தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Sunday, December 12, 2021
Saturday, December 11, 2021
Thursday, December 9, 2021
இல்லுமினாட்டி 132
ஜிப்ஸி விஸ்வத்திடம் சொன்னபடியே அவன் ஓட்டல் அறைக்குள் நுழைந்த
ஐந்தாவது நிமிடம் அங்கே இருந்தான். அவனைப் பார்த்த
போது விஸ்வத்துக்குப் பொறாமையாக இருந்தது. எத்தனை
சக்திவாய்ந்தவர்கள் இவர்கள்? இவர்களுக்குத் தூரங்கள் ஒரு பிரச்சினையே அல்ல. போக்குவரத்தும்
பிரச்சினையே அல்ல. இவன் எந்தக் கிரகத்திலிருந்து வந்தானோ அந்தக் கிரகத்தில்
எல்லோரும் இவனளவு சக்தி படைத்தவர்களாக இருப்பார்களா,
இல்லை இவன் ஏதாவது விசேஷப் பிறவியா? இவனும்,
க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பனும் ஒரே கிரகத்தைச் சேர்ந்தவர்களா?
இல்லை இவன் வேறு கிரகமா? இருவரும் பரிச்சயமானவர்களா?
அவனைப் பார்த்தவுடன் இத்தனை கேள்விகள் விஸ்வத்தின் மனதில் எழுந்தன.
அந்தக் கேள்விகளை ஜிப்ஸி அறிந்திருப்பான் என்பது நிச்சயம். ஆனால் ஏதும் தெரியாதவன் போல் அவன் அமைதி காத்தான்.
முடிந்தால் இவன் போல தூரங்களைக் கடக்க முடிய வேண்டும் என்று
விஸ்வத்துக்குத் தோன்றியது.
மனிதர்களுக்கு ஏதாவது வகையில் முடியக் கூடிய விஷயமாக அது இருந்தால் அதைக்
கற்றுக் கொள்ளும் முதல் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தவுடன் மட்டும்
ஜிப்ஸியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
“ஏன் நான்
நினைத்ததற்குச் சிரிக்கிறாய்?” என்று விஸ்வம் கேட்டான்.
அவன் நான் மனதில் நினைத்ததை நீ கண்டுபிடித்து
விட்டாயா, உன்னிடம் அந்தச் சக்தி இருக்கிறதா என்றெல்லாம் கேட்காமல்
அவன் சக்தியை உணர்ந்தவன் போலவே இந்தக் கேள்வி கேட்டது ஜிப்ஸியின் புன்னகையை விரிவாக்கியது. அவன் சொன்னான். “இந்த ஒரு
விஷயத்தில் நீயும் க்ரிஷும் ஒத்துப் போகிறீர்கள். அவனும்
ஒவ்வொரு எல்லையாகக் கடக்க வேண்டும் என்று நினைப்பவன். அதற்காக
என்ன செய்யவும் தயாராக இருப்பவன்....”
ஜிப்ஸி க்ரிஷை அவனோடு ஒப்பிட்டுப் பேசியதை
வேடிக்கையாக எண்ணிய விஸ்வம் “அவனை உனக்கெப்படி, எந்த அளவு
தெரியும்?” என்று கேட்டான்.
ஜிப்ஸி சொன்னான். “ம்யூனிக்
விமானநிலையத்தில் அவன் வந்திறங்கிய போது அவனைக் கொஞ்சம் ஆராய்ந்தேன்...”
”உனக்கு அப்படி
நேரில் போய் ஆராய்ந்தால் தான் தெரியுமா? இருந்த இடத்திலிருந்து எல்லாமே தெரிந்து கொள்ளும்
சக்தி படைத்தவன் நீ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...”
ஜிப்ஸி சிரித்தான்.
“நான் என்ன கடவுளா, இருந்த இடத்திலிருந்தே எல்லாம் தெரிந்து கொள்ள? யாருமே கவனம் செலுத்துகிற
விஷயங்களைத் தான் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்
என்றால் நேரில் பார்த்துக் கவனம் செலுத்துவது சுலபம்”
“பின் எப்படி உனக்கு
அந்த ரகசிய ஆவணம் கர்னீலியஸிடம் இருப்பது தெரிந்தது?’
“இந்த சர்ச்சிற்கு
நாம் வந்து சேர்ந்த போது இங்கே விசேஷ சக்தி அலைகளை நான் உணர்ந்தேன். அதனால் இதற்குச்
சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கவனிக்கத் தோன்றியது. அப்போது அகப்பட்டது தான் அந்தத்
தகவல்...”
கேட்டதற்கெல்லாம்
அவன் பதில் சொன்னாலும் அவன் மேலோட்டமாகத் தான் பதில் சொல்வது போல் தோன்றியது. ஆழமாகவும்,
விளக்கமாகவும் சொல்வதை அவன் தவிர்க்கிறான்.... விஸ்வம் கேட்டான். ”நான் என்ன கடவுளா
என்று கேட்டாயே. உண்மையில் கடவுள் இருக்கிறாரா?”
ஜிப்ஸி சொன்னான்.
