என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 27, 2026

ரட்சகன் 2

 


ப்சல்கானைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி தன் கண்களைச் சந்தேகித்தான். ’அப்சல்கான் புன்னகைக்கிறானா? நான் பார்த்தது சரிதானா?’

 

திகார் சிறையில் அப்சல்கானைப் போல் தினசரிகள் அனைத்தையும் முழுவதுமாகப் படிப்பவர்கள் குறைவு. அதிலும் அவனைப் போல் ஒரு செய்தி விடாமல் நீண்ட நேரம் படிப்பவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லி விடலாம். உலகின் அதிபயங்கரவாதிகளில் ஒருவன் என்று சொல்லப்படும் அவனைக் கண்கொத்திப்பாம்பாக கவனிக்கும்படி அவனைப் போன்ற காவலாளிகள் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அங்கு அந்தக் காவலாளி காவலில் இருக்கும் போதெல்லாம் அப்சல்கானை விடாது கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். இது வரை எல்லா நாட்களும் ஒன்று போலவே சுவாரசியமில்லாமலும், வித்தியாசமாக எதுவும் நடக்காமலும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்சல்கான் அதிசயமாய் ஒரு வாரப்பத்திரிக்கையை எடுத்துப் படிக்கிறான். புன்னகைக்கிறான்….

 

அப்சல்கான் எழுந்து அந்தக் காவலாளி அருகே வந்தான். காவலாளி துப்பாக்கியை உபயோகிக்கத் தயார் நிலைக்கு உடனே மாறினான். அப்சல்கான் தெளிவான குரலில் சொன்னான். அடுத்த நிமிடம் அடுத்த அதிசயம் நடந்தது. “எனக்கு என் வக்கீலைப் பார்க்க வேண்டும்”. அந்தக் காவலாளி முதல் முறையாக அப்சல்கானின் குரலைக் கேட்கிறான்.

 

க்கீல் காளிதாஸை உச்சநீதிமன்ற வட்டாரத்தில் அறியாதவர்கள் யாருமில்லை. அவர் சட்ட மேதையோ, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்தவரோ அல்ல. ஆனாலும் அவர் ஏன் பிரபலம் என்றால், யாரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வழக்குகளையும் அவர் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார். தீவிரவாதிகள், கொடூரமான கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள், பெருங்குற்றவாளிகள் என்று வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தவர்கள் எல்லாம் அதிகமாக உச்சநீதிமன்றம் வரும் போது அவரைத் தான் நாடி வருவார்கள். பல வக்கீல்கள் போல அவர் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அந்த வழக்கை மறுக்க மாட்டார். அதே போல் வெற்றிக்கு வாய்ப்பே இல்லா விட்டாலும் ஒதுங்க மாட்டார். அதிகமாக பணத்தைத் தந்தால் அந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு நடத்துவார். 

 

சட்ட நுணுக்க வல்லுனர் அவரல்ல என்றாலும் அவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மிக நன்றாக அறிந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பற்றியும் அவர் மிகத் துல்லியமாக அறிந்தவர். இது போன்ற வழக்குக்கு இந்த நீதிபதி இந்தத் தீர்ப்பு தான் வழங்குவார் என்று அவர் முன்கூட்டியே சொல்ல முடிந்தவர். உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆட்களையும், அவர்களிடம் வேலை ஆக யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூட அவர் நன்றாக அறிந்தவர். வழக்குகளில் வெற்றி பெற்றுத் தரமுடியாத அளவு குற்றம் தெளிவாக இருந்தாலும் வழக்கை எப்படி முடிந்த வரை நீட்டிப்பது, தண்டனையை எப்படி தள்ளிப் போடுவது அல்லது குறைப்பது என்பதை அவர் கச்சிதமாக அறிவார்.  அவரது சில்லறைத்தனமான தந்திரங்களை உணரும் சில நேர்மையான நீதிபதிகள் அவரைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்ததுண்டு. ஆனால் அவர் அதை எப்போதும் அவமானமாக எடுத்துக் கொண்டதில்லை. எதற்காக அவர் கண்டிக்கப்பட்டாரோ அதை அவர் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் தொடர்ந்து செய்வார். ஃபீஸ் விஷயத்தில் தான் அவர் மிகவும் கறாராக இருப்பாரே ஒழிய அவர் மற்ற அனைத்திலும் கண்டிப்போ, எதிர்ப்புகளோ, கவலையோ அற்ற மென்மையானவர் தான்.

