என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, September 10, 2026

சதுரங்கம் 35

 


ர்ஜுன் ராஜாராம் சொன்னதில் மனம் நெகிழ்ந்தான். இன்றைக்கு அவர் இருக்கும் உயரத்திற்கு அவர் அவனை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. உண்மையில் அவன் அவருக்கு யாருமல்ல. அவனுடைய தந்தை ஞானமூர்த்தி அவருக்கு உடன்பிறந்த சகோதரரும் அல்ல.. ஆனாலும் அவர் வாய் நிறைய ஞானமூர்த்தியை எங்கண்ணா என்று தான் சொல்கிறார். எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்குஎன்கிறார். அவனை வாசுதேவன் குடும்பத்தின் ஒரே வாரிசு என்றும் அவன் கோபித்துக் கொண்டால் தாங்க முடியாது என்றும் சொல்கிறார். வாசுதேவனின் மகன் தான் அல்ல என்று ஞானமூர்த்தி தான் தெரிவித்திருக்கிறாரேயொழிய இப்போதும் ராஜாராமின் வாயில் இருந்து அந்த வாசகம் வரவேயில்லை. இன்றைய அரசியல் நிலவரத்திலும், மக்களின் முட்டாள்த்தனத்திலும் மனம் வெறுத்துப் போய் அவர் வழியில் அவரும் விவரமாக, தன் தனிப்பட்ட இலாபத்தைப் பார்த்துக் கொள்வதை ஒரு சாமானியனின் பார்வையில் யாரும் பெரிய தவறாகச் சொல்ல முடியாது

 

அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். ”நான் உங்க பிள்ளை சித்தப்பா. என் கோபத்தை எல்லாம் ஒரு பொருட்டா ஏன் நினைக்கறீங்க சித்தப்பா. என்னால உங்க மேல எத்தனை காலம் கோபமாய் இருக்க முடியும்? இருந்த கோபமும் உண்மையான கோபம் இல்லை சித்தப்பா? அப்படி உண்மையான கோபமாய் இருந்திருந்தால் எனக்கு என்ன வேலை ஆக வேண்டியிருந்தாலும் நான் உங்களைத் தேடி வந்திருக்க மாட்டேன்

 

அவன் சொன்னதைக் கேட்டு அவர் கண்கள் ஈரமாயின. அவர் பாசத்துடன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “தேங்க்ஸ்டா. இனி என் கிட்ட உனக்கு ஏதாவது கேட்கறதுக்கு இருக்கா?”

 

அப்படி அவர் கேட்டு விட்டாரேயொழிய, வில்லங்கமான கேள்விகளைக் கேட்டு விடுவானோ என்று அவருக்கு படபடப்பாகத் தான் இருந்தது.

 

ஆனால் அவன் சொன்னான். “ஒன்னும் இல்லை சித்தப்பா. தேங்க்ஸ்

 

அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் இந்த அளவு மனம் விட்டுப் பேசியும் அவன் அதே போல் மனம் விட்டுப் பேசிவிடவில்லை.  அவராக எதையாவது பேசி அவனை இருத்திக் கொள்ளாவிட்டால் அவன் கிளம்பி விடுவான் என்று தோன்றியது. ”இந்த நேரத்துல கடல்பக்கத்துல இருந்து நல்லா காற்று வரும். அங்கே உட்கார்ந்துக்கலாமாஎன்று அவர் ஹாலின் பின்கண்ணாடிக் கதவைக் காட்டினார். அர்ஜுன் தலையசைத்தான்.

 

கண்ணாடிக் கதவைத் திறந்த போது அவர் சொன்னது போலவே சில்லென்று காற்று வீசியது. பின் பகுதியில் இருந்த நாற்காலிகளை இழுத்துப் போட்டு இருவரும் அமர்ந்து கொண்டனர்.

 

ராஜாராம் கேட்டார். “அண்ணா இப்பவும் தியானம் செய்யறானா?”

 

அர்ஜுன் புன்னகைத்தான். “உள்ளூரில் இருக்கறப்ப தினமும் செய்யறார்.”

 

ராஜாராமும் புன்னகைத்தார். பின் கடலைப் பார்த்துக் கொண்டே மிக நெகிழ்ந்த குரலில்  சொன்னார். ”கடவுள் குற்றங்குறையில்லாத ஒரு நிறைமனிதனைப் படைக்க ஆசைப்பட்டு அண்ணாவைப் படைச்சாரோன்னு நான் சில சமயங்கள்ல ஆச்சரியப்பட்டதுண்டு.... ஆனால் இந்தக் காலத்துக்கும் இந்த சமூகத்துக்கும் அவனைக் கொண்டாடற தகுதி இல்லை அர்ஜுன். ஒரு காலத்துல மார்கஸ் அரேலியஸ்ங்கற ரோமானியச் சக்கரவர்த்தி இருந்தார். வரலாற்றில் ஒரு தத்துவஞானி வெற்றிகரமாய் அரசாண்டதற்கு அவர் ஒருத்தர் தான் உதாரணம். அவர் தான் கடைசி உதாரணமாயும் இருப்பார்னு நான் நினைக்கிறேன்.... நம்ம இதிகாசத்தில் ஜனகனையும் சொல்றாங்கன்னாலும் ஜனகன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஆள் அல்ல….  அண்ணா இப்பவும் வருஷத்துக்கு ஒரு தடவை இமயமலை பக்கம் போறானா?”

