என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, August 17, 2022

சாணக்கியன் நாவலுக்கு துக்ளக்கில் வந்துள்ள விமர்சனம்!

 இந்த வார துக்ளக் (24.8.2022) இதழில் என் சாணக்கியன் நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்-





நன்றி துக்ளக் 

Monday, August 15, 2022

யாரோ ஒருவன்? 98


ரேந்திரன் முன்பே தெரிவித்திருந்தபடி கல்யாணையும் சரத்தையும் ஏழு மணிக்குச் சந்தித்தான். இருவரும் முந்தைய தைரியத்தில் இல்லை என்பது அவர்களைப் பார்த்த போதே நரேந்திரனுக்கு நன்றாகத் தெரிந்தது. ஏதோ கவலை இருவரையும் அரித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. முக்கியமாக கல்யாண் அமைதியிழந்து காணப்பட்டான்.

நரேந்திரன் இந்த முறை தனித்தனியாக அவர்களிடம் எதையும் விசாரிக்கவில்லை. அவர்கள் இருவரையும் அழைத்து உட்கார வைத்து விட்டுச் சொன்னான். “மாதவன் இறந்த வெடிகுண்டு வழக்கில் ஒரு பெரிய உண்மை வெளியாயிருக்கு. அதனால நீங்க மறுபடி இங்கேயிருந்து போனதிலிருந்து மாதவன் இறந்தது வரை தயவு செய்து இன்னொரு முறை சொல்லுங்களேன்.”

சரத் கல்யாணைப் பார்க்க கல்யாண் முன்பு சொன்னதையே சிறிதும் மாற்றாமல் சொன்னான். மாதவன், சரத், கல்யாண் மூவரும் சேர்ந்து தான் மணாலிக்கு ரயிலில் போனார்கள். அங்கே ஒரு விடுதியில் தங்கினார்கள். முதல் இரண்டு நாட்கள் மணாலியைச் சுற்றிப் பார்த்தார்கள். பனிப்பொழிவை ரசித்தார்கள். பின் சற்று தொலைவில் ஒரு மலைக்கு ட்ரெக்கிங் போக முடிவெடுத்தார்கள். போகும் அன்று காலை தான் மாதவன் தன் ஷூ பிய்ந்திருப்பதைக் கவனித்தான். சீக்கிரமாய் போய் ஒரு ட்ரெக்கிங் ஷூ வாங்கிவந்து விடுவதாகச் சொல்லி மாதவன் தனியாகப் போனான். போனவன் வரவேயில்லை. அவன் வராதது அவர்களை கவலைக்குள்ளாக்கியது. அப்போது தான் செய்திகளில் ஒரு காரில் வெடிகுண்டு வெடித்திருக்கிறது என்றும் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் பலியாகி இருக்கிறான் என்றும் சொன்னார்கள். இருவரும் பயந்து கொண்டே வெடிகுண்டு வெடித்த இடத்தில் பார்க்கப் போனால் இறந்து போயிருந்தது மாதவன் தான் என்பது தெரிந்தது. இருவரும் அதிர்ந்து போனார்கள்.

நரேந்திரன் கேட்டான். “இறந்து போனது மாதவன் தான் என்பதை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்?”

கல்யாண் சொன்னான். “அந்தக் கார் டிரைவர் சொன்ன அடையாளங்கள் எல்லாம் மாதவனோடதா இருந்துச்சு. அது மட்டுமில்லாம மாதவனோட டிரைவிங் லைசென்ஸ் பாதி கருகி அங்கே கிடந்துச்சு”

நரேந்திரன் சொன்னான். “அந்தக் கார் டிரைவர் இப்ப மாத்தி சொல்றான். அவன் கார்ல இருந்தது மாதவனில்லைன்னு சொல்றான்”

இரண்டு பேர் முகமும் பேயறைந்தது போல மாறியது. கல்யாண் விரைவில் சுதாரித்துக் கொண்டான். ஆனால் சரத்தால் அது முடியவில்லை.

கல்யாண் கேட்டான். “அப்படின்னா மாதவனோட டிரைவிங் லைசென்ஸ் எப்படி அங்கே பாதி கருகின நிலையில விழுந்து கிடந்துச்சு.”

நரேந்திரன் கல்யாணையே கூர்ந்து பார்த்தபடி சொன்னான். “யாரோ அப்பறமா வந்து அந்த இடத்துல போட்டுருக்காங்கன்னும் இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க”

சரத் முகத்தில் இரத்தம் வடிந்தது. கல்யாணும் திடுக்கிட்டான். ஆனால் இப்போது அவன் அதை மறைத்துக் கொள்ளாமலேயே கேட்டான். “ஏன்?”

நரேந்திரன் அவனுடைய மனோதிடத்தை மனதிற்குள் பாராட்டியபடி சொன்னான். ”தெரியல. அதான் உங்களுக்கு எதாவது சொல்ல முடிகிறதான்னு கேட்க வந்தேன்?”

கல்யாண் சொன்னான். “ஒன்னுமே புரியல. அப்படின்னா மாதவன் எங்கே?”

நரேந்திரன் மெல்ல எழுந்தபடி சொன்னான். “தெரியல. மாதவனுக்கு வேறெதாவது ஆயிருக்கலாம்னு சந்தேகமாய் இருக்கு”

அதற்குப் பின் அங்கு இருக்காமல் நரேந்திரன் விடைபெற்றுக் கொண்டான். அவன் போன பிறகு சரத் நடுங்க ஆரம்பித்தான். கல்யாண் அவன் தோளை இறுக்கப் பிடித்துக் கொண்டு சொன்னான். ”அமைதியாயிரு. அவங்க எதையும் கண்டுபிடிக்க முடியாது. நாமளா உளறாத வரைக்கும் நமக்குப் பிரச்சனையில்ல”


டெல்லி ஆஸ்பத்திரியில் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், அவர்களை யாரெல்லாம் பார்க்கிறார்கள், அவர்கள் மருத்துவ ரிப்போர்ட்கள் என்னவெல்லாம் சொல்கின்றன என்ற தகவல்கள் எல்லாம் தினந்தோறும் விரிவாகவும், விளக்கமாகவும் நரேந்திரனுக்கு இரவு பத்து மணிக்கு மின்னஞ்சல் மூலம் வந்து சேர்கின்றன. அவர்கள் இருவரும் அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து அவனுடைய ஒற்றன் ஒருவன் ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ் ஒருத்திக்குப் பணம் தந்து அந்தத் தகவல்களை ரகசியமாகப் பெற்று அவனுக்கு அனுப்பி வருகிறான்.

