்மதித்தேன் பிரபு. சற்று முன் தான் இளவரசியின் விருப்பத்தினாலேயே இந்தத் திருமணம்  நடைபெறவுள்ளது என்பது தெரிந்தது. அந்த உண்மை தெரிந்தவுடனேயே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டேன். என்னால் இளவரசிக்கு எந்தத் துக்கமும் எந்தக் காலத்திலும் வராது என்பதைச் சத்தியம் செய்து கூறுகிறேன் பிரபு.”

 

சாணக்கியர் சொன்னார். “நீ இந்தத் திட்டத்தைக் கைவிட்டாலும் கூட, சந்திரகுப்தனின் உயிருக்கு இருக்கும் ஆபத்து நீங்கி விடாது பெண்ணே. அவனைக் கொல்ல உத்தேசித்திருக்கும் பர்வதராஜன் வேறு விதமான முயற்சிகளைக் கண்டிப்பாக மேற்கொள்வான். நீ மறுத்தால் வேறு ஒரு ஆளை வேறு விதமான முயற்சியில் நிச்சயம் ஈடுபடுத்துவான். இளவரசியையும், மகதத்தையும் தன் மகனுக்குப் பெற்றுத் தரும் சகல முயற்சிகளையும் அவன் எடுப்பான்...”

 

விஷாகா யோசனையுடன் கேட்டாள். “உங்கள் கண்காணிப்பை மீறி அவர் அரசரை என்ன செய்து விட முடியும் பிரபு?”

 

எதிரிகளை எல்லா நேரங்களிலும் கண்காணிக்க முடியும் பெண்ணே. ஆனால் நட்பின் போர்வையில் இருந்து கொண்டு நம்மை வீழ்த்தத் திட்டமிட்டுக் காத்திருப்பவர்களை வெளிப்படையாகக் கண்காணிப்பது நமக்கிருக்கும் சந்தேகத்தை வெளிப்படுத்திவிடும். அதனால் அது உசிதமுமல்ல.”

 

அப்படியானால் என்ன செய்வது பிரபு?” என்று அவள் உண்மையான கவலையுடன் கேட்டாள்.

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார்.  ”நீ நினைத்தால் பர்வதராஜனின் சதிமுயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்

 

லை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்ததை பர்வதராஜன் கட்டளைப்படி நடப்பதாக வெளியாட்கள் நினைத்தாலும் என்ன நடக்கின்றது என்று பர்வதராஜனுக்கே புரியவில்லை. நிகழ்ச்சி நிரலே சற்று முன் தான் அவனுக்குச் சொல்லப்பட்டது. முதல் நாள் மாலை நிகழ்ச்சி நடன நிகழ்ச்சியாம். மறு நாள் காலை இசை நிகழ்ச்சிகளும், மாலை வாத்திய நிகழ்ச்சிகளும். அதற்கடுத்த நாள் காலை வாத்தியங்களின் இசை நிகழ்ச்சிகள் மாலை நாடக நிகழ்ச்சி. தன் கையில் நிகழ்ச்சி நிரல் கிடைத்ததும் முதல் வேலையாக பர்வதராஜன் அதை சந்திரகுப்தனுக்கும், மரியாதை நிமித்தம் சாணக்கியருக்கும் அனுப்பி வைத்தான்.

 

மலைகேது தாழ்ந்த குரலில் கேட்டான். “இதில் எந்த நிகழ்ச்சியில் சந்திரகுப்தனைக் கொல்வதாக இருக்கிறார்கள்?”

 

பர்வதராஜன் பெருமூச்சு விட்டபடி சொன்னான். “யாருக்குத் தெரியும்? ராக்ஷசரும், சாணக்கியரைப் போலவே இப்படி ரகசியங்களைக் காப்பதில் விவரமாகத் தான் இருக்கிறார். எதை எப்போது எப்படி செய்யப் போகிறோம் என்று சொல்ல மறுக்கிறார். முன்கூட்டியே நமக்குத் தெரிந்தால் முடிந்த வரை அந்த நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து தொலைதூரம் இருக்கலாம் என்று பார்க்கிறேன். ஆனால் நமக்கு இதில் சம்பந்தம் இருப்பது போல் கண்டிப்பாகத் தெரியாது என்று ராக்ஷசர் வாக்களித்திருக்கிறார். அதனால் எப்படியோ செய்யட்டும். நமக்குக் காரியமானால் சரி.”

