என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, September 3, 2026

சதுரங்கம் 34


 

ர்ஜுனுக்கு அவர் எடுத்த முடிவில் இப்போது குற்றம் காண முடியவில்லை. ஆனாலும் அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தான். அவர் சொல்லும் எதையும் அவன் தந்தை அறியாதவர் அல்ல. அவர் அறிவு ஆழமானது, சூட்சுமமானது...

 

ராஜாராம் தொடர்ந்து சொன்னார். “அண்ணா ரொம்ப திறமையான வக்கீல். அண்ணா விரும்பினா கோர்ட்டில் வாதாட ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து லட்சமாவது வாங்க முடியும்னு என் கிட்ட ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒரு தடவை சொன்னார்.  அந்த அளவு திறமை இருக்கிற எங்கண்ணா இப்போ எவ்வளவு சம்பாதிக்கிறான் அர்ஜுன்?”

 

ஞானமூர்த்தி இப்போது ஒரு மாதத்திற்குக் கூட அந்த அளவு சம்பாதிப்பதில்லை.  அவர் அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதால் ஓரிரு வழக்குகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். அதிலும் கட்சிக்காரன் பக்கத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். எந்த வழக்கையும் அவருடைய வாதத்திறமையால் அவரால் வெல்ல முடியும் என்றாலும், பிழைப்புக்காகக்கூட நியாயமில்லாத பக்கம் நிற்க அவர் சம்மதித்ததில்லை. நியாயமிருந்தும் வழக்கிற்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிற ஏழைகளிடம் அவர்களுக்குத் தர முடிந்த தொகையைத் தான் அவர் வாங்குகிறார். நியாயமிருந்தும் சில சட்டச்சிக்கல்களால் நீதி கிடைக்க முடியாத நிலையில் இருக்கும் பணக்காரர்களிடம்  மட்டும் அவர் அதற்குரிய தொகையை வாங்குகிறார். அவர் செய்யும் தியாகத்தையும், பெருந்தன்மையையும் எத்தனை பேர் நினைவு வைத்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியே! காரியம் முடிந்ததும் கடவுளையே கூட மறக்கும் மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை!

 

அர்ஜுன், நான் எங்கண்ணாவுக்கு இணையான அறிவாளியை இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஆனால் ஆனால் அந்தப் பேரறிவு அவனோட சொந்த வாழ்க்கைக்குப் பயன்பட்ட மாதிரி தெரியலை. வாதாட வேண்டியது தான் வக்கீலோட வேலை. தீர்ப்பு சொல்றது நீதிமன்றத்தோட வேலை. ஆனா அண்ணா என்ன செய்யறான்னா, அவனே நீதிபதியா இருந்து ஒரு வழக்கைப் பார்த்துட்டு தான் அதை ஏற்கிறான், இல்லை மறுக்கறான். ஒருவிதத்துல இது முட்டாள்தனமில்லையா? அரசியல்லயும் அப்படித் தான் செய்யறான். அவன் கட்சில மோசமான ஆட்களைச் சேர்த்துக்கறதில்லை. அவனோட அரசியல் கொள்கைகள்லயும் கூட அவன் சமரசம் செய்துக்கறதில்லை. இன்றைக்கிருக்கற சூழ்நிலையில் இப்படியெல்லாம் அரசியல் செய்ய முடியாது அர்ஜுன். போன தேர்தல்ல அண்ணா தோற்றதும், பத்தே பத்து தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்கள்லயும் டெபாசிட் இழந்ததும் அரசியல் களத்துல அண்ணா எங்கே நிற்கறான்னு தெரிவிக்கலையா அர்ஜுன்?

 

அர்ஜுன் சொன்னான். “நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சித்தப்பா. ஆனால் குறுகிய காலத்துல அவர் ஐம்பது தொகுதிகள்ல மூனாவது இடத்தில் இருக்கார். அது சின்ன விஷயமில்லையே?”

 

நீ ஓட்டு சதவீதத்தைப் பார்த்தா தான் உனக்கு சரியான நிலவரம் தெரியும் அர்ஜுன். ஒரு வகுப்புல ஐந்து மாணவர்கள் இருக்காங்கன்னு வெச்சுக்கோ. முதல் மார்க் 80 இரண்டாவது 50 மூன்றாவது 8 நான்காவது 5 ஐந்தாவது 3. இதில் 8 மார்க் வாங்கியவன் மூன்றாவது இடத்தில் இருக்கறதா சொல்ற நிலையில தான் அண்ணாவும் இருக்கான் அர்ஜுன். அந்த ஐம்பது தொகுதிகள்ல ஆளும் கட்சி 41.38% இருக்கு. எதிர்க்கட்சி 27.32% இருக்கு. அண்ணா கட்சி 6.28% இருக்கு. எதிர்க்கட்சிக்கு இணையாக வரவே நாலுமடங்கு ஓட்டு வேண்டியிருக்கு.”

