என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 17, 2026

ரட்சகன் 5

 


காலம் பொன் போன்றது என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ராஜேஷ்வருக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும். சில நிமிடங்களில் அவர் பல நூறு கோடி ரூபாய்களைச் சம்பாதித்ததும் உண்டு. சில நிமிடங்களில் அவர் பல நூறு கோடி ரூபாய்களை இழந்ததும் உண்டு. அவருடைய முடிவுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் பல்லாயிரம் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்க வல்லவை. அவர் முடிவெடுக்கும் ஒவ்வொரு வினாடியும் ஏராளமானவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் விதமாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கும். அதனாலேயே அவருக்கு வழக்கமான வியாபார சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்றவற்றைக் கவனிக்கவும் நேரம் இருப்பதில்லை.

 

அப்படிப்பட்டவர் உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் மகள் தந்திருந்த பேட்டிக் கட்டுரையை முழுவதுமாகப் படிக்க அன்று நேரத்தை ஒதுக்கினார். சில வரிகளை இரண்டு முறை படித்தார். சில வரிகளைப் படித்து விட்டு புன்முறுவல் பூத்தார். சில வரிகளைப் படித்து விட்டு கண்கலங்கினார். சில வரிகளைப் படித்து விட்டு அவர் கண்களை மூடி யோசித்தார். அந்தப் பத்திரிக்கையை மூடி வைக்கையில் அவர் மனம் லேசாக இருந்தது.

 

அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். “செல்வம் மனிதனை மாற்றக்கூடியது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பெருஞ்செல்வம் பெரிய அளவிலேயே மனிதனை மாற்றக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால் பெருஞ்செல்வமும் மாற்றி விடாத ஒரு தூய்மையான ஸ்படிகமாக இந்தப் பெண் இருக்கிறாள் என்பதை நான் வியப்போடு பார்க்கிறேன்.”

 

பெருஞ்செல்வம் அவளை மாற்றி விடவில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் பெருஞ்செல்வத்தை உதறித் தள்ளி விட்டு செல்லுமளவு அவளிடம் அது ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தாமல் இருந்திருக்கிறது...  

 

சிறுவயதிலிருந்தே அவருடைய மகள் நிர்ப்பயா மிக வித்தியாசமானவளாக இருந்தாள். ஆடம்பரமான எதிலுமே நாட்டமில்லாதவளாக அவள் இருந்தாள். கல்வியில் அவள் சிறந்து விளங்கினாள். எல்லா வகுப்புகளிலும் மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களைத் தாண்டி அவள் எப்போதும் கீழிறங்கியதில்லை. கலந்து கொள்ளும் கல்வி சம்பந்தமான போட்டிகளில் அவள் பரிசு பெறாமல் இருந்ததில்லை. அறிவுத் திறமையில் பெற்றோரைப் பெருமைப்படுத்திய அவள் மற்ற விஷயங்களில் புதிராகவும், வித்தியாசமானவளாகவும் இருந்தாள்.

 

முதல் குழந்தையான அவள் எதைக் கேட்டாலும் கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கித்தர முடிந்த அவரிடம் அவளாகக் கேட்டது புத்தகங்கள் மட்டுமே. விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததேயில்லை. பழகுகின்ற ஆட்களிடமும் அவள் குணாதிசயங்களில் உயர்தரத்தை எதிர்பார்த்தாளே ஒழிய அவர்களுடைய செல்வநிலை அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை.

 

அரண்மனை போன்ற அவருடைய வீட்டில் அடிக்கடி விருந்துகள் நடக்கும். சினிமா நடிகர் நடிகைகள், அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பெரும்பணக்காரர்கள், மற்ற பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொள்வார்கள். அந்த விருந்துகளில் கலந்து கொள்வதை மிகப் பெரிய கவுரமாக அவர்கள் மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்த விருந்துகளில் பெரும்பாலும் அவருடைய மகள் தென்பட மாட்டாள். அவளுடைய அறையில் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். அவருடைய மனைவி நிர்மலாவுக்கு மகள் இப்படிச் செய்வது கடுங்கோபமாகவும், அவமானமாகவும் இருக்கும். மகளை அவள் கடுமையாகத் திட்டுவதும் உண்டு.

 

ஏன் நீ வரலை

 

வந்தால் போரடிக்குதும்மா

 

என்னடி போர். எல்லாரும் எப்படி சந்தோஷமாய் அனுபவிச்சாங்க தெரியுமா? உனக்கு சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரியல.”

