சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 13, 2023

யாரோ ஒருவன்? 129



டுத்த காட்சி மணாலி போலீஸ் ஸ்டேஷனில் கவலை தோய்ந்த முகத்தோடு கல்யாணும், சரத்தும் உள்ளே நுழைவதைக் காட்டியது. காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரனிடம் கல்யாண் அரைகுறை ஹிந்தியில் தங்கள் நண்பன் காணாமல் போனதைத் தெரிவித்தான்அந்த போலீஸ்காரன் மதன்லாலைக் கைகாட்டி அவரிடம் போய்ச் சொல் என்றான்.

மதன்லால் அவன் சொல்வதை அலட்சியமாகக் கேட்டுக் கொண்டான். பின் சலிப்புடன் சொன்னான். ”இன்று இங்கே வெடிகுண்டு விபத்து ஒன்றும் நடந்திருக்கிறது. உன் நண்பனைக் கண்டுபிடிப்பதெல்லாம் உடனடியாக எங்களால் முடிகிற வேலை அல்லஅதனால் நீங்களே நன்றாகத் தேடிப்பாருங்கள். எதற்கும் உன் நண்பனின் போட்டோ இருந்தால் அதையும் சேர்த்து வைத்து புகார் கொடுத்து விட்டுப் போ.”

சொல்லி விட்டு சற்று தள்ளி எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரனைக் கைகாட்டி விட்டு மதன்லால் யாரிடமோ போனில் பேச ஆரம்பித்தான். கல்யாணும் சரத்தும் அந்தப் போலீஸ்காரனை நோக்கி நகர்கிறார்கள்.

அடுத்த காட்சியில் ஒரு போலீஸ்காரன் பாதி எரிந்த டிரைவிங் லைசென்ஸைக் கொண்டு வந்து மதன்லாலிடம் கொடுத்தான். “சிறிது நேரத்திற்கு முன் இது அந்த விபத்துப் பகுதியில் ஒரு ஓரத்தில் கிடைத்தது சார்...” மதன்லால் அதை வாங்கி இரண்டு பக்கமும் கூர்ந்து பார்த்தான்

அடுத்த காட்சியில் சரத் கல்யாணிடம் கேட்டான். “அந்தக் கருகின பிணம் மாதவன்னு அவங்க எப்படி நம்புவாங்க. செத்தவனோட நிஜ அடையாளம் தெரிஞ்சுட்டா அப்புறம் என்னாகும்?”

கல்யாண் தந்திரமாகச் சொன்னான். “அப்படி தெரிஞ்சுட்டா மாதவனை இவங்க நமக்குக் கண்டுபிடிச்சுக் குடுக்கணும். அது அவங்க வேலை. நீயேன் கவலைப்படறே

சரத் யோசனையுடன் களையிழந்த முகத்துடன் அமர்ந்திருக்க கல்யாண் சொன்னான். “என்ன செண்டிமெண்ட்டா. அந்த முட்டாள் இருந்திருந்தா அந்தப் பாம்பு கொண்டு வந்த ஆளைக் கண்டுபிடிச்சு அந்த ஆள் கிட்டயே நாகரத்தினத்தை ஒப்படைக்கற வேலையும் செஞ்சிருப்பான். அவனும் அனுபவிச்சிருக்க மாட்டான். நம்மளயும் அனுபவிக்க விட்டிருக்கமாட்டான்.”

சரத் சொன்னான். “அதுக்கில்லைடா. எதுவும் நமக்கு பிரச்சன ஆயிடாதே

கல்யாண் உறுதியாய் சொன்னான். “நாமளா இனிமே முட்டாள்தனமா காட்டிக் கொடுக்காத வரைக்கும் பிரச்சினை ஆகாதுடா

ஒரு போலீஸ்காரன் ஓட்டலுக்கு வந்துசார் உங்களை வரச்சொன்னார்.” என்று சொல்வது தெரிகிறது.

