என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, October 20, 2025

யோகி 126

( தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

ஷ்ரவன் சீக்கிரமாக எதிர்காலத்தில் தன் மீது சந்தேகம் வராதபடி ஒரு கற்பனை எதிரியை உருவாக்க நினைத்தான். அவர்கள் தேடும் ஒரு இளைஞனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினால் ஒழிய அவர்கள், யோகியைத் தேடும் ஒரு இளைஞனைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். அப்படித் தேடும் போது அவன் மீதும் சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. அவன் இன்னமும் கண்டுபிடிக்கப்படும் விளிம்பில் தான் இருக்கிறான்...

 

ஷ்ரவன் தயங்கியபடி சொன்னான். “யோகாலயத்தின் வாசலில் ஒரு இளைஞனை நான் அடிக்கடி என் மனக்காட்சியில் பார்க்கிறேன். ஓநாயை உள்ளே அனுப்பி விட்டு அவன் வெளியிலேயே நிற்கிறான். அவன் உள்ளே ஏன் நுழைவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் அந்த இளைஞன் தெரிவதே என் பிரமையா என்று கூட எனக்குத் தெரியவில்லை...”

 

பிரம்மானந்தாவும், பாண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் பாண்டியன் ஷ்ரவனிடம் சொன்னார். “எதையும் நீங்கள் பிரமை என்று நினைக்காதீர்கள் ஷ்ரவனானந்தா. உங்களுக்குத் தெரியும் காட்சியை நீங்கள் சொல்லுங்கள். அந்த இளைஞனின் தோற்றத்தை உங்களால் விவரிக்க முடியுமா?”

 

ஷ்ரவன் சொன்னான். “சற்றுப் பொறுங்கள். நான் பார்த்துச் சொல்கிறேன்

 

சொல்லி விட்டு அவன் கண்களை மூடிக் கொண்டான். என்ன சொல்வது என்று யோசித்தான். யோகாலயத்தைக் கண்காணிக்க அவன் ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவன், ஷ்ரவன் யோகாலயத்தில் துறவியாக வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான், டில்லியில் இருக்கும் அவன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று போய் விட்டான். அவன் தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவன் இனி சீக்கிரத்தில் வருவதற்கில்லை. அதனால் ஷ்ரவன் சொன்னதை வைத்து இவர்கள் அவனைப் பிடிக்கவும் வாய்ப்பில்லை...

 

ஷ்ரவன் அவனை விவரிக்க ஆரம்பித்தான். “ஒல்லியான சிவந்த தேகம். சுருள் தலைமுடி. அவன் வலது கண்ணிற்கு மேல் ஒரு சின்னத் தழும்பு தெரிகிறது. நீளமான கழுத்து.. அவன் ஓநாயை அனுப்பி விட்டு அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்....”

 

ஷ்ரவன் கண்களை மூடியவுடனேயே பாண்டியன் அவன் சொல்வதை கைபேசியில் ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்து விட்டிருந்தார்.

 

ஷ்ரவன் தொடர்ந்தான். “ம்ம்ம்.... அவன் மறைந்து விட்டான்.”

 

கண்களைத் திறந்த ஷ்ரவன் முகத்தில் திகைப்பு தெரிந்தது. “அதே இளைஞனைத் தான் நான் ஒவ்வொரு முறையும் நம் யோகாலய வாசலில் பார்க்கிறேன். உங்களுக்கு அவனை அடையாளம் தெரிகிறதா?”

 

பாண்டியன் சொன்னார். “எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் ஆட்கள் யாருக்காவது அவனைத் தெரிந்திருக்கலாம்...”

 

ஷ்ரவனிடம் பிரம்மானந்தா கேட்டார். “இனி உனக்குக் காட்சி எதுவும் தெரியாதா?”

 

இப்போதைக்குத் தெரியாது. ஆனால் மறுபடியும் கண்டிப்பாக எப்போதாவது திடீரென்று தெரிய ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன்.”

 

பிரம்மானந்தா ஷ்ரவனிடம் சொன்னார். “எப்போது தெரிந்தாலும் நீ பாண்டியனிடம் உடனடியாக வந்து சொல்லலாம் ஷ்ரவனானந்தா. அதற்கு நீ தயங்கவே வேண்டாம்.”

 

ஷ்ரவன் தலையசைத்தான். பின் அவரைத் தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு உணர்ச்சிவசப்பட்டு மெய்யுருகி நின்று நடித்து, இருவரையும் வணங்கி விட்டு அவன் அங்கிருந்து விடைபெற்றான்.

 

அவன் சென்றவுடன் பாண்டியன் கண்ணனை அழைத்து ஷ்ரவன் பேசிய ஒலிப்பதிவைப் போட்டுக் கேட்க வைத்தார்.

