என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 30, 2026

சதுரங்கம் 29

 


ர்ஜுன் தன்னை சுதாரித்துக் கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. “என்ன ஐயா சொல்றீங்க? அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துகிட்டாங்களா?”

 

ஆமா தம்பி. என்ன காரணம்னு யாருக்கும் சரியா தெரியா தெரியலைன்னாலும் வறுமை தான் காரணம்னு தோணுது. ரெண்டு பேரும் தினக்கூலிக்குப் போய்கிட்டு இருந்தாங்க. இந்தக் கிராமத்துல வேலை இல்லைன்னா பக்கத்து கிராமத்துக்குப் போவாங்க. கஷ்ட ஜீவனம் தான் பாவம். ஆனா அந்தக் கஷ்டத்துலயும் மகுடபதி அடுத்தவங்க கிட்ட கையை நீட்டி நின்னவரில்லை. மானஸ்தன்...”

 

அம்மா தன் பெற்றோரைப் பற்றியோ இளமைக்காலம் பற்றியோ ஏன் பேசுவதைத் தவிர்த்தாள் என்பது இப்போது புரிந்தது. பெற்றோரை இழந்து நிர்க்கதியாக, அனாதையாக அவள் நின்றிருந்த போது எத்தனை வேதனையை அனுபவித்தாளோ? அம்மாவை நினைக்கையில் அவனுக்கு மனம் இளகியது.

 

மாடசாமிக்கு மகுடபதியின் உறவினர்கள் யாரையும் தெரிந்திருக்கவில்லை. மகுடபதியின் மகள் என்ன ஆனாள், இங்கிருந்து எங்கே போனாள் என்பதெல்லாம் தெரியவில்லை. பாவப்பட்ட நல்ல மனிதர்கள் என்பதைத் தவிர அவருக்குக் கூடுதலாக அவர்களைப் பற்றிச் சொல்ல எதுவுமிருக்கவில்லை. அதனால் அர்ஜுன் கிளம்பத் தீர்மானித்த போது தான் மாடசாமி வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வாசுதேவனின் புகைப்படத்தைப் பார்த்தான்.

 

தலைவர் படத்தை மாட்டியிருக்கீங்க. அவரோட ஆதரவாளரா நீங்க?”

 

மாடசாமி வாசுதேவனின் புகைப்படத்தை பெருமையாகப் பார்த்து விட்டு ஆமாம் என்று தலையாட்டினார்.  அவரைப் பல தடவை நேரில் பார்த்துப் பேசற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. இந்தக் கிராமத்துக்கு வந்ததால கிடைச்ச பாக்கியம் அது

 

அர்ஜுனுக்கு அவர் ஏனப்படி சொல்கிறார் என்று புரியவில்லை.  ஏன் ஐயா அப்படிச் சொல்றீங்க? வேற இடத்துல இருந்திருந்தா உங்களுக்கு அவரைப் பார்த்துப் பேச முடிஞ்சிருக்காதா?”

 

அதுக்கு நான் அவரிருக்கற இடத்திற்குப் போய் அல்லவா போயிருக்கணும். இங்கே அவர் அடிக்கடி வந்து போய்கிட்டு இருந்ததால, அவர் இங்கே வந்தப்ப எல்லாம் போய்ப் பார்த்து பேச முடிஞ்சதுன்னு சொல்ல வர்றேன்.”

 

இங்கே ஏன் அவர் வந்து போய்கிட்டு இருந்தார்?” அர்ஜுன் குழப்பத்தோடு கேட்டான்.

 

என்ன தம்பி உங்களுக்குத் தெரியாதா? அவர் இந்த கிராமத்துப் பொண்ணைத் தானே கட்டிகிட்டார்? யசோதாம்மாவோட தாய்வீடு இங்கே தான இருந்துச்சு?”

 

அர்ஜுனுக்கு இந்தத் தகவலும் அதிர்ச்சியைத் தந்தது. அம்மாவும், பாட்டியும் ஒரே ஊர்க்காரர்களா? அம்மாவின் திருமணத்திற்கு முன்பே அம்மாவைப் பாட்டிக்குத் தெரியுமா? 

