என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, January 12, 2026

யோகி 138


சைத்ரா யோகி என்ற சொல்லுக்கு இலக்கணமாக பிரம்மானந்தாவை மட்டுமே அது வரை எண்ணி இருந்தவள். அதனால் கல்பனானந்தாவின் இந்த அறிவிப்பு அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. பார்க்க சாந்தஸ்வரூபியாக இருந்த அந்தப் பெரியவர் பல சக்திகளைக் கொண்டவர் போல் தெரியவில்லை..

 

நர்சரி உரிமையாளர் அங்கே வேலை செய்யும் ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார். “அவன் வீட்டு பக்கத்துல ஒரு குடிசையில் தான் அவர் குடியிருக்கார்

 

அந்த இளைஞன் திரும்பி அவர்களைப் பார்த்தான். அவன் அங்கே சில வருடங்களாக வேலை செய்வதால் கல்பனானந்தாவை நன்றாக அறிவான். அவர்கள் அந்தக் கிழவரைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று உணர்ந்த அவன் அவரைப் பார்த்தான். அவன் முகமும் மலர்ந்தது.

 

அவன் அவர்களை நெருங்கி வந்து சொன்னான். “இந்தக் காலத்துல இந்த மாதிரி ஒரு நல்ல மனுஷனை பார்க்க முடியாது சுவாமினி. போன வாரம் ஒரு பணக்கார பெரியவர் இங்கே வந்து இவரை ரொம்ப பிடிச்சு போய் இவருக்கு பத்தாயிர ரூபாய் குடுத்துட்டு போனார். இவர் வாங்கல. அவருக்கு என்ன தோணிச்சோ இவர் காலடில பத்தாயிர ரூபாயை வெச்சுட்டு போயிட்டார். நானும்பெருசு. வர்ற லட்சுமியை ஏன் வேண்டாங்கற. எடுத்து வெச்சுக்கோன்னு சொன்னேன். சரின்னு எடுத்து வெச்சுகிட்டார்.  குடிசைலயும் அந்தப் பணத்தை மேலாகத் தான் வெச்சிருக்கார். இவர் பக்கத்து வீட்டுக்காரன் திருடன். அவன் அதைப் பார்த்துட்டு அந்தப் பணத்தைத் திருடிகிட்டான். நான் அதைக் கண்டுபிடிச்சு இந்தப் பெருசு கிட்ட சொன்னால், இவர் என்ன சொன்னாரு தெரியுமா? “இவனுக்குக் கிடைக்கறதுக்காகவே கடவுள் அந்தப் பணத்தை என் கிட்ட கொடுத்து வெச்சார் போலருக்கு. நல்லதுன்னு சொல்லிட்டார். அப்பறமா அவன் கிட்ட அத பத்தி இவர் கேக்கக்கூட இல்லை. ஐநூறு ரூபாய்க்கு அடிச்சுகிட்டு சாகிற இந்தக் காலத்துல இப்படியொரு மனுஷன்…”

 

அவரையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கல்பனானந்தா அவர்கள் இருவரிடமும் மெல்லக் கேட்டாள். “இந்த ஒரு மாதத்தில் அவர் எப்போதாவது கவலையோ, கோபமோ, வருத்தமோ பட்டு பார்த்திருக்கிறீர்களா?”

 

நர்சரி உரிமையாளரும், அந்த இளைஞனும் அவளைத் திகைப்புடன் பார்த்தார்கள். அவள் கேட்ட பின் தான் அதைப் பற்றி யோசித்தார்கள் என்பதும் அவர்களைப் பார்க்கையிலேயே தெரிந்தது. பின் உண்மையான ஆச்சரியத்தோடு சொன்னார்கள். “இல்லை.”

 

அந்தப் பதிலை கல்பனானந்தா அறிந்திருந்தாள். அவளை ஆச்சரியப்படுத்தியது அவர்கள் அந்தக் கேள்வியை எதிர்கொண்ட விதம் தான். எல்லோரும் ஒரு மனிதனின் சம்பாத்தியத்தைப் பார்க்கிறார்கள், சாதனையைப் பார்க்கிறார்கள், சொத்தைப் பார்க்கிறார்கள், அந்தஸ்தைப் பார்க்கிறார்கள். ஆனால் யாருமே ஒரு மனிதன் எவ்வளவு சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருக்கிறான் என்று யோசித்துப் பார்ப்பதில்லை. அது கணக்கெடுக்க முடியாது என்ற காரணத்தாலா, இல்லை, அது ஒரு பொருட்டே அல்ல என்ற அலட்சியத்தாலா? உண்மையில் ஒரு கணமும் இழக்காத அமைதி, ஒரு யோகியால் மட்டுமே முடிந்த ஆன்மீக உச்ச நிலை. அதைப் பற்றி எத்தனையோ படித்திருந்தாலும், கேட்டிருந்தாலும் ஒரு உதாரண மனிதரைப் பார்க்க முடிந்த பிரமிப்பு கல்பனானந்தாவிடம் தெரிந்தது.

 

கல்பனானந்தா மெல்ல ரகுராமனை நோக்கி நடந்தாள். சைத்ராவும் அவளைப் பின் தொடர்ந்தாள். அவர் முன்னே நின்று கல்பனானந்தா கைகூப்பினாள். சைத்ராவும் கைகூப்பினாள்.

