சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 11, 2019

இல்லுமினாட்டி 4


ஜான் ஸ்மித் நாற்பது நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் ஆர்வத்துடன் அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களைப் பார்த்தார். அந்த ரிப்போர்ட்கள் அவரையும் திகைக்க வைத்தது அவர் முகபாவனையிலேயே தெரிந்தது. அவர் ஆழ்ந்த யோசனையுடன் தன் சட்டைப் பட்டன்களைத் திருகியபடியே ஒவ்வொரு ரிப்போர்ட்டையும் கவனமாகப் பார்த்தார். கடைசியில் நிமிர்ந்து உட்கார்ந்து தனக்குள் பேசிக் கொள்வது போல வியப்புடன் சொன்னார். “மனிதனின் உடலைப் போல் அற்புதமான கருவி வேறில்லை. ஆனால் அதில் நடக்கும் எத்தனையோ அற்புதங்கள் அவன் கவனத்திற்கே கொண்டு வரப்படுவதில்லை. அதனாலேயே அவன் தன் உடல்நலத்தை அலட்சியப்படுத்தி விடுகிறான்….”

தலைமை மருத்துவர் சொன்னார். “உண்மை. உண்மை…. வாழ்நாள் எல்லாம் உடம்பை அலட்சியப்படுத்தி போதையால் சீரழித்துக் கொண்டவன் உடலும் கூட மரணம் வரை போய் அற்புதம் புரிந்து இருக்கிறது பாருங்களேன்.”

ஜான் ஸ்மித் கேட்டார். “அவன் யார், விலாசம் என்ன என்பது தெரிய வந்ததா?”

தலைமை மருத்துவர் சொன்னார். “இல்லை. அவன் முன்னாள் மனைவி போன் செய்து பணம் எதாவது வைத்திருக்கிறானா என்று கேட்டு, இல்லை என்று தெரிந்தவுடன் வேறு எந்த விவரமும் சொல்லாமல் விட்டு விட்டாள். ஆனால் அவள் நம்பரை வைத்து அவள் விலாசத்தைக் கண்டுபிடித்து அவனைப் பற்றிய விவரங்களையும் கண்டுபிடித்து விடலாம் என்று போலீஸார் நினைக்கிறார்கள். இப்போதைக்கு அவன் பெயர் எக்ஸ் என்று வைத்திருக்கிறோம்….”

ஜான் ஸ்மித்துக்கு அந்தப் பெயர் பொருத்தமாகத் தோன்றியது. கணக்கில் கண்டுபிடிக்க வேண்டியதற்கு எக்ஸ் என்று சொல்வது போல் இவனும் கண்டுபிடிக்க வேண்டியவனே என்பதால் எக்ஸ் என்று அழைப்பது சரி தான். பின் மெல்லக் கேட்டார். “அவன் போகிற காமிராப் பதிவை நானும் பார்க்கலாமா?”

“தாராளமாக. அதன் நகலைத் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்” என்று சொன்ன தலைமை மருத்துவர் அந்தக் காமிராப் பதிவைக் காட்டினார். ஆர்வத்துடன் ஜான் ஸ்மித் தன் சட்டைப் பட்டனைத் திருகியபடியே  அதைப் பார்த்தார்.  தலைமை மருத்துவருக்கு ஜான் ஸ்மித்தின் இந்தப் புதுப்பழக்கம் வேடிக்கையாக இருந்தது. சென்ற முறைகளில் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவரிடம் இப்படி பட்டனைத் திருகும் பழக்கம் இருக்கவில்லை….

காமிராப்பதிவில் எக்ஸ் எந்தப் பதட்டமோ, தள்ளாட்டமோ இல்லாமல் நடந்து சென்றதை ஜான் ஸ்மித் ஆச்சரியத்துடன் கவனித்தார் அவன் சாகக் கிடந்த போதை ஆசாமி என்று இதைப் பார்த்து விட்டு யாருமே சொல்ல மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார். கடைசி காமிராப் பதிவில் அவன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய போது கூட அவனிடம் எந்தப் பக்கம் போவது என்ற குழப்பம் இல்லாமல் இருந்ததை ஜான் ஸ்மித் கவனித்தார்.

