சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, April 17, 2019

இரு மனிதர்களின் ஆன்மிகப் பயணத்தின் ஆரம்பம்!


ரு மனிதனின் ஆன்மிகப் பயணத்தில் உண்மையான இலக்கு மெய்ஞானமாகவே இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்த பின் அவன் அடைய வேண்டிய அதற்கடுத்த நிலை என்று ஏதும் இல்லை. அதற்குப் பின்னர் அவன் அறிய வேண்டிய ஞானமும் வேறிருக்க முடியாது. மெய்ஞானம் அனைத்தையும் அவனுக்களித்து அவன் வாழ்க்கையைப் பரிபூரணமாக நிறைத்து விடுகிறது. அந்தப் பரிபூரண மெய்ஞானத்தை நோக்கிச் செல்லும் ஆன்மிகப் பயணத்தில் மனிதன் பெறும் ஆத்மசக்திகள் ஏராளம். அவை தூர இருந்து பார்ப்பவர்களுக்கு அற்புதங்களாகவும், மகாசக்திகளாகவும் தெரியலாம். ஆனால் ஆன்மிகப்பாதையில் சிறிது தூரமாவது உண்மையாகவே பயணித்தவர்களுக்கு அவை இயல்பான விளைவுகளாகவே தெரியும்.

அப்படி ஆன்மிகப்பயணத்தில் ஆத்மசக்திகளை உணர்ந்தவர்கள் பண்டைய காலம் தொட்டே நம் பாரதத்தில் நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். சித்தர்களும், யோகிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணிய பூமியில் ஆத்மசக்திகளின் உச்சங்களுக்கு பஞ்சமிருக்கவில்லை. (அது போன்ற சித்தர்கள், யோகிகள் குறித்து தினத்தந்தியில் முன்பு வெளிவந்த மகாசக்தி மனிதர்கள் தொடரிலும், நூலிலும் நான் எழுதியிருந்ததைப் பல வாசகர்கள் படித்திருக்கலாம்.) நம் பாரதம் உலகின் பல்வேறு இடங்களில் பிறந்து வளர்ந்த ஆன்மிகத்தேடல் உடையவர்களையும் இங்கே வர ஈர்த்து இருக்கிறது. அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலெனா பெட்ரோவ்னா ப்ளாவட்ஸ்கீ (Helena Petrovna Blavatsky ) அவர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஓல்காட் (Colonel Henry Steel Olcott) அவர்களும். இவர்கள் இருவரும் தான் தியோசொபிகல் சொசைட்டி என்றழைக்கப்படும் ஆன்மிக அமைப்பை நிறுவியவர்கள்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் குணாதிசயங்களிலும், இருந்த நிலைகளிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் 1831 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தவர். பருமனான தோற்றமுடையவர். சிறு வயதிலிருந்தே ஆன்மிக, அமானுஷ்ய விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனிமையில் பல நாடுகளுக்குப் பயணித்தவர். ஆங்கில,  ரஷிய, ஜார்ஜிய, அரபு,  இத்தாலிய,  பிரெஞ்சு, சமஸ்கிருத மொழிகளை அறிந்திருந்தவர். கர்னல் ஓல்காட் அமெரிக்காவில் 1832 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டவர். பத்திரிக்கையில் பணி புரிந்தவர். அமெரிக்க உள்நாட்டுப் போர் சமயத்தில் இராணுவத்தில் பணி புரிந்தவர். பின் இன்சூரன்ஸ், நிதி மோசடி வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் புலனாய்வில் பங்கு கொண்டவர். இப்படி ஆன்மிக ஆர்வத்தைத் தவிர மற்ற எல்லா விதங்களிலும் வித்தியாசப்பட்ட இவர்கள் இருவரும் தற்செயலாக அமெரிக்காவில், நியூயார்க் நகரில் 1874 ஆம் ஆண்டு சந்தித்தார்கள். சந்தித்துப் பேசுகையில் சமீப காலங்களின் கலாச்சாரச் சீர்குலைவுகளையும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பணமே பிரதானமாகி வரும் அவல நிலைமையையும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்த விதம் கர்னல் ஓல்காட்டை மிகவும் பாதித்தது. எல்லா சீர்குலைவுகளுக்கும் தீர்வாக இந்தியா, திபெத் போன்ற கிழக்கத்திய நாடுகளின் ஆன்மிகம் இருக்கிறது என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறியது கர்னல் ஓல்காட்டின் மனதில் நம் இந்தியா குறித்த பேரார்வத்தை உருவாக்கியது.

ஆன்மிகத்தில் ஆர்வம் இருந்த போதிலும் கிழக்கத்திய ஆன்மிகத்தில் அதிகப் பரிச்சயம் இருந்திராத கர்னல் ஓல்காட் தொடர்ந்த சந்திப்புகளில் அந்த ஆன்மிக ஞானத்தை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். அந்த அம்மையாருடனான நட்பு கர்னல் ஓல்காட்டை முற்றிலும் புதிய மனிதராக மாற்றி விட்டது. அவர் சைவத்திற்கு மாறினார், மது குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார். அவர் வாழ்க்கை ஒழுங்குமுறைக்கு மாறியது. ஆனால் அவரை மாற்றிய ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தன் புகைப்பழக்கத்தைக் கடைசி வரை விட முடியாதவராக இருந்தார், பல பழக்க வழக்கங்களில் ஒழுங்கு முறை அனுசரிக்கத் தவறினார் என்பது தான் வேடிக்கை. இருந்த போதிலும் ஆன்மிக ஆழத்திலும், சில அசாதாரண சக்திகளைப் பெற்றிருந்ததிலும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டை பெரும் வியப்பிலாழ்த்தினார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பண்டைய ஆன்மிக ஞானம் கலப்படமில்லாமல், இடைச்செருகல்கள் இல்லாமல் தூய்மையாக இருந்தது எனவும் அதை மீட்டெடுத்து உலகிற்கு வழங்குவது தான் பெரிய சேவை என்று சொன்னதில் கர்னல் ஓல்காட்டுக்கு முழுமையான உடன்பாடு இருந்தது. இது தன் கருத்து அல்ல என்றும் இமயமலையில் நிறைய யோகிகள், மகாஞானிகள் உடலோடும், உடல் இல்லாமல் அருவ நிலையிலும் உலாவி வருகிறார்கள் என்றும் அத்தகைய ஞானிகளில் ஒருவருடைய உபதேசம் தான் இக்கருத்து என்றும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தெரிவித்த போது கர்னல் ஓல்காட் அடைந்த பிரமிப்பு சாதாரணமானதல்ல.

அதை விரிவாக அப்போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விளக்க முனையவில்லை. ஆனால் அப்படிப்பட்ட எத்தனையோ உயர்ந்த ஆத்மாக்கள் இருக்கின்றன, அவை நினைத்த போது உருவமெடுத்து வரவும் முடியும், மற்ற நேரங்களில் அருவமாகவே இருக்கவும் முடியும் என்பது நம்பக் கஷ்டமானாலும் பேருண்மை என்று மட்டும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். இந்த உபதேசத்தைச் சொன்ன ஞானி அவரை அமெரிக்காவில் நியூயார்க் நகருக்குச் செல்லும்படியும் அங்கு அதற்கான வழி கிடைக்கும் என்றும் கூடச் சொன்னதாக ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்ன போது கர்னல் ஓல்காட் தன்னுடைய இதயத்தில் ஆழமான ஆன்மிக வேட்கையை உணர்ந்தார். அது தனக்கும் தரப்பட்ட செய்தியாக அவர் நினைத்ததால் அந்த புராதன தூய்மையான ஞானத்தை உலகில் பரப்ப இருவரும் சேர்ந்து ஏதாவது செய்யலாம் என்ற கருத்தை கர்னல் ஓல்காட் சொன்னார். அதன் விளைவாக 1875 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தியோசபிகல் சொசைட்டி என்ற அமைப்பு உருவானது.

