சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 26, 2019

சத்ரபதி 87


லி ஆதில்ஷா பீஜாப்பூர் வந்து சேர்ந்த போது அவனுக்கு லாக்கம் சாவந்த் சிவாஜியிடம் சரணாகதி அடைந்த செய்தியும், சிவாஜியின் எல்லா நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டு சமாதானம் செய்து கொண்ட செய்தியும் வந்து சேர்ந்தது. லாக்கம் சாவந்த் எங்கே இருக்க வேண்டும் என்பதை சிவாஜி தீர்மானித்திருந்தான். அங்கேயே லாக்கம் சாவந்த் தங்கினான். அவன் படை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று சிவாஜி சொல்லி இருந்தானோ அந்த அளவை லாக்கம் சாவந்த் தாண்டவில்லை. அவன் கோட்டைகளை வலிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று சிவாஜி உத்தரவிட்டிருந்தான். அதையும் லாக்கம் சாவந்த் ஏற்றுக் கொண்டிருந்தான். சிவாஜி அவன் சத்தியத்தை மட்டும் நம்பவில்லை.  அவன் சத்தியத்தை மீற முடியாத அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டே சமாதானத்தை ஏற்றுக் கொண்டான்.

லாக்கம் சாவந்த் மறைவாக இருந்த காலத்தில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த போர்ச்சுகீசியர்கள் அவன் சிவாஜியை எதிர்த்துப் படையெடுத்துச் செல்வதற்கும் தேவையான பீரங்கிகளையும், மற்ற ஆயுதங்களையும் கொடுத்து உதவியிருந்தார்கள். சிவாஜி எதிரிகளை மட்டுமல்லாமல் எதிரிகளுக்கு உதவுபவர்களையும் விட்டு வைப்பதில்லை என்பதால் கோவாவில் கோலோச்சி வந்த போர்ச்சுகீசியர்கள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களையும் அடிபணிய வைத்த செய்தி வந்து சேர்ந்தது. போர்ச்சுகீசியர்கள் ஏராளமான ஆயுதங்களையும், பணத்தையும் கொடுத்து சிவாஜியுடன் சமாதானம் செய்து கொண்டார்கள் என்று அலி ஆதில்ஷா கேள்விப்பட்டான். இப்போது கொங்கன் பகுதி முழுவதும் சிவாஜியின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

சிவாஜி பதுங்கும் போது இருக்கும் சுவடு தெரியாமல் அமைதியாக இருந்தாலும் பாயும் போது வேகமாகப் பாய முடிந்தவன். சோர்வேயில்லாமல் செயல்பட முடிந்தவன். அப்படிச் செயல்படும் போது ஒவ்வொரு அடியும் வேகமாகச் சிந்தித்து வைக்கக்கூடியவன். போர்ச்சுகீசியர்களையும் அடக்கி வைத்த பின்னர் அவன் அலி ஆதில்ஷா முன்பு அவனிடம் இருந்து கைப்பற்றிய கோட்டைகளைத் திரும்பக் கைப்பற்ற ஆரம்பித்தான். ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் கோட்டைகள் சிவாஜி வசமாயின.

அந்தச் செய்தியும் வந்து சேர்ந்த போது அலி ஆதில்ஷாவின் தாய் பதறினாள். ”மகனே ஏதாவது செய்” என்று வேண்டினாள். அலி ஆதில்ஷா எதுவும் செய்ய முடியாமல் திணறினான். நாலா புறமும் பிரச்சினைகள் வெடிக்கையில், அனைத்துமே தலைவலியாக இருக்கையில், எதைச் சரி செய்வது, எப்படிச் சரி செய்வது என்று அவனுக்குப் புரியவில்லை. 

அவன் தாய் வெறுப்பனைத்தையும் தேக்கிச் சொன்னாள். “மகனே சிவாஜியை இப்படியே விட்டு விடக்கூடாது. அவன் நம் ஊழியனின் மகன். அவன் நம்மை மிஞ்சி விட நாம் அனுமதிக்கக்கூடாது”

அலி ஆதில்ஷா விரக்தியான தொனியில் தாயிடம் சொன்னான். “அன்னையே! உங்கள் விருப்பமே என் விருப்பமும். உங்களை விட ஆயிரம் மடங்கு நான் அதைத் தீவிரமாக உணர்கிறேன். ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு வழி எதுவும் புலப்படவில்லை.  மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள் என எல்லா இடங்களிலும் அவன் சாமர்த்தியமாகச் சமாளிக்கிறான். நம் பலம் அதிகரிக்கும் போது பதுங்குகிறான். நம் பலம் குறையும் போதும், கவனம் வேறு பக்கம் திரும்பும் போதும் அவன் நம்மைத் தாக்குகிறான். அவனைச் சமாளிக்கும் முயற்சியில் நம் படையின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே ஒழிய முடிவான பலன் எதுவும் கிடைக்கவில்லை. கர்னாடகப் பிரச்சினை பெரிதாகி விட்டிராமல் இருந்தால் இந்த முறை மும்முனைத் தாக்குதலில் சிவாஜியை முழுவதுமாக வெற்றி கொண்டிருக்க முடியும். ஆனால் சூழ்நிலையும் அவனுக்குச் சாதகமாகவே இருக்கிறது. என்ன செய்வது!”

