சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 26, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 100



மைத்ரேயன் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்தில் காவல் இருந்தவர்களில் ஒருவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது.

“அங்கே நிலவரம் எப்படி இருக்கிறது?

“இங்கே ஒரு ப்ரச்னையும் இல்லை. ஏன் சார்?

“சந்தேகப்படுகிற மாதிரி யாராவது சமீப காலத்தில்...?

“இல்லை சார்

“நகரத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருக்கிறதாகத் தெரிகிறது. ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்திருக்கிறது. இரண்டு இடங்களில் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்திருக்கிறோம். இன்னும் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. தேடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது.....

சிறிது நேரத்தில் மூவரில் இருவர் அங்கிருந்து போய் விட்டார்கள். ஒருவன் மட்டும் மைத்ரேயனின் காவலுக்கு இருந்தான். ஆறரை மணி ஆன போது இருட்ட ஆரம்பித்தது. சிறுவர்கள் விளையாடி முடித்து விட்டு மைதானத்தை விட்டு வெளியே வந்தார்கள். மைத்ரேயனும், கௌதமும் தோள் மேல் தோளில் கைபோட்டு முன்னே செல்ல உளவுத்துறை ஆள் பின்னால் செல்ல ஆரம்பித்தான்.
சத்தமில்லாமல் நீல நிற மாருதி ஆல்டோ கார் ஒன்று வர சிறுவர்கள் சாலையின் ஓரத்திற்கு நகர்ந்தார்கள். உளவுத்துறை ஆள் திரும்பிப் பார்த்தான். கார் நின்றது. டிரைவர் சீட்டருகே அமர்ந்திருந்த கண்ணியமாய் தெரிந்த ஒரு இளம் பெண் தலையை நீட்டிக் கேட்டாள். “இந்த விலாசம் எங்கே இருக்கிறது, சொல்ல முடியுமா?

மைத்ரேயனையும், கௌதமையும் சற்று நிற்க சைகை செய்து விட்டு உளவுத்துறை ஆள் காரை நெருங்கினான். சில சிறுவர்கள் போய்க் கொண்டே இருந்தார்கள். மைத்ரேயனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நண்பர்களுக்காக நின்றார்கள். சீட்டை நீட்டிய பெண் சிறிதும் எதிர்பாராத விதமாய் மின்னல் வேகத்தில் இன்னொரு கையில் இருந்த கைக்குட்டையால் அவன் மூக்கை மூட அவன் திகைப்புடனேயே மயக்கம் ஆகி கீழே சரிந்தான். அதே நேரத்தில் மின்னல் வேகத்தில் தேவும், இன்னொருவனும் பின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினார்கள். இருவர் கைகளிலும் மயக்கமருந்து தடவிய கைக்குட்டைகள் இருந்தன. தேவ் மைத்ரேயனையும், மற்றவன் கௌதமையும் அப்படியே மயக்கம் அடையச் செய்து காரில் தூக்கிப் போட்டுக் கொண்டார்கள். எல்லாமே ஒரு நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது.

மைத்ரேயனுக்கு முன்னால் காத்து நின்றிருந்த சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நின்றனர். என்ன நடக்கிறது என்பது அவர்கள் மூளைக்குள் எட்டுவதற்கு முன்னால் கார் மிக வேகமாய் அங்கிருந்து பறந்தது....

மூன்று நிமிடங்கள் பயணித்த பின் நீலநிற ஆல்டோ கார் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு தெருவில் சற்று இருட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த சிவப்பு நிற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை அடைந்தது. நீல நிற ஆல்டோ காரில் இருந்து சிவப்பு நிற ஸ்கார்ப்பியோ காருக்கு அனைவரும் மாறினர். அங்கிருந்து ஸ்கார்பியோ கார் வேகமாகப் பறந்தது.

கால் மணி நேரம் கழித்து தான் அக்‌ஷய்க்குத் தகவல் கிடைத்தது. வாழ்க்கையில் முதல்முறையாக அக்‌ஷய் பேரதிர்ச்சியை உணர்ந்தான். ஆனால் அந்தப் பேரதிர்ச்சியும் அவன் செயல்படுவதை நிறுத்தி விடவில்லை. அமைதியாக அலைபேசியை எடுத்தான். சிலரிடம் அவன் அலைபேசியில் அமைதியாகப் பேசியதைப் பார்த்து விட்டு அவனுடன் பயணித்த உளவுத்துறை ஆள் அசந்து போனான். “இவனால் எப்படி இவ்வளவு அமைதியாகப் பேச முடிகிறது.....

அக்‌ஷய் சொல்லி போலீசாரிடமிருந்து தகவல் எல்லா இடங்களுக்கும் செல்ல ஆரம்பித்த போது சிவப்பு ஸ்கார்பியோ கார் கோயமுத்தூர் தாண்டி வாளையார் சோதனைச்சாவடியை அடைந்திருந்தது. சோதனைச்சாவடி ஆள் தனியார் வாகனங்களை சந்தேகம் வந்தால் ஒழிய சோதித்துப் பார்ப்பதில்லை. அவன் அந்தக் கார் கடந்து செல்லும் முன் மெல்ல எட்டிப் பார்த்தான். வயதான தம்பதியர் இருவர் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவனுக்கு அவர்கள் காலடியில் மயங்கிய நிலையில் இருந்த இரண்டு சிறுவர்கள் தெரிய வழியே இல்லை.

