என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 29, 2026

யோகி 162


 

பாண்டியனுக்கு விஸ்வகீர்த்தி மேலும் முழு நம்பிக்கை வரவில்லை. விஸ்வகீர்த்தி புகழ் பெற்றவராக இருந்தார். அவருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் அவரைப் பெரிதாகக் கவரவில்லை. பிரம்மானந்தாவும் புகழ் பெற்றவர், அவருக்கும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். இறைவனின் அவதாரம் என்றும் சொல்கிறார்கள். அதில் தான் அவர்கள் வியாபாரம் நடக்கிறது. ஆனால் ஒரு யோகியின் காலடி மண் தேவைப்பட்ட போது அவர்களே வேறிடத்தில் அல்லவா தேடவேண்டி வந்தது. பிரம்மானந்தா யோகியாய் சொல்லப்படுவது போல் விஸ்வகீர்த்தி மந்திரவாதியாய் சொல்லப்படுகிறாரோ என்ற சந்தேகம் பாண்டியனுக்கு வந்து தொலைத்தது.

 

விஸ்வகீர்த்தியிடம் அவர் அலைபேசியில் ஹிந்தியில் பேசிய போது பீடிகை எல்லாம் பெரிதாக இருந்தது. அவர் சொன்ன தொகை இரண்டு லட்சமாக இருந்தது. அவருக்கு மாகாளி அருள் இருப்பதாகவும், மாகாளி அவருக்கு அடிக்கடி காட்சி தருவாள் என்றும் அவர் சொன்னது பாண்டியனுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையைக் குறைத்தது. இன்னொரு பிரம்மானந்தாவை இங்கே வரவழைக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. கூடுதலாக விசாரித்ததில் சிலர் உயர்வாகவும், சிலர் குறைவாகவும் அபிப்பிராயம் சொன்னார்கள். இப்படி ஒரு நிலைமை வரும் என்று பாண்டியன் எதிர்பார்த்திருக்கவில்லை. தகுந்த ஆள் இருந்தால் அவர் கோடிக் கணக்கில் செலவு செய்யவும் தயாராக இருக்கிறார். பணம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் தகுதி வாய்ந்த ஆட்கள் அரிதாகவும், போலிகள் மலிவாகவும் காணக்கிடைப்பது இக்காலத்தின் சாபக்கேடு என்று அவருக்குத் தோன்றியது.

 

வியாழக்கிழமை காலையில் விஸ்வகீர்த்தி தன் சீடர்கள் இருவருடன் யோகாலயம் வந்து சேர்ந்தார். விஸ்வகீர்த்தியைப் பார்த்தவுடன், பாண்டியனுக்கு தேவானந்தகிரி மேல் வந்த நம்பிக்கை அவர் மேல் வரவில்லை. விஸ்வகீர்த்தி தேவானந்தகிரி போல் அவராக எந்த விஷயத்தையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. “மகாகாளி ஏவல் சக்தி இங்கே பீடித்திருக்கிறது என்று சொல்கிறாள்என்று பொதுவாகச் சொல்ல, அதற்கே அந்தச் சீடர்கள் இருவரும் பெரியதொரு அருள்வாக்கு கிடைத்து விட்டது போல் வியப்புடன் பார்த்தார்கள். பாண்டியனாகவே ஏவல்சக்தியின் தொந்தரவுகளைச் சொன்னார். விஸ்வகீர்த்திக்குக் கண்டுபிடிக்கத் தெரியாவிட்டாலும், பிரச்சினை இதுவென்று தெளிவாகச் சொன்னால் அதற்கு பூஜை செய்து சரியாக மந்திரித்து தாயத்து கட்டி பிரச்சினை வராத மாதிரி பார்த்துக் கொண்டால் போதும் என்று அவருக்குத் தோன்றியது.

 

விஸ்வகீர்த்தி செய்த பூஜைகள் வேறு விதமாக இருந்தன. வரைந்த படங்களும் யந்திரங்களும் கூட வித்தியாசமாய் இருந்தன. அர்த்த ஜாமத்தில் பூஜை செய்து இனி ஒரு மண்டலம் முடியும் வரை பிரச்சினை இல்லை என்று அவர் உறுதியாகச் சொல்லி தாயத்தைக் கட்டினார். பழைய தாயத்தை கழற்றி விடலாம் என்று அவர் தைரியம் சொன்னாலும் பாண்டியன் பழைய தாயத்தைக் கழற்றவில்லை.

 

வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வகீர்த்தியும், அவருடைய சீடர்களும் போய் விட்டார்கள். பாண்டியனுக்கு அந்தத் தாயத்து தேவானந்தகிரியின் தாயத்து போலவே சக்தி வாய்ந்ததாய் இருக்கும் என்ற நம்பிக்கை பத்து சதவீதமே இருந்தது.  விஸ்வகீர்த்தியைப் பற்றி உயர்வாய்ச் சொன்ன பக்தர்கள் வாக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டும் அந்த அதிசயம் சம்பவிக்கலாம் என்று தோன்றியது.

 

ஆனால் பிரம்மானந்தா நம்பிக்கையோடு இருந்தார். நான்கைந்து பேர் பெயரைச் சொல்லி அந்தப் புத்திசாலிகள் எல்லாம் காரணமில்லாமல் விஸ்வகீர்த்தியைப் பாராட்டியிருக்க மாட்டார்கள் என்று சொன்னார். அதில் பாண்டியனுக்கு நம்பிக்கையில்லை. புத்திசாலிகளும், விருப்பு வெறுப்பு இல்லாமல் கூர்ந்து கவனித்து அலசினால் தான் எந்த உண்மையையும் புரிந்து கொள்ள முடியும். நம்பி விட்டுக் கவனித்தால், நல்லது மட்டுமே அவர்களுக்கும் தெரியும்.

 

தன் அளவு பாண்டியன் நம்பிக்கையோடு இருக்காதது பிரம்மானந்தாவுக்கு ஏமாற்றமாய் இருந்தது.    ஏன் பாண்டியன் சந்தேகப்படுகிறாய்?”

