சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, March 12, 2025

முந்தைய சிந்தனைகள் 121

சிந்திக்க சில விஷயங்கள் என் நூல்களிலிருந்து...











 

Monday, March 10, 2025

யோகி 93

 

லைபேசி இசைத்தது. ஸ்ரேயா அதை எடுத்து யாரென்று பார்த்தாள். இதுவரை தொடர்பில் இல்லாத புது எண். கடன் வேண்டுமா என்று ஏதாவது வங்கியிலிருந்து கூப்பிட்டுக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அல்லது, வேறெதாவது விளம்பர அழைப்பாய் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவள் அலைபேசியை எடுத்து சற்று கண்டிப்பான குரலில் பேசினாள். “ஹலோ

 

ஹலோ ஸ்ரேயா. நான் ஷ்ரவன் பேசறேன்.”

 

அவன் குரலைக் கேட்டதும் அவளுடைய மனத்தில் பரவிய புத்துணர்ச்சியை அவள் கடிந்து கொண்டாள். ‘எத்தனை பட்டாலும் இந்த மனம் பாடம் கற்றுக் கொள்வதே இல்லை.’

 

சொல்லுங்கஎன்று வறண்ட குரலில் ஸ்ரேயா சொன்னாள்.

 

உன் கிட்ட நேர்ல கொஞ்சம் பேசணும்.”

 

இன்னைக்கு நான் ரொம்ப பிசியாய் இருக்கேன்.” என்று பொய் சொன்னாள். மீண்டும் மீண்டும் அடிபட அவள் இதயம் தயாராயில்லை.

 

அப்படின்னா, நாளைக்குப் பேசலாமா?”

 

இந்த வாரம் முழுசுமே நான் பிசி.”

 

புரியுது ஸ்ரேயா. ஆனால் நான் இன்னைக்கோ, நாளைக்கோ உன் கிட்ட கண்டிப்பாய் பேசியாகணும். பிறகு நான் ஓரிடத்திற்குப் போக வேண்டியிருக்கு.  போனால் எப்ப திரும்பி வருவேன்னு நிச்சயமில்லை.”

 

என்ன விஷயம்னு போன்லயே சொல்லுங்களேன்.” அவனைப் பார்த்தால் அவள் மனம் சிறிதும் வெட்கம், மானம், ரோஷம் இல்லாமல் அவனைக் கொண்டாடும். பட்ட அவமானமெல்லாம் போதும். அவனைப் பார்க்காமல் இருப்பதே நல்லது!

 

போன்ல பேச முடியாது ஸ்ரேயா.”

 

அப்படின்னா சாரி.”

 

ஒரே ஒரு தடவை நாம சந்திச்சுப் பேசலாம் ஸ்ரேயா. அதற்கப்பறம் உனக்கு வேண்டாம்னு  தோணுச்சுன்னா பிறகு நான் கண்டிப்பாய் எப்பவுமே உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

இப்போதும் முடியாதென்று சொல்லி அவன் செய்ததற்குப் பழிதீர்த்துக் கொள் என்று மனதின் ஒரு பகுதி சொன்னது. ஆனால் மனதின் மறுபகுதிஅப்படிச் சொன்னால் பின் நீ எப்போதும் நிம்மதியாக இருக்க முடியாதுஎன்று எச்சரித்தது. அது மட்டுமல்ல, அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும்....

 

சரி எங்கே சந்திக்கலாம்?” என்று அவள் கேட்டாள்.

 

உனக்கு வர சௌகரியமான இடமும் நேரமும் சொல்லு.”

 

ஸ்ரேயா அவள் வீட்டுக்கும் ஆபிசுக்கும் இடையில் உள்ள ஒரு பெரிய பூங்காவின் பெயரைச் சொல்லி, அங்கு அன்று மாலை ஆறு மணிக்குச் சந்திக்கலாம் என்றாள்.

 

தேங்க்ஸ் ஸ்ரேயா

 

அன்று அவளுக்கு ஆபிசில் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியவில்லை. ஷ்ரவன் என்ன சொல்வான் என்று அவள் மனம் பல அனுமானங்களை யோசிக்க ஆரம்பித்தது. காதலைச் சொல்வதிலிருந்து கடன் கேட்பது வரை அத்தனை சாத்தியக்கூறுகளும் மனதில் வந்து போயின. சொன்னபடி அவன் வராமல் போகவும் வாய்ப்புண்டு என்று அவள் மனம் அச்சுறுத்தவும் செய்தது.

