என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 13, 2016

உலகப் பழமொழிகள் – 13


121. அறிவாளிகளுக்கு புத்திமதி தேவையில்லை. மூடர்கள் அதை ஏற்க மாட்டார்கள்.


122. மின்மினிப்பூச்சியைக் கண்டு சூரியன் கோபிக்கக் கூடாது.


123. ஒரு ரூபாயின் மதிப்பு தெரிய வேண்டுமானால் யாரிடமாவது கடனாகக் கேட்டுப்பார்.


124. மனிதன் சவக்குழியில் புகழப்படுகிறான்.


125. கண்ணியமானவனை நீதியில்லாமல் புகழ்ந்தால் வருந்துவான்.


126. வசையால் செத்தவனும் இல்லை. வாழ்த்தால் வாழ்ந்தவனும் இல்லை.


127. எல்லாத் துயரங்களுக்கும் இரண்டு பரிகாரங்கள் உண்டு. ஒன்று காலம். மற்றது பொறுமை.


128. சரியாகச் செய்யாத வேலையை இரண்டு முறை செய்ய நேரிடும்.


129. பாய் முடைபவர்கள் பாயில் படுப்பதில்லை.


130. சிடுமூஞ்சி கடை வைக்கக் கூடாது.


தொகுப்பு: என்.கணேசன்


Thursday, June 9, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 102

 

ரு மனிதனை மிகச்சரியாகப் புரிந்து கொள்வது சாதாரண சமயங்களில் சாத்தியமல்ல. பெரும் பிரச்னைகளை அவன் எதிர் கொள்ளும் காலங்களில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே அவனது ஆழத்தையும் அடையாளம் காட்டும். அப்படித்தான் அக்‌ஷயை மாதவன் அறிந்து பிரமித்தார். வருணை அவன் கையில் சுமந்து கொண்டு வந்து உதவி கேட்ட நேரத்திலிருந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே காத்திருந்த இந்தக் கணம் வரை அவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் அவர் மனதில் அவன் இமயமென உயர்ந்து போனான். அந்தப் பாசம், அந்த துக்கம், அதை எல்லாம் மீறீய நிதானம், தைரியம், பொறுமை எல்லாம் அந்த சில மணி நேரங்களில் அவரால் உணர முடிந்தது.

அவன் வருணின் தந்தை அல்ல என்பதை எந்த விதத்திலும் ஒருவரால் யூகிக்க முடியாது. அழுது கொண்டிருந்த சஹானாவை அணைத்துக் கொண்டு அவன் சொன்னான். “அழாதே சஹானா. என்னை விட்டு என் மகனைப் பிரிக்க எமனால் கூட முடியாது.” சாதாரண ஆசுவாசப்படுத்தும் வார்த்தைகள் அல்ல அவை. ஆத்மார்த்தமாய் இதய ஆழத்திலிருந்து உறுதியாக வந்த வார்த்தைகள் அவை. அதன் பிறகு தான் சஹானாவின் துக்கம் குறைந்தது. அவள் அனுபவத்தில் அவன் அந்த அளவு உறுதியாகச் சொல்லி இருந்தவற்றில் ஒன்று கூட இது வரை பொய்த்ததில்லை. அக்‌ஷய்க்கும் வருணுக்கும் இடையே இருந்த பந்தம் தந்தை-மகன் என்பதையும் தாண்டி ஆழமானது. அந்த ஆழத்தில் அவள் கணவன் உணர்ந்து சொல்வது பொய்க்காது....

வந்தனா வந்து தந்தையுடன் அமர்ந்து கொண்டாள். சோகத்தில் இருந்த அவள் முகத்தை மாதவனுக்குப் பார்க்கவே சகிக்கவில்லை. என்ன தான் கோபம் என்றாலும் உண்மையான அன்பிருக்கையில் இது போன்ற சந்தர்ப்பங்களில் கரைந்து போய் அன்பு மாத்திரமே மிஞ்சுகிறது என்று அவர் நினைத்துக் கொண்டார்.

டாக்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்து வருணின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதைச் சொன்னார். வாந்தியிலேயே முக்கால் பாக விஷம் வெளியேறி விட்டதென்றும் மீதியையும் அப்புறப்படுத்தி விட்டதாகவும், தெரிவித்து விட்டுப் போனார். அக்‌ஷய் சஹானாவைப் பார்க்க அவள் கணவனின் கைகளை நன்றியுடன் இறுக்கப் பிடித்துக் கொண்டாள். மறுபடி கண்ணீர் வழிந்தது. அவளைப் போலவே ஆனந்தக் கண்ணீர் விட்ட இன்னொருத்தி வந்தனா.

மாதவன் எழுந்து நிம்மதியாக மகளுடன் கிளம்பினார். அக்‌ஷயும், சஹானாவும் அவரிடம் ஆத்மார்த்தமாய் நன்றி சொன்னார்கள்.

மாதவனும், வந்தனாவும் வீடு வந்து சேர்ந்த போது ஜானகி இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“என்ன தலைவலியா?” என்று மாதவன் கேட்டார்.

“வலி இல்லை. இடியே விழுந்த மாதிரி இருக்கிறது....” என்ற ஜானகி ஆத்திரத்துடன் நடந்ததை எல்லாம் அழாதகுறையாகச் சொன்னாள். அவர்கள் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவள் காரித்துப்பியதைச் சொன்ன போது மாதவன் முகம் சுளித்தார்.

அதைப் பார்த்த ஜானகி ஆத்திரத்துடன் சொன்னாள். “அந்த நேரத்தில் கையில் விளக்குமாறு கிடைத்திருந்தால் அதிலேயே நாலடி கொடுத்தும் இருப்பேன்....”

மனைவி அதைச் செய்யக்கூடியவள் தான் என்பதில் மாதவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் மனம் அக்‌ஷயை நினைத்துப் பார்த்தது. இப்போது அக்‌ஷயைப் பற்றி எண்ணிய போது அவர் மனதில் அவன் மேலும் உயர்ந்து போனான். அவனுடைய உண்மையான மகன் கடத்தப்பட்ட நேரத்தில் கூட வருண் மீது இப்படி பாசம் கொட்டி அங்கே அமர்ந்திருக்க அவனால் எப்படி முடிந்தது?

மாதவன் மனைவியிடம் கேட்டார். “மேலே அந்த ஆள் இன்னும் இருக்கிறானா, போய் விட்டானா?”

“அவன் நான் துப்பி ஐந்து நிமிடத்தில் போய் விட்டான். கதவைப் பூட்டக்கூட இல்லை. அவனை விடுங்கள். வருண் எப்படி இருக்கிறான்....?” ஜானகி கேட்டாள்.

“ஆபத்து இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார்...” என்று மாதவன் சொன்னார். ஜானகி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் காதுகளில் இப்போது மரகதம் சேகரிடம் சொன்ன வார்த்தைகள் ரீங்காரம் செய்தன. “என் பேரன் பிழைப்பான். என் இன்னொரு பேரன் திரும்பக் கிடைப்பான். இது வரைக்கும் எங்களைக் கைவிடாத கடவுள் இனியும் கைவிட மாட்டார். உன்னைப் பெற்றதைத் தவிர நான் எந்தப் பாவமும் செய்ததில்லை. அந்தப் பாவத்திற்கு பலனை நான் எப்பவோ அனுபவித்து முடித்தும் விட்டேன். என் மகனும் மருமகளும் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள். அதனால் சீக்கிரமே எல்லாம் சரியாகி நான், என் மகன், மருமகள், பேரன்கள் நன்றாகத் தான் இருப்போம்...”

நன்மையை மட்டுமே செய்து வரும் நல்ல உள்ளம் மட்டுமே இப்படி உறுதியாகச் சொல்ல முடியும். சொன்னபடி நடக்கவும் நடக்கும்.....

ஜானகி தர்மசங்கடத்துடன் கணவனிடம் சொன்னாள். “அந்த நாசமாய் போன நாதாரி நாய் சொன்னதை நம்பி வருண் வீட்டுக்காரர்களிடம் எப்படியெப்படியோ நடந்து விட்டேன்.... நான் இனி எப்படி அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன்?....

மாதவன் சொன்னார். “நான் அன்றைக்கே சொன்னேன். ஓடி ஒளிகிற ஆள் நல்லவனாய் இருக்க மாட்டான்னு...

ஜானகி முறைத்தாள். “ இந்த அளவு மோசமான மனசாட்சியும் இல்லாத புளுகனை நான் இது வரைக்கும் பார்த்ததில்லை. அதனால் நான் ஏமாந்துட்டேன்.... அதைச் சொல்லிச் சொல்லிக் காட்ட வேண்டுமா? நீங்கள் இது வரைக்கும் யார் கிட்டயும் ஏமாந்ததே இல்லையா...

எல்லா நேரங்களிலும் அம்மாவிடம் திட்டு வாங்கும் அப்பாவை வந்தனா புன்னகையுடன் பார்த்தாள்...


சான் கோயமுத்தூரை அடைந்த போது அவருடைய புதிய அலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. மைத்ரேயனும், கௌதமும் கடத்தப்பட்ட தகவலையும், நடந்த சூழலையும் உளவுத்துறை அதிகாரி சுருக்கமாகச் சொல்லி விட்டு எல்லா இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்தான்.

ஆசான் பேரதிர்ச்சியில் தளர்ந்து போனார். தலாய் லாமாவின் கனவு பலித்து விட்டது.....

 
ருண் நினைவு தெளிந்த பிறகு அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கி மன்னிப்பு கேட்க முற்பட்ட போது அக்‌ஷய் மகனைப் பேச விடவில்லை. “வருண் உன்னை இந்த அப்பாவுக்குப் புரியும்..... நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை…..” 

