என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, October 10, 2007

காதல் என்பது காத்திருப்பது!

"ஐயா, இதுக்கு முன்னால் கோயமுத்தூர் வந்திருக்கீங்களா?"

புரோக்கர் பொன்னுசாமி ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டான். நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து கிளம்பியது முதல், காரில் தன்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஆழ்ந்த யோசனையுடன் அமர்ந்திருந்த அந்த பெரிய மனிதரின் மௌனம் அவனுக்கு என்னவோ போலிருந்தது.

"நான் நாற்பது வருஷத்திற்கு முன் இங்கே ஒரு மில்லில் மூன்று வருஷம் வேலை பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இப்ப தான் வர்றேன்". ரகுவரன் ஒரு கணம் தாமதித்து பதில் சொன்னார்.

"அப்படீங்களா? இப்ப ஊரு எப்படி மாறிடுச்சு பார்த்தீங்களா? அப்ப எந்த ஏரியாவில் குடியிருந்தீங்க?"

ரகுவரன் பதில் சொல்லவில்லை. அவனது கேள்வி காதில் விழாதது போல் இருந்து விட்டார். ஒரு பதில் இன்னொரு கேள்வியை உருவாக்கும். இப்படி சங்கிலித் தொடராக அவனுடன் பேசும் மனநிலையில் அவர் இல்லை.

சிறிது நேரம் அவரது பதிலை எதிர்பார்த்த பொன்னுசாமி பின்பு தானும் மௌனமாகி விட்டான்.

ஆனால் அவனது கேள்வி அவர் வாழ்வின் வசந்த கால நினைவுகளை மனதில் கிளப்பி விட்டது. இன்று பம்பாயில் கோடிக்கணக்கில் சொத்தும் பல விலை உயர்ந்த கார்களும், பங்களாக்களும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த நகர வீதிகளில் ஒரு பழைய சைக்கிளில் அவர் வலம் வந்த காலம் அது. சில சமயங்களில் அவர் தோளைப் பிடித்துக் கொண்டு ஒரு அழகான பெண் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருப்பாள். அந்தப் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு சுகம் இருந்தது. அவளை அவர் உயிருக்கு உயிராக அன்று காதலித்தார். அவளது தந்தையின் வீட்டில் தான் ஒரு போர்ஷனில் குடியிருந்தார். அவளும் அவர் மீது உயிரையே வைத்து இருந்தாள்.

அந்த மூன்று வருடங்களில் அவர் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரது முதல் கவிதை ஒரு பத்திரிக்கையில் பிரசுரமான போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"காணாத போது
காணாமல் போவது
காதல் அல்ல.
காதல் என்பது
காத்திருப்பது"


"உங்களால் எப்படி இவ்வளவு அழகாக கவிதை எழுத முடிகிறது" என்று ஒரு முறை அதிசயித்து கேட்டாள்.

"நீ என்னுடன் இருக்கையில் கவிதை தானாய் வருகிறது" என்று புன்னகையுடன் அவர் பதில் சொன்னார். அது உண்மை தான். அவளைப் பிரிந்த பிறகு அவர் கவிதை எழுதியதில்லை.

அவர் வேறு ஒரு நல்ல வேலை கிடைத்து பம்பாயிற்குப் பயணமான தினம் அவள் கண்ணீரோடு சொன்னாள். "நீங்க கண்டிப்பாய் வருவீங்க இல்லையா? நான் உங்களுக்காக இங்க காத்துகிட்டு இருப்பேன்"

அவரும் போகும் போது திரும்ப வந்து அவளை அவள் தந்தையிடம் பெண் கேட்கும் எண்ணத்துடன் தான் போனார். ஆனால் பம்பாயில் நிறைய பணத்துடன் தன் மகளையும் அவருக்குத் திருமணம் செய்து தர ஒரு பணக்காரர் முன் வந்த போது இது போன்ற சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்று அவரது பெற்றோர் புத்திமதி சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் தன் காதலைச் சொல்லி மறுத்தார். ஆனால் அவரது தந்தை "பிராக்டிகல்" ஆக இருக்கும் படி புத்திமதி சொன்னார்.

"பிராக்டிகல்" ஆக யோசித்ததில் காதல் கரைய ஆரம்பித்தது. அந்தப் பணக்காரப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். மாமனார் தந்த பணத்தை முதலீடு செய்து ஆரம்பித்த வியாபாரம் பல மடங்கு இலாபத்தைத் தந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வாழ்க்கையில் தேடிய பணம் கிடைத்தவுடன் காதலும், கவிதைகளும் பழங்கதை ஆகின. எப்போதாவது சில சமயங்களில் பழையவை நினைவுக்கு வரும். வாழ்க்கையில் அந்த மூன்று வருடங்களின் இனிமை பின்பு எப்போதும் இருந்ததில்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தும். அதெல்லாம் சில நிமிடங்கள் தான். பின்பு பழையபடி "பிராக்டிகல்" ஆவார். எல்லாமே சௌகரியமாக மறந்து போகும்.

வியாபார நண்பர் ஒருவரின் மகன் திருமணம் கோயமுத்தூரில் நடக்கவே அதற்கு அவர் வர வேண்டியதாயிற்று. அப்போது தான் அங்கு ஒரு இடம் வாங்கி ஒரு வீடு கட்டினால் என்ன என்று தோன்றியது. சாதாரண மில் தொழிலாளியாக இருந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டிப் பார்க்க மனம் திடீரென்று ஆசைப் பட்டது. அதுவும் தான் முன்பு குடியிருந்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் இடம் கிடைத்தால் பரவாயில்லை என்று பேச்சு வாக்கில் நண்பரிடம் சொல்ல, அவர் புரோக்கரிடம் சொல்ல, அதன் விளைவு தான் புரோக்கருடன் இந்த பயணம்.

இப்போது ஏனோ மனம் காதலியை நினைத்துப் பார்த்தது. அவளும் இப்போது பேரன் பேத்திகள் எடுத்து எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பாள் என்று தோன்றியது. தன்னைப் போல் அவளும் எப்போதாவது நினைத்துப் பார்ப்பாளோ?

"நாம பார்க்கப் போற இடம் பத்து சென்ட். பழைய ரெண்டு போர்ஷன் இருக்குங்க. வீட்டுக்காரர் தன் மகள் கல்யாண செலவுக்காக தான் விற்கிறார்ங்க. கல்யாணம் அடுத்த மாசம்ங்க. அதனால் விலையைக் கொஞ்சம் குறைச்சு பேரம் பேசலாங்க. ஒத்துக்குவார்ங்க"

மௌனம் புரோக்கர் பொன்னுசாமிக்குத் தாங்க முடியாத சித்திரவதையாக இருக்கும் போலிருக்கிறது அன்று ரகுவரன் எண்ணியபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தார். ஊரும் அவரைப் போலவே நிறையவே மாறியிருந்தது.

அவரிடம் பதில் வராவிட்டாலும் பொன்னுசாமி பேசிக் கொண்டு போனான். "வீட்டுக்காரர் திருநள்ளாறு போயிருக்கிறார். வீடு பார்க்க ஒன்றுமில்லைங்க. அது மகா பழசுங்க. அதை இடிச்சு தானே கட்டப் போறீங்க....ஆ...டிரைவர் நிறுத்துப்பா. இந்த இடம் தான்"

ரகுவரன் ஒரு கணம் சிலையானார். பொன்னுசாமி காண்பித்த இடம் அவர் ஒரு காலத்தில் வசித்த அதே வீடு. சுற்றும் முற்றும் பங்களாக்கள் இருந்த அந்தப் பகுதியில், இரண்டு போர்ஷன்கள் கொண்ட அந்த ஓட்டு வீடு மாத்திரம் மாறாமல் அப்படியே இருந்தது. விதி என்பது இது தானோ? தன்னை சுதாரித்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினார். பக்கத்து போர்ஷன் பூட்டி இருந்தாலும் அவர் இருந்த போர்ஷன் வீடு பூட்டப் படாமல் இருந்தது.