 

அவளுடைய ஆபிசிலிருந்து ஸ்கூட்டியில் போனால் அந்தப் பூங்காவை கால் மணி நேரத்தில் அடைந்து விடலாம். ஆனால் மாலை ஐந்தரையிலிருந்தே அவள் மனம் அவனைச் சந்திக்கக் கிளம்பச் சொன்னது. இந்த முட்டாள் மனமே பெரிய இம்சை தான் என்று அவள் சலித்துக் கொண்டாள்.  5.46க்கு அவள் கிளம்பினாள்.

 

பூங்காவின் வாசலிலேயே ஷ்ரவன் அவளுக்காகக் காத்திருந்தான். தூரத்திலிருந்து அவனைப் பார்த்தவுடனேயே மனதில் பட்டாம்பூச்சிகள் படபடக்க அவள் மனதை எச்சரித்தாள். “பொறு. ஒரேயடியாய் கற்பனைக் குதிரையை ஓட விடாதே.”

 

அவனை நெருங்கிய போது தான் அவனிடம் நிறைய சிறு சிறு மாற்றங்கள் தெரிவதை அவள் கவனித்தாள். நடை, உடை, பாவனை, கண்கள், சிகையலங்காரம் எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தது. ஆத்மார்த்தமாய் அவனிடம் உணர்ந்த ஆரம்பக் காதல் தான் அவனை உடனடியாக அடையாளம் காட்டியதேயொழிய, மற்றபடி அவன் புதிய ஆளாகவே தெரிந்தான். இந்த மாற்றங்களும் அவனுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய்த் தோன்றியது. ’மனமே கற்பனைக் கோட்டை எதையும் கட்டாதே. அவன் அழைத்தது அவனுடைய திருமண அழைப்பிதழ் தரவதற்காகக் கூட இருக்கலாம்என்று அவள் மனதை எச்சரித்தாள்.

 

வந்ததுக்கு தேங்க்ஸ்என்று சொல்லி அவன் கையை நீட்டிய போது, அவள் கை தானாக நீண்டது. இருவருமே அந்த ஸ்பரிசத்தின் இனிமையை உணர்ந்தார்கள். கைகள் விலக சிறிது நேரமாகியது.

 

ஆட்கள் அதிகமாக இல்லாத ஒரு இடமாய்ப் பார்த்து அவர்கள் இருவரும் அமர்ந்தார்கள். ஷ்ரவன் அவளிடம் சொன்னான். “யோகாலயத்துல நான் நடந்துகிட்டது உனக்கு புரியாத புதிராய் இருந்திருக்கும் ஸ்ரேயா. ஆனால் நான் காரணமாய் தான் அப்படி நடந்துகிட்டேன். நான் என்ன செய்தாலும் அதை உன்னிப்பாய் கவனிக்க அங்கே ஆள்களும், கேமிராக்களும் இருந்ததால நாம நெருக்கமாகிறோம்னு அவங்க தெரிஞ்சுக்கறது கூட உனக்கு ஆபத்துல முடியலாம்னு தான் நான் அங்கே அலட்சியமாய் இருந்தேன்.”

 

ஸ்ரேயா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் சொன்னான். “எல்லாத்தையும் நான் விவரமாய் சொல்றேன். ஆனால் நீ எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் செய்து தரணும். நான் இப்ப சொல்றது எதுவுமே உன் மூலமாய் வேற யாருக்குமே எப்பவுமே தெரியக்கூடாது.”

 

அவன் கையை நீட்ட அவன் உள்ளங்கையில் தன் கையை வைத்து அவள் சத்தியத்தை உறுதிப்படுத்தினாள். ஷ்ரவன் தான் யார் என்பதையும், யோகாலயத்தின் யோகா, தியான வகுப்புகளில் சேர்ந்த காரணத்தையும் அவளுக்குச் சொன்னான். போலீஸ் இலாகா சைத்ரா வழக்கை ரகசியமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்று அவன் சொன்னானே தவிர இதில் முதல்வர் சம்பந்தப்பட்டதை அவன் சொல்லவில்லை. சைத்ரா, டாக்டர் வாசுதேவன் இருவர் மரணங்களையும் சொன்னவன் தேவையான சில விவரங்கள் தவிர மற்ற விவரங்களைச் சொல்வதைத் தவிர்த்தான். இதுவே கூட அவன் தொழில் தர்மத்தை மீறிய செயல். ஆனால் அவன் தன் செய்கைக்கான காரணத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னானேயொழிய மற்றதெல்லாம் சொல்வதற்கு அவசியமிருக்கவில்லை.