அவன் தாய் ஔரங்கசீப் அவள் மகனை அடிபணிய வைத்த போது கூட இவ்வளவு அவமானத்தை உணர்ந்ததில்லை. அவர்களிடம் ஊழியம் புரியும் ஒருவர் மகன் முன் இப்படித் தோற்று நிற்கிறோமே என்ற அவமான உணர்வில் குறுகிப் போனாள்.

அவள் சொன்னாள். “ஏதாவது செய்தே ஆக வேண்டுமல்லவா மகனே!”

சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு அலி ஆதில்ஷா களைப்புடன் சொன்னான். “ஆம் தாயே! அவனிடம் பகைமை பாராட்டுவதை விட சமாதானம் செய்து கொள்வதே உத்தமம் என்று எனக்குத் தோன்றுகிறது.  இனி நானும் செய்ய வேண்டியது அதைத்தான்.”

அவள் திகைப்புடன் சொன்னாள். “அது தோல்வியை ஒப்புக் கொள்வது போல அல்லவா மகனே!”

அலி ஆதில்ஷா சொன்னான். “அது பார்க்கின்ற கோணத்தைப் பொருத்தது தாயே. மலையா தலையா என்ற போட்டி வருமேயானால் மலை மீது மோதி ஜெயிக்க மூளையுள்ள தலை முயற்சிக்கக்கூடாது. முடியாததை முடியாதது என்று உணர்ந்து பின் வாங்குவது தோல்வியல்ல,  புத்திசாலித்தனமே அல்லவா? நான் நிம்மதியாக உறங்கி பல காலம் ஆகி விட்டது தாயே. இனியும் அவனுடன் தொடர்ந்து மோதும் சக்தி எனக்கில்லை…..”

அவன் தாய் மகனை வேதனையுடன் பார்த்தாள். அதிர்ஷ்டம் சிவாஜியைப் போன்ற சிலரைத் தொடர்ந்து துரத்துகிறது; அவள் மகன் போன்ற சிலரைத் திரும்பியும் பார்ப்பதில்லை. அவள் மகன் அரியணை ஏறியதிலிருந்து எத்தனை எத்தனை பிரச்சினைகள்…. மகனுக்காக அந்தத் தாயின் மனம் உருகியது.

அவள் கேட்டாள். “சமாதானப் பேச்சுக்கு யாரை அனுப்பப் போகிறாய் மகனே. அவனைப் போன்ற சூழ்ச்சி நிறைந்தவன் பேச்சு வார்த்தையில் ஒன்றை ஒப்புக் கொண்டாலும் சொன்ன வாக்கில் நிலைத்து நிற்பான் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?”

அலி ஆதில்ஷா சொன்னான். “அவனிடம் பேச அவன் தந்தையையே அனுப்புவதாக இருக்கிறேன் தாயே. தந்தையிடம் கொடுத்த வாக்கை அவன் நிச்சயம் மீற மாட்டான்….”

அவள் மௌனமாகத் தலையசைத்தாள். பின் ஆறாத மனதுடன் ஆதங்கத்துடன் கேட்டாள். “அவனை அடக்க முடிந்தவர்கள் யாருமே இல்லையா?”

அலி ஆதில்ஷா பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான். “இந்துஸ்தானத்தின் தென்பகுதியில் அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை தாயே. முகலாயப் பேரரசர் ஒருவரால் தான் இன்றைய சூழ்நிலையில் சிவாஜியை அடக்கி வைக்க முடியும்”

“நீ அரியணை ஏறியவுடனேயே இங்கு வரை பெரும்படையோடு வந்து பிரச்சினை செய்த அந்த ஆள் ஏன் சிவாஜி விஷயத்தில் மட்டும் இன்னும் எதுவும் செய்யாமல் இருக்கிறார்? அவனுடைய அதிர்ஷ்டம் அங்கேயும் வேலை செய்திருக்கிறது பாரேன்” என்று ராஜமாதா அங்கலாய்த்தாள்.


