என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Saturday, November 11, 2023

யோகி 22

(தீபாவளி போனஸ் அத்தியாயம்) 

ராகவன் ஷ்ரவனுக்குப் போன் செய்து அவன் கேட்டுக் கொண்டபடி அவர்கள் ஆள் ஒருவன் யோகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டதாகச் சொன்னார். ”அங்கே இப்போதைக்குத் தோட்ட வேலை பார்க்கத் தான் ஆள் தேவைன்னு தெரிஞ்சுது. இந்தியாவில் ரஜனீஷ் ஆசிரமத்துக்கு இணையான தோட்டங்கள் இருக்கிற ஆசிரமம் இது தானாம். அங்கேயிருக்கற துறவிகளும் தினசரி அந்த தோட்ட வேலை செய்யறாங்கன்னாலும், வெளியாட்களையும் தோட்ட வேலைக்கு எடுத்துக்கறாங்க. அதனால தைரியமான, புத்திசாலித்தனமான ஒருத்தனை அந்த வேலைக்கு அனுப்பிச்சிருக்கேன். குமரேசன்னு பெயர். அங்கே மருதகாசிங்கற பேர்ல போய் சேர்ந்திருக்கான். ரெண்டு நாளாச்சு. காலைல ஆறு மணியில இருந்து மத்தியானம் ரெண்டு மணி வரைக்கும் வேலை... காலைல காபி டிபன், மதியம் சாப்பாடு தந்துடறாங்க... மதியம் ரெண்டு மணிக்கு அவன் கிளம்பிடலாம். அங்கே வேலை செய்ய முக்கியமான நிபந்தனை என்னன்னா செல்போனை யோகாலயத்துக்குள்ளே கொண்டு போகக்கூடாது. கேட்ல செக்யூரிட்டி கிட்டே கொடுத்துட்டுப் போயிடணும். வர்றப்ப தான் எடுத்துகிட்டு வர முடியும்

 

ஷ்ரவன் சொன்னான். “உள்ளே எதையும் போட்டோ எடுக்கறதோ, வீடியோ அல்லது ஆடியோ ரிகார்ட் பண்றதோ அவங்களுக்குப் பிரச்சினை ஆயிடலாம்னு நினைக்கிறாங்க போல இருக்கு

 

அது தான் காரணமாயிருக்கும். இந்த வேலை செய்யறவன் தோட்டத்துல மட்டும் தான் இருக்கணும். சாப்பிடற ஹால் ஒன்னு உள்ளே இருக்காம். அங்கே மட்டும் சாப்பிடற நேரத்துல போய்க்கலாம். மத்தபடி தோட்டம் தவிர எங்கேயும் எப்பவுமே போக அனுமதி இல்லையாம்.”

 

கண்காணிக்க ஆட்கள் இருக்காங்களா?”

 

ஆமாம். அது மட்டுமில்லாம கண்காணிப்பு காமிரா எல்லா இடங்கள்லயும் இருக்காம். யாராவது அவங்கவங்க இருக்க வேண்டிய, போக வேண்டிய இடங்களையும் தாண்டிப் போனா உடனடியா ரெண்டு அல்லது மூனு நிமிஷத்துக்குள்ளே என்னன்னு விசாரிக்க ஆள் வந்துடறாங்கலாம்...”

 

அப்படின்னா புது ஆள்களைக் கூடுதலாய் அவங்க கண்காணிக்க வாய்ப்பிருக்கு. குமரேசனை எச்சரிக்கையோட இருக்க சொல்லணும்.”

 

அதை குமரேசனும் தெரிஞ்சுதான் வெச்சிருக்கான்... கவனமாயிருக்கான்... நீ எப்ப போறதாயிருக்கே?”

 

அடுத்த திங்கள்கிழமைல ஆரம்பிக்கிற யோகா க்ளாஸ்ல சேர்றதுக்கு ஆன்லைன்ல அப்ளை செஞ்சிருக்கேன். சைத்ரா போன அதே கோர்ஸ். ஒரு வாரம் அங்கேயே தங்கி படிக்க பணம் அனுப்பிச்சிட்டேன்.”

 

நல்லது. இப்ப என்ன பண்ணிகிட்டிருக்கே?”

 

பிரம்மானந்தாவோட வாழ்க்கை வரலாறைப் படிச்சிகிட்டிருக்கேன்...”

 

அவர் வாழ்க்கை வரலாறு எப்படியிருக்கு?’

 

ரொம்ப சுவாரசியமாயிருக்கு

 

உண்மையாகவே பிரம்மானந்தாவின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமாகத் தான் இருந்தது.

 

பிரம்மானந்தாவின் இயற்பெயர் ப்ரேமானந்த். ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். தந்தை தாய்க்கு ப்ரேமானந்த் மூத்த பிள்ளை. உடன் பிறந்தவள் ஒரு தங்கை மட்டுமே. ராஜபாளையத்திலேயே அவரது பள்ளிக் கல்வியும், கல்லூரிக் கல்வியும் இருந்தது என்பதைத் தவிர ப்ரேமானந்தின் இளமைப்பருவம் பற்றி அதிக தகவல்கள் இல்லை. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பின் அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் ஒரு வருடமும், பின் மதுரையில் தனியார் கம்பெனியில் இரண்டு வருடங்களும் வேலை பார்த்து பின் சொந்தமாக நாட்டு மருந்து, மூலிகைகள் வியாபாரம் இரண்டு வருடம் செய்திருக்கிறார். அப்படி மூலிகைகள் வியாபாரம் செய்கையில் மூலிகைகள் பொறுக்க, சதுரகிரி மலைக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அப்போது சதுரகிரிக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்த பத்மநாப நம்பூதிரி என்ற யோகா மாஸ்டரிடம் அவர் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் கற்றிருக்கிறார். பத்மநாப நம்பூதிரி கேரளாவிலும் தமிழகத்திலும் பெரிய நகரங்களில் யோகா வகுப்புகள் நடத்துபவர். அவருடைய யோகா வகுப்புகள் திருவனந்தபுரம், நாகர்கோயில், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர், கோயமுத்தூர், சேலம் முதலான நகரங்களில் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருந்தன.  ப்ரேமானந்த் மிகவும் சூட்டிப்பாகவும், பேச்சில் கெட்டிக்காரராகவும் இருந்து பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றுக் கொள்ளவும் செய்யவே தன்னோடு யோகா பயிற்சி கற்றுக் கொடுக்கும் வேலைக்கு வர விருப்பமிருக்கிறதா என்று பத்மநாப நம்பூதிரி கேட்டிருக்கிறார். ப்ரேமானந்துக்கு அப்போதைய வியாபாரத்தில் நல்ல வருமானம் இல்லாதிருந்ததால் அதற்கு உடனே சம்மதித்து உடன் சென்றிருக்கிறார்.

