என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 7, 2025

யோகி 110

 

ஷ்ரவன் சொன்னான். “பாண்டியன் தாயத்து கட்டியதை வைத்து மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டதும், இனியும் எதாவது தொடர்ந்து நடக்கும் என்று எதிர்பார்த்ததும் சரி. ஆனால் நான் இங்கே வந்திருப்பது அதை நிரூபித்திருக்கிறது என்று சொல்கிறீர்களே, அது எப்படி?”

 

முக்தானந்தா சொன்னார். “நான் துறவியாகி இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் யோகியாகி விடவில்லை என்றாலும், அதிகம் சாதித்தது இல்லை என்றாலும், மனிதர்களின் நுண்ணலைகளைப் படிக்கக் கற்றுக் கொள்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் ஷ்ரவன். உன்னிடம் துறவின் அலைகள் இல்லவே இல்லை. அன்பு, காதல் இரண்டின் அலைகள் தான் உன்னிடமிருந்து அதிகம் வெளிப்படுகின்றன. கூடவே நன்மை, மற்றும் ஞானத்தின் அலைகளும் வெளிப்படுகின்றன என்றாலும் அது துறவுக்கணக்கில் சேர்க்க முடிவதாக இல்லை. அதனால் நீ வேறு ஒரு உத்தேசத்தோடு தான் இங்கு வந்திருக்கிறாய் என்பது நிச்சயம். பாண்டியன் தாயத்து கட்டிக் கொண்ட சில நாட்களிலேயே நீ இங்கே வந்து சேர்ந்திருப்பது, அந்தத் தாயத்துக்குச் சம்பந்தப்பட்டதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

ஷ்ரவன் திகைத்தான்.  முக்தானந்தா தன் நீண்ட கால, உண்மையான துறவு வாழ்க்கையின் மூலமாகப் பெற்றிருக்கும் இந்தச் சக்தி அவனைப் பேச்சிழக்க வைத்தது. சற்று முன் அவன் தியானம் செய்கையில் ஏதோ ஒரு சக்தியுடன் தொடர்பில் இருப்பதாகச் சொன்னார். இப்போது இதைச் சொல்கிறார். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக இங்கே வேஷம் கலைந்து விட்டான்....

 

ஷ்ரவன் என்ன சொல்வது என்று யோசித்தான். அவன் இப்போதும் அவர் சொல்வது நிஜமல்ல, அவன் உண்மையான துறவி தான் என்று மறுத்துச் சொல்ல முடியும்.  ஆனால் அதன் பின் அவன் அவரிடம் துப்பறியும் கேள்விகள் கேட்க முடியாது. புதியதாய் தகவல்களைப் பெற முடியாது. துறவிக்கு அதெல்லாம் எதற்கு என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை.

 

அவன் பரசுராமன் சொல்லிக் கொடுத்த மந்திர உபதேசத்தை முறையாக ஜபித்துக் கொண்டு வந்ததால் அது ஆரம்பத்திலிருந்தே அவனுக்குச் சரியாக வழி காட்டியிருக்கிறது. சரியான சூழல்களை அது ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. யோகாலயத்தில் அவன் மனக்காட்சியில் கண்ட ஓநாய் ஆரம்பத்தில் அவன் மீது பாய்ந்து அவனை நினைவிழக்கச் செய்ததால் தான் பாண்டியனின் நேரடி கவனத்திற்கு அவன் வந்திருக்கிறான். அவன் கண்களுக்கு என்ன காட்சி தெரிகிறது, என்ன சொல்கிறான் என்று தெரிந்து கொள்வதில் பாண்டியனும், பிரம்மானந்தாவும் ஆர்வம் காட்டும் நிலைமை இப்போது உருவாகி இருக்கிறது. அவர்கள் அவனை முழுவதும் நம்பி விடவில்லை என்றாலும், இப்போது அவர்கள் வழக்கமாக எழும் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்போது அவர்களை நெருங்க அவன் அவர்களுடைய ஆர்வத்தையே பயன்படுத்திக் கொள்ள முடிந்த சூழல் உருவாகி இருக்கிறது. அதை அவன் முழுவதுமாக உபயோகப்படுத்திக் கொள்ள, முக்தானந்தாவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் கூடுதல் தகவல்கள் கண்டிப்பாக உதவும்.  அதனால் உண்மையை ஒத்துக் கொள்வதே இந்தச் சூழ்நிலையில் ஷ்ரவனுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றியது.

