யுவராஜ் கண்விழித்த போது அவனுடைய அரவணைப்பில் நிர்ப்பயா உறங்கிக்
கொண்டிருந்தாள். அவளுடைய அரவணைப்பில் மகன் நீலேஷ் உறங்கிக் கொண்டிருந்தான். யுவராஜின் கை மனைவியையும், மகனையும்
அவர்களை எழுப்பி விடாத அளவுக்கு லேசாக இறுக்கியது. யுவராஜுக்கு
அவன் கைக்குள் அவனுடைய உலகமே அடங்கிக் கிடப்பதாகத் தோன்றியது. அவன், அவள், மகன் என்ற
இந்த மூவர் அடங்கியதாகத் தான் இப்போது அவன் உலகம் இருக்கிறது. இது போதும் அவனுக்கு. வேறெதுவும்
தேவைப்படாத பரிபூரண நிலையை அவன் இந்தக் கணத்தில் உணர்கிறான்.
உறங்கும் மனைவியையும் மகனையும் மாறி
மாறி பார்த்தான். இருவர் முகங்களிலும் களங்கம் இல்லை, கவலையில்லை. நிறைவுடன்
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கடவுளே
இப்படியே கடைசி வரை இவர்களை இருக்க வைத்து விடு.’
சில சமயங்களில் அவனுக்கு அவனுடைய திருமணமும், அதன் பின்
நடந்த அனைத்தும் கனவு போலத் தோன்றும். நிஜத்தில் சாத்தியமில்லாத
அந்த அதிசயம் அவன் வாழ்க்கையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் தோன்றும். திடீரென்று
கண்விழித்து திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுவோமோ என்ற பயம் அவன்
மனதில் எழும். விழித்திருக்கும் காலங்களில் எத்தனையோ முறை ’எல்லாம்
நிஜம் தான்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டாலும் அடிக்கடி அந்தப் பயம்
எழுவதை அவனால் தவிர்க்க முடிந்ததில்லை.
அவனிடம் எதைக் கண்டு அவள் அனைத்தையும்
உதறித்தள்ளி விட்டு வந்தாள் என்பதற்கு இதுவரையில் அவனுக்குச் சரியான பதில் கிடைத்ததில்லை. அவளைப்
பெரிதாகக் கவரும் அளவுக்கு உயர்வாய் எதுவும் அவனுக்குள் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. அழகு என்று
பார்த்தால் அவனை விட அழகான இளைஞர்கள் அந்தக் கல்லூரியில் இருந்தார்கள். அறிவு என்று
பார்த்தாலும் அவனை விடவும் அதிக அறிவு படைத்தவர்கள் அந்தக் கல்லூரியில் இருந்தார்கள். பணத்தைப்
பார்க்க அவனிடம் அது இருக்கவே இல்லை. ஆனாலும் நிர்ப்பயா
அவனைக் காதலித்தாள். அவனைத் திருமணம் செய்து கொண்டாள். அழகான மகன்
ஒருவனைப் பெற்றுத் தந்திருக்கிறாள். பதிலுக்கு அதிகரித்து
வரும் காதலைத் தவிர வேறு எதையும் அவனால் தர முடிந்ததில்லை.
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது
நாள் என்று சொன்னவர்கள் காதல் எத்தனை நாள் என்று ஏன் சொல்லவில்லை என்பது அவனுக்கு இப்போது
புரிந்தது. காதல் கடைசி மூச்சு வரைக்கும் தான். நாட்படக்
குறைவது காமம் மட்டும் தான். காதல், உண்மையாக
இருக்கும் வரை, நாட்பட நாட்பட அதிகமாகிக் கொண்டு தான் செல்லும். அதை அவன்
ஒவ்வொரு நாளும் உணர்கிறான். ஆரம்பத்தில் இருந்ததை விடவும் அவள் மீது அவனுக்கு அன்பு கூடிக்
கொண்டே தான் வருகிறது.