 

பத்மநாப நம்பூதிரி திருவனந்தபுரத்தில் வாழ்பவர். அவருடைய யோகா வகுப்புகளின் தலைமையகமும் அங்கேயே இருந்தது. பத்மநாப நம்பூதிரியுடன் சேர்ந்து ஒரு வருடம் யோகா பயிற்சியாளராக திருவனந்தபுரத்தில் இருந்த ப்ரேமானந்த் அடுத்த வருடம் சென்னையில் புதிதாக ஆரம்பித்த கிளையில் யோகா பயிற்சியாளராகச் சென்றார். அதன் பின் அவர் வாழ்க்கை திசை மாறியது.

 

சென்னையில் யோகா கற்றுக் கொள்ள வந்த பெரிய செல்வந்தர்களுடன் அவருக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் அவருடைய பேச்சினால் மிகவும் கவரப்பட்டார்கள். அந்த சமயத்தில் ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்ற போது யோக சித்தி கிடைத்ததாக அவர் கூறினார். அவர் தன்னுடைய நூல் ஒன்றில் அந்தப் பேரானந்த அனுபவத்தை எழுதியிருந்ததை ஷ்ரவன் படித்தான்.

 

சென்னையிலிருந்து  நான் ராஜபாளையத்திற்குப் போய்ச் சேர்ந்த போது இரவாகி விட்டிருந்தது. அம்மா எனக்காகச் செய்திருந்த பலகாரங்களைச் சாப்பிட்டு பயணக்களைப்பினால் இரவு நன்றாக உறங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் என் கனவில் ஒரு சித்தர் தோன்றினார். அவரை நான் அதற்கு முன் எப்போதும் பார்த்திரா விட்டாலும் அந்தச் சித்தர் கோரக்கர் என்று எனக்குத் தோன்றியது. அப்படி ஏன் தோன்றியது என்று எனக்குத் தெரியவில்லை. என் ஆத்மாவே முந்தைய பிறவிகளில் அவரைக் கண்டிருந்த அனுபவத்தால் அடையாளம் கண்டு கொண்டதாகவே நினைக்கிறேன். அவர் என்னிடம் சொன்னார். “காலம் நெருங்கி விட்டது. சஞ்சீவிகிரிக்குப் போ 

 

உடனே நான் விழித்துக் கொண்டேன். சதுரகிரிக்கு ஆரம்பத்தில் சஞ்சீவிகிரி என்ற பெயர் தான் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு நான் ஏன் செல்ல வேண்டும், எதற்குக் காலம் நெருங்கி விட்டது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் சதுரகிரியில் பல காலம் வாழ்ந்தவர். அதனால் அங்கு வரச் சொல்கிறாரா இல்லை எல்லாமே என் கற்பனையா, அர்த்தமில்லாத கனவா என்று தெரியவில்லை. ஆனாலும் மறுநாள் காலை டிபன் சாப்பிட்டு விட்டு சதுரகிரி மலைக்கு என் ஸ்கூட்டரில் புறப்பட்டேன். மலை அடிவாரத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி சதுரகிரிமலை ஏறினேன். அதற்கு முன்பும் பல முறை அந்த மலையில் ஏறியிருக்கிறேன் என்றாலும் அன்றைய தினம் சதுரகிரி கூடுதல் அமைதியுடன் இருப்பது போல் தோன்றியது. “சரி வந்தாகி விட்டது. இனி என்ன?” என்று மானசீகமாக கோரக்கர் சித்தரிடம் கேட்கிறேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சரி வந்ததற்கு முதலில் சுந்தர மகாலிங்கம் சன்னிதியில் வணங்கி விட்டுத் திரும்புவோம் என்று நினைத்துக் கொண்டேன். சுந்தர மகாலிங்கத்தின் விசேஷம் என்னவென்றால் மற்ற லிங்கங்களைப் போல் அது நேராக இருக்காமல் சாய்ந்த நிலையில் தான் இருக்கும். சன்னிதியில் அந்த லிங்கத்தை மனதார வணங்கிய போது அது வரை உணராத ஒரு சிலிர்ப்பை நான் உணர்ந்தேன். அது ஏன்? என் சிற்றறிவுக்கு அதற்கும் காரணம் தெரியவில்லை.”

 

சன்னிதியை விட்டு வெளியே வந்த போது தூரத்தில் ஒரு பாறையின் மீது கோரக்கர் நின்றிருப்பது தெரிந்தது. கனவில் கண்ட அதே தோற்றம்! மெய் சிலிர்த்தபடி நான் கைகூப்பினேன். அவர் கை ஆசிர்வதிப்பது போல் உயர்ந்தது. திடீரென்று பார்த்தால் சுற்றிலும் அவரைப் போன்ற சித்தர்கள் பலர் அங்கங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் சித்தர்கள் என்பதில் சந்தேகமில்லை. சதுரகிரி மலையே சித்தர்கள் வாழும் மலையல்லவா? அவர்கள் எல்லோரும் எதற்கோ காத்துக் கொண்டிருந்தது போல் எனக்குத் தோன்றியது. அடுத்த கணம் என் முன்னால் ஒரு பேரொளி தோன்றியது. கண்கள் கூச நான் உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அத்தனை சித்தர்களும் கைகூப்பி வணங்குவதை என்னால் பார்க்க முடிந்தது.  இவர்கள் அனைவரும் யாரை வணங்குகிறார்கள் என்று நான் திகைப்புடன் திரும்பவும் அந்த ஜோதியைப் பார்த்தேன். ஜோதிக்கு நடுவே சுந்தர மகாலிங்கம் சாய்ந்த நிலையில் தெரிந்தது. பிரமித்துப் போய் நானும் கைகூப்பினேன்.”

 

அந்த சுந்தர மகாலிங்கத்தில் முதலில் நெற்றிக் கண் தெரிந்தது. பின் மற்ற இரண்டு கண்களும், மூக்கும், காதுகளும், உதடுகளும் தெரிய ஆரம்பிக்க நான் வசியம் செய்யப்பட்டவன் போலவே உணர்ந்தேன். ”ஈசனே! இது என்ன காட்சி! இதைக் காண நான் எத்தனை காலம் தவம் செய்திருக்கிறேன்என்று நான் என் ஆத்மாவின் கூக்குரலைக் கேட்டேன்.... இதை எழுதும் போதும் சரி இதுபற்றிப் பேசும் போதும் சரி, ஒவ்வொரு முறையும் என் உடம்பில் என்னை அறியாமல் மயிர்க்கூச்செறிவது ஏன்?”