 

திகார் சிறைச்சாலையிலிருந்துஅப்சல்கான் அவரைச் சந்திக்க விரும்புகிறான்என்ற செய்தி அவரை வந்தடைந்த போது அவர் ஆச்சரியப்பட்டார். அப்சல்கானுக்கு அவரிடம் பேசவோ, அவருக்கு அப்சல்கானிடம் பேசவோ எதுவுமிருப்பதாக அவர் நினைக்கவில்லை.  டெல்லி உயர்நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து, பின் அவன் மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றத்திற்கு வர அவரை அணுகிய போது தீர்ப்பு வேறு விதமாக வாய்ப்பில்லை என்று தெளிவாகச் சொல்லிய அவர், முடிந்த வரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பல வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம் என்ற உத்தரவாதம் மட்டுமே அவனுக்கு அளித்திருந்தார். அவனும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அவர் அவனுக்கு வாக்களித்தபடி சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வழக்கு வாய்தாக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். இதற்கு மேல் பேசவோ செய்யவோ எதுவுமில்லை. அப்படி இருக்கையில் அவன் ஏன் அழைக்கிறான் என்று அவருக்குப் புரியவில்லை.

 

சூடு சொரணை அற்றவர் என்று சகாக்களால் கூறப்படும் காளிதாஸுக்கே அப்சல்கானைச் சந்தித்துப் பேசுவதில் சிறிது படபடப்பு இருந்தது. காரணம் அவனிடம் பேசுகையில் அவனுக்குள்ளே வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலையை அவர் அடிக்கடி உணர்வதுண்டு. அவன் சிறைச்சாலையில் இருக்கையில் அவரிடம் இதுவரை பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் அவன் பேசாத  வார்த்தைகள் அவரை எச்சரிக்கை செய்தன. அந்த வார்த்தைகளைக் கேட்க நேரிட்டு விடுமோ என்று பயமுறுத்தின. அப்படி ஏன் தோன்றுகின்றது என்று அவரால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அந்த உணர்வு அவரிடம் எப்போதும் இருந்து வருகிறது.  இப்போது என்ன சொல்வானோ என்ற படபடப்புடன் தான் அவர் திகார் சிறைக்குச் சென்றார்.

 

அவனை அவர் சந்தித்த போது மரியாதை நிமித்தம்எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவன் அந்தக் கேள்வி பைத்தியக்காரத்தனமானது என்பது போல் பார்த்தானே ஒழிய பதில் சொல்லவில்லை. “இங்கே ஒருவன் எப்படி இருப்பான்?” என்ற பதில் கேள்வியை அவன் கேட்பது போல் அவனது மௌனம் இருந்தது. ’பின் என்ன தான் உன்னிடம் பேசுவதுஎன்று மனதுக்குள் அவனுடைய மௌனத்திற்குப் பதிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

 

அப்சல்கானுக்கு இரண்டடி தூரத்தில் ஒரு காவலன் நின்று கொண்டிருந்தான். அப்சல்கான் அவனை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்தான். தானாக அந்தக் காவலாளி மேலும் இரண்டடி தள்ளி நின்றான்.

 

அப்சல்கான் மெல்லிய குரலில் காளிதாஸிடம் சொன்னான். “என் ஆளிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும்.”

 

காளிதாஸ் தன் முந்தைய அனுபவத்தால் காதுகளைக் கூர்மையாக்கித் தான் அந்த வார்த்தைகளைக் கேட்க முடிந்தது.

 

காளிதாஸால் அவன் குரலுக்கு இணையாக மெலிதாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. அவர் பேசுவது அந்தக் காவலாளி காதில் விழுந்தாலும், அதை வைத்து அவன் அப்சல்கானின் கேள்வியை யூகிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதை அப்சல்கான் விரும்ப மாட்டான் என்பதையும் உணர்ந்த காளிதாஸ் பார்வையாலேயே அவனிடம் கேட்டார். “என்ன சொல்ல வேண்டும்?”

 

அப்சல்கான் சொன்னான். “இந்த வார உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கக் கட்டுரையைப் படிக்கச் சொல்லுங்கள்.”

