என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 2, 2026

சதுரங்கம் 12

 

ர்ஜுன் கீதாவுக்காகக் காத்திருக்கையில் என்றுமில்லாத படபடப்பை தனக்குள் உணர்ந்தான். கீதாவிடம் இன்று காலை அலைபேசியில் தொடர்பு கொண்டு வரச் சொன்ன போது அவள் உடனடியாகக் கேட்டாள். “என்ன விஷயம் அர்ஜுன்?”

 

ஏனென்றால் இதுவரை அவன் அவளை காரணமில்லாமல் சும்மா பேச வரச் சொன்னதில்லை. அப்படிப் பேசுவதும் பெரும்பாலும் அவர்களுடைய தொழில் சம்பந்தமாகத் தான் இருக்கும். முதல் முறையாக அவன் அவளிடம் தங்கள் காதலைப் பற்றிப் பேச அழைத்திருப்பதை அலைபேசியில் எப்படிச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. “நீ வா நேரில் சொல்கிறேன்என்று மொட்டையாகச் சொல்லி இருக்கிறான்.

 

வழக்கமாக அவர்கள் அமர்ந்து கதைக்கும் அந்த ஓட்டலில் அன்று அதிகக் கூட்டமில்லை. அவள் வருவதாகச் சொன்ன நேரம் கடந்து ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கின்றன என்றாலும் ஒரு யுகமே காத்திருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.  முன்பும் சில நாட்களில் அவள் வரத் தாமதமாகி இருக்கிறது. அப்போதெல்லாம் அலைபேசியில் ஏதாவது பார்க்க ஆரம்பித்தான் என்றால் அவள் வந்து சேர்ந்து அவனை அழைக்கும் வரை காலத்தின் பிரக்ஞையே அவனுக்கு இருக்காது. ஆனால் இன்றோ அது முடியவில்லை. அவளிடம் எப்படிச் சொல்ல ஆரம்பிப்பது என்று ஐந்தாறு விதங்களில் மனதில் சொல்லி ஒத்திகை பார்த்து விட்டான். எதுவும் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை.

 

பெரிய பெரிய ஆட்களிடம் பேட்டி எடுக்கும் போதும், பேசும் போதும் அலட்டிக் கொள்ளாமல் அவன் அமைதியாய் இருந்திருக்கிறான். கீதாவிடமே அவன் எத்தனையோ முறை எதை எதையோ பேசியிருக்கிறான். அப்போதெல்லாம், இப்படிப் பேச வேண்டும், அப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் அதிகமாய் அவன் எப்போதுமே யோசித்து வைத்துப் பேசியதில்லை. தானாய் வார்த்தைகள் வரும். ஆனால் இன்று காதலை முதல் முறையாகத் தெரிவித்துப் பேச வேண்டுமென்கிற போது அது சரியாக இருக்க வேண்டும் என்று மனம் கவலைப்படுகிறது...

 

கீதா உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் மனதின் படபடப்பு அதிகரித்தது. நிஜமாகவே காதல் சக்தி வாய்ந்தது தான். அது எப்படிப்பட்டவர் மனநிலையையும் சமநிலையில் இருந்து தள்ளி விடுகிறது. சில சமயங்களில் சம்பந்தப்பட்டவரை அரைக்கிறுக்காக்கி விடுகிறது. முன்பிருந்தே அவளிடம் காதல் இருந்திருந்தாலும், அவனே அதை அங்கீகரிக்க மறுத்து ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த போது அவளுடன் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றோ முழு உணர்வுடன் பேச முற்படுகையில் பதின்ம வயதுப் பையன் போல மனம் படபடப்பை உணர்வது அவன் அறிவுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அறிவுக்கு இங்கே வேலை இல்லை என்பதால் இதயத்தின் பிரச்சினைகள் அறிவுக்குப் புரியாது...

 

சாரி அர்ஜுன், லேட்டாயிடுச்சு. வழியில ட்ராஃபிக் ஜாம்.” என்று சொல்லியபடி அவன் எதிரில் அமர்ந்தவள் உடனடியாகக் கேட்டாள். “என்ன ரொம்ப கவனமா ட்ரஸ் பண்ணிகிட்டு வந்திருக்கே. யாரையாவது காதலிக்க ஆரம்பிச்சிட்டியா என்ன?”