(தொடரும்)

என்.கணேசன்






Thursday, November 9, 2023

சாணக்கியன் 82

 

னிதர்கள் சந்திக்கும் சில அபூர்வ தருணங்கள் குழப்பமானவையாகவும் இருப்பதுண்டு. அந்தச் சூழ்நிலைகளை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்புவதற்குக் காரணமே அவை எப்படியும் எடுத்துக் கொள்ளக் கூடியவையாக இருப்பது தான். அது போன்ற மதில் மேல் பூனையாக மக்கள் இருக்கும் தருணங்களைத் தாங்கள் விரும்பும் வகையில் சாய்த்து வழிநடத்த முடிபவர்களே வரலாற்றில் பெரும் திருப்புமுனைகளை ஏற்பட முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.

 

பிலிப்பும், யவன சேனாதிபதியும் கொல்லப்பட்ட பின்பு அந்த முகாமில் அதுபோன்ற குழப்பமான சூழ்நிலையே நிலவியது. வீரசேனனும், சூரசேனனும் பிலிப்பின் கூடாரத்தை விட்டு வெளியே வந்து மீதமிருக்கும் இரண்டு காவல் வீரர்களையும் வீழ்த்தி முடித்த பின் வீரசேனன் வானை நோக்கி தீப்பந்தத்தை வீச, சூரசேனன் கேட்டான். “இனி நாம் என்ன செய்வது?”

 

அதற்கான பதில் வீரசேனனுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. உயிர் காத்துக் கொள்ளும் அவசியத்திலும், சந்திரகுப்தனின் படை உதவிக்கு இருக்கிறது என்ற தைரியத்திலும் இத்தனையும் நடந்து விட்டதே ஒழிய இனி என்ன செய்வது என்பது அவனுக்கும் தெரியவில்லை. அவன் சொன்னான். “எனக்கும் தெரியவில்லை. ஆனால் நமக்கு உதவிக்கு வரும் புரட்சிப்படையினர் எல்லாவற்றையும் யோசித்து வைத்திருப்பவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வோம். எதற்கும் நம் படைப்பிரிவினரை நாம் தயார்ப்படுத்தி வைப்போம் தம்பி”

 

சூரசேனன் சொன்னான். “நான் ஏற்கெனவே அதற்கான ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறேன். இன்னேரம் அவர்கள் தயாராக இருப்பார்கள். அழைத்தவுடன் அவர்கள் வந்து விடுவார்கள்”. சொல்லி விட்டு அவன் அவர்களை அழைக்க விரைந்தான்.

 

புரட்சிப் படையினரின் வருகை குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டுத் தெரியவரவே யவனப் படையினரும், மற்ற படைப்பிரிவினரும் மெல்ல விழிப்படைந்து அவசர அவசரமாக வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே வந்த போது வீரசேனனின் படைவீரர்களும், சூரசேனனின் படைவீரர்களும் அங்கே ஆயுதங்களோடு குழுமியிருந்தார்கள். வீரசேனன் கர்ஜிக்கும் குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான். “யவனர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டார்கள் வீரர்களே. இவர்களுக்காக உயிரையும் பணயம் வைத்துப் போரிட்டு காயப்பட்டுத் தப்பி வந்த என்னைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சற்று முன் கொல்லப் பார்த்தார்கள். இறையருளால் தற்காத்துக் கொண்டேன். இனி இவர்கள் அன்னியர்கள். இவர்களிடமிருந்து விடுபடுவதே நம் லட்சியம். புரட்சிக்காரர்கள் உண்மையில் நம் நண்பர்கள். நமக்கு உதவ வந்து விட்டார்கள்….”

 

யவனப்படை வீரர்கள் திகைத்தார்கள். முன்பே வீரசேனனால் தடுக்கப்பட்டு வீரசேனன் மீது அனைவரிடமும் புகார் சொல்லிக் கொண்டிருந்த யவனப்படைத் தலைவன் வேகமாக சத்ரப்பின் கூடாரம் நோக்கி ஓடினான். உள்ளே போய் பிலிப்பும் சேனாதிபதியும் ஒரு காவல்வீரனும் கொல்லப்பட்டு இருப்பதைக் கண்டவன் அதிர்ந்து போய்த் திரும்பி வந்து கத்தினான். “நம் சத்ரப்பையும், சேனாதிபதியையும் இவர்கள் கொன்று விட்டார்கள்” யவனப் படைவீரர்கள் மட்டுமல்லாமல் மற்றப்படைப் பிரிவினரும் அதிர்ந்து நின்றார்கள். யாருக்கும் இனி என்ன செய்வது என்ற தெளிவிருக்கவில்லை.  நம்மை விட மற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற பயம் யவனர்களை எச்சரித்தது. வீரசேனன், சூரசேனன் அல்லாத மற்றப் படைப் பிரிவினர் சத்ரப்பும், சேனாதிபதியும் கொல்லப்பட்டு, யவனர்களுக்கு எதிராக இவர்கள் திரும்பி விட்ட பிறகு, நாம் என்ன செய்வது எந்தப் பக்கம் சேர்வது என்ற குழப்பத்தில் இருந்தார்கள்.     

 

முகாமை நெருங்கி விட்ட சந்திரகுப்தன் காதுகளில் “நம் சத்ரப்பையும், சேனாதிபதியையும் இவர்கள் கொன்று விட்டார்கள்” என்று யவனப்படைத் தலைவன் கத்தியது தேனாகப் பாய்ந்தது. எல்லாரும் என்ன செய்வது என்று குழம்பிய நிலையில் இருப்பதையும் அவன் முதல் பார்வையிலேயே உணர்ந்தான். இயல்பாகவே தலைமைப் பண்புகள் வளர்ந்திருந்ததால் நிலைமையைத் தன்வசப்படுத்திக் கொண்டு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்த முடிந்த அவன் உச்ச ஸ்தாயியில் கர்ஜித்தான். “நம் இலக்கு யவனர்கள் மட்டுமே. அவர்களை மட்டுமே தாக்குங்கள். மற்றவர்கள் நம் சகோதரர்கள். நம்மவர்கள். அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது”

 

அதைக் கேட்டு வீரசேனனும் கத்தினான். “யவனர்கள் தான் நம் எதிரிகள். அவர்களை மட்டும் தாக்குங்கள்”

 

மற்றப் படைப்பிரிவின் தலைவர்கள் யோசித்தார்கள். புரட்சிப்படை வீரர்கள் அவர்களை எதிரிகளாக நினைக்கவில்லை. அவர்களைச் சகோதரர்கள் என்கிறார்கள். யவனர்கள் அன்னியர்கள், நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்ற செய்தி முன்பிருந்தே குடிமக்கள் சொல்லி வருவது அவர்களுக்குத் தெரியும். அவர்களுடன் இணைந்து போரிட்ட வீரசேனனும் சொந்த அனுபவத்தால் அதையே இப்போது சொல்கிறான். அவன் சகோதரனும் அவனுடன் தான் இருக்கிறான். சத்ரப்பும் சேனாதிபதியும் கூட இறந்து விட்ட பிறகு யவனர்கள் பக்கம் இருப்பதற்கு அவசியமுமில்லை. ஒரு காலத்தில் சாதாரண குடிமக்கள். குழந்தைகள், பெண்கள் உட்பட கொன்று குவித்தவர்கள் இந்த யவனர்கள்….