 

உனக்கு சந்தோஷம்னா என்னன்னு தெரியுமாம்மா?”

 

என்னடி கேள்வி இது?”

 

நிர்ப்பயா தாயை இரக்கத்துடன் பார்த்து விட்டு பழையபடி தன் புத்தகத்தில் ஆழ்ந்து விடுவாள்.

 

ராஜேஷ்வரும் அவள் வராததற்கு ஒரு முறை காரணம் கேட்டதுண்டு.  நிர்ப்பயா அன்று சொன்னாள். “யாரும் உங்க மேலயோ அம்மா மேலயோ இருக்கிற அன்பால வரலை. எல்லாரும் உங்க பணத்துக்காக வர்றாங்க. நம்ம வீட்டோட, விருந்தோட பிரம்மாண்டத்தை அனுபவிச்சுட்டுப் போக வர்றாங்க. ஆத்மார்த்தமாய் யாரும் பேசறதுமில்லை. பழகறதுமில்லை. எல்லாரும் போலித்தனமாய் இருக்காங்கப்பா. என்னால அந்த போலித்தனத்தை ரசிக்க முடியல.”

 

என்றோ இந்த போலித்தனத்தை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்ட ராஜேஷ்வரை நிர்ப்பயா ஆச்சரியப்படுத்தினாள். இது தான் உலகம், இது தான் உலக இயல்பு என்று அவள் எப்போது உணர்ந்து கொள்வாள் என்று அவருக்கு விளங்கவில்லை. அவளுடைய மதிப்பீடுகளும், விருப்பங்களும் பணம் சாராதவையாக இருந்தன. அவரிடம் குவிந்திருக்கும் பணம் அவளுக்குப் பெரிய விஷயமாக இருப்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. அது ஏன் என்று அவர் அவளிடம் ஒரு முறை நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

 

அவள் சொன்னாள். “உங்க பணத்தையும், நீங்க இருக்கிற உயரத்தையும் நான் மதிக்கிறேன்ப்பா. உங்களால தான் எத்தனையோ லட்சக்கணக்கானவங்களுக்கு ஒரு வேலையோ, வாழ்வாதாரமோ இருக்கு. அது எனக்குப் பெருமையாய் தான் இருக்கு.”

 

அவளுடைய சிந்தனையோட்டம் அந்த விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் கூட வித்தியாசமாக இருந்தது. மேலும் அவளால் பெரும்பாலானவர்களைப் போல முட்டாள்த்தனமான பேச்சுகளையும் கிசுகிசுக்களையும் வம்பு தும்புகளையும் ரசிக்க முடிந்ததில்லை. அவற்றில் கலந்து கொள்ளாமல் மௌனமாக ஒதுங்கி விடுவாள்.

 

அவளுடைய தம்பி நிரஞ்சன் அவளுக்கு எதிர்மாறாக இருந்தான். அவன் ஜாலியாகவும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிப்பவனாகவும் இருந்தான். தந்தையின் பணத்தையும், குடும்ப விருந்துகளையும் ரசித்து அனுபவிப்பவனாகவும், அதே நேரத்தில், வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வியாபாரத்தையும் சிறப்பாகச் செய்பவனாக இருந்தான். இளமைக்கே உரிய சில அவசரங்கள் அவனிடம் இருப்பதைத் தவிர ராஜேஷ்வர் மற்றபடி அவனிடம் தவறு காணவில்லை. மகன் விஷயத்தில் பெற்றோர் இருவரும் திருப்தியாகவே இருந்தனர்.

 

மகள் கல்லூரியில் சேர்ந்தவுடனேயே அவளுக்குத் தகுந்த வரனைப் பார்ப்பதில் நிர்மலா மும்முரமாக இறங்கினாள். மகளது படிப்பு முடிந்தவுடன்  தான் திருமணம் என்றாலும் தகுந்த வரனை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வது முக்கியம் என்று அவள் நினைத்தாள். நிர்ப்பயாவைத் திருமணம் செய்து கொள்ள தகுந்த வரன்களிடையே கடுமையான போட்டி நிலவியது.