 

அவர் கண்டிப்பாக எதிரிகள் பக்கம் போகக்கூடியவர் அல்ல. அதே போல் அவனைக் காட்டிக் கொடுக்கும் ரகமும் அல்ல. அந்த விஷயத்தில் அவரை முழுவதுமாக நம்பலாம் என்றே தோன்றியது. அதற்காகத் தான் அவன் ஜபித்த மந்திர சக்தி அவனை இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவன் வேகமாக வேலை ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டவுடன், ஓநாய் அவரைப் பார்த்ததும், அவரைப் பயன்படுத்திக் கொள் என்ற தகவல் என்றே அவன் உணர்கிறான். அந்த நாளிலேயே சித்தானந்தாவுக்குக் காய்ச்சல் வந்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, அவன் தனியாக முக்தானந்தாவிடம் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறது. எல்லாமே அந்த மகாசக்தி அவனுக்கு உதவியிருக்கும் விதம் என்று புரிந்த போது, அந்த மகாசக்தி காண்பித்துக் கொடுத்த முக்தானந்தாவிடம் உண்மையைச் சொல்வதே உத்தமம் என்ற முடிவுக்கு ஷ்ரவன் வந்தான்.

 

ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். ”சுவாமிஜி நான் உண்மையை மறைக்காமல் உங்களிடம் சொல்லி விடுகிறேன். ஆனால் நான் சொல்வதை நீங்கள் ரகசியமாக உங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் யாருக்கும் சொல்லி விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.”

 

அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த முக்தானந்தா சரியென்று தலையசைத்தார். இதுவே மற்றவர்களாக இருந்தால் அதை வார்த்தைகளால் சொல்ல வைத்துக் கேட்டால் ஒழிய திருப்தி அடைந்திருக்காத ஷ்ரவன் அவருடைய தலையசைப்பிலேயே திருப்தி அடைந்து கேட்டான். “இங்கே நாம் பேசிக் கொள்வதை யாரும் ஓட்டுக் கேட்க வழியில்லை அல்லவா?”

 

அவன் ஏற்கெனவே கூர்ந்து பார்த்து கவனித்துத் தெளிந்த விஷயமானாலும் அவரிடமும் கேட்டது அவனது கூடுதல் எச்சரிக்கையாக இருந்தது. 

 

முக்தானந்தாவும் தாழ்ந்த குரலில் சொன்னார். “அப்படி ஒட்டுக் கேட்கும் சூழ்நிலை இருந்திருந்தால் நான் உன்னிடம் மனம் விட்டு இத்தனை விஷயங்கள் பேசியிருக்க மாட்டேன் ஷ்ரவன். இங்கே சில அறைகள் மட்டும் அப்படி ஒட்டுக் கேட்கும் படியான உபகரணங்களுடன் இருக்கின்றன. சந்தேகத்திற்கு இடமானவர்களை அவர்கள் அந்த அறைகளில் தான் தங்க வைப்பார்கள்.  உன்னை அந்த அறைகளில் ஒன்றில் தங்க வைக்காமல், இங்கே தங்க வைத்திருப்பதே உன் மேல் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.”

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட வெளியே இருப்பவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இருவரும் தாழ்ந்த குரலிலேயே பேசிக் கொண்டார்கள். ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “அவர்கள் நான் சென்ற முறை தியான வகுப்புக்கு வந்த போது அந்த மாதிரி அறையில் என்னைத் தங்க வைத்து, ஒரு வாரம் கவனித்து சந்தேகம் தெளிந்திருக்கிறார்கள் சுவாமிஜி. நல்ல வேளையாக அவர்கள் நவீன உபகரணங்களைத் தான் நம்புகிறார்கள். உங்களைப் போல் அவர்களிடம் நுண்ணுணர்வு இல்லை...”

 

முக்தானந்தாவும் புன்னகைத்தார். ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “சுவாமிஜி. உங்களுக்கு யோகாலயம் பற்றிய செய்திகள் உடனுக்குடன் கிடைப்பதுண்டா?”