 

போறார் சித்தப்பா

 

அங்கே போகிறப்ப யாரோ ஒரு சித்தரையோ, மகானையோ அண்ணா சந்திக்கிறது உனக்குத் தெரியுமா அர்ஜுன்?”

 

அர்ஜுனுக்கு அது புதிய தகவல். “இல்லையே சித்தப்பா யார் அவர்?” என்று அவன் ஆர்வத்தோடு கேட்டான்.

 

அது யார்னு எனக்கும் தெரியலை. ஆனா அவரைச் சந்திச்ச பிறகு தான் அண்ணா தினமும் தியானம் செய்ய ஆரம்பிச்சான்.  அது மட்டும் தெரியும்.... முதல் தடவை அங்கே போய்ட்டு வந்த பிறகு அண்ணா ஒரு வாரம் யார் கிட்டயும் ஒன்னு ரெண்டு வார்த்தைக்கு மேல பேசலை. கோர்ட்டுக்குப் போகலை. சொல்லப் போனா ரூமை விட்டுக் கூட வெளியே வரலை...”

 

அந்தத் தகவல் அர்ஜுனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. “அது எப்போ சித்தப்பா?”

 

அப்போ உனக்கு ரெண்டு வயசு இருக்கும். அண்ணாவோட மாற்றத்தைப் பாத்து அப்பாவுக்கே பயம் வந்துடுச்சு. அவர் கேட்டும் அண்ணா சரியாய் பதில் சொல்லலை.  ஒரு வாரம் கழிச்சு தான் இயல்புநிலைக்கு வந்தான். நான் அவன் கிட்டஎன்ன ஆச்சுண்ணா போன வாரம்னு கேட்டேன்.” அவன் ஒன்னுமில்லைன்னு தலையை மட்டும் ஆட்டினான்.  அவன் ஒரு விஷயத்தைச் சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா, கடவுளே வந்தாலும் அவனைச் சொல்ல வைக்க முடியாது.... ஆனா அதுக்கப்பறம் அவன் வருஷா வருஷம் இமயமலைக்குப் போய்ட்டு வருவான். பிறகு எப்பவும் அப்படிப் பேசாம இருந்ததில்லை....”

 

அதைச் சொல்லச் சொல்ல எதோ ஒரு முக்கியத் தகவல் நினைவுக்கு வந்தது போல் ராஜாராமின் முகம் மாறியது. அவர் யோசனையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். நினைவுக்கு வந்த அந்தத் தகவல் அவரை அசௌகரியப்படுத்தியது போல் அர்ஜுனுக்குத் தோன்றியது. அவன் அவரைக் கேட்டான். “என்ன சித்தப்பா?’

 

அந்த மாதிரி ஒரு தடவை போயிட்டு வந்த பிறகு தான் அண்ணா அரசியலுக்கு வர முடிவு செஞ்சான். அவன் இமயமலைக்குப் போனதுக்கும், அரசியலுக்கு வந்ததுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு எனக்கு நிச்சயமாய் சொல்லத் தெரியலை. ஆனால் ஒன்னு, அவன் அப்படி ஒரு தடவை அங்கே போய்ட்டு வந்த அடுத்த நாள் தான் அரசியலுக்கு வர்றதை அறிவிச்சான். அது இப்போ நினைவுக்கு வருது..”

 

அப்படி நினைவுக்கு வந்தது அவரை ஏன் அசௌகரியப்படுத்துகிறது என்று அர்ஜுனுக்குப் புரியவில்லை.அதனால?”

 

ராஜாராம் மெல்லச் சொன்னார். “அண்ணா அரசியலுக்கு வந்தது கூட அந்த ரகசிய மகான் சொல்லித் தானோ என்னவோன்னு நினைக்கத் தோணுது.”

 

அவர் அப்படி ஒரு ரகசிய மகானைச் சந்திச்சார்ங்கறது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது சித்தப்பா?”

