என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 3, 2025

சாணக்கியன் 168

 

சாணக்கியரின் முதுகுக்குப் பின்னால் தான் மேல் மாடம் இருந்தாலும் சந்திரகுப்தனால் பார்வையைத் திருப்ப முடியாத அளவு கவர்ந்தது யாராக இருக்கும் என்பதை அவரால் உடனடியாக அனுமானிக்க முடிந்தது. அவர் திரும்பிப் பார்க்க முனையவில்லை.

 

சந்திரகுப்தன், துர்தரா இருவர் பார்வைகளும் பூட்டிக் கொண்டதால் இருவராலும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சாணக்கியர் பேச்சை நிறுத்தி விட்டதால் அதற்கு மேலும் பார்வையைத் திருப்பாமல் இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்து சந்திரகுப்தன் கஷ்டப்பட்டு பார்வையை விடுவித்துக் கொண்டு அவரைப் பார்த்தான். அவளும் சுயநினைவுக்கு வந்தவளாக வேகமாக மேலிருந்து ஓடிவிட்டாள்

 

மன்னிக்க வேண்டும் ஆச்சாரியரேஎன்று குற்றவுணர்வுடன் சந்திரகுப்தன் சொன்னான்.

 

மன்னிக்க ஏதுமில்லை சந்திரகுப்தாஎன்று சொன்ன சாணக்கியர் பேச்சைத் தொடர்ந்தார். அவராக அது பற்றி எதுவும் கேட்கவில்லை. அவனாக எதுவும் சொல்லவுமில்லை. அவரிடம் மனம் விட்டுப் பேச முடியாத ஒன்று அவன் வாழ்வில் நுழைந்து விட்டது அவனுக்கு வருத்தமாக இருந்தது.  பின் அவர் பேசியதில் பாதி தான் அவன் மனம் லயித்தது. அவள் திரும்பவும் வந்து மேல் மாடத்தில் நிற்க மாட்டாளா என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 

துர்தராவின் போக்கில் அவள் தாய் பெருத்த மாற்றத்தைக் கண்டாள். மகள் ஏதோ ஒரு யோசனையாக எப்போதுமிருந்தாள். சமயங்களில் சாப்பிட மறந்தாள். பல சமயங்களில் சுற்றி இருப்பவர்கள் பேசுவது எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. அவள் தாரிணியிடம் சொன்னாள். “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லையே தாரிணி. அவள் தன் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறாளா?”

 

தாரிணி புன்னகைத்தபடி சொன்னாள். “நீங்கள் பயப்படுவது போல இல்லை அக்கா. அவள் காதல்வசப்பட்டு விட்டாள் போல் தெரிகிறது

 

என்ன சொல்கிறாய்? யார் மீது? யாரையும் தான் சந்திக்கும் நிலைமையிலேயே நாமில்லையே?”

 

அவள் தோழியை விசாரித்ததில் அவள் சந்திரகுப்தனை மேல்மாடத்திலிருந்து பார்த்த பிறகே இப்படித்தான் மாறி விட்டாள் என்று சொன்னாள். அவனும் அழகனாம். துர்தரா எப்படியெல்லாம் கனவு கண்டாளோ அப்படியெல்லாம் அவன் இருக்கிறானாம். ஆரம்பத்தில் கோபத்துடன் தான் பார்க்கப் போனாளாம். போய்ப் பார்த்த பின் மனதைப் பறி கொடுத்து விட்டாளாம்.”

 

அமிதநிதா முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது. ”எதிரியைக் காதலிக்கிறாளா? நம்மைச் சிறைப்படுத்தியவனைக் காதலிக்கும் அளவுக்கு அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? இது தெரிந்தால் அவள் தந்தை அவளைக் கொன்றே விடுவார்.” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

 

மகனின் மரணத்தின் பின் விசால மனதையும், பக்குவத்தையும் அடைந்திருந்த தாரிணி சொன்னாள். “அக்கா, காதலே ஒரு பைத்தியம் தான். அது எல்லாக் கணக்கும் பார்த்து வருவதில்லை அக்கா. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது சந்திரகுப்தன் நம்மை வென்றிருக்கும் அரசன். அவன் இன்னும் திருமணம் ஆகாதவனும் கூட. அவனை இவள் மணந்து கொண்டால் பட்டத்தரசியாகி விடுவாள். ஜோதிடர்கள் சொன்னது பலித்து விடும். அதற்காகவே கிரகங்கள் இப்படி அவளை ஆட்டுவிக்கின்றன போலிருக்கிறது.”

