என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, January 26, 2026

யோகி 140

 

கால ஓட்டத்தில் பின்பு நடந்தவை எல்லாம் கல்பனானந்தாவின் வேதனையை அதிகப்படுத்தின. யோகாலயத்திற்கு வெளியே தினமும் நின்ற நிருபர்கள், வழக்கு எல்லாம் பாண்டியனையும், பிரம்மானந்தாவையும் எந்த வகையிலும் அசைக்கவில்லை என்பதை அவள் நேரடியாகவே பார்த்தாள். அவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதது போலவே நடந்து கொண்டார்கள். சைத்ரா எங்கே அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவில்லை. அவளை நினைக்கையில் எல்லாம் மனம் ரணமானது. உயிரோடு புதைக்கப்பட்ட நபர் யாரென்று தெரியவில்லை.

 

சைத்ராவின் அறையில் உடனிருந்த கவிதானந்தாவும், அபிநயானந்தாவும் கூடுதலாகக் கண்காணிக்கப்படுவதைப் பார்த்த போது தான் மொட்டைக்கடிதம் எழுதியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் பாண்டியனுக்கு எழுந்திருப்பதைப் புரிய வைத்தது. அவர்கள் இருவரும் சைத்ராவுடன் ஒரே அறையில் வசித்ததால் அவர்கள் அவளிடம் கொலை பற்றிச் சொல்லியிருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். மேலும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை வைத்து, யோகாலயத் தபால்களுடன் இந்த மொட்டைக்கடிதத் தபாலையும் சேர்த்து வைத்திருக்கும் வாய்ப்பும் அவர்களிருவருக்கும் இருப்பதாக பாண்டியன் எண்ணியதாகத் தெரிந்தது. அவர்கள் இருவர் அளவு அல்லா விட்டாலும், கல்பனானந்தாவையும் சந்தேகக்கண்ணோடு தான் பாண்டியன் பார்ப்பதாக அவள் உணர்ந்தாள். சைத்ரா அவளிடம் சொல்லியிருக்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் சைத்ரா, தான் பார்த்த கொலையை வேறு யாரிடமும் சொல்லி விடவில்லை என்று உறுதியாகச் சொல்லியிருப்பாள் என்றே கல்பனானந்தாவுக்குத் தோன்றியது. ஏனென்றால் கவிதானந்தா, அபிநயானந்தா, அவள் மூவருக்கும் எந்தப் பிரச்சினையும் அங்கு எழவில்லை.   ஆனால் யோகாலயாவில் காமிராக்களும், கண்காணிப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இப்படி ஒரு இடத்தில் இருக்க வேண்டி வந்ததில் கல்பனானந்தா சித்திரவதையை உணர்ந்தாள்.

 

சைத்ரா கோவிட்டில் இறந்தாள் என்ற செய்தி வெளியானதும், தொடர்ந்து அவளுடைய தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் கல்பனானந்தாவை தனியாக அறையில் அழ வைத்தன. இறைசக்தியும் கர்மா சித்தாந்தமும் கூட சில சமயங்களில் கேள்விக்குறியாயின. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களை யாரும், எதுவும் அசைக்க முடியாது என்ற கர்வத்தில் அவர்கள் இருந்தது அவளைக் குமுற வைத்தது. காலம் போகப் போக, இனி யாரும் இவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியும் அவளுக்குள் எழுந்தது.

 

ஆனால் திடீரென்று ஒரு நாள் யோகாலயத்தில் அர்த்த ஜாம பூஜை ஒன்று நடந்தது. அங்கே எப்போதாவது பூஜையும், ஹோமங்களும் நடைபெறும் என்றாலும் அது இப்படி அர்த்த ஜாம பூஜையாக இருந்ததில்லை. அன்றைய பூஜையைச் செய்ய வந்திருந்தவரை பாண்டியனும், அப்போது அடிக்கடி வர ஆரம்பித்திருந்த டாக்டர் சுகுமாரனும் சேர்ந்து வரவேற்றது அவளை ஆச்சரியப் படுத்தியது. மறுநாளிலிருந்து பாண்டியன் கையில் தெரிந்த தாயத்து அவளைப் பேராச்சரியப்படுத்தியது. பெயரளவில் கூட, பிரம்மானந்தாவுக்காகவும் ஆன்மீக அடையாளங்கள் எதையும் அணிந்து கொள்ளாத பாண்டியன் கையில் தாயத்தா? இது நிஜமா, கனவா என்று கூட அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு தான் அவர்களிடம் பயமும், பதற்றமும் தெரிய ஆரம்பித்தன. கால தாமதமானாலும், கடவுளும், கர்மாவும் வேலை செய்வதை அவளால் பார்க்க முடிந்தது.  

 

ஷ்ரவன் அங்கு வகுப்புகளுக்கு வந்து புதிராக நடந்து கொண்டதும், அவன் மீது அவர்கள் அக்கறை காட்டி அவனைப் பேச வைக்க ஆர்வம் காட்டியதும் அவள் சற்றும் எதிர்பாராதது. அவன் சொன்னது எதிலும் அவளுக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் அவர்கள் அதை நம்பினார்கள் என்பது தெரிந்தது. அதுவும் அவளை ஆச்சரியப்படுத்தியது. இங்கே என்னென்னவோ புதிதாய் நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் புரிந்தது. இவர்களைப் பாதிக்கும் விஷயங்களில் தீர்வோ, கூடுதல் ஞானமோ தன்னிடம் இருப்பது போல் அவன் காட்டிக் கொள்கிறான் என்பதையும் அவள் யூகித்தாள். அவன் உத்தேசம் என்னவென்று ஆரம்பத்தில் அவளுக்குப் பிடிபடவில்லை. முதலில் இவர்களிடம் காசு பறிக்க தந்திரமாக அவன் செயல்படுகிறான் என்று கூட அவளுக்குத் தோன்றியது.


