சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 17, 2017

இருவேறு உலகம் – 43


ர்ம மனிதனின் முதல் எண்ணம் சதாசிவ நம்பூதிரி கதையை அன்றைய இரவே முடித்துக் கட்டுவதாக இருந்தது. எந்தவொரு மனிதனும் அவனை முழுமையாக அறிந்து உயிருடன் இருக்கவில்லை. அவன் இருக்க விட்டதில்லை.  சிலருக்கு அவன் பற்றிய சில விஷயங்கள் தெரியும். மற்றவர்களுக்கு மற்ற சில விஷயங்கள் தெரியும். சிலருக்கு அவனை குறிப்பிட்ட ஒருவனாகத் தெரிந்தால் மற்ற சிலருக்கு அவனை வேறு ஒருவனாகத் தெரியும். சிலர் அவனைத் தங்களில் ஒருவனாக நினைத்திருந்தார்கள். அவர்களுடைய எதிரிகள் சிலர் அவனைத் தங்களில் ஒருவனாக நினைத்திருந்தார்கள். ஒருவர் பார்த்த முகம் வேறொருவர் பார்த்ததில்லை. வேறொருவர் பார்த்த முகம் மூன்றாம் நபர் பார்த்ததில்லை. பலரும் அவனை ஒரு ரகசிய மனிதனாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவன் ரகசியங்கள் இத்தனை அடுக்குகள், பரிமாணங்கள் கொண்டது என்று யாரும் சந்தேகப்பட்டது கூட இல்லை. இப்படி ரகசியமாகவே அவன் பல பாத்திரங்களை தரித்து கச்சிதமாகவே வாழ்ந்து வந்தான்.  

அப்படிப்பட்டவனின் பல திறமைகளை, பல தனித்தன்மைகளை சதாசிவ நம்பூதிரி தன் ஆருட சாஸ்திர அறிவால் எட்டியிருந்தார். அவர் இப்படியொரு ஜாதகம் பார்த்ததில்லை. இப்படியொரு உச்ச சக்தி மனிதனை அறிந்ததில்லை. அப்படிப்பட்ட மனிதன் இப்போது வந்து வெளியே இருட்டில் இருந்து அவரைக் கண்காணிப்பது எதற்கு என்று அவருக்குப் புரியவில்லை. யோசித்ததில், முன்பு பார்த்துக் கொண்டிருந்த ஜாதகங்கள் தான் காரணம் என்று புரிந்தது. அதற்கும் மேலே போய் அந்த ஜாதகங்களின் மேல் இந்த மனிதனுக்கு என்ன அக்கறை என்று அறிய நினைத்தார். அந்த நேரத்தில் மின் விளக்கு அணைந்தது. தூரத்தில் ஒரு நாய் அமானுஷ்யமாய் ஓலமிட்டது.

சதாசிவ நம்பூதிரி தன் கையில் இருந்த பேனாவைக் கீழே போட்டார். இனி அவர் மேற்கொண்டு ஆராய்வது அவரை மரணம் வரை கொண்டு போய் விடும் என்று பிரபஞ்சம் எச்சரிக்கை விடுப்பதாக உணர்ந்தார்.  ஒவ்வொரு கணமும் பிரபஞ்சம் நம்முடன் பேசிக் கொண்டு தானிருக்கிறது. நாம் தான் நம் உள்மன இரைச்சலில் அதைக் கேட்க முடியாத செவிடர்களாக இருந்து விடுகிறோம் என்ற அசைக்க முடியாத அபிப்பிராயம் அவருக்குண்டு. ஆருட சாஸ்திரம் மூலம் அப்படியொரு எச்சரிக்கையைத் தற்போது அறிய முடிந்த சதாசிவ நம்பூதிரிக்கு உடனே சாக மனமில்லை. மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என்றும் அது தானாக நிகழ வேண்டும் என்று நினைத்த சதாசிவ நம்பூதிரி தற்போது போட ஆரம்பித்த கணக்குகள் கொண்ட தாள்களைத் தள்ளி வைத்தார். சில வினாடிகளில் மின் விளக்கு எரிந்தது. நாயின் ஊளை ஓலம் நின்றது.

