என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 14, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 7


மானுஷ்யன் ஃபைலைப் படித்து முடித்த பின் பிரதமர் முகத்தில் தெரிந்த பிரமிப்பைக் கண்டு இந்திய உளவுத்துறை தலைமை அதிகாரி சோம்நாத் ஆச்சரியப்படவில்லை. அமானுஷ்யனைப் பற்றியும், அவனது திறமைகளைப் பற்றியும் முதல் முறையாக அறிய நேரும் போது பிரமிக்காமல் இருந்தால் அது தான் ஆச்சரியம். பிரதமர் அந்த ஃபைலைப் படிக்கையில் எதிரில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்த சோம்நாத்தை ஆச்சரியப்படுத்தியது அமானுஷ்யனைப் பற்றி முன் அறிந்திராத பிரதமர் இப்போது திடீர் என்று ஆர்வம் காட்டியது தான். அமானுஷ்யனைப் பற்றி பிரதமருக்கு யார் தெரிவித்திருப்பார்கள்? பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அந்த ஃபைல் இப்போது திறக்கப்படக் காரணம் என்ன?

ஃபைலைப் படித்து முடித்த பின் உடனடியாக எதுவும் சொல்லாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்த பிரதமர் இன்னும் சந்தேகம் தெளியாதவராய் கேட்டார். “இதில் எதுவும் கற்பனை இல்லையே?

சோம்நாத் புன்னகையுடன் சொன்னார். “கற்பனை இல்லை. நிஜம் தான்

பின் ஏன் இப்படிப்பட்ட மனிதனை நாம் பிறகு பயன்படுத்திக் கொள்ளவில்லை?

“அதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். அவன் சம்மதிக்கவில்லை. அவன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பினான். பொதுவாக எல்லோரும் ஆசைப்படும் பணம், புகழ், அதிகாரம் எல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.....    

பணம், புகழ், அதிகாரம் என்ற மூன்றின் பின்னால் ஓடுபவன் என்றும் அமைதியைக் காண முடியாது என்று புரிந்து கொண்டு அவற்றை அலட்சியப்படுத்தி, அதனால் அவன் அமைதியாக வாழ்கிறான் என்று சோம்நாத் சொல்ல வருகிறாரா என்ற சந்தேகம் பிரதமருக்கு வந்தது. அப்படி சொல்லி இருந்தாலும் அது தப்பில்லை என்ற எண்ணம் உடனடியாக வந்தது. இந்த மூன்றும் மனிதனை எப்படி எல்லாம் ஆட்டுவிக்கின்றன, என்னவெல்லாம் செய்ய வைக்கின்றன என்று பலநிலைகளில் பார்த்து வந்த அனுபவஸ்தர் அவர். திறமைகளில் மட்டுமல்ல, பக்குவத்திலும் அவன் அமானுஷ்யனே!...

பிரதமர் அபிப்பிராயத்தில் அவன் உயர்ந்து போனது அவர் முகபாவனையில் இருந்து சோம்நாத்திற்குப் புரிந்தது. ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு பிரதமர் அவரிடம் ஆதங்கத்துடன் சொன்னார்.  இப்படிப்பட்ட திறமைகள் இருப்பவன் ஒதுங்கி வாழ்வது உண்மையில் நாட்டிற்கு நஷ்டம் தான். நான் சினிமாக்களில் மட்டும் தான் இப்படிப்பட்ட திறமையுள்ள ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.

உண்மை தான். அவனைச் செயலில் பார்க்காதவர்கள் நம்ப முடியாது. அவனுடைய வித்தைகள் எல்லாம் திபெத்தில் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்......

பிரதமர் விதியின் விளையாட்டை எண்ணி ஒரு கணம் வியந்தார். ”.... அந்த திபெத் இப்போது அவனுடைய உதவியை எதிர்பார்க்கிறது....என்று சொன்னார்.

சோம்நாத் புரியாமல் விழித்தார். பிரதமர் தலாய் லாமாவின் கோரிக்கையை அவரிடம் தெரிவித்தார். சோம்நாத் யோசனையுடன் சொன்னார். “இந்த விஷயத்தில் அவர்களுக்கு அமானுஷ்யன் உதவ முடிந்தவன் தான். சொல்லப் போனால் இந்த வேலைக்கு அவனைத் தவிர பொருத்தமான வேறு ஒரு ஆள் அவர்களுக்குக் கிடைக்க முடியாது. ஆனால்....

பிரதமர் அவர் வாக்கியத்தை முடிக்க காத்திருந்தார். ஆனால் சோம்நாத் தொடரவில்லை.

பிரதமர் சொன்னார். “தலாய் லாமா சொன்னதை அவனிடம் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும் அவன் இஷ்டம்...

சோம்நாத் தலையசைத்தார்.

பிரதமர் சொன்னார். “ஒருவேளை அவன் ஏற்றுக் கொண்டால் இந்த விஷயத்தில் நம் தரப்பில் இருந்து என்ன உதவி வேண்டுமானாலும் மறைமுகமாகச் செய்து கொடுங்கள்...

சோம்நாத் சரியென்றார்.

பிரதமர் கேட்டார். “இந்த விஷயம் எந்த விதத்திலும் வெளியே கசியக்கூடாது. யாருக்கும் சந்தேகம் கூட வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்..... எப்படி அமானுஷ்யனுக்குத் தெரிவிக்கப் போகிறீர்கள்?.

“சிபிஐயில் இருக்கும் அமானுஷ்யனின் அண்ணா ஆனந்த் மூலம் தெரிவிக்கிறேன்....


சோம்நாத் ஆனந்தைச் சந்தித்து தலாய் லாமாவின் கோரிக்கையைச் சொன்ன போது ஆனந்த் அதிர்ந்து போனான். இப்படி ஒரு கோரிக்கையை அமானுஷ்யன் முன் வைப்பதே அநியாயமாய் அவனுக்குத் தோன்றியது. அவன் அதை வாய் விட்டுச் சொன்னான்.

சோம்நாத் எத்தனையோ துப்பறிதல்களில் ஆனந்திற்கு உதவியவர், உதவி வாங்கியவர். நேர்மையும், அறிவுகூர்மையும் கொண்ட ஆனந்த் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவன் அநியாயம் என்று சொன்னதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் அவர் அமைதியாக இருந்தார்.

ஆனந்த் உணர்ச்சி வசப்பட்டு அவரிடம் சொன்னான். “அவன் மறைவில் இருந்து வெளியே வந்தால் கொன்று விட தலிபான் தீவிரவாதிகள் இப்போதும் வெறியுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சார். அவனைக் கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு அப்போதே அவர்கள் ஆட்களிடம் ரகசியமாய் அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பு இப்போதும் அமலில் இருக்கிறது.

சோம்நாத் அந்த அறிவிப்பை அறியாதவர் அல்ல. அமானுஷ்யனுக்கு இருக்கும் ஆபத்தின் தன்மையையும் உணராதவர் அல்ல. அமானுஷ்யன் அவர் தம்பியாக இருந்தால் அவரும் இப்படித்தான் பயப்படுவார்....

சோம்நாத் அமைதியாகச் சொன்னார். அதனால் தான் பிரதமர் உன் தம்பியைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை ஆனந்த். தலாய் லாமா சொன்னதைத் தெரிவிக்க மட்டும் தான் சொல்லி இருக்கிறார். முடிவெடுப்பது உன் தம்பி கையில் இருக்கிறது. ஒருவேளை உன் தம்பி ஒத்துக் கொண்டால் எல்லா வகையிலும் எங்களை உதவி செய்யச் சொல்லி இருக்கிறார். உன் தம்பி ஒத்துக் கொள்ளா விட்டால் தலாய் லாமாவிடம் அதை பிரதமர் தலாய் லாமாவிடம் தெரிவித்து விடுவார். அவ்வளவு தான். முடிவு எதுவாக இருந்தாலும் இரண்டே நாளில் சொன்னால் நன்றாக இருக்கும்....

சோம்நாத் சென்ற பின் நீண்ட நேரம் ஆனந்த் சிலை போல் அமர்ந்திருந்தான். ஆனால் அவன் மனதிலோ பழைய நினைவுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. தலிபான் தீவிரவாதிகளுடன், ஒரு சக்தி வாய்ந்த இந்திய அமைச்சரும் கைகோர்த்துக் கொண்டு செய்த சதியிலிருந்து இந்த தேசத்தைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய போது எத்தனையோ முறை அவன் தம்பி மரணத்தை மயிரிழையில் உரசி இருக்கிறான். பெற்ற தாய் கூட எதிரிகளிடம் பிணயக்கைதியாய் சிக்க வேண்டி வந்திருக்கிறது. அவனைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அந்த சதி வலையில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது.

அப்போது இழந்த கௌரவத்தை தலிபான் தீவிரவாதிகளால் இன்று வரை ஜீரணிக்க முடிந்ததில்லை. அவர்கள் அமானுஷ்யன் என்ற எதிரிக்காக இன்றும் காத்திருக்கிறார்கள். அவன் எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்பதை அறிய அவர்கள் செய்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் அவனை கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாக தலிபான் தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்திலும், தங்கள் நட்பு இயக்கங்களிலும் அறிவித்தார்கள்.



அதனால் அமானுஷ்யனை அவர்களிடம் இருந்து மறைத்து வைக்க ஆனந்த் பெரும்பாடு பட்டிருக்கிறான். ஆனந்த் உட்பட அவனுடன் சம்பந்தம் வைத்திருந்த அத்தனை நெருக்கமானவர்களும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டி வந்தது. ஏனென்றால் தலிபான் தீவிரவாதிகளின் விசுவாசிகள் அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும் பல காலம் நிழலாய் தொடர்ந்து வந்தார்கள். அவர்களில் யாராவது ஒருவன் அமானுஷ்யனிடம் தங்களைக் கொண்டு போய் விடுவான் என்று நம்பினார்கள். மூன்று வருடங்கள் கழித்து அமானுஷ்யன் அமெரிக்காவில் ஒரு ரகசிய இடத்தில் செட்டில் ஆகி புது வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டதாக ரகசிய வதந்தியை ஆனந்த் கிளப்பி விட்டான். பலரையும் பேச வைத்து நம்ப வைத்தான். ஆனாலும் கூட தலிபான் தீவிரவாதிகளின் ஆட்கள் தங்கள் ரகசியப் பின் தொடரலை நிறுத்தவில்லை. முக்கியமாக ஆனந்தை பெரும் நம்பிக்கையுடன் கண்காணித்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் தீவிரம் குறைந்து போனது. ஆனாலும் முன்னெச்சரிக்கையின் காரணமாக ஆனந்த் தன் தம்பியை நேரில் சென்று பார்ப்பதையோ, போனில் தொடர்பு கொள்வதையோ நீண்டகாலம் முற்றிலும் தவிர்த்து விட்டிருந்தான்.....


பாரதப் பிரதமரின் போன் அழைப்பு தலாய் லாமாவுக்கு வந்த போது தனதறையில் இருந்து ரகசியமாய் சோடென்னும் ஒட்டுக் கேட்டான். பாரதப் பிரதமர் தலாய் லாமாவிடம் ரத்தினச் சுருக்கமாய் சொன்னார்.

“நாங்கள் அவனுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறோம். அவன் சம்மதித்தால் தொடர்பு கொள்வான்  

தலாய் லாமா தன் நன்றிகளை பாரத பிரதமருக்குத் தெரிவித்தார். பிரதமர் தன் வணக்கங்களைத் தெரிவித்து விட்டு பேச்சை முடித்துக் கொண்டார். தலாய் லாமா அமானுஷ்யனின் பதிலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார். காத்திருப்பில் பிரார்த்தனையும் கலந்து கொண்டது. காத்திருப்பும் பிரார்த்தனையும் நீள ஆரம்பித்தன....

சோடென் பாரதப் பிரதமர் தலாய் லாமாவிற்கு அனுப்பிய செய்தியை அப்படியே வாங் சாவொவிற்கு அனுப்பி வைத்தான்.  வாங் சாவொ தலாய் லாமாவை கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கச் சொன்னான். அவரை யார் எல்லாம் வந்து சந்திக்கிறார்கள், என்ன எல்லாம் சொல்கிறார்கள் என்ற தகவல்கள் தனக்கு அவ்வப்போது உடனடியாக வந்து சேர வேண்டும் என்று கட்டளை இட்டான். தலாய் லாமாவைச் சந்திக்க வரக்கூடும் என்று அவர்கள் நம்புகிற ஆள் மிக முக்கியமான ஆள் என்பது சோடென்னுக்குப் புரிந்தது. அந்தக் கணத்திலிருந்து சோடென் உடம்பெல்லாம் கண்ணும் காதுமானான்....


தே நேரத்தில் புதுடெல்லியில் முழுத்தலையும் நரைத்த டாக்சி டிரைவர்களை எல்லாம் தேடிப்பிடித்து க்வாங் சாவொவின் ஆட்கள் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். புதுடெல்லி விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்களில் ஒருவர் கொண்டு போய் விட்ட அந்த வழுக்கைத் தலையரைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் மிக மும்முரமாக இருந்தார்கள்...

(தொடரும்)
-என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

Monday, August 11, 2014

நான்கு உண்மைகள், எட்டு வழிகள்!

அறிவார்ந்த ஆன்மிகம்- 45 


ஆன்மிகத்தின் ஆரம்பமே உலக வாழ்க்கையில் ஏற்படும் திருப்தியின்மை அல்லது நிம்மதியின்மை தான். தனி மனிதர்களின் ஆன்மிக சிந்தனைகள் மற்றும் தேர்ச்சி அவனுக்கு ஞானத்தையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றன என்றால் ஞானிகளின் ஆன்மிகத் தேர்ச்சி உலகத்திற்கே ஞானவழியையும், அமைதி வழியையும் அடையாளம் காட்டும்படி அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஞானிகளில் முதலிடம் கௌதம புத்தருக்கு உண்டு.


அரசனின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் பிற்காலத்தில் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகவோ, அல்லது உலகமே வணங்கும் துறவியாகவோ வருவான் என்று ஒரு தீர்க்கதரிசி கூற தந்தையான சுத்தோதனருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொரு துக்கம். மகனுக்கு சக்கரவர்த்தியாகத் திகழும் அம்சம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி, அவன் துறவியாகவும் மாறலாம் என்பதில் துக்கம். மகன் துறவியாகி விடக்கூடாது என்று சித்தார்த்தனுக்கு உலகின் எந்தத் துன்பமும் கண்ணில் பட்டுவிடாமல் அவர் வளர்க்க ஆரம்பித்தார். யசோதரை என்ற அரசகுமாரியை சித்தார்த்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ராகுலன் என்ற மகனும் சித்தார்த்தனுக்குப் பிறந்தான். அரசபோக வாழ்க்கையை சித்தார்த்தன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் தந்தையின் கட்டுப்பாட்டை மீறி வெளியுலகத்திற்கு வந்த சித்தார்த்தன் மூன்று காட்சிகளைக் காண நேர்ந்தது. தள்ளாமையுடன் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவரையும், நோயின் பிடியில் சிக்கி வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளியையும், இறந்து போன மனிதனின் சடலத்தையும் பார்த்த சித்தார்த்தன் நிலைகுலைந்து போனான். அவன் இருக்கும் கற்பனை உலகம் வேறு, துன்பங்கள் நிறைந்த இந்த நிஜ உலகம் வேறு எனப் புரிந்த போது இந்தத் துன்பங்களில் இருந்து விடுபட வழியை மனம் தேட ஆரம்பித்தது. ஒரு நள்ளிரவில் மனைவி, மகன், ராஜ்ஜியம் அனைத்தையும் விட்டு விட்டு வெளியேறிய சித்தார்த்தன் 29வது வயதில் துறவியானான்.

ஞானத்தைத் தேடி அலைந்த சித்தார்த்தனுக்கு பல குருமார்கள் கிடைத்தனர். சித்தார்த்தன் வேதங்களைக் கற்றறிந்தான். ஞான நூல்களில் தேர்ச்சி பெற்றான். தன்னை வருத்திக் கொள்ளும் விதத்தில் கடுமையான நோன்புகள் இருந்தான். எதுவும் சித்தார்த்தனுக்கு மன அமைதியை ஏற்படுத்தி விடவில்லை. எதிலும் தெளிவு பிறக்கவில்லை. ஒரு நாள் ஞானம் பெறாமல் எழ மாட்டேன் என்று போதிமரத்தின் அடியில் அமர்ந்த சித்தார்த்தன் ஞானம் பெற்று கௌதம புத்தராக எழுந்தது வரலாறு. புத்தர் என்றால் விழிப்புணர்வு உடையவர் என்று பொருள். 

புத்தரின் ஞானம் தத்துவ வேதாந்தக் குவியலாக இருக்கவில்லை. உலக வாழ்க்கையில் ஈடுபட்டு துன்பப்படும் சாதாரண மனிதனின் துயரங்களுக்கு அது விடையாக அமைந்தது. கணிதக் கோட்பாடுகள் போல படிப்படியாக உண்மையை அலசி மனிதனை அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துப் போவதாக அவர் ஞான உபதேசம் அமைந்தது. 35 ஆம் வயதில் ஞானம் பெற்ற கௌதம புத்தர் 80வது வயதில் இறக்கும் வரை தன் போதனைகளை எளிமையாகவும், வலிமையாகவும் மக்களிடம் பரப்பினார். இந்தியா எங்கிலும் பரவிய புத்தமதம் வெளிநாடுகளிலும் பரவி பிரசித்தி பெற்றது.

புத்தரின் போதனைகள் நான்கு பேருண்மைகளையும் எட்டு வழிகளையும் அடக்கியது. அவற்றை விளக்கமாகப் பார்ப்போம்.

1. துன்பம்: இந்த உலக வாழ்க்கை துன்பகரமானது. நோய், மூப்பு, இறப்பு போன்ற உடல்ரீதியான துன்பங்கள் மட்டுமல்ல, ஏழ்மை போன்ற பொருளாதார ரீதியான துன்பங்கள் உடபட பலவிதங்களில் வாழ்க்கை துன்பகரமானதாகவும், திருப்தியைத் தராததாகவும் இருக்கிறது. இதை மறுக்க முடியாத முதல் உண்மையாக புத்தர் சொல்கிறார். இருப்பவர், இல்லாதவர் என்ற இருதரப்பும் ஏதோ ஒரு துன்பத்திலும், அதிருப்தியிலும் உழலுவதை இன்றளவும் நாமும் கண்டு வருகிறோம் அல்லவா?

2. துன்பத்தின் தோற்றம்: துன்பம் இருக்கிறது என்பது தெளிவான உணமை என்றான பின் அது ஏன் தோன்றுகிறது, அது உருவாகக் காரணம் என்ன என்று சிந்திப்பது முக்கியம் அல்லவா? புத்தர் அந்த சிந்தனையின் விளைவாக துன்பம் தோன்றக் காரணம் ஆசைகள் தான் என்று உறுதியாகக் கூறுகிறார். ஆசைகள் நிறைவேறி திருப்தி அடைந்தவன் உலகில் யாரும் இல்லை. ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று ஆசைகள் எழுந்து கொண்டே இருக்க அதில் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி இல்லாமல் இருக்கிற மனிதன் நிறைவேறாத ஆசைகள் ஒருசில இருந்தாலும் கூட வருத்தத்தின் பிடியில் சிக்கிக் கொள்கின்றான்.

3. துன்பத்தை ஒழித்தல்: துன்பம் உருவாகக் காரணம் ஆசைகள் என்றால் அந்தத் துன்பத்தை ஒழிக்க ஒரே வழி ஆசைகளை ஒழிப்பதே அல்லவா? துன்பத்திலேயே மனிதன் உழன்று கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆசைகளை ஒழித்தால் துன்பத்தையும் ஒழிக்கலாம் என்பதை அறிவது முக்கியம் எனக்கூறுகிறார் புத்தர்.

4. துன்பத்தை ஒழிக்கும் வழிகள்: ஆசைகளை ஒழித்து துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது சுலபம் என்றால் அனைவருமே அப்படி விடுதலை அடைந்து அமைதியைப் பெற்று விட முடியுமே, பிரச்சினையே ஆசைகளை எப்படி ஒழிப்பது என்பது தானே என்ற கேள்வி அடுத்தபடியாக எழும் அல்லவா? ஆசைகளை ஒழித்து வாழ்வியல் துன்பங்களில் இருந்து விடுபடும் வழிகளைத் தான் “அஷ்டசீலம்” என்று புத்தர் குறிப்பிடுகிறார்.

அஷ்டசீலம் என்றழைக்கப்படும் அந்த எட்டு வழிகளைப் பார்ப்போம்.

1. சரியாகப் புரிந்து கொள்ளல்: எந்தப் பிரச்சினையையும் சரியாகப் புரிந்து கொண்டோம் என்றால் அதிலேயே அந்தப் பிரச்சினைக்கான தீர்வு புலப்பட்டு விடும் அல்லவா? எனவே முதல் வழியாக சரியாகப் புரிந்து கொள்வதைப் புத்தர் குறிப்பிடுகிறார். தன்னுடைய உபதேசங்களையே கூட சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் அதில் இருந்து நற்பலன்களை ஒருவர் காண முடியாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது. 

2. சரியான நோக்கம்: நோக்கம் சரியாக இல்லாத போது பின் தொடர்வது எதுவுமே சரியாக இருக்காது என்பது புத்தரின் தெளிவான புரிதல். எனவே எப்போதும் வாழ்க்கையில் சரியான நோக்கம் முக்கியம் என்கிறார் அவர்.

3. சரியான பேச்சு: பேச்சினால் வரும் துன்பங்கள் ஏராளம். அதனால் தான் திருவள்ளுவரே “யாகாவாராயினும் நாகாக்க” என்று எச்சரித்தார். துன்பங்களில் இருந்து விடுபட விரும்பும் மனிதன் சரியாகப் பேச வேண்டும், சரியாகப் பேச எதுவும் இல்லாத போது மௌனமாக இருக்க வேண்டும் என்பது புத்தரின் மூன்றாவது வழி. கடுமையாகவும், பயனற்ற வழிகளிலும் ஒருவருடைய பேச்சு இருக்கலாகாது என்று அவர் உபதேசிக்கிறார்.

4. சரியான செயல்: துன்பங்களை ஏற்படுத்தும்படியான செயல்களில் ஈடுபடாமல் சரியான செயல்களில் மட்டுமே தெளிவுடன் ஈடுபடுவது முக்கியம் என்கிறார் புத்தர். அடுத்தவரைத் துன்புறுத்தாமல் இருப்பது, களவு முதலான தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது போன்றவற்றை புத்தர் வலியுறுத்தினார்.

5. சரியான வாழ்க்கை: நியாயமான முறையான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே ஒருவரால் அமைதியைக் காண முடியும் என்கிறார் புத்தர். மற்றவரை ஏமாற்றாமல், மற்றவர்க்குத் துன்பம் விளைவிக்காமல் நேர்மையாக வாழ்ந்தால் மனிதன் துன்பத்தில் இருந்து விடுபடலாம் என்கிறார்.

6. சரியான முயற்சி: சரியான முயற்சி சரியான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அரைகுறையான முயற்சிகள், தவறான முயற்சிகள் பிரச்சினைகளிலும், துன்பத்திலும் தான் ஒருவரைக் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார் புத்தர்.

7. சரியான விழிப்புணர்வு: விழிப்புணர்வு என்பது சரியாக இருக்கும் போது மனிதன் தவறுகளைச் செய்யவோ, தவறான வழிகளில் செல்லவோ முடியாது. கண்ணைத் திறந்து கொண்டு கவனமாகச் செல்லும் மனிதன் துன்பக்குழிகளில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாகப் பயணிப்பான் அல்லவா?

8. சரியான கவனக்குவிப்பு: சரியான அவசியமான விஷயங்களில் தன் கவனத்தை சரியாகக் குவிக்க முடிந்த மனிதன் வெற்றியையும், அமைதியையும் ஒருங்கே பெற்று விடுகிறான். தவறானவற்றிலும், பிழையானவற்றிலும் கவனம் குவிக்கும் போது அதுவே அதன்பின் தொடரப் போகும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடுகின்றது. எனவே தான் கடைசி வழியாக இதை புத்தர் வலியுறுத்துகிறார்.

இந்த நான்கு உண்மைகளை உணர்ந்து, இந்த எட்டு வழிகளைக் கடைபிடித்தால் துன்பம் அடையாமல் இன்பமாகவே வாழ்ந்து முடிக்கலாம் என்பது புத்தரின் உத்திரவாதம்.


என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 21.1.2014

Sunday, August 10, 2014

மூன்றாம் பதிப்பு காணும் என் இரு நூல்கள்!


அன்பு வாசக நண்பர்களே,

வணக்கம்.

தங்கள் பேராதரவால் பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் நூலும், வாழ்ந்து படிக்கும் பாடங்கள் நூலும் தற்போது மூன்றாம் பதிப்பைக் கண்டுள்ளன.

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் நூல் ஆன்மிக வாசகர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்ற நூல். நள்ளிரவில் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்த பால் ப்ரண்டனின் ஆன்மீக, அமானுஷ்ய அனுபவங்கள் பண்டைய எகிப்தின் மற்ற மெய்ஞான ரகசியங்களை அறிந்து கொள்ளும் விதங்களை விளக்கும் இந்த நூலின் விலை ரூ.110/-

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த வித சூழ்நிலைகளிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்காக எழுதப்பட்டது. ஒரு வருட காலத்திற்குள் மூன்று பதிப்புகள் கண்ட இந்த நூலை தங்களுக்காக வாங்கியதோடு மட்டுமல்லாமல், தாங்கள் அக்கறை வைத்துள்ள மற்ற நண்பர்களுக்கு பரிசு கொடுப்பதற்காகவும் வாசகர்கள் வாங்கி வருகிறார்கள். அதனால் ஒருவரே பல பிரதிகள் வாங்கும் வெற்றி நூலாக இது அமைந்துள்ளது. இந்த நூலின் விலையும் ரூ110/-

தாங்கள் படித்தும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்தும் இந்த நூல்களை வெற்றி நூல்களாக மாற்றிய வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
என்.கணேசன்


நூல்களை வாங்கவும், தங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என அறியவும், பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் – 
Mobile: 9600123146
email: blackholemedia@gmail.com 




ப்ளாக்ஹோல் மீடியாவில் இருந்து தபாலில் நூல்கள் பெற:


தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com )மூலமோ,
மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும்
blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.


வங்கி எண்:

name: blackhole media publication ltd
indian overseas bank, current/account no:165302000000377
branch:alandur, chennai
ifsc code: ioba 0001653

மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க 9600123146

Saturday, August 9, 2014

”அமானுஷ்யன்” நாவல் வெளியீடு!-இரு அத்தியாயம் இலவச இணைப்பு!


ரு எழுத்தாளன் எத்தனையோ கதாபாத்திரங்களைப் படைத்தாலும் வாசகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து அமரத்துவம் பெறும் கதாபாத்திரங்கள் மிகச் சிலதே. அப்படி என் எழுத்தில் உருவாகி வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கதாபாத்திரங்களில் அமானுஷ்யனுக்கு முதல் இடம் உண்டு. நிலாச்சாரலில் நான் அமானுஷ்யன் நாவலைத் தொடராக எழுதி வந்த காலத்தில் அந்த நாவலுக்கும், கதாநாயகனான அமானுஷ்யன் அக்‌ஷய் கதாபாத்திரத்திற்கும் ஒரு ரசிகர் வட்டமே உருவாகி இருந்தது. அந்த ரசிகர் வட்டம் இன்று வரை கலையவில்லை.

நாவல் முடிந்து ஆண்டுகள் கழிந்த பின்னும் அந்தக் கதாபாத்திரம் இணையத்தில் பல தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அது போன்ற ஒரு நாவலையும், கதாபாத்திரத்தையும், நீங்களே நினைத்தாலும் உருவாக்க முடியாதுஎன்று என்னிடம் முடிவாகச் சொன்னவர்கள் பலர். அதைப் பல தடவை படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களும் பலர். அதை அடுத்து நான் எழுதிய பரம(ன்) இரகசியம் நாவலின் பின்னூட்டங்களில் கூட அமானுஷ்யன் பற்றி அடிக்கடி வாசகர்கள் குறிப்பிட்டார்கள். அமானுஷ்யன் நாவலை திரைப்படமாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ கொண்டு வர வேண்டும் என்று கூட வாசகர்கள் தங்கள் ஆவலைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த அளவு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றதாலேயே தற்போது நான் எழுதி வரும் ”புத்தம் சரணம் கச்சாமி” நாவலில் அமானுஷ்யனை மீண்டும் கொண்டு வந்திருக்கிறேன். புத்தம் சரணம் கச்சாமியில் இனி வரவிருக்கும் அமானுஷ்யன் பாத்திரத்தின் முந்தைய சுவாரசியமான கதையை மிகச்சுருக்கமாக அல்லாமல் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வாசகர்கள் அமானுஷ்யன் நாவலை வாங்கிப் படிக்கலாம்.

ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பும், விறுவிறுப்பும், மர்மங்களும், திருப்பங்களும் நிறைந்திருந்த அமானுஷ்யன் நாவல் படித்து முடிந்து, அதன் முடிவும் தெரிந்து, பரபரப்பு அடங்கி விட்ட பின்பும் மீண்டும் பல முறை படிக்கத் தூண்டுகிறது என்பதை விட அந்த நாவலுக்கு கிடைக்கும் மிகச்சிறந்த அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்?

அமானுஷ்யன் நாவலை அச்சு வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வாசகர்களிடம் மூன்றாண்டுகளாக இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்த்து அதனை அச்சில் கொண்டு வந்திருக்கும் பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 600 பக்கங்களுக்கும் மேல் விறுவிறுப்புடன் செல்லும் அமானுஷ்யன் நாவலின் விலை ரூ.500/-


நூலை வாங்கவும், தங்கள் ஊர்களில் எந்தெந்த கடைகளில் இந்த நூல் கிடைக்கும் என்பதை அறியவும், பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் –
Mobile: 9600123146 
email: blackholemedia@gmail.com

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV 


அமானுஷ்யன் நாவலின் இரண்டு அத்தியாயங்கள் 
1


அந்த புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில் இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார். "ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது"

இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த மரங்களும் விழுவது புதிதல்ல.

ஆனால் அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். "சத்தத்தை வைத்துப் பார்த்தால் விழுந்தது மரமாகத் தெரியவில்லை. மனிதனோ விலங்கோ தான் விழுந்திருக்க வேண்டும். போய்க் கதவைத் திறந்து பார்"

அவர் சொன்னவுடன் எழுந்த அந்த இளம் பிக்கு இரண்டடி வைத்த பின் தயங்கினார்.

என்ன என்று மூத்த பிக்குவின் கண்கள் கேட்டன.

"மனிதன் என்றால் பரவாயில்லை. ஏதாவது விலங்காய் இருந்தால்..." இளம் பிக்குவிற்கு விலங்கிடம் மாட்டிக் கொள்ள விருப்பமில்லை.

"மனிதனாயிருந்தாலும் சரி, விலங்காய் இருந்தாலும் சரி, பிரக்ஞை இருக்க வாய்ப்பில்லை. விழுந்த விதத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. விழுந்த சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. பிரக்ஞை இருந்திருந்தால் கண்டிப்பாக கத்தியிருக்க வேண்டும். எழுந்து ஓடின சத்தமும் இல்லை பார்த்தாயா. போய்ப் பார்"

இளம் பிக்கு தன் குருவை வியப்புடன் பார்த்தார். எதையும் புரிந்து கொள்ள கிழவருக்கு அதிக நொடிகள் தேவையில்லை. இது வரையில் அவர் எதையும் தவறாகப் புரிந்து கொண்டதுமில்லை. ஆனால் அவரும் மனிதர் தானே? எதற்கும் ஒரு ஆரம்பம் என்றும் இருக்கிறதே?....இளம் பிக்குவிற்கு இன்னும் தயக்கமாகவே இருந்தது.

மூத்த பிக்கு தன் பார்வையை மற்ற பிக்குக்களிடம் திருப்ப அவர்களில் இருவர் எழுந்து கையில் விளக்குகளை எடுத்துக் கொண்டு இளம் பிக்குவிற்குத் துணையாகக் கிளம்பினார்கள். இளம் பிக்கு அசட்டுச் சிரிப்புடன் போய் புத்த விஹாரத்தின் பெரிய மரக் கதவைத் திறந்தார். வெளியே இருந்து பனிக்காற்று பலமாக வீச ஒரு பிக்கு கையில் இருந்த விளக்கு அணைந்தது. மற்ற விளக்கின் வெளிச்சத்தில் விழுந்தது என்ன என்று பார்த்தார்கள்.

வெளியே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

                                  *******

அதே நேரத்தில் டில்லியில் ஒரு மனிதன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். சுவர்க் கடிகாரம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குத் தோன்ற, டீப்பாயின் மீது வைத்திருந்த தன் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி இரண்டிலும் இரவு ஒன்று பத்து தான். அவன் எதிர்பார்த்த போன்கால் வராமல் அவனால் இன்று உறங்க முடியாது.  அந்த போன் கால் மணி ஒன்று நாற்பத்திரண்டிற்கு வந்தது. பதட்டத்துடன் அவன் அந்த செல் போனை எடுத்தான். "ஹலோ"

"ஆபரேஷன் சக்ஸஸ்"

அந்த மனிதன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான். "எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க"

பதினேழு நிமிடங்கள் கழித்து அந்த மனிதன் அந்த செல் போனில் இன்னொரு நபருக்குப் போன் செய்தான். மறுபக்கம் போனை எடுத்தவுடன் சொன்னான். "முடிச்சுட்டோம்"

சில வினாடிகள் மறுபக்கம் மௌனம் சாதித்தது. பிறகு அங்கிருந்து கேள்வி எழுந்தது. "உடம்பை என்ன செஞ்சாங்க"

"மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு. குண்டு படாம விழுந்தாலே எந்த மனுஷனும் பிழைக்க முடியாது......"

பீல்டுல பலரும் அவனை மனுஷனாய் நினைக்கிறதில்லை. அவனுக்கு அமானுஷ்யன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?"

அந்தக் குரலில் லேசாகப் பயம் இருந்ததாகத் தோன்றியது. உடல் கிடைக்கவில்லை என்ற செய்தி மறுபக்கத்தை சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன் CBI அடிஷனல் டைரக்டரையே சுட்டுக் கொன்ற போது அவர் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு அதிகார வர்க்கத்தின் உயரத்தில் இருக்கும் இத்தனை பெரிய மனிதரையே பயமுறுத்தும் அந்தக் குண்டடிபட்டு செத்தவனை நினைக்கப் பொறாமையாக இருந்தது.

மறுபக்கம் மறுபடி சொன்னது. "அவன் பிணத்தை அந்தப் பள்ளத்தாக்குல தேடச் சொல்லுங்க. அவன் கிட்ட ஏதாவது பேப்பர்ஸோ, வேறெதாவதோ இருந்தா எடுத்து அனுப்பச் சொல்லுங்க. பிறகு புதைச்சுட்டோ, எரிச்சுட்டோ தகவல் தெரிவிக்கச் சொல்லுங்க...."

"இந்த டிசம்பர் குளிரில் இமயமலைப் பள்ளத்தாக்குல ஒரு பிணத்தைத் தேடறது சுலபமில்லை....."

"எத்தனை செலவானாலும் பரவாயில்லை. வேலையை முடிக்கச் சொல்லுங்க.... உங்க பணம் ஸ்விஸ் அக்கவுண்ட்ல ஐம்பது லட்சம் டெபாசிட் ஆயிருக்கு. அவங்களுக்குத் தர வேண்டிய பணத்தை வழக்கமான இடத்தில் இருந்து நீங்க எடுத்துக்கலாம்..."

"தேங்க்ஸ் சார்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த மனிதன் செல் போனில் மீண்டும் ஒரு எண்ணிற்குப் பேசினான். தனக்குத் தெரிவிக்கப்பட்டதை தானும் அந்த எண்ணில் பேசிய மனிதனுக்குத் தெரிவித்தான். பின் செல்போனை சைலன்ஸ் மோடில் மாற்றி சமையலறைக்குப் போய் பெரிய எவர்சில்வர் டப்பாவை எடுத்து அதில் நிறைந்திருந்த துவரம்பருப்பின் அடியில் அந்த செல்போனைப் பதுக்கி வைத்தான்.  ஒரு போலி நபர் பெயரில் பதிவாகி இருந்த அந்த செல்போனை இந்த ஆபரேஷனுக்கு மட்டுமே அவன் பயன்படுத்தி வருகிறான்....

                                   ********

"உயிர் இருக்கிறது"

"தலையில் அடிபட்டிருக்கிறது. தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது..."

புத்த பிக்குகள் பரபரப்பாய் வந்து சொல்ல, மூத்த பிக்கு உடலை உள்ளே எடுத்து வரச் சொன்னார். "தூக்கி வரும் போது முடிந்த வரை உடலை அசைக்காமல் கொண்டு வரப்பாருங்கள்". இன்னொரு பிக்குவிடம் தண்ணீரைச் சூடாக்கச் சொன்னார்.  தனதறையில் வைத்திருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்து பிரித்தார். அதில் பல விதமான கத்திகள், ப்ளேடுகள், பஞ்சு, தூய்மையான துணிகள், கூரிய கம்பிகள் எல்லாம் இருந்தன.....

உள்ளே எடுத்து வரப்பட்டவனுக்கு வயது 25லிருந்து 30க்குள் இருக்கலாம் என்று மூத்த பிக்கு கணக்கு போட்டார். மாநிறமாக சுமாரான உயரத்துடன் இருந்தான். ஒல்லியாக இருந்தாலும் உறுதியான உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். உடலில் பல இடங்களில் இருந்த வடுக்கள் அவன் அடிபடுவது புதிதல்ல என்று சாட்சி சொல்லின.

மூத்த பிக்கு அமைதியாகத் தன் சிகிச்சையை ஆரம்பித்தார். காயங்களைச் சுத்தம் செய்யும் போது அவன் மயக்க நிலையிலேயே இருந்தான். ஆனால் அவர் அவன் தோள்பட்டையில் இருந்து குண்டை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிகமாய் வலித்திருக்க வேண்டும். கண்களைத் திறந்து அவரைப் பார்த்தான். அவர் ஹிந்தியில் அவனிடம் சொன்னார். "கொஞ்சம் பொறுத்துக் கொள். அசையாதே. இரண்டே நிமிடம் தான்...."

அவன் அதன் பிறகு அசையவில்லை. மூத்த பிக்கு அவனுடைய மன உறுதியைக் கண்டு வியந்தார். மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையில் வலி எந்த அளவு இருக்கும் என்பதை அவர் அறிவார். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்ட விதம் அவரைப் பாராட்ட வைத்தது. குண்டை எடுத்து விட்டு மூலிகை மருந்துகளால் உறுதியாகக் கட்டுப் போட்ட பிறகு வலி குறைந்திருக்க வேண்டும். மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றான்.

மீண்டும் அவன் விழித்த போது அதிகாலையாகி இருந்தது. அவனருகில் மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அருகில் இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் புன்னகைத்தான். புன்னகைத்த போது முகம் பிரகாசமாகி அழகாகத் தெரிந்தான்.

மூத்த பிக்குவும் புன்னகைத்தார். அவருக்கு ஏனோ அவனை மிகவும் பிடித்துப் போனது. கருணையுடன் ஹிந்தியில் கேட்டார். "எப்படி இருக்கிறது?"

அவன் பரவாயில்லை என்பது போல் தலையாட்டினான்.

"உன் பெயர் என்ன?" அவர் அன்புடன் கேட்டார்.

அவன் விழித்தான். கண்களை இரண்டு மூன்று முறை கசக்கிக் கொண்டு யோசித்தான். ஒன்றுமே தெரியவில்லை. மனத்திரையில் எல்லாமே வெறுமையாக இருந்தது. அவன் தமிழில் தாழ்ந்த குரலில் கேட்டான். "நான் யார்?"

பிக்குகள் இருவரும் விழித்தார்கள். ஹிந்தியில் மூத்த பிக்கு கேட்டார். "என்ன கேட்டாய்?"

அவன் சிறிதும் யோசிக்காமல் ஹிந்தியில் மறுபடியும் கேட்டான். "நான் யார்?". கேட்ட பின் தான் தன் கேள்வியின் விசித்திரம் அவனுக்கு உறைத்தது போலிருந்தது. அவன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தது தெரிந்தது. முகத்தில் படர்ந்த குழப்பம் நீங்காமல் நிறைய நேரம் தொடர்ந்தது. அவனுக்கு அவனைப் பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை.

மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.


2


CBI டைரக்டர் மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிக்கை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"சார் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?"

"உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?"

"CBI அடிஷனல் டைரக்டர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"

மஹாவீர் ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். "அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அவரைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ் ஒரு சிறப்புக்குழு அமைத்துள்ளது. அவர்களுக்கு இதில் முழு ஒத்துழைப்பு தருவதுடன் எங்கள் தரப்பிலும் விசாரணை நடக்கும். இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நன்றி"

நிருபர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது. "உங்களுக்கும் ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறுகிறார்களே அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

மஹாவீர் ஜெயின் புன்னகையுடன் சொன்னார். "எனக்கும் என் மனைவிக்கும் இடையே எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.....எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

பலத்த சிரிப்பலைகள் எழ மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். தன் அறை நாற்காலியில் அமர்ந்த போது கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி அவர் மனதை நெருடியது. அவருக்கும் இறந்த ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்....

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆச்சார்யா மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது. மனிதர் மிக நேர்மையானவர். நல்லவர். ஆனால் அவர் சில விஷயங்களில் ரகசியமாக இயங்கி வந்தார். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகு தான் ஜெயினுக்கே தெரிவிப்பார். உதாரணமாக, சென்ற வருடம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த விதம். CBI ஆட்கள் அந்த கேஸில் ஈடுபடுத்தப்படவில்லை. யாரோ ரகசியமாகத் தெரிவித்தார்கள் என்று சொல்லி, தகவல் தெரிவித்தவருக்கு பெரும் தொகை ஒன்றையும் அவர் பெற்றுத் தந்தார். ஆனால் ஜெயினுக்குத் தெரியும் யாரோ வெளியாட்கள் சிலரை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறார் என்று. அது பல நாட்கள் செய்த வேலையின் பலன். ஆனால் தகவல் தெரிவித்ததாகச் சொன்ன நபர் அல்லது கண்டு பிடிக்க உதவிய நபர் அல்லது நபர்கள் யார் என்று இன்று வரை ஜெயினுக்குத் தெரியாது. ஆச்சார்யா தன் சொந்த அதிகாரத்தில் அதை வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

ஜெயினுக்கு அவருடைய ரகசியத்தன்மை பெரும் எரிச்சலைக் கிளப்பியது. பல முறை வெளிப்படையாகவே அதை அவரிடமும், மற்ற உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இருந்தார். CBI வெளி மனிதர்களைத் தங்கள் துப்பறியும் வேலைகளுக்குப் பயன்படுத்துவது புதிதல்ல என்றாலும் முழுக்க முழுக்க யாரோ ஒருசில வெளியாட்களை அவர் பயன்படுத்துவது தவறு என்று ஜெயின் சொன்ன போது, இங்குள்ளவர்களுள் ஒருசிலர் மூலம் வெளியாருக்கு தகவல்கள் சுலபமாகச் செல்கிறது என்பது தான் காரணம் என்பது போல ஆச்சார்யா சொன்னார். யார் அந்தப் புல்லுருவிகள் என்று கேட்டதற்குச் சரியாகத் தெரியவில்லை என்பது அவரது பதிலாக இருந்தது.  

வழக்கமான கேஸ்களை அவருடைய டிபார்ட்மெண்ட் ஆட்களே கவனித்து வந்தார்கள் என்றாலும் இப்போதும் ஏதோ ஒரு பெரிய கேஸை அவர் திரை மறைவில் துப்பறிந்து வந்தார் என்று ஜெயினுக்கு சந்தேகம் தோன்றியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரவில் ஆச்சார்யா ஜெயினுக்குப் போன் செய்திருந்தார்.

"சார். நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்."

அப்போதைக்கு என்னவோ ஜெயினுக்கு எரிச்சலாகத் தான் இருந்தது. அவருக்குத் தெரியாமல் தானாகவே ஒரு கேஸை எடுத்துக் கொண்டு திரைமறைவில் இந்த முறையும் ஆச்சார்யா துப்பறிந்து சொல்ல வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஆச்சார்யா சொல்ல வருவதற்கு முன் கொலை செய்யப்பட்டு விட்டார்.

ஆச்சார்யாவின் மனைவி பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்ததால் ஆச்சார்யா வீட்டினுள் தனியாகவே அன்று இருந்திருக்கிறார். நள்ளிரவில் அவர் வீட்டுக்குக் காவல் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முதலில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பின் அவருடைய வீட்டுக்குக் கொலையாளியோ, கொலையாளிகளோ நுழைந்திருக்கிறார்கள். கதவு உடைக்கப்படவில்லை என்பதால் உள்ளே நுழைந்த நபர் அல்லது நபர்கள் ஆச்சார்யாவுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆள் யார் என்று பார்க்காமல் நள்ளிரவில் கதவைத் திறப்பவரல்ல அவர். உள்ளே நுழைந்த நபர்/கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருடைய வீட்டுப் பொருள்களைக் கண்டபடி துவம்சம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்....

போலீஸ் விசாரணையின் போது அவரிடமும் கேள்வி கேட்டார்கள். அப்போது ஜெயின் கடைசியாக ஆச்சார்யா செய்த போன் கால் பற்றி சொல்லப் போகவில்லை. அந்த போன் காலை அவர் ஏதோ ஒரு காயின் பாக்ஸ் போனிலிருந்து தான் செய்திருந்தார் என்பதால் போலீசிடம் அந்தத் தகவல் இருக்கவில்லை. இவராகவும் அதை சொல்லப் போகவில்லை. போலீசில் இருந்து பத்திரிக்கைகளுக்கு இந்தத் தகவல் கசிவதை அவர் விரும்பவில்லை.

இதை தங்கள் தரப்பிலிருந்தே ரகசிய விசாரணை செய்வது நல்லது என்று ஜெயின் நினைத்தார். அதுவும் இப்போதைய தலைமை அலுவலகத்தில் இல்லாத, தங்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள ஏதாவது ஒரு திறமையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்துவது உத்தமம் என்று தோன்றிய உடனேயே அவருக்கு ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. உடனே சென்னை அலுவலகத்திற்குப் போன் செய்தார்.

                                  *******

அவன் இன்னும் தன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டு தான் இருந்தான். எதுவுமே நினைவில்லை. அவனுக்கு நினைவிற்கு எதுவும் வரவில்லை என்பது தெரிந்த மூத்த பிக்கு அவனுடைய சட்டை, பேண்ட் ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்தார். ஒரு சிறிய காகிதம் கூட இருக்கவில்லை. சட்டை, பேண்ட் இரண்டும் ரெடிமேடாக இருந்ததால் தையல்காரன் பற்றிய தகவல் கூட இருக்கவில்லை. பிறகு மூத்த பிக்கு சொன்னார். "இப்போது எதுவும் நினைவுக்கு வரா விட்டால் பரவாயில்லை. கவலைப்படாமல் தூங்கு. இன்னொரு முறை தூங்கி எழுந்தால் எல்லாம் நினைவுக்கு வரும்" அவர் ஏதோ விதைகளைக் கசக்கி முகர வைத்து அவனை மறுபடி உறங்க வைத்தார்.

அவன் மறுபடி எழுந்து இப்போதும் யோசிக்கிறான். உலகத்திலேயே ஒரு மனிதனுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் தன் சொந்தப் பெயராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அதுவே அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு நினைவு இருப்பதெல்லாம் புத்த பிக்குகளும் இந்த புத்த விஹாரமும் தான். மற்றதெல்லாம் துடைத்தெடுத்தது போல் நினைவரங்கம் வெறுமையாக இருந்தது. தலையில் அடிபட்டது காரணமாக இருக்குமா? தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்ததை மூத்த பிக்கு சிகிச்சை செய்து எடுத்தாரே, யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்?

தலையும், தோளும் வலித்தது பெரிதாகத் தோன்றவில்லை. எதுவும் நினைவுக்கு வராதது பயங்கரமாக இருந்தது.

அப்போது புத்த விஹாரத்தின் வெளியே சலசலப்பு கேட்டது. அவன் காதைக் கூர்மையாக்கினான்.

வெளியே இரண்டு இளைஞர்கள் இளைய பிக்குவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். "இங்கே ஏதாவது மனித உடல் விழுந்திருந்ததா?"

அவர்கள் கேட்ட விதத்திலேயே அவர்கள் உயிருள்ள உடலைத் தேடவில்லை, செத்த பிணத்தைத் தான் தேடுகிறார்கள் என்பது அந்த இளைய புத்த பிக்குவிற்குத் தெரிந்து விட்டது. அவர்களை இதுவரை அந்தப் பகுதியில் பார்த்ததில்லை. அவர்கள் நினைப்பது போல் அவன் சாகவில்லை உயிர் பிழைத்து விட்டான் என்று சொல்ல நினைத்த இளைய பிக்கு வந்திருந்த ஆட்களின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். நல்ல மனிதர்களாகத் தெரியவில்லை. கண்களில் ஒருவித கொடூரம் தெரிந்ததை அவர் கவனித்தார். இவர்கள் கொலை செய்ய முயன்ற கூட்டத்தாராகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி ஒரு பிணம் இந்தப் பகுதியில் விழுந்து கிடக்கும் என்று தெரியும்? அப்படி எதுவும் இந்தப்பகுதியில் விழவில்லை என்று சொல்வதே உள்ளே உள்ள வாலிபனுக்கு பாதுகாப்பு என்று தோன்றியது. ஆனால் இந்த புத்த விஹாரத்தில் சேரும் போது அவர் சத்தியம் செய்திருக்கிறார்- எந்தக் காரணத்தை வைத்தும் பொய் சொல்ல மாட்டேன் என்று!

செய்த சத்தியம் பெரிதா உயிர் பெரிதா என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இளைய பிக்கு சத்தியம் திரும்பவும் செய்து கொள்ளலாம், ஆனால் உயிர் போனால் திரும்பி வருமா? என்று யோசித்து முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டி "இல்லையே" என்றார்.

வந்தவர்களில் ஒருவன் திரும்பத் தயாரானான். அடுத்தவன் அவனைத் தடுத்து நிறுத்தி புத்தவிஹாரத்தின் கதவைக் காட்டினான். கதவில் இரத்தக் கறை இருந்தது......

இளைய பிக்குவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது


Thursday, August 7, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 6


புதுடெல்லி விமான நிலையத்தின் ரகசிய காமிரா பதிவுகளை பத்திரப்படுத்தி வைக்கும் அந்த அதிகாரிக்கு வேலையில் இருந்து ஓய்வு பெற இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன.  ஆனால் மனதளவில் அவர் இப்போதே ஓய்வு பெற்று விட்டார். அவருடைய இப்போதைய சிந்தனை எல்லாம் ஓய்வு பெற்ற பின் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. அவருடைய உதவியாளன் சாப்பிட்டு வர வெளியே சென்றிருந்தான். தனியாக அமர்ந்து தன் எதிர்காலத் திட்டங்களுடன் அமர்ந்து இருந்த அவர் தனிமையை ஓட்டமும் நடையுமாய் வந்து மூச்சு வாங்கி நின்ற ஒரு நடுத்தர வயது மனிதர் கலைத்தார்.

அந்த மனிதர் பார்க்க கண்ணியமானவராகத் தெரிந்தார். அவர் முகத்தில் பெரும் கவலை குடியேறி இருந்தது. எதோ தொலைத்தவர் போலத் தெரிந்தார்.

அதிகாரி என்ன என்பது போல அவரைப் பார்த்தார். அந்த மனிதர் ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினார். ஏதோ தனியார் கம்பெனியின் எக்சிக்யூடிவ் டைரக்டர், பெயர் ஆர்.பி.குப்தா என்று விசிட்டிங் கார்டு தெரிவித்தது.

குப்தா சிறிது தயக்கத்துடன் சொன்னார். “எனக்கு ஒரு உதவி வேண்டும்....

“சொல்லுங்கள்.

மறுபடி தயங்கி பரிதாபமாய் பார்த்த குப்தா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “நேற்றிலிருந்து என் மகளைக் காணோம்.... அவளை நேற்று காலை ஒரு பையனுடன் இங்கே விமானநிலையத்தில் யாரோ பார்த்ததாய் சொன்னார்கள்.... அது உண்மையா என்று எனக்குத் தெரிய வேண்டும்.... அவர்கள் சொன்னது போல்  அவள் இங்கு வந்திருந்தால் உங்கள் காமிராவில் பதிவாகி இருக்கும் அல்லவா?...

அந்த அதிகாரிக்கும் கல்யாண வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஒரு தந்தையாக அவருக்கு குப்தாவின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. இரக்கத்துடன் சொன்னார். “இந்த காமிரா பதிவுகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. இதைப் பார்க்க வேண்டுமென்றால் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் இந்தக் காரணம் எல்லாம் சொல்லி உங்களை மாதிரி ஒரு தனிநபர் விண்ணப்பித்தால் தர முடியாது.... போலீஸிடம் புகார் செய்து அவர்கள் எங்களைக் கேட்டால் நாங்கள் காட்டலாம்.....

குப்தா அழுகிற நிலைமைக்கு வந்த மாதிரி இருந்தது.  பரிதாபமாக அவர் சொன்னார். எனக்கு அதை நீங்கள் தர வேண்டாம். இங்கேயே காட்டினால் போதும், நான் பார்த்துக் கொள்கிறேன். தயவு செய்யுங்கள்.... போலீஸிடம் போக எனக்கு என்னவோ போல் இருக்கிறது.....

அதிகாரிக்கு அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது.  “சட்டப்படி நான் உங்களுக்குக் காட்டக்கூடாது. அப்படியே காட்டுவதாக வைத்துக் கொண்டாலும் எத்தனை காமிரா பதிவுகளை உங்களுக்குக் காட்ட முடியும். காலையில் பதிவானதைக் காட்டுவது என்றாலே ஏகப்பட்ட பதிவுகளைக் காட்ட வேண்டி இருக்கும். சரியான நேரம் தெரியுமா?