 

எல்லாத்துக்கும் தயாராய் இருக்கறது தான் சரி யோகிஜிஎன்று சொன்ன பாண்டியன் தனதறைக்குச் சென்று விட்டார். யோசிக்க அவருக்குத் தனிமை தேவைப்பட்டது. நிறைய யோசித்தார். நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பலவற்றுடன், அவரால் இறந்தவர்கள் நினைவுக்கு வந்தார்கள். யார் வம்புக்கும் அவராகப் போனதில்லை. வம்புக்கு வந்தவர்களுக்கு அவர் தயவு தாட்சணியமும் காட்டியதில்லை. அது தவறென்று இப்போதும் தோன்றவில்லை.  சைத்ராவை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்று சில சமயங்களில் தோன்றியதுண்டு. இப்போதைய நிலைமைக்குக் கூட அவள் தான் மூலகாரணம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது. “என்னை மாதிரி நீயும் மரணத்துக்குக் காத்துகிட்டிருக்கற நாள் வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லை.” என்று அவள் ஆணித்தரமாய் சொன்ன போது அவர் ஏளனமாய் சிரித்தார். அறிவாளியான அவருக்கு, அவள் சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பிருப்பது போல அப்போது தெரியவில்லை.

 

ஆனால் வாழ்க்கை மிக விசித்திரமானது. அது சிறிதும் எதிர்பார்க்க முடியாத சூழல்களையும் கண நேரத்தில் உருவாக்கி விடக்கூடியது. அந்த சமயங்களில் ஒருவன் சேர்த்த செல்வமும், பெற்றிருக்கும் பேரறிவும்,  இருக்கின்ற உயர்ந்த நிலைமையும் கூட அவனுக்கு உதவாமல் போய் விடலாம். அதை இந்தக் கணத்தில் அவர் உணர்கிறார். அவரிடம் எல்லாம் இருக்கிறது. எதற்கும் குறைவில்லை. நள்ளிரவு வரை எதை வேண்டுமானாலும் செய்ய அவருக்கு அவகாசம் இருக்கிறது. ஆனாலும் அவரால் திருப்திகரமாய் ஒன்றும் செய்ய முடியவில்லை. உண்மை நிலவரம் என்னவென்று அவருக்கு, முந்தைய மண்டல காலம் முடியக்கூடிய இன்றைய நள்ளிரவில் தான் தெரியும். புதிய தாயத்து வேலை செய்யா விட்டாலும் தேவானந்தகிரியையே சில நாட்களில் வரவழைத்து விட முடியும் என்றாலும், அந்தச் சில நாட்களுக்குள் அவர் நிலைமை சரிசெய்ய முடியாத நிலைமைக்குப் போயிருக்கும். அவர் சுகுமாரன் நிலைமையையே உதாரணமாய் பார்த்திருக்கிறார்…. அப்படியொரு நிலைமை வந்தால் அவர் உயிர் வாழ விரும்பவில்லை.

 

அவர் இறந்து விட்டால் பிரம்மானந்தாவைத் தவிர அதிகமாய் வருத்தப்படுபவர்கள் யாருமில்லைஅதனால் பிரம்மானந்தாவிடம் போய் தன் முடிவைச் சொல்லி விடைபெற்று வர வேண்டும் என்று ஆரம்பத்தில் பாண்டியனுக்குத் தோன்றியது. ஆனால் பிரம்மானந்தா கசப்பான நிஜங்களை ஏற்றுக் கொள்ள முடிந்தவர் அல்ல. அதிகமாக கற்பனைகளில் வாழ்பவர் அவர். வருத்தமானாலும், புரிதலோடு விடைகொடுப்பதற்குப் பதிலாக, முடிவை மாற்றிக் கொள்ள வைக்க அவர் மன்றாடலாம். ஒருவேளை, நள்ளிரவு வரை உள்ள காலம், பாண்டியனின் கடைசி காலமாக இருந்தால் அதில் துக்கம், புலம்பல், வேதனையை பிரம்மானந்தாவுடன் இருந்து நிரப்பிக்கொள்ள பாண்டியன் விரும்பவில்லை.

 

திடீரென்று அந்த நிஜ யோகியின் நினைவு வந்தது. பணமோ, வாழ்க்கை சௌகரியங்களோ இல்லா விட்டாலும் ஒவ்வொரு கணமும் மலர்ச்சியோடும் நிறைவோடும் அந்தக் கிழவர் வாழ்வது நினைவுக்கு வந்தது. கணக்கெடுத்தால் அது போன்ற நிறைவான கணங்கள் தன் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். பெரிதாக எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேறு யோசனைக்கு கவனத்தைத் திருப்புகையில் ஷ்ரவன் அவர் நினைவுக்கு வந்தான். அவரையே ஏமாற்றிய வெகுசிலரில் அவனும் ஒருவன்இன்னொரு நபர் இங்குள்ள கருப்பு ஆடு. அனேகமாக அந்தக் கருப்பு ஆடு கல்பனானந்தாவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. நள்ளிரவு தாண்டியும் உயிரோடிருந்தால் முதல் வேலையாக அவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். அப்படி உயிரோடிருக்கா விட்டால் அவர்களை இப்போது நினைப்பதே வீண் தான்.

 

பீரோவில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து தன் இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார். ஒரு காகிதத்தில் தற்கொலைக்கான காரணத்தை இப்படி எழுதினார். “என் நிர்வாகத்தின் கீழ் யோகாலயத்தில் தவறுகள் நடந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குற்றவாளிகள் பிடிபட்டாலும், என் கவனக்குறைவின் காரணமாக யோகாலயத்திற்குக் கிடைத்திருக்கும் அவப்பெயர் என்னை வேதனைப் படுத்துகிறது. தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் எந்த விதத்திலும் காரணமல்ல. யோகிஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று எழுதிக் கையெழுத்திட்டார். இனி தேவையில்லாத விசாரணையோ, கேள்விகளோ, தேடலோ இங்கிருக்காது. காகிதத்தை மடித்து டைரியில் வெளியே தெரிகிற மாதிரி சொருகி வைத்து விட்டு, அவர் கடிகார முள்ளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 

பழைய தாயத்து அணிந்ததிலிருந்தான  மண்டல காலம் முடிந்த பிறகு அவர் ஜன்னல் வழியே பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் வாசலில் தீ உமிழும் கண்களுடன் ஓநாய் தெரிந்தது. புதிய தாயத்து வேலை செய்யவில்லை என்பது தெரிந்து விட்டது. அதற்கு மேல் அவர் யோசிக்கவில்லை. இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.  துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக் கொண்டார்.


(தொடரும்)

என்.கணேசன்

Thursday, June 25, 2026

சதுரங்கம் 24


 

ராஜாராம் யாரந்தப் பெண் என்று கேட்டவுடன் யசோதாவின் முகம் உடனடியாக மலர்ந்தது. முந்தைய களைப்பு காணாமல் போனது. “என்னடா அர்ஜுன், அவன் சொல்றது சரி தானா? யாரந்த பொண்ணு?”

