சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 8, 2018

சத்ரபதி 41


வெற்றி பலருக்கும் ஒரு போதையாகவே இருக்கிறது. அதைக் கொண்டாடும் மனநிலையில் வெற்றி பெற்றுத் தந்தவர்களை நினைத்துப் பார்க்கவும் பெரும்பாலும் பலருக்கு நேரமிருப்பதில்லை. சிவாஜி அதற்கு விதிவிலக்காக இருந்தான். கல்யாண் நிதியைத் தன் கஜானாவில் சேர்த்தவன் அடுத்ததாகக் கவனித்த காரியம் இந்தத் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பங்களையும், காயப்பட்ட வீரர்களையும் தான். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்குத் தாராளமாக நிதி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தியவன். காயப்பட்டவர்களின் சிகிச்சைக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் கூட அதே பெருந்தன்மையைக் காட்டினான். இது அந்தக்கால அரசாட்சியில் சற்று அபூர்வமாகவே இருந்தது. பெயருக்கு ஏதாவது தந்த அரசர்கள் அது அந்தக் குடும்பத்துக்குப் போதுமானதா என்றெல்லாம் கவனித்ததில்லை. தங்களுக்குத் தோன்றியதைத் தருவார்கள். கிடைப்பதைப் பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தாங்களாகவே தங்களுக்குத் தகுந்த வேலைகளைத் தேடிக் கொண்டு சமாளித்து வாழ வேண்டியிருந்தது. அதனால் சிவாஜி உடனடியாகக் காட்டிய பெருந்தன்மை வீரர்கள் மத்தியில் பெருத்த விசுவாசத்தைக் கூட்டியது. இவனுக்காக நாம் உயிரையும் தரலாம். நம் குடும்பத்தை இவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையான மனநிலை பெரும் சக்தியாக வீரர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிவாஜி நியமித்திருந்த ஒன்பது தலைவர்களும் தங்கள் திட்டப்படி கோட்டைகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். அந்த ஒன்பது ஆக்கிரமிப்புகளிலும் கூட உயிர்ச்சேதம் அதிகம் இருக்கவில்லை. தந்திரங்களும் யுக்திகளும் உடனடிப் பிரயோகங்களும் சேர்ந்து எளிதிலேயே வெற்றி வாகையைச் சூடித்தந்தன. அக்காலக் கோட்டைக் காவலர்கள் குறைந்த ஊதியத்தில் பணி புரிபவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேலைச்சூழலும் எளிதாக இருக்கவில்லை. பெருமழைகளில் நனைந்தும், கடும் வெயிலில் உலர்ந்தும், பாடுபடும் அவர்களுக்கு உகந்த ஊதியமும், அங்கீகாரமும் ஆள்பவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. அதனால் நல்ல தொகைகளுடன் சிவாஜியின் ஆட்கள் அவர்களை அணுகிய போது அவர்கள் கோட்டைகளின் பலவீனங்களையும், உள் ரகசியங்களையும் சொல்லப் பெரிய தயக்கம் காட்டவில்லை. அத்துடன் வணிகர்களாகவும், வேலையாட்களாகவும் சிவாஜியின் வீரர்களை கோட்டைக்குள் அனுமதிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. ரகசியங்களைப் பெற்று, உள்ளே புக அனுமதியும் பெற்ற பிறகு தாக்குதல்களில் வெற்றி பெறுவது சிவாஜியின் ஆட்களுக்குக் கடினமாக இருக்கவில்லை. காவலர்களுக்குத் தலைவர்களான அதிகாரிகளும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் பணிபுரிந்ததால் அவர்களும் விலைபோகிறவர்களாகவே இருந்தார்கள். அதனால் திட்டப்படியே கோட்டைகள் மளமளவென்று சிவாஜியின் ஆதிக்கத்திற்குள் வந்தன.

அபாஜி சோன் தேவ் கல்யாண் பகுதியில் வெற்றிகரமாக நுழைந்து முல்லானா அகமதைச் சிறைப்படுத்தினான். கல்யாண் அப்பிராந்தியத்தின் சக்தி மிகுந்த பகுதியாகக் கருதப்பட்டதால் தகவலைக் கேள்விப்பட்டு சிவாஜி தன் வீரர்களுடன் உற்சாகமாகக் கிளம்பி கல்யாண் நகருக்குள் நுழைந்தான். சிவாஜியின் வீரமும், பெருந்தன்மையும், உயர்குணங்களும் முன்கூட்டியே அப்பகுதிகளில் பரவியிருந்ததால் சிவாஜி தங்கள் பகுதிகளை வென்றதை அப்பகுதிக் குடிமக்களும், அதிகாரிகளும் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்ததாகவே கருதினார்கள். கல்யாண் நகரும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஒரு அரசனுக்குரிய உற்சாகமான வரவேற்பு சிவாஜிக்குக் கிடைத்தது.