 

அர்ஜுன் திகைத்தான். இந்த பெண்களின் பார்வை தான் எத்தனை கூர்மையானது! நித்யாவும் சரி, இவளும் சரி எப்படி இவ்வளவு வேகமாக சூட்சும விஷயங்களையும் கவனித்து விடுகிறார்கள்? ஒரு விதத்தில் அவளாக அப்படிக் கேட்டது நல்லதாயிற்று. அவன் இதயம் படபடக்க சொன்னான். “ஆமா. உன்னை தான்.”

 

ஒரு கணம் அவள் மனம் பூரித்தாலும் அவன் விளையாட்டாய் பேசுகிறான் என்று கீதா நினைத்தாள். “என்னை தான் மூனு வருஷமாய் பார்க்கறியே. ஆனா இப்படியெல்லாம் ட்ரஸ் பண்ணிட்டு வந்ததில்லையே. விளையாடாம சொல்லு. யாரந்த பொண்ணு?”

 

அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து அழுத்தந்திருத்தமாக அர்ஜுன் சொன்னான். “அதான் சொன்னேனே நீ தான்

 

இது வரை அவன் அவளை அப்படிப் பார்த்ததில்லை. அவளுக்கு இது கனவா இல்லை நிஜம் தானா என்று ஒரு கணம் சந்தேகம் வந்தது. கண்களை ஒரு முறை நன்றாக மூடித் திறந்தாள். அவன் இன்னும் எதிரில் தான் அமர்ந்து இருக்கிறான். அவளையே இன்னும் அப்படியே தான் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.

 

சர்வர் அவர்களுடைய மேஜைக்கு வந்து நின்றான். அர்ஜுன்ரெண்டு காஃபிஎன்று சொன்னான்.   

 

நடப்பது எதுவும் கனவல்ல. காலையில் அவன் அலைபேசியில் அழைத்த போது இதையெல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்லப் போனால் இப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் எப்போதாவது நடக்கும் என்ற நம்பிக்கையைக் கூட அவள் என்றைக்கோ தொலைத்து விட்டிருந்தாள். ஏனென்றால் இப்படியெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியக்கூறு அவளுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இத்தனை காலம் ஆகாதது இனிமேலா ஆகப்போகிறது என்று விரக்திக்கே அவள் வந்திருந்தாள். ஆனாலும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. சந்தோஷத்தில் அழ வேண்டும் போல் இருந்தது.

 

அத்தனையையும் உள்ளே புதைத்துக் கொண்டு அவள் மெல்லக் கேட்டாள். “இது எப்போதிருந்து?”

 

ரெண்டு, ரெண்டரை வருஷமாவே தான்.”

 

ஆனா இதுவரைக்கும் என் கிட்ட நீ சொல்லவேயில்லையே?”

 

நீயும் என் கிட்ட சொல்லலையே

 

சரி இப்ப மட்டும் ஏன் சொல்லறே?”

 

நீ என்னைக் காதலிக்கறேன்னு தெரிஞ்சுது

 

நான் அப்படிச் சொல்லவேயில்லையே.”. அவளுக்கு அவனைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

 

நீ சொல்லி தான் தெரியணுமா கீதா? அது என் ஆழ்மனசுக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும். அதை எப்படி எதிர்கொள்றதுன்னு தெரியாத ஒருவித ஆழ்மனச் சிக்கல்ல நான் இருந்தேன்.... நேத்து நித்யா நீ என்னைக் காதலிக்கறதைக் கண்டுபிடிச்சு சொன்னா. அப்ப கூட நான் அதை நம்பற மனநிலைல இருக்கல. ஆனா அவ உறுதியா சொன்னா. நான் ஆழமாய் யோசிச்சுப் பாத்தேன். அப்போ தான் ஆழ்மனசுல நான் அதை எப்பவோ உணர்ந்திருக்கேன்னு புரிஞ்சுது. நான் சொன்ன மாதிரி, வெளிப்படையா அதை புரிஞ்சுக்கவோ, அதைப் பத்தி பேசவோ முடியாத மனச்சிக்கல் என்கிட்ட இருந்துச்சு.”

 

இப்பவும் அந்தச் சிக்கல் முழுசா போயிடல போல.”

 

ஏன் அப்படிச் சொல்றே?”

 

இப்பவும், நீ தான், உன்னைத் தான்னு சொல்றியே ஒழியநான் உன்னைக் காதலிக்கிறேன்னு ஒத்தை வாக்கியத்தை மொத்தமா சேர்ந்து சொல்ல மாட்டேன்கிறே

 

அர்ஜுன் அப்போது தான் அந்தத் தவறை உணர்ந்தான். மேஜை மேல் வைத்திருந்த அவள் கையை இறுக்கப்பிடித்துக் கொண்டு சொன்னான். “நான் உன்னைக் காதலிக்கிறேன் கீதா

 

அவளுக்கு சந்தோஷ மிகுதியில் அழ வேண்டும் போல் தோன்றியது. அவள் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் ஈரமாயின.

