சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 15, 2019

இல்லுமினாட்டி 9



மயத்தின் தெற்குப் பகுதியிலிருந்து வந்த முதலாமவன் விஸ்வம் என்ற பெயருடையவன். அவனை முதலில் சந்தித்த இல்லுமினாட்டி உறுப்பினர் இந்தியாவைச் சேர்ந்த நவீன்சந்திர ஷா என்பவன். உலக வங்கியின் வைஸ் பிரசிடெண்டாக இருக்கும் அவன் இந்தியா சென்றிருந்த போது ஓஷோவின் ஒரு வாரத் தியான வகுப்பில் விஸ்வத்தைச் சந்தித்தான். விஸ்வத்துக்கு நவீன்சந்திர ஷா ஒரு இல்லுமினாட்டி என்று தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. தன்னிடம் இருக்கும் அபூர்வ சக்திகளை லேசாக வெளிப்படுத்திய விஸ்வம் அந்தச் சமயத்தில்  நவீன்சந்திர ஷாவிடம் சிறுவயதிலிருந்தே தனக்கு வரும் கனவைப் பற்றித் தெரிவித்தான்.

“ஏதோ ஒரு பெரிய பிரம்மாண்டமான கட்டிடம்…. அதன் அஸ்திவாரத்தில் ஒரு பெட்டி இருக்கிறது….. பெட்டியின் மீது ஒரு பிரமிடும் அதன் நடுவில் ஒரு கண்ணும் கொண்ட படம் தெரிகிறது. அந்தக்கட்டிடம் இடிக்கப்பட்டு சிலர் அந்தப் பெட்டியைக் கண்டுபிடித்துத் திறந்து பார்க்கிறார்கள். ஒரு பழங்காலச் சுவடி இருக்கிறது. யாரோ சொல்கிறார்கள். ”இதில் உன்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறது”. அதோடு நான் விழித்துக் கொள்கிறேன். எனக்கு இந்தக் கனவில் எதுவுமே புரியவில்லை. ஆனாலும் என் ஏழாவது வயதில் இருந்து வருடத்துக்கு ஒரு தடவையாவது இந்தக் கனவு வருகிறது….” அதோடு ஏதோ ஒரு ரகசிய சக்தி இயக்கத்தில் சேர் என்று ஆழ்மனதில் ஒரு குரல் தனக்கு அடிக்கடிச் சொல்வதாகவும் சொன்னான்.

அதைக் கேட்டவுடன் ஆரகிள் எச்சரிக்கையும், சிகாகோ மேசன் கோயிலும் நினைவுக்கு வர நவீன்சந்திர ஷா இல்லுமினாட்டியின் தலைமைக்குழு ஐவரில் ஒருவருக்கு அதைத் தெரிவித்தான். இல்லுமினாட்டியின் தலைமைக்குழு அவனிடம் இல்லுமினாட்டி இயக்கம் குறித்து எதையும் சொல்ல வேண்டாம் என்று எச்சரித்து அவனைக் கூர்ந்து கவனித்து வரும் படி அறிவுறுத்தியது. நவீன்சந்திர ஷா அப்படியே தன் புதிய நண்பனைக் கவனித்தான். தியான வகுப்பின் கடைசி நாளில் பேச எழுந்த ஒரு பேச்சாளரை பேச விடாமல் சிறிது நேரத்திற்குப் பேசும் சக்தியை இழக்க வைத்தும், தியானம் பற்றிப் பேச எழுந்த ஒரு இளைஞனை காதல் பற்றிப் பேச வைத்தும் விஸ்வம் நவீன்சந்திர ஷாவை ஆச்சரியப்படுத்தினான்.

அதையும் நவீன்சந்திர ஷா இல்லுமினாட்டிக்குத் தெரிவிக்கவே இதில் ஏதும் தில்லுமுல்லு இல்லை என்பதை உறுதி செய்ய வேறிரண்டு உறுப்பினர்களை லண்டனுக்கு இல்லுமினாட்டி அனுப்பி வைத்தது. விஸ்வத்தையும் லண்டனுக்கு வரவழைத்தார்கள். அங்கும் அவர்கள் இருவர் மனதில் வித்தியாசமாக நினைத்ததையும் விஸ்வம் கண்டுபிடித்துச் சொல்லி அசத்தினான். அவன் கனவும், அவன் சக்திகளும் சேர்ந்து ஆரகிள் சொன்ன ஆள் அவனே என்று அடையாளம் காட்டுவதாக அவர்களும் சொன்னார்கள். இந்தியாவில் ஒரு ரகசிய ஆன்மீக இயக்கத்தில் இருந்த அவன் அந்த இயக்கத்தின் பெரும் நிதியையும் இல்லுமினாட்டிக்கு அனுப்பி இல்லுமினாட்டியுடன் இணைந்து கொண்டான். புதிய உறுப்பினரான விஸ்வம் இல்லுமினாட்டியின் பல உறுப்பினர்கள் மனதில் பிரமிப்பை ஏற்படுத்தினான்.   