 

சூழ்நிலை உடனடியாக யவனர்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்று சேர்த்தது. ஒரு புதிய வரலாறு அந்த நள்ளிரவில் எழுதப்பட்டது.

 

லெக்ஸாண்டர்  ஒற்றன் சொன்ன செய்திகளைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். “சக்கரவர்த்தி. புரட்சி வீரர்களுடன் நம் யவனப்படை தவிர மற்ற படைப்பிரிவினர் அனைவரும் சேர்ந்து கொண்டதால் நம் யவனப்படை சரணடைந்து விட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நம் வீரர்கள் உயிர் தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன் பின் சந்திரகுப்தன் தலைமையை அனைத்துப் படைகளும் ஏற்றுக் கொண்டார்கள். மாளவத்தில் நடந்தது போலவே, ஷுத்ரகத்திலும், சௌரப்நகரிலும், ஸ்கந்தாவரிலும் புரட்சிப் படைகள் மக்களுடன் சேர்ந்து யவனப்படைகளைத் தனிமைப்படுத்தி விட்டார்கள். ஆனால் மற்ற படைப்பிரிவினரை தங்களுடன் இணைத்துக் கொண்டு விட்டார்கள். மாளவம், கத், ஷுத்ரகம் பகுதிகளைக் கொண்ட வாஹிக் பிரதேசம் முழுவதும் சந்திரகுப்தனின் தலைமையின் கீழ் வந்து விட்டது. அருகிலிருக்கும் மற்ற சிறு சிறு குடியரசுகளூம், சிற்றரசுகளும் கூட சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டன.”

 

தட்சசீலக் கல்விக்கூடத்தின் மாணவனாக இருந்த ஒரு இளைஞன் இப்படி யவனர்களுக்கு எதிரியாக பாரதத்தில் முளைப்பான், ஒரு பெரும்பகுதியை அவர்களிடமிருந்து வெற்றிகரமாகப் பறித்துக் கொள்வான் என்று அலெக்ஸாண்டர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற மாதம் தான் பிலிப் பாரதத்தின் பல பகுதிகளிலும் கலவரக்காரர்கள் உருவாகி வருகிறார்கள் என்றும் அவர்களை உருவாக்குவது தட்சசீலத்தின் கல்விக்கூடத்தின் ஆசிரியர் விஷ்ணுகுப்தர் மற்றும் அவரது மாணவர்கள் என்றும் குற்றம் சாட்டித் தகவல் அனுப்பியிருந்தான். விஷ்ணுகுப்தர் ஒரு காலத்தில் ஆம்பி குமாரனுக்கு ஆசிரியராக இருந்தவர் என்றும் அவன் மீது அதிருப்தி கொண்டு கல்வி முடிவதற்கு முன்னரே அவனை அனுப்பி வைத்தவர் என்றும், கேகய அமைச்சர் இந்திரதத் அவரது நண்பர் என்றும் எழுதியிருந்தான். இந்திரதத்தும்  கேகய அரசர் புருஷோத்தமனும் விஷ்ணுகுப்தரையும் இந்தக் கலவரக்காரர்களையும் ஊக்குவிக்கிறார்கள் என்ற சந்தேகம் தனக்கிருப்பதாகவும்  கூட எழுதியிருந்தான். இதெல்லாம் எழுதிய அவனுக்கு அவன் உயிரும்  பறிகொடுக்க வாய்ப்பிருக்கிறது என்ற சந்தேகம் சிறிதும் வந்திருக்கவில்லை. அலெக்ஸாண்டர் இந்தப் புதிய சூழல் உருவான போது சமாளிக்க பாரதத்தில் தானில்லாமல் போய் விட்டதற்கு வருத்தப்பட்டான்.

 

அலெக்ஸாண்டர் கேட்டான். “இவர்களுக்கு இந்த அளவு செயல்பட செல்வம் எங்கிருந்து வருகிறது?”

 

ஒற்றன் சொன்னான். “சந்திரகுப்தனுக்கு ஆதரவு பல இடங்களிலும் பெருகிக் கொண்டே வருவதால் விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை அவனுக்கு மகிழ்ச்சியுடன் தருகிறார்கள். வணிகர்கள் தங்கள் பொருள்களைத் தருகிறார்கள். செல்வந்தர்கள் தாராளமாகத் தங்கள் செல்வத்தைத் தருகிறார்கள். சாதாரணக் குடிமக்கள் கூடத் தங்களால் முடிந்ததைத் தருகிறார்கள்.  ‘நம் தாய்நாடான புண்ணிய பாரதத்தை அன்னியர்களிடமிருந்து காப்பாற்றுவோம்’ என்ற கோஷம் எல்லா மூலைகளிலும் எழுந்து பல இடங்களில் மகத்தான வெற்றியைப் புரட்சிக்காரர்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது சக்கரவர்த்தி. தங்கள் தாய்நாட்டை மீட்க நம்மால் ஆனது எதையாவது கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் வித்திட்டவரும், புரட்சியை வழிநடத்துபவரும் விஷ்ணுகுப்தர் தான். அப்படிச் செய்து அவர் தன் மாணவனான சந்திரகுப்தனை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாக்கியதில் மகத்தான வெற்றி கண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.”

 

ஒரு ஆசிரியரிடம் தோற்றுப் போக நேரிடும் என்று அலெக்ஸாண்டர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அந்த ஆசிரியர் சாதாரண ஆசிரியர் அல்ல என்பது இப்போது புரிகிறது. சாதாரண குடிமக்களையும் ஒரு சேனையாக உருவாக்க முடியும் என்று புதிய சிந்தனையை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்காட்டிய விஷ்ணுகுப்தரை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. யோசனையில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு அலெக்ஸாண்டர் கேட்டான். “காந்தாரம் கேகயம் இரண்டு இடங்களிலும் என்ன நிலைமை?”