 

சர்வர் காபியுடன் வர அர்ஜுன் அவள் கையை அவசரமாக விடுவித்தான். சர்வர் போன பிறகு கீதா அவனிடம் குரலடைக்கச் சொன்னாள். “இந்த ஒரு நாள் வரும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை, தெரியுமா?”

 

அவள் கண்கலங்கியதிலும், அப்படிச் சொன்னதிலும் அவனும் மனமுருகினான். “எனக்குத் தான் சில மனச்சிக்கல் இருந்துச்சு. நீயாவது சொல்லி இருக்கலாமே கீதா?”

 

அவள் சொன்னாள். “நீ எந்த அறிகுறியுமே காட்டலை. அதனால நான் காதலைச் சொல்லி, நமக்கிடையே இருக்கிற நட்பையும் இழந்துட விரும்பல அர்ஜுன்.”

 

நித்யா அதையும் துல்லியமாய் கணித்திருந்ததை நினைத்து அர்ஜுன் ஆச்சரியப்பட்டான். ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடிகிறது என்று இதை எடுத்துக் கொள்வதா, இல்லை நித்யாவின் கூர்நோக்குத் திறன் என்று எடுத்துக் கொள்வதா என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

கீதா கேட்டாள். “உனக்கு சில மனச்சிக்கல்னு சொன்னாயே. என்ன மனச்சிக்கல் அர்ஜுன்?”

 

அர்ஜுன் தன் தாயையும், தாயிற்கும் அவனுக்கும் இருக்கும் இடைவெளியையும் பற்றிச் சொல்லாமல் கீதாவிடம் அவனுடைய மனச்சிக்கலை விளக்க முடியாது. ஆனால் அவளிடம் இப்போது அதை வெளிப்படையாகச் சொல்ல முடிந்த மனநிலையில் அவன் இருக்கவில்லை. அந்தச் சிக்கலை அவன் நேற்று தான் உணரவும், அலசவும் ஆரம்பித்து இருக்கிறான். அதை அவன் ஜீரணித்து அதிலிருந்து விடுபட ஒரு வழி கண்டுபிடித்துத் தெளிவடையாமல் அரைகுறையாக அவளிடம் அதுபற்றிப் பேச அவன் விரும்பவில்லை.

 

நமக்குள்ளே இனி எந்த ஒளிவு மறைவுக்கும் அவசியமில்லை தான். ஆனால் இப்பவும் அந்தச் சிக்கல் பற்றி முழுத்தெளிவு எனக்கில்லை கீதா. ஒரு தெளிவு வந்தவுடன கண்டிப்பா ஒரு நாள் உன் கிட்டே சொல்றேன்.”

 

அவன் சொல்லச் சொல்ல அவனுக்கு அவன் ஆபிசிலிருந்து குறுந்தகவல் குறுந்தகவல் வந்தது. ”நியூஸ் சேனல் பார்க்கவும்

 

அவள் கேட்டாள். “என்ன?”

 

அவன் சொன்னான். “ஏதோ ப்ரேக்கிங் ந்யூஸ் வந்துகிட்டிருக்கு.”


(தொடரும்)

என்.கணேசன்



Monday, March 30, 2026

யோகி 149


ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கையில் கண்ணன் வந்து அவனை பாண்டியன் வரச் சொன்னதாகத் தெரிவித்தார். அவர் அதைச் சொன்ன போது அவருடைய முகம் இறுகியிருந்தது. வழக்கமான நட்பு முகத்தில் தெரியவில்லை. பிடிபட்டு விட்டோம் என்பதை அந்தக் கணமே ஷ்ரவன் உணர்ந்தான். ஆபத்தில் மாட்டிக் கொள்வது அவனுக்குப் புதிதல்ல. அவனுடைய இதயத்துடிப்பு வேகம் எடுத்தது. ஆழமாக மூச்சு விட்டு அமைதிப்படுத்திக் கொண்டு அவன் புன்னகையுடன் அவருடன் கிளம்பினான். இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் யோசித்துச் செயல்பட முடிந்த அமைதி தான்...