"இந்த வீட்டில் யார் இருக்காங்க பொன்னுசாமி"

"அந்த வீட்டுக்காரரோட அக்கா இருக்கு. அது பைத்தியமுங்க. அதனால தான் அதை விட்டுட்டு அவங்க போயிருக்காங்க"

"எனக்கு இந்த வீட்டுக்குள்ள போய் பார்க்கணுமே"

பொன்னுசாமி பதறினான். "ஐயோ வேண்டாங்க. அந்தப் பைத்தியம் இருக்கிற இடம் ரொம்ப மோசமாய் தான் இருக்கும். எப்படியும் இடிச்சு தள்ளிட்டு தானே கட்டப் போறீங்க. பார்க்க என்னங்க இருக்கு?"

"பரவாயில்லை. நான் பார்க்கணும்"

தர்மசங்கடத்துன் பொன்னுசாமி அவரைப் பார்த்தான். "சரி வாங்க பார்க்கலாம்"

ரகுவரன் கதவைத் தட்டினார். ஆனால் திறந்தே இருந்ததால் கதவு மெள்ள திறந்து கொண்டது. ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. உள்ளே போகலாமா என்று பொன்னுசாமியை அவர் பார்வையாலேயே கேட்டார்.

பொன்னுசாமி பரிதாபமாய் எச்சிலை விழுங்கினான். " இது வரைக்கும் வீட்டுக்கு வெள்ளை அடிக்க வந்தவங்களை எல்லாம் அந்தப் பைத்தியம் விளக்குமாறால அடிச்சுத் துரத்தி இருக்கு. அதோட தம்பி, அதான் வீட்டுக்காரர், அவர் கூட அதிகம் உள்ளே போக மாட்டாருங்க. எனக்குப் பெரிய பெரிய ரௌடிகளைப் பார்த்தா கூட பயமில்லை. ஆனா பைத்தியம்னா கொஞ்சம் திகில் தானுங்க.... என்ன செய்யும் ஏது செய்யும்னு சொல்ல முடியாதுங்களே..."

"சரி நானே போறேன். நீ இங்கேயே இரு"

ஒரு கணம் யோசித்து விட்டு அதுவே நல்லது என்ற முடிவுக்கு பொன்னுசாமி வந்தான். கோட்டு சூட்டுடன் உள்ளே போகும் இந்த பெரிய மனிதர் எந்த நிலையில் வெளியே வரப் போகிறாரோ, மாற்று உடை இருக்கிறதோ இல்லையோ என்ற கவலையுடன் உள்ளே போகும் அவரைப் பார்த்தபடி வெளியே சற்று தள்ளியே நின்றான். ஒரு வேளை அவர் ஓடி வந்தால் தன் மீது மோதி விடக் கூடாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது.

நெஞ்சு படபடக்க உள்ளே நுழைந்த ரகுவரன் தான் நாற்பது வருடங்கள் பின்னுக்கு வந்து விட்டதைப் போல உணர்ந்தார். அந்த வீடு அவர் விட்டுப் போனபடியே இருந்தது. 1964 வருடத்திய காலண்டர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் உபயோகப்படுத்தி வந்த நாற்காலி அறையில் நடு நாயகமாய் வைக்கப்பட்டிருந்தது. அவரது கவிதைகள் பிரசுரமான பத்திரிக்கைகளும், அவரது பழைய டைரி ஒன்றும் அந்த நாற்காலி மீதிருந்தன. சுவரின் ஒரு பகுதியில் அவர் எழுதியிருந்த பால் கணக்கு கூட மங்கலாகத் தெரிந்தது. 1964ல் இருந்து காலம் அந்த அறையில் ஸ்தம்பித்து விட்டது போல் அவருக்குத் தோன்றியது.

"யாரது?"

சமையலறையில் இருந்து ஒரு குரல் பலவீனமாய் கேட்டது. உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த அவர் குரல் வந்த திசையைத் திகைப்புடன் பார்த்தார். சமையலறையிலிருந்து ஒரு கிழவி மெள்ள வந்தாள்.

"யாரது?" அவள் மறுபடி கேட்டாள்.

அவர் முன்பு நினைத்தது பொய். காலம் அங்கே ஸ்தம்பித்து நிற்கவில்லை. அவர் காதலியை காலம் சின்னா பின்னப்படுத்தி இருந்தது. அடையாளமே தெரியாதபடி அவள் உருக்குலைந்து போயிருந்தாள்.

"வசந்தா" ரகுவரன் அழைத்தார். ஆனால் அவள் அவரை அடையாளம் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

"நான் ரகுவரன்.."

"ஆமாம். அது தான் அவர் பெயர். அவர் இன்னும் வரலையே"

"நான் யார்னு தெரியலையா வசந்தா?" என்று சத்தமாகக் கேட்டார். அவளுக்குக் காது கேட்கவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

"சத்தம் போடக் கூடாது. அவர் கவிதை எழுதிட்டு இருக்கார். கவிதை எழுதும் போது சத்தம் போட்டால் அவருக்குப் பிடிக்காது. அவர் வர்ற வரை இந்தப் பத்திரிக்கை படிங்க. இதில் இருபதாம் பக்கம் அவர் எழுதின கவிதை இருக்கு. முதல் பரிசு வாங்கின கவிதை" என்று சொல்லி அந்த நாற்காலியில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொடுத்தாள்.

கைகள் நடுங்க அந்தப் பத்திரிக்கையைப் பிரித்தார். இருபதாம் பக்கம் அவர் படத்துடன் அந்த முதல் பரிசுக் கவிதை பிரசுரமாகி இருந்தது.

விடை இல்லாத கணக்கு


ஒன்றான இரண்டிலிருந்து
மீண்டும் ஒன்று போனால்
மீதம் இருப்பதென்ன என்றேன்.
பூஜ்ஜியம் என்றும் ஒன்று என்றும்
புரியாமல் சொல்கிறார்கள்.
மீதமிருந்து சிதறும் இதயம்
எத்தனை துகளாய் உடையும் என்று
எவரால் தான் சொல்ல முடியும்?


படிக்கையில் அவர் கண்கள் கலங்கின. கவிஞனாக எழுதியதன் உண்மையை மனிதனாய் நேரில் உணர்கையில் ஏற்பட்ட துயரம் அது.

"உன்னை இங்கே நான் எதிர்பார்க்கலை வசந்தா. நான் இந்த இடத்தை விலைக்கு வாங்க தான் வந்தேன்..."

அவள் கண்கள் கலங்கின. "சார், இது அவர் வாழ்ந்த வீடு. அவர் வர்றேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார். கண்டிப்பாய் வருவார். உங்களுக்கு விலை கொடுத்து வாங்க ஆயிரம் வீடு கிடைக்கும். தயவு செய்து இந்த வீட்டை விட்டுடுங்களேன். ஒரு நாள் அவர் வர்றப்ப நான் இல்லாமல் போயிட்டா அவர் துடிச்சுப் போயிடுவார், அவரோட அந்தக் கவிதையில் சொன்ன மாதிரி. சார், நீங்க யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா? நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா?"

ரகுவரன் உடைந்து போனார். இதயம் ரணமாகி ரத்தம் கசிந்தது. தன்னை விடப் பெரிய பாதகன் இந்த உலகில் இருப்பானா என்று சந்தேகப் பட்டார். கைகளைக் கூப்பி கனத்த மனத்துடன் குரல் கரகரக்க சொன்னார். "பிராக்டிகல் என்று ஒரு இங்கிலீஷ் வார்த்தை சொன்னாங்க வசந்தா. நான் விலை போயிட்டேன். இப்ப என் கிட்டே என்னைத் தவிர எல்லாமே இருக்கு. உனக்கு நான் செஞ்ச துரோகத்திற்கு இது தான் நான் கண்ட பலன். என்னை மன்னிச்சசுடு வசந்தா"

அவரது வார்த்தைகள் அவளைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அவள் அவரது டைரியைக் கையில் எடுத்துத் தடவியபடி ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கியது போல் தெரிந்தது. நிமிடத்திற்கு நிமிடம் மனதில் கனம் அதிகரிக்க அவளைப் பார்த்தபடி ரகுவரன் சிலையாக நிறைய நேரம் நின்றார். அவள் அவர் இருப்பதையே மறந்து விட்டதாகத் தோன்றியது.