“காலையில் பத்தே கால் மணியிலிருந்து பத்தே முக்காலுக்குள் பார்த்ததாகச் சொன்னார்கள் சார்...

அதிகாரி யோசித்தார். பாதுகாப்பு விதிகளின்படி இந்த மனிதருக்குக் காமிரா பதிவுகளைக் காட்ட முடியாது. காட்டக் கூடாது. ஆனால் காமிரா பதிவுகள் இங்கிருந்து வெளியே போகாமல் இங்கேயே இருந்து அவரைப் போல ஒரு தந்தை தன் மகள் தெரிகிறாளா என்று பார்ப்பதில் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?

அதிகாரி அனுமதித்தார். அந்தக் கால் மணி நேரத்தின் பல காமிரா பதிவுகளைப் பார்த்து விட்டு குப்தா தன் மகள் அதில் தெரியவில்லை என்று தெரிவித்து விட்டு பல முறை நன்றி சொல்லி விட்டு வருத்தத்துடன் கிளம்பினார். அதிகாரிக்கு அந்தத் தந்தையைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தன் மகளுக்கு சீக்கிரமே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்!

அரை மணி நேரத்தில் வாங் சாவொவிற்குத் தகவல் வந்தது. அந்த வழுக்கைத் தலையர் தலாய் லாமா விமானத்தில் இருந்து இறங்கும் போது தான் விமான நிலையத்திற்குள் நுழைந்திருக்கிறார். முழுவதும் தலை நரைத்த ஒரு வயதான டாக்ஸி டிரைவர் விமான நிலையத்தின் முன் வாசற்கதவு வரை சூட்கேஸ் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு திரும்பிருக்கிறார். வழுக்கைத் தலையர் தலாய் லாமாவுடன் பேசி விட்டு கல்கத்தா செல்லும் விமானத்தில் பயணமாகி இருக்கிறார். அவருடன் வேறு யாரும் இருக்கவில்லை. தனியாகத் தான் சென்றிருக்கிறானர்.....

அந்த நரைத்த முடி டாக்ஸி டிரைவரைத் தேடிக் கண்டு பிடித்து வழுக்கைத் தலையர் பற்றிய விவரங்களைச் சேகரிக்க்க் கட்டளையிட்ட வாங் சாவொ, லீ க்யாங்குக்கு இந்தத் தகவலை உடனடியாகத் தெரியப்படுத்தினான்.

  
திகாலையில் டெல்லி லோடி கார்டன்ஸ் சென்றால் தங்கள் உடல்நலத்தில் அக்கறை உள்ள பலதரப்பட்ட மக்களை ஒருவர் பார்க்கலாம். நடப்பவர்கள், ஓடுபவர்கள், தங்கள் உடல்களை விதவிதமாய் வளைத்து உடற்பயிற்சி செய்பவர்கள், தெரிந்த யோகாவை தங்கள் விருப்பப்படி செய்து கொண்டிருப்பவர்கள் என எத்தனையோ ரக மனிதர்கள் அங்கு தென்படுவார்கள்.


அப்படி தென்பட்ட மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜாகிங் செய்து கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு வயது 25க்குள் இருக்கும். ரோஜா நிற டீ ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தான். அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெள்ளை நிற கைக்குட்டை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவன் ஐந்து கிலோமீட்டர் தூரம் போய் விட்டு அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் களைத்துப் போய் உட்கார்ந்தான். யாரும் இன்னும் அவனை நெருங்கவில்லை.


லோடி கார்டன்ஸ் மிகப் பெரியது. அங்கே தெரிந்தவர்களைத் தேடுவதே சிரமம் தான். அடையாளம் தெரியாத அந்த ஆள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ? வாங் சாவொ அனுப்பிய அந்த இளைஞன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி 7.18.


திடீரென்று ஒருவன் அமர்ந்திருந்த இடத்தருகே வந்து வளைந்து நின்று வலது கையால் இடது பாதத்தையும், இடது கையால் வலது பாதத்தையும் மாறி மாறி தொட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு வயது முப்பது இருக்கலாம். டென்னிஸ் உடையில் இருந்தான். உடம்பை கச்சிதமாக வைத்திருந்தான். உடற்பயிற்சி செய்து கொண்டே பேச ஆரம்பித்தான். “கொஞ்சம் முன்னுக்கு வா”


வாங் சாவொவினால் அனுப்பப்பட்ட இளைஞன் நிதானமாக சுற்றிலும் பார்த்தான். பக்கத்தில் அந்த ஒரு ஆளைத் தவிர வேறு யாரும் இல்லை. சாய்ந்து அமர்ந்திருந்தவன் கை முட்டிகளை முழங்கால் முட்டிகளில் வைத்து ஏதோ யோசனையில் ஆழ்பவன் போல் முன்னால் குனிந்து உட்கார்ந்தான்.


டென்னிஸ் உடையில் இருந்தவன் உடற்பயிற்சி செய்து கொண்டே சொன்னான். “தலாய் லாமா போன பிறகு பிரதமர் யாரோ ஒருவருடைய ஃபைலை உளவுத் துறையில் கேட்டிருக்கிறார். கம்ப்யூட்டரில் இருக்கிற அந்த ஃபைல் உளவுத்துறையின் தலைமை அதிகாரிகள் இருவரின் அனுமதியுடன் மட்டுமே திறக்கப்பட முடிந்த உச்ச ரகசிய ஃபைல். இருவரில் ஒருவர் நேற்று இல்லாததால் அது இன்று காலை தான் பிரதமர் பார்வைக்குப் போகிறது...”


“அந்த யாருடைய ஃபைல் என்று யூகிக்க வழி இருக்கிறதா?” வாங் சாவொவின் ஆள் கேட்டான்.

“பெயரைக் கூட வாய் விட்டு சத்தமாக யாரும் சொல்ல மாட்டேன் 
என்கிறார்கள். பிரதமர் உளவுத்துறையில் நேரடியாகக் கேட்டிருக்கிறார். அவர்களும் நேரடியாகவே அதை அவருக்குக் காட்டப் போகிறார்கள். பிரதமரின் அந்தரங்க காரியதரிசிக்குக் கூட அது பற்றி எதுவும் தெரியவில்லை.”


“தலாய் லாமா பிரதமரிடம் என்ன பேசினார் என்று ஏதாவது....?”


“தெரியவில்லை.... தலாய் லாமாவுடன் வந்த புத்த பிக்குகளோ, பிரதமரின் காரியதரிசியோ கூட அந்த சமயத்தில் உடன் இருக்கவில்லை...”


டென்னிஸ் உடைக்காரன் திடீரென்று நிமிர்ந்து நின்றான். கைகளை மேலே உயர்த்தி முன்னங்காலில் சிறிது நின்று விட்டு உடலை இருபக்கமும் வளைத்து விட்டு அவன் அங்கிருந்து அவசரமில்லாமல் நகர்ந்தான். அவன் போய் இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்திருந்த வாங் சாவொவின் ஆள் பிறகு தானும் அங்கிருந்து கிளம்பினான்.


அவன் பெற்ற தகவல் ரகசிய குறீயீடுகள் செய்யப்பட்ட மின்னஞ்சலாக அரை மணி நேரத்தில் மூன்று நாடுகள் பயணம் செய்து கடைசியாக வாங் சாவொவை அடைந்தது. வாங் சாவொ உடனே அதை லீ க்யாங்குக்கு அனுப்பி வைத்தான்.


லீ க்யாங் தனக்குக் கிடைத்த தகவல்களை எல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வர முயன்றான். எந்த முடிவுக்கு வந்தாலும் அந்த முடிவே வேறு பல கேள்விகளை எழுப்பி தான் முடிந்தது. மைத்ரேய புத்தர் விவகாரம் என்று பொதுவாகத் தெரிந்த போதிலும் மற்ற எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தலாய் லாமாவின் டெல்லி விஜயம் எதற்கு என்பது இன்னும் சிதம்பர ரகசியமாகவே இருந்தது. தனது இருப்பிடமான தர்மசாலாவுக்கு வந்த பின் நீண்ட நேரம் அவர் பிரார்த்தனை செய்து அமர்ந்திருந்ததாக சோடென் மூலம் தகவல் வந்தது.


மீண்டும் ஆரம்பத்திலிருந்து லீ க்யாங் யோசிக்க ஆரம்பித்தான். மைத்ரேய புத்தர் சம்பந்தமாக மௌன லாமா ஏதோ எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உடனே தலாய் லாமாவை ஆசான் வந்து சந்திக்கிறார். இருவரும் ஏதோ ரகசியமாய் பேசி கடைசியில் இந்தியப் பிரதமரைச் சந்திக்க தலாய் லாமா முடிவெடுக்கிறார். அப்படியே இந்தியப்பிரதமரை சந்திக்கவும் செய்கிறார். அந்த சந்திப்பின் முடிவில் இந்தியப் பிரதமர் ஏதோ ஒரு ஆளின் ஃபைலை தங்கள் உளவுத்துறையில் கேட்கிறார். அது உச்ச ரகசியமான ஃபைல். இரண்டு உயர் அதிகாரிகள் சேர்ந்து திறந்தால் தான் திறக்கக்கூடிய ஃபைல்.


