சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 27, 2025

சாணக்கியன் 150


ராக்‌ஷசர் மனதில் எழுந்த கொந்தளிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார். என்ன நடக்கிறது மகதத்தில்? அவர் பார்வை சேனாதிபதி பத்ரசாலின் மீது நிலைத்தது. பத்ரசால் முடிந்த வரை அவர் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருப்பது என்று நிச்சயித்திருந்தான். அவன் தன் முன்னால் உள்ள குதிரைப்படை அணியை மேற்பார்வை பார்த்துக் கொண்டும், அவனுடைய படைத்தலைவர்களுக்கு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டும் கர்மமே கண்ணாயிருந்தான்.

 

ராக்‌ஷசர் சேனாதிபதியையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்களுக்குத் தென்பட்ட உண்மை அவன் கண்களுக்கும் தென்படாமல் இருக்க வழியே இல்லை. சொல்லப் போனால் சேனாதிபதியான அவனுக்கு அது அவருக்கு முன்பாகவே தெரிந்திருக்க வேண்டும். அவன் திகைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. சேனாதிபதி இயல்பாக அவன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பாரசீகக் குதிரைகளின் எண்ணிக்கை எப்படிக் குறைந்தது? அவை எங்கே போயின?

 

முதலில் ஆயுதக்கிடங்கு தீப்பிடித்தது, பின் தனநந்தனின் புதையல் காணாமல் போனது, இப்போது இது…. ஒவ்வொன்றாய் கிளம்புகின்றது. அவர் நிர்வாகத்தின் கீழ் அவர் அறியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரண சமயமாய் இருந்திருந்தால் இப்போதே அவர் சேனாதிபதியை அழைத்து விசாரித்திருப்பார். ஆனால் அவசரப்பட வேண்டாம் என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. சிறிது நேரம் அங்கிருந்து பார்த்து விட்டு அங்கிருந்து அவர் கிளம்பினார். அவர் போவதைப் பார்த்து பத்ரசால் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அதைக் கவனித்த சுதானுவுக்கு பத்ரசாலும் ராக்‌ஷசரும் கூட நல்லுறவில் இல்லை என்பது மெல்லப் புரிந்தது.  

 

பத்ரசால் ராக்‌ஷசர் குதிரைகளின் மாற்றத்தைக் கண்டுபிடித்து விடவில்லை என்று நினைத்து தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தான். கண்டுபிடித்து இருந்தால் கண்டிப்பாக அவனைக் கூப்பிட்டு விசாரித்திருப்பார். அதையெல்லாம் தாமதப்படுத்தும் நபர் அல்ல அவர் என்பது அவன் பழைய  அனுபவமாக இருந்தது.

 

ஆனால் ராக்‌ஷசர் அங்கிருந்து சென்றவுடன் முதல் வேலையாக குதிரைகள், யானைகள் ஆகியவற்றை கணக்கெடுத்து தணிக்கை செய்யும் அதிகாரியை உடனே அழைத்து விசாரித்தார். ”நீங்கள் கடைசியாக குதிரைகளைத் தணிக்கை செய்தது எப்போது?”

 

”சென்ற மாதம் பிரபு. போர்ச்சூழல் ஏற்படலாம் என்று தாங்கள் உடனடியாகச் செய்து முடிக்கக் கட்டளையிட்டீர்கள்.”

 

“தணிக்கை செய்த போது எல்லாம் சரியாக இருந்ததா?”

 

“இருந்தது பிரபு. நான் தணிக்கை முடித்து அதற்கான அறிக்கையையும் தங்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.”

 

““நான் இன்று குதிரைகளின் அணிவகுப்பைப் பார்வையிட்ட போது எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரியவில்லையே. எப்படி நீங்கள் கணக்கெடுத்தீர்கள்?”

 

அதிகாரியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அவர் விவரித்தார். மகதத் தலைநகரத்தின் குதிரை லாயம் மிகப்பெரியது. பல சிறு பகுதிகளை உள்ளுக்குள் அடக்கியது. அவர் ஒவ்வொரு பகுதியில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கையையும் குறித்து கடைசியில் மொத்த எண்ணிக்கையைக் கூட்டி இருக்கிறார். முன்பிருந்த எண்ணிக்கை, பிறந்த குதிரைகள், இறந்த குதிரைகள், வாங்கிய குதிரைகள் கணக்குகளை கூட்டிக்கழித்த போது சரியாக இருந்திருக்கிறது. குதிரைகளை ரகவாரியாகப் பிரித்து கணக்கெடுக்கும் வழக்கம் ஆரம்பத்திலிருந்தே இல்லை. அதைப் பயன்படுத்தி யாரோ குதிரைகளை மாற்றியிருக்கிறார்கள் என்பது ராக்‌ஷசருக்கு மெல்லப் புரிந்தது.

