சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 14, 2024

யோகி 71

பாண்டியனின் கேள்விக்கு என்ன பதில் வருகிறது என்பதை அறிந்து கொள்ள பிரம்மானந்தாவும் ஆர்வமாக இருந்தார். தற்காத்துக் கொள்வது மிக முக்கியம் என்றாலும், எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வது அதற்கு இணையான முக்கியம் தான். எதிரிகள் உருவாகையிலேயே கண்டுபிடித்து அழித்து விடாமல் இருப்பது ஆபத்து என்பதை அவரும் அறிவார். இது வரை அவருக்கு எதிராக யாரும் எதையும் செய்து ஜெயித்ததில்லை. எதிராக இயங்குகிறார்கள் என்று தெரிந்தவுடனேயே செயல்பட்டு வந்ததால் தான் இத்தனை தூரம் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்று முளையிலேயே வேரோடு கிள்ளி எறியா விட்டால், நாளை விருட்சத்தோடு போராட வேண்டியிருக்கும். எந்தப் பிரச்சினையையும், அதிகப்படுத்திக் கொண்டு, பின் அதைத் தீர்க்கப் போராடுவது அறிவீனம்

 

தேவானந்தகிரி பாண்டியனிடம் சொன்னார். “விசேஷ ப்ரஷ்ன பூஜை செய்து முடிச்சதுக்கப்பறம் தான் எதையும் சொல்ல முடியும்.  அந்தப் பூஜையை சந்த்யா காலத்துல ஆரம்பிக்கணும். நீங்க ரெண்டு பேரும் முகம், கை, கால் அலம்பிட்டு வந்து உட்கார்ந்தா பூஜை முடியற வரைக்கும் அந்த இடத்தை விட்டு எழுந்து போகக் கூடாது. அந்த நேரத்துல எதுவும் பேசக்கூடாது.  செல்போனை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூர வெச்சுட்டு வரணும். பூஜை நடக்கறப்ப நீங்க எழுந்திருச்சாலோ, பேசினாலோ பூஜையைத் தொடர்ந்து செய்ய முடியாது. அடுத்த சந்த்யா காலத்துல, அதாவது நாளைக்கு அதிகாலைல தான் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதுக்குள்ளே துஷ்டசக்தியோட பிடி உங்க மேலே கூடுதலாய் இறுகிடும்கிறதால அதைத் தவிர்க்கறது உத்தமம். பூஜை சமயத்துல உங்க ரெண்டு பேரையும், யோகிஜியையும் தவிர யாரும் அந்த இடத்துல இருக்கக்கூடாது…”

 

பாண்டியனும், சுகுமாரனும் தலையசைத்தார்கள். பாண்டியனுக்கு தேவானந்தகிரி வளவளவென்று பேசுபவராக இல்லாமல் விஷயத்தை மட்டும் தெளிவாகப் பேசும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட மனிதர்கள் காரியத்தையும் சாதித்துக் கொடுத்தால் இவர்களுக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் தரலாம்

 

பிரம்மானந்தா கேட்டார். “பூஜையை எங்கே நடத்தலாம்ஜி?”

 

தேவானந்தகிரி சொன்னார். “பதினாறடிக்கு மேலே நீளமும், அகலமும் இருக்கிற இடம் உத்தமம்.”

 

தேவானந்தகிரி தங்குவதற்கு விருந்தினர் தங்கும் கட்டிடத்தில் ஒரு பெரிய அறையை ஒதுக்கித் தந்து விட்டு பாண்டியன் மறுபடியும் பிரம்மானந்தாவிடம் வந்தார். அவர் வரும் போது சுகுமாரன் எந்த மதக்கடவுளும் இந்த ஆவி தொந்தரவிலிருந்து தன்னைக் காப்பாற்றவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

 

பிரம்மானந்தா கேட்டார். “நீண்ட காலம் கும்பிடறவனையே கடவுள் சோதிச்சு, பிறகு தான் காப்பாத்தறார். நீங்களோ கடவுளை இதுவரைக்கும் நம்பாதவர். பயந்து போய் இப்ப தான் அவரைத் தொடர்பு கொள்றீங்க. அதுவும் முழு நம்பிக்கை வந்துன்னு சொல்ல முடியாது. அப்படி இருக்கறப்ப கடவுள் உங்களைக் காப்பாத்துவார்னு எப்படி எதிர்பார்க்கறீங்க டாக்டர்?”

 

சுகுமாரன் திருதிருவென்று விழிப்பதைப் பார்க்க பாண்டியனுக்கு வேடிக்கையாக இருந்தது. இப்போது இடைமறிக்கா விட்டால் பிரம்மானந்தா இனி தொடர்ந்து ஒரு பெரிய பிரசங்கம் செய்து விடுவாரோ என்று பாண்டியன் பயப்பட்டார். இல்லாத கடவுளைப் பற்றிப் பேசி நேரத்தை விரயம் செய்வதில் பாண்டியனுக்கு விருப்பமிருக்கவில்லை. இருப்பதைப் பேசி முடிவெடுக்க எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன

 

சோபாவில் அமர்ந்தபடி பாண்டியன் பிரம்மானந்தாவிடம் சொன்னார். “யோகிஜி. இந்த மந்திரவாதி கிட்ட ஏதோ ஒரு சக்தி இருக்குங்கறது நிச்சயம். பிரச்சினை எங்க ரெண்டு பேருக்கும் தான்னு இவர் கண்டுபிடிச்ச மாதிரி, இதையெல்லாம் செஞ்சது யாருன்னும் கண்டுபிடிச்சு, இதைத் தீர்க்கவும் இவரால முடிஞ்சா நல்லாயிருக்கும்

 

பிரம்மானந்தா சொன்னார். “இவர் அதைக் கண்டுபிடிச்சு, பிரச்சினையைத் தீர்த்துடுவார்னு தான் நான் நினைக்கிறேன். இவரைப் பத்தி என் கிட்ட சொன்னவங்க அனுபவம் அப்படி தான் இருக்கு. ஆவின்னா அதைப் போக வைக்கிற வழி என்னங்கறதையும் தெரிஞ்சு அதைச் செய்யக்கூடியவர்ங்கறாங்க. அதே மாதிரி செய்வினை, சூனியம் மாதிரின்னா, யார், யார் மூலம், எப்படிச் செஞ்சிருக்காங்கன்னும் சொல்லி அதுல இருந்து தற்காப்புக்கும் வழி செஞ்சு தர்றாராம். திரும்ப அவங்க மேலயே அதை ஏவி விடற வேலையிலயும் இவர் கெட்டிக்காரர்னு சொல்றாங்கஅதுக்கு ஒவ்வொன்னுக்கும் தனியாய் பெரிய தொகை வாங்கறாராம். ஆனால் பிரச்சினையை முடிச்சுக் கொடுக்கறார்ங்கறாங்க.”

