என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 15, 2017

இருவேறு உலகம் – 34

      

ங்கு க்ரிஷைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்று அறிய மாஸ்டர் முயன்றார். எதிரி கண்டிப்பாக அங்கே தான் இருக்க வேண்டும்.... ஆனால் எதிரி அவர் தேடலில் சிக்கவில்லை. அவருடைய சகல சக்திகளும் அந்த எதிரியைக் காணப் போதவில்லை. அவருடைய குருவைச் சுற்றிலும் இருந்த தடயங்களை அழித்தது போலவே எதிரி இங்கும் தன் சுவடுகளை அழித்து விட்டிருப்பது போல் இருந்தது. 

க்ரிஷ் எதற்காக எப்போது, எப்படி அமேசான் காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டான் என்பதை அறிய மாஸ்டர் முயன்றார். க்ரிஷின் பயணத்தை அந்த மலையிலிருந்து அந்த அமாவாசை இரவிலிருந்து தொடர முயற்சித்தது தோல்வியிலேயே முடிந்தது. க்ரிஷ் இருக்கும் இடத்தை மறைக்காமல் விட்ட எதிரிக்கு மற்ற தகவல்களை அவருடன் பகிர்ந்து கொள்வதில் விருப்பம் இருக்கவில்லை போலிருக்கிறது....

ஒரு மணி நேரம் ஓடி விட்டதைக் கவனித்த மாஸ்டர் முதல் வரவிலேயே அங்கு அதிக நேரம் இருந்து விட விரும்பாமல் க்ரிஷ் அந்த மலையை எட்டியது எப்படி என்பதை அறிய நினைத்தார். எதிரியிடம் க்ரிஷ் எப்படி சிக்கினான் என்பது தெரிந்தால் மீதியை ஓரளவாவது யூகிக்கலாம் என்று தோன்றியது. அந்த அறையில் க்ரிஷ் செய்த கடைசி ஆராய்ச்சிகள் பற்றி ஆராய ஆரம்பித்தார். நல்ல வேளையாக அந்தக் கடந்த கால நிகழ்வுகளின் அலைகள் எதிரியால் அழிக்கப்பட்டிருக்கவில்லை. இருக்கும் இடம், மற்றும் சென்று வந்த இடங்கள் சம்பந்தப்பட்ட அலைகளில் ஆதிக்கம் செலுத்த முடிந்த அளவு மற்ற இடங்களில் எதிரியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லையோ என்னவோ?

க்ரிஷ் எப்படி எதிரியிடம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான் என்பதை  மாஸ்டரால் அங்கு கண்டுபிடிக்க முடிந்தது. காட்சிகள் அவர் கண் முன் விரிய ஆரம்பித்தன....


தாசிவ நம்பூதிரி தன் முன்னால் கோட்டும் சூட்டுமாய் வந்து நின்ற மனோகரை விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தார்.

அதைக் கண்டு கொள்ளாத அவன் மிகவும் பணிவாக அவரிடம் சொன்னான். “என் முதலாளி ஜோதிட சாஸ்திரத்தைக் கரைச்சுக் குடிச்சவர். இந்த ரெண்டு ஜாதகங்களையும் அவர் அலசி ஆராய்ஞ்சு பார்த்துட்டார். ரெண்டுமே விசேஷ விசித்திர ஜாதகங்கள். ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் பார்த்து ஆராய்ச்சி செய்திருக்கிற அவர் இது வரைக்கும் இந்த ஜாதகங்கள் மாதிரி பார்த்ததில்லைன்னு நினைக்கிறார். இது சம்பந்தமா அவர் கணிச்ச முடிவுகள் சரிதானான்னு பார்க்க அவருக்கு இன்னொரு ஜோதிட வல்லுனர் தேவைப்படறார். அவர் விசாரிச்சப்ப உங்க பேரைச் சொன்னது நான் தான். அதனால தான் இங்கே வந்தேன். இதைப் பணத்துக்காக நீங்க பார்க்க வேண்டாம். ஜோதிடத்து மேல மதிப்பு வச்சிருக்கற நீங்க ஒரு சக ஜோதிடருக்கு செய்யற உதவியா பார்க்கணும்....

அவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டுச் சொன்னார். “ஆனா நீங்க கீழே என் மகன் கிட்ட பேசின தொனி பணத்தோடதா இருந்துதே

“அப்படிப் பேசியிருக்காட்டி அவரைத் தாண்டி இங்க வந்திருக்க முடியாதேஎன்று மனோகர் தாழ்ந்த குரலில் பணிவாகச் சொன்னான்.

அவர் முகத்தில் சிறிய புன்னகை எட்டிப் பார்த்தது. மெல்லத் தனக்கு எழுந்த  சந்தேகத்தைக் கேட்டார். “எனக்குத் தெரிஞ்சு முதலாளிகளுக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கறதைப் பார்த்திருக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சு பார்த்ததில்லை. அப்படிக் கரைச்சுக் குடிக்க முடிஞ்சவன் முதலாளியா ஆனதுமில்லை.....

இப்போது அவன் புன்னகைத்தான். எல்லா விதிவிலக்குகளையும் நம்ம வாழ்க்கைல எப்போதாவது ஒரு கட்டத்தில் பார்க்கிறோம். இப்போது இந்த விஷயத்துல நீங்க பார்க்கறதா வச்சுக்கோங்க சாமி...

அவன் பேச்சு சாமர்த்தியத்தை ரசித்தவராய் சொன்னார். ஏதாவது ஒரு ஜாதகம் குடுங்க. அது விசேஷ விசித்திர ஜாதகம்னு என் மனசுக்குத் தோணினா மேற்கொண்டு ரெண்டையும் பார்க்கறேன். இல்லைன்னா ரெண்டையும் பார்க்க மாட்டேன்....

“சம்மதம் சாமிஎன்றவன் அவரிடம் க்ரிஷின் ஜாதகத்தை நீட்டினான். மேலோட்டமாக அந்த ஜாதகத்தைப் பார்த்தவர் முகம் அலட்சியத்திலிருந்து ஆர்வத்திற்கு மாறியது. அடுத்த ஜாதகத்திற்காகவும் கையை நீட்டினார். அவன் தந்தான். அதையும் பரபரப்புடன் பார்த்தார்.

பின் ஒரு நிமிடம் கண்மூடி யோசித்து விட்டு அவனிடம் சொன்னார். “இந்த ஜாதகங்களைச் சரியாகப் பார்க்க எனக்கு ரெண்டு நாள் வேணும். இதோட பலன்களை நான் உங்க முதலாளி கிட்ட நேரடியாய் தான் சொல்வேன். சம்மதமா? 

இதுவரை தெளிவாகவும், அசராமலும் எல்லாவற்றையும் கையாண்டவன் முதல் முறையாகத் திகைத்தான். இதற்கு ‘அவர் ஒத்துக் கொள்வாரா?