 

மாடசாமி சொல்லிக் கொண்டே போனார். ”அவர் மாமனார் வீட்டுக்கு வர்றப்ப எல்லாம் நாங்க அங்கே போய் அவரைப் பார்க்காம இருக்க மாட்டோம். யார் போனாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவார். அவரை மாதிரி தங்கமான ஒரு நல்ல தலைவரை எல்லாம் இந்தக் காலத்துல பார்க்க முடியுமா தம்பி? இப்பத்து ஆளுக எல்லாம் தேர்தல் சமயத்துலன்னா தலையைக் காட்டுவானுங்க. கையெடுத்துக் கும்பிடுவானுங்க. மற்ற சமயத்துல எல்லாம் அவங்களை நெருங்கவாவது முடியுமா, சொல்லுங்க தம்பி

 

முடியாதுஎன்று அர்ஜுன் ஒத்துக் கொண்டான். சொந்த சொத்தைக் கூட மக்களுக்காக எந்த அரசியல்வாதி எப்போது செய்திருக்கிறார்? நாணயம், நேர்மையின் திருவுருவமாக இருக்கும் அவனுடைய அப்பா கூட அதைச் செய்ய மாட்டார்.

 

மாடசாமி சொன்னார். “சொல்லப் போனா தலைவரோட மாமனாரும், மச்சான்களும் தான் எங்களைக் கோவிச்சுக்குவாங்க. எங்க மாப்பிள்ளை கூட கொஞ்சம் நேரம் கூட எங்களைப் பேச விடமாட்டேங்கறீங்களேன்னு திட்டுவாங்க.”

 

அந்தக் குடும்பத்து ஆளுக யாராவது இப்பவும் இந்தக் கிராமத்துல இருக்காங்களா?”

 

இல்லை தம்பி. அந்தக் குடும்பம் இருபது வருஷத்துக்கு முன்னாடியே இங்கே இருக்கற சொத்தை எல்லாம் வித்துட்டு டவுன்ல போய் செட்டிலாயிட்டாங்க. யசோதாம்மாவோட தம்பி மட்டும் எப்பவாவது ஒரு தடவை இந்தக் கிராமத்துல இருக்கற அவங்க குலதெய்வம் கோயிலுக்கு, குடும்பத்தோட வந்துட்டு போவார். ”

 

ஒருவேளை அந்த வீட்டுக்கு அப்பா வந்து போன ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவைப் பார்த்திருக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

தலைவரோட பசங்களும் இங்கே அடிக்கடி வந்துகிட்டிருந்தாங்களா ஐயா?”

 

சின்னப் பசங்களாய் இருந்தவரைக்கும் வந்துகிட்டு இருந்திருக்கலாம். நான் இங்கே வந்த பிறகு அவங்க இங்கே அதிகமாய் வந்து நான் பார்க்கலை தம்பி. தலைவர் இறந்ததுக்கப்பறம் யசோதாம்மா இங்கே வந்ததே கூடக் குறைவு தான். நான் யசோதாம்மாவை இங்கே கடைசியாய் பார்த்தது அவங்க அண்ணா காலமானப்ப. அது 22 வருஷங்களுக்கு முன்னாலே….”

 

அர்ஜுன் கேட்டான். “நீங்க போய் தலைவரைப் பார்த்துகிட்டு இருந்த காலத்துல உங்க மாதிரி மகுடபதியும் தலைவரைப் பார்க்க வந்ததுண்டா

 

மாடசாமி சிரித்தபடி சொன்னார். “இல்லை தம்பி. மகுடபதி மாதிரியான ஆள்க உலகம் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே தான். அவங்க, அவங்க குடும்பம், உழைப்பு, ஊதியம்னு மட்டும் தான் அந்த உலகம் இருக்கும். ஒரு நாள் பிரச்சினை இல்லாமல் கடந்துச்சுன்னா அதுவே அவங்களுக்குப் பெரிய விஷயம். அதைத்தவிர வேறு எதுலையும் அவங்க ஈடுபடறதில்லை. கவனிக்கறதுமில்லை.”

 

அர்ஜுனுக்கு அம்மா ஏன் அப்படி இருக்கிறாள் என்று இப்போது புரிந்தது. அவள் வளர்ந்த விதமே அப்படித்தான். கூடுதலாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவள் கவிதைகளை எழுதி வைத்திருக்கிறாள் என்பதைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. இப்போதும் அம்மாவுக்கு உலக நடப்புகள் தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் கிடையாது.

 

மகுடபதியும் அவர் மனைவியும் இறந்துட்டதால இன்சூரன்ஸ் பணத்தை அவர் மகளுக்குத் தான் தரமுடியும். மகுடபதி மகள் பத்தி யாரைக் கேட்டால் தெரியும்?”

