சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, October 29, 2016

இருவேறு உலகம் - 1




ந்த இளைஞன் அந்த மரத்தைக் கடந்து சென்ற போது மாலை மணி 5.35. மரத்தின் பின் ஒளிந்திருந்தவன் தன் அலைபேசியில் உடனடியாகத் தகவல் சொன்னான். “இப்ப தான் போறான்

பைக்கிலயா கார்லயா?வெற்றிலை பாக்கு மென்றபடி குரல் கேட்டது.

“பைக்ல

“அங்கயே இரு. வேற யாராவது அந்தப் பக்கம் போறாங்களான்னு மட்டும் கவனிச்சுட்டுரு

மரத்தின் பின் ஒளிந்திருந்தவன் அங்கேயே நின்று சலித்துப் போனான். மலையடிவாரத்திற்குச் செல்லும் அந்தப் பாதையில் அதற்குப் பிறகு வேறு யாரும் போகவில்லை. மெள்ள இருட்ட ஆரம்பித்தது. இருட்டிய பின் அந்த இடத்தில் ஒருவித அமானுஷ்ய அமைதி சூழ்ந்தது. அந்த அமைதியை அடிக்கடி கலைத்த பெருங்காற்றின் ஓசையும் கூடுதல் அமானுஷ்யமாகவே இருந்தது. லேசாகப் பயமும் கிளம்பியது.

பயத்துக்குப் பெரிதாகக் காரணம் இல்லை தான். சில மாதங்களுக்கு முன்பு வரை பேய்களும், ஆவிகளும் இங்கு இரவு நேரங்களில் உலாவுவதாகப் பேசிக் கொண்டார்கள். அதுவும் அமாவாசை நாட்களில் அவற்றின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாம். சில பத்திரிக்கைகளில் சிலர் தங்கள் பயங்கர அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் ஒரு பகுத்தறிவு அமைப்பைச் சேர்ந்த பத்து பேர், பேயோ, ஆவியோ சந்தித்தே விடுவது என்ற தீர்மானத்தோடு ஒரு அமாவாசை இரவு வந்து அந்தப் பகுதியில் தங்கினார்கள். அவர்கள் கண்ணுக்கு பன்னிரண்டு மணியளவில் வெள்ளை நிற உடையணிந்த இரு உருவங்கள் தென்படவும் செய்தன. நெருப்பு ஜுவாலையும் திடீரென்று தோன்றி மறைந்தது. அதைப் பார்த்து விட்டு பத்து பேரில் இரண்டு பேர் மயங்கி விழ,  ஒருவன் பயத்தில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விட்டான். மீதியுள்ளவர்களில் நான்கு பேர் தைரியமாக ஓடிச்சென்று ஆவிகளைப் பிடித்துக் கொண்டார்கள். பரிசோதனையில் அந்த ஆவிகள் உள்ளூர் இளைஞர்கள் தான் என்பதும், வேட்டித் துணியை புடவையாகக் கட்டிக் கொண்டு, சவுரியைத் தலையில் பொருத்திக் கொண்டு உலவியதும், கந்தகப்பொடியில் நெருப்பைப் பற்ற வைத்து ஊதி நெருப்பு ஜுவாலையை உருவாக்கினதும் தெரிய வந்தது. நையப்புடைத்து விசாரித்ததில் அந்தப் பகுத்தறிவு அமைப்பினரின் தைரியத்தைப் பரிசோதித்துப் பார்க்கும்  ஆவலில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இருவரும் சொன்னார்கள்.

அந்த நிகழ்ச்சியைப் பற்றிப் படித்ததை நினைவுபடுத்திக் கொண்ட போதும் அவன் மனதில் கிளம்பிய பயம் முற்றிலும் விலகி விடவில்லை. கும்பலாக அந்த அமைப்பினர் பத்து பேர் வந்ததால் ஆவிகளும், பேய்களும் விலகி இருந்திருக்கவும் கூடும் என்கிற எண்ணம் வந்து தொலைத்தது.  அந்த மரத்தில் சாய்ந்து கொண்டே சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த மலையை அவன் பார்த்தான். மாலையில் கடந்து போன அந்த இளைஞன் அந்த மலையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.... ஒவ்வொரு அமாவாசை இரவும் அந்த இளைஞன் அந்த மலையில் தான் கழிப்பதாகச் சொன்னார்கள். சில மணி நேரங்களுக்கே இப்படி பயமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது. எப்படித்தான் அந்த இளைஞன் அங்கே பயமில்லாமல் தங்குகிறானோ?... 