 

ராக்‌ஷசர் யோசனையுடன் அந்த அதிகாரியைப் பார்த்து விட்டுச் சொன்னார். “சரி நீங்கள் போகலாம்.”

 

அந்த அதிகாரியின் குழப்பம் மேலும் அதிகரித்தது. ’எல்லாம் சரியாக இல்லையே’ என்று சொன்னவர் இப்போது அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் போகச் சொல்கிறாரே. சும்மா சோதித்துப் பார்க்க அப்படிச் சொன்னாரோ? தவறு செய்திருந்தால் குற்றவுணர்வோடு உளறி விடுவோம் என்று எதிர்பார்த்தாரோ?

 

ராக்‌ஷசருக்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் ஆபத்தாய்த் தோன்றின. இப்போதே சேனாதிபதியை அழைத்து விசாரிப்பது பெரிதல்ல. ஆனால் போர்க் காலத்தில் சேனாதிபதி அதிக அவசியமானவன். குற்றம் அவன் மீதிருந்து அவனைத் தண்டிக்க முடிந்த காலமில்லை இது. போர் முடிந்த பின் எடுக்க வேண்டிய களைகள் இங்கே ஏராளமாக இருக்கும் போலிருக்கிறது….

 

அவர் முன் ஒற்றன் வந்து நின்றான். அவர் கேட்டார். “என்ன நிலவரம்?”

 

“அந்த மகானை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. காவலர்களும், பூசாரியும் சொன்ன தோற்றத்தில் ஒரு முதியவரை ஓரிருவர் மகாவிஷ்ணு கோயில் அருகே அன்று காலை பார்த்திருக்கிறார்கள்.  அதற்குப் பின் யார் பார்வையிலும் அவர் படவில்லை. பாடலிபுத்திரத்தை விட்டு வெளியேயும் அவர் போகவில்லை. அவரைப் பார்த்தால் வெளியே போக அனுமதிக்காமல் உடனடியாகத் தெரிவிக்கும்படி காவலர்களுக்குத் தெரிவித்திருக்கிறோம்”

 

மற்ற சதி வேலைகளைப் போல இதுவும் ஏதாவது சதி வேலையின் ஒரு பகுதியா, இல்லை இது சம்பந்தமில்லாத வேறு புதிரா என்பது அவருக்கு விளங்கவில்லை. சுதானு சம்பந்தப்பட்டிருக்கிறான், இப்போது அந்த முதியவரைக் காணவில்லை என்பதைத் தவிர இதில் சந்தேகப்பட வேறு எதுவுமில்லை. ஆனால் குழப்பம் தெளிவடையும் போது உண்மையான பிரச்சினையின் அடையாளமும் தெரிய வரலாம்….

 

ராக்‌ஷசர் நிகழ்வுகளின் போக்கில் களைப்பை உணர்ந்தார்.

 

த்ரசால் அன்றைய பணிகள் முடிந்து வீடு திரும்புகையில் இருட்ட ஆரம்பித்திருந்தது. யாரோ அவன் பின்னால் வருவது தெரிய அவன் யாரென்று பின் திரும்பிப் பார்த்தான். யாரோ ஒரு வீரன். அவன் திரும்பிப் பார்ப்பதைக் கவனித்தவுடன் வேகமாக முன்னேறி வந்து வணக்கம் தெரிவித்தான்.

 

அருகில் அவன் வந்த பிறகு தான் கார்த்திகேயன் என்பது அவனுக்குத் தெரிந்தது. பத்ரசால் உற்சாகமாக எதோ பேசப் போன போது கார்த்திகேயன் தாழ்ந்த குரலில் சொன்னான். ”நான் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் சேனாதிபதி. உங்கள் நாட்டு ஒற்றர்கள் எங்கிருந்தாவது நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. உங்கள் படைவீரன் நான். தாங்கள் ஏதோ கட்டளையிட்டு அதை நிறைவேற்ற தங்களைக் காண வந்திருக்கிறேன் என்ற பாவனையையே வெளிப்படுத்துங்கள்.”