அவன் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவள் உறக்கத்திலேயே
புன்னகைத்தாள். அவளுடைய புன்னகையை அவன் ரசித்தான். இந்தப்
புன்னகைக்கு எதையும் தரலாம். என்னவும் செய்யலாம். ஆனால் தர
அவனிடம் அன்பைத் தவிர வேறு எதுவும் அதிகமில்லை. அதனால்
தான் அவளுடைய பெற்றோரும், தம்பியும் அவனை அவளுக்குப் பொருத்தமில்லை என்று நினைத்திருக்க
வேண்டும்.
யுவராஜ் மாமியாரை நேரில் பார்த்ததில்லை. மாமனாரை
ஒரே ஒரு முறை தான் சந்தித்துப் பேசியிருக்கிறான். அவரை நேரில்
அவன் சந்தித்துப் பேசியதே பெருமைப்பட வேண்டிய விஷயம் என்பது பிற்பாடு தான் அவனுக்குத்
தெரிந்தது. ஒரு அப்பாயின்மெண்ட்டுக்காக வருடக்கணக்கில் காத்திருப்பதாகச்
சில பெரிய மனிதர்களே அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். நிரஞ்சனை
ஒரு அரசு விழாவில் அவன் பார்த்திருக்கிறான். அந்த அரசு
விழாவில் நிரஞ்சன் தான் சிறப்பு விருந்தினர்.
யுவராஜ் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க
பாதுகாவலர் பலர் சூழ நிரஞ்சன் அவனைக் கடந்து சென்றான். கடந்து
செல்கையில் நிரஞ்சனின் பார்வை சாதாரணமாக யுவராஜின் மீது விழுந்தது. அவன் யார்
என்று உணர்ந்ததும் நிரஞ்சனின் முகம் கல்லாக இறுகியது. கண்களில்
நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ஒரே ஒரு கணம் தான்
அதை யுவராஜ் பார்க்க முடிந்தது. நிரஞ்சன் அவனைக் கடந்து விட்டான். பின் யுவராஜைத்
திரும்பிப் பார்க்கும் சிரமத்தை நிரஞ்சன் எடுத்துக் கொள்ளவில்லை.
நிர்ப்பயாவை யுவராஜ் திருமணம் செய்து
கொண்டிருக்கா விட்டால் அவளிடத்திலும் அவனுடைய நிலைமை அப்படித்தான் இருந்திருக்கும். தூரத்தில்
இருந்து பார்க்க மட்டுமே அவனால் முடிந்திருக்கும். நெருங்கிப்
பழகவோ, பேசவோ முடியாத உயரத்தில் தான் அவள் இருந்திருப்பாள். இப்போதும்
அவளுக்கு ஒரு ஆபத்து என்றால், குரல் கொடுத்தால் மின்னல் வேகத்தில் வந்து சேரும்படியாகத்
தான் ஒரு ரகசியப் பாதுகாவல் கூட்டம் இருப்பதை யுவராஜ் கவனிக்காமல் இல்லை. வேறு வேறு
வேஷங்களில் அந்தப் பாதுகாவலர்கள் இருப்பதை அவள் அறிவாளா இல்லையா என்று யுவராஜுக்குத்
தெரியாது. அவனாக அதைப் பற்றி அவளிடம் பேசியதில்லை. அவளாகவும்
அதைப் பற்றி அவனிடம் பேசியதில்லை...
நிர்ப்பயா மெல்ல கண்விழித்தாள். அவள் முகத்தையே
பார்த்தபடி அணைத்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது. காதலுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள். “என்ன பார்க்கறீங்க?”
“தூங்கறப்ப
நீ ரொம்ப அழகாய் இருக்கே”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. இது போன்ற
பாராட்டுகளுக்குப் பதில் சொல்லி அதை வளர்த்தும் பழக்கம் அவளிடம் இல்லை. மௌனத்தாலேயே
அதை அவள் கடந்து விடுவாள்.
குழந்தையை லாவகமாக சற்று நகர்த்திப்
படுக்க வைத்து விட்டு அவளும் அவனை அணைத்துக் கொண்டாள். ஒருவரை
ஒருவர் அணைத்துக் கொண்டபடி இருவரும் மௌனமாகப் படுத்திருந்தார்கள். நேசிப்பின்
உச்சத்தில் தான் பேச்சும், செயலும் இல்லாமல் இப்படி நிறைவுடன் படுத்திருக்க முடியும்
என்று அவனுக்குத் தோன்றியது.
சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான். “நேற்று
என் நண்பர்கள் எல்லாம் உமன்ஸ் வர்ல்டு கட்டுரையைப் பாராட்டினாங்க.”
“அந்த மாதிரி
ஒரு பெரிய எழுத்தாளர் எதை எழுதினாலும் அது சிறப்பாய் தான் இருக்கும்.”
அதற்கான பெருமையை ஏற்றுக் கொள்ளாமல்
அவள் அப்படிச் சொன்னதை அவன் மறுத்தான். “அப்படியெல்லாம்
இல்லை. நான் அந்தம்மா எழுதின வேற கட்டுரைகளையும் படிச்சிருக்கேன். அதெல்லாம்
சுமார் தான்.”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கேட்டான். “உன் தோழிகள்
எல்லாம் படிச்சாங்களா? என்ன சொன்னாங்க.”
அவளுக்கு நெருக்கமான தோழிகள் நிறைய
பேர் இல்லை. இரண்டே பேர் தான் இருக்கிறார்கள். “நல்லாயிருக்குன்னு
சொன்னாங்க.” அவள் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டாள்.
’வேற யாராவது
பாராட்டினாங்களா?’ என்ற கேள்வி அவன் நாக்கு நுனி வரை வந்தது. ஆனால் அவன்
கேட்கவில்லை. அப்படிப் பாராட்டு தெரிவித்து இருந்தால் அவள் கண்டிப்பாக
அவனிடம் சொல்லியிருப்பாள்.
உள்ளூர அவனுக்கு அதில் வருத்தம் இருந்தது. அவளுக்குக்
குழந்தை பிறந்த போது கூட வந்து பார்க்காதவர்கள், வாழ்த்து
கூடத் தெரிவிக்காதவர்கள், உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் அவளைப் பற்றி வந்த ஒரு கட்டுரைக்காகப்
பாராட்டப் போவதில்லை தான். ஆனாலும் நினைக்கையில் அது அவனுக்கு ஏமாற்றமளித்தது.
அவர்கள் திருமணம் முடிந்து ஆறு மாதத்தில்
யுவராஜின் தந்தை காலமாகி விட்டார். அவனுடைய தாயோ அவன்
கல்லூரியில் படிக்கையிலேயே இறந்து விட்டாள். அதனால்
இப்போது நீலேஷுக்குத் தந்தை வழியில் தாத்தா பாட்டி இல்லை. ஆனால் தாய்
வழியில் இருந்தும் அவன் அவர்களை அறிய மாட்டான். அதில் நிர்ப்பயாவுக்கு
வருத்தம் இல்லாமலிருக்க சாத்தியமே இல்லை. ஆனால் அவள் அதை
வெளியே காட்டிக் கொண்டதில்லை. அவர்களது திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருந்த போதிலும்
அவளுடைய பெற்றோரை அவளை இழக்க வைத்ததில் யுவராஜுக்கு இப்போதும் குற்றவுணர்ச்சி இருக்கிறது. அவளுடைய
இழப்பு அவர்களுடைய குழந்தையின் இழப்புமாகத் தொடர்கிறது என்பது அவன் குற்றவுணர்ச்சியை
அதிகப்படுத்தியது.
எல்லாவற்றிற்கும் முடிவு காலம் உண்டு
என்று சொல்வார்கள். அப்படியானால் நிர்ப்பயாவின் பெற்றோர் மற்றும் தம்பியின் வெறுப்புக்கும்
ஒரு முடிவு காலம் இருக்கும் அல்லவா? அது எப்போது என்று
யோசிக்கையில் யுவராஜின் முகம் வாட்டமடைந்தது.
அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவன்
சொல்லி அவளுக்குத் தெரிய வேண்டியிருக்கவில்லை. இந்த மூன்றாண்டு
காலங்களில் ஒருவர் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மற்றவருக்குத் தெரியும் அளவு
ஈருடல் ஓருயிராகத்தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.
வாட்டமடைந்த அவனை முத்தமிட்டு அவன்
கவனத்தை அவள் திருப்பினாள். சில வினாடிகளில் இருவரும் வெளியுலகை மறந்தார்கள்.