 

காளிதாஸ் திகைத்தார். ‘இது என்ன சிறுபிள்ளைத்தனம். இதற்கா என்னை இங்கே வரவழைத்தாய்?’ என்று கேட்க அவர் நாக்கு துடித்தாலும் அதை அவனிடம் வாய் விட்டுக் கேட்பது ஆபத்தானது என்று அவருடைய அறிவு எச்சரித்தது.

 

சரி வேறென்ன?’ என்று அவர் அவனிடம் பார்வையிலேயே கேட்டார். சிறு தலையசைப்பில் அவன்வேறொன்றுமில்லைஎன்று தெரிவித்து விட்டு எழுந்தான்.

 

வந்தமர்ந்து இரண்டே நிமிடங்களில் சந்திப்பு முடிந்து கிளம்பும் ஒரே வக்கீல் இந்த சிறைச்சாலை வரலாற்றில் நாமாகத் தான் இருக்கும் என்று எண்ணியபடி காளிதாஸும் புறப்பட்டார்.

 

காரில் தன் வீட்டுக்குச் செல்கையில் அப்சல்கானின் வித்தியாசமான கோரிக்கை காளிதாஸைக் குழப்பியது. வார்த்தைகளைக் கூட அளந்து பேசும் இவன் பைத்தியக்காரத்தனமான விஷயத்தைச் சொல்ல நம்மை அழைத்திருக்க வாய்ப்பில்லையே என்று எண்ணியபடி வந்த அவர் வழியில் தினசரிகள், வார மாத இதழ்கள் விற்கும் ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தி அந்த வார உமன்ஸ் வர்ல்டு வாங்கினார்.

 

வாங்கி அந்த வார இதழைப் பிரித்தபடி வந்து காரில் அமர்ந்த அவர் பதினாறாம் பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். அவன் என்ன நோக்கத்தில் சொன்னான் என்பது உடனடியாக அவருக்குப் புரிந்தது. அதிர்ச்சியில் அவர் விரல்கள் லேசாக நடுங்குவது வார இதழ் நடுங்கியதைப் பார்த்த பிறகே அவருக்கு உறைத்தது. அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்ற பழமொழி அந்தச் சமயத்தில் அவருக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.

 

வார இதழை பின் சீட்டில் வீசி விட்டு அவர் வேகமாகக் காரைக் கிளப்பினார்.


(தொடரும்)

என்.கணேசன்

Thursday, July 23, 2026

சதுரங்கம் 28

 


விமல் சோனா ஓட்டலில் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு நாளை ஒரு போலி பெயர், முகவரியுடன் புதிய ஒரு அலைபேசி கிடைத்து விடும். ஆனால் அடுத்ததாக அவன் செய்யப் போகும் வேலை மிக ஆபத்தானது. பிரச்சினையில்லாமல் முடிந்தால் அவன் மீதமுள்ள வாழ்க்கையை அரசனைப் போல் வாழலாம். ஆனால் பிரச்சினை வந்தால் பின் மீதமுள்ள வாழ்க்கை என்பதே இருக்காது. அவன் ஒரு அனாதைப் பிணமாய் முடிந்து போகவும் வாய்ப்பு உண்டு. அறிவுபூர்வமாக யோசித்தால் அவன் அப்படி அனாதைப் பிணமாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.  ஆனாலும் அவன் ஏன் அந்த ஆபத்தான வேலையில் இறங்குகிறான் என்றால் பணம், வசதிகள், மது, அசைவ சாப்பாடு, அழகான பெண்கள் சகவாசம் எல்லாம் இல்லாமல் வாழ்வது அனாதைப் பிணமாக முடிவதை விடக் கொடுமையானது. நர்மதா இறந்தவுடன் உயிருக்கு மேல் எதுவும் இல்லை என்று ஓடி வந்தவன் தான் அவன். ஆனால் ஒளிந்து, பதுங்கி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது நரக வாழ்க்கை என்பது சில நாட்களிலேயே அவனுக்கு விளங்கி விட்டது.