 

இல்லை ஷ்ரவன். அவர்கள் விருப்பப்படும் செய்திகளை மட்டும் சத்சங்கத்துக்கு முன்னால் காட்டுவார்கள். பிரம்மானந்தாவுக்குக் கிடைக்கும் விருதுகள், கௌரவம், யாராவது அவரை உயர்த்திப் பேசியது, அவர் எங்கேயாவது போய் பேசியது எல்லாம் தான் எங்களுக்குக் காண்பிப்பார்கள். மற்றது எதுவுமே எங்களுக்குத் தெரிய வராது. வெளியே இருந்து வரும் வேலையாட்களிடம் இருந்தும் நாங்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாது. அதைக் கண்காணிக்க என்றே ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. அதனால் தேவைக்கு அதிகமாய் நாங்கள் அந்த வேலையாட்களிடமும் பேச முடியாது.”

 

ஷ்ரவன் கேட்டான். “உங்களுக்கு இங்கே சில மாதங்கள் முன்பு வரை இருந்த சைத்ரானந்தா என்ற பெண் துறவியைத் தெரியுமா?”

 

இல்லை ஷ்ரவன்

 

ஷ்ரவன் அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னான். “அந்தப் பெண் துறவி 206 எண் அறையில் வசித்து வந்தவள். அதாவது எதிரில் உள்ள கட்டிடத்தில் கீழ் வரிசையில் ஆறாவது அறையில் வசித்து வந்தவள். நம் அறைக்கு எதிரே உள்ள அறையிலிருந்து மூன்றாம் அறையில் வசித்தவள்.”

 

சொன்னதோடு அவர் ஜன்னலிலிருந்து அந்த அறையை ஷ்ரவன் அவருக்குக் காண்பித்தான். “சில மாதங்களுக்கு முன்பு அந்த அறையில் அசாதாரணமாய் எதாவது நடந்ததை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் பெரும்பாலும் இந்த ஜன்னல் பக்கம் தான் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதாவது பார்த்திருக்கலாம். அல்லது எதாவது சத்தம் உங்களுக்குக் கேட்டு இருக்கலாம். நன்றாக யோசித்துச் சொல்லுங்கள் சுவாமிஜி.”

 

முக்தானந்தாவின் கண்களில் ஒரு மின்னல் தெரிந்து மறைந்தது.

(தொடரும்)

 என்.கணேசன் 




என்.கணேசனின் நூல்களை வாங்கிப் படிக்க விருப்பமுள்ளவர்கள் 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 3, 2025

சாணக்கியன் 168

 

சாணக்கியரின் முதுகுக்குப் பின்னால் தான் மேல் மாடம் இருந்தாலும் சந்திரகுப்தனால் பார்வையைத் திருப்ப முடியாத அளவு கவர்ந்தது யாராக இருக்கும் என்பதை அவரால் உடனடியாக அனுமானிக்க முடிந்தது. அவர் திரும்பிப் பார்க்க முனையவில்லை.

 

சந்திரகுப்தன், துர்தரா இருவர் பார்வைகளும் பூட்டிக் கொண்டதால் இருவராலும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை. சாணக்கியர் பேச்சை நிறுத்தி விட்டதால் அதற்கு மேலும் பார்வையைத் திருப்பாமல் இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்து சந்திரகுப்தன் கஷ்டப்பட்டு பார்வையை விடுவித்துக் கொண்டு அவரைப் பார்த்தான். அவளும் சுயநினைவுக்கு வந்தவளாக வேகமாக மேலிருந்து ஓடிவிட்டாள்

 

மன்னிக்க வேண்டும் ஆச்சாரியரேஎன்று குற்றவுணர்வுடன் சந்திரகுப்தன் சொன்னான்.