 

ஸ்ரேயா அவன் சொன்னதை எல்லாம் கேட்டு திகைத்தாள். அவளும் சைத்ரா வழக்கு  குறித்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வந்திருந்த செய்திகளை அறிந்திருந்தாள். ஆனால் உண்மை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருந்ததால் அவள் தெளிவான அபிப்பிராயத்தை எட்டி இருக்கவில்லை. ஆனால் ஷ்ரவனிடம் உண்மையைக் கேட்டறிந்த போது அவளுக்கு ரத்தம் கொதித்தது. யோகாலயத்தில் இருக்கும் குற்றவாளிகள் எத்தனை உயிர்களை எடுத்திருக்கிறார்கள். என்னவொரு அலட்சியம், என்னவொரு ஆணவம்.... 75 வயதில் அனாதையாய் நிற்கும் சைத்ராவின் தாத்தாவை நினைக்கையில் அவள் மனம் பதைத்தது. 

 

ஷ்ரவன் முடிவில் சொன்னான். “நான் இது வரைக்கும் எடுத்துகிட்ட எந்த வேலையைப் பற்றியும் என் வீட்டுலயோ, என் நண்பர்கள் கிட்டயோ சொன்னதில்லை ஸ்ரேயா. முதல் முதல்ல அதை நான் மீறியிருக்கேன். வாழ்க்கைல முதல் தடவையாய் உன்னைப் பார்த்த முதல் கணத்துலயே நான் காதலை உணர்ந்திருக்கேன். நீயும் அப்படியே உணர்ந்தாய்னும் ஆத்மார்த்தமாய் உணர்ந்திருக்கேன். இப்படியெல்லாம் உணர முடியும்னு யாராவது எப்பவாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாய் நான் கேலி செய்திருக்கக்கூடிய ஆள். சினிமால தான் நடக்கும், கதையில தான் நடக்கும்னு சொல்லியிருப்பேன். மனசுல உணர்ந்த காதலை வாயால உன்கிட்ட தெரிவிக்கிற இந்த நேரத்துல எனக்கு இருக்கற ஆபத்தையும் உன்கிட்ட சொல்றது தான் நியாயம். இதுவரைக்கும் நான் எடுத்துகிட்ட எல்லா வேலையும் ஆபத்து நிறைஞ்சது தான். ஆனால் ஒவ்வொன்னுலயும் அதை மீறி சாதிச்சுட்டு தான் நான் வந்திருக்கேன். இந்த வேலையும் அப்படி தான். போய்ச் சாதிக்க முடியும்னு நம்பிக்கை இருந்தாலும்,  போனவன் திரும்பி வராமலேயே போகக்கூடிய ஆபத்தும் இருக்குன்னு உன் கிட்ட நான் தெரிவிக்கறது தான் நியாயமாய் இருக்கும். நான் உன் கிட்ட ஒன்னே ஒன்னு தான் கேட்டுக்கறேன். நான் இதுல கண்டுபிடிச்சு வெளியே வர சுமார் மூனு மாசத்திலிருந்து ஆறு மாசம் வரைக்கும் ஆகலாம்னு எதிர்பார்க்கறேன். அது வரைக்கும் எனக்காக காத்திருப்பாயா? அப்படி திரும்பி வந்தால் நான் உன் அம்மா அப்பா கிட்ட முறைப்படி பேசறேன். அப்படி நான் வரலைன்னா, என்னையும் இந்தக் காதலையும் மறந்துட்டு, ஒரு நல்ல பையனாய் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு புதிய வாழ்க்கையை நீ ஆரம்பிக்கணும்.”

 

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, March 6, 2025

சாணக்கியன் 151

சின்ஹரன் பத்ரசாலிடம் சொன்னான். “நான் முன்பே சொன்னபடி ராக்‌ஷசர் போர் முடியும் வரை அமைதியாகத் தான் இருப்பார். போர் முடிந்த பின் தான் அவர் இந்த விஷயத்தைக் கிளறுவார். நண்பரே, அதனால் அந்தச் சமயத்தில் ராக்‌ஷசரை விடவும் சக்தியும் அதிகாரமும் வாய்ந்த ஒருவரின் பாதுகாப்பு வளையத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா?”

 

பத்ரசால் கவலையுடன் சொன்னான். ”ராக்‌ஷசரை விட அதிக அதிகாரம் இருப்பவர் மன்னர் தான். ஆனால் அவர் ராக்‌ஷசர் சொல்வதை தேவ வாக்காக எடுத்துக் கொள்பவர்.”