 

அமிதநிதா கோபம் தணியாதவளாகவே சொன்னாள். “ஆனாலும் இதை எல்லாம் நீ கோபமில்லாமல் சரியான விஷயம் போலச் சொல்வதையே என்னால் தாங்க முடியவில்லை தாரிணி.”

 

தாரிணி கண்ணீர் திரையிட சொன்னாள். “நாம் தான் நம் பிள்ளைகளையும், நம் எதிர்காலத்தையும் தொலைத்து விட்டோம் அக்கா. நம் மகளாவது நல்லதொரு வாழ்க்கை வாழட்டுமே.”

 

அமிதநிதாவும் அந்த வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கினாள். சிறிது நேர யோசனைக்குப் பின் அவள் வருத்தத்துடன் சொன்னாள். “ஆனாலும் இதெல்லாம் நடக்க முடிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவள் தந்தை இதை ஒத்துக் கொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த அந்தணரோ இதற்குக் கண்டிப்பாகச் சம்மதிக்க மாட்டார்....”

 

ர்வதராஜனும், சுசித்தார்த்தக்கும் வேகமாக நெருக்கமாகி விட்டார்கள். ராக்ஷசரின் ஒற்றனாக சுசித்தார்த்தக் இருக்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் பர்வதராஜனுக்கு இருந்த போதிலும் அவன் அந்த சந்தேகத்தை சாணக்கியருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அவசியம் வந்தால் பின் தெரிவிக்கலாம் என்று பர்வதராஜன் நினைத்தான். அவரும் எல்லாவற்றையும் அவனிடம் சொல்லாமல் ரகசியம் காக்கிறவர் என்பதால் சுசித்தார்த்தக் ஒரு பிரச்சினை ஆகிற வரை அவனைப் பற்றி அவரிடம் சொல்வது அவசியமில்லை என்று எண்ணினான். ஒருவேளை அவர் தந்திரமாக அவனை ஏமாற்ற முயற்சித்தால் ராக்ஷசர் பக்கம் சாய சுசித்தார்த்தக் உதவக்கூடும் என்று பர்வதராஜன் எண்ணினான்.

 

சாணக்கியரும் சந்திரகுப்தனும் நடந்து கொள்வது அவனுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மகத வெற்றியில் அவன் பங்கு மிக மிகக் குறைவு, அவர்கள் இருவர் பங்கு மிக அதிகம் என்றாலும் வெற்றிக்குப் பின் சரிசமமாக எல்லாவற்றையும் பிரித்துக் கொள்வது என்ற ஒப்பந்தம் அவர்களுக்குள் இருந்ததால் சில்லறைக் காரணங்கள் காட்டி அதை அவர்கள் இருவரும் உடனடியாக அமல்படுத்தத் தயக்கம் காட்டுவது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எந்த நேரத்தில் அவர்களிருக்கும் மாளிகைக்குச் சென்றாலும் அவர்கள் அங்கு இருப்பதே இல்லை. எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஒப்பந்தப்படி சரியான முறையில் சரிசமமாக அனைத்தையும் பிரித்துத் தருவார்கள் என்று அவனுக்கு நம்ப முடியவில்லை.

 

சுசித்தார்த்தக் பெரும்பாலும் அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டு அவர் அருகிலேயே இருந்தான். அப்போது அவர் தனநந்தனைப் பற்றியும், ராக்ஷசர் பற்றியும், பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். சுசித்தார்த்தக் நிறைய விஷயங்கள் தெரிந்தவனாக இருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்ததில் அவனுக்கு அடுத்தவர்கள் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், மற்ற பணியாட்களுடன் விசாரித்து அவர்களது எஜமானர்களின் அந்தரங்க விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவன் இயல்பு என்றும் பர்வதராஜன் அறிந்து கொண்டான். பல நூறு ஆட்களை விசாரிப்பதை விட இவனைப் போன்ற ஒரு ஆளிடம் விசாரிப்பதில் பல மடங்கு தகவல்கள் பெற்று விடலாம் என்பது அவன் அனுமானமாக இருந்தது.