 

“இரண்டு நாடுகளிலும் கோஷங்கள் இருந்த போதிலும் அது புரட்சியாக வெடிக்காமல் ஆம்பி குமாரனும், புருஷோத்தமனும் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் தங்கள் முழுப்படைகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அது எத்தனை நாட்கள் சாத்தியம் என்று தெரியவில்லை.”

 

பாரதத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு வந்திருந்த அலெக்ஸாண்டர் தற்போது மாசிடோனியாவிற்கும் தொலைவில் தான் இருக்கிறான். தாயகம் போகத் துடிக்கும் அவனுடைய வீரர்களை அங்கு கொண்டு போய்ச் சேர்க்காமல் பாரதத்திற்கு அவன் திரும்பியும் போக முடியாது. பிலிப் இறந்து விட்டதால் அவனுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை பாரதத்தில் செய்தாக வேண்டும்…. நன்றாக யோசித்து விட்டு அவன் புதிய ஆணை பிறப்பித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, November 8, 2023

முந்தைய சிந்தனைகள் 93

சிறிது சிந்திப்போமே! 

என் நூல்களிலிருந்து சில சிந்தனைகள்! 












Monday, November 6, 2023

யோகி 21

 

சைத்ராவின் முகத்தில் தெரிந்த வேதனையை ஷ்ரவன் ஆராய்ந்தான். தந்தைக்கும் தாத்தாவுக்கும் துக்கத்தைக் கொடுத்து விட்டோம் என்ற வேதனையா இல்லை வேறு ஏதாவதா? அவள் முகத்தில் வேதனையுடன் சோகமும், துக்கமும் கூட சேர்ந்து தெரிவது போல் இருந்தது உண்மையா இல்லை அவனுடைய கற்பனையா? இது தான் கடைசி, இனி இவர்களை நான் காணப்போவதில்லை என்ற வருத்தமா?

 

நடந்திருப்பது கொலை தான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. காதல் திருமணத்திற்காகட்டும், துறவி ஆவதற்காகட்டும் எதற்குமே மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி தந்த அவர்களிடம் அவள் நேரடியாகப் பேசவில்லை என்பதே அதற்கு ஒரு வலுவான ஆதாரமாக அவனுக்குத் தோன்றியது. பிரச்சினையோ ஆபத்தோ இல்லாமலிருந்தால் அவள்நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் தான் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள்என்று தந்தையிடம் நேரடியாகவே சொல்லியிருக்க முடியும். பிரச்சினை பூதாகரமாகி, கோர்ட் வரை வந்து சொல்வதை, அதற்கு முன்பே அவள் தந்தையிடம் சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சினைகள் இல்லை. அப்படி அவள் சொல்லவில்லை என்பதே அவளுக்கு ஆபத்து இருந்திருக்கிறது என்பதையும், அவள் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதையும் தான் தெளிவுபடுத்துகிறது

 

சரி ஆபத்து அல்லது பிரச்சினை இருந்திருக்கிறது என்றால் அது என்னவாக இருக்கலாம் என்று ஷ்ரவன் யோசித்தான். பெண் என்பதால் பாலியல் ரீதியான பிரச்சினையை அவள் சந்தித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது வரை யோகாலயத்தில் அதுபோன்றதொரு புகார் எழுந்ததில்லை. அங்கே அவர்களின் தெரியக்கூடாத ரகசியங்கள் ஏதாவது அவள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது அங்கே யாரையோ எந்த விதத்திலாவது அவள் பகைத்துக் கொண்டிருக்கலாம்அப்படி இருந்திருந்தால் ஏன் அவள் உடனடியாகக் கொல்லப்படவில்லை. வாய்ப்புகள் கிடைக்கவில்லையா, இல்லை வேறு காரணங்களா? இதற்கு எல்லாம் பதில் தெரிந்த ஒரு நபர் உண்டு. அது அந்த மொட்டைக் கடிதம் எழுதிய நபர். அந்த நபர் இன்னும் உயிரோடு அங்கேயே இருக்கிறாரா இல்லை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டும் விட்டாரா? இது வரை வேறொரு மரணம் எதுவும் அங்கே நடந்ததாய் செய்திகள் இல்லை. ஆனால் மிகப் பெரிய நிலப்பரப்பில் இருக்கும் யோகாலயத்தில் அப்படி யாராவது இறந்து அங்கேயே புதைக்கவோ, எரிக்கவோ பட்டாலும் அவர்களாய் வெளியே தெரிவித்தால் தான் உண்டு. இல்லா விட்டால் எப்போதாவது காணாமல் போன நபராக அந்த நபர் அறிவிக்கப்படலாம். தேடப்பட்டு வரும் நபராகவே இறுதி வரை இருந்து விடலாம்

 

ஷ்ரவன் பல சாத்தியக்கூறுகளையும் யோசித்துக் கொண்டே வந்து சிறிது நேரத்துக்கு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான். கடிகாரத்தைப் பார்த்து விட்டு, அமெரிக்காவில் வசிக்கும் சைத்ராவின் நீண்ட கால சிநேகிதிக்குப் போன் செய்தான். அவளுக்கு மெயில் அனுப்பி அவளிடம் பேச முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தான். அவளும் சேதுமாதவன் சொன்னபடியே சைத்ரா புத்திசாலி, சற்று பிடிவாதக்காரி, பாசமானவள், நேர்மையின்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவள் என்பதை எல்லாம் உறுதிப்படுத்தினாள்.

 

கூடவே சொன்னாள் “… அவ ரொம்ப ப்ராக்டிகலும் கூட சார். எதுலயும் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் சீக்கிரமாவே மீண்டு வந்து அடுத்தது என்னன்னு பார்த்து வாழக்கூடியவள். எனக்குத் தெரிஞ்சு அவளை ரொம்ப பாதிச்சது அவங்கம்மா மரணம் கூட இல்லை. அவளோட காதல் தோல்வி தான் அவளை ரொம்பவே பாதிச்சதுன்னு சொல்வேன். ஆனாலும் கூட அவ அதுலயும் நல்லதையே பார்த்தா. அவள் காதலன் வெளிப்படையா இன்னொருத்தியை விரும்ப ஆரம்பிச்சது பத்திச் சொன்னதையும் அவள் மதிச்சா. கல்யாணத்துக்குப் பிறகு துரோகம் பண்றதை விட அது தேவலைன்னு தோணுச்சுன்னு சொன்னா. அவங்க கல்யாணத்துக்குக்கூட போயிட்டு வந்திருக்கா. ஆனாலும் அதுல இருந்து மீளறது பிறகு அவளுக்குச் சுலபமாய் இருக்கலைடிப்ரஷன் வரைக்கும் அது அவளைக் கொண்டு போச்சு. ஆனாலும் அதுல இருந்தும் மீண்டு வந்தா பாருங்க..”