ரங்கசீப்பை எட்டிய தென் திசைச் செய்திகள் அவனுக்கு ஒரு பேராபத்தின் அறிகுறியைத் தெரிவித்தன. பீஜாப்பூரின் ராஜமாதாவைப் போல் அவன் அதிர்ஷ்டத்தை நம்பியவன் அல்ல. சிவாஜியின் அதிர்ஷ்டம் அவனை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கிறது என்று அவன் நினைக்கவில்லை. முன்பே அவன் கவனித்திருந்தது போல சிவாஜி சின்னச் சின்ன விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டே கச்சிதமாக இயங்கி இருக்கிறான் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

சிவாஜி என்ற தனிமனிதன் ஒரு இயக்கமானதும், மாபெரும் சக்தியாக உருவாகியதும், பீஜாப்பூர் சுல்தானைப் பணிய வைத்ததும் அவன் மூளையில் இறுதி எச்சரிக்கை மணியை அடித்தன. சிவாஜி என்னும் அலை இப்போது பேரலையாக மாறியிருக்கிறது. இந்த அலையை அணை கட்டி நிறுத்தா விட்டால் பெரும் வெள்ளமாக வடக்கு நோக்கியும் வரக்கூடும். எல்லாப் பிரச்சினைகளையும் ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளே எழாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வதற்கு அடுத்தபடியான புத்திசாலித்தனம் அதுவே. அதனால் சிவாஜியை இப்போதே ஒழித்துக்கட்டா விட்டால் நாளைய பெருந்தலைவலியாக உருவாக முடிந்தவன் அவன் என்று உணர்ந்த ஔரங்கசீப் அவன் தாய்மாமன் செயிஷ்டகானை உடனடியாகக் கூப்பிட்டனுப்பினான்.

முகலாய அரசின் தக்காணப் பீடபூமியின் கவர்னராக முன்பிருந்த ஔரங்கசீப் அரியணை ஏறிய பின் அந்தப் பதவிக்கு தாய்மாமன் செயிஷ்டகானை நியமித்திருந்தான். செயிஷ்டகான் தற்போது தலைநகர் வந்திருப்பதால் சிவாஜியை அடக்கும் பணியை அவனிடம் ஒப்படைக்க ஔரங்கசீப் தீர்மானித்து விட்டான்.

செயிஷ்டகான் வந்தவுடன் தாய்மாமனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அமரச் சொன்ன ஔரங்கசீப் சிவாஜியைப் பற்றியும் அவன் இது வரை செய்திருக்கும் காரியங்களைப் பற்றியும் விரிவாகச் சொன்னான். செயிஷ்டகான் அதையெல்லாம் கேட்டு விட்டு “சிவாஜியை இந்த அளவு வளர அனுமதித்த அலி ஆதில்ஷா பலவீனமானவன் மட்டுமல்ல முட்டாளும் கூட” என்று சொன்னான்.

ஔரங்கசீப் வரண்ட குரலில் சொன்னான். “சிவாஜியை வளர அனுமதித்தது அலி ஆதில்ஷா மட்டுமல்ல. ஓரளவு நாமும் கூடத்தான். அதனால் அந்த பலவீனத்திலும், முட்டாள்தனத்திலும் நமக்கும் ஒரு சிறுபங்கு இருக்கிறது மாமா. அந்த பலவீனத்தையும், முட்டாள்தனத்தையும் இனியும் நாம் நீட்டிக்கக்கூடாது. அவனை ஒழித்துக் கட்ட வேண்டும்.”

ஷெயிஷ்டகான் சொன்னான். “எழுபதாயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையைத் திறமையானதொரு படைத்தலைவன் தலைமையில் அனுப்பி வைக்கலாம். இது வரை அந்த அளவு பெரும்படையை அவன் சந்தித்ததில்லை. நம் படை நிச்சயம் அவனை ஒழித்துக்கட்டித் திரும்பி வரும்”

ஔரங்கசீப் சொன்னான். “அதெல்லாம் அவனைச் சமாளிக்கப் போதும் என்று நினைக்கவில்லை மாமா. மூன்று லட்சம் வீரர்கள் கொண்ட பெரும்படையோடு நீங்களே போக வேண்டும். அவன் வீழ்ந்தான் என்ற செய்தியோடு என்னை வந்து சந்திக்க வேண்டும்”



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Three lakh soldiers are sent by Aurangazeb against Sivaji. This shows how high he thought and fear of Sivaji. Nice way of explaining sir.

    ReplyDelete
  2. ஒரு வழியாக அலிஆதில்ஷா பிரச்சனை முடிவுக்கு வந்ததும்... அடுத்த பிரச்சனையா? இதை எவ்வாறு சிவாஜி கையாளப் போகிறானோ?

    ReplyDelete