 

ராஜேஷ்வரும், குடும்பத்தினரும் சிறிதும் எதிர்பாராத விதமாக நிர்ப்பயா தன்னுடன் கல்லூரியில் படிக்கும் யுவராஜ் என்ற ஒரு இளைஞனைக் காதலிப்பதாகச் சொன்னாள். அவன் ஐபிஎஸ் தேர்வுக்கு முயற்சிக்கிறான் என்றும் அதை அவன் முடித்தவுடன் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் உறுதியாகவும் இருந்தாள். நடுத்தர வர்க்கத்திலும் கீழ்மட்டத்தில் இருக்கும் அந்த இளைஞனை அவள் திருமணம் செய்து கொள்வதை ராஜேஷ்வர், நிர்மலா, நிரஞ்சன் மூவருமே விரும்பவில்லை. அவர்களைப் போலவே அவனுக்கும் தாய்மொழி தமிழ் தான் என்பதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமும் இல்லாததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நிர்ப்பயாவின் பணத்திற்காகத் தான் யுவராஜ் அவளைக் காதலிக்கிறான் என்று சொன்னார்கள். அவர்கள் எதிர்ப்பு அவளை அசைக்கவில்லை. யுவராஜ் ஐபிஎஸ் ஆனதும் அவள் அவனை மணந்து கொள்ளத் தயாரானாள்.

 

நிரஞ்சன் தந்தையிடம், அவர்கள் இருவர் மட்டுமே இருக்கையில் சொன்னான். “அந்தப் பையன் கிட்ட பேசிப் பாருங்கப்பா. இல்லாட்டி முடிச்சுடுவோம்.” அதையே நிர்மலாவும் பிறகு சொன்னாள். நிர்ப்பயாவை மாற்ற முடியாது என்பது உறுதியாகத் தெரிந்ததால் அந்த இளைஞனை விலக வைப்பது தான் ஒரே வழி என்று ராஜேஷ்வரும் நினைத்தார்.

 

ஒரு நாள் ராஜேஷ்வர் யுவராஜை தனியாக வரவழைத்தார். நிர்ப்பயாவுக்குப் பதிலாக அவனுக்கு எத்தனை பணம் வேண்டும் என்று அவனிடம் வெளிப்படையாகவே கேட்டார்.

 

யுவராஜ் சொன்னான். “உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.”

 

அவன் அமைதியாகத் தான் அதைச் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவரை அறைந்தன. ஆனாலும் நிர்ப்பயாவின் தந்தையாக அவரில் ஒரு பகுதி அந்தப் பதிலை மெச்சவும் செய்தது. அவன் மீது ஒரு தனி மதிப்பும் அவருக்கு ஏற்பட்டது. நிர்ப்பயாவை அவன் ஆத்மார்த்தமாய் தான் காதலிப்பதாகவும், அவருடைய பணத்தில் ஒற்றை ரூபாய் கூட அவனுக்கு வேண்டாம் என்றும் சொன்னான்.

 

நடுத்தர வர்க்கத்திலிருந்து தொழிலை ஆரம்பித்து இந்த அளவு உயர்ந்தவர் தான் அவரும். அவர் இத்தனை கால அனுபவத்தில் பல்லாயிரம் விதமான ஏமாற்றுக்காரர்களைப் பார்த்திருக்கிறார். ”பணம் ஒரு பொருட்டே அல்லஎன்று சொல்பவர்களில் 99.99 சதவீதம் பேர் பொய்யர்களே. மீதி இருக்கும் 0.01 பேரில் நிர்ப்பயா ஒருத்தியைத் தவிர அவர் வேறு யாரையும் பார்த்தது இல்லை. இனி பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதனால் அந்த 0.01 சதவீதத்தில் அவனைச் சேர்க்க அவர் தயங்கினார். சமயம் வரும் போது அவன் வேறு முகம் காட்டுவான் என்று அவர் நம்பினார்.


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, August 13, 2026

சதுரங்கம் 31

 




ர்ஜுனுக்கு அப்பா அம்மாவின் திருமணப் புகைப்படங்கள் ஏன் பத்திரிக்கைகளில் வரவில்லை என்பதற்கும், ஏன் அம்மாவின் திருமணம் பற்றி அம்மாவின் கிராமத்தவர்கள் கூட அறியவில்லை என்பதற்கும் ஒருவழியாக விடை கிடைத்தது. தாத்தா மூத்த மகனின் திருமணத்தை இந்த அளவு எளிமையாய் நடத்தினதற்கு, அரைமனதாகத் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டி வந்ததும் காரணமாக இருந்திருக்குமோ? கோயிலிலேயே எளிமையாய்த் திருமணம் நடத்தியிருக்கட்டும், அவரைப் போன்ற ஒரு பிரபல பிரமுகர் குறைந்த பட்சமாக நெருங்கிய ஐம்பது பேரையாவது கூப்பிட்டிருக்க வேண்டாமோ?