 

அவர் சொல்வது நிஜம் தான். ஆனால் நிஜம் கசந்தது.  அது என்றைக்கு இனித்திருக்கிறது?

 

ஒரு காலத்தில் ஊழல்ங்கறது மக்கள் கிட்ட அதிர்ச்சியை உண்டுபண்ணுச்சு. ஆனால் இன்னைக்கோ ஊழல் இல்லைன்னா தான் மக்களுக்கு அது ஆச்சரியத்தை உண்டுபண்ணுது. அந்த அளவு ஊழல், மக்களே ஏற்றுகிட்ட ஒரு விஷயமாயிடுச்சு. எவன் வந்தாலும் ஊழல் தான்னு மக்கள் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தயாராயிட்டாங்க. ஒரு காலத்தில் விதிமுறைகளுக்குப் பொருந்தாத வேலைகள் ஆக வேண்டி தான் மக்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாங்க. இப்ப. விதிமுறைகளுக்குப் பொருந்தியிருந்தாலும் சரி எந்த வேலை அரசாங்க அலுவலகத்தில் ஆக வேண்டியிருந்தாலும் லஞ்சம் தராமல் வேலை ஆவதில்லைன்னு ஆயிடுச்சு. இப்ப எல்லாம் மக்களே லஞ்சம் எவ்வளவுன்னு கேட்டுத் தர்ற நிலைமை உருவாயிடுச்சு. லஞ்சம் தந்தாலும் சீக்கிரம் வேலையானால் அதுவே பெரிய விஷயம்னு நினைக்கிற நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்க. இப்ப யாரும் உத்தமனைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கறதில்லை. எத்தனை வேணும்னா சம்பாதிச்சுக்கட்டும், எங்களுக்கும் கொஞ்சமாவது நல்லது செஞ்சா போதும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவு மக்கள் ஊழலை ஏற்றுகிட்டாங்க. ஊழல் எதிர்ப்புங்கறது வெறும் மேடைப் பேச்சு சமாச்சாரமாயிடுச்சு. பேசறவனும் அதை சீரியஸா நினைச்சு பேசறதில்லை. கேட்கறவனும் அதை சீரியஸாய் எடுத்துக்கறதில்லை. இப்படி எல்லாருமே ஊழலை சீரியஸாய் நினைக்கற காலம் போன பிறகும் அண்ணா மேடைப்பேச்சையும் தாண்டி அதை சீரியஸாய் எடுத்துகிட்டுருக்கான்….” ராஜாராமின் குரலில் ஆழ்ந்த வருத்தம் இழையோடியது.

 

அவர் ஒரு கணம் நிறுத்தி அவன் ஏதாவது கருத்து தெரிவிக்கிறானா என்று பார்த்தார். ஆனால் அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தானேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. அவர் தொடர்ந்தார். “இப்போதெல்லாம் எதிர்க்கட்சி கூட ஆளும் கட்சி கூடப் பேரம் படியாத போது தான் வெளிப்படையாய் புகார் சொல்லுது. ரகசியப் பேச்சு வார்த்தைல பேரம் படிஞ்சுதுன்னா அவங்களும் சத்தமில்லாமல் இருந்துடறாங்க அர்ஜுன். மாநிலமானாலும், மத்திய அரசானாலும் இது தான் வெளிப்படையாய் சொல்லிக்காத விதி அர்ஜுன். இதுலயும் அண்ணா தான் விதிவிலக்கு. சரி இத்தனை நேர்மையாய் நியாயமாய் இருந்து அவன் மக்களுக்காகப் போராடறான். அதற்காவது மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பாங்களான்னா அதுவும் கிடையாது. தேர்தல் நேரத்துல ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எண்ணிக் கொடுக்கற ரூபாய் நோட்டுகளுக்குத் தர்ற முக்கியத்துவத்தை மக்கள் அவனுக்கோ, அவனோட கட்சிக்கோ, தர மாட்டாங்க. மக்கள் ஊழலை மறந்துடுவாங்க, மோசமான நிர்வாகத்தை மறந்துடுவாங்க, நிறைவேற்றாத வாக்குறுதிகளை மறந்துடுவாங்க, கடந்த ஆட்சில ஏமாற்றப்பட்டதை மறந்துடுவாங்க. தேர்தல் நேரத்துல தர்ற காசை மட்டுமே பார்த்து தான் ஓட்டுப் போடுவாங்க. இப்ப சொல்லு, ஏமாறுறது மக்களா, எங்கண்ணாவா?”

