என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 28, 2025

யோகி 100


 

முக்தானந்தாவும், சித்தானந்தாவும் மாலை ஆறு மணிக்கு, அறைக்குத் திரும்பி வந்தார்கள். 6.15 முதல் 7.15 மணி வரை சத்சங்கம். ஒரு ஹாலுக்குச் சென்று அங்கே ஒரு மூத்த துறவியின் உரையைக் கேட்டார்கள். அங்கும் முக்தானந்தா அவர்களுடன் அமராமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டார். அந்த மூத்த துறவி பேசியது நன்றாக இருந்தாலும் தேவையே இல்லாமல் அவர் பிரம்மானந்தரின் பெயரை அங்கங்கே சேர்த்துப் பேசினார். அங்கிருந்து வந்த பின் எட்டு மணி வரை தியான நேரம்.  முக்தானந்தாவும், சித்தானந்தாவும் தியான விரிப்பை விரித்து அதில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்கள். ஷ்ரவனும் அப்படியே தியான விரிப்பு விரித்து அமர்ந்தான். ஆனால் அவர்கள் சொல்லித் தந்திருந்த தியானம் செய்யாமல் பரசுராமன் உபதேசித்திருந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். 

 

அவன் ஆயிரத்தெட்டு முறை ஜபித்து விட்டுக் கண் திறந்த போதும் சித்தானந்தா தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் முக்தானந்தா தியானம் செய்யாமல் அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் அவரைப் பார்ப்பது தெரிந்ததும் மறுபடியும் அவர் கண்களை மூடிக் கொண்டார்.

 

ஷ்ரவனுக்கு அந்த மனிதர் புதிராய்த் தெரிந்தார். இரவு உணவுக்கு மணி அடிக்கும் வரை அவர் கண்களைத் திறக்கவில்லை. மணி அடித்ததும் மூவரும் சாப்பிடும் ஹாலுக்குப் போனார்கள். போய் விட்டு வந்து சற்று இளைப்பாறி விட்டு உறங்கினார்கள்.

 

ஷ்ரவனுக்கு பயணம் செய்த களைப்பும் அன்று இருந்ததால் அவன் சீக்கிரமே உறங்கி விட்டான். எத்தனை நேரம் அவன் அப்படி ஆழ்ந்து உறங்கியிருப்பான் என்று அவனுக்குத் தெரியவில்லை. யாரோ பேசும் சத்தம் கேட்டு அவனுக்கு விழிப்பு வந்தது.

 

உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?” – முக்தானந்தாவின் குரல் கேட்டது. அவர் குரல் தாழ்ந்திருந்தது.

 

ஷ்ரவன் அதிர்ந்தான். ஒரேயடியாக அவனுக்கு வியர்த்தது. அவன் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது. ஆனால் நிதானத்துக்கு வர அவனுக்கு நிறைய நேரம் ஆகவில்லை.  அவன் விழித்துக் கொண்டதைச் சிறிதும்  வெளிக்காட்டாமல் அசையாமல் படுத்திருந்தான். சித்தானந்தா நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவரை இவர் குரல் எழுப்பி விடவில்லை.

 

மறுபடியும் முக்தானந்தாவின் குரல் கேட்டது. “உண்மையில் யார் நீ? எந்த நோக்கத்துக்காக இங்கே வந்திருக்கிறாய்?”

 

ஷ்ரவன் அசையவில்லை. மிக லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான். அறையில் விளக்கு அணைந்திருந்தாலும் வெளியேயிருந்து வந்த நிலா வெளிச்சத்தின் தயவால் முக்தானந்தா அவருடைய கட்டிலில் அமர்ந்திருப்பது தெரிந்தது. 

 

அவருடைய கட்டில் ஜன்னல் ஓரமாகத் தான் இருந்தது. அவருக்கு நேரெதிர் கட்டில் ஷ்ரவனுடையது. பக்கவாட்டுக் கட்டில் சித்தானந்தாவுடையது. முக்தானந்தா கால்களைத் தொங்கப் போட்டு, ஷ்ரவனைப் பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார்.  அவருக்குப் பின்னால் இருந்து நிலவொளி வந்ததால் அவருடைய முகம் அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஷ்ரவன் சிலை போல் அசைவில்லாமல் படுத்திருந்தான்.

 

முக்தானந்தா ஜன்னல் பக்கம் திரும்பினார். கால்களை மடக்கி கட்டிலில் நேராக வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

 

ஷ்ரவனுக்கு தற்போது நள்ளிரவா, அதிகாலையா என்பது தெரியவில்லை. ‘இந்த நேரத்தில் வெளியே வேடிக்கை பார்க்க என்ன இருக்கிறது? இதுவே தெருவோர ஜன்னலாக இருந்திருந்தால் போக்குவரத்து வாகனங்களையும், தெருவில் நடப்பவர்களையுமாவது பார்த்து இவர் பொழுதைப் போக்கலாம். யோகாலயத்திற்குள் இந்த நேரத்தில் வேடிக்கை பார்க்க கட்டிடங்களைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?   கண்ணன் சொன்னது போல் அல்லாமல் இரவு பத்து மணிக்கு மேலும் இங்கே ஆள் நடமாட்டமும், செயல்களும் இருக்குமோ?