“தெரியவில்லை”
மனிதனைக் காட்டிலும்
அறிவிலும், சக்திகளிலும் பல மடங்கு உயர்ந்த இவனுக்கே கடவுள் இருக்கிறாரா என்பதில் சந்தேகம்
இருக்கும் போது, மனிதர்களில் பலர் கடவுளை ஆணித்தரமாக
எப்படி நம்புகிறார்கள் என்று ஒரு நிமிடம் வியந்த விஸ்வம் இப்போதைக்கு அவசியமில்லாத
அந்த விஷயத்தை விட்டு க்ரிஷ் குறித்து தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்டான். “அவனிடம்
ஏதாவது விசேஷ சக்திகள் இருக்கிறதா?” ஹரிணியை மனோகர்
கடத்திய போது அந்த இடத்தை செந்தில்நாதன் கண்டுபிடித்தது க்ரிஷின் உதவியால் தான் என்று
கண்டுபிடித்திருந்த விஸ்வம் அந்தச் சக்திகளின் அளவையும் அறிந்து கொள்ள ஆசைப்பட்டான்.
“அவன் உணர்வுநிலை
கூர்மையாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. ஆனால் சக்திகளிலும், அதன் பிரயோகத்திலும் உனக்கு
அவன் சரிசமமாகவே மாட்டான்... காரணம் அவனுடைய முயற்சிக் குறைவு அல்ல. அவனுக்கு
ஈடுபாடுள்ள விஷயங்கள் வேறு பலவும் இருக்கின்றன என்பது தான்...”
சரிசமமாக இல்லாதவன் முக்கியமான நேரங்களில்
ஏதாவது செய்து ஜெயித்து விடுகிறானே என்று எண்ணிய விஸ்வம் சிறிது நேரத்தில் இல்லுமினாட்டியின் தலைமைச்
செயற்குழுவுக்கு மின்னஞ்சலில் கடிதம் எழுத ஆரம்பித்தான். அவன் விமான
நிலையத்திலிருந்து ஓட்டலுக்கு டாக்சியில் வந்து கொண்டிருந்த போது தான் வாங் வே அவனிடம்
பேசி இருந்தார். அதனால் முதல் வேலையாக அவர் சொன்னதை எழுதி அனுப்ப நினைத்து
அதில் ஈடுபட்ட போது ஜிப்ஸி ஓட்டல் அறையின் ஜன்னல் அருகே நின்று வெளியே வேடிக்கை
பார்க்கும் பாவனையில் பல சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தான்.
தலைமைக்குழுவுக்கு விஸ்வம் அனுப்பிய
மின்னஞ்சல் சுருக்கமாக இருந்தது.
“மதிப்பிற்குரிய
தலைவர் அவர்களுக்கு,
விஸ்வத்தின் வணக்கங்கள். நான் உடல்நலத்தில்
தற்போது ஓரளவு தேறியுள்ளேன். தேறியவுடன் என் மனதில் எழுந்த ஒரே ஆவல் தங்களையும், நம் தோழமை
உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச வேண்டும், விட்ட இடத்திலிருந்து
தொடர வேண்டும் என்பது தான். அடுத்த பொதுக்குழுக் கூட்டம் எப்போது, எங்கே என்று
தெரிவித்தால் நான் கலந்து கொண்டு இல்லுமினாட்டியாக என் கடமையை நிறைவேற்ற விரும்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
விஸ்வம்
இந்தச் சுருக்கமான
கடிதம் போதுமல்லவா என்று கேட்க விஸ்வம் திரும்பி ஜிப்ஸியைப் பார்த்தான். அவன் ஏதோ சிந்தனைகளில்
ஆழ்ந்திருந்ததைப் பார்த்து இவனுக்கும் கூட யோசிக்க எத்தனையோ இருக்கும் போலிருக்கிறது
என்று எண்ணிக் கொண்டான்.
அதே சமயத்தில் க்ரிஷும் ஜிப்ஸியைப் பற்றித் தான் ஜான் ஸ்மித்துடனும்,
விஸ்வேஸ்வரய்யாவுடனும் ஆராய்ந்து கொண்டிருந்தான். இம்மானுவல் அவனுடைய ஃபைலில் சேகரித்திருந்த
வித்தியாசமான சக்தி அலைகளைப் பற்றி தான் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். விஸ்வேஸ்வரய்யா
அந்த அலைகளிலும் சூட்சுமமான சின்னச் சின்ன வித்தியாசங்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார்.
”... இந்த அலைவரிசைகளின் வீச்சில் உள்ள அடர்த்தி எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக
இல்லை. சில சமயங்களில் அதிகமாக இருக்கிறது.
சில சமயங்களில் குறைவாக இருக்கிறது. பாருங்கள் அந்த அளவீடுகளிலும் அந்த வித்தியாசம்
தெரிகிறது..” என்று சொல்லி அதில் குறித்து வைத்திருந்த அளவீட்டு எண்களைக் காண்பித்தார்.
ஜான் ஸ்மித் கேட்டார்.
“அதற்கு என்ன அர்த்தம்?”