 

ஒல்லியான சிவந்த தேகம். சுருள் தலைமுடி. அவன் வலது கண்ணிற்கு மேல் ஒரு தழும்பு, நீளமான கழுத்து..’ என்ற வர்ணனைகளைக் கேட்ட கண்ணன் சொன்னார். “இந்த வர்ணனைக்குப் பொருந்துகிற ஆள் சில நாட்களுக்கு முன்பு வரைக்கும் நம் யோகாலயத்தை வேவு பார்த்துக் கொண்டு இருந்தான். நாலைந்து நாளாகத் தான் அவனைப் பார்க்க முடியவில்லை.”

 

பாண்டியனும் பிரம்மானந்தாவும் திகைத்தார்கள். பல ஆட்கள் சேர்ந்து கண்காணித்து, வெளியே பல அதிநுட்ப காமிராக்கள் மூலம் பார்த்து கண்ணனுக்குத் தெரிய வந்திருக்கும் ஒரு சத்தியத்தை, எந்த அதிக சிரமமும் இல்லாமல், காட்சியாகவே பார்த்துச் சொன்ன ஷ்ரவன் அவர்களைப் பிரமிக்க வைத்தான். அவனுக்குக் கிடைத்திருக்கும் அந்த அபூர்வ சக்தி அவர்களுக்கு அற்புதமாகத் தோன்றியது.

 

அப்படிப்பட்ட அபூர்வ சக்தி உள்ளவன் தன் பக்தனாக இருப்பது பிரம்மானந்தாவுக்குப் பெருமையாக இருந்தது. அதே நேரத்தில் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் பொறாமையும் எழுந்தது. ஏதேதோ கற்பனைக் கதைகளைச் சொல்லி, இல்லாத அபூர்வ சக்திகள் பலதும் தன்னிடம் இருப்பதாக அடுத்தவர்களை நம்ப வைக்க அவர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கையில், ஷ்ரவனுக்கு எந்த முயற்சியும் இல்லாமல் இப்படி ஒரு அபூர்வ சக்தி இயல்பாகவே கிடைத்திருப்பது அவரைப் பொறாமைப்படவும் வைத்தது.  நல்ல வேளையாக அவனுடைய சக்தியின் பெருமை அவனுக்குத் தெரியாமல் அவனை விட அவரை உயர்வாகவும், யோகியாகவும் நினைத்து அவருடைய பக்தனாக மாறியிருப்பது அவருக்கு அற்ப திருப்தியையும் தந்தது.

 

ஆனால் இது போன்ற மனச்சிக்கல்கள் இல்லாத பாண்டியன், ஷ்ரவனின் இந்தச் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு எதிரியைக் கண்டுபிடித்து அழிப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணன் அவர்களுடைய காமிராக்களிலும், அலைபேசிகளிலும் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களில், ஷ்ரவன் சொன்ன ஆளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து பாண்டியனிடமும், பிரம்மானந்தாவிடமும் காட்டினார்.

 

தொலைவிலிருந்தும், ஓரளவு அருகிலிருந்தும் பல கோணங்களில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களைப் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘ஷ்ரவன் எத்தனை துல்லியமாக அந்த ஆளை வர்ணித்திருக்கிறான்.’

 

பிரம்மானந்தா பாண்டியனிடம் சொன்னார். “யோசிச்சுப் பார்த்தா ஷ்ரவன் சொல்றது எல்லாமே பொருந்தி வருது பாண்டியன். எதிரியை ஷ்ரவன் கண்டுபிடிச்சு வர்ணிச்சது மட்டுமில்லாம, எதிரி யோகாலயத்துக்கு உள்ளே வராமல் வெளியவே நிக்கறான்னு சொன்னதும் சரியாயிருக்கு. தேவானந்தகிரி வந்து பூஜைகள் செஞ்சுட்டு போயிருக்கார். அதனால அந்த ஏவல் சக்திய உள்ளேயிருந்து வெளியே துரத்த முடியாட்டியும், வெளியே இருந்து உள்ளே வர அந்த இளைஞனை விடமாட்டேங்குது போல இருக்கு. கண்ணன் சொல்றத பார்த்தா, கிட்டத்தட்ட ஷ்ரவன் இங்கே வந்து சேர்றதுக்கு முன்னால வரைக்கும், அந்த எதிரி தானே நேர்ல இங்கே வந்து கண்காணிச்சுகிட்டு இருந்திருக்கான்னு தெரியுது. ஷ்ரவன் இங்கே வந்து சேர்ந்த பிறகு ஏதோ ஒரு காரணத்தினால அவன் தலைமறைவாயிருக்கான்...”