 

அவனுடைய திட்டத்தை நிறைவேற்ற அவனுக்கு குறைந்தபட்சம் இன்னொரு ஆளின் உதவியாவது வேண்டும். முழு நம்பிக்கைக்குரிய தைரியமான  இரண்டு மூன்று ஆட்கள் அவனுக்கு உதவிக்கு இருந்தால் மேலும் நல்லது. அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் யாரும் தங்களுக்கு ஆபத்தை வரவழைத்துக் கொண்டு அவனுக்கு உதவ முன்வர மாட்டார்கள். சினிமாவில் ஒன்றிரண்டு வேடங்கள் கிடைத்த பின் அவன் தமிழ்நாட்டின் அடுத்த ரஜனிகாந்த் ஆகவும், விஜய் ஆகவும் வருவது உறுதி என்ற நம்பிக்கையில் அவர்களை எல்லாம் அலட்சியப்படுத்தி இருந்தான். அத்தனை உச்சத்திற்குச் செல்லா விட்டாலும் தொடர்ந்து திரை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அதுவுமில்லாமல் போய், சின்னத் திரை தொடர்களில் நடித்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருக்கிற அவனுக்கு நண்பர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜாலியாக பொழுது போக்குவதில் அவனுடன் சேர்ந்து கொள்பவர்களே தவிர, ஆபத்து, பிரச்சினை என்றால் அடுத்த கணம் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காணாமல் போகிறவர்கள். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. அவனே அப்படித்தான். அதனால் அவனுடைய நட்புகள் வேறுவிதமாக இருக்க வாய்ப்பில்லை. புதியவர்களையோ அவன் இதில் நம்பி சேர்த்துக் கொள்ள முடியாது.  என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தெளிவும் கிடைக்கவில்லை.

 

அவனுக்கு இப்போது தேவை தைரியமான ஆள். ஆபத்தைக் கண்டு பின் வாங்காத ஆள். அந்த ஆள் நாணயஸ்தனாகவும் இருக்க வேண்டும். விமல் அவனுக்கு வரும் பணத்தின் ஒரு பகுதியை அந்த ஆளுக்குத் தரத் தயார். ஆனால் அந்த ஆள் விமலைக் காட்டிக் கொடுத்து அதே அளவு பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அப்படி பணம் சம்பாதிக்க நினைக்காத ஒரு அடிப்படை நேர்மையாவது அந்த ஆளுக்கு இருக்கவேண்டும். அது போன்ற ஒரு ஆளை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? எதிரியுடன் பேரம் பேசி விட்டு பிறகு யோசித்துக் கொள்ளலாம்...  

 

முடிவு எடுத்த பின் விமல் நிம்மதியாகத் தூங்கினான்.

 

த்திவாக்கம் கிராமத்திற்கு அர்ஜுன் பஸ்ஸில் தான் சென்றான். பைக்கில் சென்று வரக்கூடிய அளவுக்கு அது குறைந்த தூரமல்ல. அதை விட அதிக தொலைவுக்கும் அவன் பைக்கில் போவதுண்டு. ஆனால் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டிய வேலையில் பைக்கின் ரெஜிஸ்டிரேஷன் எண் அவனைக் காட்டிக் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது. இன்று போகும் விஷயத்தில் அவன் அடையாளம் தெரிவது பெரிய ஆபத்தில்லை என்றாலும், அவனுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வின் காரணமாக அவன் பஸ்ஸையே தேர்ந்தெடுத்தான்.

 

பஸ் நிறுத்தத்தில் ஒரு பெட்டிக் கடையும், டீக்கடையும் மட்டுமே இருந்தன. அருகில் ஒரு பெரிய ஆலமரமும் இருந்தது. ஆலமரத்தடியில் இருவரும், டீக்கடையில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுன் முதலில் டீக்கடைக்காரரிடம் பேசினான்.  கிராமத்திற்கு அந்த ஆலமரத்தைத் தாண்டித் தெரியும் பாதையில் ஒரு மைல் தூரம் உள்ளே போக வேண்டும் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.  டீக்கடைக்காரரிடம் தன்னை ஒரு எல்..சி ஏஜெண்ட்டாக அர்ஜுன் அறிமுகப்படுத்திக் கொண்டான். மகுடபதி என்பவர் பெயரில் ஒரு பழைய பாலிசி இருப்பதாகவும், நாமினேஷனாக அவர் மனைவி ரங்கநாயகி பெயர் போடப்பட்டு இருப்பதாகவும், விலாசமாக அத்திவாக்கம், காஞ்சிபுரம் என்று மட்டும் தரப்பட்டிருப்பதாகவும், மகுடபதி, ரங்கநாயகி, அல்லது அவர்கள் குடும்பத்தினர் யாராவது இருந்தால் அவர்களிடம் அந்த பாலிசி குறித்து பேச வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.