 

ஒரு நாள் பர்வதராஜனின் கால்களை அமுக்கிக் கொண்டே சுசித்தார்த்தக் கேட்டான். “அரசே. தாங்கள் ஹிமவாதகூடத்திற்குச் செல்லும் போது அடியேனையும் அழைத்துச் செல்வீர்களா?”

 

ஏன் அப்படிக் கேட்கிறாய் சுசித்தார்த்தக்?” என்று பர்வதராஜன் புன்னகையுடன் கேட்டான்.

 

அங்கு உங்களுடன் வந்தால் என் வாழ்க்கை வளமாகும் என்ற நைப்பாசை தான் அரசே

 

வாழ்க்கை வளமாவதற்காக நீ அங்கே வர வேண்டும் என்பதில்லை சுசித்தார்த்தக். நான் விரும்பினால் இங்கேயே உனக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.”

 

எனக்காக நீங்கள் சாணக்கியரிடம் பரிந்துரை செய்ய முடியும் என்கிறீர்களா அரசே

 

இப்போதெல்லாம் அனைவருமே ஆச்சாரியரை சாணக்கியர் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டதை பர்வதராஜன் கவனித்தான். முன்பெல்லாம் அவருடைய மாணவர்களும், நெருக்கமானவர்களும் மட்டுமே அப்படி அழைத்து வந்தார்கள். ஆனால் சாணக்கின் மகனான அவருடைய சபதம் நிறைவேறி விட்டதால் விஷ்ணுகுப்தர் என்ற பெயரைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டார்கள்...

 

பர்வதராஜன் பெருமையாகச் சொன்னான். “இந்த வெற்றியில் சரிபாதி என்னைச் சேரும் சுசித்தார்த்தக். சந்திரகுப்தனுக்கு இணையான அதிகாரம் எனக்கும் இங்குண்டு. அதனால் நான் உனக்காக யாரிடமும் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. நானே உனக்கு எதுவும் செய்ய முடியும்.”

 

சுசித்தார்த்தக் முதலில் அவனைக் குழப்பத்துடன் பார்த்தான். பின் குழப்பம் போய் இரக்கம் அவன் முகத்தில் தெரிந்தது. அவன் ஏன் ஐயோ பாவம் என்பது போல் பார்க்கிறான் என்பதை பர்வதராஜனால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் அனுமானிக்க முடிந்த போது அவமானத்தையும், ஆபத்தையும் ஒருசேர அவன் உணர்ந்தான். இவனே பரிதாபப்படும்படியாக நம் நிலைமை இங்கே இருக்கிறதே என்று மனம் புழுங்கினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 30, 2025

யோகி 109

 

முக்தானந்தா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ஷ்ரவனுக்கு  அவர் பழைய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது போல் தெரிந்தது. சித்தானந்தாவும் உடன் இல்லாததால் அவரைப் பேச வைத்து மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஷ்ரவன் மெல்லச் சொன்னான். “நீங்கள் பிரம்மானந்தா நிறைய மாறி விட்டதாய் சொன்னீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி எத்தனையோ மாற்றங்கள் எல்லாத் துறையிலும் தேவைப்படுகின்றன. ஆன்மீகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மாற மாட்டேன் என்று சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுவார்கள் அல்லது புறக்கணிப்படுவார்கள் அல்லவா சுவாமிஜி. அதனால் தான் அவர் மாறியிருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”

 

முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். ”காலத்தின் ஓட்டத்தில்  எல்லாமே மாறிவிடுவதில்லை ஷ்ரவன். காலத்தால் மாறாத, மாறக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. ஆதி மனிதன் வாயில் சாப்பிட்டான். இப்போதும் நாம் வாயிலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமா, மூக்கிலே சாப்பிட்டால் என்ன என்று யாரும் புரட்சி செய்ய நினைப்பதில்லை. இயற்கை மனிதனை எப்படிப் படைத்திருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி தான் மனிதன் இயங்க வேண்டும். ஆன்மீகவாதி முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். சத்தியம், நேர்மை, தர்மம், எல்லாம் அவனால் பின்பற்றப்பட வேண்டும்.  மற்றவை எல்லாமே அதற்கடுத்தது தான். ஆனால் இந்தப் பத்து வருடங்களில் பிரம்மானந்தா பேசிய எல்லாப் பேச்சுகளையும் கேட்டுப் பார். எத்தனை பேச்சில் நேர்மையை, சத்தியத்தை, தர்மம் தவறாமல் வாழ்வதை உயர்த்திப் பேசியிருக்கிறார் என்பதை நீ சல்லடை போட்டுத் தேடினாலும் அதிகம் கிடைக்காது...”