மக்களது உற்சாகத்திலும், வரவேற்பிலும் மனம் நெகிழ்ந்த சிவாஜி தாதாஜி கொண்டதேவை நினைத்துக் கொண்டான். அவர் சொன்னது போல் இவர்களின் நலத்தைப் பேணுவதாலேயே இறைவனின் ஆசியைப் பெற முடியும் என்பதை என்றைக்கும் மறக்கக்கூடாது என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டான்.

கல்யாண் தலைவன் முல்லானா அகமதை உரிய மரியாதையுடன் பீஜாப்பூருக்கு சிவாஜி அனுப்பி வைத்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். தோற்றவர்களிடம் பெருந்தன்மை காட்டுவது அவர்களுக்குப் புதிது. சிறைப்படுத்துதல். அவமானப்படுத்துதல், அடிமையாக்கி விற்கப்படுதல், துரத்தப்படுதல் இவை எல்லாம் தான் அவர்கள் இது வரை பார்த்திருந்தவை. ஆனால் சிவாஜி, எதிரணியில் இருப்பவர்கள் எல்லாம் எதிரிகள் என்று எண்ணவில்லை. பலமிழந்தவர்களைத் துன்புறுத்தி இன்பம் காணவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அங்கிருந்து செல்லும் போது முல்லானா அகமதுவும் மானசீகமாகவே சிவாஜிக்குத் தலை தாழ்த்தி வணங்கி விட்டுச் சென்றான்.

கல்யாண் பகுதியின் நிர்வாகப் பொறுப்பை அபாஜி சோன் தேவுக்கே தந்த சிவாஜி அங்கு நிர்வாகத்திலும் தங்கள் பகுதிகளின் முறைகளையே பின்பற்ற உத்தரவு பிறப்பித்தான். தாதாஜி கொண்டதேவின் வழிமுறைகளாக இருந்த நியாயமான ஊதியம், நியாயமான வரிகள், தகுதிக்கும் திறமைக்கும் உரிய மரியாதை, ஏற்ற பதவிகள் அங்கும் ஏற்படுத்தப்பட்டன. அங்குள்ள அதிகாரிகள், பிரபுக்களுடன் இது குறித்து அவன் பேசி முடித்த போது அபாஜி சோன் தேவ் சிவாஜியிடம் சொன்னான். “சிவாஜி. வெற்றி மீது வெற்றி கண்ட உங்களுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் பரிசு ஒன்றைத் தர நினைக்கிறேன்”

சிவாஜி சிரித்துக் கொண்டே சொன்னான். “பரிசு என்பதை மட்டும் சொல். அது பிரமிக்க வைப்பது தானா என்று நான் தான் தீர்மானிக்க வேண்டும்”

அபாஜி சோன் தேவ் கண்களால் சமிக்ஞை செய்ய வீரர்கள் பேரெழில் கொண்ட பெண் ஒருத்தியை சிவாஜி முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்த அழகு சிவாஜியை உண்மையாகவே பிரமிக்க வைத்தது. அவன் அப்படி ஒரு அழகை இது வரை பார்த்ததில்லை. 

சிவாஜி கேட்டான். “யாரிந்தப் பெண்?”

”முல்லானா அகமதின் மருமகள்….” என்று அபாஜி சோன் தேவ் சொன்னான்.

வென்ற நாட்டின் செல்வங்கள் மட்டுமல்ல அழகான பெண்களும் கூட வென்றவனுக்கே சொந்தம் என்பது அக்காலத்தின் நியதியாக இருந்தது. அது வெற்றியின் உரிமையாகக் கருதப்பட்டது. அழகான பெண்கள் வென்ற அரசனின் அந்தப்புரத்திற்கு அனுப்பப்படுவார்கள். அதனால் அபாஜி சோன் தேவ் அப்படிப்பட்ட ஒரு பேரழகியைப் பார்த்த பின் தன் இளம் தலைவனுக்குச் சொந்தமாக வேண்டியவள் என்று முடிவெடுத்திருந்தான்.

சிவாஜி ஒன்றும் பேசாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள். சிவாஜி புன்னகையுடன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். “உன் அழகில் ஒரு பகுதி என் தாயிடம் இருந்திருந்தால் நானும் அழகனாய் பிறந்திருப்பேனோ என்னவோ?”