சைத்ராவுக்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த யோகி சமாச்சாரத்தை அவன் பேசியது அவளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அதை அவன் கண்டுபிடித்தது எதாவது விசேஷ சக்தி மூலமாகவே இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. முந்தைய அவளது சந்தேகங்களுக்கு இது பொருந்தவில்லை. அவன் அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறான் என்று மட்டும் அவளுக்கு உறுதியாகியது. ஆனால் இன்னொரு பலி இங்கே தரப்பட வேண்டாம் என்று நினைத்து அவள் அவனை எச்சரிக்கவும் செய்தாள்.

 

பின் அவள் அவனை அதிகம் கவனிக்க ஆரம்பித்தாள். தோட்டக்காரன் மருதகாசிக்கும்  அவனுக்கும் இடையே எதோ சம்பந்தம் இருப்பது மெல்லப் புரிந்தது. அப்படியானால் இதில் இவன் ஒருவன் மட்டுமல்ல, தோட்டக்காரன் என்ற பெயரில் இவனுக்கு ஒரு கூட்டாளியும் இருக்கிறான் என்பதும் புரிந்தது. பின் தான் இவர்கள் போலீசாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. முதல்வர் தமிழகம் திரும்பி வந்ததும் சைத்ராவின் தாத்தா அவரிடம் போய்ப் பேசியிருக்கலாம், அதன் பின் நடக்கும் ரகசிய ஏற்பாடாக இது இருக்கலாம் என்ற உண்மையும் அவளுக்குப் பிடிபட்டது. 

 

ஷ்ரவனுக்கும், மருதகாசிக்கும் இடையே நடந்த துண்டுச் சீட்டுப் பரிமாற்றத்தின் பின் துண்டுச் சீட்டு கண்காணிப்பாளன் கையில் கிடைத்தும் கூட அவனோ, பாண்டியனோ எதுவும் கண்டுபிடித்து விட முடியாதது அவள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவள் என்றோ நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நல்ல காரியம் தற்போது நடக்கிறது என்ற திருப்தி அவளுக்கு ஏற்பட்டது. ஆபத்தானாலும் ஆபத்தைச் சந்திக்க முடிந்த சாமர்த்தியசாலியாகவே ஷ்ரவனை அவள் எண்ணினாள். நீண்ட ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அவனை முழுவதுமாக நம்பலாம், முடிந்த விதங்களில் உதவலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். 

 

ஸ்ரேயாவிடம் ஷ்ரவன் ஒப்படைத்த வேலை இரவு, பகலாக நடந்தாலும் முன்னேற்றம் ஆமை வேகத்திலேயே இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. சொல்லப் போனால் அது முன்னேற்றம் தானா, ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்குமா என்ற சந்தேகம் கூட அவள் மனதில் எழ ஆரம்பித்தது.

 

சைத்ராவின் தந்தைக்கு வந்த மொட்டைக்கடிதம் நாளிலிருந்து ஒரு மாத காலம் முன்பிலிருந்து நடந்த கொடுக்கல், வாங்கல், பணபரிவர்த்தனை, கிரையம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் பார்த்துக் கொண்டிருந்த போது தான் CMS என்ற கோப்பு அவள் கவனத்தைக் கவர்ந்தது. உள்ளே சந்திர மோகன் என்பவரின் ஆதாரும், பான் கார்டும் பார்த்த போது அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது.  அந்தப் பெயரை ஷ்ரவன் சொல்லி இருந்ததாக நினைவு. உள்ளே விலாசத்தில் சேலம் என்பதைப் பார்த்தவுடனேயே அது உறுதியாகியது. CMS என்பது சந்திரமோகன், சேலம் என்பதன் பெயர்ச்சுருக்கமாக இருக்க வேண்டும்.  சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக்கடிதம் வருவதற்கு சுமார் ஒரு வார காலம் முன்பு காணாமல் போன மனிதர்யோகாலயம் செல்வதாகச் சொல்லி விட்டுக் கிளம்பியவர் பின் வீடு திரும்பவில்லை என்பது நினைவு வந்தது. பரபரப்புடன் அவர் காணாமல் போனதாகப் புகார் தரப்பட்ட விவரத்தை இணையத்தில் தேடினாள். ஒரே ஒரு பத்திரிக்கையில் தான் அது சின்ன செய்தியாக வந்திருந்தது.   அந்த தேதியைக் குறித்துக் கொண்ட அவள்    அந்தக் கோப்பில் இருக்கும் வரவு செலவுக்கணக்கைப் பார்த்தாள். சந்திரமோகன் காணாமல் போய் நான்கு தினங்கள் கழிந்த பிறகு, தன்னிடமிருந்த சில நிலங்களை யார் பெயருக்கோ விற்றியிருக்கிறார். அது யார் பெயருக்கு என்று ஸ்ரேயா பார்த்தாள். கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயருக்கு நிலங்கள் விற்கப்பட்டு இருந்தது. பெயர் வித்தியாசமாய்த் தோன்றவே இணையத்தில் அவள் அந்தப் பெயரைத் தேடினாள்.  முகநூலில் கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் யோகாலயத்தில் வேலை செய்வதாய் முகநூல் தெரிவித்தது.