 

அவர் மறுபடியும் ஏதாவது பேசுவாரோ  அல்லது கேட்பாரோ என்று ஷ்ரவன் காத்திருந்து பார்த்தான். வெளியேயும், உள்ளேயும் அமைதியே நிலவியது. சிறிது நேரத்தில் ஷரவன் மறுபடியும் உறங்கி விட்டான்.

 

மறுநாள் காலை ஐந்து மணிக்கு அடித்த மணியோசை கேட்டு தான் அவன் கண்விழித்தான். அவன் எழுந்த போது மற்ற இருவருமே விழித்திருந்தனர். முக்தானந்தா எப்போது தூங்கி எப்போது எழுந்தாரோ தெரியவில்லை. 

 

அடுத்து, தியானத்திற்கான மணியோசை அடித்து மூவரும் தியானம் செய்ய அமர்ந்தனர். ஷ்ரவன் அந்தச் சமயத்தில் தன் மந்திர ஜபத்தை முடித்து விட்டான். அதிகாலை நடைப்பயிற்சிக்கு அவன் கிளம்பிய போது சித்தானந்தாவும் அவனோடு வந்தார். அவன் முக்தானந்தாவையும்வருகிறீர்களா?” என்று கேட்ட போது அவர்  வயதாகி விட்டதால் கால்கள் ஒத்துழைப்பதில்லைஎன்று சொன்னார். ஷ்ரவனும், சித்தானந்தாவும் கிளம்பினார்கள்.

 

நடக்கையில், இப்போதும் யாராவது தன்னைப் பின் தொடர்கிறார்களா என்று ஷ்ரவன் பார்த்தான். யாரும் பின் தொடரவில்லை. அவர்கள் அவன் மீது சந்தேகம் தெளிந்து விட்டார்களா, இல்லை சித்தானந்தாவே அவருடன் அவன் பேசுவதை அவர்களிடம் போய்ச் சொல்லுவாரா என்று தெரியவில்லை.

 

அங்குள்ள மைதானம் பெரியதாக இருந்தது. மைதானத்தைச் சுற்றிலும் அழகான செடிகள் மரங்கள் இருந்தன. பல துறவிகள் அங்கே நடந்து கொண்டிருந்தார்கள். நடக்கும் போது ஷ்ரவன் சித்தானந்தாவிடம் சொன்னான். “நேற்றிரவு திடீரென்று யாரோ பேசும் சத்தம் கேட்டு கண்விழித்தேன். பார்த்தால் சுவாமி முக்தானந்தா தான் தனியாக எதோ சொல்லிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவர் என்ன பேசினார் என்பது சரியாகக் காதில் விழவில்லை. நல்ல வேளையாக நீங்கள் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தீர்கள்.”

 

சித்தானந்தா புன்னகையுடன் சொன்னார். “நானும் ஆரம்பத்தில் அவர் பேசி அப்படி கண்விழித்துக் கொண்டு தான் இருந்தேன். இப்போது பழகி விட்டதால் அது தூக்கத்தைப் பாதிப்பதில்லை.”

 

அவர் என்ன பேசுவார்?” ஷ்ரவன் தெரியாதது போல் கேட்டான்.

 

எல்லாம் தத்துவம் தான். சில சமயம் புரியும். சில சமயங்களில் தலைகால் புரியாது.”

 

ஷ்ரவன் சற்று நிம்மதி அடைந்தான். அவர் பேசியதன் அர்த்தம் இப்படியாகவும் இருக்கலாம். ’உண்மையில் யார் நீ?(உடலா, மனமா, ஆத்மாவா? எந்த நோக்கத்துக்காக இங்கே (இந்த உலகிற்கு) வந்திருக்கிறாய்?’

 

ஷ்ரவன் கேட்டான். “அவர் நீண்ட நேரம் தூங்கவில்லை போலிருக்கிறதே?”

 

அவர் எப்போது தூங்குவார் என்று பல சமயங்களில் எனக்கும் தெரிந்ததில்லை.”

 

அவர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்ததை ஷ்ரவன் சொல்லவில்லை. சித்தானந்தாவுக்கு அது தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதை ஷ்ரவன் தவிர்த்தான்.

 

சித்தானந்தா சொன்னார். ”பல சமயங்களில் அவர் பித்தர் போலவே நடந்து கொள்வார். யாரையும் பெரிதாக மதிக்க மாட்டார். நேற்று உங்களைப் பார்த்து அவர் கைகூப்பியதே எனக்கு ஆச்சரியம் தான். ஏனென்றால் நான் மூன்று வருஷங்களாய் இங்கே இருக்கிறேன். ஆனால் அவர் யாரையும் கைகூப்பி நான் பார்த்ததில்லை. நீங்கள் மரணம் விடுவிக்கும் வரை நாம் செல்வதெல்லாம் சிறைச்சாலை என்று சொன்ன தத்துவம் அவரை நிறைய கவர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்.”