என்றைக்குமே அவனுக்குக் குற்ற உணர்ச்சியையோ, தர்மசங்கடத்தையோ ஏற்படுத்தாத அந்த மாமனிதனை அளவில்லாத பாசத்தோடு வருண் பார்த்தான். இவர் எங்கே? அந்த விஷ ஜந்து எங்கே? சந்தித்த முதல் கணத்திலிருந்து இந்தக் கணம் வரை நல்லதைத் தவிர வேறெதையும் நினைக்கும் சந்தர்ப்பமே ஏற்பட்டதில்லையே! திடீர் என்று தம்பியின் நினைவு வந்தது. மனம் பாரமானது.... தந்தையிடம் மெல்லக் கேட்டான். “தம்பி?

அக்‌ஷய் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாகச் சொன்னான். “தகவல் இதுவரை இல்லை. மைத்ரேயனைக் கடத்தியவர்கள், கூட அவனையும் கடத்தினால் நம் மீது கட்டுப்பாடு வைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதனால் பயப்பட ஒன்றும் இல்லை....

வருண் தம்பியை நினைத்துப் பார்த்தான். கௌதம் ஒரு நாளும் அம்மாவை விட்டு இருக்காதவன். பெரிதாய் பேசினாலும் பயந்த சுபாவம் தான். கண்கலங்க வருண் சொன்னான். “ஆனால் கௌதம் பயப்படுவானேப்பா...

மைத்ரேயன் கூட இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான்...

வருணுக்கு சந்தேகம் வந்து அக்‌ஷயைக் கேட்டான். “மைத்ரேயனுக்கு அடுத்தவர் மனதில் இருக்கிறதெல்லாம் தெரியும் என்று அன்றைக்குச் சொன்னீர்கள். அது உண்மையென்று எனக்கும் படுகிறது.  அப்படிப்பட்டவனை கடத்த ஒருவர் நெருங்கினால் அதற்கு முன்னேயே அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தானேப்பா. அவன் ஏன் கத்தவில்லை. ஏன் வேறு எதாவது செய்யவில்லை......?”

எனக்குத் தெரிந்து அவன் எந்த சக்தியையும் பயன்படுத்தி எதையும் செய்ததாய் நினைவில்லை....ஒரே ஒரு முறை சம்யே மடாலயத்தில் தலைமைபிக்குவின் வீக்கம் குறைந்ததையும் அவனுக்கு மைத்ரேயனின் திட்டமிட்ட செயலாய் நினைக்கத் தோன்றவில்லை.   

“பயன்படுத்தாத சக்தி இருந்து என்ன பிரயோஜனம்ப்பாவருண் ஆற்றாமையுடன் கேட்டான்.

அவனுக்கு அக்‌ஷய் பதில் சொல்லவில்லை. கௌதம புத்தருடைய சீடர்கள், வழி வந்தவர்கள் எல்லாம் மகாசக்திகளைப் படைத்தவர்களாயும், அவற்றைப் பயன்படுத்தியவர்களாயும் இருந்திருக்கிறார்கள். பத்மசாம்பவா, போதி தர்மர் என்று எத்தனையோ பேரைச் சொல்லலாம். ஆனால் புத்தர் எந்த மகாசக்தியையும் பயன்படுத்தி அற்புதங்கள் புரியவில்லை என்று சொல்கிறார்கள். புத்தரின் அவதாரமும் அப்படியே இருக்க முயல்கிறதோ?


சிவப்பு ஸ்கார்ப்பியோ கார் கொச்சின் நகரத்தை நோக்கி வேகமாய் போய்க் கொண்டிருந்தது. தேவ் வயதான தோற்றத்தில் இருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்ணும் பாட்டியாக மாறியிருந்தாள். திட்டத்தின்  அடுத்த பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கையில் மனம் கூர்மையாய், எச்சரிக்கையாய், இளைப்பாறாமல் இருக்க வெளி இருட்டையே பல யோசனைகளுடன் தேவ் பார்த்துக் கொண்டு வந்தான்.

வழியில் ஒரு இடத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் தெருவிளக்கை அந்தக் கார் கடக்கையில் தேவின் பார்வை அவன் காலடியில் விழுந்தது. மைத்ரேயன் கண்விழித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவின் இதயம் ஓரிரு துடிப்புகளை மறந்து ஸ்தம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்   


Monday, June 6, 2016

ஆன்மிக வானில் ஒரு எரிநட்சத்திரம்!

மகாசக்தி மனிதர்கள்-60

ராபர்ட் ஆடம்ஸ் என்ற அமெரிக்கருக்கு திருவண்ணாமலையை விட்டு வேறெங்கும் செல்லாத ரமண மகரிஷி அமெரிக்காவில் காட்சி அளித்தார் என்பதைப் பார்த்தோம். அது தென்னிந்தியாவில் வசிக்கும் ரமண மகரிஷி என்ற யோகி என்பதை அறிந்த பின் ராபர்ட் ஆடம்ஸ் ரமண மகரிஷியின் தீவிர பக்தரானார். ரமணரின் உபதேசங்களையும், அத்வைதத்தையும், ஞான யோகக் கோட்பாடுகளையும் கலிபோர்னியாவில் ஆன்மிக அன்பர்களுக்கு உபதேசித்து வந்தார்.

பால் ப்ரண்டன், ராபர்ட் ஆடம்ஸ் போலவே ரமண மகரிஷியால் சோமர்செட் மாகம் (Somerset Maugham) என்ற பிரபல ஆங்கில நாவலாசிரியர், கார்ல் ஜங் (Carl Jung) என்ற பிரபல மனோதத்துவ மேதை, ஆர்தர் ஓஸ்போர்ன் (Arthur Osborne) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் முதலானோரும் ஈர்க்கப்பட்டார்கள். அவர்கள் ரமண மகரிஷையை இந்தியா வந்து தரிசித்து விட்டுப் போனார்கள். அவர்களில் ஆர்தர் ஓஸ்போர்ன் நீண்ட காலம் ரமணருடன் ரமணாசிரமத்தில் தங்கியும் இருந்தார். அவர் ரமணரின் உபதேசங்கள் குறித்தும், ரமணருடனான தன் அனுபவங்கள் குறித்தும் நூல்களை எழுதி இருக்கிறார். ஆத்மஞானத்தின் பாதை என்ற அவரது நூலுக்கு அப்போதைய குடியரசுத் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அணிந்துரை எழுதி இருக்கிறார்.

திருவண்ணாமலையில் இருந்த ரமணமகரிஷி அமெரிக்காவில் ராபர்ட் ஆடம்ஸுக்குக் காட்சி அளித்தது போலவே, கணபதிமுனி என்ற தீவிர பக்தருக்குத் திருவொற்றியூரில் காட்சி அளித்திருக்கிறார். அந்த நிகழ்வை மெய்சிலிர்ப்போடு கணபதிமுனி பதிவு செய்திருக்கிறார். திருவொற்றியூரில் ஒரு பிள்ளையார் கோயிலில் அமர்ந்திருக்கையில் ரமணரைக் காண வேண்டும் என்ற பேராவல் தன்னுள் திடீர் என்று எழுந்ததாகவும் சிறிது நேரத்தில் ரமண மகரிஷி அந்தக் கோயிலில் நுழைவதைப் பார்த்து ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். ரமணமகரிஷியைக் கண்டவுடன் ஓடிச்சென்று அவர் காலைத் தொட்டு வணங்கியதாகவும், ரமணர் தலையைத் தொட்டு ஆசி வழங்கியதாகவும், ரமணர் தலையைத் தொட்டவுடன் சக்தி வாய்ந்த அலைகள் தன் உடலை ஊடுருவியதாக உணர்ந்ததாகவும், அந்த உணர்வின் தாக்கம் நீண்ட நேரம் அவருக்கு இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் சக்திகளை அனாவசியமாக வெளிப்படுத்துவதிலோ, பிரபலப்படுத்துவதிலோ ரமண மகரிஷிக்கு ஆர்வம் இல்லாத போதிலும் சில அதிசயங்கள் தானாகவே அவர் மூலம் நடந்தன. அப்படி நடந்த இன்னொரு நிகழ்வைப் பார்ப்போம்.

கிரிதலூர் சத்யநாராயண ராவ் என்பவர் புற்று நோயின் முற்றிய நிலையில் இருந்தார். தண்ணீரோ, மருந்தோ, உணவோ உட்கொள்ளக்கூட முடியாத கொடிய நிலை. அவரது குடும்பத்தினர் ரமணரது பரம பக்தர்கள். அவர்கள் சத்யநாராயண ராவை வந்து ஒரு முறை பார்த்து விட்டுச் செல்லும்படி ரமணரை வேண்டிக்கொண்டார்கள். அதனை ஏற்று ரமணர் சத்யநாராயண ராவைச் சென்று பார்த்தார்.

ரமணரைப் பார்த்தவுடன் சத்யநாராயண ராவ் அவரது கையைப் பிடித்துக் கொண்டு கதறினார். “நான் வேண்டுமானால் பாவியாக இருக்கலாம். ஆனால் என் தாயும் சகோதரனும் தங்களுடைய தீவிர பக்தர்கள் அல்லவா? அவர்களுக்காகவாவது என்னைக் காப்பாற்றக் கூடாதா?”

பதில் எதுவும் சொல்லாமல் அவரைப் படுக்கச் சொல்லி விட்டு அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ரமணர் அங்கிருந்து கிளம்பினார். அன்றிரவு சத்யநாராயண ராவ் ரத்த வாந்தி எடுத்தார். ரத்தத்தோடு சதைகளும் வெளியேறின. உள்ளே யாரோ அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த சதைப்பிண்டமும் ரத்தமும் போலத் தோன்றின. மறு நாள் முதல் சத்யநாராயண ராவ் சாப்பிடவும், மருந்து உட்கொள்ளவும் முடிந்தது.

இந்த அளவு அற்புதங்கள் ரமண மகரிஷியின் பக்தர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த போதிலும் அவர் ஒரு முறை கூட அந்த அற்புதங்களில் தனக்குப் பங்கு இருப்பதாக எந்த சூழ்நிலையிலும் சொல்லிக் கொள்ளவில்லை.