அவர் வெளியே வந்த போது பொன்னுசாமி காரில் சாய்ந்தபடி டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்தவுடன் ஓடி வந்தான்.

"வாங்கய்யா. நல்ல வேளை அந்தப் பைத்தியம் உங்களை ஒன்றும் செய்யலை" அவன் நிஜமாகவே சந்தோஷப் பட்டான்.

காரில் திரும்பிப் போகும் போது சொன்னான். "கிரயமான அடுத்த நிமிஷமே அந்தப் பைத்தியத்தைக் கூட்டிட்டு போயிடுவாங்க. வீடு காலி செய்யறதுல உங்களுக்குப் பிரச்னையே இருக்காது"

ரகுவரன் உடைந்த குரலில் உறுதியாகச் சொன்னார். "இந்த இடத்தை அவங்க சொல்ற விலை கொடுத்து முடிச்சுடலாம் பொன்னுசாமி. ஆனா அந்த வீட்டை அந்தம்மா காலி செய்ய வேண்டாம். அவங்க காலம் முடியற வரைக்கும் அங்கேயே இருக்கட்டும். புரிஞ்சுதா பொன்னுசாமி"

"புரிஞ்சுதுங்கய்யா" என்று வாயளவில் சொன்னாலும் பொன்னுசாமிக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. கிடைக்கப் போகும் கமிஷனைக் கணக்குப் போட ஆரம்பித்ததால் அவன் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

-என்.கணேசன்


நன்றி: நிலாச்சாரல்.காம்

Tuesday, October 9, 2007

BE A BUMBLEBEE

A self development article

For many years every one knew that running a mile in less than 4 minutes was impossible . Articles published in journals of physiology ‘proved beyond doubt’ that the human body couldn’t do it. Then on May 6, 1954, Roger Bannister broke the four mile barrier and achieved this long sought dream of the athletic world.

He learned to break a big goal into little ones. He trained himself to think of the four quarters in the mile separately. Each time he aimed to run the quarter in 58 seconds or less. He ran to the point of collapse. Then he would rest. He would dash another quarter mile. Each time the point of collapse was pushed back a little. When he finally ran his great race it was in 3 minutes 59.6 seconds. In next four years the feat was performed 46 times by himself and many others.

So never judge what you can do by any precedent. Because man’s capacities are unlimited and so little has been tried. According to scientists, a bumblebee’s body is too heavy and its wing span too small. Aerodynamically the bumblebee cannot fly. But the bumblebee doesn’t know that and it keeps flying. When you don’t know your limitations, you try wonderful things and surprise yourself. In fact the only limitations a person has are those that are self imposed.

Human nature is not a machine to be built after a model and set to do within limit prescribed for it, but a giant tree which requires to grow and develop itself according to the tendency of the inward forces.

Cherish your dreams and visions as they are the blueprints of your ultimate achievements. Success consists of a series of little daily efforts. Do everything with feeling and enthusiasm. Do them to the best of your ability. Always push yourself a little beyond your limit. Trying is the key word. Improvement comes if you try and if you correct your next performance by what you learned from the trials. In your journey there will many roadblocks. Every achiever has had them. But don’t let the obstacles to stop you. If you run into a wall, don’t turn around and give up. Figure out how to climb it, go through it or work around it. Always remember that circumstances can only affect you as far as you allow them to do so. If God wants you to do something and if you are willing to work hard on it, whole world cannot stop you from achieving it.


-N.GANESHAN

மானுடம்

சிறுகதை

வெளியே பலர் தலைதெறிக்க ஓடும் சத்தமும், பலரது கூக்குரலும் கேட்டன. முஸ்தபா முதுகில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த ஹரி பயந்து போய் கீழே இறங்கி அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். "தோஸ்த், எனக்குப் பயமாயிருக்கு"

நாற்பத்தைந்து வயது முஸ்தபா தன் நான்கு வயது நண்பனை பேரன்புடன் அணைத்துக் கொண்டார். "நான் இருக்கேனுல்ல. அப்புறம் என்னடா கண்ணா பயம்"

அவர் மனைவி பாத்திமா அவசர அவசரமாக ஜன்னல்களை சாத்தினாள். "மறுபடி மதக் கலவரம்னு நினைக்கிறேன்". அவள் குரலில் பயமும் பதட்டமும் தெரிந்தன.

"மதக்கலவரம்னா என்ன தோஸ்த்?" என்று ஹரி வெகுளித்தனமாகக் கேட்ட போது முஸ்தபாவிற்கு திடீரென்று என்ன சொல்வது என்று தெரியவில்லை. பின் வருத்தத்துடன் சொன்னார். "சில பேருக்குப் பைத்தியம் பிடிக்குதுன்னு அர்த்தம்"

ஹரிக்கு ஒன்றும் விளங்கா விட்டாலும் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை அந்தச் சிறிய ஊரில் மதக் கலவரம் என்பது அறியாத ஒன்றாக இருந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் ஜனத்தொகையில் ஏறத்தாழ சரிபாதியாக இருக்கும் அந்த ஊரில் அந்தக் காலத்தில் மதம் சண்டை மூட்டும் விஷயமாக இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் மதித்தும், விட்டுக் கொடுத்தும் பெருந்தன்மையாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாட்டில் எங்கெங்கோ நடக்கும் சம்பவங்களும், விடப்படும் அறிக்கைகளும் கூட அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகள் தயவால் பெரிதாக்கப்பட்டு கலவரம் வெடிக்கக் காரணமாகி விடுகின்றன. இதெல்லாம் சரியல்ல, தேவையில்லாதது என்று சிந்திப்பவர்கள் இன்னும் பெருமளவு ஊரில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிந்திப்பவர்கள் செயல்படுவதில்லை. செயல்படுபவர்களோ சிந்திப்பதில்லை.

வெளியே தெரு விளக்குக்கு யாரோ கல்லெடுத்து எறிந்து பல்பு பெரும் சத்தத்துடன் உடைந்து சிதறும் சத்தம் கேட்டது. 'இந்தத் தெரு விளக்கு எந்த மதத்தையும் சேர்ந்ததல்லவே, இதையேன் உடைக்கிறீர்கள்' என்று முஸ்தபாவிற்கு கதவைத் திறந்து கத்தத் தோன்றியது. ஆனால் இதை வைத்தே இன்னொரு கலவரம் ஆரம்பிக்கக் கூடும் என்பதால் அவர் வாய் திறக்கவில்லை.

"தோஸ்த் எனக்குத் தூக்கம் வருது" என்றான் ஹரி.

"கொஞ்சம் சாப்பாடு ஊட்டிட்டு தூங்க வை. அப்புறமா அவங்க வீட்டுக்குக் கொண்டு போய் விடறேன்" என்று அவனை மனைவியிடம் கொடுத்தார். "ஆன்ட்டி கிட்ட போடா தங்கம். கொஞ்சம் சாப்பிட்டுட்டு தூங்குவியாம்" என்று சொல்லி ஹரியின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார். அவனுக்கு அவர் தோஸ்த் என்றாலும் பாத்திமா ஆன்ட்டி தான். அவன் சாப்பிட்டு விட்டுத் தூங்கிப் போனான். முஸ்தபா மணியைப் பார்த்தார். மணி இரவு ஒன்பதரை.

ஹரி பக்கத்துத் தெருவில் வசிக்கும் சாமா சாஸ்திரிகளின் பேரன். தாய் தந்தை இருவரையும் ஒரு விபத்தில் பறி கொடுத்து விட்டுத் தன் தாத்தாவுடன் வாழும் ஹரிக்கும், குழந்தைகள் இல்லாத முஸ்தபாவுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு மிக ஆழமானது. அவரது பெட்டிக் கடையில் தான் சாமா சாஸ்திரி வெற்றிலை பாக்கு வாங்குவார். அப்போது பேரனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பார். துறுதுறு என்று இருக்கும் அந்தச் சிறுவனின் சுட்டித் தனம் முஸ்தபாவை மிகவும் வசீகரித்து விட்டது. ஆரம்பத்தில் பேச்சுக் கொடுத்தவர் காலம் செல்லச் செல்ல அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விளையாடும் அளவு நெருங்கி, ஒருநாள் அவனைப் பார்க்கா விட்டால் பைத்தியம் பிடித்து விடும் நிலைக்கு வந்து விட்டார். ஹரியும் அவருடன் 'தோஸ்த், தோஸ்த்' என்று மிக ஒட்டி விட்டான். தினமும் அவர் வீட்டுக்குப் போவதும், அவருடன் விளையாடுவதும் அவனுக்கு மிக முக்கியமாகப் போய் விட்டது.

