சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, April 13, 2022

முடிவாய் உணரும் உண்மைகள்!

 


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! - 35 

 

ஷியப் பெண்மணி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், அமெரிக்கக் கனவான் கர்னல் ஓல்காட்டும் மேற்கொண்ட ஆன்மிகப் பயணத்தின் இறுதிக்கு நாம் வந்து விட்டோம். ஆன்மிகம், உலக சகோதரத்துவம் இரண்டும் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தியோசபிகல் சொசைட்டியை ஆரம்பித்து, அதற்கான தலைமையகத்திற்கு உகந்த இடம் இந்தியா என்று தீர்மானித்து இந்தியாவுக்கு வந்து அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆனால் உயர்ந்த மனிதர்களும் விமர்சனங்களில் இருந்து தப்ப முடிவதில்லை என்பதற்கு உதாரணமாக ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மீது ஏமாற்றுக்காரர், அவர் செய்து காட்டிய அற்புதங்கள் எல்லாம் சில கையாள்களை வைத்துக் கொண்டு அவர்கள் உதவியுடன் நடத்திய நாடகங்கள் என்ற கடுமையான விமர்சனங்கள் அவர் இந்தியாவை விட்டுச் சென்ற பின் இங்கு சொல்லப்பட்டன.

 

அந்த விமர்சனங்களுக்கு மூல காரணமாக இருந்தது ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இந்தியாவில் வேலை பார்த்த ஒரு கணவன் மனைவி. அவர்கள் அவர் செய்து காட்டிய பல அற்புதங்களுக்கு ரகசியமாக நாங்கள் உதவியிருக்கிறோம். கைக்குட்டைகளில் பெயர்கள் மாற்ற வேண்டும் என்றால் முன்கூட்டியே எங்களிடம் சொல்வார், நாங்கள் தான் வரக்கூடியவர்களின் பெயர்களை எம்ப்ராய்டரி செய்து கொடுப்போம், சில கடிதங்கள் எழுதிக் கொடுப்போம் என்பது போன்ற சில குற்றச்சாட்டுகளை வெளியிட்டார்கள்.

 

உண்மையில் அவர்கள் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் வேலைக்கு இருந்த காலத்திலேயே நேர்மையற்றவர்கள் என்று கர்னல் ஓல்காட் கண்டுபிடித்திருந்தார். அதே போல் அவர்கள் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை ஏமாற்றிக் கொண்டிருந்ததையும் கண்டுபிடித்திருந்தார். அதை அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொல்லியும் இருந்தார். ஆனால் அதை அம்மையார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு உடனிருப்பவர்களின்  தீய குணங்களைக் கண்டுபிடிக்கும் சக்தி கிடையாது, அவர்களின் நடிப்பிற்கு ஏமாந்து விடுவார் என்று முன்பே கர்னல் ஓல்காட் சொல்லியிருப்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த வேலையாட்கள்  நேர்மையற்றவர்கள் என்பது காலங்கடந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குத் தெரிந்த போது நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகக் கடுமையாக அவர் அவர்களைக் கடிந்து கொண்டு வேலையில் இருந்து நீக்கியது அந்த வேலையாட்களைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அந்தக் கோபத்தின் காரணமாகத் தான் அவதூறுகள் பரப்ப ஆரம்பித்தார்கள் என்பது கர்னல் ஓல்காட்டின் புரிதலாக இருந்தது.

 

ஆனால் அந்த வேலையாட்கள் இந்தியாவில் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேலைக்குச் சேர்வதற்கு முன்பே இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நிறைய அற்புதங்களை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் நடத்திக் காட்டியிருக்கிறார். அது மட்டுமல்ல சில அற்புதங்களுக்கு வெளியாட்கள் யாரும் உதவியிருக்க முடியாது என்ற நிலைமையும் இருந்திருக்கிறது.

 

ஒருவரின் இறந்து போன பாட்டியின் புகைப்படத்தை ஒரு காகிதத்தில் வரவழைத்ததும், ஜெராக்ஸ் இல்லாத காலக்கட்டத்தில் ஓவியங்களை இரட்டிப்பாக்கியதும், சில பொருள்களையும் இரட்டிப்பாக்கியதும், எந்தவிதமான மருத்துவமோ உடற்பயிற்சியோ இல்லாமல் அவருடைய எடையையே 245 பவுண்டுகளில் இருந்து மருத்துவர் சொன்ன 156 பவுண்டுகளுக்குக் கொண்டு வந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக திரை விலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை நூல் எழுதுகையில் அந்தரத்தைப் பார்த்து பழைய சுவடிகளில் உள்ள விஷயங்களைப் பக்கம் பக்கமாய் எழுதியதும், பிழைதிருத்தம் செய்ய கர்னல் ஓல்காட்டுக்கு அந்தரத்திலிருந்து சில நூல்களை வரவழைத்துக் கொடுத்ததும் கர்னல் ஓல்காட் நேரில் கண்ணால் கண்ட அதிசயங்கள். இது போன்ற அற்புத நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் எந்த அற்புதத்திலும் மற்ற ஆட்கள் ரகசியமாகக்கூட அவருக்கு உதவியிருக்க முடியாது. மேலும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் எத்தனையோ குறைகளை எந்த விதமானத் தயக்கமும் இல்லாமல் சுட்டிக் காட்டிய கர்னல் ஓல்காட் அவர் ஏமாற்று வேலைகள் செய்திருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டாமல் இருந்திருக்க மாட்டார் என்பது மட்டுமல்லாமல் அவருடன் ஆரம்பித்த ஆன்மிகப் பயணத்தை இடையிலேயே நிறுத்தி விட்டுப் பிரிந்திருப்பார்.

 

எனவே அந்தக் குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லவை என்றாலும் அபாண்டமாகப் பழிசுமத்தப்பட்டதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மனமுடைந்து போனார்.  இந்த அற்புதங்களால் அவர் எந்த லாபத்தையும் அடைந்தது கிடையாது. பல சமயங்களில் சொந்தச் செலவுக்கென்று அவரிடம் தேவையான பணம் இருந்தது கூடக் கிடையாது. அற்புத சக்திகள் வெளிப்பாட்டில் அபாண்டக் குற்றச்சாட்டுகள் வந்ததால் மனமுடைந்தால் அவர் அதில் எந்த நிரந்தர நன்மையும் என்று உணர்ந்தவராக அந்தச் சக்திகளை வெளிப்படுத்துவதை நாளடைவில் நிறுத்திக் கொண்டார். ஆனால் உண்மையான ஆன்மிக ஞானத்தை உலகில் பரப்பும் தொண்டை அவர் நிறுத்தவில்லை. ரகசியக் கோட்பாடு என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் திரைவிலக்கப்பட்ட ஐசிஸ் தேவதை நூலையும் விட ஒருபடி மேலாகவே ஆன்மிக ஆழமுள்ளதாக இருந்தது. அந்த நூலை அவர் தன் அந்திம காலத்தில் எழுதினார். இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட அந்த நூலை எழுதும் போது மரணம் நெருங்குவதை அவர் உணர்ந்தேயிருந்தார். ஆனாலும் மகாத்மாக்கள் அவருக்கு உணர்த்தியிருக்கும் ஞானத்தை மனிதகுலத்திற்கு விளக்கி விட்டுப் போக வேண்டும் என்ற தாகமே உடல்நலக்குறைவையும் மீறி அவரை அந்த நூலை எழுத வைத்தது. அதற்கு முன்பு அவர் எழுதியிருந்த மௌனத்தின் சத்தம் என்ற சிறிய நூலும் ஆன்மிக சூட்சுமங்களை விளக்கும் நூலாக இருந்தது. மேலும் லூசிஃபர் என்ற ஆன்மிகப் பத்திரிக்கையை தன் கடைசி காலத்தில் லண்டனில் ஆரம்பித்தார். இப்படி அவர் 1891 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி லண்டனில் காலமாகும் வரை அவருடைய ஆன்மிகப் பணிகள் தொடர்ந்தன.

 

அதே போல் கர்னல் ஓல்காட்டும் நோய் தீர்க்கும் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவிலும் இலங்கையிலும் நிறைய நோயாளிகளைக் குணப்படுத்தினார். அவரும் நிறைய ஆன்மிக நூல்களை எழுதியதுடன், தொடர்ந்து பல ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் ஆற்றி வந்தார். 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினேழாம் தேதி சென்னையில் காலமாகும் வரை அவர் ஆன்மிகத் தொண்டும் தொடர்ந்தது.

 

இந்த இரண்டு உயர்ந்த மனிதர்களின் ஆன்மிகப் பயணம் நமக்கு மூன்று ஆழமான உண்மைகளை உணர்த்துவதாக உள்ளது. முதலாவதாக நம் இந்திய மண் ஆன்மிகத்திற்கும், ஆத்மஞானத்திற்கும் உதவக்கூடிய புனித மண். அதை உணர்ந்தே மற்ற எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத போதிலும் உலகில் வேறு வேறு பாகங்களில் பிறந்து வளர்ந்த இருவரும் இங்கு ஈர்க்கப்பட்டார்கள். இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்த பாக்கியசாலிகளான நாம் கிடைத்திருக்கு இந்த அரிய வாய்ப்பினை வீணாக்காமல் உண்மையான ஆன்மிகத்தில் முழுமனதோடு ஈடுபட்டு கடைத்தேற வேண்டும்

 

இரண்டாவதாக அற்புதசக்திகள் ஆன்மிகப் பயணத்தில் செல்லும் போது கிடைக்கும் பக்க விளைவுகளேயொழிய அதுவே நோக்கமாக நமக்கு இருந்து விடக்கூடாது. ஏனென்றால் ஆன்மிகப் பயணத்தில் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சக்திகள் காண்பவர்க்கு அற்புதமாய் தெரிந்தாலும்   ஆன்மிகத்திற்கு மேலும் உதவும் என்றோ, மானுடத்தை முன்னேற்றும் என்றோ உத்தரவாதமில்லை. எனவே தான் எத்தனையோ சக்திகள் கைகூடியிருந்தாலும் மகாஞானிகள் அத்தியாவசியம் வராமல் அவற்றைப் பயன்படுத்த முனைந்ததில்லைஅற்புத சக்திகளை விரிவான விளக்கங்களுடன் சொல்லும் யோகசூத்திரங்கள் போன்ற நூல்களும் உண்மையான மெய்ஞானமே முக்தியைத் தருமே ஒழிய இது போன்ற சக்திகள் அதற்கு உதவுவதில்லை என்பதையும் தெளிவாகச் சொல்கின்றன. ப்ளாவட்ஸ்கீ அம்மையார், கர்னல் ஓல்காட் இருவரும் இந்தியாவில் சந்தித்த யோகிகள், சித்தர்களும் அப்படியே அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

 

மூன்றாவதாக எத்தனை நன்மைகள் செய்தாலும் உலகம் அதை அங்கீகரிக்க மறுக்கலாம். மனிதர்களைக் காலம் கடந்து கௌரவிக்கும் உலகம் இது. அதில் நாம் மனமுடைந்து நாம் செய்ய வேண்டிய நற்பணிகளைச் செய்யாமல் இருந்து விடக்கூடாது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஏமாற்றுக்காரர் என்று தூற்றப்பட்ட பின் மனமுடைந்த போதிலும் தன் பணியை நிறுத்தி விடவில்லை. அவரது ரகசியக் கோட்பாடு என்ற நூலை அதற்குப் பின்பே அவர் எழுத ஆரம்பித்தார். மற்ற ஆன்மிகப் பணிகளையும் தொடர்ந்து செய்தார். அதே போல கர்னல் ஓல்காட் தான் குணப்படுத்திய நோயாளிகளில் நூற்றில் ஒருவர் தான் நன்றியுடையவராக இருக்கிறார் என்று சொன்ன போதும் இந்த நன்றிகெட்ட மனிதர்களுக்கு ஏன் தொண்டு செய்ய வேண்டும் என்று நிறுத்திக் கொள்ளாமல் கடைசி வரை தன்னால் முடிந்ததைச் செய்தார். அதே மனோபாவத்தை நாமும் பெற வேண்டும்

 

இந்த உண்மைகளால் நம் ஆன்மிகப் பயணமும் வழிநடத்தப்படட்டும் என்ற பிரார்த்தனையுடன் இத்தொடரை முடித்துக் கொள்கிறேன். நன்றி வாசகர்களே!

 

முற்றும்.

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி

 

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள் நூலையும், என் மற்ற நூல்கள், நாவல்களையும் ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

2 comments:

  1. இந்த மூன்று பேருண்மைகளை நாமும் மனதில் வைத்துக் கொண்டு நம் ஆன்மீக பயணத்தை தொடர்வோமாக...

    ReplyDelete