 

பத்ரசால் அவன் எச்சரித்ததால் சுதாரித்துக் கொண்டு “என்னுடன் வா” என்று சற்று சத்தமாகவே கட்டளையிட்டு முன்னால் நடக்க, அவன் கீழ் பணிபுரியும் படைவீரன் போல கார்த்திகேயன் இரண்டடி இடைவெளி விட்டு அவனைப் பின் தொடர்ந்தான்.  

 

வீட்டுக்குள் நுழைந்ததும் பத்ரசால் அவனிடம் வியப்புடன் கேட்டான். “ஏனிந்த மாறுவேடம் நண்பரே?”

 

கார்த்திகேயனாய் பத்ரசாலுக்குக் காட்சியளித்த சின்ஹரன் சொன்னான். “தங்களுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது நண்பரே. அதைத் தெரிவிக்கத் தான் நான் மாறுவேடத்தில் வந்திருக்கிறேன்.”

 

பத்ரசால் அதிர்ச்சியுடன் கேட்டான். “என்ன ஆபத்து நண்பரே”

 

“குதிரைகள் பரிவர்த்தனை பற்றி ராக்‌ஷசர் யூகித்து விட்டார் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது நண்பரே. நாங்கள் எங்கள் பாதுகாப்பு மற்றும் லாபம் மட்டுமல்லாமல் எங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களின் பாதுகாப்பு மற்றும் லாபம் குறித்தும்  எப்போதும் மிகுந்த அக்கறை வைத்திருக்கிறோம். அதனால் தான் தகவல் கிடைத்தவுடன் உங்களை எச்சரிக்க ஓடோடி வந்திருக்கிறேன்.” சின்ஹரன் ரகசியக்குரலில் சொன்னான்.

 

பத்ரசால் திகைப்பும் குழப்பமும் கலந்து உணர்ந்தவனாய்ச் சொன்னான். “இன்று காலை கூட குதிரைகளின் அணிவகுப்பு சமயத்தில் ராக்‌ஷசர் வந்திருந்தார். ஆனால் அப்போது அவர் ஒன்றும் சொல்லவில்லையே. சந்தேகப்பட்டிருந்தால் உடனடியாக அவர் விசாரித்திருப்பாரே.”

 

“சாதாரண காலமாய் இருந்திருந்தால் கண்டிப்பாக அழைத்து விசாரித்திருப்பார். ஆனால் யுத்த சமயத்தில் உங்களை எதுவும் செய்வது மகதப்படையைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் கண்டு கொள்ளாதபடி தெரிகிறார் என்று நான் நினைக்கிறேன். ”

 

பத்ரசால் பீதியடைந்தான். “என்ன சொல்கிறீர்கள் நண்பரே. இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது?”

  

“நான் சொன்னபடி இப்போதைக்குப் பிரச்னை இல்லை நண்பரே. அதனால் அமைதியிழக்க வேண்டியதில்லை. ஆனால் போர் முடிந்த பிறகு ராக்‌ஷசர் உங்களுக்குப் பிரச்சினையாகலாம்.  அதற்குள் நாம் எத்தனையோ செய்து விடலாம். கவலைப்படாதீர்கள்.” சின்ஹரன் பத்ராசாலின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

 

எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடும் போது ஒருவருக்குப் பிரச்னை என்றால் மற்றவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடி ஒளிவது தான் எங்கும் நடக்கும் வாடிக்கை. ஆனால் இதிலும் கார்த்திகேயன் வித்தியாசப்படுவதை பத்ரசால் நன்றியுடன் எண்ணிப் பார்த்தான். அவன் இத்தனை ஆபத்தான சூழ்நிலையில் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை…

 

”மிக்க நன்றி நண்பரே. இனி என்ன செய்வது?” பத்ரசால் கேட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





Wednesday, February 26, 2025

முந்தைய சிந்தனைகள் 120

 என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்...












Monday, February 24, 2025

யோகி 91


 றுநாள் அதிகாலை ஷ்ரவன் நடைப்பயிற்சியை ஆரம்பித்த போது கண்ணனின் வரவை எதிர்பார்த்தான். ஆனால் ஆரம்பத்தில் அவனைப் பின் தொடர்ந்து வந்த துறவியே நான்கடிகள் தள்ளி வர ஆரம்பித்த போது, கண்ணனை இன்று அவர்கள் அனுப்பவில்லை என்பது உறுதியாகியது. கல்பனானந்தாவிடம் அவன் சொன்னதை வைத்து அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது தெரிந்தது. இன்று கடைசி நாள் என்பதால் இனி அவர்கள் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு குறைவு என்று அவன் எண்ணினான்.

