என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 16, 2019

இருவேறு உலகம் – 136


க்ரிஷை உள்ளே அழைத்து வந்தார்கள். கண்கட்டுடனேயே முன் வரிசையில் அமர வைத்தார்கள். பேச்சு மேடையில் மட்டும் மங்கலாய் ஒரு விளக்கு எரிய மற்ற விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தன. கண்கட்டுடன் உள்ளே நுழைந்த க்ரிஷை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்த விஸ்வம் எழுந்து மேடைக்குப் போனான். அவன் கையில் பிரமிடு நெற்றிக்கண் சின்னம் இருந்தது. பேச்சு மேடைக்குப் பின் நின்றவன் அந்த மேடை மீது எல்லாருக்கும் தெரிகிறாற்போல் அந்த பிரமிடு நெற்றிக்கண்ணை வைத்தான். சிலர் மட்டும் தான் அதை அவனிடம் முன்பு பார்த்திருக்கிறார்கள். இப்போது எல்லோரும் பார்க்கட்டும் என்று வைத்தான். வைத்தவுடன் அந்தக் கண் ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது. இருட்டில் அமர்ந்திருப்பவர்களின் முகம் தெரியாவிட்டாலும் அவனால் அவர்கள் முகத்தில் தெரிந்திருக்கக்கூடிய பிரமிப்பை உணர முடிந்தது. இந்த ஒரு கணத்திற்காகவாவது க்ரிஷின் கண்களைத் திறக்க வைத்து அவன் முக உணர்ச்சிகளைப் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. அத்தனை பேர் கண்களும் அவன் மீது பதிந்திருக்க புன்னகையுடன் கம்பீரமாக விஸ்வம் பேச ஆரம்பித்தான்.

“அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! இல்லுமினாட்டி என்ற மகத்தான இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். இங்கு யாருமே சாதாரணமானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கே சாதாரணமானவர்களுக்கு இடம் இல்லை. இங்கிருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்து தங்களை நிரூபித்துக் கொண்ட பின் இங்கே இணைந்தவர்கள். அப்படிப்பட்ட உங்களில் என்னையும் ஒருவனாக ஏற்றுக் கொண்டதுடன் என்னைப் பற்றி முழுமையாகப் பேச, பேசித் தெளிவுபடுத்த என்னை அழைத்திருக்கிறீர்கள். இதை எனக்களித்த பெரிய கவுரமாக நான் நினைக்கிறேன். இந்த வாய்ப்புக்கு என் நன்றிகள்!”

“இமயமலையின் தெற்கில் உள்ள இந்தியாவில் பெருமையாய் எதுவும் சொல்ல முடியாத ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆனால் உள்ளத்தில் ஒரு அக்னியோடு பிறந்தவன். எதையும் தெரிந்து கொள்ளும் அக்னி, எதிலும் ஆழம் வரையும், உச்சம் வரையும் போகும், அக்னி, எதையும் அறிந்து முடிக்காமல் தணியாத அக்னி எனக்குள் இருந்தது. ஒன்றை எடுத்துக் கொண்டபின் அதை வசப்படுத்தாமல் நான் இருந்ததில்லை. அதுவரை நான் இளைப்பாறியதில்லை. அரைகுறைகளில் நான் திருப்தி அடைந்ததில்லை. எனக்கு உதவாத விஷயங்களில் உலாவப் போனதில்லை. இந்த அக்னி எத்தனையோ அமானுஷ்ய சக்திகளை வசமாக்க எனக்கு உதவியது. எத்தனையோ உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. ஆனால் இத்தனையும் எதற்கு, எதைச் சாதிக்க, என்று என்னால் எதையும் குறிப்பாகச் சுட்டிக்காட்ட நீண்ட காலம் முடியவில்லை…..”