 

தன் முன் கைகூப்பி நிற்கிற இரண்டு பெண் துறவிகளையும் அவர் நிமிர்ந்து பார்த்தார். மிகுந்த பணிவுடன் அவரும் கைகூப்பினார். “இந்தச் செடிகளில் எதாவது உங்களுக்கு வேண்டுமா?” என்று அவர் கேட்டார்.

 

உங்களிடம் இருக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் கொஞ்சம் தர முடியுமா?” கல்பனானந்தா பாதி விளையாட்டாகவும், பாதி நிஜமாகவும் கேட்டாள். கேட்கையில் அவள் கண்கள் ஏனோ கலங்கின. அவள் அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படுபவள் அல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அந்த யோகியிடம் அப்படிக் கேட்கையில் உள்ளிருந்து ஏதோ ஒரு கதறல் எழுந்து கண்ணீராக வெளிப்படுவதை, அவளால் தவிர்க்க முடியவில்லை.

 

அவர் மிகவும் கனிவாகச் சொன்னார். ”அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது. அதை நீங்களே கண்டெடுத்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதை அடுத்தவர்கள் தர முடியாது. அதை வெளியே எத்தனை பிறவிகளில் தேடினாலும், எங்கேயும், யாரிடமிருந்தும் உங்களுக்குக் கிடைக்காது.”

 

கல்பனானந்தா பேச வார்த்தைகள் வராமல் அவர் கால்களைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தாள். அவர்களை அழைத்து வந்த டிரைவர் பாண்டியனின் ஆள். எங்கேயும் அதிகம் பேசிக் கொண்டு இருக்க அவர்களுக்கு அனுமதியில்லை. மீறினால் இப்படி அபூர்வமாக வெளியே வரவும் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்காது. அதனால் கூடுதலாகச் சிறிது நேரம் அங்கிருக்க மனம் ஆசைப்பட்டாலும், அவள் மேலும் தாமதிக்காமல், வாங்கிய செடிகளுடன், அங்கிருந்து கிளம்பினாள்.  

 

சைத்ராவும் அவர் முன்னிலையில் பேரமைதியை உணர்ந்தாள். அவளும் கல்பனானந்தாவைப் போலவே அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள். அவர் அவளையும் கனிவுடன் பார்த்து கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார். 

 

நர்சரி உரிமையாளரும், அந்த இளைஞனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கிழவரிடம் சிலர் மட்டும் அதிகமாக எதையோ உணர்ந்து வணங்குவது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும், இப்படி துறவிகளே கூட வணங்குவது பேராச்சரியமாகத் தானிருந்தது. 

 

அறைக்குத் திரும்பி வந்த பின் சைத்ரா தன் சந்தேகத்தைக் கேட்டாள். “சுவாமினி. அவரை நீங்கள் யோகி என்று எப்படிச் சொன்னீர்கள்? அவரிடம் பெரிய சக்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே?”

 

கல்பனானந்தா சொன்னாள். “எல்லாவற்றையும் விடப் பெரிய மகாசக்தி எப்போதும் சச்சிதானந்த நிலையில் இருப்பது தான் சைத்ரானந்தா. உலகம் ஒவ்வொரு கணமும் பல விதங்களில் நம்மைச் சோதித்துக் கொண்டிருக்கையில், எல்லா சமயங்களிலும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் தக்க வைத்துக் கொள்வது யோகிக்கு மட்டுமே சாத்தியம். ஞானிகள் பல நேரங்களில் தக்க வைத்துக் கொண்டு சில நேரங்களில் தொலைப்பார்கள். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதன் உண்மையான அறிமுகமே இருப்பதில்லை. அவரைப் போன்ற யோகிகளிடம் பார்த்து தான் அதன் அடையாளமே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது…”  

 

என்னைச் சாதாரணம் என்பதை நான் ஒத்துக் கொள்வேன். ஆனால் நீங்கள் சாதாரணம் அல்ல சுவாமினிஎன்று சைத்ரா சொன்னாள். கல்பனானந்தா அவள் சொன்னதில் அன்பை மட்டும் பார்த்து மௌனமாக இருந்தாள்.

 

சைத்ரா திடீரென்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள். “என் தாத்தா அந்த யோகியைப் பார்த்தால் கண்டிப்பாக மிக மிக சந்தோஷப்படுவார் சுவாமினி.”

 

கல்பனானந்தா புன்னகைத்தாள். நியாயமாக, துறவிகளுக்கு உறவுகள் கிடையாது என்பதை அவள் நினைவுறுத்த வேண்டும். ஆனால் அந்த வெகுளிப் பெண்ணிடம் அவள் சொல்ல முற்படவில்லை.

 

சைத்ரா சொன்னாள். “என் தாத்தாவும் வித்தியாசமானவர். உங்களுக்கு ஒன்று தெரியுமா சுவாமினி. முதல்வர் அருணாச்சலம் என் தாத்தாவின் மிக நெருங்கிய நண்பராம். இரண்டு பேரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிப்படிப்பு வரைக்கும் ஒன்றாகப் படித்தவர்களாம். ஆனாலும் தாத்தா அவர் முதல்வரான பிறகு அவரைப் பார்க்கக் கூடப் போனதில்லை. இது கூட என் அப்பா சொல்லித் தான் எனக்குத் தெரியும். தாத்தாவிடம் கேட்டால்சும்மா போய் அப்படியெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாதுஎன்கிறார். எப்படி இருக்கிறது? என் தாத்தா சன்னியாசம் வாங்கவில்லையே ஒழிய அவர் கிட்டத்தட்ட அப்படித் தான்.”

