என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, December 25, 2023

யோகி 29


 சிறிது நேரத்தில் ரிப்போர்ட்டுடன் சதீஷ் வந்தான்.  “தேங்க் யூ சதீஷ்என்று சொல்லி  பொறுப்பாளர் அதை வாங்கி விட்டுஇனி நீ போகலாம்என்பது போலத் தலையசைத்தார். ’இந்த அதிகாரி சதீஷிடம் நேரடியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட வேண்டால் அது தேவையில்லாத பிரச்னைஎன்று அவர் நினைத்தார். சதீஷ் போய் விட்டான்.

 

முரளிதரன் அந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தார். மொத்தத்தில் 178 நபர்கள்.  அவர் கேட்ட விவரங்கள் அதில் இருந்தன. மேலோட்டமாய்ப் பார்த்து விட்டு அவர் கேட்டார். “கோவிட்டில் உங்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்ஸ்கள், அட்டெண்டர்கள் இறந்திருந்தால் அதையும் இதில் சேர்த்திருக்கிறீர்களா?”

 

பொறுப்பாளரின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று பின் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. அதிகம் யோசிக்காமல் அவர் சொன்னார். “அப்படி யாரும் இறக்கவில்லை சார்

 

முரளிதரன் தலையசைத்து விட்டுச் சொன்னார். “அப்படின்னா கோவிட்ல உங்க ஆஸ்பத்திரில டாக்டர்களோ, ஸ்டாஃப்ஸோ இறக்கலைன்னு ஒரு லெட்டர் கொடுத்துடுங்க. நான் இதுல சில கேஸஸ் மட்டும் பார்க்கறேன்.”

 

பொறுப்பாளரின் முகத்திலிருந்த ரத்தம் வடிந்து போனது. அப்படி ஒரு கடிதம் அவர் எப்படித் தர முடியும்? பிரச்னை செய்யாத ஆளென்று நினைத்தால் இந்த ஆள் அலட்டிக் கொள்ளாமல் பிரச்னை செய்கிறாரே

 

பொறுப்பாளர் திடீர் என்று நினைவுக்கு வந்தவர் போலக் காட்டிக் கொண்டு போலிப் புன்னகையுடன் சொன்னார். ”நல்ல வேளையாய் ஞாபகம் வருது. எங்க டாக்டர் ஒருத்தரும், நர்ஸ் ஒருத்தரும் கூட கோவிட்ல இறந்து போனாங்க. எதோ யோசனையில யாரும் இல்லைன்னு சொல்லிட்டேன்….”

 

ஒன்னும் பிரச்னையில்லை…. இன்னும் வேற யாரையாவது ஞாபகம் வந்தாலும் அதையும் சேர்த்து தனியா இன்னொரு ரிப்போர்ட் கொடுங்க.” என்று சொல்லியபடியே சதீஷ் தந்திருக்கும் ரிப்போர்ட்டை முரளிதரன் பார்க்க ஆரம்பித்தார்.

 

தேங்க்யூ சார்என்று தலையசைத்துச் சொல்லி விட்டு இதயம் படபடக்க பொறுப்பாளர் எழுந்து வெளியே வந்தார்.

 

இனி இதை மேனேஜிங் டைரக்டரிடம் தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல என்று அவர் மனம் எச்சரித்தது. மறுபடியும் அந்தக் காலி அறைக்கு விரைந்து சென்ற அவர் மேனேஜிங் டைரக்டருக்குப் போன் செய்து விஷயத்தைத் தெரிவித்தார்.

 

மேனேஜிங் டைரக்டர் யோசித்து விட்டுச் சொன்னார்.  வேற ஏதாவது ஒரு கோவிட் பேஷண்டோட  ரெக்கார்ட்ஸ காபி எடுத்து அதுல ஒன்னு ரெண்டு சின்ன கரெக்ஷன் செஞ்சு வாசுதேவன் பேர்ல ரெகார்ட்ஸ் க்ரியேட் பண்ணிக் கொடுக்க சதீஷ் கிட்ட சொல்லுங்க. தேதில மட்டும் கூடுதல் கவனமாய் இருக்கணும். நீங்களும் அந்த ஆள் கிட்ட கொடுக்கறதுக்கு முன்னாடி தேதிகளை ஒரு தடவை செக் பண்ணிடுங்க.”

 

ஓக்கே சார்என்று சொல்லி விட்டு பொறுப்பாளர் சற்று பதற்றம் குறைந்தவராக சதீஷ் இருக்கும் அறைக்கு விரைந்தார். மேனேஜிங் டைரக்டர் சொன்னதை அவனிடம் தெரிவிக்க அவன் அப்படியே புதிய ஆவணங்களை வேகமாகத் தயார் செய்ய ஆரம்பித்தான். அவன் அருகே பொறுமையிழந்து நின்றிருந்த பொறுப்பாளருக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையில் ஏதாவது பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பது போலத் தோன்றவில்லை என்றாலும் அவரால் முழுவதுமாக நிம்மதியாய் இருக்க முடியவில்லை.

 

மருத்துவமனைப் பொறுப்பாளர் மற்ற 178 கோவிட் நோயாளிகளின் ஒட்டு மொத்த விவரங்களைத் தந்தது போல் டாக்டர் வாசுதேவன், நர்ஸ் ரோஸ்மேரி இருவருடைய விவரங்களையும் முரளிதரனிடம் தனித்தாளில் தந்தார். அதே நேரத்தில் டாக்டர் வாசுதேவனின் மற்ற க்ளினிகல் ரிப்போர்ட்ஸை சதீஷ் அவசர அவசரமாகத் தயாரித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை முரளிதரன் டாக்டர் வாசுதேவனின் பெயரைத் தேர்ந்தெடுத்து எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்க்க வேண்டும் என்று சொன்னாலும் அவற்றை அவன் இனி கால் மணி நேரத்தில் தயாராகத் தந்துவிட முடியும்.

 

பொறுப்பாளர் தந்த தாளை வாங்கிப் பார்த்த முரளிதரன்இந்த இரண்டும் சேர்த்தால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 180 ஆகிறது. 150ல இருந்து 200 வரைக்கும் கேஸஸ் இருந்தா 5% செக் பண்ண சொல்லி இருக்காங்க. 5%ன்னா 9 ஆகுது…” என்று சொல்லியபடி அந்தத் தாள்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேர்ந்தெடுத்து அடிக்கோடிட ஆரம்பித்தார்.