 

“நீங்கள் தனநந்தனை மன்னனாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு சொல்கிறீர்கள். ஆனால் போர் முடிந்த பின் தனநந்தன் மன்னனாக இருக்கப் போவதில்லை”

 

சின்ஹரன் சொன்னதைக் கேட்டதும் பத்ரசாலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன சொல்கிறீர்கள் நண்பரே?” என்று திகைப்போடு கேட்டான்.

 

சின்ஹரன் சொல்வதா வேண்டாமா என்று யோசிப்பவன் போல பாவனை காட்டினான். பத்ரசால் சிறிது படபடப்புடன் சொன்னான். “தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஏனப்படி சொல்கிறீர்கள்?”

 

சின்ஹரன் மிக ரகசியமான தகவலைப் பகிர்ந்து கொள்பவன் போலத் தாழ்ந்த குரலில் சொன்னான். “நண்பரே. எங்களுக்கு மகாசக்தி வாய்ந்த ஒரு மகானைத் தெரியும். அவர் சொல்லும் வாக்கு எதுவும் இது வரை பொய்த்ததில்லை. நாங்கள் முக்கியமாக எது செய்வதானாலும் அவர் ஆலோசனையைக் கேட்டு விட்டுத் தான் செய்வோம். அவர் இந்தப் போருக்குப் பின் மகத அரியணையில் தனநந்தன் அமரப் போவதில்லை என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார்”

 

பத்ரசாலுக்கு சின்ஹரன் அளவுக்கு அந்த மகானின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. இப்படி யாரோ ஒருவர் சொல்கிறார் என்றால் அப்படியே நடக்கும் என்று எப்படி இவர்களால் நம்ப முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.

 

அதைப் புரிந்து கொண்டவன் போல சின்ஹரன் சொன்னான். “உங்கள் ஆச்சரியம் எனக்குப் புரிகிறது நண்பா. நாங்களும் அந்த மகான் சந்திரகுப்தன் வாஹிக் பிரதேச மன்னனாக வருவான் என்று ஆரம்பத்தில் சொன்ன போது சந்தேகப்பட்டோம். எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண மாணவன் சக்தி வாய்ந்த யவனர்களைத் துரத்தியடித்து எப்படி மன்னனாக முடியும் என்று எண்ணினோம். அது நடந்தது. யவன சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் அற்பாயுசில் இறந்து போய் விடுவான். சொந்த ஊருக்குப் போகும் வழியிலேயே அது நடந்து விடும் என்றார். அதையும் எங்களால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அலெக்ஸாண்டர் திடகாத்திரமாக இருந்தான். இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் அவன் எப்படி அற்பாயுசில் சாவான் என்று சந்தேகப்பட்டோம்.. அந்த மகான் சொன்னபடியே தான் நடந்தது. இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். எதையும் அவர் சொல்கிற போது நடக்க முடியாத சூழ்நிலைகளே பெரும்பாலும் இருந்தன. ஆனால் பின் எல்லாம் மாறி அவர் சொன்னபடியே நடக்க ஆரம்பித்த பிறகு எங்களுக்கு அவர் சொல்வதில் சந்தேகமே வருவதில்லை...”

 

பத்ரசாலுக்கு அதைக் கேட்ட பிறகு  மெல்ல சந்தேகம் தெளிந்தது. சந்திரகுப்தன் அரசனாவான் என்றும் அலெக்ஸாண்டர் அற்பாயுசில் இறந்து போவான் என்றும் முன்கூட்டியே சொல்லியிருந்தால் அந்த மகான் மிகவும் சக்தி வாய்ந்தவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால்....

 

சந்தேகமும், திகைப்பும் கலந்த தொனியில் கேட்டான். “அப்படியானால் இந்தப் போரில் நாங்கள் தோற்று விடுவோம் என்று அவர் சொல்கிறாரா?”

 

சின்ஹரன் சொன்னான். “தோற்று விடுவீர்கள் என்று அவர் சொல்லவில்லை. உங்கள் எல்லைப் பகுதிகள் சிலவற்றை எதிரிகள் கைப்பற்றி விடுவார்கள் என்று சொன்னார். உங்கள் மன்னரின் மனநிலை மோசமாகிக் கொண்டே போய் கடைசியில் போருக்குப் பின் மன்னர் முடிதுறந்து மகனை அரசனாக்கி வனப்பிரஸ்தம் சென்று விடுவார் என்று சொன்னார்.”

 

பத்ரசால் யோசித்தான். தனநந்தனின் மனநிலை மோசமாகிக் கொண்டே வருவதைப் பற்றி அரண்மனையில் பணிபுரிபவர்களே தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவன் அந்த நிதி களவு போனதிலிருந்து சில நேரங்களில் சரியாக இருந்தாலும் பல நேரங்களில் பைத்தியம் பிடித்தவன் போலத் தான் நடந்து கொள்கிறான்....

