என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 20, 2025

சாணக்கியன் 188

 

சுசித்தார்த்தக் மூச்சிறைக்க ஓடி வந்து சொன்னான். “இளவரசே, நேபாள, குலு, காஷ்மீர மன்னர்கள் பாடலிபுத்திரம் போகக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.”

 

மலைகேது திகைத்தான்யோசிக்க அவகாசம் கேட்டவர்கள் இப்படி திடீரென்று முடிவெடுத்துச் செல்ல என்ன காரணம் என்று அவனுக்குப் புரியவில்லை. என்ன தான் ராக்ஷசர் மீது அவனுக்குச் சந்தேகம் வந்திருந்த போதும் அவனால் இப்போதும் சாணக்கியரிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. அவர் அவனுக்கு எழுதிய கடிதம் இப்போதும் இதயத்தில் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தது. அவனுடைய தந்தையின் அதிசாமர்த்தியமும் ஆச்சாரியரிடம் பலிக்காமல் போனதை அவனால் சகிக்க முடியவில்லை.

 

அவன் வேகமாக நட்பு மன்னர்கள் தங்கியிருந்த முகாம்களை நோக்கிச் செல்ல சுசித்தார்த்தக் பின் தொடர்ந்தான்.

 

மலைகேதுவுக்கு முதலில் காணக் கிடைத்தவன் காஷ்மீர மன்னன். அவன் தன் ரதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அவனிடம் மலைகேது விஷயம் தெரியாதவன் போலவே கேட்டான். “காஷ்மீர மன்னரே, எங்கே கிளம்பிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்?”

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “பாடலிபுத்திரத்துக்கு

 

மலைகேது திகைப்பை முகத்தில் காட்ட காஷ்மீர மன்னன் அமைதியாக சாணக்கியரின் கடிதத்தை அவனிடம் நீட்டினான். அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்த மலைகேதுவின் திகைப்பு இருமடங்காகியது.

 

காஷ்மீர மன்னன் அவனிடம் இரக்கத்துடன் சொன்னான். “மலைகேது தவறு உன் தந்தை மீது இருப்பதாகத் தான் நாங்கள் நினைக்கிறோம். ராக்ஷசருடன் சேர்ந்து கொண்டு உன் தந்தை திட்டமிட்டதை ராக்ஷசரின் கடிதமும் உறுதிப்படுத்துகிறது. எதிரியோடு சேர்ந்து கொண்டு நண்பர்களுக்குத் துரோகம் செய்வதை எங்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”

 

மலைகேது மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னான். “காஷ்மீர மன்னரே. என் தந்தை அப்படியொரு முடிவை எடுக்கக் காரணமே சாணக்கியர் வெற்றியில் நமக்குப் பங்கெதுவும் தர மறுத்தது தான். புத்தி சுவாதீனமுள்ள யாரும் காரணமில்லாமல் எதிரியோடு சேர்ந்து நண்பர்களை எதிர்க்க மாட்டார்கள். அதை மறந்து விடாதீர்கள்.”

 

அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த நேபாள மன்னன் சொன்னான். “மலைகேது, சாணக்கியர் உன் தந்தையிடம் பங்கு எதுவும் தர மறுத்திருந்தால் எங்களுக்கும் அதை மறுத்திருப்பார்.”

 

அதற்குள் அங்கே வந்து சேர்ந்த குலு மன்னன் சொன்னான். “பங்கு தருவது பற்றி நாங்கள் சாணக்கியருடன் எதுவும் பேசியதில்லை, நாங்கள் பேசியதெல்லாம் உன் தந்தையுடன் தான் என்ற போதிலும் சாணக்கியர் அதை எங்களுக்குத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். நேரடியாகப் பேசாத எங்களிடமே அவர் அதை மறுக்காத போது, நேரடியாகப் பேசியிருக்கும் உன் தந்தையிடம் அவர் மறுத்திருப்பார் என்று எங்களுக்கு நம்ப முடியவில்லை

 

நேபாள மன்னன் சொன்னான். “மலைகேது, உன் தந்தையைக் கொன்றதும் ராக்ஷசரின் சதியாகவே இருக்கும் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். ராக்ஷசர் அவரைக் கொன்றதோடு திருப்தியடையாமல் உன்னையும், எங்களையும் சேர்ந்து பழிவாங்கவே உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது.”

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் என்பதால் உனக்கு அறிவுரை கூறுகிறோம். நீ சாணக்கியரையும், சந்திரகுப்தனையும் எதிர்ப்பது முட்டாள்தனம். நீயும் எங்களோடு அங்கு வா. சந்திரகுப்தனின் திருமணமும், பட்டாபிஷேகமும் முடிந்து நாம் நம்முடைய தேசங்களுக்குத் திரும்புவோம்.”