 

மலைகேது தன் பலத்த சந்தேகத்தைக் கேட்டான். “தந்தையே, உண்மையில் மகத இளவரசி மனமுவந்து தான் சந்திரகுப்தனை மணக்க சம்மதம் தெரிவித்தாள் என்பது பிற்பாடு ராக்ஷசருக்குத் தெரிய வந்தால் நமக்குப் பிரச்னை ஆகாதா?”

 

பர்வதராஜன் புன்னகைத்தபடி சொன்னான். “சந்திரகுப்தன் இறந்த பின் தெரிய வரும் விஷயங்களைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அப்படியே அவர் உண்மை தெரிய வந்து நம்மிடம் கேட்டாலும் நாமும் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளலாம். “உண்மை அதுவா? முன்பே தெரிந்திருந்தால் நாங்களே முன்வந்து இருவர் திருமணத்தையும் நடத்தி விட்டிருப்போமேஎன்று அங்கலாய்க்கலாம். கண்ணீர் விடலாம். பின் நடக்க வேண்டியதைப் பார்ப்பது முக்கியம் என்று தத்துவம் பேசி உங்கள் இருவர் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யலாம்.”

 

சாணக்கியர் சந்திரகுப்தன் மரணத்தைத் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது தந்தையே?”

 

மகனே ஒன்றை நினைவு வைத்துக் கொள். சந்திரகுப்தன் இல்லா விட்டால் சாணக்கியர் பூஜ்ஜியம் தான். இன்னொரு சந்திரகுப்தனை உருவாக்கும் அளவு அவரிடம் காலம் இல்லை. அதே போல் அரசன் இல்லாத ராக்ஷசரும் பூஜ்ஜியம் தான். அவரும் நமக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. சூழ்நிலை நமக்குத் தான் சாதகமாக இருக்கிறது மகனே. நீ அரியணையில் அமரும் போது அவர்கள் உன்னை அனுசரித்தே செல்ல வேண்டியிருக்கும். அதனால் நீ கவலைப்படாதே.”

 

மலைகேது கனவு காண ஆரம்பித்தான்.

 

சுசித்தார்த்தக் பரபரப்புடன் வருவதைப் பார்த்த பர்வதராஜன் கேட்டான். “என்ன சுசித்தார்த்தக், பரபரப்பாகத் தெரிகிறாயே?”

 

சுசித்தார்த்தக் புன்னகைத்தான். “நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றன. எல்லாம் நல்லபடியாக மாறப்போகின்றது. அந்த எதிர்பார்ப்பும், இன்று மாலையின் நடன நிகழ்ச்சியை எதிர்பார்த்தும் பரபரப்பை உணர்கிறேன் அரசே

 

நல்ல நிகழ்வுகள் நடக்கவிருப்பதன் எதிர்பார்ப்பு புரிகிறது சுசித்தார்த்தக். ஆனால் நடன நிகழ்ச்சியை எதிர்பார்த்து நீ பரபரப்படைவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லையே

 

சுசித்தார்த்தக் முகம் மலர்ந்து சொன்னான். “அரசே, இன்றைய நடன நிகழ்ச்சியின் பிரதான நர்த்தகி விஷாகா பேரழகி என்று சொல்வதே அவள் அழகைக் குறைத்துச் சொல்வது போல. அவளைப் போன்ற அழகியையும், நாட்டியமாடுபவளையும் நீங்கள் எங்குமே பார்த்து விட முடியாது. அவள் அரசர் தனநந்தரின் மனம் கவர்ந்தவள். அவள் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டுமே நடனமாடுபவள். அவளுடன் சேர்ந்து மற்ற நர்த்தகிகளும் நடனமாடுவார்கள் என்றாலும் அரங்கில் இருப்பவர்கள் கண்களை அவள் மீதிருந்து விலக்க முடியாமல் தவிப்பார்கள்...”

 

அவன் சொன்னதைக் கேட்டு பர்வதராஜனும், மலைகேதுவும் ஆர்வம் கொண்டார்கள். சுசித்தார்த்தக் சொன்னான். “நீங்கள் சீக்கிரம் மதிய உணவருந்தி சிறிது நேரம் இளைப்பாறிக் கொண்டு கிளம்பினால் தான் மாலை நடனத்திற்குப் புத்துணர்ச்சியோடு செல்ல முடியும். முழுவதுமாக ரசிக்கவும் முடியும்.”

 

அப்படியே செய்கிறோம். நீ நாங்கள் உணவருந்த ஏற்பாடுகளைச் செய்என்ற பர்வதராஜன் மிகவும் அன்னியோன்னிய பாவனை காட்டி சுசித்தார்த்தக்கிடம் ரகசியமாகக் கேட்டான். “அவர்கள் திட்டத்தை எப்போது நிறைவேற்றப் போகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?”