 

அந்தத் தகவல் பாண்டியனுக்குப் பரம திருப்தி அளித்தது. அவர் முன்பே நினைத்தது போல், காரியம் நடக்கும் என்றால் பணம் எத்தனை தந்தாலும் அது நஷ்டமல்ல. அது கூலி தான்.

 

யோகாலயத்தில் சின்னதும் பெரியதுமாக மூன்று ஹால்கள் இருந்தன. அதில் நாற்பது பேர் அமரக்கூடிய சிறிய ஹால் ஒன்றை தேவானந்தகிரியின் விசேஷ ப்ரஷ்ன பூஜைக்கு பாண்டியன் தேர்வு செய்திருந்தார். தேவானந்தகிரி சொன்னது போல் பூஜை சமயத்தில் அங்கு அவருடன் பாண்டியன், சுகுமாரன் மற்றும் பிரம்மானந்தா மட்டுமே இருந்தார்கள். நீல நிறப் பட்டுக் கச்சம் கட்டி வந்த தேவானந்தகிரி இருட்ட ஆரம்பிக்கும் சந்தியா காலம் வரை பிரம்மானந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

பிரம்மானந்தா அவரிடம் பேச்சுவாக்கில் சொன்னார். ”இதை எல்லாம் ஒரு காலத்தில் நானும் ஆர்வமாய் கத்துகிட்டேன். ஆனால் யோக மார்க்கத்தில் போனவுடன் நிறுத்திட்டேன். உண்மையைச் சொன்னால். முன்பு செய்ததில் நிறைய இப்போது மறந்தும் போய் விட்டதுஎதுவுமே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மட்டும் தானே சரியாக ஞாபகம் இருக்கும்?.”

 

தேவானந்தகிரி சொன்னார். “வாஸ்தவம். உங்கள் குரு யார்?”

 

பிரம்மானந்தா கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாய் கற்பனை செய்து சொன்னார். “இமயமலையில் இருக்கிற ஒரு சாது. அப்பவே அவருக்கு வயது எழுபதுக்கு மேல இருக்கும். ஆனால் யாரும் முப்பதுக்கு மேல் அவர் வயசைச் சொல்ல மாட்டாங்கஅப்படி இருப்பார்.”

 

அவருடைய கற்பனையை தேவானந்தகிரி கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. தேவானந்தகிரி சொன்னார். “அவங்கெல்லாம் தவ வாழ்க்கை வாழ்ந்தவங்க. இப்ப அவங்களை மாதிரி ஆட்களை பார்க்கிறது அபூர்வம்... என்னோட குரு பாலக்காட்டு சங்கர நம்பூதிரி. பூஜைக்கு முந்தின நாள் சாயங்காலத்திலிருந்தே விரதமிருப்பார். பூஜை முடியற வரைக்கும் பட்டினி தான். 84 வயசுல இறந்தார். சாகற வரைக்கும் நோய் நொடின்னு அவர் ஆஸ்பத்திரிக்குப் போனவரல்ல...”

. 

தேவானந்தகிரி சரியான முகூர்த்த காலத்தில் தன்னுடைய பையிலிருந்து பட்டுத் துணியால் கட்டியிருந்த ஒரு வெள்ளிப் பேழையை வெளியே எடுத்து ஒரு விளக்கின் அருகே வைத்தார். அந்த வெள்ளிப் பேழை மூடப்பட்டு இருந்ததால் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. தேவானந்தகிரி பாண்டியனையும், சுகுமாரனையும் இரண்டு மரப்பலகைகளில் அமர வைத்து, விசேஷ ப்ரஷ்ன பூஜையை ஆரம்பித்தார். அதன் பின் அவர் கவனம் சிறிதும் சிதறவில்லை.

 

ஹாலின் ஒரு மூலையில் ஒரு மர நாற்காலியில் பிரம்மானந்தா அமர்ந்திருந்தார். அவர் இது போன்ற பூஜையை இது வரை பார்த்ததில்லை என்பதால் தேவானந்தகிரி எப்படி இந்தப் பூஜையைச் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள மிக ஆவலாய் இருந்தார். இனி எப்போதாவது இது சம்பந்தமாய் பேச வேண்டிய சந்தர்ப்பம் வருமானால் இந்த வழிமுறைகளைச் சொல்லி அவர் சோபிக்கலாம். ஆனால் அவர் தன் ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு ஆசிரியர் தன் மாணவனுக்குக் கற்றுத் தந்த பூஜையை சரியாகச் செய்கிறானா என்று மேற்பார்வை பார்க்க அமர்ந்திருக்கும் பாவனையைத் தான் வெளிப்படுத்தினார். அவர் உரக்கச் சொன்ன மந்திரங்கள் சிலவற்றை, தானும் அறிந்தவர் போல், பிரம்மானந்தா முணுமுணுக்க ஆரம்பித்தார்.

 

தேவானந்தகிரி மந்திர உச்சாடனங்களைச் செய்தபடியே பாண்டியனையும், சுகுமாரனையும் கூர்ந்து பார்த்து தரையில் சில சின்னங்களை வரைய ஆரம்பித்தார். சில சமயங்களில் அவர்களுடைய உடல்களைத் தாண்டியும் எதையோ அவர் கூர்ந்து பார்த்து வரைந்தார். பரசுராமன் பூஜைகள் செய்த போது வரைந்த சின்னங்கள், தேவானந்தகிரியாலும் இருவரையும் பார்த்து பார்த்து வரையப்பட்டன. இருவருக்கும் பொதுவாக இருந்த சின்னங்களையும், யந்திரங்களையும் ஓரிடத்தில் வரைந்தவர், தனி சின்னங்கள், யந்திரங்களை அதன் இரு பக்கங்களிலும் வரைந்தார். அவர் அனைத்தையும் வரைந்து முடிக்கையில் மணி எட்டாகி விட்டது.

 

பின் சிறிது நேரம் அந்த சின்னங்களையும், யந்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவர் கண்களை மூடிக் கொண்டார். நீண்ட நேரம் அவர் கண்களைத் திறக்காததைப் பார்த்து அவர் உறங்கி விட்டாரோ என்ற சந்தேகம் சுகுமாரனுக்கு வந்து விட்டது.