”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று தலைமை மருத்துவர் ஜான் ஸ்மித்திடம் கேட்டார்.

ஜான் ஸ்மித் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “இது மருத்துவ ஆச்சரியம் தான். ஆனால் எனக்கென்னவோ அவன் சீக்கிரமே எங்காவது மறுபடியும் விழுந்து கிடப்பான் என்று தோன்றுகிறது. போதைப் பழக்கம் அவ்வளவு சீக்கிரம் விடுவிக்க முடிந்ததல்ல. ஒரு முறை பிழைத்துக் கொண்டவனுக்கு அந்த நம்பிக்கையே இன்னும் பல முறை பழைய வழியிலேயே போகத் தூண்டும்….”

தலைமை மருத்துவர் சொன்னார். “நீங்கள் சொல்வது சரி தான். நான் கேட்டது இந்த மருத்துவ ஆச்சரியமே எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தோன்றுகிறது என்பதைத் தான்….”

ஜான் ஸ்மித் அவரையே வெறித்துப் பார்த்து விட்டுச் சொன்னார். “எனக்கு எந்தத் தீர்மானத்திற்கும் வர முடியவில்லை”

தலைமை மருத்துவர் கேட்டார். “அவன் யார், அவன் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதெல்லாம் விரிவாகத் தெரிந்தால் அதை வைத்து இந்த அதிசயத்திற்கான காரணத்தை நம்மால் யூகிக்க முடியுமா?”

ஜான் ஸ்மித் சொன்னார். “அதை வைத்து யூகிக்க முடியலாம். இல்லா விட்டால் ஆள் பெயர், வாழ்க்கை வரலாறு தெரிந்தாலும் கூட இந்தக் காரணம் எக்ஸாகவே தங்கி விடும் வாய்ப்பிருக்கிறது….”

தலைமை மருத்துவருக்கு ஜான் ஸ்மித் தன் உண்மையான அபிப்பிராயத்தை முழுவதுமாகச் சொல்லி விடவில்லை என்று ஏனோ தோன்றியது.

ஜான் ஸ்மித் மெல்ல எழுந்தார். “சரி நான் கிளம்பட்டுமா….. எனக்கு ஒரு உதவி வேண்டும். இசை மூளையில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் குறித்து நான் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுத நினைத்திருக்கிறேன். வூடு திகில் இசை நடனம் பற்றி உங்களிடம் சொன்ன உங்கள் நோயாளியைப் பார்த்து என் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என்று நினைக்கிறேன். அவரிடம் அது குறித்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா? அவர் பேசும் நிலைமையில் இருக்கிறாரா?”

“அவர் தற்போது குணமாகி ஓய்வாகத் தான் தங்கி இருக்கிறார். அதனால் பிரச்னை இல்லை. அவர் நல்ல மனிதர். இசை பற்றி மணிக்கணக்கில் பேசக்கூடியவர் தான். அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று சொன்ன தலைமை மருத்துவர் போனில் அந்த இசைப் பிரியரிடம் பேசினார். பிரபல மூளை விஞ்ஞானி ஜான் ஸ்மித் அவரிடம் இசைக்கும், மூளையின் அதிர்வலைகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து எழுதப்போகும் ஆராய்ச்சிக் கட்டுரை தொடர்பாக சில சந்தேகங்கள் கேட்க விரும்புகிறார் என்று தலைமை மருத்துவர் சொன்னதும் அந்த இசைப்பிரியர் உடனே அவரிடம் பேச ஒத்துக் கொண்டார்.

தலைமை மருத்துவர் சொன்னார். “அறை எண் 315ல் அவர் இருக்கிறார். நான் சில நோயாளிகளை இப்போது பார்க்க வேண்டியிருப்பதால் நீங்கள் போய்க் கொள்கிறீர்களா?”