 

தெரியவில்லை அரசே. ஆனால் ராக்ஷசர் ஒரு நாள் கலைநிகழ்ச்சி போதாது, இரண்டு மூன்று நாட்கள் கலைநிகழ்ச்சிகள் வேண்டும் என்று பிரத்தியேகமாகச் சொன்னதை வைத்துப் பார்க்கையில் இரண்டாவது அல்லது மூன்றாவது நிகழ்ச்சியில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் உத்தேசம் இருக்கும் என்று இந்த அடியவனுக்குத் தோன்றுகிறது.”

 

அவன் சொன்னது பர்வதராஜனுக்கும் சரியாகவே தோன்றியது.


(தொடரும்)

என்.கணேசன்   





Monday, September 29, 2025

யோகி 122


 ல்பனா அவளுடைய பெற்றோருக்கு ஒரே மகள். அவளுடைய தந்தை ஒரு அரசாங்க வேலையில் இருந்தார். அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தாலும் கூட அந்தச் செலவையும் மீறி அவருடைய மாத சம்பளம் அவர்களுடைய சிறிய குடும்பத்திற்குத் தாராளமாகப் போதுமானதாக இருந்தது. தாய் அதிகம் படிக்காதவள். கணவனுக்குப் பயந்து வாழ்ந்தவள். ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால் பணப்பிரச்சினை இல்லாமல் வாழ முடிவதே பெரும் பாக்கியம் என்று நினைத்தவள். தந்தை அதிகமாய் அன்பு காட்டாதவராக இருந்தாலும், கல்பனாவும் வயதுக்கு வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். அதன் பின் தான் அவளுடைய வாழ்க்கை நரகமாய் மாறியது.

 காமாந்தகனான அவளுடைய தந்தை குடித்து விட்டு வந்த போதெல்லாம் அவளிடம் முறை தவறி நடக்க ஆரம்பித்தார். அவளுடைய தாயோ கணவனைக் கண்டிக்க முடியாமல் கண்ணீர் விடுவதோடு நிறுத்திக் கொண்டாள். எங்கு பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியுமோ, அங்கு பாதுகாப்பாக இருக்க முடியாத நிலைமை அவளுக்கு ஏற்பட்டது. அந்தப் பிஞ்சு வயதில் என்ன செய்வது என்று அறியாமல் பெரும் மனப்போராட்டத்திற்குக் கல்பனா ஆளானாள். பல நாட்கள், தந்தை வருவதற்கு முன் தன் அறைக்குள் போய் புகுந்து கொண்டால் மறுநாள் காலை வரை அவள் வெளியே வராமல் இருப்பாள். ஆனால் குடித்து விட்டு வந்து அவர், அவளுடைய அறைக்கதவைத் தட்டி கலாட்டா செய்வார். அவளுடைய தாயை அடிப்பார். பகலில் கல்பனாவை அடித்துத் துன்புறுத்துவார். இதை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல், வேறு போக்கிடமும் இல்லாமல் கல்பனா நரக வாழ்க்கை வாழ்ந்தாள்.

 அந்த சமயங்களில் அவளுக்குப் பெரிதாய் துணை நின்றவை நூலகத்தில் படிக்கக் கிடைத்த தன்னம்பிக்கை நூல்களும், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளும் தான். அவை தான் அவளுக்குத் தைரியத்தையும், நம்பிக்கையையும் தந்து காப்பாற்றின. ஒவ்வொருவனும் தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும், பிரச்சினைகளை நேராகவே சந்திக்க வேண்டும், சூழ்நிலைகளை மீறி அவனவனே முன்னேற வேண்டும் என்ற பாடங்களை அந்த நூல்கள் அவளுக்குக் கற்றுத் தந்தன. தன்னால் முடிந்த அனைத்தையும் ஒரு மனிதன் செய்தானானால், அவன் சக்திக்கு மீறியதை இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற தெளிவு பிறந்தது

 அதன் பின் ஒரு நாள் அவள் துணிந்து அவரை எதிர்த்து நின்றாள். இனி இது போல் அவர் துன்புறுத்தினால் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுப்பதாய் பயமுறுத்தினாள். அப்போது அவளுக்கு வயது பதினாறு. ஆரம்பத்தில் அவளுடைய தந்தை அதைப் போலி அச்சுறுத்தலாக எடுத்துக் கொண்டார். ஆனால் அன்று அவள் உண்மையாகவே எதற்கும் தயாராக இருப்பதை அவரால் உணர முடிந்தது. சட்டத்தில் குழந்தை பாலியல் சித்திரவதைக்கான தண்டனைகள் கடுமையானவை என்பதை அவர் அறியாதவர் அல்ல. அவள் அப்படிப் புகார் செய்தால், சிறை செல்ல வேண்டி வருவது மட்டுமல்லாமல், தன் அரசு வேலையையும் இழக்க வேண்டிவரும் என்ற பயம் அவருக்கு எழுந்தது.

