சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 14, 2019

இருவேறு உலகம் – 123

னிமையில் கடுமையான தவம் மேற்கொள்ளும் தவசிகள் பெரும்பாலும் அடுத்தவர்களின் குறுக்கீட்டை விரும்பாதவர்களாக இருப்பார்கள். ஒருமுறை கலையும் தவத்தை மீண்டும் தொடர, அந்தப் பழைய தவநிலைக்கு மீண்டும் செல்ல, சில சமயங்களில் மிக நீண்டகாலம் தேவைப்படுவதுண்டு. அதனால் அனாவசியமாய் இடைஞ்சல் செய்பவர்களை அந்தத் தவசிகள் கடுமையாய் சபிப்பதும் உண்டு. குகைக்கு உள்ளே இருக்கும் தவசி அப்படி ஏதாவது செய்து விடும் வாய்ப்பிருந்தால் கூட வந்தவர்களில் ஒருவனையே உள்ளே போய் நிலவரத்தைப் பார்க்கச் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் மற்றவர்களும் உள்ளே நுழைந்து பார்ப்பார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. உள்ளே மிக முக்கியமாக இருக்கும் ஏதோ ஒன்றை இவர்கள் அழித்தாலோ, கலைத்தாலோ வந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடும். மாஸ்டரின் குரு ஏதோ ஒரு மிகநல்லது அல்லது சக்தி வாய்ந்தது இங்கு கிடைக்கும் என்ற பொருளிலேயே இந்த இடத்தை மிக ரகசியமாக தன் பிரிய சிஷ்யனுக்குத் தெரிவிக்க முயன்றிருக்கிறார்…. இதையெல்லாம் யோசித்துக் கடைசியில் தானே உள்ளே நுழைவது என்று முடிவு செய்த விஸ்வம் சக்தி அலைகளால் தனக்கு ஒரு தற்காப்பு அரணை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை வெளியிலேயே இருக்க சைகை செய்து விட்டு, ஜாக்கிரதையாக உள்ளே நுழைந்தான்.

இமயத்தின் வெளிக்குளிர் அந்தக் குகைக்குள் இருக்கவில்லை. வெளியே இருக்கும் ஒளி நுழைவாயிலிலேயே நின்று விட்டிருந்தாலும் கூட உள்ளே வேறு ஒரு மங்கலான ஒளி தெரிந்தது. அது அந்தத் தவசியின் தவ வலிமையின் ஒளியாகவே இருக்க வேண்டும். அந்தத் தவசி இப்போது அமர்ந்த நிலையில் இருக்கவில்லை. படுத்த நிலையிலேயே இருந்தார். இடுப்பைச் சுற்றி ஒரு காவித்துணி மட்டுமே அவர் உடலில் ஆடையாக இருந்தது. மிக நெருங்கிப் பார்த்த விஸ்வத்துக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்தத் தவசி விஸ்வம் எதிர்பார்த்தது போல இந்தியர் அல்ல. திபெத் அல்லது சீனத் துறவியும் அல்ல. பார்க்க வெள்ளைக்காரர் போலத் தெரிந்தார். தாடியும் தலைமுடியும் சாம்பல் நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாய் இருந்தது. அந்தத் தவசியிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அலைவீச்சு மிகச் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் உடல்நிலையில் மிகப் பலவீனமாக இருந்தார். மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மனிதர் போலத் தெரிந்தார். அவருடைய கண்கள் விஸ்வத்தை வெறித்துப் பார்த்தன. அந்த வெறித்த பார்வையில் கோபமோ, அதிர்ச்சியோ தெரியாததால் அவர் குறிப்பிட்ட ஒரு நபரை மட்டும் எதிர்பார்த்தவராக இல்லை என்பதும், தவம் விலகிய நிலையில் தான் இருந்தார் விஸ்வத்துக்குப் புரிந்தது. ஓரளவு நிம்மதியடைந்த அவன் தரையில் மண்டி இட்டு அவருக்கு வணக்கம் தெரிவித்தான். ஏதாவது சொல்கிறாரா என்று பார்த்தான். இல்லை.  செய்தி ஏதாவது அவர் கண்களில் தெரிகிறதா என்று பார்த்தான். அதுவுமில்லை. அவர் இடது கை மட்டும் மெல்ல உயர்ந்தது. விஸ்வம் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த கம்பளித் துணியை அது பிடித்துக் கொண்டது. விஸ்வம் தன் வயிற்றுப் பகுதியின் மணிபுரா சக்ராவில் இருந்து சக்தி உருவப்படுவது போல் உணர்ந்தான். வேகமாக அந்தக் கம்பளித் துணியை அவிழ்த்து விட்டுப் பின் நகர்ந்தான். அந்தத் தவசியின் கையில் அந்தக் கம்பளித்  துணி இருந்தது. அதை அந்தக் கையில் இருந்து இழுக்க விஸ்வம் முயன்றான். அந்தக் கம்பளித் துணியின் வழியாக அவனுடைய சக்திகள் வேகமாக இழுக்கப்படுவது போல் உணர்ந்தான். உடனே அந்தக் கம்பளித் துணியிலிருந்து அவன் கைகளை விலக்கிக் கொண்டான். இந்த ஆள் வேண்டுமென்றே செய்கிறாரா இல்லை எல்லாம் தானாக நடக்கிறதா என்பது புரியவில்லை. தன் சக்திகளைக் குவித்து அவரை அறிய முயன்றான். முடியவில்லை. அவர் கண்கள் அவன் மீதிருந்து விலகி அவன் பின்னால் இருந்த ஏதோ ஒன்றில் நிலைத்தது. கண்களில் மின்னல் ஒன்று தோன்றி மறைந்தது. அவர் இறந்து விட்டார்.