 

மைதிலியும் உள்ளேயிருந்து சமையல் வேலையை விட்டு விட்டு வெளியே வந்து விட்டாள். “அர்ஜுன்! நீ சொல்லவேயில்லை...”

 

அர்ஜுன் தன்னுடைய பாழாய்ப் போன வெட்கத்தை நொந்து கொண்டான். முதலில் அம்மா அப்பாவிடம் கீதாவைப் பற்றிச் சொல்லாமல் இவர்களிடம் சொல்வது சரியல்ல என்று அவனுக்குத் தோன்றியது. “இன்னும் எதுவும் முடிவாகலை. ஆன பிறகு சொல்றேன்.” என்றான்.

 

யசோதா சொன்னாள். “சீக்கிரம் முடிவு பண்ணுடா. முடிவான பிறகு நான் ஞானமூர்த்தி கிட்ட பேசறேன்.”

 

சரி பாட்டிஎன்ற அர்ஜுன், அவர்கள் மறுபடியும் அவனுடைய திருமணம் பற்றிப் பேச ஆரம்பிக்கும் முன் தன்னுடைய கட்டுரைக்கான பேட்டியைத் தொடர்ந்தான். எதிர்க்கட்சித் தலைவராக வாசுதேவன் இருந்த காலத்திலும், முதலமைச்சராக அவர் இருந்த காலத்திலும் நடந்த சுவாரசிய நிகழ்வுகளைப் பற்றி அவன் கேட்டான். ராஜாராம் நிறைய சுவாரசிய நிகழ்வுகளைச் சொன்னார். அவருடைய நினைவு சக்தி, வழக்கம் போல் அவனைப் பிரமிக்க வைத்தது. ஆட்களுடைய பெயர், தேதிகள், இடங்களின் பெயர்கள் ஆகியவற்றை அவர் மிகச்சரியாய் நினைவு வைத்திருந்தார். ஒரு நிகழ்வைப் பற்றி அவர் சொல்வாரேயானால் அந்த நிகழ்வின் போது யாரெல்லாம் இருந்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதையெல்லாம் கூட பல காலம் கழித்தும் சரியாக அவர் நினைவு கூர்வது அவனுக்குப் பேராச்சரியமாக இருந்தது. எல்லாமே அவருக்கு சரளமாக வந்தது. எதற்கும் அவர் திணறவோ, யோசிக்கவோ இல்லை.

 

இதற்கு முன்பு ஒரு முறை அவரிடம் அவன் ஆச்சரியமாகக் கேட்டிருக்கிறான். “எப்படி சித்தப்பா இவ்வளவு கச்சிதமாய் எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க.”

 

அதெல்லாம் பெரிய விஷயம் இல்லைடா. முதல்ல நமக்கு அதை ஞாபகம் வெச்சிக்கணும்னு அக்கறை வேணும். அப்புறமா தகவல்கள் ஒன்றோடு ஒன்றை மனசில் ஏதாவது வகையில் இணைச்சு வெச்சுக்கணும். அதன் பிறகு நாம எப்போ அந்த விஷயத்துல ஒரு பகுதியை எடுத்தாலும், தானாக மற்றதெல்லாம் நினைவுக்கு வந்துடும். அக்கறையும், மனசுல ஒழுங்குபடுத்தி இணைச்சு வெச்சுக்கறதும் இருந்தால், எதையும் ஞாபகப்படுத்திக்கறது ரொம்ப சுலபம்.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

 

அவனும் அதைப் பின்பற்றி இருக்கிறான். அவரளவு கச்சிதமாக இல்லா விட்டாலும் அவனும் ஓரளவு நன்றாக நினைவுபடுத்திக் கொள்கிறான். அவனுடைய வேலையில் அது பெரிய உதவியாகவும் இருக்கிறது. ஆனால் அவர் ஈடுபாடு காட்டும் துறைகளும், விஷயங்களும் ஏராளம். அத்தனையிலும் அவர் நினைவு வைத்துக் கொள்வது பேராச்சரியம் தான்...

 

வாசுதேவன் முதல்வராக இருந்த காலத்தில் மூத்த அமைச்சராக இருந்த தணிகாச்சலம் தான், வாசுதேவனுக்குப் பின் முதல்வரானவர். அவர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை. அக்காலத்திலேயே இளைய அமைச்சராக இருந்த ரத்தினம் அடுத்து முதலமைச்சரானவர். அவர்களைப் பற்றியும் அர்ஜுன் ராஜாராமிடமும், யசோதாவிடமும் கருத்துகள் கேட்டான். இருவருக்கும் இருவர் மேலும் நல்லபிப்பிராயம் இல்லை. வாசுதேவனுக்கு இணையாகப் பேசக்கூட தணிகாச்சலமும், ரத்தினமும் தகுதியில்லாதவர்கள் என்றே யசோதாவும், ராஜாராமும் கருத்து தெரிவித்தார்கள். யசோதா தன் கருத்தைச் சொல்லும் போது இழிவான ஒன்றைப் பேசுவது போல முகத்தைச் சுளிக்கவும் செய்தாள். ஆனால் அப்படிப்பட்டவர்களை மாறி மாறி ராஜாராம் ஆதரித்து வந்தது ஏன் என்று அர்ஜுனுக்குப் புரியவில்லை. ராஜாராம் ஒரு முறை தனியாக விரிவாகப் பேசலாம் என்று சொல்லியிருந்தாரல்லவா, அப்போது பதில் கிடைக்கலாம் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

பேட்டியை முடித்துக் கொண்டபின் அர்ஜுன் ராஜாராமிடம் அவரது ஆக்ஸ்ஃபோர்டு பயணத்தைப் பற்றிக் கேட்டான். மிகச் சிறப்பாகவும், திருப்தியாகவும் இருந்தது என்று தெரிவித்த ராஜாராம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் என்பது ஒரு பரந்த வளாகத்தில் இருக்கும் பெரிய கட்டிட அமைப்பு கிடையாது என்ற சுவாரசியத் தகவலைச் சொன்னார். ஆக்ஸ்ஃபோர்டு என்பது சிறிய நகரம் என்றும் அந்த நகரத்திற்குள் பல கட்டிடங்களில் பல்கலைக்கழகத்தின் பல துறைகள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள், பேச்சரங்கங்கள், தங்கும் விடுதிகள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் என்று நகரமெங்கும் அந்தப் பல்கலைக்கழகம் பரவியிருக்கிறது என்பதை ராஜாராம் விவரித்தது, அர்ஜுனுக்குப் புதிய தகவலாய் இருந்தது அவன் சுவாரசியமாய் அதைக் கேட்டுக் கொண்டான். அவர் அங்கு ஆற்றிய சொற்பொழிவு பற்றியும் கேட்டான். அவர் சொல்வதை அவன் கூர்ந்து உண்மையான ஆர்வத்துடன் கவனித்துக் கேட்பதை யசோதா அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அவர் இருந்திருந்தால் இதையெல்லாம் எவ்வளவு பெருமிதத்தோடு பார்த்திருப்பார்!’         