 

பாண்டியன் சொன்னார். “இதுல புரியாததும் நிறைய இருக்கு யோகிஜி. அந்த எதிரி நமக்கு முன்னே பின்னே தெரிஞ்சவனாகவும் இல்லை. அப்புறம் ஏன் அவன் நமக்கு எதிராய் செயல்படறான்? அவன் பின்னணியில யார் இருக்கா? சைத்ராவோட தாத்தாவா, இல்லை வேற யாராவதா? இந்த செய்வினையைச் செஞ்ச ஆள் யார்? இதையெல்லாம் நாம ஷ்ரவனை வெச்சே தெரிஞ்சுக்கலாம்னு நான் நினைக்கறேன். ஆனால் அவனுக்கும் அவன் கிட்ட இருக்கற சக்தியை முழுசாய் பயன்படுத்திக்கற வித்தை தெரியலைன்னு தோணுது. அதற்கு தேவானந்தகிரி கிட்டே பேசினா நமக்கு சரியான ஆலோசனை கிடைக்கும்னு தோனுது.”

 

சென்ற முறை தேவானந்தகிரிக்குப் போன் செய்த போது அவருடைய உதவியாளன் அவர் எதோ பூஜையிலிருப்பதாகச் சொல்லி, காத்திருக்கச் சொன்னது நினைவுக்கு வந்ததால் பிரம்மானந்தா போன் செய்து பேச, சிறிது தயக்கம் காட்டினார். அவருக்கு இது போன்ற அலட்சியங்கள் தாங்க முடியாதவை. ஆனால் வேலையாக வேண்டியிருந்தால் யார் காலையும் பிடிக்கவும் தயாராக இருந்த பாண்டியன், அவர் பேசக் காத்திருக்காமல் தானே தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். முன்பே அவருடன் சில முறை பேசி இருந்ததால் நட்புடன் பேசும் அளவுக்கு அவருடன் பாண்டியன் பழக்கமாகி இருந்தார்.

 

நல்ல வேளையாக தேவானந்தகிரியே கைபேசியை எடுத்தார். அவரிடம் எதிரி குறித்து ஷ்ரவன் சொன்ன தகவல்களை எல்லாம் விவரித்துச் சொன்ன பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “நீங்க பூஜை செய்துட்டு போனதால அந்த எதிரியால் மறைவாகவோ, ரகசியமாகவோ உள்ளே வர முடியலைன்னு நினைக்கிறோம். வர முடிஞ்சிருந்தால் மாறுவேஷத்திலேயாவது எப்படியாவது அவன் உள்ளே வந்திருப்பான்.”

 

உண்மையில் எதிரி உள்ளே வர முடியாதபடி தேவானந்தகிரி எந்த ரட்சையும் யோகாலயத்தில் செய்யவில்லை. அப்படிச் செய்வதானால் சில தகடுகளை மந்திரித்து வெளி கேட் அருகேயும், மற்ற மூன்று திசைகளிலும் புதைத்து வைத்திருக்க வேண்டும். அதனால் எதிரி உள்ளே வராமலிருந்ததில் அவர் பங்கு எதுவுமில்லை. ஆனால் அவர் செய்யாத வேலைக்கும் கிடைக்கும் பெருமையை தேவானந்தகிரியால் மறுத்து உண்மையைச் சொல்லவில்லை.

 

பாண்டியன் கேட்டார். “எதிரியைப் பற்றிக் கூடுதல் விவரங்களை ஷ்ரவன் மூலமாகவே நாங்கள் தெரிஞ்சுக்க முயற்சி செய்யலாம்னு இருக்கோம். அதற்கு நீங்க ஏதாவது ஆலோசனை சொல்ல முடியுமா?”

 

தேவானந்தகிரி ஆலோசனை சொன்னார்.


(தொடரும்)

என்.கணேசன்




Sunday, October 19, 2025

யோகி 125

 

ல்பனானந்தாபார்த்திருக்கிறேன்என்று சொன்னது ஷ்ரவனுக்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. அவன் செடிகளைப் பார்த்தபடியே கேட்டான். “ஆவி சொன்னது போல அந்தப் பெண் துறவியும் பார்த்திருப்பதும் உண்மையா?”

 

ஆமாம். ஆனால் நான் இதற்கு மேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை ஷ்ரவன். நீங்கள் எந்த உத்தேசத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் மிக ஆபத்தான வேலையில் இறங்கியிருக்கிறீர்கள் என்று உங்கள் மீதுள்ள அக்கறையால் எச்சரிக்கிறேன். கவனமாக இருங்கள்.” என்று கல்பனானந்தா அந்தச் செடிகளைப் பிடித்துக் காட்டியபடியே அவனிடம் சொன்னாள்.