விஸ்வேஸ்வரய்யா
சொன்னார். “அந்தக் கூட்டாளி வெளிப்படுத்தும் அலைவரிசைகளிலும் வித்தியாசம் தெரிகிறது
என்றால் அவன் பயன்படுத்தும் சக்திகள் மாறுபடுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். நம்
விஸ்வம் தன்னுடைய சக்திகளை மிகவும் கவனமாக யோசித்துச் செலவு செய்கிறான் என்று நாம்
புரிந்து கொண்டது அவனுக்கு மட்டுமல்ல அவன் கூட்டாளிக்கும் பொருந்துகிறது என்றும் சொல்லலாம்....
அவன் பயன்படுத்தும் சக்தி அலைகள் செயற்கைக்கோளின் கருவிகளில் தெரியும் என்பதால் தெளிவாகத்
தெரியாதபடி அவன் அவ்வப்போது கலைத்துப் பரப்பியும்
விடுகிறான் போல் தோன்றுகிறது... ஆனாலும் கூட அவன் பரப்பி விடுவதால் தெளிவில்லாமல் மங்கலாகத்
தெரியும் அலைகளில் உள்ள அடர்த்தி வித்தியாசத்தை அவன் மாற்ற முடியவில்லை. அதை நீங்கள்
கவனித்தால் தெரியும்....” அவர் சில நாட்களை உதாரணமாக அந்த ஃபைலில் காட்டினார்.
க்ரிஷ் யோசித்த
போது ஒரு புதிர் விலகுகிற மாதிரி அவனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான். “நான் நினைக்கிறேன்,
அவன் அக்ஷய் வரும் போது ஃபோட்டோ எடுத்த பின் அந்த உருவத்தைக் கலைத்திருக்க வேண்டும்.
அப்படிக் கலையும் போது ஏற்படும் மாற்றங்கள் காமிராவில் தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதால்
தான் அந்தக் காட்சி பதிவாவதை அவன் விரும்பாமல் அதைச் செயல் இழக்க வைத்திருக்கலாம்...”
விஸ்வேஸ்வரய்யா
சொன்னார். “இருக்கலாம்... ஆட்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் தெரியும் என்றாலும்
எல்லார் கவனமும் அவர்கள் வரவேற்க வந்த பயணிகள் மீதிருக்கும் என்பதால் அதைப் பொருட்படுத்தி
இருக்க மாட்டான். காமிராப் பதிவாகும் போது அது காட்டிக் கொடுத்து விடும் என்று நினைத்திருக்கலாம்...”
க்ரிஷுக்கு அது
சரியென்று தோன்றியது. பின் கேட்டான். “நீங்கள் என் வேற்றுக்கிரகவாசி நண்பன் பூமிக்கு
வந்திருந்த போது கண்ட அலைவரிசைகளில் இது போன்ற வித்தியாசங்கள் இருக்கவில்லையா?”
விஸ்வேஸ்வரய்யா
சொன்னார். “இருக்கவில்லை. அதன் அலைவீச்சும் அதிகம். அடர்த்தியும் அதிகம். விஸ்வத்தின்
கூட்டாளி போல சக்தி வெளிப்பாடுகளில் சிக்கனமாய் உங்கள் நண்பன் இருக்கவில்லை... அவனிடம்
சக்தி தாராளமாக இருக்கிறது போலிருக்கிறது... ”
ஜான் ஸ்மித் கேட்டார்.
“க்ரிஷின் நண்பன், விஸ்வத்தின் நண்பன், இந்த இருவர் அலைவரிசைகளிலும் ஏதாவது ஒற்றுமை
இருக்கிறதா? அடர்த்தி, அதிகம், குறைவு என்கிற வித்தியாசத்தை விடுங்கள், நான் கேட்பது
இரண்டும் ஒரே ரகமானதா?”
விஸ்வேஸ்வரய்யா
சொன்னார். “இல்லை”
க்ரிஷ் சொன்னான்.
“அப்படியானால் இருவரின் கிரகங்களும் வேறு வேறாக இருக்க வேண்டும்....”
இப்படி இரண்டு கிரக
ஏலியன்கள் ஒரே சமயத்தில் பூமிக்கு வந்திருப்பது எதில் கொண்டு போய் முடியுமோ என்று ஜான்
ஸ்மித் கவலைப்பட்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
Monday, December 6, 2021
யாரோ ஒருவன்? 62
ஜனார்தன் த்ரிவேதி காளிங்க சுவாமியை அதன் பின்பு சந்திக்காததற்குக்
காரணம் பதவி போன விரக்தியும், காளிங்க சுவாமி பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த உதவியும்
செய்யவில்லை என்ற வருத்தமும் கலந்ததாக இருந்தது. அடுத்த தேர்தல் வரை இந்த அரசு கவிழ
வாய்ப்பில்லை என்பதால் காளிங்க சுவாமியிடம் சென்று கேட்கவும் அவருக்கு எதுவும் இருக்கவில்லை. அப்படி மறந்திருந்த
அவரிடம் மேனேஜர் காளிங்க சுவாமியை இப்போது ஞாபகப்படுத்தியதும் அவர் மிகவும் பரபரப்படைந்தார்.
