சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 28, 2022

சாணக்கியன் 2

 

விஷ்ணுகுப்தர் ஒரு கணம் அசைவற்று நின்று தன் உள்ளுணர்வைக் கூர்மையாக்கி தன்னைப் பின் தொடரும் மனிதனை யூகிக்க முயன்றார். இது போன்ற நேரங்களில் அவர் தன் கண்களை விட அதிகம் நம்புவது அவருடைய உள்ளுணர்வையே. ஆபத்துகளைச் சிறிய வயதிலிருந்தே சந்தித்துப் பழகிய அவருக்கு இந்த விஷயத்தில் உள்ளுணர்வு மிக உயர்ந்த நுட்ப நிலையை இயல்பாய் அடைந்திருந்தது. பின் தொடர்பவன் ஆபத்தான மனிதன் போலத் தோன்றவில்லை. அன்பின் அலைவரிசையையே அவரது உள்ளுணர்வு சுட்டிக் காட்டியது. தட்சசீலத்தில் படித்த அவருடைய மாணவர்களில் ஒருவராகவோ, உடன் பணியாற்றிய ஆசிரியர்களில் ஒருவராகவோ கூட இருக்கக்கூடும். நாளைய அறிஞர்கள் சிறப்புக் கூட்டத்தில் பங்கு கொள்ள இங்கே வந்திருக்கலாம். வந்த இடத்தில் அவரைப் பார்த்து விட்டு அவர் தானா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள பின் தொடர்வதாக இருக்கலாம். விஷ்ணு குப்தர் திடீரென்று வேகமாகப் பின்னால் திரும்பிப் பார்க்க, அவரைப் பின் தொடர்ந்து வந்த மனிதர் அதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியுடன் இரண்டடி பின்னால் நகர்ந்தார்.

 

விஷ்ணுகுப்தர் அந்த மனிதரைக் கூர்ந்து பார்த்தார். அவர் அப்படிப் பார்த்தவுடன் அந்த மனிதர் தான் எண்ணிய மனிதர் இவரல்ல என்று உணர்ந்தவர் போல் வேகமாக அவரைக் கடந்து செல்ல முயன்றார். அவரை இடைமறித்து நின்று விஷ்ணுகுப்தர் கடுமையான குரலில் சொன்னார். “நீர் என்னைப் பின் தொடர்ந்து வந்தது போல் இருந்தது.  அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?”

 

மன்னிக்க வேண்டும் சுவாமி. அந்த அரசமரத்தடியில் எதோ ஒரு யோசனையுடன் தாங்கள் நின்றதைப் பார்த்த போது ஏனோ என் பிள்ளைப் பருவ நண்பன் விஷ்ணு என்று எனக்குத் தோன்றியதால் அதை உறுதிப்படுத்திக் கொள்ள பின் தொடர்ந்தேன்.” என்று அந்த மனிதர் தவறு செய்து விட்ட தொனியில் சொன்னார்.

 

விஷ்ணுகுப்தர் முகத்தில் புன்னகை அரும்பியது. “அரசமரத்தடியில் உன் நண்பனைத் தவிர வேறு யாரும் நிற்க மாட்டார்களா கோபாலா?” என்று அவர் கிண்டலாகக் கேட்ட போது கோபாலன் ஒரு கணம் திகைத்து மறுகணம் ஆனந்தமாக நண்பனை அணைத்துக் கொண்டார். “விஷ்ணு.... விஷ்ணு....” என்று சொல்லியபடியே கண்கலங்கிய நண்பனை விஷ்ணுகுப்தரும் ஆரத் தழுவிக் கொண்டார்.

 

கோபாலன் அவருடைய பிள்ளைப்பருவ நண்பன். அவரிடம் கடைசி வரை அன்பு செலுத்திய குடும்பம் கோபாலனின் குடும்பம் தான். பாடலிபுத்திரத்தில் இருந்து போவதற்கு முன் அவருக்குக் கடைசியாக அன்னமிட்டவளும் கோபாலனின் தாயார் தான்.