அதற்குச் சில நாட்களுக்கு முன் ஏலியன் ஒன்றின் வரவை இஸ்ரோ விஞ்ஞானிகள் பதிவு செய்தார்கள். அவர்களது செயற்கைக் கோள் எடுத்தப் புகைப்படங்களில் அந்த ஏலியன் தமிழக அமைச்சர் ஒருவரின் மகனும், ஒரு ஜீனியஸுமான க்ரிஷ் என்ற இளைஞனைத் தொடர்பு கொண்டதும் பதிவாகி இருந்தது. அந்த இளைஞன் அதைப்பற்றி யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. உலக முக்கிய நிகழ்வுகள் எதிலும் முழு விவரங்களை உடனடியாகப் பெறுவதில் என்றுமே தாமதிக்காத இல்லுமினாட்டி அவனிடம் பேசி நடந்த தகவல்களை அனைத்தையும் பெற்று வரும்படி தங்கள் இல்லுமினாட்டி உறுப்பினரும், இந்திய செயற்கைக் கோள் மற்றும் வானியல் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு ஆலோசகருமான விஸ்வேஸ்வரய்யா என்பவரை கிரிஷிடம் பேச அனுப்பியது.

தான் ஒரு இல்லுமினாட்டி உறுப்பினரும் கூட என்பதை மறைத்து அரசின் வானியல் ஆராய்ச்சி சிறப்பு ஆலோசகர் என்பதாக மட்டும் க்ரிஷிடம் விஸ்வேஸ்வரய்யா அறிமுகம் செய்து கொண்டு ஏலியன் சந்திப்பை இஸ்ரோ அறிய நேர்ந்ததாகவும் அது குறித்த உண்மைகளைக் கூற வேண்டும் என்றும் அவர் க்ரிஷிடம் வேண்டிக்கொண்டார்.  விஸ்வேஸ்வரய்யாவிடம் க்ரிஷ் ஏலியன் தன்னைச் சந்தித்ததையும், தன்னுடன் நட்பானதையும், உலகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்று எச்சரித்ததையும், அப்படி அழிக்க அவன் எதிரியான ஒரு பேரறிவாளன் கிளம்பி இருக்கிறான் என்பதையும், அதை க்ரிஷ் தடுக்க முடியும் என்பதையும் தெரிவித்ததைச் சொன்னான். விஸ்வேஸ்வரய்யா அவனிடம் தொடர்ந்து பேசியதில் அந்த எதிரி விஸ்வம் தான் என்பது க்ரிஷுக்குத் தெரிய வந்ததாகவும் தெரிந்தது. க்ரிஷின் குருவாக மாறியிருந்த மாஸ்டர் என்பவர் தான் விஸ்வம் முன்பு உறுப்பினராக இருந்த ரகசிய ஆன்மீக இயக்கத்தின் தலைவர் என்பதும் தெரிந்தது. விஸ்வேஸ்வரய்யா அங்கு நடந்த உரையாடல் பதிவை எர்னெஸ்டோவுக்கு அனுப்பி வைத்தார்.

