சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 3, 2025

சாணக்கியன் 155

 

ந்த மடலில் முத்திரை இல்லை. அனுப்பியவர் பெயர் இல்லை. யாருக்கு அனுப்பப்பட்டது என்பதும் இல்லை. மடலில் யாருடைய பெயரும் இல்லை. பயன்படுத்தப்பட்ட  எல்லாச் சொற்களும் பொதுவானவை.  இக்கடிதம் தவறி யாராவது கையில் கிடைத்து அவர்கள் படித்தாலும் தலைகால் புரியாது. இந்த சாமர்த்தியத்தைப் பார்க்கையில் விஷ்ணுகுப்தரின் பாணியே தெரிந்தது. ஆனால் ராக்ஷசர் உடனடியாக எந்த முடிவையும் எட்ட விரும்பவில்லை. அனுப்பியது விஷ்ணுகுப்தர் என்றால் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் அவர் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினார். ஒற்றனை விசாரித்த போது நேபாள மன்னன் அங்கிருந்து மேற்கில் இரண்டு யோஜனை தூரத்திலும், குலு மன்னன் கிழக்கில் ஒரு யோஜனை தூரத்திலும் படைகளுடன் முகாமிட்டு இருப்பதாகச் சொன்னான். இருவரில் யாருக்காகவும் இருக்கலாம்.

 

ஒற்றனை அனுப்பி விட்டு ராக்ஷசர் ஆழ்ந்து யோசித்தார். இந்த மடலில் எதிரி என்று குறிப்பிடுவது மகதத்தைத் தான் என்பது தெளிவாகத் தெரிந்ததால் மற்றதை எல்லாம் யூகிப்பது சிரமமாக இருக்கவில்லை. ’தென்கிழக்கு தேச மன்னனுடனான நம் ரகசியப் பேச்சு சுமுகமாக முடிந்ததுஎன்ற செய்தி தான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மகதத்தின் தென்கிழக்கு தேசம் கலிங்கம் தான். கலிங்க மன்னன் கூடுதல் தலைவலியாவான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக அவன் படையெடுத்து வரும் சாத்தியம் இல்லை. மகதம் அவனுக்குத் தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்ட முடியும். ஆனால் மகதம் மற்ற திசைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது கலிங்கத்தின் படையெடுப்பும் சேர்ந்து கொள்வது பிரச்சினையே.

 

யோசிக்க யோசிக்க விஷ்ணுகுப்தரின் திட்டம் மிகவும் தந்திரமானதாகத் தான் அவருக்குத் தோன்றியது. மகதத்தின் விரிந்த பரப்பு ஒருவிதத்தில் மிகவும் சாதகமானதாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் பலவீனமே. பல பக்கங்களில் தாக்குதல் வருமானால் படைகளைப் பிரித்து நீண்ட தூரங்களுக்கு அனுப்பும் சூழல் உருவாகும். எத்தனை பெரிய படைபலம் இருந்தாலும் பிரித்துப் பிரித்துப் பல பக்கங்களுக்கு அனுப்புகையில் வலிமை குறைந்து போவது இயல்பே. அதை எதிர்பார்த்து தான் ஆச்சாரியர் கலிங்க அரசனையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இது ராக்‌ஷசர் சிறிதும் எதிர்பார்த்திராத புதிய சிக்கல்.

 

அவர்கள் திட்டப்படி அவரவருக்குச் சொல்லியிருக்கும் பகுதிகளைத் தாக்குதல் செய்வதென்று சொல்வதில் அந்தப் பகுதிகளின் விவரங்கள் இல்லை. ஆனால் நாள் எது என்று தீர்மானமாகத் தெரிகிறது.  திரையோதசியிலிருந்து பௌர்ணமிக்கு மாற்றியிருக்கிறார்கள். தலைநகரைத் தாக்க வருவது போல் நாடகம் நடிக்கவிருப்பதும் நல்ல வியூகமே…

 

ராக்‌ஷசர் அன்றே அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டினார். மறைமுகமாகக் குறிப்பிட்ட விஷயங்களை விளக்கவும் செய்தார். தனநந்தன் அவர் விளக்க விளக்க கோபத்தில் உடல்நடுங்கினான். சாணக்கின் மகனின் திட்டங்கள் அவனுக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தின. தனக்கு எதிராக கலிங்க மன்னனையும் இப்போரில் இழுத்து விட்டது அவனைப் பெரிதும் பாதித்தது.   