அது போன்ற ஃபைல்கள் ஒரு நாட்டின் மிக முக்கியமான ஒற்றர்கள் மீது இருப்பதுண்டு. சில சமயங்களில் அந்த ஒற்றர்கள் இரு நாட்டின் ஒற்றர்களாகக் கூட இருப்பதுண்டு. இன்னொரு நாட்டிற்கு ஒரு நாட்டைப் பற்றி ஒற்றுக் கொடுப்பது போல் நடித்து அந்த நாட்டின் ரகசியங்களை அறிந்து முதல் நாட்டுக்குத் தெரிவிப்பவர்கள் டபுள் ஏஜண்ட் என்று அழைக்கப்படும் இருநாட்டு ஒற்றர்கள். அந்த இன்னொரு நாட்டை நம்ப வைக்க வேண்டி நிஜமாகவே சில சில்லறை ரகசியங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த நாட்டின் நம்பிக்கையைப் பெற்ற பின் அவர்களிடமிருந்து பெரிய ரகசியங்களைக் கறந்து முதல் நாட்டிற்கு அனுப்புவார்கள். அந்த ஃபைல் ஆசாமி அந்த மாதிரி ஒற்றனாக இருக்குமோ?


லீ க்யாங் தலாய் லாமா, ஆசான் பேச்சுக்களை மறுபடி மனதில் ஓட விட்டான். அவர்கள் நேரடியாகத் தேட முடியாத ஆசாமி அல்லது வித்தியாசமான பெயர் உடைய ஆசாமி தான் அந்த ரகசிய ஃபைல் ஆசாமி என்று தோன்றியது. ஒருவேளை அவன் பெயரை மௌன லாமாவே எழுதிக் காட்டி இருக்கக்கூடுமோ? அவனுக்கும் மைத்ரேய புத்தருக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்? ஏன் இவர்கள் இவ்வளவு அவசரமாக அவனைத் தேடுகிறார்கள்? அவன் மைத்ரேய புத்தர் விவகாரத்தில் இவர்களுக்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறான்? இந்தியா எந்த அளவு இவர்களுக்கு உதவப் போகிறது?


லீ க்யாங் இதன் பதில்களை பல அனுமானங்களில் தேட ஆரம்பித்தான்.... ஆனால் அனுமானங்கள் எதுவும் அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது. ரகசிய ஃபைல் இருக்கும் அளவு அந்த மனிதன் இருக்க வேண்டுமானால் அவன் சாதாரணமானவனாக இருக்க வழியில்லை.!


”அவன் சாதாரணமானவனில்லை” என்ற அபிப்பிராயமே பிரதமரிடமும் அந்த ஃபைலைப் படித்து முடித்த பின் மிஞ்சியது. தலாய் லாமாவின் கதை ஒருவித அமானுஷ்யத் தன்மை வாய்ந்தது என்றால் பெயருக்கு ஏற்றபடி ’அவனு’ம் அமானுஷ்யமானவனாகவே தோன்றினான். பொருத்தமான ஆளைத் தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அமானுஷ்யன்!


(தொடரும்)


- என்.கணேசன்


(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க 9600123146 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.)

Monday, August 4, 2014

’ஆழ்மனம்’ நான்காம் பதிப்பும், ‘ஜாதகம்’ இரண்டாம் பதிப்பும்!


அன்பார்ந்த வாசக நண்பர்களே,


வணக்கம்.


தங்கள் அமோக ஆதரவினால் “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” நூல் நான்காம் பதிப்பும் , “ஜாதகம் பயன்படுத்துவது எப்படி?” நூல் இரண்டாம் பதிப்பும் இப்போது வெளியாகி உள்ளன.

”ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல்” ஒன்றரை வருடத்தில் நான்கு பதிப்புகள் கண்டுள்ளது. இதன் விலை ரூ.220/-


”ஜாதகம் பயன்படுத்துவது எப்படி” நூலும் ஒரு வருடத்திற்குள் இரண்டாம் பதிப்பு வெளியாகி உள்ளது. முதல் பதிப்பின் அனைத்து பிரதிகளும் இரண்டு மாதங்கள் முன்பே விற்பனையாகி இருந்த போதும் இரண்டாம் பதிப்பு தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரசுரமாக தாமதமாகி விட்டது. இதன் விலை ரூ.90/-

இந்த இரண்டு நூல்களும் தற்போது புதுப்பொலிவுடன் வந்துள்ளன.

நூல்களை வாங்கவும், தங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என அறியவும்,  பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் – 
Mobile: 9600123146
email: blackholemedia@gmail.com 


அன்புடன்


என்.கணேசன்


ப்ளாக்ஹோல் மீடியாவில் இருந்து தபாலில் நூல்கள் பெற:


தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com )மூலமோ, மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும்
blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.


எங்களது வங்கி எண்:

name: blackhole media publication ltd
indian overseas bank, current/account no:165302000000377
branch:alandur, chennai
ifsc code: ioba 0001653

மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க 9600123146

Friday, August 1, 2014

எனது நூல் “அறிவார்ந்த ஆன்மீகம்” வெளியீடு!

 
ம் ஆன்மிகச் செயல்கள் சம்பிரதாயமாகவும், எந்திரத்தனமான சடங்குகளாகவும் மாறி விட்டிருக்கின்றன. நம் முன்னோர் நம்மிடம் விட்டுப் போயிருக்கும் எத்தனையோ பேரறிவுக் களஞ்சியங்கள் நம்மில் பெரும்பாலானோருக்கு எட்டவே இல்லை. இதற்குக் காரணம் அறியாமை. ஒரு காலத்தில் புரிந்து செய்தது பின் வந்த காலங்களில் புரியாத சடங்குகளாகவும், கட்டாயமாகவும் மாறி விட்டது. ஏன் என்ற கேள்வி எழுப்பாமலேயே அப்படி ஆட்டுமந்தையாகப் பின்பற்றியதால் பின்வரும் தலைமுறையினர் கேள்வி எழுப்பினாலும் பதில் சொல்லத் தெரியாமல் போன பரிதாபநிலை உருவாகி விட்டது.

மாபெரும் ஆன்மிக உண்மைகளைப் பாமரருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தினத்தந்தியில் தொடர்ந்து ஒருவருடம் நான் எழுதி வந்த அறிவார்ந்த ஆன்மிகம் பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இந்த நூலில் இருப்பவை-

1)      ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மிகச் செயல்கள் பின்னிருக்கும் காரணங்களை அலசிய கட்டுரைகள்.

2)      நாம் பின்பற்றும் ஆன்மிகச் செயல்களின் காரணங்களை விஞ்ஞான ஆராய்ச்சிகளும் நிரூபித்த கட்டுரைகள்.

3)      இந்த மண்ணில் உதித்த சில ஞானிகள் பற்றியும் அவர்களது உபதேசங்கள் பற்றியும் விளக்கும் கட்டுரைகள்.

4)      புனித நூல்கள் மூலமாகவும், அறிவுபூர்வமாகவும், உண்மையான ஆன்மிக ஞானத்தை அலசிய கட்டுரைகள்.

ஆன்மிக உன்னதங்களின் ஆழமான அர்த்தங்களையும் பலன்களையும் 52 கட்டுரைகளில் எவருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்கும்  இந்த நூல் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய நூலாகவும், ஆன்மிக நண்பர்களுக்கு பரிசளிக்க உகந்த நூலாகவும் இருக்கும். இதன் விலை ரூ.200/-

நூலை வாங்க பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் – 

Mobile: 9600123146

email: blackholemedia@gmail.com


- என்.கணேசன்


ப்ளாக்ஹோல் மீடியாவில் இருந்து தபாலில் நூல்கள் பெற:

தங்களுக்கு தேவைப்படும் நூல்களின், மொத்த விலையை மட்டும் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். நூல்கள் கூரியர் மூலம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். (முகவரி தமிழகம், புதுவை எனில் கூரியர் செலவாக ரூ-20/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும்.) வங்கியில் பணம் செலுத்தியதும் தகவலையும், முகவரியையும், மின்னஞ்சல்( blackholemedia@gmail.com )மூலமோ, மொபைல் நம்பருக்கு( 9600123146 ) sms மூலமோ தெரியப்படுத்துதல் மிக முக்கியம்.

பிற மாநில முகவரி எனில் கூரியர் செலவாக ரூ-40/- மட்டும் சேர்த்து அனுப்ப வேண்டும். வெளிநாட்டு வாசகர்கள் கூரியர் செலவு முழுவதையும் நூல் விலையோடு சேர்த்து அனுப்ப வேண்டும். வங்கி வசதி இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் மணியாடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும்
blackhole media publication ltd என்ற பெயரில் அலுவலக முகவரிக்கு அனுப்பப்படும் காசோலை, வங்கி வரையோலை ஏற்றுக்கொள்ளப்படும்.vpp சேவை இல்லை.

வங்கி எண்:

name: blackhole media publication ltd
indian overseas bank, current/account no:165302000000377
branch:alandur, chennai
ifsc code: ioba 0001653


மேலும் விரிவான விபரங்களுக்கு தொடர்புகொள்க 9600123146