ஞானியால் நிகழ்த்தப்படும் அற்புதங்களைப் பற்றிய பேச்சு ஒரு முறை வந்த போது சொன்னார். “ஏதோ ஒரு சக்தி ஞானியின் மூலமாக வேலை செய்கிறது. அவனது தேகத்தை உபயோகித்து தன் வேலையை முடித்துக் கொள்கிறது.” எல்லாமே அப்படிப்பட்ட சக்தியின் வேலை தான் என்று பட்டும் படாமலும் சொன்னவர் அந்த சக்தியோ, ஞானியோ அவர் என்று மறைமுகமாகவும் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை.

ஒரு முறை அவருடைய ஆசிரமத்திற்கு வந்த ஒருவர் தனது குருவைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். மூன்று வருடங்களுக்கு முன் இறந்து புதைக்கப்பட்ட அவருடைய குரு மறுபடியும் மனித உருவில் வந்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதை உபதேசித்தார் என்று அவர் சொன்னதைக் கேட்டு விட்டு மெல்ல ரமண மகரிஷி சொன்னார். “ஒரு மனிதன் எத்தனை உடல்களில் புகுந்த போதும் அவன் தன் உண்மையான உறைவிடத்தைக் கண்டு கொண்டான் என்பது ஆகி விடுமா?”. யோசிக்க வேண்டிய உண்மை அல்லவா இது?

விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் நூலைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த பி.வி.நரசிம்ம சுவாமி என்பவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் தொடுதல் மூலமாகவே ஒரு முறை மெய்ஞானப் பேரனுபவத்தை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி ரமண மகரிஷிக்கும் அது போன்ற சக்தி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அவர் பதில் கூறும் முன் எச்சம்மாள் என்ற பக்தை ’மகாசக்திகள் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவையா’ என்று கேட்டார்.

இரண்டு கேள்விக்கும் பதில் அளிக்கும் விதமாக ரமண மகரிஷி சொன்னார். ”தன்னை அறிந்து தன் உண்மை நிலையிலேயே தங்கி இருப்பது தான் ஒருவனது உண்மையான சாதனையாக இருக்க முடியும். மற்ற அனைத்து சாதனைகளும் கனவில் கண்ட சக்திகள் போன்றவை. உறக்கத்தில் இருந்து விழிக்கும் போது அவை உண்மையாக இருக்குமா? உண்மையை உணர்ந்து அந்த நிலையில் தங்கி இருப்பவனை உண்மையல்லாதவற்றை நீங்கி இருப்பவனை அவை ஏமாற்ற முடியாது”

அவருக்கே புற்று நோய் வந்த போது அவரது பக்தர்கள் வற்புறுத்திய போதும் அதைப் போக்கிக் கொள்ள அவர் சிறிதும் முயற்சிக்கவில்லை. உடலைத் துறப்பது என்பதை சுமையை இறக்கி வைப்பது போலவும், சாப்பிட்ட பின் இலையைத் தூக்கி எறிவதைப் போலவும் உவமை சொன்ன ரமணர் ”நான் போய் விடப் போகிறேன் என்று கவலைப் படுகிறார்கள். எங்கே போவது? எங்கே வருவது? போக்கேது? வரவேது?” என்று கேட்டார்.

ஆனால் பக்தர்கள் முயற்சியால் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைத்தார். அவரது முதுகில் புற்று நோயால் ஏற்பட்டிருந்த கட்டியை மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அவர் அனுமதி அளித்தார். ஆனால் எந்தச் சிகிச்சையும் பலன் அளிக்காமல் போய் புற்று நோயின் பாதிப்புகள் திரும்பத் திரும்ப வந்த போது துக்கப்பட்டவர்கள் அவருடைய பக்தர்கள் மட்டுமே. அவர் சிறிதும் பாதிக்கப்படாமல் தன் இயல்பான அமைதியிலேயே லயித்திருந்தார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இரவு ரமண மகரிஷி உயிர்நீத்த அதே நேரத்தில் வானில் தெற்கே இருந்து கிளம்பி பேரொளி கொண்ட ஒரு எரிநட்சத்திரம் திருவண்ணாமலை உச்சியைத் தொட்டு பின்புறம் மறைந்தது. அதை திருவண்ணாமலையிலும் சுற்றி உள்ள பகுதிகளிலும் பலரும் கண்டிருக்கிறார்கள். ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்ஸன் (Henri Cartier-Bresson) என்ற பிரெஞ்சுப் புகைப்படக்காரர் அந்த சமயத்தில் ரமணாசிரமத்திற்கு வெளியே இருந்திருக்கிறார். அந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டு கடிகார நேரத்தைப் பார்த்து விட்டு ஆசிரமத்திற்கு உள்ளே போன போது சரியாக அந்த 8.47 மணி நேரத்தில் ரமணரின் உயிர் பிரிந்திருப்பதை அறிந்ததாக அவர் சொல்லி இருக்கிறார். இந்த அற்புத நிகழ்வு ரமணரின் மகாசக்திக்கு கடைசி உதாரணமாக இருக்கிறது.

இத்தொடரை ரமண மகரிஷியோடு முடித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அபூர்வ சக்திகள் பெற்றிருப்பது சிறப்பு தான் என்றாலும் ரமணர் சுட்டிக் காட்டியது போல அபூர்வ சக்திகள் என்றுமே மெய்ஞான சித்திக்கு அடையாளமாகி விடாது என்பதை நாம் மறந்து விடலாகாது. அதற்காகவே இத்தொடரில் ஞானிகள், யோகிகள் அல்லாத சிலர் பற்றியும் எழுதி இருந்தோம். ஆனால் அஷ்டமகாசக்திகள் கண்டிப்பாக கற்பனை அல்ல. யோக மார்க்கத்தில் அவை இயல்பாகவே ஒருவருக்கு கைகூடுகின்றன. அவற்றை தேவை இருக்கையில் உபயோகித்துக் கொண்டாலும் உண்மையான யோகிகளும், ஞானிகளும் பின்னர் அதைத்தாண்டிச் சென்று விடுகிறார்கள். அப்படிச் செல்ல முடிவதில் மட்டுமே இருக்கிறது அவர்களின் சிறப்பு!

இது வரை இத்தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு இந்த உண்மையை வலியுறுத்தி விட்டு அன்புடன் விடை பெறுகிறேன்.

- என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 9.10.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)



Thursday, June 2, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 101

ருண் வீடு திரும்பிய போது அக்‌ஷய் வாசலிலேயே மகனுக்காகக் காத்திருந்தான். பின்னாலேயே சஹானாவும் மரகதமும் நின்றிருந்தார்கள். ஆட்டோரிக்‌ஷாவில் இருந்து இறங்கிய மகனை அக்‌ஷய் ஆரத்தழுவிக் கொண்டான். வருணுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த அன்புக்கு நான் இவருக்குத் திருப்பித் தந்ததெல்லாம் என்ன என்ற கேள்வி மட்டுமே மனதில் மேலோங்கி கனமாய் நின்றது.

எதுவும் பேசாமல் அக்‌ஷய் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்த போது அவனுக்கு வயிறு குமட்டிக் கொண்டு வந்தது. அங்கேயே வாந்தி எடுத்தான்.

அக்‌ஷய் வருணிடம் சந்தேகத்துடன் கேட்டான். “என்ன வருண்..... அந்த ஆள் ஏதாவது சாப்பிடக்கொடுத்தானா?”

வருணுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. “அவன்.... தரவில்லை.... நான் தான் விஷம் சாப்பிட்டேன். எனக்கு உங்க மடியிலயே சா...க.....” என்று சொன்னபடியே மயங்கி கீழே விழ பதறிப் போன அக்‌ஷய் மகனை அப்படியே இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.

எதிர் வீட்டில் மாதவன், ஜானகி, வந்தனா மூவரும் எங்கோ போய் விட்டு அப்போது தான் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். சஹானா பின் தொடர அக்‌ஷய் ஓடித் தெருவைக் கடந்து மாதவனிடம் கெஞ்சும் குரலில் சொன்னான். “அவசரமாய் ஆஸ்பத்திரிக்குப் போகணும்.... வருண் உயிருக்கே ஆபத்து....”

மாதவன் அடுத்த வார்த்தை கேட்க நிற்கவில்லை. காரின் பின் கதவைத் திறந்து கை காண்பித்து விட்டு வேகமாக டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார். வருணோடு அக்‌ஷயும், சஹானாவும் பின் சீட்டில்  உட்கார கார் வேகமாகச் சென்றது.

வந்தனாவும், ஜானகியும் திகைப்புடன் சிறிது நேரம் அப்படியே நின்றார்கள். ஜானகி சீக்கிரமே திகைப்பில் இருந்து மீண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அவள் மகள் அவளைப் பின் தொடரவில்லை. பிரமை பிடித்தவளாய் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ஜானகி வெளியே வந்து மகள் தோளைத் தொட்டு உள்ளே வர சைகை செய்தாள். வந்தனா நடைப்பிணமாய் உள்ளே நுழைந்தாள்.