 

ராக்‌ஷசர் அவனை அமைதிப்படுத்துவது போலச் சொன்னார். “அவர்கள் ஒரு திட்டம் தீட்டினால் நாம் பதிலுக்கு ஒரு தீட்டம் தீட்டுவோம் அரசே. அவர்களுக்குப் பதிலடி தருவது நம் தலையாய கடமையாகிறது. அதனால் நாம் அமைதியிழக்க வேண்டியதில்லை…”

 

தனநந்தன் சிறிது அமைதியடைந்தான். ராக்‌ஷசர் பத்ரசாலையும் சுதானுவையும் கூர்ந்து பார்த்தார். சுதானு ஏதோ மனக்கணக்கு போட்டபடி யோசிப்பது தெரிந்தது. பத்ரசால் சொன்னான். “இப்போதைக்கு நாம் வடக்கிலும் மேற்கிலும் அனுப்பியுள்ள படைகள் எதிரிகள் அனுப்பியிருக்கிற படைகளைச் சமாளிக்க போதுமானது. ஆனால் சந்திரகுப்தனும் படையுடன் வந்து சேர்ந்து கொள்வான் என்ற நிலை இருந்தால் நாம் கூடுதலாகப் படை அனுப்புவது நல்லது என்று தோன்றுகிறது.”  

 

ராக்‌ஷசர் அவன் பதிலில் திருப்தியடைந்தார். அவன் கணக்கிடுவது சரியாகவே இருக்கிறது. அவன் எதிரியுடன் கைகோர்த்திருந்தால் சிறிதாவது குட்டையைக் குழப்பிவிடப் பார்த்திருப்பான். அவன் முகத்திலும், பேச்சிலும் ஏதாவது அவனைக் காட்டிக் கொடுத்திருக்கும். ஆக இவன் திருடனாக இருந்தாலும் தெரிந்து எதிரியுடன் கைகோர்த்த திருடனாக இருக்க வாய்ப்பு குறைவு. எதிரி என்று தெரியாமலேயே திருடிக் கொடுத்திருப்பான். சுதானுவை அவர் பார்த்தார். அவன் இப்போதும் ஏதோ மனக்கணக்கிலேயே இருப்பது தெரிந்தது.

 

ராக்‌ஷசர் சொன்னார். ’’இந்த மடலே ஒரு கபட நாடகமாக இருப்பதற்கும் வழியிருக்கிறது என்ற சந்தேகமும் எனக்கு வராமல் இல்லை. நம்மைத் திசை திருப்ப விஷ்ணுகுப்தர் செய்த சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம்.”

 

சுகேஷ் கேட்டான். “அப்படியானால் நாம் என்ன செய்வது? இப்போது தெரிந்த தகவலின் அடிப்படையில் நம் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாமா இல்லை பழைய திட்டங்களிலேயே தங்குவோமா?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “முழுவதுமாக இந்த மடலை அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. நம்பி விடவும் முடியாது என்கிற நிலைமையில் தான் நாமிருக்கிறோம். நம் படை வலிமை இங்கும் நன்றாகவே இருப்பதால் நாம் தெற்கிலும் படைகளை அனுப்பி தென் எல்லையைப் பலப்படுத்தி விட முடியும்”

 

பத்ரசால் சொன்னான். “தெற்கில் படைகளை அனுப்பினாலும் தலைநகரையும் காத்துக் கொள்ள முடியும். ஆனால் சந்திரகுப்தன் வருகிறான் என்று மறுபடி வடக்கு திசைக்குக் கூடுதல் படைகள் அனுப்பினால் இங்கு சற்று பலம் குறைந்து விடும் என்றே தோன்றுகிறது.”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார். “உண்மை சேனாதிபதி. ஆக சந்திரகுப்தன் வடக்கில் தாக்க வரப் போவது உண்மை தானா இல்லை இந்த மடல் ஒரு சதியாக இருந்து அவன் இங்கேயே தாக்க வரப் போகிறானா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி தான் இருக்கிறது.”

 

சுதானு யோசனையுடன் கேட்டான். “என்ன வழி?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “எங்கே படைகள் வருகின்றன, போகின்றன என்று நாம் கவனிப்பதை விட சந்திரகுப்தன் எங்கே போகிறான், எங்கே வருகிறான் என்று கவனிப்பது நாம் முடிவெடுக்க சரியாக இருக்கும். அவனிருக்கும் இடத்தில் தான் விஷ்ணுகுப்தரும் இருப்பார் என்கிறார்கள். அவர்கள் இருவரும் எங்கே வருகிறார்கள் என்பதை நம் ஒற்றர்கள் சரியாக கவனித்து வந்து சொன்னால் அதற்கேற்ற மாதிரி நாம் படைகளை நகர்த்துவது சரியாக இருக்கும்”

 

தனநந்தன் கேட்டான். “அது தெரிந்து நாம் துரிதமாக அதற்கேற்றாற் போல் படைகளை நகர்த்த காலம் போதுமா?”