 

டாக்டர் வாசுதேவன் மற்றும் ரோஸ்மேரி பெயர்கள் இருந்த மேல் தாளில் டாக்டர் வாசுதேவன் பெயரை அடிக்கோடிட்ட முரளிதரன் மீதமுள்ள எட்டு பெயர்களை மற்ற தாள்களில் தேர்ந்தெடுத்து அடிக்கோடிட ஆரம்பித்தார். அவர் அடிக்கோடிட்டதில் சைத்ரா பெயரும் இருந்தது.  முரளிதரன் இருவர் பெயரையும் அடிக்கோடிட்டது தற்செயலாகவே இருக்கலாம் என்றாலும் ஒரு கணம் பொறுப்பாளருக்குதிக்கென்றது. 

 

முரளிதரன் சொன்னார். “இந்த ஒன்பது பேருக்கும் தனித்தனி ஃபோல்டர் ஓப்பன் பண்ணி அதுல எல்லா ரிப்போர்ட்ஸும் அவங்கவங்க ஃபோல்டர்ல போட்டு ஒரு பென் ட்ரைவ்ல எனக்குக் கொடுங்க.”

 

பொறுப்பாளர் சரியென்று தலையசைத்து விட்டு திரும்ப சதீஷ் அறைக்கு வந்து அவன் வேலை முடியும் வரை அவனுடனே அமர்ந்திருந்தார். முரளிதரன் தேர்ந்தெடுத்திருந்த ஒன்பது பேரின் எல்லா ரிப்போர்ட்களும் தயார் என்று அவன் தெரிவித்தவுடன்வாசுதேவன் ரிப்போர்ட்ஸ ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிடுஎன்று சொல்ல சதீஷ் அவர் முன்பாகவே அந்த ரிப்போர்ட்களைச் சரிபார்த்து விட்டுசரியாய் இருக்குசார் என்றான்.

 

முக்கியமா தேதியில குழப்பம் இல்லை தானே?”

 

இல்லை. சார்என்ற சதீஷ் அந்த விவரங்களை ஒரு பென் ட்ரைவில் மாற்றித் தந்தான்.

 

பொறுப்பாளர் திருப்தியுடன் தனதறைக்குச் சென்று முரளிதரனிடம் அந்த பென் ட்ரைவை நீட்டினார். 

 

அந்த பென் ட்ரைவை வாங்கிக் கொண்ட முரளிதரன் அந்தப் பென் ட்ரைவிலிருந்து ரிப்போர்ட்களை தனது லேப்டாப்பிற்கு மாற்றியபடியே மருத்துவமனை பொறுப்பாளரிடம் கேட்டார். இந்த ஒன்பது பேரில் டாக்டர் தவிர மற்ற எட்டு பேர் உங்களுடைய வாடிக்கை நோயாளிகள் தானா, இல்லை புதியவர்களா?”

 

பொறுப்பாளர் இந்தக் கேள்வியின் உத்தேசம் என்னவாக இருக்குமென்று யோசித்தார். எதுவும் பிடிபடவில்லை.  பொறுப்பாளர் யோசிப்பதைப் பார்த்து முரளிதரன் சொன்னார். “அவங்க ஐடி போட்டுப் பார்த்தா உங்களுக்குத் தெரிஞ்சுடுமே

 

பொறுப்பாளர் சமாளித்தார். “அதுவும் சரி தான். இதோ பார்த்து சொல்றேன்

 

முரளிதரன் அந்த பென் ட்ரைவை அவரிடம் நீட்டினார். பொறுப்பாளர் அதை வாங்கிக் கொண்டு தன் கம்ப்யூட்டரில் போட்டு தேடிப் பார்த்து சொன்னார். ” அதுல ஒருத்தர் தான் எங்க வாடிக்கையாளர். மத்தவங்க எல்லாம் புதியவங்க தான். கோவிட் சமயத்துல ஆஸ்பத்திரிகள்ல இடம் கிடைக்காம எங்கெங்கேயிருந்தோ ஆள்கள் எங்கெங்கெயோ போய் அட்மிட் ஆனாங்க

 

முரளிதரன் சொன்னார். .”உண்மை தான். வாடிக்கையாளரான அந்த நோயாளி பெயரென்ன?”

 

தரம்சிங்

 

முரளிதரன் தரம்சிங் ஃபோல்டரைத் திறந்தபடி கேட்டார். “அவர் எப்போ எந்த நோய்க்காக இதுக்கு முன்னாடி வந்திருக்கார்.?”

 

ரெண்டு வருஷம் முன்னாடி டைபாய்டு காய்ச்சலுக்காக வந்து அட்மிட் ஆனவர்.”

 

டிஸ்சார்ஜ் ஆனப்ப அவர் ஷுகர், பிபி எல்லாம் எந்த அளவு இருந்துச்சுன்னு சொல்றீங்களா?”

 

இதை எதற்கு இந்த மனிதர் கேட்கிறார் என்று குழப்பத்துடன் யோசித்த பொறுப்பாளர் அந்த இரண்டின் அளவுகளையும் சொன்னார்.

 

அவர் சொன்னதைக் குறித்துக் கொண்டு அந்த ரிப்போர்ட் தேதியையும் கேட்டுக் குறித்துக் கொண்ட முரளிதரன் டாக்டர் வாசுதேவன் ஃபோல்டரைத் திறந்தபடி கேட்டார். “டாக்டர் வாசுதேவனோட இதுக்கு முந்தின ரிப்போர்ட்ஸ் எப்போ எடுத்ததுன்னு பார்த்துச் சொல்றீங்களா?”

 

பொறுப்பாளர் இந்தக் கேள்வியில் ஆபத்தை உணர்ந்தார். அவர் என்ன சொல்வது என்று யோசித்தார்.

 

முரளிதரன் சொன்னார். “இங்கே டாக்டர்ஸ்க்கு வருஷா வருஷம் மாஸ்டர் செக் அப் கண்டிப்பா இருந்திருக்குமே?”

 

அவர் உண்மையைத் தெரிந்து கொண்டு கேட்கிறாரா இல்லை அனுமானத்தில் இப்படிச் சொல்லிக் கேட்கிறாரா என்பதை பொறுப்பாளரால் கணிக்க முடியவில்லை. அவர் சொன்னது போல வருடா வருடம் அங்குள்ள டாக்டர்களுக்கு முழு மருத்துவ சோதனைகள் உள்ளன.