 

மைதிலி வந்து சொன்னாள். “செவிக்குணவு போதும். கொஞ்சம் வயிற்றுக்கும் உணவு கொடுங்க. வாங்க.”

 

மைதிலியின் வெஜிடபிள் பிரியாணி வழக்கம் போல் மிகவும் ருசியாக இருந்தது. அர்ஜுன் நன்றாகச் சாப்பிட்டதில் மைதிலிக்குப் பரம திருப்தி. சாப்பிடும் போது மைதிலி நித்யா பற்றிக் கேட்டாள்.

 

அர்ஜுன் புன்னகையுடனும், பெருமிதத்துடனும் சொன்னான். ”ஊம் இருக்கா. சரியான வாய். பேசியெல்லாம் நாம ஜெயிக்க முடியாது.”

 

மைதிலி சொன்னாள். “அது நல்லதுடா. பொண்ணுங்களுக்கு அது முக்கியமா வேணும். அதில்லாம வாயில்லா பூச்சியா இருந்தால் கஷ்டம் தான்.”

 

ராஜாராம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனா வாய் அதிகமா இருந்தா, புருஷனுக்கு வாழ்நாள் பூரா கஷ்டம் தான். அதையும் நாம ஒத்துக்கணும்.”

 

மைதிலி முறைக்க அர்ஜுன் சித்தப்பாவுடன் சிரிப்பில் கலந்து கொண்டான். 

 

சாப்பிட்டு முடிந்தவுடன் அர்ஜுன் யசோதாவிடம் சொன்னான். “பாட்டி, எனக்கு தாத்தா அறையைப் பார்க்கணும். கொஞ்சம் நேரம் அங்கே உட்கார்ந்து பழசு எதாவது ஞாபகம் வருதான்னு பார்க்கணும்.”

 

யசோதா கண்கலங்க சொன்னாள். “போடா. போய் உட்கார்ந்து பாரு. அங்கே தான் அதிகமாய் உன்னை மடியில வெச்சுகிட்டு விளையாடிகிட்டு இருப்பார். அவர் ஆத்மா எங்கே இருந்தாலும் உன் கிட்ட பேசும்….”

 

அர்ஜுன் வாசுதேவன் அறைக்குப் போனான். அங்கே அவருடைய ஆளுயர புகைப்படம் இருந்தது. கம்பீரமான தோற்றம். சாத்வீகமான முகம். அந்தப் புகைப்படத்தில் தெரிந்த அவர் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அறையில் அவர் உட்கார்ந்து வேலை பார்த்த மேசை, அவருடைய புத்தக அலமாரி, பீரோ, சோபா - எல்லாவற்றையும் சிறிது நேரம்   அர்ஜுன் பார்த்தான். எதுவும் அவனுக்கு அவரை நினைவுபடுத்தவில்லை. ஆனால் ஏனோ அங்கே அமர்ந்திருக்கையில் அவன் மனம் அமைதியாகியது.

 

ராஜாராம் அவன் அறியாமல் அறைக்கு வெளியேயிருந்து அவனையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். அவன் பின்புறம் தான் அவருக்குத் தெரிந்தது. அவனைப் பார்த்து விட்டு தந்தையின் புகைப்படத்தையும் ஒரு முறை பார்த்து விட்டு சத்தமில்லாமல் வந்து தாய்க்கு எதிரில் அமர்ந்து கொண்டார். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தார்க:ள்.

 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அர்ஜுன் பாட்டியிடம் சொன்னான். “எனக்கு தாத்தா கூட  இருந்த எதுவுமே நினைவுக்கு வரலை பாட்டி. ஆனா மனசு அமைதியாயிருக்கு. நீங்க சொன்ன மாதிரி தாத்தாவோட ஆத்மா என் ஆத்மா கிட்ட பேசி என்னை அமைதிப்படுத்தியிருக்குமோ?”

 

ஈரமான கண்களுடன் அர்ஜுனைப் பார்த்த யசோதா தலையசைத்தாள். அர்ஜுன் கிளம்புகையில் நித்யாவுக்கு என்று ஒரு டிபன் பாக்ஸில்வெஜிடபுள் பிரியாணியை மைதிலி கட்டிக் கொடுத்தாள்.

 

ராஜாராம் கேட்டார். “இனி எப்படா வர்றே?”

 

வர்றேன் சித்தப்பா.”

 

சீக்கிரமே வாடா. நான் அப்பவே சொன்ன மாதிரி உன் கிட்ட நான் நிறைய பேச வேண்டியிருக்கு.”

 

கண்டிப்பா வர்றேன் சித்தப்பா. பை பாட்டி.... பை சித்தி....”

 

மூவரும் அவனை வாசல் வரை சென்று வழியனுப்பினார்கள். அர்ஜுனுக்கு மனம் நிறைவாயிருந்தது. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனித்தனி வீடுகளில் இருந்தாலும் அவர்கள் குடும்பம் மிக அன்பானது என்று அவனுக்குத் தோன்றியது. 

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 22, 2026

யோகி 161

ஷ்ரவன் சொன்னதைக் கேட்டு தேவானந்தகிரி சற்று தைரியம் அடைந்தார். கத்த முற்படாமல், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்க அவர் தீர்மானித்தார். ஷ்ரவன் சுருக்கமாக சைத்ரா கொலை வழக்கைப் பற்றிச் சொன்னான். வாசுதேவன் கொலை, கிருஷ்ணசாமி தற்கொலை பற்றி எல்லாம் சொல்லி விட்டு விசாரணைக்கு அவனை அரசு நியமித்ததாய் சொன்னான். விசாரணையில் முதல்வரின் பங்கை அவன் சொல்லவில்லை. அதே போல் பரசுராமன் பெயரைச் சொல்லாமல் அவனுக்குத் தெரிந்த ஒரு சுவாமிஜி மாந்திரீகத்தில் பூஜை செய்து ஏவல் சக்திகளை ஏவி விட்டதைச் சொன்னான். அதன் பின் அவன் அங்கு துறவியாய் சென்று கண்டுபிடித்ததையும், அந்தக் கொலையைக் கூட அவர்கள் அடியாட்களின் மேல் போட்டு தப்பித்து, குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருப்பதையும் சுருக்கமாகச் சொன்னான்.