அன்று மாலையில் அங்கு நடந்த சம்பவங்கள் நரேந்திரனையும் திகைக்க வைத்தன. அந்த இருவரையும் கொல்வதில் தனக்கு விருப்பமில்லை என்று அவன் நாகராஜுக்குத் தெரிவித்த போது ”சரி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவன் சொன்னதை எப்படி சாதிக்கப் போகிறான் என்று நரேந்திரனுக்குச் சந்தேகமாகவே இருந்தது. இப்போது இருவரும் அரைப்பைத்தியங்கள் போல அவ்வப்போது நடந்து கொள்கிறார்கள் என்பதும், திடீர் திடீரென்று மாறுகிறார்கள் என்பதும், ரகசியமாக வைத்திருக்கக்கூடிய விஷயங்களையும் அவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்பதும் கேள்விப்படுகிற போது அந்த இருவரையும் நம்பிக்கையோடு பொது இடங்களுக்கோ, புகார் கொடுப்பதற்காகவோ ஜனார்தன் த்ரிவேதி அழைத்துப் போக முடியாது என்பது புரிந்தது. அது அவருக்கே வினையாக முடியலாம். இன்றிரவு சஞ்சய் ஷர்மா தன் கல்லூரிக் காலத்தில் ஒரு காதலியோடு அனுபவித்த உல்லாச வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டானாம். மதன்லால் ஒரு கொலை வழக்கிலிருந்து விடுபட வைக்க ஒரு பணக்காரனிடமிருந்து வாங்கிய 35 லட்சத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தானாம்.  டாக்டர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட போது இருவரையும் சீக்கிரத்தில் குணப்படுத்தி விடமுடியாது என்று சொல்லிக் கொண்டார்களாம்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு அவன் நாகராஜுக்குப் போன் செய்தான். சுதர்ஷன் தான் வழக்கம் போல் முதலில் பேசினான். அவனிடம் நரேந்திரன் சொன்னான். “நான் பதினொன்றரை மணி விமானத்துல டெல்லி போறேன். இனி இங்கே வர வேண்டிய வேலை எதுவும் இல்லை. போறதுக்கு முன்னாடி மகராஜை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போகணும்னு ஆசைப்படறேன். அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன். பத்தே நிமிஷம்”

“கேட்டுட்டு சொல்றேன்” என்ற சுதர்ஷன் ஒரு நிமிடம் கழித்து சொன்னான். “சரி ஒன்பது மணிக்கு மகராஜ் வரச் சொல்றார்”

சரியாக ஒன்பது மணிக்கு நரேந்திரன் நாகராஜ் வீட்டில் இருந்தான். நாகராஜைப் பார்த்து இரு கைகளையும் கூப்பியபடி அவன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். “நன்றிங்கற ஒரு சம்பிரதாயமான வார்த்தையைச் சொன்னால் அது போதாது. நான் என் வாழ்நாள் முழுசும் நீங்க செஞ்சிருக்கற இந்த உதவியை மறக்க மாட்டேன். நான் உங்களுக்கு எப்போதும் கடன்பட்டவனாவே தான் இருப்பேன். உங்களை மாதிரி சக்தி வாய்ந்த ஒருத்தருக்கு நான் திரும்பச் செய்ய ஒன்னுமில்லைன்னாலும் எப்பவாவது ஏதாவது காரியம் என்னால ஆகணும்னா தயவு செஞ்சு நீங்க என் கிட்ட சொல்லணும். ராமனுக்கு அணில் செஞ்ச சேவை மாதிரி அதை பாக்கியமா நினைச்சு நான் செய்வேன்”

நாகராஜ் மென்மையாகச் சொன்னான். “ஒருத்தனை எப்பவுமே காப்பத்தறது அவனோட தர்மம்னும், அழிக்கிறது அவனோட பாவங்கள்னும்  என் குரு அடிக்கடி சொல்வார். உன்னைக் காப்பாத்தினது உன்னோட தர்மம், உன்னைப் பெத்தவங்களோட தர்மம். நான் வெறும் கருவி அவ்வளவு தான்.... உனக்கிருக்கும் ஆபத்து முடிஞ்சுடலை. அது உன் பின்னாடியே இருக்கு. அதனால எச்சரிக்கையாவே இரு.”

நரேந்திரன் தலையசைத்தான். அவன் அந்த ஆபத்தினை அறிவான். அறிந்தே தான் அவன் களமிறங்கியிருக்கிறான். தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்காமல் நீண்ட காலம் வாழ்வதை விட இந்த முயற்சியில் மரணமே வந்தாலும் அவனுக்கு கௌரவமே. நாகராஜின் காலைத் தொட்டுக் கையை இரண்டு கண்களிலும் ஒற்றிக் கொண்டு கிளம்பினான்.

அவன் கார் ஏறிப் போவதையே ஒரு செடியின் பின்னால் ஒளிந்திருந்து பார்த்து விட்டு வேலாயுதம் இந்தச் செய்தியை மகனுக்குத் தெரிவிக்க ஓடினார்.