 

பேரறிவு இருந்தும் இன்றைய அரசியல் களத்தில் ஞானமூர்த்தி அடிமுட்டாள் ஆகத் தான் இருக்கிறார் என்பதைப் பார்க்கையில் அர்ஜுனுக்கு வேதனையாகத் தான் இருந்தது. ராஜாராம் அலசிச் சொன்ன அளவுக்கு அவன் யோசித்திருக்கா விட்டாலும் மேலெழுந்தவாரியாக கிட்டத்தட்ட இந்த நிலவரம் அவனுக்குப் புரிந்துதானிருந்தது.  

 

கடைசியாக ராஜாராம் சொன்னார். “இந்தக் காரணங்களுக்காகத் தான் நான் எங்கண்ணாவை ஆதரிக்கலை. கடைசில அவன் எல்லாராலயும் கோமாளி ஆக்கப்படறத என்னால சகிக்க முடியல அர்ஜுன். என் குடும்பத்துல இன்னொரு பலிக்கடா உருவாகறதை நான் விரும்பலை.”

 

அர்ஜுன் மெல்லக் கேட்டான். “நீங்க இதையெல்லாம் எங்கப்பா கிட்ட சொல்லியிருக்கீங்களா சித்தப்பா?”

 

ராஜாராம் இல்லையென வருத்தத்துடன் தலையசைத்து விட்டுச் சொன்னார்.சொல்லிப் பிரயோஜனம் இல்லை அர்ஜுன். இந்த விஷயத்துல எங்கப்பாவை விட அண்ணா இரண்டு மடங்கு பிடிவாதக்காரன். ”எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்குங்கறதை நான் பல தடவை உணர்ந்திருக்கேன். எங்கப்பா உயிரோட இருந்திருந்தா அவரோட முழு ஆதரவும் அண்ணாவுக்குத் தான் இருந்திருக்கும். ஆனால் நான் அவராகவோ, அண்ணாவாகவோ இருக்க விரும்பலை அர்ஜுன். இன்றைய அரசியல் ஒரு செஸ் விளையாட்டு மாதிரி தான். தாக்கறதும், தாக்குப்பிடிக்கறதும் தான் இதை விளையாடறவங்களோட குறிக்கோள். அடுத்தவங்க பலவீனத்தைப் பயன்படுத்திக்கறதும், அவங்கள பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுக்கறதும் ரொம்ப முக்கியம். மறைமுகமாய் நானும் அரசியல்வாதியாகி இந்த விளையாட்டுல சேர்ந்துட்டேன். எங்கப்பா மாதிரியோ, எங்கண்ணன் மாதிரியோ எனக்கு கொள்கை எல்லாம் கிடையாது. மக்களைப் பற்றியோ, மற்றவங்களைப் பற்றியோ நான் கவலைப்படறதில்லை. எனக்கு நிரந்தர நண்பர்களோ, நிரந்தரப் பகைவர்களோ கிடையாது. என்னை அனுசரிச்சுப் போறவங்களுக்கு, அவங்க அனுசரிச்சுப் போய்கிட்டிருக்கற வரைக்கும் நான் ஆதரவு தர்றேன்.  பின்னணியில் இருக்கறதால எனக்கு எப்பவும் நஷ்டமோ, தோல்வியோ இல்லை. நான் இதுவரைக்கும் இந்த அளவு வெளிப்படையாய் இதை யார் கிட்டயும் சொன்னதில்லை அர்ஜுன். உன் கிட்ட தான் சொல்றேன். வாசுதேவன் குடும்பத்தோட ஒரே வாரிசு நீ.  நீ எங்க கிட்ட கோவிச்சுகிட்டு இருந்தால் எங்களால தாங்க முடியாதுடா.” சொல்கையில் ஒரு கணம் அவர் குரல் உடைந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, August 31, 2026

ரட்சகன் 7

 


கமது அன்சாரி தலைமையில் அங்கு வேறு நான்கு பேர் கூடியிருந்தார்கள். அவர்களில் மூவர் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். நான்காமவன் முகமதலி, அவர்கள் இயக்கத்தின் திறமை வாய்ந்த செயல்வீரன். அப்சல்கானுக்கு இணையானவன் என்று பெயரெடுத்தவன். கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் அவர்களுடைய இயக்கத்தின் அனைத்து வேலைகளையும் அப்சல்கானோடு சேர்ந்து செய்தவன் அவன். தற்போது அப்சல்கான் சிறையில் இருப்பதாலும், இந்தியாவில் சூழ்நிலை சரியில்லாமல் இருப்பதாலும் அவன் எந்த தீவிர நடவடிக்கையிலும் இறங்காமல் பதுங்கியிருக்கிறான். மறுபடியும் அவன் இயங்க வேண்டியிருப்பதால் அகமது அன்சாரி அவனை வரவழைத்திருக்கிறார்.