சாமா சாஸ்திரிகள் அந்த ஊர் பெருமாள் கோயிலில் பூஜை செய்பவர். ஆரம்பத்தில் தன் பேரன் முஸ்தபாவின் வீட்டுக்குப் போவதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை. ஆனால் ஹரி அவர் பேச்சைக் கேட்பதாக இல்லை. தாய் தந்தை இல்லாத அந்தக் குழந்தையை அதற்கு மேல் கண்டித்து நிறுத்த அவரால் முடியவில்லை. ஆனால் தனியாக முஸ்தபாவிடம் தயங்கியபடி சொன்னார். "சாப்பிட மட்டும் எதுவும் தராதேள்".

முஸ்தபா சொன்னார். "இந்தக் குழந்தை என் வீட்டுக்கு வர ஆரம்பிச்ச நாளில் இருந்து நாங்க அசைவம் சமைக்கறதை நிறுத்திட்டோம் சாமி". சாமா சாஸ்திரிகள் சமாதானம் அடைந்தார்.

முஸ்தபாவின் சமையலறை அசைவத்தை மறந்து விட்டாலும் பாத்திமா மட்டும் ஓட்டலிலோ விருந்திலோ அசைவம் சாப்பிடுவதுண்டு. ஆனால் முஸ்தபா அசைவ உணவைப் பிறகு தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. அவருடைய ஹரிக்கு வேண்டாதது அவருக்கும் வேண்டாம்.

வெளியே அமைதி நிலவ ஆரம்பித்து சிறிது நேரம் ஆன பின் முஸ்தபா தூங்கும் ஹரியைத் தோளில் போட்டுக் கொண்டு சாமா சாஸ்திரிகள் வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது தான் பக்கத்து வீட்டு முனுசாமி வந்து பதட்டத்துடன் விஷயத்தைச் சொன்னார். "பாய், சாமா சாஸ்திரியைக் குத்திக் கொன்னுட்டாங்க"

முஸ்தபா இடி விழுந்தது போல் உணர்ந்தார். சுமார் பத்து நாட்களுக்கு முன் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டு ஒரு இந்து ஒரு முஸ்லீமைக் குத்திக் கொன்றிருந்தான். கொன்றதற்குக் காரணம் மதம் அல்ல என்றும் தனிப்பட்ட பிரச்சினையே என்றும் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் சிலர் அதை இந்து, முஸ்லீம் பிரச்சினையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது இது போன்ற ஒரு அப்பாவி மனிதர் கொலையில் வந்து முடியும் என்று முஸ்தபா கனவிலும் நினைக்கவில்லை. தூங்கும் ஹரியை கனத்த இதயத்துடன் பார்த்தார். முன்பே தாய் தந்தையரை இழந்திருந்த இந்த குழந்தை இப்போது இருந்த ஒரே சொந்தத்தையும் இழந்து விட்டது.

மறுநாள் ஹரியை அழைத்துக் கொண்டு போக ஒரு கும்பல் அவர் வீட்டுக்கு வந்தது. அவர்கள் வந்த போது ஹரி தூங்கி கொண்டு இருந்தான்.

"எங்கே கூட்டிகிட்டுப் போகப் போறீங்க? குழந்தை இங்கேயே இருக்கட்டுமே" முஸ்தபா கெஞ்சினார்.

வந்தவர்கள் முகத்தில் உக்கிரம் தெரிந்தது. கூடவே ஒரு போலீஸ்காரரும் இருந்திரா விட்டால் அவரை ஒரு கை பார்த்திருப்பார்கள்
போலத் தோன்றியது.

"நீ யாருய்யா? உனக்கும் இந்தக் குழந்தைக்கும் என்னய்யா உறவு?"

"அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னய்யா சம்பந்தம்?"

"ஏன், இந்தக் குழந்தையையும் கொன்னுடத் திட்டம் வச்சிருக்கீங்களா?"

கேள்விகள் காய்ச்சிய ஈயமாய் விழ முஸ்தபா தளர்ந்து தடுமாறி நின்றார். தூங்கி கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். முஸ்தபா ஒரு நடைப் பிணமாய் மாறி விட்டார். அதன் பிறகு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. தூங்க முடியவில்லை. கடையைத் திறக்கவில்லை. யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை. அந்தக் குழந்தைக்காக யாரிடமும் யுத்தம் செய்யக் கூட அவர் தயாராக இருந்தார். ஆனால் மனிதர்களுடன் சண்டை போட்டு ஜெயிக்கலாம். மத உணர்வுடன் சண்டை போட்டு ஜெயிக்க முடியுமோ?

பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள். அவர் உறவுக்காரர் அப்துல்லா வந்து சொன்னார். "சரி விட்டுத் தள்ளுங்க. நம்ம சனத்துல எத்தனையோ குழந்தைக இல்லையா. எதோ ஒரு குழந்தையை தத்து எடுத்துகிட்டா போச்சு. இந்தியாவில் குழந்தைக்கா பஞ்சம்"

முஸ்தபா வாய் திறக்கவில்லை. எதோ ஒரு குழந்தை ஹரியாக முடியுமா? இவர்களுக்கு அவர் எப்படி சொல்லிப் புரிய வைக்க முடியும். பாத்திமாவும் நிறையவே பாதிக்கப் பட்டிருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொன்னாள். "அடுத்தவங்க புள்ள மேல ஆச வச்சது நம்ம தப்பு. நமக்கு என்ன உரிமை இருக்கு. மறக்கணும். மனச நீங்க தேத்திக்கணும்". முஸ்தபாவிற்கு யார் என்ன சொன்னாலும் ஹரியின் பிரிவைத் தாங்க முடியவில்லை. ஹரியைப் பத்து மைல் தள்ளி இருக்கும் ஒரு மடத்தில் தற்போது அவர்கள் தங்க வைத்திருப்பதாக முனுசாமி மூலம் தகவல் கிடைத்தது. "அங்கத்து ஸ்வாமிஜி அவனை சென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்குத் தத்துக் கொடுக்க ஏற்பாடு செய்துட்டதா பேசிக்கறாங்க. ஒரு வாரத்துல ஹரி அங்க போயிடுவான் போலத் தெரியுது"

முஸ்தபா இயந்திரமாய்த் தலையசைத்தார்.


அந்த மடத்தில் ஸ்வாமிஜி என்று எல்லோராலும் பயபக்தியுடன் அழைக்கப் பட்ட அந்தத் துறவி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஹரி அசையாமல் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கும் அந்த முதியவரை அதிசயமாய் பார்த்தான். 'இதென்ன இவர் உட்கார்ந்துட்டே தூங்கறார்!'. தானும் அவர் முன் அப்படியே அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்து பார்த்தான். அவன் கண்களைத் திறந்த போது அவர் புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"நீங்க ஏன் பாயில படுத்துத் தூங்காம உக்காந்துகிட்டே தூங்குறீங்க"

அவர் வாய் விட்டுச் சிரித்தார். அவன் எழுந்து சுவாதீனமாக அவர் மடியில் உட்கார்ந்து கொண்டான். மடத்தில் உள்ள சிலர் திடுக்கிட்டு அவனை எழுப்பப் போன போது அவர் தடுத்து விட்டு அவனிடம் கேட்டார். "உன் பெயரென்ன குழந்தை?"

"ஹரி. உங்க பெயரென்ன?"

"தாத்தா"

தாத்தா என்றதும் அவன் முகம் வாடியது. "எங்க தாத்தா எங்கே?"

"அவர் சாமி கிட்ட போயிருக்கார்"

"அவர் எங்க போனாலும் என்னை விட்டுட்டு போக மாட்டாரே. அவர் ஏன் இன்னும் வரலை?"