காளிங்க சுவாமி காணாமல் போன பொருட்கள் எங்கே இருக்கின்றன, யாரிடம் இருக்கின்றன என்பதை
எல்லாம் தன் திவ்ய திருஷ்டியால் பார்த்துச் சொன்னது எதுவும் இது வரை பொய்த்ததில்லை....
ஜனார்தன்
த்ரிவேதி கேட்டார். “அமாவாசை எப்போ?”
“அதுக்கு
இன்னும் ஒன்பது நாள் இருக்கே ஐயா. போன்ல பேச முயற்சி செய்வோமாய்யா?”
காளிங்க சுவாமிக்கு
மிகவும் வேண்டப்பட்டவர்கள் மட்டும் அவரிடம் அவசர சமயங்களில் செல்போனிலும் தொடர்பு
கொண்டு கேட்க முடியும் என்றாலும் அந்தக் காட்டுக் கோயிலின் முகப்பில் மட்டுமே பேசுவதற்கு
சிக்னல் கிடைக்கும். அவரிடம் செல்போன் கிடையாது, அவர் செல்போனில்
பேசுவதில்லை என்றாலும் அவருடைய இரண்டு சீடர்களிடமும் செல்போன்கள் உண்டு. அவர்கள்
எப்போதாவது செல்போனோடு கோயில் முகப்பில் வரும் போது அபூர்வமாகப் பேச முடிவதுண்டு. அவசர
சமயங்களில் மிக வேண்டப்பட்டவர்கள் அவர்களிடம் ஏதாவது சொன்னால் அவர்கள் காளிங்க சுவாமியிடம்
கேட்டுச் சொல்வதுண்டு.
“போன்ல பேச முடியணுமே...
எதுக்கும் முயற்சி செஞ்சு பாரு”
மேனேஜர் எல்லா வேலைகளை
ஒதுக்கி வைத்து விட்டு அந்த இரு சீடர்கள் எண்ணையும் மாறி மாறி தொடர்பு கொள்ள முயன்றான்...
கல்யாண் ஒரு முக்கிய வாடிக்கையாளருடன் பேசிக் கொண்டிருக்கையில்
அவன் தந்தையின் அலைபேசி அழைப்பு மூன்று முறை வந்து விட்டது. பக்கத்து
வீட்டில் வினோதமாக எதையாவது பார்த்திருப்பார்... அந்த வாடிக்கையாளர்
போன பிறகு கல்யாண் தந்தையை அழைத்தான். “என்னப்பா?”
“சாயங்காலத்துல
இருந்து ஒரு பாம்பாட்டி நம்ம வீட்டுக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்துட்டிருக்கான்டா”
“சரிப்பா. அதுக்கென்ன?”
“அவன் பக்கத்து
வீட்டையே பார்த்துகிட்டிருக்கான்டா.”
“அதுக்கு
பக்கத்து வீட்டுக்காரன் தானப்பா கவலைப்படணும்”
”பக்கத்து
வீட்டுக்காரன் வெளியே வந்தா தானே அவனுக்கு தெரியறதுக்கு. அப்பப்ப
அந்த பாம்பாட்டி நம்ம வீட்டையும் பார்க்கிறான். அவன் பார்வையே
சரியில்லைடா”
கல்யாண் சலிப்புடன் சொன்னான். “அப்பா பக்கத்து
வீட்டுல பாம்பு இருக்கறத எப்படியோ அவன் மோப்பம் புடிச்சுட்டு வந்திருப்பான் போல. அதனால நீங்க
ஒன்னும் கவலைப்படாதீங்க. நாகராஜ் தான் கவலைப்படணும். ஒரு வீட்டையே
பார்த்துட்டு இருக்க அவனுக்கு போரடிச்சிருக்கும். அதான் இடையில
அந்த வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற நம்ம வீட்டையும் பார்க்கிறானா இருக்கும்....”
வேலாயுதம் சற்று நிம்மதியடைந்தார். “இருக்கலாம். நம்ம வாசல்ல
அவன் இருந்தா கூப்பிட்டு கேட்கலாம். எதிர் வீட்டு வாசல்ல
உட்கார்ந்திருக்கறவனை நாம என்ன கேட்க முடியும்? ஆனாலும்
மனசுல எதோ ஒரு கலக்கம். அதனால உனக்குப் போன் பண்ணினேன்...”
கல்யாண் வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தவுடன்
தந்தை சொன்னதை முழுவதுமாக மறந்து வேலையில் ஐக்கியமானான்.
இரவு ஏழு மணிக்கு அவன் வீட்டுக்கு வந்து
சேர்ந்த போது வேலாயுதம் வாசலிலேயே நின்றிருந்தார். அவரைப்
பார்த்தபின் தான் அவர் மாலையில் அழைத்துச் சொன்ன தகவல் நினைவுக்கு வந்தது. காரிலிருந்து
கல்யாண் இறங்கியதும் வீட்டின் எதிர்ப்பக்கம் பார்த்தான். எதிர் வீட்டுப்பக்கம்
யாரோ தரையில் உட்கார்ந்திருப்பது தெருவிளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்தது.