 

முதல் தடவை போனப்போ இந்த மாதிரி வருஷா வருஷம் போகிற திட்டமெல்லாம் அண்ணாவுக்கு இருக்கலை. அண்ணாவும் அவனோட நண்பர்கள் நாலஞ்சு பேரும் சும்மா டூர் போகிற மாதிரி போனாங்க. வந்த பிறகு ஒரு வாரம் அண்ணா யார் கிட்டயும் எதுவும் பேசாதது பார்த்து அப்பாவும் பயந்துட்டார். அதனால நான் அண்ணா கூடப் போன நண்பர்களைப் பார்த்து பேசினேன். அவங்க அங்கே ஒரு நாள் ட்ரெக்கிங் போறப்ப ஒரு இடத்துல உக்காந்து ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தாங்களாம். அப்போ அண்ணா மட்டும் தனியா கொஞ்சம் தூரம் போய்ட்டு வர்றேன்னு போனானாம். போய் ரொம்ப நேரம் திரும்பி வரலைன்னவுடனே அந்த நண்பர்களும் பயந்துட்டாங்க. அவங்கள்ல ரெண்டு பேர் அண்ணாவைத் தேடிட்டுப் போயிருக்காங்க. அப்ப தான் ஒரு பாறைல உட்கார்ந்துகிட்டு அண்ணா யார் கூடவோ ரொம்ப சீரியஸாய் பேசிகிட்டு இருக்கறதைப் பார்த்திருக்காங்க. அவங்களுக்கு அண்ணாவைப் பார்த்தவுடனே நிம்மதியாயிருக்கு. ஆனா ஆச்சரியம் என்னன்னா அவங்க ரெண்டு பேர் பார்த்த ஆள் அவங்க பக்கத்துல போறப்ப காணலையாம். அண்ணா மட்டும் தான் பாறைல இருந்து இறங்கி வந்தானாம். “யாருடா அவருன்னு கேட்டிருக்காங்க. “ஒரு மகான்னு மட்டும் அண்ணா சொல்லியிருக்கான். “எங்கேடா அவரு?”ன்னு கேட்டிருக்காங்க. “அவர் அந்தப் பக்கம் இறங்கிப் போயிட்டார்னு அண்ணா சொன்னானாம். அந்த ரெண்டு நண்பர்கள்ல ஒருத்தன் மெல்லப் போய் பாறைக்கு அந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்திருக்கான். பார்த்தா அந்தப் பக்கம் ஒன்னுமே இல்லையாம். அங்கேயிருந்து லேசா வழுக்கினா கூட பள்ளத்தாக்குல விழுந்து சாகத்தான் வேண்டியிருக்குமாம். அந்த நண்பனுக்குப் பகீர்னு ஆயிருக்கு. திரும்பி வர்றப்ப அவங்க கிட்டயும் அண்ணா அதிகமாய் பேசலையாம். ராத்திரி தூங்கலையாம். அவங்க முழிச்சுப் பார்க்கறப்ப எல்லாம் அண்ணா உட்கார்ந்து எதோ யோசனையாய் இருந்தானாம். அது சென்னை திரும்பி வர்ற வரைக்கும் தொடர்ந்திருக்கு.

 

அர்ஜுனுக்கும் அதைக் கேட்டு ஆர்வம் அதிகமானது. அவன் கேட்டான். “அவங்க பார்த்த அந்த மகான் எப்படி இருந்தாராம் சித்தப்பா?”

 

நானும் அதே கேள்வியை அவங்க கிட்ட கேட்டேன். ஆனா அவங்க சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்துச்சு. அந்த ஆள் பாக்க நம்மள மாதிரி தான் இருந்தாராம். பைஜாமா பேண்ட்டும், ஜிப்பா ஷர்ட்டும் போட்டுகிட்டு, கிராப்புத் தலையும், ஷேவ் செஞ்ச முகமுமாய் டிப்டாப்பாய் தெரிஞ்சாராம். பார்த்தால் யாரும் மகானுன்னு சொல்லத் தோணாது, ஆனா மகானைத் தவிர யாராலும் அந்த இடத்துல மாயமாக முடியாதுன்னு சொல்றாங்க.”


(தொடரும்)

என்.கணேசன்




Monday, September 7, 2026

ரட்சகன் 8

 


யுவராஜ் கண்விழித்த போது அவனுடைய அரவணைப்பில் நிர்ப்பயா உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய அரவணைப்பில் மகன் நீலேஷ் உறங்கிக் கொண்டிருந்தான்.  யுவராஜின் கை மனைவியையும், மகனையும் அவர்களை எழுப்பி விடாத அளவுக்கு லேசாக இறுக்கியது. யுவராஜுக்கு அவன் கைக்குள் அவனுடைய உலகமே அடங்கிக் கிடப்பதாகத் தோன்றியது. அவன், அவள், மகன் என்ற இந்த மூவர் அடங்கியதாகத் தான் இப்போது அவன் உலகம் இருக்கிறது.  இது போதும் அவனுக்கு. வேறெதுவும் தேவைப்படாத பரிபூரண நிலையை அவன் இந்தக் கணத்தில் உணர்கிறான்.

 

உறங்கும் மனைவியையும் மகனையும் மாறி மாறி பார்த்தான். இருவர் முகங்களிலும் களங்கம் இல்லை, கவலையில்லை. நிறைவுடன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கடவுளே இப்படியே கடைசி வரை இவர்களை இருக்க வைத்து விடு.’