 

பத்ரசால் சொன்னான். “ஆனால் சுகேஷ் அரசனானாலும் அவனும் ராக்‌ஷசரின் கைப்பாவையாகத் தான் இருப்பான். அவன் தனியாக முடிவெடுக்க முடிந்தவனோ, உறுதியானவனோ அல்ல.”

 

“நான் இளவரசன் சுகேஷைச் சொல்லவில்லை. சுதானுவைச் சொன்னேன் நண்பரே”

 

பத்ரசால் குழப்பத்துடன் கேட்டான். “மூத்தவனான சுகேஷைத் தானே பட்டத்து இளவரசனாக அறிவிக்கப் போவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?”

 

“அது நடக்கப் போவதில்லை நண்பா. நடக்கவிருக்கும் போர் நிறைய பழைய கணக்குகளைப் பொய்யாக்கப் போகிறது. அந்தச் சமயத்தில் நீங்கள் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கப் போகிறது.”

 

சுதானு கோபக்காரனானாலும் சுதேஷை விடத் துடிப்பும், வேகமும், உறுதியும் கொண்டவன். யாருக்கும் அடங்க மறுப்பவன். அவன் அரசனானால் தனநந்தன் அளவுக்கு ராக்‌ஷசருக்கு முக்கியத்துவம் தர மாட்டான். ...

 

பத்ரசால் தயக்கத்துடன் சொன்னான். “சுதானுவுடன் நான் நெருங்கிய நட்பில் இல்லை. அதனால் அவன் எனக்கு ஆதரவாய் இருப்பான் என்பது நிச்சயமில்லை...”

 

“நட்பு என்பது எப்போதும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது நண்பரே. சென்ற வருடம் நீங்களும் நானும் அன்னியர்களாக இருந்தோம். ஆனால் இன்று நாம் நெருங்கிய நண்பர்களாகி விடவில்லையா. உங்களுக்குப் பிரச்னை வரப்போகிறது என்று தெரிந்தவுடன் நான் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உங்களுக்குத் தெரிவிக்கவும், உதவவும் ஓடி வரவில்லையா? அதனால் நீங்கள் மெல்ல சுதானுவுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பியுங்கள்....”

 

பத்ரசால் மெல்லத் தலையசைத்தான். சுதானுவும் சீக்கிரம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவன் அல்ல. அவனுக்கு வரும் திடீர் கோபங்கள் அரண்மனை வளாகத்தில் மிகவும் பிரசித்தம். இப்போதும் தனநந்தனிடமே அடிக்கடி சண்டையிடுபவன் அவன் ஒருவனே.

 

அவன் தயக்கத்தை உணர்ந்தவன் போல் சின்ஹரன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நண்பரே. சுதானுவும் அந்த மகானின் பக்தனே. அவனும் அவரை மிகவும் நம்புகிறான். அவரைப் பற்றிப் பேசியே நீங்கள் அவனிடம் சீக்கிரமாகவே நெருக்கமாகி விட முடியும்.”  

 

கூடவே எப்படி அதைச் செய்ய வேண்டும் என்பதையும் சின்ஹரன் விவரித்துச் சொல்லவே பத்ரசால் எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசிக்க முடிந்த நண்பனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தான். இவன் யோசித்து இருக்காத விஷயமே இருக்காது போலிருக்கிறதே…

 

சின்ஹரன் இயல்பாய் தெரிந்து கொள்ள விரும்புபவன் போல கேட்டான். “நண்பரே. இந்தப் போரில் நீங்கள் எங்கே இருப்பீர்கள்? தலைநகரிலேயே இருப்பீர்களா? இல்லை வெளியே சென்று விடுவீர்களா?”

 

பத்ரசால் சொன்னான். “சரியாகத் தெரியவில்லை நண்பரே. நிலவரம் பார்த்துப் பின் முடிவு செய்யலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்.”

 

தலையசைத்தபடி சின்ஹரன் சொன்னான். “அதுவும் நல்லது தான் நண்பரே. அது தீர்மானமாகும் வரை என்ன நடந்தாலும் உங்களுக்கு உதவ நான் பாடலிபுத்திரத்திலேயே மறைவாய் இருக்கிறேன். வேண்டிய நேரத்தில் வந்து விடுவேன். இனி நான் அதிக நேரம் இங்கே தங்கினால் அது தேவையில்லாத கேள்விகளை எழுப்பிவிடும். அதனால் விடைபெறுகிறேன் நண்பரே.”