 

சைத்ரா காதல் விஷயத்தில் தோல்வி அடைந்தாலும், குடும்பத்தினர் விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறாள் என்று கல்பனானந்தாவுக்குத் தோன்றியது.

 

சைத்ராவுக்கு நிஜ யோகியை கல்பனானந்தா அடையாளம் காட்டியும், பிரம்மானந்தாவையும் அவள் யோகியென்றே நம்பினாள். நவீன காலத்தில் பிரம்மானந்தா போன்றோரால் தான் நிறைய ஆட்களிடம் ஆத்மஞானத்தைக் கொண்டு போக முடியும் என்று நம்பினாள். காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் பிரம்மானந்தா செய்து கொண்டிருக்கிறார் என்று நினைப்பதையும் அவள் கல்பனானந்தாவுக்குத் தெரிவித்தாள். பிரம்மானந்தா மேல் சைத்ரா வைத்திருந்த அபார நம்பிக்கை அவளுடைய உயிரையே ஒரு நாள் பறித்து விடும் என்பதை கல்பனானந்தா நினைத்துக்கூட பார்க்கவில்லை...

 

(தொடரும்)

என்.கணேசன்



Thursday, January 8, 2026

சாணக்கியன் 195

 

முடிவில் தொடர்ந்த வரலாறு!


ந்திரகுப்தனையும், சாணக்கியரையும் மற்றவர்களையும் இந்த மகிழ்ச்சியும், நிறைவும் கொண்ட மனநிலையில் விட்டுப் பிரிவோம் வாசகர்களே. அதன் பின் தொடர்ந்த வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

சந்திரகுப்தன்சாணக்கியர் இருவரின் வெற்றிக் கூட்டணியில் மௌரிய சாம்ராஜ்ஜியம் விரிந்து பரவ ஆரம்பித்தது.

 

செல்யூகஸ் தன் நிலையை கிரேக்கத்தில் ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் பாரதம் நோக்கி பெரும்படையுடன் வந்தான். ஆனால் அலெக்ஸாண்டர் வந்த போது இருந்த பாரதம் செல்யூகஸ் திரும்ப வந்த போது இருக்கவில்லை. சந்திரகுப்தன் வலிமைப்படுத்தியிருந்த பாரதத்தை வெல்வது செல்யூகஸுக்குச் சுலபமாக இருக்கவில்லை. முடிவில் செல்யூகஸ் சந்திரகுப்தனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவனுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான். சந்திரகுப்தனும் அவனுக்கு 500 யானைகளைப் பரிசாகத் தந்தான். செல்யூகஸ் நல்லெண்ணத் தூதராக மெகஸ்தனீஸை சந்திரகுப்தனின் அரசவைக்கு அனுப்பி வைத்தான். யவனர்கள்  இழந்த பெருமையை மீட்கும் கனவுடன் செல்யூகஸுடன் மிக ஆர்வத்துடன் பாரதம் வந்த  க்ளைக்டஸ் இதில் ஏமாற்றமடைந்தான். காந்தார ஆம்பி குமாரனுக்கும், கேகய மலயகேதுவுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டது வீணானதில் விரக்தி அடைந்தான். அலெக்ஸாண்டரோடு யவனர் பெருமை முடிந்து விட்டதாக தன் வாழ்நாள் முடிவு வரை அவன் புலம்பி வாழ்ந்தான்.

 

யவனர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்திய பின் சந்திரகுப்தனும் சாணக்கியரும் பாரதத்தின் மற்ற பகுதிகளை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டார்கள். தமிழகம், கேரளம், கலிங்கத்தின் ஒரு பகுதி தவிர மற்ற பகுதிகள் சந்திரகுப்தனின் கட்டுப்பாட்டில் வந்தன. சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மிக நல்ல ஆட்சியை சந்திரகுப்தன் மக்களுக்குத் தந்தான். அவன் ஆட்சியில் வரிகள் குறைவாகவும், சுபிட்சம் அதிகமாகவும் இருந்தது.

 

மாமன்னனான பின் சந்திரகுப்தனின் உயிருக்கு ஆபத்து நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்ததால் சாணக்கியர் தன் மாணவனை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைச் சலிப்பில்லாமல் மேற்கொண்டார். சந்திரகுப்தன் உறங்கும் அறையைக் கூட அவர் அடிக்கடி மாற்றினார். அந்தக் காலத்தில் எதிரிகளுக்கு எதிராக விஷம் பயன்படுத்துவது பிரபலமாக இருந்தது. விஷம், விஷமுறிவு இரண்டு குறித்தும் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த சாணக்கியர் விஷத்தால் சந்திரகுப்தன் பாதிக்கப்படக்கூடாது என்று சிறிது சிறிதாக குறைந்த அளவு விஷத்தை சந்திரகுப்தனின் உணவில் கலந்து வந்தார். சந்திரகுப்தனின் உடல் விஷத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பெற்று பின் எந்த விஷத்தாலும் பாதிக்கப்படாதபடி வலிமை கூடிக் கொண்டே போகும்படியாக விஷத்தின் அளவையும் நுணுக்கமாகக் கூட்டிக் கொண்டே வந்தார். அதை அவர் சந்திரகுப்தனிடம் கூடத் தெரிவிக்கவில்லை. ராஜ்ஜிய பாரத்தைச் சுமக்கும் சந்திரகுப்தனுக்கு இது போன்ற எச்சரிக்கைக்கான சுமைகளும் சேர வேண்டாம் என்று அவர் எண்ணினார்.