சதாசிவ நம்பூதிரி இதயம் பயங்கரமாய் படபடத்தது. இனி எந்த ஜாதகத்தையும் கணக்கையும் பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை. நாளை காலை அந்த முதலிரண்டு ஜாதகங்களைப் பார்க்க வேண்டும். ஒரு முடிவை அவர் எட்ட வேண்டும். ஏனென்றால் அவர் பார்ப்பதாய் ஏற்றுக் கொண்ட ஜாதகங்கள் அவை. அதற்கான தொகையை அவர் மகன் வாங்கியும் ஆயிற்று.  இந்த ஆருட ஜாதகம் ஆபத்தான ஜாதகம்.... இதை அவர் பார்க்கப் போவதில்லை....

இந்த முடிவை அவர் எட்டியவுடன் அவர் மன ஓட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த மர்ம மனிதன் புன்னகைத்தான். கிழவருக்கு ஆயுசு கெட்டி. கிழவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார்.  அவர் அவனுடைய ஆருட ஜாதகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக அந்த இரு ஜாதகங்களையே பார்த்திருந்தால் இன்னேரம் ஒரு திடமான முடிவை எட்டியிருப்பார். அவர் அப்படி எட்டியிருந்தால் அதை அவன் இன்றே அறிந்தும் இருக்கலாம். ஆனால் அவர் ஆரம்பத்தில் சொன்னபடியே நாளை தான் அவன் அவரிடம் வந்து நேரில் அறிய முடியும்... பரவாயில்லை. நாளையே அவன் வரலாம்.

அவனுக்கு தன் விதி குறித்து வேறொரு மனிதன் ஒரு முடிவை எட்டுவதை அறிய விருப்பமில்லை. அவன் விதி அவன் எழுதிக் கொள்வது.... அவனே தீர்மானிப்பது..... அதைக் கடவுளே தீர்மானிக்கக்கூட அவன் அனுமதிக்க மாட்டான். அவனுடைய எதிரிகள் இருவருடைய விதி மட்டும் எப்படி இருக்கிறது என்று அறிய அவன் ஆசைப்படுவதும் அதற்கேற்றாற்போல தன் விதியை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே ஒழிய வேறு எதற்கும் அல்ல. அவன் ஜோதிட சாஸ்திரம் மூலம் அவர்கள் விதி பற்றி ஒரு முடிவை எட்டியிருக்கிறான். அதில் அவனுக்குச் சில சந்தேகங்கள் தங்கி விட்டிருந்தன. அவற்றை இன்னொரு ஜோதிட விற்பன்னர் மூலமாக தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறான். அவ்வளவு தான்....

சதாசிவ நம்பூதிரி விளக்கை அணைத்து விட்டு உறங்கப் போனார்.  மர்ம மனிதனும் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.....



யார் என் எதிரி?க்ரிஷ் கேட்டான்.

“உண்மையான எதிரி ஒரு தனிமனிதன் அல்ல. உங்கள் சமூகத்தில் புறையோடியிருக்கும் சுயநலம், பேராசை, வெறுப்பு, அலட்சியம் எல்லாம் தான். ஆனால் அவற்றை எல்லாம் தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு ஒரு பேரறிவாளி  ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கக் கிளம்பியிருக்கிறான். அவன் தான் உனக்கு இப்போது பலமான எதிரி.....

க்ரிஷ் குழப்பத்துடன் கேட்டான். அவனுக்கு என்னிடம் என்ன பிரச்னை? ஏன் என்னை எதிரியாக அவன் நினைக்கிறான்?

“நீ உலகத்திற்கு நல்லது செய்யப் போகிறாய். அதனால் அவன் வழியில் கண்டிப்பாகக் குறுக்கிடப்போகிறாய். அவன் எந்தக் குறுக்கீட்டையும் விரும்பாதவன்.

யாரவன்?

“சமயம் வரும் போது அவனை நீயே சந்திப்பாய்.... அவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் மிக ஆபத்தானவன்

க்ரிஷ் புன்னகைத்தான். மரணம் வரை ஒரு முறை வந்தாகி விட்டது. அதனால் இனி அதைப்பற்றிய பயம் எனக்கில்லை. என் ஒரே கவலை என் சாவால் என் குடும்பம் துக்கப்படும் என்பது தான்.

சொல்லும் போதே அவன் மனதில் அப்பா, அம்மா, உதய், ஹரிணி வந்தார்கள். அவர்கள் கண்ணீர் நிரம்பிய விழிகள் மனக்கண்ணில் நிழலாடின. குடும்பம் என்று சொல்லும் போதே அதில் ஹரிணி சேர்ந்து கொண்டதை ஒரு கணம் ஆச்சரியத்தோடு உணர்ந்தான். காதல் எவ்வளவு வலிமையானது!