 

பின் தேவானந்தகிரி கண்களை மூடியபடியே சொல்ல ஆரம்பித்தார். “மயான காளி சிலை தெரியுது. சிரிச்சுகிட்டிருக்கற ஒரு பொண்ணோட படம் தெரியுது. காவித் துணி தெரியுது…. காவித் துணி தீப்பற்றி எரியறது தெரியுது…”


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, October 10, 2024

சாணக்கியன் 130

 

சின்ஹரன் பத்ரசாலைக் கூர்மையாகப் பார்த்தான். ’என் காதில் விழுந்தது சரி தானா?’ என்பது போல் அவன் பார்வையிருந்தது.

 

பத்ரசால் சரிதான் என்பது போல் தலையை லேசாக அசைத்து விட்டுச் சொன்னான். “ஆனால் இங்கே கண்காணிப்பும், பரிசோதனைகளும் அதிகம்”

 

சின்ஹரன் புன்னகையுடன் அமைதியாகச் சொன்னான். “எல்லாக் கண்காணிப்பு, பரிசோதனைகளிலும் ஏதாவது ஒரு பலவீனம் இருந்தே தீரும் சேனாதிபதி.  அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிது கவனக்குறைவும் இருக்கக்கூடாது. அவ்வளவு தான்.”

 

பத்ரசாலுக்கு அவன் சொன்னது உற்சாகத்தைத் தந்தது. “என்ன செய்யலாம் என்ற விவரங்களைச் சொல்லுங்கள் கார்த்திகேயன்” என்று பேரார்வத்துடன் கேட்டான்.

 

சின்ஹரன் சுற்றிலும் மீண்டுமொரு முறை பார்த்து விட்டுத் திருப்தியடைந்தவனாய் சொன்னான். “இப்போது பாரசீகக் குதிரைகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது சேனாதிபதி. நான் சொன்னபடி சந்திரகுப்தன் பாரசீகத்திலிருந்து வரும் குதிரைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக வாங்கி விடுவதால் மற்ற பகுதி ஆட்களுக்கு பாரசீகக் குதிரைகள் கிடைப்பதில்லை. உங்களிடம் ஏராளமான பாரசீகக்குதிரைகள் இருக்கின்றன”

 

பத்ரசால் ஒரு கணம் திகைத்தபடி சொன்னான். ”குதிரைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் ஒரு அதிகாரி இருக்கிறான். அவன் என் நண்பன் தான். அது பிரச்னையல்ல. ஆனால் அவ்வப்போது குதிரைகளின் எண்ணிக்கை பரிசோதிக்கப்படும் கார்த்திகேயன். பராமரிப்பு அதிகாரி கணக்கில் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையும், பரிசோதிக்க வரும் அதிகாரியின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும். அதில் ஒன்று குறைந்தாலும் எங்கள் பிரதம அமைச்சர் ராக்‌ஷசருக்குத் தகவல் உடனே தெரிவிக்கப்படும். அவர் விசாரணை தீவிரமாக இருக்கும்”

 

சின்ஹரன் அமைதியாகச் சொன்னான். “குதிரைகளின் எண்ணிக்கை மொத்தமாகத் தானிருக்குமேயொழிய இந்த ரகக்குதிரைகள் இத்தனை என்று எங்கும் வகை பிரித்து எண்ணிக்கைக் கணக்கு இருப்பதில்லை. பாரசீகக் குதிரைகளுக்குப் பதிலாக உள்நாட்டுக் குதிரைகள் லாயங்களில் மாற்றி வைக்கப்பட்டு இருந்தால் யாருக்கும் தெரியப் போவதில்லை.”

 

பத்ரசாலின் கண்கள் விரிந்து பிரகாசித்தன. சின்ஹரன் தொடர்ந்து தாழ்ந்த குரலில் சொன்னான். “உள்நாட்டுக் குதிரைகளை நான் தருகிறேன். அதற்குப் பதிலாக பாரசீகக் குதிரைகளை நீங்கள் தாருங்கள். விலை வித்தியாசத்தை நாம் பிரித்துக் கொள்வோம். இப்போதிருக்கும் சந்தை விலையை வைத்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால், குதிரை பராமரிப்பு அதிகாரிக்கு ஒரு சிறு பங்கைத் தந்தாலும் கூட மீதியை வைத்துக் கொண்டு நீங்கள் விரைவில் செல்வந்தனாகி விடலாம்.”

 

உற்சாகப் பரபரப்புடன் பத்ரசால் யோசித்தான். பின் உற்சாகம் குறைந்தவனாகச் சொன்னான். “ஆனால் ஒன்றிரண்டை மாற்றுவதானால் இரகசியமாக எப்படியாவது மாற்றி விடலாம். அதிக எண்ணிக்கையில் செய்வதானால், லாயத்திற்கு உள்ளே வெளியே கொண்டு போகும் போது, கண்டிப்பாக யார் கவனத்திற்காவது வராமல் போகாதல்லவா கார்த்திகேயன்?”

 

சின்ஹரன் சொன்னான். “இந்த மாற்றம் லாயத்தில் செய்யப்பட்டால் கண்டிப்பாக நீங்கள் சொன்னபடி யார் கவனத்திற்காகவது கண்டிப்பாக வரும். அதனால் கண்டிப்பாக அதைத் தவிர்க்க வேண்டும்.”

 

பத்ரசால் குழப்பத்துடன் கேட்டான். “பின் எப்படி?”

 

சின்ஹரன் சொன்னான். ”குதிரைகளை மேய்ச்சலுக்கு வெளியே குறிப்பிட்ட காலத்தில் விடுவதுண்டல்லவா? மேய்ச்சலின் போது யாரும் குதிரைகளையே பார்த்துக் கொண்டிருப்பதில்லை. குதிரைகளின் பின்னாலேயே போய்க் கொண்டிருப்பதில்லை. லாயத்திற்குத் திரும்ப ஓட்டிச் செல்லும் காலம் வரை அவை சுதந்திரமாகவே மேய்கின்றன. மேய்ச்சல் முடிந்து லாயத்திற்கு கொண்டு போகும் நேரத்திற்குள் குதிரைகளை மாற்றி விடலாம். அதற்கு எங்களிடம் கச்சிதமான வழிகள் உண்டு”

 

பத்ரசால் நிம்மதியடைந்தான். சின்ஹரன் சொன்னது போல லாயத்திலிருந்து வெளியே வரும் போது எண்ணி வெளியே விடப்படுகின்றன. திரும்ப அவை உள்ளே போகும் போது எண்ணி உள்ளே விடப்படுகின்றன. இடைப்பட்ட காலம் நீண்ட நேரம் தான்.  யாரும் குதிரைகளையே கூர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளாமலிருக்கும் நீண்ட காலம்….. மிக சாமர்த்தியமாக அந்தக் காலத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழியை இவர்கள் கற்றிருக்கிறார்கள்.   