கல்யாண் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருந்த மேகலா சமையலறைக்குப் போகும் வரை காத்திருந்து விட்டு அவர் அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னார். “இப்பவும் அந்த அதிகாரி பக்கத்து வீட்டுக்கு வந்துட்டுப் போறான். எனக்கு என்ன சந்தேகம்னா பக்கத்து வீட்டுக்காரன் தன்னோட சக்தியால மாதவன் விஷயத்துல நடந்ததை எல்லாம் கண்டுபிடிச்சு அந்த அதிகாரி கிட்ட சொல்லியிருப்பானோ? இல்லாட்டி அடிக்கடி ஏன் வந்து போறான். இவனும் ஒரு தடவை வந்து பார்க்க அஞ்சு லட்சம்னு வாங்கறவன் அவனை மட்டும் ஏன் இத்தனை தடவை பார்க்க ஒத்துக்கிறான். இதுல எதோ ஒரு உள்விஷயம் இருக்கு. நீ என்ன சொல்றே?”

கல்யாணுக்கும் அவர் சொல்வது சரியாகத் தான் தோன்றியது. ஆனால் பழைய நிகழ்வைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால் அபூர்வ சக்திகள் எல்லாம் கோர்ட்டில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சட்டம் அதை எல்லாம் அங்கீகரிப்பதில்லை….  அவனுடைய கவலைகள் எல்லாம் இப்போது தொழில் சம்பந்தமான பிரச்னைகளாக இருந்தது. இன்னும் எதுவும் சரியாகவில்லை…

(தொடரும்)
என்.கணேசன் 

Thursday, August 11, 2022

சாணக்கியன் 17

 

நாளை பௌர்ணமி!   

 

மைனிகாவும் அவளுடைய தாதியும் நாளை தட்சசீலத்தை விட்டுப் போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் காலையில் இருந்தே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.   மூட்டை முடிச்சுகளை மறைவாக வைத்து முடிக்கையில் மாலை நேரமாகி விட்டது. குளித்து அலங்காரம் செய்து கொண்டு சேனாதிபதி சின்ஹரனின் வரவுக்காகக் காத்திருக்கையில் சின்னதாய் ஒரு வருத்தம் அவள் மனதின் ஒரு மூலையில் எழத்தான் செய்தது. சேனாதிபதி சின்ஹரன் மிக நல்லவன். மாவீரன். ஆம்பி குமாரன் போல அவன் தரம் கெட்டவனல்ல.   அவளை ஒரு தாசியைப் போல சின்ஹரன் எப்போதுமே நடத்தியதில்லை. ஒரு காதலியைப் போலத் தான் நினைத்திருந்தான். அப்படித்தான் அவளிடம் அவன் பழகவும் செய்தான். அவள் நாளை போனபின் அவள் அவனை ஏமாற்றியதற்கு அவன் கண்டிப்பாக வேதனை அடைவான். அவளை அவன் வெறுக்கவும் செய்வான். அதை நினைக்கையில் அவளுக்குச் சிறிது வருத்தமாகத் தான் இருந்தது என்றாலும் அவள் இதைச் செய்யாமல் இருக்க முடியாது. அவளுடைய தாய்நாட்டை விட எதுவும் அவளுக்குப் பெரிதல்ல. தாசியாக அவள் ஆனது விதி என்றாலும் அவளுடைய பெண்மையைத் தனிப்பட்ட இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல் தாய்நாட்டுக்காகப் பயன்படுத்துவதில் அவள் பெருமையையே உணர்கிறாள்.

 

இன்று இரவு எதாவது காரணம் சொல்லி அவன் அவள் வீட்டுக்கு வராமல் போனால் அவர்களுடைய திட்டம் நிறைவேறாது.  ஆனால் எத்தனை நேரமானாலும் அவன் வராமல் இருக்க மாட்டான். அந்த அளவு அவள் அவனை மயக்கி இருக்கிறாள்.

 

கேகய அரசர் புருஷோத்தமன் தன் அமைச்சர் இந்திரதத்திடம் சந்தேகத்துடன் கேட்டார். “இந்தச் சிறிய படை போதுமா இந்திரதத்?”

 

காந்தார நாட்டின் படை பலம் கேகய நாட்டின் படைபலத்திற்குச் சரிசமமானது தான். அதனால் பெரிய படையுடன் போய்ப் போராடுவது தான் சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. இந்தப் போரே அவர் சிறிதும் விரும்பாதது தான். காந்தார அரசர் அவருக்கு நண்பர்.  ஆம்பி குமாரன் ஆட்சி விஷயங்களில் தலையிடாத வரை அந்த இரு நாடுகளுக்கு இடையே எந்தப் பெரிய பிரச்சினையும் வந்ததில்லை. சில சில்லறைத் தகராறுகள் அண்டை நாடுகளுக்கு இடையே வருவது சகஜம். அந்தச் சில்லறை விஷயங்களை அவர்கள் பேச்சு வார்த்தைகளிலேயே சரி செய்து வந்திருந்தார்கள். ஆம்பி குமாரன் நடந்து கொண்ட முதலிரண்டு அத்துமீறல்களை சிறுபிள்ளைத்தனமாகவே எடுத்துக் கொண்டு அவர் பெரிதுபடுத்தாமல் இருந்தார். ஆனால் இனியும் பொறுத்துக் கொண்டே போனால் அது கோழைத்தனமாகத் தோன்ற ஆரம்பித்து விடும் என்பதால் தான் அவர் அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தார். அமைச்சர் இந்திரதத் போட்டிருக்கும் திட்டம் மிக புத்திசாலித்தனமாகவே இருக்கிறது என்றாலும் இந்திரதத் அழைத்துப் போகும் சிறிய படை போதுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.

 

அவர்கள் தயார் நிலையில் இல்லாத சமயம் இது என்பதால் இச்சிறு படை கண்டிப்பாகப் போதும் அரசே. என்ன நடக்கிறது என்று புரிந்து தலைமை பொறுப்பேற்கக் கூடியவர்கள் தயாராவதற்குள் நம் படை அனைத்தையும் சாதித்து விடும். சின்ஹரன் களத்திற்கு வர மாட்டான். ஆம்பி குமாரன் தயாராவதற்குள் நம் ஆக்கிரமிப்பு பூரணமாகி விடும். மேலும் பெரிய படையுடன் போவதானால் வேகமாகப் போகவும் முடியாது. காந்தார ஒற்றர்கள் அதை அறியாமல் இருக்கும் வாய்ப்பும் குறைவு. அதனால் தான் இந்தத் திட்டத்தைப் போட்டோம்...”


