சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 17, 2021

யாரோ ஒருவன்? 32


தன்லாலுக்கு மூத்த ரா அதிகாரி காணாமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் முன்பே அறிந்த விஷயம் தான். ஆனால் அந்த இளம் அதிகாரி இத்தனை காலம் கழித்துக் காணாமல் போனது ஆச்சரியமாகத் தான் இருந்தது. சஞ்சய் ஷர்மாவைத் தன் ரக ஆளாகத் தான் மதன்லால் கணித்திருந்தான். அவன் ரக ஆட்கள் எப்போதும் தகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர்கள். அவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டாலும் கூட மாட்டிக் கொள்வதில்லை.  சட்டத்தில் மாட்டிக் கொள்வதை மதன்லால் ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. மாட்டினாலும் அதிலிருந்து தப்பிக்க ஆயிரம் வழிகள். அந்த வழிகளுக்கும் வழிவிட்டே சட்டம் ஒதுங்கி நிற்கிறது என்பதால் அந்த ஓட்டை வழிகளில் அனாயாசமாக ஒருவன் தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பகைத்துக் கொள்வதென்பது வேறு விஷயம். சக்தி வாய்ந்த மனிதர்கள் மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல எதிரிகளை நசுக்கி விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள். சஞ்சய் ஷர்மா அப்படி யாருடைய விரோதத்தையாவது சம்பாதித்து விட்டானா என்னஇந்தச் சிந்தனை ஓட்டத்தில் மனதை ஓட விட்ட மதன்லால் அவனையே நரேந்திரன் கூர்ந்து பார்ப்பதைக் கவனித்து சுதாரித்துக் கொண்டான்.

நரேந்திரன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “மணாலியில் அந்த வெடிகுண்டு சம்பவத்துக்குப் பின்னால் இன்று வரை வேறெந்த வெடிகுண்டு சம்பவமும் நடக்கவில்லை. அபூர்வமாக நடக்கும் சம்பவங்களின் தடயங்களையும், சம்பந்தப்பட்ட ஆட்களையும் கண்டுபிடிப்பதும் முடிவெடுப்பதும் போலீஸுக்கு முடியாத காரியமல்லவே மதன்லால். பின் ஏன் அதில் மெத்தனமாக இருந்து விட்டீர்கள்?”

மதன்லால் எரிச்சலுடன் சொன்னான். “நரேந்திரன், உண்மை நீங்கள் சொன்னதற்கு எதிர்விதமாக இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். எப்போதும் நடக்கும் சம்பவங்களின் பின்னணியைப் போலீஸால் யூகிக்க முடியும். சம்பந்தப்பட்ட ஆட்களைப் பிடிக்கவும் முடியும். ஆனால் அபூர்வமாக நடக்கும் சம்பவங்களின் பின்னணியை அனுமானிப்பது சுலபமல்ல. அது மட்டுமல்ல. ஒரு வழக்கின் பின்னாலேயே நாங்கள் இருந்து விட முடியாது. மற்ற வழக்குகளிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது…..”

உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா மதன்லால்?”

இல்லை நரேந்திரன்.”

இறந்து போன தமிழ்ப் பையனின் நண்பர்கள்?”

அவர்கள் அவனைக் கொல்லத் திட்டமிட்டு இருந்தால் தமிழ்நாட்டிலேயே அதைச் செய்திருக்கலாம். மணாலி வரை வந்து செய்ய வேண்டியதில்லை. அது மட்டுமல்ல. அவன் அந்த டாக்சியில் ஏறும் போது கூட அவர்கள் இருக்கவில்லை. அந்த டாக்சியில் அவன் ஏறுவான் என்பதைக் கூட அவர்கள் கணித்திருக்க வாய்ப்பில்லை….அதனால் அந்த டாக்ஸியில் அவர்கள் எப்படி வெடிகுண்டு வைத்திருக்க முடியும்?”

அப்படியானால் என்ன நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் மதன்லால்?”  