தியோசபிகல் சொசைட்டியை நிறுவிய நோக்கம் இந்த மூன்றாக இருந்தது- 

1.     ஜாதி, மதம், இனம், நிறம் முதலான பேதங்களைக் கடந்த உலகளாவிய மானுட சகோதரத்துவத்தை நிறுவுதல்

  2. மதங்கள், தத்துவங்கள், விஞ்ஞானம் மூன்றையும் ஆழமாக அறிந்து கொள்ள ஊக்குவித்தல்

 3. விளக்க முடியாத இயற்கை விதிகளையும், மனிதனிடம் உள்ள மகாசக்திகளையும் ஆராய்ந்து அறிதல்

மிக உயர்ந்த நோக்கத்துடன் தியோசபிகல் சொசைட்டியை உருவாக்கிய பின் பல ஆன்மிக நூல்களைப் படித்தல், கட்டுரைகளை எழுதுதல் போன்ற பணிகளை இருவரும் தொடர்ந்து செய்தார்கள். ஆரம்பத்தில் தன்னிடமிருந்த அபூர்வ சக்திகள் எதையும் கர்னல் ஓல்காட்டிடம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால் ஒரு நாள் அதற்கான வாய்ப்பு உருவாகியது. கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் ஆன்மிக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு இத்தாலியக் கலைஞர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைப் பார்க்க வந்தார். வந்தவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் பேசுகையில் பேச்சோடு பேச்சாக ஒரு மகாசக்தியாளர் பெயரைச் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டதும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் உடல் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்தது. “என்னது? நான் தயார்என்று அவர் சொன்னார். கர்னல் ஓல்காட்டுக்கு ஒன்றும் புரியவில்லை.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னதை அந்த இத்தாலியக் கலைஞரும் பொருட்படுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார். ஆனால் பேச்சு மேஜிக், மகாசக்திகள், சக்தியாளர்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அந்த இத்தாலியக் கலைஞரும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் மிகவும் ஆர்வமாகப் பேசிக் கொண்டார்கள்.

திடீரென்று இத்தாலியக் கலைஞர் எழுந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்த அறை ஜன்னல் கதவைத் திறந்து சிறிது நேரம் கைகளை ஆட்டி எதையோ அழைப்பது போல சைகைகள் செய்தார். ஒரு தூய வெள்ளை நிறப் பட்டாம்பூச்சி உள்ளே பறந்து வந்து அறையைச் சுற்றி விட்டுக் கூரைச் சுவரில் அமர்ந்தது.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார்இது என்ன பெரிய விஷயம். நானும் செய்வேன்என்று சொல்லி அந்த இத்தாலியக் கலைஞர் செய்தது போலவே ஜன்னல் அருகே சென்று கைகளால் சைகை செய்தார். இன்னொரு தூய வெள்ளை நிற பட்டாம்பூச்சி இறக்கைகளைப் படபடத்துக் கொண்டு அறைக்குள் வந்தது. அதுவும் அப்படியே அறையைச் சுற்றி வந்து கூரைச் சுவரில் முதல் பட்டாம்பூச்சி அருகே அமர்ந்தது. அதோடு நிற்காமல் முதல் பட்டாம்பூச்சியை துரத்திக் கொண்டு செல்ல அறைக்குள்ளே இரண்டும் பறந்தன. கர்னல் ஓல்காட் ஆச்சரியத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் இரண்டு பட்டாம்பூச்சிகளும் மறைந்தன. பிறகு தான் கர்னல் ஓல்காட்டுக்குத் தெரிந்தது- இரண்டு பட்டாம்பூச்சிகளும் இயற்கையானவை அல்ல, அவர்கள் இருவராலும் உருவாக்கப்பட்டவை என்று!

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி - 9.4.2019

5 comments:

  1. ஆரம்பமே சுவாரஸ்யமாக செல்கிறது.... அருமை

    ReplyDelete
  2. அருமையாக ஒரு புதிய தொடர் - மகிழ்ச்சியான வாசகர் ஒருவரின் வாழ்த்துக்கள் -
    நன்றி

    ReplyDelete
  3. ஆ.பாலசுப்ரமணியன்April 19, 2019 at 4:50 PM

    தியோசபிகல் சொசைட்டி என்னும் அமைப்பு உள்ளது என்பதை மட்டும் அறிவேன்.அதனைக் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. sir theosophical society .. 'The key to theosophy' book tamil mozhiyil irukka...?

    ReplyDelete
  5. தமிழில் வந்திருப்பது போல் தெரியவில்லை.

    ReplyDelete