 

முரளிதரன் கேட்டார். “டாக்டர் வாசுதேவனோட கடைசி மாஸ்டர் செக்கப் தேதி?”

 

பொறுப்பாளர் வேறு வழியில்லாமல் பார்த்துச் சொன்னார். அது வாசுதேவன் இறப்பதற்கும் மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு தேதி. அதைக் குறித்துக் கொண்ட முரளிதரன்இவரோட ஷுகர், பிபி, இவருக்கு இருந்த வேறெதாவது பெரிய கோளாறுகள்?” என்று கேட்க, பொறுப்பாளர்  தடுமாறினார். 


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, December 21, 2023

சாணக்கியன் 88

 

டக்கில் நிகழ்ந்த புரட்சிகள் பற்றியும் வாஹிக் பிரதேசம் முழுவதும் சந்திரகுப்தன் என்ற இளைஞன் வசமானது பற்றியும் ஒற்றன் வந்து சொன்ன போது ராக்‌ஷசர் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார். இது போன்ற சம்பவம் அவர் இது வரை கேள்விப்படாத ஒன்று. மாளவம், ஷூத்ரகம் போன்ற மக்களாட்சிப் பகுதிகள் யவனர்கள் வசமாகி மீண்டும் கலவரம் ஏற்பட்டு பழைய தலைவர்களே அந்தப் பகுதிகளை மீட்பது என்பது வேறு, அலெக்ஸாண்டரின் சத்ரப் ஆன பிலிப்பைக் கொன்று யவனர்களைத் துரத்தி யாரோ ஒரு வெளியாள் தலைவனாவது வேறு. மேலும் அந்த இரண்டு பிரதேசங்களும் எப்போதுமே ஒன்று சேராமல் பகைமை பாராட்டும் பிரதேசங்களாக இருந்தது தான் வரலாறு. ஆனால் அவை இரண்டும் ஒரே தலைவன் கீழே வந்திருப்பது மட்டுமல்லாமல் கத் பகுதியும் சேர்ந்து அவன் வசமானதும் அருகிலிருக்கும் சிற்றரசர்கள் அவன் தலைமையை ஏற்றுக் கொண்டதும் அவருக்கு அதிசயமாகவே தோன்றின.

 

சந்திரகுப்தன் என்ற அந்த இளைஞனைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே. அவன் எந்த தேசத்தவன்?”    

 

அவன் தட்சசீலக் கல்விக்கூடத்தின் மாணவன் பிரபு

 

அந்தத் தகவல் ராக்ஷசரை மேலும் ஆச்சரியப்படுத்தியது. “தட்சசீல மாணவன் கல்வி கற்று விட்டு இந்தப் புரட்சியிலும் ஈடுபட்டு வென்றது ஆச்சரியம் தான். அவன் படிக்கும் இடத்தில் இப்படி ஏதாவது சாகசம் செய்திருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அவன் இப்பகுதிகளுக்கு வந்து எப்படிப் புரட்சி செய்ய முடிந்தது? மக்கள் ஆதரவு அவனுக்கு எப்படிக் கிடைத்தது?”


“இதற்கெல்லாம் பின்னணியில் அவன் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் பிரபு. அவர் தான் மக்கள் மனநிலையை யவனர்களுக்கு எதிராக மாற்றும் வழியைக் காட்டியவர் என்றும் சொல்கிறார்கள். அரசியல் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் அவர் நிபுணர் என்றும் தட்சசீல கல்விக் கூடத்தில் மாணவர்களுக்கு அவ்விரண்டையும் கற்றுக் கொடுப்பதுடன் இந்தப் புரட்சி செய்ய தன் மாணவர்களைத் தூண்டி விட்டவர் அவர் தான் என்று சொல்கிறார்கள்”

 

ஆசிரியரும்  மாணவர்களும் அரசியலில் இறங்கி புரட்சியில் ஈடுபட்டதும், மக்கள் வெளிப்பகுதி ஆட்களான அவர்களுக்கு ஆதரவளித்ததும் எப்படி என்று இப்போதும் ராக்‌ஷசருக்கு விளங்கவில்லை. “அந்த ஆசிரியர் பெயர் என்ன?”

 

”விஷ்ணுகுப்தர் என்பது அந்த ஆச்சாரியரின் பெயர் என்றாலும் அவர் மாணவர்கள் அவரை இப்போது சாணக்கியர் என்ற புதுப்பெயரில் தான் அழைக்கிறார்கள்....”

 

ஒரு கணம் ராக்‌ஷசர் சிலையானார். முதலில் சாணக்கியர் என்ற அந்த விசித்திரப் பெயர் அவர் மூளையில் ஒரு பொறி தட்ட வைத்தது. அதனுடன் தட்சசீல கல்விக்கூட ஆசிரியர் விஷ்ணுகுப்தர் என்ற பெயரும் சேர்ந்து பழைய சம்பவங்களை நினைவுபடுத்த அவர் சிலையாய் சமைந்தார்.

 

பின் அவர் மெல்லக் கேட்டார். “அவர் தானே ஒரு காலத்தில் இங்கே.....?”  

 

அவர் கேள்வியை முழுவதுமாகக் கேட்கா விட்டாலும் ஒற்றன் கேள்வியைப் புரிந்து கொண்டு “ஆமாம் பிரபு” என்றான்.

 

ஆண்டுகள் பல கழிந்து விட்டதில் அந்த மனிதரை ராக்‌ஷசர் மறந்தே போயிருந்தார். சாணக்கின் மகன் சாணக்கியன்.  அன்றொரு நாள் மகத அரசவைக்கு வந்து சபதமிட்டுப் போன மனிதர்.... கடுங்கோபத்திலும், வெறுப்பிலும் கூடப் பறிபோய் விடாத அந்த மனிதரின் அமைதி ராக்‌ஷசருக்கு நினைவுக்கு வந்தது. அந்த அமைதி ஒரு நெருடலாக அவரை அன்று அசௌகரியப்படுத்தியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் தனநந்தன் அந்த மனிதரைத் துரும்பென அலட்சியப்படுத்தினான். துரும்பு இன்று தூணாக நிற்கிறது. அதுவும் வெறும் தூணாக அல்ல புரட்சியைத் தாங்கும் தூணாக!