 

அன்றும் ஸ்ரேயா நடைப்பயிற்சிக்கு வரவில்லை. அவனுக்கு வருத்தமாக இருந்தாலும் அவன் எதுவும் செய்வதற்கில்லை. அன்றைய வகுப்புகளிலும் அவன் அவளைப் பின்னால் இருந்து பார்ப்பதையும் தவிர்த்தான். அவனைத் தீவிரமாகக் கண்காணிக்கிறார்கள் என்பதால் அவன் அவளை அடிக்கடி பார்ப்பதும் ஆபத்து என்று நினைத்தான். ஆனால் அவளைப் பார்த்து ரசிக்கவும் முடியாதது அவன் மனதிற்கு ஒரு குறையாக இருந்தது. அதனால் வகுப்புகளில் மனம் முழுக் கவனம் செலுத்த மறுத்தது.

 

ஸ்ரேயாவுக்கு அவன் அடிக்கடி அவளைப் பார்ப்பதை நிறுத்தியதும் மனதை வாட்டியது. காதலில் என்ன தான் வெளியே அலட்சியத்தைக் காட்டினாலும்,  எதிர்ப்பக்கமும் அதே அலட்சியத்தைக் காட்டினால் மனம் சகிப்பதில்லை. அலட்சியத்தைக் காண்பிப்பதே எதிர்ப்பக்கம் இறங்கி வர வேண்டும், இன்னும் நெருங்க வேண்டும் என்பதற்காகத் தானே? அது எதிர்ப்பக்கத்தின் அலட்சியத்தையும் வளர்த்து, மேலும் இடைவெளியை அதிகரித்தால், ஏற்படுவது துக்கமே அல்லவா? அவளுக்கு அவள் மேலேயே கோபம் வந்தது. ’முதலில் இது காதலே அல்ல முட்டாளே அதைப் புரிந்து கொள். ஆரம்பத்தில் நீ உணர்ந்ததைப் போலவே அவனும் உணர்ந்ததாய் நீ நினைத்ததே உன் கற்பனை தான். கற்பனையை வளர்த்துக் கொண்டே போய் ஏன் தொடர்ந்து கஷ்டப்படுகிறாய் மனமே? இன்று இங்கிருந்து போகும் போது அவனிடம் வாயால் மட்டுமல்லாமல் மனதாரவும்குட் பைசொல்லி அவனை மறந்து விடு. கோபம், வருத்தம் எல்லாமே கூட ஒருவகையில் பந்தங்கள் தான். அவை இன்னும் அவன் முக்கியம் என்பதையே வேறுவிதமாகச் சொல்கின்றன. எனவே அதைக்கூட வைத்துக் கொள்ளாதே. அவனிடம் இருந்து கற்றுக் கொள். அவனைப் போலவே அலட்சியமாய் விலகி விடு...’ என்றெல்லாம் மனதிடம் சொன்னாள்.

 

துரதிர்ஷ்டவசமாக மனம் நல்ல அறிவுரைகளை ரசிப்பதோ, ஏற்றுக் கொள்வதோ இல்லை.  அது வேறு விதமாக நினைத்தது. ’அவன் இப்போதும் அடிக்கடி உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவன் மீது இருக்கும் கோபத்தால் நீ அதை உணராமல் இருக்கலாம்என்று சொன்னது. அவளும் வெட்கத்தை விட்டு அவனை மூன்று தடவை திரும்பிப் பார்த்தாள். அவன் பார்வை அவள் மீது இல்லை. ஆரம்பத்தில் அவனுக்கு அவள் மீது இருந்த ஈர்ப்பு இப்போது முழுவதுமாக இல்லாமல் போய் விட்டது போலிருக்கிறது. அவளுக்கு ஏனோ அழத் தோன்றியது. பின்பும் அவனைத் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. ஆனால் அவளுடைய சுயகௌரவம் திரும்பிப் பார்க்க அனுமதிக்கவில்லை. ’போதும். இனி வேண்டாம்.’ என்று கோபத்துடன் மனதுக்குக் கட்டளையிட்டு வகுப்பில் சொல்லிக் கொடுத்ததில் கவனம் செலுத்த முயன்றாள்.