 

ஷ்ரவனானந்தா என்றழைக்காமல் ஷ்ரவன் என்று அவள் அழைத்தது அவனை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் கேட்டான். “உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி சுவாமினி. அந்த நிஜ யோகியை எங்கே எப்படி சந்தித்தீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள் போதும். அதற்கு மேல் நான் உங்களை எந்தக் கேள்வியும் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

எதற்காகக் கேட்கிறீர்கள்?”

 

அந்த நிஜ யோகியைச் சந்தித்து பயன்பெற வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருக்கிறது சுவாமினி. அதனால் தான் கேட்கிறேன்.”

 

அந்த நிஜ யோகியைச் சந்திப்பவர்கள் எல்லாம், அந்த சந்திப்பால் பயன் பெற்றுவிடுவதில்லை ஷ்ரவன்.”

 

நீங்கள் உங்கள் யோகிஜியின் அனுபவத்தை வைத்துச் சொல்கிறீர்களா சுவாமினி?”

 

கல்பனானந்தா அதிர்ந்தாள். பிரம்மானந்தா நிஜ யோகியைச் சந்தித்தது யோகாலயம் ஆரம்பிப்பதற்கும் முன்னால். அந்தப் பழைய நிகழ்வு கூட  இவனுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அவனை சந்தேகத்துடன் அவள் பார்த்தாள். இவன் நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறான் என்பது புரிந்தது.  ஆனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

 

அவன் சொன்னான். “எதையும் எந்த நோக்கத்தோடு அணுகுகிறோம் என்பதை வைத்து தான், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பது நிர்ணயமாகிறது சுவாமினி.”  

 

உண்மை என்று தலையசைத்த அவள் வறண்ட குரலில் சொன்னாள். “நாங்கள் அவரை எங்கே சந்தித்தோம் என்பது தெரிந்து கொள்வது உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை ஷ்ரவன். நாடோடி வாழ்க்கை வாழும் அவர் எங்கேயும் நீண்ட காலம் இருப்பவர் அல்ல. இனி தயவு செய்து எந்தக் கேள்வியும் என்னைக் கேட்காதீர்கள். அது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட ஆபத்தானது. ஏனென்றால் நாம் இருவரும் சேர்ந்து பேசுவது கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது என்பதை நீங்களே  கவனித்திருப்பீர்கள்.”

 

அவள் போய் விட்டாள். ’நாங்கள் அவரை எங்கே சந்தித்தோம்என்று பன்மையில் கல்பனானந்தா சொன்னதால், அந்த நிஜ யோகியை சைத்ராவும், அவளும் சேர்ந்தே சந்தித்திருப்பது ஷ்ரவனுக்கு உறுதியாகியது. சந்தித்த தகவல்களை  கல்பனானந்தா தெரிவித்தால் அவனுடைய வேலை சற்று எளிதாகலாம். ஆனால் அவள் இதுவரை சொன்னதையே அதிகபட்சமாக நினைக்கிறாள். அதற்கு மேல் சொல்வது ஆபத்து என்றும் நம்புகிறாள். எனவே அவளிடம் இனி எதுவும் அவன் கேட்பதும், அவளை ஆபத்திற்கு உள்ளாக்குவதும் சரியல்ல. இனி அவனுக்குத் தேவையானதை, அவனே கண்டுபிடிக்க வேண்டும்!

 

அன்று மாலையே சித்தானந்தாவை டாக்டர் அறைக்கு அனுப்பி விட்டார். காய்ச்சல் குணமாகி விட்டதால் ஓய்வெடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லி விட்டார். சித்தானந்தா அறைக்கு வந்து விட்டதால் ஷ்ரவனும், முக்தானந்தாவும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடியவில்லை.

 

மாலை சத்சங்கம் செல்வதற்குப் பதிலாக யோகிஜியைச் சந்திக்கப் போவதாக ஷ்ரவன் சொன்ன போது சித்தானந்தா லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது என்று அவன் சொன்னதைப் போல அவனைப் பார்த்தார்.  முக்தானந்தா கவலையுடன் அவனைப் பார்த்தார்.

 

சத்சங்கத்திற்காக மணி அடித்த போது ஷ்ரவன் மந்திர ஜபம் செய்து பிரார்த்தித்து விட்டுக் கிளம்பினான். அவன் சென்ற போது பிரம்மானந்தாவுடன் பாண்டியனும் இருந்தார்.  ஷ்ரவன் அவரைப் பார்த்ததும் பெரும் பரவசம் அடைந்தவன் போல் காட்டிக் கொண்டு, பயபக்தியுடன் சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கினான். அவர் கையுயர்த்தி ஆசிர்வாதம் செய்தார்.