“நீயே இறந்த பின் உனக்கென்ன கவலை இருக்கப்போகிறது? அவர்கள் துக்கத்தை எப்படி உணர்வாய்? நீ இந்த உலகத்தில் இருந்தால் அல்லவா எதையும் உணர முடியும்?

“நான் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்கள் துக்கத்தை நான் உணர முடியும் என்று நினைக்கிறேன்க்ரிஷ் உறுதியாகச் சொன்னான். சில பந்தங்கள் வலிமையானவை. மரணத்தால் கூட அவற்றை முழுமையாக முடித்து விட முடிவதில்லை என்று அவன் இப்போதும் நினைக்கிறான்....

க்ரிஷ். உன் அன்பும், பாசமும் தான் உன் மென்மையான பகுதியாகவும், பலவீனமாகவும் இருக்கிறது... நாளை உன் எதிரி  அங்கு தான் தாக்க முயற்சிப்பான், ஜாக்கிரதை

க்ரிஷ் அந்த அக்கறையில் நெகிழ்ந்தான். யாரிவன்? இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவன் என்னைக் காப்பாற்றியிருக்கா விட்டால் நான் அந்த அமாவாசை அன்றே இறந்து போயிருப்பேனே. ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து வந்து இவன் இந்தக் கிரகத்தின் நலத்தில் காட்டும் அக்கறையும், என் மீது காட்டும் கரிசனமும் இவன் சொல்லும் அதே மென்மை அல்லவா? இந்த மென்மை, இந்த நேசம் இல்லாவிட்டால் பிரபஞ்சத்தில் நன்மை என்பதே இல்லாமல் போய் விடுமே!

கடந்த சில அமாவாசைகளில் அவனிடம் வேற்றுக்கிரக வாசி நெருக்கமாகப் பழகி வந்தாலும் அவன் உண்மை உருவத்தை க்ரிஷால் பார்க்க முடியவில்லை. புறக்கண்ணால் பார்க்க முடியாது. ஏன், உன் ஐம்புலன்களாலும் கூட என்னை நீ உணர முடியாது. அதற்கும் மீறிய ஒன்றால் நீ என்றாவது என்னைப் பார்க்கலாம். அது வரை என்னுடன் இப்படிப் பழகுவதில் நீ சிரமத்தை உணர்ந்தால் சொல். நான் அந்தக் கருப்புப் பறவை வடிவம் எடுத்தது போல் உனக்குப் பிடித்த ஏதாவது வடிவம் எடுத்து வருகிறேன்...என்று ஆரம்பத்தில் வேற்றுக்கிரகவாசி சொல்லியிருந்தான். ஆனால் அப்படி ஒரு வடிவம் எடுக்கும்படி க்ரிஷ் அவனிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. இறைவனையே அப்படி உருவமில்லாமல் உணர முடியாமல் போனதால் அல்லவா நாம் எத்தனையோ வடிவங்கள் கொடுத்து விட்டிருக்கிறோம் என்று நினைத்த அவன் இறைவனுக்கு முன் இந்த வேற்றுக்கிரகவாசியை உருவமில்லாமலேயே உணரவும், பழகவும் முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று எண்ணினான். ஆரம்பத்தில் அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. எதையும் எப்படியும் மாற்றாமல் உள்ளதை உள்ளபடியே அறிவது தான் உண்மையான ஞானம் என்று உறுதியாக அவன் முயன்றதில் போகப் போக அது சாத்தியமானது. உருவமில்லாத ஒரு நல்ல நண்பனாய் அவனை க்ரிஷ் உணர்ந்தான்.....

க்ரிஷ் அவனைக் கேட்டான். “நீ என்னை இப்படி எச்சரிப்பதற்கும் பயமுறுத்துவதற்கும் பதிலாக என் எதிரியை நீ அழித்தே விடலாமே. அவன் உன் சக்திக்கும் மிஞ்சியவனாய் இருக்க வாய்ப்பே இல்லையே

“அப்படி நான் அவனை அழிக்கப் போவதில்லைஉறுதியாக வந்தது வேற்றுக்கிரகவாசியின் பதில்.

க்ரிஷ் திகைத்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

19 comments:

  1. Sir,
    Can you please make the novel length more for every week. it is looking very short. not able to keep the suspense.

    ReplyDelete
  2. என்ன சார் வேற்றுக்கிரகவாசி இப்படி சொல்லிட்டான். நீங்க வேற தொடரும்னு போட்டுட்டீங்க. அடுத்த வியாழன் வரைக்கும் நாங்க எப்படி டென்ஷன் தாங்கரது.