 

முடிவில் ஷ்ரவன் சொன்னான். “ஏவல்சக்தி அனுப்பி எனக்கு உதவி செஞ்ச சுவாமிஜி நல்லவங்க பாதிக்கக்கூடாதுங்கறதுல மட்டுமில்லாமல். கெட்டவங்களும் செஞ்ச தவறுக்குத் தகுந்த தண்டனையை மீறி அனுபவிச்சுடக் கூடாதுங்கறதுலயும் ரொம்ப கவனமாய் இருந்தார் சுவாமிஜி. தப்பான கர்மா தன் கணக்குல வந்துடக்கூடாதுன்னு சொல்வார். இப்ப இந்தக் கொலைகாரங்க லட்சக் கணக்குல தர்றாங்கன்னு அவங்களுக்குப் பாதுகாப்பு தர்ற வேலைகளைச் செய்ய நீங்க போறீங்க. உங்க பேங்க் அக்கவுண்ட்ல வர்ற பணத்தை மட்டும் பாக்கறீங்க. உங்க கர்மா அக்கவுண்ட்ல சேர்றதைப் பத்தி நீங்க ஏன் சுவாமிஜி யோசிக்க மாட்டேங்கறீங்க? நீங்க காப்பாத்தற ஆள்கள் இனியும் எத்தனையோ தப்புகளைச் செய்வாங்க. இதுவரைக்கும் நீங்க செஞ்சதை, அவங்க தப்பானவங்கன்னு தெரியாமல் செஞ்சதாய் எடுத்துக்கலாம். ஆனால் அயோக்கியங்க, கொலைகாரங்க, படுபாவிங்கன்னு தெரிஞ்சதுக்கப்பறமா கூட நீங்க அவங்களுக்கு உதவினா உங்க பாவக்கணக்குல அதெல்லாம் வரவு ஆயிடாதா?”

 

அவன் சொல்லச் சொல்ல தேவானந்தகிரியின் பேத்தி நொண்டி விளையாடிக் கொண்டே அவர்களைக் கடந்து போனாள். ஷ்ரவன் சொன்னான். “நீங்க குடும்பஸ்தர். இவங்களுக்கெல்லாம் பணத்தோட சேர்ந்து பாவத்தையும் சேர்த்து வைக்கிற மாதிரி ஆயிடாதா? எங்க சுவாமிஜி மாதிரி நீங்களும் நிறைய தெரிஞ்சவர். உண்மையெல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன். இனி முடிவு எடுக்கறது உங்க கைல. நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இனி எங்க பக்கத்துல இருந்து சின்ன அசௌகரியம் கூட உங்களுக்கு வராது.”

 

தேவானந்தகிரி சிலை போல் அமர்ந்திருந்தார். ஷ்ரவன் பரசுராமனின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவனுக்கு உதவியது பரசுராமன் தான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. யோகாலயத்தில் செய்த பூஜைகளின் போதே அந்த அளவு ஏவல்சக்தியை பரசுராமனைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது என்று அவர் அறிந்திருந்தார். ஷ்ரவன் சொன்ன குற்றங்கள் அவரை அதிர வைத்தன. மூன்று கொலைகளைச் செய்த பின்னும் குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல், திமிர் அடங்காமல். அலட்சியமாய்  இருந்த குற்றவாளிகள் பக்கம் இது  வரை நின்றதே அவரைக் கூச வைத்தது. இந்த இளைஞன் சொல்வது போல இதுவரை செய்தது அறியாமையால் என்ற கணக்கில் சேர்த்தலாம். ஆனால் இனியும் அவர்களுக்கு உதவுவது இவன் சொல்வது போல பாவக்கணக்கிலேயே அல்லவா சேரும்? குடும்பத்திற்குப் பணத்தைச் சேர்த்து வைத்துப் போகா விட்டாலும் பாவத்தைச் சேர்த்து வைத்து விட்டுப் போவது, குடும்பத்திற்குச் செய்யும் துரோகம் என்ற உண்மையும் அவரைச் சுட்டது.

 

அவர் பரிதாபமாகச் சொன்னார்.  யோகாலயம் பத்தின புகார்கள் வந்து அங்கே முன்னாடி கூட்டம் கூடினப்ப நானே விலகணும்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்பறம் அவங்களே தோண்டிப் பார்க்கச் சொன்ன பிறகு அது எனக்கு நியாயமான அணுகுமுறையாய் தோணுச்சு. ஆள்கள் கைதானவுடனே, வேலைக்காரங்க செய்யற தப்புக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்கன்னு நினைச்சுட்டேன். நான் அவங்க கிட்ட பணம் வாங்கியாச்சு. வர்ற வியாழக்கிழமை வர்றதாய் வாக்கும் கொடுத்துட்டேன். இனி போகலைன்னா அந்த அயோக்கியங்க என்னை சும்மா விடுவாங்கன்னு எனக்குத் தோணலை…. என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

 

ஷ்ரவன் சொன்னான்.

 

பாண்டியன் ஷ்ரவன் யாரென்பதைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அவனைக் கைது செய்ய வந்த ஹைத்ராபாத் போலீஸாரின் புகைப்படங்களை தெலுங்கானா போலீஸில் உள்ள, பிரம்மானந்தாவின் பக்தர் ஒருவருக்கு அனுப்பி அவர்கள் பெயர்களைக் கேட்டார். இவர்கள் எங்கள் போலீஸ் அதிகாரிகளே இல்லை என்ற பதில் உடனடியாக வந்தது. அசிஸ்டெண்ட் கமிஷனருக்கு அத்தகவலை பாண்டியன் அனுப்பி வைத்தார். அசிஸ்டெண்ட் கமிஷனர் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார். போலீஸையே அவர்கள் ஏமாற்றியிருப்பது அவருக்குப் பொறுக்கவில்லை என்பதைத் தெரிவித்த அவர், யோகாலயாவும் ஒரு மோசடி புகார் மனு தந்தால் விசாரணைக்கு இன்னும் அழுத்தம் கிடைக்கும் என்றும் சொன்னார்.