 

டீக்கடைக்காரருக்கு மகுடபதி குறித்தோ, அவர் குடும்பம் குறித்தோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. டீக்கடையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் பக்கத்து பெட்டிக்கடைக்காரரைக் கேட்டார். அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.  அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆலமரத்தடி ஆட்களும் வந்தார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை.

 

அவர்களில் ஒருவர் கேட்டார். “அந்த பாலிசி எப்போ எடுத்தது தம்பி?”

 

நாற்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த பாலிசி என்று அர்ஜுன் சொன்னவுடன் அவர் சொன்னார். “தம்பி, இந்தக் கிராமத்தில் மாடசாமிங்கற பெருசு இருக்கு. வயசு 75 க்கு மேல இருக்கும். அதுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு..”

 

சொன்னதோடு நிற்காமல், அவர் தன்னுடைய பழைய ஸ்கூட்டரில் அவனை  கிராமத்தின் உள்ளே இருக்கும் மாடசாமியின் வீட்டுக்கும் அழைத்துக் கொண்டு போய் விட்டார். “பெருசு கிட்ட கொஞ்சம் சத்தமாய் பேசணும்.  அப்ப தான் காது கேட்கும். ஆனா பழசு எல்லாத்தையும் புள்ளி விவரத்தோட சொல்லும். நல்ல ஞாபக சக்தி.”

 

மாடசாமிக்கு மகுடபதியை ஞாபகம் இருந்தது. அர்ஜுனை அழைத்துச் சென்றவரிடம் அவர் சொன்னார். “இப்ப முத்துப்பேச்சி குடியிருக்கு இல்லயா. அந்த வீட்டுல தான் மகுடபதி இருந்தார்.” பின் அர்ஜுனிடம் அவர் சொன்னார். “அவரும் அவர் சம்சாரமும் கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்களே தம்பி.”

 

அர்ஜுன் மற்றவர்களிடம் சொன்ன எல்..சி பாலிசி கதையையே அவரிடமும் சொன்னான். “அவங்களுக்கு எத்தனை பிள்ளைங்க இருந்தாங்க? இப்ப அவங்க எல்லாம் எங்கே இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா பெரியவரே

 

அவங்களுக்கு ஒரே ஒரு மகள் இருந்தா. ஆனா அவ எங்கே போனா, இப்ப எங்கே இருக்கான்னு எல்லாம் தெரியாது தம்பி.”

 

அவர்களைப் பற்றிக்  கூடுதல் விவரங்கள் தெரிந்திருக்கக் கூடியவர்களும்  அங்கு யாரும் இல்லை என்று அவர் சொன்னார். “இப்போதைக்கு இங்கே இருக்கிறவங்கள்லயே பழைய ஆள் நான் தான். இங்கே வந்து 32 வருஷம் ஆச்சு. மகுடபதி காலத்து மத்த ஆளுங்க எல்லாம் நிலத்தை வித்துட்டு எங்கங்கயோ போய்ட்டாங்க.”

 

அர்ஜுனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவருக்கு பானுமதியின் பெயராவது நினைவிருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்பி கேட்டான். “அவங்களுக்கு ஒரு மகள் இருந்ததாய் சொன்னீங்களே, அவங்க பெயர் தெரியுமா பெரியவரே?”

 

அதெல்லாம் ஞாபகம் இல்லை தம்பி. மகுடபதி பெயர் மட்டும் தான் தெரியும். அவர் மனைவி பெயர் கூடத் தெரியாது. அப்பவெல்லாம் ஒரு பெயரை வெச்சு தான் அந்தக் குடும்பத்து ஆள்கள் அத்தனை பேரையும் கூப்பிடுவோம். மகுடபதி சம்சாரம், மகுடபதி மகள்னு கூப்பிடறது தான் அப்பத்து வழக்கம்.”

 

அர்ஜுன் யோசித்து விட்டுக் கேட்டான். “முதல்ல இறந்தது மகுடபதியா, இல்லை அவங்க மனைவியா?”