 

ராக்‌ஷசர் சொன்னார். “எனக்கு அந்தப் புரட்சி குறித்த முழு விவரங்கள் வேண்டும்”

 

ஒற்றன் விரிவாகச் சொன்னான். கேட்ட பின் ராக்‌ஷசருக்குப் பிரமிப்பே மிஞ்சியது. தாயகமான பாரதத்தை அன்னியர்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அன்று மன்றாடிக் கேட்டுக் கொண்ட மனிதர் அதே உணர்வை புரட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் விதைத்து யவனர்களின் சத்ரப்பைக் கொன்று அவர்களிடமிருந்த பகுதிகளை வென்றிருக்கிறார். ஒற்றன் சொன்னது அவர் காதுகளில் மறுபடி எதிரொலிக்கிறது. ”விஷ்ணுகுப்தர் என்பது அவர் பெயர் என்றாலும் அவர் மாணவர்கள் அவரை இப்போது சாணக்கியர் என்ற புதுப்பெயரில் தான் அழைக்கிறார்கள்....” அந்தப் பெயர் மகத அரசவையில் உருவான பெயர். ஆங்காரத்துடன் அந்த அந்தணரால் சொல்லப்பட்ட பெயர்...

 

ராக்‌ஷசர் கேட்டார். “காந்தாரம், கேகயம் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஆம்பி குமாரனும், புருஷோத்தமனும் அலெக்ஸாண்டரின் ஆதரவாளர்களாக மாறியவர்கள் அல்லவா?”

 

“பிலிப் கொல்லப்பட்ட பிறகு அவர்கள் தங்கள் பகுதிகளில் புரட்சி வெடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் பிரபு. அதற்கு மேல் அவர்கள் எதுவும் செய்ய முற்படவில்லை.”

 

“இப்போது அந்த ஆச்சாரியர் எங்கிருக்கிறார்? எங்கே வசிக்கிறார்?”

 

“தெரியவில்லை பிரபு.”

 

ராக்‌ஷசர் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்து விட்டுப் பின்னர் ஒற்றன் செல்லலாம் என்று உத்தரவு கொடுத்தார். எப்போதோ அணைந்து போய் விட்டதாய் அவர் நினைத்திருந்த சிறு நெருப்பு இன்று பெரிதாய் தொலைவில் எரிந்து கொண்டு தானிருக்கிறது. அது மகதத்தைச் சுட்டு விடும் வலிமை படைத்தது அல்ல என்று அவருக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் ஒரு காலத்தில் அந்தச் சிறு நெருப்பு தானாய் சில நாட்களில் அணைந்து விடும் என்ற நம்பிக்கை கூட அவர் மனதில்  முழுமையாகத் தான் இருந்தது. அதனால் அவருக்கு இப்போது அவருடைய நம்பிக்கையையே நம்ப முடியவில்லை…   

 

தட்சசீல வாசியாக மாறிய பின் பாடலிபுத்திரத்திற்கு சாணக்கியர் (சே.... அதே பெயரை நானும் ஏன் நினைக்கிறேன்?) அதாவது விஷ்ணுகுப்தர் இரண்டு முறை வந்திருக்கிறார். இரண்டு முறையும் மன்னருடன் பிரச்சினை செய்து விட்டுத் தான் போயிருக்கிறார். திரும்பத் திரும்ப அவரை இங்கே வரவழைப்பது அந்தப் பழைய கணக்கு தான் என்று ராக்‌ஷசருக்குத் தோன்றியது. இது போன்ற விஷயங்கள் காரணம் இல்லாமல் நடப்பதில்லை என்பதால் இப்போது சாணக்கிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் வரிசைப்படுத்திப் புரிந்து கொள்வது முக்கியம் என்று தோன்றியது. ஏற்கெனவே ஓரளவு தெரிந்து கொண்ட சம்பவங்கள் தான் என்றாலும் ஒரே ஒரு உண்மை அவருக்கு இன்னமும் பிடிபடாமல் இருக்கிறது. அதை தனநந்தனிடம் கேட்பதில் தர்மசங்கடம் இருந்தது. உண்மை என்னவாக இருக்கும் என்று அவரால் யூகிக்க முடிந்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வது சாணக்கின் மகனுடைய தீவிரத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று தோன்றியது. அவர் காவலனை அழைத்தார்.

 

ருட்ட ஆரம்பித்திருக்கும் வேளையில் காவலன் வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த முதியவருக்குச் சரியான சகுனமாய் தெரியவில்லை. காவலனின் உடையையும், தோரணையையும் பார்த்தால் மன்னர் அல்லது பிரதம அமைச்சரின் காவலன் போல் தான் தெரிந்தது. இருவருடைய காவலர்களும் ஒரு வீட்டுக்கு அகால வேளைகளில் வருவது நல்லதற்கான அறிகுறி அல்ல. கயிற்றுக் கட்டிலில் இருந்து கஷ்டப்பட்டு எழுந்த அந்த முதியவர் சுவற்றைப் பிடித்துக் கொண்டே மெள்ள வாசலுக்கு வந்தார்.

 

“பிரதம அமைச்சர் உங்களை அழைத்து வரச் சொன்னார்.” என்று காவலன் அறிவித்தான்.

 

முதியவர் நெஞ்சை எதோ அடைப்பது போல் உணர்ந்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருடைய மனைவி உள்ளிருந்து வந்தபடி சொன்னாள். “காவலனே. இப்போதெல்லாம் அவருக்குச் சில அடிகளுக்கு மேல் நடக்க முடிவதில்லை.”

 

காவலன் சொன்னான். “தெரியும். அதனால் தான் பல்லக்கோடு வந்திருக்கிறேன்.”

 

அவள் வெளியே எட்டிப் பார்த்தாள். வெளியே பல்லக்குடன் பல்லக்குத் தூக்கிகள் நின்று கொண்டிருந்தார்கள்.

 

முதியவர் மெல்லச் சொன்னார். “சிறிது பொறு காவலனே. தயாராகி விடுகிறேன்”

 

காவலன் தலையசைத்து விட்டு வெளியே சென்று நின்று கொண்டான். மூதாட்டி கணவரைக் கேட்டாள். “நீங்கள் ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்று வருடங்கள் பல ஆகி விட்டனவே. இப்போது என்ன விஷயமாக உங்களை பிரதம அமைச்சர் அழைக்கிறார்?”