வேலாயுதம் விரைந்து வந்து சொன்னார். “நான் சொன்னது
அந்த ஆளைத் தான். நான் நம்ம கூர்க்காவை அனுப்பி அவனுக்கு என்ன வேணும், ஏன் அங்கே
உட்கார்ந்திருக்கான்னு கேட்கச் சொன்னேன். அவன் போய்க் கேட்டதுக்கு
அந்தப் பாம்பாட்டி ”உனக்கென்ன வேணும். நான் இங்கே
உட்கார்ந்திருக்கறதுல உனக்கென்ன பிரச்சனை”ன்னு கேட்கிறான். என்ன கொழுப்பு
இருக்கணும் பாரு அவனுக்கு”
“அந்த எதிர்வீட்டு
ஆள் கிட்ட சொல்லி அவனைக் கிளப்ப வேண்டியது தானே?” என்று கல்யாண்
கேட்டான்.
“எதிர்வீட்டுக்காரன்
அந்தமான் டூர் போயிருக்கான். அவன் வீட்டுல யாருமில்லை”
“சரிப்பா....
அவன் இருந்துட்டு போகட்டும். நமக்கென்ன? நான் அப்பவே
சொன்ன மாதிரி கவலைப்பட வேண்டியவன் நாகராஜ். அவன் எதாவது
செய்வான். விடுங்க.”
கல்யாண் அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவம்
தரவில்லை. மறுபடி பாம்பாட்டிப் பக்கம் திரும்பவில்லை. இரவு சாப்பிட்டு
விட்டுத் தனதறைக்கு உறங்கப் போகும் போது யதேச்சையாக ஜன்னல் வழியாகப் பார்த்த போது தான்
அந்தப் பாம்பாட்டியைப் பார்த்தான். தெருவிளக்கின் அரைகுறை
வெளிச்சத்தில் அப்போதும் அவனால் அந்தப் பாம்பாட்டியை சரியாகப் பார்க்க முடியவில்லை.
அலட்சியப்படுத்த நினைத்தாலும் ஏதோ ஒன்று
அவனை அலட்சியப்படுத்தவிடாமல் தடுத்தது. பீரோவிலிருந்து
பைனாகுலரை எடுத்தவன் அந்தப் பாம்பாட்டியைத் தெளிவாகப் பார்க்க விரும்பினான்.
பைனாகுலரில் காட்சியைக் குவித்து அந்தப்
பாம்பாட்டியைப் பார்த்த அவன் மறுகணம் மின்சாரத்தைத் தொட்டவன் போல அதிர்ந்து வேகமாகப்
பின்வாங்கினான். இதயம் சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்தன. அவன் மனதில் ‘இந்த ஆள்
ஏனிங்கே வந்தான்?” என்ற கேள்வி பிரம்மாண்டமாய் எழுந்தது.
பிறகு
அறிவுபூர்வமாக யோசிக்க யோசிக்க அவன் முதலில் உணர்ந்த பயம் அர்த்தமற்றது என்பது
புரிந்தது. கண்டிப்பாக அவன் விலாசம் அறிந்து அந்தப் பாம்பாட்டி அங்கே
வந்திருக்க வழியில்லை. இப்போதும்
கூட அந்தப் பாம்பாட்டியின் பார்வை பக்கத்து வீட்டின் மேலேயே இருந்தது. எப்போதாவது
ஓரிரு முறை இந்தப் பக்கமும் அவன் பார்த்தான் என்றாலும் அவன் பார்வை முக்கியமாகவும், அதிகமாகவும்
லயித்திருந்தது பக்கத்து வீட்டின் மேல் தான். அவன் பக்கத்து
வீட்டில் பாம்புகள் இருப்பதை எப்படியோ அறிந்து தான் வந்திருக்கிறான் என்று தோன்றியது. அந்தப்
பாம்புகளைப் பிடித்துக் கொண்டு போக வந்திருக்கிறானா அல்லது வேறு ஏதாவது உத்தேசம் இருக்குமா
என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் தேடி வந்தது தன்னையல்ல என்ற புரிதல் ஓரளவு அவனை
அமைதிப்படுத்தியது.
அந்தப் பாம்பாட்டி
அவனை இப்போது நேருக்கு நேர் பார்த்தாலும் இத்தனை வருடங்கள் கழித்து அவனை நினைவில் வைத்திருப்பது
கஷ்டம் தான். ஏனென்றால் இந்த இருபத்தியிரண்டு வருடங்களில் கல்யாண் தோற்றத்தில்
எத்தனையோ மாறியிருக்கிறான். அப்படி அவனுக்குப் பார்த்தது போல் தோன்றினாலும் எப்போது எங்கே
பார்த்தோம் என்று நினைவிருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு...
அப்படியே நினைவிருந்தாலும் கூட அவர்களது முந்தைய சந்திப்புக்குப் பின் நடந்த
நிகழ்வுகளை அவன் அறிந்திருக்க வழியில்லை. அதனால் பிரச்சினை
ஒன்றுமில்லை... கல்யாணின் மனம் நிம்மதியடைந்தது.