 

அகமது அன்சாரி அப்சல்கானின் ஆலோசனையையும், அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் அவர்கள் இயக்கத்து ஆள் அந்த ஆலோசனை வெற்றி தருமா என்று சந்தேகம் தெரிவித்ததையும் முகமதலிக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்து விட்டுச் சொன்னார்.

 

வெற்றி கிடைக்கும் என்று உறுதிப்படுத்திக் கொண்டு ஒரு செயலில் இறங்க வீரம் வேண்டியதில்லை. சுலபமான வெற்றிகளில் பெருமைப்படவும் ஒன்றும் இல்லை. வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்ட வேலைகளில் இறங்கி தான் நம்முடைய இயக்கம் இவ்வளவு தூரம் வளர்ந்து முன்னேறி இருக்கிறது. நாம் இந்தியாவில் நம்முடைய சாகசத்தைக் காட்டி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. உலகத்தின் பார்வையில் நாம் பலவீனமாகிக் கொண்டு இருக்கிறோம். அப்சல்கானை இந்தியா தூக்கில் இட்டு விட்டால் நம் பலவீனத்தை நாம் ஒப்புக் கொண்டது போல் ஆகி விடும். அதற்கு முன் நாம் எதாவது செய்து அப்சல்கானை மீட்க வேண்டும். அதற்கு அப்சல்கானின் இந்த ஆலோசனையைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை

 

அவர் சொல்லி விட்டு மற்றவர்களுடைய முகங்களைப் பார்த்தார். அவர்கள் அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்டார்களேயொழிய தங்கள் அபிப்பிராயம் எதையும் சொல்லவில்லை.  அவர் முகமதலியிடம் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய்?”

 

அவர் சொன்னது சரி தான் என்றாலும், நீங்கள் சொல்வதும் சரி தான். நாம் எதாவது செய்தாக வேண்டும். இல்லா விட்டால் உலக அரங்கில் நாம் மரியாதையை இழந்து விடுவோம்.”

 

அகமது அன்சாரி திருப்தியுடன் தலையசைத்து விட்டுத் தொடர்ந்து கேட்டார். “கடத்துவதானால் யாரைக் கடத்துவது சுலபம்?”

 

கடத்தும் வேலையை இப்போது செய்ய வேண்டியவன் முகமதலி தான் என்பதால் அவனிடம் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. முகமதலி சொன்னான். “மூவரைக் கடத்துவதுமே சுலபமல்ல என்றாலும், சரியாகத் திட்டமிட்டால் யுவராஜைக் கடத்த முடியும்.”

 

அது வரை அமைதியாய் இருந்த மற்றவர்களில் ஒருவர் கேட்டார். “குழந்தை பிறந்த பிறகு கூட யுவராஜை ராஜேஷ்வர் மருமகனாக ஏற்கவில்லை. நம் ஆள் சொன்னது போல, பிடிக்காத மருமகனை நாமாகக் கடத்தினால் அது ராஜேஷ்வருக்கு வசதியாக அல்லவா போய் விடும். திருப்பிக் கொண்டு வந்து அவனைச் சேர்க்கிறேன் என்றால் தான் அவர் வருத்தப்படுவார். நாமாக அவனை அவர்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கி விட்டால், அவர்களுக்குப் பிடித்த பையனை மகளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பாரே அவர்.”

 

அகமது அன்சாரி சொன்னார். “நியாயமான சந்தேகம் தான்.. இது பற்றி நானும் நிறைய யோசித்தேன். ராஜேஷ்வர் யுவராஜை மருமகனாக முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதவராய் இருந்தால் கல்யாணத்திற்கு முன்பாகவே அவனை சுலபமாகத் தீர்த்துக்கட்டியிருக்கலாம். அவர் அதைச் செய்யவில்லை. அவர் அஹிம்சாவாதி அல்ல. அவருடைய கம்பெனி ரகசியங்களை போட்டி கம்பெனிக்கு கசிய விட்ட ஒரு ஊழியன் திடீரென்று காணாமல் போய் நான்கு வருடங்கள் ஆகின்றன. இதுவரை அவன் பிணம் கூடக் கிடைக்கவில்லை. அதே போல் அவருடைய வீட்டில் நகைகளைக் கையாடல் செய்த ஒரு வேலைக்காரி பற்றி அவர் போலீஸில் புகார் கூடத் தரவில்லை. அவள் ஒரு வாரத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தாள். இதற்குப் பின்னணியில் அவர் தான் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி அலட்டிக் கொள்ளாமல் ஆட்களைத் தீர்த்துக்கட்டும் ஆள் யுவராஜை விட்டு வைத்திருப்பது பெருந்தன்மையால் தான் என்று நினைக்க முடியவில்லை.” 