 

ஸ்ரேயா பரபரப்புடன் ராகவனுக்குப் போன் செய்தாள்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, January 22, 2026

சதுரங்கம் 2

 

ந்த மனிதன் அவள் வீட்டு அறை ஒன்றில் பதுங்கியிருந்து கொண்டு அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் இந்த வீட்டுக்குள் மதியம் மூன்று மணியளவிலேயே வந்து விட்டான். அவனிடம் அவள் வீட்டு வெளி கேட் பூட்டின் கள்ளச் சாவியும், வீட்டின் பிரதான கதவின் கள்ளச் சாவியும் இருக்கின்றன. மதியம் வந்தது முதல் அவனுக்கு ஓய்வேயில்லாமல் வேலை இருந்தது.

 

உள்ளே வந்தவுடன் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த அவனுடைய நுழைவின் பதிவை அவன் அழித்து விட்டான். இனி எதுவும் அதில் பதிவாகாதது போல் செய்து விட்டு தான் அவனுடைய மற்ற வேலைகளை அவன் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய லேப்டாப்பில் மட்டும் அவன் மூன்று மணி நேரம் செலவழித்திருக்கிறான். அவளுடைய கடந்த மூன்று வருடங்களின் டைரிகளைப் படித்திருக்கிறான். எங்கெல்லாம் ஒருத்தி முக்கியமான ஆவணங்களை ஒளித்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அவன் மிகவும் பொறுமையாகச் சோதித்துப் பார்த்திருக்கிறான்.

 

இன்னும் சோதித்துப் பார்க்க இரண்டு இடங்கள் இருக்கின்றன. அதைப் பார்க்கலாம் என்று நினைத்த போது தான் அவனுடைய ஆள் அலைபேசியில் தகவல் அனுப்பினான். ”அவள் வந்து கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நிமிடங்களில் வந்து விடுவாள்.”

 

அதனால் தான் அந்த இரண்டு இடங்களை அவன் சோதித்துப் பார்க்கவில்லை. அவள் வருவதற்குள் அவன் அந்த அறையில் வந்து ஒளிந்து கொண்டான். அந்த அறை விருந்தினர் அறை. அங்கு வந்து தங்கும் படியான ஆட்கள் அந்த வீட்டுக்கு வருவதில்லை. அதனால் அவளும் அந்த அறைக்கு வருவதில்லை. அவளுடைய வேலைக்காரி மட்டும் தினமும் வந்து சுத்தம் செய்து விட்டுப் போவாள்...

 

அந்த இரண்டு இடங்களைச் சோதித்துப் பார்க்க அவனுக்கு இருபது நிமிடங்கள் தான் தேவைப்படும். அந்த இரண்டு இடங்களில் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது அவனுக்கு 99% தெரியும். ஆனால் ஒரு சதவீத வாய்ப்பையும் அவன் அலட்சியப்படுத்தியதில்லை. அலட்சியம், அவசரம் இந்த இரண்டு தவறுகளையும் அவன் தன் தொழிலில் செய்ததேயில்லை. அதனால் தான் அவன் இதுவரை பிடிபட்டதேயில்லை.  இன்னும் அவன் ஆராய வேண்டிய மிக முக்கியமான ஒன்று உள்ளது. அது அவளுடைய அலைபேசி. அவளைக் கொல்லாமல் அவன் அதை ஆராய முடியாது. இப்போதெல்லாம் பலருக்கும் அலைபேசிகள் உடலில் ஒட்டிய உறுப்புகள் போல் ஆகிவிட்டன. அவர்கள் அதை விட்டுப் பிரியும் நேரமே உறங்கியிருக்கும் நேரம் தான். அப்போதும் அவை அவர்கள் பக்கத்திலேயே இருக்கும். காலை எழுந்தவுடன் மறுபடி அவர்களுடைய கைகளில் சேர்ந்து கொள்ளும்

 

அந்த அலைபேசியை ஆராய முக்கால் மணி நேரத்திலிருந்து ஒன்றேகால் மணி நேரம் தேவைப்படலாம். அது முடிந்தால், பின் இந்த வீட்டுக்குள் பார்க்க வேண்டியது எதுவும் இல்லை.

 

அவளுடைய வங்கி லாக்கரில் அவள் ஏதாவது முக்கிய ஆவணத்தை ஒளித்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை அவன் அந்த நபருக்குத் தெரிவித்திருக்கிறான். அந்த நபர் சொன்னார். “அதை அப்புறமா பார்ப்போம். ஒரே நேரத்துல எல்லாப் பிரச்சினைகளையும் யாரும் தீர்க்க முடியாது. அப்படி அவசரப்பட்டு தீர்க்கப் போனா நம்ம அரைகுறை முயற்சிகள்ல சில புதுப்பிரச்சினைகளை உருவாக்கிடுவோம். அதனால, இருக்கற பிரச்சினைகள ஒவ்வொன்னா தான் பொறுமையாய் தீர்க்கணும்.”  

 

ஆபத்தான மனிதர் என்று அவன் அவரை புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். இந்த முன்னாள் நடிகை ஒரு வடிகட்டிய முட்டாள். அவருக்கு எதிரியாகும் முட்டாள்த்தனத்தை இவள் செய்திருக்கக்கூடாது. ஒருவன் தனக்குச் சமமானவர்களுடனும், தனக்குக் கீழே உள்ளவர்களுடனும் பகை வைத்துக் கொள்ளலாம். தன் சக்திக்கு மீறிய வலிமையானவர்களுடன் பகை வைத்துக் கொள்வது வடிகட்டிய முட்டாள்த்தனம்... 

 

நர்மதா எழுந்து போய் கதவைச் சரியாகத் தாளிட்டிருக்கிறோமா என்று பார்த்து விட்டு வருவது தெரிந்தது. இனி அவள் அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டால் அவன் வந்த வேலை முடியாது. அமைதியாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

*****

 

விமல் காலை கண்விழித்த போது மணி 6.10. சென்று காலைக்கடனை முடித்து விட்டு வந்து அலைபேசியை எடுத்தான். நர்மதா எதாவது தகவல் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்தான். அவளிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை. இனியும் அவளை எச்சரிக்காமல் இருப்பது ஆபத்து. அலைபேசியில் அவன் அவளை அழைத்தான். மணியடித்தும் அவள் அலைபேசியை எடுத்துப் பேசவில்லை. அவன் அலைபேசியில் நேரம் பார்த்தான். மணி 6.52. அவள் எழுந்து பாத்ரூம் போயிருக்கலாம்... பத்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் அழைத்தான். இப்போதும் அழைப்பு மணி முழுசுற்று போய் நின்றது.... அவனுக்குள் மெல்ல பதற்றம் உருவாக ஆரம்பித்தது. அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோ? இல்லை சைலண்ட் மோடில்வைத்து விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளா? சில சமயங்களில் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு அப்படித் தூங்குவது உண்டு. ஆனால் இன்று ஏனோ அப்படி இருக்கலாம் என்று நம்ப அவன் மனம் மறுத்தது. மேலும் ஏழு நிமிடங்கள் பொறுத்து விட்டு அவன் அவளை மறுபடியும் அழைத்தான். பதில் இல்லை.

 

ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்…? அவனுடைய பயம் அதிகமாகியது.  அவளுக்கும், அவனுக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பலரும் அறிந்தது தான். எதிரிகள் அவளுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர்களுடைய அடுத்த இலக்கு அவனாகத் தான் இருக்கும்.... பயம் பீதியாக மாறியது.

 

அவளை அவர்கள் கொன்றிருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படி அவள் இறந்திருந்தால் அதற்குக் காரணமாக போலீஸார் சந்தேகப்படும் நபர்களில் கண்டிப்பாக அவனுக்கு முதலிடம் இருக்கும். நேற்று இரவில் அவன் தான் அவளிடம் கடைசியாகப் பேசியவன். அவன் அவளுடைய வீட்டுக்குச் செல்லவில்லை, இங்கேயே தான் இருந்தான் என்று அவன் கஷ்டப்பட்டு நிரூபித்தால் கூட, ”கடைசியாக உன்னிடம் தானே பேசினாள்? அவள் என்ன பேசினாள்?” என்ற கேள்வியிலிருந்து போலீஸார் ஆரம்பிப்பார்கள்.   கொலையாளி சிக்காத பட்சத்தில் அவனையே கொலையாளியாக்கப் பார்ப்பார்கள். அவர்களுக்கு வழக்கை முடிக்கும் அவசரம் இருக்கும். அதற்கு அவர்களுக்கு அவனை விடப் பொருத்தமான ஆள் கிடைக்காது....

 

தேவையில்லாமல் கற்பனை வளத்தை ஓட விடுகிறோமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அவன் மறுபடி அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான். அவளிடமிருந்துஹலோஎன்ற ஒரு வார்த்தை கேட்டு விட்டால் போதும்; அவன் நிம்மதியாகி விடலாம். ஆனால் இப்போதும் மணி அடிப்பது ஒரு முழு சுற்று போய் நின்றது.

 

இனி இங்கிருப்பது ஆபத்து என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. போலீஸார் வராமல் எதிரிகள் அனுப்பி வைக்கும் குண்டர்கள் வந்தாலும் அவனுக்குப் பிரச்சினையே. அவள் அவனிடம் எதையும் சொல்லாமல் இருக்க மாட்டாள் என்பதை அவர்கள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். அவளைத் தூண்டி விட்டவனே அவன் தான் என்பதை அவள் வாய் தவறிச் சொல்லியும் இருக்கலாம்....

 

அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அவசர அவசரமாக அவனுடைய சில உடைகளையும், வீட்டில் இருக்கும் ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பினான். எப்போதும் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அவன். ஆனால் இன்று அவனுக்குக் கண்ணாடி பார்க்கவும் தோன்றவில்லை. எங்கே போவது என்று கூட அவன் யோசிக்கவில்லை. உயிருடன் இருப்பதே மிக முக்கியம்....


(தொடரும்)

என்.கணேசன்




Wednesday, January 21, 2026

முந்தைய சிந்தனைகள் 132

 என்னுடைய ‘ஆழ்மனசக்தி அடையும் வழிகள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












Monday, January 19, 2026

யோகி 139


சில நாட்கள் கழித்து சைத்ரா அவளுடைய அறைக்குத் திரும்பிப் போய் விட்டாள். அறையில் உடன் இருக்கையில் பேசிக் கொண்டிருந்தது போல் பிறகு நிறைய பேச முடியா விட்டாலும் அவர்களுடைய நட்பு அமைதியாகத் தொடர்ந்தது.

 

திடீரென்று ஒரு நாள் சைத்ரா மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டாள். அன்று நூலகத்தில் அவளுக்கு வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவளுடைய பதற்றத்தைப் பார்த்த கல்பனானந்தா என்ன ஆயிற்று என்று கேட்டாள். பதில் சொல்லவும் வார்த்தைகள் வராமல் சைத்ரா திணறுவதைப் பார்த்த பின் தான் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது கல்பனானந்தாவுக்குப் புரிந்தது.

 

நூலகத்தின் உள்ளே ஒரு அறை இருந்தது. அந்த அறையில் தான் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களின் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும். அந்த அறைக்குத் துறவிகளின் வருகை இருக்காது என்பதால் அந்த அறைக்குள்ளே கண்காணிப்பு காமிரா இல்லை. மொத்தமாக நூல்கள் எங்காவது அனுப்ப வேண்டியிருந்தால், அல்லது, வந்திருக்கும் புதிய நூல்களில் சில பிரதிகளை நூலகத்து அலமாரிகளில் வைக்க வேண்டியிருந்தால் மட்டுமே புத்தகங்களை எடுக்க நூலகத்தில் வேலை செய்யும் துறவிகள் போவார்கள். அப்படிப் போயும் உள்ளே நிறைய நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. அந்த அறைக்குள் போவதும், வெளியே வருவதும் நூலகத்தில் அந்த அறைக்கு வெளியே உள்ள காமிரா மூலம் பதிவாகும்.

 

பிரம்மானந்தாவைப் பற்றி ஒரு பக்தர் எழுதியிருந்த புதிய நூல் ஒன்று முந்தைய நாள் தான் பல பெட்டிகளில் வந்து சேர்ந்திருந்தது. அவற்றைச் சில நூலகங்களுக்கு அனுப்பவும், சில பிரதிகளை இந்த நூலகத்தில் படிக்க அலமாரியில் வைக்கவும் வேண்டியிருந்ததால் அந்த நூல்களை எடுக்கும் சாக்கில் சைத்ராவை அந்த அறைக்கு கல்பனானந்தா அழைத்துக் கொண்டு போனாள்.

 

உள்ளே போனதும்  அவள் கேட்டாள். “என்ன ஆயிற்று சைத்ரானந்தா?”

 

நேற்று.... நேற்று இரவு.... ஒரு கொலை....” நடுங்கிய குரலில் சைத்ரா சொன்னாள்.

 

கல்பனானந்தா அதிர்ச்சியடைந்தாள். “எங்கே?”

 

குரல் நடுங்க சைத்ரா சொன்னாள். “யோகாலயத்துக்குள்ளே தான்

 

விவரமாய்ச் சொல் சைத்ரானந்தா? யாரைக் கொன்றார்கள்? கொன்றது யார்?”

நடந்ததை நடுங்கியபடியே தாழ்ந்த குரலில் சைத்ரா சொன்னாள். முந்தைய நாள் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் சைத்ராவுக்கு உறக்கம் வரவில்லை என்பதால் படுத்து இருப்பதும் எழுவதுமாக அவள் இருந்திருக்கிறாள். சுமார் ஒன்றரை மணிக்கு வெளியே எதோ சத்தம் கேட்டதால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறாள். பாண்டியனின் இருப்பிடத்திலிருந்து ஒருவனைக் கயிறால் கட்டி சில குண்டர்கள் வெளியே தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாண்டியன் அவர்கள் பின்னாலேயே வந்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் பின்பகுதிக்குப் போயிருக்கிறார்கள்.

 

அறை ஜன்னலில் இருந்து அதற்கு மேல் பார்க்க சைத்ராவுக்கு முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவளுக்கு அறையில் இருப்பும் கொள்ளவில்லை. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் பின் பகுதியில் நடப்பது முழுவதுமாகத் தெரியும் என்பதால் அவள் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறாள்.

 

பின்பகுதியில் முன்பே ஒரு பெரிய குழியை அவர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். அதனுள்ளே அந்த ஆளைக் குண்டுக்கட்டாக உள்ளே போடுகிறார்கள். வாயையும், கை கால்களையும் கட்டிப் போட்டிருந்தாலும் அந்த ஆள் கஷ்டப்பட்டு திமிறுவதை அவளால் பார்க்க முடிந்தது. உயிரோடு ஆளைக் குழியில் போட்டு அவர்கள் மண்ணைப் போட்டு மூட ஆரம்பித்தார்கள். குழியை மூடி, மற்ற இடங்களில் உள்ள மணலையும் அள்ளி அதன் மீது போட்டு, மேற்பரப்பில் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்து விட்டு ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் திரும்பி வர ஆரம்பித்தார்கள். ஒருவன் மட்டும் அங்கேயே இருந்து காவல் காத்தான். யாரும் பார்க்கிறார்களா என்பதை அவன் சுற்றும் முற்றும் பார்ப்பதும் தெரிந்தது. சைத்ரா குனிந்து சத்தமில்லாமல் கீழிறங்கி வந்து விட்டாள்.  சொல்லி முடித்த போது சைத்ராவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

 

எல்லாம் கேட்டு விட்டு கல்பனானந்தாவும் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்தாள். பின் நேற்று வந்த பெட்டியிலிருந்து மௌனமாக புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தபடியே கேட்டாள். “இறந்த ஆளை உனக்குத் தெரியுமா?”

 

இல்லை.”

 

புத்தகங்களை சைத்ரா கையில் தந்தபடி கல்பனானந்தா சொன்னாள். “நல்ல வேளை அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை…”

 

சொல்லச் சொல்ல, சைத்ரா தனதறையிலிருந்து வெளியேறி மொட்டை மாடிக்குப் போவது கண்காணிப்பு காமிராவில் போவது பதிவாகி இருக்கும், என்ற உண்மை கல்பனானந்தாவுக்கு உறைத்தாலும், அவள் அதை வெளியே சொல்லவில்லை. முதலிலேயே மிகவும் பயந்து போயிருக்கும் அந்தப் பெண்ணை அவள் மேலும் பயமுறுத்த விரும்பவில்லை.

 

சுவாமினி, இங்கே இப்படி நடக்கலாமா?” என்று தாங்க முடியாத வேதனையுடன் கேட்ட சைத்ராவை, கல்பனானந்தா வருத்த்த்துடன் பார்த்தாள். சைத்ரா தொடர்ந்து சொன்னாள். “இறந்தவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். அவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருப்பார்கள்அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்…” சொல்கையில் அவள் குரல் உடைந்தது.

 

கல்பனானந்தா வருத்ததுடன் கேட்டாள். “நாம் என்ன செய்ய முடியும் சைத்ரானந்தா?”

 

யோகிஜியிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் சுவாமினி

கல்பனானந்தா அதில் உள்ள ஆபத்தை உணர்ந்தாள்.  அந்தப் பெண் பிரம்மானந்தாவுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்கிறது என்று நம்புகிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது. அவருக்குத் தெரிந்து தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. “சொல்லிப் பிரயோஜனமில்லை சைத்ரானந்தா.” என்று மட்டும் அவள் சொன்னாள்.  

 

சைத்ரா மனத்தாங்கலுடன் சொன்னாள். “ஒரு குற்றத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால், அடுத்தடுத்த குற்றங்கள் நடக்க நாமே உதவுவது போல் ஆகிவிடுமல்லவா சுவாமினி

 

கல்பனானந்தாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் தர்மசங்கடத்துடன் சொன்னாள். ”உண்மை தான். ஆனால் என்ன செய்வது சைத்ரானந்தா? இங்கே பாண்டியன் வைத்தது தான் சட்டம். அவரை எதிர்த்து நாம் எதுவும் செய்ய முடியாது.”

 

யோகிஜியும் எதுவும் செய்ய முடியாதா சுவாமினி?”

 

இது போன்ற நிஜங்களை ஒருவர் கோடி காட்டத் தான் முடியுமே ஒழிய, வெளிப்படையாகச் சொல்ல முடியாது. பெருமூச்சு விட்ட கல்பனானந்தா சொன்னாள். “இதை இனி யாரிடமும் நீ சொல்லாமல் இருப்பது தான் உனக்குப் பாதுகாப்பு சைத்ரானந்தா

 

சொல்லி விட்டு தானும் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு கல்பனானந்தா அறையிலிருந்து வெளியே வந்தாள். சைத்ராவும் நூல்களைச் சுமந்து கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவர்கள் அதுபற்றி அதற்கு மேல் பேசவில்லை. அன்றெல்லாம் சைத்ரா ஆழ்ந்த யோசனையில் இருப்பதை கல்பனானந்தா பார்த்தாள். 

 

மறுநாள் அவள் ஒரு நிகழ்ச்சி குறித்து பிரம்மானந்தாவின் உதவியாளரைச் சந்திக்கச் சென்ற போது அவர் பேச்சோடு பேச்சாக சைத்ரா பிரம்மானந்தாவைச் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதையும், மறுநாள் அனுமதி தரப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அவளுக்குப் பகீரென்றது. என்ன பைத்தியக்காரத்தனத்தை இந்தப் பெண் செய்கிறாள் என்று அவள் மனம் பதறியது. அந்தக் கொலையை பிரம்மானந்தா கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து சைத்ரா தன் மரண சாசனத்தைத் தானே எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவரைப் பற்றி மிக உயர்வாக நினைத்திருந்த அவள், இத்தனை பெரிய அராஜகம் எல்லாம் அவருக்குத் தெரியாமலேயே இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று அவள் நம்பியிருக்க வேண்டும்! மறுபடியும் சைத்ராவைப் பார்க்கையில் யோகிஜியைச் சந்தித்துப் பேசுவது ஆபத்தில் தான் முடியும் என்று கல்பனானந்தா சொன்னாள். ஆனால் அவளை சைத்ரா நம்பியதாகத் தெரியவில்லை.

 

அந்தப் பெண்ணைக் காப்பாற்ற கல்பனானந்தாவுக்கு வழி தெரியவில்லை.  அப்போது தான் அவளுக்கு சைத்ரா, அவளுடைய தாத்தாவுக்கும், முதல்வருக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. முதல்வர் தலையிட்டால் அந்தப் பெண்ணை நிச்சயமாய் காப்பாற்ற முடியும் என்று நம்பிய அவள் உடனடியாக சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதி, யோகாலயத்தில் இருந்து செல்லும் தபால்களோடு சேர்த்து வைத்து விட்டாள். கடிதம் நாளைக்கு அவர்களுக்குக் கிடைத்து விடும். அவர்கள் உடனடியாகச் செயல்பட்டால் கண்டிப்பாக சைத்ராவைக் காப்பாற்றி விடலாம் என்று கல்பனானந்தா நினைத்தாள். ஆனால் விதியின் தீர்மானம் வேறாக இருந்தது.

 

முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மறுநாளே வெளிநாட்டுக்குச் செல்ல, கல்பனானந்தா எடுத்த முயற்சி வீணாகியது.  எல்லாம் பிரம்மானந்தாவுக்குத் தெரிந்து தான் நடக்கிறது என்பதை வெளிப்படையாக சைத்ராவிடம் சொல்லியிருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்து தங்கியது. அவளுடைய மனசாட்சி உறுத்தியது. ஆனால் இனி எதுவும் அவள் செய்வதற்கில்லை.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, January 15, 2026