அந்தப் பெண் திகைப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இந்த வார்த்தைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை…..

சிவாஜி அபாஜி சோன் தேவிடம் சொன்னான். “உன் அன்புக்கு நன்றி அபாஜி. ஆனால் பெண்கள் பரிசுப் பொருள்கள் அல்ல. வெற்றியில் பெண்களை ஒருவனுக்கு எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பதையும் என் மனோதர்மம் மறுக்கிறது. அடுத்தவன் மனைவியை அபகரித்துச் சென்ற இராவணன் அந்த ஒரு பாவச்செயலாலேயே தன் அனைத்து பலங்களையும் இழந்து அழிந்து போன கதையைக் கேட்டு வளர்ந்தவன் நான். இத்தனைக்கும் அவன் வேதங்களைக் கரைத்துக் குடித்தவன், பத்து தலை அவனுக்கு. அத்தனையும் அறிவு. உடல் பலம். பணபலம் எதிலுமே அவனிடம் குறைவிருக்கவில்லை. அத்தனையும் இழக்க வைத்தது சீதா பிராட்டியின் கண்ணீர். நான் என் கணக்கில் இந்தப் பெண்ணின் கண்ணீர் சேர்வதை விரும்பவில்லை…”

அபாஜி சோன் தேவ் மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை பேரும் சிவாஜியை வியப்புடன் பார்த்தார்கள். சிவாஜி அபாஜி சோன் தேவை அருகில் அழைத்து அவன் காதுகளில் ஏதோ சொன்னான். உடனடியாக விரைந்து சென்ற அபாஜி சோன் தேவ் ஒரு பெரிய வெள்ளித் தட்டில் பட்டாடைகளும், தங்க நகைகளும் வைத்துக் கொண்டு வந்து தந்தான்.

சிவாஜி எழுந்து சென்று அவற்றை அந்தப் பெண்ணிடம் தந்தான். “இதை உன் சகோதரன் கொடுப்பதாக எண்ணிப் பெற்றுக் கொள் பெண்ணே. உன்னை உன் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்க இப்போதே ஏற்பாடு செய்கிறேன். போய் வா”

அதைப் பெற்று கொண்ட போது அந்தப் பெண் கண்கள் கலங்கியிருந்தன. அவனை பிரமிப்பு தீராமல் அவள் பார்த்தாள். சிவாஜி கைகூப்பி அவளை வணங்கி தகுந்த துணையுடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தான். அவளும் கூப்பிய கைகளைப் பிரிக்காமலேயே அவனைத் திரும்பிப் பார்த்தபடி போனாள்.

அந்தச் செய்தி நாடெங்கும் தீயாகப் பரவ ஆரம்பித்தது. சிவாஜி வீரன் மட்டுமல்ல, பெருந்தன்மையானவன் மட்டுமல்ல, பெண்களையும் மதிக்கும் உத்தமன், மிக நல்லவன் என்ற அபிப்பிராயம் அனைவர் மனதிலும் வேரூன்ற ஆரம்பித்தது.. அப்படி ஒருவனை யாரும் இது வரை பார்த்ததில்லை. அப்படி ஒருவன் உண்மையில் இருக்கக்கூடும் என்று கூட நம்பியிருக்கவில்லை. கதைகளில் மட்டுமே கேள்விப்பட்ட உன்னதங்களை நேரில் பார்க்க முடியும் போது ஏற்படும் பிரமிப்பே பலருக்கும் ஏற்பட்டடது.

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. Sivaji is really great. Hats off!

    ReplyDelete
  2. இராமாயண உதாரணமும், சீர்வரிசையை அந்தப் பெண்ணிற்கு சகோதரனாகத் தந்தனுப்புவதும் சூப்பர். சிவாஜியின் உயர்வைப் படிப்படியாக உயர்த்திக் காட்டி மனதில் உட்கார வைக்கிறீர்கள் சார்.

    ReplyDelete
  3. sivaji is assuming larger than life dimensions. great.

    ReplyDelete
  4. சிவாஜியின் செய்கைகள் அனைத்தும் ரொம்ப..ரொம்ப அருமையாக இருக்கிறது..
    அந்த பெண்ணிடம் நடந்து கொள்ளும் விதம் அற்புதம்....

    ReplyDelete
  5. ஜீஜாபாயை சிவாஜியியன் செவிலித் தாயாகத் தான் நான் பார்க்கிறேன். சிவாஜியை ஈன்றெடுத்த உண்மையான பாக்கியசாலி பாரதத் தாய்!

    ReplyDelete