 

அதே போல மகள் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக அவளை வெறுப்பவராக இருந்தால் கல்யாணத்திற்குப் பிறகும் அவள் பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்ப வேண்டியதில்லை. யுவராஜ் நிர்ப்பயா இருவர் வாழ்க்கையிலிருந்து விலகி நிற்கிறாரே ஒழிய ஒரேயடியாக உறவை அறுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது யுவராஜை மீட்க எதையும் செய்யாமல் இருப்பார் என்று என்னால் நினைக்க முடியவில்லை.”

 

இன்னொருவர் முதல் முறையாக வாயைத் திறந்தார். “யுவராஜை மீட்க ராஜேஷ்வர் முன்வருவார். அதற்குப் பதிலாக அப்சல்கானை விடுவிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி அழுத்தம் தந்தால் அரசாங்கம் கண்டிப்பாக அவருக்கு மறுப்பு தெரிவிக்காது. ஏனென்றால் எல்லோருக்கும் தெரிந்தது போல் ஆளும் கட்சி தேர்தல் செலவுகளுக்கு அவர் தயவைத் தான் எதிர்பார்க்கும் நிலைமையில் இருக்கிறது. ஆனால் யுவராஜுக்காக அப்சல்கானை அரசாங்கம் விடுவிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்குமா? பலர் பணயக்கைதிகளாக இருந்தால் அரசாங்கம் அப்சல்கானை விடுவிக்க எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால் ராஜேஷ்வரின் மருமகனுக்காக அப்சல்கானை விடுவிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது.”

 

அதை ஆமோதித்து மற்ற இருவர் தலையசைத்தார்கள். முகமதலியும் சொன்னான். “ஆமாம். ஆளுங்கட்சிக்கு தேர்தல் நிதியாகத் தருவதில் பத்து சதவீதம் தான் எதிர்க்கட்சிகளுக்கு ராஜேஷ்வர் தருகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கிடைத்த பத்து சதவீதத்திற்காக எதிர்க்கட்சிகள் நன்றியோடு இருக்கப் போவதில்லை. கிடைக்காத தொன்னூறு சதவீதத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் முனைப்பில் தான் இருப்பார்கள்.”

 

அகமது அன்சாரி சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படியானால் அரசாங்கத்தோடு இந்த பேச்சுவார்த்தையை நாம் ரகசியமாகவே நடத்துவோம். யுவராஜைக் கடத்தியது நாம் தான் என்று நாம் பகிரங்கப்படுத்த வேண்டியது இல்லை.  அப்சல்கானை நம்மிடம் ஒப்படைப்பதையும் இந்திய அரசாங்கம் வெளிப்படையாகச் செய்ய வேண்டியதில்லை. ரகசியமாகவே இந்தப் பரிவர்த்தனையை முடித்துக் கொள்வோம்.”

 

எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கும் என்ற கருத்தைச் சொன்னவர் சொன்னார். “அப்சல்கான் திகார் சிறையில் இல்லாமல் போனதற்கு இந்திய அரசாங்கம் என்ன பதிலை எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் சொல்லும்.”

 

அகமது அன்சாரி சொன்னார். “அது நம் தலைவலி அல்ல. இந்திய அரசாங்கம் யோசித்து ஒரு வழி கண்டுபிடிக்கட்டும். கதைகள் சொல்வதற்கும், காரணங்கள் கண்டுபிடிப்பதற்கும் அரசியல்வாதிகளுக்குச் சொல்லித்தரவா வேண்டும்?”  

 

அவர் சொன்னது அவர்களுக்கும் சரியென்றே பட்டிருக்க வேண்டும். அடுத்த கேள்வியோ, சந்தேகமோ யாரிடமிருந்தும் எழவில்லை.