விளையாடுவது விதியா, எதிரியின் மதியா என்று மாஸ்டர் யோசித்தார்.  க்ரிஷின் ஆர்வத்தைத் தூண்டி விட்டது முதல் இந்தக் கணம் வரை நடந்திருப்பதைப் பார்த்தால் எதிரி மிகக் கவனமாகவும், பிரமாத அறிவுடன் தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சங்கரமணியும், வாடகைக் கொலையாளியும் எதிர்பாராத விதமாக இதில் பங்கெடுத்தது வேண்டுமானால் விதிவசமாக இருக்கலாம். ஆனால் அதையும் எதிரி தன் மதியால் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டதை மாஸ்டரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

மாஸ்டர் க்ரிஷின் தற்போதைய நிலைமையைக் கூர்ந்து கவனித்தார். அவன் உடலில் இருந்து விஷம் முழுவதுமாக வெளியேறி விடவில்லை என்றாலும் ஆபத்து நிலையை அவன் தாண்டி விட்டான் என்பது தெரிந்தது. இப்போதும் எதிரி அவர் கண்ணில் பட்டுவிடவில்லை. க்ரிஷை விட்டு தொலைவில் எதிரி சென்றிருக்க வாய்ப்பே இல்லை. அமேசான் காடுகளில் விலங்குகளும், விஷப்பூச்சிகளும் நிறைய இருக்கையில் க்ரிஷ் உயிருக்கு இன்னொரு ஆபத்தை ஏற்படுத்தி விட எதிரி தயாராக இருக்க மாட்டான். க்ரிஷின் அருகேயே இருந்த போதும் அவருடைய காணும் சக்திக்கு மறைவாக இருக்கும் எதிரி அவரை விடச் சக்தி வாய்ந்தவன் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவன் இப்போது அவரைப் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதை யூகித்துப் புன்னகைத்தார்.

‘நீ என்னை விட வலிமையானவனாக இருக்கலாம் எதிரியே. ஆனால் என்னுடன் தர்மம் இருக்கிறது. எனவே முடிவில் வெல்வது நானாகவே இருப்பேன்.....”  என்று கண்ணுக்குத் தெரியாத அந்த எதிரிக்கு அவர் உறுதியாகத் தெரிவித்தார். அந்தச் செய்தி எதிரியைச் சென்றடைந்ததையும் அவர் உணர்ந்தார். பதில் எதாவது வந்து சேர்கிறதா என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் எதிரி செயலில் தான் எதையும் தெரிவிப்பது என்ற கொள்கையில் இருப்பவன் போல இருந்தது.  எந்தப் பதிலுமே இல்லை.

இனி க்ரிஷ் மூலமாகவே எதிரி பேசலாம் போல் தெரிந்தது. க்ரிஷைப் போல் ஒரு தூய்மையான மனிதன் அழிவுக்குப் பயன்பட இருப்பது மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இங்கு வருவதற்கு முன் உணர்ந்தது மிகவும் கொஞ்சம். ஆனால் இங்கே வந்த பின் அறிந்து கொண்டது அவன் மேல் மிகுந்த மரியாதையை அவர் மனதில் ஏற்படுத்தி விட்டது. குருவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது’.  அந்த உச்சமான அறிவு தன்னை தீயசக்தி  பகடையாகப் பயன்படுத்துகின்றது என்று அறியாமல் இருந்து விடுமா? இல்லை உணர்ந்து தன்னை விடுவித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....


செந்தில்நாதனின் வருகை மாணிக்கத்தையும் மணீஷையும் மிகவும் அசவுகரியப்படுத்தியது. உதய் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றதைப் பார்த்து அவர்கள் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘இருவரும் பரம எதிரிகள் போல் அல்லவா இருந்தார்கள். இப்போது என்ன இந்த திடீர் மரியாதை?என்ற கேள்வி மாணிக்கத்தின் மனதில் பலமாக எழுந்தது. செந்தில்நாதனும் மாணிக்கத்தையும் மணீஷையும் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை.  மந்திரி மாணிக்கத்திற்கு சம்பிரதாயமான மரியாதை வணக்கம் செலுத்தி விட்டு மணீஷைப் பார்த்துத் தலையசைத்தார்.

உதய் அவர் அருகே உட்கார்ந்து சக்தி வாய்ந்த மனிதர் ஒருவர் அங்கு வந்திருப்பது எப்படி என்பது பற்றி தாழ்ந்த குரலில் விளக்கமாய் சொன்னான். மாணிக்கத்திற்கு தாங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது செந்தில்நாதனுக்குத் தெரிவதில் உடன்பாடில்லை என்ற போதும் வேறு வழியில்லாமல்  அமைதி காத்தார்.

செந்தில்நாதனுக்கு உதய் சொன்னதைக் கேட்டு மாஸ்டர் மேல் சந்தேகம் அதிகரித்தது. அவருக்கென்னவோ வெளியே நின்ற கருப்புக் கார் தான் அவர் அங்கிருந்த போது அந்த மலையை நோக்கி அந்த இரவு வந்திருக்கும் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. உதய் சொல்வதைக் கேட்கையில் மாயாஜாலக் கதை கேட்பது போல் இருந்தது.   ஆனால் அவன் அந்த ஆள் வீட்டுக்குப் போகும் வழியில் முன்னே போன கார்க்காரனைக் கெட்ட வார்த்தைகளில் உதய் திட்டியது மாஸ்டருக்குத் தெரிந்திருக்க என்ன வாய்ப்பிருக்கிறது? அப்படியும் அந்த ஆள் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்றால் ஏதாவது சக்தி கூடுதலாக அவருக்கு இருக்கலாம்..... அந்த அளவு சக்தி இருக்கும் ஆள் அந்த மலைக்கு அந்த இரவில் வரக் காரணம் என்னவாக இருக்கும்?...

அந்த ஆள் இரண்டு மந்திரிகளுக்கும் மிகவும் வேண்டப்பட்ட ஆள் என்பதால் அவரிடம் போலீஸ் முறையில் விசாரிக்க முடியாது என்று செந்தில்நாதன் புரிந்து கொண்டார். ஆனால் அந்த ஆள் விசாரிக்கப்பட வேண்டிய ஆள் தான் என்பதில் அவருக்கு மறு கருத்து இல்லை. நாசுக்காகத் தான் விசாரிக்க வேண்டும்...


மாஸ்டர் கம்பீரமாக ஹாலுக்கு வந்தார். அனைவரும் எழுந்து நிற்க செந்தில்நாதனும் அவரைக் கூர்ந்து பார்த்தபடியே எழுந்து நின்றார்.

மாஸ்டரின் கண்கள் செந்தில்நாதனை ஊடுருவிப் பார்த்தன. மிக நேர்மையான மனிதன்என்று செந்தில்நாதனின் அலைகள் அவருக்குத் தெரிவித்தன. கூடவே அவர் தற்போது வந்திருக்கும் கருப்புக் கார்  தான் சில நாட்கள் முன் மலையருகே வந்திருக்கிறது என்ற சந்தேகம் செந்தில்நாதனுக்கு அழுத்தமாக வந்திருக்கிறது என்பதும் தெரிந்தது. விதி நல்லவர்களை எல்லாம் தற்போது ஏனோ அவருக்கு எதிரணியிலேயே கொண்டு வந்து சேர்த்த வண்ணம் இருக்கிறது!

 (தொடரும்)

 என்.கணேசன்

Monday, June 12, 2017

வூடூவில் எது, எதற்கு, எப்படிப் பயன்படுகிறது?