 

ஷ்ரவன் எழுந்து நாக்கு தழுதழுக்கச் சொன்னான். “உங்களை நேரில் சந்திக்க முடிந்ததன் மூலம், நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன் யோகிஜி. இனி இறந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல.”

 

பிரம்மானந்தா புன்னகைத்தபடி அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரும்படி சைகை செய்தார். ஷ்ரவன் பணிவுடன் கைகூப்பி பாண்டியனையும் வணங்கி விட்டு, கூப்பிய கைகளைப் பிரிக்காமல் அந்த இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான்.

 

ஷ்ரவனானந்தா, உனக்கு யோகாலயத்தில் தெரிந்த விசேஷக் காட்சிகளை  பாண்டியன் என்னிடம் சொன்னார்.” என்று உடனடியாக பிரம்மானந்தா விஷயத்துக்கு வந்தார். 

 

ஷ்ரவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான். “இறைவனுடைய தரிசனமும், உங்களுடைய தரிசனமும் கிடைக்க தவமிருக்கும் எனக்கு இப்படி ஆவிகள், ஏவல் சக்திகள் எல்லாம் காட்சி தருவது வேதனையாக இருக்கிறது யோகிஜி. இதனால் நான் சபிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.” என்று வருத்தம் காட்டிச் சொன்னான்.

 

பிரம்மானந்தா சொன்னார்.  ஒரு போலீஸ்காரன் திருடர்களே என் கண்ணில் தென்படுகிறார்கள் என்று வருத்தப்படுவது போல் இருக்கிறது உன் பேச்சு. அப்படித் தெரிவது போலீஸ்காரனின் பாக்கியம். அப்படித் தெரிந்தால் தான் அவர்களைப் பிடிக்க முடியும் ஷ்ரவனானந்தா. எந்த ஒரு விசேஷ சக்தியும் யாருக்கும், கடவுளால் காரணமில்லாமல் தரப்படுவதில்லை. உனக்கும் காரணத்தோடு தான் அந்த விசேஷ சக்தி தரப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள். அதனால் நீ அதற்கு வருத்தப்படாமல் சந்தோஷப்பட வேண்டும்.”

 

ஷ்ரவன் பயபக்தியுடன் சொன்னான். “யோகாலயத்திலேயே அப்படிப் பார்க்க நேரிட்டவுடன் அது விசேஷசக்தியா, இல்லை பிரமையா என்று எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது யோகிஜி. நீங்கள் இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகள் எப்படி உலாவ முடியும்?”

 

பிரம்மானந்தா கேட்டார். “நியாயமாகப் பார்த்தால் இறைவன் இருக்கும் இடத்தில் சைத்தானும், துஷ்டர்களும் இருக்க முடியாது. ஆனாலும் அப்படி இருப்பதை நாம் பார்க்கிறோமே ஷ்ரவனானந்தா. அது இறைவனின் சக்தியைக் குறைத்துக் காட்டுவதாகி விடாது. நல்லதும் கெட்டதும் கலந்தே பரவியிருக்கும்படி இறைவன் படைத்திருப்பதே அப்படி இருப்பதற்குக் காரணம். அதனால் நான் இருக்கும் இடத்தில் என் எதிரிகளும், துஷ்டர்களும் கூட இருக்கலாம். அந்த இயற்கை விதிக்கு முரணாக என் விஷயத்தில் அமைய வேண்டும் என்று நான் எப்போதுமே சுந்தரமகாலிங்கத்தை வேண்டிக் கொண்டு அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதில்லை.”

 

இது போன்ற விளக்கங்களை அவர் தந்தால், அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் அவர் பிரமிப்பை எதிர்பார்ப்பது வழக்கம். அதனால் ஷ்ரவன் அதைத் தன் முகத்தில் உச்சத்தில் காட்டினான். பின் கண்களைப் பரவசத்துடன் மூடிக் கொண்டு அவன் தலைவணங்கினான்.   பிரம்மானந்தா திருப்தியடைந்தார். பாண்டியன் உணர்ச்சி எதுவும் காட்டாமல் அமர்ந்திருந்தார். அவருக்கு அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதி வலையைப் பற்றி அவன் எதாவது புதிய தகவலைத் தெரிவித்தால் தேவலை என்றிருந்தது.