 

பத்ரசால் கேட்டான். “அப்படியானால் நம் வணிகத்தை எப்போது ஆரம்பிப்பது கார்த்திகேயன்?”


சின்ஹரன் சொன்னான். “அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம் சேனாதிபதி. நான் புதியவன் என்பதால் நான் அவ்வப்போதாவது கண்காணிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் என் ஆட்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் நீண்ட காலமாக குதிரை வணிகத்தில் தொடர்ந்து இங்கு வந்து போய்க் கொண்டிருப்பவர்கள் என்பதால் அவர்களைக் கண்காணிப்பதை உங்கள் ஒற்றர்கள் நிறுத்தியும் சில மாதங்களாகி விட்டன. அவர்கள் மூலமாக வணிகம் நடப்பது நமக்குப் பாதுகாப்பு.”

 

சின்ஹரன் சொல்வது கூடுதல் புத்திசாலித்தனமாக பத்ரசாலின் அறிவுக்குத் தோன்றினாலும் வேறு ஆட்களுடன் இந்த வணிகம் புரிவதில் பத்ரசால் சிறிது சங்கடத்தை உணர்ந்தான்.  அவனையே கவனித்துக் கொண்டிருந்த சின்ஹரன் சொன்னான். “என் ஆட்கள் மிக நம்பிக்கையானவர்கள். என்னுடன் நீண்ட காலம் இருப்பவர்கள். உயிரே போகும் நிலை வந்தாலும் உயிரை விடுவார்களே ஒழிய காட்டிக் கொடுக்க மாட்டார்கள். அதனால் நீங்கள் அது குறித்து எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை சேனாதிபதி. மேலும் குதிரைகள் கை மாறும் போது உடனடியாக பணமும் உங்கள் கைக்கு மாறியிருக்கும். இடையிடையே நானும் வருவேன். ஏதாவது நடைமுறைப் பிரச்சினைகள் நீங்கள் உணர்ந்து மாற்றங்கள் தேவையாக இருந்தால் அந்தச் சமயங்களில் சரி செய்து கொள்வோம்.”

 

பத்ரசால் ஓரளவு திருப்தியடைந்து தலையசைத்தான். சின்ஹரன் சொன்னான். “ஓரிரு முறை நம் வணிகம் பிரச்சினையில்லாமல் முடியும் போது நீங்கள் எங்களை விட அதிக உற்சாகம் அடைந்து விடுவீர்கள் சேனாதிபதி…. நீங்கள் ஆரம்பத்தில் எத்தனை குதிரைகள் மாற்றத் தயார் என்று சொன்னால் என் ஆள் அதற்கான பணத்துடன் அடுத்த வாரம் வந்து உங்களைச் சந்திப்பான்.”

 

பத்ரசால் யோசித்தான். முதல் முறையே அதிக எண்ணிக்கையில் ஆரம்பிப்பது ஆபத்து என்று அவனுக்குத் தோன்றியது. இந்த வணிக முறை அவனுக்குப் பழக்கமாகும் வரை சிறிய எண்ணிக்கையே பாதுகாப்பு என்று தோன்றியது. அவன் சொன்னான். “ஆரம்பத்தில் ஐம்பது குதிரைகள் போதும். பிறகு அதிகப்படுத்திக் கொள்வோம்.”

 

சின்ஹரன் அதற்குச் சம்மதித்தான். பத்ரசால் கேட்டான். ”உங்கள் ஆட்கள் எத்தனை காலத்திற்கு ஒரு முறை வருவார்கள்?

 

“அவர்கள் மாதமிரு முறை வருவார்கள். நான் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருவேன்”

 

“எத்தனை குதிரைகள் வரை வாங்குவீர்கள்?”

 

“எத்தனையானாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை சேனாதிபதி”

 

பத்ரசால் உள்ளூர உற்சாகத்தை உணர்ந்தான். அதிர்ஷ்டம் உண்மையாகவே அவனிடம் வந்து விட்டது.

 

சின்ஹரன் சொன்னான். “நாளை மறுநாள் நான் இங்கிருந்து கிளம்புகிறேன் சேனாதிபதி. நாளை நான் முதல் விளையாட்டு விளையாடி விட்டு மதுவருந்த வந்து விடுவேன். ஆனால் நாளை நீங்கள் மதுவருந்த என்னுடன் வர வேண்டாம். தொடர்ந்து விளையாடுங்கள். ஒற்றர்கள் பார்வையில் இது சூதாட்ட இடத்தில் ஏற்படக்கூடிய பரிச்சயம் என்ற வகையிலேயே இருப்பது நல்லது. அதையும் தாண்டிய நட்பு போலக் காட்டிக் கொள்ளாமல் இருக்க அது உதவும். நான் இனி மூன்று மாதங்கள் கழிந்து தான் வருவேன். அதற்குள் நம்மிடையே ஆறு வணிகத் தொடர்புகளாவது நடந்து முடிந்திருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை நம் வணிகம் முடியும் போதும் அதன் முடிவில் அடுத்த முறை எவ்வளவு குதிரைகள் தர முடியும் என்று குறிப்பிட்டால் வசதியாக இருக்கும்.”

 

பத்ரசால் அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் வகையில் தலையாட்டினான்.  இவனுடனான வணிகம் அவனுக்குப் பெருமளவு இலாபத்தைத் தரும் என்ற நம்பிக்கை அவனுக்குள் எழுந்தது. கார்த்திகேயன் எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசிக்க முடிந்தவனாய், எதையும் தெளிவாகப் பேசவும், செய்யவும் முடிந்தவனாய் இருக்கிறான். இது போன்ற புத்திசாலிகளின் சகவாசம் பிற்காலத்தில் சங்கடங்களை ஏற்படுத்துவதில்லை…

 

சின்ஹரன் சுற்றிலும் பார்த்தான். எல்லோரும் மதுவருந்திக் கொண்டு அவர்களுக்குள் பேசியபடி இருந்தார்கள். யாருடைய பார்வையும், கவனமும் இங்கில்லை. சின்ஹரன் தன் இடுப்பிலிருந்து சிறிய பொன் முடிச்சு ஒன்றை பத்ரசாலின் மதுக்கோப்பை இருக்கும் இடத்தில் வைத்து விட்டுத் தாழ்ந்த குரலில் சொன்னான். “நம்மிடையே உருவாகியிருக்கும் இந்தப் புதிய வணிகத் தொடர்பிற்கு தங்களை வரவேற்கும் விதமாக அடியேன் அளிக்கும் சிறு அன்பளிப்பு இது சேனாதிபதி. தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். நாளை நாம் சந்தித்தாலும் தனியாகப் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பதால் இப்போதே விடைபெற்றுக் கொள்கிறேன்.”