 

முதியவர் ஏற்கெனவே பல பயங்களால் பீடிக்கப்பட்டவராக இருந்ததால் பேசப் பிடிக்காமல் கூரையை நோக்கிக் கையைக் காட்டினார். கடவுளுக்குத் தான் தெரியும் என்று அர்த்தம்.


(தொடரும்)

என்.கணேசன்      

Monday, December 18, 2023

யோகி 28

 

முரளிதரன் சொன்னதற்கு அந்த மனிதர் தலையை ஆட்டினாலும் உடனடியாக நகரவில்லை. யோசித்தவராகச் சொன்னார். “நிறைய கேஸ்கள் இருக்கே சார். எப்படி நீங்க...?”

 

முரளிதரன் சொன்னார். “அதுல சிலத தேர்ந்தெடுத்து முழுமையாய் செக் பண்ணச் சொல்லியிருக்காங்க. உங்க கம்ப்யூட்டர்லயும் எல்லாம் இருக்குமில்லயா? முதல்ல நோயாளியோட பெயர், வயசு, விலாசம், அட்மிட் ஆன தேதி, டிஸ்சார்ஜ் ஆன தேதி, ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர், உயிரோட டிஸ்சார்ஜ் ஆனாங்களா, இறந்து டிஸ்சார்ஜ் ஆனாங்களாங்கற ரிப்போர்ட்ட ரெடி பண்ணி கொடுங்க..... அதுல சிலத மட்டும் நான் தேர்ந்தெடுத்து முழுசா எல்லாத்தையும் செக் பண்ண வேண்டியிருக்கும்....”

 

தலையசைத்து விட்டு அந்த மனிதர் மெல்ல எழுந்தார். “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார். ரிப்போர்ட்டோட வர்றேன்...” என்று சொல்லி விட்டு வெளியே வந்தவர் சில அறைகள் தள்ளி இருந்த ஆட்களில்லாத காலி அறை ஒன்றில் நுழைந்து இன்னொரு எண்ணுக்குப் போன் செய்தார். முரளிதரன் வந்த விஷயத்தைத் தெரிவித்து விட்டுக் கேட்டார். “நிஜமாவே இப்படி ஒரு இன்ஸ்பெக்ஷன் இருக்கா?”

 

மறுமுனை சொன்னது. “மானியம் கேட்கறதுல முறைகேடுகள் சில இடங்கள்ல இருக்குன்னு புகார் நிறைய இருக்கு. அதுக்கு மத்திய அரசு சில ஆஸ்பத்திரிகள்ல திடீர் சோதனைகள் செய்யப்போறதா நானும் கேள்விப்பட்டேன். ஆனா தமிழ்நாட்டுல எங்கேயும் சோதனைக்கு வந்ததா தெரியல.”

 

வந்திருக்கற ஆள் பேர் ஆர். முரளிதரன். அந்த டிபார்ட்மெண்ட்ல இப்படி ஒரு ஆள் இருக்காரா, அந்த ஆள் இங்கே வந்திருக்கிறது அதிகாரபூர்வமா தானான்னு செக் பண்ணிச் சொல்ல முடியுமா?”

 

பத்து நிமிஷம் பொறு. நான் கேட்டுச் சொல்றேன்.”

 

மருத்துவமனை பொறுப்பாளர் சரியென்று சொல்லி விட்டு மறுபடி தனதறைக்கு வந்தார். முரளிதரன் தன் செல்போனில் வாட்சப் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரிடம் மிக பவ்யமாக பொறுப்பாளர் சொன்னார். “ரிப்போர்ட் ஜெனெரேட் பண்ணச் சொல்லியிருக்கேன் சார். நீங்க என்ன சாப்டறீங்க... காபி, டீ, ஜூஸ்...”

 

முரளிதரன் சொன்னார். “எதுவும் வேண்டாம்....”

 

சற்று தயங்கி அங்கே சில வினாடிகள் நின்று விட்டு மறுபடியும் பொறுப்பாளர் வெளியே வந்து லேசான பதற்றத்துடன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே முன்பு பேசிய காலி அறைக்குள் போய் அமர்ந்து கொண்டார். சில நிமிடங்கள் கழித்து அவர் முன்பு பேசிய ஆள் அழைத்துச் சொன்னார்.

 

அந்த ஆள் டிபார்ட்மெண்ட்ல இருந்து அனுப்பப்பட்டவர் தான். டில்லி, மும்பை, கல்கத்தாலயும் சில ஆஸ்பத்திரிகளுக்கு இது மாதிரி தணிக்கை செய்யப் போயிருக்காங்களாம். சென்னையில உங்க ஆஸ்பத்திரிக்கு மட்டும் தான் முதல்ல அனுப்பியிருக்காங்க. காரணம் பேர்லயே செவென் ஸ்டார் இருக்கறதால இருக்கலாம்...” என்று சொல்லி தன் நகைச்சுவைக்குத் தானே அந்த நபர் சிரித்துக் கொண்டார். 

 

மருத்துவமனை பொறுப்பாளருக்குச் சிரிப்பு வரவில்லை. இனி என்ன செய்வது என்று அவர் சிறிது நேரம் யோசித்தார். முக்கியமாய் மேனேஜிங் டைரக்டரை அழைத்து முரளிதரன் என்று ஒரு தணிக்கை அதிகாரி வந்திருப்பதைச் சொல்வதா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தார். பல வேலைகள், பல பிரச்சினைகள் உள்ள மேனேஜிங் டைரக்டர் இந்த சில்லறை விஷயத்திற்கு அழைத்துப் பேசினால் கோபித்துக் கொள்ளவும் கூடும் என்று பின்பு தோன்றியதால் அவரை அழைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.

 

பின் ஒரு நர்சை அழைத்துசதீஷை உடனடியாய் வரச் சொல்லும்மாஎன்று சொன்னார். அவள் போனவுடன் மெல்ல நடந்து போய் தனதறையை எட்டிப் பார்த்தார். இப்போதும் முரளிதரன் தன் செல்போனில் சாவகாசமாய் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். இவர் எட்டிப் பார்ப்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை.  பொறுப்பாளர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

 

சதீஷ் என்ற இளைஞன் வரும் வரை பொறுமையில்லாமல் அவர் அந்தக் காலி அறையில் காத்திருந்தார். சதீஷ் அந்த அறையைக் கடந்து போவது தெரிந்தது. அவர் அவருடைய அறையில் இருப்பதாய் நினைத்து அவன் அங்கு போகிறான் என்று புரிந்ததும் அவசரமாக எழுந்து வெளியே வந்து அவனை அழைத்தார். அவன் திரும்பிப் பார்த்ததும் அந்த அறைக்கு வருமாறு சைகை செய்தார்.