கேகய அரசர் இந்திரதத்தை மனதிற்குள் பாராட்டினார். இந்திரதத் மிகச் சிறந்த அறிவாளி. அறிவாளி என்று நினைக்கையில் இந்திரதத் தட்சசீல கல்விக்கூடத்தில் படித்தவர் என்பதும் நினைவுக்கு வந்தது. ”கல்வி கற்ற நகருக்குப் படையோடு போரிடப் போவது உனக்குச் சங்கடமாக இல்லையா இந்திரதத்?” என்று அவர் புன்னகையோடு கேட்டார்.

 

ஆம்பி குமாரன் சமாதான வழிக்கு உடன்பட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே அரசரே. என்ன செய்வதுஎன்று இந்திரதத் புன்னகையுடன் பதில் அளித்தாலும் மனதில் அவருக்கு ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது.   அவருடைய நண்பர் விஷ்ணுகுப்தருக்கு இந்தச் செயல் அதிருப்தியைத் தரும் என்பதில் சந்தேகமேயில்லை.  விஷ்ணுகுப்தர் காந்தார நாட்டுக்கும் கேகய நாட்டுக்கும் இடையே தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இதைப் பார்க்க மாட்டார்.  பாரதம் என்ற தேசத்தின் இரு பகுதிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது அந்த தேசத்தைப் பலவீனப்படுத்தும் என்று தான் பார்ப்பார். நண்பரை எண்ணுகையில் மனம் லேசானது. அவர் நண்பர் சாதாரண மனிதர் அல்ல. அறிவின் உச்சத்தை எட்டியவர். அதுமட்டுமல்ல. விஷ்ணுகுப்தரைப் போல அறிவின் உச்சத்தின் படியே முழுக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள முடிந்த ஒரு மனிதனை இந்திரதத் இது வரை பார்த்ததில்லை. எத்தனை பெரிய அறிவாளியையும் சமயங்களில் மனம் கவிழ்த்து விடும். ஆனால் விஷ்ணுகுப்தருக்கு அறிவும், மனமும் ஒன்று தான். தனிப்பட்ட லாபம் அடைய நினைத்தால் என்னவாகவும் உயர முடிந்த அந்த மனிதர் தனக்காக எதையும் விரும்பி இந்திரதத் கண்டதில்லை. நண்பனை அவர் சந்தித்துப் பல காலம் ஆகிறது. இந்தச் சூழலில் சந்திக்க நேர்வது துர்ப்பாக்கியம் தான்....

 

சேனாதிபதி சின்ஹரன் வானில் ஜொலித்த முழு நிலவின் அழகை அண்ணாந்து ரசித்துப் பார்த்தான். வழக்கத்தை விட நிலவு கூடுதல் அழகோடு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. நிலவை நன்றாக ரசித்து விட்டு மைனிகாவைச் சந்திக்கக் கிளம்பிய  அவன் மனதில் எதோ ஒரு நெருடல் ஏனோ திடீர் என்று எழ ஆரம்பித்தது. போகாதே என்று எதுவோ தடுப்பது போலத் தோன்றியது. ஏன் இந்தத் திடீர் உணர்வு என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனால் மைனிகாவை இன்று சந்திக்காமல் இருக்க முடியாது. இன்று ஏதோ ஒரு விசேஷ விருந்து படைப்பதாக அவள் சொல்லி இருந்தாள். அது என்ன என்று அவன் கேட்ட போது அதை முன்கூட்டியே சொல்ல மாட்டேன் என்று அவள் சொல்லி விட்டாள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே போர்வையைப் போர்த்திக் கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான். மைனிகாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விருந்து குறித்த கற்பனைகளையும் விரிய விட்ட பிறகு அந்த நெருடல் உணர்வு உள்ளே தள்ளப்பட்டது.

 

அது மைனிகாவின் வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு முன் மறுபடி ஒரு முறை மேல் எழுந்து எச்சரித்தது. மறுபடியும் ஏன் இந்த உணர்வு என்று அவன் யோசித்தாலும் அவன் கை அவள் வீட்டுக் கதவைத் தட்டுவதை அது நிறுத்தவில்லை.

 

கதவைத் திறந்த மைனிகா அவன் ஏதோ யோசனையுடன் உள்ளே நுழைவதைப் பார்த்து ”என்ன யோசனை என் காதலரே” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள்.

 

அவளைப் பார்த்தவுடன் அவள் அழகில் மயங்கி அவளை அணைத்தவனாக அவன் சொன்னான். “ஏனென்று தெரியவில்லை மைனிகா. வீட்டிலிருந்து கிளம்பும் போதே இனம் புரியாத ஒரு நெருடல். எதையோ எச்சரிப்பது போல் ஒரு தோன்றல்….”

 

ஒரு கணம் மைனிகா திகைத்தாலும் அவள் மறு கணம் சுதாரித்துக் கொண்டாள்.பௌர்ணமி, அமாவாசை இரண்டு நாட்களின் நெருக்கத்திலும் இப்படி நமக்குத் தோன்றுவதுண்டு அழகனே. எனக்கும் சில முறை அப்படித் தோன்றியிருக்கிறது. ஆனால் மறுநாளே அதற்கு அர்த்தமில்லை என்று நான் உணர்ந்திருக்கிறேன்…”

 

“எனக்கு இது தான் முதல் முறை” என்று சொன்ன அவனை அவள் அதற்கு மேல் சிந்திக்க விடவில்லை.  அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தவள் அவனை எல்லாவற்றையும் மறக்க வைத்தாள்.