“ஆனால் சிறு வயதில் இருந்தே ஒரு கனவு மட்டும் எனக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் கனவில் பலமாடிகள் கொண்ட பிரம்மாண்டக் கட்டிடம். அதன் அஸ்திவாரத்தில் ஒரு பெட்டி. அந்தப் பெட்டிக்குள் ஒரு சுவடி. ”அந்தச் சுவடிக்குள் உன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது” என்ற ஒரு குரல் கேட்கும். உடனே விழித்துக் கொள்வேன். அது என்ன கட்டிடம், எங்கே இருக்கிறது, அஸ்திவாரத்தில் ஒரு பெட்டியையும், அதற்குள் ஒரு சுவடியையும் யார் ஏன் வைத்தார்கள், அதில் என்னைப் பற்றி என்ன எழுதி இருக்கிறது இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இங்கே இணைந்த பின்னர் சிலர் அரைகுறையாக சிகாகோவின் இல்லுமினாட்டி கோயில் கதையோடு என் கனவு இணைந்து இருப்பதைச் சொன்னார்கள். அதுவும் முழுமையாக இப்போதும் தெரியாது. ஆனாலும் இல்லுமினாட்டியோடு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் இணைக்கப்பட்டவன், இங்கே வருவதற்காகவே வளர்ந்தவன் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.”

“இல்லுமினாட்டி பற்றித் தெரிவதற்கு முன் இந்தியாவின் ஒரு ரகசிய ஆன்மிக இயக்கம் பற்றிச் சிலர் பெருமையாகச் சொன்னார்கள். அங்கே மாஸ்டர் என்று எல்லோராலும் அறியப்படும் மனிதர் பற்றியும் அங்கு  பெரிய பெரிய மேதைகள் எல்லாம் உறுப்பினர்களாக மேதைகள் இருப்பது பற்றியும் சொன்னார்கள். கிட்டத்தட்ட இல்லுமினாட்டியின் சாயல் அதற்கு இருந்ததாலோ என்னவோ அதனால் ஈர்க்கப்பட்டு நான் இணைந்தேன். உலக நன்மை, மானுட நன்மை வேண்டி அதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே தவம் இருந்தது. அதைப் பெரிய விஷயமாக அவர்கள் பேசவும் செய்தார்கள். எனக்கு அது முட்டாள்தனமாகப் பட்டது. அவனவன் நன்மையை அவனவனே அதிகம் விரும்ப வேண்டும். அதற்காக அவனவனே அதிகம் உழைக்க வேண்டும். அடுத்தவனால் எவனும் உயர்வது தற்காலிகமாக முடியலாமே ஒழிய நிரந்தரமாக அது முடியவே முடியாது. அடுத்தவனுக்காக நீ வேண்டுவதும் உழைப்பதும் அடுத்தவனைச் சோம்பேறியாக்கும் முட்டாள்தனமே ஒழிய அதில் உயர்வு எதுவும் இல்லை என்று உறுதியாக நினைப்பவன் நான்.”

“அந்த இயக்கத்தில் பல வேடிக்கையான முட்டாள்தனங்கள் நிறைய இருந்தன. மாஸ்டர் என்று பலராலும் பூஜிக்கப்படும் ஒரு மனிதர் பல சக்திகளையும் தன் வசப்படுத்தியவர். அவர் குருவால் அவர் பிரிய சிஷ்யன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவர்கள் இருவரே தலைமையில் இருந்தார்கள். அந்த இயக்கத்திற்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. நிறைய பணம் இருந்தது. அதை முறையாக நிர்வாகம் செய்யவோ, அதிகப்படுத்தவோ அவர்களுக்குத் தெரியவில்லை. உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அவர்களாக ஏதாவது அனுப்பினால் அதை வைத்துக் கொள்வார்கள். அவ்வளவு தான். ஒரு தலைமை தன் இயக்கம் உயர்ந்து கொண்டே போக வேண்டும், வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்று ஆசைப்படவும், அதற்காகக் கடுமையாக உழைக்கவும் வேண்டும் என்று ஆணித்தரமாய் நினைக்கும் எனக்கு அது ஏமாற்றத்தைத் தந்தது. கணக்கில் நான் திறமைசாலியாக இருந்ததால் நிதி நிர்வாகத்தை என்னிடம் விட்டார்கள். பின் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நோக்கமும் பயனில்லாதது, தலைவர்களும் உள்ளத்தில் அக்னி இல்லாதவர்கள், உறுப்பினர்களும் சுரத்தில்லாதவர்கள் என்கிற வகையில் இருக்கும் ஒரு இயக்கத்தில் சேர்ந்து விட்டேனே என்று அதில் பின்னால் நான் மனம் கசந்தேன். இப்போது யோசிக்கையில் புரிகிறது நான் ஒரு இல்லுமினாட்டி போன்ற இயக்கத்தை அங்கே எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன் என்று…”

இல்லுமினாட்டி உறுப்பினர்கள் எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள். விஸ்வம் அவர்கள் மனதில் ஒரு பலமான அஸ்திவாரம் போட்டு உயர ஆரம்பித்திருந்தான்.