 

தெரியலையே தம்பி

 

கடைசியாக மாடசாமியை அர்ஜுன் கேட்டான். “உங்க தலைவரோட ரெண்டு மகன்களே அரசியல்ல எதிரும் புதிருமா இருக்காங்க. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ஐயா?”

 

தலைவரோட மூத்த மகன் ஞானமூர்த்தி தான் அரசியல்ல இருக்காரு. சின்னவர் ராஜாராம், பின்னால இருந்து ஆளும் கட்சியை இயக்கறாருன்னு சொல்றாங்க. ஆனா அது பிரயோஜனம் இல்லையே தம்பி. தலைவரோட மகன் களத்துல நேரடியாய் இறங்கறதல்லவா பெருமை? அதுவும் அவர் அண்ணனை எதிர்த்து ஆதரிக்கிறது திருட்டுப்பசங்களை. அது நியாயமில்லையே

 

உங்க ஆதரவு யாருக்கு ஐயா?”

 

மூத்தவருக்குத் தான். அவர் எதையும் நியாயமாய், வெளிப்படையாய் செய்யறார். நேர்மையாய்ப் பேசறார். ஆனால் அது எந்த அளவுக்கு அவருக்குக் கைகொடுக்கும்னு தெரியல தம்பி.”

 

அர்ஜுன் மாடசாமிக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

 

விமல் ராஜா சிங் சொன்ன நேரத்திலேயே அவனுடைய கடைக்குச் சென்றான். கடைசி நேரத்தில் ராஜா சிங் கையை விரித்து விடுவானோ என்று விமலுக்குப் பயமாக இருந்தது. நேற்று இரவு நிம்மதியாகத் தூங்கி எழுந்த அவனுக்கு இன்று காலை வரை இருந்த நிம்மதி பிறகு விடைபெற்றுக் கொண்டது. கஷ்ட காலங்களில் ஒரு சமயத்தில் இருக்கும் தைரியம் இன்னொரு சமயத்தில் இருப்பதில்லை

 

அவன் சென்ற போது ராஜாசிங் கடையில் வேறு ஆட்களும் இருந்தார்கள். விமலைப் பார்த்த போது ராஜா சிங் முகத்தில் அவனை அறிந்திருக்கும் அறிகுறி கூட இல்லை. அதைப் பார்த்த விமலுக்குப் பக்கென்றது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் புதிய மொபைல் போன்களைப் பார்க்க ஆரம்பித்தான். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் செய்தான். அதற்குள் மற்ற வாடிக்கையாளர்கள் வந்த வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

 

அவர்கள் சென்ற பின் ராஜாசிங் கல்லாவிலிருந்தபடியே விமலைப் பார்த்து, அருகே வரும்படி சைகை செய்தான். விமல் அருகே சென்றவுடன் ஒரு சிறிய தாளை அவனிடம் நீட்டினான். அதில் நானாஜி தேஷ்முக், 5, கோல்டன் ஸ்டார் அபார்ட்மெண்ட்ஸ், 298 பட்டேல் ரோடு, கரோல் பாக்,  டெல்லி 110005. என்ற முகவரி இருந்தது. அந்தப் பெயர், விலாசத்தில் தான் சிம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை விமல் புரிந்து கொண்டு தலையை ஆட்டினான்.

 

ராஜா சிங் கையை நீட்ட விமல் புதியதாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த மொபைலையும் கொடுத்தான். ராஜா சிங் இன்னொரு சிறிய தாளை எடுத்துரூ3000 + ரூ13580 = ரூ 16580/-”என்று எழுதினான்.

 

விமல் அந்தத் தொகையை எடுத்துக் கொடுத்தவுடன் அந்த புதிய மொபைலில் சிம்மை பொருத்தித் தந்தான். விமல் பரம திருப்தியுடன்ரொம்ப தேங்க்ஸ்என்றான். ராஜா சிங் முகத்தில் சிறு புன்னகைக் கீற்று தோன்றி மறைந்தது. விமல் வெளியே வந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்


ஆகஸ்ட் 4 வரை நடக்கும் ஒசூர் புத்தகத் திருவிழாவில் என்.கணேசனின் நாவல்கள் அரங்கு எண் 19,  20 மகேஸ்வரி புக் ஸ்டாலில் கிடைக்கும்.