ஸ்வாமிஜி ஹரியின் முதுகை ஆதுரத்துடன் தடவினார். "நீ போய் விளையாடறியா?"

"நான் என் தோஸ்த் கூட தான் விளையாடுவேன். என் தோஸ்த் எங்கே?"

"வருவான். உன் தோஸ்த் பெயரென்ன?"

"தோஸ்த் தான்"

ஸ்வாமிஜி புன்னகைத்தார். "உனக்கு மந்திரம் சுலோகம் ஏதாவது தெரியுமா?"

"ஓ" ஹரியின் முகம் பெருமிதமாய் மலர்ந்தது.

"சொல் பார்க்கலாம்"

"சுக்லாம் பரதரம் விஷ்ணும்......" ஹரியின் மழலைக் குரல் கணீரென்று ஒலித்தது. அவன் முடித்த பின் ஸ்வாமிஜி கை தட்டினார். "நல்ல பையன். இன்னொரு சுலோகம் சொல் பார்க்கலாம்".

ஹரிக்கு அவர் கை தட்டியது பெருத்த சந்தோஷத்தைத் தந்திருந்ததால் கணீரென்று சொன்னான். "அல்லாஹ¤ அக்பர் அல்லா...". பல முறை மசூதியில் இருந்து கேட்டதை 'இது என்ன' என்று முஸ்தபாவிடம் கேட்க அவர் அவனுக்குப் புரிய வைக்க 'இதுவும் ஒரு சுலோகம்' என்று சொல்லியிருந்ததார்.

ஹரி அந்த 'சுலோகம்' சொல்லி முடித்த போது ஸ்வாமிஜியும் மடத்தில் இருந்தவர்களும் ஸ்தம்பித்துப் போய் இருந்தனர். இத்தனை காலமாக இந்த மடத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை. சிலையாக அமர்ந்திருந்த ஸ்வாமிஜியைப் பார்த்து ஹரி ஏமாற்றத்துடன் கேட்டான். "ஏன் தாத்தா கை தட்டலை. நான் சரியாய் சொல்லலையா?"

சாட்சாத் இறைவனே நேரில் வந்து கேள்வி கேட்டதாய்த் தோன்ற ஸ்வாமிஜி திகைப்பில் இருந்து மீண்டு கை தட்டினார். மடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஹரியை தூக்கிக் கொண்டு போனார்கள்.


"நாளைக்கு அந்தக் குழந்தையைக் கூட்டிகிட்டுப் போக ஆளுக சென்னையில் இருந்து வர்றதா கேள்விப் பட்டேன்" என்று முனுசாமி முஸ்தபாவிடம் தெரிவித்தார். என்றென்றைக்குமாய் ஹரியை இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் முஸ்தபாவின் மனதை இமயமாய் அழுத்தியது. முஸ்தபா கண்கலங்கினார்.

அதைக் கண்டு மனம் நெகிழ்ந்த முனுசாமி சொன்னார். "ஒரு தடவ போய் பாத்துட்டு தான் வாங்களேன் பாய்". அவர் அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்தப் பாச உறவை கண்கூடாக தினம் பார்த்துக் கொண்டிருந்தவர்.

"பார்க்க விடுவாங்களா"

"அந்த ஸ்வாமிஜி ரொம்ப நல்லவரு. அவரு முன்னாடி உங்கள யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க. வேணும்னா நானும் கூட வர்றேன்".

ஆனால் அவர்கள் கிளம்பியதைக் கேள்விப்பட்ட சில முஸ்லீம் நண்பர்கள் இப்போதைய சூழ்நிலையில் தனியாக முஸ்தபா அந்த மடத்தருகே செல்வது அவர் உயிருக்கு ஆபத்து என்று முடிவு செய்தவர்களாக பாதுகாப்புக்கென்று ஒரு கூட்டமாக பின்னாலேயே கிளம்பினார்கள்.


முஸ்தபாவும் முனுசாமியும் சென்ற போது ஹரி வெளியே தனியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். முஸ்தபாவைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒரே சந்தோஷப் பிரவாகம். "தோஸ்த்" என்று கத்தியபடி ஓடோடி வந்தான். "நீ ஏன் என்னைப் பார்க்க இவ்வளவு நாளாய் வரலை"

சுற்றும் முற்றும் பார்த்த படி முஸ்தபா ஹரியை கட்டியணைத்துக் கொண்டார். மற்றவர்கள் வந்தால் தொடர்ந்து பேச விட மாட்டார்கள் என்று அறிந்து அவசர அவசரமாகச் சொன்னார். "எங்க போனாலும் நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும். சரியா கண்ணா. இந்த தோஸ்தை மறந்துடாதே"

"நான் எங்கேயும் போகலை. உன் கூடவே வர்றேன். எனக்கு இந்த இடம் பிடிக்கலை. இங்க யாரும் என் கூட விளையாட வர மாட்டேன்கிறாங்க." என்ற ஹரி கெஞ்சினான். "உன் கூடவே நான் வரட்டுமா தோஸ்த்".

அதற்கு மேல் துக்கத்தை அணை போட முடியாமல் முஸ்தபா முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "அல்லாவே! இது என்ன சோதனை? இப்படி கேட்கிற குழந்தையை நான் எப்படி விட்டு விட்டு போவேன். என் கொஞ்ச நஞ்ச மன உறுதியையும் இந்தக் குழந்தை கரைத்து விடும் போல இருக்கிறதே". எத்தனை நேரம் அழுதாரோ தெரியவில்லை. முனுசாமியின் கை அவர் தோளைத் தொட்ட போது சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார். அப்போது தான் அவருக்கு மிக அருகில் ஸ்வாமிஜி நிற்பதைப் பார்த்தார். முஸ்தபாவுக்கு முன்னால் இந்துக்கள் பலரும், அவருக்குப் பின்னால் முஸ்லீம்கள் பலரும் நின்று கொண்டிருந்தார்கள். இரண்டு கும்பல்களிலும் ஒரு உஷ்ணம் தெரிந்தது.

முன்னால் இருந்த் கும்பலில் இருந்து ஒருவன் பலவந்தமாக அவரிடம் இருந்து ஹரியை பிரித்து தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். ஹரி முஸ்தபாவைக் காட்டி ஸ்வாமிஜியிடம் சொன்னான். "தாத்தா இது தான் என்னோட தோஸ்த்"

தோஸ்த் என்று அடிக்கடி குழந்தை சொன்னது இன்னொரு குழந்தையை என்று இதுவரை எண்ணியிருந்த ஸ்வாமிஜி புன்னகை பூத்தார். 'இந்தக் குழந்தையின் அகராதி வித்தியாசமானது. சுலோகத்தில் இருந்து தோஸ்த் வரை எல்லாவற்றிற்கும் பிரத்தியேக அர்த்தம் உண்டு'.

"இந்தக் குழந்தைக்கு யாருமே இல்லைன்னு எல்லோரும் என் கிட்டே சொன்னார்களே. நீங்கள் யார்?" கனிவாக ஸ்வாமிஜி முஸ்தபாவைக் கேட்டார்.

முஸ்தபா அந்தக் கனிவான மனிதரிடம் நாத்தழதழக்க எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தார். தன்னைப் பற்றி, சாமா சாஸ்திரிகள் பற்றி, ஹரியைப் பற்றி, ஹரி மேல் தான் வைத்திருந்த எல்லையில்லாத பாசத்தைப் பற்றி, அவன் போன பின் தான் பட்ட தாங்கவொணா வேதனையைப் பற்றி எல்லாம் விவரித்துச் சொன்னார்.

கேட்டு முடித்த ஸ்வாமிஜி திரும்பித் தன் பின் இருந்த கூட்டத்தைப் பார்த்தார். ஹரியை வைத்திருந்தவன் "இந்தக் குழந்தையோட தாத்தாவைக் கொன்னது இவங்க கூட்டம் தான் ஸ்வாமி" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினான். சற்று நேரத்தில் இரண்டு குமபல்களும் பரஸ்பரம் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். கடைசியில் கடவுள்கள், மதங்கள் பற்றி வந்து சண்டை உச்சக் கட்டத்துக்கு வந்த போது ஸ்வாமிஜி கையை உயர்த்தி அமைதிப் படுத்தினார். அவர் முன்பு இரு கும்பல்களும் ஏனோ அடங்கின.