 

பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரம்மானந்தாவுக்குத் தன் புகழை மற்றவர் வாயால் கேட்டுக் கொண்டிருக்க மிகவும் பிடிக்கும். ஆனால் பாண்டியன் மனநிலையைப் படிக்க முடிந்ததால் அவர் தனக்குப் பிடித்ததைத் தியாகம் செய்து ஷ்ரவனிடம் சொன்னார். “அதனால் நீ உனக்குத் தெரியும் காட்சிகளை தவிர்க்க நினைக்க வேண்டாம். அந்த சக்தியை கௌரவப்படுத்தி நீ வரவேற்க ஆரம்பிக்க வேண்டும். யோகாலயத்தில் உனக்குத் தெரிவதை எந்த விதமானத் தயக்கமும் இல்லாமல் நீ எங்களிடம் சொல்ல வேண்டும். பாண்டியனிடம் சொல்வது நீ என்னிடம் நேரடியாகச் சொல்வது போலத் தான்...”

 

கடவுளே சொல்லும் கட்டளை போல் அவர் சொல்வதைப் பயபக்தி காட்டி, கேட்டுக் கொண்டு ஷ்ரவன் தலையசைத்தான்.

 

இனி எதாவது சொல்ல வேண்டுமா என்பது போல் பிரம்மானந்தா பாண்டியனைப் பார்த்தார். அதற்கு மேல் அவரைப் பேச விட்டால் இடையில் அவருடைய சுயபுராணம் ஆரம்பித்து விடும் ஆபத்து இருப்பதை உணர்ந்த பாண்டியன், தானே ஷ்ரவனிடம் நேரடியாகக் கேட்டார். “என்னுடைய வாசலில் ஓநாயைப் பார்த்ததற்குப் பிறகு உங்களுக்கு வேறு ஏதாவது காட்சி தெரிந்திருக்கிறதா?”

 

ஷ்ரவன் தயக்கத்துடன் அவரைப் பார்த்தான். பாண்டியன் சொன்னார். ”எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.”


 (தொடரும்)

என்.கணேசன்

(தீபாவளி நல்வாழ்த்துக்கள்)




Thursday, October 16, 2025

சாணக்கியன் 183

 

ழ்ந்த உறக்கத்திலிருந்த மலைகேதுவை சுசித்தார்த்தக் உலுக்கி எழுப்பினான். வயிற்றுப்போக்கின் காரணமாக உடல் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் உணர்ந்திருந்த மலைகேது இரவு சற்று தாமதமாகத் தான் உறங்க ஆரம்பித்திருந்தான். அதனால் நடுநிசியில் எழுப்பப்பட்டது அவனுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. கண்களைத் திறந்தவன் சுசித்தார்த்தக்கைப் பார்த்து முறைத்தான். “என்ன விஷயம்?”

 

உங்கள் தந்தை கொல்லப்பட்டு விட்டார் இளவரசேஎன்று சுசித்தார்த்தக் வருத்தத்துடன் தெரிவித்தான்.

 

மலைகேது முழுமையாக விழித்துக் கொண்டான். “என்ன உளறுகிறாய்?”

 

சுசித்தார்த்தக் குரல் தழுதழுக்கச் சொன்னான். “உளறவில்லை இளவரசே. உண்மையைத் தான் சொல்கிறேன். பராக்கிரமசாலியும், பேரரறிவு படைத்தவருமான தங்கள் தந்தை தற்போது உயிரோடு இல்லை....”

 

மலைகேது தலையில் இடிவிழுந்தது போல் உணர்ந்தான். பலவிதமான உணர்ச்சிகள் அலைமோத சிலை போல் செயலற்று அமர்ந்திருந்த அவனிடம் சுசித்தார்த்தக் பதற்றமும், பரபரப்பும் காட்டிச் சொன்னான். “நடன நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு என்னையும், காவலர்களையும் அரசர் போகச் சொல்லி விட்டார். ”நீங்கள் செல்லுங்கள். நான் பின்பு வருகிறேன்என்று சொல்லி விட்டதால் நாங்களும் வந்து விட்டோம். அவர் மீது நான் வைத்திருக்கும் அன்பை அறிந்த என் நண்பன் ஒருவன் அரண்மனையில் காவலனாக இருக்கிறான். அவன் சற்று முன் என்னிடம் வந்துஹிமவாதகூட அரசர் இறந்து விட்டார். நடன அரங்கில் ஒரு மூலையில் இறந்து விழுந்திருந்த அவர் உடலில் விஷம் பரவியிருப்பது போல் தெரிகிறது. நடன அரங்கின் விளக்குகளை அணைக்கச் சென்றிருந்த பணியாள் அதைப் பார்த்துப் பதறி சாணக்கியரிடம் செய்தியைத் தெரிவிக்க ஓடிச் சென்றிருக்கிறான்அரண்மனைக் காவலனாக இருக்கும் என் நண்பனும் அதைக் கேள்விப்பட்டு ஓடி வந்து என்னிடம் தெரிவித்ததால் தான் இதை நானும் அறிய நேர்ந்தது....”