 

சில சமயங்களில் அவனுக்கு அவனுடைய திருமணமும், அதன் பின் நடந்த அனைத்தும் கனவு போலத் தோன்றும். நிஜத்தில் சாத்தியமில்லாத அந்த அதிசயம் அவன் வாழ்க்கையில் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் தோன்றும். திடீரென்று கண்விழித்து திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுவோமோ என்ற பயம் அவன் மனதில் எழும். விழித்திருக்கும் காலங்களில் எத்தனையோ முறை எல்லாம் நிஜம் தான்என்று உறுதிப்படுத்திக் கொண்டாலும் அடிக்கடி அந்தப் பயம் எழுவதை அவனால் தவிர்க்க முடிந்ததில்லை.

 

அவனிடம் எதைக் கண்டு அவள் அனைத்தையும் உதறித்தள்ளி விட்டு வந்தாள் என்பதற்கு இதுவரையில் அவனுக்குச் சரியான பதில் கிடைத்ததில்லை. அவளைப் பெரிதாகக் கவரும் அளவுக்கு உயர்வாய் எதுவும் அவனுக்குள் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. அழகு என்று பார்த்தால் அவனை விட அழகான இளைஞர்கள் அந்தக் கல்லூரியில் இருந்தார்கள். அறிவு என்று பார்த்தாலும் அவனை விடவும் அதிக அறிவு படைத்தவர்கள் அந்தக் கல்லூரியில் இருந்தார்கள். பணத்தைப் பார்க்க அவனிடம் அது இருக்கவே இல்லை. ஆனாலும் நிர்ப்பயா அவனைக் காதலித்தாள். அவனைத் திருமணம் செய்து கொண்டாள். அழகான மகன் ஒருவனைப் பெற்றுத் தந்திருக்கிறாள். பதிலுக்கு அதிகரித்து வரும் காதலைத் தவிர வேறு எதையும் அவனால் தர முடிந்ததில்லை.

 

மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று சொன்னவர்கள் காதல் எத்தனை நாள் என்று ஏன் சொல்லவில்லை என்பது அவனுக்கு இப்போது புரிந்தது. காதல் கடைசி மூச்சு வரைக்கும் தான். நாட்படக் குறைவது காமம் மட்டும் தான்.  காதல், உண்மையாக இருக்கும் வரை, நாட்பட நாட்பட அதிகமாகிக் கொண்டு தான் செல்லும். அதை அவன் ஒவ்வொரு நாளும் உணர்கிறான். ஆரம்பத்தில் இருந்ததை விடவும் அவள் மீது அவனுக்கு அன்பு கூடிக் கொண்டே தான் வருகிறது.

 

அவன் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவள் உறக்கத்திலேயே புன்னகைத்தாள். அவளுடைய புன்னகையை அவன் ரசித்தான். இந்தப் புன்னகைக்கு எதையும் தரலாம். என்னவும் செய்யலாம். ஆனால் தர அவனிடம் அன்பைத் தவிர வேறு எதுவும் அதிகமில்லை. அதனால் தான் அவளுடைய பெற்றோரும், தம்பியும் அவனை அவளுக்குப் பொருத்தமில்லை என்று நினைத்திருக்க வேண்டும்.

 

யுவராஜ் மாமியாரை நேரில் பார்த்ததில்லை. மாமனாரை ஒரே ஒரு முறை தான் சந்தித்துப் பேசியிருக்கிறான். அவரை நேரில் அவன் சந்தித்துப் பேசியதே பெருமைப்பட வேண்டிய விஷயம் என்பது பிற்பாடு தான் அவனுக்குத் தெரிந்தது. ஒரு அப்பாயின்மெண்ட்டுக்காக வருடக்கணக்கில் காத்திருப்பதாகச் சில பெரிய மனிதர்களே அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். நிரஞ்சனை ஒரு அரசு விழாவில் அவன் பார்த்திருக்கிறான். அந்த அரசு விழாவில் நிரஞ்சன் தான் சிறப்பு விருந்தினர்.

 

யுவராஜ் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க பாதுகாவலர் பலர் சூழ நிரஞ்சன் அவனைக் கடந்து சென்றான். கடந்து செல்கையில் நிரஞ்சனின் பார்வை சாதாரணமாக யுவராஜின் மீது விழுந்தது. அவன் யார் என்று உணர்ந்ததும் நிரஞ்சனின் முகம் கல்லாக இறுகியது. கண்களில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. ஒரே ஒரு கணம் தான் அதை யுவராஜ் பார்க்க முடிந்தது. நிரஞ்சன் அவனைக் கடந்து விட்டான். பின் யுவராஜைத் திரும்பிப் பார்க்கும் சிரமத்தை நிரஞ்சன் எடுத்துக் கொள்ளவில்லை.