கல்யாண் முகமும், சரத் முகமும் வெளிர்கிறது. இவ்வளவு சீக்கிரமாக வந்து அழைப்பார்கள் என்று இருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை...

அடுத்த காட்சியில் மதன்லால் முன்னால் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருக்க டாக்சி டிரைவர் க்யான் சந்த் காயங்களுக்குக் கட்டு போட்டபடி இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.  

கல்யாண் தங்கள் நண்பனின் அங்க அடையாளங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு மதன்லால் க்யான் சந்தைப் பார்த்து கேட்கிறான். “உன் காரில் ஏறின ஆள் இப்படி இருந்தானா?”

க்யான் சந்த் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “ஆமாம். அப்படித் தான் இருந்தான்...”

எங்கே உன் காரில் ஏறினான்?”

இவர்கள் ஓட்டலுக்குப் பக்கத்தில் இருந்து தான்.”

எப்போது ஏறினான்?’

காலைல தான்....”

மதன்லால் கல்யாண் பக்கம் திரும்பினான். “உங்கள் நண்பன் எப்போதிருந்து காணவில்லை?”

காலையிலிருந்து தான்....”

மதன்லால் யோசித்து விட்டுச் சொன்னான். “எதற்கும் நாளை காலை வரை பார்ப்போம். உங்கள் நண்பன் திரும்பி வந்து சேரா விட்டால் இந்த வெடிகுண்டு விபத்தில் இறந்தது அவனாகத் தானிருக்கும். உடம்பு முழுவதும் கருகி இருப்பதால் உடம்பை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க வழியில்லை

நாகராஜ் சொன்னான். “உண்மைல அந்த வெடிகுண்டு விபத்துல இறந்தது மகேந்திரன்கிற ஒரு ரா அதிகாரி. அவர் அஜீம் அகமதுங்கற ஒரு தீவிரவாதி மணாலில இருக்கறத கண்டுபிடிச்சு அவனைப் பிடிக்க மணாலி வந்திருந்தார். அவனைக் கைது பண்ண எல்லா ஏற்பாடும் செய்திருந்தார். அவர் அங்கே தங்கியிருக்கறப்ப க்யான் சந்த் என்கிற டாக்சி டிரைவர் டாக்சில தான் எல்லா இடங்களுக்கும் போய்ட்டு வந்துட்டு இருந்தார். அஜீம் அகமது, அந்த டாக்சி டிரைவரையும், போலீஸ் அதிகாரியையும் கைல போட்டுகிட்டு அந்த அதிகாரியை வெடிகுண்டு வெச்சு கொல்லத் திட்டம் போட்டான். அஜீம் அகமதை அவர் கைது பண்றதா இருந்த நாள் காலைல சரியா பத்தேகால் மணிக்கு வெடிக்கிற மாதிரி ஒரு வெடிகுண்டை செட் பண்ணி அவன் டாக்ஸில அதிகாலைலயே வெச்சுட்டாங்க. அது தெரியாம அந்த அதிகாரி அவன் டாக்ஸில பயணம் செஞ்சார். வெடிகுண்டு வெடிக்கறதுக்கு முன்னாடி க்யான் சந்த் இறங்கி பக்கத்து கடைல ஒரு பொருள் வாங்கிட்டு வர்றதாய் போய்ட்டான். சந்தேகம் வரக்கூடாதுன்னு வெடிகுண்டு வெடிக்கறப்ப லேசான காயப்படற தூரத்துல க்யான்சந்த் வந்து காயப்பட்டான். அந்த அதிகாரி பிணமா கருகிட்டார்.... அஜீம் அகமது அந்த அதிகாரியோட கருகின பிணம் கூட அவங்க குடும்பத்துக்குக் கிடைக்க கூடாதுன்னு சொல்லியிருந்தான். அதனால மதன்லால் அவரோட பொருள்கள எல்லாம் விசாரணைக்குக் கிடைக்காத மாதிரி அப்புறப்படுத்திட்டான். அவங்க அதை அடையாளம் தெரியாத அனாதைப் பிணமா மாத்தப் பார்த்திருந்தாங்க.... ஆனா அந்தச் சிரமம் கூட இல்லாதபடி கல்யாணும் சரத்தும் மாதவனைக் காணோம்னவுடன யாருக்கும் பிரச்சினை இல்லாதபடி அவங்க அதை மாதவன் பிணமா மாத்திட்டாங்க... ”