மறுபடி பைனாகுலர்
மூலம் அந்தப் பாம்பாட்டியைப் பார்த்த போது பாம்பாட்டி இப்போதும் பக்கத்து வீட்டைத்
தான் பார்த்துக் கொண்டிருந்தான். நிம்மதி அடைந்து கல்யாண் மெல்லத் திரும்பிய போது அவன் மனைவி
மேகலா சலித்துக் கொண்டாள். “வர வர உங்கப்பா மாதிரியே நீங்களும் ஆயிட்டு வர்றீங்க. நேரங்காலமில்லாம
அவர் பக்கத்து வீட்டைப் பார்க்கிறார். நீங்க எதிர் வீட்டைப்
பார்க்கிறீங்க. என்ன நடக்குதுன்னே ஒன்னும் புரியலை...”
கல்யாண் புன்னகைத்தான். “எதிர்வீட்டு
வாசல்ல எவனோ உக்காந்திருக்கான். அங்க ஆளுக இல்லை. அந்தமான்
போயிருக்காங்க. அதனால உட்கார்ந்திருக்கறவன் திருடனாய் இருக்குமோங்கற
சந்தேகத்துல பார்த்தேன். அவ்வளவு தான்...”
சொல்லி விட்டு இயல்பாக
வெளியேறுவது போல அறையை விட்டு வெளியே கல்யாண் வந்தான். அவனுக்கு
அவன் தந்தையிடம் பேச வேண்டியிருக்கிறது...
(தொடரும்)
என்.கணேசன்
Sunday, December 5, 2021
Saturday, December 4, 2021
Thursday, December 2, 2021
இல்லுமினாட்டி 131
வாங் வே எர்னெஸ்டோவின் கட்டளையின் பேரில் கர்னீலியஸின் நல்லடக்கத்தில்
உள்மனதில் மகிழ்ச்சியுடனும், வெளிப்பார்வைக்கு கம்பீரமான சோகத்துடனும் கலந்து கொண்டார்.
அங்கு வந்திருந்தவர்கள் கர்னீலியஸின் மரணம் சுகமரணம் என்று சொன்னார்கள். உறக்கத்திலேயே
மரணத்தைத் தழுவுவது எல்லோருக்கும் கிடைக்க முடிந்த பாக்கியம் அல்ல என்றார்கள். வாங்
வேயும் ஆமோதித்துத் தலையாட்டினார்.
கர்னீலியஸின் வீட்டைச்
சுத்தம் செய்யும் பெண்மணியிடம் அவர் வீட்டின் ஒரு சாவி இருந்தது. அவள் கதவைத் திறந்து
கொண்டு வந்து அவர் அறையை எட்டிப் பார்த்த போது தான் அவர் இறந்திருந்ததைக் கண்டுபிடித்தாள்.
பின் டாக்டருக்கும், உறவினர்களுக்கும் போன்
செய்தாள். அந்தச் செய்தியும், டாக்டர் அவர் மாரடைப்பால் காலமானார் என்று சொன்னார் என்ற
செய்தியும் வாங் வேயின் காதுகளில் தேனாய்ப் பாய்ந்தன. எவ்வளவு சாமர்த்தியமாய் விஸ்வம்
கொன்று அதை இயற்கை மரணமாக வேறு மாற்றி இருக்கிறான்? இப்படித்தான் எர்னெஸ்டோவையும் ஏதாவது
செய்வானோ? ஆனால் கர்னீலியஸைப் போல் அல்லாமல் எர்னெஸ்டோவைச் சுற்றி பெரிய பாதுகாப்புப்
பட்டாளமும், அமானுஷ்யனும் இருக்கிறார்களே எப்படி விஸ்வம் சமாளிப்பான்? எப்போது தன்
திட்டத்தை நிறைவேற்றுவான்?
இத்தனையையும் மீறி
இந்த வழியிலேயே அவன் எர்னெஸ்டோவையும் கொல்ல முடிந்தால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அந்தக் கிழவரும்
உறக்கத்திலேயே போய் விட்டார் என்று இப்படியே பேசிக் கொள்வார்கள். இந்த விதக் கொலையில்
அவனும் மாட்டுவது, அவன் திரும்பக் கொல்லப்படுவது
எல்லாம் நடக்காது. அவருடைய அந்த இரகசிய ஆசை நிறைவேற வழியில்லை. ஆனாலும் பரவாயில்லை.
விஸ்வம் தலைவனாகட்டும், அவனுக்குக் கீழ் இல்லுமினாட்டியின் உபதலைவர் ஆவதும் ஒரு அதிர்ஷ்டமே
என்று அவர் எண்ணிக் கொண்டார்.
கர்னீலியஸின் நல்லடக்கம்
முடிந்து ஓட்டலுக்குத் திரும்பிய அவர் தன் இரகசிய அலைபேசியில் விஸ்வத்தைத் தொடர்பு
கொண்டார். “வணக்கம். நான் இப்போது தான் கர்னீலியஸின் அடக்கம் முடிந்து திரும்பினேன்.