 

சின்ஹரன் விடைபெற்றான்.

 

றுநாள் பத்ரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பிரிவுகளை எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் ராக்‌ஷசர் முன் தினம் போலவே வந்து சிறிது நேரம் மேற்பார்வை பார்த்து விட்டுப் போய் விட்டார். அவர் எதுவும் சொல்லவில்லை என்றாலும் குதிரை மாற்ற விவகாரத்தை அவர் அறிந்து விட்டார் என்ற நினைவே பத்ரசாலுக்கு நெருடலாக இருந்தது. இந்தப் பாழாய்ப் போன போர் எழுந்திருக்கா விட்டால்  ராக்‌ஷசருக்கு இந்த விவகாரம் தெரிய வராமலேயே இருந்திருக்கும்…

 

ராக்‌ஷசர் சென்ற பிறகு சிறிது நேரத்தில் சுதானு அங்கே வந்தான்.  சுதானுவைப் பார்த்தவுடன் பத்ரசால் நட்புடன் புன்னகைத்தான். சுதானுவும் புன்னகைத்தாலும் அவன் சிறிது யோசித்தது போல் இருந்தது. பத்ரசால் தான் செய்து கொண்டிருந்த வேலையை தன் இரு படைத்தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு சுதானு அருகில் வந்து சின்ஹரன் சொன்னது போலவே ஆரம்பித்தான்.

 

“இளவரசே. நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று வாக்களித்தால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.”

 

சுதானு சிரித்துக் கொண்டே சொன்னான். “நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் பார்வையில் பைத்தியக்காரர்களாகவே இருப்போம் சேனாதிபதி. அது தவிர்க்க முடியாதது. அதனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படையாகச் சொல்லுங்கள். என்ன விஷயம்?”

 

(தொடரும்)

என்.கணேசன்  

 

    




Monday, March 3, 2025

யோகி 92


ஷ்ரவன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான். துறவியாக யோகாலயத்தில் சேர்ந்த பிறகு, அவர்களைப் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான அமானுஷ்யத் தகவல்கள் அவனுக்குத் தெரிய வந்திருப்பதாகச் சொல்லி, அவர்களுடைய ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரித்து, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாய் மாறுவது அவனுக்குக் கஷ்டமான காரியமல்ல. அவர்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் அதைத் தீர்த்து வைக்கும் அளவுக்கு அவனிடம் திறமை உண்டு. அங்கே போய்ச் சேர்வதற்கு முன் மாந்திரீகம் சம்பந்தமான விஷயங்களை நிறைய படித்துத் தெரிந்து கொள்வதென்று அவன் ஏற்கெனவே தீர்மானித்தும் இருக்கிறான். ஆனால் அந்த விஷயத்தில் அங்கே அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆள் ஒருவர் உண்டு- காசர்கோட்டு மந்திரவாதி தேவானந்தகிரி. அவர் அங்கு வந்து விசேஷ பூஜைகளைச் செய்தால் அவனைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடமுடியும்.

 

பாண்டியனும், டாக்டர் சுகுமாரனும் பேசிக் கொண்டதை வைத்துப் பார்த்தால் தேவானந்தகிரி அவர்களுக்கு மறுபடியும் தாயத்து கட்ட ஒரு மண்டல காலம் கழித்து தான் வருவார். ஆனால் பிரம்மானந்தா வற்புறுத்தினால் இடையிலேயும் கூட தேவானந்தகிரி வரலாம். ஏதாவது முக்கிய அவசரக் காரணம் இருந்தால் ஒழிய அப்படி பிரம்மானந்தா இடையில் வற்புறுத்திக் கூப்பிடும் அவசியம் வராது. அவன் அங்கே சேர்ந்த பிறகு அவன் மேல் தீவிர சந்தேகம் அவர்களுக்கு எழுமானால் அவன் சொல்வதெல்லாம் சரியா என்று தெரிந்து கொள்ள அவர்கள் தேவானந்தகிரியை வரவழைக்கும் சாத்தியம் மட்டும் எப்போதும் உண்டு. அதனால் அப்படி அவர்களுக்குச் சந்தேகம் எழவே எழாதபடி அவன் பார்த்துக் கொண்டால் போதும்...

