சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 7, 2025

யோகி 97

 


ஷ்ரவன் ஹைத்ராபாத் வந்து விட்டான். வீட்டுக்கு வந்தவுடனேயே ஸ்ரேயாவைப் பற்றி அம்மாவிடம் சொல்லலாமா என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அம்மா அதிகம் உணர்ச்சிவசப்படுபவள். மகன், மருமகளைப் பற்றி அதிகமாகக் கனவு காண ஆரம்பித்து விடுவாள். கற்பனைக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விடுவாள். நிஜங்கள் எப்படி இருக்கப் போகின்றனவோ யாருக்குத் தெரியும். கோட்டைகள் கட்டி கடைசியில் அவை இடியும் போது கஷ்டப்படுவதை விட, கோட்டைகள் இல்லாத வெற்றிடமே மேல்.  அதனால் யோகாலயம் போய் திரும்பி வந்த பின் வீட்டில் சொல்வது என்று அவன் முடிவெடுத்தான்.

 

ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவனால் ஸ்ரேயாவிடம் தினமும் பேசாமல் இருக்க முடியவில்லை. அவன் தனதறையில் இருந்து கொண்டு தான் பேசினான். மிகத் தாழ்ந்த குரலில் தான் பேசினான். அவனுடைய வேலையில் இரகசியம் காப்பதற்கு அது மிக அவசியம் என்பதால், சில சமயங்களில் அவன் பேசும் போது அவனுக்கு நான்கடி தள்ளி இருப்பவனுக்குக் கூட அவன் என்ன பேசுகிறான் என்று கேட்காது.  அதனால் அவன் அம்மாவிற்கு அவனறைக்கு வரும் போது கூட அவன் யாரிடம், என்ன பேசுகிறான் என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.  ஆனாலும் அம்மா முதல் தடவை அவன் அறைக்கு வரும் போதே  கேட்டு விட்டாள். “யாருடா அந்தப் பொண்ணு?”

 

எந்தப் பொண்ணு?”

 

நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிகிட்டிருந்தியே அந்தப் பொண்ணு

 

நான் பேசிகிட்டிருந்தது பொண்ணு கிட்டன்னு யாரு சொன்னா?”

 

நான் சொல்றேன்.”

 

எதை வெச்சி அப்படி சொல்றே?”

 

எல்லாம் உன் முகத்தை வெச்சு தான். பெத்தவளுக்குத் தெரியாதாடா, பிள்ளையைப் பற்றி. உன் முகத்துல இத்தனை பிரகாசத்தை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையேடா?”

 

ஷ்ரவன் சிரித்து விட்டான். வார்த்தைகள் கேட்கக்கூடாது என்று கவனமாய் இருந்தாலும் முகபாவனையில் கோட்டை விட்டு விட்டோமே என்று நினைத்தான். ஆபத்தான இடங்களில் எப்போதும் காட்டும் எச்சரிக்கையை இங்கு காட்டத் தவறிவிடக் காரணம் வீடு ஆபத்தான இடமல்ல என்பதால் தான்.

 

பொண்ணு யாரு? என்ன பேரு? என்ன செய்யறா? ஃபோட்டோ இருக்கா?” அம்மாவிடமிருந்து கேள்விகள் சரமாரியாக வந்தன.

 

பாரும்மா நீ நினக்கற மாதிரியெல்லாம் இல்லை. இன்னும் எதுவும் தீர்மானமாகலை.”

 

காதலிக்கறதோட உங்கள் பங்கு முடிஞ்சுடுச்சு. மற்றது எல்லாம் தீர்மானமாகணும்னா வீட்டுப் பெரியவங்க போய் பேசணும் 

 

காதலே தீர்மானமாகலைன்னு சொல்றேன்.”

 

டேய் உன்னோட புத்திசாலித்தனத்தை எல்லாம் உன் தொழில்ல வெச்சுக்கோ. என் கிட்ட வேண்டாம். உனக்கே இவ்வளவு விவரம் இருக்குன்னா, அதுல பாதியாவது உன்னைப் பெற்றவளுக்கு இருக்காதாடா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. யாரந்தப் பொண்ணு?”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது. ”பொண்ணு பேரு ஸ்ரேயாஎன்று ஆரம்பித்து அவன் அவளைப் பற்றிய விவரங்களை அம்மாவிடம் சொன்னான்.  பின் உறுதியான குரலில் சொன்னான். “ஆனால் நான் இப்ப ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்காக ஒரு ஆபத்தான இடத்துக்குப் போகப் போகிறேன். பாதுகாப்பாய் திரும்பி வராமல் அவங்க பெற்றோர் கிட்ட பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.”

 

சரி. அந்தப் பொண்ணோட செல்போன்  நம்பர் கொடு.”

 

இவ்வளவு நேரம் நான் தமிழ்ல தானே பேசினேன். புரியலையா?”

 

புரிஞ்சுதுடா. அதனால தான் அவளோட அப்பா அம்மா செல்போன் நம்பர் கேட்காமல் ஸ்ரேயாவோட செல்போன் நம்பர் கேட்கறேன்.”

 

என்ன பேசப் போறேம்மா?”

 

இதெல்லாம் முன்கூட்டியே திட்டம் போட்டு வெச்சுப் பேசற விஷயமில்லடா. பேசப் பேச தானா விஷயம் கிடைக்கும்.”

 

பேசப் பேச தானா பிரச்சனையும் ஆகும்

 

பேச்சு பிரச்சனையாகறது அன்பில்லாமல் போகறப்ப தாண்டா. அன்பிருந்தால் பிரச்சனையும் கூட, பேச்சுல சரியாயிடும்

 

ஷ்ரவன் கைகளைக் கூப்பி நின்று சொன்னான். “அம்மா தாயே ஆளை விடுங்க. நான் நாளைக்கு போன் நம்பர் தர்றேன்.”

 

ஏன் நாளைக்கு நல்ல நாளோ?”

 

அம்மாவைப் பற்றி ஸ்ரேயாவிடம் சொல்லி, அவளுடைய செல்போன் எண்ணை அம்மாவுக்குத் தரப் போவதாகவும் சொல்லி ஸ்ரேயாவைத் தயார்ப்படுத்தா விட்டால் அம்மாவை ஸ்ரேயாவால் சமாளிக்க முடியாது என்று ஷ்ரவன் நினைத்ததை வாய் விட்டுச் சொல்லவில்லை.