அடுத்த காட்சியில் கல்யாணும் சரத்தும் அவசர அவசரமாக மாதவனின் பொருட்களை அவன் சூட்கேஸிலும் இன்னொரு பையிலும் திணிப்பது தெரிந்தது. கல்யாண் முகத்தில் நிம்மதி தெரிகிறது. சரத் முகத்திலும் தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொள்கிறார்கள். எல்லாம் முடிந்து அறையைக் காலி செய்யும் முன் ஒரு முறை அறையைப் பார்க்கிறார்கள். ஒரு மூலையில் மாதவன் தன் தாயிற்குக் குங்குமச்சிமிழும், ரஞ்சனிக்கு வளையலும் வாங்கிய சிறிய பொட்டலம் விழுந்து கிடப்பது தெரிகிறது. இருவரும் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கிறார்கள். பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அதை எடுக்காமலேயே கிளம்புகிறார்கள்.

அடுத்த காட்சியில் ரஞ்சனி அழுதழுது சிவந்த கண்களுடன் சோகமாகத் தெரிகிறாள். அவளருகே சோகமான முகத்துடன் சரத் அமர்ந்திருக்கிறான்.

சரத் சொல்கிறான். “ரஞ்சனி. அவன் சாவோட நம்மளோட ஒரு பகுதியும் செத்துடுச்சுன்னு தான் நாங்களும் நினைக்கிறோம். ஆனா நாமளும் செத்துட முடியாதில்லையா. மனசை தேத்திக்கோ. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்

அவன் நினைவுகளை மட்டுமில்ல எனக்கு ஒரு குழந்தையையும் குடுத்துட்டு போயிருக்கிறான் சரத்என்று ரஞ்சனி அழுது கொண்டே தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதைச் சொல்ல சரத் அதிர்ச்சி அடைகிறான்.

சரத் மெல்லச் சொல்கிறான். “அதைக் கலைக்கறதொன்னும் இந்தக் காலத்துல கஷ்டமில்லை...”

ரஞ்சனி தீர்மானமாகச் சொல்கிறாள். “அவன் குழந்தையை நான் கருக்கலைப்பு செய்ய மாட்டேன் சரத். எல்லாரும் என்னைக் காரித்துப்பினாலும், கரிச்சுக் கொட்டினாலும் கூடப் பரவாயில்லை....”

ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு  சரத் சொல்கிறான். “யாரும் உன்னை எதுவும் சொல்ல வேண்டியதில்லை ரஞ்சனி. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்இனிமே அது என் குழந்தை

திகைத்து, நெகிழ்ந்து, கண்ணீர் வழிய ரஞ்சனி சரத்தைக் கைகூப்பி வணங்கி குமுறி அழுகிறாள்.

அழாதே ரஞ்சனி.” என்று சொல்லி சரத் அவளை அணைத்துக் கொள்கிறான்.

காட்சிகள் முடிவடைய அங்கே கனத்த அமைதி குடிகொண்டது. எல்லோரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு நம்ப முடியாத உண்மைகள் நிறைய இப்போது தான் தெரிந்திருக்கின்றனஅசைவற்ற நிலையில் சிலையாக அமர்ந்திருக்கும் மூவரைத் தவிர மற்ற நான்கு பேருக்கும் நடந்திருப்பதை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

அதிகம் பாதிக்கப்பட்டவளும், உடைந்து போனவளுமாக ரஞ்சனி இருந்தாள். நேரிலேயே சம்பவங்களைப் பார்த்த பிறகு அவளுக்கு இனி சந்தேகப்பட எதுவுமில்லை. இனி அழ அவளிடம் கண்ணீர் பாக்கியில்லை. எல்லாம் தகர்ந்து போய் வெறுமையையும், துக்கத்தையும் சுமந்தவளாக அவள் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அடுத்த பாதிக்கப்பட்டவனும், அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவனுமாக தீபக் இருந்தான். அவன் மாதவனின் மகன். அவன் தந்தையை அவன் இதுவரை அப்பாவென்று அழைத்துக் கொண்டிருந்தவனும், அவனுடைய காதலியின் தந்தையுமாகச் சேர்ந்து கொன்றிருக்கிறார்கள். அவனுடைய தந்தை அவனுடைய கனவில் வந்து தனது மரணம் இயற்கையல்ல என்று சொல்லியிருக்கிறார். அதள பாதாளத்திலிருந்து வந்தது போல் பலவீனமாகக் குரல் ஒலித்திருக்கக் காரணம் அதள பாதாளத்தில் அவர் விழுந்து போயிருந்தது தான்....

தர்ஷினிக்குத் தன் தந்தையையும், தாத்தாவையும் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. உயிர் நண்பனின் உயிரை எடுத்து விட்டு ஒவ்வொரு கட்டத்திலும் எந்த உறுத்தலும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிற ஒரு நீச்சனுக்கு மகளாய் பிறந்திருப்பதற்கு அவள் வெட்கப்பட்டாள். மேகலாவும் அதே உணர்வுகளோடு தான் இருந்தாள். இப்படிப்பட்ட ஒரு துரோகிக்கு மனைவியாக இருப்பதற்கு அவள் கூசினாள்.

நாகராஜ் எழுந்து நின்றான். அவன் சக்தியால் கட்டுப்போட்டிருந்தவர்களையும் விடுவித்து விட்டு தீபக், தர்ஷினி இருவரிடமும் சொன்னான். “கசப்பான உண்மைகளை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டி வந்ததில் எனக்கும் வருத்தம் தான். ஆனால் இனிப்பான பொய்களுடன் கடைசி வரை வாழ்ந்து ஏமாறுவது அதையும் விடக் கொடுமை...”


கல்யாண் பேச முடிந்தவுடன் ஆக்ரோஷமாய் எழுந்தான். “உன் திறமைக்கு சபாஷ். ஆனா சில உண்மைகளோட பல பொய்களை ஜோடிச்சு உன்னால படமாகவே எடுத்துக் காண்பிக்க முடிஞ்சதுல உன் சக்தியோட அளவு தெரியுதே ஒழிய சத்தியம் தெரியல நாகராஜ். என் நண்பனை நான் மலை மேல இருந்து தள்ளி விட்டதாய் நீ கதை வசனம் டைரக்ஷனோட ஓட விட்ட படம் முழுசும் பொய். என் நண்பனோட ஆத்மா உன்னை மன்னிக்காது

(தொடரும்)
என்.கணேசன்


9 comments:

  1. பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே இரண்டும் ஒன்று - என்ற பாடல் தான் நியாபகம் வருகின்றது. அருமை.

    ReplyDelete
  2. இனி அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்...?

    ReplyDelete
  3. So nagaraj thaan madhavan,

    And

    Already yosichathu thaan mahendiran thaan bomb blast la death aanathu nu, but romba kashtamaa aagidichi, narendiran epdi thaanga poraan ohh therila..

    ReplyDelete
  4. Telling the truth is the real punishment

    ReplyDelete
  5. கசப்பான உண்மைகளை சொல்லுவதே மிகப்பெரிய தண்டனை, இனி அவர்கள் வாழ்வில் நிம்மதியே இருக்காது.

    ReplyDelete