பிரதமர் இன்னும் கோவையை விட்டுப் போகவில்லை. அவர் இப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பாதுகாப்புக்காக போலீஸார் குவிந்திருந்தார்கள். அடுத்ததாக வெடிகுண்டு தேடும் முயற்சியில் கூடுதல் படை நகரின் பலபகுதிகளில் தேடிக் கொண்டிருந்தது. அது போக எஞ்சிய மிகக்குறைவான ஆட்களையே மைத்ரேயனைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்த நிர்வாகத்தால் முடிந்தது.   
எல்லா இடங்களுக்கும் கடத்தப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களுடன் தகவல் போய்ச் சேர்ந்தது. கோவையில் அனைத்து இடங்களிலும் ஓரளவு கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் சிவப்பு ஸ்கார்பியோ கார் கோவையைத் தாண்டி கேரளாவில் நீண்ட தூரம் போய் இருந்தது. வாளையார் சோதனைச்சாவடியில் உள்ள ஆள் தனக்குத் தகவல் கிடைத்த பின் தீவிர சோதனையை ஆரம்பித்தான். அவனிடம் ஒரு அதிகாரி இதற்கு முன் அப்படி இரு சிறுவர்களோடு எந்த வாகனமும் கடக்கவில்லை அல்லவா என்று கேட்ட போது சிறிதும் சந்தேகமில்லாமல் கடக்கவில்லைஎன்று உறுதியளித்தான்.


ருணுக்கு நினைவு திரும்பிய போது முன்பின் தெரியாத இடத்தில் ஒரு படுக்கையில் படுத்துக் கிடந்தான். தலை மிக பாரமாக இருந்தது. அவன் கை கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். அவன் அருகில் சேகர் அமர்ந்திருந்ததைப் பார்த்த போது அதிர்ச்சியாகவும், ஆத்திரமாகவும் இருந்தது.  

சேகர் வஞ்சகமாகப் புன்னகை செய்தான்.  “உன் அப்பா...டாஎன்றான்.

“என் அப்பா என் வீட்டில் இருக்கிறார்என்றான் வருண். “நீ ஏன் என்னைத் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்கிறாய். நீ என்ன செய்தாலும் நான் உன்னை அப்பாவாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். உன்னுடன் வரவும் மாட்டேன்....

நான் உன்னை என்னோடு வர இப்போது கூப்பிடவில்லையே!””” என்று அலட்சியமாய் சேகர் சொன்னான்.

“பின் ஏன் என்னைக் கடத்தினாய்?வருண் சலிப்போடு கேட்டான்.

“உன் அந்த அப்பன் என்னவோ பெரிய ஆள் என்று பெருமையாய் அன்றைக்குச் சொன்னாயே. அவன் அப்படி பெரிய ஆள் தானா என்று சோதித்துப் பார்த்தேன்... கையாலாகாத ஆள் போல இருக்கிறானேசேகர் வெறுப்பைக் கக்கினான்.

முட்டாளே. அவர் பற்றி உனக்குத் தெரியாது.....

“அதான் தெரிந்து போய் விட்டதே. உன்னைக் கடத்தினேன். அவனால் தடுக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. உன்னை அவன் தேடிக் கொண்டிருந்த போது உன் தம்பியும் அந்த திபெத் பையனும் கூடக் கடத்தப்பட்டு விட்டார்கள்.  அதையும் உன் அந்த அப்பனால் தடுக்கவோ, கண்டுபிடிக்க முடியவில்லை....இகழ்ச்சியாக சேகர் சொன்னான்.

வருண் நிலைகுலைந்து போனான். அவன் தம்பியும், மைத்ரேயனும் கூட கடத்தப்பட்டு விட்டார்களா? அவன் அப்பா அவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அந்தக் காரியம் நடந்து விட்டதா? அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு மைத்ரேயனைக் கூட்டிக் கொண்டு வந்தது வீணாகி விட்டதா?    அப்பா பாதுகாப்பார் என்று நம்பிய மனிதர்கள் முன் அப்பா தலைகுனிந்து நிற்க வேண்டுமா? இப்படி எல்லாம் நடக்க இந்தப் பாவிக்குப் பிறந்த நான் காரணமாகி விட்டேனா?

வருண் சுய பச்சாதாபத்தில் இருந்த போது சேகரின் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பேசினான். பரிச்சயம் இல்லாத ஒரு குரல் சொன்னது. “அவனை அதிக நேரம் இனி வைத்துக் கொள்ள வேண்டாம். முடிந்த அளவு சீக்கிரமாய் அனுப்பி நீயும் ஊரை விட்டுப் போய்விடு

அந்தச் செய்தியுடன் பேச்சு முடிந்து போனது. பேசியது யார் என்ன என்று தெரியாவிட்டாலும் அது தேவ் தரப்பு ஆள் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது.

வருண் சேகரிடம் கேட்டான். “எனக்கு ஒரு உதவி செய்கிறாயா?