 

ஷ்ரவன் யோசித்துப் பார்த்தான். அவன் பிரம்மானந்தாவின் பேச்சுகளை சமீப காலத்தில் நிறையவே கேட்டிருக்கிறான். முக்தானந்தா சொன்னது போல் நல்லவனாக இருப்பதையும், சத்தியம், நேர்மை, தர்மம் பற்றியும் அவர் அதிக முக்கியத்துவம் தந்து பேசியது எதுவும் நினைவுக்கு வரவில்லை.  தன்னுடைய அருமை பெருமைகளுக்கு அடுத்தபடியாக அவர் அதிகம் பேசியது விஞ்ஞானம், வெற்றி, சக்திகள் பற்றி தான். ஞானிகள் பற்றிப் பேசும் போது கூட பலரும் கேள்விப்படாத அவருடைய கற்பனைப் புனைவுகளும், அதிரடிக் கருத்துக்களுமே அதிகம்.

 

ஆனால் முக்தானந்தாவைப் பேச வைக்க, பிரம்மானந்தா பக்கத்து நியாயங்களைச் சொல்வது தான் பலனளிக்கும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஷ்ரவன் சொன்னான். “சுவாமிஜி. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அவர் நிறைய நல்ல விஷயங்களையும், அறிவுபூர்வமாக அலசியிருக்கிறார் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல காரியங்களையும் யோகாலயத்தின் மூலம் அவர் செய்திருக்கிறார். அவருடைய நல்லதை எல்லாம் ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு, குறைபாடுகளை மட்டும் விமர்சிப்பது சரியல்லவே.”

 

முக்தானந்தா சொன்னார். “நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா ஷ்ரவன்? ஒரு அரசியல்வாதி, மக்களுக்கு நல்லது செய்ய ஒதுக்கிய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கை, ஊழல் செய்து திருடிக் கொள்கிறான் என்று வைத்துக் கொள். அதைச் சுட்டிக் காட்டினால், மூன்றில் ஒரு பங்கை அவன் திருடிக் கொண்டாலும், இரண்டு பங்கை அந்த நல்ல காரியத்துக்குத் தானே அவன் செலவு செய்திருக்கிறான், அதைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே என்று ஒருவன் ஆதங்கப்படுவதற்கு இணையாக இருக்கிறது. ஏமாற்றாமல், ஒதுக்கப்பட்ட பணத்தை முழுவதுமாக மக்கள் நலனுக்குச் செலவு செய்வதற்காகத் தானே அவனை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்? பிரம்மானந்தாவும் ஆன்மீகத்தை நிலைநாட்டத் தான் யோகாலயத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு ஆன்மீகத்தை விட அவர் தன்னைத் தான் அதிகம் நிலைநாட்டுகிறார்.”

 

அவர் வாதத்திறமையை ஷ்ரவன் ரசித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான். ”ஆனால் இன்று இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் போய் அவர் நம் ஆன்மீகப் பெருமைகளைப் பேசிப் பலரைக் கவர்கிறார். அந்த வகையில் வெற்றிகரமான ஆன்மீகவாதி என்றே அவரைச் சொல்லத் தோன்றுகிறது சுவாமிஜி.”

 

முக்தானந்தா உடனே சொன்னார். “ஆன்மீகத்தில் வெற்றி ஆத்மஞானம் அடைவதே ஒழிய பிரபலமாக இருப்பதும், கூட்டம், புகழ் சேர்ப்பதுமல்ல ஷ்ரவன். ஓராயிரம் வார்த்தைகளைச் சொல்ல முடிவதை விட, உதாரணமாய் வாழ்ந்து காட்டுவதையே ஆன்மீகத்தில் வெற்றியாக நான் நினைக்கிறேன். அப்படி வாழ்ந்து காட்டுபவனையே நான் யோகியாகப் பார்க்கிறேன்...”

 

அருமையாகச் சொன்னீர்கள் சுவாமிஜி. வெற்றிகரமான ஆன்மீகவாதி என்று சொன்னதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் ஒரு உண்மையான யோகியைப் பார்த்திருக்கிறீர்களா?” ஷ்ரவன் ஆவலுடன் கேட்டான்.