 

அது தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்தரா கணவனுடன் உணவைச் சில நாட்கள் பகிர்ந்து கொண்டாள். பிரசவ சமயத்தில் அவள் படும் சில சிரமங்களைக் கண்ட போது தான் சாணக்கியருக்கு நடந்திருக்கும் அசம்பாவிதம் தெரிய வந்தது. அதற்குள் அவள் உடலில் இருக்கும் விஷம் வயிற்றிலிருந்த குழந்தையின் தலைக்கும் ஒரு துளி சென்று விட்டது. குழந்தை தாய் இருவரையும் சேர்ந்து காப்பாற்றும் வாய்ப்பு இல்லவே இல்லை என்று புரிய வந்த போது குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்ற முடிவெடுத்த அவர், தொப்புள் கொடியை உடனடியாகத் துண்டிக்கும்படி பிரசவம் பார்த்த தாதிப்பெண்ணைக் கேட்டுக் கொண்டார். அவள் அப்படியே செய்ய, துர்தரா உயிர் இழந்தாலும் குழந்தை காப்பாற்றப்பட்டது. ஆனால் குழந்தையின் நெற்றியில் விஷம் ஒரு பொட்டு போன்ற ஒரு கறையை ஏற்படுத்தி விட்டிருந்ததால் குழந்தைக்கு பிந்துசாரா என்று பெயர் வைத்தார்கள்.

 

சாணக்கியர் துர்தராவின் மரணத்தில் மிகவும் மனம் வருந்தினார். சந்திரகுப்தன் அவளை எந்த அளவு நேசித்தான் என்பதை அவர் அறிவார். சந்திரகுப்தனும் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆச்சாரியரின் மனதையும், உத்தேசத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததால் அவன் அவரிடம் சிறு குற்றத்தையும் காணவில்லை. அவன் அவரிடம் சொன்னான். “ஆயுள் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது ஆச்சாரியரே. மரணம் ஆயிரம் விதங்களில் ஏற்படக்கூடும். ஓரிரு விதங்களை நாம் அறிந்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க முடிந்தாலும் மற்ற விதங்களில் மரணம் ஒருவரை நெருங்கி தன் வேலையை முடித்துக் கொள்கிறது. எல்லாம் அறிந்த நீங்கள் இதில் குற்றவுணர்வு கொள்வது சரியல்ல. எப்போதுமே என் உணவைப் பகிர்ந்து கொள்ளாதவள் கடைசி சில நாட்கள் மட்டும் அப்படிச் செய்தது விதியால் உந்தப்பட்டு தான் என்பது எனக்குப் புரிகிறது...”

 

சாணக்கியர் அந்த வார்த்தைகள் கேட்டு கண்கலங்கினார். ஆனாலும் நடந்து முடிந்ததைத் திருத்தவோ, மாற்றவோ முடியாது என்ற தத்துவார்த்த சிந்தனையால் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சாம்ராஜ்ஜிய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டபடியே அர்த்தசாஸ்திரம், நீதிசாஸ்திரம் என்ற இரண்டு அருமையான நூல்களை எழுதி முடித்தார்.  

 

சந்திரகுப்தன் துர்தராவின் மரணத்திற்குப் பின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பை மெள்ள இழக்க ஆரம்பித்தான். சக்கரவர்த்தியாக அவன் தன் கடமைகளை கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த போதும் மனம் தத்துவ, வைராக்கிய சிந்தனைகளில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தது. பிந்துசாரன் வளர்ந்து பெரியவனானவுடன்  சந்திரகுப்தன் துறவறம் போக சாணக்கியரிடம் அனுமதி கேட்டான்.

 

தன் பிரிய மாணவனின் மனதை எப்போதுமே தீர்க்கமாய் அறிய முடிந்த சாணக்கியர் அவனுடைய பூரண அமைதி தேடிப் போகும் கடைசி ஆசைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதித்தார். சந்திரகுப்தன் மகனுக்கு முடிசூடி ஆச்சாரியரின் வழிநடத்தலின்படியே எப்போதும் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு தவ வாழ்க்கை வாழச் சென்றான். தெற்கு நோக்கிச் சென்ற அவன் முடிவில் சிராவண பெலகோலாவில் சமாதியடைந்தான்.

 

மன்னனான பிந்துசாரனும் சாணக்கியரின் வழிகாட்டுதலின்படியே சிறப்பாக ஆட்சி புரிந்தான். ராக்ஷசரின் மறைவுக்குப் பின் சுபந்து என்பவன் பிரதம அமைச்சன் ஆனான். அவன் பிரதம அமைச்சராக இருந்த போதும் எல்லாம் சாணக்கியரின் வழிநடத்துதல்படி நடப்பதில் கடும் அதிருப்தி அடைந்தான். அதனால் அவன் சாணக்கியரை அப்புறப்படுத்த சூழ்ச்சி செய்தான்.