 

சின்ஹரன் எழுந்து சென்று விட்டான். அந்தப் பொன்முடிச்சை உடனடியாக எடுத்துக் கொண்ட பத்ரசால் அதிர்ஷ்டம் உண்மையாகவே வந்து விட்டது என்று சற்று முன் உணர்ந்தது நிரூபணம் ஆகி விட்டதென்று பெருமகிழ்ச்சி அடைந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்     







Wednesday, October 9, 2024

முந்தைய சிந்தனைகள் 111

 என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்!












Monday, October 7, 2024

யோகி 70

 

பாண்டியன் நேற்றிரவு வரை நடந்ததைச் சொல்லியிருந்த போதும், அதன் பின் நடந்ததாய் பாண்டியனும், சுகுமாரனும் விவரித்துச் சொன்ன அனுபவங்கள், மாயாஜாலக் கதைகளுக்குப் போட்டி போடும் வகையில் பிரம்மானந்தாவுக்குத் தோன்றின. அவர்களைத் தவிர வேறு யாராவது அவற்றைச் சொல்லியிருந்தால் கட்டுக்கதைகளாகவோ அல்லது மனப்பிராந்தியாகவோ அவர் நினைத்திருப்பார்.

 

சுகுமாரன் குரல் அடைக்கச் சொன்னார். “யோகிஜி, நேத்து வரைக்கும், என்னால பகல்லயாவது தூங்க முடிஞ்சுது. ஆனா இன்னைக்குக் காலைல இருந்து அதுவும் முடியல. கண்ணை மூடித் தூங்க ஆரம்பிச்சா போதும், மண்டை ஓடு தெரியுது. வயித்துல எதோ முடிச்சு விழற மாதிரி வலிக்குதுமருந்து சாப்பிட்டாலும் வலி குறைய மாட்டேங்குது. காலைல வயித்தை செக் செஞ்சு பார்த்த எங்க ஆஸ்பத்திரி டாக்டர் நான் எதுவும் வித்தியாசமா சாப்பிடலை, குடிக்கலைங்கறது நம்ப மாட்டேங்கறார்பின்னே எப்படி வயிறு இப்படி புண்ணாயிருக்குன்னு சந்தேகப்படறார்….”

 

அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார். பாண்டியனுக்கும் வயிற்று வலி தாங்க முடியவில்லை தான். அவரும் ஓநாய் அவர் வயிற்றைக் கிழித்து குடலை உருவிச் சாப்பிடுவது போல் உணர்ந்த பிறகு உறங்கவில்லை தான். ஆனாலும் அவர் சுகுமாரனைப் போல் புலம்பவில்லை. புலம்பல் பலவீனமான மனிதர்களுக்கானது. புலம்புவதால் பிரச்சினைகள் குறையும் என்றால் அவரும் தயங்காமல் அதைச் செய்வார். ஆனால் பிரச்சினைகள் தீர்வு கண்டு தான் தீர்க்கப்பட வேண்டுமேயொழிய, புலம்பித் தீர்வதில்லை….

 

அவருக்கு, பிரம்மானந்தாவிடம் தனிப்பட்ட முறையில் நிறைய பேச வேண்டியிருந்தது. ஆனால் சுகுமாரன் உடனிருக்கையில் அவற்றை எல்லாம் அவரால் பேச முடியாது. சுகுமாரனோ மந்திரவாதியும் வந்து, பிரச்சினை முழுவதுமாகத் தீராமல்  அங்கிருந்து போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

 

சுகுமாரனைப் போல் பாண்டியன் வாய்விட்டுப் புலம்பா விட்டாலும், அவருடைய நேற்றிரவு அனுபவங்களும் கூடுதல் பயங்கரமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை பிரம்மானந்தா அனுமானித்தார்.  எதிரிகள் மனிதர்கள் என்றால் அவர்களைச் சமாளிப்பது மிகவும் எளிது. அந்த ஆட்கள் எத்தனை வலிமையானவர்களாய் இருந்த போதிலும், சாமர்த்தியசாலிகளாய் இருந்த போதிலும் அவர்கள் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இப்போது எதிரிகளாய் எதிரில் மனிதர்கள் தெரியவில்லை. அது தான் சிக்கலே.

 

சுகுமாரன் கேட்டார். அந்த மந்திரவாதி எத்தனை மணிக்கு வருவார்?”

 

நாலு மணிக்கு அவர் வந்துடுவார். விமானம் சரியான நேரத்துல தான் வருது.” பிரம்மானந்தா சொன்னார்.

 

அவர் இதுல கைதேர்ந்தவர் தானா?”

 

அவர் பணம் அதிகமாய் வாங்கினாலும் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறவர்னு சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க சிலர் அவரை ரொம்பவே புகழ்றாங்க. அவர் கிட்ட ஒரு விசேஷ சக்தி என்னன்னா பிரச்சினையை யாரும் அவர் கிட்ட சொல்ல வேண்டியதில்லை. ஆள்கள் அவர் கிட்ட போய் நின்னாலே போதும், என்ன பிரச்சினைன்னு அவரே சொல்லிடுவாராம். அதிகமாய் அவர் வெளியிடங்களுக்குப் போகிறதில்லை. அவர் இருக்கற இடத்துக்குத் தான் எல்லாரும் போறாங்க. ஆனாலும் நான் சொன்னதுக்காக உடனே கிளம்பி வர்றார்.”

 

பிரம்மானந்தா சொன்னதைக் கேட்டு சுகுமாரனுடன் பாண்டியனும் திருப்தியுடன் தலையசைத்தார். பாதிக்கப்பட்டவர்கள் வாய் திறந்து எதுவும் சொல்லாமலேயே என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்துச் சொல்வது உண்மையான சக்தி தான். அந்தச் சக்தி இருப்பவனுக்கு பிரச்சினையைத் தீர்க்கும் சக்தியும் இல்லாமல் போகாது...

 

பாண்டியன் கேட்டார். “அப்படின்னா நீங்க இங்கே என்ன பிரச்சினை, யாருக்குப் பிரச்சினைன்னு அவர் கிட்ட எதுவுமே சொல்லலையா?”