 

ஸ்ரேயா மூன்று முறை திரும்பிப் பார்த்தது ஷ்ரவனின் கவனத்துக்கு வராமல் இல்லை. அவள் ஒவ்வொரு முறை அவனைப் பார்த்த போதும் அவன் இதயமும் காயப்பட்டது. அவளுடைய எண்ணங்களை அவனால் உணர முடிந்தது. ’ஸ்ரேயா என்னை மன்னித்து விடுஎன்று அவன் திரும்பத் திரும்ப மனதினுள் மன்னிப்பு கேட்டான்.

 

அன்று கடைசி வகுப்பும் முடிந்தவுடன் எல்லோரும் ஒருவருக்கொருவர் வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டார்கள். அப்படி ஸ்ரேயா அவனிடமும் வந்தாள். எல்லோரிடமும் கைகுலுக்கியது போலவே அவனிடமும் கைகுலுக்கிய போது அவள் முதல் நாள் உணர்வையே மீண்டும் பெற்றாள். அவள் தன்னையே மனதினுள் திட்டிக் கொண்டு, அவனிடம்  வறண்ட குரலில்குட் பைசொன்னாள்.  

 

அவன் கைகுலுக்கிய போது அவளுடைய கண்களைப் பார்த்துமீண்டும் சந்திப்போம்என்று புன்னகையுடன் சொல்லி விட்டு, உடனே அவள் அருகில் இருந்த கமலம்மாவின் கையைக் குலுக்கி அவருடன் பேச ஆரம்பித்தான். ஸ்ரேயாவுக்கு இனி சிறிது நேரம் அவனருகே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அவள் இனி அவனைப் பார்க்க விரும்பவில்லை. பார்த்து திரும்பவும் காயப்பட விரும்பவில்லை. அவசரமாக அவள் தனதறைக்கு விரைந்தாள். கிளம்பிச் செல்லும் போது, அறைக்கு அருகிலும் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தைத் தவிர்க்க ஆசைப்பட்டாள்.

 

ஷ்ரவன் அறையிலிருந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, ஸ்ரேயா முன்பே போய் விட்டது தெரிந்தது. யோகாலயத்திலிருந்து வெளியே வந்து அவன் டாக்ஸியில் ஏறிய போது சுமார் இருபதடி தள்ளி இருந்த காரும் கிளம்பியதைக் கவனித்தான். அந்தக் காரில் இருந்த இரண்டு தடியர்கள் யோகாலயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உடனடியாக அவனால் அனுமானிக்க முடிந்தது.

 

டாக்ஸியில் அவன் செல்லும் போது திரும்பிப் பார்க்கா விட்டாலும் அந்தக் கார் அவனுடைய டாக்ஸியைப் பின் தொடர்வதை அவனால் உணர முடிந்தது. அது அவன் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான்.

 

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியவன் ஹைதராபாத் செல்லும் ரயிலுக்காக சுமார் அரை மணி நேரம் காத்திருந்தான். அறிவிப்புப் பலகையில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் ஹைதராபாத் செல்லும் ரயில் வரப்போகும் அறிவிப்பு வந்தவுடன் எழுந்து சென்றான். அவன் ஒரு முறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

 

அவனுக்குப் பின்னால் நான்கு வரிசைகள் தாண்டி அமர்ந்திருந்த அந்த இரண்டு தடியர்களும் மிகவும் கவனமாக அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தார்கள். ஷ்ரவன் ரயில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் ஒருவன் அங்கேயே நிற்க, மற்றவன் மெல்ல ரயிலுக்குள் நோட்டமிட்டபடியே பிளாட்பாரத்தில் நடந்தான். ஷ்ரவன் உள்ளே அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் சிறிது தூரம் சென்று அங்கு நின்று கொண்டான்.

 

இருவரும் அந்த ரயில் கிளம்பிச் செல்லும் வரை அங்கேயே நின்றிருந்தார்கள். இருவர் பார்வையும் ரயிலிலிருந்து இறங்குபவர்கள் மீதே தங்கியிருந்தது. ரயில் கிளம்பியது. அப்போதும் அவர்கள் இருவரும் அங்கேயே நின்றிருந்தார்கள். ரயில் அவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்து விட்டுத் திருப்தியுடன் வெளியேறினார்கள்.