 

மலைகேது அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவனுக்கு அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அழைப்பு கூட இல்லை என்பதை அவர்களிடம் அவன் எப்படிச் சொல்வான்? அவன் தன் சேனையுடன் நாடு திரும்ப மட்டுமே அவர் அனுமதி தந்திருக்கிறார் என்பதையும் அவன் எப்படிச் சொல்வான்?

 

அவர்கள் அவன் பேச்சிழந்து நிற்பதை இரக்கத்துடன் பார்த்து விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள்.  அவன் தந்தையின் அதிபுத்திசாலித்தனமான திட்டங்கள் அனைத்தும் இப்படி பிசுபிசுத்துப் போய் அவர் மரணத்தில் முடிந்து போகும் என்றோ, அவரைத் தவிர அவர் நண்பர்கள் சாணக்கியரின் நண்பர்களாக மாறி விடுவார்கள் என்றோ அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஒரு விதத்தில் வாழ்க்கை எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பாகவே இருந்து விடுகிறது என்று எண்ணியவனாய் விரக்தியுடன் தன் முகாம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். சுசித்தார்த்தக் மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தான்.

 

சிறிது நேரத்தில் ஹிமவாதகூட வீரன் ஒருவன் வந்து சொன்னான். “இளவரசே பாடலிபுத்திரத்திலிருந்து நம் படை வந்து கொண்டிருக்கிறது.”

 

சாணக்கியர் அவன் படையைத் திருப்பி அனுப்பி விட்டார். யோசிக்கையில் சாணக்கியர் ஆரம்பத்திலிருந்தே அவன் தந்தையின் எதிர்பார்ப்பின் படியெல்லாம் நடந்து கொள்ளவில்லையே ஒழிய அநியாயம் என்று குற்றம் சாட்டுகிறபடி எப்போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் மறைத்தும் பேசவில்லை. தனநந்தனிடம் பேசியதைக் கூட அவர் மறைக்கவில்லை. அவன் கொண்டு செல்ல அனுமதித்த செல்வத்தைக் கணக்கெடுத்துக் கொள்ளக்கூட அவர் பர்வதராஜனை அழைத்திருந்தார். அதை அவர் பங்கிலிருந்து குறைத்துக் கொள்ளவும் சம்மதித்திருந்தார். சரியாகப் பங்கு தரும் உத்தேசமில்லாதவர் அப்படியெல்லாம் செய்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை

 

எல்லாவற்றையும் முழுமையாக அடைய ஆசைப்பட்டு அவன் தந்தை முடிவில் உயிர் உட்பட அனைத்தையும் இழந்து விட்டதை வேதனையுடன் எண்ணியபடி மலைகேது பெருமூச்சு விட்டான். அவன் தந்தை இந்த மூன்று மன்னர்களுக்குக் கூட சாமர்த்தியமாக மிகக்குறைவாகவே வாக்களித்திருந்தது  இப்போது சாணக்கியருக்கு மிக வசதியாகப் போயிருக்கும். இவர்களுக்குக் குறைவாகத் தந்தது போக மீதமுள்ள அனைத்தும் இனி சந்திரகுப்தனுக்கே என்று நினைக்கையில் அவன் மிக மனவேதனையை உணர்ந்தான்.

 

கனத்த மௌனத்துடன் நடந்த அவன் முன் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக நின்றது. இனி என்ன செய்வதென்று அவனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. சமீபத்திய எல்லா கஷ்ட காலங்களிலும் தன்னுடன் இருந்த சுசித்தார்த்தக்கிடம் மலைகேது மெல்ல கேட்டான். “இனி நான் என்ன செய்வது நல்லது என்று நினைக்கிறாய் சுசித்தார்த்தக்?”

 

சுசித்தார்த்தக் இரக்கத்துடன் சொன்னான். “இனி யாரை நம்பியும் பலனில்லை என்றான பின் நீங்கள் ஹிமவாதகூடத்திற்குத் திரும்பிச் செல்வதே நல்லது என்று இந்த அடியவனுக்குத் தோன்றுகிறது இளவரசே. நீங்கள் அங்கு முடிசூடிக் கொண்டு ஆட்சி புரியுங்கள்.”

 

மலைகேது ஆற்றாமையுடன் கேட்டான். “வெறுங்கையுடன் திரும்பிப் போவதற்கா இத்தனை தூரம் இத்தனை படையுடன் வந்தோம் சுசித்தார்த்தக்?”

 

வெறுங்கையுடனாவது திரும்பிப் போக முடிவதே இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவருக்குப் பாக்கியமாகி விடுகிறது இளவரசே. தங்கள் தந்தையால் அதுவும் முடியவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.”

 

அதுவும் உண்மை தான் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டபடி மலைகேது கேட்டான். “நீயும் எங்களுடன் வருகிறாயா சுசித்தார்த்தக்?”

 

இல்லை இளவரசே

 

நீ எங்கே செல்லப் போகிறாய்?”