அதை முழுவதும் கேட்ட எர்னெஸ்டோ பெருங்குழப்பத்தில் ஆழ்ந்தார். ஏலியனால் தொடர்பு கொள்ளப்பட்ட க்ரிஷும் இமயத்தின் தென்பகுதியில் இருப்பவன். அவன் குணாதிசயங்களில் குறை எதுவும் தெரியவில்லை. மந்திரியின் மகனாக இருந்த போதும் சின்னத் தவறுகள் கூடச் செய்யாதவன். ஜீனியஸாக இருந்த போதும் சிறிய அகம்பாவம் கூட இல்லாதவன். ஆரகிள் சொன்னபடியே ஏலியனும் பூமிக்கு அழிவு வரக்கூடும் என்று சொல்லிருயிருக்கிறது. ஆரகிள் அத்துடன் இல்லுமினாட்டிக்கும் அழிவு வரக்கூடும் என்று கூடுதலாகவே சொல்லி இருக்கிறது. ஏலியன் சொன்னது போல் விஸ்வம் அழிக்க வந்தவனாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் மெல்ல எழும்பியது. க்ரிஷின் இளமைக்காலம் முதலான தகவல்கள் அவரால் பெற முடிந்தது. அவனுடைய தந்தை மந்திரியாக இருந்ததால், அவன் ஜீனியஸாக இருந்ததால் அவனைப் பற்றித் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. ஆனால் விஸ்வத்தின் கடந்த காலத்தின் பெரும்பகுதி மூடுமந்திரமாகவே இருந்தது. அவன் தனியனாகவே வாழ்ந்ததாலும், உலகத்தின் கவனத்திற்கு அதிகம் வராதவனாக இருந்ததாலும் அவனுடைய தனிப்பட்ட விஷயங்கள் எதுவும் தெரிய வரவுமில்லை.

இந்தச் சூழ்நிலையில் இல்லுமினாட்டியின் சின்னம் ஒன்றை இமயமலையின் பனிக்குகையில் தவமிருந்த ஒரு யோகியிடம் இருந்து விஸ்வம் பெற்று வந்தான். அவனிடம் கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தான். அந்தச் சின்னம் அவன் கையில் இருக்கும் போது அடிக்கடி ஒளி வீசியது. அந்த யோகி இல்லுமினாட்டியிலிருந்து அதன் நலனுக்காகத் தவமிருக்க பல ஆண்டுகளுக்கு முந்தைய உறுப்பினர் அகஸ்டின் என்பவர் எனத் தெரிய வந்த போது எர்னெஸ்டோவின் குழப்பம் அதிகரித்தது. ஏலியன் அழிவிலிருந்து காப்பவனாக க்ரிஷை அடையாளம் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இல்லுமினாட்டியின் சின்னத்துடனேயே விஸ்வம் வந்திருப்பதும், அவனுடைய பழைய கனவுகளைச் சொன்னதும் அவனையே ஆரகிள் சொன்ன ஆளாக அடையாளம் காட்டியது. இவர்களில் யார் உண்மையான காப்பாளன் என்பதை முடிவு செய்ய முடியாமல் தவித்த எர்னெஸ்டோ முடிவில் இருவரையுமே ஒரே மேடையில் பேச வைக்கத் தீர்மானித்தார். இல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும் என்று எண்ணினார்.

ஆனால் இல்லுமினாட்டியின் வரலாற்றிலேயே இல்லுமினாட்டி கூட்டத்தில் இல்லுமினாட்டியின் உறுப்பினரல்லாத ஒருவர் கலந்து கொண்டதில்லை. க்ரிஷை அழைத்துப் பேச வைப்பது இல்லுமினாட்டி விதிகளுக்கு மாறானது. இல்லுமினாட்டி உண்மையா கற்பனையா என்ற குழப்பத்துடன் உலகம் இருக்கையில்  உறுப்பினர் அல்லாத க்ரிஷ் இல்லுமினாட்டி இருப்பதைத் தெரிந்து கொள்வதுடன் அதன் உறுப்பினர்களை நேரில் கண்டு பேசுவது அந்த அமைப்புக்கே ஆபத்து என்பதால் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து தன் பக்கத்துக் கருத்துகளை ம்யூனிக்கில் நடக்கும் இல்லுமினாட்டி கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லி அனுப்பினார்கள். தனியாகத் தான் வர வேண்டும், கண்களைக் கட்டிக் கொண்டு தான் பேச வேண்டும் என்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அவன் பேச வந்தது இல்லுமினாட்டியை வியக்கத்தான் வைத்தது.

அந்தக் கூட்டத்தில் முதலில் விஸ்வம் பேசினான். அவன் பேசும் போது அவனுக்கு இல்லுமினாட்டியின் தவசி அகஸ்டின் தந்த பிரமிடு நெற்றிக்கண் சின்னத்தை பேச்சு மேடையிலேயே வைத்துக் கொண்டான். அவன் பேசிய போது சில சமயங்களில் அந்தச் சின்னம் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் முன்னிலையிலேயே மின்னியது.