 

விடிவெள்ளி கீழ்வானில் பிரகாசமாகத் தெரிய ஆரம்பித்த வேளையிலும் அதிகமாக அருந்திய மதுவின் போதையாலும் அவள் அந்த மதுவில் கலக்கியிருந்த மயக்க மருந்தினாலும் சேனாதிபதி சின்ஹரன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். எவ்வளவு தாமதமானாலும் அவன் இந்த நேரம் கண்டிப்பாக அங்கிருந்து கிளம்பி விடுவான். சூரிய உதயத்திற்குள் தன் மாளிகையை அவன் எட்டி விடுவான். ஆனால் இன்று மட்டும் இருட்டும் வரை அவன் மயக்கம் தெளிந்து எழப்போவதில்லை..

 

அவன் தலையை அன்போடு கோதி விட்ட மைனிகா மெல்ல முணுமுணுத்தாள். “நான் கிளம்புகிறேன் சேனாதிபதி. என்னை மன்னித்து விடு”

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

Monday, August 8, 2022

யாரோ ஒருவன்? 97


தன்லால் ஜனார்தன் த்ரிவேதியிடம் கேட்டான். “சஞ்சயை நீங்க பார்க்கலையா தலைவரே?”

ஜனார்தன் த்ரிவேதி சலிப்புடன் சொன்னார். “பார்த்துப் பேசிட்டு தான் வந்தேன். ஆனா அவன் தெளிவில்லாம பைத்தியம் மாதிரி பேசறான்.”

மதன்லால் திடீரென்று ஆவேசத்தோடு சொன்னான். “அவன் கூட கொஞ்ச நாள் ஒருத்தன் இருந்தால் போதும் தலைவரே எவனானாலும் சரி  பைத்தியமாயிடுவான்

என்ன ஆச்சு மதன்லால்?” ஜனார்தன் த்ரிவேதி குழப்பத்துடன் கேட்டார்.

அவன் பயந்து நடுங்கறது மட்டுமில்லாம அடுத்த ஆளையும் பயமுறுத்தறதுல அவன் கெட்டிக்காரன். எனக்கும் அவனுக்கும் என்ன வயசு வித்தியாசம் இருக்கும்னு நினைக்கிறீங்க. ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ இருக்கலாம். அவன் என்னை மதன்லால் அண்ணா, மதன்லால் அண்ணான்னு கூப்பிட்டே சித்திரவதை பண்ணிட்டான்.”

ஜனார்தன் த்ரிவேதி திகைத்தார். இதெல்லாம் ஒரு விஷயம் என்று இவன் சொல்கிறானே என்று நினைத்தவராக அவர் மெள்ள பேச்சை மாற்றினார். “அவனுக்கு ஒழுங்கா பேச வராது. முட்டாள். அவனை விடு. நரேந்திரன் உன்னைக் கடத்திட்டு, எவனோ ஒரு கடத்தல்காரன் தான் கடத்தினான்னு காண்பிச்சுக்க உன் மனைவிக்கு போன் பண்ணி ஐம்பது லட்ச ரூபாய் பணம் கேட்டிருக்கான். அது தெரியுமா உனக்கு?”.

மதன்லால் தெரியும் என்று தலையசைத்து விட்டுச் சொன்னான். “அந்தப்பணத்தை தந்திருந்தா அதை அபராதமா எடுத்துகிட்டு என்னை அவன் விட்டிருப்பான்னு அந்த தடியன் சொன்னான். என் மனைவி பேர்ல நான் சேர்த்தியிருக்கற சொத்து அஞ்சு கோடிக்கும் அதிகமாய் தான் இருக்கும். அதுல எதுவும் அவ அப்பன் வீட்டுல இருந்து சீதனமாய் கொண்டு வந்ததல்ல. அப்படி இருக்கைல நான் சேர்த்துக் கொடுத்த பணத்துல பத்துல ஒரு பாகத்தைக் குடுத்து என்னை மீட்க அவளுக்கு மனம் வரலை. அந்தப் பேயோட நான் இனிமேலும் வாழணுமா தலைவரே நீங்களே சொல்லுங்க…..”

உன் மன வருத்தம் எனக்குப் புரியுது மதன்லால். அதை விட்டுத்தள்ளு.” என்று சொல்லி ஜனார்தன் த்ரிவேதி முக்கியமான மற்ற விஷயங்களைக் கேட்க நினைத்தார்.

எப்படித் தலைவரே விட்டுத்தள்ள முடியும்? விட்டுத்தள்ள முடிஞ்ச விஷயமா இது? சில பேர் புருஷனுக்காக உயிரைக்கூடக் கொடுக்கிறாங்க. இந்த சனியன் என்னடான்னா புருஷன் காசையே புருஷனுக்காகக் கொடுக்க மாட்டேன்கிறா.”

இப்படியும் சில ஜந்துக்கள் இருக்கு. என்ன பண்றது?” என்று இரண்டு வினாடிகள் முகத்தில் சோகம் காட்டி விட்டு ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் ஆர்வத்துடன் கேட்டார். “நரேந்திரன் என்னவெல்லாம் உன்னைக் கேட்டான். நீ என்னவெல்லாம் சொல்லியிருக்கிறாய்

எல்லாத்தையும் சொல்லச் சொல்லி கேட்டான். க்யான் சந்தையும் அவன் கடத்தி எங்கயோ வெச்சிருக்கானாம். என்னையே கடத்த முடிஞ்சவனுக்கு க்யான் சந்தக் கடத்தறது பெரிய விஷயமா என்ன. எல்லாத்தையும் அவன் கிட்ட க்யான் சந்த் உளறிட்டான் போலருக்கு. அதனால நான் க்யான் சந்துக்கு என்னவெல்லாம் தெரியுமோ அது வரைக்கும் அவனுக்கு சொல்லிருக்கேன்

ஜனார்தன் த்ரிவேதி திகைப்புடன் அவனைப் பார்த்தார். ”அவன் நீ சொன்னதை எல்லாம் கண்டிப்பாய் ரிகார்ட் பண்ணி வெச்சிருப்பானே