வாழ்த்துக்கள்...”
விஸ்வம் இது போன்ற
சில்லறை வெற்றிகளில் மகிழ்ந்து பெருமையடையும் ரகம் அல்ல. அவன் கேட்டான். “வேறு என்ன
தகவல்?”
வாங் வே சொன்னார்.
“வியாழக்கிழமை பொதுக்கூட்டத்திற்கு முன்னால் தலைமைச் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி
விடலாம் என்கிறார் கிழவர். அதில் பேச ஏதாவதிருந்தால் குறித்துக் கொண்டு வரச் சொல்லி
இருக்கிறார். அது ஒரு அருமையான சந்தர்ப்பம்.
உங்களைப் பற்றியும் அதில் பேசலாம் என்று இருக்கிறேன்...”
“சாகப் போகிற அந்த
ஆளிடம் பேச என்ன இருக்கிறது? பேசுவதில் தான் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது?”
“அவர் இருக்கையிலேயே
முறைப்படி நீங்கள் அவரைத் தொடர்பு கொண்டு இருக்கிறீர்கள் என்று நம் உறுப்பினர்களுக்கு
சொல்ல அது பயன்படுமல்லவா?”
“முறைப்படி நான்
அவருக்கு முன்பே கடிதம் எழுதியிருக்கிறேனே?”
“ஆனால் அவர் பதில்
அனுப்ப நீங்கள் விலாசம் எதுவும் அனுப்பவில்லையே. சென்ற முறையே உங்கள் கடிதம் பார்த்தவுடன்
அவரிடம் என்ன முடிவெடுக்கலாம் என்று வலியப் போய்க் கேட்ட போது அதைத் தான் அவர் காரணமாய்ச்
சொன்னார்”
“விலாசம் அனுப்பினால்
அடுத்த அரை மணி நேரத்தில் என்னைக் கொல்ல ஆட்களை அனுப்பி விடுவாரே”
“விலாசம் அனுப்ப
வேண்டாம். மெயிலில் அனுப்புங்கள். அதை வைத்து அவர் உங்கள் இருப்பிடம் கண்டுபிடிக்க
முடியாது. உங்கள் வேண்டுகோளுக்கு அவர் பதில் ஏதாவது சொல்லித் தானாக வேண்டும். அதுவும்
அவருடைய பர்சனல் ஐ.டிக்கு அனுப்ப வேண்டாம். வந்ததாகவே காட்டிக் கொள்ளாமலும் இருக்க
முடிந்த கிழவர் அவர். அதனால் எங்கள் தலைமைச்செயற்குழு மெயில் ஐ.டிக்கு அனுப்புங்கள்.
அது அவர், உபதலைவர், மற்ற மூன்று தலைமைக்குழு உறுப்பினர்கள் என்று எங்கள் ஐந்து பேருக்கும்
வரும். எனக்கும் வந்த மெயில் என்பதால் அவரிடம் அதை நான் பேச முடியும். அப்படிப் பேசினால்
அவர் என்னைச் சந்தேகக்கண்ணோடு பார்க்க வழியில்லை... முடிவெடுக்காமல் அவர் இறந்தாலும்,
விதிமுறைகளின்படி பிறகு அந்த விஷயத்தை நம்மால் எடுத்துச் செல்ல முடியும்”
விஸ்வம் ஆலோசித்தான்.
வாங் வேயின் இந்த ஆலோசனை அவனுக்குச் சரியாகவே தோன்றியது. “சரி. உங்கள் தலைமைக்குழு
மெயில் ஐ.டியை எனக்கு அனுப்புங்கள்” என்றான்.
வாங் வே உடனே அதை
அனுப்பி வைத்தார்.
சிந்துவின் தாய் மிருதுளா உதய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்
பிரிவில் சேர்ந்ததைத் தொலைக்காட்சி செய்தியில் பார்த்துப் பதறிப் போனாள். உடனே போன்
செய்து சிந்துவிடம் அவள் பேசினாள். சிந்துவுக்கு அவளிடம் உண்மையைச் சொல்லி ஆசுவாசப்படுத்த
முடியவில்லை. டாக்டர்கள் உதயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதாக
மட்டும் சொன்னாள். மிருதுளா சென்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன போது இப்போது வேண்டாம்,
சொல்கிற போது வந்தால் போதும் என்று சிந்து தடுத்தாள். அவள் தினமும் இரண்டு முறையாவது
மகளிடம் போன் செய்து விசாரித்தாள்.
நம்பிக்கைக்குரிய
இரண்டு டாக்டர்கள், இரண்டு நர்ஸ்கள் தவிர வேறு யாருக்கும் உண்மை நிலவரம் தெரியாமல்
மருத்துவமனை பார்த்துக் கொண்டது. தனி தீவிரசிகிச்சைப் பிரிவில் உதய் தொலைக்காட்சி பார்த்தும்,
புத்தகங்கள் படித்தும் பொழுதைப் போக்கினான். இடையே அவர்கள் ஒவ்வொருவரும் மிக ரகசியமாகச் சென்று
சிறிது நேரம் இருந்து அவனிடம் பேசி விட்டு வருவார்கள்.