வூடூ சடங்குகளை முறையாக அறிந்தவர்களும், அவற்றின் சாராம்சங்களைச் சரியாகப் புரிந்து கொண்டு தவறில்லாமல் நடத்தியவர்களும் காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்தனர். மேலும் வூடூ சடங்குகளும் மிக நீண்டதாகவும் எல்லா இடங்களிலும் முறைப்படி நடத்த முடியாதபடியும் இருந்தன. எனவே அதன் நீண்ட சடங்குகள் முறைப்படி நடப்பது குறைந்து கொண்டே வந்து பின் அரிதாகி அதன் சில அம்சங்களை மட்டும் தேவைப்படும் இடங்களில் அவசர வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பமாகி விட்டது.

வூடு சடங்குகள் பரந்த பல விஷயங்களை உள்ளடக்கியவை. அவை அனைவராலும் சரியாகப் புரிந்து முறையாகச் செய்யப்பட முடியாத அளவு நுணுக்கமானவை. அவற்றைத் தவறாகச் செய்து விட்டால் வூடூ சக்திகள் செய்பவரையே திருப்பித் தாக்கும் அபாயம் உள்ளது. அதன் விளைவாக சடங்குகளின் இடத்தைப் பிற்காலத்தில் பொருள்கள் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தன. இந்தப் பொருளை இந்த முறையில் பயன்படுத்தினால் தேவையான இந்த விளைவு ஏற்படும் என்ற சிக்கல் இல்லாத அளவில் வூடூவை விற்பனை செய்வோரும் பயன்படுத்துவோரும் அதிகரித்தனர்.

ஹூடூ மூலிகை மற்றும் வேர் மேஜிக் (Hoodoo Herb and Root Magic) என்ற புத்தகத்தில் கேத்தரைன் ரோன்வோட் (Catherine Yronwode) என்ற ஆராய்ச்சியாளர் சுமார் 500 வகையான தாவர, விலங்கின, உலோகப் பொருள்கள் வூடூவில் இடம் பெறுவதாகத் தெரிவிக்கிறார். ஆனால் தற்கால நடைமுறையில் நூற்றுக்கும் குறைவாகவே அவை பயன்பாட்டில் உள்ளன. அந்த இயற்கைப் பொருள்களுக்குப் பதிலாக நிறைய தயாரிப்புப் பொருள்கள் பயன்பாட்டில் புகுந்து விட்டன.

வூடூவில் எதை, எதற்கு, எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்ற சில தகவல்களைப் பார்ப்போம்.


வெற்றியாளன் ஹை ஜான் (High John the Conqueror):
ஹை ஜான் என்பவன் ஆப்பிரிக்க-அமெரிக்க கர்ணபரம்பரைக் கதைப்படி காங்கோ என்ற ஆப்பிரிக்க நாட்டின் இளவரசன். ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டு கைதியாகி அமெரிக்காவில் அடிமையாக விற்கப்படுகிறான்.  அவன் அங்கு ஏராளமான பிரச்னைகளுக்கும், சோதனைகளுக்கும் ஆளாகி கஷ்டப்பட்டாலும் மனம் தளராமல் பல அபூர்வ சக்திகளைப் பெற்று தப்பித்து தன் நாட்டுக்கே சென்று விடுகிறான். ஆனால் செல்லும் போது தன் சக்திகளை ஒரு செடியின் வேரில் விட்டுச் செல்கிறான்.

எனவே மோசமான சூழ்நிலைகளிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், பிரச்னைகளிலிருந்து விடுபட நினைப்பவர்கள் வெற்றியாளன் ஹை ஜான் என்று அவன் பெயரிலேயே அழைக்கப்படும் அந்த வேரை தங்களிடம் வைத்திருந்து அவனை வேண்டிக் கொண்டால் அவர்கள் நோக்கம் நிறைவேற்றப்படும் என்று வூடூவினர் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மனோதைரியம் பெறவும் ஹை ஜான் வேரை வைத்துக் கொள்கிறார்கள்.  ஒரு அதிர்ஷ்டம் தரும் பொருளாகக் கருதப்படும் ஹை ஜான் வேரைப் பச்சை நிறப் பையில் வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம், செல்வம், அதிகாரம் ஆகியவை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். காதலிப்பவர்களின் தலைமுடியோடு அந்த வேரைச் சேர்த்து சிவப்புப் பையில் வைத்துக் கொண்டால் காதல் வெற்றியடையும் என்றும் நம்புகிறார்கள். அடுத்தவர் அனுப்பும் தீய சக்திகள் தங்களைப் பாதிக்காமல் இருக்கவும் ஹைஜான் வேரை தங்களிடம் வைத்துக் கொள்கிறார்கள்.


கருப்புப்பூனையின் எலும்பு

கருப்புப் பூனையின் எலும்பு சில அமானுஷ்ய சக்திகளைப் பெற உதவும் என்று வூடூவினர் நம்புகிறார்கள். நள்ளிரவு நேரத்தில் கருப்புப்பூனையை உயிரோடு வேக வைத்து தோல் உரிந்து கிடைக்கும் எலும்புகளின் மேல் மட்டத்தில் இருக்கும் முதல் எலும்பு வூடூவில் அமானுஷ்ய சக்திகளைப் பெற உதவுவதாக நம்பப்படுகிறது. அந்த எலும்பை வைத்துக் கொண்டு நள்ளிரவு நேரங்களில் சில பயிற்சிகளுடன் மந்திரங்களையும் சொல்லி வந்தால் மாயமாய் மறைவது உட்பட சில அமானுஷ்ய சக்திகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.


கல்லறை மண்

கல்லறை மீது இருக்கும் மண் அடுத்தவருக்குத் துன்பம் விளைவிக்க வூடுவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த மண்ணை ஒருவர் பயன்படுத்தி வரும் செருப்பில் தூவி விட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு பல துன்பங்களை ஏற்படுத்த முடியும் என்று வூடூவினர் நம்புகிறார்கள். மேலும் சூதாட்டத்தில் ஜெயிக்கவும் கல்லறை மண் உதவுவதாக நினைக்கிறார்கள். 



மெழுகுவர்த்திகள்

மெழுகுவர்த்திகளையும் வூடூவினர் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள். வாசனைத் திரவியங்களால் தோய்க்கப்பட்ட மெழுகுவர்த்திகள் பெரும்பாலும் காதலிப்பவர்களை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு நீல நிற மெழுகுவர்த்தியில் காதலிப்பவரின் பெயரை ஏழு முறை எழுத வேண்டும். பின் அந்த மெழுகுவர்த்தியை வாசனைத் திரவியத்தில் உருட்ட வேண்டும். பின் காதல் நிறைவேற வேண்டி பிரார்த்தனை செய்து விட்டு மெழுகுவர்த்தியை காலை 6.00 மணி, மதியம் 12.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு ஐந்தைந்து நிமிடங்கள் எரிய வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்வது காதலிப்பவர்க்கு நம்மிடம் ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்று நம்புகிறார்கள். வேலை கிடைக்கவும், எதிரிகளையும் அழிக்கவும் கூட வூடூவில் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துகிறார்கள். மெழுகுவர்த்திகளில் எழுதுவது நோக்கத்திற்கேற்ப மாறுபடுவதே வித்தியாசம்.


