என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, December 22, 2025

யோகி 135

சென்ற முறை போலவே பாண்டியன் பாண்டியன் 7.49க்கு அலைபேசியில் அலாரம் வைக்க ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான். பாண்டியன் விரித்து வைத்திருந்த டைரியில் அடுத்த முகூர்த்தம் ஐந்து நாட்கள் கழித்து நள்ளிரவில் என்பதையும் அவன் கவனித்திருந்தான். அவனுக்கு வேண்டிய விதத்தில் அவர்களைத் திசை திருப்ப இப்போதைக்கு அவனிடம் எந்தத் திட்டமும் இல்லை. அந்த யோகியைப் பற்றித் தெரிந்தாலோ, ஸ்ரேயா எதையாவது கண்டுபிடித்தாலோ தான் அவன் அர்த்தபூர்வமாக எதாவது திட்டம் தீட்ட முடியும். அது வரை அவர்களுக்கு அவன் மீது இருக்கும் அபார நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள அவன் நடந்த உண்மைகளையே சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான்.

7.49 க்கு அலாரம் அடித்தது.  ஷ்ரவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மெல்லச் சொல்ல ஆரம்பித்தான். “அந்த இளைஞன் கையில் ஏதோ ஃபோட்டோ இருக்கிறது…. ஒரு பெண்ணுடைய ஃபோட்டோவெள்ளை நிற ஆடையில் ஒரு பெண் இருக்கிறாள்போட்டோவில் அந்தப் பெண் சிரித்துக் கொண்டிருக்கிறாள்ஒரு தோட்டம் தெரிகிறது….”

பாண்டியனும், சுகுமாரனும் பரபரப்பானார்கள். சென்ற முறை அந்த யோகி எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதும் அவன் தோட்டம் தெரிவதாகத் தான் சொன்னான்.

அந்த இளைஞன் பைக்கில் வந்து கொண்டிருக்கிறான். அவன் கையில் ஒரு துணி….. காவித் துணி…. காவித்துணி நனைந்திருக்கிறது….. பெட்ரோல் வாசம்….. அந்த இளைஞன் அந்த தோட்டம் இருக்கும் வீட்டின் முன் பைக்கை நிறுத்துகிறான்…. சிகரெட் லைட்டரால் அந்தக் காவித்துணியைப் பற்ற வைக்கிறான்…. பற்றி எரியும் அந்தத் துணியை அந்த தோட்டத்தில் தூக்கியெறிகிறான்….. அந்த வீட்டின் நாய் குரைக்கிறது…. அகோரமாய் குறைக்கிறது……”

ஷ்ரவன் தன் இரண்டு காதுகளையும் மூடிக்கொண்டான்.

அந்த இளைஞன் வேகமாய் போய் விட்டான்… “

சுகுமாரனும் பாண்டியனும் திகைப்புடன் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த தகவல் வரா விட்டாலும், அன்றைக்கு சுகுமாரன் தோட்டத்தில் எரியும் காவித்துணி எப்படி வந்தது என்பதைத் தெளிவாக ஷ்ரவன் சொல்லி விட்டான். என்னவொரு திவ்யசக்தி!

பாண்டியன் மெல்லக் கேட்டார். “அந்த இளைஞன் இப்போது எங்கே இருக்கிறான்?”

ஷ்ரவன் கவனத்தைக் குவித்துப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. பாண்டியன் சிறிது பொறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டார். “இங்கே வெளி கேட் பக்கம் தெரிகிறானா?”

இல்லை. தூரத்தில் இருக்கிறான்…. அவனுடைய ஆள் ஒருவன் தான் இந்தத் தெருக்கோடியில் இருக்கிறான். அந்த இளைஞன் அந்த ஆளுடன் செல் போனில் பேசிக் கொண்டிருக்கிறான்…”

என்ன பேசுகிறார்கள்?”

வண்டிகளின் போக்குவரத்து சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை….. எல்லாம் மறைந்து விட்டது….”

ஷ்ரவன் கண்விழித்தான்அவர்கள் முகத்தில் பிரமிப்பும் ஏமாற்றமும் சேர்ந்து தெரிந்தன. அவன் மெல்லக் கேட்டான். “எதாவது உபயோகமாய் இருந்ததா?”

ஆமாம். உபயோகமாய் இருந்தது. இன்னும் நிறைய தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் அடுத்த முகூர்த்தத்தில் முயற்சி செய்தால் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.” என்றார் பாண்டியன். சுகுமாரனும் தலையசைத்தார். சென்ற தடவையை விட அவன் இன்று அதிக விஷயங்களைச் சொல்லி இருக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக என்றாலும் அவன் முன்னேறி தான் வருகிறான்.  சுகுமாரனின் தோட்டத்தில் காவித்துணி எரிந்தது பல நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது இவன் சென்னையில் கூட இல்லை. ஹைத்ராபாதில் இருந்திருக்கிறான். ஆனால் நேரில் இப்போது பார்த்துச் சொல்வது போல் எவ்வளவு துல்லியமாய்ச் சொல்லி விட்டான். எதிரி இளைஞன் தற்போது இங்கு இல்லை, வேறெங்கோ இருக்கிறான் என்பதைக் கூட கச்சிதமாக கண்டுபிடித்து விட்டான். அடுத்த முறை முழுவதுமாகவே கூட அவர்களுக்குத் தெரிந்து விடலாம். நிஜமாகவே இவன் அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான்.

அன்றிரவு உணவை ஷ்ரவன் அவர்களுடனேயே சாப்பிட்டான். பாண்டியனும், சுகுமாரனும் இட்லியை, சிறிதும் காரமில்லாத தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டார்கள். ஷ்ரவனை என்ன வேண்டுமோ அதைச் சாப்பிட்டுக் கொள்ளச் சொன்னார்கள். அவனும் அவர்கள் சாப்பிட்டதையே சாப்பிட்டான். அவர்களைப் பொறுத்த வரையில் இப்படிச் சாப்பிடுவது சித்திரவதையாகத் தான் இருக்கும் என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

சாப்பிடும் போது பாண்டியன் சோமையாஜுலு பற்றிய பேச்செடுத்தார். ஷ்ரவன் சோமையாஜுலு பற்றிய நிஜத்தோடு கற்பனையைச் சேர்த்து சுவாரசியக் கதைகள் பல சொன்னான். இருவரும் ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டனர். ஷ்ரவன் ஏற்கெனவே அவன் கல்பனானந்தாவிடம் சொன்ன தன் சொந்தக் கதையையும் சொன்னான். சுகுமாரன் அதை அப்போது தான் முதல் முறையாகக் கேட்பதால் சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டார்.