    ReplyDelete
  3. Replies
    1. இப்போது தான் எழுதி வருகிறேன். பெரும்பாலும் அடுத்த வருட ஆரம்பத்தில் நாவல் அச்சில் வர வாய்ப்பிருக்கிறது.

      Delete
    2. சார் பாஸ்கரா ஜோதிடம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? அதில் 95% பலன் வரும் என சொல்கிறார்களே நீங்கள் எந்த ஜோதிட முறையில் பலன்களை சொல்கிறீர்கள் ?

      Delete
    3. பாஸ்கரா ஜோதிடம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. நான் அறிந்த ஜோதிடம் வழக்கமான ஜாதக முறை ஜோதிடம் தான்.

      Delete
  4. Mesmerizing writing sir. Even small characters like Sadhashiv Namboodhri is making superb impression.

    ReplyDelete
  5. "எதையும் எப்படியும் மாற்றாமல் உள்ளதை உள்ளபடியே அறிவது தான் உண்மையான ஞானம்"
    இப்படியாக பலவித ஆழமான கருத்துக்களை இடை இடையே தருவது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கிறது.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டுதலும்.

    ReplyDelete
  6. மர்ம மனிதன் ரொம்பவே மர்மாக இருக்கிறான்......அவன் விதியை அவனே தீர்மானிப்பான்...
    கடவுளை கூட தீர்மானிக்க அனுமதிக்க மாட்டான்.... ஆழமாக யோசித்தால், குழப்பம்
    தான் மிஞ்சிகிறது......
    கருப்பு பறவை , உதவியுடன் கிரிஷ் ,ம. ம ஐ எதிர்க்கப் போகிறானா....?

    ReplyDelete
  7. இந்த நாவலை வாரா வாரம் வியாழன் அலாரம் வைத்துப் படிப்பதாக அமெரிக்காவில் இருக்கும் என் நண்பன் சொன்னான் என்று படிக்க ஆரம்பித்தேன். சுவாரசியத்தோடு நல்ல அறிவான தகவல்களும் இடம் பெறும் நாவலை ஆரம்பித்தால் நிறுத்த முடியவில்லை. பிரமாதம். உங்களை இத்தனை நாள் எப்படி தவர விட்டேன் என்று தெரியவில்லை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. "ஒவ்வொரு கணமும் பிரபஞ்சம் நம்முடன் பேசிக் கொண்டு தானிருக்கிறது. நாம் தான் நம் உள்மன இரைச்சலில் அதைக் கேட்க முடியாத செவிடர்களாக இருந்து விடுகிறோம்" அருமை....

    ReplyDelete
  9. G மர்ம மனிதனை பற்றியும் அவனின் எண்ணப்போக்கும் உங்க எழுத்து நடை மிக வித்யாசம் அதுவும் //அவன் ரகசியங்கள் இதனை அடுக்குகள் பரிமாணங்கள் கொண்டது // என்ற வரி மிக மிக வித்யாசமான நடை முதல் பத்தி முழுவதும்
    உருவமில்லாத நண்பன் சூப்பர் அந்த நண்பன் என்ன காரணம் சொல்ல போகிறான் கிரிஷ்யின் கேள்விக்கு omg அடுத்தவாரம் வரை காத்திருக்க வேண்டுமே

    ReplyDelete
  10. வேற்று கிரகவாசி நல்லவனா...? கெட்டவனா ..? தொடரும்...திக் திக் திக் .....

    ReplyDelete
  11. மர்ம மனிதனின் ரகசியங்கள் ,அவற்றின் பரிமாணங்கள் பற்றிய விளக்கம் பின் பதிவுகளில்
    வருமா.....?
    நம்பூத்திரி சமயோசித முடிவின் மூலம் தன் உடனடி மரணத்தை தவிர்த்து விட்டார்....
    அத்தனை நுண்ணியமாக ஆரூடம் கணிக்க முடியுமா.....? மர்ம மனிதன் வந்த நேரத்தை
    வைத்தே ஆருடத்தால் அவனைப் பற்றி முழுமையாக அறிய முடியுமா....?

    ReplyDelete
  12. Is horoscope analysis that accurate to find someone based on the time? If it is so, we can find out anyone's life and future na...this could bring many information on everything right sir? If so how to differentiate between the correct analysis and incorrect analysis?

    ReplyDelete