மதன்லால் அலட்சியமாய் சொன்னான். “சித்திரவதை பண்ணி அந்த வாக்குமூலத்தை அவன் வாங்கிருக்கான்னு சொல்லிட்டா போச்சு. தலைவரே. அவன் நம்மள என்ன பண்ண முடியும் தலைவரே. ஆமாடா அப்படி தான் உன் அப்பனைக் கொன்னோம். முடிஞ்சதை செஞ்சுக்கோடான்னு அவனை அடுத்த தடவை பாக்கறப்ப சொல்லிடப்போறேன். இவ்வளவு தூரம் அவன் போனதுக்கப்பறம் நான் அவனை விடறதாயில்லை... அவனை புடிச்சு வெச்சு அணு அணுவா சித்திரவதை செய்யணும் தலைவரே. அவனை மட்டுமில்ல தலைவரே. அந்த தடியனையும் தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தன் ரொம்ப திமிரா என் கிட்ட நடந்துகிட்டான். மங்கல் பாண்டேன்னு பேரு. அவனை நான் சும்மா விடலையே. அணு அணுவா சித்திரவதை செஞ்சு கொன்னு அதை தற்கொலையாய் மாத்திட்டேன்...”

ஜனார்தன் த்ரிவேதி தாழ்ந்த குரலில் சொன்னார். “மெல்லப் பேசு. பழைய கதை எல்லாம் எதுக்கு இப்போ?”

யாருக்கு பயப்படணும் தலைவரே. நான் யாருக்குப் பயப்படணும். என்னைக்கானாலும் சரி அவன் சாவு என் கைல தான். குறிச்சு வெச்சுக்கோங்க

அவருக்குத் தெரிந்து மதன்லால் திமிர் பிடித்தவனேயொழிய முட்டாள் அல்ல. எப்போதுமே கவனமாகத் தான் வெளியிடங்களில்  பேசக்கூடியவன். அப்படி நெருங்கியவர்களிடம் ஏதாவது ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வதென்றாலும் மெல்லிய குரலில் பேசக்கூடியவன். இப்படி சத்தமாய் பேச மாட்டான்.

ஜனார்தன் த்ரிவேதி பேச்சை மாற்றினார். “பாம்பு எப்படி அங்கே வந்துச்சு? யார் அதைக் கொண்டு வந்து விட்டாங்க தெரியுமா?”

மதன்லால் முகம் திடீரென்று மாறியது. நிஜமாகவே பாம்பு அங்கே வந்திருப்பதைப் போல அவன் பயந்து போனான். “பாம்பா? எங்கே?” என்று பீதியுடன் கேட்டவன் கட்டிலிலேயே எழுந்து நின்று கொண்டான். இப்போது இங்கே பாம்பு எதுவும் வரவில்லை, தான் கேட்டது அன்று பாம்பு எப்படி அங்கே வந்தது, அன்று யார் அந்த பாம்பைக் கொண்டு வந்தது என்பதைப் பற்றி என்று சொல்ல அவர் முயற்சித்தது எதுவும் அவனுக்குப் புரியவில்லை. “ஐயோ பாம்பு, பாம்பு” என்று அவன் அலற ஆரம்பித்தான்.

அந்தச் சத்தம் பக்கத்து அறையிலிருந்த சஞ்சய் ஷர்மாவையும் பதற வைத்து அவன் அவனது அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடினான். அவன் போகும் போது. ”மதன்லால் அண்ணா ஓடிடுங்க. பாம்பு....” என்று கத்த, மதன்லால் கட்டிலில் இருந்து தாவிக் குதித்து தானும் வெளியே ஓடினான். ஆஸ்பத்திரி அட்டெண்டர்கள், நர்ஸ்கள், டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கூட அவர்களைப் பிடித்து விட முடியவில்லை. அஜீம் அகமதின் ஆட்களும், ஜனார்தன் த்ரிவேதியின் ஆட்களும் கூட அவர்களுடன் சேர்ந்த பின்பே அவர்களைப் பிடித்துக் கட்டுப்படுத்த முடிந்தது. மயக்க ஊசி போட்டு இருவரையும் உறங்க வைப்பதற்குள் முழு ஆஸ்பத்திரியும் பரபரப்பாக மாறி விட்டது. ஜனார்தன் த்ரிவேதி இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போனார்.  

அவரைத் தனதறைக்கு அழைத்துக் கொண்டு போன டாக்டர் இருவரின் மூளை ஸ்கேன்களையும் காட்டி அதில் உள்ள நுணுக்கமான பாதிப்புகளைக் காட்டி விட்டு விளக்கினார். “இந்தப் பிரச்னைகள் இருக்கிறதால, பெரும்பாலும் இவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே இருந்தாலும் திடீர் திடீர்னு மாறுவாங்க. சம்பந்தமில்லாம பேசுவாங்க. பயப்படுவாங்க. அந்தரங்க விஷயங்களையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுவாங்க. மொத்தத்துல இவங்க செயல்கள்ல இவங்களுக்குக் கட்டுப்பாடு இருக்காது. ஆனா அது எப்ப நடக்கும்னு நம்மளால திட்டவட்டமா சொல்ல முடியாது. மத்தபடி சாதாரணமாவே இருப்பாங்க. இயல்பாய் பேசுவாங்க. எந்தெந்த வார்த்தைகள், விஷயங்கள் அவங்களைப் பாதிக்குதுன்னு புரிஞ்சுகிட்டு நாம தான் ஜாக்கிரதையாய் அதைத் தவிர்க்கணும்.

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “இதைச் சரி செய்ய முடியாதா?”

“சில சிகிச்சை முறைகள் இருந்தாலும் மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல எதையும் நிச்சயமாய் சொல்ல முடியாது. மற்ற உறுப்புகள் சம்பந்தமாய் நாம இது சரியாக, குணமாக இத்தனை காலம் தேவைப்படும்னு சொல்ல முடியும். ஆனா மூளை சம்பந்தமான சிகிச்சைகள்ல அப்படிச் சொல்ல முடியாது. முயற்சி செய்து பார்ப்போம்…”

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “இப்படி ஆகக் காரணம் என்ன?”