கடைசியில் சுகுமாரன் பிரமிப்போடு சொன்னார். “அவர் சொன்னபடி நீங்கள் அவரிடம் கற்றுக் கொண்டிருந்தால் இன்னேரம் எங்கேயோ போயிருப்பீர்கள்.”

ஷ்ரவன் சிரித்துக் கொண்டே சொன்னேன். “ஆமாம். அவரோடு நானும் அப்போதே மேல் உலகம் போய்ச் சேர்ந்திருப்பேன்.”

அவர்களும் சிரித்தார்கள்.  அவர்களுடன் பேசும் போது ஷ்ரவன் சொன்னான். “நம் யோகிஜியை நேரில் சந்திப்பது மிகவும் கஷ்டம் என்பதால் அந்த இளைஞன் வேறு ஒரு யோகியைத் தேடுகிறான் போல இருக்கிறது…”

இருவரும் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தார்கள். ஷ்ரவனுக்கு கவனம் குவிக்கும் விஷயங்களில் இருக்கும் திவ்யசக்தி, மற்ற விஷயங்களில் இல்லை என்று பாண்டியனுக்குத் தோன்றியது. பிரம்மானந்தாவைப் பற்றி அவருடைய விளம்பர இலாக்கா சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி இருப்பதால், அவர் விஷயத்தில் சிந்திக்காமல் முட்டாளாக இருக்கிறான். ஒருவிதத்தில் அதுவும் நல்லது தான். எல்லா விஷயங்களிலும் சரியாகச் சிந்திக்க முடிந்தவன் இங்கே வந்து சிக்க மாட்டான்.  இவன் இங்கே வந்திருக்கா விட்டால் இவன் மூலம் இவ்வளவு தகவல்கள் தெரிந்திருக்காது


றுநாள் காலையில் ஷ்ரவன் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது கல்பனானந்தா தூரத்தில் வருவது தெரிந்தது. அவள் ஒவ்வொருவரிடமும் நின்று சுமார் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு வந்து கொண்டிருந்தாள். அவனிடமும் அவ்வளவு நேரம் தான் நிற்கப்போகிறாள். அவளிடம் அந்தக் குறுகிய சமயத்தில், இன்று முக்கியத் தகவல்கள் சிலதையாவது பெற்று விட வேண்டும் என்று எண்ணி ஷ்ரவன் காத்திருந்தான்.

கல்பனானந்தா அவனருகே வந்த போது செடிகளைக் காட்டி ஷ்ரவன் சொன்னான். “சுவாமினி. அந்த மொட்டைக் கடிதம் எழுதினது நீங்கள் தானே?”

அவனும் அவளைக் கண்டுபிடித்திருந்தது அவளை ஆச்சரியப்படுத்தவில்லை. “ஆமாம்என்றாள்.

என்ன நடந்தது என்பதை நீங்கள் சொன்னால் என் வேலை கொஞ்சம் சுலபமாகும்.”

கல்பனானந்தா அந்தச் செடிகளையே ஆராய்வது போல் நின்று விட்டுச் சொன்னாள். “அவள் இங்கே ஒரு கொலையைப் பார்த்து விட்டாள். அதுவே அவளுக்கு எமனானது.”

ஷ்ரவன் திடுக்கிட்டான். “கொலை செய்யப்பட்டது யார்? ஏன்?”

யார் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை ஷ்ரவன்.”

ஷ்ரவன் சொன்னான். “கண்காணிப்பவன் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்…”

கல்பனானந்தா ஒரு செடியிலிருந்து வெள்ளைப் பூச்சிகள் இருந்த கிளையைப் பிடுங்கியபடியே சொன்னாள். “இந்தப் பூச்சிகள் ஒரு கிளையில் வந்து விட்டால் மற்ற கிளைகளுக்குச் சீக்கிரம் பரவி விடும். அதனால் முக்கியமாய் இதைக் கவனிக்க வேண்டும்.”

ஷ்ரவன் அவள் கையிலிருந்து அந்தக் கிளையை வாங்கி ஆராய்ந்து பார்த்தான். கல்பனானந்தா சொன்னாள். “நாளை மருந்தடிக்கும் ஆட்கள் வருவார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நம் கண்ணில் படுவதை நாமே அப்புறப்படுத்துவது நல்லது.”

சொல்லி விட்டு கல்பனானந்தா நகர்ந்தாள். அவள் கடைசியாகச் சொன்னது கண்காணிப்பாளனுக்குக் கேட்டது. ஷ்ரவன் தூக்கிப் போட்ட அந்தக் கிளையை அவனும் பார்த்து விட்டு நகர்ந்தான். என்ன தான் முழு நம்பிக்கை வந்திருந்தாலும் கண்காணிப்பை அவர்கள் தளர்த்தவில்லை என்பதை ஷ்ரவன் கவனித்தான். கல்பனானந்தா போன பின் அவன் வெளிப்பார்வைக்கு அமைதியாக வேலையைத் தொடர்ந்தாலும், அவன் மனம் அவள் சொன்னதைத் தீவிரமாக அசை போட்டது. அவளிடம் கொலை செய்தது யார் என்ற முக்கியக் கேள்வியை அவன் கேட்பதற்குள் கண்காணிப்பாளன் நெருங்கி விட்டான்… ’என்ன நடந்திருக்கும்?’