 

அடுத்ததாக இன்னொரு சந்தர்ப்பத்தில் ஞானமூர்த்தி - பானுமதி திருமணத்தைப் பற்றிப் பேசியவர் முன்னாள் முதல்வரும், இன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரத்தினம். தணிகாச்சலம் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அவருடைய ஒரே மகனும், இப்போதைய முதலமைச்சருமான சரவணனுடைய திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தினார். அந்த ஆடம்பரத்தைக் கண்டிக்கும் வகையில் ரத்தினம் பேசியிருந்தார்.

 

மூச்சுக்கு ஒரு முறை தலைவர் பெயரைச் சொல்லும் தணிகாச்சலம், தலைவரின் எந்த  நல்ல உதாரணத்தையும் பின்பற்றுபவர் அல்ல என்பதற்கு இந்தத் திருமணமே சான்று. தலைவர் தன் மூத்த மகனின் திருமணத்தை குமரக்கோட்டம் கோவிலில் எத்தனை எளிமையாக நடத்தினார். வீட்டார் மட்டுமே பங்கு கொண்ட நிகழ்ச்சியாக அது இருந்தது. ஆனால் தணிகாச்சலமோ அம்பானி குடும்பத்திற்குப் போட்டி போட்டு தன் இல்லத் திருமணத்தை நடத்துகிறார். தலைவர் தம் மகனுக்கு ஒரு ஏழை கிராமத்துப் பொண்ணைத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் தணிகாச்சலமோ பெரிய செல்வந்தரின் மகளை மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்.”   

 

அவர் ஒருவர் தான் பானுமதி ஒரு ஏழை கிராமத்துப் பெண் என்ற ஒரு அடையாளத்தையாவது சொன்னார். ஆனால் வேறு யாருமே தலைவரின் மகன் திருமணம் செய்து கொண்ட பெண்ணைப் பற்றிச் சொல்லாததும், பேசாததும், எழுதாததும் தான் அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. திருமணமான சூட்டோடு அந்தச் செய்தி வெளியிடப்பட்டு இருந்தால் ஞானமூர்த்தியின் மனைவியைப் பற்றிய செய்திகளும் வெளியாகியிருக்குமோ என்னவோ? காலம் கழிந்த பின், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அந்த ஏழைப் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது என்று விட்டு விட்டார்களோ?

 

சித்தப்பாவின் திருமணப் புகைப்படங்களில் ஒன்றில் அப்பா அம்மா சித்தப்பா சித்தி பாட்டி என ஐந்து பேருமே இருந்தார்கள். அந்தப் புகைப்படத்தை அர்ஜுன் ஆராய்ந்தான். அம்மா வெறுமையுடன் வெறித்துப் பார்ப்பதும், பாட்டி சிறிது சோகத்தோடு இருப்பதும் தெரிந்தது. அப்பா எப்போதும் போல் தான் தெரிந்தார். சித்தப்பா, சித்தி முகங்களில் மகிழ்ச்சி தெரிந்தது.  அம்மா வெறுமையுடன் வெறித்துப் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் பாட்டி ஏன் சோகமாய் இருக்கிறாள். தாத்தா இல்லாமல் போனதை நினைத்து வருத்தமா, இல்லை அந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இருக்கவில்லையா?  இந்தக் குடும்ப விஷயங்கள் குழப்புகின்றனவே!

 

நித்யா வந்தவுடன் அவளிடம் சில வேலைகளை பானுமதி சொன்னாள். வழக்கமாக முகத்தில் சலிப்பையும், உதடுகளில் முணுமுணுப்பையும் காண்பிக்கும் நித்யா இன்று சரியென்று தலையசைத்ததோடு தாயை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ஒரு கணம் பானுமதிக்கு மனம் நிறைந்து போனது. “என்னடி பாசம் ரொம்பவும் பொங்கி வழியிதுஎன்று சொல்லி மகளைப் பார்த்தாள்.

 

நித்யா அவள் சொன்ன வேலைகளைச் செய்ய ஆரம்பித்தபடியே சொன்னாள். “எனக்கெல்லாம் எப்பவும் பாசம் பொங்கி வழிஞ்சுட்டு தான் இருக்கு. உனக்குத் தான் என் மேல அது இல்லை.”

 

உனக்கென்னடி நான் குறை வெச்சேன்.”

 

எப்ப பாரு வேலை குடுத்துகிட்டே இருக்கே. என் ஃப்ரண்ட் ஸ்னேஹாவோட அம்மா எல்லாம் அவ கிட்ட ஒரு வேலையும் சொல்றதில்லையாம்.”