 

மன்னிக்க ஏதுமில்லை சந்திரகுப்தாஎன்று சொன்ன சாணக்கியர் பேச்சைத் தொடர்ந்தார். அவராக அது பற்றி எதுவும் கேட்கவில்லை. அவனாக எதுவும் சொல்லவுமில்லை. அவரிடம் மனம் விட்டுப் பேச முடியாத ஒன்று அவன் வாழ்வில் நுழைந்து விட்டது அவனுக்கு வருத்தமாக இருந்தது.  பின் அவர் பேசியதில் பாதி தான் அவன் மனம் லயித்தது. அவள் திரும்பவும் வந்து மேல் மாடத்தில் நிற்க மாட்டாளா என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 

துர்தராவின் போக்கில் அவள் தாய் பெருத்த மாற்றத்தைக் கண்டாள். மகள் ஏதோ ஒரு யோசனையாக எப்போதுமிருந்தாள். சமயங்களில் சாப்பிட மறந்தாள். பல சமயங்களில் சுற்றி இருப்பவர்கள் பேசுவது எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. அவள் தாரிணியிடம் சொன்னாள். “என்ன ஆயிற்றென்றே தெரியவில்லையே தாரிணி. அவள் தன் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகிறாளா?”

 

தாரிணி புன்னகைத்தபடி சொன்னாள். “நீங்கள் பயப்படுவது போல இல்லை அக்கா. அவள் காதல்வசப்பட்டு விட்டாள் போல் தெரிகிறது

 

என்ன சொல்கிறாய்? யார் மீது? யாரையும் தான் சந்திக்கும் நிலைமையிலேயே நாமில்லையே?”

 

அவள் தோழியை விசாரித்ததில் அவள் சந்திரகுப்தனை மேல்மாடத்திலிருந்து பார்த்த பிறகே இப்படித்தான் மாறி விட்டாள் என்று சொன்னாள். அவனும் அழகனாம். துர்தரா எப்படியெல்லாம் கனவு கண்டாளோ அப்படியெல்லாம் அவன் இருக்கிறானாம். ஆரம்பத்தில் கோபத்துடன் தான் பார்க்கப் போனாளாம். போய்ப் பார்த்த பின் மனதைப் பறி கொடுத்து விட்டாளாம்.”

 

அமிதநிதா முகத்தில் கடுங்கோபம் தெரிந்தது. ”எதிரியைக் காதலிக்கிறாளா? நம்மைச் சிறைப்படுத்தியவனைக் காதலிக்கும் அளவுக்கு அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? இது தெரிந்தால் அவள் தந்தை அவளைக் கொன்றே விடுவார்.” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

 

மகனின் மரணத்தின் பின் விசால மனதையும், பக்குவத்தையும் அடைந்திருந்த தாரிணி சொன்னாள். “அக்கா, காதலே ஒரு பைத்தியம் தான். அது எல்லாக் கணக்கும் பார்த்து வருவதில்லை அக்கா. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது சந்திரகுப்தன் நம்மை வென்றிருக்கும் அரசன். அவன் இன்னும் திருமணம் ஆகாதவனும் கூட. அவனை இவள் மணந்து கொண்டால் பட்டத்தரசியாகி விடுவாள். ஜோதிடர்கள் சொன்னது பலித்து விடும். அதற்காகவே கிரகங்கள் இப்படி அவளை ஆட்டுவிக்கின்றன போலிருக்கிறது.”

 

அமிதநிதா கோபம் தணியாதவளாகவே சொன்னாள். “ஆனாலும் இதை எல்லாம் நீ கோபமில்லாமல் சரியான விஷயம் போலச் சொல்வதையே என்னால் தாங்க முடியவில்லை தாரிணி.”

 

தாரிணி கண்ணீர் திரையிட சொன்னாள். “நாம் தான் நம் பிள்ளைகளையும், நம் எதிர்காலத்தையும் தொலைத்து விட்டோம் அக்கா. நம் மகளாவது நல்லதொரு வாழ்க்கை வாழட்டுமே.”

 

அமிதநிதாவும் அந்த வார்த்தைகளைக் கேட்டு கண்கலங்கினாள். சிறிது நேர யோசனைக்குப் பின் அவள் வருத்தத்துடன் சொன்னாள். “ஆனாலும் இதெல்லாம் நடக்க முடிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவள் தந்தை இதை ஒத்துக் கொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை. அந்த அந்தணரோ இதற்குக் கண்டிப்பாகச் சம்மதிக்க மாட்டார்....”