 அன்று முதல் அவருடைய காமச்சேட்டைகளும், அவளை அடிப்பதும் நின்று போயின. ஆனால் அன்றிலிருந்து அவளை எதிரியாக நினைக்க ஆரம்பித்தார். அவள் முன்னிலையில் அவள் தாயை அதிகமாகத் துன்புறுத்த ஆரம்பித்தார். அது அவளுக்கு வேறு விதமான சித்திரவதையாக இருந்தது. ’உன்னை அடிப்பதற்குப் பதிலாகத் தான் உன் அம்மாவை அடிக்கிறேன்என்பதை எல்லா விதங்களிலும் தெரியப்படுத்தினார். அம்மாவோ அதையும் விதி என்றே ஏற்றுக் கொள்பவளாக இருந்தாள். அவருக்கு ஒத்துழைக்காமல் தண்டச்சோறாக இருக்கும் கல்பனா அங்கிருந்து வெளியேறினால் தான் அவள் அம்மாவைத் துன்புறுத்துவது நிறுத்தப்படும் என்பதை அவர் வெளிப்படையாகவே தெரியப்படுத்தினார். பதினெட்டு வயது வரை எப்படியோ அந்த வீட்டில் தாக்குப் பிடித்த அவள், பின் அங்கிருந்து வெளியேறினாள். இந்த நித்திய சித்திரவதையிலிருந்து அவளையும், அவள் தாயையும் காப்பாற்ற அவளுக்கு வேறுவழி தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியேறுகையில் அவள் ஆழ்மனதில் ஒரு அணையாத அக்னி இருந்தது. ஒரு நாள் அவளும் சாதித்துக் காட்டுவாள். அவளும் சிகரங்களை எட்டுவாள்

 வீட்டை விட்டு வெளியேறி வந்தவளுக்கு, அவளுடைய நிலைமையை முழுமையாக அறிந்திருந்து, அடைக்கலம் தந்தது பிரம்மானந்தா தான். அவர் அப்போது ஒரு வாடகை இடத்தில் யோகா வகுப்புகள் நடத்தி வந்தார். அவளுடைய தந்தை யோகா கற்றுக் கொடுக்க எல்லாம் தன்னிடம் பணம் இல்லை என்று பணம் தர மறுத்திருந்தார். ஆனாலும் ஒரு வருடத்துக்கு முன்பு இலவசமாக அவளுக்கு பிரம்மானந்தா யோகா/தியானம் கற்றுத் தந்திருந்தார். வீட்டை விட்டு வந்தவுடன் அவருடன் சேர்ந்து யோகா மற்றும் தியானம் கற்றுத் தரும் பணியில் கல்பனா தன்னை இணைத்துக் கொண்டாள்.

 அன்று அவர்கள் கற்றுத் தந்ததெல்லாம் பத்மநாப நம்பூதிரி கற்றுத் தந்த பெயரிலேயே இருந்ததுஅந்த யோகா மற்றும் தியான முறைகளை பத்மநாப நம்பூதிரி பள்ளியில் தான் கற்றது என்று சொல்லிக் கொள்ள அன்று பிரம்மானந்தா தயங்கியதேயில்லை. ஆனால் அதையும் மெருகேற்ற வேண்டும், மேம்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் பிரம்மானந்தாவிடம் அன்று உண்மையாகவே இருந்தது. அதை கல்பனாவிடமும், அவருடன் இருந்த மற்ற நண்பர்களிடமும் அவர் அன்று தெரிவித்திருக்கிறார். ஆனால் யோகாலயம் பிரபலமாக ஆரம்பித்த போது, அவர் பத்மநாப நம்பூதிரியின் பெயரைச் சொல்வதில் ஒரு பிரச்சினையை உணர்ந்தார். யோகாலயத்திற்கு வருவோர் அவரை விட அவர் குருவான பத்மநாப நம்பூதிரியை உயர்வாக நினைக்கவும், மதிக்கவும் ஆரம்பித்தார்கள். சிலர் அவரைப் பற்றியும், அவருடைய யோகா அமைப்பின் கிளைகள் எங்கேயெல்லாம் இருக்கின்றன என்பதைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். உடனே பிரம்மானந்தா பத்மநாப நம்பூதிரி பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தினார். அவர் அந்த யோகா, தியான முறைகளின் பெயர்களையும் நவீனமும், விஞ்ஞானமும் கலந்த பெயர்களாய் மாற்றினார்.