 

நிர்ப்பயாவை யுவராஜ் திருமணம் செய்து கொண்டிருக்கா விட்டால் அவளிடத்திலும் அவனுடைய நிலைமை அப்படித்தான் இருந்திருக்கும். தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அவனால் முடிந்திருக்கும். நெருங்கிப் பழகவோ, பேசவோ முடியாத உயரத்தில் தான் அவள் இருந்திருப்பாள். இப்போதும் அவளுக்கு ஒரு ஆபத்து என்றால், குரல் கொடுத்தால் மின்னல் வேகத்தில் வந்து சேரும்படியாகத் தான் ஒரு ரகசியப் பாதுகாவல் கூட்டம் இருப்பதை யுவராஜ் கவனிக்காமல் இல்லை. வேறு வேறு வேஷங்களில் அந்தப் பாதுகாவலர்கள் இருப்பதை அவள் அறிவாளா இல்லையா என்று யுவராஜுக்குத் தெரியாது. அவனாக அதைப் பற்றி அவளிடம் பேசியதில்லை. அவளாகவும் அதைப் பற்றி அவனிடம் பேசியதில்லை...

 

நிர்ப்பயா மெல்ல கண்விழித்தாள். அவள் முகத்தையே பார்த்தபடி அணைத்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.  காதலுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள். “என்ன பார்க்கறீங்க?”

 

தூங்கறப்ப நீ ரொம்ப அழகாய் இருக்கே

அவள் ஒன்றும் சொல்லவில்லை. இது போன்ற பாராட்டுகளுக்குப் பதில் சொல்லி அதை வளர்த்தும் பழக்கம் அவளிடம் இல்லை. மௌனத்தாலேயே அதை அவள் கடந்து விடுவாள்.

 

குழந்தையை லாவகமாக சற்று நகர்த்திப் படுக்க வைத்து விட்டு அவளும் அவனை அணைத்துக் கொண்டாள். ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டபடி இருவரும் மௌனமாகப் படுத்திருந்தார்கள். நேசிப்பின் உச்சத்தில் தான் பேச்சும், செயலும் இல்லாமல் இப்படி நிறைவுடன் படுத்திருக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றியது.

 

சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான். “நேற்று என் நண்பர்கள் எல்லாம் உமன்ஸ் வர்ல்டு கட்டுரையைப் பாராட்டினாங்க.”

 

அந்த மாதிரி ஒரு பெரிய எழுத்தாளர் எதை எழுதினாலும் அது சிறப்பாய் தான் இருக்கும்.”

 

அதற்கான பெருமையை ஏற்றுக் கொள்ளாமல் அவள் அப்படிச் சொன்னதை அவன் மறுத்தான். “அப்படியெல்லாம் இல்லை. நான் அந்தம்மா எழுதின வேற கட்டுரைகளையும் படிச்சிருக்கேன். அதெல்லாம் சுமார் தான்.”

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கேட்டான். “உன் தோழிகள் எல்லாம் படிச்சாங்களா? என்ன சொன்னாங்க.”

 

அவளுக்கு நெருக்கமான தோழிகள் நிறைய பேர் இல்லை. இரண்டே பேர் தான் இருக்கிறார்கள். “நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.” அவள் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டாள்.

 

வேற யாராவது பாராட்டினாங்களா?’ என்ற கேள்வி அவன் நாக்கு நுனி வரை வந்தது. ஆனால் அவன் கேட்கவில்லை. அப்படிப் பாராட்டு தெரிவித்து இருந்தால் அவள் கண்டிப்பாக அவனிடம் சொல்லியிருப்பாள்.

 

உள்ளூர அவனுக்கு அதில் வருத்தம் இருந்தது. அவளுக்குக் குழந்தை பிறந்த போது கூட வந்து பார்க்காதவர்கள், வாழ்த்து கூடத் தெரிவிக்காதவர்கள், உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் அவளைப் பற்றி வந்த ஒரு கட்டுரைக்காகப் பாராட்டப் போவதில்லை தான். ஆனாலும் நினைக்கையில் அது அவனுக்கு ஏமாற்றமளித்தது.

 

அவர்கள் திருமணம் முடிந்து ஆறு மாதத்தில் யுவராஜின் தந்தை காலமாகி விட்டார். அவனுடைய தாயோ அவன் கல்லூரியில் படிக்கையிலேயே இறந்து விட்டாள். அதனால் இப்போது நீலேஷுக்குத் தந்தை வழியில் தாத்தா பாட்டி இல்லை. ஆனால் தாய் வழியில் இருந்தும் அவன் அவர்களை அறிய மாட்டான். அதில் நிர்ப்பயாவுக்கு வருத்தம் இல்லாமலிருக்க சாத்தியமே இல்லை. ஆனால் அவள் அதை வெளியே காட்டிக் கொண்டதில்லை. அவர்களது திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருந்த போதிலும் அவளுடைய பெற்றோரை அவளை இழக்க வைத்ததில் யுவராஜுக்கு இப்போதும் குற்றவுணர்ச்சி இருக்கிறது. அவளுடைய இழப்பு அவர்களுடைய குழந்தையின் இழப்புமாகத் தொடர்கிறது என்பது அவன் குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியது.