 

ஷ்ரவன் கேட்டான். “யோகாலயத்துல சன்னியாசியா போறத பத்தி உங்க கிட்ட ஏதாவது சொல்லியிருக்காங்களா?”

 

அங்கே ரெண்டு க்ளாஸ்கள் போனதுல அவங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் அவளுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு சார். நாம தெரிஞ்சுக்கத் தவறிட்ட முக்கியமான விஷயங்கள் நெறைய இருக்குன்னு என் கிட்ட சொன்னா. அதனால் தான் சன்னியாசியாகப் போறதா சொன்னா.”

 

அங்கே இருக்கற யாரைப் பத்தியாவது ஏதாவது சைத்ரா உங்க கிட்ட சொல்லி இருக்காங்களா

 

இல்லை சார்ரெண்டாவது க்ளாஸ் போயிட்டு வந்த பிறகு யோகி பிரம்மானந்தா ஒரு ஞானக்கடல்னு புகழ்ந்தாள்…”

 

ஷ்ரவன் சந்தேகத்தோடு கேட்டான். “அவங்க அங்கே பிரம்மானந்தாவைச் சந்திச்சுப் பேசியிருக்காங்களோ?”

 

நானும் அதை அவ கிட்டே கேட்டேன். ”சந்திக்கற பாக்கியம் கிடைக்கல. ஆனா அவரோட பேச்சுகளை வீடியோல கேட்டேன். அவர் தொடாத சப்ஜெக்டே இல்லைன்னு பிரமிப்போட சொன்னா

 

அங்கே சன்னியாசியா அவங்க போனதுக்கப்புறம் உங்க கூடப் போன்ல பேசியிருக்காங்களா?”

 

இல்லை சார். சன்னியாசியாய் அங்கே போகிறதுக்கு முந்தின நாள் தான் அவ கூட நான் கடைசியாய் பேசினது. அதுவே கடைசி பேச்சாய் இருந்துடும்னு நான் நினைச்சே பார்க்கலை… ” சொல்லும் போது அவள் உணர்ச்சிவசப்பட்டாள்.

 

தே நேரத்தில் யோகாலயத்தில் ஒரு அறையில் இருவர் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

அந்தக் கடிதம் எழுதினது யாருன்னு கண்டுபிடிச்சுட்டியா?”

 

இன்னும் இல்லை. மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவர்களை விடாம கண்காணிக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன்…”

 

ரொம்ப நாளாயிடுச்சு. இன்னும் அது யாருன்னு கண்டுபிடிக்க முடியலைங்கறது வெட்கக்கேடான விஷயம்.”

 

ரொம்ப எச்சரிக்கையா அந்த ஆள் நடந்துக்கறதால கண்டுபிடிக்க முடியல. இப்ப சந்தேகப்படற மூனு ஆள்கள்ல ஒரு ஆள் தான் அந்த ஆளான்னும் நிச்சயமாய் சொல்ல முடியல. ஆனாலும் இந்த மூனு பேர்ல ஒருத்தராய் தான் இருக்க வாய்ப்பிருக்கு

 

அந்த ஆளுக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும்னு வேற தெரியல. அது தான் யோசிக்க வெக்குது

 

தெரிஞ்சத வெளியே சொல்லியிருந்தா இன்னேரம் சொல்லி இருக்கணும். இது வரைக்கும் சொல்லலைங்கறதால இனி சொல்லவும் வாய்ப்பு குறைவு. சைத்ராவுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சதால அவ்வளவு சீக்கிரம் தைரியமும் வராது…”

 

ஆனாலும் அஜாக்கிரதையாய் இருக்க வேண்டாம்.”

 

சரி

 

சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.

 

ஆனா சைத்ரா விஷயத்தை நீ ரொம்ப கச்சிதமாய் கையாண்டிருக்கே…”

 

கோவிட் உதவுச்சி.”

 

போஸ்ட் மார்ட்டம் செய்ய முடிஞ்சிருக்கும்னா அவளோட அப்பன் அதுக்கும் கண்டிப்பா முயற்சி பண்ணியிருப்பான். கொஞ்சம் சாம்பலை மட்டும் வெச்சிட்டு அவனால ஒன்னும் பண்ண முடியல…. அந்த ஆஸ்பத்திரி டாக்டர் அவ அப்பன் கிட்ட அதிகமாய் எதுவும் சொல்லியிருக்க வாய்ப்பில்லையே

 

இல்லை… ”உன்னால ஒன்னும் பண்ண முடியாது. அவங்க சக்தி வாய்ந்தவங்க. அதனால் இதோட விட்டுடுன்னு மட்டும் தான் அந்த டாக்டர் அவ அப்பன் கிட்ட சொன்னதாய் தெரிஞ்சுது. அதுக்குப் பிறகு தான் அந்த ஆள் தற்கொலை பண்ணியிருக்கான்…”

 

நல்ல வேளையாய் அந்த டாக்டர் சொன்னதை எழுதி வெச்சுட்டு அந்த ஆள் தற்கொலை பண்ணிக்கலை. அப்படி செஞ்சிருந்தா அது நமக்கு இன்னொரு தலைவலியாய் இருந்திருக்கும்.”

 

எதுவுமே தலைவலி இல்லை. நமக்கு இன்னும் கொஞ்சம் அதிக பணம் செலவாயிருக்கும்.  அவ்வளவு தான்…”

 

ஆனா அவ அப்பன் அந்த டாக்டர் சொன்னதைக் கண்டிப்பாய் தன்னோட அப்பன் கிட்ட சொல்லியிருப்பான்….”

 

சொல்லியிருப்பான். ஆனா தெரிஞ்சும் அந்த எழுபத்தைஞ்சு வயசு கிழவன் என்ன பண்ண முடியும்? அந்த ஆள் ஏடாகூடமாய் வாய் எதுவும் திறக்கல. மகனுக்கு இல்லாத மூளை அப்பனுக்கு இருக்குன்னு நினைக்கிறேன்…”

 

ஆனா செத்துப் போன அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் வீட்டுல எதையும் சொல்லி இருக்க வாய்ப்பில்லையே

 

இல்லை. அப்படிச் சொல்லியிருந்தா அவன் பொண்டாட்டி தன் புருஷன் செத்ததுல சந்தேகப்பட்டு கலாட்டா செஞ்சிருப்பா. தினம் பேப்பர்ல இந்த மாதிரி டாக்டர்கள் சாகற செய்திகள் வந்துட்டே இருக்கறதால அந்த மாதிரி கேஸ்ல தன் புருஷன் கேஸும் ஒன்னுன்னு நினைச்சிட்ட மாதிரி தான் தெரியுது...”