 

ஒரு நாள் அவன் பிந்துசாரனிடம் துர்தராவை விஷம் வைத்துக் கொன்றது சாணக்கியர் தான் என்று சமீபத்தில் தான் தெரிய வந்ததாய் வருத்தம் காட்டிச் சொன்னான், தனநந்தன் மீதிருந்த வஞ்சத்தை மறக்க முடியாத சாணக்கியர் அவன் மகளான துர்தராவை விஷம் வைத்துக் கொன்று விட்டதாகவும், அதை அறிந்த போதும் ஆச்சாரியர் மீதுள்ள பக்தியால் சந்திரகுப்தன் அவரை எதிர்க்க முடியாமல், அதைத் தாங்கிக் கொள்ளவும் முடியாமல் தான் பின் துறவற சிந்தனைகளை வளர்த்துக் கொண்டதாகவும் சொன்னான்.  

 

அவன் பாதி உண்மைகளைக் கலந்து அதை நம்பும் படியாக ஜோடித்துச் சொன்னதால் பிந்துசாரன் அதை நம்பிவிட்டான். சந்திரகுப்தன் தானடைந்த உயர்வும், ராஜ்ஜியமும் ஆச்சாரியர் போட்ட பிச்சை என்று பல முறை சொல்லி அவன் கேட்டிருந்ததால் அவரை வெளிப்படையாக எதிர்க்க அவனால் முடியவில்லை. அவன் தந்தைக்கு அவர் நன்மைகள் செய்திருக்கிறார் என்பதற்காக அவன் தாயை அவர் கொன்றதை அவனால் மன்னிக்க முடியவில்லை. அதனால் அவன் சாணக்கியரிடம் வெறுப்புடனும், பாராமுகமாகவும் நடந்து கொள்ள ஆரம்பித்தான்.  அதில் வருத்தமடைந்த சாணக்கியர் இனி அங்கிருப்பது தனக்கு கௌரவம் அல்ல என்று நினைத்தார். அவர் இருக்க வேண்டிய அவசியமும் குறைந்து விட்டது. அதோடு தன் அந்திம காலமும் நெருங்குவதை உணர்ந்த அவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் விடத் தீர்மானித்து கானகம் சென்றார்.

 

சுபந்து தன் திட்டம் வெற்றி பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தான். பிந்துசாரனும் விட்டது சனியன் என்று அலட்சியமாக இருந்தான். ஆனால் அவனைப் பிரசவித்த தாதிப்பெண்ணுக்கு சாணக்கியர் நடத்தப்பட்ட விதம் வேதனையை ஏற்படுத்தியது. சில நாட்கள் மௌனமாக இருந்த அவள் பின் பொறுக்க முடியாமல் மன்னனைச் சந்தித்து சாணக்கியர் சந்திரகுப்தனையும், துர்தராவையும் எந்த அளவு நேசித்தார் என்பதையும், அவன் பிறந்த போது நடந்தது என்ன என்பதையும் விவரித்தாள்.

 

பிந்துசாரன் அதைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். எந்த மனிதரால் அவன் தந்தைக்கும், அவனுக்கும் இந்த ராஜ்ஜியம் கிடைத்திருக்கிறதோ, எந்த மனிதரின் சமயோசிதத்தாலும், கூர்மையான அறிவாலும் அவன் உயிர் பிழைத்திருக்கிறானோ அவரை அவன் நடத்திய விதம் அவனைப் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கியது.

 

பின் பிந்துசாரன் ஒரு கணமும் தாமதிக்காமல் உடனே கானகம் விரைந்து சென்று சாணக்கியரைக் கண்டு மன்னிப்பு கேட்டு அவரை திரும்பவும் ராஜ்ஜியத்திற்கு அழைத்து வரப் புறப்பட்டான். கிளம்புவதற்கு முன் சுபந்துவுக்கு மரண தண்டனை விதித்து விட்டுப் போனான்.   

 

கானகத்தில் சாணக்கியரின் காலில் விழுந்து வணங்கி பிந்துசாரன் மன்னிப்பு கேட்டான். “இந்தப் பாவியைத் தயவு செய்து மன்னித்து விடுங்கள் ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் அப்போது மரணத் தறுவாயில் இருந்தார். அவனைப் பார்த்துப் புன்னகைத்து பலவீனமான குரலில் சொன்னார். “உன்னை எப்போதோ மன்னித்து விட்டேன். என் சந்திரகுப்தனின் பிள்ளையை என்னால் மன்னிக்காமல் இருக்க முடியுமா பிந்துசாரா?”

 

அந்த வார்த்தைகள் கேட்ட பின் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதபடி பிந்துசாரன் சொன்னான். “அப்படியானால் நம் ராஜ்ஜியத்துக்குத் திரும்பி வாருங்கள் ஆச்சாரியரே. நீங்கள் என்னுடன் வராமல் நான் திரும்பிப் போக மாட்டேன்.”