சாதாரணமாகத் தனிமையில் இருக்கும் போது அவன் செல் போனில் எஃப் எம் ரேடியோ கேட்பது வழக்கம். பாட்டு கேட்கும் போது நேரம் சீக்கிரம் நகரும். ஆனால் இப்போதோ அவனுக்கு சத்தமே இல்லாமல் கண்காணித்துக் கொண்டிருக்கவே கட்டளை இடப்பட்டிருக்கிறது. கட்டளையை மீறினால் நாளை அவன் உயிரோடிருப்பது கூட நிச்சயமில்லை. என்ன பிழைப்பு இது என்று தனக்குள்ளே சலித்துக் கொண்டான்...

திடீரென்று அவன் மேல் ஏதோ விழுந்தது. அவன் நடுநடுங்கிப் போய் டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்தான். அணில் ஒன்று வேகமாய் ஓடி ஒரு புதருக்குள் மறைந்தது. பந்தயத்தில் ஓடிய அவன் இதயத்துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் ஆகாயத்தில் ஏதோ ஒரு பெரிய கரிய பறவை மிக வேகமாகப் பறந்ததைப் பார்த்தான்.... கூர்ந்து பார்ப்பதற்குள் அது கண்ணில் இருந்து மறைந்து விட்டது.... இதயம் மறுபடி படபடக்க ஆரம்பித்தது. இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் மாரடைப்பு வந்து செத்தே விடுவோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.     

அவனைக் காப்பாற்றுகிற மாதிரி தூரத்தில் கார் ஒன்று வரும் சத்தம் கேட்டது. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி மறைவில் இருந்து வெளியே வந்தான். அவனருகே கார் வந்து நின்றது. வெண்பஞ்சாய் நரைத்த தலை வெளியே எட்டிப் பார்த்தது. “என்னடா வேற யாராவது போனாங்களா...கரகரத்த குரல் கேட்டது.

“இல்லைஎன்று சொல்ல நினைத்து வார்த்தை வராமல் தலையை மட்டும் அவன் அசைத்தான்.

“என்னடா பேயைப் பாத்த மாதிரி நிக்கறே. பேயின்னு ஒன்னு இருந்தாலும் நாம அதப்பாத்து பயப்படக்கூடாது. அது நம்மளப் பாத்து பயக்கணும்டா. போய் அடுத்த வேலயப் பார்

இந்த ஆள் இருக்கையில் இந்தப் பகுதிக்கு வர  பேய் கூடப் பயப்படும் என்று நினைத்த அவன் தைரியம் வந்தவனாய் தலையசைத்தான். அந்தக் கார் மலையடிவாரத்தை நோக்கி விரைய, அவன் சற்று தள்ளி ஒதுக்குப் புறத்தில் மறைவில் நிறுத்தியிருந்த தன் யமஹாவைக் கிளப்பிக் கொண்டு எதிர் திசையில் பறந்தான். இரண்டு கிலோ மீட்டர் பயணித்து மெயின் ரோட்டிற்கு வந்தவன் அங்கு ஓரமாய் வைத்திருந்த “சாலைப்பணி நடைபெறுகிறதுஎன்ற அறிவிப்புத் தடுப்புகள் இரண்டை எடுத்து, தான் வந்த பாதைக்குக் குறுக்கில் நிறுத்தினான். யாருமே இந்த நேரத்தில் அந்தப் பாதையில் செல்லப் போவதில்லை என்ற போதும் கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு அவனுக்கு அந்த வேலை தரப்பட்டிருந்தது.

அப்படி சாலைத் தடுப்புகளை நிறுத்தி விட்டு மறுபடி அங்கே ஒதுக்குப் புறத்தில் மறைந்து நின்று கொண்டான். ஓரிரண்டு வாகனங்களாவது அவ்வப்போது அந்த மெயின் ரோட்டில் போய் வந்து கொண்டிருந்தன. அமானுஷ்ய அமைதியும் அங்கில்லை. அதனால் பழைய இடத்தைப் போல அங்கே அவனுக்குப் பயம் இருக்கவில்லை....


ந்தக் கார் சத்தமில்லாமல் மலையடிவாரத்தை அடைந்த போது அங்கு அந்த இளைஞனது பஜாஜ் பல்சர் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.  காரை ஓட்டி வந்தவன் சற்று தூரத்திலேயே காரின் உள், வெளி விளக்குகளை எச்சரிக்கையோடு அணைத்திருந்தான். மலையடிவாரத்தில் காரை நிறுத்திய பின்னும் உடனடியாக இறங்கி விடாமல் உள்ளிருந்த படியே மலையின் உச்சியைக் கூர்ந்து கவனித்தான்.

பயப்படாதே.... பக்கத்துல போய் நின்னா கூட அவன் உடனே உன்னைக் கவனிப்பானாங்கறது நிச்சயமில்ல 

அருகிலிருந்து கரகரத்த குரல் அவனை தைரியமூட்டும் தொனியில் இருந்தது. அவன் தலையசைத்தாலும் பார்ப்பதை நிறுத்தவில்லை. சிறிது நேரம் கவனித்து விட்டு இறங்க அவன் முடிவெடுத்த போது அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கரகரத்த குரலில் சொன்னார்.