 

எல்லாம் நமக்கு சாதகமா தான் இருக்கு. ஆனாலும் இங்கே இருக்கற கருப்பு ஆட்டைக் கண்டுபிடிச்சு ஒழிக்காம நாம பாதுகாப்பாய் இருக்க முடியாது.”

 

(தொடரும்) 

என்.கணேசன்


(தீபாவளி போனஸாக சனிக்கிழமை மாலையிலேயே அடுத்த அத்தியாயம் பதியப்படும். அதற்கு அடுத்த அத்தியாயம் எப்போதும் போல் அடுத்த திங்களன்று வரும்)




Thursday, November 2, 2023

சாணக்கியன் 81

 

வீரசேனன் பிலிப் சேனாதிபதியைப் பார்த்த பார்வையில் ஆபத்தை உணர்ந்தான். இந்தக் கணம் வரை யவனர்களுக்கு எதிராக செயல்படும் எண்ணம் அவனுக்கு முழுமையாய் ஏற்பட்டிருக்கவில்லை. ஆச்சாரியர் என்ன தான் காட்டுக்குள் அவனுக்குப் பாடம் நடத்தியிருந்தாலும் ஒருவரின் கீழ் ஊழியம் செய்து வாழும் போது அவருக்குத் துரோகம் செய்யாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் ஆச்சாரியர் என்று அனைவரும் அழைத்த அந்தணர் அவன் உயிருக்கு நிச்சயமாய் ஆபத்து உண்டாக வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்திருந்தார். “பிலிப் கண்டிப்பாக உன்னைச் சந்தேகப்படுவான், நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டான், உன்னைத் தண்டிப்பது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும், உன்னைத் தண்டிக்காமல் இருப்பது மற்றவர்களுக்கும் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்னுதாரணமாக  அனுமதிப்பது போல் ஆகி விடும் என்றும் நினைப்பான். ஆனால் உன்னை மற்றவர்கள் அறியக் கொல்லவும் மாட்டான். அது உன் தம்பியையும், உங்கள் படைவீரர்களையும் எதிர்க்கத் தூண்டிவிடும் என்று நினைப்பான். அதனால் உன்னை வஞ்சகமாகக் கொல்ல அவன் திட்டமிடலாம். நீ சற்று கவனக்குறைவாய் இருந்தாலும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...”

 

அவர் சொன்னது போன்ற நிலைமையே உருவாகிக் கொண்டிருப்பது போல் வீரசேனனுக்குத் தோன்றியது. வீரசேனன் வேகமாக யோசித்தான். சூரசேனன் விழித்துக் கொண்டு சற்று தொலைவில் தான் இருக்கிறான். இங்கே ஏதாவது விபரீதமான சத்தம் கேட்டால் அவன் கண்டிப்பாக ஓடி வருவான். ஆனால் அது முகாமில் மற்றவர்களையும் எழுப்பி விடும் அபாயம் இருக்கிறது. சேனாதிபதி வீரசேனனை நெருங்க முதல் காலடி எடுத்து வைத்த போது வெளியே காவல் வீரன் குரல் கேட்டது.

 

“இன்னேரத்தில் தங்களை உள்ளே அனுமதிக்க முடியது படைத்தலைவரே. சத்ரப் உறங்கிக் கொண்டிருக்கிறார்”

 

“சேனாதிபதியும் என் அண்ணனும் சற்று முன் உள்ளே சென்றதை நான் பார்த்து விட்டேன் காவலனே. நான் உள்ளே போக வேண்டும்” என்று சூரசேனன் சொல்வதும் கேட்டது.      

 

சேனாதிபதி முன் வைத்த காலைப் பின் வைத்து விட்டு பிலிப்பைப் பார்த்தான். பிலிப் நிலைமை சிக்கலாவதை உணர்ந்தான். வீரசேனன் அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஏதாவது முடிவெடுத்துச் செயல்பட்டால் தான் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று உணர்ந்தவனாகச் சத்தமாகச் சொன்னான். “உள்ளே வா தம்பி.”

 

பிலிப்பின் கோபம் உச்சத்தைத் தொட்டது. ’என்னவொரு நெஞ்சழுத்தம். என்னுடைய கூடாரத்திற்குள் வர இன்னொருவனை அனுமதிக்க இவன் யார்?’ அவன் பார்வையாலேயே சேனாதிபதிக்குக் கட்டளையிட சேனாதிபதி அதைப் புரிந்து கொண்டு வேகமாகத் தன் இடுப்பிலிருந்து குறுவாளை உருவினான். சிறிது தாமதித்தாலும் சேனாதிபதி அவனைக் கொன்று விடுவான் என்று உணர்ந்த வீரசேனன் “நல்ல நேரத்தில் வந்தாய் தம்பி” என்று கத்தியபடியே சேனாதிபதி மீது பாய்ந்தான்.

 

வீரசேனன் கத்தியபின் சேனாதிபதியின் கவனம் அவனையுமறியாமல் வாசலுக்குச் சென்றது. அவன் கவனம் விலகி அவன் குறுவாளைப் பிடித்திருந்த பிடியும் கணநேரத்திற்கு விலக, அந்த நேரத்தில் அவன் மீது பாய்ந்திருந்த வீரசேனன் அந்தக் குறுவாளைப் பிடுங்கி சேனாதிபதியின் அடிவயிற்றில் வேகமாகக் குத்தினான்.

 

தன் கண் முன்னாலேயே தன் சேனாதிபதியைக் குத்தியதைப் பார்த்த பிலிப் கடுங்கோபத்துடன் தன் படுக்கையிலிருந்த வாளை எடுத்து வீரசேனன் மீது வீச யத்தனித்தான். அதற்குள் அண்ணன் “நல்ல நேரத்தில் வந்தாய் தம்பி” என்று கத்தியதைக் கேட்டு உள்ளே எதோ விபரீதமாக நடக்கிறது என்று புரிந்து கொண்டு காவலனைத் தள்ளி விட்டு சூரசேனன் உள்ளே நுழைந்திருந்தான். அவன் பிலிப் தாக்கவிருக்கும் ஆயத்தத்தைப் பார்த்து வேகமாகத் தன் கையிலிருந்த குறுவாளை பிலிப்பின் நெஞ்சை நோக்கி வீசினான். சூரசேனனின் குறுவாள் பிலிப்பின் நெஞ்சைத் துளைக்க அவன் வீச ஓங்கியிருந்த வாள் கைநழுவிக் கீழே விழுந்தது.   