சேகர் மாடியில் இருந்து நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். கோயமுத்தூரை விட்டுப் போகும் முன் தன் எதிரி வீடு துக்கத்தில் மூழ்குவதைப் பார்த்து ரசித்து விட்டுப் போக அவன் மனம் ஆசைப்பட்டது. வருண் தற்கொலைக்கு முயல்வான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. சின்ன மகனை இழந்து சஹானாவும், அவளது கணவனும் தவிப்பதை மட்டும் தான் பார்த்து ரசிக்க அவன் அங்கே வந்திருந்தான். ஆனால் அவன் வார்த்தைகளைப் பின்பற்றி வருண் விஷம் சாப்பிட்டு வீடு போய் சேர்ந்தது கூடுதல் போனஸாக அவனுக்கு இருந்தது. அவனை அப்பாவாக ஏற்றுக் கொள்ளாத அந்த தறுதலை சாவதில் அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. எப்போதுமே எதற்குமே கலங்காமல், வணங்காமல் இருந்த சஹானா உடைந்து போவதை இப்போதாவது பார்த்து ரசிக்க நினைத்தவனுக்கு இப்போதும் அவள் முகத்தில் துக்கம் இருந்தாலும் அவன் எதிர்பார்த்த அளவு அது தாங்க முடியாததாய் இல்லை. ஏதோ இன்னும் நம்பிக்கை பாக்கி இருப்பது போல் தான் இருந்தாள். அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் போகப் போக உடைந்து உருகி அழிந்து போவாள்....  அழிந்து  போக வேண்டும்... என்று நினைத்தவனாய் அவனுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

கீழே வந்தனா அலைபேசியில் பேசுவது கேட்டது. “அப்பா எந்த ஆஸ்பத்திரிப்பா.... நான் வர்றேன்ப்பா”

தாயிடம் எதுவுமே சொல்லாமல் வந்தனா தன் ஸ்கூட்டியில் வேகமாகப் போனாள். வெளி கேட் வரை வந்த ஜானகி திகைத்து நிற்பது தெரிந்தது.

மரகதமும் ஜன்னல் வழியே வந்தனா செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மகள் தன் பார்வையில் இருந்து மறைந்த பிறகு ஜானகி உள்ளே போய் விட்டாள். அப்போது தான் எதிர் வீட்டு மாடி ஜன்னலில் நிழலாய் ஒரு உருவம் தெரிவதை மரகதம் கவனித்தாள். சேகர் இன்னமும் அங்கே தான் இருக்கிறானா? அவள் மனதுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் அலைமோதின. அவள் ஒரு முடிவெடுத்தவளாய் வீட்டைப் பூட்டிக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.

அவள் தன் வீடு தேடி வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்த ஜானகி தர்மசங்கடப்பட்டாள். அந்தம்மாள் வந்தால் அவரிடம் எப்படிப் பேசுவது, என்ன சொல்வது என்றெல்லாம் மனம் குழம்பியது. ஆனால் மரகதம் வெளி கேட்டைத் திறந்த பிறகு அவள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தாமல் பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளில் ஏறுவதைப் பார்த்த போது அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. வருணின் அப்பா மேலே குடியிருக்கிறார் என்பதை அக்‌ஷயின் பெரியம்மாவான இந்தக் கிழவி கண்டுபிடித்து விட்டாளோ? சரி மேலே கதவு பூட்டியிருக்கும், அதைப் பார்த்து விட்டுப் போய் விடுவாள் என்று காத்திருந்தாள். ஆனால் மரகதம் கதவைத் தட்ட சில வினாடிகள் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது....

சேகர் கதவைத் தட்டியது மரகதம் என்பதை அறியவில்லை. வந்தனா போவதைப் பார்த்து விட்டுத் திரும்பிய அவன் மரகதம் தெருவைக் கடந்து வருவதைப் பார்த்திருக்கவில்லை. கதவைத் தட்டுவது ஜானகி என்று நினைத்தான். அவன் நடந்த சத்தம் கேட்டு அவள் மேலே வந்திருக்க வேண்டும். அவன் மகன் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறான் என்பதைச் சொல்ல வருகிறாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். சோகமாய் கேட்டுக் கொண்டு சகிக்க முடியாமல் ஊரை விட்டுப் போவது போல நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தான். வாசலில் அவனைப் பெற்றவள் நின்றிருப்பதைப் பார்த்ததும் அதிர்ந்தான். மெல்ல பின் வாங்கினான். மரகதம் உள்ளே நுழைந்தாள். நுழைந்தவள் அவனையே கூர்மையாகப் பார்த்தாள்.

அவன் தாய் முன்பெல்லாம் அவன் எதிரில் வந்து நிற்கக் கூடத் தயங்குவாள். இன்று அவனை அளவெடுப்பது போல பார்க்கும் அளவு அவள் மாறியதை அவன் ரசிக்கவில்லை. ”என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று அவன் எரிச்சலோடு கேட்டான்.

“உயிரோடு இருக்கும் போதே செத்துப் போனதாய் நாடகம் ஆடிக் காணாமல் போனவன், பெற்ற தாய், கட்டிய மனைவி, ஒரே பிள்ளை – மூன்று பேரையும் அனாதரவாய் தவிக்க விட்டுப் போனவன், ஏன் திரும்பி வந்தாய்? ஏன் உன் மகனையே கடத்திக் கொண்டு போனாய்? அவன் தற்கொலை செய்யப் போகும் அளவு ஏன் நடந்து கொண்டாய். என்ன சாதனை இது சேகரா? உனக்கு எப்படி மனம் வந்தது?”

இரண்டு மூன்று வார்த்தைகள் கூட அவன் முன் சேர்ந்து பேசியிராதவள் நீதிபதி போல நின்று விசாரணை தொனியில் இவ்வளவு கேட்டது அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

“உன் மருமகள் கூட வாழ எனக்குப் பிடிக்கவில்லை.... அதனால் தான் செத்த மாதிரி நாடகமாடி போனேன்.,,,” சேகர் அலட்சியமாய் சொன்னான்.

“விவாகரத்து செய்திருக்கலாமே? உங்கள் காலம் எங்கள் காலம் போல அல்லவே?”

“விவாகரத்து செய்தால் அவளுக்குப் பணம் தர வேண்டும். எனக்கு அவளுக்கு ஒரு பைசா கொடுக்கவும் விருப்பமில்லை....”

“அவளைப் பிடிக்கவில்லை சரி. உன் மகன் என்ன செய்தான். நான் என்ன செய்தேன்.....?”

“அவள் வயிற்றில் பிறந்த அவனும் அவள் மாதிரி தான் இருந்தான்...”

“நான்....?”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. மரகதம் பதில் எதிர்பார்த்து நின்றாள். பதில் வராமல் போகவே சொன்னாள். “சஹானா என்னை கூட வைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், உன் மேல் இருக்கும் வெறுப்பை உன்னைப் பெற்ற என் மேல் காட்டி இருந்தால், நான் நடுத்தெருவில் பிச்சை அல்லவா எடுக்க வேண்டியிருந்திருக்கும்....”

“உனக்கு கை கால் எல்லாம் நன்றாகத் தானே இருந்தது. நாலு வீட்டில் வேலை செய்து பிழைத்திருக்கலாமே. இப்போதும் சரி, அப்போதும் சரி வீட்டு வேலை செய்கிறவர்களுக்கு நல்ல வருமானம் தானே”


வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த ஜானகிக்கு வினாடிக்கு வினாடி அதிர்ச்சியும், இரத்தக் கொதிப்பும் அதிகரித்துக் கொண்டே போனது. இவன் மகா அயோக்கியன், இந்தம்மாள் அக்‌ஷயின் பெரியம்மா அல்ல, இந்த அயோக்கியனைப் பெற்றவள், சஹானா ஓடிப்போகவில்லை, இவன் தான் ஓடிப்போனவன் என்கிற உண்மைகள் எல்லாம் அவளை அதிர வைத்துக் கொண்டிருந்தன. இவ்வளவு செய்து விட்டு இப்போதும் எப்படி கொடூரமாய் பேசுகிறான்....

மரகதம் மகனை இகழ்ச்சியுடன் பார்த்தபடி சொன்னாள். “சஹானா நல்லவள். என்னை அந்த நிலைமைக்கு விட்டு விடவில்லை. சரி நீ ஏன் திரும்பி வந்தாய்?”

“உன்னை ஒருநாள் வழியில் பார்த்தேன். பின்னாலேயே வந்து வீட்டைக் கண்டுபிடித்தேன். நான் போன பிறகு நீயும், உன் மருமகளும் எப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று பார்க்க வந்தேன். சரி நீ எதற்கு இப்போது வந்தாய்?”


”நீ போன பிறகு தான் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் எனக்கு மகனாகவும், அவளுக்கு கணவனாகவும், வருணுக்கு அப்பாவாகவும் வந்தான். எங்களுக்கு சந்தோஷம்னா என்ன என்றே அதற்குப் பிறகு தான் தெரிய வந்தது. இதெல்லாம் நீ போனதால் தான் கிடைத்தது. அதனால உனக்கு நன்றி சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன்....”

”உன் பேரன் உயிர் ஊசலாடுது. அவளோட இன்னொரு பையன் காணோம். இப்பவும் இவ்வளவு திமிராய் பேசுகிற உனக்கு மூளை வேலை செய்யலைன்னு நினைக்கிறேன்....”

“என் பேரன் பிழைப்பான். என் இன்னொரு பேரன் திரும்பக் கிடைப்பான். இது வரைக்கும் எங்களைக் கைவிடாத கடவுள் இனியும் கைவிட மாட்டார். உன்னைப் பெற்றதைத் தவிர நான் எந்தப் பாவமும் செய்ததில்லை. அந்தப் பாவத்திற்கு பலனை நான் எப்பவோ அனுபவித்து முடித்தும் விட்டேன். என் மகனும் மருமகளும் எந்தப் பாவமுமே செய்யாதவர்கள். அதனால் சீக்கிரமே எல்லாம் சரியாகி நான், என் மகன், மருமகள், பேரன்கள் நன்றாகத் தான் இருப்போம். நீ தான் ஜாக்கிரதையாய் இருக்கணும். உனக்கு அனுபவிக்க நிறைய இருக்கு....”

சொல்லி விட்டு மரகதம் வெளியேறினாள். வெளியே சற்று தள்ளி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஜானகியை அவள் கவனிக்கவில்லை. பேரனுக்காக கந்தர்சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்து விட்டிருந்தாள்.