 

அவர்கள் அழைக்காமல் தேவானந்தகிரி வேறு ஏதாவது காரணத்தால் தானாகவே வந்தாலும் அவனைக் கண்டுபிடித்து விடும் வாய்ப்பிருக்கிறது. ஷ்ரவன் யோசித்து விட்டு தேவானந்தகிரியின் அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டான். தேவானந்தகிரியின் உதவியாளர் தான் பேசினார். ஷ்ரவன் ஒரு முக்கிய விஷயமாய் பிரஷ்னம் வைத்துப் பார்த்து, தோஷம் ஏதாவது இருக்குமானால் அதற்குப் பரிகார பூஜையும் செய்ய வேண்டும் என்று சொன்னான். அந்த உதவியாளர் இரண்டு மாதங்களுக்குஅப்பாயின்மெண்ட்இல்லை என்றும் அதற்குப் பின் தான் தேவானந்தகிரியைச் சந்திக்க முடியும் என்றும் சொல்லி விட்டார்.

 

இந்த அளவு வேலைப்பளு உள்ள தேவானந்தகிரி, தானாக, ஓய்வாக யோகாலயம் வருவதற்கு வாய்ப்பில்லை என்று ஷ்ரவன் நிம்மதி அடைந்தான்.

 

யோகாலயத்திற்குத் துறவியாகச் செல்வதற்கு முன் அவனுடைய தனிப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சினையையும் அவன் சரி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவன் இதயம் சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய காதல் பிரச்சினை. ஆனால் அதை உடனடியாகச் சரிசெய்வதில் சில சிக்கல்கள் இருந்தன.    

 

அவனிடம் மிகவும் கோபமாக இருக்கும் ஸ்ரேயாவிடம், தன்னுடைய அலட்சியப் போக்குக்கான காரணங்களை அவன் விளக்காமல், அவளுடைய கோபத்தையும், வருத்தத்தையும் அவன் போக்க வழியில்லை. பொய்களையும் சொல்லி அவளைச் சமாதானப்படுத்தலாம் என்றாலும் உண்மைக் காதலில் பொய்யைப் பயன்படுத்துவது காதலைக் களங்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று அவன் நினைத்தான்.

 

உண்மையைச் சொல்லலாம் என்றாலோ அவன் தன் தொழில் தர்மத்தைக் கைவிடுவது போல் ஆகி விடும். அவன் இதுநாள் வரை தன்னுடைய எந்த ஒரு ரகசிய வேலையையும் பற்றி அவன் பெற்றோரிடம் கூடச் சொன்னதில்லை. அவனுடைய வேலையில் ரகசியம் மிக மிக முக்கியம். அவளிடம் சொல்வது அவள் மூலம் வேறு யாருக்காவதும் தெரிய வரலாம். அந்த வேறு யாராவது மூலம் அவன் எதிரிகளுக்கும் தெரிய வரலாம். அதில் அவனுக்கு ஆபத்து நேரும் என்பதையும் கூட அவன் இரண்டாம் பட்சமாகவே  நினைத்தான். அதை விட முக்கியமாக, அந்த வேலை வெற்றிகரமாக முடியாததற்கு அவனே காரணமாகி விடுவதை அவன் மனசாட்சி அனுமதிக்கவில்லை.

 

அவளிடம் சென்று பேச இன்னொரு காரணமும் அவனைத் தடுத்தது. அவன் தொழிலில் இருக்கும் ஆபத்து தான் அது. ஒவ்வொரு வேலையிலும் அவன் தன் உயிரைப் பணயம் வைத்து தான் செல்கிறான். எத்தனை திறமைகளும், சாமர்த்தியமும் அவனுக்கு இருந்த போதிலும், எதிர்பாராத சிக்கல்கள் வருவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உண்டு. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு பதிலாக அவர்களிடம் அவனே பலியாகவும் வாய்ப்பு உண்டு. அப்படி அவன் பலியானால் அது அவளை மேலும் காயப்படுத்தும், நிரந்தர துக்கத்தில் ஆழ்த்தும்.

 

அதை விட, அவள் அவனைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் இப்போதைய நிலைமை எத்தனையோ தேவலை. சில நாட்களில் அவள் இதிலிருந்து மீள்வாள். அவளுக்குப் பிடித்தமான வேறு எவனையோ அவள் கண்டுபிடித்து, அவனைத் திருமணம் செய்து கொண்டு, காலப்போக்கில் நிம்மதியாக வாழ்வாள். எப்போதாவது ஒரு நாள் இந்தப் பைத்தியக்காரனை அவள் நினைத்துப் பார்க்கலாம். அல்லது மறந்தே விடலாம். அவளுடைய நெடுங்கால துக்கத்தை விட இது எத்தனையோ பரவாயில்லை.

