சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 7, 2024

யோகி 70

 

பாண்டியன் நேற்றிரவு வரை நடந்ததைச் சொல்லியிருந்த போதும், அதன் பின் நடந்ததாய் பாண்டியனும், சுகுமாரனும் விவரித்துச் சொன்ன அனுபவங்கள், மாயாஜாலக் கதைகளுக்குப் போட்டி போடும் வகையில் பிரம்மானந்தாவுக்குத் தோன்றின. அவர்களைத் தவிர வேறு யாராவது அவற்றைச் சொல்லியிருந்தால் கட்டுக்கதைகளாகவோ அல்லது மனப்பிராந்தியாகவோ அவர் நினைத்திருப்பார்.

 

சுகுமாரன் குரல் அடைக்கச் சொன்னார். “யோகிஜி, நேத்து வரைக்கும், என்னால பகல்லயாவது தூங்க முடிஞ்சுது. ஆனா இன்னைக்குக் காலைல இருந்து அதுவும் முடியல. கண்ணை மூடித் தூங்க ஆரம்பிச்சா போதும், மண்டை ஓடு தெரியுது. வயித்துல எதோ முடிச்சு விழற மாதிரி வலிக்குதுமருந்து சாப்பிட்டாலும் வலி குறைய மாட்டேங்குது. காலைல வயித்தை செக் செஞ்சு பார்த்த எங்க ஆஸ்பத்திரி டாக்டர் நான் எதுவும் வித்தியாசமா சாப்பிடலை, குடிக்கலைங்கறது நம்ப மாட்டேங்கறார்பின்னே எப்படி வயிறு இப்படி புண்ணாயிருக்குன்னு சந்தேகப்படறார்….”

 

அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார். பாண்டியனுக்கும் வயிற்று வலி தாங்க முடியவில்லை தான். அவரும் ஓநாய் அவர் வயிற்றைக் கிழித்து குடலை உருவிச் சாப்பிடுவது போல் உணர்ந்த பிறகு உறங்கவில்லை தான். ஆனாலும் அவர் சுகுமாரனைப் போல் புலம்பவில்லை. புலம்பல் பலவீனமான மனிதர்களுக்கானது. புலம்புவதால் பிரச்சினைகள் குறையும் என்றால் அவரும் தயங்காமல் அதைச் செய்வார். ஆனால் பிரச்சினைகள் தீர்வு கண்டு தான் தீர்க்கப்பட வேண்டுமேயொழிய, புலம்பித் தீர்வதில்லை….

 

அவருக்கு, பிரம்மானந்தாவிடம் தனிப்பட்ட முறையில் நிறைய பேச வேண்டியிருந்தது. ஆனால் சுகுமாரன் உடனிருக்கையில் அவற்றை எல்லாம் அவரால் பேச முடியாது. சுகுமாரனோ மந்திரவாதியும் வந்து, பிரச்சினை முழுவதுமாகத் தீராமல்  அங்கிருந்து போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

 

சுகுமாரனைப் போல் பாண்டியன் வாய்விட்டுப் புலம்பா விட்டாலும், அவருடைய நேற்றிரவு அனுபவங்களும் கூடுதல் பயங்கரமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை பிரம்மானந்தா அனுமானித்தார்.  எதிரிகள் மனிதர்கள் என்றால் அவர்களைச் சமாளிப்பது மிகவும் எளிது. அந்த ஆட்கள் எத்தனை வலிமையானவர்களாய் இருந்த போதிலும், சாமர்த்தியசாலிகளாய் இருந்த போதிலும் அவர்கள் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் இப்போது எதிரிகளாய் எதிரில் மனிதர்கள் தெரியவில்லை. அது தான் சிக்கலே.

 

சுகுமாரன் கேட்டார். அந்த மந்திரவாதி எத்தனை மணிக்கு வருவார்?”

 

நாலு மணிக்கு அவர் வந்துடுவார். விமானம் சரியான நேரத்துல தான் வருது.” பிரம்மானந்தா சொன்னார்.

 

அவர் இதுல கைதேர்ந்தவர் தானா?”