 

ஷ்ரவன் ஏற்கெனவே யோகாலயத்தின் வரைபடத்தை அலசியிருக்கிறான் என்றாலும் புதிதாக வருபவன் கேட்கும் இயல்பான கேள்வியை அவரிடம் கேட்டான். “யோகிஜி எங்கே தங்கியிருக்கிறார் சுவாமிஜி?”

 

சித்தானந்தா விரிவாகவே பதில் சொன்னார். “நாம் தங்கியிருக்கும் இந்தக் கட்டிடம் தாண்டி சாப்பாட்டு அறை இருக்கிறது அல்லவா? அதையும் தாண்டி இருக்கும் பெரிய கட்டிடம் பெண் துறவிகள் தங்கியிருக்கும் கட்டிடம். வலதுபுறமிருக்கும் இந்த மூன்று கட்டிடங்களுக்கு எதிரில், அதாவது இடப்புறம் இருப்பது முதலில் நூலகம், இரண்டாவது அலுவலக அறை, மூன்றாவது மேலாளர் பாண்டியன் இருப்பிடம்+அலுவலகம், அதற்கு அடுத்தது யோகிஜியின் இருப்பிடம். இடது புறம் யோகிஜியின் இருப்பிடம் தாண்டி விருந்தினர் தங்குமிடமும், அதையும் தாண்டி சில ஹால்களும் இருக்கின்றன. வலது புறம் பெண் துறவியர்கள் தங்கும் கட்டிடம் தாண்டி, ஒரு சிறிய ஆஸ்பத்திரி, ஒரு சிறிய மைதானம், அதையும் தாண்டி வெளிநாட்டிலிருந்து வந்து துறவியானவர்கள் தங்கியிருக்கும் கட்டிடமும் இருக்கின்றது

 


அவன் மிகக்கூர்மையாக அந்தச் சூழலை கவனித்துக் கொண்டே நடந்ததால் அவன் அவரிடம் தொடர்ந்து பேசவில்லை. கவனத்தில் பதித்துக் கொள்ள முக்கிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன


(தொடரும்) 

என்.கணேசன்





என்.கணேசனின் நூல்கள் வேண்டுபவர்கள் 94863 09351 எண் வாட்சப்பில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.


Thursday, April 24, 2025

சாணக்கியன் 158

 

பின்னாலிருந்து ஆரவாரத்துடன் வரும் பெரும்படையைத் திகைப்புடன் பர்வதராஜனும், பிரமிப்புடன் மலைகேதுவும் பார்த்தார்கள். சந்திரகுப்தனும் சாணக்கியரும் தங்கள் கூடுதல் படை வந்த பின்னும் தங்கள் வேடங்களைக் கலைத்துக் கொண்டு வெளிப்படவில்லை. அவர்களது படைத் தலைவர்களும், அடையாளம் அறிந்திருந்த முக்கியஸ்தர்களும் கூட முன்பே அவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளைப்படி அமைதியாக இருந்தார்கள். இது பர்வதராஜனை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இப்படி பலபேர் அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை ரகசியம் என்று சொல்லியே அவனை சாணக்கியர் முட்டாளாக்கி விட்டார் என்று நினைத்தான்.

 

தந்தையின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் மலைகேது உற்சாகத்துடன் சொன்னான். “அருமையான திட்டமிது தந்தையே. தனநந்தனும், ராக்‌ஷசரும் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.”

 

பர்வதராஜன் மகனைக் கடிந்து கொண்டான். “முட்டாளே இதை நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனநந்தனையும், ராக்‌ஷசரையும் மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து இவர்கள் முட்டாளாக்கி விட்டிருக்கிறார்கள். அது புரியாமல் நீ இவர்களைச் சிலாகித்துப் பேசுகிறாய்.”

 

“இதனால் நமக்கு என்ன பிரச்சினை தந்தையே?”

 

மகனே சிறுபடையுடன் நாம் பாதி வழியிலிருந்து இங்கே கிளம்பிய போது நம் படையும், சந்திரகுப்தன் படையும் சரிபாதியாக இருந்தன. அதனால் நான் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போது கூடுதலாக அவர்களது பெரும்படை அவர்களுடன் இங்கு வந்து சேர்ந்து விட்டதுஇப்போது கணக்கிட்டால் நம் படையினர் இதில் மிக மிகக் குறைவாகி விட்டார்கள். நம் மீதிப்படையினர் சிராவஸ்தி அருகில் இருக்கிறார்கள். அது உடனடியாக இங்கே அவர்கள் வந்து சேர முடியாத தூரம். இப்போது பாடலிபுத்திரத்தை முற்றுகை இட்டு வெற்றி பெற்று நாம் உள்ளே நுழைந்தால் யார் கை ஓங்கி இருக்கும் என்று நினைக்கிறாய்? ஆச்சாரியர் தான் அனைத்தையும் முடிவு செய்கிற மாதிரி இருக்கும். ஏனென்றால் இப்போது இங்கே அவர்கள் படைகள் தான் அதிகம். அவர் கட்டளைகள் தான் நிறைவேற்றப்படும். நாம் பகிரங்கமாக அவர்களை எதிர்க்க முடியாது....”


“ஆனால் வென்றதில் சரிபாதியை நீங்கள் சாமர்த்தியமாகக் கேட்டு அவரிடம் ஒப்புதல் வாங்கியிருக்கிறீர்கள் அல்லவா தந்தையே. அதை அவர் மறுக்க முடியாதே”

 

“மகனே நேர்வழியை மட்டும் பின்பற்றுபவர்களிடம் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் ஆச்சாரியர் வெற்றியடைய எந்த வழியைப் பின்பற்றவும் யோசிக்காதவர். அதனால் அவரிடம் மிகவும் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டியிருக்கிறது.”

 

“அப்படியானால் நாம் என்ன செய்வது தந்தையே?” மலைகேது கவலையுடன் கேட்டான்.

 

“பொறுத்திருந்து பார்ப்போம். அவர் தன் சாமர்த்தியத்தை நம்மிடம் காட்ட முற்பட்டால் நாம் அதிசாமர்த்தியத்தை அவரிடம் காட்ட வேண்டியது தான்.“

 

வசர ஆலோசனைக்கூட்டத்தில் கூடியிருந்த அனைவர் முகத்திலும் கவலை தெரிந்தது.  சுதானுவும் பத்ரசாலும் கூட முற்றுகை நடக்கும் என்பதை முன்பே எதிர்பார்த்திருந்தாலும் இப்படி ஒரு பெரும்படை பாடலிபுத்திரத்தை முற்றுகையிடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.  உள்ளே அவர்கள் திட்டம் வெற்றியடைந்தாலும் கூட அதன் பின் வெளியே முற்றுகை இட்டிருக்கும் எதிரிகளைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனென்றால் சில நாட்களுக்கு முன் தான் கலிங்கத்தின் எல்லைக்கும், சிராவஸ்திக்கும் கணிசமான படைகளை அனுப்பியிருக்கிறார்கள். அதனால் இங்கிருக்கும் படைவலிமை இப்போது சற்று குறைவு தான்...

 

எல்லோரையும் விட அதிர்ந்து போயிருந்தவன் தனநந்தன் தான். சாணக்கின் மகன், தந்தையை இழந்த பின் மகதத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போனவன், எங்கோ சாதாரண ஆசிரியர் பணியில் இருந்தவன், ஒரு காலத்தில் உதவி கேட்டு ஓடி வந்து இங்கு அரசவையிலிருந்து வெளியே வீசப்பட்டவன், இன்று  வாமனன் விஸ்வரூபம் எடுத்தது போல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான். அதை எண்ணுகையில் அவனுக்குத் தாங்க முடியவில்லை. எப்போதும் நிதானமும் அமைதியும் இழக்காத ராக்‌ஷசர் முகத்தில் கூடக் கவலை தெரிகிறது. ஒவ்வொரு முறை கேட்ட போதும் எதிரிகளை மிகச் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று சொல்லி வந்த பத்ரசால் கூட இப்போது அந்த அளவு நம்பிக்கையுடன் தெரியவில்லை.

 

தனநந்தன் கோபத்தில் குரல் நடுங்க கேட்டான். “அப்படியானால் அந்த மடல் நம்மைத் திசை திருப்ப நமக்குத் தரப்பட்டதா?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “இப்போது யோசிக்கையில் அப்படித் தான் தெரிகிறது. கலிங்கமும் நம்மிடம் போர் தொடுக்கும் உத்தேசத்தில் இருந்திருக்க வழியில்லை. நாம் பெரிய படைகளை அவர்கள் எல்லைக்கு அனுப்பியதால் தற்காப்பு நடவடிக்கையாகத் தான் அவர்களும் எல்லையில் படைகளை குவித்திருக்கிறார்கள் போல் இருக்கிறது.”

 

தனநந்தன் கேட்டான். “கலிங்க எல்லைக்கும், சிராவஸ்திக்கும் சமீபத்தில் அனுப்பிய படைகளை நாம் திருப்பி வரவழைக்க முடியாதா.... ?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “முடியும். ஆனால் கண்டிப்பாக காலதாமதம் ஆகும். பின் இன்னொரு பிரச்னை இருக்கிறது. நாம் கலிங்க எல்லையிலிருந்து படைகளை வரவழைத்துக் கொண்ட பிறகு கலிங்கமும் தன் படைகளை பின்வாங்கிக் கொள்ளும் என்று சொல்லி விட முடியாது. நம் பலவீனமான நிலைமையைப் புரிந்து கொண்டு ‘வந்தது தான் வந்தோம், சில பகுதிகளையாவது ஆக்கிரமித்து எடுத்துக் கொண்டால் என்ன?’ என்று அவர்கள் நினைத்தால் நமக்குப் பிரச்சினை ஆகிவிடும்... சிராவஸ்திக்கு அனுப்பியதையும் திருப்பி வரவழைப்பதில் பிரச்சினை இல்லாமல் இல்லை. சந்திரகுப்தனின், பெரும்படையும் அங்கே சென்றிருக்கிறது... சமீபத்தில் அனுப்பியுள்ள நம் படை போகா விட்டால் அங்கு நம் நிலைமையும் பலவீனமாகவே இருக்கும்...”