 

அதெல்லாம் பொண்ணை உதவாக்கரையாக்கற வழி. நாளைக்கு கல்யாணம் ஆனா அவ என்னடி செய்வா? புருஷனுக்கு ஆக்கிப் போட வேண்டாமாடி?”

 

ஏன் அவளே ஆக்கிப் போடணும்?”

 

இதென்னடி கேள்வி? வேற யார் ஆக்கிப் போடணும்?”

 

அவனும் சமைக்க கத்துக்கணும். இப்ப எல்லாம் ரெண்டு பேரும் தானே வேலைக்குப் போறாங்க. அப்பறம் என்ன? ஒரு நாள் அவள் சமைச்சா இன்னொரு நாள் அவன் சமைக்கணும். இல்லைன்னா பாதி வேலையை அவள் செஞ்சா மீதியை அவன் செய்யணும். உன்னை மாதிரி ஆளால தான் ஆணாதிக்கமே இங்கே அதிகமாகுது. நீ ஏன் உன் மகனை இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கூப்பிடறதில்லை. அவனுக்கு ஒன்னும் சொல்லித் தராமல் வளர்த்திருக்கேன்னு நாளைக்கு உன் மருமகள் வந்து உன்னைத் திட்டப் போறா பாரு.”

 

பானுமதி புன்னகையுடன் சொன்னாள். “நாளைக்கு உன் புருஷனும் வந்து என்னைத் திட்டத்தான் போறான். “எப்படி பொண்ணை வளர்த்திருக்கீங்கன்னு.”

 

அப்படி மட்டும் அவன் திட்டட்டும். அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன் பாரு

 

பானுமதி வாய்விட்டுச் சிரித்தாள். அம்மா வாய்விட்டு சிரித்ததை நித்யா ஈரக்கண்களுடன் பார்த்தாள். அதை பானுமதி கவனிக்கவில்லை.  அவள் மனம் மகள் திருமணமாகிப் போனால் இந்த வீடு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தது. ஆனால் மகள் இல்லாமல் இந்த வீட்டை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அன்பும், பாசமும், வாய்த்துடுக்கும், கலகலப்பும் கொண்ட நித்யாவால் தான் இந்த வீடு நிறைவாக இருக்கிறது. மகள் திருமணமாகிப் போனாலும் ஞானமூர்த்தி பெரிதாகப் பாதிக்கப்பட்டு விடமாட்டார். ஆனால் அர்ஜுன் தாங்க மாட்டான். அவன் அவள் மீது உயிரையே வைத்திருக்கிறான்.

 

சில சமயங்களில் அண்ணன் தங்கையின் நெருக்கம் பானுமதியைப் பயப்படுத்துவதுண்டு. வயதுக்கு வந்த ஒரு பெண், அண்ணனே ஆனாலும் மிக நெருங்கிப் பழகுவது சரியல்ல என்று அவள் நினைக்கிறாள். ஆனால் அதை அவள் வாய் விட்டுச் சொல்ல வழியில்லை. சொன்னால் நித்யா பத்ரகாளியாகி விடுவாள். அவளிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது. அதனால் தான் அண்ணன் தங்கை பேச்சு அதிகமாவது போல் தெரிந்தால் அவள் நித்யாவை அழைத்து ஏதாவது ஒரு வேலை தருகிறாள். அவள் குழந்தைகள் மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் ஒரு எல்லைக்குள் இருப்பதே அனைவருக்கும் நல்லது...

 

அர்ஜுன் இன்று அதிகாலை போனவன்  ஒரு மணி நேரத்திற்கு முன் தான் வந்தான். வந்தவுடன் அண்ணனும் தங்கையும் ஏதோ ரகசியம் பேசுவது தெரிந்தது. என்ன பேசுவார்களோ?

 

சோதாவின் அலைபேசி இசைத்தது. அதிகமாக அவளை அழைத்துப் பேசுபவர்கள் இரண்டே பேர் தான். ஒருவர் அவளுடைய தம்பி கேசவன். இன்னொருத்தி அவளுடைய அண்ணன் மகள். இப்போது அழைப்பது யார் என்று பார்த்தாள். கேசவன்.

 

ஹலோ

 

அக்கா, கேசவன் பேசறேன். எப்படி இருக்கே?”

 

”82 வயசுல எப்படிடா இருப்பேன்? உடம்புல தெம்பு இல்ல. மனசுலயும் பலம் இல்லை. எப்படியோ காலத்தை ஓட்டறேன்... நீ எப்படிடா இருக்கே?”

