சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 30, 2017

இருவேறு உலகம் - 59


தீத சக்திகளைப் பொருத்த வரை வினாடிகள் கூட மிக முக்கியமானவை. ஓரிரு வினாடிகள் அசந்திருந்தால் கூட தங்கள் வழியில் குறுக்கிட்ட சில சக்திகளை அறிய ஒருவர் தவற விட்டு விட முடியும். அப்படித்தான் மாஸ்டர் தன் மீது ஆக்கிரமிப்பு ஏற்படுத்த இருந்த சக்தியைத் தவற விட்டிருந்தார். திரும்பவும் அந்த அலைகளைத் தேடிப்பார்த்தார். ஆனால் அகப்படவில்லை. அவருக்கு அந்த அலைகள் யாருடையவை என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. எதிரியின் அலைகள் தான் அவை. க்ரிஷ் மீது கவனம் முழுவதுமாகச் செலுத்திய நேரமாகப் பார்த்து குறுக்கிட்டிருக்கிறான்….. ’ஒருவேளை க்ரிஷ் மனதை அறிய முடியாமல் போனதில் எப்படி அதிர்ச்சி அடைகிறேன் என்று தெரிந்து கொள்ளத்தான் வேவு பார்த்தானோ?’ எண்ணிய போதே ஒரு கணம் சினம் எட்டிப்பார்த்தது. ஆனால் எதிரி மேல் ஏற்பட்ட கோபத்தை அவன் பிரதிநிதியாய் வந்துள்ள க்ரிஷ் வரை நீட்ட முடியவில்லை. அவனது பரவசப் புன்னகையைப் பார்த்து அவர் முகம் உடனே மென்மையானது.

உதயும், க்ரிஷும் குனிந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினார்கள். அவர் ஆசி வழங்கினார்.

உதய் புன்னகையுடன் அறிமுகப்படுத்தினான். “சுவாமி இவன் தான் என் செல்லத் தம்பி க்ரிஷ். நீங்க சொன்ன மாதிரியே நல்லபடியா வந்து சேர்ந்துட்டான்.… எங்கே போனான் என்ன ஆச்சுன்னு இவனுக்கு எந்த ஞாபகமும் இல்லைங்கறான்….. ஆனா இடைல இவனுக்கு கொஞ்சம் நினைவு வந்தப்ப யாரோ காட்டுவாசிகள் இவன் வாய்ல மூலிகைச்சாறு விடறது தெரிஞ்சிருக்கு. அவ்வளவு தான் பிறகு எதுவும் ஞாபகமில்லைங்கறான். அழுத்தக்காரன் உண்மைய தான் சொல்றானான்னும் தெரியல. நீங்க தான் உங்க சக்திய வச்சு கண்டுபிடிச்சுச் சொல்லணும்”

மாஸ்டரும் புன்னகையோடு சொன்னார். “ஆள் இல்லாதப்ப அந்த ரூம்ல இருந்து கண்டுபிடிச்ச நிறைய கண்டுபிடிச்ச எனக்கு ஆள் நேர்லயே இருக்கறப்ப கூட இப்ப எதையும் கண்டுபிடிக்க முடியல. உன் தம்பி அந்த அளவு சக்திமானா தான் திரும்பி வந்திருக்கான்..”

உதய் பதில் எதுவும் சொல்லும் முன் அவன் செல்போன் இசைத்தது. அவனுடைய நெருங்கிய அரசியல் நண்பன் ஒருவனுடைய அழைப்பாக இருந்ததால் “நீங்க பேசிட்டு இருங்க சுவாமி…. வந்துடறேன்…..” என்று வெளியே போய் அவனிடம் போனில் பேச ஆரம்பித்தான்.

மாஸ்டர் க்ரிஷை உட்காரச் சொல்லித் தானும் எதிரில் அமர்ந்தார். இருவருக்கும் உடனடியாக எதையும் பேச முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தங்கள் எண்ண ஓட்டங்களில் இருந்தார்கள்.