ஸ்வாமிஜி அமைதியாகச் சொன்னார். "இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்து பராமரித்துக் கொண்டு வரும் தெய்வம் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்ததாக இருந்திருந்தால் கண்டிப்பாய் மற்ற எல்லா மதத்தாரையும் அழித்திருக்கும் இல்லையா? மதம், மொழி, நிறம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கிற ஒரே காரணத்தால் தான் அந்த தெய்வம் எல்லாரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இது சிறிதளவாவது சிந்திக்கத் தெரிந்தால் எல்லாருமே உணர முடியும். அப்படியிருந்தும் நாம் சண்டை போடுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?"

இரு தரப்பிலும் மௌனம் நிலவியது. தெளிவான சிந்தனை இருக்கும் இடத்தில் சண்டை சச்சரவுகளுக்கு ஏது இடம்?

"இந்தக் குழந்தைக்கு இது வரை விஷ்ணுவுக்கும் அல்லாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. எல்லாக் குழந்தைகளும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருக்கிறார்கள். நாம் தான் வித்தியாச, வெறுப்பு விதைகளை அவர்கள் மனதில் தூவி பிற்காலப் பிரச்சினைகளுக்கும் இன்றே அஸ்திவாரம் போடுகிறோம்....." அவர் தொடர்ந்து அமைதியாக என்னென்னவோ சொன்னார். ஹரிக்கு அது எதுவும் புரியவில்லை. அவனுக்கு ஒன்றே ஒன்று புரிந்தது. இந்தத் தாத்தா சொன்னால் எல்லாரும் கேட்பார்கள் போலத் தெரிகிறது. இவர் மனம் வைத்தால் நாமும் நம் தோஸ்த்துடன் போய் விடலாம். அவர் முடிக்கும் வரை காத்திருந்து விட்டு ஆவலுடன் அவரிடம் கேட்டான். "தாத்தா நான் என் தோஸ்த் கூடப் போகட்டுமா?"

அவர் புன்னகையுடன் தலையசைத்தார். உடனே தன்னை வைத்திருந்தவனிடம் இருந்து இறங்கி ஓடி வந்து முஸ்தபாவின் கால்களை ஹரி கட்டிப் பிடித்துக் கொண்டான்.

ஸ்வாமிஜி முஸ்தபாவிடம் சொன்னார். "முஸ்தபா, இனி இது உங்கள் குழந்தை. நீங்களே வளர்த்தலாம். இந்தக் குழந்தையை ஒரு இந்துவாகவோ ஒரு முஸ்லீமாகவோ வளர்த்த வேண்டாம். இரண்டு மதங்களிலும் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லிக் கொடுத்து ஒரு நல்ல மனிதனாக வளர்த்துங்கள். இந்த இரண்டு கும்பல்களுக்கும் இடையே பொதுவாய் இருக்கும் ஒரு நல்ல விஷயமாய் உங்கள் வீடு இருக்கட்டும்."

முஸ்தபாவிற்கு நன்றி சொல்ல எத்தனையோ வார்த்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. ஆனால் எதையும் சொல்ல அவரது நாக்கு மறுத்தது. கடைசியாய் ஒரு முறை பார்க்க வந்தவனிடம் கடைசி வரை வைத்துக் கொள் என்று சொல்லி அந்தக் குழந்தையைக் கொடுத்ததன் மூலம் உயிரையே திருப்பிக் கொடுத்த அந்த மாமனிதன் முன் மலைத்து நின்றார். வார்த்தைகளுக்குப் பதிலாக கண்ணீர் அருவியாக வழிந்தது. சற்று முன் ஹரியைப் பார்த்து அழுததை விட அதிகமாக குழந்தையைப் போல் கேவிக் கேவி அழுதார். அவர் கைகள் தலைக்கு மேல் நீண்டு ஸ்வாமிஜியை நமஸ்கரித்தன. அவரைப் பார்த்து அப்படியே ஹரியும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கூப்பிக் கொண்டான். அவனுக்கும் ஏனோ அழத் தோன்றியது. அவனும் முதல் முறையாக அழுதான்.

ஸ்வாமிஜியின் வார்த்தைகளாலும் கழுவப்படாத கறைகள் இருபக்கங்களிலும் இருந்த இதயங்களில் இருந்திருக்குமானால், அந்த இரண்டு ஜீவன்களின் கண்ணீரால் கழுவப்பட்டு விட்டன என்றே சொல்ல வேண்டும். வார்த்தைகளுக்கும் மேலாக அன்பென்னும் அந்த மானுட பாஷையை, அதன் சக்தியை அந்தக் கணம் உணர்ந்து மனம் நெகிழ்ந்து அனைவரும் நின்றார்கள்.

-என்.கணேசன்

நன்றி: நிலாச்சாரல்.காம்

Monday, October 8, 2007

எனக்கென்று ஒரு வரம்


சாத்தான் நேரில் வந்தது
வரமொன்று கேள் என்றது
பொன்னும் பொருளும் போகங்களும்
போதிய வரை தர நின்றது
நான் நானாக வேண்டும்
எனக் கேட்டேன்
நீ நீயானால் உன்னிடம்
எனக்கென்ன வேலை என்றது
ஏமாற்றத்துடன் சென்றது.


- என்.கணேசன்

Saturday, October 6, 2007

மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!


சிறு வயதிலிருந்தே நமக்கு நினைவு வைத்துக் கொள்ள சொல்லித் தருகிறார்கள். படிக்கும் பாடமாகட்டும், மற்ற விஷயங்கள் ஆகட்டும் அதிகமாய் நினைவு வைத்துக் கொள்வது எல்லோராலும் பாராட்டப்படுகிறது. துரதிர்ஷடவசமாக அதையும் விட முக்கியமான கலை ஒன்றை யாரும் நமக்கு சொல்லித் தருவதில்லை. அந்தக் கலை மதிப்பெண்கள் வாங்கித் தராதென்றாலும் மன அமைதியை அடைய வைக்கும். அது தான் மறக்கும் கலை.

நம் மனதில் நாம் சேர்த்து வைத்துள்ள நினைவுகளில் எத்தனை நினைவுகள் நம் மனதில் ரணங்களாக இருக்கின்றன. எத்தனை நினைவுகள் வரப்பிரசாதமாக இருப்பதற்கு பதிலாக சாபக்கேடாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை நினைவுபடுத்தப் படும் போதும் எப்படியெல்லாம் நாம் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம். பழைய தமிழ் திரைப்பாடல் போல "நினக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று எத்தனை முறை நமக்குள்ளே கேட்டு நொந்திருக்கிறோம்? அப்படி நிறையவே நம் மனதில் சேர்த்து வைத்துள்ளோம். கடலளவு பலரும் சேர்த்து வைத்திருக்கிறோம். அலைகளாய் ஓயாமல் எழுந்து அவை நம்மை அழுத்துகின்றன. கடந்ததெல்லாம் பழங்கதை ஆகாமல் நம்மை நிகழ் காலத்திலும் வாழ விடாமல் செய்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை அடுத்தவர்கள் நமக்குச் செய்த துரோகங்களாகவும், அவர்கள் நம்மை இழிவு படுத்திய நிகழ்ச்சிகளாகவுமாக இருக்கின்றன. பிரபல ஆங்கில எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்: "நம் எதிரிகளை நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கிறோம். அவர்களால் நாம் நம் தூக்கத்தையும், சந்தோஷத்தையும் இழக்கிறோம். அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றித் தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் நிஜமாகவே அவர்கள் ஆனந்தக் கூத்தாடுவார்கள். நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது". அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

நமக்கு இழைக்கப்படும் நன்மைகளை நாம் தண்ணீரில் எழுதுகிறோம். தீமைகளையோ கல்லில் செதுக்குகிறோம். நண்பர்களை விட நம் நினைவுகளை எதிரிகளே அதிகமாக ஆக்கிரமிக்கிறார்கள். இதை நாம் உணர்வதாகவே தெரிவதில்லை. ஒரு நாளில் எத்தனையோ இதமான சம்பவங்கள் நம் வாழ்வில் நடந்திருக்கலாம். ஆனால் யாரோ ஒருவர் சொன்ன சுடுசொல் எல்லாவற்றையும் மறக்க வைத்து அன்று முழுவதும் நம் மனதில் தனி ஆவர்த்தனம் செய்கிறது. அந்த நபரைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் பின் எப்போதும் அந்த ந்¢னைவு வந்து மனம் கொதித்து அமைதி இழக்கிறோம்.