 

நீயாவது தேவலை. எனக்கு 74 லுலேயே ஏகப்பட்ட சிக்கல். நேத்து நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். அங்கே நம்ம கிராமத்து மாடசாமியப் பாத்தேன்... அவர் உன்னையெல்லாம் விசாரிச்சார்.... அப்ப அவர் ஒன்னு சொன்னார்.... ஆச்சரியமாயிருந்துச்சு. முந்தாநாள் யாரோ இன்சூரன்ஸ் ஏஜெண்டுன்னு சொல்லிகிட்டு கிராமத்துக்கு வந்தானாம். நம்ம கிராமத்து மகுடபதி எதோ இன்சூரன்ஸ் செஞ்சு வெச்சிருக்கார். அவருக்கு வர வேண்டிய பணம் இருக்குன்னு சொன்னானாம்....”

 

மகுடபதி இன்சூரன்ஸ்ங்கற வார்த்தையைக் கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டானேடா..”

 

அதனால தான் எனக்கு ஆச்சரியமாய் இருந்துச்சு. மகுடபதி பொண்ணைப் பத்தியெல்லாம் விசாரிச்சானாம். மாடசாமிக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்கலை. அதனால தெரியாதுன்னுட்டாராம். “உங்களுக்கெதாவது தெரியுமா?”ன்னு என் கிட்ட கேட்டார். நான் தெரியாதுன்னு சொல்லிட்டு அந்த இன்சூரன்ஸ் ஆள் பார்க்க எப்படி இருந்தான்னு கேட்டேன். அவர் சொன்ன அடையாளத்தை எல்லாம் பார்த்தா, வந்தவன் உன் பேரன் மாதிரி தான் தெரியுது. அதை உன் காதுலயும் போட்டு வைக்கலாம்னு தான் போன் செஞ்சேன்...”

 

யசோதாவின் முகம் இருண்டது.


(தொடரும்)

என்.கணேசன்

 




Monday, August 10, 2026

ரட்சகன் 4

 


ப்சல்கான் அனுப்பிய தகவல் மூன்று நாட்கள் கழித்து, நான்கு ஆட்களைக் கடந்து, அவன் சார்ந்த இயக்கத் தலைவர் அகமது அன்சாரியை வந்தடைந்தது.  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் எல்லைப்பகுதியில் ஒரு மறைவிடத்தில் வசித்து வரும் அவர் முதலில் அந்தக் கடிதத்தைப் படித்தார். அந்தக் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அப்சல்கானினுடையது அல்ல என்பதை அவர் நன்றாக அறிவார். ஆனாலும் அந்தத் தகவல் அனுப்பியவன் அப்சல்கான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. இப்படி குறிப்பாகவும், சுருக்கமாகவும், ஒற்றை வரியில் ஆலோசனை சொல்வதில் அவனுடைய முத்திரை பலமாக இருக்கிறது.

 

அவருக்கும் தங்கள் இயக்கத்திற்குச் சம்பந்தமல்லாத எதைப் படிப்பதிலும் ஆர்வம் கிடையாது என்பதால் முழுவதுமாக அந்த வாரப் பத்திரிக்கையில் பதினாறாம் பக்கக் கட்டுரையை படிக்க அவர் முனையவில்லை. அந்தக் கட்டுரையை அவர் மேலோட்டமாகப் படித்தார். அதிலேயே அப்சல்கான் எதைச் சுட்டிக்காட்டுகிறான் என்பது அவருக்குப் புரிந்து விட்டது. படித்து முடித்த பின் அவர் நீண்ட நேரம் ஆலோசித்தார்..

 

காலம் நிறையவே மாறிவிட்டது.  ஒரு காலத்தில் அவர்களைப் பார்த்து அச்சப்பட்டவர்கள் இப்போது அந்த அச்சத்திலிருந்து விலகி விட்டார்கள். உலக நாடுகள் கிட்டத்தட்ட அனைத்துமே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டன. அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் உலகநாடுகள் கரங்களைக் கோர்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஒரு காலத்தில் மென்மையான அணுகுமுறையைக் காட்டிய இந்தியா இன்று துணிந்து அடக்குமுறையைக் காட்டுகிறது.  ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் கூட அவர்களுடைய இயக்கத்தினர் இப்போது பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை.