மேஜிக் விளக்குகள்
விளக்கெண்ணையும், ஆலிவ் எண்ணையும் கலந்து விளக்குகளில் ஊற்றி நடுவீட்டில் தொங்க விடுவது வீட்டுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பாக வூடூவில் கருதுகின்றனர். நடுநாயகமாக வீட்டில் எரியும் அந்த விளக்கொளியில் எல்லா தீய சக்திகளும் துரத்தப்படுவதாக நம்பப்படுகின்றது. அந்த தொங்கும் விளக்குகள் வூடூ பொருள்களின் விற்பனைக்கடையில் அதிகமாக விற்பனையாகின்றன.


காலடித்தடங்கள்

வூடூவில் பொருள்கள் மட்டுமல்லாமல் மனிதர்களின் காலடித்தடங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பது சுவாரசியமான செய்தி. ஒருவர் எப்போதும் போகின்ற பாதையில் தெளிவாக அவர்கள் காலடித்தடங்கள் பதிவாகி இருக்கிற ஒரு சந்தர்ப்பத்தில் இரு காலடித்தடங்களுக்கு இடையே இருக்கின்ற தூரத்தை வூடூ முறையில் தயாரிக்கப்படும் சிறிய அளவுகோளால் அளந்து விட்டு அங்கேயே சில மந்திரங்கள் ஜெபித்து புதைத்து விடுகிறார்கள். தொடர்ந்து சில நாட்கள் அந்த வழியாகப் பயணித்த பின் அந்த நபரால் அந்த ஊரிலேயே இருக்க முடியாமல் ஊரை விட்டே போக நேரிடும் என்கிறார்கள். தங்கள் எதிரிகளை ஊரை விட்டுத் துரத்த இந்த முறையை வூடூவில் பயன்படுத்துகிறார்கள்.

மற்ற பொருள்கள்

மேலே சொன்னவை மட்டுமல்லாமல் பல விதமான பொருள்களை வூடூவில் பயன்படுத்துகிறார்கள். ஐந்து இலை இருக்கும் ஒரு புல் பண வரவு சம்பந்தமான அதிர்ஷ்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாம் ஏவாள் வேர் என்ற ஒரு வகை வேர் காதலில் அதிர்ஷ்டத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.  முயலின் கால்கள் வேகமான அதிர்ஷ்டத்திற்கும், பன்றியின் நாக்கு நீதிமன்ற வழக்குகளில் வெற்றிக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரது தலைமுடி, வெட்டிய நகம் போன்றவை கூட அவர் மீது ஆதிக்கம் செலுத்தப் பயன்படுகிறது. அவை கிடைக்காத போது அதற்குப் பதிலாக ஒரு தாளில் அவர் பெயரை எழுதியும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நம் நாட்டில் செய்வது போல் வெள்ளியால் செய்த தாயத்துகள் மந்திரித்து ஜெபித்து கயிறில் கட்டி கழுத்திலோ மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளும் வழக்கமும் வூடூவில் உண்டு. சில சமயங்களில் குறிப்பிட்ட வேர், குறிப்பிட்ட தகடு, வேறு ஏதாவது வூடூ பொருள் சேர்த்து ஒருவரது ஆடையில் தைத்து அதை அணிந்து கொண்டு செல்வது போகின்ற வேலையை வெற்றியாக்கும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக சூதாட்டங்களுக்குச் செல்லும் போது அதிகம் இப்படிச் செய்கிறார்கள்.

பொருள்களைப் போலவே இடங்களும் நேரங்களும் கூட  வூடூவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. தேவாலயங்கள், சுடுகாடுகள், நான்கு தெருமுனை சந்திப்புகள் போன்ற இடங்களும், அதிகாலை, நள்ளிரவு ஆகிய நேரங்களும் வூடூ பயிற்சிகளுக்கும், ஏவல் செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடங்களாக நம்பப்படுகின்றன.

-     என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 25.04.2017

Thursday, June 8, 2017

இருவேறு உலகம் – 33

ங்கர நம்பூதிரி தயக்கத்துடன் தான் இரண்டு ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க மாடிக்குச் சென்றார். தந்தையைப் பார்ப்பதற்கு முன்பு பணத்தைத் தொடக்கூட அவர் முற்படவில்லை என்பதை அவன் கவனித்தான்.

பணம் மாற்ற முடியாத, பணத்திற்காக அதிகமாய் ஏங்காத மனிதராய் தான் சதாசிவ நம்பூதிரி இன்றும் இருந்தார். அவர் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாளைக்குப் பத்துப் பேருக்குத் தான் ஜாதகம் பார்ப்பார். அதற்கு மேல் கோடி பணம் கொடுத்தாலும் பார்க்க மாட்டார். ஜாதகம் பார்க்கும் அந்தப் பத்துப் பேரிடமும் அவர் இவ்வளவு பணம் கொடு என்று கேட்க மாட்டார். அவர்களாய் அங்கிருந்த தட்டில் எவ்வளவு வைத்தாலும் அதை ஏற்றுக் கொள்வார். ஜாதகம் பார்க்க வருபவர்களில் பத்தாவது ஆளுக்குள் வந்து விட வேண்டும் என்று சீக்கிரமே வந்து மக்கள் காத்திருந்தாலும் தங்கள் நிதிநிலைமை பெரியதாக முன்னேறி விடவில்லை என்ற வருத்தம் சங்கர நம்பூதிரிக்குச் சிறுவயதில் இருந்தே உண்டு. அவர் அதைத் தந்தையிடம் சொல்லி இருக்கிறார். “அவனவன் சினிமாக்கும், ஓட்டலுக்கும் கொடுக்கறதுல கணக்கு பார்க்கறது இல்லை.... ஆனா இங்க வந்தா பத்து ரூபா இருபது ரூபா நோட்டாய் தான் எடுக்கிறான்... நீங்க வாய்விட்டு இவ்ளவு வேணும்னு சொல்லணும். அப்ப தான் அவன் கொடுத்துட்டுப் போவான்.

சதாசிவ நம்பூதிரி சொல்வார். “கொடுக்கறது அவனல்ல, பகவான். நமக்கு எவ்வளவு தேவையோ அதைக் கண்டிப்பா கொடுப்பான்....

தேவைக்கேற்ற பணத்தைப் பகவான் கொடுத்ததென்னவோ வாஸ்தவம். ஆனால் தேவைகளையே குறைத்துக் கொண்டிருந்த மனிதருக்கு பகவானும் பெருந்தன்மை காட்டாமல் அளவாகவே தந்ததில் சங்கர நம்பூதிரிக்கு வருத்தமே. தன் காலத்தில் இந்த முட்டாள்தனத்தைச் செய்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஜாதகம் பார்க்க ஆரம்பித்த பின்னும் அவர் காலம் வரவேயில்லை. எத்தனை கூட்டமிருந்தாலும் வாடிக்கையாளர்கள் காத்திருந்தாவது தந்தையிடம் ஜாதகம் காட்டுவதையே விரும்பினார்கள். ஒரு கட்டத்தில் வேறு ஊருக்குப் போயாவது பிழைத்துக் கொள்ள சங்கர நம்பூதிரி முடிவெடுத்த போது தான் சதாசிவ நம்பூதிரி ஜாதகம் பார்ப்பதை நிறுத்தி மகனுக்கு வழி விட்டார். அதன் பின் அவர் யாருக்கும் ஜாதகம் பார்க்கவில்லை. அதற்குப் பின் அதே அளவு மக்கள் தனக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த சங்கர நம்பூதிரி ஏமாந்து போனார். தினமும் மூன்று, நான்கு பேர்கள் தான் வந்தார்கள். வருத்தத்தில் தன் தந்தையை மீண்டும் ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கச் சொன்னார். பல முறை வற்புறுத்தியும் சதாசிவ நம்பூதிரி ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் இப்போது இந்த இருபதாயிரம் ரூபாய்க்கும் அவர் இசைவார் என்ற நம்பிக்கை சங்கர நம்பூதிரிக்கு இருக்கவில்லை.