மரகதம் போனவுடன் ஜானகி ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தாள். சேகர் அவளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பேசியதைக் கேட்டிருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவளை அவன் பார்த்தான். அவள் முகத்தைப் பார்த்தால் எல்லாவற்றையும்  கேட்டிருப்பது போலத்தான் தோன்றியது.

எப்போதும் மணிக்கணக்கில் பேசும் ஜானகி அந்த ஜந்து முன் அரை கணமும் நிற்கப் பிடிக்காததால் அந்த நேரத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் “த்தூ” என்று காரி அவன் முகத்தில் துப்பி விட்டுப் போனாள்.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, May 30, 2016

உலக ஞானிகளையும் ஈர்த்த மகான்!

மகாசக்தி மனிதர்கள்-59

ந்தியா ஈன்றெடுத்த மகான்கள் ஏராளம். அவர்களால் உலக மக்கள் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டு, சாமானியர்கள் மட்டுமல்லாமல் அரசர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்களையும், அவர்கள் மட்டுமல்லாமல், உலக ஞானிகளையும் தன்னிடத்தே ஈர்த்த தனிச்சிறப்பு ரமண மகரிஷிக்கு உண்டு.

1879 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் சுந்தரம் ஐயர், அழகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த வேங்கடரமணன் எல்லாவற்றையும் துறந்து துறவியானது தன் பதினாறாம் வயதில். மதுரையில் வசிக்கும் அவரது சித்தப்பா வீட்டில் அவர் தங்கி இருந்த போது திடீரென்று ஒருவித மரண அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில் பயமாக அவரை ஆட்கொண்ட அந்த அனுபவத்தில், அந்த அனுபவத்தை அலசும் வேறொன்று அவருக்குள் விழித்துக் கொண்டது. இறந்து முடிவது எது என்று அது கேள்வி கேட்டது. இறப்பது உடலே அல்லவா என்றும் உடலோடு சேர்ந்து இறக்காத ஆன்மா நிரந்தரமானதல்லவா என்ற ஞானம் எழுந்தது. நான் என்று உடலோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு பார்க்காமல், என்றும் அழிவில்லாத ஆன்மாவே நான் என்ற தெளிவு அறிவுபூர்வமாக மட்டும் எழாமல் உணர்வு பூர்வமாகவும் அவருக்கு விளங்கியது. அதற்கு மேல் அந்த உடலோடு சம்பந்தப்பட்ட உறவுகளில் சேர்ந்திருக்க அவருக்கு முடியவில்லை. எல்லாம் துறந்து ரயில் ஏறி திருவண்ணாமலை வந்து சேர்ந்தவர் அதன் பிறகு அங்கேயே வாழ்ந்தார். (பிற்காலத்தில் அவர் குடும்பத்தினரும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டார்கள்.)

பிராம்மண சுவாமி என்று மற்றவர்களால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட அவர் அங்கு பாதாள லிங்கம், விருப்பாக்‌ஷி குகை, கந்தாஸ்ரமம் முதலான இடங்களில் தங்கி ஆழமான தியான நிலையில் லயித்து வாழ்ந்தார். அவருடைய ஆன்மிக சக்தி சிறிது சிறிதாக அங்குள்ள மக்களை ஈர்க்க ஆரம்பித்தது. பின் வெளியூர்களில் இருந்தும் அவரை நாடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். கடைசியாக அவர் திருவண்ணாமலை அடிவாரத்தில் வந்து தங்க அங்கு ஒரு ஆசிரமம் உருவானது. காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சம்ஸ்கிருத பண்டிதர் ஒருவர் அவரை ரமண மகரிஷி என்றழைக்க ஆரம்பிக்க பின் அந்தப் பெயரே நிலைத்தது.

அதிகம் பேசாமல், அடுத்தவரைக் கவர யுக்திகள் எதையும் கையாளாமல், ஆன்ம ஞானத்தைத் தவிர வேறெதையும் முக்கியம் என்று நினைக்காமல் தன் தனிஉலகில் வாழ்ந்த அந்த மகானைச் சுற்றி ஒரு உலகம் உருவாக ஆரம்பித்தது. உண்மையான ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் காந்தமாக பல மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் அவரால் ஈர்க்கப்பட்டார்கள். எந்த மகாசக்தியையும் உடையவராகத் தன்னை எப்போதுமே காட்டிக் கொள்ளாத அவருடைய மகாசக்தியைப் பலர் பல விதங்களில் உணர ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட சில அனுபவங்களைப் பார்ப்போம்.

ரமண மகரிஷிக்கு எதையுமே யாருமே வாய்விட்டுச் சொல்ல வேண்டி இருந்ததில்லை. சொல்லாமலே அறியும் சக்தியை அவர் பெற்றிருந்தார். குலுமணி நாராயண சாஸ்திரி என்ற பண்டிதர் வால்மீகியின் ராமாயணத்தை சம்ஸ்கிருத மொழியில் உரைநடை வடிவில் படைத்திருந்தார். அதை ரமண மகரிஷிக்குப் படித்துக் காட்டும் ஆவல் அவருக்கு இருந்தது. அதற்காக திருவண்ணாமலை கிளம்பிய அவர் ரமணருக்கு சமர்ப்பிக்க சில வாழைப்பழங்களையும் வாங்கிக் கொண்டு போனார். போகிற வழியில் சின்ன விநாயகர் கோயில் ஒன்றைப் பார்த்த அவருக்கு ஒரு வாழைப்பழம் விநாயகருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படித் தோன்றிய போதும் கோயிலுக்குள் நுழையாத அவர் ரமண மகரிஷியைச் சந்திக்க விரைந்தார்.

ரமணரைக் கண்டு வணங்கி அந்த வாழைப்பழங்களைக் காணிக்கையாக வைத்தார். அதை ஆசிரமத்து ஊழியர் எடுத்து உள்ளே கொண்டு போக முயன்ற போது ரமணர் சொன்னார். “பொறு. விநாயகருக்குத் தர நினைத்திருந்த வாழைப்பழத்தை அவர் எடுத்துக் கொள்ளட்டும்”. நாராயண சாஸ்திரி வியந்தபடி ஒரு வாழைப்பழத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டார்.

அவர் வியப்பில் இருந்து மீள்வதற்கு முன்பே ரமணமகரிஷி அவரிடம் சொன்னார். “நீங்கள் ராமாயணத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கலாமே!” நாராயண சாஸ்திரியின் வியப்பு பிரமிப்பாக நீண்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒரு முறை பிஜி தீவில் குடிபெயர்ந்திருந்த சில ஹிந்திக்காரர்கள் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் “உங்கள் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் வந்திருக்கின்றன. ஆனால் ஹிந்தியில் வரவில்லையே” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

ரமண மகரிஷி சொன்னார். “கொஞ்சம் பொறுங்கள். ஹிந்தியில் என் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்”

உடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். அவர்களுக்குத் தெரிந்து ஹிந்தியில் ரமணரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆட்கள் யாரும் இல்லை. ஆனால் ரமணர் சொன்னபடியே சில நிமிடங்களில் வெங்கடேஸ்வர சர்மா என்பவர் ரமணரின் சரிதத்தை ஹிந்தியில் எழுதியிருந்து அதைச் சமர்ப்பிக்க நேரடியாக அங்கு வந்து சேர்ந்தார்.

மற்றவர்கள் எண்ணங்களை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவர்களது பிரச்னைகளுக்குத் தீர்வையும், அவர்களது கேள்விகளுக்குப் பதிலையும் தானாகவே ரமண மகரிஷி தருவது பலரது அனுபவமாக இருந்திருக்கிறது.

வருடா வருடம் ஆசிரம பக்தர்கள் அவரது பிறந்த நாளில் அன்ன தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். கோபாலப் பிள்ளை என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணரின் தீவிர பக்தர். அவர் தானும் பணம் போட்டு மற்ற பக்தர்களையும் தொடர்பு கொண்டு பணம் வசூல் செய்து அந்த அன்னதானத்திற்கு அரிசி வாங்கித் தருவது வழக்கம். அவர் தொலை தூரத்திற்கு மாற்றலாகிப் போய் விடவே அந்த ஒரு வருடம் அன்னதானம் எப்படிச் செய்வது என்ற கவலை ஆசிரம பக்தர்களுக்கு ஏற்பட்டது.

ஒருவர் ரமணரிடம் சென்று “சென்ற வருடம் பத்து மூட்டை அரிசியில் அன்ன தானம் செய்தோம். இந்த முறை ஒரு மூட்டை அரிசி கூட தேறாது போல இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். அதைக் கேட்டுக் கொண்ட மகரிஷி எதுவும் சொல்லவில்லை. அன்றைய தினம் நள்ளிரவில் ஆசிரமக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்து பார்த்த போது இரண்டு வண்டிகளில் அரிசி மூட்டைகள் வந்திருந்தன. ஆசிரமத்து ஆட்கள் அது வரை பார்த்திராத ஒரு புதிய நபர் தன் பெயரைக் கூடத் தெரிவிக்காமல் இந்த அரிசியைத் தானமாகத் தருவதாக முன்பே மனதில் வேண்டிக் கொண்டிருந்ததாகவும் அதை இப்போது நிறைவேற்றுவதாகவும் கூறி அரிசியைத் தந்து விட்டுச் சென்றார். இது போல பல முறை ஆசிரமத்தின் அத்தியாவசியத் தேவைகள் குறைபடும் போதெல்லாம் ஆச்சரியகரமாக நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது.