 

கோபாலன் அவரை வற்புறுத்தி தனது வீட்டுக்கு அழைத்துப் போனார். நண்பர்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள். கோபாலனுக்கு நண்பனை இத்தனை வருடங்கள் கழித்துச் சந்திக்க முடிந்ததில் பேரானந்தம். மகிழ்ச்சி பொங்க அவர் தான் அதிகம் பேசினார். இப்போது பாடலிபுத்திரத்தின் பாடசாலையில் ஆசிரியராக இருப்பதாகத் தெரிவித்தார். தட்சசீலத்தின் பிரபலமான ஆசிரியராகப் பலரும் அவ்வப்போது சொன்ன விஷ்ணுகுப்தர், தன்னுடைய நண்பன் விஷ்ணுகுப்தனாகத் தானிருக்க வேண்டும் என்று முன்பே யூகித்திருந்ததைப் பெருமை பொங்கச் சொன்னார். கோபாலனின் மனைவி அவளுடைய இளைய சகோதரன் திருமணத்திற்கு குழந்தைகளுடன் வெளியூருக்குச் சென்றிருப்பதாகவும் நாளை அதிகாலை அவரும் கிளம்பவிருப்பதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வேறு யாரும் இருக்காததால் நண்பர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடிந்தது.    

 

கோபாலன் கண்கலங்கச் சொன்னார். “அந்த அரசமரத்தைக் கடந்து போகும் போதெல்லாம் உன் நினைவு எனக்கு வராமல் போனதில்லை விஷ்ணு. நீ இன்று நின்று அந்த மரத்தைத் தொட்டுப் பார்த்தது போல நானும் பல முறை தொட்டுப் பார்த்திருக்கிறேன். நாம் சுற்றி ஓடியாடி விளையாடி ஒளிந்து கொண்ட மரமல்லவா அது.... ”

 

விஷ்ணுகுப்தர் தன் நண்பனைப் போல் உணர்ச்சிவசப்படவில்லை, கண்கலங்கவில்லை. ஆனாலும் அன்பு நண்பனை இத்தனை காலம் கழித்து சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்தார். அவர்களுடைய நெருக்கமான பழைய இரண்டு நண்பர்களை கோபாலனிடம் விசாரித்தார். ஒருவன் பத்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், இன்னொருவன் காசி நகருக்கு இருபது வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்து விட்டதாகவும் கோபாலன் சொன்னார்.

 

சிறிது நேரம் இளமைப்பருவ நிகழ்வுகளை நினைவுகூர்ந்துப் பேசிய பிறகு கோபாலன் சொன்னார். “நம்முடைய ஆசிரியருக்கு நீ பாடலிபுத்திரத்திலிருந்து செல்ல அவரும் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றவுணர்ச்சி அவர் வாழ்ந்த நாள் வரை இருந்து கொண்டே இருந்தது விஷ்ணு. உன்னைப் போல் ஒரு சிறந்த மாணவனை அவர் பார்த்ததில்லை என்று எப்போதுமே சொல்லுவார்..... அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் அவரைப் பார்க்க நான் போயிருந்த போது, என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திக்க நேர்ந்தால் அவர் மனதார மன்னிப்பு கேட்டதாகச் சொல்லச் சொன்னார்....” சொல்லும் போதே கோபாலனுக்குக் கண்கலங்கியது.

 

விஷ்ணுகுப்தர் வறண்ட குரலில் சொன்னார். “தனநந்தன் ஆட்சி செய்யும் இடத்திலிருந்து செல்ல முடிந்ததை நான் பாக்கியமாகவே கருதுகிறேன் நண்பனே. அதனால் அவர் மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை... பலவீனங்கள் இல்லாத மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்!”

 

கோபாலன் நண்பனை நெகிழ்ச்சியுடன் பார்த்தார். அந்தப் பக்குவம் அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. சிறுவயதிலும் வயதுக்கு மீறிய பக்குவம் விஷ்ணுவிடம் இருந்தது. பேரறிவும், பக்குவமும் ஏற்கெனவே பெற்றிருந்த விஷ்ணு இப்போது அசாத்திய அமைதியையும், கூடப் பெற்றிருப்பதையும் கண்கூடாகவே அவரால் பார்க்க முடிந்தது.

 

விஷ்ணுகுப்தர் கேட்டார். “தனநந்தன் எப்படி இருக்கிறான் கோபாலா?. அவனிடம் ஏதாவது மாற்றமிருக்கிறதா?”

 

கோபாலன் சொன்னார். “காலம் எத்தனை கடந்தாலும் காகம் தன் கரிய நிறத்தை இழப்பதில்லை விஷ்ணு. தனநந்தன் எந்த மாற்றமுமில்லாமல் கஜானாவை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறான். அவன் வரி விதிக்காத பொருள்கள் மகதத்தில் இல்லை. வரிச்சுமையால் மக்களை நசுக்கி வருகிறான். அவனுடைய மந்திரிகளைத் தவிர அவனைப் பாராட்டுவோர் மகதத்தில் யாருமில்லை. உன் தந்தை போல் சத்தமாகக் கருத்து தெரிவிப்பவர்கள் யாருமில்லை என்றாலும் மகத மக்கள் எல்லோரும் அவர்களைப் பிடித்திருக்கும் பீடையாகவே அவனை நினைக்கிறார்கள்...”