ஜான் ஸ்மித் அந்த இசைப்பிரியருடன் பேசும் போது அவர் உடன் இருப்பதை விரும்பாததால் நிம்மதியடைந்து “நான் போய்க் கொள்கிறேன். நீங்கள் நோயாளிகளைப் பாருங்கள். அழைத்து இந்த அதிசய நிகழ்வைச் சொன்னதற்கு நன்றி….”

“நான் சொன்னவுடன் நீங்கள் இங்கே வந்ததற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று எழுந்து நின்று அவர் கையைக் குலுக்கி தலைமை மருத்துவர் அனுப்பி வைத்தார்.

ஜான் ஸ்மித் மூன்று நிமிடங்களில் அறை எண் 315ல் இருந்தார். ஐந்தே நிமிடங்களில் அறிமுக உபசார வார்த்தைகளை முடித்து விட்டு ஜான் ஸ்மித் கேட்க வந்த விஷயத்திற்கு வந்தார். “நீங்கள் ஹைத்தி சென்று வூடூவின் திகில் நடனங்களைப் பார்த்திருக்கிறீர்கள், அந்த இசையைக் கேட்டிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் எப்போது போயிருந்தீர்கள்?”

அந்த இசைப்பிரியர் உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார். “நான் பத்து வருடங்களுக்கு முன் போயிருந்தேன். என் அதிர்ஷ்டம் 85 வயதான அனுபவம் நிறைந்த ஒரு வூடூ ராணி நடத்தும் திகில் நடனச் சடங்கை என்னால் நேரில் பார்க்க முடிந்தது…..”

ஜான் ஸ்மித் இடைமறித்தார். “வூடூ ராணியா?”

“ஆமாம் வூடு திகில் நடனச் சடங்கை அனுபவம் வாய்ந்த பெண் குருமார்கள் தான் அதிகம் தலைமை ஏற்று நடத்துகிறார்கள். அந்தப் பெண் குருவை வூடூ ராணி என்று அழைக்கிறார்கள்….”

“உண்மையில் அந்தத் திகில் நடனச் சடங்கின் உத்தேசம் என்ன?”

“இறந்தவர்களின் ஆவியை வரவழைத்து சில கேள்விகளுக்குப் பதில் பெறுவது அல்லது சில உதவிகள் பெறுவது தான் திகில் நடனச் சடங்கின் உத்தேசம். வூடூ ராணி அதற்கான பாடலைப் பாடுவார். மத்தளம், இசைக்கருவிகள் எல்லாம் பயன்படுத்துவார்கள். இந்த இசையின் தாள லயத்திற்கேற்ப ஒருவர் நடனமாடுவார். வூடூவில் அவரைக் குதிரை என்றழைப்பார்கள். அந்தக் குதிரையின் உடம்பில் தான் அழைக்கப்படும் ஆவி ஏறும். அந்த ஆவி உடலில் புகுந்தவுடன் அந்த மனிதன் தன் சொந்த இயல்பை இழந்து விடுவான். ஆவியின் இயல்பு தான் அவனிடம் காணப்படும். சொல்லப்போனால் அந்த ஆவி மனிதனாகவே அவன் மாறி விடுவான். அந்த ஆவியிடம் தான் கேள்விகள் கேட்பார்கள். வேண்டுகோள் விடுப்பார்கள்….”

அவர் சொல்லிக் கொண்டே போனார். ஜான் ஸ்மித்துக்கு அந்த முழுச்சடங்கைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஆர்வம் இருக்கும் விஷயத்தை மட்டும் கேட்டு அந்த இசைப்பிரியருக்கு அனாவசிய சந்தேகங்களை ஏற்படுத்தி விட அவர் விரும்பாததால் சுவாரசியமாகத் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டார். கடைசியில் அவர் நிறுத்தியவுடன் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“அந்த ஆவியை வரவழைக்கப் பாடும் பாட்டும், இசைக்கப்படும் இசைக்கருவிகளும் அதற்கென்று வகுக்கப்பட்டிருக்கும் இசையில் தான் இருக்க வேண்டுமா, இல்லை எப்படி வேண்டுமானாலும் இசைக்கப்படுமா?”