 

“நாம் காலத்தை வீணாக்காமலும் சுறுசுறுப்பாகவும் இயங்கினால் காலம் எதற்கும் போதுமானது தான் அரசே”

 

“அப்படியானால் அந்த இருவரையும் கண்காணிக்க வேண்டுமளவு ஒற்றர்களை அனுப்பி வையுங்கள். சாணக்கின் மகனை உயிரோடோ பிணமாகவோ கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு நான் நூறு பொற்காசுகள் தருகிறேன் என்று அறிவியுங்கள்.”

 

ராக்‌ஷசர் தலையசைத்தார்.  சுதானு கேட்டான். “அந்த வீரன் நம் வீரர்களிடம் மடலைப் பறி கொடுத்ததை நம் எதிரிகளிடம் போய் சொல்லி விடமாட்டானா? அப்படிச் சொன்னால் அவர்கள் உஷாராகி மறுபடி திட்டத்தை மாற்றி விட மாட்டார்களா?”

 

ராக்‌ஷசர் இந்தப் புத்திசாலித்தனமான கேள்வியை அவன் கேட்டதில் சிறிது ஆச்சரியப்பட்டார். கோபக்காரன் என்றாலும் அறிவும் இருக்கிறது. அவர் சொன்னார். “அந்த வீரன் போய் சொன்னாலும் அவர்களுக்கு மறுபடி திட்டத்தை மாற்றி மறுபடியும் எல்லோருக்கும் தெரிவிக்கப் போதுமான அளவு காலமில்லை. இப்படி ஒரு கடிதம் மற்ற மன்னர்களுக்கும் இன்னேரம் போய்ச் சேர்ந்திருக்கும். அவர்கள் மாற்றப்பட்ட காலப்படியே செயல்படுவார்கள். அதனால் கடிதம் போய்ச் சேர்ந்திருக்கக்கூடிய நபர் தான் கடிதம் கிடைக்காமல் பழைய திட்டப்படி திரையோதசியில் இயங்குவான்.  அது அவர்களுக்கு அந்தப் பகுதியில் நடக்கும் போருக்குப் பின்னடைவையும், சிக்கலையும் ஏற்படுத்தலாம்.”

 

தனநந்தன் கேட்டான். “கலிங்கத்து மன்னன் நமக்கு எதிரான நடவடிக்கைகள் எதிலாவது ஈடுபட்டிருப்பது பற்றி நம் ஒற்றர்கள் எதையும் ஏன் தெரிவிக்கவில்லை.”

 

ராக்‌ஷசர் சொன்னார். “நம் ஒற்றர்கள் வடக்கில் அதிகமாக இருக்குமளவு தெற்கில் இல்லை. அதனால் இருக்கலாம். இந்தக் கடிதத்திலும் கலிங்கத்து மன்னனுடன் மிகசமீபத்தில் தான் சுமுகமாக பேச்சு வார்த்தை முடிந்த தொனி தென்படுகிறது. அது முடிந்தவுடனேயே ஆச்சாரியர் இந்த மடலை மற்றவர்களுக்கு எழுதியிருப்பார் என்றே தோன்றுகிறது. அதனால் இனிமேல் தான் கலிங்கத்து மன்னன் நமக்கு எதிராக இயங்க ஆரம்பிக்கலாம். அதற்கு பிறகு தான் ஒற்றர்கள் அறிய நேரிடும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்”

 

முடிவுகளை இனி கிடைக்கும் தகவல்களை வைத்து வேகமாக எடுக்கலாம் என்ற தீர்மானத்துடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

 

அங்கிருந்து கிளம்பும் போது சுதானு பத்ரசாலிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “நாம் இன்றிரவே சந்தித்துப் பேச வேண்டியிருக்கிறது சேனாதிபதி”

 

ராக்‌ஷசர் தனிமையில் யோசனையில் ஆழ்ந்திருந்தார். உயர்ரகக் குதிரைகள் குறைந்து போனதும், ஆயுதங்கள் குறைந்து புதிய ஆயுதங்கள் தரமாக உருவாக்கத் தேவையான கால அவகாசம் கிடைக்காததும் இப்போது அவர்கள் பக்கமிருக்கும் பலவீனம் என்பதை அவர் அறிவார். இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தச் சிறிய குறைபாடுகள் போர்களின் போக்கைத் தீர்மானிக்க முடிந்தவை. அளவில் மிகப்பெரிய படைகள் என்ற அவர்களுடைய வலிமையை தாழ்ந்த ரகக் குதிரைகளும், கச்சிதமாக அமையாத ஆயுதங்களும் நிறையவே குறைத்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அவர்கள் யாருமே பேசவில்லை....

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள். 

1 comment:

  1. சாணக்கியர் அந்த மடலில் உள்ளபடியே செயல்படுவது போல நடந்து கொள்வார், அந்த தகவல் ராக்ஷசருக்கு கிடைக்கும்....ஆனால், உண்மையான திட்டம் வேறு விதமாக இருக்கும் என நினைக்கிறேன்....

    ReplyDelete