 

குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்திருந்த மலைகேது முடிவில் துக்கமும் கோபமும் கொண்டான். “என் தந்தையைக் கொல்லும் துணிச்சல் யாருக்கு வந்தது என்று எனக்கு உடனே தெரிய வேண்டும்... இது தான் நீங்கள் நிர்வாகம் புரியும் இலட்சணமா என்று ஆச்சாரியரையும் கேட்க வேண்டும்.... உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்ததற்கு இது தான் நீங்கள் எங்களுக்குச் செய்யும் கைம்மாறா என்று நான் கேட்கப் போகிறேன்... என் தந்தையைக் கொன்றவர்களை நான் தண்டிக்காமல் விட மாட்டேன். வா உடனே நடன அரங்கிற்கு நாமும் போவோம்...” என்று சொன்னபடி எழுந்து நின்ற மலைகேதுவை சுசித்தார்த்தக் இரக்கத்துடன் பார்த்தானேயொழிய இம்மியும் நகரவில்லை.

 

இரண்டடி எடுத்து வைத்த மலைகேது சுசித்தார்த்தக் நகராமல் நிற்பதைப் பார்த்து விட்டுக் கேட்டான். “ஏன் மரம் போல் நிற்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?”

 

சுசித்தார்த்தக் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சொன்னான். “உங்கள் உயிருக்கும் ஆபத்திருக்கிறது என்று நான் பயப்படுகிறேன் இளவரசே

 

மலைகேது அதிர்ந்தான். “என்ன உளறுகிறாய்?”.

 

ஒருவேளை உங்கள் தந்தையின் மரணம் ஆச்சாரியரின் நடவடிக்கையாகவே இருந்தால்..?”

 

மலைகேதுவின் முகம் பீதியில் வெளுத்தது. அவன்விளக்கமாகச் சொல்என்று சொல்ல நினைத்தான். ஆனால் நாக்கு நகர மறுத்தது. சுசித்தார்த்தக் அவனுக்கு விளக்கினான். “ஒருவேளை சந்திரகுப்தனைக் கொல்ல நாம் போட்ட திட்டத்தை அவர் அறிந்து விட்டிருந்தால்? அறிந்து கோபம் கொண்டு அவர் எடுத்த நடவடிக்கையாகவே இது இருந்திருந்தால்? நீங்கள் நியாயம் கேட்கப் போனால்எப்போது எங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டினீர்களோ அப்போதே நீங்கள் குற்றவாளிகளாகவும், எங்களுக்கு எதிரியாகியும் விட்டீர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்களேஎன்கிற வகையில் பேசினால்? உங்களையும் அந்த வகையிலேயே சேர்த்தால் உங்கள் உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?”

 

மலைகேதுவுக்குத் தலை சுற்றியது. எப்போதோ சாணக்கியர் சொல்லி இருந்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. “கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டேன். ஆனால் அதையே என் பலவீனமாக நினைத்து யாராவது எதிராகச் சதியில் ஈடுபட்டால் அதே வழியில் அவர்களைக் கையாளத் தயங்க மாட்டேன்” என்று அவர் ஆணித்தரமாகப் பேசியிருந்தார். இப்போது அவன் தந்தை சதியில் ஈடுபட்டதால் அதே வழியில் அவனைக் கையாண்டு விட்டாரோ? அவன் மெல்ல மஞ்சத்தில் உட்கார்ந்தபடி  பலவீனமாகக் கேட்டான். “இனி என்ன செய்வது?”

 

சுசித்தார்த்தக் சற்று யோசிப்பது போல் பாவனை காட்டி விட்டுச் சொன்னான். “எதற்கும் பிரதம அமைச்சர் ராக்ஷசரிடம் ஆலோசனை கேட்டு விட்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம் இளவரசே. எப்படியும் விடிவதற்கு முன் சாணக்கியர் எதுவும் செய்வதற்கில்லை.... அதற்குள் ஒரு முடிவெடுத்துச் செயல்படுவோம். நீங்கள் பொறுத்திருங்கள். நான் இத்தகவலை அவருக்குத் தெரிவித்து அவரது ஆலோசனையைப் பெற்று வருகிறேன்....”