ஒன்றை நாம் என்றும் மறந்து விடலாகாது. ஒவ்வொரு மனிதனின் தவறான குணாதிசயங்களும், நடத்தைகளும் அறியாமையால் அல்லது தவறான அறிவால் தான் ஏற்படுகின்றன. வளர்த்த விதம், அமைந்த வாழ்க்கை, சூழ்நிலைகள், சேர்க்கை, விதி என்று பலதும் ஒருவன் எண்ணங்களையும், குண நலன்களையும், நடத்தைகளையும் ந்¢ர்ணயிக்கின்றன. இறைவன் தந்த ஆறாவது அறிவை முறையாகப் பயன்படுத்தினால் இவற்றின் தாக்கங்களையும் மீறி ஓருவன் பண்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் எத்தனை பேர் அந்த ஆறாவது அறிவை பயன்படுத்துகிறார்கள்? அதைப் பயன்படுத்தாதவன், அடுத்தவர்களைப் புண்படுத்துபவன், 'இன்னாத சொற்களைக்' கூறுபவன், ஏமாற்றுபவன் அவனது 'கர்மா'வின் பலனைக் கண்டிப்பாக அனுபவிப்பான். ஆகவே அவனுக்காக அனுதாபப் பட வேண்டுமேயொழிய தொடர்ந்து வெறுப்பதும், உள்ளே கொதிப்பதும் அறிவிற்கு உகந்ததல்ல.

கைகேயியின் செயலால் வெகுண்ட இலக்குவனுக்கு இராமன் சொல்லும் சமாதானத்தை கம்பன் அழகாகக் கூறுவான்:

"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

விதியின் செயல் என்று உணர்ந்ததால் இராமன் அமைதியடைய முடிந்தது. பதினான்கு வருட வனவாசத்திற்கு கைகேயி காரணமாகி அதன் விளைவுகளில் ஒன்றாய் சீதையை இழந்து பெரும் வேதனை அடைந்த போதும் ஒரு முறையாவது இராமன் "எல்லாம் இந்தக் கைகேயியால் வந்தது" என்று ஒரு முறை கூட மனதளவிலும் நினைத்ததாய் இராமாயணத்தில் செய்தி இல்லை.

சிலர் நம்மிடம் மிக நன்றாகப் பழகியிருப்பார்கள். ஏதோ ஒரு சிறு மனஸ்தாபம் அவர்களுடன் ஏற்பட்டால் அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்க நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. எத்தனையோ நல்லது உள்ள இடத்தில் ஓரிரு குறைகள் இருப்பது பெரிய குற்றமல்ல. நம்மிடம் குறைகள் இல்லையா? குறைகளே இல்லாத அந்த தனிப்பெரும் தன்மை இறைவனைத் தவிர யாரிடம் இருக்கிறது? திருவள்ளுவர் கூறுவார்-

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும்"

இராமன் செய்தான், திருவள்ளுவர் சொன்னார் என்பதற்காக மறக்கவும் மன்னிக்கவும் கூறவில்லை. நம் நிம்மதிக்காக, மன அமைதிக்காக மன்னித்து மறப்பது உத்தமம். குறுகிய வாழ்க்கையில் நாம் சாதிக்கவும், சந்தோஷப்படவும் வேண்டுமானால் இறந்த காலம் என்ற பிணத்தை நம்முடன் கட்டிக் கொண்டு அலைவது முட்டாள்தனம். இறந்ததைப் புதையுங்கள். கட்டிக் கொண்டு காலம் முழுவதும் புலம்பாதீர்கள்.

கால்குலேட்டர் உபயோகிக்கும் போது ஒரு கணக்கு முடிந்த பின்னர் அதை அழித்து விட்டு பின்பு அடுத்த கணக்கு போட்டால் தான் சரியான விடை கிடைக்கும். அதைச் செய்யாமல் தொடர்ந்து கணக்கு போட்டுக் கொண்டே போனால் தவறான விடை தான் வரும். இது நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். நிகழ்காலத்தில் கவனமாக வாழுங்கள். அதை விட்டு பழைய கவலைகளில் நிகழ்காலத்தை கோட்டை விட்டால் இந்த நிகழ்காலத்திற்கும் சேர்த்து எதிர்காலத்தில் வருந்த வேண்டி இருக்கும்.

சிலர் மறக்க என்று மதுவையும் போதைப் பழக்கத்தையும் நாடுகிறார்கள். இதை விட முட்டாள்தனம் வேறிருக்க முடியாது. தற்காலிகமாக நிம்மதி கிடைக்கிற மாதிரி தோன்றினாலும், இது நம்மை பரிபூரணமாக அழித்து விடும். கவலையை மறக்க போதையை நாடுபவன் பின்பு போதையை மறக்க படாத பாடு பட நேரிடும்.

ரமண மகரிஷியும், ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சரியான பூரணமான சிந்தனையால் (விசாரம்), இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்கிறார்கள். அரைகுறை ஆராய்ச்சியும் அலசலும் தான் சிலவற்றை மனதிலிருந்து முழுவதுமாகக் களையத் தடையாக இருக்கின்றன. முழுவதுமாய் சிந்தித்து உண்மையை உணர முடிந்தால், அந்த உண்மையே ஒருவனை விடுவிக்கும் என்கிறார்கள். அரவிந்தாஸ்ரமத்து அன்னை இன்னொரு வழி சொல்கிறார். "தேவையற்ற மறக்கப் பட வேண்டிய ஒரு எண்ணம் அடிக்கடி உங்களை தொந்தரவு செய்யுமானால் அதை முழுமையாக கவனமாக உணர்வு பூர்வமாக ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின்பு 'சரி மனமே நீ சொல்வதெல்லாம் சொல்லியாகி விட்டது. உன் வேலை முடிந்தது' என எண்ணி அக்காகிதத்தை கவனத்துடனும், உறுதியுடனும் எடுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போடுங்கள். அந்த எண்ணங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடுங்கள்".

தியானமும், பிரார்த்தனையும் பல வேதனைகளை மறக்க மருந்தாக இருக்கின்றன. எல்லா பாரத்தையும் அந்த இறைவனிடம் இறக்கி வையுங்கள். காலமும், கடவுள் அருளும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மறக்கும் பக்குவத்தை அளிக்க உதவும்.

வாழ்வில் நல்ல குறிக்கோள் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருந்தால், அதை அடைய வேண்டும் என்ற உள்ளே ஒரு அக்னி இருந்தால் எல்லாவற்றையும் மறந்து உற்சாகத்தோடு வாழ்க்கையைத் தொடர முடியும்.

குறைகளும் நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிது படுத்துகிறோமோ அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன. வாழ்வது ஒரு முறை. அது குறைகளின் கணக்கெடுப்பாக இருக்க வேண்டாம். கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம். நல்லதை நினைவில் வைப்போம். தீயதை மறக்கக் கற்போம்.

-என்.கணேசன்

ஐயோ இந்தியனே...



ஒன்பதாவது ஆளும் அதைக் கடந்து தான் போனான்.

"நான் சொன்னேன் இல்லைங்களா, இது தான் நம்ம இந்திய மனோபாவம்" என்று என் நண்பர் சலித்துக் கொண்டார். அவர் சொன்னதில் உண்மை இருப்பதாகவே எனக்கும் பட்டது.