 

மகதம் என் தாய் மண் இளவரசே. அங்கேயே நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்.”

 

மலைகேது அவனை வற்புறுத்தி அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஒருவிதத்தில் சுசித்தார்த்தக் அவனுடன் வராமல் இருப்பது நல்லது தான் என்று தோன்றியது. அவன் உடனிருந்தால் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும்....

 

ந்திரகுப்தனும், சாணக்கியரும் பேசிக் கொண்டிருக்கையில் சாரங்கராவ் வந்து சொன்னான். “நேபாள, காஷ்மீர மன்னர்கள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ஆச்சாரியரே. மலைகேது ஹிமவாதகூடம் சென்று கொண்டிருக்கிறான்.”

 

சந்திரகுப்தன் புன்னகைத்தபடி சாணக்கியரிடம் சொன்னான். “நீங்கள் நினைத்தபடியே எல்லாம் நடந்திருக்கிறது ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் திருப்தியுடன் புன்னகைத்தார். சந்திரகுப்தன் சொன்னான். “பர்வதராஜனிடமிருந்து இவ்வளவு எளிதாக விடுபட முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஆச்சாரியரே. ஒருவேளை அவன் நமக்கு எதிராகச் சதியில் ஈடுபடாமல் இருந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?”

 

சாணக்கியர் சொன்னார். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியிருந்திருக்கும். ஆனால் என் பாரதத்தைப் பிரிக்க அனுமதித்திருக்க மாட்டேன்.  ’நிதியை நீ வேண்டுமளவு எடுத்துக் கொள். பூமியை எங்களுக்குக் கொடுத்து விடுஎன்று அவன் காலில் விழுந்து கெஞ்சியிருப்பேன். பிரிவினையால் இழந்த பெருமையை எல்லாம் நம் பாரதம் ஒற்றுமையால் தான் மீட்க வேண்டும் என்று புரிய வைக்க முயற்சி செய்திருப்பேன்.”

 

சாரங்கராவ் சிரித்தபடி சொன்னான். “ஆனால் அதற்கெல்லாம் பர்வதராஜன் சம்மதித்திருக்க மாட்டான். ”பிரிக்க வேண்டாம் என்றால் முழுவதுமாக எனக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள்என்று சொல்லக் கூடியவன் அவன் ஆச்சாரியரே

 

சாணக்கியர் புன்னகைத்தார். “உண்மை சாரங்கராவ். உயர்ந்த உணர்வுகள் இருப்பது போல் எத்தனை தான் அவன் நடித்தாலும் அவை எதுவும் அவனிடம் எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் பேராசையும், நயவஞ்சகமும் நிறைந்திருந்த அவன் சதித்திட்டங்கள் வெற்றி பெறும் சூழல் இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளச் சிறிதும் தயங்க மாட்டான் என்று அறிந்த நான் அவனுக்கு அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தேன்.   ஆர்வமாக அவன் பங்கெடுத்துக் கொண்டான்....” 

(தொடரும்)

என்.கணேசன்





 

Monday, November 17, 2025

யோகி 130

 

பாண்டியன் அன்றிரவு பிரம்மானந்தாவைச் சந்திக்கச் சென்ற போது ஒரு வெளிநாட்டுப் பத்திரிக்கையில் அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றை அவர் பெருமையுடன் படித்துக் கொண்டிருந்தார். 

 

வா பாண்டியன். உட்கார்என்று மகிழ்ச்சியுடன் அவரை உட்காரச் சொன்னார். அந்தப் பத்திரிக்கையை பாண்டியனிடம் காட்டி அது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை என்றும், அதில் அவரைப் பற்றியும், யோகாலயம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

 

பாண்டியனைப் பற்றியே பெருமையாக அந்தப் பத்திரிக்கை எழுதியிருந்தாலும் அதில் பாண்டியன் புளங்காகிதம் அடைந்து விடப் போவதில்லை. அதனால் என்ன லாபம் என்று மட்டுமே யோசிக்கக்கூடியவர் அவர். நிச்சயமாக அந்தக் கட்டுரையைப் படித்து பல அமெரிக்கர்கள் பிரம்மானந்தரைப் பெருமையாக நினைக்கலாம், சிலர் அவரைப் பார்க்கவென்றே இந்தியாவுக்கும் வரலாம் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், இப்போது பிரம்மானந்தா இருக்கிற உச்ச நிலைக்கு அது சில்லறை இலாபம் தான் என்று பாண்டியன் நினைத்தார்.

 

அதனால் சம்பிரதாயத்துக்காக அந்தக் கட்டுரையைப் புரட்டிப் பார்த்துஅருமைஎன்று சொல்லி அந்தப் பத்திரிக்கையை பாண்டியன் மூடி வைத்தார்.  பிரம்மானந்தாவுக்கு சப்பென்று ஆகி விட்டது. இது போன்ற விஷயங்களில் பாண்டியனுக்கு நடிக்கவும் வருவதில்லை என்பது அவருடைய கசப்பான அனுபவம்.