பால் ப்ரண்டன் (Paul Brunton) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவ ஞானி இந்தியாவில் உண்மையான யோகி ஒருவரைக் காணும் பொருட்டு நம் நாட்டுக்கு வந்தவர். பல விதமான ஆட்களைப் பார்த்து விட்டுக் கடைசியாக ரமணரைக் கண்டார். அவரைக் காணும் முன் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனதில் பட்டியல் இட்டுக் கொண்டு வந்தவர் ரமணர் முன் அமர்ந்தார். ரமணர் அவரைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் ரமணரின் சக்தி வாய்ந்த ஆன்மீக அலைகள் தன்னை ஆக்கிரமிப்பதை பால் ப்ரண்டன் உணர்ந்தார். அவரது கேள்விகள் ஒவ்வொன்றாக மனதிலிருந்து விடுபட்டன. பின் பேரமைதி அவரைச் சூழ ஆரம்பித்தது. அவர் அந்தக் கணமே ரமண மகரிஷியே தான் தேடி வந்த உண்மையான யோகி என உணர்ந்தார்.

ரமண மகரிஷி திருவண்ணாமலையை விட்டு வேறெங்கும் செல்லா விட்டாலும் கூட வெளியூர் அல்லது வெளிநாட்டிலும் கூட அவரைக் கண்டு பேசிய அனுபவங்கள் நிறைய உண்டு.

ராபர்ட் ஆடம்ஸ் (Robert Adams) என்ற அமெரிக்கர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர். இளமையிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் இருந்த அவர் ஏழு வயதாக இருக்கும் போது அடிக்கடி வெள்ளைத் தலைமுடியும், வெள்ளைத் தாடியும் கொண்ட ஒரு நபர் அவருக்குப் புரியாத ஒரு மொழியில் அவரிடம் உரையாடுவது போல் காட்சிகள் கண்டார். அதை அவர் பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் தங்கள் மகனின் கற்பனைக் கதையாக நினைத்துக் கொண்டார்கள். சில வருடங்கள் கழித்து ராபர்ட் ஆடம்ஸ் ஆன்மிக புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கையில் புத்தகத்தில் அச்சிட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்த போது அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. அது அவர் அடிக்கடி முன்பு காட்சியில் பார்த்த உருவம் தான். அப்படி ஒரு மனிதர் உண்மையாகவே இருக்கிறார் என்பதும் அவர் இந்தியாவைச் சேர்ந்த ரமண மகரிஷி என்பதும் அப்போது தான் அவருக்குத் தெரிந்தது.

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி- தினத்தந்தி-02-10-2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

சென்னை தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 தேதி வரை நடக்கும் புத்தகத்திருவிழாவில் மகாசக்தி மனிதர்கள் தினத்தந்தி பதிப்பக கடை எண் 554லிலும், என் மற்ற நூல்கள் ப்ளாக்ஹோல் மீடியா கடை எண் 316லும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.  

Thursday, May 26, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 100



மைத்ரேயன் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்தில் காவல் இருந்தவர்களில் ஒருவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

“அங்கே நிலவரம் எப்படி இருக்கிறது?

“இங்கே ஒரு ப்ரச்னையும் இல்லை. ஏன் சார்?

“சந்தேகப்படுகிற மாதிரி யாராவது சமீப காலத்தில்...?

“இல்லை சார்

“நகரத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறதாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்திருக்கிறது. இரண்டு இடங்களில் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்திருக்கிறோம். இன்னும் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. தேடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது.....

சிறிது நேரத்தில் மூவரில் இருவர் அங்கிருந்து போய் விட்டார்கள். ஒருவன் மட்டும் மைத்ரேயனின் காவலுக்கு இருந்தான். ஆறரை மணி ஆன போது இருட்ட ஆரம்பித்தது. சிறுவர்கள் விளையாடி முடித்து விட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்தார்கள். மைத்ரேயனும், கௌதமும் தோள் மேல் தோளில் கைபோட்டு முன்னே செல்ல உளவுத்துறை ஆள் பின்னால் செல்ல ஆரம்பித்தான்.
சத்தமில்லாமல் நீல நிற மாருதி ஆல்டோ கார் ஒன்று வர சிறுவர்கள் சாலையின் ஓரத்திற்கு நகர்ந்தார்கள். உளவுத்துறை ஆள் திரும்பிப் பார்த்தான். கார் நின்றது. டிரைவர் சீட்டருகே அமர்ந்திருந்த கண்ணியமாய் தெரிந்த ஒரு இளம் பெண் தலையை நீட்டிக் கேட்டாள். “இந்த விலாசம் எங்கே இருக்கிறது, சொல்ல முடியுமா?

மைத்ரேயனையும், கௌதமையும் சற்று நிற்க சைகை செய்து விட்டு உளவுத்துறை ஆள் காரை நெருங்கினான். சில சிறுவர்கள் போய்க் கொண்டே இருந்தார்கள். மைத்ரேயனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நண்பர்களுக்காக நின்றார்கள். சீட்டை நீட்டிய பெண் சிறிதும் எதிர்பாராத விதமாய் மின்னல் வேகத்தில் இன்னொரு கையில் இருந்த கைக்குட்டையால் அவன் மூக்கை மூட அவன் திகைப்புடனேயே மயக்கம் ஆகி கீழே சரிந்தான். அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் தேவும், இன்னொருவனும் பின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினார்கள். இருவர் கைகளிலும் மயக்கமருந்து தடவிய கைக்குட்டைகள் இருந்தன. தேவ் மைத்ரேயனையும், மற்றவன் கௌதமையும் அப்படியே மயக்கம் அடையச் செய்து காரில் தூக்கிப் போட்டுக் கொண்டார்கள். எல்லாமே ஒரு நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது.

மைத்ரேயனுக்கு முன்னால் காத்து நின்றிருந்த சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நின்றனர். என்ன நடக்கிறது என்பது அவர்கள் மூளைக்குள் எட்டுவதற்கு முன்னால் கார் மிக வேகமாய் அங்கிருந்து பறந்தது....

மூன்று நிமிடங்கள் பயணித்த பின் நீலநிற ஆல்டோ கார் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு தெருவில் சற்று இருட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த சிவப்பு நிற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை அடைந்தது. நீல நிற ஆல்டோ காரில் இருந்து சிவப்பு நிற ஸ்கார்ப்பியோ காருக்கு அனைவரும் மாறினர். அங்கிருந்து ஸ்கார்பியோ கார் வேகமாகப் பறந்தது.

கால் மணி நேரம் கழித்து தான் அக்‌ஷய்க்குத் தகவல் கிடைத்தது. வாழ்க்கையில் முதல்முறையாக அக்‌ஷய் பேரதிர்ச்சியை உணர்ந்தான். ஆனால் அந்தப் பேரதிர்ச்சியும் அவன் செயல்படுவதை நிறுத்தி விடவில்லை. அமைதியாக அலைபேசியை எடுத்தான். சிலரிடம் அவன் அலைபேசியில் அமைதியாகப் பேசியதைப் பார்த்து விட்டு அவனுடன் பயணித்த உளவுத்துறை ஆள் அசந்து போனான். “இவனால் எப்படி இவ்வளவு அமைதியாகப் பேச முடிகிறது.....

அக்‌ஷய் சொல்லி போலீசாரிடமிருந்து தகவல் எல்லா இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்த போது சிவப்பு ஸ்கார்பியோ கார் கோயமுத்தூர் தாண்டி வாளையார் சோதனைச்சாவடியை அடைந்திருந்தது. சோதனைச்சாவடி ஆள் தனியார் வாகனங்களை சந்தேகம் வந்தால் ஒழிய சோதித்துப் பார்ப்பதில்லை. அவன் அந்தக் கார் கடந்து செல்லும் முன் மெல்ல எட்டிப் பார்த்தான். வயதான தம்பதியர் இருவர் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவனுக்கு அவர்கள் காலடியில் மயங்கிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்கள் தெரிய வழியே இல்லை.

பிரதமர் இன்னும் கோவையை விட்டுப் போகவில்லை. அவர் இப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பாதுகாப்புக்காக போலீஸார் குவிந்திருந்தார்கள். அடுத்ததாக வெடிகுண்டு தேடும் முயற்சியில் கூடுதல் படை நகரின் பலபகுதிகளில் தேடிக் கொண்டிருந்தது. அது போக எஞ்சிய மிகக்குறைவான ஆட்களையே மைத்ரேயனைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்த நிர்வாகத்தால் முடிந்தது.   
எல்லா இடங்களுக்கும் கடத்தப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களுடன் தகவல் போய்ச் சேர்ந்தது. கோவையில் அனைத்து இடங்களிலும் ஓரளவு கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் சிவப்பு ஸ்கார்பியோ கார் கோவையைத் தாண்டி கேரளாவில் நீண்ட தூரம் போய் இருந்தது. வாளையார் சோதனைச்சாவடியில் உள்ள ஆள் தனக்குத் தகவல் கிடைத்த பின் தீவிர சோதனையை ஆரம்பித்தான். அவனிடம் ஒரு அதிகாரி இதற்கு முன் அப்படி இரு சிறுவர்களோடு எந்த வாகனமும் கடக்கவில்லை அல்லவா என்று கேட்ட போது சிறிதும் சந்தேகமில்லாமல் கடக்கவில்லைஎன்று உறுதியளித்தான்.


ருணுக்கு நினைவு திரும்பிய போது முன்பின் தெரியாத இடத்தில் ஒரு படுக்கையில் படுத்துக் கிடந்தான். தலை மிக பாரமாக இருந்தது. அவன் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். அவன் அருகில் சேகர் அமர்ந்திருந்ததைப் பார்த்த போது அதிர்ச்சியாகவும், ஆத்திரமாகவும் இருந்தது.  

சேகர் வஞ்சகமாகப் புன்னகை செய்தான்.  “உன் அப்பா...டாஎன்றான்.

“என் அப்பா என் வீட்டில் இருக்கிறார்என்றான் வருண். “நீ ஏன் என்னைத் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்கிறாய். நீ என்ன செய்தாலும் நான் உன்னை அப்பாவாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். உன்னுடன் வரவும் மாட்டேன்....

நான் உன்னை என்னோடு வர இப்போது கூப்பிடவில்லையே!””” என்று அலட்சியமாய் சேகர் சொன்னான்.

“பின் ஏன் என்னைக் கடத்தினாய்?வருண் சலிப்போடு கேட்டான்.