 (தொடரும்)

என்.கணேசன்



Thursday, December 18, 2025

சாணக்கியன் 192

 

ராக்ஷசருக்கு இப்போதும் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவர் சாணக்கியரின் முகத்தில் நையாண்டி, கேலிக்கான அறிகுறிகள் தெரிகின்றனவா என்று மறுபடியும் கூர்ந்து பார்த்தார். அப்படித் தெரியவில்லை. அதனால் சந்திரகுப்தனைப் பார்த்தார். ஆச்சாரியர் அளவுக்கு அவன் தன் உணர்ச்சிகளை மறைக்கத் தெரிந்தவனாக இருக்க வழியில்லை. ஆனால் அவனிடமும் மரியாதை மட்டுமே தெரிந்தது. அவர் தன் குழப்பத்தை வெளிப்படையாகவே சொன்னார். “ஆச்சாரியரே. தங்கள் அறிவுக்கும், திறமைக்கும்சாமர்த்தியத்திற்கும்  மகதத்தின் பிரதம அமைச்சர் பதவி மட்டுமல்ல, இது போன்ற பல மடங்கு பெரிதான சாம்ராஜ்ஜியத்திற்கும் தலைமை வகிக்க தங்களால் முடியும். அப்படியிருக்கையில், தங்கள் கணிப்பின் படியே கடமையைச் சரியாகச் செய்திருக்காத எனக்கு எதற்கு மீண்டும் பதவியை அளித்து அழைக்கிறீர்கள் என்று சத்தியமாகத் தெரியவில்லை.”

 

இதே கேள்வியைத் தான் சந்திரகுப்தனும் சாணக்கியரிடம் முன்பே கேட்டிருந்தான். என்ன தான் அறிவிலும், திறமையிலும் ராக்‌ஷசர் சிறப்பாக இருந்தாலும் கூட ஆச்சாரியரின் உயரத்தை அவர் எட்ட முடியும் என்று அவன் நம்பவில்லை. மேலும் பண்பிலும் கூட ஆச்சாரியர் அளவுக்கு ராக்‌ஷசர் தன்னலம் இல்லாதவராய் இருக்க முடியாது என்று அவன் நம்பினான். அதனால் அவனுடைய ஆச்சாரியரே மிகப் பொருத்தமாக இருக்கும் பதவிக்கு ராக்‌ஷசரை அழைப்பதில் அவனுக்கு உடன்பாடு இருக்கவில்லை.

 

ஆனால் சாணக்கியர் அவனிடம் சொல்லியிருந்தார். “சந்திரகுப்தா. மகத வெற்றி நமது இலக்கின் முடிவல்ல. இலக்கின் ஆரம்பம். இனி செய்ய வேண்டிய காரியங்கள், நமக்குச் சவாலாக அமைந்திருக்கும் வேலைகள் எல்லாம் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முதலாவதாக செல்யூகஸ் இருக்கிறான். அவனிருக்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்து வருவதாக நான் கேள்விப்பட்டேன். அங்குள்ள பிரச்சினைகளத் தீர்த்து தன் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பின் அவன் எந்த நேரத்திலும் விரைவாக பாரதம் நோக்கி வரலாம். முதலில் அவனைச் சமாளிக்க வேண்டும். இங்கே  தனநந்தனுக்கு முதல் முக்கியத்துவம் தந்த ஒரு குறையைத் தவிர ராக்‌ஷசர் வேறெந்த விதத்திலும் நாம் குறை சொல்ல முடியாதவர்.  அவர் நிர்வாக விஷயங்களைப் பார்த்துக் கொண்டால் நாம் நான் சொன்ன மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கலாம்.”

 

ஆனால் ராக்‌ஷசர் கேட்ட கேள்விக்கு அவரிடம் சாணக்கியர் வேறு மாதிரியான பதில் அளித்தார். ““ராக்ஷசரே. மக்கள் நலத்தை விட மன்னன் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தந்த ஒரு தவறைத் தவிர பிரதம அமைச்சராக நீங்கள் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை. அந்தத் தவறையும் சந்திரகுப்தனைப் போன்ற ஒரு அரசன் இருந்தால் நீங்கள் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அப்பதவிக்கு உங்களை மீண்டும் அழைக்கிறேன். உங்கள் அறிவும், அனுபவமும் சந்திரகுப்தனுக்கு நிர்வாகத்திற்குப் பேருதவியாக இருக்கும் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன். எனக்கு வேறு நிறைய வேலைகள் இருக்கின்றன. அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். வேறு பல இலக்குகளையும் என் மனதில் வைத்திருக்கிறேன். பிரதம அமைச்சர் என்ற பதவியோடு அதெல்லாம் செய்து முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் தயவு செய்து பழைய மனத்தாங்கல்கள் எல்லாம் மறந்து நீங்கள் மீண்டும் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு சந்திரகுப்தன் நல்லாட்சி புரிய உதவ வேண்டும் என்று கோருகின்றேன்

 

இந்தப் பதிலிலும் இருந்த சூட்சுமத்தை சந்திரகுப்தன் கவனித்தான். ராக்‌ஷசரிடம் செல்யூகஸ் பற்றியோ மற்ற முக்கிய வேலைகள் பற்றியோ ஆச்சாரியர் வாய் திறக்கவில்லை.  அர்த்த சாஸ்திரம் பற்றியும், பொதுவாக ’பல இலக்குகள்’ என்றும் சொல்லி சாணக்கியர் நிறுத்திக் கொண்டது ராக்‌ஷசர் அவர்கள் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு முன் முக்கியமான எதையும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அவர் கவனமாக இருந்ததைச் சுட்டிக்காட்டியது. எல்லா சமயங்களிலும் அவர் கைவிடாத முன்னெச்சரிக்கையை அவன் கவனித்து மனதில் சிலாகித்தான்.