திருப்தி அடைந்த அகமது அன்சாரி முகமதலியிடம் சொன்னார். “இனி எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது. அப்சல்கானின் உயிர், விடுதலை மட்டுமல்ல, நம் இயக்கத்தின் எதிர்காலமும், கௌரவமும் கூட உன் கையில் தான் இருக்கிறது முகம்மதலி. இதற்கு முன்பும் இந்தியாவில் எத்தனையோ திட்டங்களை நீ சிறப்பாகச் செயல்படுத்தியவன். ஆனால் அப்போதெல்லாம் உன்னுடன் சேர்ந்து இயங்க அப்சல்கான் கூட இருந்தான். iப்போதும் உனக்கு உதவ நம் ஆட்கள் அங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்றாலும் , திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும் சுதந்திரமும், பொறுப்பும் உனக்குத் தான் இருக்கிறது. உன் திறமையைத் தனியாக நிரூபிக்க உனக்கு அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதை நீ  பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற நான் உன்னை வாழ்த்துகிறேன்.”

 

முகமதலி நெஞ்சில் கை வைத்தி தலை தாழ்த்தி வணங்கி அங்கிருந்து வெளியேறினான். ஜீப்பில் சிறிது தூரம் பயணித்தும், பாகிஸ்தான் பஸ்ஸில் சிறிது தூரம் பயணித்தும் தான் அவன் விமான நிலையத்தை அடைய வேண்டியிருந்தது. விமான நிலையம் சென்று சேர்ந்ததும் யுவராஜ்  குறித்த தகவல்களை அவன் இணையத்தில் தேட ஆரம்பித்தான். மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்த போது யுவராஜ் பற்றி நிறைய பொதுவான தகவல்கள் அவனுக்குக் கிடைத்திருந்தன.  மும்பை வந்து சேர்ந்தவுடன் அவன் பத்திரிக்கைத் துறையில் அவர்கள் இயக்க நண்பரையும், போலீஸ் துறையில் இருக்கும் ஒரு நண்பரையும் அவன் தொடர்பு கொண்டான். அவனுக்குத் தேவையான மிக முக்கியமான தகவல்கள் அவர்கள் மூலம் அவனுக்குக் கிடைத்தன.

 

ஆபரேஷன் யுவராஜ்திட்டம் அவன் மூளையில் உருவாக ஆரம்பித்தது.

 (தொடரும்)

என்.கணேசன்



Thursday, August 27, 2026

சதுரங்கம் 33


 

ர்ஜுன் தன்னை சித்தப்பா இவ்வளவு சீக்கிரம் பேச அழைப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பத்திரிக்கைத் துறையில் அவன் இருப்பதால் அவர் எவ்வளவுபிசியானவர் என்பதை அறிவான். பல அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், மற்ற பிரபலங்களும் அவரைச் சந்தித்துப் பேச மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறான். அதனால் தனக்கு இந்த அளவு சித்தப்பா முக்கியத்துவம் தந்து பேச அழைத்திருப்பது அவர் அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அவனுக்குத் தோன்றியது. அவன் இதுவரை அவரை வீட்டில் மட்டுமே சந்தித்துப் பேசி இருக்கிறான். ஆனால் அவர் இம்முறை மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள அவருடைய பங்களாவிற்கு அழைத்திருக்கிறார். பல முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் அந்தப் பங்களாவில் நடந்திருப்பதை அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். வரலாற்று திருப்புமுனைகளைத் தந்திருக்கும் அந்த இடத்தில் அவனுடன் பேச அவர் அழைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

 

அந்தப் பங்களாவிலும் பலத்த போலீஸ் காவல் இருந்தது. அவன் அவர் சொல்லியிருந்த நேரத்தில் அங்கு சென்று சேர்ந்த போது அவர் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மிகுந்த மரியாதையுடன் அங்கிருந்த அவனை வரவேற்று அமர வைத்த ஒரு போலீஸ் அதிகாரி, அவர் பத்து நிமிடங்களில் வந்து விடுவாரென்றும், அது வரை காத்திருக்கும்படியும் சொல்லி விட்டுப் போனார். அவன் அங்கு செல்வது முதல் முறை என்பதால், அவன் சும்மா அமர்ந்திருக்காமல், அந்தப் பங்களாவைச் சுற்றிப் பார்த்தான். பரப்பளவில் சிறியதாக இருந்தாலும், வீடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலைப் போல் மிக அழகாகவும் ஆடம்பரமாகவும்  இருந்தது. பகட்டான மின் விளக்குகளும், சோபாக்களும், அலங்காரப் பொருள்களும் கண்களைக் கவர்ந்தனஹாலில் இருந்த பெரிய திரையை விலக்கிய போது கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி சற்று தொலைவில் கடல் தெரிந்தது. நித்யாவை ஒரு முறை இங்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. சலிக்காமல் கடலைப் பார்த்து ரசிக்கும் ரசிகை அவள்….   