தன்னுடைய யோக சக்திகள் அவனை ஊடுருவ முடியாதது மாஸ்டருக்கு இன்னும் மன ஆழத்தில் அதிர்ச்சியாகவே இருந்தது. எதிரி இவனுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறான், இவனுடைய உத்தேசம் இப்போது என்னவாக இருக்கிறது, குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக இங்கு வந்தானா இல்லை தானாகவே வந்திருக்கிறானா, இவனது அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தன.

க்ரிஷ் அவர் சக்திகள் பற்றி வீட்டார் மூலமாகக் கேள்விப்பட்டதுக்கு ஏற்ற மாதிரியே அவர் தேஜஸ் இருந்ததையும் கவனித்த போது நிகோலா டெஸ்லா சொன்ன சக்தி அலைகள், அலைவரிசைகள் போன்ற விஷயங்களில் இவர் தேர்ச்சி பெற்றவர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்தது. அவனுடைய எதிரி இதில் நிபுணன் என்று வேற்றுக்கிரகவாசியே சொல்லியிருக்கிறான். வார்த்தைகளில் எள்ளளவும் தாராளம் காட்டாத வேற்றுக்கிரகவாசியே அப்படிச் சொல்லியிருக்கிறான் என்றால் எதிரி ஒரு சூப்பர்மேனாகவே இருக்க வேண்டும். இந்த நிலையில் அவன் இதில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இதெல்லாம் புத்தகங்களைப் படித்துத் தேர்ச்சி பெறுகிற கலை அல்ல. தகுதி வாய்ந்த ஒரு நல்ல குருவால் கற்றுக் கொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற வேண்டிய கலை…..

அவனை எதிரியின் ஆளாகவே நினைக்கிற இவர் எதிரியாகவே இயங்கினால் எதிரிகள் எண்ணிக்கை இரண்டாகி விடும். இப்போது இந்தக் கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரைக் கூடச் சமாளிக்கிற நிலைமையில் அவன் இல்லை. கை மணல் விரல் இடுக்கின் வழியாகக் குறைந்து கொண்டே போவது போல காலம் குறைந்து கொண்டிருக்கையில் அவன் உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும்….

உடனே தீர்மானத்திற்கு வந்த க்ரிஷ் அவரை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான். மாஸ்டர் அதை எதிர்பார்க்கவில்லை.

“இப்போது தானேப்பா காலைத் தொட்டுக் கும்பிட்டாய். என்ன திடீர்னு ரெண்டாவது தடவையா ஒரு மரியாதை” ஆச்சரியத்தோடு சந்தேகமும் சேர மாஸ்டர் கேட்டார்.

மண்டி போட்டு அமர்ந்த க்ரிஷ் அவர் பாதங்களில் இருந்து கைகளை விலக்கிக் கொள்ளாமல் நிமிர்ந்து பார்த்தபடி புன்னகையுடன் சொன்னான். “முதல் தடவை கும்பிட்டது பெரியவங்களைப் பார்த்தவுடன் சின்னவங்க ஆசி வாங்கற சம்பிரதாயம். இப்ப கும்பிடறது ஒரு குருவைத் தேடி வந்திருக்கற சிஷ்யன்  செய்யற வேண்டுதல் நமஸ்காரம்….. எனக்கு சில விஷயங்களைக் கத்துக்கணும். சொல்லிக்குடுப்பீங்களா மாஸ்டர்?”

மாஸ்டருக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அவர் கனவிலும் இப்படியொரு வேண்டுகோளை எதிர்பார்த்திருக்கவில்லை. திகைப்புடன் அவனையே கூர்ந்து பார்த்தார். அந்த முகத்தில், அந்தக் கோரிக்கையில், அந்தப் புன்னகையில் சின்னதாய் ஒரு களங்கத்தைக் கூட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பலவிதமான உணர்வுகள் மனதில் எழ, தன்னைச் சுதாரித்துக் கொண்டு மாஸ்டர் சொன்னார். “உனக்கு ஏற்கெனவே சக்தி வாய்ந்த ஒரு குரு கிடைச்சிருக்கற மாதிரி தெரியுது. ஒரே நேரத்துல ரெண்டு குருக்களிடம் நீ கத்துக்க முடியாது க்ரிஷ்”

அவர் யாரை அனுமானித்துச் சொல்கிறார் என்பது க்ரிஷுக்குப் புரிந்தது. அவன் சொன்னான். “கிடைச்சது குரு அல்ல நண்பன். அவன் போயும் விட்டான்…..”