அவர் மேலே வந்த போது சதாசிவ நம்பூதிரி பாகவதத்தில் மூழ்கி இருந்தார்.  நிமிர்ந்து மகனை என்ன என்று பார்த்தார். சங்கர நம்பூதிரி விஷயத்தைச் சொன்னார். சதாசிவ நம்பூதிரி சிறிதும் சுவாரசியம் காட்டாமல் தன் பாகவத புத்தகத்திற்குப் பார்வையைத் திருப்பிக் கொண்டார். “அந்த ஆளைப் போகச் சொல்லு....

ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்தார் சங்கர நம்பூதிரி. மனோகரிடம் அந்த ஜாதகங்களை நீட்டினார். “அவர் ஒத்துக்கலை

அவன் அதை வாங்கவில்லை. அமைதியாக மெல்லச் சொன்னான். “ஒரு ஜாதகத்துக்கு இருபதாயிரம் தர்றேன். இரண்டுக்கு நாற்பதாயிரம்....

சங்கர நம்பூதிரி திகைத்தார். நாற்பதாயிரத்தில் நான்கு மாத காலம் அவர் குடும்பச் செலவைக் கஷ்டமில்லாமல் சமாளிக்கலாம். பெருமூச்சு விட்டவர் வருத்தத்துடன் சொன்னார். அவர் ஒத்துக்க மாட்டார். பிடிவாதக்காரர்....

“நான் பேசிப் பார்க்கிறேனேஎன்றான் அவன். அவர் அவனைத் தயக்கத்துடன் பார்த்தார். அவன் சொன்னான். “நான் வியாபாரி. யார் கிட்ட எப்படி வியாபாரம் பண்ண முடியும்னு எனக்குத் தெரியும்....

அவர் தயக்கம் நீங்கவில்லை. அவன் அந்த இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை எடுத்து அவர் கையில் திணித்தான். “அவர் ஒத்துக்காட்டியும் இந்தப் பணம் வேண்டாம். இது உங்களுக்குத் தான். ஒத்துகிட்டா அவர் கைல  இருபதாயிரம் தர்றேன்....

அவர் எச்சிலை விழுங்கியவராக அவனிடம் இரண்டு ஜாதகங்களையும் நீட்டினார். அவன் வாங்கிக் கொண்டவுடன் மாடிப்படியைக் காண்பித்தார். மனோகர் மாடியேறினான்.


மாஸ்டரை அவர்கள் மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்கள். மாஸ்டர் முடிந்த வரை க்ரிஷின் அலைகளிலேயே ஒன்றியிருக்க விரும்பினார். மற்றவர்கள் அதைக் கலைக்கவோ, அதில் கலக்கவோ அவர் விரும்பவில்லை. அவர்கள் அவரை உட்காரச் சொன்னார்கள். அவர் உட்காரவில்லை. க்ரிஷிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் இந்த அலைவரிசைகள் எப்போது வேண்டுமானாலும் துண்டிக்கப்படலாம் என்று அவர் எதிர்பார்த்தார். அதற்கு முன் அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியும் அவசரமும் அவருக்கு இருந்தது.

“க்ரிஷின் அறை எங்கே இருக்கிறது?என்று கேட்டார்.

வந்து உட்காரக்கூடச் செய்யாமல் க்ரிஷின் அறை எங்கே என்று அவர் கேட்ட போது பத்மாவதி ‘முதலில் ஏதாவது சாப்பிடுங்களேன்என்று சொல்ல நினைத்தாள்.

அவள் அதை வாய்விட்டுச் சொல்வதற்கு முன் மாஸ்டர் அதைப் படித்துப் புன்னகையுடன் அவளிடம் சொன்னார். “இன்றைக்கு நான் உபவாசம்.... எதுவும் சாப்பிடுவதில்லை...

பத்மாவதி முகத்தில் தெரிந்த திகைப்பு அவள் சாப்பிடச் சொல்ல நினைத்திருந்தாள் என்பதை அனைவருக்கும் தெரிவித்தது. ‘இந்த மனிதர் முன்னால் எதையும் தைரியமாக நினைக்கக்கூட...என்று எண்ண ஆரம்பித்த மாணிக்கம் அந்த எண்ணத்தையும் தொடராமல் அப்படியே நிறுத்தினார். இதையும் இந்த மனிதர் படித்துவிடப் போகிறார் என்ற பயம் அவருக்குள் எழுந்தது.

உதய் அவரை க்ரிஷ் அறைக்கு அழைத்துப் போனான். மற்ற அனைவரும் ஹாலிலேயே நின்றனர். மணீஷுக்கும் உதயுடன் க்ரிஷ் அறைக்குப் போகும் ஆசை இருந்தது. அவர் அங்கு என்ன செய்யப் போகிறார், என்னவெல்லாம் கண்டுபிடிக்கப் போகிறார், என்னவெல்லாம் சொல்லப் போகிறார் என்பதை உடனிருந்து முதல் ஆளாகத் தெரிந்து கொள்ள அவன் ஆசைப்பட்டாலும் மற்றவர்கள் அங்கேயே நிற்கும் போது அழைக்காமல் உதயைப் பின் தொடர்வது சரியில்லை என்று தோன்றியது.

உதய் மாஸ்டரை க்ரிஷ் அறைக்குள்ளே அழைத்துப் போனவுடன் மாஸ்டர் அவனிடம் சொன்னார். “எனக்கு இங்கே தியானம் செய்யணும். பிறகு அவன் அலைகள்ல இணைய முடிஞ்சா தான் அவன் எங்கே இருக்கான், என்ன செய்யறான்னு எல்லாம் கண்டுபிடிக்க முடியும். அதுக்கு தனிமை தேவை

உதய் தலையசைத்து விட்டுக் கேட்டான். “உங்களுக்கு தியானம் செய்ய என்ன வசதி செய்து தரணும்?

மாஸ்டர் புன்னகைத்தார். தியானத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்குத் தான் சில சவுகரியங்கள் தேவை. போகப் போக அதெல்லாம் தேவையில்லை. அதில் முன்னேறிப் போய் விட்ட பிறகு எந்த சூழல்லயும், எந்த இடத்திலும் தியானம் செய்யலாம். பல காலம் கழிஞ்சும் சவுகரியங்கள்  தேவைப்பட்டா நாம ஆரம்பநிலையிலேயே இருக்கோம், முன்னேறலைன்னு அர்த்தம்....