 

ஆனால் ராக்‌ஷசர் வேறொரு விஷயத்திற்காக சாணக்கியரை எண்ணி பிரமித்தார். ஒரு இலக்கை அடைய சாணக்கியர் எதிரி உதவியை வேண்டவும் கூடப் பின்வாங்கியதேயில்லை என்பதை அவர் கவனித்தார். வெறுத்தாலும், அவமானப்படுத்தினாலும் கூட தனநந்தனிடமே அலெக்ஸாண்டருக்கு எதிராக படையெடுத்துச் சென்று பாரதத்தை அன்னியர் பிடியில் சிக்க வைக்காமல் காப்பாற்றும்படி எந்த கௌரவமும் பார்க்காமல் சாணக்கியர் கெஞ்சிய காட்சி இப்போதும் அவர் மனதில் நிழலாடியது. இப்போதும் கூட பழைய பகை எதையும் நினைக்காமல் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறார். இந்த இரண்டு கோரிக்கைகளிலும்  அவர் பெறப்போகும் தனிப்பட்ட லாபம் என்று எதுவுமில்லை. சுயநலம் சிறிதும் இல்லாமல், சுய கௌரவம் சிறிதும் பார்க்காமல் மேலான விஷயங்களுக்காகப் பாடுபடும் இந்த மனிதர் அவரை வியக்க வைத்தார். சாணக்கியர் செய்திருக்கும் எத்தனையோ செயல்கள் நேரானவை என்றும் நேர்மையானவை என்றும் சொல்ல முடியா விட்டாலும் அவர் எதையும் தனக்காகச் செய்து கொண்டதில்லை…

 

இப்போதே கூட சிறைப்படுத்தவும், குற்றம் சாட்டி தண்டிக்கவும் சாணக்கியருக்கு வேண்டுமளவு காரணங்கள் இருந்தும் அவர் அதைப் பயன்படுத்த எண்ணாமல் இப்படி வேண்டுகோள் விடுத்துப் பேசிக் கொண்டிருப்பதும் ராக்‌ஷசரி மிகவும் யோசிக்க வைத்தது.

 

அவர் நெகிழ்ந்த மனதுடன் சொன்னார். “ஆச்சாரியரே உண்மையில் நீங்கள் என்ன உத்தேசத்துடன் இதையெல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. இதற்கு நான் அருகதை உள்ளவன் தானா என்றும் எனக்குத் தெரியாது. காரணம் எதுவாக இருந்தாலும் இந்த மரியாதைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி. நீங்கள் அதிகாரமில்லாமல் இருந்த காலத்திலும் உங்களை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதிகாரத்தின் உச்சத்திலும் நான் உங்களைப் பார்க்கிறேன். இந்த இரண்டுமே பாதித்து விடாத ஒரு உன்னத மேன்மையை இருவித காலங்களிலும் நீங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அதற்காகத் தங்களிடம் தலைவணங்குகிறேன். யுகங்களில் ஒரு மனிதனை இப்படி இறைவன் சிருஷ்டி செய்து திருப்தியடையக்கூடும் என்று தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் நானிருக்கிறேன். தாங்களே சொன்னது போல் அரசர் தனநந்தர் மீது நான் வைத்திருக்கும் அதீத அன்பு காரணம் என்றே சொல்லலாம். என்னை பிரதம அமைச்சராக்கி நாடாண்ட மன்னன்  இன்று காட்டிற்குச் சென்று கஷ்டப்படுகையில் இன்னொரு மன்னன் உதவியால் பதவியைத் தக்க வைத்துக் கொள்வது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்.”

 

சாணக்கியர் ராக்ஷசரின் ராஜ பக்தியை எண்ணி வியந்தார். சந்திரகுப்தனுக்கு இப்படியொரு விசுவாசமான பிரதம அமைச்சர் கிடைப்பது அதிர்ஷ்டம் தான் என்ற எண்ணம் அவருக்கு மேலும் வலுப்பெற்றது. அவர் அமைதியாகச் சொன்னார். “ராக்‌ஷசரே.  வயோதிக காலத்தில் மன்னர்கள் வனப்பிரஸ்தம் போவது மரபு சார்ந்ததே. ஒருவிதத்தில் ராஜ்ஜிய பாரத்தை அவர்கள் இறக்கி வைத்து ஆத்ம ஞான விசாரத்தில் ஈடுபடச் செல்வது கஷ்டப்படுவதல்ல. அது கஷ்டத்திலிருந்து விடுபடும் சுதந்திரமே. மேலும் தனநந்தனுக்கு மகன்கள் இப்போது உயிரோடில்லை. வாரிசாக இருப்பது மகள் துர்தரா மட்டுமே. அதனால் அவளைத் திருமணம் செய்து கொள்பவனே உங்கள் நந்த வம்சப்படியும் அடுத்த அரசனாகும் தகுதி பெறுபவன். அந்த விதத்திலும் சந்திரகுப்தனே தனநந்தனுக்கு அடுத்த அரசனாகும் தகுதி பெறுகிறான்.  தனநந்தனின் கோரிக்கையின்படியும், சம்மதத்தின்படியும் தான் இந்தத் திருமணம் நடக்கிறது என்று நான் கூறுவதை உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்அதனால் என்னிடம் இறுதியாக மறுப்பதற்கு முன் நீங்கள் கானகம் சென்று ஒரே ஒரு முறை தனநந்தனை சந்தித்துப் பேசி சந்தேகம் தெளிந்து கொள்ள அனுமதிக்கிறேன். திரும்பி வந்த பின் நீங்கள் எனக்கு பதில் அளியுங்கள் போதும். அது என்ன பதிலாக இருந்தாலும் அதற்கு மேல் நான் தங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.”

 

ராக்‌ஷசர் என்ன சொல்வதென்று யோசித்தார். தனநந்தனை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேச அவருக்குக் கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்தை அவர் நழுவ விட விரும்பவில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, December 15, 2025

யோகி 134

 

ராகவன் ஒரு ஓட்டலில் காபி குடித்துக் கொண்டே ஸ்ரேயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. அவள் புத்திசாலியாகவும், யதார்த்தமானவளாகவும், துடிப்பானவளாகவும் தெரிந்தாள். ஷ்ரவனுக்கு அவள் மிகப் பொருத்தமான ஜோடி என்று அவருக்குத் தோன்றியது.  