 அப்போது கல்பனாவிடம் அவர் சொன்னார். “நாம் இந்த யோகாலயாவைப் பிரபலப்படுத்த வேண்டுமென்றால் அடுத்தவர்கள் பெயர்களை உபயோகப்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நாம் மற்றவர்களுக்கு விளம்பரம் செய்வது போல் ஆகிவிடும். இது விளம்பர யுகம். எத்தனை தான் உயர்வாக இருந்தாலும், விளம்பரமில்லா விட்டால், வித்தியாசமாக எதையாவது செய்யா விட்டால், நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நாம் பின்தங்கி விடுவோம்

 முன்பெல்லாம் சத்சங்கத்தில் எல்லா அறிஞர்களுடைய புத்தகங்களையும், போதனைகளையும் பற்றி அவர்கள் பேசுவார்கள். அப்போது அவரும் பேராசிரியர் சிவசங்கரன் சொல்லியிருந்த அறிஞர்கள் பற்றி எல்லாம் சொல்வார். அந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் சிவசங்கரன் அடையாளம் காட்டியிருந்த ஒரு யோகியைப் பற்றியும் சொன்னார். நிஜமாகவே அமைதியும், சாந்தமும் அந்த யோகி முன்னிலையில் தான் உணர்ந்ததாகச் சொன்னாலும் அது மட்டும் போதாது என்றும், அது சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெருமையல்ல என்று தனக்குத் தோன்றியதாகவும் சொன்னார்.

 யோகாலயம் வளர்ந்தது. முக்தானந்தா போன்ற சிலர் துறவறம் பூண்டு யோகாலயத்தில்  துறவிகளாகச் சேர்ந்த போது, கல்பனாவும் துறவறம் பூண்டு கல்பனானந்தாவாக ஆனாள். ஆனால் அதன் பின் அவள் பிரம்மானந்தாவிடம் காண ஆரம்பித்த மாற்றங்கள் ஏராளம்

 அவர் மற்ற அறிஞர்களின் கருத்துக்களைச் சொன்னாலும், அவர்களுடைய பெயர்களைச் சொல்வதையும் தவிர்த்து, தன் சொந்தக் கருத்தாக சொல்ல ஆரம்பித்தார். அவர் ஓஷோவின் தீவிர ரசிகராக இருந்தவர். ஓஷோ எல்லா மகான்கள், ஞானிகளையும் படித்திருந்து அவர்கள் ஞானத்தை விரிவாக விவரிப்பதைப் பார்த்து பிரமித்தவர். சொற்பொழிவுகளில் அவருடைய நூல்களில் இருந்து தாராளமாக எடுத்துக் கொண்டு பேசினாலும் ஓஷோவின் பெயரைச் சொல்வதையும் தவிர்த்தார். ஆனால் ஓஷோ போல் குல்லாயும், வண்ண வண்ண நீண்ட அங்கிகளையும் அவர் அணிய ஆரம்பித்தார்.

 குருவாகப் பிரபலமானதில் அவருக்கு ஆரம்பத்தில் திருப்தி இருந்தாலும், போகப் போக அதுவும் சலித்தது. அதற்கும் மேலாக இறையருள் பெற்ற ஒரு யோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்ள ஒரு நாள் திடீரென்று சதுரகிரி மலையில் சித்தர்கள், யோகிகள் மற்றும் சுந்தரமகாலிங்கம் காட்சியளித்த கதையை அவிழ்த்து விட்டார். அந்தக் கதையைச் சொன்ன தினத்தன்று அவர் கல்பனாவிடம் சொன்னார். “இது உண்மையாகவே நடந்தது. ஆனால் யோகி கோரக்கர் இதை நான் அனுமதி தரும் வரை நீ வெளியே சொல்லக்கூடாது என்று எனக்கு கட்டளை இட்டிருந்தார். அதனால் தான் இத்தனை நாள் இதை நான் வெளியே சொல்லியிருக்கவில்லை. இப்போது இதைச் சொல்லலாம் என்று யோகி கோரக்கர் நேற்றிரவு என் கனவில் சொன்னார். அதனால் தான் சொல்கிறேன்என்றார்.