பல பேர் வாக்கிங் போகும் அந்த ரேஸ் கோர்ஸ் சாலையின் நடைபாதையில் ஒரு கண்ணாடித் துண்டு கிடந்ததை உட்கார்ந்த இடத்தில் இருந்து சற்று முன் தான் இருவரும் பார்த்தோம். அப்போதே என் நண்பர் சொன்னார். "நீங்க வேணும்னா பாருங்க. ஒரு பய எடுத்து தூரப் போட மாட்டான்."

ஒவ்வொருவராக அதைக் கடந்து சென்றதை நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம். சிலர் கவனிக்காமலேயே கடந்தார்கள். சிலர் பார்த்துக் கொண்டே கடந்தார்கள். கடப்பவர்களை என் நண்பர் எண்ணிக் கொண்டே வந்தார்.

"அதுவே காசாய் இருந்திருந்தா அது எப்பவே காணாமல் போயிருக்குங்க. இதுவே அமெரிக்காவாகவோ, இங்கிலாந்தாகவோ இருந்திருந்தா நான் இரண்டு வரை கூட எண்ண முடியாது. அங்கேயெல்லாம் ஒவ்வொருத்தனும் பொது இடத்தில் எவ்வளவு பொறுப்புணர்வோடு செயல்படுவாங்க தெரியுமா?" அவர் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். மகள் இங்கிலாந்தில் இருக்கிறாள். அவர் ஒரு முறை அங்கெல்லாம் போய் ஒவ்வொரு மாதம் இருந்து விட்டு வந்திருக்கிறார். அன்றிலிருந்து அங்குள்ள சுத்தம், சுகாதாரம், கட்டுப்பாடு பற்றி எல்லாம் அவர் சொல்லாத நாளில்லை.

இந்த கண்ணாடித் துண்டை எடுத்துப் போட ஓருவர் கூட முனையாதது எனக்கே என்னவோ போல் இருந்தது. நானே அதை எடுத்துப் போட எண்ணி எழுந்தேன். செருப்பில்லாமல் வரும் ஏதாவது ஏழை காலை அது பதம் பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது.

"நீங்க உட்காருங்க சொல்றேன். நடக்கிறவர்களில் ஒருத்தனுக்காவது அதை அப்புறப் படுத்தணும்னு தோணுதான்னு பார்க்கலாம்" அவர் தடுத்து என்னை மறுபடி உட்கார வைத்தார்.

பன்னிரண்டாவது ஆள் அந்த இடம் வந்ததும் அதை உற்றுப் பார்த்தான். ஏதோ மின்னியதைக் கண்டு அதை குனிந்து எடுத்துப் பார்த்தான். கண்ணாடித் துண்டு என்று அறிந்தவுடன் அலட்சியத்தோடு அதை மறுபடி நடு வீதியிலேயே போட்டு விட்டு நகர்ந்தான்.

"அவன் எடுக்கறப்ப சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு இந்தியனாவது இருக்கிறானேன்னு நினைச்சேன். நடு வீதியில் திரும்பப் போடறதை ஒரு ஓரமாய் தள்ளிப் போடக்கூடாதா? நம்ம நாடு உருப்படாமப் போகிறதுக்கு இவன் மாதிரி ஆளுங்க தான் காரணங்க"

பதினைந்தாவது நபர் ஒரு பெண்மணி. அதன் மேல் காலை வைக்கப் போனவள் கடைசி நொடியில் கவனித்து காலைத் தள்ளி வைக்கப் பாடுபட்டதில் கிட்டத்தட்ட ஒரு பரத நாட்டியமே ஆடி விட்டாள். அதைப் பார்த்து நண்பர் வாய் விட்டு சிரித்தே விட்டார். அவரை முறைத்துப் பார்த்து "எல்லாம் ஈவ் டீசிங்கில் உள்ளே போட்டால் சரியாகிப் போய் விடும்" என்று சொல்லி விட்டுப் போனாள்.

அவரது சிரிப்பு காணாமல் போயிற்று. "எல்லாம் கலிகாலம்" என்று பொதுவாகச் சொன்னவர் எண்ணுவதை மட்டும் நிறுத்தவில்லை. இருபது வரை அவரை பாதசாரிகள் எண்ண விட்டார்கள். ஒரு சின்ன விஷயத்தில் மக்களது அலட்சிய மனோபாவம் எப்படி வெளிப்படுகிறது என்பதை எங்களால் பார்க்க முடிந்தது.

லேசாக இருட்ட ஆரம்பித்தது. என் நண்பர் கிளம்பினார். கிளம்பும் போது மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னார். "இதெல்லாம் பார்க்கறப்ப தாங்க பேசாம பிரிட்டிஷ் காரன் கிட்டவே நாடு இருந்திருந்தா தேவலைன்னு தோணுது. சுதந்திரம்னா என்னன்னு தெரியாதவன் கிட்ட கிடைக்கற சுதந்திரம் என்னமா பாடுபடுதுன்னு பார்த்தீங்க இல்ல"

ஆனால் போகும் போது அவரும் அந்தக் கண்ணாடித் துண்டைத் தாண்டியதைப் பார்த்து "சார்.. அதை எடுத்துப் போட நீங்களும் மறந்துட்டீங்களே" என்று கூப்பிட்டுச் சொன்னேன்.

அவர் திரும்பி வந்து சொன்னார். "மறக்கலை. வேணும்னே தான் எடுக்கலை. இத்தனை பேரைப் பார்த்தீங்க இல்ல. இவங்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு எதுக்குங்க. இப்படிப்பட்டவங்களுக்கு எதுவும் செய்யக்கூடாதுங்க. நாம ஒண்ணு ரெண்டு ஆள் நினைச்சா இந்த நாட்டைத் திருத்த முடியுமா என்ன. நம்ம வரைக்கும் நாம் கவனமாய் இருக்கணும் அவ்வளவு தான்"

அவர் போய் விட்டார். நான் என் காதுகளை நம்ப முடியாமல் சிறிது நேரம் சிலையாக நின்றேன். அந்தக் கண்ணாடித் துண்டை எடுத்து தள்ளி இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வீட்டை நோக்கி நடக்கையில் மனம் ஏனோ கனத்தது.

- என்.கணேசன்
- நன்றி: நிலாச்சாரல்.காம்
-

நதி போல் செல்



மிகப் பெரிய நதிகளின் உற்பத்தி ஸ்தானங்களுக்குச் சென்று பார்ப்பவர்கள் வியப்பில் மூழ்குவர். கண் முன் தெரியும் இந்த சிறிய நீர்ப் பெருக்கு போகப் போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.

இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.

வழியில் நிச்சயமாகத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும் என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.

பல இடங்களில் அதன் வழி கரடு முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில் மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை.

ராபர்ட் ·ப்ரோஸ்ட் (Robert Frost) என்ற ஆங்கிலக் கவிஞன் சாகா வரிகளில் கூறியது போல, நதி "I have miles to go before I sleep)-"நான் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது" என அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே, சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.

தான் செல்கின்ற இடம் எல்லாம் செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும் நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை. வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.

மனிதனே நீ நதியைப் போல் இரு. உன் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதே. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறு. வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பாய். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதே. தொடர்ந்து சிறந்து செயல் புரி. தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதே. பயனில்லை.

தொடர்ந்து முன்னேறு. பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதே. உன் பயணத்தைப் பாதைகள் தீர்மானிக்க விட்டு விடாதே. சில சௌகரியமான நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதே. அவற்றையும் மீறி முன்னேறும் போது தான் நீ சரித்திரம் படைக்க முடியும். நதியிடம் இருந்து இந்த மகத்தான ரகசியத்தைக் கற்றுக் கொள். உன் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதே.

உன் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருந்தால் நீ சந்திப்பவர்கள் எல்லாம் உன்னால் பயன் பெறுவர். பலர் சிறக்க நீ பயன்படுவாய். கர்வம் கொள்ளாதே. இத்தனையும் சாதித்து உன் இனிய வாழ்வை இறைவனிடம் ஒப்படைக்கும் போதும் மனிதனே நீ நதியைப் போலிரு. "நான்" என்ற உணர்வை விட்டு "எல்லாம் நீ" என ஆனந்தமாய் பரிபூரணமாய் இறைவனை சரணாகதி அடைவாயாக!

- என்.கணேசன்

- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்.