அவளிடம் அந்தபென் ட்ரைவைத் தந்து விட்டு, தாழ்ந்த குரலில் சொன்னார். ”இது பத்திரம். இது வேறொரு கைக்குப் போகக்கூடாதுங்கறது ரொம்ப முக்கியம். இந்த வழக்குல ஷ்ரவனுக்கு நாங்க முழு சுதந்திரம் தந்திருக்கோம். வெளியே இருந்து சின்னச் சின்ன உதவிகள் நாங்கள் செய்யறோமேயொழிய மற்றபடி நாங்க ஒதுங்கி தான் நிற்கறோம். அவன் வேலை செய்யற பாணியும் எப்பவுமே சுதந்திரமாய் தான் இருந்திருக்கு. அவன் கிட்ட ஒவ்வொரு வேலைக்கும் முழுநம்பிக்கையான ஒவ்வொரு ஆள் இருக்கு. இந்த வேலைக்கும் அவன் ஒரு ஆளை முதல்லயே தேர்ந்தெடுத்து, அவர் கிட்ட சொல்லி வெச்சுட்டு தான் போயிருக்கான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அந்த ஆள் ஒரு விபத்துல சிக்கி இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கார். ஷ்ரவன் வெளியே இருந்திருந்தா வேற யாரையாவது யோசிச்சு, அவங்க கிட்ட பேசி இந்த வேலையை ஒப்படைச்சிருப்பானோ என்னவோ தெரியலை.  யோகாலயத்துக்குள்ளே இருக்கற அவனுக்கு உன் மேல தான் பரிபூரண நம்பிக்கை தோணியிருக்கு. இந்த வழக்கு பத்தின விவரங்களையும்   உன் கிட்ட சொல்லியிருக்கான்னு நினைக்கிறேன்….”

அவள் தலையசைத்தாள். அவர் தொடர்ந்து சொன்னார். “எங்க கிட்டயும் நிறைய திறமையானவங்க இருக்காங்க. அதுல நம்பிக்கையானவங்களும் உண்டு. ஆனால் யோகாலயத்துக்கு எதிரான ஏதாவது தகவல் அவர்களுக்கு கிடைச்சா அவங்கள்ல எத்தனை பேர் பண சபலத்துக்கு ஆளாகாமல் இருப்பாங்கன்னு சொல்ல முடியாதுநம்ம கிட்ட அந்த தகவல்களைக் கொடுத்தால் கொஞ்சம் பணமும் பாராட்டும் கிடைக்கும். ஆனால் யோகாலயத்துல பேரம் பேசினால் அவங்க வாழ்நாள் கடைசி வரைக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்கிற அளவு ஒரே நாள்ல சம்பாதிச்சுட முடியும். இப்படி இருக்கிற சூழ்நிலைல ஷ்ரவன் உன்னை முழுசும் நம்பறான்…”

அவளுக்கு கம்ப்யூட்டர் துறையில் விஷய ஞானம் நிறைய இருந்தாலும், துப்பறியும் கோணத்தில் அனுபவம் அதிகமில்லை என்பதால் ராகவன் அது குறித்த அடிப்படை விஷயங்களையும், அணுகுமுறைகளையும் எளிமையாக அவர் விளக்கினார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஸ்ரேயாவிடம் மிகுந்த ஆர்வமும், பரபரப்பும் பார்த்த அவர் புன்னகையோடு சொன்னார். “கதைகளில் படிக்கிற மாதிரியோ, சினிமாக்களில் பார்க்கிற மாதிரியோ இந்த வேலை ரொம்ப சுவாரசியமாய் இருக்கும்னு நினைச்சுடாதேம்மா. உண்மையைச் சொல்லணும்னா இது பல சமயங்கள்ல அலுப்பும், சலிப்பும் தட்டற வேலை தான். கண்ணைக் கட்டி காட்டுக்குள்ளே விட்ட மாதிரியிருக்கும். பல ஆயிரக்கணக்கான தகவல்கள்ல எது உபயோகப்படற தகவல்னு தேடிக் கண்டுபிடிக்கறதே கஷ்டம். சில சமயங்கள்ல ஒரு உருப்படியான தகவல் கூடக் கிடைக்காது…”

அவர் அவளை எச்சரித்த விதம் அவளைப் பின்வாங்கவோ, உற்சாகத்தை இழக்கவோ வைக்கவில்லை. அவள் புன்னகையுடனும், துடிப்புடனும்  சொன்னாள். “எனக்கு அலுப்பும் சலிப்பும் வராது சார். ஏன்னா என் கிட்ட ஷ்ரவன் நம்பிக்கையோடு ஒப்படைச்சிருக்கற முதல் வேலையை நல்லபடியாய் முடிச்சுக் குடுத்து என்னை நிரூபிக்க எனக்குக் கிடைச்சிருக்கற சந்தர்ப்பமாய் தான் இதைப் பார்க்கிறேன். காதல், காதலன், சம்பந்தப்படற எந்த வேலையிலயும் சுவாரசியம் குறைஞ்சுட முடியும்னு நினைக்கிறீங்களா சார்.”

ராகவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னார். “எனக்குத் தெரியாதும்மா. துரதிர்ஷ்டவசமாய் எனக்கு காதல் அனுபவமெல்லாம் இல்லை.”

ஸ்ரேயா ஐயோ பாவம் என்பது போல் அவரைப் பார்க்க, அவர் வாய்விட்டுச் சிரித்தார்.

 

மாலை சத்சங்கத்திற்கு ஷ்ரவன் சென்று கொண்டிருந்த போது கண்ணன் எதிரில் வந்தார். “நாளை இரவு ஏழரைக்கு மேனேஜர் வரச் சொன்னார். இரவு உணவு அவருடனேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்.”

ஷ்ரவன் தலையசைத்தான். உடனிருந்த சித்தானந்தாவும், பின்னால் வந்து கொண்டிருந்த மூன்று துறவிகளும் ஷ்ரவனை பிரமிப்புடன் பார்த்தார்கள். உடன் சாப்பிடும் அளவு அவன் பாண்டியனுடன் மிகவும் நெருக்கமாகி விட்டது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. துறவிகள் பிரம்மானந்தாவைச் சந்திப்பதை எப்படி ஒரு பாக்கியமாக நினைத்தார்களோ, அப்படியே பாண்டியனைச் சந்திக்க வேண்டியிருப்பதை துர்ப்பாக்கியமாக நினைத்தார்கள். பெரும்பாலும் துறவிகளைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் தான் பாண்டியன் அழைப்பது வழக்கம். மற்றபடி துறவிகளுடன் கலந்து பேச அவருக்கு எதுவும் இருப்பதில்லை. அதனால் முதல் முறையாக ஒரு துறவி பாண்டியனின் நட்பு வட்டத்தில் நுழைந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போதெல்லாம் ஷ்ரவனை பலரும் மரியாதையுடன்  பார்க்கிறார்கள். அங்கு கண்காணிப்பாளர்கள் பெரும்பாலும் போலீஸ்கார்ரகள் போல்  தான் நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களும் இப்போதெல்லாம் ஷ்ரவனை மரியாதையாக நடத்துகிறார்கள்.  பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் கண்ணன் கூட ஷ்ரவனை மரியாதையுடன் பார்ப்பது யோகாலயத்தில் ஷ்ரவனின் அந்தஸ்து உயர ஆரம்பித்திருப்பதைக் காட்டியது.