 

தனநந்தன் கோபத்தில் கொதித்தான். நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகி விட்டதே. மிகப்பெரிய படைகள் இருந்தும் இருப்பதைப் பல இடங்களுக்குப் பிரித்து இங்கே பலவீனமாக இருக்கும்படியான ஒரு நிலைமைக்குச் சாமர்த்தியமாகத் தள்ளி விட்டானே சாணக்கின் மகன்....

 

ராக்ஷசர் இன்னொரு விஷயத்தை வாய்விட்டுச் சொல்லவில்லை. குதிரைகள் மாற்றப்பட்டதன் பாதிப்பையும், ஆயுதங்களின் குறைபாடுகளின் பாதிப்பையும் கூட அவர்கள் படைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒற்றர்கள் தெரிவித்திருந்த தகவலை அவர் தெரிவித்து எந்தப் பலனும் இல்லை என்று நினைத்தார். ஆனால்  மெல்ல தன் மனதில் எழுந்த பலத்த சந்தேகத்தை அடுத்ததாகச் சொன்னார். ”இங்கே வந்திருக்கும் பெரும்படையை பர்வதராஜன் தலைமையில் அனுப்பி விட்டு சந்திரகுப்தனும் விஷ்ணுகுப்தரும் தொலைவில் இருக்கும் முட்டாள்தனத்தைச் செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வெளிப்படாவிட்டாலும் இருவரும் முற்றுகை இட்ட கூட்டத்திலேயே இருக்க வேண்டும் என்று என் உள்மனது சொல்கிறது....”


அந்தச் செய்தி அங்கே பேரிடியாக விழுந்திருக்கிறது என்பது தொடர்ந்து நிலவிய பலத்த மௌனத்திலிருந்து வெளிப்பட தனநந்தன் அதை உணர்ந்து கொதித்தான். யாராவது எதாவது தைரியமான வார்த்தைகளைச் சொல்ல மாட்டார்களா என்று அவன் எதிர்பார்த்தான். சுதானு தன் தந்தையின் பார்வையிலிருந்து அதை உணர்ந்து உடனே சொன்னான். “நல்லது. நம் பிரதான எதிரிகளைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. அவர்களாகவே நம் வாசல் வரை வந்திருந்தார்களானால் நாம் தக்க பதிலடி தருவோம். இப்போதைய நம் படை பலத்தை வைத்தே நாம் நிறைய நாட்கள் உள்ளே தாக்குப் பிடிக்க முடியும். சேனாதிபதி சிராவஸ்திக்குப் போவதைத் தள்ளிப் போட்டதும் மிக நல்லதாகப் போய் விட்டது. அரண்மனையில் உள்ளவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். தலைநகரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை சேனாதிபதி ஏற்றுக் கொள்ளட்டும்.  உள்ளிருந்தபடியே எதிரிகளைத் தாக்கும் உபாயங்களை யோசித்து செயல்படுத்தும் வேலையை சுகேஷும் பிரதம அமைச்சரும் ஏற்றுக் கொள்ளட்டும். என்ன சொல்கிறீர்கள்?”

 

ராக்‌ஷசர் தனநந்தனைப் பார்த்தார். அவனுக்கும் செயலற்று இருப்பதை விட இருக்கும் பொறுப்புகளைப் பிரித்து எடுத்துக் கொண்டு ஆக வேண்டியதை யோசிக்கும் மகனின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது. ”அப்படியே ஆகட்டும்” என்றான்.

 

ராக்‌ஷசருக்கு சுதானு சொன்னதில் எந்தத் தவறும் காண முடியாவிட்டாலும் ஏதோ ஒரு ஆபத்தை அவர் கூடுதலாக உணர்ந்தார். அதை அவரால் இன்னதென்று குறிப்பாகச் சொல்ல முடியாததால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.

 

ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின் சுதானு பத்ரசாலை தனியே அழைத்துச் சொன்னான். ”சேனாதிபதி நாளை ஏகாதசி. நாம் செயல்பட வேண்டிய நாள். நாளை இரவுக்குள் நாம் நம் தடைகளை நீக்கி விட்டால் தான் மகான் சொன்னது பலிக்கும். முதலில் நாம் நமக்கு மிக நம்பிக்கையான ஆட்களையும், அறிவுகூர்மையான ஆட்களையும் தேர்ந்தெடுத்து நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்....”