Monday, July 27, 2026

ரட்சகன் 2

 


ப்சல்கானைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவலாளி தன் கண்களைச் சந்தேகித்தான். ’அப்சல்கான் புன்னகைக்கிறானா? நான் பார்த்தது சரிதானா?’

 

திகார் சிறையில் அப்சல்கானைப் போல் தினசரிகள் அனைத்தையும் முழுவதுமாகப் படிப்பவர்கள் குறைவு. அதிலும் அவனைப் போல் ஒரு செய்தி விடாமல் நீண்ட நேரம் படிப்பவர்கள் இல்லவே இல்லை என்று சொல்லி விடலாம். உலகின் அதிபயங்கரவாதிகளில் ஒருவன் என்று சொல்லப்படும் அவனைக் கண்கொத்திப்பாம்பாக கவனிக்கும்படி அவனைப் போன்ற காவலாளிகள் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அங்கு அந்தக் காவலாளி காவலில் இருக்கும் போதெல்லாம் அப்சல்கானை விடாது கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். இது வரை எல்லா நாட்களும் ஒன்று போலவே சுவாரசியமில்லாமலும், வித்தியாசமாக எதுவும் நடக்காமலும் தான் இருந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்சல்கான் அதிசயமாய் ஒரு வாரப்பத்திரிக்கையை எடுத்துப் படிக்கிறான். புன்னகைக்கிறான்….

 

அப்சல்கான் எழுந்து அந்தக் காவலாளி அருகே வந்தான். காவலாளி துப்பாக்கியை உபயோகிக்கத் தயார் நிலைக்கு உடனே மாறினான். அப்சல்கான் தெளிவான குரலில் சொன்னான். அடுத்த நிமிடம் அடுத்த அதிசயம் நடந்தது. “எனக்கு என் வக்கீலைப் பார்க்க வேண்டும்”. அந்தக் காவலாளி முதல் முறையாக அப்சல்கானின் குரலைக் கேட்கிறான்.

 

க்கீல் காளிதாஸை உச்சநீதிமன்ற வட்டாரத்தில் அறியாதவர்கள் யாருமில்லை. அவர் சட்ட மேதையோ, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்தவரோ அல்ல. ஆனாலும் அவர் ஏன் பிரபலம் என்றால், யாரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வழக்குகளையும் அவர் கவலைப்படாமல் ஏற்றுக் கொள்வார். தீவிரவாதிகள், கொடூரமான கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள், பெருங்குற்றவாளிகள் என்று வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்தவர்கள் எல்லாம் அதிகமாக உச்சநீதிமன்றம் வரும் போது அவரைத் தான் நாடி வருவார்கள். பல வக்கீல்கள் போல அவர் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் அந்த வழக்கை மறுக்க மாட்டார். அதே போல் வெற்றிக்கு வாய்ப்பே இல்லா விட்டாலும் ஒதுங்க மாட்டார். அதிகமாக பணத்தைத் தந்தால் அந்த வழக்குகளை ஏற்றுக் கொண்டு நடத்துவார். 

 

சட்ட நுணுக்க வல்லுனர் அவரல்ல என்றாலும் அவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மிக நன்றாக அறிந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பற்றியும் அவர் மிகத் துல்லியமாக அறிந்தவர். இது போன்ற வழக்குக்கு இந்த நீதிபதி இந்தத் தீர்ப்பு தான் வழங்குவார் என்று அவர் முன்கூட்டியே சொல்ல முடிந்தவர். உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆட்களையும், அவர்களிடம் வேலை ஆக யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூட அவர் நன்றாக அறிந்தவர். வழக்குகளில் வெற்றி பெற்றுத் தரமுடியாத அளவு குற்றம் தெளிவாக இருந்தாலும் வழக்கை எப்படி முடிந்த வரை நீட்டிப்பது, தண்டனையை எப்படி தள்ளிப் போடுவது அல்லது குறைப்பது என்பதை அவர் கச்சிதமாக அறிவார்.  அவரது சில்லறைத்தனமான தந்திரங்களை உணரும் சில நேர்மையான நீதிபதிகள் அவரைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்ததுண்டு. ஆனால் அவர் அதை எப்போதும் அவமானமாக எடுத்துக் கொண்டதில்லை. எதற்காக அவர் கண்டிக்கப்பட்டாரோ அதை அவர் கூச்சமோ தயக்கமோ இல்லாமல் தொடர்ந்து செய்வார். ஃபீஸ் விஷயத்தில் தான் அவர் மிகவும் கறாராக இருப்பாரே ஒழிய அவர் மற்ற அனைத்திலும் கண்டிப்போ, எதிர்ப்புகளோ, கவலையோ அற்ற மென்மையானவர் தான்.