’அவன்’ போய் விட்டான் என்று க்ரிஷ்  சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. சற்று நேரத்திற்கு முன் அவரை ஆக்கிரமித்த சக்தி அவனுடையது என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. ஆனால் க்ரிஷ் முகத்தில் இப்போதும் பொய் தெரியவில்லை. ஒருவேளை இவனிடம் போய் விடுவதாய் அவன் சொல்லி, அதை இவன் நம்புகிறானோ?

“உனக்கு என்ன கத்துக்கணும்?”

“மன அலைகள், அலைவரிசைகள், பிரபஞ்ச விதிகள், எதையும் உருவாக்கவும், அழிக்கவும் செய்யும் பிரபஞ்ச சக்தியின் ரகசியங்கள்…..”

மாஸ்டர் வாய் விட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கசப்பிருந்தது. “உன் மனசைப் படிக்க முடியாமல் தோற்று நிற்கிற என்கிட்டயே நீ இந்த விஷயங்களைக் கத்துக்க ஆசைப்படறது ஆச்சரியமாய் இருக்கு க்ரிஷ். எப்பவுமே வெற்றி பெற்றவன் கிட்ட கத்துக்கோ. தோத்தவன் கிட்ட கத்துக்க முயற்சி பண்ணாதே”

“பல சமயங்கள்ல வெற்றி, தோல்விங்கறதே வெறும் அபிப்பிராயங்கள் தானே மாஸ்டர்…..”

அவனுடைய வார்த்தைகளில் இருந்த உண்மை ஒரு கணம் அவரை அசைத்தது. ஆனாலும் உறுதியாக அவர் சொன்னார். “எனக்கு யார் மனசுல நுழைய முடியலையோ அந்த மனுஷனுக்கு என்னால கத்துக்குடுக்கவும் முடியாது க்ரிஷ்…”

“எனக்குப் பாதுகாப்புன்னு சொல்லி என் நண்பன் ஏதோ சக்தி வளையம் போட்டுட்டு போயிட்டான்….. அதை எடுத்து வீசற சக்தி எனக்கில்லை மாஸ்டர். உங்களால முடிஞ்சா நீங்க அதைச் செய்யுங்க. அதை நான் தடுக்க மாட்டேன்…. ஆனா நான் சொன்ன விஷயங்கள்ல நான் நிறைய கத்துக்கறது அவசியம். அவசரம் கூட. போலி குருமார்கள் நிறைஞ்ச இந்த உலகத்துல உண்மையான குருவை நான் எங்கேன்னு தேடுவேன். அந்த அளவு காலமும் என் கிட்ட இல்லை. உங்க சிஷ்யனாகிற தகுதி எனக்கு இல்லைன்னு நீங்க நினைச்சா சொல்லுங்க. அதுக்கு மேல வற்புறுத்த மாட்டேன்…..”

அவன் கைகள் இன்னமும் அவர் பாதங்களில் இருந்து விலகவில்லை. அவர் வாழ்க்கையில் முதல் முறையாகப் பெரியதோர் தர்மசங்கடத்தை உணர்ந்தார். அவனுக்குத் தகுதி இல்லை என்று அவர் எப்படிச் சொல்வார். எந்த ஒரு குருவுக்கும் இப்படியொரு சிஷ்யன் கிடைப்பது வரப்பிரசாதமே அல்லவா? அவனுடைய ஆசிரியர்கள் அவனைப் பற்றிச் சொன்னதை எல்லாம் அவரும் படித்திருக்கிறாரே. ஒவ்வொரு ஆசிரியனும் பெருமைப்பட்ட மாணவன் அல்லவா அவன்? மனதிற்குள் அவனிடம் புலம்பினார். “க்ரிஷ், எதிரி உன்னைச் சந்திக்கறதுக்கு முன்னாடி நான் உன்னைச் சந்திச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…..”