விஸ்வம் தொடர்ந்தான். “அந்த சோம்பேறிக் கூட்டத்தில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் உறுதியாக எழ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தான் இல்லுமினாட்டியின் உறுப்பினர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் இல்லுமினாட்டி உறுப்பினர் என்பது தெரியாமலேயே நட்பானேன். அவரிடம் எனக்கு அடிக்கடி வரும் கனவைப் பற்றிச் சொன்னேன். அவர் உடனடியாக அதற்கு விளக்கம் கொடுத்து விடவில்லை. கேட்டுக் கொண்டார். அவ்வளவு தான். அவர் என்னுடைய சில சக்திகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். பின் சில காலம் கழித்து அந்தச் சக்திகளை அவர் நண்பர்கள் சிலரிடமும் கூட வெளிப்படுத்திக் காட்டச் சொன்னார். பின்னால் தான் தெரிந்தது. அவர்கள் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் என்று. அவர்கள் இல்லுமினாட்டி பற்றிச் சொன்னார்கள். இணையச் சொன்னார்கள். உடனே இணைந்தேன். என் வாழ்நாள் பூராவும் நான் மதித்த உயர்வாக நினைத்த விஷயங்களே நோக்கமும், கொள்கையுமாய் வைத்திருக்கின்ற இல்லுமினாட்டியில் இணைந்ததை என் பிறவிப்பயனாய் நினைக்கிறேன்.”

”எந்த சக்தியுமே பயன்படுத்தத்தான் இருக்கிறது. அதே போல் எந்தச் செல்வமும் பயன்படுத்தத்தான் இருக்கிறது என்று திடமாக நம்புபவன் நான். அந்த சோம்பேறி இயக்கத்திலிருந்து வரும் போது தேங்கிக் கிடக்கும் அந்தச் செல்வத்தை எடுத்துப் பயனுக்குக் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டேன். அதற்கு முன் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த இயக்க பணக்கார உறுப்பினர்களிடம் பணத்தால் ஆக வேண்டியிருக்கும் சில காரியங்களைச் சொன்னேன். அவர்கள் பெருந்தொகைகளை அனுப்பினார்கள். நான் கடைசி மூன்று மாதத்தில் வசூல் செய்த பணம் அந்த இயக்கம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வசூல் செய்த பணத்தை விட அதிகம். மாஸ்டர் என்னும் சோம்பேறி ஒவ்வொன்றிலும் தொடர்ந்து கையெழுத்துப் போடக்கூட சங்கடப்பட்டு எல்லாவற்றிற்கும் ’ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி’ எனக்குத் தந்திருந்தார். அந்தப் பணத்தோடு சொத்துக்களையும் விற்றுச் சேர்த்து எல்லாவற்றையும் பயன்படுத்தும் விதங்களில் மாற்றிக் கொண்டேன். அதில் பாதிக்கும் மேல் இல்லுமினாட்டிக்கு அனுப்பினேன். இதில் ஒரு ரூபாய் கூட நான் எனக்கோ, என் சொந்தச் செலவுக்கோ எடுத்துக் கொள்ளவில்லை. தேங்கிக் கிடக்கும் முட்டாள் செல்வம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான் எனக்கிருந்தது…”