 

ரெண்டு பேரும் ஒரே சமயத்துல தான் இறந்தாங்க தம்பி. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துட்டு செத்தவங்க தானே

 

அர்ஜுன் அதிர்ச்சியடைந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்






Monday, July 20, 2026

ரட்சகன் 1


 

நானூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு உள்ள திகார் சிறைச்சாலையில் அப்சல்கான் அடைக்கப்பட்டிருந்த பகுதி ஒதுக்குப்புறமாக இருந்தது. தண்டனை பெற்ற ஆபத்தான கைதிகளும், தீவிரவாதிகளும் மட்டுமே அப்பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் அங்கு பலத்த இரட்டிப்பு காவல் இருந்தது. அப்பகுதியில் இருந்த கைதிகள் தங்களுக்குள்ளேயே கூட ஒருவருக்கொருவர் சாதாரணமாகப் பேசிக் கொள்ளவும் அதிக வாய்ப்பிருக்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானோர் தனித்தனியாகத் தான் அங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் அங்கிருக்கையில் கைதிகள் பேசுவதானால் காவலாளிகளிடம் மட்டுமே பேச முடியும். தனிமையும் மௌனமும் சேர்ந்திருக்கும் அந்த சிறைவாசம் கொடுமையானது என்பதால் பொதுவாக அந்தக் கைதிகள் வாய்ப்பு கிடைக்கையில் காவலாளிகளிடம் பேச்சு கொடுப்பது வழக்கம். ஆனால் அங்கு தற்போது சிறைப்பட்டிருக்கும் அப்சல்கான் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் அங்கு சிறைப்பட்டிருக்கும் இந்த இரண்டாண்டு காலத்தில், மற்ற கைதிகளிடம் மட்டுமல்லாமல் காவலாளிகளிடம் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. அதற்கான அவசியத்தையும் அவன் உணர்ந்ததில்லை.

 

சிறையின் அந்தப் பகுதியில் இருக்கும் கைதிகள் தங்களைச் சந்திக்க வரும் ஆட்களிடம் பேசவும் மிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களைச் சந்திக்க வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் அதிகம் என்பதால் குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் அவர்களைச் சந்திக்க வருவதும் குறைவாகவே இருக்கும். அப்சல்கானைச் சந்திக்க அப்படி குறைவாகக்கூட யாரும் வந்ததே இல்லை. குடும்பத்தினரும், உறவினர்களும் அவனைச் சந்திக்க விரும்பவில்லை. நண்பர்களையோ அவன் சந்திக்க விரும்பவில்லை. காரணம் அவனுடைய இயக்கத்திற்கு அப்பாற்பட்ட நட்புகள் அவனுக்கு இருக்கவில்லை. உளவுத்துறையின் கழுகுப் பார்வை எப்போதும் அவன் மீதிருப்பதால், அவன் இயக்கத்து நண்பர்கள் பிரச்சினைக்கு உள்ளாவதில் அவனுக்கு விருப்பமில்லை.

 

எப்போதாவது அவனைச் சந்திக்க வரும் அவனுடைய வக்கீலிடம் மட்டுமே அவன் பேசி காவலாளிகள் பார்த்திருக்கிறார்கள். அவன் மிகவும் தாழ்ந்த குரலில் தான் தன் வக்கீலிடம் பேசுவான். அவன் பேசுவது சற்று தள்ளி நிற்கும் காவலாளிக்கும் கூடக் கேட்காது. அந்த வக்கீலே கூட அவனை நோக்கி முன்னால் சாய்ந்து மிகவும் உன்னிப்பாகக் கேட்டு சிரமப்பட்டுத்தான் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதைக் காவலாளிகள் கவனித்திருக்கிறார்கள்.. அதனால் அங்கு யாருமே அவனுடைய குரலைச் சரியாகக் கேட்டதில்லை.

 

அப்சல்கான் வாய்ப்பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அல்ல. அவனுக்கு செயல் மூலம் பேசத்தான் பிடிக்கும். இதுவரை அவன் அப்படித் தான் பேசியிருக்கிறான். மூன்று வருடங்களுக்கு முன் புதுடெல்லியில் ஒரு வணிக வளாகத்தில் அவன் வெடிகுண்டு வைத்து பதினைந்து பேர் மரணமடைந்தும், பதினெட்டு பேர் படுகாயமடைந்துமிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவன் துரதிர்ஷ்டவசமாகப்  பிடிபட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை பெற்று திகார் சிறைக்கு வந்திருக்கிறான்.