 

பத்ரசாலுக்கு சுதானு சொன்னதைக் கேட்டவுடனே சின்ஹரன் தான் நினைவுக்கு வந்தான். இந்தச் சிக்கலான சமயத்தில் அவனைப் போன்ற ஒருவன் உதவி இருந்தால் எதையும் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் மெல்லச் சொன்னான். ”இளவரசே. நீங்கள் சொன்னபடியான ஒரு ஆளை எனக்குத் தெரியும். அவன் ஒரு வணிகன். வெளி தேசத்தவன். மிகவும் புத்திசாலி. உங்கள் மகானின் பக்தனும் கூட. எனக்கு இதற்கு முன் பல முறை உதவியிருக்கிறான். அவன் இப்போது பாடலிபுத்திரத்தில் தான் இருக்கிறான். அவன் உதவியை நாடினால் நமக்கு புத்திசாலித்தனமான ஆலோசனைகள் சொல்வான்.  கேட்போமா?”

 

சுதானுவுக்கு அந்த ஆள் மகானின் பக்தன், மிகவும் புத்திசாலி என்ற இரண்டு தகுதிகளுமே அப்போது போதுமானதாக இருந்தன. ஆனாலும் சிறிது சந்தேகத்துடன் கேட்டான். “அவன் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட மாட்டானே”

 

“மாட்டான் இளவரசே. சொல்லப் போனால் மகான் பற்றிக் கனவு வந்த பின் உங்களிடம் சொல்வதற்கு முன்பாக நான் முதலில் சொன்னதே அவனிடம் தான். அவன் தான் உங்களிடம் சொல்ல என்னை வற்புறுத்தியவன்.”

 

அதற்கு மேல் சுதானு யோசிக்கவில்லை. ”இன்றிரவே ரகசியமாய் அவனை அழைத்து வாருங்கள் சேனாதிபதி.” என்றான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





Wednesday, April 23, 2025

Monday, April 21, 2025

யோகி 99

 


ன்று யோகாலயத்தில் துறவு மேற்கொள்ள, ஷ்ரவனைத் தவிர, வேறொரு நடுத்தர வயதுப் பெண்மணியும் வந்திருந்தாள்.  ஷ்ரவனும் அவளும் முதலில் தியான வகுப்பறையில் அமர்த்தப்பட்டார்கள். கண்ணன் தான் யோகாலயத்தில் துறவு விதிகளை அவர்களிடம் விளக்குவதற்காக வந்தார். ஷ்ரவனைப் பார்த்து அவர் மெலிதாய் புன்னகைத்து விட்டு முக்கிய விதிகளை இருவருக்கும் சொல்ல ஆரம்பித்தார்.

 

துறவறம் பூண்டவர்கள் பழையபடி தங்களுடைய குடும்பத்துடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. யோகாலயத்தில் தனிப்பட்ட முறையில் கைபேசி, கணினி ஆகியவற்றை வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை. காவி உடைகளை மட்டுமே அணிய வேண்டும். மற்ற ஆசிரமங்களைப் போல் அங்கு மொட்டை அடித்துக் கொள்வது கட்டாயமில்லை. விருப்பமிருப்பவர்கள் மொட்டை அடித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தலைமுடியை யோகாலயம் நிர்ணயிக்கும் அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். ஆண்களின் தலை முடி ஒரு செண்டிமீட்டர் அளவுக்கு மேலிருக்கக்கூடாது. பெண்களுக்குக் கூந்தல் ஒரு அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அவர்கள் அதை எப்போதும் கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும். நெற்றியில் எப்பொழுதும் திருநீறு இருக்க வேண்டும். எப்போதும் எந்த விதமான ஒப்பனைக்கும் அங்கே அனுமதியில்லை.  காவி உடைகளும் மூன்று மட்டுமே துறவிகளுக்குத் தரப்படும். அவரவர் உடைகளை அவரவரே துவைத்துக் கொள்ள வேண்டும்.

 

அறையின் அளவுக்குத் தகுந்தபடி மூன்று முதல் ஐந்து துறவிகள் வரை தங்க வேண்டியிருக்கும். அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுவது முதல் இரவு பத்து மணிக்கு உறங்கும் வரை தியானம், உணவு, வேலைகள் தரப்பட்டிருக்கும் நேரத்தில் ஒழுங்குமுறையுடன் செய்யப்பட வேண்டும். ஆண் துறவிகள், பெண் துறவிகள் தங்குமிடங்கள் தனித் தனி கட்டிடங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்குள்ளவர் அங்கும், அங்குள்ளவர் இங்கும் செல்ல அனுமதியில்லை. இரவு நேரங்களில் 10 மணிக்குப் பின் யாரும் தங்குமிடத்தை விட்டு வெளியே வந்து உலாவ அனுமதியில்லை....