”இல்லுமினாட்டியில் இணைந்தவுடனேயே இல்லுமினாட்டி போலவே சிந்திக்கவும் ஆரம்பித்த நான் உலகின் தீவிர வாத இயக்கங்கள் சிலவற்றோடு வேறு வேறு பெயர்களில் தொடர்பு கொண்டேன். ஒவ்வொன்றிலும் அதன் ஆதரவாளனாகக் காட்டிக் கொண்டேன். அதற்கு ஆதரவாக அவர்கள் பேசுவதற்கு அதிகமாகப் பேசினேன். அவர்களுக்கு சோம்பேறி இயக்கத்தின் பணத்தின் ஒரு பகுதியையும் அனுப்பினேன். இப்போது அவர்களுக்கு வேண்டப்பட்டவனாக, அவர்கள் இயக்கத்தில் ஒரு முக்கியஸ்தனாக நான் இருக்கிறேன். இப்படி சக்திவாய்ந்த ஐந்து தீவிரவாத இயக்கங்கள் நான் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைமையை ஒரு இல்லுமினாட்டியான நான் ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். இனி எதிர்காலத்தில் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் உலகின் எல்லாத் தீர்மானங்களிலும் பெரும்பங்கு வகிக்கும். அதனால் இவற்றை நாம் கைப்பிடிக்குள் வைத்திருந்தால் பல நேரங்களில் பல நாடுகளில் நம் அதிகாரம் வேண்டிய விதத்தில் எடுபடும். இதை நான் இது வரை யாரிடமும் சொன்னதில்லை. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பெருமை பேசுவதை விட அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று எதையும் செய்து முடித்துக்காட்டிச் சொல்வது ஒரு இல்லுமினாட்டிக்குச் சிறப்பு என்று நினைக்கிறேன்….”

கைத்தட்டல் பலமாய் எழுந்து அடங்கச் சிறிது நேரமானது. பணிவை முகத்தில் காட்டிய விஸ்வம் கடைசியாகச் சொன்னான்.

“இல்லுமினாட்டியில் இணைந்த பிறகு எனக்கு இன்னொரு கனவு தொடர்ந்து வந்தது. இமயமலைப் பனியில் ஒரு குகை இருப்பதாகவும், அதற்குள் சிறிய பிரமிடு ஒன்று இருந்து அதற்குள் ஒரு கண் ஜொலிப்பதாகவும் இருந்தது அந்தக் கனவு. தொடர்ந்து வந்ததால் கனவில் தென்பட்ட இமயமலைப்பகுதியின் வித்தியாசமான அமைப்பைச் சொல்லி அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று விசாரித்தேன். இருக்கிறது என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அங்கே போனேன். அங்கே ஒரு தவசி தவ நிலையில் இருந்தார். அவருக்கு எதிரே பாறையில் ஒரு சிவனின் முகச் சிற்பம் இருந்தது. அதன் நெற்றியில் இருந்து மின்னிக் கொண்டிருந்த இந்தச் சின்னத்தை எனக்கு எடுத்துக் கொடுத்தார்.” விஸ்வம் அந்த முக்கோண நெற்றிக் கண்ணை எடுத்து அனைவருக்கும் காட்டினான். அது ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது.

இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அந்த அற்புதத்தைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஸ்வம் திருப்திகரமாகத் தொடர்ந்தான். “எனக்குத் தந்து விட்டு அவர் இறந்து விட்டார்.  அவர் யார் இதை ஏன் என் கையில் கொடுத்து விட்டு இறந்தார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் என் கையில் கிடைத்தது சிவனின் நெற்றிக்கண் அல்ல, இல்லுமினாட்டி சின்னம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி…. பிறகு தான் அந்தத் தவசி அகஸ்டின் என்ற ஒரு இல்லுமினாட்டி என்றும், சுமார் நூறு வருடங்களுக்கு முன் இந்தியா வந்து யோகக்கலை கற்று இல்லுமினாட்டியை அழிவில் இருந்து காப்பாற்றத் தவமிருக்கப் போனவர் என்றும் சொன்னார்கள். ஒரு இல்லுமினாட்டி தவசி கையால் எனக்கு இந்த சின்னம் கிடைத்ததன் அர்த்தத்தை உங்களுக்கே யோசிக்க விடுகிறேன். பிறந்ததில் இருந்து இது வரை என்னைப் பற்றியும், என் எண்ணங்களைப் பற்றியும், என் செயல்களைப் பற்றியும் எதையும் மறைக்காமல் உங்களிடம் நான் மனம் திறந்து சொல்லி இருக்கிறேன் நண்பர்களே…. வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”

கைதட்டலால் அந்த அரங்கம் அதிர்ந்தது!