விஸ்வம் கடைசியாக அவர் பார்வை நிலைத்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள மெல்லத் திரும்பினான். குகையின் பாறைச்சுவர் தான் இருந்தது. கூர்ந்து பார்த்த போது அந்தச் சுவரில் சிவனின் முகம் செதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இது அந்தத் தவசி வழிபட்ட உருவமாகத் தோன்றவே விஸ்வம் ஆச்சரியப்பட்டான். பொதுவாக எல்லா இடங்களிலும் சிவனை லிங்க வடிவில் தான் வழிபடுகிறார்கள். சிவனின் முகம் வழிபடப்படுவது அரிதிலும் அரிது. இமயமலையில் பனி லிங்கங்கள் கூட சில இருக்கின்றன. ஆனால் இப்படி முகம் ஒன்று இருப்பது ஆச்சரியமே. விஸ்வம் அந்தச் சிவனின் முகத்தை ஆராய்ந்தான். நல்ல சிற்ப வேலைப்பாடு. இந்தத் தவசியே செதுக்கியதோ இல்லை வேறு யாரோ ஒரு சிற்பியால் செதுக்கப்பட்டதோ தெரியவில்லை. இரண்டு கண்கள் அரைகுறையாக மூடியிருக்க நெற்றிக் கண்ணும் அப்படியே பாதித் திறந்து இருந்தன. அவன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நெற்றிக் கண் ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது. விஸ்வத்தின் ஆச்சரியம் அதிகரித்தது. மிக நெருங்கிப் பார்த்த போது விஸ்வம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனான். காரணம் சிவனின் நெற்றிக் கண்ணைச் சுற்றி ஒரு மெலிதான முக்கோணம் தெரிந்தது. ஒரு முக்கோணத்துக்குள் ஒரு கண். இல்லுமினாட்டியின் சின்னம்…. மெல்ல அந்தச் சிவனின் நெற்றிக் கண்ணைத் தொட்டுப் பார்த்தான் ஒரு சக்தி ஓட்டத்தை அவன் கைகள் உணர்ந்தன. அதே சமயம் அந்த முக்கோணம் லேசாக அசைந்தது. விஸ்வம் அந்த முக்கோணத்தை மேலும் நன்றாக அசைத்துப் பார்த்தான். அந்த முக்கோணம் சிலையில் பொருத்தப்பட்டுத் தான் இருக்கிறது என்பது தெரிந்தது. சற்று பலம் பிரயோகித்து அதை அங்கிருந்து அவன் உருவப் பார்த்தான். உடனே வரவில்லை என்றாலும் இரண்டு நிமிட முயற்சிக்குப் பின்னால் அந்த முக்கோணம் கழன்று அவன் கைக்கு வந்தது. விஸ்வம் பெரியதொரு சக்தி வீச்சை அதில் உணர்ந்தான். வாழ்விலேயே இது வரை அனுபவித்திருக்காத மகிழ்ச்சியையும் விஸ்வம் உணர்ந்தான்.