“இமயமலையின் தெற்கில் உள்ள இந்தியாவில் பெருமையாய் எதுவும் சொல்ல முடியாத ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆனால் உள்ளத்தில் ஒரு அக்னியோடு பிறந்தவன். எதையும் தெரிந்து கொள்ளும் அக்னி, எதிலும் ஆழம் வரையும், உச்சம் வரையும் போகும், அக்னி, எதையும் அறிந்து முடிக்காமல் தணியாத அக்னி எனக்குள் இருந்தது. ஒன்றை எடுத்துக் கொண்டபின் அதை வசப்படுத்தாமல் நான் இருந்ததில்லை. அதுவரை நான் இளைப்பாறியதில்லை. அரைகுறைகளில் நான் திருப்தி அடைந்ததில்லை. எனக்கு உதவாத விஷயங்களில் உலாவப் போனதில்லை. இந்த அக்னி எத்தனையோ அமானுஷ்ய சக்திகளை வசமாக்க எனக்கு உதவியது. எத்தனையோ உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. ஆனால் இத்தனையும் எதற்கு, எதைச் சாதிக்க, என்று என்னால் எதையும் குறிப்பாகச் சுட்டிக்காட்ட நீண்ட காலம் முடியவில்லை…..” என்று பேச ஆரம்பித்தவன் இத்தனையும் இல்லுமினாட்டியில் இணையவும், அதை உயர்த்தவும் தான் தன்னிடம் இருந்தது என்றும், அதையே அவன் அடிக்கடி கண்ட கனவுகளும், அகஸ்டின் அவனிடம் அந்தச் சின்னத்தைத் தந்ததும் புரிய வைப்பதாகச் சொன்னான்.

அவன் முன்பு இருந்த இந்திய அமைப்பின் செல்வத்தை இல்லுமினாட்டிக்குப் பெரும்பகுதியை அனுப்பியபடியே சில தீவிரவாத இயக்கங்களுக்கும் அனுப்பி அவற்றுடன் நட்பில் இருப்பதை அவன் தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டான். இனி எதிர்கால உலக நிகழ்வுகளைத் தீர்மானிப்பதில் அந்த தீவிரவாத இயக்கங்கள் பெரும்பங்கு வகிக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினான். மகாசக்திகளும், பலவீனமில்லாத மனமும், கூர்மையான அறிவும் கொண்ட அவன் இல்லுமினாட்டிக்காகவே பிறந்தவன் என்று அப்போது இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தான்.

க்ரிஷ் அங்கே வர மறுத்திருந்தால், அங்கு வந்து பேசாமல் இருந்திருந்தால் எர்னெஸ்டோ ராஜினாமா செய்த பிறகு அடுத்த தலைவனாகவே விஸ்வத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் அளவு அனைவர் மனதிலும் விஸ்வம் இடம் பெற்றிருந்தான்.

ஆனால் அங்கே க்ரிஷை வரவழைத்துப் பேச வைத்ததன் மூலம் விதி நிகழ்வுகளின் போக்கை மாற்றி விட்டது…

(இந்த அத்தியாயமும், அடுத்த அத்தியாயமும் இருவேறு உலகம் படித்திராத, இல்லுமினாட்டி நாவலின் புதிய வாசகர்களுக்காக இல்லுமினாட்டி பார்வையில் சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால் பழைய வாசகர்கள் பொறுப்பார்களாக!)

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. ஒரு வாரம் காக்கிறதே கஷ்டமா இருக்கு. ரெண்டு வாரம் வெய்ட் பண்ணச் சொல்றீங்களே சார். ரொம்பவே கஷ்டம் தான். என்ன செய்யறது?

    ReplyDelete
  2. When the book will release sir? Just curious to know about the Eswar who did Pd.D in psycology and plan to bring him back like Amanisiyan in any other story.

    ReplyDelete
  3. Innum two weeks wait pannanuma?
    Seekirame next week varanum......

    ReplyDelete
  4. Sir நான் உங்கள் எழுத்தின் தீவிர ரசிகை.. உங்களை பார்த்து ஒவ்வொரு கணமும் வியக்கிறேன்.உங்கள் எழுத்துக்கும் உங்களுக்கும் என் வணக்கங்கள்

    ReplyDelete
  5. அடுத்து வரும்...கிரிஷின் பேச்சுக்காகவே... இன்னொரு முறை இந்த தொடரை சிரமில்லாமல் படிக்கலாம்....

    ReplyDelete