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, May 15, 2019

அறிவுக்கு எட்டாத அதிசய நிகழ்வுகள்!


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள் - 2
  

ரண்டு செயற்கைப் பட்டாம்பூச்சிகளை உருவாக்கிப் பறக்க விட்ட நிகழ்ச்சி கர்னல் ஓல்காட்டை வியக்க வைத்தது என்றால் பிறிதொரு சமயத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் செய்து காட்டிய அற்புதம் கர்னல் ஓல்காட்டைப் பிரமிக்கவே வைத்தது. அந்த அற்புதச் செயலைப் பார்ப்போம்.

ஒரு கடும்பனிக் காலத்தில் அமெரிக்காவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார், ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். கர்னல் ஓல்காட் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார். வெளியே தரையில் ஒரு அடிக்கும் மேலே பனி படர்ந்திருந்தது. நள்ளிரவைக் கடந்தும் அவர்கள் உத்தேசித்திருந்த பணி முடியவில்லை. கர்னல் ஓல்காட்டுக்குத் தாகமாக இருந்தது. அவர்இப்போது திராட்சை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறதுஎன்று ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்னார். 

சரி சாப்பிடலாம்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் சொன்னார்.

இந்த நள்ளிரவு நேரத்தில் எந்தக் கடை திறந்திருக்கும்?” என்று கர்னல் ஓல்காட் கேட்டார்.

அதனாலென்ன. நாம் சாப்பிடுவோம்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறினார்.

குழப்பமடைந்த கர்னல் ஓல்காட்எப்படி?” என்று கேட்டார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார்இதோ காட்டுகிறேன். முதலில் மேசை விளக்கின் வெளிச்சத்தைக் குறையுங்கள்என்று சொன்னார்.

அது மின்சாரம் இல்லாத காலகட்டமாதலால் எண்ணெய் விளக்குகளும், காஸ் விளக்குகளும் தான் மேசை விளக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. காஸ் மேசை விளக்கின் வெளிச்சத்தைக் குறைக்கும் திருகாணியை கர்னல் ஓல்காட் திருகியதில் ஒரேயடியாக விளக்கு அணைத்து விட்டது.

விளக்கொளியைக் குறைக்கத் தான் சொன்னேன். அணைக்கத் தேவையிருக்கவில்லை. மறுபடி சீக்கிரம் பற்ற வையுங்கள்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொல்ல கர்னல் ஓல்காட் மேசையிலேயே இருந்த தீப்பெட்டியை எடுத்து விளக்கை மறுபடி பற்ற வைத்தார்.

மறுபடி அறை விளக்கொளியால் நிறைந்த போது அருகில் இருந்த புத்தக அலமாரியில் இரண்டு பெரிய கருப்புத் திராட்சைக் கொத்துகள் இருந்தன. பழைய சம்பவத்தில் பட்டாம்பூச்சிகள் செயற்கையாக இருந்தது போல அந்தத் திராட்சைக் கொத்துகள் செயற்கையாக இருக்கவில்லை. இருவரும் திராட்சைகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள். சுவைத்த பிறகு கர்னல் ஓல்காட் அடைந்த பிரமிப்புக்கு அளவேயில்லை. அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைக் கேட்டார். “எப்படி இது சாத்தியம்?”

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதை யக்ஷினி வித்தையாகச் சொன்னார். அந்த வித்தையில் சில மேலான சக்திகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் மேலான சக்திகள் அமானுஷ்ய சக்தி படைத்த மனிதர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி அருவமாகவும், உருவத்துடனும் இமயமலை போன்ற இடங்களில் பலர் இருப்பதையும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொல்லியிருந்ததை முன்பே பார்த்தோம். அந்த அமானுஷ்ய சக்தியாளர்களைமகாத்மாக்கள்என்றும்மாஸ்டர்ஸ்என்றும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போன்றோர் அழைத்தார்கள். அவர்களில் சிலரை கர்னல் ஓல்காட்டுக்கும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ஒரு நாட்டையோ, உலகின் ஒரு பகுதியையோ மட்டும் சார்ந்தவர்கள் அல்ல. உலகில் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் பொதுமக்கள் மத்தியில் அதிகம் வருவதில்லை. அப்படியே வர நேர்ந்தாலும் சக்தியாளர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்வதில்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கும் மனிதர்களை மட்டுமே அவர்கள்  தொடர்பு கொள்வார்கள். இதையெல்லாம் காலப்போக்கில் கர்னல் ஓல்காட் அறிந்தார். அந்தத் திராட்சைக் கொத்தைக் கொண்டு வந்து தந்ததும் அப்படிப்பட்ட மகாசக்திகளில் ஒன்று என்று அறிந்து கொண்ட கர்னல் ஓல்காட்டுக்கு அதைப் பற்றி அதற்கு மேல் அதிக விளக்கங்கள் தர ப்ளாவட்ஸ்கீ அம்மையார் முற்படவில்லை.  