 தொடர்ந்த காலத்தில் அந்தக் கதையும் அவருக்குச் சொல்லிச் சலித்து விட்டது. திடீரென்று அவர் முந்தைய பிறவியில் பதஞ்சலி மகரிஷியின் சீடர் என்று சொல்ல ஆரம்பித்தார். இந்த முறை அவர் கல்பனாவிடம் எந்த விளக்கமும் தரவில்லை. அதற்குப் பின் எப்போதும் எதற்கும் அவளிடம் அவர் விளக்கம் தந்ததில்லை.

 (தொடரும்)

என்.கணேசன்




Thursday, September 25, 2025

சாணக்கியன் 180

சுசித்தார்த்தக் பர்வதராஜனிடம் வந்து இரகசியமாகச் சொன்னான். “அரசே. ராக்ஷசரிடமிருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது

 

பர்வதராஜன் நிமிர்ந்து உட்கார்ந்தான். ஒரே நாளில் ராக்ஷசரிடமிருந்து தகவல் வரும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஆவலோடு கேட்டான். “என்ன தகவல்?”

 

தங்களிடம் அவர் பேசியதை நிறைவேற்ற அரண்மனையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அது இரண்டு மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சிகளாக இருந்தால் நல்லது என்று சொல்கிறாராம்.”

 

உண்மையில் ராக்ஷசர் சொன்னது முதல் வாக்கியம் மட்டும் தான். இரண்டாவது வாக்கியம் சேர்க்கப்பட்டது என்பதை அறியாத பர்வதராஜன் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் போரை ஆரம்பித்த பின்னரே அவன் வாழ்க்கை சோபை இல்லாமல் தான் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் விஷயங்களும் அவன் விருப்பப்படி வேகமாக நடப்பதில்லை. அதனால் தங்கள் திட்டம் நிறைவேறப்போவது மட்டுமல்லாமல் களை இழந்த வாழ்க்கையில் இந்தக் கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைக் கூட்டுமென்று அவன் எண்ணினான்.

 

ஆனால் திடீரென்று ஒரு பலத்த சந்தேகம் வர அவன் எச்சரிக்கையுடன் கேட்டான். “எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்வதால் சந்திரகுப்தனை நான் தான் திட்டமிட்டுக் கொன்றேன் என்ற சந்தேகம் வந்து விடாதே

 

சுசித்தார்த்தக் சொன்னான். “ராக்ஷசர் இது ஒரு விபத்து அல்லது இயற்கையாக நடப்பது போலத் தெரியும்படி செய்வதாகச் சொல்லியிருக்கிறார் அரசே. அதனால் அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கும் அந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக யாருக்கும் தெரியாது.”

 

நிம்மதியடைந்த பர்வதராஜன் உடனே சாணக்கியரைப் பார்க்கக் கிளம்பினான். முன்பு போல அவனைப் பல இடங்களைச் சுற்ற வைக்காமல் சாணக்கியர் அவர் மாளிகையிலேயே இருந்தார். பர்வதராஜனின் வணக்கத்தை ஏற்றுக் கொண்ட அவர்தங்கள் மாளிகையில் வசதிகள் எல்லாம் திருப்திகரமாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.

 

தங்கள் தயவில் எந்த வசதிக்கும் எனக்குக் குறைவில்லை ஆச்சாரியரே. ஆனால் வேறு ஒரு குறை எனக்கும் என் மகனுக்கும் இருக்கின்றது. அதைத் தெரிவிக்கவே இப்போது வந்தேன்என்று பர்வதராஜன் சொன்னான்.

 

என்ன குறை பர்வதராஜனே?”

 

நாம் மகதத்தை வென்றது சாதாரண நிகழ்ச்சி அல்ல. இந்த மாபெரும் வெற்றியை நாம் இன்னும் கொண்டாடாதது எனக்கு அதிருப்தியைத் தருகிறது ஆச்சாரியரே.”

 

எப்படிக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறாய்?”

 

கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் துறவியைப் போலவே வாழ்பவர். ஆனால் நாங்கள் அப்படி அல்லவே. நாங்கள் என்று நான் சொல்வது சந்திரகுப்தனையும் சேர்த்து தான். எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டிய இளம் வயதினனை நீங்கள் துறவியைப் போலவே இருக்க வைப்பது சரியல்ல ஆச்சாரியரேஎன்று பர்வதராஜன் உரிமையோடு சொன்னான்.

