சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, February 16, 2022

மகாத்மாக்களின் தொடர்புகள்!

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 33



தியோசபிகல் சொசைட்டி அறிஞர்கள் பேசிய அளவுக்கு மகாத்மாக்கள் என்னும் உயர்சக்தி மனிதர்களை வேறு யாரும் பேசியதில்லை. ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும், தியோசபிகல் சொசைட்டியின் வேறுசில அறிஞர்களும் மகாத்மாக்களைச் சந்தித்ததாகவும், அவர்களிடமிருந்து ஆசிகளையும், அறிவுரைகளையும் பெற்றதாகவும் பலமுறை தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு யாரோ எழுதி அனுப்பிய சில கடிதங்களிலும் காலி இடங்களில் எல்லாம் மகாத்மாக்களின் குறிப்புகள் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். இப்போது அப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளையும் அவற்றிற்குப் பின் உள்ள ஆன்மிகக் காரணங்களையும் காண்போம்.

 

கர்னல் ஓல்காட் லடாக்கில் இருந்து காஷ்மீருக்குச் சென்றார். காஷ்மீர் மகாராஜாவும், திவானும், வேறுசில உயர் பிரமுகர்களும் ஆன்மிகத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தபடியால் கர்னல் ஓல்காட்டுக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சில நாட்கள் தர்பாருக்குச் சென்று ஆன்மிக விஷயங்களில் அளவளாவி விட்டுப் பின் மறுபடி லாகூர் வந்து தங்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் அவரும், அவருடன் வந்தவர்களும் இளைப்பாறினார்கள். அவர்களுடைய கூடாரங்களில் எல்லா வசதிகளும் சிறப்பான முறையில் தரப்பட்டிருந்தன. கர்னல் ஓல்காட்டுடன் ப்ரவுன் என்ற அறிஞரும் தங்கியிருந்தார். அவரும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவர் தியோசபிகல் சொசைட்டியில் உறுப்பினரும் கூட.

 

அப்படி ஒரு நாள் தன் கூடாரத்தில் கர்னல் ஓல்காட் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது அவரை யாரோ தொடுவதாக உணர்ந்தார்.  லாகூரில் வெட்டவெளியில் உள்ள கூடாரத்தில் இருப்பதால் சமூக விரோதிகள் யாராவது வந்திருக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் கர்னல் ஓல்காட் தன்னைத் தொட்டவரை இறுக்கிப் பிடித்தார். கண்களைத் திறக்கும் முன் அவருடைய வாய் கேள்விகள் கேட்டது. ”யார் நீ? என்ன வேண்டும் உனக்கு?”

 

என்னைத் தெரியாதா? என்னை நினைவில்லையா?” மிக இனிமையான குரல் ஒன்று அவரைப் பதிலுக்குக் கேட்க கர்னல் ஓல்காட் மெய்சிலிர்த்தபடி விழித்துக் கொண்டார். அது அவரை இதற்கு முன்னும் வந்து சந்தித்தும், தகவல்கள் அனுப்பியும் வந்த மகாத்மா! நோய் தீர்க்கும் முயற்சியிலும் அவருக்கு ஈடுபாடிருக்கவும், வெற்றி கிடைக்கவும் காரணமாய் இருந்தவர் அந்த மகாத்மா.

 

இறுக்கிப் பிடித்த கைகளைக் கூப்பி வணங்கியபடி கர்னல் ஓல்காட் உறக்கத்திலிருந்து விழித்தார். கருணையே வடிவாக அவர் அருகில் ஓரிரு நிமிடங்கள் நின்ற மகாத்மா கர்னல் ஓல்காட்டின் தலையைத் தொட்டு ஆசிர்வதித்து விட்டு அவர் கையைப் பிடித்தார். கையில் ஏதோ ஒன்று தரப்படுவதாக கர்னல் ஓல்காட் ஸ்பரிசத்தை உணர்ந்தார். பின் அந்த மகாத்மா மறைந்து விட்டார். கர்னல் ஓல்காட் எழுந்து அமர்ந்து பார்த்த போது ஒரு பட்டுத் துணியில் ஒரு கடிதம் அவருக்கென வைக்கப்பட்டிருந்தது. அதில் சீக்கிரத்தில் இறக்கப் போகும் இரண்டு நபர்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின் அடுத்ததாக அவர் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கையெழுத்து அவருக்கு எப்போதும் வரும் மற்ற கடிதங்களில் காலி இடங்களில் எழுதப்பட்டிருக்கும் கையெழுத்து தான்.