 

சாணக்கியர் பிந்துசாரனின் கையைப் பிடித்து கொண்டு அன்புடன் சொன்னார். “நான் திரும்பி வர முடியாத என் கடைசி யாத்திரையை ஆரம்பித்து விட்டேன் பிந்துசாரா..... ஆனால் என் ஆத்மா என்றும் புனித பாரத மண்ணில் தான் உலாவிக் கொண்டிருக்கும்....”

 

பிந்துசாரனின் துக்கம் பலமடங்காக அதிகரித்தது. அவர் முகத்தைப் பார்த்த போது அவர் மரணமடையப் போகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவர் கைப்பிடி தளர, அவன் அவர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தன் தவறுக்குப் பரிகாரமாக இனி ஒன்றும் செய்ய முடியாத ஆற்றாமையுடன் கதறினான். “ஐயோ நான் இனி என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லையே ஆச்சாரியரே?”

 

அவர் ஈனசுரத்தில் சொன்னார். “இந்தக் கடைசி நேரத்தில் என்னுடன் இருக்கிறாயே....  இது போதும்.... என் சந்திரகுப்தன் மகனே

 

சில கணங்களில் சாணக்கியர் உயிர் பிரிந்தது. பிந்துசாரன் கனத்த மனதுடன் அவர் கையை மெல்ல தரையில் வைத்தான். அவர் மனதின் ஒரு ஓரத்தில் தங்கியிருந்த கடைசி கசப்பும் பிந்துசாரன் வரவால் விலகியதால் அவர் முகத்தில் பேரமைதி தெரிந்தது. அவர் சொன்ன ’என் சந்திரகுப்தன் மகனேஎன்ற அந்தக் கடைசி வார்த்தைகள் பிந்துசாரன் கண்களை மீண்டும் குளமாக்கின. கண்ணீர் தாரை தாரையாக வழிய அவன் தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரை வணங்கினான்.

 

தன்னலமில்லாத ஒரு உன்னத வாழ்க்கை முடிந்து விட்டது. ராக்‌ஷசர் ஒரு முறை ஆத்மார்த்தமாய் சொன்னது போல் சில யுகங்களுக்கு ஒருமுறை இப்படி ஒரு மாமனிதனைப் படைத்த திருப்தியுடன் இறைவன் அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!

 

முற்றும்.


என்.கணேசன்


(அடுத்த வியாழக்கிழமை 15.01.2026 லிருந்து என்னுடைய சதுரங்கம் நாவல், வியாழக்கிழமைகளில் தொடர்ந்து வரும்)




Wednesday, January 7, 2026

முந்தைய சிந்தனைகள் 131

 என்னுடைய இங்கே நிம்மதி நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












Monday, January 5, 2026

யோகி 137

 

ல்பனானந்தா ஒரு வெளிநாட்டு ஆன்மீக மையத்திற்கு மின்னஞ்சல் அனுப்ப அலுவலகத்திற்குச் சென்ற போது பாண்டியன் அங்கே அமர்ந்திருந்தார். சிறு புன்னகையுடன் அவள் அவரைக் கடக்க முற்பட்ட போது அவர் அவளை அழைத்துச் சொன்னார்.யோகிஜி நாடு முழுவதும் கோசாலைகள் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கிறாராம் சுவாமினி. அந்த வேலைக்கு ஐந்து துறவிகளை ஒதுக்கினால் தேவலை.”

 

கல்பனானந்தா தலையசைத்தாள். இது போன்ற தர்ம காரியங்களுக்கும், ஆன்மீக நிகழ்வுகளுக்கும் தகுந்த ஆட்களை ஒதுக்குவது எப்போதும் அவளுடைய வேலை தான். தலையசைப்புக்குக் கூடுதலாக எதுவும் சொல்லாமல் சென்று அவள் வழக்கமான கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தன் வேலையை ஆரம்பித்தது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. அனாவசியமான கேள்விகளோ, விளக்கம் கேட்பதோ அவளிடம் எப்போதும் இருக்காது. நாளை மாலை அவர் கேட்ட ஐந்து துறவிகளின் பெயர் அவர் மேசையில் கண்டிப்பாக இருக்கும். எதையும் அவளிடம் அவர் இரண்டாம் முறை சொல்ல வேண்டி இருந்ததில்லை. திறமைசாலி தான். ஆனால் திறமைகளை பணமாக்கிக் கொள்ளத் தெரியாதவள்...

 

கோசாலைகள் ஆரம்பிக்கும் திட்டம் கல்பனானந்தாவிடம் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. நல்ல திட்டம் தான் அது என்றாலும் அதை விளம்பரப்படுத்த செய்யும் செலவின் அளவை விட அதிகமாய் கோசாலைக்கு யோகாலயம் செலவு செய்யப் போவதில்லை. அதை கல்பனானந்தா நன்றாக அறிவாள். அமைச்சர்களையும், பிரபலங்களையும் அழைத்து ஆரம்ப விழாக்கள் நடத்திப் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு பிரம்மானந்தாவின் உற்சாகம் முடிந்து விடும். பத்திரிக்கைகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றிப் பேசி முடித்த பின் பாண்டியனும், திவாகரனும் தான் மீதியை முடிவெடுப்பார்கள். நாடு முழுவதும் என்றால் நான்கிலிருந்து நாற்பது வரைக்கும் கூட கோசாலைகள் அமைக்கப்படலாம். எத்தனை பெரிய கோசாலைகள், ஒவ்வொன்றிலும் எத்தனை பசுக்கள் என்பதை எல்லாம் அவர்கள் செலவழிக்க உத்தேசித்திருக்கும் பணத்திற்கு ஏற்ப முடிவெடுப்பார்கள். பெரும்பாலும், கேட்பவர்களுக்குப் பதில் சொல்லும்படியாக அது பெயரளவில் தான் இருக்கும். இப்படித்தான் இதற்கு முந்தைய திட்டங்களும் இருக்கின்றன. ஆனால் அறிவிப்பின் போதும், விழாவின் போதும் பார்ப்பவர்களுக்கு உடனடியாக மளமளவென்று எல்லாம் நடந்து விடப்போகிறது என்று தோன்றும். துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டில் யாரும் அறிவிப்பை நினைவு வைத்திருந்து, ஆகின்ற வேலைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை!