 

பாண்டியன் ஷ்ரவன் புதிதாய் கண்டுபிடித்துச் சொன்னதையும், அதைத் தெரிவித்த பின் தேவானந்தகிரி சொன்னதையும் விரிவாகச் சொன்னார். தேவானந்தகிரி சொன்னதைக் கேட்ட போது பிரம்மானந்தாவின் முகம் கருத்தது. அதைப் பார்த்த போது பாண்டியனின் சந்தேகம் ஊர்ஜிதமாகியது.

 

பாண்டியன் நேரடியாகவே கேட்டார். “உங்களுக்கு அப்படிப்பட்ட யோகி யாராவது தெரியுமா யோகிஜி?”

 

பிரம்மானந்தா அரை நிமிடம் மௌனமாகவே இருந்தார். அவர் இதுவரையில் பாண்டியன் கேட்கும் கேள்வி எதற்கும் பொய் சொன்னதில்லை. பாண்டியனும் அவரிடம் அப்படியே தான் இருந்தார். சிறு மனப்போராட்டத்திற்குப் பின் பிரம்மானந்தா சொன்னார்.  யார் யோகிங்கறது பதில் சொல்லக் கஷ்டமான கேள்வி பாண்டியன். ஒரு காலத்துல நானும் உண்மையான யோகியைத் தேடி இருக்கேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொருத்தரை யோகின்னு அடையாளம் காட்டியிருக்காங்க. பல பேரை அப்படிப் போய் பார்த்து நான் ஏமாந்து போயிருக்கேன். கடைசில நானே யோகியாயிட்ட பிறகு தேடறதை நிறுத்திட்டேன்.” சொல்லி விட்டு பிரம்மானந்தா வாய்விட்டுச் சிரித்தார்.

 

பாண்டியன் கேட்டார். “தேவானந்தகிரி பரிசுத்தமான யோகின்னு சொன்னாரே, அப்படி யாரையாவது பார்த்திருக்கீங்களா யோகிஜி?”

 

எத்தனையோ விஷயங்களுக்கு நடுவே, குறைவான நேரத்தில் முக்கியமானதைத் தேர்ந்தெடுப்பதில் பாண்டியனுக்கு இணையாக ஒருவரை இதுவரை பிரம்மானந்தா பார்த்ததில்லை. இந்தக் கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் சொல்ல முடியாது. பிரம்மானந்தா பெருமூச்சு விட்டபடி வேண்டா வெறுப்பாகச் சொன்னார். “சிவசங்கரன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். எல்லா தத்துவங்களையும் கரைச்சு குடிச்சவர் அவர். அவர் பரிசுத்தமான ஒரு ஆளை நிஜமான யோகின்னு ரொம்ப காலத்துக்கு முன்னால், எனக்கு அடையாளம் காட்டினார். அந்த ஆள் வெறும் தோட்டக்காரன் தான். செருப்பு கூட போட மாட்டார். எந்தத் தத்துவமும் பேச மாட்டார். எந்த அற்புதத்தையும் செஞ்சு காட்டியதில்லை. ஷ்ரவன் அளவுக்குக் கூட நாம பிரமிக்கற மாதிரி அந்த ஆள் எதுவும் செஞ்சதில்லை. அமைதியான ஆள். பரிசுத்தமான ஆள்ங்கறதுலயும் சந்தேகம் இல்லை. ஆனா யோகின்னு என்னால அவரை ஏத்துக்க முடியலை...”

 

அப்புறம் ஏன் அந்தப் பேராசிரியர் அந்த ஆளை யோகின்னு சொன்னார். அதற்கு அவர் ஏதாவது காரணம் வெச்சிருப்பாரில்லையா?”

 

இந்தக் கசப்பான விஷயத்தைப் பேச வேண்டியிருப்பதை பிரம்மானந்தா சங்கடமாக உணர்ந்தார். ”அந்த ஆள் கிட்ட மாறாத அமைதி இருந்துச்சு. செய்யறது தோட்ட வேலைன்னாலும் அவர் அதையும் ரொம்ப அனுபவிச்சு, சலிப்பு இல்லாமல் செய்வார். அது அந்தப் பேராசிரியரை ரொம்பவே கவர்ந்துடுச்சுன்னு நினைக்கறேன்.”

 

நீங்க அவர் கிட்ட பேசியிருக்கீங்களா யோகிஜி?”

 

ம். ஒரு தடவை போய்ப் பேசியிருக்கேன். அந்த ஆள் அதிகம் பேசற ரகம் இல்லை. கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றவராய் இருந்தார். சொல்ற அளவுக்கு பெருசா ஒன்னுமிருக்கலை. எனக்கு ஏன் போனோம்னு ஆயிடுச்சு. பத்து நிமிஷத்துல குட் பை சொல்லிட்டேன்.”