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மூலமாக ஒரு சில மகாத்மாக்கள் அல்லது மாஸ்டர்கள் கர்னல் ஓல்காட்டுக்கு அறிமுகமான பின் அவருடைய ஆன்மிகப் பணிகள் அதிகரித்தன. சில பணிகளை அந்த மகாத்மாக்கள் தன்னிடம் ஒப்படைத்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். எல்லா சமயங்களிலும் அந்த மகாத்மாக்கள் நேரில் வந்து அவருக்கு ஆலோசனைகள் தெரிவிப்பதோ, குறிப்புகள் சொல்வதோ, வேலைகள் ஒப்படைப்பதோ இல்லை. ஓரிரு முறை மட்டுமே அவர் அவர்களைக் கண்டிருக்கிறார். மற்ற சமயங்களில் அந்த உயர் ஆத்மாக்களிடமிருந்து தகவல்கள் சற்றும் எதிர்பாராத விதங்களில் எல்லாம் வந்தன. அவருக்குத் தனிப்பட்ட முறையிலோ, அலுவல் முறையிலோ மற்றவர்கள் எழுதி இருக்கும் கடிதங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு மகாத்மா அல்லது மாஸ்டரின் குறிப்புகள் அவருக்கு இருக்கும். சில சமயங்களில் கடிதம் எழுதுகையில் விடப்பட்டிருக்கும்மார்ஜின்களில் கூட குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். கடிதத்தை எழுதி அதை ஒட்டிய பிறகு அதன் உள்ளே இது போன்ற குறிப்புகளை எப்படி எழுதிச் சேர்க்க முடியும் என்று பல முறை கர்னல் ஓல்காட் வியந்திருக்கிறார். ஆனால் இது போன்ற அற்புதங்களைப் பார்த்து பழகிய பின் அந்த உயர்ந்த ஆத்மாக்களால் மனித அறிவுக்கு எட்டாத எத்தனையோ அற்புதங்களைச் செய்ய முடியும் என்பது அவர் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து விட்டது.

ஆனால் இந்த ஒட்டப்பட்ட கடிதங்களில் குறிப்புகள் எழுதப்படும் அற்புதம் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு பேரற்புதமாக கர்னல் ஓல்காட்டின் வாழ்க்கையில் நடந்தேறியது. அந்த சமயத்தில் கர்னல் ஓல்காட் ஒரு நூலை எழுதி முடித்திருந்தார். அவர் அந்த நூலை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அமெரிக்காவின் பல பகுதிகளில் பயணித்துக் கொண்டிருந்தார். நியூயார்க் நகரில் இருந்த கர்னல் ஓல்காட் அந்த நூலை எழுதி முடித்த சமயம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அமெரிக்காவில் பிலடெல்பியாவில் தங்கி இருந்தார். கர்னல் ஓல்காட்டின் நூல் வேலை முடிந்து விட்டதால் தியோசபிகல் சொசைட்டி வேலைகள் சில செய்ய அவரை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பிலெடெல்பியாவுக்கு அழைத்தார். கர்னல் ஓல்காட்டும் ஓரிரு நாட்களில் திரும்பும் எண்ணத்தில் அங்கு சென்றார்.