 

சித்தப்பாவின் குரல் கேட்டது. “எப்படிடா இருக்கு வீடு?”

 

அர்ஜுன் திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான். “சூப்பர் சித்தப்பா. ரொம்ப அழகாயிருக்கு.”

 

ராஜாராம் புன்னகைத்தார். அவனுடைய பாராட்டு அவருக்குத் திருப்தியைத் தந்தது. “வாடா. உட்கார். எதாவது சாப்பிடறயாடா. ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. எதாவது வரவழைக்கட்டா?”

 

வேண்டாம் சித்தப்பா.” என்றபடி அவன் அவர் அருகில் வந்தமர்ந்தான்.

 

அப்பறம் என்னடா? எதாவது விசேஷம் உண்டா?”

 

ஒன்னுமில்லை சித்தப்பா

 

அவன் அத்திவாக்கம் போய் வந்ததைப் பற்றி, தனியாகச் சந்திக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது சொல்வான் அல்லது மகுடபதி பற்றி ஏதாவது கேட்பான் என்று ராஜாராம் எதிர்பார்த்திருந்தார். இருவர் மட்டுமிருப்பதால் அவன் தயக்கமில்லாமல் கேட்கும் சூழ்நிலை தான் இருக்கின்றது. அல்லது அவனுடைய காதல் பற்றியும் திருமணம் பற்றியும் கூட எதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தார். எனவே அவன் ஒன்றுமில்லை என்று சொன்னது அவரை ஏமாற்றமடையச் செய்தது. அழுத்தக்காரன் என்று நினைத்துக் கொண்டாலும் அவர் முகத்திலிருந்த புன்னகை குறையவில்லை.

 

அவன் அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தான். எதற்காக என்னை அழைத்தீர்களோ அதைச் சொல்லுங்கள் என்பது போலிருந்தது அவன் பார்வை. இது அவருடைய அண்ணாவின் குணாதிசயம். தேவையில்லாமல் சுற்றி வளைத்துப் பேசுவதை விரும்பாதவர் அவர். அவருடைய சில விசேஷ குணங்கள் அவனுக்கும் அப்படியே வந்திருக்கின்றன.

 

ராஜாராம் மனதில் ஒரு பாரத்தை உணர்ந்தார். பின் மெல்ல பேச ஆரம்பித்தார். “உனக்கு என் மேல கோபம் இருக்குங்கறது எனக்குத் தெரியும் அர்ஜுன். அரசியல்ல நான் என் அண்ணாவை ஆதரிக்காமல், ஆளும் கட்சியை ஆதரிக்கிறது தப்புன்னு நீ நினைக்கிறாய்னும் தெரியும். எதனால நான் அதைச் செய்யறேன்னு உனக்கு நான் சொல்லணும்னா காரணத்தை நான் உன் தாத்தா கிட்ட இருந்து தான் ஆரம்பிக்கணும்….”

 

அவன் ஆர்வத்துடன் கவனமானான். அவர் தொடர்ந்தார். “இந்த உலகத்தில் நான் ரொம்ப நேசிச்ச மனுஷன், அதிகமாய் மதிச்ச மனுஷன் யாருன்னா அது என் அப்பா தான் அர்ஜுன். ஆனால் அவர் பிழைக்கத் தெரியாதவராகவே கடைசி வரைக்கும் இருந்துட்டார். ஆட்சிக்கு வர்றதே சம்பாதிக்கறதுக்காகங்கறது இந்தக் காலத்துல சின்னப் பசங்களுக்குக் கூட புரிஞ்ச உண்மை. ஆனால் உன் தாத்தா ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியும் சம்பாதிக்கலை. ஆட்சிக்கு வந்த பின்னாடியும் சம்பாதிக்கலை. ஆனாலும் கூட, எந்த மக்களுக்காக அவர் எல்லாத் தியாகங்களையும் செஞ்சு வாழ்ந்தாரோ, அந்த மக்களுக்கு அவர் வாழ்ந்த வரைக்கும் அவரோட அருமை முழுசா தெரியலை. அவருக்கு சாகற காலத்தில் தான் முதல்வராகவே முடிஞ்சுது. மூன்றரை வருஷங்கள் தான் ஆட்சி செஞ்சார்.”

 

அர்ஜுன் சொன்னான். “ஆனாலும் தாத்தா மக்கள் மனசுல நீங்காத இடத்தைப் பிடிச்சிருக்கார் இல்லையா சித்தப்பா. இன்னைக்கும் மக்கள் அவரைப் புகழ்றாங்க.”