 

இல்லை. பொதுவாய் அவரை அணுகறவங்க எல்லாருமே, பேய், ஆவி, சூனியம் மாதிரி விஷயங்களுக்காகத் தான் அணுகறாங்க. அதனால அவருக்கு அந்த விஷயமாய் தான் கூப்டறோம்னு தெரியாமல் இருக்காது. ஆனால் யாருக்குப் பிரச்சினைன்னும், குறிப்பாய் என்ன மாதிரியான பிரச்சினைன்னும் நான் சொல்லலை. அவராய் என்ன கண்டுபிடிச்சுச் சொல்றார்னு பார்ப்போம்

 

அவர்கள் மூவரும் அந்த மந்திரவாதியின் வருகைக்குக் காத்திருந்தார்கள்.

 

ந்திரவாதி தேவானந்தகிரி மாலை 4.05 க்கு யோகாலயம் வந்து சேர்ந்தார். அவருடைய குடுமியும், நீண்ட தாடியும், பாதி நரைத்திருந்தாலும், அவருக்கு வயது ஐம்பதுக்குள் தான் இருக்கும் என்று சுகுமாரனுக்குத் தோன்றியது. காரிலிருந்து இறங்கிய அவரை சுகுமாரனும், பாண்டியனும் தான் வெளியே வந்து வரவேற்றார்கள். பிரம்மானந்தா தனது அறையிலேயே அமர்ந்திருந்தார். அவர் பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, கவர்னர் போன்றவர்கள் வரும் போது தான் வெளியே வந்து வரவேற்பது வழக்கம்.  வெளிநாடுகளில் இருந்தும் அந்த அளவு முக்கியஸ்தர்கள் வந்தால் மட்டுமே வெளியே வந்து வரவேற்பார். மற்ற முக்கியஸ்தர்கள் எல்லாம் அவரிருக்கும் இடத்திற்குச் சென்றே அவரைத் தரிசிக்க வேண்டும்.

 

தேவானந்தகிரி தன்னை வரவேற்ற சுகுமாரனையும், பாண்டியனையும் வேற்றுக்கிரகவாசிகளைப் பார்ப்பது போல் வினோதமாகப் பார்த்தார்.

 

இந்த ஆள் ஏன் இப்படிப் பார்க்கறார்?’ என்று எண்ணிய  சுகுமாரன் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபடி கையை நீட்டினார்.

 

தேவானந்தகிரி தன் கையை நீட்டவில்லை.  தன் இரு கைகளையும் சேர்த்து கூப்பினார்.

 

சுகுமாரன் பாண்டியனையும் தேவானந்தகிரியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பாண்டியன் கைகளைக் கூப்ப, தேவானந்தகிரியும் கைகளைக் கூப்பினார். ஆனால் அப்போதும் அவர் அவர்களை பார்ப்பது இயல்பாய் இல்லை. அது ஏனென்று தெரியவில்லை. இருவரும் அவரை பிரம்மானந்தாவிடம் அழைத்துச் சென்றார்கள்.

 

பிரம்மானந்தா நீண்ட நாள் நண்பரை வரவேற்பது போல தேவானந்தகிரியை அன்புடன் வரவேற்றார். உலகப்புகழ் பெற்ற பிரம்மானந்தா அப்படி அன்புடன் வரவேற்றதில் தேவானந்தகிரி மனம் மகிழ்ந்தார். பிரயாண சௌகரியம் எல்லாம் எப்படி இருந்தது விசாரித்து அவரை பிரம்மானந்தா அமரச் சொன்னார்.

 

ஆனால் தேவானந்தகிரி பிரம்மானந்தா கைகாட்டிய இடத்தில் இருந்த சோபாவில் அமராமல், தள்ளி இருந்த ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டார். அவர் முன்பு அவர்களை வினோதமாகப் பார்த்ததற்கும், இப்போது சோபாவில் அமராமல் மரநாற்காலியை இழுத்துப் போட்டு அமர்வதற்கும் கூட ஏதேனும் பிரத்தியேகக் காரணங்களிருக்கும் என்று பாண்டியனுக்குத் தோன்றியது.

 

மர நாற்காலியில் அமர்ந்தவுடன் அவர் பாண்டியனையும், சுகுமாரனையும் கைகாட்டி, பிரம்மானந்தாவிடம் கேட்டார். “பிரச்சனை இவங்க ரெண்டு பேருக்குத் தானே?”

 

பிரம்மானந்தா பிரச்சினை ஒருவருக்கா, இருவருக்கா என்று கூட அவரிடம் தெரிவித்திருக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களே சென்று அவரை வரவேற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அப்படி இருக்கையிலும் தேவானந்தகிரி யாருக்குப் பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னதில் அவர் ஆச்சரியப்பட்டார்.  ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையசைத்தார்.

 

சோபாவில் அருகருகே அமர்ந்திருந்த பாண்டியனையும், சுகுமாரனையும் தேவானந்தகிரி கூர்ந்து பார்த்தார். பின் அவர் பார்வை அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் நிலைத்தது.

 

சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்து விட்டு அவர் சொன்னது அவர்கள் மூவரையும் அதிர வைத்தது.  

 

பிரச்சினை சின்னதாகவோ, சாதாரணமாகவோ இல்லை. இவங்க ரெண்டு பேர் மேலயும் வலிமையான பிரயோகம் ஆகியிருக்கு. இன்னும் ஒரு நாள் தாண்டியிருந்தால் இவங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்க வாய்ப்பிருக்கு.”

 

சுகுமாரனுக்கு அதிர்ச்சியுடன் ஆச்சரியமாகவும் இருந்தது. சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்து விடும் என்று அவரே பலமுறை பயப்பட்டிருக்கிறார். இந்த மந்திரவாதி தானாகக் கண்டுபிடித்து இதைச் சொன்னது பெரிய விஷயம் தான். இன்னும் ஒரு நாள் தாண்டுவதற்கு முன் இந்த மந்திரவாதியை வரவழைக்க முடிந்தது பாக்கியம் தான்

 

பாண்டியனும் திகைத்தார். அறிவாளியாகவும், அசராதவராகவும் பலராலும் பாராட்டப்பட்டு வந்த தனக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை நெருங்கி நிற்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தன்னுள்ளே எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தேவானந்தகிரியிடம் கேட்டார். “இதுக்கெல்லாம் காரணம் ஆவியா, இல்லை யாராவது மனுஷனா?

 

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, October 3, 2024

சாணக்கியன் 129


த்ரசாலுக்கு அன்றிரவு நீண்ட நேரம் உறங்க முடியவில்லை. சின்ஹரன் சொன்ன விஷயங்கள் அவனுக்கு ஆசையைத் தூண்டி விட்டிருந்தன. அவனுடைய பணப்பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தர முடிவுகட்ட முடிந்தவனாய் சின்ஹரன் தெரிந்தான். அவன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவன் காதில் ரீங்காரம் செய்கின்றன. “அங்கும் இதே பிரச்சினை தான். ஊதியம் மிகவும் குறைவு. ஒரு காலத்தில் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவர் பின் தன் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைத் தானே தேடிக் கொண்டார்.... அதுவும் ஒரு விதமான வணிகம் தான். இப்போது இருவரும் மிக நன்றாகச் சம்பாதிக்கிறோம்.”

 

எல்லா இடங்களிலும் இது நடக்கின்றது என்பது பத்ரசாலுக்கு இப்போது தான் தெரிகிறது. இத்தனை நாட்கள் சில்லறை தில்லுமுல்லுகளையும் பயந்து பயந்து செய்து கொண்டிருந்த அவனுக்கு பெரிய அளவில் எப்படிச் செய்ய முடியும் என்பது புரியவில்லை. அதைச் சொல்லாமல் சின்ஹரன் போய் விட்டான். அதையும் அவன் சொல்லியிருந்தால் அது நமக்கு ஒத்து வருமா என்று இன்னேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ராக்‌ஷசர் மாதிரி ஆட்கள் இங்கிருக்கையில் பெரிய அளவில் செய்தால் ஆபத்து கண்டிப்பாக இருக்கும் என்று பத்ரசாலின் அறிவு எச்சரித்தது. ஆனால் எல்லாவற்றில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வழிகள் அறிவாளிக்குத் தெரியாமல் இருப்பதில்லை” என்று அலட்டிக் கொள்ளாமல் சின்ஹரன் சொன்ன விதம் அவனுக்குப் பிடித்திருந்தது.

 

சின்ஹரனைப் பார்த்தால் மிகவும் தெளிவான ஆளாகத் தான் தெரிகிறான். வெறுமனே வார்த்தைகளை வீசுபவன் போலத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கவனிக்க முடிந்தவனாக இருக்கிறான். சூதாட்ட விடுதியில் ஒற்றன் ஒருவனின் கண்காணிப்பை அவன் கவனித்திருந்த விதம் நினைவுக்கு வந்தது. உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்பவன் அல்ல அவன் என்பதற்கும் சூதாட்ட விடுதியில் கட்டுப்பாட்டோடு ஒரு நாளுக்கு ஒரு ஆட்டத்திற்கு மேல் ஆடுவதில்லை என்று சொன்னதை மிகுந்த உறுதியோடு பின்பற்ற முடிந்ததே சான்று. இப்போதும் சின்ஹரன் அவனிடம் எதையும் செய்யுங்கள் என்று வலிய வந்து சொல்லவில்லை. எங்கேயோ நடந்த ஒரு விஷயத்தைத் தகவலாக அவனிடம் நட்பு ரீதியாகச் சொல்லியிருக்கிறான். அவ்வளவு தான். இதையெல்லாம் யோசிக்க யோசிக்க விரிவாக சின்ஹரனிடம் ஒரு முறை பேசித் தெரிந்து கொண்டு தீர்மானிப்பது நல்லது என்று பத்ரசாலுக்குத் தோன்றியது.

 

மறுநாள் இரவு வரும் வரை மிகவும் கஷ்டப்பட்டுப் பொறுத்துக் கொண்டு இருந்த பத்ரசால் மாலை முடிந்தவுடன் பரபரப்புடன் சூதாட்ட விடுதிக்குப் போனான். அப்போது தான் சின்ஹரனும் அங்கு வந்து சேர்ந்திருந்தான். இருவரும் நட்புடன் வணக்கம் தெரிவித்துக் கொண்டார்கள். அன்று இருவரும் கலந்து கொண்ட சூதாட்டம் இருவருக்கும் பண இழப்பில் முடிந்தது. பத்ரசால் முன் இரண்டு நாட்களில் சம்பாதித்த பணத்தை இன்று இழந்து விட்டான். அதே நிலைமை தான் சின்ஹரனுக்கும் என்றாலும் அவன் சிறிதும் அலட்டாமல் வென்றவர்களுக்குப் பாராட்டு தெரிவித்ததை பத்ரசால் கவனித்தான். பத்ரசாலால் அந்த மனநிலையில் இருக்க முடியவில்லை.

 

சின்ஹரன் தான் முன்பே சொல்லியிருந்த நிலைப்பாட்டின்படி அடுத்த ஆட்டம் ஆட அங்கே தங்காமல் மதுவருந்த நகர்ந்தான். பத்ரசாலும் அவனுடனேயே நகர்ந்தான். அவனுக்கு சின்ஹரனிடம் இன்று பேசி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமிருந்தது. இன்று இருவரும் மற்றவர்களிடமிருந்து மிகவும் தள்ளி ஒரு மூலைப் பகுதியில் அமர்ந்து கொண்டார்கள்.

 

பத்ரசால் தானாக அந்தப் பேச்சை எடுப்பதற்குத் தயங்கினான். பேச்சை அந்த விஷயத்துக்குக் கொண்டு சென்ற பிறகு பேசுவது தான் இயல்பாய் இருக்கும் என்று தோன்றியது. அதனால் முதலில் சின்ஹரனின் வாணிபம் குறித்துப் பேசித் தகவல்களைத் தெரிந்து கொள்வதென்று பத்ரசால் முடிவெடுத்தான்.

 

“நீங்கள் குறிப்பிட்ட வாணிபம் மட்டும் செய்கிறீர்களா கார்த்திகேயன், இல்லை எல்லாமே செய்கிறீர்களா?”

 

“ஆரம்பத்தில் பலவிதமான வாணிபத்தைச் செய்து கொண்டிருந்தேன் சேனாதிபதி. சில வருடங்களாக குதிரைகள் மட்டும் தான் என் வாணிபமாக இருக்கின்றன.”

 

“எங்கெல்லாம் வாணிபம் செய்கிறீர்கள்?”

 

”தற்போது காந்தாரத்திலிருந்து கலிங்கம் வரை வாணிபம் செய்கிறேன்.”

 

“இங்கு தங்களை இதற்கு முன் பார்த்ததாய் எனக்கு நினைவில்லையே.”

 

“பாடலிபுத்திரமும், கலிங்கமும் இந்த முறை தான் என் வாணிபப் பயணத்தில் சேர்ந்திருக்கின்றன.”

 

“தங்கள் குதிரை வாணிபம் எப்படிப் போகிறது?”