 

ர்வதராஜனும், சுசித்தார்த்தக்கும் வேகமாக நெருக்கமாகி விட்டார்கள். ராக்ஷசரின் ஒற்றனாக சுசித்தார்த்தக் இருக்கக்கூடும் என்ற பலத்த சந்தேகம் பர்வதராஜனுக்கு இருந்த போதிலும் அவன் அந்த சந்தேகத்தை சாணக்கியருடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அவசியம் வந்தால் பின் தெரிவிக்கலாம் என்று பர்வதராஜன் நினைத்தான். அவரும் எல்லாவற்றையும் அவனிடம் சொல்லாமல் ரகசியம் காக்கிறவர் என்பதால் சுசித்தார்த்தக் ஒரு பிரச்சினை ஆகிற வரை அவனைப் பற்றி அவரிடம் சொல்வது அவசியமில்லை என்று எண்ணினான். ஒருவேளை அவர் தந்திரமாக அவனை ஏமாற்ற முயற்சித்தால் ராக்ஷசர் பக்கம் சாய சுசித்தார்த்தக் உதவக்கூடும் என்று பர்வதராஜன் எண்ணினான்.

 

சாணக்கியரும் சந்திரகுப்தனும் நடந்து கொள்வது அவனுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மகத வெற்றியில் அவன் பங்கு மிக மிகக் குறைவு, அவர்கள் இருவர் பங்கு மிக அதிகம் என்றாலும் வெற்றிக்குப் பின் சரிசமமாக எல்லாவற்றையும் பிரித்துக் கொள்வது என்ற ஒப்பந்தம் அவர்களுக்குள் இருந்ததால் சில்லறைக் காரணங்கள் காட்டி அதை அவர்கள் இருவரும் உடனடியாக அமல்படுத்தத் தயக்கம் காட்டுவது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எந்த நேரத்தில் அவர்களிருக்கும் மாளிகைக்குச் சென்றாலும் அவர்கள் அங்கு இருப்பதே இல்லை. எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் ஒப்பந்தப்படி சரியான முறையில் சரிசமமாக அனைத்தையும் பிரித்துத் தருவார்கள் என்று அவனுக்கு நம்ப முடியவில்லை.

 

சுசித்தார்த்தக் பெரும்பாலும் அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டு அவர் அருகிலேயே இருந்தான். அப்போது அவர் தனநந்தனைப் பற்றியும், ராக்ஷசர் பற்றியும், பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். சுசித்தார்த்தக் நிறைய விஷயங்கள் தெரிந்தவனாக இருந்தான். அவனிடம் பேச்சுக் கொடுத்ததில் அவனுக்கு அடுத்தவர்கள் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், மற்ற பணியாட்களுடன் விசாரித்து அவர்களது எஜமானர்களின் அந்தரங்க விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவன் இயல்பு என்றும் பர்வதராஜன் அறிந்து கொண்டான். பல நூறு ஆட்களை விசாரிப்பதை விட இவனைப் போன்ற ஒரு ஆளிடம் விசாரிப்பதில் பல மடங்கு தகவல்கள் பெற்று விடலாம் என்பது அவன் அனுமானமாக இருந்தது.

 

ஒரு நாள் பர்வதராஜனின் கால்களை அமுக்கிக் கொண்டே சுசித்தார்த்தக் கேட்டான். “அரசே. தாங்கள் ஹிமவாதகூடத்திற்குச் செல்லும் போது அடியேனையும் அழைத்துச் செல்வீர்களா?”

 

ஏன் அப்படிக் கேட்கிறாய் சுசித்தார்த்தக்?” என்று பர்வதராஜன் புன்னகையுடன் கேட்டான்.

 

அங்கு உங்களுடன் வந்தால் என் வாழ்க்கை வளமாகும் என்ற நைப்பாசை தான் அரசே

 

வாழ்க்கை வளமாவதற்காக நீ அங்கே வர வேண்டும் என்பதில்லை சுசித்தார்த்தக். நான் விரும்பினால் இங்கேயே உனக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.”

 

எனக்காக நீங்கள் சாணக்கியரிடம் பரிந்துரை செய்ய முடியும் என்கிறீர்களா அரசே

 

இப்போதெல்லாம் அனைவருமே ஆச்சாரியரை சாணக்கியர் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டதை பர்வதராஜன் கவனித்தான். முன்பெல்லாம் அவருடைய மாணவர்களும், நெருக்கமானவர்களும் மட்டுமே அப்படி அழைத்து வந்தார்கள். ஆனால் சாணக்கின் மகனான அவருடைய சபதம் நிறைவேறி விட்டதால் விஷ்ணுகுப்தர் என்ற பெயரைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டார்கள்...