 

அவர் சொல்லி விட்டு விண்ணப்பப் படிவத்தையும் தந்தார். அதிலும் அவர் சொன்ன விதிமுறைகள் இருந்தன. அதனுடன் வேறுசில விதிமுறைகளும் இருந்தன. அதற்குச் சம்மதித்துக் கையெழுத்திட்டுத் தந்த பின்பே இருவரும் முதல் பகுதியைத் தாண்டி இரண்டாம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

அதன் பின் அந்தப் பெண் துறவி வேறு பக்கமும், ஷ்ரவன் வேறு பக்கமும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஷ்ரவன் தலைமுடி வெட்டி குளித்து விட்டு வந்த போது மூன்று காவி ஆடைகள் அவனுக்குத் தரப்பட்டன. பின் அவனுக்குத் துறவற தீட்சை வேறொரு வயதான துறவியால் தரப்பட்டது. இனி அவன் ஷ்ரவனானந்தா என்றழைக்கப்படுவான் என்று சொல்லப்பட்டது. பின் அவன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றான். அது மூன்று துறவிகள் தங்கும் சிறிய அறை. அந்த அறையில் ஏற்கெனவே ஒரு நடுத்தர வயதுத் துறவியும், ஒரு வயதான துறவியும் இருந்தார்கள்.

 

நடுத்தர வயதுத் துறவி தன்னை சித்தானந்தா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு,  அந்த முதியவரை முக்தானந்தா என்று  தானே அறிமுகப்படுத்தி வைத்தார்.

 

ஷ்ரவன் கைகூப்பினான். சித்தானந்தாவும் கைகூப்பினார். ஆனால் முக்தானந்தா அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாரேயொழிய கைகூப்பவில்லை.

 

பின் வறண்ட குரலில் அவர் சொன்னார். “ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு வந்திருக்கிறாய், அவ்வளவு தான்.”

 

ஷ்ரவன் திகைப்புடன் அவரைப் பார்த்தான். சித்தானந்தா புன்னகையுடன் சொன்னார். “அவர் நிறைய தத்துவம் பேசக்கூடியவர்.”

 

ஷ்ரவனும் புன்னகைத்து விட்டு முக்தானந்தாவைப் பார்த்து சொன்னான். “மரணம் விடுவிக்கும் வரை நாம் செல்லும் இடங்கள் அனைத்துமே சிறைகள் தானே சுவாமிஜி?”

 

உண்மைஎன்றபடி முக்தானந்தா கைகூப்பினார்.

 

ஷ்ரவனுக்கு ஒரு அலமாரியும், ஒரு கட்டிலும் ஒதுக்கப்பட்டிருந்தன.  அந்த அலமாரியில் ஒரு எவர்சில்வர் உணவுத்தட்டு, ஒரு சிறிய சொம்பு தியான விரிப்பு, ஒரு தலையணை, ஒரு போர்வை ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.

 

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் ஒருவரில் யாராவது ஒருவர் ஒற்றராகவும் இருக்கலாம் என்பதால் யோகி பிரம்மானந்தரால் பெரிதும் கவரப்பட்டு துறவறம் பூண்டு இங்கு வந்திருப்பதாகவும், அவர்         நிழலில் வாழ்ந்து மெய்ஞானம் பெறுவதே தன்னுடைய ஒரே இலக்கு என்றும் ஷ்ரவன் சொன்னான்.  சித்தானந்தா அவனைப் பெருமையுடன் பார்த்தாலும், முக்தானந்தாவின் முகத்தில் சந்தேகம் தான் தெரிந்தது. 

 

ஒரு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. சித்தானந்தா சொன்னார். “இது உணவுக்கான மணி. வாருங்கள் போவோம். உங்கள் தட்டையும், சொம்பையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

 

அவர் சொன்னபடி தட்டையும் சிறிய சொம்பையும் எடுத்துக் கொண்டு ஷ்ரவன் அவருடன் கிளம்பினான். முக்தானந்தாவும் பின்னாலேயே வந்தார். ஆனால் அவர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவில்லை. 

 

சாப்பிடும் அறையில் நிறைய ஆண் துறவிகள் இருந்தார்கள். பெண் துறவிகளுக்கு அதே அறையில் அரை மணி நேரம் கழித்து உணவு வழங்கப்படும் என்று சித்தானந்தா சொன்னார். அதற்குள் ஆண் துறவிகள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து போய் விட வேண்டும் என்றும், அந்த நேரத்தில் வந்து போக முடியா விட்டால் அடுத்த வேளை உணவுக்குத் தான் வர வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்.

 

அங்கு எளிமையான உணவு தரப்பட்டது. வரிசையில் நின்று உணவு வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டார்கள். அந்த சாப்பாட்டு அறையில் உணவு பரிமாறிய இரண்டு ஆட்களும் துறவிகளைக் கண்காணிப்பவர்கள் என்பதை முதல் பார்வையிலேயே ஷ்ரவன் யூகித்தான். சாப்பிடும் போதும் முக்தானந்தா அவர்களுடன் சேர்ந்து அமராமல் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டார். அங்கிருந்த மற்ற துறவிகளும் தங்களுக்குள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக் கொள்ளவில்லை. புதியவனான அவனைப் பார்த்து இரண்டு துறவிகள் மட்டும் புன்னகைத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர்களும் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேசிக் கொள்வதை உணவு பரிமாறுபவர்கள் கூர்ந்து கவனிப்பது தெரிந்தது.