“உன் அந்த அப்பன் என்னவோ பெரிய ஆள் என்று பெருமையாய் அன்றைக்குச் சொன்னாயே. அவன் அப்படி பெரிய ஆள் தானா என்று சோதித்துப் பார்த்தேன்... கையாலாகாத ஆள் போல இருக்கிறானேசேகர் வெறுப்பைக் கக்கினான்.

முட்டாளே. அவர் பற்றி உனக்குத் தெரியாது.....

“அதான் தெரிந்து போய் விட்டதே. உன்னைக் கடத்தினேன். அவனால் தடுக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. உன்னை அவன் தேடிக் கொண்டிருந்த போது உன் தம்பியும் அந்த திபெத் பையனும் கூடக் கடத்தப்பட்டு விட்டார்கள்.  அதையும் உன் அந்த அப்பனால் தடுக்கவோ, கண்டுபிடிக்க முடியவில்லை....இகழ்ச்சியாக சேகர் சொன்னான்.

வருண் நிலைகுலைந்து போனான். அவன் தம்பியும், மைத்ரேயனும் கூட கடத்தப்பட்டு விட்டார்களா? அவன் அப்பா அவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அந்தக் காரியம் நடந்து விட்டதா? அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு மைத்ரேயனைக் கூட்டிக் கொண்டு வந்தது வீணாகி விட்டதா?    அப்பா பாதுகாப்பார் என்று நம்பிய மனிதர்கள் முன் அப்பா தலைகுனிந்து நிற்க வேண்டுமா? இப்படி எல்லாம் நடக்க இந்தப் பாவிக்குப் பிறந்த நான் காரணமாகி விட்டேனா?

வருண் சுய பச்சாதாபத்தில் இருந்த போது சேகரின் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினான். பரிச்சயம் இல்லாத ஒரு குரல் சொன்னது. “அவனை அதிக நேரம் இனி வைத்துக் கொள்ள வேண்டாம். முடிந்த அளவு சீக்கிரமாய் அனுப்பி நீயும் ஊரை விட்டுப் போய்விடு

அந்தச் செய்தியுடன் பேச்சு முடிந்து போனது. பேசியது யார் என்ன என்று தெரியாவிட்டாலும் அது தேவ் தரப்பு ஆள் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது.

வருண் சேகரிடம் கேட்டான். “எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?

“என்ன?

“என்னைக் கொன்றுவிடு வெறுப்புடன் வருண் சொன்னான்.

அந்த வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன். சாக உதவி வேண்டுமானால் செய்கிறேன்.என்று சொன்ன சேகர் தன் சட்டைப்பையில் இருந்து சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து மகன் சட்டைப் பையில் திணித்தான். “இந்தப் பணத்தை வைத்து எலி விஷத்திலிருந்து சயனைடு வரை எது வேண்டுமானாலும்  வாங்கி சாப்பிட்டு நீ சாகலாம்”  என்று சொல்லி விட்டு சேகர் மயக்கமருந்து கைக்குட்டையால் மறுபடி வருணை மயக்கமடையச் செய்தான்.

வருண் மறுபடி விழித்த போது ஒரு தெருவோரமாக விழுந்து கிடந்தான். நன்றாக இருட்டி இருந்தது.  வருண் எழுந்து நடந்தான். அவன் வீட்டுக்கு ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் தான் அது. அவன் சட்டைப் பையில் சேகர் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது. வருண் மனம் ரணமாகி இருந்தது. அவனால் அவன் அப்பாவுக்கு எத்தனை பிரச்னை? இப்போது அப்பாவின் சொந்த மகனும் கூட மைத்ரேயனுடன் சேர்ந்து கடத்தப்பட்டு விட்டான். அவன் மீது அன்பு மழை பொழிந்த அப்பாவுக்கு எவ்வளவு பெரிய சோகத்தையும், அவமானத்தையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.... இந்த நீச்ச மனிதனுக்கு மகனாய் பிறந்ததால் தான் நேசிப்பவருக்கும் எந்த நன்மையும் செய்ய முடிவதில்லையோ…..

சற்று தூரத்தில் ஒரு மருந்துக் கடை தெரிந்தது. எலிவிஷம் முதல் சயனைடு வரை வாங்கி சாப்பிட்டு சாகலாம் என்று சேகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. மருந்துக்கடைக்குப் போய் அவன் எலி விஷம் வாங்கினான். சிறிது தூரம் போய் ஒரு கடையில் குளிர்பானம் வாங்கினான். குளிர்பானத்தோடு சேர்ந்து  எலிவிஷத்தை விழுங்கினான்.

கடைசியாய் ஒரே ஒரு ஆசை அவன் மனதில் இருந்தது. அவன் அப்பா மடியில் சாக வேண்டும்..... இனியொரு ஜென்மம் இருக்குமானால் அவருக்கே மகனாய் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சாக வேண்டும். உயிர்பிரியும் நேரத்தில் செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாகப் பலிக்குமாம்...

அவன் அலைபேசியை எடுத்து அக்‌ஷயை அழைத்தான். அக்‌ஷயின் குரல் எச்சரிக்கையுடனும், கவலையுடனும் ஒலித்தது. “ஹலோ... வருண்?

“அப்பா... என்னை விட்டு விட்டார்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

“இப்போது தான் வீட்டுக்கு வந்தேன் வருண்....

“அங்கேயே இருங்கள்ப்பா..... நான் வந்து விடுகிறேன்....


இணைப்பைத் துண்டித்த வருண், எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை நிறுத்தி அதில் ஏறினான்.

(தொடரும்)
என்.கணேசன்      

Thursday, May 19, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 99

சான் பைலகுப்பே மடாலயத்திற்கு அன்று காலை வந்திருந்த மூன்று வாகனங்களையும் ஆர்வத்துடன் பார்த்தார். இரண்டு பஸ்கள். ஒரு டெம்போ ட்ராவலர். பஸ்கள் தமிழ்நாட்டையும், கேரளாவையும் சேர்ந்தவை. டெம்போ ட்ராவலர் கர்நாடகா. பயணிகள் கிட்டத்தட்ட நூறு பேராவது இருப்பார்கள். இந்த சந்தடியில் இன்று தப்பித்து விட வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். ஆனால் கண்காணித்துக் கொண்டிருந்த ஒற்றர்களும் அதை ஊகித்தது போல் இருந்தது. அவர்களில் ஒருவன் அங்கே கலைப் பொருள்கள் விற்கும் கடையில் வேலைக்கே சேர்ந்து விட்டிருந்தான். மற்ற இருவரில் ஒருவன் இளநீர் விற்பவனாகவும், இன்னொருவன் பிச்சைக்காரனாகவும் வேடத்தில் இருந்தார்கள். மூன்று பேரும் கண்கொத்திப் பாம்பாக அந்த வண்டிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மற்ற சந்தர்ப்பமாக இருந்தால் அவர் துணிந்து தப்பிக்க முயற்சி எடுத்திருப்பார். ஆனால் மைத்ரேயரை அவர் மூலமாக யாரும் அடைந்து விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு அவரைத் தடுத்தது. 

பகல் ஒரு மணிக்கு முன் சுற்றுலாப்பயணிகள் கிளம்பினார்கள். கும்பலாக அவர்கள் வெளியே போய் பஸ்களில் ஏறியதில் ஒற்றர்கள் சந்தேகம் கொண்டது போல் இருந்தது. ஏனென்றால் மூன்று வாகனங்களும் போன பிறகு அந்த மூன்று ஒற்றர்களையும் காணோம். அந்த மூன்றில் ஒன்றில் ஆசான் ஏறிப்போயிருக்கலாம் என்று அவர்கள் எண்ணி விட்டார்களோ என்னவோ? மெல்ல ஆசான் வெளியே வந்து பார்த்தார். சிறிது தூரம் காலார நடந்து பார்த்தார். யாரும் பின்னால் இல்லை. அவருக்கு இது போதிசத்துவரின் அருளாகவே தோன்றியது. பைலகுப்பே மடாலய பிக்குகளிடம் விடைபெற்றுக் கொண்டு அவர் மைத்ரேயரைச் சந்திக்கக் கிளம்பி விட்டார்.

ஆனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏமாந்து போய் விட்டதாக ஆசான் நம்பும்படி செய்து விட்டு கிளம்பிப் போய்விடும்படி முன்பே லீ க்யாங் ஒற்றர்களிடம் உத்தரவிட்டிருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மைத்ரேயனையே கண்டுபிடித்து விட்ட பிறகு ஆசானைக் கண்காணிப்பது அர்த்தமற்றது என்றாலும் அந்தக் கண்காணிப்பைக் கைவிட்டு விட்டால் ஆசான், அக்‌ஷய் இருவருக்கும் சந்தேகம் பிறக்கலாம் என்பதால் பழையபடியே கண்காணிப்பைத் தொடர்ந்து தக்க சமயத்தில் போய்விட லீ க்யாங் சொன்னபடியே ஒற்றர்கள் போய் விட்டிருந்தார்கள். இது தெரியாத ஆசான் மைத்ரேயனை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆபத்தையும் அறியாமல் சந்தோஷமாக கோயமுத்தூர் நோக்கிப் பயணமானார்.