 

பர்வதராஜன் பெருமையாகச் சொன்னான். “இந்த வெற்றியில் சரிபாதி என்னைச் சேரும் சுசித்தார்த்தக். சந்திரகுப்தனுக்கு இணையான அதிகாரம் எனக்கும் இங்குண்டு. அதனால் நான் உனக்காக யாரிடமும் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. நானே உனக்கு எதுவும் செய்ய முடியும்.”

 

சுசித்தார்த்தக் முதலில் அவனைக் குழப்பத்துடன் பார்த்தான். பின் குழப்பம் போய் இரக்கம் அவன் முகத்தில் தெரிந்தது. அவன் ஏன் ஐயோ பாவம் என்பது போல் பார்க்கிறான் என்பதை பர்வதராஜனால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் அனுமானிக்க முடிந்த போது அவமானத்தையும், ஆபத்தையும் ஒருசேர அவன் உணர்ந்தான். இவனே பரிதாபப்படும்படியாக நம் நிலைமை இங்கே இருக்கிறதே என்று மனம் புழுங்கினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 30, 2025

யோகி 109

 

முக்தானந்தா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ஷ்ரவனுக்கு  அவர் பழைய நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டு இருப்பது போல் தெரிந்தது. சித்தானந்தாவும் உடன் இல்லாததால் அவரைப் பேச வைத்து மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பிய ஷ்ரவன் மெல்லச் சொன்னான். “நீங்கள் பிரம்மானந்தா நிறைய மாறி விட்டதாய் சொன்னீர்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரி எத்தனையோ மாற்றங்கள் எல்லாத் துறையிலும் தேவைப்படுகின்றன. ஆன்மீகமும் அதற்கு விதிவிலக்கல்ல. மாற மாட்டேன் என்று சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுவார்கள் அல்லது புறக்கணிப்படுவார்கள் அல்லவா சுவாமிஜி. அதனால் தான் அவர் மாறியிருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே.”

 

முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். ”காலத்தின் ஓட்டத்தில்  எல்லாமே மாறிவிடுவதில்லை ஷ்ரவன். காலத்தால் மாறாத, மாறக்கூடாத விஷயங்களும் இருக்கின்றன. ஆதி மனிதன் வாயில் சாப்பிட்டான். இப்போதும் நாம் வாயிலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டுமா, மூக்கிலே சாப்பிட்டால் என்ன என்று யாரும் புரட்சி செய்ய நினைப்பதில்லை. இயற்கை மனிதனை எப்படிப் படைத்திருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி தான் மனிதன் இயங்க வேண்டும். ஆன்மீகவாதி முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். சத்தியம், நேர்மை, தர்மம், எல்லாம் அவனால் பின்பற்றப்பட வேண்டும்.  மற்றவை எல்லாமே அதற்கடுத்தது தான். ஆனால் இந்தப் பத்து வருடங்களில் பிரம்மானந்தா பேசிய எல்லாப் பேச்சுகளையும் கேட்டுப் பார். எத்தனை பேச்சில் நேர்மையை, சத்தியத்தை, தர்மம் தவறாமல் வாழ்வதை உயர்த்திப் பேசியிருக்கிறார் என்பதை நீ சல்லடை போட்டுத் தேடினாலும் அதிகம் கிடைக்காது...”

 

ஷ்ரவன் யோசித்துப் பார்த்தான். அவன் பிரம்மானந்தாவின் பேச்சுகளை சமீப காலத்தில் நிறையவே கேட்டிருக்கிறான். முக்தானந்தா சொன்னது போல் நல்லவனாக இருப்பதையும், சத்தியம், நேர்மை, தர்மம் பற்றியும் அவர் அதிக முக்கியத்துவம் தந்து பேசியது எதுவும் நினைவுக்கு வரவில்லை.  தன்னுடைய அருமை பெருமைகளுக்கு அடுத்தபடியாக அவர் அதிகம் பேசியது விஞ்ஞானம், வெற்றி, சக்திகள் பற்றி தான். ஞானிகள் பற்றிப் பேசும் போது கூட பலரும் கேள்விப்படாத அவருடைய கற்பனைப் புனைவுகளும், அதிரடிக் கருத்துக்களுமே அதிகம்.