 

சிறிது நேரத்தில் ப்ரவுன் என்ற ஆங்கிலேய அறிஞர் அவருடைய கூடாரத்திற்கு விரைந்து வந்தார். அவர் கையிலும் கர்னல் ஓல்காட் கையில் இருப்பது போன்ற கடிதம் ஒன்று இருந்தது. அவருக்கும் அவர் அறிய வேண்டி இருந்த சில தகவல்களும், அடுத்துச் செய்ய வேண்டியிருந்த கடமைகளும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தன. ப்ரவுன் பிற்காலத்தில்இந்தியாவில் சில அனுபவங்கள்என்ற தலைப்பில் எழுதியதிலும் தியோசபிகல் சொசைட்டி பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை ஒன்றிலும் இந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதினார்.

 

அங்கு அவர்கள் தங்கியிருந்த சில நாட்களில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் காலை அவர்கள் எழுந்த போது அவர்கள் வேலையாள் தாமோதர் காணாமல் போயிருந்தான். தகவலறிந்தவுடன் கவலையுடன் எல்லா இடங்களிலும் அவனைத் தேடினார்கள். அவன் உடைமைகள் எல்லாம் அப்படியே அங்கிருந்தன. சுற்று வட்டாரத்தில் விசாரித்த போது அதிகாலையில் அவன் அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக ஒருவர் கூறினார். ஏனிப்படி நடந்து கொண்டான் என்று அறிய முடியாமல் குழப்பத்துடன் தன் கூடாரத்திற்கு வந்த போது வேறொரு மகாத்மாவின் ஒரு துண்டுச் சீட்டு கர்னல் ஓல்காட்டின் மேசையில் இருந்தது. தாமோதரைத் தன் பாதுகாவலில் வைத்திருப்பதாகவும் அவனைக் குறித்துக் கவலை எதுவும் வேண்டாம் என்றும் அவன் இரண்டு நாட்களில் திரும்பி விடுவான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 

காணாமல் போனவனைத் தேட எல்லாரும் அங்குமிங்கும் பரபரவென்று போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்ததால் கர்னல் ஓல்காட்டின் கூடாரத்திற்கு வெளியே எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள். ஆனலும் கர்னல் ஓல்காட்டின் கூடாரத்திற்குள் மகாத்மா போன்ற புதிய ஆள் நுழைந்ததை யாரும் பார்த்திருக்கவில்லை. அந்த மாஸ்டர் எப்போது எப்படி நுழைந்தார், எப்படி கடிதத்தை வைத்து விட்டுப் போனார் என்று கர்னல் ஓல்காட் வியந்தார்.

 

தாமோதர் காணாமல் போனதை லாகூரிலிருந்து கர்னல் ஓல்காட் சென்னையில் இருக்கும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குத் தந்தி மூலம் தெரிவித்தார். தந்தியில் அதிக விவரங்கள் எழுத முடியாததால் அவர் அந்த மகாத்மா விட்டுச் சென்ற சீட்டு விவரத்தை அவருக்குத் தெரிவிக்கவில்லை. மறுநாளே ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்து தந்தி வந்து சேர்ந்தது. “கவலை வேண்டாம். இரண்டு நாட்களில் வந்து விடுவான் என்று ஒரு மாஸ்டர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்

 