முக்தானந்தா மட்டும் இந்த முன்னேற்றத்தில் ஆபத்தைப் பார்த்தார். ஷ்ரவன் தனியாகக் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் அவர் ஷ்ரவனை எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்கச் சொன்னார்.

ஷ்ரவன் தியான நேரங்களில் மந்திர ஜபத்தை மிகவும் சிரத்தையுடன் செய்தான். வழக்கமான துப்பறியும் யுக்திகள் பெரிய பலன் தராத நிலையில், இது வரை அது தான் அவனுக்கு வழிகாட்டியிருக்கிறது.  அன்றிரவும், மறுநாள் காலையும் அவன் மந்திர ஜபம் செய்து, மேலும் தொடர்ந்து வழிகாட்டும்படி  ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தான்.  அந்த சமயங்களில் அவனுக்கு ஓநாய் தெரியவில்லை என்றாலும் அந்த மந்திரம் அவனைப் பலப்படுத்துவதாகவும், தெளிவை ஏற்படுத்துவதாகவும் அவன் தொடர்ந்து உணர்ந்தான்.  

மறுநாள் இரவு ஏழரை மணிக்கு ஷ்ரவன் சென்ற போது பாண்டியனுடன் சுகுமாரனும் இருந்தார்.  இருவரும் நட்புடன் அவனை வரவேற்றார்கள். பாண்டியன் அடிக்கடி தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கச் சொன்னார். “இன்று இரவு 7.49க்கு முகூர்த்த காலம் நன்றாக இருக்கிறதாம். அதனால் அந்த நேரத்தில் மறுபடி முயற்சி செய்து பார்க்கிறீர்களா ஷ்ரவனானந்தா.”

கண்டிப்பாகஎன்ற ஷ்ரவன் தயக்கத்துடன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கே என் மீது உங்கள் அளவு நம்பிக்கை இல்லை. ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் மன்னிக்க வேண்டும்.”

சுகுமாரன் சொன்னார். “விஞ்ஞானிகளே கூட எல்லா சமயங்களிலும் சரியாகவே சொல்லிடறதில்லை. அதனால தப்பானாலும் ஒன்னும் குடி முழுகிடப் போகிறதில்லை.”

தேவானந்தகிரி குறித்துக் கொடுத்த மூன்று முகூர்த்த நேரங்களில் ஒன்று முடிந்து விட்டது. இன்று இரவு 7.49ம், ஐந்து நாட்கள் கழித்து நள்ளிரவு 1.01ம் அடுத்த முகூர்த்த நேரங்கள். அதைப் பாண்டியன் தன் டைரியில் குறித்துக் கொள்ள, சுகுமாரன் தன் அலைபேசியில் சேமித்துக் கொண்டிருந்தார். எதிரியைக் கண்டுபிடித்து அழித்து, அவரும் அவருடைய டாமியும் கட்டிக் கொண்டிருக்கும் தாயத்துகளிலிருந்து விடுதலையாகும் வரைக்கும் இயல்பாய் வாழ முடியாது என்ற நிலையை அவர் எட்டியிருந்தார். அவருடைய வீட்டில் இருக்கும் நிலைமை அந்த அளவு மோசமாய் இருந்தது. அவரது மனைவியின் சினேகிதியான சதிகாரி திரும்பத் திரும்ப அந்த தாயத்துகளில் தான் அவர்களுக்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அவளுக்கு வேண்டப்பட்ட மந்திரவாதி திட்டவட்டமாய் சொல்வதாய்ச் சொல்லியிருந்தாள். அவருடைய மனைவி அவர் சொல்வதை நம்புவதா, இல்லை சினேகிதியின் மந்திரவாதி சொல்வதை நம்புவதா என்று ஒரு முடிவுக்கு வராமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.

உன் கணவன் உயிரோடு இருக்கணும்னு ஆசைப்பட்டால் தயவு செஞ்சு தாயத்தோட விளையாடாதே.” என்று சுகுமாரன் உருக்கமாகப் பயமுறுத்தி வைத்திருக்கிறார். அதனால் இதற்கெல்லாம் விரைவில் ஒரு முடிவு கிடைத்தால் நல்லது என்று ஆசைப்படும் அவருக்கு ஷ்ரவனானந்தா என்னும் அந்த இளம் துறவி தான் இப்போதைக்கு ஆபத் பாந்தவனாகத் தெரிகிறான். எப்போதுமே எதிலும் குறை கண்டுபிடிக்கும் பாண்டியனுக்குக் கூட ஷ்ரவனானந்தா சொல்வதில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, சுகுமாரனுக்கு அந்த இளம் துறவி மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரித்திருந்தது. அதனால் அவர் அந்த முகூர்த்த நேரத்திற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்டார்.

பாண்டியனுக்கும் ஒரு மாதத்திற்கு முன் வரை சிறிது கூட நம்பிக்கை இல்லாமலிருந்த இந்த ஏவல், செய்வினை போன்ற அமானுஷ்ய விஷயங்கள் மீது நேரடி அனுபவத்திற்குப் பின் நம்பிக்கை வந்திருந்தது. தேவானந்தகிரியின் வரவும், பூஜைகளும், தாயத்தும் பலன் அளித்த பின் நம்பிக்கை கூடியது. அவர்களுக்கு மட்டுமே தெரிந்தவற்றையும், அவர்களுக்கு தேவானந்தகிரி சொன்னவற்றையும் அனாயாசமாக ஷ்ரவன் சொல்ல முடிந்திருந்தது அவன் மீதும் அதீத நம்பிக்கையை உருவாக்கி இருந்தது.