 

இப்ப அவரை ஆஹா ஓஹோன்னு புகழ்கிற மக்கள் அவரைப் புகழ்ந்த வாயாலேயே அவருக்கு கொஞ்சமும் இணையில்லாத தலைவர்களையும் புகழறாங்க. அதையும் நீ பார்க்கணும் அர்ஜுன். அந்தத் தலைவர்கள் அவரை மாதிரியே செத்துப் போனவர்கள்ங்கறதைத் தவிர வேறெந்த விதத்திலும் சரிசமமானவங்க அல்ல. தரம் தாழ்ந்தவங்களுக்கு இணையாய் உயரத்தில் இருக்கிறவங்களையும் புகழறது, தாழ்த்தறதுக்கு சமமல்லவா?”

 

அவர் சொன்ன இதே விஷயத்தை அர்ஜுனும் பல முறை நினைத்திருக்கிறான். இப்போது ஆளும்கட்சி சுவரொட்டிகளிலும், அறிவிப்புகளிலும், வாசுதேவனும், தணிகாச்சலமும் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் தலைவர் சரவணன் என்ற வாசகம் அடிக்கடி வருகின்றது. வாசுதேவன் கண்ட கனவு தமிழக மக்களின் முன்னேற்றமும் சுபிட்சமுமாக இருந்தது, ஆனால் தணிகாச்சலத்தோட கனவோ கூடுமான அளவு சம்பாதிப்பதாகத் தான் இருந்தது. இருவரின்  கனவும் ஒன்றே என்று சொல்வதே வாசுதேவனைக் கீழே இறக்குவது போலத் தான். ஆனால் அந்த ஆளுங்கட்சிக்குத் தான் இப்போது ராஜாராம் ஆதரவு தந்து வருகிறார். அவர் ஆதரவு தருவது ஒருவகையில் ஆளுங்கட்சி விளம்பரத்தை அங்கீகரிப்பது போலத் தான் என்று எண்ணிய அர்ஜுனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

அதைக் கவனித்த அவருக்கு அவனுடைய புன்னகைக்குப் பின்னாலிருந்த எண்ண ஓட்டமும் புரியாமலில்லை. அவர் லேசாகச் சிரித்தபடி சொன்னார். “என் நிலைப்பாட்டை நான் கடைசில சொல்றேன். முழுசாய் கேட்டு முடியற வரைக்கும் தீர்ப்பு எழுதாதே.”

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. அவனுடைய எண்ணத்தை எவ்வளவு சீக்கிரம் அவர் படித்து விட்டார்

 

ராஜாராம் தொடர்ந்தார். “எங்கப்பா செஞ்ச முட்டாள்தனத்தை இப்ப எங்கண்ணா ஆரம்பிச்சிருக்கான். எங்கப்பாவாவது கடைசி காலத்துல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானார். அவரோட கடைசி காலத்திலாவது அதற்கு சாதகமான சூழல் வந்துச்சு. ஆனால் எங்கண்ணன் அதிகபட்சமா எப்பவாவது ஒரு எம்.எல்.ஏ ஆகலாம். அதுக்கும் மேல முன்னேறப் போறதில்லை அர்ஜுன். ஏன்னா இப்போதைய அரசியல் சூழலும் சரியில்லை, மக்களும் முட்டாள்கள்.”

 

கிட்டத்தட்ட அர்ஜுனின் அபிப்பிராயமும் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் அதை சித்தப்பா வாயால் கேட்கும் போது அவனுக்கு வலித்தது. அதை உணர்ந்த அவர் அவனிடம் மென்மையாகச் சொன்னார். “கண்டிப்பாய் வெற்றியடையப் போறதில்லைன்னும், இந்த அரசியல் களத்துல கஷ்டப்படத் தான் போறான்னும் எனக்கு உறுதியாய் தெரிஞ்ச பிறகு நான் ஏன் அண்ணாவை ஆதரிக்கணும் அர்ஜுன்? மக்கள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க. தந்திரமான பேச்சால் அவங்களை யாரும் எப்பவும் சுலபமாய் ஏமாற்றவோ, திசை திருப்பவோ முடியும். நல்லதையும், கெட்டதையும் சீக்கிரமே மறந்துடற வியாதியும் அவங்களுக்கு இருக்கு. இந்த மாதிரி மக்களுக்காக, என் அண்ணன் தன் வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டு அழியறதை என்னால பார்க்க முடியலை அர்ஜுன். அதனால தான் நான் அரசியல்ல எங்கண்ணாவை ஆதரிக்கலை.”


(தொடரும்)

என்.கணேசன்