 

கல்பனானந்தாவுக்கு விளம்பரங்களில் ஈடுபாடு இருந்ததில்லை. செய்திருக்கும் வேலைகள் தான் விளம்பரமாக இருக்க வேண்டும், அவை தான் பேச வேண்டும் என்று நினைப்பவள் அவள். அது குறித்த பிரம்மாண்ட அறிவிப்புகள், விழாக்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் யுக்திகள். அவற்றை ஆன்மீகவாதிகளும் செய்வது கேவலம் என்பது அவள் கருத்து. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்!

 

மின்னஞ்சலை அனுப்பி விட்டு தனதறைக்குத் திரும்பி வந்த போது அவள் மனம் ஏனோ கனமாக இருந்தது. அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்த போது சைத்ரா நினைவுக்கு வந்தாள். ஒரு காலத்தில் சைத்ரா அவளுடன் அந்த அறையில் இருந்திருக்கிறாள்...

 

ஆண் துறவிகளில் கண்ணனின் அறையிலும், பெண் துறவிகளில் கல்பனானந்தாவின் அறையிலும் வேறு துறவிகள் இருப்பது இல்லை. ஆனால் யோகாலயத்தின் சில அறைகளில் ரிப்பேர் வேலைகள் நடந்த போது தற்காலிகமாக அங்குள்ள துறவிகள் மற்ற அறைகளில் புகுத்தப்பட்டார்கள். அப்போது கல்பனானந்தாவின் அறையில் சைத்ரா வந்து சேர்ந்தாள். ஒரு மாத காலம் அவள் அறையில் இருந்தாள்.

 

பொதுவாக எல்லோரிடமும் அன்பும், அக்கறையும் காட்டினாலும் கூட கல்பனானந்தா யாரிடமும் மிகவும் நெருங்கிப் பழகுபவள் அல்ல. யோகாலயத்தில் அப்படி நெருங்கிப் பழகுவதும், பேசுவதும் ஊக்குவிக்கப் படுவதுமில்லை. சைத்ரா கள்ளங்கபடமில்லாதவள் என்பதோடு, அவள் மேற்பார்வையில் நிறைய வேலைகளை மிகவும் துடிப்போடு சிறப்பாகச் செய்பவள் என்பதால், கல்பனானந்தாவுக்கு அவளை மிகவும் பிடிக்கும். அந்த ஒரு மாத காலத்தில் அறையில் இருக்கும் போது கல்பனானந்தாவிடம் மனம் விட்டுப் பேசுமளவு சைத்ரா அவளுக்கு மிகவும் நெருக்கமானாள். தன் குடும்பத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும், துறவில் வந்த ஈடுபாட்டைப் பற்றியும் சைத்ரா அவளிடம் மனம் விட்டுச் சொன்னாள்.

 

சைத்ரா தன் தந்தையைப் பற்றிச் சொன்னது கல்பனானந்தாவுக்கு ஒரு வித்தியாசமான தந்தையை அறிமுகப்படுத்தியது. மகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அந்தத் தந்தை, மகள் சொன்ன எதையும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டதை எல்லாம் கேட்ட போது இப்படியும் ஒரு தந்தையா என்று கல்பனானந்தா பிரமித்தாள். அவளுக்குத் தன் தந்தையோடு அந்த உன்னத மனிதரை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.   

 

தன் துறவுக்கும் கூட தந்தை கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு சொல்லாமல் அனுமதித்ததைச் சொன்ன போது சைத்ரா கண்ணீர் விட்டு அழுதாள். மகளாக அந்தத் தந்தையின் சந்தோஷத்திற்கு எதையும் திருப்பிச் செய்ய முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சி தனக்கு இன்னும் இருப்பதாகச் சொன்னாள்.  சைத்ரா தன் தாத்தாவைப் பற்றியும் மிக உயர்வாகச் சொன்னாள். தந்தையும் தாத்தாவும் செய்து வரும் தர்ம காரியங்களைப் பற்றியும் சைத்ரா பெருமையாகச் சொன்னாள். இப்போதும் சில விஷயங்களில் தாத்தா தன் மகனைக் கடிந்து கொள்வதை அவள் புன்னகையோடு நினைவு கூர்ந்தாள். சேதுமாதவனும் உயர்ந்த தந்தையாக கல்பனானந்தா மனதில் பதிந்தார். 