டாக்டர் சொன்னார். “பாம்புக் கடி விஷம் தான் இந்த பாதிப்புகளுக்குக் காரணம். பொதுவா இந்த மாதிரி விஷப்பாம்புகள் காட்டுப் பகுதிகள்ல தான் இருக்கும்னு சொல்றாங்க. காடுகளுக்குள்ளே வேட்டைக்குப் போகிறவங்களுக்குத் தான் இந்த மாதிரி பாம்புகள் கடிக்க வாய்ப்பு அதிகம். நகர்ப்புறங்கள்ல இது வரைக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நடந்ததில்லை. அதனால இது ஆச்சர்யமாய் இருக்கு”  

என்னென்ன சிகிச்சைகள் உண்டோ அதையெல்லாம் செய்யச் சொல்லி விட்டு ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பிய ஜனார்தன் த்ரிவேதிக்கு, இதற்கெல்லாம் விளக்கமும், தீர்வும் காளிங்க சுவாமியிடம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று தோன்றியது. மனதில் ஒரு நம்பிக்கைக் கீற்று உதயமானது.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

Thursday, August 4, 2022

சாணக்கியன் 16

ட்சசீல நகரில் பெரியதொரு போர்வையால் தலையையும், உடலையும் மறைத்துக் கொண்டு நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் அவ்வப்போது தன்னை யாராவது பின் தொடர்கிறார்களா அல்லது பார்க்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொண்டான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை. மாளிகை போல் தோற்றம் அளித்த ஒரு வீட்டினை அவன் நெருங்கிய பின்னும் இருபக்கமும் பார்த்துக் கொண்டான். யாரும் தெரியவில்லை.  நிம்மதி அடைந்தவனாக அந்த வீட்டின் கதவைத் தட்டிய அவன் கதவு திறக்கப்பட பொறுமை இழந்து காத்து நின்றான். கதவு திறக்கப்பட்டவுடன் வேகமாகக் கதவை மூடித் தாளிட்டான்.

 

கதவைத் திறந்து விட்ட அழகு மங்கை கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டதைப் பார்த்தவன் தன் இரண்டு கைகளாலும் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டு கேட்டான். “என் இதய ராணிக்கு ஏன் இன்று என் மேல் கோபம்?”

 

அப்போதும் அவனைப் பார்க்க விரும்பாதவள் போல் கண்களை மூடிக்கொண்ட அந்த மங்கைபேச்சில் இருக்கும் கரிசனமும், அன்பும் நடத்தையில் இல்லையே சேனாதிபதிஎன்றாள்.

 

ஏன் அப்படி கடூரமான வார்த்தைகளைச் சொல்கிறாய் மைனிகா?” என்று சேனாதிபதி சின்ஹரன் கேட்டதற்கு மைனிகாநேரம் என்ன ஆகிறது சேனாதிபதி?”

 

நடுநிசியாகி விட்டது என்பது உண்மை தான் மைனிகா. ஆனால் தாமதத்திற்கான காரணம் என் அலட்சியம் அல்ல. அரசர் என்னையும் அமைச்சரையும் நகர விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். அரசர் பேசிக் கொண்டிருக்கையில் எழுந்து வர முடியுமா?””

 

மைனிகா இது உண்மை தானா என்பது போல் அவனைச் சந்தேகப்பார்வை பார்த்தாள். ”இது என்ன போர்க்காலமா? உங்களை நடுநிசி வரையில் அமர வைத்து அரசர் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதற்கு?”

 

போர்க்காலம் அல்ல தான். ஆனால் ஆம்பி குமாரன் போரை வரவழைத்து விடுவான் என்று அரசர் பயப்படுகிறார்.”

 

மைனிகா சின்ஹரனை சந்தேகம் தீராமல் இப்போதும் பார்த்துக் கொண்டு நிற்க  சின்ஹரன் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு சொன்னான். ”இன்னும் என் ராணிக்கு சந்தேகம் தீரவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும். முழுவதுமாகச் சொல்கிறேன் கேள். இன்று கேகய நாட்டு தூதர் ஒருவர் அங்கிருந்து அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருந்தார்....”

 

அவன் சொன்னதை எல்லாம் மிகவும் கவனமாக மைனிகா கேட்டுக் கொண்டாள். ”.... அரசர் தவறை ஒப்புக் கொண்டு கவர்ந்த பசுமாடுகளை அந்தந்த எல்லைப் பகுதிகளிலேயே ஒப்படைப்பதாக நான் கேகய மன்னனுக்கு வாக்களித்திருக்கிறேன். உடனே அதைச் செய்ய ஏற்பாடு செய்.” என்று ஆம்பி குமாரனிடம் சொன்ன போது அவன் கோபத்தோடுஎன் உடலில் உயிர் இருக்கிற வரை நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையேஎன்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அரசர் மகனின் போக்குக்கு வருத்தப்பட்டு எங்களிடம் பேசிக் கொண்டே இருந்தார்.... இப்போதெல்லாம் பேச்சைத் தவிர அவரால் வேறெதுவும் செய்ய முடிவதில்லை. பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அமைச்சராவது அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அமைச்சரும் வயதானவர் என்பதால் அரசரைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்வது அவருக்கு எளிதாக முடிகிறது. ஆனால் எனக்கு அதுவும் முடியவில்லை. அதிலும் பயன் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மனமோ ஒரு கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி முன்பே இங்கே வந்து விட்டது. அதை நீ உணராமல் என்னைத் தவறாக நினைக்கிறாயே என் கண்மணி....”

 

மைனிகா அவன் இதழ்களில் முத்தமிட்டபடியே சொன்னாள். “என்னை மன்னித்து விடுங்கள் சேனாதிபதி. நீங்கள் சொன்ன நேரத்தில் வராதவுடன் நான் அதை அலட்சியமென்று எண்ணி விட்டேன்....”

 

சேனாதிபதி சின்ஹரன் மைனிகாவின் வீட்டிலிருந்து கிளம்பும் போது அதிகாலை நேரமாகி விட்டது. வந்தபடியே போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அவன் வேகமாகச் செல்வதை எதிரே இருந்த ஒரு வைக்கோல்போரின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்த ஒருவன் சிறிது நேரம் பொறுத்து விட்டு வந்து மைனிகாவின் வீட்டுக் கதவைத் தட்டினான்.  

 

அவனும் கதவு திறக்கப்பட்டவுடன் உள்ளே நுழைந்து வேகமாகக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டுக் கேட்டான். “என்ன செய்தி மைனிகா? காந்தார சேனாதிபதி என்ன சொல்கிறான்?”

 

மைனிகாவின் தோற்றமும் தோரணையும் தற்போது முற்றிலும் மாறியிருந்தது. அலங்காரமும், உடைகளில் கவர்ச்சியும், மயக்கும் பார்வையும் இல்லாமல் சாதாரணப் பெண்ணாகக் காட்சியளித்த அவள் சேனாதிபதி சின்ஹரன் சொன்னதையெல்லாம் அந்த மனிதனிடம் அப்படியே தெரிவித்தாள்.

 

அந்த மனிதன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். “அப்படியானால் காந்தாரத்தின் கிழட்டு அரசர் நம் மன்னருக்கு வாக்களித்திருந்தபடி எந்தப் பிராயச்சித்தமும் நடக்கப் போவதில்லை...”

 

அப்படித்தான் தோன்றுகிறது. வேண்டுமானால் அவரிடமிருந்து நம் மன்னருக்கு வருத்தத்தோடு மன்னிப்புக் கடிதம் வேண்டுமானால் வந்து சேரலாம்.”

 

அந்த மனிதன் முகத்தில் வறண்ட புன்னகை ஒன்று வந்து போனது. “இப்படி நடக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். காந்தார அரசர் எப்போதோ தன் அதிகாரத்தை இழந்து விட்டார். அந்தக் கிழவர் மகன் செயல்களுக்கு வருத்தப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்... இப்போதெல்லாம் ஆம்பி குமாரன் இங்கே அதிகம் வருவதில்லையா?”

 

மைனிகா அவன் பெயரைக் கேட்டவுடன் முகம் சுளித்தாள். தாசியே ஆனாலும் அவளுக்குக் கூட அவனுடன் இருக்கையில் ஏற்படும் அருவறுப்பைத் தவிர்க்க முடிந்ததில்லை. அவன் தோற்றத்திலும், அவன் ஆண்மையிலும் எந்தக் குறையும் சொல்ல முடியாதென்றாலும்  அவன் வாய் திறந்து பேச ஆரம்பித்தால் ஏற்படும் உணர்வு அருவறுப்பாகவே இருந்தது. பேசுகையில் யாரையாவது இழிவு படுத்துவது போல அவனால் பேசாமல் இருக்கவே முடியாது. மேலும் அவன் அடுத்தவர்கள் உணர்வுகளை என்றுமே புரிந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை. தன்னைத் தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்கும் பழக்கம் என்றுமே இல்லாதவன்.... அவள் சொன்னாள். “அவனுடைய அந்தப்புரத்தில் அவனுடைய மனைவிக்குத் தோழியாக ஒரு புதிய பெண் வந்திருப்பதாய் செய்தி வந்திருக்கிறது. இப்போது அவனுடைய முழுக் கவனம் அவள் மீது இருக்கிறதாம்”

 

அந்த மனிதன் சொன்னான். “நல்லது.”

 

மைனிகா கேட்டாள். “அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது தூதர் அங்கே போய் காந்தார அரசரின் பதிலைச் சொன்ன பின் தான் முடிவு செய்யப்படுமா?”

 

“இல்லை மைனிகா. இப்படித் தான் நடக்கும் என்பதை கேகய அமைச்சர் இந்திரதத் முன்பே அனுமானித்திருந்தார். ஆனாலும் முறைப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகத் தான் அந்தத் தூதரை அனுப்பி இருந்தார். இந்திரதத் முன்பு தட்சசீல கல்விச்சாலையில் படித்தவர். அது காந்தார விஷயத்தில் அவரைச் சிறிது மென்மைப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்... நாம் வரும் பௌர்ணமி அன்று செயல்படப் போகிறோம்....”

 

மைனிகா சொன்னாள். “இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன”

 

“ஆம். அதிக காலம் எடுத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. நம் திட்டத்தில் உன்னுடைய பங்கு மிக முக்கியமானது.  சேனாதிபதி சின்ஹரனை உன் பொறுப்பில் விடுகிறேன். காந்தார அரசர் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. ஆம்பிகுமாரன் அந்தப் பெண் இருக்கிற வரை அதற்குத் தயாராக இருப்பானே தவிர போருக்குத் தயாராய் இருக்க மாட்டான். நம் திட்டப்படி எல்லாம் நடக்குமானால் எல்லாம் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விடும். ஆம்பி குமாரனுக்கு ஒரு நல்ல பாடம் புகுத்துவது தான் நம் குறிக்கோள்...  இனி அவன் கேகய நாட்டைக் குறைத்து மதிப்பிட மாட்டான்...”

 

மைனிகா சொன்னாள். “என்னை என் தாய்நாடு நினைவு அதிகம் வாட்டுகிறது. எல்லாம் முடிந்து இங்கிருந்து விடுபட்டால் போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்...”

 

அந்த மனிதன் அவளை எச்சரித்தான். ”ஆனால் தாய்நாட்டுக்குப் போகும் அவசரத்தில் பிழைகள் நேர்ந்து விடக்கூடாது மைனிகா. எச்சரிக்கையை நீ குறைத்துக் கொள்ளக் கூடாது. நான் சொன்னது போல் உன் பங்கு மிக முக்கியமானது...”

 

“எனது பங்கை நான் கச்சிதமாக நிறைவேற்றி விடுவேன். கவலைப்படாதே...”

 

“வெற்றி வாகை சூடிய பிறகு சந்திப்போம் மைனிகா. நான் கிளம்புகிறேன்....”

 

அவள் தலையசைக்க அவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

 இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.