யோசித்துப் பார்க்கையில் எல்லாம் முன்பே தீர்மானித்திருப்பது போல விஸ்வத்துக்குத் தெரிந்தது. மாஸ்டருக்காக குரு வைத்திருந்த அந்த வரைபடம் அவன் கையில் தான் முதலில் கிடைத்தது.  அவன் தான் இங்கு முதலில் வர முடிந்தது. இறக்கும் முன் அந்தத் தவசியின் பார்வை அந்த பாறைச்சுவர் சிற்பத்தில் விழுந்ததால் தான் அவன் அதைப் பார்த்தான். அவனுக்கு அதன் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பது போலவே அந்தச் சிற்பத்தின் நெற்றிக் கண் ஒளிர்ந்தது. அதனால் தான் அவன் அதைக் கூர்மையாகக் கவனித்தான். அதனால் தான் அந்த முக்கோணம் தெரிந்தது. அது இல்லுமினாட்டியின் சின்னமாகவும் தெரிகிறது என்பதற்காகத் தான் அவன் தொட்டுப் பார்த்தான். அசைந்ததால் தான் அதை வெளியே எடுத்தான். இல்லுமினாட்டியின் தலைவனாக அவன் ஆக வேண்டும் என்பதற்காகவே எல்லாம் நடப்பது போல் தோன்றியது. இந்த்ச் சின்னத்தை அவன் எடுத்துக் கொண்டு போய் அந்த இல்லுமினாட்டி உறுப்பினர்களிடம் காண்பித்து பேச வேண்டிய விதத்தில் பேசினால் அவனே தேர்ந்த்டுக்கப்பட்டவன் என்பதை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன. அவன் தேஜஸை தவ வலிமையால் அதிகப்படுத்திக் கொள்வான். இல்லுமினாட்டியின் தலைவனாக வேண்டிய அத்தனைத் தகுதிகளும் அவனுக்கு இருக்கின்றன. விதியும் அவனுக்கு இந்த அளவுக்கு உதவியிருக்கிறது….. அவன் கண்டிப்பாக அந்த இயக்கத்தின் தலைவன் ஆவான். அவன் உலகத்தின்  விதியை உருவாக்குவான். அவனுக்குள் உற்சாகம் பொங்கியது…..

அந்தக் குகையில் வேறெதாவது வித்தியாசமாக இருக்கிறதா என்று ஒரு முறை சுற்றிப் பார்த்தான். எதுவும் இருக்கவில்லை. கிளம்பத் தயாரான போது அவன் கம்பளித்துணி அந்தத் தவசியின் கைகளில் இருப்பதைக் கவனித்தான். அதை மெல்ல உருவ மறுபடியும் முயன்றான். வரவில்லை. சற்று பலம் பிரயோகித்தான். அப்படியும் வரவில்லை. பின் விட்டு விட்டான். இத்தனை காலம் தவம் செய்த ஆசாமிக்குக் கடைசியில் கிடைத்திருப்பது அவன் கம்பளி தான். இல்லுமினாட்டி சின்னத்தை அவனுக்குக் கொடுத்திருப்பதற்கான சன்மானமாக அது இருந்து விட்டுப் போகட்டும் என்று நினைத்தபடி அங்கிருந்து வெளியே வந்தான்.

வெளியே வந்த போது ஒரு விஷயம் மட்டும் விஸ்வத்தின் மனதை இடித்தது. அந்தக் கருப்புப் பறவை! அந்த வரைபடத்தில் இருந்த கருப்புப் பறவை வானத்தில் தெரிகிறதா என்று பார்த்தான். தெரியவில்லை. திரும்பிக் கீழே செல்கையில் அந்த ஆட்களிடம் அந்தப் பகுதிகளில் ஏதாவது கருப்புப் பறவையை அவர்கள் பார்த்தது உண்டா என்று கேட்டான். ஐந்து பேரில் நான்கு பேர் பார்த்ததில்லை என்றார்கள். ஒருவன் அந்த மலைப்பகுதியில் ஒரே ஒரு முறை மட்டும் பார்த்திருப்பதாகச் சொன்னான். அது எப்போது என்பதை அவன் நினைவு வைத்திருக்கவில்லை. அந்தப் பறவையுடன் இணைத்துச் சொல்லும்படியான சம்பவம் எதுவும் கூட அவன் நினைவில் இருக்கவில்லை.

அந்த வரைபடத்தில் இருந்தது கருப்புப் பறவை தானா இல்லை வேறெதாவதா?

(தொடரும்)

என்.கணேசன்

5 comments:

  1. விஸ்வம்... மற்றும்... தவசி இருவரும் குகையில் சந்திக்கும் காட்சி ....மிக..மிக..அற்புதம்...அடுத்து என்ன நடக்கும்? என கணிக்கவே முடியவில்லை...

    விஸ்வத்துக்கு தேவையானது அந்த குகையில் கிடைத்து விட்டது... மாஸ்டருக்கு..அந்த கம்பளியில் ஏதேனும் கிடைக்கும்.. என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. அந்த தவசி ஏதோ ஒரு கடமையை நிறைவேற்ற காத்துக் கொண்டிருப்பது போலவும், விஸ்வம் வந்ததும் 'கடமை முடிந்ததை' சிவன் மூலம் உணரப்பட்டு இறந்தது போல தோன்றுகிறது....

    ReplyDelete