 

திகார் சிறைச்சாலையிலிருந்துஅப்சல்கான் அவரைச் சந்திக்க விரும்புகிறான்என்ற செய்தி அவரை வந்தடைந்த போது அவர் ஆச்சரியப்பட்டார். அப்சல்கானுக்கு அவரிடம் பேசவோ, அவருக்கு அப்சல்கானிடம் பேசவோ எதுவுமிருப்பதாக அவர் நினைக்கவில்லை.  டெல்லி உயர்நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்து, பின் அவன் மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றத்திற்கு வர அவரை அணுகிய போது தீர்ப்பு வேறு விதமாக வாய்ப்பில்லை என்று தெளிவாகச் சொல்லிய அவர், முடிந்த வரை உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பல வருடங்களுக்குத் தள்ளிப் போடலாம் என்ற உத்தரவாதம் மட்டுமே அவனுக்கு அளித்திருந்தார். அவனும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அவர் அவனுக்கு வாக்களித்தபடி சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வழக்கு வாய்தாக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருமாறு அவர் பார்த்துக் கொள்கிறார். இதற்கு மேல் பேசவோ செய்யவோ எதுவுமில்லை. அப்படி இருக்கையில் அவன் ஏன் அழைக்கிறான் என்று அவருக்குப் புரியவில்லை.

 

சூடு சொரணை அற்றவர் என்று சகாக்களால் கூறப்படும் காளிதாஸுக்கே அப்சல்கானைச் சந்தித்துப் பேசுவதில் சிறிது படபடப்பு இருந்தது. காரணம் அவனிடம் பேசுகையில் அவனுக்குள்ளே வெடிக்கக் காத்திருக்கும் ஒரு எரிமலையை அவர் அடிக்கடி உணர்வதுண்டு. அவன் சிறைச்சாலையில் இருக்கையில் அவரிடம் இதுவரை பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் அவன் பேசாத  வார்த்தைகள் அவரை எச்சரிக்கை செய்தன. அந்த வார்த்தைகளைக் கேட்க நேரிட்டு விடுமோ என்று பயமுறுத்தின. அப்படி ஏன் தோன்றுகின்றது என்று அவரால் குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் அந்த உணர்வு அவரிடம் எப்போதும் இருந்து வருகிறது.  இப்போது என்ன சொல்வானோ என்ற படபடப்புடன் தான் அவர் திகார் சிறைக்குச் சென்றார்.

 

அவனை அவர் சந்தித்த போது மரியாதை நிமித்தம்எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவன் அந்தக் கேள்வி பைத்தியக்காரத்தனமானது என்பது போல் பார்த்தானே ஒழிய பதில் சொல்லவில்லை. “இங்கே ஒருவன் எப்படி இருப்பான்?” என்ற பதில் கேள்வியை அவன் கேட்பது போல் அவனது மௌனம் இருந்தது. ’பின் என்ன தான் உன்னிடம் பேசுவதுஎன்று மனதுக்குள் அவனுடைய மௌனத்திற்குப் பதிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

 

அப்சல்கானுக்கு இரண்டடி தூரத்தில் ஒரு காவலன் நின்று கொண்டிருந்தான். அப்சல்கான் அவனை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்தான். தானாக அந்தக் காவலாளி மேலும் இரண்டடி தள்ளி நின்றான்.

 

அப்சல்கான் மெல்லிய குரலில் காளிதாஸிடம் சொன்னான். “என் ஆளிடம் ஒரு தகவல் சொல்ல வேண்டும்.”

 

காளிதாஸ் தன் முந்தைய அனுபவத்தால் காதுகளைக் கூர்மையாக்கித் தான் அந்த வார்த்தைகளைக் கேட்க முடிந்தது.

 

காளிதாஸால் அவன் குரலுக்கு இணையாக மெலிதாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. அவர் பேசுவது அந்தக் காவலாளி காதில் விழுந்தாலும், அதை வைத்து அவன் அப்சல்கானின் கேள்வியை யூகிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதை அப்சல்கான் விரும்ப மாட்டான் என்பதையும் உணர்ந்த காளிதாஸ் பார்வையாலேயே அவனிடம் கேட்டார். “என்ன சொல்ல வேண்டும்?”