ஆனால் பிலடெல்பியாவுக்குச் சென்ற பின் கர்னல் ஓல்காட்டின் வேலைகள் ஓரிரு நாட்களில் முடியக்கூடியதல்ல என்பது அவருக்குப் புரிந்தது. அவர் மேலும் சில நாட்கள் அங்கு தங்க வேண்டி வந்தது. முன்பே இது தெரிந்திருந்தால் நியூயார்க் முகவரிக்கு வரும் கடிதங்களை பிலடெல்பியாவில் அவர் தங்கும் முகவரிக்கு திருப்பியனுப்பி வைக்கத் தெரிவித்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த அவர் பிலடெல்பியா வந்த மறுநாளே அங்குள்ள தபால் நிலையத்திற்குப் போய் தன் பெயரில் ஏதாவது கடிதங்கள் வந்தால் அந்தத் தபால்களை இப்போது தங்கியிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி விண்ணப்பக்கடிதம் தந்து விட்டு வந்தார்.

ஆனால் அவர் பிலடெல்பியாவில் தங்கும் இடம் அங்கு வந்த பின் தான் முடிவானதால் நியூயார்க்கில் உள்ள அவருடைய ஆட்களுக்கு அவர் பிலடெல்பியா முகவரியைத் தந்து விட்டு வந்திருக்கவில்லை. அதனால் இப்போதைக்கு இங்கு எந்தத் தபாலும் வர வழியே இல்லை. ஆனாலும் அவர் தபால் நிலையத்தில் விண்ணப்பித்து வந்திருந்த மாலையே அவருக்குச் சில தபால்களை உள்ளூர் தபால்காரர் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்த போது அவர் திகைத்து விட்டார். ஆச்சரியத்துடன் அவர் அந்தத் தபால்களில் இருந்த முகவரியைப் பார்த்தார். எல்லாவற்றிலும் அவருடைய நியூயார்க் முகவரியே இருந்தது. நியூயார்க்கிலிருந்து எப்படி பிலடெல்பியாவுக்கு அந்தத் தபால்கள் வந்து சேர்ந்தன என்று மூளையைக் கலக்கி யோசித்தும் அவருக்குப் பதில் கிடைக்கவில்லை.

அவர் தபாலில் பதித்திருக்கும் தபால் முத்திரைகளைப் பார்த்தார். முன் பக்கம் எந்தெந்த இடங்களிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறதோ அந்தந்த இடங்களின் தபால் முத்திரைகள் இருந்தன. ஒன்று தென்னமெரிக்காவில் உள்ள ஒரு நகரமாக இருந்தது. தபாலின் பின் பக்கத்தில் பிலடெல்பியாவின் தபால் முத்திரை இருந்தது. நியூயார்க் முகவரிக்கு அனுப்பப்பட்ட தபால்கள் நியூயார்க் போயிருந்தால் பின்பக்கம் நியூயார்க் தபால் முத்திரையும் கண்டிப்பாக இருந்திருக்கும் அல்லவா? அங்கு இங்குள்ள முகவரி எழுதப்பட்டபின் தான் அங்கிருந்து இங்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கும். எதிலுமே அப்படித் திருப்பி அனுப்பியிருக்கும் குறிப்புகளும் இல்லை. நியூயார்க் தபால் முத்திரையும் இல்லை. பிலடெல்பியா முகவரி இல்லாமலேயே அவை எப்படி பிலடெல்பியாவுக்கு நேராக வந்து சேர்ந்திருக்க முடியும் என்று குழப்பத்துடன் கர்னல் ஓல்காட் தபால்களைப் பிரித்த போது வழக்கம் போல் அவருக்குக் குறிப்புகள் அனுப்பும் மகாத்மாவின் கையெழுத்தில் குறிப்புகள் மார்ஜின்களிலும், காலி இடங்களிலும் எழுதப்பட்டிருந்தன. அனுப்பியவர்கள் வேறு வேறு ஆட்கள். வேறு வேறு ஊர்களிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் மார்ஜின்களிலும், காலி இடங்களிலும் இருந்த குறிப்புகள் மட்டும் அந்த மாஸ்டரின் ஒரே கையெழுத்தில் இருந்தன. அப்படியானால் அந்த உயர்சக்தி மனிதரின் திருவிளையாடலால் தான் அத்தனை கடிதங்களும் நியூயார்க் போகாமலேயே பிலடெல்பியா வந்து சேர்ந்திருக்கின்றனவா அல்லது ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் பங்கும் இதிலிருக்கிறதா என்பது அவருக்குப் புரியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 16.4.2019