ஷ்ரவன் கேட்டான். “நான் இப்போது எதில் கவனம் செலுத்த வேண்டும்?”

அந்த இளைஞன் மீதே கவனம் வையுங்கள் ஷ்ரவனானந்தா. அவனைப் பற்றிக் கூடுதலாக நமக்குத் தெரிய வேண்டும்என்றார் பாண்டியன்.

ஷ்ரவன் சரியெனத் தலையசைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, December 11, 2025

சாணக்கியன் 191

 

சாணக்கியரின் குரல் கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளான ராக்ஷசர் ஸ்தம்பித்து சிலையாகச் சமைந்து ஒரு கணம் நின்றாலும் மறு கணமே சுதாரித்துக் கொண்டு கூர்ந்து பார்த்த போது அகல் விளக்கொளியில் சாணக்கியர் மட்டுமல்லாமல் சந்திரகுப்தனும் தெரிந்தான். அவனும் சாணக்கியரைப் போலவே கைகூப்பி வணங்கி நின்றான்.

 

ராக்ஷசர் இதயம் வேகமாக படபடத்தாலும், சூழ்நிலை அவரை செயலற்றவராக ஆக்கி விடவில்லை. மௌனமாக பெரிய விளக்கொன்றை ஏற்றியபடியே அவர் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டார். சற்று முன் ஒற்றர் தலைவன் சொன்னபடி எல்லாம் கைமீறிப் போய் விட்ட நிலையில் இனி பதறுவதற்கும், அதிர்வதற்கும் எதுவுமில்லை என்று தோன்றியது. முடிவு எதுவாக இருந்தாலும் அவர் சந்தித்தே ஆக வேண்டும். அவர் சந்திப்பார்

 

ராக்ஷசர் விரக்தியால் அமைதி அடைந்தவராகச் சொன்னார். “வணக்கம் சாணக்கியரே. தாங்கள் என்னுடைய பழைய பதவியை நினைவு வைத்துக் கொண்டு இப்போதும் அப்படியே அழைப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது. அதுவும் தற்போது அந்தப் பதவியில் இருக்கும் தாங்கள் அப்படி அழைப்பது என்னை நையாண்டி செய்வது போல் இருக்கிறது.”

 

அந்தப் பழைய பதவியிலிருந்து தங்களை யாரும் விலக்காததால் தான் அப்படியே அழைத்தேன் ராக்ஷசரே. தங்கள் பொறுப்புகளை நிர்வகிக்க நீங்கள் இருக்காததால் நான் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதனால் இதில் நையாண்டி எதுவுமில்லைசாணக்கியர் இப்போதும் பணிவாகவே பேசினார்.

 

இது என்ன நாடகம் என்று ராக்ஷசருக்குத் தோன்றினாலும் அதை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. பெரிய விளக்கின் வெளிச்சத்தில் அவர்கள் இருவரையும் நன்றாகப் பார்த்தார். சாணக்கியரின் உடையில் எந்த மாற்றமும் இல்லை. முன்பிரு முறை சாதாரணமான மனிதராக அவரைப் பார்த்த போது அவர் எந்த மாதிரியான எளிய உடையில் பார்த்தாரோ, அதே எளிமையான உடையில் தான் இப்போதும் இருந்தார். அவர் அடைந்த வெற்றிகள் எதுவும் தோற்றத்தில் அவரைப் பெரிதாக மாற்றி விடவில்லை. அந்த அமைதியும் மாறவில்லை. மகத அரசவையில் அவமதிக்கப்பட்டு வெளியே வீசப்பட்ட போது இருந்த அதே அமைதி தான், வெற்றி வாகை சூடி அனைத்தையும் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் அவரிடம் தெரிகிறது. இப்படி இருக்க முடிவது எத்தனை பேருக்குச் சாத்தியம் என்ற வியப்பும் ராக்ஷசர் மனதில் எழுந்தது. அதுவும் சாணக்கியர் அடைந்திருக்கும் வெற்றி சாதாரணமானதல்ல.  தனியொரு மனிதனாய் எதிர்க்க ஆரம்பித்து இன்று ஒரு சாம்ராஜ்ஜியத்தையே வெற்றி கொண்டிருக்கிறார்.

 

ராக்ஷசர் பார்வை சந்திரகுப்தனையும் அளந்தது. பட்டு பீதாம்பரமும், ஆபரணங்களும் அணிந்து ஆணழகனாய் ராஜ கம்பீரத்துடன் இருந்த அவனைப் பார்க்கையில் அவராலும் துர்தராவைக் குற்றப்படுத்த முடியவில்லை. 

 

ராக்ஷசர் சொன்னார். “முன்பெல்லாம் கைது செய்யக் காவலர்கள் தான் வருவார்கள். ஆனால் புதிய ஆட்சி மாற்றத்தில் மன்னரும், பிரதம அமைச்சருமே அந்தப் பணியைச் செய்ய வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

 

சாணக்கியர் சொன்னார். “கைது செய்வதென்றால் காவலர்களைத் தான் அனுப்பி இருப்போம். ஆனால் திருமணத்திற்கும், பட்டாபிஷேக விழாவுக்கும் அழைக்க சம்பந்தப்பட்டவர்களே வர வேண்டியிருப்பதால் தான் வந்தோம். ராக்ஷசரே.  வரும் சப்தமியன்று சந்திரகுப்தனுக்கும், இளவரசி துர்தராவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. வரும் தசமியன்று சந்திரகுப்தனின் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. இரண்டுக்கும் வந்து ஆசிகள் வழங்கி சுபநிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தங்களை வேண்டிக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொல்லி விட்டு சந்திரகுப்தனைப் பார்க்க சந்திரகுப்தன் தலைவணங்கி ஒரு கணம் நின்று விட்டு பின் ராக்ஷசரின் பாதம் தொட்டு வணங்க ராக்ஷசர் திகைத்தார். அவர் இதைச் சிறிதும்  எதிர்பார்த்திருக்கவில்லை.  பொதுவாக வென்றவர்கள் தோற்றவர்களை நடத்தும் விதம் இதுவல்ல. அதுவும் அவரைப் போல் மறைவாக ஒளிந்திருந்து கொலைத்திட்டம் கூடத் தீட்டிய ஒரு மனிதனை மகத மன்னனாகப் போகிறவன் வணங்குவது இயல்பாயில்லை. ஆனால் இந்த மனிதரின் நாடகங்களில் மயங்கி விடக்கூடாது என்று தனக்குத் தானே ராக்‌ஷசர் சொல்லிக் கொண்டார். இது வரை இவரது எல்லா சதிகளையும், சூழ்ச்சிகளையும் அவர் பார்த்து வந்திருக்கிறார். அவற்றில் நிறைய பாதிக்கவும் பட்டிருக்கிறார். அதையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு ராக்‌ஷசர் இறுகிய முகத்துடன் சொன்னார்.