 

அப்சல்கான் சொன்னான். “இந்த வார உமன்ஸ் வர்ல்டில் பதினாறாம் பக்கக் கட்டுரையைப் படிக்கச் சொல்லுங்கள்.”

 

காளிதாஸ் திகைத்தார். ‘இது என்ன சிறுபிள்ளைத்தனம். இதற்கா என்னை இங்கே வரவழைத்தாய்?’ என்று கேட்க அவர் நாக்கு துடித்தாலும் அதை அவனிடம் வாய் விட்டுக் கேட்பது ஆபத்தானது என்று அவருடைய அறிவு எச்சரித்தது.

 

சரி வேறென்ன?’ என்று அவர் அவனிடம் பார்வையிலேயே கேட்டார். சிறு தலையசைப்பில் அவன்வேறொன்றுமில்லைஎன்று தெரிவித்து விட்டு எழுந்தான்.

 

வந்தமர்ந்து இரண்டே நிமிடங்களில் சந்திப்பு முடிந்து கிளம்பும் ஒரே வக்கீல் இந்த சிறைச்சாலை வரலாற்றில் நாமாகத் தான் இருக்கும் என்று எண்ணியபடி காளிதாஸும் புறப்பட்டார்.

 

காரில் தன் வீட்டுக்குச் செல்கையில் அப்சல்கானின் வித்தியாசமான கோரிக்கை காளிதாஸைக் குழப்பியது. வார்த்தைகளைக் கூட அளந்து பேசும் இவன் பைத்தியக்காரத்தனமான விஷயத்தைச் சொல்ல நம்மை அழைத்திருக்க வாய்ப்பில்லையே என்று எண்ணியபடி வந்த அவர் வழியில் தினசரிகள், வார மாத இதழ்கள் விற்கும் ஒரு கடையைப் பார்த்து காரை நிறுத்தி அந்த வார உமன்ஸ் வர்ல்டு வாங்கினார்.

 

வாங்கி அந்த வார இதழைப் பிரித்தபடி வந்து காரில் அமர்ந்த அவர் பதினாறாம் பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். அவன் என்ன நோக்கத்தில் சொன்னான் என்பது உடனடியாக அவருக்குப் புரிந்தது. அதிர்ச்சியில் அவர் விரல்கள் லேசாக நடுங்குவது வார இதழ் நடுங்கியதைப் பார்த்த பிறகே அவருக்கு உறைத்தது. அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்ற பழமொழி அந்தச் சமயத்தில் அவருக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.

 

வார இதழை பின் சீட்டில் வீசி விட்டு அவர் வேகமாகக் காரைக் கிளப்பினார்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, July 23, 2026

சதுரங்கம் 28

 


விமல் சோனா ஓட்டலில் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு நாளை ஒரு போலி பெயர், முகவரியுடன் புதிய ஒரு அலைபேசி கிடைத்து விடும். ஆனால் அடுத்ததாக அவன் செய்யப் போகும் வேலை மிக ஆபத்தானது. பிரச்சினையில்லாமல் முடிந்தால் அவன் மீதமுள்ள வாழ்க்கையை அரசனைப் போல் வாழலாம். ஆனால் பிரச்சினை வந்தால் பின் மீதமுள்ள வாழ்க்கை என்பதே இருக்காது. அவன் ஒரு அனாதைப் பிணமாய் முடிந்து போகவும் வாய்ப்பு உண்டு. அறிவுபூர்வமாக யோசித்தால் அவன் அப்படி அனாதைப் பிணமாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.  ஆனாலும் அவன் ஏன் அந்த ஆபத்தான வேலையில் இறங்குகிறான் என்றால் பணம், வசதிகள், மது, அசைவ சாப்பாடு, அழகான பெண்கள் சகவாசம் எல்லாம் இல்லாமல் வாழ்வது அனாதைப் பிணமாக முடிவதை விடக் கொடுமையானது. நர்மதா இறந்தவுடன் உயிருக்கு மேல் எதுவும் இல்லை என்று ஓடி வந்தவன் தான் அவன். ஆனால் ஒளிந்து, பதுங்கி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது நரக வாழ்க்கை என்பது சில நாட்களிலேயே அவனுக்கு விளங்கி விட்டது.