“பழங்காலத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இசையைத் தான் பயன்படுத்தினார்கள். இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றி மாற்றியும் பாடுவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் அவை அந்த அளவு வெற்றிகரமாக இருப்பதில்லை என்பது அனுபவஸ்தர்களின் அபிப்பிராயம்.”

“அந்த உடலில் ஏறிய ஆவி எப்போது எப்படி வெளியேறுகிறது?”

“கேள்விகளும், வேண்டுகோள்களும் முடிந்த பிறகு நன்றி செலுத்தி, வணங்குவார்கள். பின் அந்த ஆவி உடலை விட்டுப் போக வேறுவிதமான இசை இசைக்கப்படும். பாடலும் மாறும். அந்த ஆவி வெளியேறிய பிறகு அந்தக் குதிரை என்பவன் மயங்கி விழுந்து விடுவான்…..”

அவர் சொல்லிக் கொண்டே போனார். அந்த விவரிப்பிலும் ஜான் ஸ்மித்துக்கு ஈடுபாடு இருக்கவில்லை.  அவர் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு மெல்லத் தன் சந்தேகத்தைக் கேட்டார். “நேற்று நீங்கள் கேட்ட இசை அந்த ஆவியை வரவழைக்கும் இசை போல இருந்ததென்று நீங்கள் சொன்னதாக டாக்டர் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. அது உண்மை தானா?”

“ஆமாம். அதே இசை தான். அதில் எனக்குச் சந்தேகமில்லை.”

“கடைசியில் கிதார் இசை ஆவியை அனுப்பி வைக்கும் இசையில் முடிந்ததா?”

“அது தான் இல்லை. வரவழைக்கும் இசையோடு அந்த கிதார் வாசிப்பாளர் முடித்துக் கொண்டார்....”

(தொடரும்)
என்.கணேசன்

13 comments:

  1. Replies
    1. I also think like button camera. May be other illuminate members viewing the document far from the place....

      Delete
  2. சோ அந்த ஆவி இன்னமும் அந்த எக்ஸ் மனிதன் உடம்பில் தான் இருக்கு.செம்ம interesting.

    ReplyDelete
  3. நான்கு episodeகளிலும் மருத்துவமனை நிகழ்வுகளையே காட்டியது அருமை...சுவாரஸ்யமாகவும் இருந்தது..

    திடீரென இடையில் நிறுத்தி விட்டு... கதையில் வேறு இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை கூறிவிடுவீர்களோ? என பயந்து கொண்டிருந்தேன்....😂😂😂😂

    ReplyDelete
  4. சுஜாதாJuly 11, 2019 at 7:38 PM

    என்ன சார் இல்லுமினாட்டி பேருக்கு ஏத்த மாதிரி செம மிரட்டலாய் போகுது. வாரா வாரம் டென்ஷன் ஏத்திகிட்டே போறீங்களே. வியாழன் வேற வாரம் ஒரு நாள் தான் வருது. வரும் வியாழன் வரை எப்படி வெய்ட் பண்ரது?

    ReplyDelete
  5. உங்கள் தொடர்களின் ரசிகன்.
    நன்றி

    ReplyDelete
  6. கடைசியில் செம ட்விஸ்ட், கிதார் இசை ஆவியை வரவைக்கும் இசையோடு முடிந்தது.....

    ReplyDelete
  7. So krish oda enemy innum saagala :0

    ReplyDelete
  8. May be antha aavi viswam aga irukalam. Atha varavechadhu jippsy ah kooda irukalam.
    Sema interesting a story poguthu....

    ReplyDelete