 

ஆனால் முக்தானந்தாவைப் பேச வைக்க, பிரம்மானந்தா பக்கத்து நியாயங்களைச் சொல்வது தான் பலனளிக்கும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஷ்ரவன் சொன்னான். “சுவாமிஜி. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அவர் நிறைய நல்ல விஷயங்களையும், அறிவுபூர்வமாக அலசியிருக்கிறார் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நிறைய நல்ல காரியங்களையும் யோகாலயத்தின் மூலம் அவர் செய்திருக்கிறார். அவருடைய நல்லதை எல்லாம் ஒரேயடியாய் ஒதுக்கி விட்டு, குறைபாடுகளை மட்டும் விமர்சிப்பது சரியல்லவே.”

 

முக்தானந்தா சொன்னார். “நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா ஷ்ரவன்? ஒரு அரசியல்வாதி, மக்களுக்கு நல்லது செய்ய ஒதுக்கிய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கை, ஊழல் செய்து திருடிக் கொள்கிறான் என்று வைத்துக் கொள். அதைச் சுட்டிக் காட்டினால், மூன்றில் ஒரு பங்கை அவன் திருடிக் கொண்டாலும், இரண்டு பங்கை அந்த நல்ல காரியத்துக்குத் தானே அவன் செலவு செய்திருக்கிறான், அதைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே என்று ஒருவன் ஆதங்கப்படுவதற்கு இணையாக இருக்கிறது. ஏமாற்றாமல், ஒதுக்கப்பட்ட பணத்தை முழுவதுமாக மக்கள் நலனுக்குச் செலவு செய்வதற்காகத் தானே அவனை மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்? பிரம்மானந்தாவும் ஆன்மீகத்தை நிலைநாட்டத் தான் யோகாலயத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு ஆன்மீகத்தை விட அவர் தன்னைத் தான் அதிகம் நிலைநாட்டுகிறார்.”

 

அவர் வாதத்திறமையை ஷ்ரவன் ரசித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான். ”ஆனால் இன்று இந்தியாவுக்குள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் போய் அவர் நம் ஆன்மீகப் பெருமைகளைப் பேசிப் பலரைக் கவர்கிறார். அந்த வகையில் வெற்றிகரமான ஆன்மீகவாதி என்றே அவரைச் சொல்லத் தோன்றுகிறது சுவாமிஜி.”

 

முக்தானந்தா உடனே சொன்னார். “ஆன்மீகத்தில் வெற்றி ஆத்மஞானம் அடைவதே ஒழிய பிரபலமாக இருப்பதும், கூட்டம், புகழ் சேர்ப்பதுமல்ல ஷ்ரவன். ஓராயிரம் வார்த்தைகளைச் சொல்ல முடிவதை விட, உதாரணமாய் வாழ்ந்து காட்டுவதையே ஆன்மீகத்தில் வெற்றியாக நான் நினைக்கிறேன். அப்படி வாழ்ந்து காட்டுபவனையே நான் யோகியாகப் பார்க்கிறேன்...”

 

அருமையாகச் சொன்னீர்கள் சுவாமிஜி. வெற்றிகரமான ஆன்மீகவாதி என்று சொன்னதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் ஒரு உண்மையான யோகியைப் பார்த்திருக்கிறீர்களா?” ஷ்ரவன் ஆவலுடன் கேட்டான்.

 

முக்தானந்தா ஆதங்கத்துடன் சொன்னார். ”அந்தப் பாக்கியம் எனக்கு இதுவரையில் கிடைக்கவில்லை ஷ்ரவன். இங்கே எந்த யோகியும் இல்லை. நான் இங்கேயே சிறைப்பட்டு விட்டதால் வெளியுலகிற்குப் போகும் வாய்ப்பு இல்லை. அதனால் வெளியே பார்க்கும் பாக்கியமும் இல்லை.”

 

ஷ்ரவன் யோசித்தான். ‘ஒரு யோகியைக் கண்டால் உடனே கண்டுபிடித்து விடும் ஆன்மீகத் தெளிவில் தான் இவர் இருக்கிறார். அப்படி இருக்கையில் யோகாலயத்திலேயே இருக்கும் இவரும் எந்த யோகியையும் பார்க்கவில்லை என்றால் சைத்ராவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது? எங்கே கிடைத்தது?’