 

முக்தானந்தா ஆதங்கத்துடன் சொன்னார். ”அந்தப் பாக்கியம் எனக்கு இதுவரையில் கிடைக்கவில்லை ஷ்ரவன். இங்கே எந்த யோகியும் இல்லை. நான் இங்கேயே சிறைப்பட்டு விட்டதால் வெளியுலகிற்குப் போகும் வாய்ப்பு இல்லை. அதனால் வெளியே பார்க்கும் பாக்கியமும் இல்லை.”

 

ஷ்ரவன் யோசித்தான். ‘ஒரு யோகியைக் கண்டால் உடனே கண்டுபிடித்து விடும் ஆன்மீகத் தெளிவில் தான் இவர் இருக்கிறார். அப்படி இருக்கையில் யோகாலயத்திலேயே இருக்கும் இவரும் எந்த யோகியையும் பார்க்கவில்லை என்றால் சைத்ராவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? எங்கே கிடைத்தது?’

 

ஷ்ரவன் கேட்டான். “பிரம்மானந்தா எப்போதாவது ஒரு நிஜ யோகியைப் பார்த்ததாய், உங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில்  சொல்லியிருக்கிறாரா?”

 

முக்தானந்தா சற்று சிரமப்பட்டு நினைவுபடுத்திக் கொண்டது போலிருந்தது. சிறிது யோசித்து விட்டு முக்தானந்தா சொன்னார். ”ஒரே ஒரு தடவை அது பற்றிப் பேசியதாய் ஞாபகம். யாரோ ஒருவர் இன்னொருவரை யோகி என்று அடையாளம் காட்டியதாகவும், பிரம்மானந்தாவும் மிகவும் ஆர்வத்துடன்  அவரைப் போய்ப் பார்த்ததாகவும் சொல்லியிருந்தார். ஆனால் சொல்லுமளவு அந்த நபர் இருக்கவில்லை என்று பிரம்மானந்தா சொன்னதாக நினைவு.”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “சில நேரங்களில் நம் எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருப்பதால் யதார்த்தத்தை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை. பிரம்மானந்தா நிறைய எதிர்பார்த்துப் போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் பார்க்கையில் இவ்வளவு தானா என்று தோன்றியிருக்கலாம்நீங்கள் பிரம்மானந்தாவிடம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததைப் போல…”

 

முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். “இருக்கலாம். சொத்தையே எழுதிக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்து கடைசியில் ஏமாறும் போது ஏற்றுக் கொள்வது சுலபமாய் இருப்பதில்லை. அதுவும் இங்கிருந்து கொண்டே நடப்பதை எல்லாம் பார்க்கும் போது மனம் சீக்கிரம் ஆறுவதில்லை....”

 

உண்மை தான். என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இரவு பகலாகப் பார்க்கிறீர்கள். நிறையப் பார்த்திருப்பீர்கள்.” என்று ஷ்ரவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

 

முக்தானந்தா அவனைப் புன்னகையுடன் கூர்ந்து பார்த்தார். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

 

ஷ்ரவன் விடுவதாக இல்லை. அவன் கேட்டான். “அப்படிப் பார்த்ததில் உங்களை அதிர்ச்சியடையச் செய்ததோ, ஆச்சரியப்படுத்தியதோ சமீபத்தில் எதாவது இருக்கிறதா சுவாமிஜி.”

 

முக்தானந்தா சொன்னார். “சில நாட்களுக்கு முன் யாரோ ஒரு மந்திரவாதி யோகாலயத்துக்கு வந்திருந்தார். அவர் இங்கே ஒரு ராத்திரியெல்லாம் பூஜை செய்த மந்திரங்கள் என் காதில் விழுந்தன. அவர் போன பிறகு பார்த்தால் பாண்டியனின் கையில் தாயத்து ஒன்று இருந்தது. எனக்கு என் கண்களையே நம்ப முடியவில்லை. எனக்குத் தெரிந்த பாண்டியன், கோடி ரூபாயே கொடுத்தாலும் தாயத்து எல்லாம் கையில் கட்டிக் கொள்ளும் ரகமல்ல. பணத்தையும் நீயே வைத்துக் கொள். உன் தாயத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொல்லக்கூடியவன் அவன். அதனால் நான் என்னையே கிள்ளிப் பார்த்துத் தான் கனவல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.”