 

அவன் வந்ததும் அவர் தாழ்ந்த குரலில், முரளிதரன் என்ற தணிக்கை அதிகாரி தரச் சொல்லிக் கேட்கும் ரிப்போர்ட்டைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். அவன் சொன்னான். “அதொன்னும் பிரச்சினை இல்லை சார். பத்து நிமிஷத்துல ஜெனரேட் பண்ணித் தந்துடலாம்.”

 

பொறுப்பாளர் கவலையுடன் சொன்னார். “அதில் சிலதை அவர் தேர்ந்தெடுத்து அந்தச் சிலதோட முழு ஃபைல்களும் பார்ப்பார் போலத் தெரியுது.” 

 

சதீஷ் யோசனையுடன் தலையசைத்தான். “ரிப்போர்ட்ல சைத்ரா...”

 

அதைக் கண்டிப்பா சேர்க்கணும். அந்த ரெக்கார்ட்ஸ் நம்ம கிட்ட சரியா இருக்குஎன்று அவர் திருப்தியுடன் சொன்னார். சைத்ராவின் தந்தை ஒரு டாக்டர் என்பதாலும் அந்த ஆள் ஏற்கெனவே கோர்ட்டுக்குப் போனவர் என்பதாலும் அவள் மரணத்தில் சந்தேகம் கொண்டு எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை உருவாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்ததால் அந்த ஆவணங்களை மிகவும் கச்சிதமாகத் தான் அவர்கள் வைத்திருந்தார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றாலும் அந்த ஆவணங்களில் யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியாது.

 

சதீஷ் மெல்லக் கேட்டான்.  டாக்டர் வாசுதேவன்?”

 

பொறுப்பாளர் அதில் பிரச்சினையை உணர்ந்தார்.

 

 

சைத்ரா சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தயார் செய்தது போல் கச்சிதமாக வாசுதேவன் விஷயத்தில்  அவர்கள் அக்கறை காட்டியிருக்கவில்லை. வாசுதேவன் குடும்பத்தினர் பிரச்னை செய்பவர்களாக இருந்திருந்தால் அவர் மரணம் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கச்சிதமாகத் தயார் செய்திருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கும். வாசுதேவன் குடும்பத்தினர் சந்தேகப்படாமல் இருந்ததால் அது சம்பந்தமான போலி ஆவணங்கள் தயார்ப்படுத்தாமல் அப்படியே விடப்பட்டிருந்தன.

 

பொறுப்பாளர் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னார். “டாக்டர் வாசுதேவன் பெயரைச் சேர்க்க வேண்டாம். அதனால கோவிட்ல இறந்த நர்ஸ் ரோஸ்மேரி பெயரையும் சேர்க்காதீங்க. ஒருவேளை அப்புறமா தெரிய வந்தாலும் நாம நோயாளிகள் பத்தி தான் அவர் கேட்டதா நினைச்சோம்னும், ஸ்டாஃப்பும் சேர்த்து கேட்டார்ங்கறது தெரியலைன்னும் சொல்லிக்கலாம்.” 

 

சதீஷ் தலையசைத்தான். பொறுப்பாளர் சொன்னார். “ரிப்போர்ட்டை என் ரூமுக்குக் கொண்டு வாங்க

 

ஓக்கே சார்என்று சதீஷ் சொல்லி விட்டு நகர்ந்தான்.  பொறுப்பாளர் தனதறைக்குத் திரும்பினார்.

 

சாரி சார். கம்யூட்டர் கொஞ்சம் பிரச்சன பண்ணிடுச்சு. ஆனா அத சரி பண்ணிட்டாங்க. அதனால தான் லேட். பத்து நிமிஷத்துல ரிப்போர்ட் வந்துடும்.” என்று சொன்னபடியே பொறுப்பாளர் தன் இருக்கையில் அமர்ந்தார்.

 

முரளிதரன் சங்கடப்படாமல் சொன்னார். “பரவாயில்ல. எல்லா இடத்துலயும் இந்தப் பிரச்சன இருக்கவே இருக்கு. டெக்னாலஜில எத்தனையோ சௌகரியமும் இருக்கு. பிரச்சனையும் கொஞ்சமாவது இருக்கு தான். என்ன பண்றது

 

பொறுப்பாளர் திருப்தியுடன் புன்னகைத்தார். இந்த ஆள் பிரச்சினை செய்யும் ஆளாய் தோன்றவில்லை. அனுசரித்துப் போக முடிந்தவராகவே தெரிகிறார். பொறுப்பாளர் நட்பு தொனியில் கேட்டார். “இந்த இன்ஸ்பெக்ஷன் எல்லா ஆஸ்பத்திரியிலும் செய்வீங்களா சார். இல்லை ஒருசில ஆஸ்பத்திரிகள்ல மட்டும் தான் செய்வீங்களா?’

 

முரளிதரன் சொன்னார். “இப்போதைக்கு ரேண்டமா செலக்ட் பண்ணி சில ஆஸ்பத்திரிகள்ல மட்டும் செய்யச் சொல்லியிருக்காங்க. எங்க ரிப்போர்ட்ஸ வெச்சு மத்த ஆஸ்பத்திரிகள்லயும் செய்ய வேண்டிய அவசியம் இருக்கா இல்லையான்னு முடிவு செய்வாங்க. எனக்கு இங்கே ஒரே நாள் தான் தந்திருக்காங்க. இங்கே முடிச்சுட்டு நாளைக்கு ஹைதராபாத்ல ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகணும்...”

 

பொறுப்பாளர் நட்புணர்வைக் கூடுதலாகக் காட்டிய புன்னகைத்தபடி கேட்டார். “இது ஒரு அலுப்பான வேலையில்லையா சார்?”

 

முரளிதரனும் புன்னகைத்தார். “நாயாய் பொறந்துட்டு குரைக்காமல் இருக்க முடியுமா?”