 

அவர் பணம் அதிகமாய் வாங்கினாலும் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறவர்னு சொல்றாங்க. எனக்குத் தெரிஞ்சவங்க சிலர் அவரை ரொம்பவே புகழ்றாங்க. அவர் கிட்ட ஒரு விசேஷ சக்தி என்னன்னா பிரச்சினையை யாரும் அவர் கிட்ட சொல்ல வேண்டியதில்லை. ஆள்கள் அவர் கிட்ட போய் நின்னாலே போதும், என்ன பிரச்சினைன்னு அவரே சொல்லிடுவாராம். அதிகமாய் அவர் வெளியிடங்களுக்குப் போகிறதில்லை. அவர் இருக்கற இடத்துக்குத் தான் எல்லாரும் போறாங்க. ஆனாலும் நான் சொன்னதுக்காக உடனே கிளம்பி வர்றார்.”

 

பிரம்மானந்தா சொன்னதைக் கேட்டு சுகுமாரனுடன் பாண்டியனும் திருப்தியுடன் தலையசைத்தார். பாதிக்கப்பட்டவர்கள் வாய் திறந்து எதுவும் சொல்லாமலேயே என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்துச் சொல்வது உண்மையான சக்தி தான். அந்தச் சக்தி இருப்பவனுக்கு பிரச்சினையைத் தீர்க்கும் சக்தியும் இல்லாமல் போகாது...

 

பாண்டியன் கேட்டார். “அப்படின்னா நீங்க இங்கே என்ன பிரச்சினை, யாருக்குப் பிரச்சினைன்னு அவர் கிட்ட எதுவுமே சொல்லலையா?”

 

இல்லை. பொதுவாய் அவரை அணுகறவங்க எல்லாருமே, பேய், ஆவி, சூனியம் மாதிரி விஷயங்களுக்காகத் தான் அணுகறாங்க. அதனால அவருக்கு அந்த விஷயமாய் தான் கூப்டறோம்னு தெரியாமல் இருக்காது. ஆனால் யாருக்குப் பிரச்சினைன்னும், குறிப்பாய் என்ன மாதிரியான பிரச்சினைன்னும் நான் சொல்லலை. அவராய் என்ன கண்டுபிடிச்சுச் சொல்றார்னு பார்ப்போம்

 

அவர்கள் மூவரும் அந்த மந்திரவாதியின் வருகைக்குக் காத்திருந்தார்கள்.

 

ந்திரவாதி தேவானந்தகிரி மாலை 4.05 க்கு யோகாலயம் வந்து சேர்ந்தார். அவருடைய குடுமியும், நீண்ட தாடியும், பாதி நரைத்திருந்தாலும், அவருக்கு வயது ஐம்பதுக்குள் தான் இருக்கும் என்று சுகுமாரனுக்குத் தோன்றியது. காரிலிருந்து இறங்கிய அவரை சுகுமாரனும், பாண்டியனும் தான் வெளியே வந்து வரவேற்றார்கள். பிரம்மானந்தா தனது அறையிலேயே அமர்ந்திருந்தார். அவர் பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, கவர்னர் போன்றவர்கள் வரும் போது தான் வெளியே வந்து வரவேற்பது வழக்கம்.  வெளிநாடுகளில் இருந்தும் அந்த அளவு முக்கியஸ்தர்கள் வந்தால் மட்டுமே வெளியே வந்து வரவேற்பார். மற்ற முக்கியஸ்தர்கள் எல்லாம் அவரிருக்கும் இடத்திற்குச் சென்றே அவரைத் தரிசிக்க வேண்டும்.

 

தேவானந்தகிரி தன்னை வரவேற்ற சுகுமாரனையும், பாண்டியனையும் வேற்றுக்கிரகவாசிகளைப் பார்ப்பது போல் வினோதமாகப் பார்த்தார்.

 

இந்த ஆள் ஏன் இப்படிப் பார்க்கறார்?’ என்று எண்ணிய  சுகுமாரன் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபடி கையை நீட்டினார்.

 

தேவானந்தகிரி தன் கையை நீட்டவில்லை.  தன் இரு கைகளையும் சேர்த்து கூப்பினார்.