 

எல்லாவற்றிற்கும் முடிவு காலம் உண்டு என்று சொல்வார்கள். அப்படியானால் நிர்ப்பயாவின் பெற்றோர் மற்றும் தம்பியின் வெறுப்புக்கும் ஒரு முடிவு காலம் இருக்கும் அல்லவா? அது எப்போது என்று யோசிக்கையில் யுவராஜின் முகம் வாட்டமடைந்தது.

 

அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவன் சொல்லி அவளுக்குத் தெரிய வேண்டியிருக்கவில்லை. இந்த மூன்றாண்டு காலங்களில் ஒருவர் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பது மற்றவருக்குத் தெரியும் அளவு ஈருடல் ஓருயிராகத்தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள்.

 

வாட்டமடைந்த அவனை முத்தமிட்டு அவன் கவனத்தை அவள் திருப்பினாள். சில வினாடிகளில் இருவரும் வெளியுலகை மறந்தார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்



Thursday, September 3, 2026

சதுரங்கம் 34


 

ர்ஜுனுக்கு அவர் எடுத்த முடிவில் இப்போது குற்றம் காண முடியவில்லை. ஆனாலும் அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தான். அவர் சொல்லும் எதையும் அவன் தந்தை அறியாதவர் அல்ல. அவர் அறிவு ஆழமானது, சூட்சுமமானது...

 

ராஜாராம் தொடர்ந்து சொன்னார். “அண்ணா ரொம்ப திறமையான வக்கீல். அண்ணா விரும்பினா கோர்ட்டில் வாதாட ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து லட்சமாவது வாங்க முடியும்னு என் கிட்ட ஒரு சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒரு தடவை சொன்னார்.  அந்த அளவு திறமை இருக்கிற எங்கண்ணா இப்போ எவ்வளவு சம்பாதிக்கிறான் அர்ஜுன்?”

 

ஞானமூர்த்தி இப்போது ஒரு மாதத்திற்குக் கூட அந்த அளவு சம்பாதிப்பதில்லை.  அவர் அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டதால் ஓரிரு வழக்குகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறார். அதிலும் கட்சிக்காரன் பக்கத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். எந்த வழக்கையும் அவருடைய வாதத்திறமையால் அவரால் வெல்ல முடியும் என்றாலும், பிழைப்புக்காகக்கூட நியாயமில்லாத பக்கம் நிற்க அவர் சம்மதித்ததில்லை. நியாயமிருந்தும் வழக்கிற்காகச் செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிற ஏழைகளிடம் அவர்களுக்குத் தர முடிந்த தொகையைத் தான் அவர் வாங்குகிறார். நியாயமிருந்தும் சில சட்டச்சிக்கல்களால் நீதி கிடைக்க முடியாத நிலையில் இருக்கும் பணக்காரர்களிடம்  மட்டும் அவர் அதற்குரிய தொகையை வாங்குகிறார். அவர் செய்யும் தியாகத்தையும், பெருந்தன்மையையும் எத்தனை பேர் நினைவு வைத்திருப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியே! காரியம் முடிந்ததும் கடவுளையே கூட மறக்கும் மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை!

 

அர்ஜுன், நான் எங்கண்ணாவுக்கு இணையான அறிவாளியை இதுவரைக்கும் பார்த்ததில்லை. ஆனால் ஆனால் அந்தப் பேரறிவு அவனோட சொந்த வாழ்க்கைக்குப் பயன்பட்ட மாதிரி தெரியலை. வாதாட வேண்டியது தான் வக்கீலோட வேலை. தீர்ப்பு சொல்றது நீதிமன்றத்தோட வேலை. ஆனா அண்ணா என்ன செய்யறான்னா, அவனே நீதிபதியா இருந்து ஒரு வழக்கைப் பார்த்துட்டு தான் அதை ஏற்கிறான், இல்லை மறுக்கறான். ஒருவிதத்துல இது முட்டாள்தனமில்லையா? அரசியல்லயும் அப்படித் தான் செய்யறான். அவன் கட்சில மோசமான ஆட்களைச் சேர்த்துக்கறதில்லை. அவனோட அரசியல் கொள்கைகள்லயும் கூட அவன் சமரசம் செய்துக்கறதில்லை. இன்றைக்கிருக்கற சூழ்நிலையில் இப்படியெல்லாம் அரசியல் செய்ய முடியாது அர்ஜுன். போன தேர்தல்ல அண்ணா தோற்றதும், பத்தே பத்து தொகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்கள்லயும் டெபாசிட் இழந்ததும் அரசியல் களத்துல அண்ணா எங்கே நிற்கறான்னு தெரிவிக்கலையா அர்ஜுன்?