 

தாத்தாவும் ஆன்மீகத்தில் அதிக ஆழம் உள்ளவர் என்றும், நிறைய படிப்பவர் என்றும் சைத்ரா சொன்னாள். அவர் படிப்பதாக அவள் நினைவுபடுத்திச் சொன்ன புத்தகங்களும், எழுத்தாளர்களும் அவள் சொல்வதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. அந்த அளவு ஞானமுள்ள தாத்தா, ஞானக்கடலான யோகிஜியின் உயர்வை அதிகமாக உணராதது ஆதங்கமாக இருப்பதாக சைத்ரா சொன்னாள்.

 

கல்பனானந்தா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வேதங்கள், உபநிஷத்துக்கள், கீதை போன்றவற்றின் சாராம்சத்தை விவரித்து, பேச்சுத் திறமையுள்ள யார் பேசினாலும் அது உயர்வாகவே இருக்கும். ஆனால் அத்தனை ஞானமும் பேசுபவனின் ஞானம் என்று கேட்பவன் நம்பினால், அவன் ஏமாறவே வேண்டி வரும். இது தான் ஆன்மீகத்தில் பல புத்திசாலிகள் சறுக்கக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை சைத்ராவிடம் கல்பனானந்தாவால் சொல்ல முடியவில்லை.

 

அப்படி கல்பனானந்தாவின் அறையில் சைத்ரா தங்கி இருக்கையில் தான் ஒரு முறை யோகாலயாவின் ஒரு பகுதியில் புதிய தோட்டம் உருவாகியது. அதற்கு வேண்டிய புதிய செடிகளை வாங்க கல்பனானந்தா ஒரு நர்சரி தோட்டத்திற்குப் போனாள். போகும் போது சைத்ராவையும் அவள் அழைத்துக் கொண்டு போனாள். அப்படிப் போன போது தான் ஒரு அற்புத யோகியை அந்தத் தோட்டத்தில் அவர்கள் பார்த்தார்கள்.

 

பார்த்தவுடனேயே அந்தக் கிழவரின் அமைதியும், சாந்தமும் அவர்களைத் தொற்றிக் கொண்டது போல் அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். அந்த நர்சரி தோட்டத்திற்கு இதற்கு முன்பும் பல முறை கல்பனானந்தா சென்றிருக்கிறாள். ஆனாலும் முன்பு அவள் அவரை அங்கு பார்த்ததில்லை. அதனால் நர்சரி உரிமையாளரிடம் அவள் கேட்டாள். “அவர் புதியவரா?”

 

ஆமாம் சுவாமினி. அவர் ஒரு நாடோடிபெயர் ரகுராமன். போன மாசம் தான் இங்கே வந்து சேர்ந்தார். தங்கமான மனுஷன்.” என்று அவர் சொன்னார்.

 

சற்று தொலைவில் அமர்ந்திருந்த ரகுராமன் ஒரு குழந்தையின் கவனக்குவிப்புடன் புதிய செடிகளை பிளாஸ்டிக் பையில் மண்ணோடு நிரப்பி வைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு செடியையும் அவர் குழந்தையைப் பார்ப்பது போல் புன்னகையுடன் பார்த்தார். எந்திரத்தனமாக இல்லாமல் ஒரு தாய் குழந்தைகளைப் பராமரிப்பதைப் போல் அவர் கையாண்டார். மண்ணில் அமர்ந்திருந்த அவர் ஆடைகளிலும், கைகளிலும் இருந்த மண்ணை அவர் மண்ணாக நினைத்தது போல் தெரியவில்லை.

 

ஒரு சிறுவன் டீயும் பிஸ்கட் பாக்கெட்டையும் கொண்டு வந்து அவரிடம் தருவதை அவர்கள் பார்த்தார்கள். தூரத்தில் இருந்த நாய்கள் எல்லாம் அவரை நோக்கி ஓடி வந்தன. அவர் டீயைக் குடித்துக் கொண்டே பிஸ்கெட்டுகளை அந்த நாய்களுக்குப் போட்டார். அவை சாப்பிடும் அழகை அவர் பார்த்த விதம், ஒரு தாய் தன் குழந்தைகள் சாப்பிடும் அழகைப் பார்த்து ரசிப்பது போல் இருந்தது.

 

அவர்கள் அந்தக் கிழவரைப் பார்ப்பதைக் கவனித்த உரிமையாளர் சொன்னார். ”இப்படித்தான் அவர். கடைசில அவருக்கு ஒரு பிஸ்கட் கூட மிஞ்சாது. காலை நேரங்கள்ல பறவைகள் எல்லாம் அவர் பக்கத்துல வரும். தானியங்கள் போடுவார். அவர் வாங்கற சம்பளம் பூராவும் இப்படித்தான் செலவாகுது.”

 

அவர்கள் அங்கே இருந்த ஒரு மணி நேர காலத்தில் அவரிடம் ஒரு வினாடி கூட அமைதியோ, சாந்தமோ குறைந்து அவர்கள் பார்க்கவில்லை. சைத்ராவிடம் கல்பனானந்தா முணுமுணுத்தாள். “அவர் ஒரு யோகி சைத்ரா.”

 

சைத்ரா திகைப்புடன் அவளைப் பார்த்தாள்.

(தொடரும்)

என்.கணேசன்