 

சொல்லி விட்டு சுசித்தார்த்தக் வேகமாக அங்கிருந்து சென்றான். மலைகேதுக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. இது அவன் தாங்க முடிந்த கனமல்ல. சற்று யோசித்து விட்டு அவன் தந்தையின் காவலர்களை அழைத்துப் பேசினான். சுசித்தார்த்தக் சொன்னது போல் தான் நடந்திருக்கிறதா என்பதை அவன் அறிய விரும்பினான். காவலர்களும் சுசித்தார்த்தக் சொன்னதையே சொன்னார்கள். ’அரசர் தான் எங்களைப் போகச் சொன்னார், அதனால் தான் கிளம்பி வந்தோம்என்றும் அங்கிருந்து கிளம்புகையில் அனைவரும் கிளம்பிப் போயிருந்தார்கள். நடன அரங்கில் அரசரைத் தவிர வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லைஎன்றும் சொன்னார்கள்.   

 

தந்தை ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அவர்களை அங்கிருந்து அனுப்பி இருக்க வேண்டும் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் திட்டம் பிசுபிசுத்து விட்டதோ? சாணக்கியர் அதை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாரோ? சந்திரகுப்தன் உட்பட அனைவரும் சென்ற பின் தன் காவலர்களையும், சுசித்தார்த்தக்கையும் அனுப்பி விட்டு நடன அரங்கில் ஏன் தங்கினார் என்பது தெரிந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்கவாவது செய்யலாம். இப்போதோ குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது.

 

காலம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல் அவனுக்குத் தோன்றியது. என்னேரமும் எதிரிகள் வந்து அவனைத் தாக்கலாம் என்ற பயம் அவனுக்குள் எழ ஆரம்பித்தது. பயம் பலவிதமான கற்பனைகளால் கூடிக் கொண்டே போனது.

 

சிறிது நேரத்தில் சுசித்தார்த்தக் மூச்சிறைக்க ஓடி வந்தான். அவன் முகம் பேயறைந்ததைப் போல் இருந்தது. அவன் வந்து எதுவும் சொல்லாமல் மூச்சு வாங்கியபடியே நிற்க சுசித்தார்த்தக் பொறுமையிழந்து கேட்டான். “ராக்ஷசர் என்ன சொன்னார்?”

 

சுசித்தார்த்தக் மூச்சு வாங்கியபடியே சொன்னான். “அவரை.... அவரைப் பார்க்க முடியவில்லை இளவரசே

 

ஏன்?”    

 

அவரும் சற்று முன் தான் அவர் ஒளிந்திருந்த மறைவிடத்திலிருந்து தப்பித்துச் சென்றாராம்

 

ஏன்?”

 

அது தெரியவில்லை இளவரசே. அவர் இருக்குமிடம் பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார் என்று தெரிகிறது. அதனால் அவரும் ஆபத்தை உணர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.”

 

மலைகேது அதிர்ந்தான். அவனுக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவனுக்குப் புரியாமல் என்னென்னவோ இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு மறுபடியும் மண்டை வெடிப்பது போலிருந்தது. அவன் பரிதாபமாகக் கேட்டான். “இனி என்ன செய்வது?”

 

சுசித்தார்த்தக் சொன்னான். “என்ன செய்வதென்று நிதானமாக யோசிப்போம் இளவரசே, முதலில் உங்கள் உயிரை நீங்கள் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். உயிர் இருந்தால் தான் நீங்கள் எதாவது செய்ய முடியும். பிரதம அமைச்சரே உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பிச் செல்கிறார் என்கிற போது நீங்களும் அப்படியே செய்வது உத்தமம் என்று எனக்குத் தோன்றுகிறது இளவரசே

 

மலைகேது குழப்பத்துடன் யோசித்து விட்டுக் கேட்டான். “எப்படி இங்கிருந்து நான் தப்பிப்பது?”

 

அந்தப் பொறுப்பை என்னிடம் விடுங்கள் இளவரசே. பாடலிபுத்திரத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பாகத் தப்பிக்க வைப்பது என் பொறுப்பு. முதலில் நீங்கள் மாறுவேடமிட வேண்டும். உண்மை உருவத்தோடு வெளிப்பட்டால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். நீங்கள் வணிகர் வேடமிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் முழு நம்பிக்கைக்குரிய காவலர்களை மட்டும் நம்முடன் அழைத்துச் செல்வோம். அவர்களும் நானும் பணியாட்கள் வேடத்தில் உங்களுடன் வருகிறோம். பாடலித்திர நகர வாயில் அதிகாலையில் திறந்தவுடன் முதல் ஆட்களாக இங்கிருந்து வெளியேறித் தப்பிப்போம்

 

மலைகேதுவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யோசிக்கையில் உயிர் முதல் முக்கியம் என்று அவனுக்கும் தோன்றியது. ராக்ஷசரே இனி இங்கிருப்பது ஆபத்து என்று தப்பியோடுகையில் அவனும் அதையே செய்வது புத்திசாலித்தனம் என்று தோன்றியது. அவன் சம்மதித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்