 

செல்லும் போது கல்பனானந்தா எங்கே இருக்கிறாள் என்பதை ஷ்ரவன் பார்த்தான். அவள் தொலைவில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவளால் அவன் பிடிபட்டதை யூகிக்க முடியாது என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். கண்ணனும், பாண்டியனின் ஆட்களும் அவனை அழைத்துக் கொண்டு போவது புதியதல்ல என்பதால் வழக்கம் போல் எதையோ கேட்கத் தான் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவள் நினைக்கத் தான் சாத்தியம் அதிகம்.

 

ஷ்ரவன் கண்ணனிடம் சொன்னான். “சுவாமிஜி. சுவாமினியிடம் சொல்லி விட்டு வரட்டுமா?”

 

கண்ணன் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். “தேவையில்லை. நான் சொல்லிக் கொள்கிறேன்.”

 

ஷ்ரவன் தலையசைத்து விட்டு நடந்தான். எதாவது சைகை காட்டி அவளிடம் அறிவிக்கலாம் என்றாலும் அது கண்ணனின் கூரிய பார்வைக்குத் தப்பாமல் போவது சாத்தியமில்லை. அது அவளையும் சேர்ந்து ஆபத்தில் மாட்டி விடுவது போலாகி விடும் என்பதால் அவன் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக கண்ணனுடன் சென்றான்.   

 

பாண்டியன் ஷ்ரவன் அமைதியாக வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவனைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் எரிமலை வெடித்தது. எவ்வளவு சுலபமாக எங்களை ஏமாற்றியிருக்கிறான் அவன்...

 

ஷ்ரவன் உள்ளே வந்து பழைய நட்புடன் கைகூப்பிவணக்கம் ஜிஎன்று சொல்ல பாண்டியன் பதில் வணக்கம் சொல்லாமல், புன்னகை கூடச் செய்யாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார்.

 

ஷ்ரவன் ஆச்சரியத்துடன் கேட்டான். “என்ன ஆச்சு ஜீ?”

 

பாண்டியன் ஏளனமாகச் சொன்னார். “நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை. ஆவதற்குள்ளே எல்லாம் தெரிந்து விட்டது.”

 

ஷ்ரவன் திகைப்புடன் சொன்னான். “என்ன சொல்கிறீர்கள் ஜீ?”

 

பாண்டியன் சொன்னார். “உன் சாயம் வெளுத்து விட்டது.”

 

அவர் ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டதை ஷ்ரவன் கவனித்தான். அவன் அதிர்ச்சியைக் காட்டியபடி கேட்டான். “என்னைத் தேடி போலீஸ் வந்ததா?”

 

இப்போது அதிர்ந்தது பாண்டியனும், கண்ணனும் தான். பாண்டியன் கேட்டார். “போலீஸ் எதற்கு உன்னைத் தேடி வர வேண்டும்?”

 

அது என் எதிரிகள் திட்டமிட்டு என்னைச் சிக்க வைத்த சதிஜி. போலீஸ் சொல்வது எதுவும் உண்மையில்லை. தயவுசெய்து என்னை நம்புங்கள்.”

 

இது என்ன புதுக்கதை என்று பாண்டியனும் கண்ணனும் ஷ்ரவனைப் பார்த்தார்கள்.

 

இதில் போலீஸ் எங்கே வந்தது?”

 

நீங்கள் தானே சொன்னீர்கள் உன் சாயம் வெளுத்து விட்டது என்று. போலீஸ் சொல்லாமல் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

என்ன உளறுகிறாய்?’

 

நீங்கள் அந்த ஹைத்ராபாத் கேஸ் பற்றித் தானே பேசுகிறீர்கள் ஜீ?”

 

அந்தக் கேஸ் என்ன?”

 

அது போலீஸ் ஜோடித்த பொய் வழக்கு ஜீ. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போன போது என்னைப் போல் ஒரு பாவப்பட்டவனை சிக்க வைப்பது அவர்களுக்குச் சுலபமாகப் போய் விட்டது.”

 

பாண்டியனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. நாம் எதையோ கேட்டால், இவன் எதையோ சொல்கிறான். என்ன தான் சொல்கிறான் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் நினைத்தாலும் அவனை அதுபற்றிப் பேச விட வேண்டாம் என்று பாண்டியனின் உள்ளுணர்வு அவரை எச்சரித்தது. அவன் குழப்பமான புதுக்கதை எதாவது சொல்லி அவரைத் திசை திருப்பி விடப் பார்ப்பதாக அவருக்குத் தோன்றியது.

 

பார். நான் சொன்னது அந்தக் கேஸ் பற்றி அல்ல.  நீ எங்களை ஏமாற்றிய கதையைச் சொன்னேன்.”

 

ஷ்ரவன் அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்ட கோபத்தோடு கேட்டான். “அபாண்டமாய் பழி சுமத்தாதீர்கள் ஜீ. நான் உங்களை ஏமாற்றினேனா? எப்போது? எப்படி?”

 

அவன் இதுவரை அப்படிக் கோபமாய் பேசியதில்லை. எப்போதும் பணிவும், மரியாதையும் மட்டுமே காட்டிவந்த அவன் நியாயவான் போல் கோபத்துடன் கேட்டது அவரை ஆச்சரியப்படுத்தியது.

 

நீ இங்கே துறவியாய் வந்தது, உன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகக் கதைகள் சொன்னது இதையெல்லாம் தான் சொன்னேன்.”

 

ஷ்ரவன் கோபத்துடனேயே கேட்டான். “அதில் எனக்கென்ன லாபம்?”

 

அதை நீ தான் சொல்ல வேண்டும்

 

ஷ்ரவன் கோபம் குறையாமல் சொன்னான். “லாபம் இருந்தால் தானே நான் சொல்ல முடியும். புகார் சொல்லும் நீங்களே சொல்லுங்கள் எனக்கு என்ன லாபம்?”

 

குற்றம் செய்து மாட்டிக் கொண்டவர்களிடம் பயம், அதிர்ச்சி, உளறல், அழுகை, தப்பிக்க முயற்சி செய்தல் ஆகியவற்றைத் தான் பாண்டியன் இதுவரை பார்த்திருக்கிறார். கோபமும், எதிர்க்கேள்விகளும் அவர் இதுவரை பார்த்திராதது.

 

ஷ்ரவன் சொன்னான். “நான் துறவியாக வந்தேன். எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்து யோகிஜி இருக்குமிடத்தில் மீதி வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கலாம் என்று வந்தேன்.  ஆனால் என்னிடம் இருக்கும் விசேஷ சக்திகளைப் பற்றி நானாக உங்களிடம் சொன்னது கிடையாது ஜீ. நன்றாக யோசித்துப் பாருங்கள். சுவாமி கண்ணனிடமும், சுவாமினி கல்பனானந்தாவிடமும் நான் என்னிடம் இருந்த விசேஷ சக்திகளைப் பற்றிச் சொன்னது கூட அவர்களாக என்னிடம் அதுபற்றிக் கேட்ட பிறகு தான். சுவாமிஜி கண்ணன் இங்கேயே இருக்கிறார். அவரிடம் கேளுங்கள். வேண்டுமானால் சுவாமினி கல்பனானந்தாவையும் அழைத்துக் கேட்டுப் பாருங்கள். என் அப்பா என்னை எச்சரித்து இருந்ததால் எனக்கு ஆரம்பத்திலிருந்தே அந்தச் சக்திகள் பிரச்சினையானவை என்ற சந்தேகம் எப்போதும் இருந்தது. அதனாலேயே பல காலம் நான் அதிலிருந்து விலகி இருந்தேன். ஆனால் ஒரு நண்பன் என்னை அதில் மறுபடியும் இழுத்து விட்டான். அதுவும் போலீஸ் கேஸ் ஆனதில் தான் முடிந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போய் யோகா, தியானம், துறவு என்று வாழ முடிவு செய்து தான் நான் இங்கே வந்தேன். இங்கேயும் யோகா வகுப்பு முதல் நிலை வகுப்புகளில் எனக்குப் பிரச்சினை இருக்கவில்லை. இரண்டாவது நிலை வகுப்புகளுக்கு வந்த போது தான் பிரச்சினை ஆரம்பமானது.  யோகாலயத்தில் உலாவிக் கொண்டிருக்கும் துஷ்ட சக்தி ஓநாய் ரூபத்தில் வந்து ஒரு காலை நேரத்தில் என்னைத் தாக்கியது. உடனே என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. உடம்பெல்லாம் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. அப்போதே எச்சரிக்கை ஆகி நான் இங்கிருந்து போயிருக்க வேண்டும். சில நாட்கள் முன்பு பார்த்த ஓமன் படம் காரணமாக அந்த அனுபவம் வந்திருக்கிறது என்று நானே என்னைச் சமாதானம் செய்து கொண்டு விட்டது தான் என் தவறு.…”    

 

பாண்டியனும் கண்ணனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த துஷ்டசக்திகள் கண்ணுக்குத் தெரிந்தாலும் ஓநாய் என் காட்சிக்கு வந்தது கிடையாது. பாம்பு, வவ்வால், ஆந்தை, கருப்புப் பூனை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் ஓநாய் இங்கு வரும் வரை தெரிந்தது கிடையாது. அதுவும் கண்களில் தீ கக்கும் ஓநாயை நான் கனவிலும் பார்த்தது கிடையாது. துஷ்டசக்திகளில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ வந்த போது என்னை அழைத்து அதில் கவனம் வைக்கவும், அதைப் பார்க்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளவும் சொன்னது நீங்கள் தான் ஜீ. அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, இல்லை அதுவும் உங்களுக்கு மறந்து விட்டதா? அப்போதும் கூட எனக்கு அதை வளர்த்துக் கொள்ள மனம் இருக்கவில்லை. கடைசியில் யோகிஜி அவர்களே சொன்ன பிறகு தான் நான் அதற்குச் சம்மதித்தேன். அப்படி நீங்களே என்னை அந்த துஷ்டசக்திகளின் பக்கம் தள்ளி விட்டு இப்போது அபாண்டமாய் பழி சுமத்துகிறீர்களே, என்ன நியாயம் ஜி? தயவு செய்து சொல்லுங்கள்.”


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, March 26, 2026

சதுரங்கம் 11

 

ர்ஜுனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பாட்டி யசோதா ஒரு நாள் கூட அவர்கள் வீட்டில் தங்கியதில்லை. அது அவனை நீண்ட காலமாகக் குழப்பியிருந்தது. இரண்டு பிள்ளைகளின் தாய் இளைய மகனுடனேயே தான் எப்போதும் இருப்பதும், தவறிக் கூட மூத்த மகன் வீட்டில் வந்து தங்காததும் அவனுக்கு இயல்பாகத் தெரியவில்லை. பாட்டி அபூர்வமாக அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் சில மணி நேரங்களில் கிளம்பி விடுவாள். ஒரு முறை சித்தப்பா, சித்தி இருவரும் சேர்ந்து வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தார்கள்.  அப்போது கூட பாட்டி அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கவில்லை. ”எனக்கு இடம் மாறினால் தூக்கம் வருவதில்லைஎன்ற காரணம் சொல்லி இளைய மகன் வீட்டிலேயே தனியாக இருந்து விட்டாள். தினமும், அர்ஜுனோ, நித்யாவோ, ஞானமூர்த்தியோ தான் மாறி மாறி உணவு வகைகளை அங்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள்.

 

அதற்குக் காரணம் அம்மா தான் என்று அர்ஜுன் சந்தேகப்பட்டிருந்தான். மாமியாருக்கும், மூத்த மருமகளுக்கும் இடையே எப்போதும் இணக்கமான உறவு இருந்ததில்லை. அவர்கள் இருவரும் ஒரு முறை கூட, நாலைந்து வார்த்தைகளுக்கு மேல் தங்களுக்குள் பேசிக் கொண்டு அவன் பார்த்ததில்லை. அதனால் தான் யசோதா மூத்த மகன் வீட்டுக்கு வந்து தங்குவதில்லையோ என்று அர்ஜுனுக்கு சந்தேகம் வந்திருந்தது. இப்போது தான் உண்மைக் காரணம் புரிகிறது.

 

ஆனால் ஞானமூர்த்தியும், ராஜாராமும் வெளிப்பார்வைக்காவது நெருங்கியே இருந்தார்கள். ஞானமூர்த்தி தன் பிறந்த நாள் அன்றும், வாசுதேவனின் நினைவு தினம் அன்றும் அவர்களது பூர்வீக வீட்டுக்குச் சென்று தாயின் ஆசி பெற்று வருவது வழக்கம். அப்படிச் செல்லும் போது அண்ணனும், தம்பியும் நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். ராஜாராமும் தன் பிறந்த நாள் அன்று தவறாமல் வந்து அண்ணனிடம் ஆசி பெற்றுச் செல்வார். மற்றபடி அவரும் அண்ணன் வீட்டுக்கு வருவது மிகவும் குறைவு என்றாலும் சந்திக்கும் இடங்களில் இருவரும் நெருக்கமாகத் தான் தோன்றினார்கள்.   ஆனாலும் பின்னணியில் இருவரும் அந்த அளவு நெருக்கமில்லையோ என்று கூட இப்போது அர்ஜுனுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அந்த அளவு உண்மையிலேயே அண்ணனுடன் நெருக்கமாக இருந்திருந்தால் அரசியலில் அண்ணனுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ராஜாராம் எடுத்திருக்க மாட்டார். ஆனாலும் அவரும் கூடவாசுதேவனுக்குப் பிறந்த ஒரே மகன் நான் தான். அண்ணன் ஞானமூர்த்தி வளர்ப்புப் பிள்ளை தான்என்று ஒருபோதும் வெளியாட்கள் யாரிடமும் சொன்னதில்லை. அதை யசோதாவும் கூட இதுவரை சொன்னதில்லை.

 

யோசிக்க யோசிக்க இவர்கள் உறவுகளில் வெளியே தெரியாத, சரியாகப் புரியாத நிறைய உள்விஷயங்கள் இருப்பதாக அர்ஜுனுக்குத் தோன்றியது. ஞானமூர்த்தி வெகுசீக்கிரம் தன் நெகிழ்வான மனநிலையிலிருந்து சீக்கிறம் மீண்டு பழைய அமைதிக்கு மாறினார். அவர் தன் அமைதியை இழப்பது மிக அபூர்வம். அந்த அபூர்வ தருணங்களில் கூட சீக்கிரமாக அமைதிக்குத் திரும்பி விடுவார். அது எப்போதுமே அர்ஜுனையும், நித்யாவையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது….

 

அர்ஜுன் அவரைப் பேட்டி எடுப்பதற்கான கேள்விகளைத் தயார்ப்படுத்திக் கொண்டு வரவில்லை என்பதால் தந்தையிடம் சொன்னான். “சரி அப்பா. நான் நாளைக்கு உங்களைப் பேட்டி எடுக்கட்டுமா? எத்தனை மணிக்கு?”

 

சாயங்காலத்துக்கு மேலே….. ஏழு மணிக்கு?” என்று அவரும் அந்த நேரம் அவனுக்கு சௌகரியப்படுமா என்பது போல் அவனைக் கேட்டார். அவன் சரியெனத் தலையசைத்தான்.

 

பானுமதி சமையலில் உதவி செய்ய நித்யாவை அழைக்க, நித்யா எழுந்து சென்றாள். அர்ஜுனும் தனதறைக்கு வந்தான். அறைக்கு வந்த பின் குடும்ப அரசியல் எல்லாம் பின்னணிக்குத் தள்ளப்பட்டு கீதா அவன் மனதை ஆட்கொள்ள ஆரம்பித்தாள்.  அவளைப் பற்றி யோசிக்க யோசிக்க, காதல் என்ற பெயர் சூட்டாமலேயே இப்போது வரை அவளைக் காதலித்துக் கொண்டு இருப்பது அவனுக்கு உறுதிப்பட்டது. அவளிடம் நாளை இது குறித்து மனம் விட்டுப் பேசி விட வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 

மறுநாள் அவன் எப்போதையும் விட அதிக நேரமாக கண்ணாடி முன் நின்று தன்னை அழகுபடுத்திக் கொண்டான். இதற்கு முன்பு வரை ஒரு நிமிடத்திற்கு அதிகமாக அவன் கண்ணாடி முன் நின்றதில்லை.

 

நித்யா வந்து அவன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். “என்ன அலங்காரம் எல்லாம் பலமாயிருக்கு. நேற்று வரைக்கும் இப்படி நீ கண்ணாடி முன்னால நின்னதை நான் பார்க்கலயே

 

அர்ஜுன் சிறிது வெட்கப்பட்டான். நித்யா சொன்னாள். “ஐயோ என் அண்ணன் வெட்கமெல்லாம் படறான்.”

 

அர்ஜுன் அவள் காதைப் பிடித்து இழுத்தான். “அண்ணன் என்ன செய்யறான்னு பார்க்கறத தவிர உனக்கு வேற வேலையில்லையாடி. சரியான இம்சைடி நீ.”

 

அவன் கையை நன்றாக கிள்ளி விட்டு தன் காதை விடுவித்துக் கொண்ட நித்யா சொன்னாள். “நன்றி கெட்டவன் நீ. இந்த இம்சை இல்லாட்டி நீ ரொம்ப காலம் ஒத்தை ஆளாவே இருந்து கஷ்டப்பட்டிருப்பாய், ஞாபகம் வெச்சுக்கோ.”

 

அர்ஜுன் தங்கையை புன்னகை கலந்து முறைத்து விட்டுக் கிளம்பினான். அவனிடம் அவள் சொன்னாள். ”சாயங்காலம் வர்றப்ப பெரிய டெய்ரி மில்க் சாக்கலேட் வாங்கிட்டு வா. அண்ணி ஓக்கே சொன்னா அவள் சார்பாகவும் எனக்கு இன்னொரு சாக்கலேட் சேர்த்து வாங்கிட்டு வா. சரியா?”