 

யோசித்துப் பார்க்கையில் சைத்ரா வழக்கை முடித்து விட்டு வெற்றிகரமாய் வந்த பிறகு அவளிடம் பேசுவது தான் நல்லது என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஆனால் அதற்குள் அவள் வீட்டார் வேறொருவனை அவளுக்கு மணமுடிக்க முயற்சிகள் எடுத்து விட்டால், அவளும் அவனை மறந்து வாழ்க்கையைத் தொடர அது தான் நல்ல வழி என்று நினைத்து அதற்குச் சம்மதித்து விட்டால், என்ன செய்வது என்ற கேள்வியை அவன் இதயம் எழுப்பியது. ‘எங்கிருந்தாலும் வாழ்கஎன்று அவன் மிகவும் சோகமாக ஹைதராபாதுக்குத் திரும்ப வேண்டியிருக்கும்.

 

ஒருவருடனேயே யாருடைய வாழ்க்கையும் முடிந்து விடுவதில்லை, அப்படி முடிந்து விடவும் கூடாது என்றாலும், ஆத்மார்த்தமாய் உணர்ந்த அந்தக் காதலியுடன் வாழும் வாழ்க்கைக்கு ஈடான இன்னொரு வாழ்க்கையை வாழ முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.  இரண்டாந்தர வாழ்க்கையைத் தான் அவன் அனுசரித்து வாழ வேண்டியிருக்கும். அதற்கும் அவன் மனம் ஒப்பவில்லை.

 

அவன் மனம் மாறி மாறி யோசித்து எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதைப் பற்றி அவன் யாரிடமும் கலந்தாலோசிக்க முடியாது. என்ன செய்வதென்று யோசித்தான். பரசுராமன் இருந்திருந்தால் அவரிடம் அவன் கேட்டிருக்கலாம். அவர் கண்டிப்பாக அவனுக்கு வழிகாட்டியிருப்பார். அவர் தான் இப்போது இங்கு இல்லையே!

 

அலைபேசியில் அவரிடம் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் அது நேரில் பேசுவது போல் ஆகாது.... திடீரென்று அவனுக்கு அவர் சொல்லித் தந்த உபதேச மந்திரம் நினைவுக்கு வந்தது. அவனுக்குக் கவசமாய் இருக்கும், சிக்கலான நேரங்களிலும் வழிகாட்டும் என்று அவர் சொல்லியிருந்தார். அதை ஏன் இந்த வழக்கு விசாரணைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான இந்தக் காதல் பிரச்சினைக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?

 

அதற்குப் பின் அவன் அதிகம் யோசிக்காமல் உடனடியாக அந்த மந்திரத்தை ஆத்மார்த்தமாய் ஜபிக்க ஆரம்பித்தான். 1008 முறை ஜபித்து முடித்த பின் அவன் ஆழ்மனம் எதை உணர்கிறதோ அதைச் செய்வது என்று தீர்மானித்து விட்டான்.

 

அவன் ஜபித்து முடித்த பின் அவன் ஆழ்மனம் அவளிடம் பேசச் சொன்னது. அவனைக் கவர்ந்த அவள் பொறுப்பில்லாமல் அடுத்தவர் ரகசியங்களை வெளியே சொல்பவள் அல்ல என்பதை அவன் உணர்ந்தான். அவளிடம் உண்மையைச் சொல்லி அவள் எந்த முடிவெடுத்தாலும், அதற்கு முரண்படாமல் அதை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானித்தான். அவள் அவனுடைய தொழிலின் ஆபத்தைப் பெரிதாக நினைத்து என்னேரமும் ஆபத்திருக்கும் வாழ்க்கையை ஏற்க முடியாதவளாய் இருந்தால் அவன் அதை மதித்து விலகி விடுவது தான் நாகரிகம் என்று நினைத்தான். ஆனாலும் அவளுடைய நினைவை அவன் மனதின் ஒரு மூலையில் என்றும் வைத்திருப்பான். ஒரு கணத்தில் உணர்ந்து பின் நிரந்தரமாய் தங்கி விட்ட அந்த உணர்வை அவனால் என்றைக்கும் இழக்க முடியாது.

 

ஒருவிதத்தில் இது பைத்தியக்காரத்தனமே என்பதை அவன் அறிவான். மனம் விட்டு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. காதலைத் தெரிவித்துக் கொள்ளவில்லை. இருவரும் முழுமையாக ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவில்லை. ஆனாலும் ஒரு வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே உணர முடிந்த உன்னதம் ஒன்றை உணர்ந்திருக்கிறோம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை.

 

ஒரு முடிவுக்கு வந்தவனாக அவன் ஸ்ரேயாவை அலைபேசியில் அழைத்தான்.


(தொடரும்)

என்.கணேசன்