 

சுருக்கமாகஆமாம்என்று அவன் சொன்னான். அம்மா காலண்டரைப் பார்த்தாள். நாளை முகூர்த்த நாள் தான். மகனை லேசான சிரிப்புடன் பொய்யாக முறைத்து விட்டு அம்மா தன் சமையல் வேலையைப் பார்க்கப் போனாள்.

 

மறுநாள் ஷ்ரவன் யோகாலயத்திற்குப் போன் செய்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் துறவியாக விரும்புவதாகவும், பத்து நாட்களுக்கு முன்பு, இரண்டாம் நிலை தியான வகுப்புக்காக யோகாலயம் வந்திருந்த போது அதுபற்றித் தெரிவித்ததாகவும் சொன்னான். போனில் பேசியவர் அவனைக் காத்திருக்கச் சொன்னார்.

 

சிறிது நேரம் கழித்து கண்ணனின் குரல் கேட்டது. அவரிடமும் அதையே அவன் சொன்ன போது அவர்ஞாபகம் இருக்குஎன்றார். துறவறம் மேற்கொள்ள சில குறிப்பிட்ட நாட்கள் தான் யோகாலயத்தில் பயன்படுத்துவதாகச் சொன்ன அவர், வரும் ஏகாதசி அன்று காலையே யோகாலயம் வந்து விடும்படி சொன்னார்.

 

ஷ்ரவன் காலண்டரைப் பார்த்தான். இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. அவருக்கு நன்றி தெரிவித்தான். 

 

அன்றிரவு ஸ்ரேயா ஷ்ரவனிடம் பேசிய போது அவன் தாய் தொடர்பு கொண்டதைச் சொன்னாள். “உங்கம்மா ரொம்ப ஸ்வீட். ’நான் ஷ்ரவனோட அம்மா. உன்கிட்ட ரெண்டே நிமிஷம் பேசணும். உனக்கு பேச வசதிப்படும் நேரத்தைத் தெரிவிக்கவும்னு எனக்கு காலையில மெசேஜ் அனுப்பிச்சாங்க. நான் சாயங்காலம் சுமார் ஏழு மணிக்குப் பேசலாம்னு பதில் அனுப்பினேன். சரியாய் ஏழு மணிக்கு போன் பண்ணினாங்க. ’ஷ்ரவன் உன்னைப் பத்தி சொன்னான். கேள்விப்பட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம். ஷ்ரவனோட அப்பாவுக்கும் தான். இப்ப எல்லாம் உனக்கு அவன் கிட்ட பேசவே நேரம் போகாதுங்கறதால நான் அதிக நேரம் பேசலை. அவன் வேலை விஷயமாய் போன பிறகு, நீ எப்ப ஃப்ரீயாய் இருக்கியோ அப்ப என்னைக் கூப்பிடு. அப்ப நாம சாவகாசமாய் பேசலாம். சரியா? ரெண்டு நிமிஷம் தாண்டலையே நான். பைனு சொல்லி வெச்சுட்டாங்க. நீங்க தான் அவங்கள பத்தி அநியாயமாய் வளவளன்னு பேசுவாங்க அப்படி, இப்படின்னு சொல்லி பயமுறுத்தினீங்க. பாவம் அவங்க, ரொம்ப ஸ்வீட். நான் தான் திரும்பவும் அவங்களைக் கூப்பிட்டு அஞ்சு நிமிஷம் பேசினேன்.”

 

ஷ்ரவனுக்கு அவள் சொன்னது ஆச்சரியமாகவும், இனிமையாகவும் இருந்தது.  அம்மா சிறிது நேரத்தில் வந்து மருமகள் தன்னைத் திரும்ப அழைத்துப் பேசியதை உயர்வாய் சொன்னாள். தங்கமான பெண் என்றாள்.  அன்றெல்லாம் சந்தோஷமாய் இருந்தாள். அப்பாவிடம் தாழ்ந்த குரலில் சந்தோஷமாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பாவும் மிகவும் சந்தோஷமாய் இருந்தார். அவர்கள் வாழ்க்கையே அவனைச் சுற்றி தான் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அவன் ஒரு பெண்ணை விரும்புகிறான், அவள் நல்ல பெண் என்பது அவர்களை ஆனந்தமடைய வைத்திருப்பது தெரிந்தது.

 

ஆனால் அப்பா அவனிடம் வந்து பேசிய போது மட்டும் பொய்க் கோபத்தோடு தெலுங்கில் சொன்னார். “பிறந்து வளர்ந்ததெல்லாம் ஹைதராபாத்ல. தெலுங்குப் பொண்ணுக கூட தான் படிச்சிருக்கே. அதிகம் பழகியிருக்கே. ஆனாலும், நான் அத்தனை தூரம் சொன்ன பிறகும் நீ அம்மா சொன்ன மாதிரி தமிழ்ப் பொண்ணாய் பார்த்து காதலிச்சுட்டு வந்திருக்கிறதை என்னால் ஜீரணிக்கவே முடியலை

 

அம்மா குரல் சமையலறையிலிருந்து தமிழில் வந்தது. ”இஞ்சி சாறு எடுத்துத் தர்றேன். குடியுங்க. எல்லாம் சரியாயிடும்.”

 

ஷ்ரவன் புன்னகைத்து விட்டு அப்பாவிடம் தெலுங்கிலேயே சொன்னான். “நான் உங்க பிள்ளைப்பா. உங்க மாதிரியே நான் தமிழ்ப் பொண்ணாய் தேர்ந்தெடுத்திருக்கேன். அம்மா மாதிரி தெலுங்கு நபராய் என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கல. திருப்திப்படறத விட்டுட்டு திட்டறீங்களே

 

அப்பாவும் சிரித்து விட்டார். அம்மாவும் சமையலறையிலிருந்து சிரிக்கும் சத்தம் கேட்டது. சந்தோஷமான குடும்பத்தை விட பூமியில் சொர்க்கம் வேறு ஒன்று இருக்க முடியாது. ஆயிரம் கஷ்ட நஷ்டங்கள் வாழ்க்கையில் வந்தாலும், அவற்றை எல்லோரும் ஒன்று சேர்ந்து நின்று சந்திக்கையில் வாழ்க்கை மிகவும் இலகுவாகி விடுகிறது.

 

வார்த்தைகள் இல்லாத சந்தோஷம் அந்த வீட்டில் நிறைந்திருந்தது. புயலுக்கு முன்பான அமைதியோ அது என்ற சந்தேகம் ஷ்ரவன் மனதில் வந்து போனது.