 

அதை சனிக்கிழமை அனுப்பி வைப்பதாக பாண்டியன் அவருக்கு உறுதியளித்தார். வெள்ளியோடு அவர் தாயத்தின் சக்தி முடிகிறது. முன்னெச்சரிக்கையாக ஒரு நாள் முன்பே மாற்று தாயத்துக்கு அவர் ஏற்பாடு செய்து விட்டார். வியாழன் அன்று தேவானந்தகிரி வருகிறார். வியாழன் இரவே பூஜை முடிந்து தாயத்தும் போட்டுக் கொண்டால் பின் நிம்மதியாக அடுத்த மண்டலம் முடியும் வரை அவர் செயல்படலாம். அதற்குள் ஷ்ரவனையும், அவர்களுடைய முக்கிய எதிரியையும் பற்றி எல்லாவற்றையும் கண்டுபிடித்து தண்டித்து அழித்து விட்டால் பின் பழையபடி நிம்மதியாக இருக்கலாம். அதனால் பூஜை முடிந்து தேவானந்தகிரி திரும்பப் போகும் வரை மற்ற வேலைகளை நிறுத்தி வைக்க பாண்டியன் தீர்மானித்திருந்தார். சுகுமாரனின் நிலைமை அவரை மிகவும் பயமுறுத்தி விட்டது.

 

நேற்று சுகுமாரனைப் பார்க்க அவர் சென்றிருந்தார். சுகுமாரன் இரண்டு நிமிடங்கள் அவரிடம் இயல்பாய் பேசினார். ஆனால் மூன்றாவது நிமிடம் மண்டை ஓட்டு பீதி சுகுமாரனை ஆட்கொண்டது. இடையிடையே வயிற்று வலியாலும் அவர் துடித்தார். குடிகாரன் கல்லெடுத்து எறிந்த காயங்கள் ஆறி விட்டன. ஆனால் பீதியும், வயிற்று வலியும் அவரைச் சித்திரவதை செய்வதை பாண்டியன் நேரடியாகப் பார்க்க முடிந்தது. அந்த ஒரு நிலைமை தனக்கு வருவதை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்கப் பிடிக்கவில்லை.

 

செவ்வாய்க்கிழமை அன்று பாண்டியன் தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். அலைபேசியை தேவானந்தகிரியின் சீடன் ஒருவன் தான் எடுத்தான். “சுவாமிஜி ஆஸ்பத்திரியில் இருக்கார். காலைல தான் போய் சேர்ந்தார்.” என்றான்.

 

என்ன ஆச்சு?” பாண்டியன் சந்தேகத்தோடு கேட்டார்.

 

வலது கால் கட்டை விரல்ல கொஞ்ச நாளுக்கு முன்னாடி காயமாயிருந்துச்சு. குணமாயிட்டு வந்துகிட்டும் இருந்துச்சு. நேத்து ராத்திரியில் இருந்து அவருக்கு வலி ஜாஸ்தியாயிடுச்சு

 

அவன் சொன்னதில் பாண்டியன் அதிருப்தி அடைந்தார். உடனடியாக கண்ணனையும், கூட இரண்டு தடியர்களையும் காசர்கோடு அனுப்பி வைத்தார். ”உண்மையான்னு பாருங்க. பொய்யின்னா பேசாம அந்த ஆளைத் தூக்கிட்டு வந்துடுங்க.”

 

உடனடியாக விமானத்தில் சென்ற அவர்கள் காசர்கோடு போய் அவரை அழைத்தார்கள்.  ஆள் ஆஸ்பத்திரியில் தான் இருக்கார். அந்தக் காயம் செப்டிக் ஆயிருக்காம். விரலே எடுக்க வேண்டிய நிலைமைன்னு டாக்டர் சொல்றாங்களாம். பெருசா மாவுக்கட்டு போட்டுருக்காங்க.”

 

நீங்க அவர் கிட்ட பேசினீங்களா?”

 

பேசினோம். அவர் வருத்தம் தெரிவிச்சார். பத்து லட்சத்தை திருப்பி அனுப்பறாராம்.”

 

சொன்னது போல் பத்து லட்சம் ரூபாய் பாண்டியனுக்குத் திரும்பி வந்தது. பாண்டியன் நிலைமை பூதாகரமாய் வளர்வதை உணர்ந்து உடனடியாக பிரம்மானந்தாவிடம் பேசினார். நிலைமையைச் சொன்னார். “தேவானந்தகிரி மாதிரி வேற யாரையாவது நாம கண்டுபிடிச்சு சீக்கிரம் வரவழைக்கணும் யோகிஜி.

 

தேவானந்தகிரிக்கு இணையாக இன்னொரு மாந்திரீக விற்பன்னரை அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை விட மேலான நிலையில் இருக்கும் பரசுராமன்நமக்கு ஆகாத நபர்என்று பிரம்மானந்தா சொன்னாலும் அவரை வரவழைக்க பாண்டியன் தயாராய் இருந்தார். விஷயமுள்ளவன், வெற்றுவேட்டு இந்த இரண்டு ரகம் தான் அவர் கணக்கில் இருக்கிறார்கள். விஷயமுள்ளவனுக்கு எத்தனை தரவும் அவர் தயார். விஷயமுள்ளவனை அவர் ஆகாத நபராய்நினைப்பதில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் வெளிநாட்டில் இருக்கும் பரசுராமன் இந்தியா திரும்பி வரவே இரண்டு மாதங்கள் ஆகும் என்ற தகவல் கிடைத்தது.

 

பிரம்மானந்தா தனக்கு நெருக்கமான ஆட்கள் அனைவரிடமும் விசாரித்து முடிவில் இரண்டு மந்திரவாதிகளைஇருப்பவர்களில் பரவாயில்லைஎன்ற ரகமாகக் கண்டுபிடித்தார். ஒருவர் நாகப்பட்டிணத்து ஆசாமி. இன்னொருவர் ஹரித்வாரில் இருப்பவர்.  இருவரில் யார் மேல் என்று மறுபடியும் பலரிடமும் விசாரித்து ஹரித்வாரில் இருக்கும் மந்திரவாதி விஸ்வகீர்த்தி என்பவரை அவர்கள்  தேர்ந்தெடுத்தார்கள்.   