சதுரங்கம் 1


மூன்று நாட்களாகவே யாரோ சிலர் நர்மதாவைத் தொடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவள் எங்கே போகிறாள், யாரைச் சந்திக்கிறாள், யாருடன் பேசுகிறாள், எப்போது வீடு திரும்புகிறாள், அவள் வீட்டுக்கு யாரெல்லாம் வருகிறார்கள், வந்தவர்கள் எவ்வளவு நேரம் அவள் வீட்டில் தங்குகிறார்கள் என்பதையெல்லாம் இரகசியமாகக் கவனிக்கிறார்கள். அவள் அதிபுத்திசாலி அல்ல என்றாலும், தன்னைச் சிலர் பின்தொடர்வதை அவள் நேற்று தான் தன் உள்ளுணர்வால் உணர்ந்தாள்.  பின் அவள் எச்சரிக்கையுடன் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள். திரும்பத் திரும்ப அவள் பார்வையில் பட்ட மனிதர்கள் சிலரை  யதேச்சையாக மறுபடி மறுபடி பார்க்க நேர்வதாக  அவளால் நம்ப முடியவில்லை. அவளைக் கண்காணிக்கவும், பின் தொடரவும் யார் ஏற்பாடு செய்திருக்கக்கூடும் என்பதை அவள் அறிவாள். அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் கண்காணிப்பதால் இப்போது அவளுக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அடுத்ததாக என்ன நடக்கும், ஆபத்து எதாவது வரக்கூடுமா என்ற கேள்விகள் மெல்ல அவள் மனதில் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கு நிச்சயமான பதில்களை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருவேளை இது ஆபத்திற்கான முன்னோடியாக இருந்தால் என்ற கேள்வியில் நர்மதா சிறிது நேரம் தங்கினாள். முடிவில், தவறு செய்து விட்டோமோ என்று ஒரு கணம் அவளுக்குத் தோன்றியது. அதை அவள் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமை இருந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் அவள் ஒரு பேரதிர்ஷ்டசாலியாக இருந்தவள். திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக அவள் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் உச்சத்தில் இருந்திருக்கிறாள். அந்தக் காலக்கட்டத்தில் அவள் தான் தென்னிந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிஅவளுடைய கால்ஷீட்டுக்காக பல முன்னணிக் கதாநாயகர்களும் தாங்கள் கொடுத்திருந்த நேரங்களை மாற்றிக் கொண்டதுண்டு. முடிசூடாத மகாராணியாக இருந்த அவள் பிறகு மார்க்கெட் இழந்து பின்னுக்குத் தள்ளப்படும் நிலை வரும் என்று கற்பனையாகக் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் மனிதன் நினைத்துப் பார்க்காத நிலைகளை எல்லாம் அலட்டாமல் உருவாக்கி மகிழும் விதி அவள் வாழ்க்கையிலும் விளையாடியது. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் நின்று அவளை சகோதரியாகவும், அம்மாவாகவும் நடிக்க படக்கம்பெனிகள் அணுகிய போது அவள் அடைந்த கோபம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு முன்னணிக் கதாநாயகன் பெயரைச் சொல்லிஅவனை அப்பா வேஷத்துக்குக் கூப்பிட்டு பாரு. ஏன்னா அவனுக்கு அப்பா வயசு கூட இல்லை, பெரியப்பா வயசு. அவன் அந்த வேஷத்துல நடிக்க ஒத்துகிட்டான்னா நானும் அக்கா வேஷத்துல நடிக்க ஒத்துக்கறேன்என்று சொல்லி அனுப்பினாள்.

அவள் சொன்னது பின்பு பலராலும் பேசப்பட்டது, பலராலும் விவாதிக்கப்பட்டது. சிலர்திமிர் பிடித்தவள்என்று அவளை அழைத்தார்கள். அவள் அதற்குக் கவலைப்படவில்லை. அவள் திமிர் பிடித்தவள் தான். அதற்குப் பின் அம்மா, அக்கா வேடத்திற்காக யாரும் அவளைத் தேடி வரவில்லை. அவளுக்கு மொத்தமாக படவாய்ப்புகளே இல்லாமல் போகும் துரதிர்ஷ்டம் தான் வந்தது. புகழின் உச்சத்தில் இருப்பது ஒரு போதை. அந்தப் போதையில் திளைத்து மிதந்தவர்களுக்கு உச்சத்திலிருந்து சிறிது இறங்க நேர்வதும் வேதனை தான். அப்படி இருக்கையில் அவள் ஆட்சி செய்த இடத்திலேயே காணாமல் போக நேர்ந்தது நர்மதாவுக்கு நரக வேதனையாக இருந்தது.  அது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் கோடிகளில் சம்பாதித்த பணம் நின்று போனது கூடுதல் கொடுமையாக இருந்தது.

அடிப்படைத் தேவைகளுக்கு வாழ்நாள் இறுதி வரை அவளுக்கு வேண்டிய செல்வம் இருந்தாலும் கூட அவளால் அடிப்படைத் தேவைகளோடு திருப்தி அடைய முடியவில்லை. ஆடம்பரங்களில் திளைத்துப் பழகி விட்ட அவளுக்கு, பின் ஆடம்பரங்களைச் சிறிதும் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அந்தத் தவிப்பில் அவள் இருந்த போது தான் அந்த நட்பு அவளுக்கு ஏற்பட்டது. அந்த நட்பிற்குப் பின் பிரபலமாக அவள் மின்னா விட்டாலும், பழையபடி தேவைக்கேற்ற தாராள பணப்புழக்கத்தில் அவளால் வாழ முடிந்தது.