 

ஷ்ரவன் தெரியாதது போல் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சுவாமிஜி?”

 

தெரியவில்லை. ஆனால் இங்கே எதோ ஒரு அற்புதம் நடந்திருக்கிறது. ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அப்போதே இனியும் ஏதாவது தொடர்ந்து நடக்கும் என்று என் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போல நீ வந்து சேர்ந்திருக்கிறாய்


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, June 26, 2025

சாணக்கியன் 167

 

மச்சடங்குகளின் போது தனநந்தன் தன் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், வார்த்தையையும் கவனித்துக் கொண்டிருந்த சந்திரகுப்தனின் காவலர்களுக்கு முன் அவனுக்கு எதையும் பேசப் பிடிக்கவில்லை. அவனது மூத்த மனைவியும், சுகேஷின் தாயுமான பட்டத்தரசி அமிதநிதா அவனிடம் கதறியழுதபடி கேட்டாள். “எப்படி நம் பிள்ளைகள் இறந்தார்கள்?”

 

தனநந்தன் என்னவென்று சொல்வான். இளைய மகன் மூத்த மகனைக் கொன்றான் என்று ஆரம்பிக்கும் நிஜத்தை அவளிடம் சொல்ல முடியாமல் அவன் ஒரே வார்த்தை சொன்னான். “தெரியவில்லை

 

ஈமச்சடங்குகள் முடிந்து சென்ற அவன் அங்கிருந்து வெளியே வரவும், யாரையும் காணவும் அனுமதிக்கப்படவுமில்லை. நடந்ததை ஓரளவு யூகத்தால் அறிந்திருந்த தாரிணி தன் மகன் சுதானுவின் குற்றம் வெளியே வந்து விடக்கூடாது என்று ஆசைப்பட்டாள். இறந்தவன் புகழுக்குக் களங்கம் வந்து விடக்கூடாது என்று கவலைப்பட்டாள். சாணக்கியரின் கட்டுப்பாட்டுக்குள் எல்லாம் வந்து விட்ட பின் நடந்ததை அறிந்த காவலர்கள் வெகுசிலரும் அதுகுறித்து வெளிப்படையாகப் பேச பயந்தார்கள்அதனால் அமிதநிதாவும் இளவரசி துர்தராவும் சுகேஷ், சுதானு மரணம் குறித்த தகவல்கள் எதுவும் அறியாமல் இருந்தார்கள்.

 

உண்மை யாருக்கும் தெரியாத சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தாரிணி நினைத்தாள். மகனுடைய பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக சேனாதிபதியும், அவன் வணிக நண்பனும் சதி செய்து சுகேஷையும், சுதானுவையும் கொல்ல முயன்றதாகவும், அவர்களை எதிர்த்துப் போராடி அவர்களைக் கொன்று விட்டு தாங்களும் இறந்து போனதாகவும் ஒரு கதையை உருவாக்கி அந்தப்புரத்தில் பரவ விட்டாள். இருவரும் மகன்களைப் பறிகொடுத்திருந்ததாலும், எதிரிகளால் அந்தப்புரத்தில் சேர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்ததாலும் பரஸ்பர துக்கம் சூழ்நிலை எல்லாம் சேர்ந்து தனநந்தன் மனைவிகளை பரஸ்பர அன்னியோன்னியத்திற்கு மாறி விட்டது. முன்பெல்லாம் கீரியும், பாம்புமாக இருந்து தனநந்தனுக்குப் பெரிய தலைவலியாக இருந்த அவர்கள் கஷ்ட காலத்தை ஒருமித்து அனுபவிக்க நேரிட்டதில் உடன்பிறவா சகோதரிகளாகி விட்டார்கள்ஈமச்சடங்குகள் முடிந்து சென்ற தனநந்தன் பின் அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படாததால்  இறந்த மகன்களுக்காக அழுது தீர்ந்த அவர்கள் கணவனுக்காகக் கவலைப்பட்டார்கள். எதிரிகள் அவனைக் கொன்று விடுவார்களோ என்ற பயமும் தனநந்தனின் மனைவிகளை அலைக்கழித்தது.

 

அமிதநிதா தாரிணியிடம் கவலையோடு கேட்டாள். “இனி என்ன ஆகும் என்று நீ நினைக்கிறாய் தாரிணி?