 

அவள் கீதாவை அண்ணி என்று சொன்னது அவனை வெட்கமடைய வைத்தது. அவள் பக்கம் திரும்பாமல் அறையை விட்டு வெளியே வந்தான். அவள் அவன் முகத்தைப் பார்த்தால் அதற்கும் கிண்டல் செய்வாள்….

 

அண்ணன் திரும்பிப் பார்க்காமல் போன காரணம் நித்யாவைப் புன்னகைக்க வைத்தது. அண்ணனைப் பின் தொடர்ந்து வெளியே வந்தவள், ஹாலில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த பானுமதியிடம் சொன்னாள். “உன் மகன் இவ்வளவு அழகாய் ட்ரஸ் பண்ணிகிட்டு போறதை இது வரைக்கும் எப்பவாவது பார்த்திருக்கியா?”

 

பானுமதி சொன்னாள். “பொண்ணுன்னா கொஞ்சமாவது அடக்கம் வேணும்டி.”

 

அப்படின்னா ஆணுன்னா எப்படி வேணும்னாலும் இருந்துக்கலாமா? நம்ம வீட்டு நீதிபதி கிட்ட நியாயம் கேட்கலாமா?”

 

பானுமதியின் கட்டுப்பாட்டையும் மீறி புன்னகை பிறந்தது. ”உன் அண்ணன் சொன்ன மாதிரி நீ ஒரு சரியான இம்சை தான்டி.”

 

உண்மை எப்பவுமே கொஞ்சம் இம்சையா தான் இருக்கும்மா. என்ன பண்றது?”

 

பானுமதி மகளைச் செல்லமாய் முறைத்தாள். இத்தனை வயதானாலும் மகளைப் போல் யோசிக்கவோ, பேசவோ அவளுக்குத் தெரிவதில்லை. ஏதாவது சொன்னால், சொன்ன வேகத்திலேயே மறுக்க முடியாதபடி பதில் சொல்லும் வித்தை காலப்போக்கிலும் அவளுக்கு வந்து விடவில்லை. ஆனால் ஒரு விதத்தில் மகள் அவளைப் போல் இல்லாமல் இருப்பதில் அவளுக்கு சந்தோஷம் தான். கலகலப்பாய், புத்திசாலியாய், மகள் இருப்பதில் அவளுக்குப் பெருமை தான். அவளைப் போல் அவள் மகள் கஷ்டப்பட மாட்டாள். அது போதும் அவளுக்கு….

 

அந்த வீட்டில் கலகலப்பும் உயிர்ப்பும் இருப்பது அவள் மகளால் தான். அப்பா, அம்மா, அண்ணன் மூவரில் யாரையாவது வம்புக்கு இழுத்துப் பேசிக் கொண்டே இருப்பாள். மூவரில் ஞானமூர்த்தியை அவள் வம்புக்கு இழுப்பது குறைவு. நித்யாவிடம் அதிகமாய் சிக்கிக் கொள்வது அவளும், அர்ஜுனும் தான்.  நித்யா என்றைக்காவது வீட்டில் இல்லை என்றால் வீட்டில் பேரமைதி நிலவும். மூன்று பேரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். மூவருமே நித்யா வீட்டில் இல்லாததை ஒரு பெரிய குறையாய் உணர்வார்கள். நித்யா கல்லூரித் தோழிகளுடன் ஒரு முறை மூன்று நாட்கள் சுற்றுலா சென்றிருந்தாள்.  மூவருக்கும் அவள் எப்போது வருவாள் என்று ஆகிவிட்டது.  

 

பானுமதியிடம் அதிகமாய் சண்டை பிடிப்பவளும் அவள் தான். அதிகமாக அவள் சண்டை போடுவது அவளுடைய அண்ணனுக்காகத் தான்.  அண்ணனுக்கு அம்மா போதுமான அளவு அன்போ, முக்கியத்துவமோ தருவதில்லை என்பது தான் நித்யாவுடைய மறைமுகமான புகாராக இருந்திருக்கிறது. அதனாலேயே அம்மாவுக்குமாகச் சேர்த்து அண்ணன் மேல் தங்கை பாசத்தைப் பொழிகிறாளோ என்று கூட பானுமதிக்குத் தோன்றியிருக்கிறது. மகளிடம் எப்படி அவள் உண்மையைச் சொல்வாள்?