எந்த யூகத்திற்கும் வழியில்லாமல் எல்லாமே புதிராகத் தான் இருக்கிறது நரேந்திரன்

சிறிது நேரம் அவனையே நரேந்திரன் கூர்ந்து பார்க்க இனி எதுவும் சொல்வதற்கு இல்லை என்று உணர்த்தும் வகையில் முன்பு படிக்க ஆரம்பித்த ஃபைலை மறுபடியும் மதன்லால் சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தான். திடீரென்று நரேந்திரன் கேட்டான். “நீங்கள் அஜீம் அகமதை நேரில் பார்த்திருக்கிறீர்களா மதன்லால்?”

எதிர்பாராத அந்தக் கேள்வியால் தூக்கிவாரிப் போட்டது போல் திடுக்கிட்ட மதன்லால்  இல்லை என்று சொல்ல நினைத்தும் சொல்ல வாய் எழாமல் நரேந்திரனை வெறித்துப் பார்த்தான்.  அவன் நினைவுகள் மிகக் குறுகிய காலமான அந்த 87 வினாடிகளுக்குச் சென்றன. அத்தனை நேரம் தான் அவன் அஜீம் அகமது முன்னால் நிற்க அன்றைக்கு அனுமதி கிடைத்தது.    அந்த 87 வினாடிகளில் பத்து வினாடிகள் அஜீம் அகமது அவனை ஊடுருவிப் பார்த்தான். 76 வினாடிகள் பேசினான். சரியென்று சொல்ல மதன்லாலுக்கு ஒரு வினாடி தரப்பட்டது. அதன் பின் வெளியேற அனுமதி கிடைத்தது. வெளியே வந்த பிறகு ஒரு விஷயத்தை அவன் ஆழமாக உணர்ந்தான். இந்த மனிதன் பார்வையில் இனி படாமல் இருப்பது தான் பாதுகாப்பு….

வெறித்துப் பார்த்து முகம் வெளுத்த மதன்லாலிடமிருந்து நரேந்திரனுக்குப் பதில் கிடைத்து விட்டது. இனி தேவையான கேள்விகளுக்குச் சாதாரண வழியில் இவனைப் பதில் சொல்ல வைக்க முடியாது. வேறு விதமாகத் தான் கையாள வேண்டும்....

நரேந்திரன் எழுந்தான். “சரி மதன்லால். இந்த வழக்கு சம்பந்தமாக ஏதாவது ஞாபகம் வந்தால் எனக்குப் போன் செய்யுங்கள். வரட்டுமா?”

அவன் திடீரென்று கிளம்பியது மதன்லாலைத் திகைக்க வைத்தது. அவன் வெளியேறிய போது தான் ஒரு உண்மை அவனுக்கு உறைத்தது. நரேந்திரன் கேட்ட கடைசிக் கேள்விக்கு மதன்லால் பதில் அளிக்கா விட்டாலும் கூடக் காத்திருக்காமல் வற்புறுத்தாமல் அவன் எழுந்து போய் விட்டானே, ஏன்? மதன்லால் நரேந்திரனின் இந்தப் போக்கில் ஆபத்தை உணர்ந்தான். ஏதோ சரியில்லை….


தீபக்கும் தர்ஷினியும் ஷட்டுல்காக் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீட்டில் வெளியே ஆட்கள் தெரியாவிட்டாலும் உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்தால் இயல்பாய்த் தெரிய வேண்டும் என்பதற்காக ஒழுங்காகப் பத்து நிமிடங்கள் விளையாடிய தீபக் பதினோராவது நிமிடத்தில் அந்தக்காக்கை வேகமாக அடித்துப் பக்கத்து வீட்டில் விழ வைத்தான். பின் வேலாயுதத்தைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு அதை எடுக்கப் பக்கத்து வீட்டுக்குப் போனான்.  தர்ஷினி காம்பவுண்டு சுவர் வரை போய் நிற்க தீபக் வெளியே போய் பக்கத்து வீட்டு கேட்டைத் திறந்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வேலாயுதம் சொன்னார். “எனக்கு இவன் பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்த்தால் மாதவன் ஞாபகம் தான் வருது. அவனை மாதிரியே தான் எல்லாம் செய்யறான்…”

கல்யாண் எதுவும் சொல்லாமல் தீபக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.  தீபக் பக்கத்து வீட்டின் போர்ட்டிகோவில் விழுந்திருந்தகாக்கை எடுக்காமல்அங்கிள்என்று அழைத்தான். இரண்டு முறை அழைத்த பிறகு மெள்ள சுதர்ஷன் வெளியே வந்தான்.