 

சமீபத்துல அந்த ஆளை எப்பவாவது பார்த்தீங்களா?”

 

உம். கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு நாள் பார்த்தேன். கொதிக்கிற வெயில்ல செருப்பில்லாமல் நடந்து போய்கிட்டிருந்தார். அப்பவும் அமைதியாய், எந்த சங்கடமுமில்லாமல் சந்தோஷமாய் மனுஷன் போய்கிட்டு இருந்தார். புத்தி சுவாதீனம் இருக்கற எவனாலயும் அப்படி போக முடியுமா பாண்டியன்? நம்மளால அப்படி போக முடியாது தான். ஆனா அப்படி நம்மால முடியாததைச் செய்யறவனை எல்லாம் நாம யோகியாய் எடுத்துக்க முடியுமா?”

 

பாண்டியனுக்கு உடனடியாக நினைவு வந்தது. பிரம்மானந்தா முதல்வரைச் சந்தித்து வந்த அன்று தான் அந்த ஆளையும் பார்த்திருக்க வேண்டும். பிரம்மானந்தாவின் டிரைவர் வர்ணித்த ஆள் அவர் தான்.

 

பாண்டியன் எதுவும் சொல்லாமல் யோசிப்பது பிரம்மானந்தாவுக்கு என்னவோ போல் இருந்தது. அவர் சொன்னார். “அமைதியாய் இருக்கிறதும், எதனாலேயும் பாதிக்கப்படாமல் இருக்கிறதும் மட்டும் தான் ஒரு யோகியோட லட்சணம்கிற மாதிரி சிவசங்கரன் சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்லை. பிணம் கூட அமைதியாய், எதிலும் பாதிக்கப்படாமல் தான் இருக்கு. அதுக்குன்னு நாம பிணமாயிட முடியுமா என்ன?”

 

பிரம்மானந்தா தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு, தானே வாய் விட்டுச் சிரித்தார். பாண்டியனும் புன்னகை செய்ய, பிரம்மானந்தா திருப்தியுடன் தொடர்ந்தார். “ஒரு காலத்துல யோகிகளை அப்படி இப்படின்னு வர்ணிச்சுட்டு இருந்தவர் சிவசங்கரன். சாதாரணமாய் பார்க்கக்கூட கிடைக்க மாட்டாங்க, அப்படி இப்படின்னு பெருசா பேசிகிட்டிருந்த அவர் கடைசில இவர் தான் அந்த மாதிரி யோகின்னு, அந்த தோட்டக்காரனை அடையாளம் காட்டின பிறகு எனக்கு சீய்னு ஆயிடுச்சு. நான் அதற்கப்பறம் சிவசங்கரனைப் பார்க்கவே போகலை.....”

 

பாண்டியன் சொன்னார். “ஷ்ரவனும் அந்த நிஜ யோகி ஏதோ தோட்டத்தில் இருக்கிற மாதிரி தான் தெரியிதுன்னு சொன்னானே யோகிஜி.”

 

ஆனாலும் அது இந்த ஆளாய் இருக்காது. சௌகரியமாய் வாழக்கூட முடியாத ஆளை சர்வசக்தி படைச்ச யோகின்னு எப்படி நம்பறது?... நான் நேற்று பேசின ஆன்மீகக் கூட்டத்தில்இந்தியா பூரா கோசாலைகள் ஆரம்பிக்கப் போகிறோம்னு சொல்லியிருக்கேன். அதற்கு ஏற்பாடுகள் செய்யணும். இல்லாட்டி சில அதிகப்பிரசங்கிகள், ‘சொன்னது என்னாச்சுன்னு கிண்டல் பண்ணுவாங்க.  அவசரமில்லை. மெள்ளமா ஆரம்பிச்சாலும் போதும். ஒன்னுமே செய்யலைன்னு புகார் வராம இருந்தா சரி

 

யோகியிலிருந்து கோசாலைகளுக்குப் பேச்சை மாற்றியதன் மூலம், யோகி பற்றிய பேச்சு முடிந்தது என்று பிரம்மானந்தா சொல்லாமல் சொன்னது பாண்டியனுக்குப் புரிந்தது. அவருக்கும் அதற்கு மேல் யோகி பற்றிக் கேட்க ஒன்றுமிருக்கவில்லை. அவர் தலையசைத்து விட்டுக் கிளம்பினார்.