 

தாரிணி சொன்னாள். “தெரியவில்லை அக்கா. எல்லா முடிவுகளையும் சாணக்கியர் தான் எடுப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள். சில மாதங்களாக  “சாணக்கின் மகன், சாணக்கின் மகன்என்று கனவிலும் கூட மன்னர் புலம்புவதுண்டுஅவர் கனவில் வந்து கலங்கடித்த மனிதர் நிஜத்திலும் வந்து இப்படி பிரச்சினையாவார் என்று நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை....”

 

அமிதநிதா விரக்தியோடு சொன்னாள். “சாணக்கை மன்னர் கைது செய்து, சாணக் சிறையிலேயே உயிரை விட நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள். அதனால் சாணக்கின் மகன் மன்னரிடம் கருணை காட்ட வழியில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். ராக்ஷசர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவர் இருந்திருந்தாலாவது தப்பிக்க ஏதாவது வழி கண்டுபிடித்திருப்பார்...”

 

ராக்ஷசர் தலைமறைவாகி விட்டார் என்கிறார்கள். அவர் இன்னமும் எதிரிகளிடம் அகப்படவில்லை என்பது நல்ல செய்தியாக இருக்கிறது. அது தான் ஒரு சிறிய நம்பிக்கையை நமக்குத் தருகிறது

 

அமிதநிதா பெருமூச்சு விட்டாள். “எனக்கு எதற்குத் துக்கப்படுவது என்று தெரியவில்லை. நம் பிள்ளைகள் இறந்ததற்குத் துக்கப்படுவதா, மன்னர் சிறைப்பட்டிருப்பதற்குத் துக்கப்படுவதா, துர்தராவின் எதிர்காலம் குறித்து எண்ணி துக்கப்படுவதா என்று தெரியவில்லை. எத்தனையோ அரசர்கள் துர்தராவை மணமுடிக்க ஆசைப்பட்டுக் கேட்டார்கள். மன்னர் யார் மீதும் திருப்தியடையாமல் தட்டிக்கழித்துக் கொண்டே வந்து விட்டார். அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தால் அவளாவது தப்பித்திருப்பாள். நாமாவது வாழ்ந்து முடிந்து விட்டோம். அவள் இன்னமும் வாழவே ஆரம்பிக்கவில்லை. ஆரம்பிக்கும் முன்பே எல்லாம் முடிந்து விடும் போலிருக்கிறதே...”

 

அவள் விழிகளில் படர்ந்த நீர்த்திரையைப் பார்க்கையில் தாரிணிக்கும் கண்கலங்கியது. அவளுக்கு முன்பிருந்தே துர்தரா மீது பாசம் இருந்தது. ஒரு மகனை மட்டுமே பெற்றிருந்த அவள் துர்தராவைத் தன் மகளைப் போலவே பாவித்திருந்தாள். அமிதநிதாவிடமும் சுகேஷிடமும் இருந்த வெறுப்பு துர்தராவிடம் என்றும் நீண்டதில்லை.   ”கவலைப்படாதீர்கள் அக்கா. அவள் பிறந்த நேரம் மிக அதிர்ஷ்டமான நேரம் என்றும், ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசியாக இருப்பாள் என்றும் ஜோதிடர்கள் சொன்னதை மறந்து விட்டீர்களா?” என்று அவள் ஆறுதல் சொன்னாள்.

 

இரு தாய்களும் பேசிக் கொண்டது துர்தரா காதுகளில் விழுந்தது. ஜோதிடர்கள் சொன்னதாக எல்லோரும் தெரிவித்ததை வைத்து அவளும் தான் நிறைய கனவுகள் கண்டிருந்தாள். கனவுகள் கற்பனையாகவே தங்கி விடும் என்று அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் விரக்தியுடன் நகர்ந்தாள்.

 

அந்தச் சமயத்தில் அவளுடைய தோழி ஓடி வந்தாள். “துர்தரா... புதிய மன்னரையும், சாணக்கியரையும் பார்த்தேன். அரசவையில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்....” என்று சொன்னாள் .

 

அந்தப்புரத்திலிருந்து அரசவை மாடத்திற்குச் செல்லும் பாதை இதுவரை எதிரிகளால் அடைக்கப்படவில்லை. அரசவையில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை அந்தப்புரப் பெண்களும் காண வசதியாகத் தான் அந்த அரசவைக்கு மேல் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து தான் தோழி அவர்களைப் பார்த்திருக்க வேண்டும்.