 

அர்ஜுன் சொன்னான். “நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சித்தப்பா. ஆனால் குறுகிய காலத்துல அவர் ஐம்பது தொகுதிகள்ல மூனாவது இடத்தில் இருக்கார். அது சின்ன விஷயமில்லையே?”

 

நீ ஓட்டு சதவீதத்தைப் பார்த்தா தான் உனக்கு சரியான நிலவரம் தெரியும் அர்ஜுன். ஒரு வகுப்புல ஐந்து மாணவர்கள் இருக்காங்கன்னு வெச்சுக்கோ. முதல் மார்க் 80 இரண்டாவது 50 மூன்றாவது 8 நான்காவது 5 ஐந்தாவது 3. இதில் 8 மார்க் வாங்கியவன் மூன்றாவது இடத்தில் இருக்கறதா சொல்ற நிலையில தான் அண்ணாவும் இருக்கான் அர்ஜுன். அந்த ஐம்பது தொகுதிகள்ல ஆளும் கட்சி 41.38% இருக்கு. எதிர்க்கட்சி 27.32% இருக்கு. அண்ணா கட்சி 6.28% இருக்கு. எதிர்க்கட்சிக்கு இணையாக வரவே நாலுமடங்கு ஓட்டு வேண்டியிருக்கு.”

 

அவர் சொல்வது நிஜம் தான். ஆனால் நிஜம் கசந்தது.  அது என்றைக்கு இனித்திருக்கிறது?

 

ஒரு காலத்தில் ஊழல்ங்கறது மக்கள் கிட்ட அதிர்ச்சியை உண்டுபண்ணுச்சு. ஆனால் இன்னைக்கோ ஊழல் இல்லைன்னா தான் மக்களுக்கு அது ஆச்சரியத்தை உண்டுபண்ணுது. அந்த அளவு ஊழல், மக்களே ஏற்றுகிட்ட ஒரு விஷயமாயிடுச்சு. எவன் வந்தாலும் ஊழல் தான்னு மக்கள் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தயாராயிட்டாங்க. ஒரு காலத்தில் விதிமுறைகளுக்குப் பொருந்தாத வேலைகள் ஆக வேண்டி தான் மக்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாங்க. இப்ப. விதிமுறைகளுக்குப் பொருந்தியிருந்தாலும் சரி எந்த வேலை அரசாங்க அலுவலகத்தில் ஆக வேண்டியிருந்தாலும் லஞ்சம் தராமல் வேலை ஆவதில்லைன்னு ஆயிடுச்சு. இப்ப எல்லாம் மக்களே லஞ்சம் எவ்வளவுன்னு கேட்டுத் தர்ற நிலைமை உருவாயிடுச்சு. லஞ்சம் தந்தாலும் சீக்கிரம் வேலையானால் அதுவே பெரிய விஷயம்னு நினைக்கிற நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்க. இப்ப யாரும் உத்தமனைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கறதில்லை. எத்தனை வேணும்னா சம்பாதிச்சுக்கட்டும், எங்களுக்கும் கொஞ்சமாவது நல்லது செஞ்சா போதும்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவு மக்கள் ஊழலை ஏற்றுகிட்டாங்க. ஊழல் எதிர்ப்புங்கறது வெறும் மேடைப் பேச்சு சமாச்சாரமாயிடுச்சு. பேசறவனும் அதை சீரியஸா நினைச்சு பேசறதில்லை. கேட்கறவனும் அதை சீரியஸாய் எடுத்துக்கறதில்லை. இப்படி எல்லாருமே ஊழலை சீரியஸாய் நினைக்கற காலம் போன பிறகும் அண்ணா மேடைப்பேச்சையும் தாண்டி அதை சீரியஸாய் எடுத்துகிட்டுருக்கான்….” ராஜாராமின் குரலில் ஆழ்ந்த வருத்தம் இழையோடியது.

 

அவர் ஒரு கணம் நிறுத்தி அவன் ஏதாவது கருத்து தெரிவிக்கிறானா என்று பார்த்தார். ஆனால் அவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தானேயொழிய ஒன்றும் சொல்லவில்லை. அவர் தொடர்ந்தார். “இப்போதெல்லாம் எதிர்க்கட்சி கூட ஆளும் கட்சி கூடப் பேரம் படியாத போது தான் வெளிப்படையாய் புகார் சொல்லுது. ரகசியப் பேச்சு வார்த்தைல பேரம் படிஞ்சுதுன்னா அவங்களும் சத்தமில்லாமல் இருந்துடறாங்க அர்ஜுன். மாநிலமானாலும், மத்திய அரசானாலும் இது தான் வெளிப்படையாய் சொல்லிக்காத விதி அர்ஜுன். இதுலயும் அண்ணா தான் விதிவிலக்கு. சரி இத்தனை நேர்மையாய் நியாயமாய் இருந்து அவன் மக்களுக்காகப் போராடறான். அதற்காவது மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பாங்களான்னா அதுவும் கிடையாது. தேர்தல் நேரத்துல ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எண்ணிக் கொடுக்கற ரூபாய் நோட்டுகளுக்குத் தர்ற முக்கியத்துவத்தை மக்கள் அவனுக்கோ, அவனோட கட்சிக்கோ, தர மாட்டாங்க. மக்கள் ஊழலை மறந்துடுவாங்க, மோசமான நிர்வாகத்தை மறந்துடுவாங்க, நிறைவேற்றாத வாக்குறுதிகளை மறந்துடுவாங்க, கடந்த ஆட்சில ஏமாற்றப்பட்டதை மறந்துடுவாங்க. தேர்தல் நேரத்துல தர்ற காசை மட்டுமே பார்த்து தான் ஓட்டுப் போடுவாங்க. இப்ப சொல்லு, ஏமாறுறது மக்களா, எங்கண்ணாவா?”