 

“ஆச்சாரியரே. தயவு செய்து இந்த நாடகங்களையும், நடிப்பையும் நிறுத்துங்கள். என்னை உங்களுக்குத் தெரியும். உங்களை எனக்கும் தெரியும். நான் உங்கள் நண்பனோ நலம் விரும்பியோ அல்ல. இப்போது வரை நாம் எதிரிகள் தான். அதனால் பாசாங்கு எதுவும் இல்லாமல் நீங்கள் வந்த காரணம் என்ன என்று சொன்னால் இருபக்கமும் காலம் விரயம் ஆவதைத் தவிர்க்க முடியும்”

 

சாணக்கியர் அந்த நேரடியான பேச்சில் எந்தப் பாதிப்பும் அடையாமல் அமைதியாகச் சொன்னார். ”ராக்‌ஷசரே. நீங்கள் எங்களை எதிரிகளாக நினைத்திருப்பதற்கு நான் வருந்துகிறேன். நாங்கள் உங்களுக்கு எதிராக நிறைய செயல்கள் செய்திருக்கலாம். அவை எல்லாம் எங்கள் இலக்கை நாங்கள் அடைய, செய்தே ஆக வேண்டியிருந்த செயல்கள். ஆனாலும் உண்மையில் உங்களை எதிரியாக ஒரு போதும் நினைத்தது கிடையாது.”

 

ராக்‌ஷசர் சொன்னார். “வாக்கு வாதத்தில் தங்களை ஜெயிக்க முடியாது என்பதை நான் நம் முதல் சந்திப்பிலேயே அறிந்திருக்கிறேன் ஆச்சாரியரே. நான் பேசியது உண்மையை.”

 

“நானும் உண்மையையே பேசுகிறேன் ராக்‌ஷசரே. நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். இது எங்கள் தாய் மண். இந்த தாய் மண்ணுக்கு எதிரானவர்களையே நாங்கள் எதிரிகளாகக் கருதுகிறோம். நானறிந்த வரை நீங்களும் இந்த மண்ணுக்கு விசுவாசமானவர் தான்.  அப்படி இருக்கையில் நாம் எதிரிகளாவதெப்படி?”

 

“இந்த மண் மீது படையெடுத்து வந்தவர்கள் எதிரிகளாகாமல் இருப்பதெப்படி?”

 

“இந்த மண்ணின் மைந்தர்கள் மக்கள் நலனில் அக்கறையில்லாத ஒருவனால் ஆளப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்களை அந்தக் கஷ்டத்தில் இருந்து மீட்கும் நியாயமான நோக்கத்தில் படையெடுத்து வருபவர்கள் எதிரிகளாவதெப்படி?”


”வாதத்திறமையால் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் ஆச்சாரியரே”

 

”தனநந்தன் மீதிருக்கும் கண்மூடித்தனமான பிரியத்தினால் நீங்கள் உண்மையை மறுக்கிறீர்கள் ராக்‌ஷசரே. மன்னனின் நலத்திற்கும், மக்கள் நலத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் அறியாதவரல்ல நீங்கள். ஆனாலும் மன்னன், மக்கள் என்று இரு பக்கமும் தங்கள் சேவையை எதிர்பார்த்த போது நீங்கள் மன்னன் பக்கமே நின்றீர்கள். நீங்கள் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. முடிந்த வரை செய்தீர்கள். ஆனால் தனநந்தன் அனுமதித்த வரை, அனுமதித்த அளவு வரை மட்டுமே செய்தீர்கள்.  ஆனால் தனநந்தனின் மனதின் அகலம் என்னவென்று நாமனைவரும் அறிவோம்.  அந்த மனதில் அவனைத் தவிர எத்தனை பேருக்கு இடம் இருந்தது? அவன் எத்தனை நன்மைகள் மக்களுக்குச் செய்ய உங்களை அனுமதித்தான்? யோசித்துப் பாருங்கள் ராக்‌ஷசரே. அவன் பக்கம் இந்தக் கணம் வரை இருந்த நீங்கள் மகதத்தின் பக்கம் இருப்பதாகவும், அதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாகவும் எண்ணிக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கூறுவதை இல்லை என்று உங்களால் நேர்மையாக மறுக்க முடியுமா ராக்‌ஷசரே?”

 

சாணக்கியரின் கேள்வி ராக்‌ஷசரின் மனசாட்சியின் அடி ஆழம் வரை சென்று தைத்ததால் அவர்  பேச்சிழந்து நின்றார். சரியாக இருக்கிறோம், சரியாக வாழ்கிறோம் என்று இக்கணம் வரை இறுமாந்திருந்த ராக்‌ஷசர் சாணக்கியர் சுட்டிக் காட்டிய நிதர்சன உண்மையில் இப்போது கூனிக் குறுகினார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து நேர்பார்வை பார்த்தபடியே அவர் சாணக்கியரிடம் ஆத்மார்த்தமாகச் சொன்னார். “குற்றம் சாட்டிய நீங்களே தண்டனையையும் சொல்லுங்கள் ஆச்சாரியரே. தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “மகதத்தின் பிரதம அமைச்சராக இத்தனை காலம் செய்யத் தவறிய கடமையை அதே பொறுப்பேற்று இனி செய்து தீர்க்க வேண்டும் என்று மன்னராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரகுப்தன் உங்களைக் கேட்டுக் கொள்கிறான் ராக்‌ஷசரே”  

 

(தொடரும்)

என்.கணேசன்        




Wednesday, December 10, 2025

முந்தைய சிந்தனைகள் - 129

 என்னுடைய ’வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...