(தொடரும்)

என்.கணேசன்

 

புதிய நாவல் ச(க்)தி!



Thursday, June 18, 2026

சதுரங்கம் 23


 ர்ஜுன் தன்னுடைய விளையாட்டான கேள்வி ராஜாராமை இந்த அளவு பாதிக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ’சித்தப்பா ஏன் இப்படி சிலை போல் சமைந்து என்னைப் பார்க்கிறார்என்று நினைத்தவனாக அவன் பாட்டியைப் பார்த்தான். யசோதா மகனை வேதனையுடன் பார்ப்பது தெரிந்தது.

 

ராஜாராம் சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு புன்னகையைத் தொடர்ந்தார். ஆனால் அந்தப் புன்னகையில் உயிர் இல்லை. “நானும் சண்டை போடுவேன்னாலும் அம்மா அளவுக்கெல்லாம் இல்லை. குடும்பம்னா அது எல்லாம் சகஜம் தானடா?” என்று ராஜாராம் கேட்டாலும் இன்னமும் அவன் கேள்வியின் பாதிப்பிலிருந்து அவர் மீளவில்லை என்பதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது.

 

அர்ஜுன் கேட்டான். “அப்பாவும் தாத்தா கூட சண்டை போடுவாரா?”

 

அண்ணா அவரோட சண்டை போட்டதேயில்லை. அவனும் எத்தனையோ எதிர்க்கருத்துகளை வெளிப்படையா சொல்வான்னாலும் அது நியாயமான, மறுக்க முடியாத வாதமாய் இருக்கும். அதனால அவன் என்ன சொன்னாலும் அப்பா ஏற்றுக்கற மாதிரி தான் இருக்கும்.”

 

ஆனா அப்பா, அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னப்ப தாத்தா உடனே சம்மதிக்கலைன்னு கேள்விப்பட்டேன்.”

 

திடீரென்று அங்கே மயான அமைதி நிலவியது. ராஜாராம் முந்தைய கேள்வியிலிருந்தாவது சீக்கிரம் மீண்டு செயற்கையாகவாவது புன்னகைத்தார். இப்போதோ அவர் ஒரு கணம் தன் தாயைப் பார்த்து விட்டு அவனையே வெறித்துப் பார்த்தார். அர்ஜுன் திகைத்தான். என்ன ஆயிற்று இவருக்கு?

 

அவன் திரும்பி யசோதாவைப் பார்த்தான். யசோதாவும் அவரைப் போலவே அவனை வெறித்துப் பார்த்தாள். ஏன் பாட்டியும் அப்படியே பார்க்கிறாள்?

 

ராஜாராம் புன்னகைக்கவும் மறந்து போய், அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். ”உனக்கு யார் அதைச் சொன்னது?”

 

அப்பா தான்

 

ராஜாராம் அவனை நம்பாதது போல் பார்த்தார். அர்ஜுன் சொன்னான். “நான் அப்பா கிட்டவக்கீலுக்குப் படிச்ச நீங்க எட்டாம் கிளாஸ் மட்டுமே படிச்ச அம்மாவைக் கல்யாணம் செஞ்சுக்க தாத்தா எப்படி சம்மதிச்சார்?’னு கேட்டேன்.  அதுக்கு அவர்அப்பா ஆரம்பத்துல தயங்கினார். பிறகு தான் சம்மதிச்சார்னு சொன்னார்.”

 

ராஜாராம் தலையசைத்தார். பின் மெள்ள அவர் பழைய நிலைக்கு வருவது தெரிந்தது. ஆனால் யசோதா பழைய நிலைக்குத் திரும்பவில்லை.  

 

அர்ஜுனுக்குத் திகைப்பாக இருந்தது. பத்திரிக்கை, ஊடக உலகில் ராஜாராமுக்குஎதற்கும் அசராதவர்என்ற பட்டம் உண்டு. பதில் சொல்லவே முடியாது என்று நிருபர்கள் நம்பி அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளைக் கேட்டாலும் கூட, சிறிதும் அமைதியிழக்காமல், புன்னகை குறையாமல் பதில் தந்து நிருபர்களைத் திகைக்க வைப்பவர் அவர். அதை அவனும் எத்தனையோ பேட்டிகளில் பார்த்திருக்கிறான். எப்படி இதற்குப் பதில் அளிக்கப் போகிறார் என்று அவன் நினைக்கும் கேள்விகளுக்கும் கூட அதிகம் யோசிக்காமல் அசர வைக்கும் பதில்களைச் சொல்லி நகர்பவர் அவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு சாதாரணமான பேச்சுக்குக் கூட ஏன் இப்படி அமைதியிழக்கிறார், அதிர்ச்சியடைகிறார்?

 

அர்ஜுன் வெளிப்படையாகவே கேட்டான். “ஏன் சித்தப்பா நான் சொன்னதற்கு கொஞ்சம் முன்னாடி அப்படி பார்த்தீங்க?”

 

ராஜாராம் பழைய ராஜாராம் ஆக மாறினார். புன்னகையுடன் அவர் சொன்னார். “இல்லைடா. அண்ணாவும் அப்பாவும் எவ்வளவு பாசமாய் இருந்தாங்கன்னு எங்களுக்குத் தான் தெரியும். அப்படி இருக்கிறப்ப அண்ணாவுக்கு எதிராய் அப்பா இருந்தார்ங்கற மாதிரி ஒரு கருத்தை யார் கிளப்பினாங்கன்னு தான் எனக்கு அதிர்ச்சியாய் இருந்துச்சு. நீ எந்த சூழ்நிலைல இந்த கருத்து வந்துச்சுன்னும், அண்ணனே சொன்னார்ன்னும் சொன்னவுடன தான் எனக்கு மனசு சமாதானமாச்சு.”

 

அவர் சொன்னது ஏற்கக்கூடியதாகத் தான் இருந்தது. ஆனால் யசோதா தான் இயல்பாய் இல்லை. களைப்புடன் கண்களை மூடிக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.

 

அர்ஜுன் கேட்டான்.  அப்பா, நீங்க, பாட்டி மூனு பேருமே சொன்னாலும் கூடக் கேட்காமல் தாத்தா தன் சொத்தையெல்லாம் விற்று கட்சிக்கும், மக்களுக்கும் செலவு செய்ததாய் அப்பா சொன்னார். சுதந்திர இந்தியாவில் இதுவரைக்கும் எந்த அரசியல் தலைவரும் அப்படி செய்ததாய் வரலாறு இல்லை. அதை நீங்களும், பாட்டியும் எப்படிப் பார்க்கறீங்க?”