விளையாடறப்ப காக் இங்கே விழுந்துடுச்சு. எடுத்துக்கறேன் அங்கிள்என்று தீபக் சொன்ன போது சுதர்ஷன் அவனையே திகைப்புடன் பார்த்தபடி சிலை போல நின்றான். பார்த்துக் கொண்டிருந்த கல்யாணுக்கும், வேலாயுதத்துக்கும் அது இயல்பாய் தெரியவில்லை. அந்த வீட்டு வாசலில் வெளியாள் ஒருவன் அழைக்காமலேயே வந்து நிற்கக்கூடும் என்று அந்த ஆள் எதிர்பார்க்கவில்லையோ?     

தீபக்கும் அந்தத் திகைப்பைக் கண்டு திகைத்தான். ’ஏன் இந்த ஆள் இப்படிப் பார்த்துகிட்டே சிலை மாதிரி நிக்கறார்?’

தீபக் சுதர்ஷனின் செய்கையை விசித்திரமாக உணர்ந்ததை வெளிக்காட்டாமல் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். “நான் தீபக் அங்கிள். டாக்டருக்குப் படிச்சுகிட்டு இருக்கேன். மூனாவது வருஷம்.... நீங்க எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க அங்கிள்சொல்லிக் கொண்டே தீபக் கைகுலுக்கத் தன் கையை நீட்ட சுதர்ஷனும் மெல்லத் தன் கையை நீட்டிக் குலுக்கினான்.

சுதர்ஷன் அவனை ஆழமாகப் பார்த்தது போல் இருந்தது. தற்செயலாக காக் இங்கே விழுந்து அதை எடுக்கத் தான் வந்திருக்கிறான் என்பதை அவன் நம்பவில்லையோ என்ற சந்தேகம் தீபக்குக்கு வந்தது.

மெல்ல சுதர்ஷன் அரைகுறைத் தமிழில் சொன்னான். “நான் சுதர்ஷன். வட இந்தியாவிலிருந்து வந்திருக்கோம்....”

... உங்க குடும்பத்தோட வந்திருக்கீங்களா?”

இல்லை என் முதலாளியோட வந்திருக்கேன்....”

தீபக் கூடுதலாக எதாவது தகவல் வரும் என்று சில வினாடிகள் காத்தான். அதற்கு மேல் எதுவும் வரவில்லை என்றான பிறகும் திரும்பிப் போக அவனுக்கு மனமில்லை. அவன் புன்னகையுடன் சொன்னான். “பக்கத்து வீடு என் ஃப்ரண்ட் வீடு. எங்க வீடும் ரேஸ் கோர்ஸில் தான். சாரதாம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கோம்.” 

சுதர்ஷன் தலையை ஆட்டி விட்டுச் சொன்னான். “நீங்க காக்கை எடுத்துக்கோங்க...”

இதற்கு மேல் அங்கே நிற்கச் சரியான காரணம் காட்ட முடியாததால் தீபக் ஏமாற்றத்துடன்தேங்க்ஸ் அங்கிள்என்று சொல்லி விட்டு மிக நிதானமாக அந்தக்காக்கை எடுத்தான். நாகராஜ் வெளியே வந்தால் எப்படியாவது பேச்சை வளர்த்து வீட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டது நடக்காது போல் இருக்கிறது...

அந்தச் சமயத்தில் கதவைத் திறந்து கொண்டு நாகராஜ் வெளியே வந்தான்.



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. very interesting and thrlling

    ReplyDelete
  2. மதன்லால்க்கும் ஒரு கடத்தல் சம்பவம் உண்டு....
    தீபக் அங்க போனானா? இல்லை நகராஜ் வரவைத்தானா???

    ReplyDelete