 

விஷ்ணுகுப்தர் கேட்டார். “மகா கஞ்சனும், இம்மியளவு ஞான ஆர்வமும் இல்லாத தனநந்தன் பிறகெப்படி வருடா வருடம் அறிஞர் கூட்டத்தைக் கூட்டி கைநிறையப் பரிசுகள் வழங்குகிறான் கோபாலா? இப்படி பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல அறிஞர்களும் மாணவர்களும் தேடிவரும் இடமாக எப்படி அவன் அரசவை மாறியது?”

 

கோபாலன் சொன்னார். “பிரதம மந்திரி ராக்ஷசரும், மந்திரி வரருசியும் பண்டிதர்கள். அவர்களுடைய ஆர்வத்தாலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தனநந்தனை தான் நினைக்கிற வழியில் போக வைக்கிற நாசுக்கான திறமை ராக்ஷசருக்கு உண்டு. அவருக்காக தான் தனநந்தன் வேண்டாவெறுப்பாக அந்த நிகழ்ச்சியைச் சகித்துக் கொள்கிறான். அவரும் தனக்கு வேண்டிய விஷயங்களில் வேண்டியபடி தனநந்தனை ஆட்டுவிக்கிறாரே தவிர மக்களுக்கு வரி விதிக்கும் விஷயத்தில் தனநந்தனைக் கட்டுப்படுத்துவதில்லை..... ”

 

விஷ்ணுகுப்தரும் மகதத்தின் பிரதம மந்திரி ராக்‌ஷசரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். அறிவாளி, பண்டிதர், கடுமையானவர், அதிகம் சிரிக்காதவர், மகத நாட்டிடமும், தனநந்தனிடமும் பேரன்பு கொண்டவர், மிகச்சிறந்த நிர்வாகி, சிறந்த ஒற்றர்களை தன்வசம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் பலரும் சொல்லி இருக்கிறார்கள்...  

 

கோபாலன் நண்பனிடம் சந்தேகத்துடன் கேட்டார். “நீயும் நாளை நடக்கவிருக்கும் அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்குத் தான் வந்திருக்கிறாயா நண்பா?”

 

“தனநந்தனிடம் பரிசுகள் வாங்குவதை உன் நண்பன் விரும்புவான் என்று உனக்குத் தோன்றுகிறதா கோபாலா?”

 

“அறிஞர்களின் விவாதங்களைக் கேட்க நீ வந்திருக்கவும் வாய்ப்பில்லை. சொல்லப் போனால் நீ அறியாத விஷயஞானம் உள்ளவர்கள் அங்கிருக்கவும் வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் பின் ஏன் இத்தனை தொலைவு வரை வந்திருக்கிறாய் விஷ்ணு? பயண காலமே உனக்கு மாதக்கணக்கில் ஆகியிருக்குமே? நீ இங்கு வந்திருக்கும் உத்தேசம் தான் என்ன?”

 

(தொடரும்)

என்.கணேசன்




இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


4 comments:

  1. Why did Vishnugupt come to the land of his birth after so many years? Interesting.

    ReplyDelete
  2. விபுலானந்தன்April 28, 2022 at 7:08 PM

    அருமை . சம்பவங்கள் களை கட்டத் துவங்கி விட்டன.. இனி ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன என்ற கேள்வியுடன் காத்திருக்க வைத்துவிடுவீர்கள். ஜனரஞ்சகமான கதையோட்டம் தொடரட்டும் .

    ReplyDelete
  3. பாரதத்தை ஒன்றுபடுத்தி அலெக்சாண்டரை எதிர்க்க வேண்டுமென வற்புறுத்த வந்திருக்கிறார்...என நினைக்கிறேன்... தங்களின் முன்னுரையில் கூறியிருந்த தகவல்...

    ReplyDelete
  4. வரலாற்று கதைகள் எப்பொழுதும் சுவாரசியமானவை . அதில் கொஞ்சம் கற்பனைகளை சேர்த்தால் இன்னும் சுவாரஸ்யமானவையே . சாணக்கியரின் உண்மையான பிறப்பு ரகசியங்கள் எப்போதும் வரலாற்று ஆசிரியர்களால் மறைக்கப்பட்ட வந்திருக்கின்றது. சாணக்கியரின் உண்மையான பிறப்பின் ரகசியம் அறிந்தவராகள் இங்கே விளக்க முடியுமா?. சகோதரர் கணேசன் அவர்களாவது உண்மையான காரணத்தை விளக்குவீர்களா?

    ReplyDelete