 

பேரறிவு இருந்தும் இன்றைய அரசியல் களத்தில் ஞானமூர்த்தி அடிமுட்டாள் ஆகத் தான் இருக்கிறார் என்பதைப் பார்க்கையில் அர்ஜுனுக்கு வேதனையாகத் தான் இருந்தது. ராஜாராம் அலசிச் சொன்ன அளவுக்கு அவன் யோசித்திருக்கா விட்டாலும் மேலெழுந்தவாரியாக கிட்டத்தட்ட இந்த நிலவரம் அவனுக்குப் புரிந்துதானிருந்தது.  

 

கடைசியாக ராஜாராம் சொன்னார். “இந்தக் காரணங்களுக்காகத் தான் நான் எங்கண்ணாவை ஆதரிக்கலை. கடைசில அவன் எல்லாராலயும் கோமாளி ஆக்கப்படறத என்னால சகிக்க முடியல அர்ஜுன். என் குடும்பத்துல இன்னொரு பலிக்கடா உருவாகறதை நான் விரும்பலை.”

 

அர்ஜுன் மெல்லக் கேட்டான். “நீங்க இதையெல்லாம் எங்கப்பா கிட்ட சொல்லியிருக்கீங்களா சித்தப்பா?”

 

ராஜாராம் இல்லையென வருத்தத்துடன் தலையசைத்து விட்டுச் சொன்னார்.சொல்லிப் பிரயோஜனம் இல்லை அர்ஜுன். இந்த விஷயத்துல எங்கப்பாவை விட அண்ணா இரண்டு மடங்கு பிடிவாதக்காரன். ”எங்கப்பாவுக்கு மகனாய் இருக்கற எல்லாத் தகுதியும், என்னை விட அண்ணாவுக்குத் தான் அதிகமாயிருக்குங்கறதை நான் பல தடவை உணர்ந்திருக்கேன். எங்கப்பா உயிரோட இருந்திருந்தா அவரோட முழு ஆதரவும் அண்ணாவுக்குத் தான் இருந்திருக்கும். ஆனால் நான் அவராகவோ, அண்ணாவாகவோ இருக்க விரும்பலை அர்ஜுன். இன்றைய அரசியல் ஒரு செஸ் விளையாட்டு மாதிரி தான். தாக்கறதும், தாக்குப்பிடிக்கறதும் தான் இதை விளையாடறவங்களோட குறிக்கோள். அடுத்தவங்க பலவீனத்தைப் பயன்படுத்திக்கறதும், அவங்கள பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுக்கறதும் ரொம்ப முக்கியம். மறைமுகமாய் நானும் அரசியல்வாதியாகி இந்த விளையாட்டுல சேர்ந்துட்டேன். எங்கப்பா மாதிரியோ, எங்கண்ணன் மாதிரியோ எனக்கு கொள்கை எல்லாம் கிடையாது. மக்களைப் பற்றியோ, மற்றவங்களைப் பற்றியோ நான் கவலைப்படறதில்லை. எனக்கு நிரந்தர நண்பர்களோ, நிரந்தரப் பகைவர்களோ கிடையாது. என்னை அனுசரிச்சுப் போறவங்களுக்கு, அவங்க அனுசரிச்சுப் போய்கிட்டிருக்கற வரைக்கும் நான் ஆதரவு தர்றேன்.  பின்னணியில் இருக்கறதால எனக்கு எப்பவும் நஷ்டமோ, தோல்வியோ இல்லை. நான் இதுவரைக்கும் இந்த அளவு வெளிப்படையாய் இதை யார் கிட்டயும் சொன்னதில்லை அர்ஜுன். உன் கிட்ட தான் சொல்றேன். வாசுதேவன் குடும்பத்தோட ஒரே வாரிசு நீ.  நீ எங்க கிட்ட கோவிச்சுகிட்டு இருந்தால் எங்களால தாங்க முடியாதுடா.” சொல்கையில் ஒரு கணம் அவர் குரல் உடைந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்