“என்ன?

“என்னைக் கொன்றுவிடு வெறுப்புடன் வருண் சொன்னான்.

அந்த வேலை எல்லாம் நான் செய்ய மாட்டேன். சாக உதவி வேண்டுமானால் செய்கிறேன்.என்று சொன்ன சேகர் தன் சட்டைப்பையில் இருந்து சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து மகன் சட்டைப் பையில் திணித்தான். “இந்தப் பணத்தை வைத்து எலி விஷத்திலிருந்து சயனைடு வரை எது வேண்டுமானாலும்  வாங்கி சாப்பிட்டு நீ சாகலாம்”  என்று சொல்லி விட்டு சேகர் மயக்கமருந்து கைக்குட்டையால் மறுபடி வருணை மயக்கமடையச் செய்தான்.

வருண் மறுபடி விழித்த போது ஒரு தெருவோரமாக விழுந்து கிடந்தான். நன்றாக இருட்டி இருந்தது.  வருண் எழுந்து நடந்தான். அவன் வீட்டுக்கு ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் தான் அது. அவன் சட்டைப் பையில் சேகர் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது. வருண் மனம் ரணமாகி இருந்தது. அவனால் அவன் அப்பாவுக்கு எத்தனை பிரச்னை? இப்போது அப்பாவின் சொந்த மகனும் கூட மைத்ரேயனுடன் சேர்ந்து கடத்தப்பட்டு விட்டான். அவன் மீது அன்பு மழை பொழிந்த அப்பாவுக்கு எவ்வளவு பெரிய சோகத்தையும், அவமானத்தையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.... இந்த நீச்ச மனிதனுக்கு மகனாய் பிறந்ததால் தான் நேசிப்பவருக்கும் எந்த நன்மையும் செய்ய முடிவதில்லையோ…..

சற்று தூரத்தில் ஒரு மருந்துக் கடை தெரிந்தது. எலிவிஷம் முதல் சயனைடு வரை வாங்கி சாப்பிட்டு சாகலாம் என்று சேகர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. மருந்துக்கடைக்குப் போய் அவன் எலி விஷம் வாங்கினான். சிறிது தூரம் போய் ஒரு கடையில் குளிர்பானம் வாங்கினான். குளிர்பானத்தோடு சேர்ந்து  எலிவிஷத்தை விழுங்கினான்.

கடைசியாய் ஒரே ஒரு ஆசை அவன் மனதில் இருந்தது. அவன் அப்பா மடியில் சாக வேண்டும்..... இனியொரு ஜென்மம் இருக்குமானால் அவருக்கே மகனாய் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சாக வேண்டும். உயிர்பிரியும் நேரத்தில் செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாகப் பலிக்குமாம்...

அவன் அலைபேசியை எடுத்து அக்‌ஷயை அழைத்தான். அக்‌ஷயின் குரல் எச்சரிக்கையுடனும், கவலையுடனும் ஒலித்தது. “ஹலோ... வருண்?

“அப்பா... என்னை விட்டு விட்டார்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

“இப்போது தான் வீட்டுக்கு வந்தேன் வருண்....

“அங்கேயே இருங்கள்ப்பா..... நான் வந்து விடுகிறேன்....


இணைப்பைத் துண்டித்த வருண், எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை நிறுத்தி அதில் ஏறினான்.

(தொடரும்)
என்.கணேசன்      

8 comments:

  1. Fantastic Ganeshan sir. Waiting for next Thursday eagerly.

    ReplyDelete
  2. சுஜாதாMay 26, 2016 at 8:00 PM

    என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே. திக் திக்குன்னு இருக்கு. அடுத்த வியாழன் வரைக்கும் எப்படி தாங்கறது

    ReplyDelete
  3. Book release pannidunga sir.... suspense thaanga mudiyala...

    ReplyDelete
  4. தமிழில் இப்படியொரு விறுவிறுப்பான நாவல் வருவது வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இப்படி படைப்புகள் வந்தால் படிக்கும் ஆர்வம் இளைஞர்களிடமும் பெருக ஆரம்பிக்கும். கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  5. Ungal kathai miga arumai. Ungal kathaiyai kurai sollum alavuku yenaku thaguthi illai. anal ungal kathiyil kathapathirangalin ennangal thelivaga theriyum padi yezhuthi irupirgal. ingu varun intha visayathukaga tharkolai mudivu yedupan yenbathai namba mudiyavillai. athuvum tharkolai avanathu thambiyaiyum maithrenayum akshai theduvathai innum kadinamakum, sogalthil thuvandu viduvan yenbathai yosikamal irupaan yenbathayum ninaikamal iruka mudiyavillai. nigal adutha pathivil kandipaga ithai thelivu paduthi viduvirkal endru theriyum. irunthum ningal ippadi mudithathu en pondrorin mokkai kelvikaluku vazhivagukum. :)

    ReplyDelete
  6. I heard that this book is getting released today. If so let me know the cost and where I can buy it online.

    ReplyDelete
    Replies
    1. Not yet released. It may take three or four days for the release. I will post in my blog at the time of release.

      Delete