 

இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள் திகாரிலிருந்து தப்பிப்பது தான். ஆனால் அதற்கு அங்கே சிறிதும் வாய்ப்பிருக்கவில்லை. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சார்லஸ் சோப்ராஜ் உட்பட சிலர் அங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறார்கள். ஆனால் சார்லஸ் சோப்ராஜ் உட்பட அவர்கள் அனைவரும் சில நாட்களிலேயே பிடிபட்டுமிருக்கிறார்கள், ஒரே ஒரு கைதியைத் தவிர! தப்பித்துச் சென்று கடைசி வரை பிடிபடாத கைதி அப்சல்கானைப் போல் பயங்கரவாதி அல்ல. அந்தக் கைதி இன்னொரு கைதியுடன், ஒரு திருட்டுக் குற்றத்தில் சிறைப்படுத்தப்பட்டவன். அதனால் அவன் தீவிரக் கண்காணிப்பிலோ, பலத்த காவல் பகுதியிலோ இருக்கவில்லை. தன் சகாவுடன் சேர்ந்து தப்பித்துச் சென்ற அவன் சகா திரும்ப பிடிபட்டாலும் அவன் பிடிபடவில்லை . அந்த தப்பித்த கைதியின் அதிர்ஷ்டம் பின் எவருக்கும் அமையவில்லை. சிறைச்சாலைக் காவலை பின்னர் பல மடங்கு பலப்படுத்தி விட்டார்கள்ஆனாலும்முடியாதுஎன்று எதையும் நினைக்காத அவன் இதையும் முடியாது என்று எண்ணி நம்பிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு வழி இருக்கும். அதைக் கண்டுபிடித்து செயல்படுத்துவது தான் வல்லவனின் சாமர்த்தியம்.

 

சிறைச்சாலை என்பது ஒரு தனி உலகம். அங்கு இருக்கும் சட்டதிட்டங்களும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானவை. கைதிகளில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அதிகம். அந்தக் கைதிகளுக்கு வேலையும் அதிகம். திகார் சிறைச்சாலைக்குள் ஒரு தொழிற்சாலையும் இருப்பதால், தண்டனை பெற்ற கைதிகள் வழக்கமான வேலைகளையோ, தொழிற்சாலை வேலையையோ, சில சமயங்களில் இரண்டையும் சேர்த்தோ செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும் எழுத்து வடிவில் இருக்கும் சட்டதிட்டங்களின்படி பெரும்பாலும் சிறைச்சாலைகளில் எதுவும் நடப்பதில்லை. பணமும், அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இருந்தால் அங்கே ஒருவர் கூடுதல் வசதிகளுடன் வாழலாம்சிகரெட், கஞ்சா, உணவுப்பொருள்கள், மொபைல் போன்கள் முதலான அனைத்தும், பணம் தந்தால் அங்கே கிடைக்கும். அப்சல்கான் அப்படிப் பணம் தந்து தன் வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளவில்லை. அவன் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். ஏனென்றால் அவன் இருக்கும் இயக்கத்திற்கு பணம் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனாலும் தன்னுடைய மோசமான சிறை வாழ்க்கையை வசதியான சிறை வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள அவன் பணம் செலவு செய்யவில்லை.

 

அதற்குக் காரணம் அந்த மோசமான சிறை வாழ்க்கை அவனுக்கு ஒரு பொருட்டல்ல என்பதல்ல. அவன் இருக்கும் அந்த மோசமான சூழலையும், அவனுக்குத் தரப்படும் தரமற்ற உணவையும், அவன் மேல் சுமத்தப்படும் கடுமையான வேலைகளையும் அவன் மிகவும் வெறுத்தான்சிறையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு நரகமாகத் தான் நகர்கிறது. ஆனாலும் பணம் தந்து அந்த நரக வாழ்க்கையை சுலபமாக்காமல் அவன் சுமந்து கொண்டிருப்பது இந்த அரசாங்கத்தின் மீது ஏற்கெனவே இருக்கும் கடுமையான வெறுப்பை மேலும் அதிகரித்துக் கொள்ளத்தான்.