 

பாண்டியன்  சென்ற பின்பும் அந்த யோகியின் நினைவு பிரம்மானந்தாவின் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. அது என்னவென்பதை அவரால்  தெளிவாய் வார்த்தைப்படுத்த முடியவில்லை. பாண்டியனிடம் ஜாடையாய் சொல்லி பேச்சை முடித்துக் கொண்டதைப் போல், மனதில் அந்த யோகியின் நினைவுகளை முடித்துக் கொள்ள முடியவில்லை. தகிக்கும் உச்சி வெயிலில் செருப்பில்லாமல் அவர் வசந்த காலத்தில் பூப்படுக்கையின் மீது நடப்பது போல் அமைதியாகவும், ஆனந்தமாகவும் நடந்து போய்க் கொண்டிருந்த காட்சி மனதில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகியது. பிரம்மானந்தாவுக்குத் தன் மீதே கோபம் வந்தது. ‘அந்தப் பைத்தியத்தை நினைத்துப் பார்க்க என்ன இருக்கிறது?’

 

பாண்டியன் பிரம்மானந்தாவின் டிரைவரை அழைத்து, பிரம்மானந்தா முதல்வரைச் சந்திக்க சென்ற நாளில் பார்த்த முதியவரை நன்றாக நினைவுபடுத்திக் கொண்டு விவரிக்கச் சொன்னார்.  செருப்பு கூட இல்லாமல் உச்சி வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவரை முடிந்த வரை நினைவுபடுத்திக் கொண்டு டிரைவரும் விவரித்தான். டிரைவர் விவரிக்கையில் கண்ணனும் பாண்டியனுடன் இருந்தார்.

 

டிரைவர் சென்ற பிறகு பாண்டியன் கண்ணனிடம் சொன்னார். “அந்தக் கிழவர் சுமார் முப்பது நாற்பது மைல் சுற்றுவட்டாரத்தில் தான் எங்கேயோ இருக்கார் போலத் தெரியுது. இப்போதும் அவரோட தொழில் தோட்ட வேலையாய் தான் இருக்கணும்.  எங்கே தங்கி இருக்கார், எங்கே வேலை செய்யறார்ங்கற விவரங்களை உடனடியாய் கண்டுபிடிக்கணும்.”


(தொடரும்)

என்.கணேசன்


இன்று மாலை வெளியீடு!



Thursday, November 13, 2025

சாணக்கியன் 187

 

லைகேது சாணக்கியரின் பதில் மடலைப் படித்து மனம் கொதித்தான். அவருக்கு என்ன ஒரு ஆணவம் என்று எண்ணிக் கொண்டான். ஒழுங்காக ஆரம்பத்திலேயே சரிபாதியைக் கொடுத்திருந்தால் எதிரியுடன் இணையும் அவசியம் அவன் தந்தைக்கு இருந்திருக்கவேயில்லை என்பதை ஆச்சாரியர் எவ்வளவு வசதியாக மறந்து விட்டார்.

 

அவர் கடிதத்தில்எப்போது எங்களுடன் இருந்து கொண்டே எதிரியுடன் கைகோத்து எங்களை அழிக்க முற்பட்டீர்களோ அப்போதே எங்கள் நட்பையும், வெற்றியில் பங்கு கேட்கும் தார்மீக உரிமையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். நியாயமாகப் பார்த்தால் எங்களிடமிருந்து நீ எதிர்பார்க்க வேண்டியது தண்டனையைத் தான்என்றதும்நீயும் உன் படைகளும் ஹிமவாத கூடத்திற்குத் திரும்பிப் போக அனுமதியளிக்கிறேன்என்றதும் அவனுக்கு ஆத்திரமூட்டின. வெறும் கையோடு திரும்பிப் போக அவன் படுமுட்டாளா?

 

சாணக்கியரின் கடிதத்தில் அவனைக் குழப்பிய வாசகம்எங்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களைத் தோற்கடித்ததற்குப் பழி வாங்கும் விதமாக சந்திரகுப்தனோடு சேர்த்து உன் தந்தையையும் கொன்று விட எதிரி தீர்மானித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லை.’ இதென்ன புதுக்கதை என்று அவன் ஆரம்பத்தில் நினைத்தாலும் அவன் மனதில் விழுந்த சந்தேக விதை பல தகவல்களை அசை போட்டது.

 

கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொன்னது சாணக்கியர் அல்ல, ராக்ஷசர். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததும் சாணக்கியர் அல்ல. பர்வதராஜனிடமே அவர் அந்த வேலையை ஒப்படைத்திருந்தார்பர்வதராஜன் பெயரில் எல்லா ஏற்பாடுகளையும் ராக்ஷசரும், அவர் ஆட்களும் தான் ரகசியமாகச் செய்திருக்க வேண்டும். சாணக்கியர் அந்த நிகழ்ச்சிக்கே வரவில்லை. சந்திரகுப்தனும் நிகழ்ச்சி முடிந்து போய் விட்டான். மதுவில் விஷம் கலந்திருந்தால் குடிக்க ஆரம்பித்தவுடனேயே ஏதாவது விளைவுகள் வெளிப்பட்டிருக்கும். நிகழ்ச்சி முடியும் வரை அப்படியெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. பர்வதராஜன் அப்படி ஏதாவது சின்ன விளைவுகளை உணர்ந்திருந்தாலும் கூட அலட்சியப்படுத்தியிருக்க மாட்டார். காவலர்களையும் சுசித்தார்த்தக்கையும் அனுப்பி வைத்திருக்க மாட்டார். அப்படி அவர் செய்திருக்கிறார் என்றால் அவர் அது வரை நன்றாக இருந்திருக்க வேண்டும். அவர் யாரையோ இரகசியமாகச் சந்தித்துப் பேசக் காத்திருக்கத் தான் காவலர்களையும் சுசித்தார்த்தக்கையும் அனுப்பியிருக்க வேண்டும். அந்த யாரோ கூட சாணக்கியராகவும், சந்திரகுப்தனாகவும் இருக்க வாய்ப்பில்லை. அது ராக்ஷசராகவோ அவர் அனுப்பிய ஆளாகவோ இருந்திருக்கலாம். சந்தேக விதை வேகமாகக் கிளைகள் விட ஆரம்பித்தன….

 

கடைசியாக பர்வதராஜனின் மரணத்தைப் பற்றித் தெரிவித்து ஆபத்து மலைகேதுவுக்கும் இருப்பதாகத் தெரிவித்த சுசித்தார்த்தக் கூட இனி என்ன செய்வதென்று ராக்ஷசரிடம் ஆலோசனை கேட்டு வருவதாகக் கிளம்பியவன் அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பி வந்தது நினைவுக்கு வந்தது. ”அவரும் சற்று முன் தான் அவர் ஒளிந்திருந்த மறைவிடத்திலிருந்து தப்பித்துச் சென்றாராம்என்று அப்போது சொன்னான். ”அவர் இருக்குமிடம் பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார் என்று தெரிகிறது. அதனால் அவரும் ஆபத்தை உணர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்திருக்கலாம் என்றே தோன்றுகிறதுஎன்று தன் அபிப்பிராயத்தைச் சொன்னான். காரணம் அதுவாக இல்லாமல் குற்றம் செய்த குற்றவாளி தப்பிச் சென்றதாகக்கூட இருக்கலாம். சுசித்தார்த்தக் தன் எஜமான விசுவாசம் காரணமாக அதை உணராமல் இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்காதது போல ராக்ஷசர் அவனுக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். இதை எல்லாம் யோசிக்க யோசிக்க  மலைகேதுவுக்குப் பகீரென்றது.

 

சாணக்கியரே சொன்னது போல் பரம எதிரியான தனநந்தனின் மகளை சந்திரகுப்தன் மணக்கச் சம்மதித்ததும், வனப்பிரஸ்தம் போக அனுமதி தந்ததும், செல்கையில் செல்வத்தைக் கொண்டு செல்ல அனுமதி தந்ததும் கூட நினைவுக்கு வந்தன. ஒருவேளை தந்தை தான் தப்புக் கணக்குப் போட்டு ராக்ஷசரிடம் ஏமாந்து விட்டாரோ? சாணக்கியர் சொன்னது போல ராக்ஷசர் தங்கள் எதிரிகள் சந்திரகுப்தன், பர்வதராஜன் இருவரையும் கொல்லத் திட்டமிட்டு இருந்தாரோ? சந்திரகுப்தனை சாணக்கியர் காப்பாற்றி பர்வதராஜன் காப்பாற்றப்படவில்லையோ?

 

இப்படி நினைக்கையில் ராக்ஷசர் சதியும் எல்லா விதத்திலும் கோர்வையாக வந்ததால் மலைகேது குழம்பினான். முடிவில் சுசித்தார்த்தக்கை அழைத்தான்.

 

சுசித்தார்த்தக், சாணக்கியர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் அவர்களுக்கு எதிராக என் தந்தை செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ராக்ஷசர் தான் என் தந்தையைக் கொல்ல சதி செய்திருக்கிறார் என்று சொல்கிறார்.” என்று சொல்லி விட்டு மலைகேது அவனைக் கூர்மையாகப் பார்த்தான்.

 

சுசித்தார்த்தக் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. “அவர் சொல்வதை நம்பாதீர்கள் இளவரசேஎன்று சொன்னாலும் அதை அவனால் உறுதியான தொனியில் சொல்ல முடியவில்லை என்பதை மலைகேது கவனித்தான்.

 

மலைகேது அவன் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் சொன்னான். “கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொன்னது ராக்ஷசர். ஏற்பாடு செய்ததும் ராக்ஷசர். அந்த நிகழ்ச்சி முடிந்து அந்த இடத்தில் என் தந்தை கொல்லப்பட்டு இருக்கிறார். நீ ராக்ஷசரைக் காணச் சென்ற போது அவர் தப்பித்தும் சென்றிருக்கிறார். நடனநிகழ்ச்சிக்கு சாணக்கியர் வரக்கூட இல்லை. அப்படி இருக்கையில் நான் என்ன நினைப்பது என்று எனக்குப் புரியவில்லை சுசித்தார்த்தக்.”