உதய்க்கு தம்பி பேசுவது போல இருந்தது. புரிந்தும் புரியாமலும் அவன் அவரைப் பார்த்த போது அவர் புரிந்து புன்னகைத்தார். சிறிது வெட்கப்பட்ட அவன் அவரைத் தனிமையில் விட்டு வெளியேற இரண்டடிகள் வைத்து விட்டுப் பின் திரும்பித் தயங்கி நின்றான்.

“ஒரே ஒரு விண்ணப்பம். உங்களுக்குத் தெரியறது என்னவா இருந்தாலும் என் கிட்ட முழுசா சொல்லுங்க. எங்கப்பா, அம்மா கிட்ட நம்பிக்கையூட்டற விஷயம் மட்டும் சொல்லுங்க. மத்தத நான் சமயம் பார்த்து, பக்குவமா அவங்க கிட்ட பிறகு சொல்லிக்கறேன்....  

மாஸ்டர் முகம் மென்மையாகியது. தலையசைத்தார். உதய் நிம்மதியுடன் க்ரிஷ் அறைக்கதவைச் சாத்தி விட்டு வெளியேறினான். வெளியேறும் போது க்ரிஷ் ஹரிணியுடன் நெருக்கமாய் இந்த அறையிலிருந்த தருணங்களையும் இந்த மாஸ்டர் தெரிந்து கொள்வாரே என்று தோன்றியது. ‘க்ரிஷ் வந்தால் கண்டிப்பாக என்னைச் சத்தம் போடுவான்.....என்று நினைத்து புன்னகைத்தான். வந்தவுடன் அவன் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று மனம் குறும்பாய் நினைத்தது.

மாஸ்டர் அந்த அறையில் நிரம்பி இருந்த அலைகளைப் படித்தறிய ஆரம்பத்தில் முற்படவில்லை. அந்த அலைகளின் மூலமானவனை அலைவரிசைகள் மூலம் அடையத் தன் மனதைக் குவித்தார். ஆச்சரியகரமாக அந்த அலைவரிசைகள் தடுக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ இருக்கவில்லை. மாறாக சில நிமிடங்களில் அவரால் அவனை அடைய முடிந்தது.

க்ரிஷ் இருக்கும் இடம் கும்மிருட்டாக இருந்தது. அந்த இடம் குளுமையாக இருப்பதையும் மாஸ்டர் உணர்ந்தார். அவன் மயக்க நிலையில் இருந்தான். அவன் உதடுகள் லேசாக அசைந்தன. அந்த மயக்க நிலையில் தான் சற்று முன் அவன் ‘அம்மாஎன்று அழைத்திருக்க வேண்டும். மாஸ்டர் அந்த இடத்தைப் பற்றி மேலும் அறிய முயன்றார். அந்தச் சூழலைக் கூர்ந்து கவனித்த போது அது அடர்ந்த காடு என்பது புரிந்தது. சந்தேகமே இல்லை..... அடர்ந்த அமேசான் காடுகள் ....

நேரம் செல்லச் செல்ல ஹாலில் அமர்ந்திருந்த அனைவருமே ஒவ்வொரு வகையில் பொறுமையில்லாமல் தவித்தார்கள். மாணிக்கமும், மணீஷும் என்ன தகவல் வருமோ என்று பயம் கலந்த ஆவலுடன் காத்திருக்கையில் சங்கரமணியின் மிஸ்டு கால்கள் தொடர்ந்து மாணிக்கத்துக்கும், மணீஷுக்கும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. கடைசியில் பொறுமை இழந்த மணீஷ் வெளியே வந்து “தயவு செய்து கூப்பிடாதீங்க.... தகவல் தெரிஞ்சவுடனே நானே உங்களைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்றேன்என்று சொன்னான்.

கமலக்கண்ணனும், பத்மாவதியும் மகன் பற்றிய கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் பொறுமையில்லாமல் இருந்தார்கள் என்றால் உதய் ஏதாவது பிரச்னையான தகவல் இருக்குமோ என்ற பயத்தில் பொறுமையின்றித் தவித்தான்.

அவர்கள் பொறுமையின்மையைக் காலமோ, மாஸ்டரோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில் செந்தில்நாதனின் ஜீப் க்ரிஷ் வீட்டை வந்தடைந்தது. ஜீப்பில் இருந்து இறங்கியவுடன் செந்தில்நாதன் கவனித்தது வாசலில் நின்றிருந்த அந்தக் கருப்பு நிறக்காரை. அவர் சந்தேகத்துடன் அந்தக் காரை ஆராய்ந்தார். அந்த மலை மேல் அவர் இருக்கையில் வந்தது கிட்டத்தட்ட  இந்தக் கார் போல் அல்லவா இருந்தது!...

சுற்றி முற்றிப் பார்த்த அவர் வெளியே ஒரு தூணுக்குப் பின் பதுங்கி மறையாய் நின்றிருந்த உதயின் அடியாள் ஒருவனைத் தன்னருகே வரும்படி சைகை செய்தார். அவன் தயக்கத்துடன் லேசான பயத்துடன் மெல்ல அவர் அருகே வந்தான்.

“யார் கார் இது?

இது மாஸ்டர்ங்கற சாமியார் கார் சார். அவர் வந்திருக்கார்.....

சாமியார்கள் என்றாலே சந்தேகத்துடன் பார்க்கும் செந்தில்நாதனின் சந்தேகம் இப்போது இருமடங்காகியது. அவரும் பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

(தொடரும்)
  
என்.கணேசன்

  

Monday, June 5, 2017

முதிய பெற்றோரைப் புரிந்து கொள்ளுங்கள்!

முதுமை சுலபமானதல்ல. முதியவர்களைப் புரிந்து கொள்வதும், கையாள்வதும் கூட எளிமையானதல்ல. ஆனால் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருக்கும் அவர்களைப் புரிந்து கொள்வதும், அரவணைத்துச் செல்வதும் நம் கடமை.  அவர்களை எப்படிப் புரிந்து கொள்வது? எப்படி கவனித்துக் கொள்வது?  சில அறிவுரைகள் சிந்திக்கவும், நினைவில் வைக்கவும்....




என்.கணேசன்

Thursday, June 1, 2017

இருவேறு உலகம் – 32


ங்கர நம்பூதிரி நீட்டிய ஜாதகங்களை மனோகர் வாங்கி விடவில்லை. புதிய நூறு ரூபாய்க்கட்டுகள் இரண்டு எடுத்து வைத்தான். “அவர் இந்த இரண்டு ஜாதகம் பார்க்க என் முதலாளி என் கிட்ட கொடுத்தனுப்பிய தட்சிணை இது. போதாதுன்னா சொல்லுங்க. அவர் கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்....

பணம் பேசும் போது மற்ற எல்லா சத்தங்களும் அடங்கி விடுகின்றன. சங்கர நம்பூதிரி பேச்சிழந்து அந்தப் பணத்தையே பார்த்தார். ‘இரண்டு ஜாதகம் பார்க்க இருபதாயிரம் ரூபாயா! அது போதாதென்றால் இனியும் வாங்கித் தருவானா?

சங்கர நம்பூதிரி மெல்லக் கேட்டார். “அவரே தான் ஜாதகம் பார்க்கணுமோ? நானும் அவர் கிட்ட இருந்து ஜோதிடம் கத்துகிட்டவன் தான்.... எனக்கும் தொழில் ஜோதிடம் தான்.....