 

சாணக்கியர் மென்மையான குரலில் சொன்னார். “நீ சொல்வதும் சரி தான் பர்வதராஜனே. நான் இராஜாங்க காரியங்களையே கவனித்துக் கொண்டு இருப்பதால் லௌகீக காரியங்கள் சிலவற்றை என்னை அறியாமல் அலட்சியம் செய்து விடுகிறேன் என்பது எனக்கும் புரிகிறது. நாளையே உனக்குப் பிடித்தாற்போல் கலைநிகழ்ச்சிகளுக்கு நீயே ஏற்பாடு செய்து விடு.”

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரே. வெற்றி பெரிதாக இருக்கும் போது கொண்டாட்டங்களும் நீண்டதாக இருப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு நாள் கலைநிகழ்ச்சிகள் போதாது. இரண்டு அல்லது மூன்று நாட்களாவது கொண்டாட வேண்டும்.”

 

உன் விருப்பம் போலச் செய். ஆனால் என்னால் அந்த நிகழ்ச்சிகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால் நான் பங்கு கொள்ள முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இந்த மூன்று நாட்களில் நான்  அவற்றைச் செய்து முடிக்கிறேன்.”

 

பர்வதராஜன் பரம திருப்தி அடைந்தான். இது போன்ற சமயங்களில் சாணக்கியர் இல்லாமல் இருப்பது நல்லது. அவர் இருந்தால் அவர் கழுகுப் பார்வைக்கு எதுவும் தப்பாமல் இருக்காது. கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமில்லாததன் காரணமாக தானாக அவராகவே விலகுவது அவர்கள் அதிர்ஷ்டம் தான். ராக்ஷசரிடம் இந்தத் தகவலைச் சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவார். “நான் சொன்னதற்கு மதிப்பு தந்து அனுமதித்ததற்கு நன்றி ஆச்சாரியரே. நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்த உடனே ஏற்பாடு செய்கிறேன்என்று கைகூப்பிச் சொல்லி  விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

 

மிகவும் மகிழ்ச்சியுடன் வந்த தந்தையைப் பார்த்து மலைகேது கேட்டான். “என்ன தந்தையே மிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? பாதி ராஜ்ஜியம் கிடைத்து விட்டதா?”   

 

பர்வதராஜன் சொன்னான். “இப்போது பாதியும், பிற்பாடு மீதியும் கிடைக்க இன்று நல்ல சகுனம் ஒன்று தெரிந்திருக்கிறது மகனே. ஆச்சாரியருக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பது நமக்கு இவ்வளவு பிரயோஜனப்படும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை

 

மலைகேது விளக்கமாகச் சொல்லும்படி கேட்க பர்வதராஜன் நடந்ததைச் சொன்னான். மலைகேதுவும் மகிழ்ந்தான். அவன் கேட்டான். “ராக்ஷசர் என்ன திட்டமிட்டு இருக்கிறார் என்பது தெரியுமா தந்தையே?”

 

அந்த ஆளும் ஆச்சாரியருக்குச் சளைத்தவரல்ல மகனே. அவரும் சொல்ல மறுக்கிறார். பரவாயில்லை விடு. நமக்குக் காரியமானால் சரி

 

மலைகேது தாழ்ந்த குரலில் கேட்டான். “சந்திரகுப்தன் இறந்தால் சாணக்கியர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?”

 

சன்னியாசம் போகலாம். இல்லை ஏதாவது அதிகாரப் பதவியை நம்மிடம் எதிர்பார்க்கலாம்.” என்று பர்வதராஜன் அலட்சியமாகச் சொல்லி விட்டு சுசித்தார்த்தக்கை அழைத்து சாணக்கியர் சம்மதித்திருப்பதைத் தெரிவித்தான். திட்டத்தை நிறைவேற்ற என்ன நிகழ்ச்சிகள் வேண்டுமோ அந்த நிகழ்ச்சிகளை அவன் ஏற்பாடு செய்தது போல் செய்து கொள்ளும்படி தெரிவித்தான். சுசித்தார்த்தக் அந்தத் தகவலை ஜீவசித்தி மூலமாக ராக்ஷசருக்குத் தெரிவிக்க விரைந்தான்.

 

விஷாகா அரண்மனையின் நடன மண்டபத்திற்கு அருகே இருந்த ஒப்பனை அறைக்குள் நிறைய நாட்கள் கழித்து நுழைகிறாள். காலியாக இருந்த நடன மண்டபமும், தனநந்தன் அமரும் அரியணையும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தின. மனம் கனமானது. மன்னன் இப்போது கானகத்தில்அங்கு இசையும் இல்லை, நடனமும் இல்லை. சுற்றிலும் விலங்குகளும், தாவரங்களும் மட்டும் தான் எப்படியெல்லாம் வாழ்ந்த மன்னருக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யார் தான் எண்ணியிருப்பார்கள்...

 

அவள் ஒப்பனையை ஆரம்பித்த போது துர்தராவின் தோழி உள்ளே நுழைந்தாள். “அக்கா எப்படியிருக்கிறீர்கள்?”

 

விஷாகா அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். துர்தராவின் தோழி வெகுளிப் பெண். மிக நல்லவள். அவளுக்கு ஒரு சகோதரி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கலாம் என்று விஷாகா எப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு.

 

நான் நலம். நீ எப்படியிருக்கிறாய்? இளவரசி எப்படியிருக்கிறார்கள்?”

 

நாங்களும் நலம். இளவரசிக்கென்ன? அவர்கள் கனவு கண்டு கொண்டேயிருக்கிறார்கள்.”

 

துக்கத்துடன் சொல்வதற்குப் பதிலாக மகிழ்ச்சியுடன் தோழி சொல்வதைக் கேட்டு விஷாகா திகைத்தாள்.

 

விஷாகாவின் திகைப்பைப் பார்த்து விட்டு தோழி கேட்டாள். “என்ன அக்கா உங்களுக்கு விஷயமே தெரியாதா?”

 

விஷாகா சொன்னாள். “எந்த விஷயம்?”

 

இளவரசிக்கும் சந்திரகுப்தருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் விஷயம்

 

மகதத்தை வென்று மன்னரை கானகத்திற்கு அனுப்பிய எதிரியை இளவரசி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று நீ மகிழ்ச்சியுடன் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே

 

காதலுக்கு விதிகளோ, காரணங்களோ, கட்டுப்பாடுகளோ கிடையாதல்லவா அக்கா. சந்திரகுப்தரை முதல் முதலில் பார்த்தவுடன் இளவரசி மனதைப் பறி கொடுத்து விட்டார்கள். ஆரம்பத்தில் மன்னரும், அரசிகளும் ஆதரிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. ஆனால் ஜோதிடர்கள் இளவரசிக்கு அரியணையில் அமரும் யோகம் இருக்கிறது என்று சொன்னது நினைவுக்கு வர, இது விதியின் தீர்மானம் என்றெண்ணிப் பின் சம்மதித்தார்கள். அப்போதும் சாணக்கியர் இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சாணக்கியர் இளவரசிக்கு விருப்பமுள்ளவனை மணமுடித்து வைக்கிறேன் என்று முன்பே மன்னரிடம் வாக்களித்திருந்தார். கொடுத்த வாக்கை மீற முடியாமல் அவரும் சம்மதித்தார். ஆனால் சந்திரகுப்தரும் இளவரசியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டதாகத் தான் தெரிகிறது. இருவரும் பார்த்துக் கொண்டால் உலகத்தையே மறந்து விடுகிறார்கள்என்று சொல்லி கலகலவென்று தோழி சிரித்தாள்.

 

விஷாகா திகைத்தாள். பர்வதராஜன் சொன்னதற்கும் இவள் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே என்று குழம்பியபடி கேட்டாள். “ஆனால் மன்னரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டார்களே? மகளது திருமணம் வரை கூட இங்கிருக்க சாணக்கியர் சம்மதிக்கவில்லையே.”

 

வெற்றிக்குப் பின் யார் தான் பழைய மன்னரை அங்கேயே தங்கியிருக்க அனுமதிப்பார்கள் அக்கா. சபதம் போட்டுச் சென்ற சாணக்கியர் மன்னரைச் சிறைபிடிப்பார் அல்லது கொன்று விடுவார் என்று கூட எல்லோரும் பயந்து கொண்டிருந்தோம். அதை ஒப்பிடும் போது வனப்பிரஸ்தம் என்பது கௌரவமானதல்லவா? மன்னருடன் நான்கு பணியாட்களும், காவலர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். மேலும் திருமணம் முடியும் வரை இளவரசியின் தாய் இங்கிருக்க சாணக்கியர் சம்மதித்திருக்கிறார் என்பதும் ஆறுதல்...”

 

தொடர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு துர்தராவின் தோழி சென்று விட்டாள். பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு, விஷாகா மனக்குழப்பத்துடன் ஒப்பனையைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. விஷாகா யாரென்று யோசித்தவளாய் கதவைத் திறந்தாள். சாணக்கியர் நின்றிருந்தார்.

  

(தொடரும்)

என்.கணேசன்