 

சாப்பிட்ட பின் தட்டுகளை அவரவரே அலம்பிக் கொண்டு வந்தனர். கடிகாரத்தைப் பார்த்து சிலர் வேகமாகச் சாப்பிட்டார்கள். அடுத்த மணி அடிப்பதற்குள் அவர்கள் அனைவரும் வெளியே வந்தாகி விட்டது. ஷ்ரவன், சித்தானந்தா இருவரும் சாப்பிட்டு வெளியே வருவதற்கு முன்பே முக்தானந்தா அறைக்குப் போய் விட்டார்.

 

திரும்பி வரும் போது ஷ்ரவன் சித்தானந்தாவிடம் கேட்டான். “சுவாமி முக்தானந்தா அதிகம் பேச மாட்டாரோ?”

 

சித்தானந்தா சொன்னார். “அவர் பேசுவது குறைவு. ஆனால் சில சமயங்களில் தனக்குத் தானே பேசிக் கொள்வார்.”

 

இங்கே மற்ற துறவிகளும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதைக் கவனித்தேன்என்றான் ஷ்ரவன்.

 

அதிகம் பேசுவதை இங்கே ஊக்குவிப்பதில்லை. நீங்கள் ஒருவருக்கொருவரே பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்குள் இருந்து வரும் குரலை உங்களால் எப்படிக் கேட்க முடியும் என்று யோகிஜி கேட்பார்.”

 

ஷ்ரவன்அதுவும் சரி தான்என்று சொன்னான்.

 

மதிய சாப்பாடு முடிந்து அரை மணி நேரம் இளைப்பாறிய பிறகு சித்தானந்தாவும், முக்தானந்தாவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார்கள். முக்தானந்தாவுக்குக் காய்கறிகள் நறுக்கும் வேலையும், சித்தானந்தாவுக்கு யோகாலயத்தின் ஹால்களைச் சுத்தம் செய்யும் வேலையும் ஒதுக்கப்பட்டு இருந்தன.

 

ஷ்ரவன் சொன்னான். “எனக்கு எந்த வேலையென்று அவர்கள் சொல்லவில்லையே

 

சித்தானந்தா சொன்னார். “நாளை உங்களிடம் பேசிவிட்டு முடிவு செய்து சொல்வார்கள். இன்று உங்களுக்கு ஓய்வு தான்.”

 

அவர்கள் போய் விட்டார்கள். அவர்கள் போய் சிறிது நேரத்தில் கண்ணன் வந்தார். சினேகத்துடன் அவனை நலம் விசாரித்தார். அவரும், நாளை அவனுக்கு வேலை ஒதுக்கப்படும் என்றும், காலை உணவு சாப்பிட்டு முடித்த பிறகு அலுவலக அறைக்கு வரும்படியும் சொன்னார். பின் புன்னகையுடன் கேட்டார். “இங்கிருந்து போன பின்னும் உங்களுக்கு மனக்காட்சியில் ஓநாயும், அந்த இளைஞனும் வந்தார்களா?”

 

இல்லை சுவாமிஜி. அது தான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. சில நாட்கள் நான் வேண்டுமென்றே ஓநாயையும், அந்த இளைஞனையும் நினைத்தபடியே இருந்திருக்கிறேன். அப்படி இருந்தும் காட்சியில் வரவில்லை. யோகிஜியின் அனுக்கிரகம் என்றே நான் அதை நினைக்கிறேன்.”

 

அவர் தலையசைத்தார். பின் சொன்னார். “இங்கே யாரும் அவர்கள் இருக்கும் இடம், வேலை செய்யும் இடம் தவிர மற்ற இடங்களுக்குப் போய் வருவதற்கு அனுமதி கிடையாது. யோகிஜி துறவு என்பதே உடலும் மனதும் அலைவதை நிறுத்துவது தான் என்று சொல்வார்.”

 

ஷ்ரவன் சொன்னான். “அவர் சொல்வது சரிதான் சுவாமிஜி. கண்டிப்பாக நான் இங்குள்ள விதிகளை மீற மாட்டேன்.”

 

கண்ணன் திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தார். சென்று பாண்டியனிடம் அனைத்தையும் சொன்னார். பாண்டியன் கேட்டார். ”அவன் அறையில கூட இருக்கற வேற ரெண்டு பேர் யார் யார்?”

 

முக்தானந்தாவும், சித்தானந்தாவும்

 

முக்தானந்தா அங்கே தான் இருக்காரா?” என்று கேட்ட பாண்டியனுக்கு அந்தத் தகவல் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.


(தொடரும்)

என்.கணேசன்