 

இருவரில் ஒருவன் பாண்டியனிடம் அலைபேசியில் பேசினான். “ஐயா, அவன் ஹைதராபாத் ரயில்ல தான் போய்கிட்டிருக்கான். ரயில் போய் அஞ்சு நிமிஷமாச்சு

 

பாண்டியன் அந்தத் தகவலில் திருப்தியடைந்தார். ஹைதராபாதிலிருந்து ஷ்ரவன் வந்த டிக்கெட்டை அவரே பார்த்திருக்கிறார். அதே போல் அவன் ரயிலில் ஹைதராபாத்திற்கே திரும்பிச் செல்வதை அவருடைய ஆட்களும் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவன் பொய் சொல்லவில்லை என்பது தெரிகிறது. அவன் சொன்னது போல் துறவியாகத் திரும்பி வந்தால் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று அவர் எண்ணினார்.

 

ரயில் கிளம்பி ஐந்து நிமிடங்கள் ஆன பின் ஷ்ரவன் தன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு எழுந்து கழிவறைக்குச் சென்றான். தன் தலைமுடியை வாரிய விதத்தை மாற்றிக் கொண்டான். தன் கண்களில் வைத்திருந்த லென்ஸை வெளியே எடுத்தான். தன் தோற்றத்திலும் சில மாற்றங்களைச் செய்து கொண்டு பழைய ஷ்ரவனாக மாறினான்.  சூட்கேஸோடு சில ரயில் பெட்டிகளைக் கடந்து போய் ஒரு கதவருகே நின்றான். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த தடியர்களே இப்போது அவனைப் பார்த்தாலும், சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் பின் தொடர்ந்து வந்த ஆளென்று அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.  தோற்றத்தில் மட்டுமல்லாமல் அவன் நடை, பாவனையில் கூட நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

 

சில நிமிடங்களில் சென்னை சென்ட்ரல் செல்லும் இன்னொரு ரயில் வந்தது. ஷ்ரவன் அதில் ஏறிக் கொண்டான். அவன் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன...


(தொடரும்)

என்.கணேசன்







Thursday, February 20, 2025

சாணக்கியன் 149

 

காவிஷ்ணு கோயில் பூசாரிக்கு பிரதம அமைச்சர் ராக்‌ஷசர் அழைக்கிறார் என்ற தகவல் மறுநாள் காலையில் கிடைத்தவுடன் மனதில் பதற்றம் உருவாகியது. ராக்‌ஷசர் அழைக்கிறார் என்றால் எதோ பிரச்னை அழைக்கிறது என்று அர்த்தம் என உள்ளுணர்வு எச்சரித்தது. பெரும்பாலும் அந்த மகான் விஷயமாகத் தான் அவரை ராக்‌ஷசர் அழைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. இளவரசர் சுதானுவைப் போல ராக்‌ஷசருக்கும் அந்த மகானிடம் எதாவது கேட்க வேண்டி இருக்கலாம். அல்லது வேறு விஷயமாகவும் இருக்கலாம். அந்த வேறு விஷய யூகம் தான் பதற்றத்தை அதிகப்படுத்தியது.

அவசர அவசரமாக பூசாரி ராக்‌ஷசர் முன் சென்று நின்று வணங்கினார். ராக்‌ஷசர் ஒரு குற்றவாளியை நீதிபதி ஆராய்வது போல் சிறிது நேரம் ஆராய்ந்து விட்டுக் கேட்டார். “நேற்று கோயிலுக்கு ஒரு மகான் வந்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவரா?”

“இல்லை பிரபு. இதற்கு முன்பு ஒரே ஒரு முறை கோயிலுக்கு வந்தவர் என்ற அளவில் தான் தெரியும்.”

“அப்படியானால் இளவரசருக்கு அவர் மிகவும் வேண்டப்பட்டவரோ?”

“இல்லை பிரபு. இளவரசரும் அவரை, சென்ற முறை கோயிலுக்கு வந்த போது தான் முதல் முறையாகப் பார்த்திருக்கிறார்.”

ராக்‌ஷசர் ஒன்றும் சொல்லாமல் பூசாரியையே யோசனையுடன் பார்க்கவே பூசாரி இந்த மனிதரிடம் அனைத்தையும் சொல்லி விடுவதே பாதுகாப்பு என்று உணர்ந்தவராக அந்த மகான் சென்ற முறை வந்ததிலிருந்து நேற்று வந்து போனது வரை அனைத்தையும் சொன்னார்.