 

அன்பை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்சல்கானுக்கு அதில் உடன்பாடில்லை. அன்பை விடவும் வெறுப்பு அதிக சக்தி வாய்ந்தது. பழிவாங்கும் உணர்வு ஊக்குவிப்பதைப் போல் வேறெதுவும் அவனை ஊக்குவிப்பதில்லைஒவ்வொரு வேதனையை உணரும் போதும், “இதற்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் நான் பதிலளிப்பேன்என்று அவன் மனதிற்குள் கறுவிக் கொள்வான். இந்த பழிவாங்கும் உணர்வும் வெறுப்பும் தான் அவன் மூளையைக் கூர்மையாக வைத்திருக்கிறது. அது தான் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை, ஒரு குறிக்கோளை, ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பழி வாங்குவதற்கு, முதலில் இங்கிருந்து அவன் தப்பித்தாக வேண்டும். எப்படியாவது அவன் இங்கிருந்து தப்பிக்க  இப்போதைய இந்தக் கஷ்டங்கள் தான் உந்துகோலாக இருக்கப் போகின்றன. அதனாலேயே இந்தக் கஷ்டங்களை அவன் சகித்து வருகிறான்.  

 

காலம் அவனுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அதை அவன் முடிந்த வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்.  உச்சநீதிமன்றத்திலும் அவனுக்கு தண்டனை குறைய வாய்ப்பில்லை என்று அவன் வக்கீல் அவனிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இப்போதெல்லாம் குடியரசுத் தலைவரும் இது போன்ற விஷயங்களில் கருணை காட்டுவதில்லை. அதனால் வழக்கு வேகமாக முடிவது அவன் வாழ்க்கையை வேகமாக முடிப்பது போலத் தான்.   அதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அவன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் மேல்முறையீட்டு வழக்கை அவனும் அவனுடைய வக்கீலும் முடிந்த வரை தாமதப்படுத்தி ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் முடிவில்லாமல் அப்படி அவர்கள் வழக்கை நீட்டிக்க முடியாது. அதனால் தான் சில நாட்களாக அவன் மனம் அவசரத்தை உணர்ந்து வருகிறது.

 

அவன் தினமும் தவறாமல் செய்யும் காரியம் சிறையில் படிக்கக் கிடைக்கும் தினசரிப் பத்திரிக்கைகளை ஒரு வரி கூட விடாமல் படிப்பது தான். அவற்றில் இருக்கும் ஏதாவது ஒரு தகவல் அவன் இங்கிருந்து தப்பிப்பதற்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அவன் இதுவரை இழக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பொறுமையாக அவன் அந்த நாளிதழ்களைப் படித்து வருகிறான். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் நூலக அறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வாடிக்கையாகி விட்டாலும் மறுநாளும் நம்பிக்கையோடு வருவது தடைப்படவில்லை.

 

இன்றும் அவன் அப்படித் தான் நம்பிக்கையோடு அந்த நூலக அறைக்குள் நுழைந்தான். அவன் படித்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு வழக்கமான ஏமாற்றத்தையே தந்தனநாளிதழ்களைப் படித்து முடித்து விட்டு அங்கே பரந்து கிடந்த மற்ற வார, மாத இதழ்களை மேலோட்டமாகப் பார்த்தான். அவற்றில் அவனால் சிறிதும் ரசிக்க முடியாத சினிமா மற்றும் குடும்பக் கட்டுரைகள் மட்டுமே இருக்கும். அதைப் படித்து காலத்தை வீணாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை. ஆனால் அங்கிருந்த வார இதழான உமன்ஸ் வர்ல்டில் இருந்த அட்டைப்படமும், அதன் தலைப்பும் ஒரு கணம் அவனை யோசிக்க வைத்தன. யோசனையுடன் அந்த வார இதழை எடுத்துப் புரட்டினான். அட்டைப்படம் சம்பந்தமான ஒரு குடும்பக் கட்டுரை உள்ளே இருந்தது. அவன் அதைப் படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்த பின் அவன் நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். திகார் சிறைக்கு வந்ததிலிருந்து ஒரு முறை கூடப் புன்னகைத்திராத அவன் முதல் முறையாகப் புன்னகைத்தான்.

 

திகாரிலிருந்து தப்பிக்கும் வழி அவனுக்குப் புலப்பட்டு விட்டது.


(தொடரும்)

என்.கணேசன்