 

பொறுப்பாளர் வாய்விட்டுச் சிரித்தார். இந்த ஆள் அகம்பாவியாகவோ, பிரச்னை செய்யும் ஆளாகவோ தெரியவில்லை. சற்று நிம்மதியாயிற்று. ஆனால் அந்த நிம்மதி சீக்கிரமே தொலைந்தது.


(தொடரும்)

என்.கணேசன்




 

Thursday, December 14, 2023

சாணக்கியன் 87

 

லெக்ஸாண்டரின் மரணம் எல்லா யவனர்களையும் போலவே புஷ்கலாவதியில் இருந்த யூடெமஸையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றாலும் அவன் க்ளைக்டஸைப் போலவோ, மற்ற பல யவன வீரர்கள் போலவோ சோகத்தில் ஆழமாக ஆழ்ந்து விடவில்லை. ’இனி இங்கு நம் நிலைமை என்ன?’ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். அலெக்ஸாண்டரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் அதிகாரத்திற்கு யாராவது உரிமை கொண்டாடி வரக்கூடும். அப்படி அதிகாரத்திற்கு வருபவர்கள் பாரதத்தில் அலெக்ஸாண்டர் வென்ற பகுதிகளையும், அங்கு யார் சத்ரப்பாக இருக்கிறார்கள் என்பதையும் பற்றிக் கவலைப்படுவார்களா என்று தெரியவில்லை. அப்படியே அதிகாரத்திற்கு வரும் நபர் பாரதம் குறித்து ஆர்வம் காட்டினாலும் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் குறைவு. அதனால் இங்கு இருக்கும் நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டால் இங்கேயே ஒரு அரசனைப் போல் இருந்து விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

 

முதலிலேயே புத்திசாலித்தனமாக அவன் சிந்துப் பிரதேசத்திற்கு வடக்கில் தானும், தெற்கில் ஆம்பி குமாரனும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆம்பி குமாரனுக்குத் தெரிவித்திருந்தது இப்போது யூடெமஸுக்கு மிக நன்மையாகப் பட்டது. ஆனால் அவன் முன்பு கேள்விப்பட்டது போல ஆம்பி குமாரன் முட்டாள் அல்ல. தெற்கில் கவனித்துக் கொள்வது என்றால் அதற்கேற்றபடி வாஹிக் பிரதேசத்தில் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க அவன் தயாராக இல்லை என்பதைத் தெளிவாகவே தெரிவித்து விட்டான். ’அப்படி மீட்க வேண்டுமானால் நீயும் படையுடன் வா, நாம் சேர்ந்து போவோம்என்று சொல்லி விட்டுச் சும்மா இருக்கிறான். அவனைச் சொல்லியும் தப்பில்லை. உயிர்ப்பயம் யாரை விட்டது?     

 

இங்கே நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் கூடுதல் படைபலம் இருப்பது நல்லது என்று யூடெமஸ் நினைத்தான். ஆம்பி குமாரனிடம் கேட்பது எந்தப் பலனும் தராது என்பது புரிந்து விட்டது. ஏற்கெனவே அவன் தன் படைகளை யவனர்கள் அதிகம் எடுத்துக் கொண்டு போய் விட்டதாய் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று சில படைத்தலைவர்கள் யூடெமஸிடம் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஆம்பி குமாரனும் ஒரு சத்ரப் ஆக இருப்பதால் அவனை அதிகாரம் செய்து கேட்க வழியில்லை.

 

காந்தாரத்திற்கு அதிகப்படியாக படைபலம் இருப்பதும், அடுத்து இருப்பதும் கேகயம் தான். யானைப்படை முதற்கொண்டு கேகயத்தின் படைகள் மிக வலிமையானவை. அந்தப் படைகளைப் பார்த்து அலெக்ஸாண்டரே அசந்து போனதாக யூடெமஸ் கேள்விப்பட்டிருக்கிறான். அதனால் கேகயத்திலிருந்து படைகளைத் தருவிக்கலாம். சத்ரப் ஆன அவன் ஆணையிட்டால் அனுப்ப வேண்டிய நிலையில் இருப்பவன் புருஷோத்தமன்....  இந்த சிந்தனைகளின் முடிவில் யூடெமஸ் புருஷோத்தமனுக்கு ஆணை பிறப்பித்து ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.

 

யூடெமஸின் ஆணையைப் படித்த புருஷோத்தமன் ஆத்திரமடைந்தார். ஆணையைக் கொண்டு வந்த தூதனை அவர் பார்த்த பார்வை எரித்து விடுவதாக இருந்தது. ஆனால் தூதனிடம் கோபித்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்த அவர்நாளை வந்து என் பதிலைப் பெற்றுக் கொண்டு போஎன்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தார்.

 

அவன் வெளியேறும் வரை கஷ்டப்பட்டு அமைதி காத்த புருஷோத்தமன் பின் கொதித்தபடி இந்திரதத்திடம் சொன்னார். “யூடெமஸ் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அலெக்ஸாண்டரின் காலைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சத்ரப் ஆகி விட்டால் அலெக்ஸாண்டரை விடத் தங்களை உயர்வாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள் போல் தெரிகிறது. தெற்கில் நடப்பது போல கலவர பூமியாக கேகயம் ஆகி விடாமல் திறம்பட நாம் பார்த்துக் கொண்டதற்கு இவன் தரும் பரிசா இது?...”

 

இந்திரதத் புரியாமல் விழிக்க அந்த ஓலையை புருஷோத்தமன் நீட்டினார். ஓலையைப் படித்துப் பார்த்த இந்திரதத்துக்கும் அது அநியாயமான ஆணையாகத் தான் தோன்றியது. சிந்துப் பிரதேசத்தை இந்தச் சூழ்நிலையில் வலிமைப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதால் உடனடியாக ஐநூறு யானைகள், ஆயிரம் குதிரைகள், இரண்டாயிரம் வீரர்களை சிந்துப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கும்படி யூதிடெமஸ் ஆணையிட்டிருந்தான்.