 

அவனுடைய திட்டத்தை நிறைவேற்ற அவனுக்கு குறைந்தபட்சம் இன்னொரு ஆளின் உதவியாவது வேண்டும். முழு நம்பிக்கைக்குரிய தைரியமான  இரண்டு மூன்று ஆட்கள் அவனுக்கு உதவிக்கு இருந்தால் மேலும் நல்லது. அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் யாரும் தங்களுக்கு ஆபத்தை வரவழைத்துக் கொண்டு அவனுக்கு உதவ முன்வர மாட்டார்கள். சினிமாவில் ஒன்றிரண்டு வேடங்கள் கிடைத்த பின் அவன் தமிழ்நாட்டின் அடுத்த ரஜனிகாந்த் ஆகவும், விஜய் ஆகவும் வருவது உறுதி என்ற நம்பிக்கையில் அவர்களை எல்லாம் அலட்சியப்படுத்தி இருந்தான். அத்தனை உச்சத்திற்குச் செல்லா விட்டாலும் தொடர்ந்து திரை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அதுவுமில்லாமல் போய், சின்னத் திரை தொடர்களில் நடித்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருக்கிற அவனுக்கு நண்பர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜாலியாக பொழுது போக்குவதில் அவனுடன் சேர்ந்து கொள்பவர்களே தவிர, ஆபத்து, பிரச்சினை என்றால் அடுத்த கணம் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காணாமல் போகிறவர்கள். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. அவனே அப்படித்தான். அதனால் அவனுடைய நட்புகள் வேறுவிதமாக இருக்க வாய்ப்பில்லை. புதியவர்களையோ அவன் இதில் நம்பி சேர்த்துக் கொள்ள முடியாது.  என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தெளிவும் கிடைக்கவில்லை.

 

அவனுக்கு இப்போது தேவை தைரியமான ஆள். ஆபத்தைக் கண்டு பின் வாங்காத ஆள். அந்த ஆள் நாணயஸ்தனாகவும் இருக்க வேண்டும். விமல் அவனுக்கு வரும் பணத்தின் ஒரு பகுதியை அந்த ஆளுக்குத் தரத் தயார். ஆனால் அந்த ஆள் விமலைக் காட்டிக் கொடுத்து அதே அளவு பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அப்படி பணம் சம்பாதிக்க நினைக்காத ஒரு அடிப்படை நேர்மையாவது அந்த ஆளுக்கு இருக்கவேண்டும். அது போன்ற ஒரு ஆளை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? எதிரியுடன் பேரம் பேசி விட்டு பிறகு யோசித்துக் கொள்ளலாம்...  

 

முடிவு எடுத்த பின் விமல் நிம்மதியாகத் தூங்கினான்.

 

த்திவாக்கம் கிராமத்திற்கு அர்ஜுன் பஸ்ஸில் தான் சென்றான். பைக்கில் சென்று வரக்கூடிய அளவுக்கு அது குறைந்த தூரமல்ல. அதை விட அதிக தொலைவுக்கும் அவன் பைக்கில் போவதுண்டு. ஆனால் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டிய வேலையில் பைக்கின் ரெஜிஸ்டிரேஷன் எண் அவனைக் காட்டிக் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது. இன்று போகும் விஷயத்தில் அவன் அடையாளம் தெரிவது பெரிய ஆபத்தில்லை என்றாலும், அவனுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வின் காரணமாக அவன் பஸ்ஸையே தேர்ந்தெடுத்தான்.

 

பஸ் நிறுத்தத்தில் ஒரு பெட்டிக் கடையும், டீக்கடையும் மட்டுமே இருந்தன. அருகில் ஒரு பெரிய ஆலமரமும் இருந்தது. ஆலமரத்தடியில் இருவரும், டீக்கடையில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுன் முதலில் டீக்கடைக்காரரிடம் பேசினான்.  கிராமத்திற்கு அந்த ஆலமரத்தைத் தாண்டித் தெரியும் பாதையில் ஒரு மைல் தூரம் உள்ளே போக வேண்டும் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.  டீக்கடைக்காரரிடம் தன்னை ஒரு எல்..சி ஏஜெண்ட்டாக அர்ஜுன் அறிமுகப்படுத்திக் கொண்டான். மகுடபதி என்பவர் பெயரில் ஒரு பழைய பாலிசி இருப்பதாகவும், நாமினேஷனாக அவர் மனைவி ரங்கநாயகி பெயர் போடப்பட்டு இருப்பதாகவும், விலாசமாக அத்திவாக்கம், காஞ்சிபுரம் என்று மட்டும் தரப்பட்டிருப்பதாகவும், மகுடபதி, ரங்கநாயகி, அல்லது அவர்கள் குடும்பத்தினர் யாராவது இருந்தால் அவர்களிடம் அந்த பாலிசி குறித்து பேச வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.