 

இதை மாற்ற அவர்கள் ஏதாவது செய்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய இயக்கத்தின் உபதலைவன் இந்தியச் சிறை ஒன்றில் அடைபட்டுக் கிடப்பது இயக்கத்துக்கு அவமானம் தான். அவனைத் தூக்கிலிட்டால் அது நிரந்தர அவமானமாக இருந்து விடும். ஏதாவது செய்து அவனைக் காப்பாற்றினால் தான் அவர்களுக்குப் பணம் தந்து ஆதரிப்பவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள். பணம் தந்து ஆதரிப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கையை இழந்து விட்டால் பின் அவர்கள் பணம் மற்றும் ஆயுத உதவி செய்வதும் படிப்படியாக நின்று விடும். அதனால் உருப்படியாக எதாவது செய்யாமலிருப்பது தற்கொலை செய்வதற்கு இணையானது. கண்டிப்பாக எதாவது செய்து அப்சல்கானை அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அது முடியாது என்பது தான் யதார்த்த நிலைமை.

 

முன்பெல்லாம் விமானம் கடத்துவது போன்ற நடவடிக்கைகள் அவர்களைப் போன்ற இயக்கங்களுக்கு பயணிகளை பணயக்கைதிகளாக்கி அரசாங்கத்திடம் பேரம் பேச உதவியாக இருந்தன. ஆனால் இப்போது விமானப் பயணத்தில் கெடுபிடிகள் அதிகமாகி விட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் தலைவர்கள் போன்ற முக்கியஸ்தர்களைக் கடத்தவும் வாய்ப்பு சுத்தமாக இல்லை. அரசியல் தலைவர்கள் பலமடங்கு பாதுகாப்போடு இருக்கிறார்கள். ராஜேஷ்வர் போன்ற பெரும்பணக்காரர்களின் ஆதரவும் தயவும் ஆளும் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் மிக முக்கியம். அதனால் அவர்களையோ அவர்கள் குடும்பத்தினரையோ கடத்தினால் அதன் மூலமும் அரசாங்கத்தைப் பணிய வைக்க முடியும். ஆனால் அவர்களோ அரசியல்வாதிகளை விட மூன்று மடங்கு பாதுகாப்பை தனியார் பாதுகாவலர் மூலம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து ஒரு விதிவிலக்கு இருக்கிறது என்று தான் அப்சல்கான் சுட்டிக் காட்டி இருக்கிறான்.    

 

அப்சல்கானின் ஆலோசனையை எந்த அளவு செயல்படுத்த முடியும் என்பதையும், அது எந்த அளவு பலன் தரும் என்பதையும் அகமது அன்சாரியால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. நிலைமையைத் தெளிவுபடுத்த முடிந்த ஒருவன் மும்பையில் பிரபல பத்திரிக்கையில் வேலை பார்க்கிறான். அவர்கள் இயக்கத்திற்கு பல முக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் நம்பிக்கைக்குரிய ஆள் அவன்.. அவனுக்கு அங்கேயுள்ள நிலைமை துல்லியமாகத் தெரியும். அவனை வரவழைத்துக் கேட்க அகமது அன்சாரி முடிவு செய்தார். இது போன்ற விஷயங்களை அலைபேசியிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், இரண்டு காரணங்களுக்காக அவர் அதைத் தவிர்த்தார். முதலாவது, இது போன்ற பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படலாம். பேசிய எண்கள் கண்காணிக்கப்படலாம். பேசும் இடங்கள் தெரிய வரலாம். இரண்டாவது, அலைபேசியில் பேசும் போது வார்த்தைகளும், தொனியும் மட்டுமே கேட்கக் கிடைக்கும். நேரில் பேசும் போது கண்கள், முகபாவனை, அசைவுகள் எல்லாம் கூட கூடுதலாகத் தகவல்கள் சொல்லும். ’வீடியோ கால்பயன்படுத்தினால் கூட அது நேரில் பார்த்துப் பேசுவதற்கு இணையாகாது என்பதால் அந்த ஆளை அகமது அன்சாரி அவனை நேரில் வரச் சொன்னார்.