 

சுசித்தார்த்தக் அந்தத் தகவல்களை மனதில் அசைபோடுவது மலைகேதுவுக்குத் தெரிந்தது. முடிவில் சுசித்தார்த்தக் பலவீனமாகச் சொன்னான். “எனக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை இளவரசே

 

சாணக்கியரின் கடிதத்தைப் படித்த நேபாள காஷ்மீர குலு மன்னர்கள் மறுபடியும் குழம்பினார்கள். நேபாள மன்னன் புலம்பினான். “இவர் ராக்ஷசரையும், பர்வதராஜனையும் குற்றம் சாட்டுகிறார். மலைகேதுவும் ராக்ஷசரும் இவரைக் குற்றம் சாட்டுகிறார்கள். யார் உண்மை பேசுகிறார்கள் என்றே புரியவில்லையே

 

காஷ்மீர மன்னன் சற்று யோசித்து விட்டுச் சொன்னான். “சாணக்கியர் சொல்வது தான் உண்மை போல் தெரிகிறது”.

 

குலு மன்னன் கேட்டான். “எதை வைத்துச் சொல்கிறீர்கள்?”

 

காஷ்மீர மன்னன் விளக்கினான். “வெற்றிக்கான பங்கீட்டை பர்வதராஜன் சாணக்கியரிடம் நமக்காகக் கேட்ட போது அவர் மறுத்து விட்டதாக மலைகேது சொன்னான். பர்வதராஜன் மறுத்த பிறகுமுதலில் வெற்றியைக் கொண்டாடுவோம், பின் பேசுவோம்என்ற வகையில் பேசி கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சியின் போது கொன்று விட்டதாய்ச் சொன்னான். ஆனால் பர்வதராஜன் ராக்ஷசருடன் பேசி சந்திரகுப்தனுக்கு எதிராகத் திட்டமிட்டதை அவன் சொல்லவேயில்லைஆனால் ராக்ஷசரின் கடிதத்தில்  அவரும் பர்வதராஜனும் சேர்ந்து திட்டமிட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதை வைத்துப் பார்க்கும் போது சாணக்கியர் சொன்னது தான் சரியாக இருக்கும் என்று தெரிகிறது. எதிரணியில் உள்ள ராக்ஷசருடன் சேர்ந்து திட்டமிட பர்வதராஜனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?”

 

குலு மன்னன் சந்தேகத்தோடு கேட்டான். “சாணக்கியர் நமக்குப் பங்கு தர மறுத்ததால் கடைசியில் பர்வதராஜன் கோபத்தில் எதிரி ராக்ஷசருடன் சேர்ந்து விட்டிருக்கலாமோ?” 

 

நேபாள மன்னன் சொன்னான். ”உண்மையில் அப்போது சாணக்கியர் நமக்கு எதையும் தர மறுத்திருந்தால் இப்போது நமக்கு எழுதிய கடிதத்தில்பர்வதராஜன் உங்களுக்குத் தந்த வாக்கை நான் நிறைவேற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்என்று ஏன் அவராகவே எழுத வேண்டும். பர்வதராஜன் இறந்த பின்னும் கூட தானாகவே முன் வந்து இதைச் சொல்பவர், பர்வதராஜனிடம் பங்கு தர முன்பு மறுத்தார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லையே” 

 

காஷ்மீர மன்னன் தலையசைத்தபடி சொன்னான். “சரியாகச் சொன்னீர்கள். நமக்கு வாக்களித்த பர்வதராஜனே இறந்த பின், அதை நிறைவேற்றும் பொறுப்பை சாணக்கியர் ஏற்றுக் கொண்டது பெரிய விஷயம் தான்.”

 

இத்தனைக்கும் பர்வதராஜன் சதி செய்து எதிரியாக மாறி இறந்திருக்கிறார்...” என்று குலு மன்னன் யோசனையுடன் சுட்டிக் காட்டினான்

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. எல்லாம் இழந்து மறைந்து வாழும் ராக்ஷசர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இலாபமும் இல்லாமல் நமக்கு உதவ முன் வருவது நம்பும்படியாக இல்லை.”

 

நேபாள மன்னன் மெல்லச் சொன்னான். “சாணக்கியருடன் சேர்ந்து அவர்களை வென்ற காரணத்திற்காக பர்வதராஜனை வஞ்சம் தீர்த்தது போல் நம்மையும் வஞ்சகமாகக் கொல்லும் உத்தேசம் ராக்ஷசருக்கு இருக்குமோ?”

 

மூவரும் ஒருவரை ஒருவர் சற்று திகிலோடு பார்த்துக் கொண்டார்கள்அப்படி இருக்காது என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்

அடுத்த வாரம் வெளியாகிறது புதிய நாவல்!