“எந்த வகையிலும் கொலையா யாருக்கும் தெரியக் கூடாது. அவன் சாதாரண குப்பனோ சுப்பனோ அல்ல. அவன் அப்பன் இந்த மாநிலத்தோட சக்தி வாய்ந்த மந்திரி. அவன் அண்ணன் எம்.பி. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் ஆபத்து தான். தெரியுமில்ல...

அவன் தலையசைத்தான். இந்த ஆள் தைரியமூட்டுவதும், இப்படி ஏழாவது முறையாக எச்சரிப்பதும் அவனுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அவன் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. மற்ற ஆட்களிடமாக இருந்தால் “யோவ் என்னை ஒழுங்கா வேலை செய்ய விடுய்யா. சும்மா தொண தொணன்னு பேசிட்டிருந்தா எனக்குப் பிடிக்காதுஎன்று எரிந்து விழுந்திருப்பான். ஆனால் இந்த ஆளிடம் அப்படிப் பேசுவது ஆபத்து. வாழ்நாள் முழுவதற்குமாய் ஒரு தீவிர எதிரியைச் சம்பாதிப்பதாக அது ஆகி விடும். இந்த ஆளின் எதிரிகள் எப்படியெல்லாம் நரக வாழ்க்கை அனுபவித்தார்கள் என்பதை அவன் பார்த்தும், கேள்விப்பட்டும் இருக்கிறான்...

அவன் காரின் பின் சீட்டிலிருந்த ஒரு அட்டைப் பெட்டியை மிகவும் கவனமாக எடுத்துக் கொண்டான். பயமே அறியாதவராகப் பலரும் நினைக்கும் அந்தப் பஞ்சுத் தலையர் கூட அந்த அட்டைப் பெட்டி அவர் அருகே கொண்டு வரப்பட்ட போது வேகமாய் பின்னால் கதவோரத்தை ஒட்டி நகர்ந்தார். அவனுக்கு அவர் செய்கை சின்னதாய் ஒரு முறுவலை முகத்தில் வரவழைத்தது. ‘உயிர்ப்பயம் யாரை விட்டது!

அந்த முறுவல் அவர் கண்களுக்குத் தப்பவில்லை. அவனைக் கூர்ந்து பார்த்தார். அவன் முறுவல் வந்த வேகத்தில் மறைந்தும் போனது. அவன்  அந்த அட்டைப் பெட்டியோடு காரை விட்டு இறங்கினான். கார்க்கதவை இழுத்துச் சாத்தினால் அது கூட இந்த இரவின் அமைதியில் அந்த இளைஞனுக்குக் கேட்டு விடுமோ என்று எச்சரிக்கையோடு கதவை மெல்ல சாத்தினான்.  பின் வேகமாக அவன் மலையை நோக்கி நடந்தான். பார்வையிலிருந்து அவன் மறைகிற வரை அவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்...

ஒரு பெருங்காற்று அமானுஷ்ய ஒலியோடு வீசியது. ஆனால் அவருடைய வேலையாள் சிறிது நேரத்துக்கு முன் பயப்பட்டது போல அந்த பஞ்சுத் தலையர் பயப்படவில்லை. இப்போது போனவன் வேலையை முடித்து விட்டு வருவதற்காக அவர் பரபரப்போடு காத்திருந்தார்.

(தொடரும்)

என்.கணேசன் 


இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

12 comments:

  1. அட்டகாசமான ஆரம்பம்.

    ReplyDelete
  2. அருமையாக திகிலுடன் ஆரம்பமானது இருவேறு உலகம் !!!
    தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஆரம்பமே அசத்தல்!!!
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  4. அண்ணா. . .
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    தங்களின் புதிய உலகை நோக்கி நாங்களும் பயணிக்க தயாராய் இருக்கிறோம்.

    ஆரம்பமே அமர்க்களம்.

    பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    முதல் அத்தியாத்திலிருந்தே விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது... விரைவிலேயே புத்தகமாக வெளியிட்டுவிடுங்கள்..முழு கதையும் இப்பொழுதே படிக்க மிகவும் ஆவலாக உள்ளது...

    ReplyDelete
  6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    இருவேறு உலகத்திற்குள் நாமும் சஞ்சரிக்கிறோம்..

    ReplyDelete
  7. Very super sir..!!!

    ReplyDelete
  8. I am ready for the Journey. Thanks for the Thrill start .

    ReplyDelete
  9. Super sir, belated Deepavali wishes.

    ReplyDelete
  10. Simply superb writing....அமான்ஷுயன்,நீ,நான்......,மனிதரில் எத்தனை....
    அடுத்து இங்கு படிக்க வருகிறேன்.......
    இந்த நாவலும் அற்புதமாக இருக்கும் என நம்புகிறேன்.....நன்றி....

    ReplyDelete