ன்று மதியம் இரண்டரை மணிக்கு ஒரு அனாமதேய அழைப்பு போலீசாருக்கு வந்தது. கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளும்படியும் அழைத்தவன் சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தான். போலீஸார் சுறுசுறுப்பானார்கள். அந்த அழைப்பு ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்த போலீசாருக்கு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்த இடத்தில் இருந்து அழைத்தவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


சிறிது நேரத்தில் ஒரு பூங்காவில் விழுந்து கிடந்த ஒரு டிபன்பாக்ஸில் இருந்து மின்கம்பி நீட்டிக் கொண்டிருப்பதாகவும், சந்தேகமாய் இருக்கிறதென்றும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். உடனே வெடிகுண்டு நிபுணர்கள் அங்கே விரைந்தார்கள். அது உண்மையாகவே வெடிகுண்டு தான் என்பதைக் கண்டுபிடித்து அங்கேயே அதை அவர்கள் செயலிழக்க வைத்தார்கள். சுமார் மூன்றரை மணிக்கு ஒரு கோயிலுக்கு வெளியே கிடந்த பூக்கூடையில் சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் ஏதோ ஒரு உருண்டையான பொருள் இருக்கிறது என்ற தகவல் கிடைத்தது. அங்கும் விரைந்து சென்றவர்கள் அதுவும் ஒரு வெடிகுண்டு என்பதைக் கண்டுபிடித்து அதையும் செயல் இழக்க வைத்தார்கள்.



ணி மூன்றே முக்காலுக்கு வருண் வீட்டை விட்டு டியூஷனுக்கு பைக்கில் கிளம்பினான். டியூஷன் படிக்கும் இடத்தை அவன் அடைந்த போது வெள்ளை நிற இன்னோவா காரில் இருந்து இறங்கி ஒருவர் ஒரு சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ விலாசம் தேடுகிறார் என்று நினைத்த வருண் பைக்கை நிறுத்தி ”என்ன விலாசம் தேடுகிறீர்கள்” என்று கேட்டான்.

அந்த ஆள் அந்தச் சீட்டை நீட்டிக் கொண்டே அவனை நெருங்கினார். அருகில் வந்தவுடன் அந்தச் சீட்டை வாங்கி வருண் பார்த்தான். அது பக்கத்து தெருவில் உள்ள ஒரு கடையின் பெயர். “இது பக்கத்துத் தெருவில் தான் இருக்கிறது சார்” என்று புன்னகையுடன் கைகாட்டிய வருணுக்கு நன்றி சொல்லி விட்டு அவர் திரும்பினார். வருண் தலையை ஆட்டி விட்டுத் திரும்பி பைக்கை நிறுத்துகையில் பின்னால் இருந்து மயக்கமருந்து தடவிய கைக்குட்டையுடன் ஒரு கை அவன் முகத்தை அடைந்தது. அடுத்த கணம் வருண் சுயநினைவை இழந்தான்.

அவனை அப்படியே அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு அந்த ஆளும், சேகரும் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினார்கள். அந்த வெள்ளை நிற இன்னோவா கார் அந்தத் தெருக்கோடியை அடைந்த போது வருணின் நண்பன் தன் மோட்டார் சைக்கிளில் அந்தத் தெருவில் திரும்பினான். அந்த இன்னோவா காரைப் பார்த்துக் கொண்டே வந்த அவனுக்கு காரினுள்ளே தன் நண்பனைப் போன்ற தோற்றம் உள்ள ஒருவனைப் பார்த்தது போல் தோன்றியது. கார் வேகமாக அவனைக் கடந்து விட்டது. டியூஷன் ஆசிரியர் வீட்டை அவன் அடைந்த போது வருணின் பைக் நின்று கொண்டிருந்தது. அப்போதும் அவனுக்கு அதில் அசாதாரணமான எதையும் நினைக்கத் தோன்றவில்லை. தன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த அவன் உள்ளே வருண் இல்லாமல் போன போது தான் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று சந்தேகப்பட்டான். உடனே வருணின் வீட்டுக்குப் போன் செய்தான்....



க்‌ஷய்க்கு கேள்விப்பட்டதை ஜீரணிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. பெரும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகளைக் கடத்துவது எப்போதும் நடப்பது தான். ஆனால் கொடுக்கப் பெரிதாக எதுவுமே இல்லாத அவன் மகனை யாராவது கடத்துவார்களா? என்ன தான் நடக்கிறது.

கணவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த சஹானா திகைப்புடன் “என்னங்க” என்று கேட்டாள். அவன் சொன்னதும் அவளாலும் நம்ப முடியவில்லை. “ஆள் மாறிக் கடத்தி விட்டார்களா என்ன! ” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

யார் கடத்தியிருப்பார்கள் என்று முதலில் யூகிக்க முடிந்தது மரகதத்திற்குத் தான். அவள் மகனைத் தவிர வேறு யாரும் இந்த ஈனச்செயலைச் செய்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவளாய் சேகரின் வரவைப் பற்றியும், அவன் வருணைச் சந்தித்துப் பேசியது பற்றியும் அவர்களிடம் சொன்னாள்.

சஹானா வாயடைத்துப் போனாள். அக்‌ஷய் அதிர்ச்சியுடன் கேட்டான். “இதை ஏன் நீங்கள் முதலிலேயே எங்களிடம் சொல்லவில்லை....”

“வருண் தான் சொல்ல வேண்டாம் என்று சொன்னான். எதிர் வீட்டிலிருந்து அவன் போய் விட்டதால் முடிந்து போன ஒன்றைச் சொல்லி ஏன் வீட்டு நிம்மதியைக் கெடுக்க வேண்டும் என்று நினைத்தான்.....” என்றவள் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் விரிவாக அப்படியே சொன்னாள்.

வருண் பயத்துடன் ”அப்பா அநியாயத்துக்கு நல்லவர். இந்த ஆள் அவரிடம் அழுது புலம்பி தன் பழைய நடவடிக்கைக்கு ஏதாவது கதை சொல்லி என் மகனை என்னோடு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டால் மனம் இளகி என்னிடம் “என்ன இருந்தாலும் அவர் உனக்கு அப்பா. பாவம் அவருக்கு யாருமில்லை. நீ அவர் கூடப்போ..... எங்களைப் பார்க்கத் தோன்றும் போது வந்து பார்த்து விட்டுப் போ” என்கிற மாதிரி சொல்லவும் செய்யலாம்...” என்று சொன்னதாக மரகதம் தெரிவித்த போது அக்‌ஷயின் கண்கள் கலங்கின. “வருண் என் மகன்.... அவனை நான் எவன் கூடவும் அனுப்ப மாட்டேன்.....” என்று குரல் உடைந்து சொன்னான்.

மரகதம் சொன்னாள். “எனக்கும் தெரியும். ஆனால் அவன் ரொம்பவே பயந்து போயிருந்தான். “அந்த ஆள் கூடப் போகிறதை விட நான் செத்துப் போவது நல்லது பாட்டி. நான் என் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பாட்டி.....”ன்னு சொன்னான்...”

அக்‌ஷய்க்குத் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சஹானா அதிர்ச்சி தாளாமல் சிலை போல அமர்ந்திருந்தாள்.

துக்கப்படும் நேரம் இதுவல்ல என்று உடனடியாக சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்ட அக்‌ஷய் “பெரியம்மா நீங்கள் இவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். பேச வையுங்கள்....” என்று மரகதத்திடம் சொல்லி விட்டு வெளியே விரைந்தான்.

மைத்ரேயனும், கௌதமும் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டு மைதானத்தில் உளவுத்துறை ஆட்கள் மூவர் இருந்தார்கள். அதனால் அவர்களுக்காக பயப்பட வேண்டியதில்லை. இந்த கடத்தலையே சேகர் செய்யாமல் வேறு யாராவது செய்திருந்தால் மைத்ரேயனை மையம் வைத்து கூட செய்யப்பட்டதாக இருக்குமோ என்ற கோணத்தையும் யோசிக்க வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்ட அக்‌ஷய் அந்த வீதியிலும் பக்கத்து வீதியிலும் இருந்த மற்ற நான்கு உளவுத்துறை ஆட்களை அழைத்து வருண் கடத்தப்பட்டதைத் தெரிவித்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் தேவுக்குச் செய்தி போய் சேர்ந்தது. “அக்‌ஷயும் நான்கு உளவுத்துறை ஆட்களும் இப்போது வருணைத் தேடும் வேலையில் நாலா பக்கமும் போயிருக்கிறார்கள். இப்போது தெருவில் போகும் எல்லா வெள்ளை நிற இன்னோவா கார்களையும் போலீசார் சோதனை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....”

“இப்போது மைதானத்தில் எத்தனை பேர் காவலுக்கு இருக்கிறார்கள்.”

“மூன்று பேர்”

தேவ் புன்னகைத்தான்.



ரண்டு வெடிகுண்டுகளுக்கு மேல் வெடிகுண்டுகளைக் கைப்பற்ற முடியாத கவலையில் காவல் துறை இருந்த போது ஏதோ ஒரு குப்பை மேட்டுப் பகுதியில் ஒரு வெடிகுண்டு வெடித்த செய்தி கிடைத்தது. பிரதமரின் போக்குவரத்து வழியில் முன்பே காவல்துறை சோதனைகள் செய்து விட்டிருந்ததும், தற்போதும் பலத்த காவல் இருப்பதும், அந்த தடங்களில் எந்த வெடிகுண்டும் வெடிக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை தந்த போதும் அவர் நகரில் இருக்கையில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது காவல்துறையின் கையாலாகாத்தனம் என்று ஊடகங்கள் பேசத் தொடங்கின. சென்னையில் இருந்து முதல்வரும் இனி எந்த வெடிகுண்டும் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கண்டிப்பான உத்தரவு போட்டார்.

வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் உளவுத்துறை ஆட்களை இந்தப் பணியில் ஈடுபடுத்த இரு துறைகளும் சேர்ந்து முடிவெடுத்தன.

“மைத்ரேயனுக்கு ஆபத்து என்கிற வகையில் இது வரை ஏதாவது தகவல் அல்லது ஆதாரம் கிடைத்திருக்கிறதா?” என்று ஒரு அதிகாரி கேட்க “இல்லை” என்ற பதில் வந்தது.

“அப்படியானால் அந்தக் கண்காணிப்பு ஆட்களிலும் சிலரை இந்த வேலைக்குத் திருப்பலாம்” என்ற உத்தரவு பிறந்தது.

(தொடரும்)

என்.கணேசன்