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசன் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 3, 2025

சாணக்கியன் 155

 

ந்த மடலில் முத்திரை இல்லை. அனுப்பியவர் பெயர் இல்லை. யாருக்கு அனுப்பப்பட்டது என்பதும் இல்லை. மடலில் யாருடைய பெயரும் இல்லை. பயன்படுத்தப்பட்ட  எல்லாச் சொற்களும் பொதுவானவை.  இக்கடிதம் தவறி யாராவது கையில் கிடைத்து அவர்கள் படித்தாலும் தலைகால் புரியாது. இந்த சாமர்த்தியத்தைப் பார்க்கையில் விஷ்ணுகுப்தரின் பாணியே தெரிந்தது. ஆனால் ராக்ஷசர் உடனடியாக எந்த முடிவையும் எட்ட விரும்பவில்லை. அனுப்பியது விஷ்ணுகுப்தர் என்றால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார். ஒற்றனை விசாரித்த போது நேபாள மன்னன் அங்கிருந்து மேற்கில் இரண்டு யோஜனை தூரத்திலும், குலு மன்னன் கிழக்கில் ஒரு யோஜனை தூரத்திலும் படைகளுடன் முகாமிட்டு இருப்பதாகச் சொன்னான். இருவரில் யாருக்காகவும் இருக்கலாம்.

 

ஒற்றனை அனுப்பி விட்டு ராக்ஷசர் ஆழ்ந்து யோசித்தார். இந்த மடலில் எதிரி என்று குறிப்பிடுவது மகதத்தைத் தான் என்பது தெளிவாகத் தெரிந்ததால் மற்றதை எல்லாம் யூகிப்பது சிரமமாக இருக்கவில்லை. ’தென்கிழக்கு தேச மன்னனுடனான நம் ரகசியப் பேச்சு சுமுகமாக முடிந்ததுஎன்ற செய்தி தான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மகதத்தின் தென்கிழக்கு தேசம் கலிங்கம் தான். கலிங்க மன்னன் கூடுதல் தலைவலியாவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக அவன் படையெடுத்து வரும் சாத்தியம் இல்லை. மகதம் அவனுக்குத் தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்ட முடியும். ஆனால் மகதம் மற்ற திசைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது கலிங்கத்தின் படையெடுப்பும் சேர்ந்து கொள்வது பிரச்சினையே.

 

யோசிக்க யோசிக்க விஷ்ணுகுப்தரின் திட்டம் மிகவும் தந்திரமானதாகத் தான் அவருக்குத் தோன்றியது. மகதத்தின் விரிந்த பரப்பு ஒருவிதத்தில் மிகவும் சாதகமானதாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் பலவீனமே. பல பக்கங்களில் தாக்குதல் வருமானால் படைகளைப் பிரித்து நீண்ட தூரங்களுக்கு அனுப்பும் சூழல் உருவாகும். எத்தனை பெரிய படைபலம் இருந்தாலும் பிரித்துப் பிரித்துப் பல பக்கங்களுக்கு அனுப்புகையில் வலிமை குறைந்து போவது இயல்பே. அதை எதிர்பார்த்து தான் ஆச்சாரியர் கலிங்க அரசனையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இது ராக்‌ஷசர் சிறிதும் எதிர்பார்த்திராத புதிய சிக்கல்.

 

அவர்கள் திட்டப்படி அவரவருக்குச் சொல்லியிருக்கும் பகுதிகளைத் தாக்குதல் செய்வதென்று சொல்வதில் அந்தப் பகுதிகளின் விவரங்கள் இல்லை. ஆனால் நாள் எது என்று தீர்மானமாகத் தெரிகிறது.  திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு மாற்றியிருக்கிறார்கள். தலைநகரைத் தாக்க வருவது போல் நாடகம் நடிக்கவிருப்பதும் நல்ல வியூகமே…

 

ராக்‌ஷசர் அன்றே அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டினார். மறைமுகமாகக் குறிப்பிட்ட விஷயங்களை விளக்கவும் செய்தார். தனநந்தன் அவர் விளக்க விளக்க கோபத்தில் உடல்நடுங்கினான். சாணக்கின் மகனின் திட்டங்கள் அவனுக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தின. தனக்கு எதிராக கலிங்க மன்னனையும் இப்போரில் இழுத்து விட்டது அவனைப் பெரிதும் பாதித்தது.   

 

ராக்‌ஷசர் அவனை அமைதிப்படுத்துவது போலச் சொன்னார். “அவர்கள் ஒரு திட்டம் தீட்டினால் நாம் பதிலுக்கு ஒரு தீட்டம் தீட்டுவோம் அரசே. அவர்களுக்குப் பதிலடி தருவது நம் தலையாய கடமையாகிறது. அதனால் நாம் அமைதியிழக்க வேண்டியதில்லை…”

 

தனநந்தன் சிறிது அமைதியடைந்தான். ராக்‌ஷசர் பத்ரசாலையும் சுதானுவையும் கூர்ந்து பார்த்தார். சுதானு ஏதோ மனக்கணக்கு போட்டபடி யோசிப்பது தெரிந்தது. பத்ரசால் சொன்னான். “இப்போதைக்கு நாம் வடக்கிலும் மேற்கிலும் அனுப்பியுள்ள படைகள் எதிரிகள் அனுப்பியிருக்கிற படைகளைச் சமாளிக்க போதுமானது. ஆனால் சந்திரகுப்தனும் படையுடன் வந்து சேர்ந்து கொள்வான் என்ற நிலை இருந்தால் நாம் கூடுதலாகப் படை அனுப்புவது நல்லது என்று தோன்றுகிறது.”  

 

ராக்‌ஷசர் அவன் பதிலில் திருப்தியடைந்தார். அவன் கணக்கிடுவது சரியாகவே இருக்கிறது. அவன் எதிரியுடன் கைகோர்த்திருந்தால் சிறிதாவது குட்டையைக் குழப்பிவிடப் பார்த்திருப்பான். அவன் முகத்திலும், பேச்சிலும் ஏதாவது அவனைக் காட்டிக் கொடுத்திருக்கும். ஆக இவன் திருடனாக இருந்தாலும் தெரிந்து எதிரியுடன் கைகோர்த்த திருடனாக இருக்க வாய்ப்பு குறைவு. எதிரி என்று தெரியாமலேயே திருடிக் கொடுத்திருப்பான். சுதானுவை அவர் பார்த்தார். அவன் இப்போதும் ஏதோ மனக்கணக்கிலேயே இருப்பது தெரிந்தது.