அந்த வாழ்க்கையில் அவள் திருப்தியுடன் அடங்கி இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்று இப்போது அவளுக்குத் தோன்றுகிறது. அவள் திருப்தியுடன் தான் இருந்தாள். அவளுடைய காதலன் விமல் தான் அவளுடைய ஆசையைத் தூண்டி விட்டான். ஆற்றில் வேண்டிய அளவு தண்ணீர் இருக்கையில் இரண்டு குடம் கூடுதலாக எடுத்தாலும் ஆற்றுக்கு தண்ணீர் குறையப் போவதில்லை என்று சொன்னான். அதிகப் பணம் வந்தால் ராஜ வாழ்க்கை வாழலாம் என்று சொன்னான். பணவரவுக்கான வழியையும் அவன் தான் சொல்லிக் கொடுத்தான். அவன் சொன்னபடி முயன்றது தப்பாகி விட்டதோ?

நர்மதா சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி ஒன்பதே கால். ஹாலில் இருந்து அவள் அறைக்குச் சென்றாள். அறையில் விளக்கைப் போடாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவள் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டு வாசலின் முன் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அவன் மூன்று நாளாக இரவு நேரங்களில் அதே இடத்தில் தான் இருக்கிறான். எதிர் வீட்டுக்காரர் கனடாவில் இருக்கும் அவருடைய மகன் வீட்டுக்குப் போயிருக்கிறார் என்பதால் அங்கிருந்து அந்த பிச்சைக்காரனைத் துரத்த அந்த வீட்டில் யாரும் இல்லைமூன்று நாட்களுக்கு முன்பு வரை அவனை அந்தப் பகுதியில் அவள் பார்த்ததே கிடையாது. அவன் பிச்சைக்காரன் அல்லவோ என்ற சந்தேகம் இப்போது அவள் மனதில் தீவிரமாக எழுகிறது. இரவு நேரங்களில் அவள் வீட்டைக் கண்காணிக்கும் வேலையைத் தான் அவன் பிச்சைக்காரன் வேடத்தில் செய்கிறானோ?

நர்மதாவை இனம்புரியாத ஒருவித பயம் பற்றிக் கொண்டது. அவள் உடனடியாக அலைபேசியை எடுத்து விமலைத் தொடர்பு கொண்டாள்.

சொல்லு டார்லிங். என்ன விஷயம்?” என்று அவன் உற்சாகமாகச் சொன்னான்.

நர்மதா மூன்று நாட்களாக அவள் பின்தொடரப்படுவதையும், தொடர்ந்து கண்காணிக்கப்படுவதையும் சொன்னாள். இப்போதும் எதிரில் பிச்சைக்காரன் வேடத்தில் ஒருவன் அவள் வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதைச் சொன்னாள். அவன் உற்சாகம் வடிந்து போனதை அவளால் உணர முடிந்தது. ஒரு நிமிடம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. பின் மெல்லக் கேட்டான்.  ”வீட்டுல சிசிடிவி கேமரா எல்லாம் சரியா தானே வேலை செய்யுது? செக் பண்ணியா

அது சரியா தான் இருக்கு. இன்னைக்குக் காலைல கூடப் பார்த்தேன். அப்படி பார்க்கறப்ப தான் பகல்லயும் இந்தப் பகுதிக்கு சம்பந்தமே இல்லாத சில பேர் அடிக்கடி இந்தப் பக்கம் நடமாடறதையும், இந்த வீட்டைப் பார்த்துகிட்டே கடந்து போறதையும் கவனிச்சேன். இதையெல்லாம் ஏன் செய்யறாங்க, இனி என்ன செய்வாங்கன்னு எனக்குப் புரியல விமல்

அவளுக்குப் புரியா விட்டாலும், அவர்கள் இனி என்ன செய்யக்கூடும் என்பது விமலுக்குப் புரிந்தது. அவள் இனி இரவு நேரங்களில் தனியாக இருப்பது ஆபத்து தான். ஆனால் அதைச் சொல்லி ஏற்கெனவே பயப்பட ஆரம்பித்திருக்கும் அவளைக் கூடுதலாக இப்போது பயமுறுத்த அவன் விரும்பவில்லை. ஆனால் காலையில் அவளிடம் சொல்லி எச்சரித்து விட வேண்டும்....

விமல், நாம பேராசைப்பட்டுட்டோமோ?” நர்மதா மெல்லக் கேட்டாள்.

விமல் சொன்னான். “நம்ம ஆசையைப் பேராசைன்னு சொன்னா, அவங்க ஆசைக்கு என்ன பேர் வைக்க முடியும் டார்லிங். அகராதியிலயே அதற்கு சரியான வார்த்தை கிடைக்காதே. உனக்கு கொடுக்கறது அந்த ஆளுக்கு வெறும் பிச்சைக்காசு.”

அப்படி இருக்கறப்ப எதுக்கு இப்படியெல்லாம்...?”

நீ தனியாளாய் இதைக் கேக்கறியா, இல்லை உனக்கு பின்னால வேற யாரும் இருக்கறாங்களான்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பற மாதிரி தெரியுது. அப்படி இருந்தா அது யாருன்னு கண்டுபிடிக்க விரும்பறாங்கன்னு நினைக்கிறேன்.”

அவ்வளவு தானா? நான் என்னென்னவோ நினைச்சு பயந்துட்டேன்நர்மதாவின் குரலில் நிம்மதி தெரிந்தது.

விமல் சொன்னான். “ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்கிறது நல்லது. முன் பின் தெரியாதவங்க என்ன காரணம் சொல்லிகிட்டு வந்தாலும் கதவைத் திறக்காதே.”

அந்த முட்டாள்த்தனமெல்லாம் நான் செய்ய மாட்டேன். நான் வெளி கேட் கூட பூட்டி தான் வெச்சிருக்கேன்.” 

நல்லது. அப்படின்னா நிம்மதியா தூங்கு. நாளைக்கு காலைல பேசுவோம்.”

(தொடரும்)

என்.கணேசன்