 

புருஷோத்தமன் சொன்னார். “சத்ரப்பாக இரண்டு பேர் நியமிக்கப்பட்ட செய்தி கேட்ட பிறகு நான் ஆம்பி குமாரனிடமிருந்து தான் அதிகப் பிரச்னைகளை எதிர்பார்த்தேன். அவன் குறைந்த பட்சம் இங்கு ஒரு முறையாவது சத்ரப் ஆக வந்து அதிகாரம் செய்துவிட்டுப் போவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதிசயமாக அவன் எந்தத் தொந்திரவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறான். ஆனால் யூடெமஸ் பிரச்சினை தர ஆரம்பித்து விட்டான்.  புரட்சிக்காரர்கள் அதிகம் இருப்பது நம் அருகில் தான். நம்மையும், காந்தாரத்தையும் தாண்டாமல் யாரும் சிந்துப் பிரதேசத்தைத் தாக்க முடியாது. அப்படி இருக்கையில் அதிகம் படைகள் வேண்டியது இந்த இரண்டு இடங்களில் தானே ஒழிய சிந்துப் பிரதேசத்தில் அல்ல.  உண்மையில் நிலைமை இப்படி இருக்கையில் யூடெமஸ் எதை வைத்து சிந்துப் பிரதேசத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சொல்கிறான்? நியாயமாக அவன் அங்கிருந்து நமக்குக் கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நம் பாதுகாப்பில் தான் அவன் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. அவன் அதைச் செய்யாமல் நம்மிடமிருந்து யானைகளையும், குதிரைகளையும், வீரர்களையும் கேட்கிறான் என்றால் அதைப் பொறுப்பற்ற திமிர் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது இந்திரதத்?”   

 

இந்திரதத் அமைதியாகச் சொன்னார். “அவன் கேட்டவுடன் நாம் அனுப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை அரசே. இங்குள்ள நிலைமையை விவரித்து நாமும் அவனுக்கு எழுதுவோம். இங்கே மக்கள் மனதில் புரட்சிக் காரர்களுக்கு ஆதரவு இருக்கிறது, புரட்சி இங்கே வெடிக்குமானால் மக்களும் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கவும், அவர்களுடன் சேர்ந்து கொண்டு போராடவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இங்கு எப்போதும் படைபலம் குறைவில்லாமல் தயார்நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே படைகளில் கணிசமான ஒரு பகுதி அலெக்ஸாண்டர் இருக்கும் போதே மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் குறைந்திருக்கும் படைபலம், அலெக்ஸாண்டரின் மரணத்திற்குப் பிறகு நிறைய யவன வீரர்கள் தாயகம் போய் விட்டதால் மேலும் குறைந்திருக்கிறது. இந்தக் காரணங்களால் நாம் அவன் கேட்டுக் கொண்டபடி படைகளை அனுப்பி வைக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்று பதிலை அனுப்பி வைப்போம்.”

 

புருஷோத்தமன் மெல்லத் தலையசைத்தார். இந்திரதத் சொன்னதில் மிகைப் படுத்தல் சிறிதும் இல்லை. உண்மை நிலையே அது தான். “அப்படிப் பதில் அனுப்பினால் அவன் ஏற்றுக் கொண்டு சும்மா இருந்து விடுவானா?” என்று தன் சந்தேகத்தை அவர் எழுப்பினார்.

 

இந்திரதத் சொன்னார். “அதற்கு வாய்ப்பு குறைவு தான். ஆனாலும் மறுபடி அவன் வற்புறுத்திக் கேட்டால்  ஐம்பது யானை, நூறு குதிரை, இருநூறு வீரர்களை அனுப்பி வைப்போம். வணிகத்தில் பேரம் பேசுவது போலப் பேசித் தான் அவனைச் சமாளிக்க வேண்டியிருக்கும். வேறு வழியில்லை”

 

புருஷோத்தமன் பெருமூச்சு விட்டார். அருகிலிருக்கும் மலைப்பகுதிகளை எல்லாம் வென்று பர்வதேஸ்வரன் என்று பெயர் பெற்ற அவர் நிலைமை யூடெமஸ் போன்றவனை எல்லாம் சமாளிப்பதையே பெரிய விஷயமாக நினைக்கும்படியாகி விட்டதே. ஒரு தோல்வி எது வரை அவரை இழுத்து வந்து விட்டது! அலெக்ஸாண்டர் பாரதம் விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால், இப்படி அற்பாயுசில் இறந்து போகாமல் இருந்திருந்தால், பாரத மண்ணில் புரட்சிகள் வெடிக்காமல் இருந்திருந்தால், என எத்தனையோ இருந்திருந்தால்களை அவர் மனம் யோசிக்க ஆரம்பித்தது.    

 

ஆனால் எந்த ஆசை அனுமானத்திலும் அர்த்தமில்லை என்பதும் அவருக்குப் புரியாமல் இல்லை. நிஜங்களை சந்திக்க மறுப்பது புத்திசாலித்தனமல்ல. யூடெமஸுக்கு இந்திரதத் சொன்னது போல ஒரு கடிதம் எழுதி அனுப்புவது என்று முடிவெடுத்த அவர் மனம் அடுத்ததாக புரட்சி வீர்ர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது, அவர் கேட்டார். “அடுத்ததாய் புரட்சிக்காரர்கள் என்ன செய்வார்கள் என்று நீ நினைக்கிறாய் இந்திரதத்?”

 

“அவர்கள் என்ன செய்வார்கள் என்பது விஷ்ணுகுப்தரின் ஆலோசனையைப் பொறுத்துத் தான் இருக்கும் அரசே. அவர் திட்டம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.”

 

“அவர் உன் நண்பரல்லவா இந்திரதத்? நீ ஒரு முறை அவரைச் சந்தித்து நிலவரம் அறிந்து வரலாமே”

 

“அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை அரசே.  அவர் சில நாட்களுக்கு முன் தட்சசீலத்திற்குத் திரும்பி வந்திருந்தார் என்று சொன்னார்கள். சில நாட்கள் இருந்து விட்டு மறுபடி எங்கோ போய் விட்டதாய்ச் சொல்கிறார்கள். அப்படி ஒரு வேளை அவரை நான் சந்தித்தாலும் அவர் என்னிடமே கூட அனைத்தையும் சொல்வார் என்று நான் எதிர்பார்க்க முடியாது. யாரிடமும், தேவையானதை மட்டும், தேவைப்படும் நேரத்தில் மட்டும் சொல்லி மீதத்தைத் தன் மனதுக்குள்ளே பூட்டிக் கொள்வதில் அவர் கெட்டிக்காரர்”

 

(தொடரும்)

என்.கணேசன்