எத்தனை சிறந்த குருவிடம் கற்றுக் கொண்டாலும் ஒவ்வொருவனும் தன் ஆழத்தின் அளவே அறிவை நிரப்பிக் கொள்ள முடியும்என்று மனதில் நினைத்துக் கொண்ட மனோகர் அமைதியாகச் சொன்னான். “என் முதலாளியே பெரிய ஜோதிட வித்வான். ஜோதிட சாஸ்திரத்தைக் கரைச்சுக் குடிச்சவர். அவர் கணிச்சிருக்கற பலனைச் சரிபார்க்க இன்னொரு வித்வான் அபிப்பிராயம் அவருக்குத் தேவைப்படுது... அதுக்கு உங்கப்பா சரியானவர்னு அனுப்பி இருக்கார்

சங்கர நம்பூதிரிக்கு அந்த இரண்டு பணக்கட்டுகள் மேல் இருந்த பார்வையை விலக்க முடியவில்லை. வருத்தத்துடன் சொன்னார். “அவர் பிடிவாதக்காரர். பணம் கூட அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது....

“இந்த இரண்டு ஜாதகங்களும் விசேஷமான வித்தியாசமான ஜாதகங்கள். இந்த ஜாதகங்களைப் பார்க்காமல் எந்த ஜோதிட ஞானமும் பூரணமடையாதுன்னு என் முதலாளி சொல்றார். பணத்துக்காக இல்லாட்டியும் இந்த விசேஷத்துக்காகவாவது பார்க்கச் சொல்லுங்களேன்....


மாஸ்டர் வீட்டில் நடந்ததை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட சங்கரமணி இப்படியும் ஒரு சக்தி வாய்ந்த மனிதனா என்று பிரமித்துப் போனார். ஆனால் விலைக்கு வாங்க முடியாத ஆட்களை அவரால் ரசிக்க முடிந்ததில்லை. தன் ஆதங்கத்தை அவர் மாணிக்கத்திடம் வெளிப்படுத்தினார். “இத்தனை சக்தி இருக்கற ஆளுக்கு அந்த மலைமேல் அந்த வாடகைக் கொலையாளி போன சமயம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கில்லையா.... என்ன கேட்டாலும் குடுத்துத் தெரிஞ்சுகிட்டா எனக்கு இந்த மண்டைக் குடைச்சல் குறையும்

“அவர் அப்படி விலை போற ஆளாய் தெரியலை....என்றான் மணீஷ்.

“அதெல்லாம் சும்மா. ஒவ்வொருத்தனுக்கும் ஒரு விலை இருக்கு. சில பேருக்குப் பணம், சில பேருக்குப் புகழ், சில பேருக்கு வேறெதாவது..... இந்த ஆளுக்கு என்னன்னு நாம கண்டுபிடிக்கணும். அவ்வளவு தான்....

மாணிக்கம் புன்னகைத்தார். அவர் மாமன் இது வரை இந்தப் பேருண்மையைப் பயன்படுத்தி தான்  பல காரியங்கள் செய்திருக்கிறார். இந்த மாஸ்டருக்கும் அவர் சொல்வது போல் ஏதாவது ஒரு விலை இருக்கலாம். ஆனால் மாஸ்டருக்குக் கூட அந்த மலை மேல் நடந்த நிகழ்ச்சிகள் தெரியவர வாய்ப்பில்லை என்று தோன்றியது. சம்பந்தப்பட்ட ஆட்கள் இருக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டும் அவரால் சுலபமாக அறிய முடிகிறது.   அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களை வைத்து ஓரளவு மட்டுமே அந்த நெருக்கமானவர்கள் பற்றி அறிய முடிகிறது. இது வரை மாஸ்டரை மிகவும் கூர்ந்து கவனித்ததில் அவர் அறிந்த விஷயம் இது. இதை அவர் மாமனிடம் வாய் விட்டுச் சொன்னார்.

சங்கரமணி அங்கலாய்த்தார். “சம்பந்தப்பட்ட ரெண்டு பேருமே இல்லையே. அது தானே ப்ரச்சனயே. பாவி கொலைகாரன் செத்துத் தொலைஞ்சுட்டான். க்ரிஷ் காணாமப் போயிட்டான்.... சரி க்ரிஷ் வீட்டுக்குப் போய் அந்த ஆள் என்ன கண்டுபிடிக்கறான்னு பார்ப்போம்..... “

மணீஷ் தன் மனதில் வலிமையாக எழுந்த எண்ணத்தைச் சொன்னான். “எனக்கென்னவோ அவர் தெரிஞ்சதை எல்லாம் நமக்குச் சொல்லிடறதில்லைன்னு தோணுது. என்னை மனசுல க்ரிஷை நினைக்கச் சொன்ன அவர் அது மூலமா நிறைய தெரிஞ்சுகிட்டாலும் முழுசும் நமக்கு சொல்லிடல...

மாணிக்கம் மகன் சொன்னதைப் பற்றி யோசித்தார். மாஸ்டர் என்கிற மனிதர் பல விஷயங்களில் மர்மமானவராகவே இருக்கிறார்...


தய் தன் பெற்றோரிடம் மாணிக்கத்துடன் மாஸ்டரைச் சந்திக்கப் போனதைத் தெரிவித்தான். தம்பி நலமாக இருப்பதிலும், அவன் வந்து விடுவான் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லா விட்டால் கூட அவன் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் போனதாகச் சொன்னான். அங்கு   மாஸ்டருடனான தன் அனுபவத்தை அவன் சொன்ன போது கமலக்கண்ணனும், பத்மாவதியும் ஆச்சரியப்பட்டார்கள்.

கமலக்கண்ணன் சொன்னார். “அவர் பணம் காசு எதுவும் வாங்கறதில்லைன்னு சொல்றே. அதிகமா யார் வீட்டுக்கும் போகாதவர்னும் சொல்றே. அப்படிப்பட்டவர் நம்ம வீட்டுக்கு வர ஒத்துகிட்டதே பெரிய விஷயம்....

பத்மாவதி சொன்னாள். “அவருக்கு ஏதாவது கடவுளோட அருள் இருக்கு. அதனால தான் அப்படிச் சொல்ல முடியுது. அவர் எந்தக் கடவுளைக் கும்பிடறாருன்னு கேட்டியா?

உதய் குறும்பாகக் கேட்டான். “ஏன் நாளைல இருந்து நீயும் அந்த சாமியைக் கும்பிடப் போறியா?

“கும்பிட்டா தான் என்ன?

“அம்மா தாயே, அதெல்லாம் நான் கேட்கல. அவர் வர்றப்ப நீயும் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு தர்மசங்கடப்படுத்தாதே..... கொஞ்சம் கவுரவமா கம்பீரமா இரு....

“சரி தான் போடா. பெரிய கவுரவஸ்தன். கவுரமா இருக்கறவன் எவனாவது முன்னாடி போன அந்தக் கார்க்காரனை அப்படிக் கெட்ட வார்த்தையில் திட்டுவானாடா

உதய் தந்தையைப் பார்க்க, அவர் வாய் விட்டுச் சிரித்தார்.