 

ஷ்ரவன் கேட்டான். “பிரம்மானந்தா எப்போதாவது ஒரு நிஜ யோகியைப் பார்த்ததாய், உங்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில்  சொல்லியிருக்கிறாரா?”

 

முக்தானந்தா சற்று சிரமப்பட்டு நினைவுபடுத்திக் கொண்டது போலிருந்தது. சிறிது யோசித்து விட்டு முக்தானந்தா சொன்னார். ”ஒரே ஒரு தடவை அது பற்றிப் பேசியதாய் ஞாபகம். யாரோ ஒருவர் இன்னொருவரை யோகி என்று அடையாளம் காட்டியதாகவும், பிரம்மானந்தாவும் மிகவும் ஆர்வத்துடன்  அவரைப் போய்ப் பார்த்ததாகவும் சொல்லியிருந்தார். ஆனால் சொல்லுமளவு அந்த நபர் இருக்கவில்லை என்று பிரம்மானந்தா சொன்னதாக நினைவு.”

 

ஷ்ரவன் புன்னகையுடன் சொன்னான். “சில நேரங்களில் நம் எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருப்பதால் யதார்த்தத்தை நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை. பிரம்மானந்தா நிறைய எதிர்பார்த்துப் போயிருக்கலாம். ஆனால் நிஜத்தில் பார்க்கையில் இவ்வளவு தானா என்று தோன்றியிருக்கலாம்நீங்கள் பிரம்மானந்தாவிடம் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததைப் போல…”

 

முக்தானந்தா விரக்தியுடன் புன்னகைத்தார். “இருக்கலாம். சொத்தையே எழுதிக் கொடுக்கும் அளவுக்கு நம்பிக்கை வைத்து கடைசியில் ஏமாறும் போது ஏற்றுக் கொள்வது சுலபமாய் இருப்பதில்லை. அதுவும் இங்கிருந்து கொண்டே நடப்பதை எல்லாம் பார்க்கும் போது மனம் சீக்கிரம் ஆறுவதில்லை....”

 

உண்மை தான். என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இரவு பகலாகப் பார்க்கிறீர்கள். நிறையப் பார்த்திருப்பீர்கள்.” என்று ஷ்ரவன் லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.

 

முக்தானந்தா அவனைப் புன்னகையுடன் கூர்ந்து பார்த்தார். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

 

ஷ்ரவன் விடுவதாக இல்லை. அவன் கேட்டான். “அப்படிப் பார்த்ததில் உங்களை அதிர்ச்சியடையச் செய்ததோ, ஆச்சரியப்படுத்தியதோ சமீபத்தில் எதாவது இருக்கிறதா சுவாமிஜி.”

 

முக்தானந்தா சொன்னார். “சில நாட்களுக்கு முன் யாரோ ஒரு மந்திரவாதி யோகாலயத்துக்கு வந்திருந்தார். அவர் இங்கே ஒரு ராத்திரியெல்லாம் பூஜை செய்த மந்திரங்கள் என் காதில் விழுந்தன. அவர் போன பிறகு பார்த்தால் பாண்டியனின் கையில் தாயத்து ஒன்று இருந்தது. எனக்கு என் கண்களையே நம்ப முடியவில்லை. எனக்குத் தெரிந்த பாண்டியன், கோடி ரூபாயே கொடுத்தாலும் தாயத்து எல்லாம் கையில் கட்டிக் கொள்ளும் ரகமல்ல. பணத்தையும் நீயே வைத்துக் கொள். உன் தாயத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொல்லக்கூடியவன் அவன். அதனால் நான் என்னையே கிள்ளிப் பார்த்துத் தான் கனவல்ல என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.”

 

ஷ்ரவன் தெரியாதது போல் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சுவாமிஜி?”

 

தெரியவில்லை. ஆனால் இங்கே எதோ ஒரு அற்புதம் நடந்திருக்கிறது. ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அப்போதே இனியும் ஏதாவது தொடர்ந்து நடக்கும் என்று என் மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போல நீ வந்து சேர்ந்திருக்கிறாய்


(தொடரும்)

என்.கணேசன்