 

டீக்கடைக்காரருக்கு மகுடபதி குறித்தோ, அவர் குடும்பம் குறித்தோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. டீக்கடையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் பக்கத்து பெட்டிக்கடைக்காரரைக் கேட்டார். அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.  அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆலமரத்தடி ஆட்களும் வந்தார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை.

 

அவர்களில் ஒருவர் கேட்டார். “அந்த பாலிசி எப்போ எடுத்தது தம்பி?”

 

நாற்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த பாலிசி என்று அர்ஜுன் சொன்னவுடன் அவர் சொன்னார். “தம்பி, இந்தக் கிராமத்தில் மாடசாமிங்கற பெருசு இருக்கு. வயசு 75 க்கு மேல இருக்கும். அதுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு..”

 

சொன்னதோடு நிற்காமல், அவர் தன்னுடைய பழைய ஸ்கூட்டரில் அவனை  கிராமத்தின் உள்ளே இருக்கும் மாடசாமியின் வீட்டுக்கும் அழைத்துக் கொண்டு போய் விட்டார். “பெருசு கிட்ட கொஞ்சம் சத்தமாய் பேசணும்.  அப்ப தான் காது கேட்கும். ஆனா பழசு எல்லாத்தையும் புள்ளி விவரத்தோட சொல்லும். நல்ல ஞாபக சக்தி.”

 

மாடசாமிக்கு மகுடபதியை ஞாபகம் இருந்தது. அர்ஜுனை அழைத்துச் சென்றவரிடம் அவர் சொன்னார். “இப்ப முத்துப்பேச்சி குடியிருக்கு இல்லயா. அந்த வீட்டுல தான் மகுடபதி இருந்தார்.” பின் அர்ஜுனிடம் அவர் சொன்னார். “அவரும் அவர் சம்சாரமும் கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்களே தம்பி.”

 

அர்ஜுன் மற்றவர்களிடம் சொன்ன எல்..சி பாலிசி கதையையே அவரிடமும் சொன்னான். “அவங்களுக்கு எத்தனை பிள்ளைங்க இருந்தாங்க? இப்ப அவங்க எல்லாம் எங்கே இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா பெரியவரே

 

அவங்களுக்கு ஒரே ஒரு மகள் இருந்தா. ஆனா அவ எங்கே போனா, இப்ப எங்கே இருக்கான்னு எல்லாம் தெரியாது தம்பி.”

 

அவர்களைப் பற்றிக்  கூடுதல் விவரங்கள் தெரிந்திருக்கக் கூடியவர்களும்  அங்கு யாரும் இல்லை என்று அவர் சொன்னார். “இப்போதைக்கு இங்கே இருக்கிறவங்கள்லயே பழைய ஆள் நான் தான். இங்கே வந்து 32 வருஷம் ஆச்சு. மகுடபதி காலத்து மத்த ஆளுங்க எல்லாம் நிலத்தை வித்துட்டு எங்கங்கயோ போய்ட்டாங்க.”

 

அர்ஜுனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவருக்கு பானுமதியின் பெயராவது நினைவிருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்பி கேட்டான். “அவங்களுக்கு ஒரு மகள் இருந்ததாய் சொன்னீங்களே, அவங்க பெயர் தெரியுமா பெரியவரே?”

 

அதெல்லாம் ஞாபகம் இல்லை தம்பி. மகுடபதி பெயர் மட்டும் தான் தெரியும். அவர் மனைவி பெயர் கூடத் தெரியாது. அப்பவெல்லாம் ஒரு பெயரை வெச்சு தான் அந்தக் குடும்பத்து ஆள்கள் அத்தனை பேரையும் கூப்பிடுவோம். மகுடபதி சம்சாரம், மகுடபதி மகள்னு கூப்பிடறது தான் அப்பத்து வழக்கம்.”

 

அர்ஜுன் யோசித்து விட்டுக் கேட்டான். “முதல்ல இறந்தது மகுடபதியா, இல்லை அவங்க மனைவியா?”

 

ரெண்டு பேரும் ஒரே சமயத்துல தான் இறந்தாங்க தம்பி. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துட்டு செத்தவங்க தானே

 

அர்ஜுன் அதிர்ச்சியடைந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்