 

அவனும் மறுநாள் நேரில் வந்தான். அப்சல்கானின் கடிதம் மற்றும் உமன்ஸ் வர்ல்டு கட்டுரை பற்றி அவனுக்குத் தெரிவித்த அகமது அன்சாரி அவனிடம் கேட்டார். “அப்சல்கானுடைய ஆலோசனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

 

அவன் வெளிப்படையாகச் சொன்னான். “அவர் துருப்புச்சீட்டாக நிர்ப்பயாவை நினைத்திருந்தால் அவர் சொல்லும் திட்டம் கைகூடப் போவதில்லை. ஏனென்றால் சொத்தையெல்லாம் துறந்து நிர்ப்பயா வந்திருந்தாலும் அவளுக்கு இருக்கும் பாதுகாப்பை ராஜேஷ்வர் திரும்பப் பெற்று விடவில்லை. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அவளை ரகசியமாய் ஒரு தனிப்படை காவல் காத்து வருகிறது. அதை மீறி அவளைக் கடத்துவது முடியாத காரியம். ”

 

இது அப்சல்கானுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுடைய திருமணம் முடிந்து சில காலம் கழித்து தான் அப்சல்கான் சிறை சென்றான். அதனால் அவன் நினைக்கும் அடுத்த துருப்புச் சீட்டாக நிர்ப்பயாவின் இரண்டு வயதுக் குழந்தை இருக்க வாய்ப்புண்டு..

 

அகமது அன்சாரி கேட்டார். “அந்தக் குழந்தை....”

 

அந்தக் குழந்தைக்கும் கூட அவர்களது பாதுகாப்பு இருக்கிறது. அந்தக் குழந்தையை ராஜேஷ்வர் குடும்பத்தினர் இதுவரைக்கும் வந்து பார்த்தது கூடக் கிடையாது. ஆனாலும் அந்தக் குழந்தை கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதை ராஜேஷ்வர் உணர்ந்தே இருக்கிறார். அதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.”

 

அந்தக் குழந்தை பிறந்த பின்னும் ராஜேஷ்வர் குடும்பம் மகளுடன் வந்து ஒட்டிக் கொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை படித்து விட்டு அப்சல்கான் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அந்தக் குழந்தைக்கும் கூட இப்படி கடும் பாதுகாப்பு இருப்பது அப்சல்கானுக்குத் தெரியுமா தெரியாதா என்று அகமது அன்சாரியால் யூகிக்க முடியவில்லை.

 

அடுத்து மிஞ்சியிருப்பது நிர்ப்பயாவின் கணவன் தான். அகமது அன்சாரி கேட்டார். “அப்சல்கான் சொல்லும் துருப்புச்சீட்டு நிர்ப்பயாவின் கணவன் யுவராஜாக இருந்தால்? அவன் பாதுகாப்புக்கும் ராஜேஷ்வரின் காவல் படை இருக்கிறதா?”

 

இல்லை. அதனால், அவன் ஐ.பி.எஸ் அதிகாரியானாலும், அவனைக் கடத்துவது கஷ்டமில்லை.  ஆனால் ராஜேஷ்வர் மருமகனாக அங்கீகரிக்காத ஆளைக் கடத்துவதன் மூலம் நாம் அவரிடம் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியாது.”

 

இதே அபிப்பிராயம் தான் அகமது அன்சாரிக்கும் இருந்தது. யுவராஜைக் கடத்துவது ஒருவிதத்தில் ராஜேஷ்வருக்கு உதவுவது போல் தான். அவருடைய மகள் வாழ்க்கையிலிருந்து அவனை விலக்கினால், அவளுக்கு அவர் விருப்பப்படி வேறு  ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர முடியும்.   அதனால் யுவராஜை அப்புறப்படுத்துவதை அவர் வரவேற்கவும் செய்யலாம்.

 

அப்சல்கான் யாரைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தச் சொல்கிறான் என்று நீ நினைக்கிறாய்? எது நமக்கு அனுகூலமாக இருக்கும்?””

 

அந்தக் குழந்தையையோ, யுவராஜையோ தான் பயன்படுத்த அவர்  நினைத்திருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையைக் கடத்த வாய்ப்பில்லை. யுவராஜைக் கடத்தி பலனில்லை..”

 

அவன் சொல்வது உண்மை தான். அவர் அவனை அனுப்பி விட்டார். இனி என்ன முடிவெடுப்பது என்று அவர் ஆழமாக யோசித்தார். பலனில்லாத சாகசத்தால் அவமானம் நிச்சயம். அதே நேரத்தில் செயலற்று இருப்பதும் அவமானம் தான். எதைத் தேர்ந்தெடுப்பது? முயற்சி எடுக்கா விட்டால் வெற்றி சாத்தியமே அல்ல; நூறு சதவீதம் தோல்வி நிச்சயம். முயற்சி எடுத்தால் சிறிதளவாவது வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் முட்டாள்த்தனமாக இருந்தாலும் கூட முயற்சி எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவர்களுடைய இயக்கம் இருக்கிறது...


(தொடரும்)

என்.கணேசன்