 

சூரசேனன் தள்ளிவிட்டதால் கீழே வெளியில் வீழ்ந்திருந்த காவல்வீரன் சுதாரித்துக் கொண்டு எழுந்து உள்ளே விரைந்து வந்தான். பிலிப்பும், சேனாதிபதியும் இரத்தம் வழியக் கீழே வீழ்ந்திருப்பதைக் கண்டு திகைத்து நின்றான். வீரசேனன் அதற்கு மேல் அவனை யோசிக்க விடாமல் கீழே விழுந்திருந்த பிலிப்பின் வாளை எடுத்து காவல்வீரன் வயிற்றில் குத்தினான். காவல்வீரனும் வீழ்ந்தான்.

 

உயிர் போய்க் கொண்டிருந்த வேளையில் பிலிப்பின் காதுகளில் வீரசேனனிடம் சூரசேனன் கேட்பது விழுந்தது. “இனி என்ன செய்வது அண்ணா?”

 

வீரசேனன் சொன்னான். “இந்த யவனர்கள் இந்த அளவு ஈனர்கள் என்று தெரியாமல் புரட்சி வீரர்களுடன் சேர நான் மறுத்தேன் தம்பி. ஆனால் அவர்கள் இவர்களைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். ”நீ திரும்பிப் போகலாம். ஆனால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் கொல்ல முற்பட்டால் உன்னைத் தற்காத்துக் கொண்டு எங்களை அழை. நாங்கள் உதவிக்கு வருகிறோம் என்றார்கள். அவர்கள் சற்றுத் தொலைவில் மறைவிடங்களில் காத்திருக்கிறார்கள்”

 

“அவர்களை எப்படி அழைப்பது?”

 

“ஒரு தீப்பந்தத்தை வானை நோக்கி வீசச் சொன்னார்கள். அதைப் பார்த்தால் அவர்கள் வந்து விடுவார்கள். எங்கே நம் படைவீரர்கள் நிலை என்ன?”

 

“அவர்கள் நாம் அழைத்தவுடன் வருவார்கள்....”

 

அவர்கள் பேசுவது ஒவ்வொரு வார்த்தையும் புரியா விட்டாலும் மொத்தமாக ஓரளவு புரிந்தது. இறக்கும் வேளையில் பிலிப் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டான். அலெக்ஸாண்டர் இப்போது இங்கே இருந்திருந்தால் தட்சசீல ஆசிரியரின் சூழ்ச்சிகளை எப்படிச் சமாளித்திருப்பான்? அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமலேயே பிலிப் இறந்து போனான்.

 

வனர்களின் முகாமுக்குக் கூப்பிடுதூரத்தில் சந்திரகுப்தனும், அவன் படையினரும் காத்திருந்தார்கள். வீரசேனன் போய் நிறைய நேரம் ஆகி விட்டது. ஆனால் அவனிடமிருந்து இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை.

 

சாணக்கியர் அவர்களிடம் சொல்லியிருந்தார். “யவனர்கள் வீரசேனனைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவனைத் திருப்பியனுப்பி அவன் செல்லும் வழியில் வஞ்சகமாக அவனைக் கொல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அப்படி நடக்குமானால் அவனைக் காப்பாற்றி நம்முடன் இணைத்துக் கொள்ளுங்கள். அல்லது முகாமுக்குள்ளேயே அவனைக் கொல்லவும் அவர்கள் முயற்சி செய்யலாம். அப்படி செய்தால் தற்காத்துக் கொண்டு தீப்பந்தம் ஒன்றை வானை நோக்கி நாம் வீசச் சொல்லியிருக்கிறோம். அது நடந்தால் உடனடியாகப் போய் முகாமில் யவனர்களைத் தாக்குங்கள். ஒருவேளை இந்த இரண்டும் நடக்காமல் அவர்கள் வீரசேனனைக் கொல்வதில் வெற்றி பெறும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி நடந்தால் வீரசேனன் நமக்கு எந்தச் செய்தியும் அனுப்ப முடியாது. நீங்கள் காத்திருந்து பார்த்து விட்டு விடியலுக்கு முன் அவர்கள் முகாமைத் தாக்கிக் கடுமையான சேதம் செய்து விட்டுத் திரும்பி வாருங்கள்”

 

சாரங்கராவ் சந்திரகுப்தனைக் கேட்டான். “அங்கே என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”

 

சந்திரகுப்தன் சொன்னான். “ஆச்சாரியர் சொன்ன மூன்றில் முதலாவது நடக்க முடிந்த காலம் கடந்து விட்டது. திருப்பி அனுப்புவதாக இருந்தால் முதலிலேயே அனுப்பியிருப்பார்கள். வீரசேனர் போய் இத்தனை காலம் கழிந்து விட்டிருப்பதால் இரண்டாவது அல்லது மூன்றாவது நடக்கலாம்.”  

 

சிறிது நேரம் மௌனமாக இருந்தபடி ஆகாய நட்சத்திரங்களைப் பார்த்திருந்து விட்டு சாரங்கராவ் சொன்னான். “எனக்கென்னவோ நம் ஆச்சாரியர் உன்னிடம் கூடச் சொல்லாத முக்கிய ரகசியங்கள் இருப்பது போல் தோன்றுகிறது சந்திரகுப்தா. அவர் தினமும் அதிகாலையில் எழுந்திருந்து தியானம், ஜபம் பெயரில் ஏதேதோ பயிற்சிகள் செய்கிறார். அவர் அதன் மூலம் சில இரகசிய சக்திகள் கூடப் பெற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை வைத்து தான் அவர் நாம் யூகிக்க முடியாததையும் யூகிக்கிறார். அதை வைத்து தான் அவர் சிலவற்றை அவர் விருப்பப்படி நடக்கவும் வைக்கிறார்...”  

 

சந்திரகுப்தன் ஒன்றும் சொல்லாமல் யோசித்தான். சாரங்கராவ் சொல்வது போல அவர் ஏதேதோ தியானப் பயிற்சிகள் செய்கிறார். அவர் அதை அவனுக்கும் விவரித்ததில்லை. அதற்குக் காரணம் அவனுக்குத் தெரியாமல் ரகசியம் காக்க வேண்டும் என்று அவர் நினைப்பதாக அவன் எண்ணவில்லை.. அவனுக்கு அது அவசியமில்லாதது அல்லது அவனால் அது செய்ய முடியாதது என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அவனுக்குத் தெரிந்து அவரின் அறிவின் ஆழத்தில் இணையாக அவருடன் பயணிக்க முடிந்த ஆட்கள் யாருமில்லை. எத்தனையோ விஷயங்களில் அவனும் அவருக்கு இணையாக யோசிக்க முடிந்திருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் அவனுக்கும் எட்டியதில்லை...

.

திடீரென்று வானில் ஒரு தீப்பந்தம் வீசப்பட்டு வீழ்வது தெரிந்தது. அவர்கள் வேகமாகத் தயாரானார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்