 

ராஜாராம் சொன்னார். ‘டேய் இப்ப சொல்றது எல்லாமே குடும்பத்துக்குள்ளே பேசிக்கறது. இந்தக் கேள்விக்கெல்லாம் பிரசுரத்துக்கு என்ன பதில்னு அப்பறமா சொல்றேன் சரியா? நான் அப்பவும் அதை முட்டாள்தனம்னு தான் நினைச்சேன். இப்பவும் அதை முட்டாள்தனமாய் தான் பார்க்கறேன்.”

 

அர்ஜுன் யசோதாவைப் பார்த்தான். யசோதா சொன்னாள். “மனுஷன் ஒவ்வொன்னையும் விற்ற பிறகு தான் எங்களுக்கு விஷயமே தெரிய வரும். நான் கொஞ்சம் காரமாய் தான் பேசுவேன். ஆனால் அதெல்லாம் உன் தாத்தாவுக்கு கொஞ்சமும் உறைக்காது. தோல் ரொம்ப கெட்டி.”

 

ராஜாராம் சொன்னார். “அதான் சொன்னேனே. அண்ணா அபிப்பிராயத்தில் அவருக்கு அதிக மதிப்பு இருந்துச்சு. ஆனாலும் அண்ணா சொல்லியும் அவர் கேட்கலை. அப்பவெல்லாம் அவர்நாலு பேருக்கு உதவறதை விட நாம அதை சொத்தா வச்சிருக்கறதுல என்ன பிரயோஜனம்னு கேட்பார்.”

 

யசோதா சொன்னாள். “இந்த வீடு ஒன்னு மிஞ்சுச்சுன்னா அதுக்கு ஒரே காரணம் இதையும் வித்துட்டா நாங்க போய் குடியிருக்க வேறொரு வீடு இல்லைங்கறது தான். அதனால தான் இந்த வீடு கைவிட்டுப் போகாம தப்பிச்சுது. நான் அடிச்சுக்குவேன். இருக்கற சொத்தையெல்லாம் இப்படி வித்துத் தொலைக்கிறீங்களேன்னு. அப்பவெல்லாம் சொல்வார். “எனக்கு என்னோட ரெண்டு பசங்களும் தான் பெரிய சொத்துடி. அது போதும் வேற சொத்து எனக்கு என்ன வேணும்…” சொல்லச் சொல்ல யசோதாவின் குரல் தழுதழுத்தது.

 

அந்த கடைசி வார்த்தைகளைக் கேட்டு ராஜாராமும் கண்கலங்கினார். அதை அவர்களுக்குக் காட்டாமலிருக்க அந்தப் பக்கம் திரும்பி ஜன்னல் வழியே தெரியும் செடிகொடிகளைப் பார்த்தார்.

 

வாசுதேவனுடைய செயல்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கா விட்டாலும், அந்தச் செயல்களின் பின்னால் இருக்கும் அவருடைய பெரிய மனதை அவர்கள் மனநெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பதை  அர்ஜுன் கவனித்தான்.  அவனுக்கும் தாத்தாவை நினைக்கப் பெருமையாக இருந்தது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இறந்தபின் தகுதியில்லா விட்டாலும் அவர்களுடைய கட்சிக்காரர்களால் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். பல அயோக்கியத்தனங்களைச் செய்திருந்தாலும் புனிதர்களாக்கப் படுகிறார்கள். இன்றைக்கு இந்தத் தேசம் கொண்டாடும் தலைவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வெகு சாதாரண மனிதர்களே. அப்படி இருக்கையில் தாத்தா uண்மையிலேயே வித்தியாசப்பட்டு உயர்ந்து நிற்கிறார் என்று தோன்றியது.

 

அவன் திடீரென்று கேட்டான். “தாத்தா பெரிய சொத்தாய் நினைக்கும் அவரோட பிள்ளைகள் அரசியலில் எதிரும் புதிருமாய் இன்றைக்கு இருப்பதை, அவர் உயிரோடு இருந்திருந்தால் எப்படிப் பார்த்திருப்பார்? யார் பக்கம் அவர் இருந்திருப்பார்?

 

ராஜாராம் புன்னகையுடன் சொன்னார். “சந்தேகத்துக்கு இடமில்லாமல் எங்கப்பா அண்ணாவை ஆதரிச்சிருப்பார்.”

 

அதைச் சிறிதும் தயக்கமில்லாமல் சொல்ல முடிந்த சித்தப்பாவின் நேர்மையை அர்ஜுன் மனதிற்குள் பாராட்டினான். அவன் அவரிடம் கேட்டான். “பின் ஏன் சித்தப்பா நீங்க உங்க அண்ணாவை எதிர்த்து அரசியல் செய்யறீங்க?”

 

ராஜாராம் சொன்னார். “எனக்கு எங்கப்பா செஞ்ச அரசியலிலும் உடன்பாடு இல்லை. இப்போ அண்ணா செய்யற அரசியலிலும் உடன்பாடு இல்லை. அது ஏன்னு ஒரு நாள் நாம ரெண்டு பேரும் தனியா பேசுவோம் அர்ஜுன். நான் அதை விளக்கிச் சொன்னால் தான் நீ அதைப் புரிஞ்சுக்க முடியும். என் மேல உனக்கு இருக்கற கோபம் குறையும். இப்ப உன் தாத்தா பற்றி மட்டும் பேச்சை வெச்சுப்போம். உன் பாட்டிக்கும் அரசியல் பற்றி பேசறது இப்ப எல்லாம் ரொம்பக் கசப்பாய் இருக்கு.”

 

‘’ஆமாடா. நிருபராய் நீ கேட்டதெல்லாம் போதும். வீட்டு பேரப்பிள்ளையாய் பேசு. பாட்டிக்கு வயசாயிட்டே போகுது. கொள்ளுப் பேரனோ, பேத்தியோ பார்த்துட்டு கண்ணை மூடணும்னு ஆசையா இருக்கு. அதற்கு சீக்கிரத்துல எதாவது வாய்ப்பு இருக்காடா?”

 

அர்ஜுன் முகத்தில் மெலிதாய் வெட்கம் தோன்றி மறைய ராஜாராம் அதைக் கவனித்து உடனடியாகக் கேட்டார். “யாருடா அந்தப் பொண்ணு?”

 

(தொடரும்)

என்.கணேசன்