 

சுகுமாரன் பாண்டியனையும் தேவானந்தகிரியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பாண்டியன் கைகளைக் கூப்ப, தேவானந்தகிரியும் கைகளைக் கூப்பினார். ஆனால் அப்போதும் அவர் அவர்களை பார்ப்பது இயல்பாய் இல்லை. அது ஏனென்று தெரியவில்லை. இருவரும் அவரை பிரம்மானந்தாவிடம் அழைத்துச் சென்றார்கள்.

 

பிரம்மானந்தா நீண்ட நாள் நண்பரை வரவேற்பது போல தேவானந்தகிரியை அன்புடன் வரவேற்றார். உலகப்புகழ் பெற்ற பிரம்மானந்தா அப்படி அன்புடன் வரவேற்றதில் தேவானந்தகிரி மனம் மகிழ்ந்தார். பிரயாண சௌகரியம் எல்லாம் எப்படி இருந்தது விசாரித்து அவரை பிரம்மானந்தா அமரச் சொன்னார்.

 

ஆனால் தேவானந்தகிரி பிரம்மானந்தா கைகாட்டிய இடத்தில் இருந்த சோபாவில் அமராமல், தள்ளி இருந்த ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டார். அவர் முன்பு அவர்களை வினோதமாகப் பார்த்ததற்கும், இப்போது சோபாவில் அமராமல் மரநாற்காலியை இழுத்துப் போட்டு அமர்வதற்கும் கூட ஏதேனும் பிரத்தியேகக் காரணங்களிருக்கும் என்று பாண்டியனுக்குத் தோன்றியது.

 

மர நாற்காலியில் அமர்ந்தவுடன் அவர் பாண்டியனையும், சுகுமாரனையும் கைகாட்டி, பிரம்மானந்தாவிடம் கேட்டார். “பிரச்சனை இவங்க ரெண்டு பேருக்குத் தானே?”

 

பிரம்மானந்தா பிரச்சினை ஒருவருக்கா, இருவருக்கா என்று கூட அவரிடம் தெரிவித்திருக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களே சென்று அவரை வரவேற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அப்படி இருக்கையிலும் தேவானந்தகிரி யாருக்குப் பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னதில் அவர் ஆச்சரியப்பட்டார்.  ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தலையசைத்தார்.

 

சோபாவில் அருகருகே அமர்ந்திருந்த பாண்டியனையும், சுகுமாரனையும் தேவானந்தகிரி கூர்ந்து பார்த்தார். பின் அவர் பார்வை அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் நிலைத்தது.

 

சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்து விட்டு அவர் சொன்னது அவர்கள் மூவரையும் அதிர வைத்தது.  

 

பிரச்சினை சின்னதாகவோ, சாதாரணமாகவோ இல்லை. இவங்க ரெண்டு பேர் மேலயும் வலிமையான பிரயோகம் ஆகியிருக்கு. இன்னும் ஒரு நாள் தாண்டியிருந்தால் இவங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்க வாய்ப்பிருக்கு.”

 

சுகுமாரனுக்கு அதிர்ச்சியுடன் ஆச்சரியமாகவும் இருந்தது. சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்து விடும் என்று அவரே பலமுறை பயப்பட்டிருக்கிறார். இந்த மந்திரவாதி தானாகக் கண்டுபிடித்து இதைச் சொன்னது பெரிய விஷயம் தான். இன்னும் ஒரு நாள் தாண்டுவதற்கு முன் இந்த மந்திரவாதியை வரவழைக்க முடிந்தது பாக்கியம் தான்

 

பாண்டியனும் திகைத்தார். அறிவாளியாகவும், அசராதவராகவும் பலராலும் பாராட்டப்பட்டு வந்த தனக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை நெருங்கி நிற்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தன்னுள்ளே எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தேவானந்தகிரியிடம் கேட்டார். “இதுக்கெல்லாம் காரணம் ஆவியா, இல்லை யாராவது மனுஷனா?

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. ஒருவரை கூர்ந்து பார்த்து அவருக்குள் உள்ள பிரச்சனையை கண்டறிய முடிந்த மந்திரவாதியாலே...! பிரம்மானந்தா ஒரு டுபாக்கூர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை...🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete