என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 4, 2019

சத்ரபதி 58


திடீரென்று சந்திராராவ் மோர் முகத்தில் தெரிந்த மாற்றம் அவன் ஏதோ வஞ்சகமாக யோசிக்கிறான் என்பதை சிவாஜிக்கு உணர்த்தியது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்திராராவிடம் சிவாஜி சொன்னான்.

“நான் சகோதரனாகவும், நண்பனாகவும் உன்னிடம் பேச வந்திருக்கிறேன். நீயோ என்னை அவமானப்படுத்திப் பேசுகிறாய்”

சந்திராராவ் மோர் சிவாஜியைச் சிறைப்படுத்தி ஒப்படைக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி செய்தி செய்து கொண்டு விட்டான். சிவாஜியிடம் தேனொழுகப் பேசி அவன் சந்தேகப்படாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து போலி நட்புணர்வுடன் சொன்னான். “மன்னித்து விடு சிவாஜி. யோசிக்கையில் நீ சொல்வது சரியென்று தோன்றுகிறது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நாம் ஒற்றுமையாகவே இருப்போம். என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய் அதைச் சொல்.”

இது வரை அலட்சியமாகவும் அவமானப்படுத்தியும் பேசியவன் திடீரென்று மனம் மாறுவதற்கு வெளிப்படையான காரணங்கள் இல்லை என்பதால் எச்சரிக்கையடைந்தாலும் சிவாஜி தான் சொல்ல வந்ததைச் சொன்னான். “நீ வருடா வருடம் பீஜாப்பூர் அரசுக்குக் கப்பம் கட்டுவதை நிறுத்து. அவர்கள் எந்தக் காலத்திலும் உனக்கு ஆபத்து நேர்ந்தால் உதவ வரப்போகிறவர்கள் அல்ல. தேவைப்படும் போது உனக்கு உதவ நான் இருக்கிறேன்…..”

சந்திராராவ் மோர் முகம் மறுபடி ஒரு சிறுகணம் அலட்சியத்தைக் காட்டி விட்டு மறு கணமே மீண்டும் பிரியத்திற்கு மாறியது. “இதைக் கேட்க எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி நீ எனக்கு உதவ நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்பது போல் கேட்டான்.

சிவாஜி சொன்னான். “வருடா வருடம் பீஜாப்பூர் சுல்தானுக்குக் கப்பம் கட்டும் தொகையில் பாதியை எனக்குக் கொடுத்துக் கொண்டிரு. அதற்கு மனமில்லை என்றால் அதுவும் வேண்டாம். நான் கேட்கும் சமயங்களில் 5000 குதிரை வீரர்கள் தந்து உதவு. அது போதும்….”

சந்திராராவ் மோர் சற்று யோசிப்பது போல் பாவனை காட்டிப் பின் சிவாஜியிடம் சொன்னான். “நீ கேட்பது நியாயமானதாகவே படுகிறது. எதற்கும் நான் என் தம்பிகள், மகன்களுடன் ஆலோசித்து விட்டுச் சொல்கிறேன். சிறிது நேரம் இளைப்பாறிக் கொண்டிரு. நாங்கள் சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டுத் தெரிவிக்கிறோம்…..”

சந்திராராவ் மோர் எழுந்து நின்று, தன் சகோதரனையும், தன் மகனையும் பார்த்து உடன் வரும்படிக் கண்ணசைத்து விட்டுப் போனான். அவர்களும் பின் தொடர்ந்தார்கள். தனியறைக்கு அவர்களை அழைத்துப் போன சந்திராராவ் மோரிடம் அவன் மகன் கேட்டான். “தந்தையே சிவாஜி சொல்வதை ஒப்புக் கொள்ளப் போகிறீர்களா? பீஜாப்பூர் சுல்தான் நாம் அவனுடன் கூட்டு சேர்ந்தால் கோபப்பட மாட்டாரா? அவருக்கு மிக அருகில் இருப்பது நாம் தான். அவன் நம்மைத் தாண்டி தான் இருக்கிறான்…”

சந்திராராவ் மோர் சொன்னான். “அந்தச் சிறுபயலுடன் சேர்ந்து சுல்தானை எதிர்க்க எனக்கு என்ன பைத்தியமா? எனக்கு ஒரு யோசனை. பாஜி கோர்ப்படே ஷாஹாஜியைக் கைது செய்தது போல் இவனைக் கைது செய்து சுல்தானிடம் ஒப்படைத்தால் என்ன? அப்படிச் செய்தால் காலா காலத்துக்கும் சுல்தான் நம்மிடம் நன்றியுடையவராக இருப்பார். பெரும்பரிசுகளும் தந்து கௌரவிப்பார். ஒன்றுமில்லாமல் இருந்து சில கோட்டைகள் பிடித்துக் கொண்டு நமக்குச் சமமானவனாக நினைத்துக் கொண்டு பேசும் இவனுக்கு ஒரு பாடம் புகட்டியது போலவும் ஆகும்….”

சந்திராராவ் மோரின் தம்பிக்கும், மகனுக்கும் முகங்கள் பிரகாசித்தன. தம்பி சொன்னான். “நல்ல யோசனை தான். ஆனால் அவன் முட்டாள் அல்ல. தந்திரக்காரன். சிறிது சந்தேகம் வந்தாலும் உஷாராகி விடுவான்….”

சந்திராராவ் மோர் சொன்னான். “நான் போய் சிவாஜியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்பி, நீ போய் நம் வீரர்களை மாளிகை வாசலில் குவி. மகனே நீ போய் உன் அண்ணனையும், மற்ற சித்தப்பாவையும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் அறைக்கு அனுப்பி விட்டு வலிமையான வீரர்கள் இருபது பேரை அழைத்துக் கொண்டு வந்து சத்தமில்லாமல் அறைவாசலுக்கு வெளியே காத்திரு. நாங்கள் குரல் கொடுத்தவுடன் உள்ளே நுழையுங்கள்….. சிவாஜியைப் பற்றி எல்லோரும் ஆகா ஓஹோ என்று புகழ்வதற்கேற்ற மாதிரி அவன் உள்ளேயிருந்து  தப்பித்து ஓடினால் கூட மாளிகைக்கு வெளியே நிற்கும் வீரர்களிடமிருந்துக் கண்டிப்பாகத் தப்ப முடியாது. சிவாஜியைச் சங்கிலியால் பிணைத்து விட்டு சுல்தானுக்குத் தெரிவிப்போம். ஆயிரம் படைவீரர்களை அனுப்பியும் முடியாத காரியம் நம்மால் இவ்வளவு எளிமையாக முடிந்ததில் அவரும் மகிழ்ச்சி அடைவார்….”

தலையாட்டி விட்டு இருவரும் பரபரப்புடன் வேகமாக நகர்ந்தார்கள். திருப்தியுடன் சந்திராராவ் மோர் சிவாஜியைத் தங்க வைத்திருந்த அறைக்குத் திரும்பினான். அவன் உள்ளே வந்த போது சிவாஜி அமர்ந்திருந்த இருக்கை காலியாக இருந்தது. திகைப்புடன் அறைக்கு வெளியே வந்து இருபுறமும் நின்று கொண்டிருந்த இரு வீரர்களிடம் சந்திராராவ் மோர் கேட்டான். “உள்ளே இருந்த சிவாஜி எங்கே?”

“ஏதோ அவசர வேலை இருப்பது அவருக்குத் திடீரென்று நினைவுக்கு வந்து விட்டதால் போகிறாராம். பேச இன்னொரு முறை வருவதாக  உங்களிடம் சொல்லச் சொல்லி விட்டுப் போனார்…..” என்று ஒரு வீரன் சொன்னான்.

சந்திராராவ் மோர் வேக வேகமாக வெளியே ஓடிச் சென்று பார்த்தான். சிவாஜி கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. விசாரித்த போது வெளியே நின்றிருந்த வீரர்கள் சிவாஜி இன்னேரம் பல காத தூரம் போயிருப்பான் என்றார்கள். அவன் குதிரை மின்னல் வேகத்தில் போனதைப் பார்த்ததாக வியப்புடன் சொன்னார்கள்.

சந்திராராவ் மோர் விக்கித்து நின்றான்.


சிவாஜி சந்திராராவ் தம்பியையும், மகனையும் அழைத்துப் போகும் போதே அவனுடைய வஞ்சகத் திட்டத்தை யூகித்து விட்டான். சந்திராராவ் மோர் திடீரென்று நட்புக்கு மாறிய போதே சந்தேகம் அடைந்த அவன், அவன் தனியாக அனைவருடனும் ஆலோசித்து விட்டு வர வெளியேறிய போது சந்தேகம் தெளிந்தான். ’இந்த முட்டாள் என்னைச் சிறைப்பிடிக்கத்தான் திட்டமிடச் செல்கிறான்…..” ஆனாலும் அவன் திட்டத்தை அறிந்தது போல் காண்பிக்க விரும்பவில்லை. அவசர வேலை நினைவுக்கு வந்ததாகச் சொல்லி விட்டு வேகமாக ஜாவ்லியிலிருந்து வெளியேறி தன் பகுதிக்கு வந்து சேர்ந்த அவன் தன் நண்பர்கள், ஆலோசகர்கள், படைத்தலைவர்களை உடனே வரவழைத்தான். ”மனிதர்கள் தங்களை எல்லா நேரங்களிலும் தங்கள் பேச்சு மூலமாகவும், செயல்மூலமாகவும் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள். சந்திராராவ் மோரும் அப்படித்தான் தன் குணத்தையும், அறிவையும் வெளிப்படுத்திக் கொண்டான்…..” என்று ஆரம்பித்து சிவாஜி ஜாவ்லியில் நடந்ததைச் சொன்னான்.

சந்திராராவ் மோர் அவமானப்படுத்திப் பேசியதை அவன் சொன்ன போது இடைமறித்து ஒரு நண்பன் கேட்டான். “அவன் சொன்னதைக் கேட்டு உனக்கு இரத்தம் கொதிக்கவில்லையா? எப்படி நீ பொறுமையாக இருந்தாய்?”

சிவாஜி சொன்னான். “கோபப்பட்டு அப்போதே எதையும் சாதிக்க முடியாது என்று புரிகையில் அந்தக் கோபத்தை மனதிற்குள் ஒரு மூலையில் பத்திரப்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்து தான் பொறுமை காத்தேன். சரியான நேரத்தில், சரியான முறையில் அவனிடம் கோபத்தைக் காட்டலாம்…. எதற்கும் ஒரு வாய்ப்பு  வராமல் போவதில்லை”

ஒரு படைத்தலைவன் வியப்புடன் சொன்னான். “உங்களைச் சிறைப்படுத்த அவனால் முடியும் என்று நினைத்தானே அதுவே அவன் அறிவுக்கூர்மை எந்த அளவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி விட்டது…..”

சிவாஜி சொன்னான். “நம்மவன் என்பதால் தான் வாளை எடுக்காமல், தந்திரமும் காட்டாமல் நட்புக்கரம் நீட்டினேன். அவன் நம்மவனாக நடக்கவில்லை. எதிரியென்றே நிரூபித்தும் விட்டான். ஒருவிதத்தில் அது மகிழ்ச்சியே. நண்பனாக அந்த முட்டாள் இருந்திருந்தால் தான் நமக்குப் பாதிப்பும் தர்மசங்கடமும். அந்த முட்டாள் எதிரியாக இருப்பது நமக்கு அனுகூலமே. முட்டாளைச் சுலபமாக வீழ்த்தி விடலாம்…..”

பின் ஜாவ்லியில் சந்திராராவ் மோரின் மாளிகையில் இருக்கும் பாதுகாப்பு நிலவரத்தை சிவாஜி விவரிக்க ஆரம்பித்தான். உள்ளேயும், வெளியேயும், எங்கு எவ்வளவு வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள், அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன, அவர்களது ஆயத்தம் எப்படிப்பட்டது என்பதை எல்லாம் அவன் விளக்கிய போது அவர்கள் அனைவரும் பிரமிப்பை உணர்ந்தார்கள். எதிரிலிருக்கும் பழகிய மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை சந்திராராவ் மோர் உணரத்தவறி விட்ட நிலையில், சந்திராராவ் மோர் எப்படிப்பட்டவன் என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் துல்லியமாக சிவாஜி அறிந்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் அந்த இடத்தின் பாதுகாப்பு மற்றும் காவல் நிலவரத்தையும் மிக நுட்பமாக சிவாஜி அறிந்து வந்திருப்பது அவன் தலைமைப் பண்பை மிக அழகாக வெளிப்படுத்தியது.

“நம் திட்டம் என்ன?” இன்னொரு படைத்தலைவன் கேட்டான்.

சிவாஜி ஆரம்பித்தான். “முதலில் இங்கிருந்து இரண்டு பேர் போய் அவனிடம் பேசுகிறீர்கள்……”



(தொடரும்)
என்.கணேசன்

Thursday, January 31, 2019

இருவேறு உலகம் – 121

ரிணி காப்பாற்றப்பட்ட பின் க்ரிஷுக்கு மனதை முழுமையாக இனி செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபடுத்துவது சுலபமாக இருந்தது. ஹரிணியும் கிரிஜாவும் க்ரிஷ் வீட்டுக்கு வந்து தங்கியது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. இனி இவர்கள் பாதுகாப்பை உதய் பார்த்துக் கொள்வான்….

ஹரிணியிடம் க்ரிஷ் தனக்கு இப்போது தனிமை நிறையவே தேவைப்படுகிறது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான். அவனுக்கு நிறைய படிக்கவும், சிந்திக்கவும், தியானிக்கவும், வேறுசில பயிற்சிகளில் ஈடுபடவும் வேண்டியிருப்பதைச் சொன்னான். சராசரிப் பெண்ணாக முகம் கோணாமல், மனம் சிணுங்காமல் அவனிடம் சொன்னாள். “நானும் எதாவது உதவி செய்யணும்னா சொல்டா”

க்ரிஷ் அவளைப் பெருமிதத்துடன் பார்த்துப் புன்னகைத்தபடி சொன்னான். “எனக்காக பிரார்த்தனை செய் ஹரிணி. இப்போதைக்கு எனக்கு அது தான் தேவை…”

“அதெல்லாம் உங்க அம்மா டிபார்ட்மெண்ட். எனக்கேத்த மாதிரி எதாவது சொல்லுடா…”

தேவைப்படும் போது சொல்வதாகச் சொன்ன அவன் அவ்வப்போது சில பெயர்களையும், சில வித்தியாசமான வார்த்தைகளையும் சொல்லி இணையத்தில் தேடி அதுபற்றிய முக்கிய குறிப்புகளை எடுத்துத் தரச் சொன்னான். சில சமயங்களில் அவள் சேகரித்த தகவல்கள் போதுமானதாக இருந்தன. சில சமயங்களில் கூடுதலாகத் தெரிய வேண்டிய அம்சங்களைச் சொன்னான். அவள் அதையும் சேகரித்துக் கொடுத்த பின் அவளை மறந்து விடுவான். அவள் அவனைத் தொந்திரவு செய்யாமல் தூரத்தில் அமர்ந்தபடி அவன் ஆழமாகச் சிந்திப்பதையும், தியானத்தில் ஈடுபடுவதையும், ஏதாவது தீவிரமாகப் படிப்பதையும் அவள் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஏதாவது புத்தகத்தை அவளும் படித்துக் கொண்டிருப்பாள். மற்ற நேரங்களில் சமையலறையில் பத்மாவதி கிரிஜாவுக்கு உதவி செய்து கொண்டும், அவர்கள் பேச்சில் கலந்து கொண்டும் இருப்பாள்.

உதய் ஒரு முறை அவளிடம் தனியாகக் கேட்டான். “அவன் உன்னைக் கண்டுக்காம என்னென்னவோ செய்யறானேன்னு உனக்கு வருத்தமா இல்லையா ஹரிணி”

ஹரிணி சிரித்துக் கொண்டே சொன்னாள். “காதல்ங்கிறது தொந்திரவு செய்யறதுன்னு ஆயிடக்கூடாது. அவசியமான சமயங்கள்ல விலகியும் இருக்கத் தெரியணும்….”

உதய்க்கு அவளை மிகவும் பிடித்திருந்தது. தம்பி அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தான். ஹரிணிக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது. அவனை அவள் மூத்த சகோதரனைப் போலவே நேசிக்க ஆரம்பித்தாள். அவனும், பத்மாவதியும் பேசிக் கொள்வதை அவள் மிகவும் ரசித்தாள். உதய் நேரம் கிடைக்கையில் எல்லாம் தாயை ஏதாவது சொல்லிச் சீண்டாமல் இருக்க மாட்டான். பத்மாவதியும் சளைக்காமல் பதில் சொல்லி மகனை சமாளிப்பாள்.

தனியாக ஒருமுறை பத்மாவதியிடம் ஹரிணி கேட்டாள். “க்ரிஷும் உங்க கிட்ட இப்படிப் பேசுவானா?”

“அது எப்பவுமே தானுண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்கும். இவன் தான் வம்பிழுத்துகிட்டே இருப்பான். இவன் பார்லிமெண்ட் கூட்டம் நடக்கறப்ப போயிட்டாலோ, இல்லை கட்சிக்கூட்டம்னு வெளியூர் போயிட்டாலோ எனக்கு நேரமே போகாது. என் வீட்டுக்காரர் கல்யாணமான புதுசுலயாவது ஏதாவது சண்டைக்குக் கிடைப்பார். இப்பல்லாம் என்ன சொன்னாலும் பெருசா அவர் கண்டுக்கறதில்லை. சில சமயம் ஆளு செவிடான்னு கூட எனக்குச் சந்தேகம் வந்துடும்…..   இப்ப கூட பாரேன். ஒரு மாசமா உதய்க்கு ஒரு நல்ல பெண்ணா பார்க்கணும்னு நான் சொல்லிட்டே இருக்கேன்…. ஊம்…. பார்ப்போம்ன்கிறாரே ஒழிய தீவிரமா பார்க்க மாட்டேங்கிறார்….”

கிரிஜா பத்மாவதியிடம் கேட்டாள். “எந்த மாதிரி பொண்ணை உதய்க்குப் பார்க்கறீங்க?”

“அவனுக்குப் புடிச்ச மாதிரி அழகான நல்ல பொண்ணா கிடைக்கணும். கொஞ்சம் நல்லா சமைக்கவும் தெரிஞ்சுதுன்னா பரவாயில்லைன்னு பார்க்கறேன். சின்னவன் பசிக்கு சாப்டறவன். சமைக்கறது முன்ன பின்ன இருந்தாலும் கண்டுக்க மாட்டான். பெரியவன் ருசிச்சு சாப்டறவன். நல்லாவும் சாப்பிடுவான்… எல்லாக் கடவுளையும் வேண்டியிருக்கேன். நல்ல பொண்ணு அவனுக்கும் அமையும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா நாம முயற்சி செய்யணுமே.”

ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்த க்ரிஷுக்கு அம்மாவின் பேச்சு காதில் விழுந்தது. மெலிதாய் புன்னகைத்தான். அம்மாவின் உலகம் மிகச் சிறியது. அவளுக்கு அவள் கணவன் மற்றும் குழந்தைகள் நன்றாக இருந்தால் போதும். வேறு எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் அவளுக்குக் கிடையாது. அதை ஆண்டவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு. (”சோதிப்பார், ஆனா கைவிட மாட்டார். சோதிக்கவே செய்யாட்டி நாம கடவுள் இருக்கறதையே மறந்துடுவோமே. நம்மள புடிக்கவே முடியாதே”). மற்றபடி அவளுக்கு வேறெந்தக் கவலையோ, கஷ்டமானதை யோசித்து புரிந்து கொள்ளும் சிரமமோ கிடையாது. உலகத்தில் பெரும்பாலான மனிதர்களின் தனி உலகங்கள் இப்படிச் சிறியதாகவே இருக்கிறது…..  அவர்கள் பிரச்னைகளைச் சமாளிக்க ஆண்டவன் இருக்கவே இருக்கிறார். அவரை நம்பி, முடிந்த வரை முயற்சி செய்தால் மட்டும் போதும். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்….. இந்த எளிமையும் நம்பிக்கையும் சாதாரணமானதல்ல என்று தோன்றியது. எல்லா பாரத்தையும் நீயே சுமக்க வேண்டியதில்லை. படைத்தவன் பார்த்துக் கொள்வான். நீ முழு மனதோடு முயற்சி செய். அது போதும்…… அந்தக் கணம் அம்மாவே குருவாகத் தோன்றினாள்…. இதே எளிமையுடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் எதிரியைச் சமாளிக்க க்ரிஷ் தீர்மானித்தான்.

அவன் தனதறைக்கு மீண்டும் நுழையப் போகும் போது உதய் வந்தான். பெரும் சக்தி வாய்ந்த அந்த  எதிரியை இவன் எப்படி சமாளிக்கப் போகிறான் என்று கவலையுடன் தம்பியைப் பார்த்தான். இந்த நேரமாகப் பார்த்து மாஸ்டரும் இங்கில்லாமல் ரிஷிகேசத்தில் இருக்கிறார். தம்பியிடம் கேட்டான். “நான் ஏதாவது செய்யணுமாடா?”

“நீ இவங்களை எல்லாம் பாதுகாப்பா  பார்த்துக்கோ. அது போதும்….” என்று சொல்லி விட்டு க்ரிஷ் அறைக்குள் போனான். எதிரியின் வலிமைக்கு முன் ராஜதுரையே சமாளிக்க முடியாத போது எதிரி நினைத்தால் இவர்களை எவ்வளவு பாதுகாப்பாக இருத்தினாலும் இவர்கள் ஆபத்திலிருந்து தப்ப முடியாது. ஆனால் எதிரி எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. அவன் ஆளனுப்பி இவர்களைத் தாக்காமல் இருக்கத் தான் இத்தனை பாதுகாப்பு முயற்சிகளும்….. எதிரிக்கு இங்கு வர முடியாத அளவு நிறைய வேலைகள் இருக்க வேண்டும் என்று க்ரிஷ் இறைவனைப் பிரார்த்தித்தான்.


மாஸ்டர் பூரண அமைதியை உணர்ந்து கொண்டிருந்தார். நடந்தவை நல்லவையோ கெட்டவையோ மாற்ற முடிந்ததல்ல. ஆனால் நடந்த கோணலை நிமிர்த்த என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியை மனம் பெற ஆரம்பித்து ஆக வேண்டியதில் படியவும் ஆரம்பித்திருந்தது….  இந்த மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் குருவின் அருளே என்று நினைத்தார். குரு தன்னுடனேயே இருப்பது போல் தோன்றியது….. அதனால் பெற்ற பேரமைதியில் மனம் திளைத்துக் கொண்டிருந்த போது அவருடைய சக்திகள் எல்லாம் சூட்சும நிலையை எட்ட ஆரம்பித்தன. காலம் நின்று போனது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பேதங்கள் இல்லாத அனாதியான ஒரு நிலையில் மனம் தங்கிப் போனது.

அந்த சமயத்தில் திடீரென்று காளி கோயிலில் வளர்பிறை சப்தமியில் கிடைத்த வரைபடம் அவர் மனக்கண் முன் மிதக்க ஆரம்பித்தது. சூட்சும உணர்வை எட்டியிருந்த மாஸ்டரின் அந்த்ராத்மா உடனே அதைக் கவனிக்கச் சொன்னது. மாஸ்டர் கூடுதல் முயற்சி இல்லாமலேயே மனதைக் குவித்தார். வரைபடம் நிஜ இடமாக அவர் மனக்கண் முன்னால் தெரிய ஆரம்பித்தது. அந்தக் கரிய பறவையை மட்டும் காணோம். அதே போல திரிசூலம் பனியின் அடியே மின்னியது. பொதுவாக அப்படிப் பனியின் அடியில் முழுவதுமாக மறைந்திருக்கையில் மின்னித் தெரியும் வாய்ப்பில்லை. ஆனாலும் மாஸ்டர் கண்ணுக்கு அந்தத் திரிசூலத்தின் மினுமினுப்பு தெரிந்தது. மாஸ்டர் கூர்ந்து பார்த்தார். அது ஒரு சிறிய கோயில். பனியில் மறைந்திருந்தாலும் கோயிலும் ஜொலித்தது. மாஸ்டர் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த முழுக்காட்சியும் தொலைவுக்குச் செல்ல ஆரம்பித்தது. இப்போது கோயிலும் திரிசூலமும் சிறிதாகத் தெரிந்தது. அந்த முழு மலை அவர் கண் முன் வந்து நின்றது. அந்த மலையில் யாரோ சிலர் கையில் உபகரணங்களுடன் ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கடைசியாக ஒருவன் விரைவாக ஏறிக் கொண்டிருந்தான். தெரிந்தவன் போலத் தோன்றினான். மாஸ்டர் பார்வையைக் கூர்மையாக்கினார். அவர் பார்வையை உணர்ந்தது போல் அவனும் திரும்பினான். விஸ்வம்!. இருவர் பார்வையும் சந்தித்தன. அவன் திகைத்தது போலவே அவரும் திகைத்தார். இருவரில் முதலில் சுதாரித்தது விஸ்வம் தான். சகல சக்திகளையும் திரட்டி அவருக்கும் தனக்கும் இடையே ஒரு திரையை உருவாகி அவர் பார்வையிலிருந்து மறைந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்   

                                                 

Monday, January 28, 2019

சத்ரபதி 57


சிவாஜியைச் சிறைபிடித்து வருவேன் அல்லது கொன்று கொண்டு வருவேன் என்று பாஜி ஷாம்ராஜ் பீஜாப்பூரில் இருந்து ஆயிரம் குதிரை வீரர்களுடன் கிளம்பி ஜாவ்லி பிரதேசத்தின் உள்ளே நுழைந்தது உடனடியாக சிவாஜிக்குத் தெரிய வந்தது. சிவாஜி மிகத் திறமையான ஒற்றர் படையை வைத்திருந்தான். அது மட்டுமல்ல அக்கம்பக்கத்து சாதாரண குடிமகன்கள், வணிகர்கள் கூட அவன் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். ஆயிரம் குதிரை வீரர்கள் ஒரு பிரதேசத்தில் நுழைவது ரகசியமாய் வைத்துக் கொள்ள முடிந்த செய்தியும் அல்ல… அதனால் ஒற்றர் மூலமாகவும், வணிகர் ஒருவர் மூலமாகவும் உடனடியாக சிவாஜி தகவல் அறிந்தான்.

தகவல் தெரிந்தவுடன் சிவாஜிக்கு, அனுப்பிய பீஜாப்பூர் சுல்தான் மீதோ, அவனைக் கொல்லக் கிளம்பிய பாஜி ஷாம்ராஜ் மேலோ கோபம் வரவில்லை. அவர்களை உள்ளே அனுமதித்த ஜாவ்லி அரசன் சந்திராராவ் மோர் மீது தான் கோபம் வந்தது. அதற்குக் காரணம் இருந்தது.

ஜாவ்லி பிரதேசத்து அரசர்கள் சந்திராராவ் என்றே அழைக்கப்பட்டார்கள். மோர் இனத்து மராட்டி வீரர்களான அவர்களுடைய மூதாதையர்களில் ஒருவர் பீஜாப்பூர் ஆதில்ஷாஹி சுல்தான்களில் முன்னோடி ஒருவருக்குப் படைத்தலைவராக இருந்தவர். அகமதுநகர் சுல்தானுடன் அப்போதைய பீஜாப்பூர் சுல்தான் நடத்திய ஒரு போரில் அந்த மோர் இனத்து மூதாதையர் காட்டிய வீரத்தால் அந்தப் போரில் அப்போதைய அந்த பீஜாப்பூர் சுல்தான் வெற்றி பெற்றிருந்தார். அதில் மனம் மகிழ்ந்த அந்த சுல்தான் அவருக்கே ஜாவ்லி பிரதேசத்தைக் கொடுத்து விட்டார். அன்றிலிருந்து அந்தப் பிரதேசத்தின் அரசர்களாக மோர் இன வழித்தோன்றல்கள் சந்திராராவ் மோர் என்ற பெயரில் அரசாள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் பீஜாப்பூர் சுல்தானுக்கு வருடம் ஒரு தொகை அந்த நன்றியின் காரணமாகத் தர ஆரம்பித்தது இப்போதும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் பீஜாப்பூர் சுல்தானுக்கு விசுவாசமாகவும் இருந்து வந்தார்கள்.

ஜாவ்லி பிரதேசம் மிக முக்கியமான இடமாக இருந்தது. சகாயாத்ரி மலைத்தொடரின் மராட்டியப் பகுதியில் ஜாவ்லி பிரதேசத்தைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் சிவாஜிக்குச் சொந்தமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தையும் அவன் கைப்பற்றினால் சிவாஜிக்கு மராட்டியப் பகுதியின் சகாயாத்ரி மலையை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் வசப்பட்டது போல ஆகும். அதனால் சிவாஜியின் நண்பர்களும் ஆலோசகர்களும் சிவாஜியிடம் ஜாவ்லி பிரதேசத்தையும் கைப்பற்ற அறிவுரை கூறினார்கள்.

ஆனால் சிவாஜி அதுநாள் வரை மறுத்து வந்தான். “இது வரை நாம் கைப்பற்றிய பகுதிகள் வேறு வகை. அவையெல்லாம் இந்த மண்ணின் மக்கள் ஆண்டவை அல்ல. ஆனால் ஜாவ்லியை ஆள்வது நம்மவர்கள். நம் இனத்து மக்கள் ஆளும் பகுதியை நாம் தந்திரமாகக் கைப்பற்றுவது சரியல்ல. போரிட்டு வெல்வதற்கு அவர்கள் நம் எதிரிகள் அல்ல. அதனால் முடிந்த வரை அவர்களை நம் பக்கம் சேர்க்கப் பாடுபடுவோம்….”

இப்படி நம்மவர்கள் என்று எண்ணி ஒதுங்கி நின்றவனை வீழ்த்த ஒரு படை வருகிறது. வீழ்த்தப்பட இருப்பவன் நம்மவன் என்ற சகோதரத்துவம் சிறிதும் இல்லாமல் அவர்களை சந்திராராவ் மோர் உ:ள்ளே விட்டது தான் சிவாஜியைக் கோபமூட்டியது. 

பாஜி ஷாம்ராஜ் சிவாஜியின் எல்லைப்பகுதி தாண்டி ஜாவ்லி பிரதேசத்தில் சில மைல்கள் தொலைவில் இருக்கும் பார்காட் மலைப்பகுதியில் ரகசிய முகாமிட்டுத் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்க சிவாஜி அவர்கள் வரக் காத்திராமல் அதிரடியாக அவர்கள் சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில் அங்கு சென்று தாக்குதல் நடத்தினான். பாஜி ஷாம்ராஜ் சில மணி நேரங்கள் கூடச் சமாளிக்க முடியாமல் தன் உயிருக்குப் பயந்து தப்பியோடினான்.

அவர்களைத் துரத்தியடித்து விட்டுத் திரும்பிய சிவாஜியிடம் அவன் நண்பர்கள் ஜாவ்லியை இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது கைப்பற்றுவது முக்கியம் என்பதைச் சொன்னார்கள். அப்போதும் சிவாஜிக்கு மனம் வரவில்லை. அன்னியர்களிடம் நடந்து கொள்வதைப் போல சகோதரர்களிடமும் நடந்து கொள்வது சரியல்ல என்று சொன்னான்.

“சகோதரன் எதிரிக்கு இடம் கொடுத்தால்?’ என்று ஒரு நண்பன் கேட்டான்.

“முதலில் கூப்பிட்டு அறிவுரை சொல்ல வேண்டும். புத்திமதி சொல்ல வேண்டும். அப்படியும் அவன் திருந்தா விட்டால் பார்க்கலாம்” என்றான் சிவாஜி.

ஆலோசகர்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சிவாஜியின் பேரறிவையும் மீறி அவனுக்கு அந்த மண் மீதும், மண்ணின் மைந்தர்கள் மீதும் அபிமானம் இருப்பதை உணர்ந்த அவர்களுக்கு அதற்கு மேல் சிவாஜியிடம் பேசுவது வீண் என்று தோன்றியது. சந்திராராவ் மோர் அறிவுரைக்குத் திருந்துவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கில்லை. ஆனால் சிவாஜி தானாக உணர்ந்தால் ஒழிய மனம் மாற மாட்டான்.

ஒரு ஆலோசகர் சொன்னார். “உங்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை. முயன்று பாருங்கள்….”

சிவாஜி மறுநாளே சந்திராராவ் மோரைச் சந்திக்கக் கிளம்பினான்.


ந்திராராவ் மோர் பரம்பரையே வீரப்பரம்பரையாக இருந்தது. இப்போதுள்ள அரசனின் தம்பிகளும், மகன்களும் தேர்ச்சி பெற்ற வீரர்கள். இப்போதைய சந்திராராவ் மோரும் வீரனே என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருந்தான். வீரத்திற்கு இணையான அறிவு அவனிடம் இருக்கவில்லை. அது அவன் குடும்பத்தில் மற்றவர்களிடமும் இருக்கவில்லை. தங்களை மிக உயர்வாகவும், சிவாஜியைத் தாழ்வாகவும் அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

பீஜாப்பூர் சுல்தானையே எதிர்க்கத் துணிந்த சிவாஜி, அக்கம்பக்கத்துக் கோட்டைகளையெல்லாம் தன்வசப்படுத்திக் கொண்ட சிவாஜி, ஜாவ்லி பிரதேசத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யாதது அவர்கள் மேல் இருக்கும் பயத்தால் என்ற அபிப்பிராயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் தன்னிடம் பேச வந்த சிவாஜியிடம் சந்திராராவ் மோர் சமமில்லாதவர்களிடம் காட்டும் அலட்சியத்தையே காட்டினான்.

சிவாஜி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களிடம் வரலாற்றைச் சொன்னான். அன்னியர்களிடம் இந்த தேசம் சிக்கியது எப்படி, அவர்கள் இந்தத் தேசத்தினரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை எல்லாம் விளக்கமாகச் சொன்னான். சுயராஜ்ஜியம் குறித்த தன் கனவைச் சொன்னான். நாம் ஒன்று சேர்ந்து அன்னியர்களை எதிர்க்க வேண்டுமே ஒழிய ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும், அழிக்க நினைப்பதும் சரியல்ல என்று சொன்னான்.

சந்திராராவ் மோருக்கு அவன் பேசியது பாதி புரியவில்லை. மீதி சரியென்று தோன்றவில்லை. அவன் அலட்சியமாகச் சொன்னான். “சிவாஜி! நாங்கள் வீரப் பரம்பரை மன்னர்கள். எங்களிடமே வந்து நீ அறிவுரை சொல்வது எனக்கு வியப்பூட்டுகிறது. யார் நீ? உன் தாய்வழி பாட்டனார் சிந்துகேத் அரசராக இருந்தவராக இருக்கலாம். ஆனால் உன் தந்தை வழிப் பாட்டனார் பிழைப்புக்காக அகமதுநகர் வந்தவர். அகமதுநகர் சுல்தானின் தயவால் படைத்தலைவர் பதவியைப் பெற்றவர். உன் தந்தையும் மன்னரல்ல. அவர் பல முயற்சிகள் செய்து தோற்று இப்போது பீஜாப்பூர் சுல்தானின் தயவால் ஒரு நிலையில் இருக்கிறார். அதுவும் அரச பதவியில் அல்ல. நீ அக்கம் பக்கத்துக் கோட்டைகளை ஏமாற்றிக் கைப்பற்றியவுடனேயே உன்னை அரசனைப் போல நினைத்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது……”

தன்னுள் எழ ஆரம்பித்த கடுங்கோபத்தை சிவாஜி கட்டுப்படுத்திக் கொண்டு தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சந்திராராவ் மோர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தான். சந்திராராவ் மோரின் தம்பி ஒருவனும் மகன் ஒருவனும் அங்கிருந்தார்கள். அவர்கள் சந்திராராவ் மோரின் பேச்சைத் தடுக்கவில்லை. மாறாக சிவாஜியிடம் சந்திராராவ் மோர் மிகச்சரியாகவும், அவன் நிலையை உணர்த்துகிறமாதிரி சிறப்பாகவும் பேசுகிறது போல் நினைத்து மந்தகாசப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிவாஜி சந்திராராவ் மோரிடம் அமைதியாகக் கேட்டான். “என்னை அழிக்க வந்த பீஜாப்பூர் சிறுபடைக்கு அனுமதி கொடுத்து உள்ளே விட்டாயே. அது சரியா? நானும் நீயும் இந்த மண்ணின் மைந்தர்கள். ஒரு சகோதரனைக் கொல்ல கூட்டு நின்றது சரிதானா?”

சந்திராராவ் மோர் அலட்சியமாகச் சொன்னான். “உண்மையில் நீ என் நிலப்பகுதிக்கு வந்து அவர்களைத் தாக்கியது தான் தவறு. அதற்கு மன்னிப்புக் கேட்பதை விட்டு என்னைத் தவறு செய்தவன் போல் கேள்வி கேட்பது அதை விடப் பெரிய தவறு. ஒரு மன்னனுக்கு இன்னொரு மன்னன் உதவுவது சரி தான். நீ பீஜாப்பூரின் ஆயிரம் குதிரை வீரர்களைத் துரத்தியடித்து விட்டதில் உன் வீரத்தைக் காட்டி விட்டதாய் நினைக்கிறாய். இதுவே என் படையாக இருந்திருந்தாலும், பீஜாப்பூரின் பெரும்படையாக இருந்திருந்தாலும் நீ தான் சகாயாத்ரி மலையில் பதுங்கியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும்…”

சிவாஜி புன்னகைத்தான். அவனைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் அவன் புன்னகைத்த விதத்தில் அபாயத்தை உணர்ந்திருப்பார்கள். ஆனால் சந்திராராவ் மோர் தான் இத்தனை பேசியும் சிவாஜி எதிர்க்க வழியில்லாமல் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பதாக எண்ணினான்.

திடீரென்று அவனுக்கு சிவாஜியை அங்கேயே பிடித்து வைத்து பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்தால் என்ன என்று தோன்றியது. அப்படித்தானே இவனது தந்தையை பாஜி கோர்படே ஒப்படைத்தான்…. இந்த எண்ணம் வந்தவுடன் சந்திராராவ் மோர் அதை எப்படி நிறைவேற்றுவது என்று அவசரமாக யோசித்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

Saturday, January 26, 2019

சத்ரபதி நாவல் விமர்சனம்


சத்ரபதி நாவல் படித்து முடித்து எனக்கு வந்த முதல் விரிவான விமர்சனம் இது. நிறை, குறைகள், ரசித்தது, ரசிக்காதது இரண்டையுமே சேர்த்து ஒரு முழுமையான விமர்சனம் எழுதிய திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.
                                         - என்.கணேசன்

சத்ரபதி நாவல் விமர்சனம்

ஐயா தங்களுடைய தீவிர ரசிகன் நான். அமானுஷ்யனில் ஆரம்பித்து இருவேறு உலகம் வரை ஒவ்வொரு நாவலையும் ரசித்துப் படித்தவன். ஆனால் தங்களுக்கு நான் கருத்து தெரிவித்ததில்லை. சத்ரபதியைப் படித்து முடித்த பின் உடனே நான் உணர்ந்ததைச் சொல்லும் ஆவல் ஏற்பட்டது. ஏனென்றால் சிவாஜியை அவன் பிறப்பிலிருந்து நேரில் பார்த்து அவன் வாழ்க்கையோடு பயணம் செய்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. நாவல் அருமையிலும் அருமை.

உங்கள் மற்ற நாவல்கள் போல் மளமளவென்று படித்து நகர முடியவில்லை. நிறைய வரலாற்றுத் தகவல்கள் இடையிடையே நிறைய கொடுத்திருப்பதால் நிதானமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. புரிந்து கொண்டபின் அந்தக் காலத்தில் பயணம் செய்வது போலவே உணர முடிந்தது.

உயிருக்குப் பயந்து சிவாஜியின் பெற்றோர் ஓடி வரும் கட்டத்தில் ஆரம்பிக்கும் நாவல் சிவாஜியின் முடிசூட்டு விழாவில் முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே நிற்கிறது. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியிலும் அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தி இருப்பதால் அந்தக் கதாபாத்திரங்களையும் சரித்திரத்தையும் இயல்பாய் புரிந்து கொள்ள முடிந்தது.

ஷாஹாஜி, ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ், சிவாஜியின் நண்பர்கள், ஆதில்ஷா சுல்தான்கள், அப்சல்கான், செயிஷ்டகான், ஔரங்கசீப், ஜஹானாரா, ஜெப் உன்னிசா கேரக்டர்கள் மனதில் தங்கி விட்டார்கள். சிவாஜிக்கு ரொட்டி கொடுத்த பாட்டி போன்ற சின்னச் சின்ன கேரக்டர்களும் சூப்பர்.

சின்ன எடிட்டிங் தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன என்றாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மகாபுருஷனை பிரம்மாண்டமாய் செதுக்கி வைத்திருக்கிறீர்கள். அவனோடு வாழ்வது போலவே உணர வைத்ததற்கு நன்றி.

நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள்:

ஜீஜாபாய் அயூப்கான் என்ற ஏமாற்றுக் கோட்டைத் தலைவனைப் பழி வாங்கும் இடம்.

ஜாவ்லி அரசனை சிவாஜியின் ஆட்கள் நன்றாய் கலாய்த்து விட்டுக் கொல்லும் இடம்

செயிஷ்டகான் மீதான தாக்குதலில் நகைச்சுவையும் அதற்குப் பின் சிவாஜியின் குழு தப்பித்த விதமும்.

சிவாஜி ஆக்ரா சென்று சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து தப்பித்து வருவது வரை நிகழ்ச்சிகள் நல்ல விறுவிறுப்பு. திட்டமிட்ட விதமும், அதன் பின் ஔரங்கசீப் போலத்கானை விசாரித்து உண்மையாக நடந்ததைத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சியும் அருமை..

சாலேர் கோட்டையைத் தக்க வைக்க சிவாஜி செய்த யுத்த யுக்திகளால் மும்முனையில் வெற்றி பெற்ற சம்பவம்.

ஔரங்கசீப்பின் பழைய காதலை அறிந்து அவன் மகள் ஜெப் உன்னிசா தந்தையைச் சந்தித்துப் பேசும் இடம். முடிவில் ஔரங்கசீப் மீது அவளைப் போலவே நமக்கும் பச்சாதாபம் ஏற்படுகிறது. (உங்கள் நாவல்களில் என்னால் வில்லன்களைக் கூட வெறுக்க முடிந்ததில்லை. அப்படி அவர்களைச் சித்தரிப்பீர்கள். இந்த நாவலிலும் ஔரங்கசீப் கேரக்டரின் அந்த குறிப்பிட்ட இடம் சூப்பர்)

ஆக்ராவிலிருந்து தப்பித்து வரும் சிவாஜி ஒரு மூதாட்டி வீட்டில் தங்கும் நிகழ்வு. அந்த மூதாட்டியின் மனமும், சிவாஜியின் பதில் பரிசும் நெகிழ வைத்த இடங்கள்.

நாவலில் என்னால் ரசிக்க முடியாத விஷயங்கள்:

மராட்டியப் பெயர்கள் ஒரே போல் இருப்பது போலவே தெரிகின்றன. சில இடங்களில் குழப்பமாக இருக்கிறது.

-     சங்கர சுப்பிரமணியன்


Thursday, January 24, 2019

இருவேறு உலகம் – 120



வீன்சந்திர ஷா அந்த பழங்காலச் சுவடி வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு ரகசிய இல்லுமினாட்டி காப்பறையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றான். வாஷிங்டன் நகரமே இல்லுமினாட்டியின் அதிகார மையம் என்றும் அந்த நகரத்தில் தான் இல்லுமினாட்டியின் பல பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவன் சொன்னான். அந்தப் பழங்காலச் சுவடியைத் திறந்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தப் பதிலில் விஸ்வத்திடமிருந்து நழுவியது.

ஒரு நெருங்கிய நண்பனிடம் உரிமையுடன் கேட்பது போல விஸ்வம் கேட்டான். “அதில் என்ன தான் எழுதியிருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?”

“தலைவர் எர்னெஸ்டோ, உபதலைவர், மற்றும் முக்கிய மூத்த செயற்குழு உறுப்பினர் மூவர் மட்டும் தான் எல்லா ரகசிய சாசனங்களையும் பார்வையிடும் அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் ஐந்து பேர் தான் அதைப் படித்துப் பார்த்திருப்பார்கள்….” என்று சொன்ன நவீன்சந்திர ஷா அவர்களது பெயர்களையும் சொன்னான்.

“சும்மா தான் ஒரு ஆர்வத்தில் கேட்டேன். அது தெரிந்து என்ன ஆகப் போகிறது….” என்று சொல்லி விஸ்வம் அந்தப் பேச்சை அத்துடன் விட்டான்.

நவீன்சந்திர ஷா போன பிறகு விஸ்வம் ஹரிணி விவகாரத்தை யோசிக்க ஆரம்பித்தான். நிலைமை இப்படி வந்து முடியும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. திட்டத்தை வகுத்து மனோகர் தெரிவித்த போது அதில் சிறு தவறையும் அவனால் கண்டுபிடித்திருக்க முடியவில்லை. குறைவான மனிதர்கள், கச்சிதமான இடம், தொடர்ந்து கண்காணிக்க யாராவது ஒருவர், வெளியில் செய்தி கசியவே வாய்ப்பும் இல்லை என்று எல்லாமே சரியாக இருந்தும் எங்கே தவறு நேர்ந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. மாஸ்டர் கூட அவளை நெருங்க முடியாத சக்தி அரணை அவன் எழுப்பி இருந்தான். அதனால் மாஸ்டர் கண்டுபிடித்துச் சொல்லி இருக்க வழியில்லை. க்ரிஷால் ஹரிணி இருக்கும் இடத்தை எப்படியோ அறிய முடிந்திருந்தால் மட்டுமே போலீஸ் அங்கே சரியாக வந்திருக்க முடியும். க்ரிஷ் எப்படிக் கண்டுபிடித்து போலீஸுக்குத் தெரிவித்தான்? எப்படி க்ரிஷுக்கு அந்தச் சக்தி அவ்வளவு சீக்கிரம் கிடைத்தது. உணர்வு பூர்வமாக மிக நெருங்கியவர்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் ஓரளவு சக்தி படைத்தவுடனேயே வந்துவிடும்….. அப்படிப் பெற்ற சக்தியோ?  

எப்படியோ ஹரிணி அவன் பிடியிலிருந்து தப்பித்து விட்டாள். திரும்ப அவளை சிறைப்படுத்தும் யோசனையும் நடக்கவில்லை. உண்மையிலேயே மாணிக்கம் அந்தச் சூழலில் ஹரிணியைக் கைது செய்திருக்க வழியில்லை. டிவி, பத்திரிக்கைகளில் இந்த விஷயம் அலசப்படுவதையும் அரசியல் மாற்றம் வருவதையும் இந்தச் சூழலில் அவனும் விரும்பவில்லை. மனோகர் பிடிபட்டது அவனுக்கு அவமான நிகழ்வே ஒழிய மனோகர் மூலமாக யாரும் அவனைப் பற்றி எந்த அபாயத் தகவலையும் கண்டுபிடிக்கப் போவதில்லை…. ஆனாலும் க்ரிஷ் அவனால் பாதிக்கப்படாமல் இருப்பது அவனுக்குக் கசந்தது.  க்ரிஷைத் தான் அவன் நெருங்கத் தயங்குகிறானேயொழிய ஹரிணியும், க்ரிஷின் குடும்பத்தினரும் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அதற்கு அவன் நேரடியாக முயற்சித்தால் சக்தியை நிறைய விரயம் செய்ய வேண்டி வரும். மஸ்டரின் குரு மற்றும் ராஜதுரையைக் கொன்றதால் இழந்த சக்தியின் அளவும், மாஸ்டர் அறியாமல் இருக்க பலமுறை சக்தி அரணை எழுப்பிய போதும் அவன் இழந்த சக்தி மற்ற செயல்களில் இழந்த சக்தியை விட அளவில் அதிகம்.  முழுமையாக சக்தி தேவைப்படும் காலக்கட்டம் இது. இனியும் அவன் செய்ய வேண்டிய மிக அவசர வேலைகள் நிறைய இருக்கின்றன. அதனால் இல்லுமினாட்டி தலைமைப்பதவி கைக்கு வரும் வரையாவது அவன் அதிகபட்ச சக்தியோடு இருப்பது அவசியம். வேறு கைதேர்ந்த கொலையாளிகளை அனுப்பலாம் என்றாலோ கண்டிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தன் அதிகார பலத்தைக் கொண்டு கமலக்கண்ணன் இன்னேரம் ஏற்படுத்தி இருப்பார்.. அதனால் அவன் இல்லுமினாட்டியின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை க்ரிஷ் குடும்பமும் ஹரிணியும் இளைப்பாறட்டும். பதினாறு நாட்கள் தானே. அதன் பின் அவன் சக்தியின் பிரம்மாண்டத்தை க்ரிஷ் கண்டிப்பாக அறியத்தான் போகிறான்…..

அந்த நேரத்தில் விஸ்வத்திற்கு ஒரு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. “சார் அந்த சட்டர்ஜியைக் கண்டுபிடித்து விட்டோம். அந்த ஆள் பழைய மெயில் ஐடியில் தொடர்பு கொண்டவர்கள் சிலரின் மெயில் மூலமாக அந்த ஆளின் இப்போதைய மெயில் ஐடியும், விலாசமும் கண்டுபிடித்து விட்டோம். அந்த ஆள் வெஸ்ட் பெங்காலில் சிலிகுரியில் இருக்கிறான்……”

சட்டர்ஜியின் சிலிகுரி விலாசத்தைக் குறித்துக் கொண்ட விஸ்வம் முதலில் இல்லுமினாட்டியின் பழைய சுவடியில் என்ன எழுதியிருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடிப்பதா இல்லை சட்டர்ஜி மூலமாக அந்த இமயமலைப்பகுதி எது என்பதை முதலில் கண்டுபிடிப்பதா என்று யோசித்தான். இரண்டுமே அவனுக்கு மிக முக்கியம் தான். முதலில் சுவடி படித்திருக்கும் ஐவரில் இருவர் ஜெர்மனியிலேயே இருப்பதால் இங்கிருந்து போகும் முன் இதை முடித்து விட்டுப் போனால் நல்லது என்று தோன்றியது.

எர்னெஸ்டோ ம்யூனிக்கிலேயே இருப்பவர் என்றாலும் அவரை நெருங்குவதே மிகவும் கஷ்டம் என்பது ரகசியமாய் விசாரித்ததில் தெரிந்தது. அரண்மனை போன்ற வீட்டுக்குள் இல்லுமினாட்டிகளே அவ்வளவு சுலபமாய் நுழைய அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. பிதோவன் இசையும், ஒயினும், புத்தகங்களும் சேர்ந்ததே சொர்க்கம் என்று வாழும் அவர் மிக வலுவான காரணங்கள் இல்லாமல் சந்திக்க வரும் ஆட்களை பெரும் இடைஞ்சலாகவே நினைப்பவர் என்றார்கள். அதனால் அவர் மூலம் அறிவது என்பது ஆகாத காரியம். இன்னொரு செயற்குழு உறுப்பினர் ஃப்ராங்பர்ட் நகரில் இருப்பவர். அவர் பழங்காலக் கலைப்பொருட்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பெரிய செல்வந்தர். அவர் சேர்த்திருக்கும் கலைப் பொருட்களின் மதிப்பு ஆயிரம் கோடிக்கும் மேலிருக்கும் என்கிறார்கள். பழங்கால அபூர்வக் கலைப்பொருள் பற்றிப் பேசுவதானால் என்னேரமும் அவர் தயார் என்றார்கள். அந்த ஆளை அணுகுவதே நல்லது என்று தோன்றியது.

ஒரு அடி உள்ள காளி வெண்கலச்சிலை எடுத்துக் கொண்டு சென்று ஃப்ராங்பர்ட் நகரில் இருக்கும் அந்த இல்லுமினாட்டி செயற்குழு உறுப்பினரை விஸ்வம் சந்தித்தான். அந்தச் சிலையை அவருக்கு அவன் பரிசளித்தான். அந்த மனிதர் அந்தச் சிலையழகில் சொக்கிப் போனார். இது என்ன சிலை, இந்தக் கோலம் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் பல கேள்விகள் பரவசத்தோடு அவர் கேட்டார். பொறுமையாக அதற்கெல்லாம் பதில் சொன்ன விஸ்வம் இப்போதைய பேச்சை மிக இயல்பாக அந்த பழங்காலச் சுவடிக்கு எப்படிக் கொண்டு வருவது என்று யோசித்து விட்டுச் சொன்னான்.

“இந்தக் காளி சிலையில் ஒரு விசேஷம் இருக்கிறது. எனக்கு அடிக்கடி வரும் கனவுகள் இரண்டில் இதுவும் ஒன்றாக இருந்தது. இதை கனவில் அடிக்கடி பார்ப்பேன். அதனால் ஒரு பெரும் பணக்காரர் வீட்டில் இந்தக் காளியைப் பார்த்த போது நான் பிரமித்து விட்டு அதை அவரிடம் இரண்டு மடங்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கினேன். இது என் கையில் வந்த பிறகு அந்தக் கனவு வருவது நின்று விட்டது. ஆனால் இரண்டாவது கனவு இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. அதை உங்கள் ஆட்கள் சிலரிடமும் சொல்லி இருக்கிறேன். ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் ஒரு பழங்காலச் சுவடி ஒன்று இருப்பது போலவும் அதில் என்னைப் பற்றித் தான் எழுதியிருக்கிறது என்று யாரோ சொல்வது போலவும் கனவு வருகிறது. அது போல் சுவடி உங்கள் சிகாகோ இல்லுமினாட்டி கோயிலை இடித்த போது கிடைத்திருக்கிறது என்றும் அதிலும் யாரையோ பற்றிச் சொல்லியிருக்கிறது என்றும் சொன்னார்கள்…..”

சொல்லி விட்டு விஸ்வம் அர்த்தமுள்ள இடைவெளி விட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே அந்த மனிதர் பேசினார்.

“ஆமாம்….. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் இமயமலையின் தென்பகுதியிலிருந்து தேஜஸுடன் வருவான். சக்தியின் சின்னத்துடன் வந்து  சக்தியின் போக்கைப் பேசுவான். இல்லுமினாட்டியின் பாதையை நிர்ணயிப்பான்….. இப்படி வரும் வர்ணனைகள்….. எனக்கு ஞாபகம் இருக்கிறது இவ்வளவு தான்…. “

விஸ்வம் ஒரே சமயத்தில் திருப்தியும் அதிருப்தியும் சேர்ந்து உணர்ந்தான். திருப்தி வரக்காரணம் இல்லுமினாட்டியின் பாதையை நிர்ணயிப்பவன் தேஜஸுடன் இருப்பான்,, சக்தியின் சின்னத்துடன் வருவான், சக்தியின் போக்கைப் பேசுவான் என்ற தகவல்கள் கிடைத்தது. அதிருப்தி வரக்காரணம் எனக்கு ஞாபகம் இருக்கிறது இவ்வளவு தான் என்ற வாக்கியம்….. இன்னும் என்ன வர்ணனைகள் அந்தச் சுவடியில் இருக்கின்றனவோ?

(தொடரும்)
என்.கணேசன்