அன்றிரவு உதயால் உறங்க முடியவில்லை. அவன் மாஸ்டர் சொல்லப் போவது என்னவாக இருக்கும் என்று பலவித அனுமானங்களில் மூழ்கிப் போனான். க்ரிஷ் பற்றி அவர் சொல்லும் தகவல்கள் அவன் நலமாக வந்து சேர உதவும்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவர் சக்தி வாய்ந்த மனிதர் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட மனிதர் இங்கு வந்து அறிவது மட்டும் நல்லதாக இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான்....

அவனைப் போலவே சங்கரமணி, மணீஷ், மாணிக்கம் மூவரும் தூக்கம் தொலைத்திருந்தார்கள். மாஸ்டர் என்ன சொல்வார் என்று அவர்களால் எந்த யூகத்திற்கும் வர முடியவில்லை. அவர் சொன்னதை வைத்தே அவர்கள் அடுத்த திட்டத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதால் தற்போதைய குழப்பத்தை முழுவதுமாகத் தீர்த்து வைக்கும் வகையில் அவர் சொல்லப் போவது இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆவலிலும் உறக்கம் வராமல் எப்போது விடியும் என்று அவர்கள் காத்திருந்தார்கள்.

அவர்கள் மட்டுமல்லாமல் மாஸ்டரும் அன்றிரவு உறங்காமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்குத் தன் சக்திகளைக் கூர்மைப்படுத்த வேண்டி இருந்தது. உதய் அலைகளையும், சங்கரமணி அலைகளையும் படித்து அனாயாசமாக அவர் சொல்ல முடிந்த நிகழ்வாக நாளை இருக்கப் போவதில்லை. எதிரி அந்த அலைகளையும் ஏதாவது விதத்தில் ஊடுருவிக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்....

தனக்கு விதிக்கப்பட்டதாய் உணரும்  பொறுப்பை என்றுமே தட்டிக் கழித்திராத மாஸ்டர் இந்த முறை தன் கடமையாற்ற குருவின் ஆசிகளை மனதார வேண்டினார். காலம் எத்தனை கடந்தாலும், குருவையே மிஞ்சி ஜொலித்தாலும் குரு குரு தான். உயிரோடு உருவத்தில் இருந்தாலும் சரி, பின் மறைந்து உருவமில்லாமல் அண்ட வெளியில் கலந்திருந்தாலும் சரி குருவுடன் ஒரு நல்ல சிஷ்யன் மானசீகத் தொடர்பில் இருக்க முடியும். வணங்கி அவருடைய ஆசிகளைப் பெற முடியும். எண்ணிய சிறிது நேரத்திலேயே அவர் குருவின் ஆசிகளை உணர்ந்தார். மனம் லேசானது.

கூடவே குரு ஏதோ சொல்வது போல் இருந்தது. மனதை ஒடுக்கிக் கூர்ந்து கவனித்தார்... ஆபத்து, அபாயம்.... என்பது போன்ற எச்சரிக்கையை அவர் உணர்ந்தார். அதற்கும் மேல் உணர முயன்ற போது அந்த அலைவரிசை கலைந்து போனது. யாரோ இடைமறிக்கிறார்கள்.... வலிமையாகத் தடை செய்கிறார்கள். குருவின் அலைகளோடு அவரால் கலக்க முடிந்தால் குருவுக்கு நடந்தது என்ன என்பதையும் அவரால் அறிந்து கொள்ள முடியும். அதனால் ஒட்டு மொத்தமாக அதைத் தடை செய்யப் பார்க்கிறார்கள் என்பது புரிந்தது.

மாஸ்டர் பிரார்த்தனைக்குத் திரும்பினார். சொந்த சக்திகள் போதாமல் போகும் போது இறைவனைத் தவிர வேறு ஏது ஒருவருக்கு அடைக்கலம்?..... அதிகாலை நான்கு மணிக்குத் தான் மாஸ்டர் உறங்கப் போனார். இரண்டு மணி நேரத் தூக்கம் முடிந்து, காலைக்கடன் முடிந்து, வழக்கமான தியானம், பிரார்த்தனை முடிந்து க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்பினார்.


காலை எட்டே முக்கால் மணிக்கே மாணிக்கமும் மணீஷும் க்ரிஷ் வீட்டுக்கு வந்து விட்டார்கள். மாஸ்டரை அழைத்துச் செல்ல வரவேண்டுமா என்று கேட்ட போது அவரே வருவதாக சுரேஷிடமிருந்து பதில் வந்தது. விலாசம் மட்டும் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். பத்மாவதி ஒரு மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்று பக்தி சிரத்தையுடன் காத்திருந்தாள். நெற்றி நிறையத் திருநீறும், நடுவே குங்குமமும் வைத்துக் கொண்டு அவள் வந்த போது உதய் தந்தை காதில் முணுமுணுத்தான். “கைல வேப்பிலை ஒன்னு தான் பாக்கி

கமலக்கண்ணன் சிரிப்பை அடக்க முயற்சி செய்யும் போதே பத்மாவதிக்கு மகன் தன்னைப் பற்றித் தான் ஏதோ சொல்லி இருக்கிறான் என்கிற சந்தேகம் வந்து விட்டது. மாணிக்கமும், மணீஷும் இருந்ததால் சத்தமாகக் கேட்காமல் மகன் அருகில் வந்து கேட்டாள். “என்னடா சொன்னே?

அம்மா பக்திப்பழமா வந்திருக்காங்கன்னு சொன்னா இவர் கிண்டலா சிரிக்கிறார்என்று உதய் போட்டுக் கொடுத்தான்.

கணவரை முறைத்த பத்மாவதி ஏதாவது சூடாகச் சொல்லி இருப்பாள். அதற்கு முன் வாசலில் மாஸ்டரின் கார் வந்து நின்றது. உதய் கடிகாரத்தைப் பார்த்தான். மணி சரியாக ஒன்பது.

பரபரப்புடன் அனைவரும் வெளியே வந்தார்கள். மாஸ்டர் காரில் இருந்து இறங்கினார். காவி வேட்டியும், அரக்கு நிற கதர் சட்டையும் அணிந்தபடி  தேஜஸுடன் இறங்கிய அவரைப் பார்த்து அத்தனை கைகளும் கூப்பின. கை உயர்த்தி ஆசி வழங்கிய மாஸ்டர் ஏதோ ஒரு மெல்லிய குரலை அங்கே உள்வாங்கினார். ஒரு கணம் கண்களை மூடி அவர் கவனித்த போது ஒரு பலவீனமான குரல் அம்மா என்றழைப்பது கேட்டது. அது க்ரிஷின் குரல் என்பதை மாஸ்டர் உணர்ந்தார். க்ரிஷின் அலைகள் இங்கு தங்குதடையில்லாமல் வந்து சேர்கின்றன. அவருக்குள் ஒரு உற்சாகம் பிறந்தது...

அவரையே பார்த்துக் கைகூப்பி நின்றிருந்த பத்மாவதி இளைய மகன் அழைப்பது போல் உணர்ந்து திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

அதைக் கவனித்த மாஸ்டர் மெலிதாய் புன்னகைத்தார்.  குழந்தைகள் விஷயத்தில் ஒரு பாசமுள்ள தாயின் உள்ளுணர்வுச் சக்தி, யோகியின் சக்திக்குச் சிறிதும் சளைத்ததல்ல....

(தொடரும்)


என்.கணேசன்

Monday, May 29, 2017