 

மகதத்தை வென்று அவர்களைச் சிறைப்படுத்தியிருக்கும் எதிரிகள் பற்றி நிறைய தகவல்கள் வந்தபடி இருந்தாலும் துர்தராவுக்கு எதிரிகளைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைத்திருக்கவில்லை. ஆனால் மனதில் நிறைந்திருந்த வெறுப்பு காரணமாக அவர்களைக் காணவும் அவள் பிரியப்படவில்லை.

 

தோழி இரகசியமாக அவள் காதுகளில் சொன்னாள். “நீ உன் வருங்காலக் கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று என்னிடம் இதுவரை சொல்லி இருக்கிறாயோ அப்படியெல்லாம் இருக்கிறார் புதிய மன்னர்.... மிக அழகாக இருக்கிறார்

 

எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எதிரிகளைப் பற்றி என்னிடம் பேசாதேஎன்று கோபத்துடன் துர்தரா சொன்னாள். ஆனால் தோழி சொன்ன விஷயங்கள் அவள் மனதில் மெள்ள ஆர்வத்தைக் கிளப்பி விட்டது.

 

கற்பனை செய்து சொன்னபடியெல்லாம் நிஜத்தில் யாரும் இருக்க வாய்ப்பில்லை.” என்று மெல்ல துர்தரா சொன்னாள்.

 

நீ வந்து ஒரு முறை பார்த்து விட்டுச் சொல். என்னுடன் வா. காட்டுகிறேன்.” என்று தோழி சொன்னாள்.

 

மனதின் ஒரு பாதி மறுக்க, மறு பாதி போய்ப் பாரேன் என்று சொன்னது. பார்ப்பதால் எதிரி நண்பனாகிவிட வேண்டியதில்லை என்று மனம் தர்க்கம் செய்தது. துர்தரா யோசனையுடன் தோழியைப் பார்த்தாள்.

 

தோழி பார்வையால் அழைத்து விட்டு முன் செல்ல துர்தரா அரைமனதுடன் அவளுடன் போனாள்.

 

துர்தரா மேல் மாடத்திற்குச் சென்று சற்று மறைந்து நின்று பார்த்த போது சந்திரகுப்தனும் சாணக்கியரும் அரசவை இருக்கைகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த மாளிகையில் அமர்ந்து பேசினால் பர்வதராஜன் எப்படியாவது வந்து சேர்ந்து கொள்வான் என்பதால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். காலியாக இருக்கும் அரசவை அவர்களது இன்றைய தேர்வாக இருந்தது.

 

துர்தரா தோழி சொன்னதில் மிகை இல்லை என்பதை சந்திரகுப்தனைப் பார்த்தவுடனேயே உணர்ந்தாள். எப்படியெல்லாம் கணவன் இருக்க வேண்டும் என்று அவள் கனவுகள் கண்டிருந்தாளோ அந்தக் கனவுகளுக்கெல்லாம் ஒரு உருவம் கொடுத்தது போலிருந்த அவனிடம் முதல் பார்வையிலேயே அவளுடைய மனதை பறி கொடுத்தாள். அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தாலும் சந்திரகுப்தன் அவர்களது எதிரி, அவன் இப்போது அவர்களைச் சிறை வைத்திருக்கிறான் என்றெல்லாம் அறிவு எச்சரித்ததை அவள் மனம் பொருட்படுத்தவில்லை. அவனை மேலும் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் சற்று மறைவில் இருந்தவள் தன்னை அறியாமல் நகர்ந்து அவனைப் பார்த்தபடி நின்றாள்.

 

சந்திரகுப்தனின் பார்வை சாணக்கியர் மீதிருந்து மேல் நகர்ந்து அவள் மீது நிலைத்தது. அவனும் இப்படி ஒரு அழகுச்சிலை போல் இருக்கும் பெண்ணை இது வரை பார்த்ததில்லை. பலரும் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்த மகத இளவரசி இவள் தானா?

 

சந்திரகுப்தன் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவன் தான் என்றாலும் முதல் முறையாக அவள் மீது நிலைத்த பார்வையை மீண்டும் சாணக்கியர் முகத்துக்கு நகர்த்த அவன் மிகவும் பாடுபட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்