 

“பொதுவாக நன்றாகவே போகின்றது சேனாதிபதி. குறிப்பாக வாஹிக் பிரதேசத்தில் சந்திரகுப்தன் சமீப காலமாக நிறையவே குதிரைகள் வாங்குகின்றான். முக்கியமாகப் பாரசீகக் குதிரைகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறான். பாரசீகத்திலிருந்து வரும் குதிரைகள் அனைத்தும் அவனிடமே விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அவனைத் தாண்டி அவற்றைக் கொண்டு வர முடிவதில்லை”

 

சந்திரகுப்தனின் பெயரைக் கேட்டவுடன் பத்ரசாலுக்கு பாடலிபுத்திர அரசவைக்கு வந்து சபதமிட்டுச் சென்ற அந்தணரின் நினைவு வந்தது. தனநந்தனுக்கு எதிராகத் தனிமனிதனாக இருந்த போதும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அச்சமில்லாமல் பேசிய அந்த மனிதர் இன்று தனி மனிதரல்ல. அவர் மாணவன் பின்னணியில் உள்ள பெரும் சக்தி அவர் தான் என்று பலரும் சொல்கிறார்கள். பத்ரசால் கேட்டான். “சந்திரகுப்தன் பாரசீகக் குதிரைகளை அதிக அளவில் வாங்க நிறைய செல்வம் வேண்டுமே. அத்தனை  செல்வத்தை அவன் எப்படி பெற்றான்?”

 

சின்ஹரன் சிரித்தபடியே சொன்னான். “மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒருவன் மீது விழும் வரை தான் கஷ்டம் சேனாதிபதி. அப்படி கடைக்கண் பார்வை ஒருவன் மீது விழுந்து விட்டால் அதன் பின் செல்வம் வந்து கொண்டே இருக்கும். பின் நிற்காது. வந்து குவிய ஆரம்பித்து விடும். அவனுக்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். இப்போது அவன் செல்வத்தை வாரியிரைக்கிறான்.”   

 

பத்ரசால் முகத்தில் ஏக்கம் படர்ந்தது. செல்வத்தை வாரியிரைக்க வேண்டாம், அதைக் கணக்குப் பார்க்க வேண்டியிருக்காமல் விருப்பப்படி செலவு செய்ய முடிந்தாலே போதும். அதுவே பெரிய பாக்கியம். அவன் நிலைமையோ ஒரு ஜாண் ஏறினால் ஒரு முழம் சறுக்கும் நிலையில் இருக்கிறது. இன்றைய தோல்வி நினைவுக்கு வர அவன் சொன்னான்.  “கார்த்திகேயன், நீங்கள் சூதாட்ட நுணுக்கங்கள் எனக்கு நன்றாகத் தெரிவதாகச் சொன்னீர்கள். இப்போதும் தோற்று விட்டேன் பார்த்தீர்களா?.”

 

சின்ஹரன் சொன்னான். “எதிலும் நுணுக்கங்களை நன்றாகத் தெரிந்தவன் தோற்க மாட்டான் என்றில்லை. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஆட்டத்தின் நுணுக்கங்களுக்கு இணையாக மற்ற விஷயங்களும்  இருக்கின்றன சேனாதிபதி. அந்த மற்றவை ஒருவனுக்கு அனுகூலமாக இருக்கா விட்டால் நம் ஆட்டத்திறமை வெற்றி பெறப் போதாததாக அமைந்து விடுகின்றது. பின் உண்மையைச் சொல்லப் போனால் சூதாட்டம் என்றுமே செல்வம் சம்பாதிக்க நம்பத் தகுந்ததல்ல. அதன் இயல்பே யாராலும் கணிக்க முடியாதது தான். அதனால் தான் நீங்கள் சூதாட்டத்தினாலேயே கடைசி வரை செல்வந்தனாக இருக்கும் ஒருவனை எந்தக் காலத்திலும் காண முடியாது. என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். முந்தா நாள் பெற்ற செல்வத்தை இந்த இரண்டு நாட்களில் இழந்து பழைய நிலைமைக்கே வந்து விட்டேன்.”

 

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை யோசித்தவனாய் பத்ரசால் சொன்னான். “ஆனால் செல்வத்தை இழந்த போதும் நீங்கள் எந்த வருத்தமும் அடையாமல் இருந்தீர்கள். பார்க்க வியப்பாக இருந்தது.”

 

“எதிர்பாராதது நடக்கும் போது தான் அதிர்ச்சியும் வருத்தமும் வந்து நம்மைப் பாடாய்படுத்துகின்றன. இது எதிர்பார்த்தது தான். மேலும் இறைவன் அருளால் இப்போதைக்கு செல்வம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல சேனாதிபதி. நான் வாணிபத்திலும், நேற்று தங்களிடம் வெளிப்படையாகச் சொன்னது போல் என் நண்பன் மூலமாகவும் தாராளமாகச் சம்பாதிக்கின்றேன். அதனால் வருத்தப்பட ஒன்றுமில்லை”

 

சின்ஹரனாக அந்த விஷயத்தை மறுபடியும் பேசியது பத்ரசாலுக்குத் திருப்தியைத் தந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை அவன் நழுவ விட விரும்பவில்லை. அவன் சுற்றிலும் தன் பார்வையைச் சுழற்றினான். யாரும் அவர்கள் பேச்சைக் கேட்க முடிந்த தூரத்தில் இல்லை.

 

சின்ஹரன் மெல்லச் சிரித்தபடி சொன்னான். “ஒற்றன் இன்றும் நம் பேச்சைக் கேட்க வந்தமர்ந்தான். ஆனால் அவன் நான் சூதாட்டம் பற்றித் தத்துவம் பேச ஆரம்பித்தவுடனேயே இடத்தைக் காலி செய்து விட்டான்.”    

 

பத்ரசால் தன் மனதினுள் அவனுடைய புத்திசாலித்தனத்தையும், கூரிய பார்வையையும் மெச்சியபடி தாழ்ந்த குரலில் சொன்னான். “இழப்பையும், செலவுகளையும் பொருட்படுத்தாத அளவுக்கு செல்வத்தை ஈட்டும் இரகசியத்தை எனக்கும் சொல்லி உதவுங்களேன் நண்பரே”

 

சின்ஹரன் புரியாதவன் போலக் கேட்டான். “நீங்களும் வாணிபத்தில் ஈடுபட விரும்புகிறீர்களா நண்பரே?”

 

பத்ரசால் மறுபடியும் தாழ்ந்த குரலில் சொன்னான். “உங்கள் நண்பருடன் சேர்ந்து நீங்கள் செய்யும் வணிகத்தைப் போல நானும் செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன்.”

 

(தொடரும்)

என்.கணேசன்