பெரியதொரு மனப்போராட்டத்தில் இருந்த மாஸ்டரையும், மண்டியிட்ட நிலையிலேயே அவர் பாதங்களில் இருந்து கைகளை எடுக்காமல் இருந்த க்ரிஷையும் சுரேஷ் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மாஸ்டருடைய உதவியாளன் மட்டுமல்ல. அந்த ஆன்மிக ரகசிய இயக்கத்தின் உறுப்பினரும் கூட. மாஸ்டர் சில நாட்களாகவே க்ரிஷ் பற்றிய சிந்தனைகளிலேயே இருந்ததை அவர் பேச்சில் இருந்து அவனால் உணர முடிந்தது. க்ரிஷை சந்திக்கும் பரபரப்பு காலையில் இருந்தே அவரைத் தொற்றிக் கொண்டதையும் அவன் கவனித்தான். அவரை யாரும் இந்த அளவு பாதித்து அவன் கண்டதில்லை. அவருடைய குருவைக் கொன்ற எதிரியின் ஆள்  க்ரிஷ் என்பதால், க்ரிஷ் மூலமாகவாவது எதிரியை அவர் அடையாளம் காண முடியும் என்பதால், அவருடைய எதிர்பார்ப்பு கலந்த பரபரப்பு இயல்பு தான் என்று நினைத்தான். அதனாலேயே அதே பரபரப்பு அவனையும் தொற்றி இருந்தது.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி க்ரிஷ் இப்போது அவருக்கு எதிரியை அடையாளம் காட்டவில்லை. தன் மனதையும் காட்டவில்லை. மாறாக அவரிடமே கற்றுத்தரவும் வேண்டுகின்றான். என்னவொரு துணிச்சல்! மாஸ்டர் என்ன செய்வார்? அவர் அவன் வலையில் வீழ்ந்து விடுவாரா?

(தொடரும்)
என்.கணேசன் 

9 comments:


  1. “பல சமயங்கள்ல வெற்றி, தோல்விங்கறதே வெறும் அபிப்பிராயங்கள் தானே மாஸ்டர்…..” சிந்தனைக்கு உரிய வார்த்தைகள்

    ReplyDelete
  2. எதிரியாக மாற இருந்தவரை குருவாக மாற்ற முயற்சி செய்யும் க்ரிஷ் பலே பலே. மாஸ்டர் சம்மதிப்பாரா? பதிலுக்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமே.

    ReplyDelete
  3. Thrilling turn of events. Superb sir.

    ReplyDelete
  4. அதுக்குள்ள முடிந்து போயிற்றா...?
    அருமை..எதிர்பாராத திருப்பங்கள் அருமையோ...அருமை.

    ReplyDelete
  5. வேகம் கொஞ்சம் கூட குறையவில்லை .

    ReplyDelete
  6. Super. But really very short update today.

    ReplyDelete
  7. Oru varathuku rendu moonu viyazha kezhama irundha nalla irukum

    ReplyDelete
  8. மாஸடரைப் பொறுத்த வரை, மர்ம மனிதன் முகம் அறியா எதிரியா?
    ஏலியன் போட்ட பாதுகாப்பு வளையத்தை மாஸ்டரால் உடைக்க முடியுமா...?
    அது கிரிஷை ஆபத்தான நிலையில் வைத்து விடுமே...?
    மாஸ்டர் அவனை தன்மாணவனாக ஏற்றுக் கொள்வரா...?





    ReplyDelete
  9. கிரிஷ்க்கு கற்றுக் கொடுக்க ஒத்துக்கொள்ளுங்கள் மாஸ்டர்.... அப்படியே நாங்களும் அத பாத்து copy அடிச்சுக்குவோம்.....

    ReplyDelete