அப்படி சிந்து போன
போது அவனிடம் தன் தாய் உயிரோடிருப்பதாகவும், அவளைப் பற்றிய உண்மை தெரிய வந்திருப்பதாகவும்
சொல்லி நடந்திருப்பதை எல்லாம் அவனிடம் சொன்னாள். (க்ரிஷ் அந்த உண்மை எப்படியானாலும்
தெரிய வேண்டிய உண்மை, சந்தர்ப்பம் வரும் போது மறைக்காமல் சொல்லி விடு என்று அறிவுறுத்தி
இருந்தான்.) எல்லாம் கேட்ட உதய் இப்படியும் ஒரு தகப்பன் இருப்பானா என்று திகைத்தான்.
மிருதுளா அந்த ஆளை ஓங்கி அறைந்ததைக் கேட்டு அவன் சந்தோஷப்பட்டான். “நீயும் ரெண்டு அறை
அவனை அறைஞ்சிருக்கணும்” என்றான்.
அந்த உண்மையை அவள்
பிறகு பத்மாவதியிடமும், ஹரிணியிடமும் கூடச் சொன்னாள். அவர்களும் நடந்திருக்கும் கொடுமையை எண்ணி திகைப்படைந்தார்கள்.
பத்மாவதி சொன்னாள். “காலம் கடந்தாவது தெரிய வந்ததே நல்லது. பாவம் உங்கம்மா. அவங்க மனசு
என்ன பாடுபட்டிருக்கும்? நானும் அவங்க கிட்டே பேசலாமா?”
சிந்து ஹரிணியைப்
பார்த்தாள். ஹரிணி மாமியாரிடம் சொன்னாள். “பேசறது பெரிசில்ல. அவங்க உதய்க்கு இப்படி
ஆயிடுச்சேன்னு வருத்தப்பட்டாங்கன்னா நீங்க இதெல்லாம் நாடகம்னு ஆறுதல் சொல்லிடக்கூடாது...
அதே மாதிரி இதெல்லாம் முடிகிற வரைக்கும் அவங்களை இங்கே வரச் சொல்லக்கூடாது”
பத்மாவதி சொன்னாள்.
“நீ சொன்னதும் சரி தான். நீ சொல்லியிருக்கலைன்னா நான் அப்படிச் சொல்லக்கூடியவள் தான்.
உதய் என்னைத் திட்டறதுல தப்பே இல்லை. என்ன பண்றது, அப்படியே வளர்ந்துட்டேன். ஆனா நீ
ஞாபகப்படுத்திட்டதால நான் கவனமாய் பேசுவேன்....”
சொன்னவள் சிந்துவை
விட அதிகமாய் மிருதுளாவிடம் பேசினாள். பேச்சிலேயே இருவரும் மிக நெருங்கி விட்டார்கள்.
மிருதுளாவுக்கு பத்மாவதியை மிகவும் பிடித்து விட்டது. பிறகு மகளிடம் பேசும் போது அவள்
சொன்னாள். “உன் மாமியார் தங்கமானவங்க சிந்து. நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான். உதயும்
பிழைச்சுக்குவான் கவலைப்படாதே.”
உண்மையிலேயே சிந்து
தன்னை அதிர்ஷ்டசாலியாகவே உணர்ந்தாள். இந்த இரண்டு நாட்களிலேயே அவள் பத்மாவதியிடமும்,
ஹரிணியிடமும் மிகவும் நெருங்கி இருந்தாள். தன் பழைய வரலாறை மட்டும் அவர்களிடம் அவள்
சொல்லவில்லையே தவிர மற்ற எல்லா எண்ணங்களையும் அவள் அவர்களுடன் பகிர்ந்து கொண்டாள்.
உதயைச் சந்திக்கும் சிறிது நேரம் கூட ஆவல் மிகுந்ததாய், ஆனந்தமாய் இருந்தது. அந்தச்
சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று தினமும் காத்திருக்கும் உண்மையான காதலியாக அவள்
மாறியிருந்தாள். முதல் தடவையாக இது தடைப்படாத வரை வாழ்க்கை சொர்க்கம் தானென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் உள் மனதில் இது தடைப்படாமல்
இருக்க வழியில்லை என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. உடனடியாக இல்லா விட்டாலும் சில
நாட்கள் கழித்தாவது விஸ்வம் அவள் மனதை ஊடுருவிப் பார்க்கத் தான் போகிறான். நடந்தது
எல்லாம் அறிந்து கொள்ளத் தான் போகிறான். அப்போது அவள் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி
வந்து விடும் என்ற கலக்கம் அவளுக்கு இருந்து கொண்டே இருந்தது. அதை க்ரிஷ் கூடத் தடுக்க
முடியும் என்று அவள் நம்பவில்லை. அது வரை சந்தோஷமாயிருந்து விட்டுச் சாவோம் என்கிற
தயார் மனநிலை அவளிடம் உருவாகியிருந்தது.
(தொடரும்)
என்.கணேசன்
Subscribe to:
Posts (Atom)