தந்தியை கர்னல் ஓல்காட்டிடம் தந்தது தபால்தந்தி ஊழியன். பொதுவாக மாஸ்டர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தந்தி வருமானால் தபால்தந்தி ஊழியர்கள் உருவில் வந்து போகிறவர்கள் உயர்நிலை மனிதர்களே என்பதை கர்னல் ஓல்காட் தன் அனுபவத்தில் பார்த்திருக்கிறார். இப்போது இந்தத் தந்தியைத் தந்தது ஊழியரா அல்லது உயர்நிலை மனிதர் யாராவதா என்று சந்தேகம் வர கர்னல் ஓல்காட் வெளியே ஓடிச் சென்று பார்த்தார். ஊழியராக இருந்தால் சுமார் ஐம்பதடிகள் கூடத் தாண்டியிருக்க முடியாது. அவர்கள் கூடாரம் வெட்டவெளியில் இருந்ததால், அருகில் மரங்களோ, மறைப்பது போல் பாறைகளோ இல்லாமலும் இருந்ததால் கண்டிப்பாக அந்த ஊழியன் காணக் கிடைத்தே ஆக வேண்டும். ஆனால் அந்த ஊழியன் வடிவில் வந்தவர் மறைந்திருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணக் கிடைக்கவில்லை.

 

மகாத்மாவின் துண்டுச் சீட்டின்படியும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் தந்தியின் படியும் இரண்டு நாட்களில் தாமோதர் வந்து சேர்ந்தான். அங்கிருந்து காணாமல் போகையில் மிகவும் பலவீனமாயும், சோர்ந்தும் இருந்த தாமோதர் இரண்டே நாட்களில் நிறைய மாறியிருந்தான். ஓரளவு திடகாத்திரமாகவும், விசேஷ சக்தியுடனும், தேஜஸுடனும் காணப்பட்டான். எங்கு போனான் என்று விசாரித்த போது இமயமலையில் இருக்கும் ஒரு மகாத்மாவின் ஆசிரமத்திற்குச் சென்றதாகவும் அவன் தெரிவித்தான்.

 

படிப்பறிவோ, பிரத்தியேக சூட்சும அறிவோ இல்லாத ஒரு வேலையாள் கூட ஆன்மிகத்தில் உண்மையான ஆர்வத்தைக் காட்டும் போது சில அபூர்வ சக்திகளைப் பெறுகிறான் என்பதற்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சென்னையில் விழுந்து காலில் கடுமையான காயம் ஏற்பட்டதை உடனடியாக வடநாட்டில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது அவன் நேரில் கண்டு வந்தது போல் சொன்னதே நல்ல உதாரணம். அது மட்டுமல்லாமல் அது போல் ஓரளவு முன்னேறியவர்கள் அடுத்த நிலைக்குச் செல்ல மகாத்மாக்களும் உதவுகிறார்கள் என்பதற்கு லாகூரில் அவன் காணாமல் போய் புத்துணர்ச்சியுடனும் தேஜஸுடன் திரும்பி வந்தது இன்னொரு உதாரணம்.

 

பொதுவாக ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுடைய பயணம் உப்புசப்பில்லாமலும், பெரிய மாற்றங்களும், புத்துணர்ச்சியும் இல்லாமலும் தேக்கநிலையிலேயே இருக்கின்றது என்பதே உண்மை. மகாத்மாக்களின் தொடர்பு அவர்கள் ஆன்மிகத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும், அவர்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்தவும் உதவுகின்றது.  அதன் மூலம் ஆன்மிகப் பயணத்தைத் துடிப்புள்ளதாகவும், சுவாரசியம் மிக்கதாகவும் ஆக்குகின்றது. அதுமட்டுமல்ல ஆன்மிக அன்பர்கள் வழிதவறிப் போய் விடாமல் காக்கின்றது. இந்த வகையில் தான் மகாத்மாக்களின் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி


இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும். வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்

1 comment:

  1. //ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுடைய பயணம் உப்புசப்பில்லாமலும், பெரிய மாற்றங்களும், புத்துணர்ச்சியும் இல்லாமலும் தேக்கநிலையிலேயே இருக்கின்றது// இதுபோல தான் எனக்கும் உள்ளது....
    விரைவில் உற்சாகமும் துடிப்பும் அடைய வேண்டும்...

    ReplyDelete