 

ராக்‌ஷசர் சொன்னார். ’’இந்த மடலே ஒரு கபட நாடகமாக இருப்பதற்கும் வழியிருக்கிறது என்ற சந்தேகமும் எனக்கு வராமல் இல்லை. நம்மைத் திசை திருப்ப விஷ்ணுகுப்தர் செய்த சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம்.”

 

சுகேஷ் கேட்டான். “அப்படியானால் நாம் என்ன செய்வது? இப்போது தெரிந்த தகவலின் அடிப்படையில் நம் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாமா இல்லை பழைய திட்டங்களிலேயே தங்குவோமா?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “முழுவதுமாக இந்த மடலை அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. நம்பி விடவும் முடியாது என்கிற நிலைமையில் தான் நாமிருக்கிறோம். நம் படை வலிமை இங்கும் நன்றாகவே இருப்பதால் நாம் தெற்கிலும் படைகளை அனுப்பி தென் எல்லையைப் பலப்படுத்தி விட முடியும்”

 

பத்ரசால் சொன்னான். “தெற்கில் படைகளை அனுப்பினாலும் தலைநகரையும் காத்துக் கொள்ள முடியும். ஆனால் சந்திரகுப்தன் வருகிறான் என்று மறுபடி வடக்கு திசைக்குக் கூடுதல் படைகள் அனுப்பினால் இங்கு சற்று பலம் குறைந்து விடும் என்றே தோன்றுகிறது.”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார். “உண்மை சேனாதிபதி. ஆக சந்திரகுப்தன் வடக்கில் தாக்க வரப் போவது உண்மை தானா இல்லை இந்த மடல் ஒரு சதியாக இருந்து அவன் இங்கேயே தாக்க வரப் போகிறானா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி தான் இருக்கிறது.”

 

சுதானு யோசனையுடன் கேட்டான். “என்ன வழி?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “எங்கே படைகள் வருகின்றன, போகின்றன என்று நாம் கவனிப்பதை விட சந்திரகுப்தன் எங்கே போகிறான், எங்கே வருகிறான் என்று கவனிப்பது நாம் முடிவெடுக்க சரியாக இருக்கும். அவனிருக்கும் இடத்தில் தான் விஷ்ணுகுப்தரும் இருப்பார் என்கிறார்கள். அவர்கள் இருவரும் எங்கே வருகிறார்கள் என்பதை நம் ஒற்றர்கள் சரியாக கவனித்து வந்து சொன்னால் அதற்கேற்ற மாதிரி நாம் படைகளை நகர்த்துவது சரியாக இருக்கும்”

 

தனநந்தன் கேட்டான். “அது தெரிந்து நாம் துரிதமாக அதற்கேற்றாற் போல் படைகளை நகர்த்த காலம் போதுமா?”

 

“நாம் காலத்தை வீணாக்காமலும் சுறுசுறுப்பாகவும் இயங்கினால் காலம் எதற்கும் போதுமானது தான் அரசே”

 

“அப்படியானால் அந்த இருவரையும் கண்காணிக்க வேண்டுமளவு ஒற்றர்களை அனுப்பி வையுங்கள். சாணக்கின் மகனை உயிரோடோ பிணமாகவோ கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு நான் நூறு பொற்காசுகள் தருகிறேன் என்று அறிவியுங்கள்.”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார்.  சுதானு கேட்டான். “அந்த வீரன் நம் வீரர்களிடம் மடலைப் பறி கொடுத்ததை நம் எதிரிகளிடம் போய் சொல்லி விடமாட்டானா? அப்படிச் சொன்னால் அவர்கள் உஷாராகி மறுபடி திட்டத்தை மாற்றி விட மாட்டார்களா?”

 

ராக்‌ஷசர் இந்தப் புத்திசாலித்தனமான கேள்வியை அவன் கேட்டதில் சிறிது ஆச்சரியப்பட்டார். கோபக்காரன் என்றாலும் அறிவும் இருக்கிறது. அவர் சொன்னார். “அந்த வீரன் போய் சொன்னாலும் அவர்களுக்கு மறுபடி திட்டத்தை மாற்றி மறுபடியும் எல்லோருக்கும் தெரிவிக்கப் போதுமான அளவு காலமில்லை. இப்படி ஒரு கடிதம் மற்ற மன்னர்களுக்கும் இன்னேரம் போய்ச் சேர்ந்திருக்கும். அவர்கள் மாற்றப்பட்ட காலப்படியே செயல்படுவார்கள். அதனால் கடிதம் போய்ச் சேர்ந்திருக்கக்கூடிய நபர் தான் கடிதம் கிடைக்காமல் பழைய திட்டப்படி திரையோதசியில் இயங்குவான்.  அது அவர்களுக்கு அந்தப் பகுதியில் நடக்கும் போருக்குப் பின்னடைவையும், சிக்கலையும் ஏற்படுத்தலாம்.”

 

தனநந்தன் கேட்டான். “கலிங்கத்து மன்னன் நமக்கு எதிரான நடவடிக்கைகள் எதிலாவது ஈடுபட்டிருப்பது பற்றி நம் ஒற்றர்கள் எதையும் ஏன் தெரிவிக்கவில்லை.”

 

ராக்‌ஷசர் சொன்னார். “நம் ஒற்றர்கள் வடக்கில் அதிகமாக இருக்குமளவு தெற்கில் இல்லை. அதனால் இருக்கலாம். இந்தக் கடிதத்திலும் கலிங்கத்து மன்னனுடன் மிகசமீபத்தில் தான் சுமுகமாக பேச்சு வார்த்தை முடிந்த தொனி தென்படுகிறது. அது முடிந்தவுடனேயே ஆச்சாரியர் இந்த மடலை மற்றவர்களுக்கு எழுதியிருப்பார் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் தான் கலிங்கத்து மன்னன் நமக்கு எதிராக இயங்க ஆரம்பிக்கலாம். அதற்கு பிறகு தான் ஒற்றர்கள் அறிய நேரிடும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”

 

முடிவுகளை இனி கிடைக்கும் தகவல்களை வைத்து வேகமாக எடுக்கலாம் என்ற தீர்மானத்துடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

 

அங்கிருந்து கிளம்பும் போது சுதானு பத்ரசாலிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “நாம் இன்றிரவே சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது சேனாதிபதி”

 

ராக்‌ஷசர் தனிமையில் யோசனையில் ஆழ்ந்திருந்தார். உயர்ரகக் குதிரைகள் குறைந்து போனதும், ஆயுதங்கள் குறைந்து புதிய ஆயுதங்கள் தரமாக உருவாக்கத் தேவையான கால அவகாசம் கிடைக்காததும் இப்போது அவர்கள் பக்கமிருக்கும் பலவீனம் என்பதை அவர் அறிவார். இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தச் சிறிய குறைபாடுகள் போர்களின் போக்கைத் தீர்மானிக்க முடிந்தவை. அளவில் மிகப்பெரிய படைகள் என்ற அவர்களுடைய வலிமையை தாழ்ந்த ரகக் குதிரைகளும், கச்சிதமாக அமையாத ஆயுதங்களும் நிறையவே குறைத்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அவர்கள் யாருமே பேசவில்லை....

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள். 

Monday, March 31, 2025

யோகி 96

 

டிட்டர் திவாகரன் தான் சந்திரமோகனின் ஆடிட்டர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. சேலத்தில் இருக்கும் சிறிய தொழிலதிபரான சந்திரமோகனுக்கு சென்னையில் இருக்கும் பிரபல ஆடிட்டர் திவாகரன் ஏன் ஆடிட்டராக இருக்கின்றார் என்ற கேள்விக்கு ஷ்ரவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. பதில் எதுவாக இருந்தாலும் அந்தப் பதிலில் யோகாலயம் ஏதோ வகையில் சம்பந்தப்படுகிறது என்று தான் அவனுக்குத் தோன்றியது.

 

சந்திரமோகனின் மனைவி யோகாலயத்தைப் பற்றிக் கேட்டாலும் பயப்படுகிறாள். ஆடிட்டர் திவாகரனைப் பற்றிக் கேட்டாலும் பயப்படுகிறாள். அவள் கணவன் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள பெரிய முயற்சிகள் எடுத்துக் கொள்பவள் போல் தெரியவில்லை. என்ன ஆனார் என்று தெரிந்து விட்டிருந்தால் அதற்கு முயற்சி எடுக்கும் அவசியம் இல்லை. அல்லது, என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தால் அவளுக்கும், அவள் மகளுக்கும் ஆபத்து என்ற நிலைமை வந்திருந்தாலும் அதற்கு முயற்சி எடுக்க அவள் பயந்து கொண்டிருக்கலாம். இரண்டில் எது சரி என்பது தெரியவில்லை.

 

இன்னும் நான்கு நாட்களில் அவன் யோகாலயம் சென்று துறவியாகச் சேர்ந்துவிடும் உத்தேசத்தில் இருக்கிறான். போவதற்கு முன் ஹைதராபாத் சென்று பெற்றோரைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணியிருக்கிறான். அங்கிருந்து தான் யோகாலயம் போகப் போகிறான். அதனால் இந்த முறை போலி டிக்கெட் தயாரிக்கும் வேலை இல்லை. ஹைதராபாதிலிருந்தே அவர்களை அழைத்து, துறவியாவதற்கு அங்கு வருவது பற்றித் தெரிவிக்கலாம். ஒருவேளை அவர்கள் அலைபேசி அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று யோகாலயத்தில் தொழில் நுட்பத்தின் உதவியுடன் எச்சரிக்கையுடன் பார்த்தாலும் அவன் ஹைதராபாதிலிருந்து பேசுவதை அவர்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

 

இப்போதெல்லாம் அவன் இந்த விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்துக்கு இணையாக ஸ்ரேயாவிடம் பேசுவதற்கும் எடுத்துக் கொள்கிறான். அவளுடன் பேசும் போது அவனுக்கு நேரம் போவதே தெரியவில்லை.  யோகாலயத்துக்குப் போன பின், திரும்பி வரும் வரை, அவனால் அவளுடன் பேச முடியாது என்பதால் இருவரும், முடிந்த நேரங்களில் எல்லாம், மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள்.

 

செல்வம் இது வரை வேலை பார்த்த போலீஸ் ஸ்டேஷன்களில் எல்லாம், வருபவர்களில் ஒருசில விதிவிலக்குகள் தவிர மற்றவர்கள் பயபக்தியுடன் தான் நுழைவார்கள். அவர்களிடமிருந்து மரியாதை கலந்த வணக்கம் இருக்கும். ஆனால் அவர் இப்போது இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் பயபக்தியுடன் வருபவர்கள் தான் விதிவிலக்கு. இங்கே வருபவர்கள் எல்லாம் கம்பெனி முதலாளிகள் தங்கள் கம்பெனிக்குள் நுழைவது போல் தான் நுழைகிறார்கள்.

 

புகார் கொடுக்க வருபவர்கள்நான் சொல்கிறேன், எழுதிக் கொள், உடனடியாக நான் சொன்ன விஷயத்தைக் கவனிஎன்று கட்டளையிடுகிற பாவனையில் தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் புகார் தந்த வேலை நடக்கவில்லை என்றால், அடுத்த முறை விசாரிக்க வரும் போதுஉங்களுக்கு எல்லாம் தரும் சம்பளம் தண்டம்என்று முதலாளிகளைப் போலவே அதட்டுகிறார்கள். கத்தி, அரிவாள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் அங்கு வருபவர்களிடம் சகஜமாக இருக்கும்.

 

எவனாவது ஒருவன் அப்படி நடந்து கொள்பவனாக இருந்தால், அவனுக்கு அவர் போலீஸ்காரன் என்றால் யார் என்று, வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதபடி காட்டியிருப்பார். ஆனால் வருபவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட அதே போல் என்றால்  அவர் யாரையென்று சரி செய்வது? முடிவில் அவரே தான் அனுசரித்துப் போக வேண்டியதாயிற்று. சம்பளம் தவிர கூடுதலாய் கிடைக்கும் பணமும் ஒரேயடியாக நின்று போனதல்லாமல் இப்படியும் நடப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலானது.

 

போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சகாக்களோ அவருடைய முந்தைய போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தகவல்கள் வாங்கிக் கொண்டு, தள்ளி நின்று அவரை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். என்னேரமும் அவர் ஏடாகூடமாக நடந்து கொள்ளக்கூடுமென்று அவர்கள் திகிலுடன் எதிர்பார்த்தது போலிருந்தது.

 

நேற்று இரவு அவர் வேலை முடிந்து, வசிக்கும் வாடகை வீட்டுக்குள் களைத்துப் போய் நுழைந்த போது எலுமிச்சை, கரித்துண்டு, குங்குமத் தண்ணீர், ஒரு பொம்மை ஆகியவை அவர் அறைக்குள் விழுந்து கிடந்தன. யாரோ அவற்றை ஜன்னல் வழியாக வீசியிருக்கிறார்கள். அவருக்கு ரத்தம் கொதித்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் யாரும் எதுவும் பார்க்கவில்லை என்றார்கள்.

 

பின் எதற்கடா அக்கம் பக்கத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள்?’ என்று அவர் மனதினுள் குமுறினார்.

 

இன்று போலீஸ் ஸ்டேஷன் வரும் போதே அவர் சோர்வுடன் தான் வந்தார். இதையெல்லாம் யோசித்து நேற்றிரவு தூக்கமில்லை. தபால்கள் வந்ததையும் அவர் பிரிக்க முற்படவில்லை. அப்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் அலட்சியமாய் உள்ளே நுழைவதைப் பார்த்தார். ‘அடுத்த முதலாளி வந்துட்டான்.’

 

உள்ளே நுழைந்த அந்த நபர் நேராக வந்து செல்வத்துக்கு எதிரே இருந்த நாற்காலியிலமந்தார்.

 

என் வீட்டுப் பத்திரம் டவுன் பஸ்ஸுல வர்றப்ப எப்படியோ காணாமப் போயிடுச்சு. ரிஜிஸ்டர் ஆபிசுல போய் நகல் பத்திரம் ஒன்னு வேணும்னு கேட்டால் உங்க ஸ்டேஷன்ல இருந்து நான்-ட்ரேசபல் சர்டிபிகேட் கொண்டு வரச் சொல்றா. அது எப்ப கிடைக்கும்?”

 

எப்ப புகார் தந்தீங்க?” செல்வம் வேண்டா வெறுப்பாய் கேட்டார்.

 

காணாமல் போனதே காலைல தான

 

புகாரே கொடுக்காமல் நான்-ட்ரேசபல் எப்ப கிடைக்கும்னு தெனாவட்டாய் கேட்கறானே முட்டாள். இவன் முட்டில நாலு தட்டி உள்ளே வெச்சா என்ன?’

 

கஷ்டப்பட்டு பொறுமையுடன் செல்வம் சொன்னார். “முதல்ல நீங்க புகார் எழுதிக் கொடுங்க.”

 

நாம அதிகம் படிச்சதில்லை. நீங்களே எழுதிக்கொடுத்தால் கையெழுத்து போட்டுக் குடுத்துவேன்.” என்று சொன்ன அந்த ஆளின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி எறிய செல்வத்துக்குத் தோன்றியது. ’நான் என்ன உனக்கு செக்ரட்டரியா?’ அவர் இரத்தம் கொதித்தது. வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை விழுங்கி, ஒரு கணம் கண்களை மூடிப் பின் திறந்த போது அந்த நபர் மெல்ல எழுந்தார்.

 

முட்டாள்தனமாய்ப் பேசி விட்டோம் என்று புரிந்து கொண்டான் போலிருக்கிறதுஎன்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட செல்வம் அந்த நபரின் கண்கள் விரிந்து, முகத்தில் திகில் பரவியதைக் கவனித்தார்.என்ன ஆச்சு இவனுக்கு?’

 

யார் அவுக?” என்று நாக்கு குழற அந்த நபர் கேட்டார். அந்த நபர் செல்வத்தின் பின்பக்கச் சுவரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

 

யாரைக் கேட்கிறான் இவன்?’ என்று நினைத்தபடி செல்வம் அந்த நபரின் பார்வை போன பக்கத்தைப் பார்த்தார். செல்வம் அவருடைய பின்பக்கச் சுவரைப் பார்த்தார். விளக்கு வெளிச்சத்தினால் அவருடைய நிழல் தான் சுவரில் தெரிந்தது.

 

ஆனால் அந்த நபர் மெல்ல எழுந்து பின்னால் நான்கைந்து அடிகள் வைத்தார்.  அடுத்த கணம் அந்த நபர் பீதியுடன் ஓடுவது தெரிந்தது. அதைப் பார்த்து விட்டு, ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர்கள், ஏட்டு எல்லாரும் ஓடி வந்து தள்ளி நின்றார்கள். எல்லோரும் அவரையே கூர்ந்து பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும், ஓடிப் போன நபர் எதையாவது வில்லங்கமாய் பார்க்காமல் அப்படி ஓடிப்போயிருக்க மாட்டார் என்று அவர்களுக்குத் தோன்றியது. செல்வத்தின் முகம் பேயறைந்தது போல் இருந்தது. பேய் நிஜமாகவே அவரை அறைந்து விட்டுப் போய் விட்டதோ?

 

செல்வத்தின் பொறுமை அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அவர் அறிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி, கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.   அவர்கள் அமைதியாக அங்கிருந்து போய் விட்டார்கள்.

 

இந்த ஆள் காலைல வர்றப்பவே சோர்வாய் தான் வந்தார். கவனிச்சீரா?”

 

கவனிச்சேன். முகமெல்லாம் அப்பவே ஒரு மாதிரியாய் தான் இருந்துச்சு. பழைய ஸ்டேஷன்ல சொன்னதெல்லாம் சரியாத் தான் இருக்குது ஓய். பேயோ, ஆவியோ, அது எப்ப வருது. எப்ப தாக்குதுன்னு தெரியறதில்லை. தாக்கிடுச்சுன்னா ஆளு வாயில இருந்து கெட்ட வார்த்தைகள் சரமாரியாய் வந்துடுது. பார்த்தீரல்ல

 

பயங்கரம். இந்தக் காலத்துல இப்படியும் நடக்கும்னு வேற யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன், ஓய்

 

இந்த ஸ்டேஷன்ல இதுவரைக்கும் பேய் ஒன்னு தான் குறைச்சலாய் இருந்துது. இப்ப அதுவும் வந்து சேர்ந்துடுச்சு. இனி பரிபூரணம் தான்

 

அவன் நம்மையே கவனிக்கிறான், ஓய். போய் வேலையைப் பாரும்.”


(தொடரும்)

என்.கணேசன்

 



Thursday, March 27, 2025

சாணக்கியன் 154

 

ராக்‌ஷசருக்கு எதிரிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் விரைவாகவே ஒற்றர்கள் மூலம் வந்து சேர்ந்தன.  அவருடைய ஒற்றன் தலைவன் சொன்னான். “காஷ்மீர மன்னன் தன் படைகளுடன் நம் மேற்கு எல்லையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறான் பிரபு. நம் ஒற்றர்கள் கண்ட நேரம், அவன் வந்து கொண்டிருக்கும் வேகம் இரண்டையும் கணக்கெடுத்துப் பார்த்தால் தற்போது அவன் மதுராவிலிருந்து இரண்டு யோஜனை* தூரத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் மதுரா அருகிலேயே இருப்பானா இல்லை மேலும் முன்னேறி வருவானா என்பது தெரியவில்லை. அதே போல் குலு மன்னனும், நேபாள மன்னனும், நம் வட எல்லைகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நேபாள மன்னன் தன் படைகளுடன் நிதானமாகவும் குலு மன்னன் தன் படைகளுடன் சற்று வேகமாகவும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கையில் நேபாள மன்னன் நம் வட மேற்கு எல்லைப் பகுதியில் எங்காவது நின்று விட, குலு மன்னன் மேலும் முன்னேறி வருவான் என்று தெரிகிறது.”

 

ராக்‌ஷசர் யோசனையுடன் கேட்டார். “குலு மன்னன் தற்போது எங்கிருக்கிறான்?”

 

“அவன் தன் படையுடன் சிராவஸ்திக்கு இரண்டு காத@ தூரத்தில் இருக்கிறான்...“

 

“சந்திரகுப்தனும், பர்வத ராஜனும்?”

 

“அவர்கள் வடக்கு எல்லையிலிருந்து சுமார் ஒரு யோஜனை தூரத்திலேயே நேர் பாதையில் நகர்ந்தபடி முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நம் எல்லையிலிருந்து அத்தனை தொலைவிலேயே நேர்கோட்டில் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் திடீரென்று தெற்கில் திரும்பி நம் எல்லைப் பகுதியை அவர்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது”

 

ராக்‌ஷசர் சாணக்கியரின் சூழ்ச்சித் திட்டம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார். பெரும்பாலும் முடிவில் பாடலிபுத்திரத்தின் வாயிலில் வந்து நிற்கும் வாய்ப்பு அதிகம். இந்த சந்தேகம் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்ததால் தான் சேனாதிபதியையும், இளவரசர்களையும் கூட மற்ற படைகளை வலுப்படுத்த அனுப்பாமல் அவர் தலைநகரிலேயே அவர்களை இருத்தி வைத்திருக்கிறார். தலைநகரைக் காக்க வலுவான படையும் இங்கேயே இருக்கிறது....

 

ராக்‌ஷசர் சொன்னார். “நம் ஒற்றர்கள் முழுவீச்சில் இயங்க வேண்டிய நேரமிது. எந்தத் தகவலும் உடனுக்குடன் கிடைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் சரியான முடிவுகளை எட்டி, செயல்படுத்த முடியும். அதனால் கூடுதல் ஒற்றர்களை நீங்கள் எல்லைப் பிராந்தியங்களுக்கும் அதற்கு அப்பாலும் அனுப்புவது நல்லது.”

 

ஒற்றர் தலைவன் தலையசைத்து விட்டு விடைபெற்றான்.

 

சிராவஸ்தியிலிருந்து வடக்கில் ஒரு யோஜனை தூரத்திலிருந்து ஒரு வீரன் குதிரையில் வந்து கொண்டிருப்பதை மகத ஒற்றன் ஒருவன் மரத்தின் பின்னால் மறைந்திருந்தபடி பார்த்தான். அந்த வீரன் சற்று இளைப்பாற இடம் தேடுவது போல இரு புறமும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். அவன் சற்று நெருங்கிய பின் தான் அவன் காலில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருப்பது தெரிந்தது. ஒற்றன் அந்த வீரனைக் கூர்ந்து பார்த்தான். அவன் எந்த நாட்டின் வீரன் என்பதை உடையை வைத்தோ தோற்றத்தை வைத்தோ சரியாக யூகிக்க முடியவில்லை என்றாலும் எதிரிகளின் வீரனாக இருக்கலாம் என்று ஒற்றன் சந்தேகப்பட்டான்.

 

அந்த வீரன் சிறிது தொலைவில் இருந்த மூலிகைப் பச்சிலைச் செடியருகே குதிரையை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான். ஒற்றன் மறைவில் இருந்ததால் அவனை அந்த வீரன் பார்க்க வழியில்லை. யாருமில்லை என்று நினைத்துக் கொண்டவன் போல அந்த வீரன் இறங்கி குதிரையை மூலிகைச் செடி அருகிலிருந்த மரத்துடன் கட்டி விட்டு மூலிகைப் பச்சிலைகளைப் பறிக்க ஆரம்பித்தான். பின் காலில் இருந்த காயத்திற்கு அந்த இலைகளைக் கசக்கி சாறைப் பிழிந்தான். ஸ்ஸ்ஸ்ஸ் என்றபடி அவன் பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். பின் அந்தப் பச்சிலைகளை அவன் அந்தக் காயத்தின் மீது வைத்து அந்தப் பச்சிலைகளை வைத்து ஒரு துணியை எடுத்துக் கட்டினான். மறுபடியும் சுற்றும் முற்றும் எச்சரிக்கையோடு அவன் பார்ப்பது தெரிந்தது. பின் அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்த எதையோ தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

 

ஒற்றன் கூர்ந்து கவனித்தான். அந்த வீரன் இடுப்பில் சொருகி வைத்திருந்தது ஏதோ ஒரு மடல் போலத் தோன்றியது. அந்த வீரனின் எச்சரிக்கை உணர்வைப் பார்த்தால் அது ரகசிய மடலாக இருக்கலாம் என்று ஒற்றனுக்குத் தோன்றியது. வலி சற்று குறைந்ததாலும் பிரயாணத்தின் களைப்பினாலும் அந்த வீரனின் கண்கள் தானாக மூடின. அவன் உறக்கத்தில் ஆழ்ந்தது போல் தோன்றியது.  

 

ஒற்றன் சத்தமில்லாமல் மெல்ல பின் வாங்கினான். மிக அருகில் தான் மகதப்படை வீர்ர்கள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து வந்தால் அந்த வீரனைச் சிறைப்படுத்தி அந்த ரகசிய மடலைக் கைப்பற்றலாம்.... இந்த யோசனை எழுந்தவுடன் சத்தமில்லாமல் வீரர்கள் இருக்குமிடத்திற்கு விரைந்து சென்ற ஒற்றன் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி நான்கு வீர்ர்களை அழைத்துக் கொண்டு வந்தான். சிறிது சத்தம் வந்தாலும் அந்த வீரன் எச்சரிக்கையடைந்து தப்பி விடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களும் சத்தம் செய்யாமல் தான் வந்தார்கள். ஆனால் ஒற்றன் மறைந்திருந்த மரத்தருகே வரும் போது ஒரு வீரன் சருகுகளில் கால் வைத்துவிட அந்த ஓசை கேட்டது.

 

உடனே கண்விழித்த அந்த காயமடைந்த வீரன் எழுந்து மின்னல் வேகத்தில் குதிரையைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான். அவனது இடது கை இடுப்பில் சொருகியிருந்த மடலையும், வலது கை அவன் வாளையும் இறுகப் பிடித்தன. ஆனால் அவன் அடுத்தபடியாக எதையும் யோசிப்பதற்குள் நான்கு வீரர்களும் அவன் மீது பாய்ந்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள். அவன் திமிறத் திமிற ஒரு வீரன் அவன் இடுப்பில் சொருகியிருந்த மடலை எடுத்துக் கொண்டான். இன்னொரு வீரன் அவன் வாளை எடுத்துக் கொண்டான். அவை இரண்டையும் பறிகொடுத்த அவன் முகத்தில் பதற்றமும், கவலையும் தெரிந்தன. ஆனால் எதுவும் பேசாமல் அவன் மௌனமாக இருந்தான். இரு வீரர்களும் மடலையும், வாளையும் ஒற்றனிடம் தர நகர்ந்து வர அவர்கள் பிடி தளர்ந்ததால் அந்த வீரன் அசுர பலத்துடன் திமிறி தன்னை மீதமிருந்த இரு வீரர்களின் பிடியிலிருந்து விலகிக் கொண்டு மின்னல் வேகத்துடன் குதிரை மீதேறினான். அவர்கள் கண்மூடித் திறப்பதற்குள் அங்கிருந்து குதிரையை வேகமாக முடுக்கினான். அவர்கள் சுதாரித்துக் கொண்டு அவனைப் பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர்கள் பார்வையிலிருந்து மறைந்தும் விட்டான்.   

 

அவர்கள் ஏமாற்றத்துடன் ஒற்றனைப் பார்க்க ஒற்றன் சொன்னான். “பரவாயில்லை. நமக்குத் தேவையான இந்த மடல் கிடைத்து விட்டதல்லவா? அவன் கிடைத்திருந்தால் அவனை அனுப்பியவர்கள் யார் என்பதையும், இது யாருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால் இந்த மடலை வைத்தும் அதை யூகித்துக் கொள்ள முடியும்….”

 

அவன் அந்த மடலை எடுத்துப் பார்த்தான். மடலில் முத்திரை ஏதுமில்லை. மிக ரகசியமான கடிதங்களை முத்திரை ஏதுமில்லாமல், கடிதத்தின் உள்ளேயும் பெயர்கள் எதையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் தான், சாணக்கியர் எழுதுவது வழக்கம். படிக்கிறவருக்கு மட்டுமே புரிகிறாற்போல் தான் உள்ளே வார்த்தைகளும் இருக்கும்.... ஒற்றன் திருப்தியுடன் புன்னகைத்தவனாகச் சொன்னான். “நன்றி வீரர்களே. நீங்கள் போர் முடிந்து வருகையில் தகுந்த சன்மானம் தர பிரதம அமைச்சரிடம் நான் பரிந்துரை செய்கிறேன்.”

 

உடனே அவனும் அங்கிருந்து வேகமாக ராக்‌ஷசரைக் காண பாடலிபுத்திரம் நோக்கி விரைந்தான்.

 

ராக்ஷசர் அந்த மடலைப் படித்தார்.

 

ஆசிர்வாதம். எதிரியின் தென்கிழக்கு தேச மன்னனுடனான நம் ரகசியப் பேச்சு சுமுகமாக முடிந்தது. அவன் நம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். எதிரிகள் வடக்கிலும் மேற்கிலும் தான் தாக்குதல்களுக்குத் தயாராகியிருக்கிறார்களே ஒழிய தெற்கிலிருந்து வரும் தாக்குதலுக்குத் தயாராக இல்லை என்பதால் அவன் தெற்கு எல்லைப் பகுதிகளில் செய்யும் தாக்குதல் எதிரிக்குக் கூடுதல் சிக்கல்களைத் தரும். தாங்களும், தங்கள் நண்பர்களும் நம் திட்டப்படி அவரவருக்குச் சொல்லியிருக்கும் பகுதிகளைத் தாக்குதல் செய்ய வேண்டிய நாளை வளர்பிறை திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு சில முக்கிய காரணங்களால் மாற்றியிருக்கிறோம். எதிரியின் தென்கிழக்கு தேச மன்னனும் அந்த நாளிலேயே திடீர்த் தாக்குதலை நடத்துவதாகத் தெரிவித்திருக்கிறான். குறிப்பிட்ட நாளில் தாக்குதலின் போது நாங்கள் உங்களுடன் வந்து இணைந்து கொள்கிறோம். எதிரியின் தலைநகரை நாங்கள் தாக்க வருவதாகச் செய்தி எதிரிக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். சிறுபடையை அங்கு அனுப்பவும் செய்கிறோம். அதனால் அவர்கள் தலைநகரைக் காக்க கண்டிப்பாக ஒரு பெரும்படையை அங்கேயே தக்க வைத்துக் கொள்வார்கள். நம் மூன்று திசைத் தாக்குதலை எதிர்க்க மற்ற இடங்களில் அத்தனை படை குறைவது நமக்கு அனுகூலமாக இருக்கும். அதனால் வெற்றி உறுதி. மாற்றப்பட்ட நாளை நினைவில் கொள்ளுங்கள். இந்த மடலைப் படித்த பின் எரித்து விடுதல் நலம்.”


(*யோஜனை என்பது சுமார் 64 கிமி அல்லது 40 மைல் தூரம். @காத தூரம் என்பது 16 கிமி அல்லது 10மைல்) 



(தொடரும்)

என்.கணேசன்





என்.கணேசனுடைய நூல்களை வாங்க பதிப்பாளரின் வாட்சப் எண் 94863 09351 ஐ தொடர்பு கொள்ளவும்.