ராக்‌ஷசருக்குக் குழப்பமாக இருந்தது. சென்ற முறை மகான் அதிகாலையில் கோயிலுக்கு  வந்த பிறகு தான் அரசியும், சுதானுவும் சென்றிருக்கிறார்கள். யாரிவர் என்று அரசி கேட்டதிலிருந்து முந்தைய பரிச்சயம் அவர்களுக்கும், அந்த மகானுக்குமிடையே இல்லை என்பது நிச்சயம்.

சென்ற முறை அவர் வந்த போது எதோ அருள்வாக்கை இளவரசருக்குச் சொன்னார் என்றீர்களே? என்ன சொன்னார்?”

“அந்த மகான் குரல் கரகரத்த குரல் பிரபு. மிகத் தாழ்ந்த குரலில் அவர் சொன்னதால் அது என்ன என்று என் காதுகளில் தெளிவாக விழவில்லை…”

நேற்று சுதானுவே பொற்காசுகளைக் கொடுத்து இவரை வெளியே அனுப்பி விட்டிருக்கிறான்.  அதிலிருந்து என்ன பேசுகிறார்கள் என்பதை பூசாரி அறிந்து கொள்வதில்  அவர்களுக்கு விருப்பமில்லை என்பதும் தெளிவாகிறது. பூசாரி பொற்காசுகளை வாங்கிக் கொண்டது போல அந்த மகான் தாம்பாளத்துடன் கிடைத்த சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு விடவில்லை, அதை விட்டு விட்டே போயிருக்கிறார் என்பதை எண்ணுகையில் அவர் உண்மையாகவே ஆன்மிகப் பெரியவராய் தான் இருக்க வேண்டும்.

“இப்போது அந்த மகான் எங்கே?”

“தெரியவில்லை பிரபு. வேறெதாவது கோயிலுக்குப் போயிருப்பார்.”

பூசாரியின் அனுமானத்தை ராக்‌ஷசர் ரசிக்கவில்லை என்பது அவர் முகத்தின் கடுமையிலிருந்து தெரிந்தது. “இன்னொரு முறை அந்த மகான் வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி இளவரசர் சொல்லியிருக்கிறாரா?”

“இல்லை பிரபு”

“சரி. அந்த மகான் வந்தாரானால் என்னிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். அந்த மகானைப் போக விட்டு விடக்கூடாது. புரிந்ததா?”

பணிவுடன் தலையசைத்து விட்டுக் கிளம்பிய பூசாரிக்கு ராக்‌ஷசரிடம் அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டது தெரிந்தால் சுதானுவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் வந்தது. ராக்‌ஷசர் அழைத்து குடைந்து விசாரித்தார் என்பதை அவராகவே தெரிவித்து விட்டால் சுதானுவிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்று தோன்றியது. தெரிவித்ததற்கு ஏதாவது சன்மானம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றும் தோன்றியது. இன்னும் சில பொற்காசுகள் கிடைத்தால் மகளின் திருமணத்தைச் சிரமமில்லாமல் முடித்து விடலாம்…. இப்போதே சென்று தெரிவித்தால் ராக்‌ஷசரின் ஒற்றர்கள் கண்களில் பட்டு விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் இருட்டிய பிறகு அரண்மனைக்குச் சென்று பேசுவது நல்லது என்று முடிவு செய்தார்.


சுதானு கோபத்துடன் தாயிடம் கேட்டான். “பாடலிபுத்திரத்தில் இளவரசரான எனக்குக் கூட பிரதம அமைச்சரின் அனுமதியில்லாமல் யாரையும் சந்திக்க உரிமை இல்லையா?”

தாரிணி சொன்னாள். “புதிர் போடாமல் விஷயத்தைச் சொல் மகனே”

“நேற்று நாம் அந்த மகானைச் சந்தித்து விட்டு வந்த தகவல் தெரிந்து பூசாரியை அழைத்து முழு விவரத்தை ராக்‌ஷசர் கேட்டிருக்கிறார். அவருக்கு தேவைக்கும் அதிகமாக இடம் கொடுத்து வைத்திருக்கிறார் தந்தை.”

”மெல்லப் பேசு மகனே. அவரால் தான் நிறைய விஷயங்கள் மகதத்தில் சரியாக நடப்பதாய் உன் தந்தை நினைக்கிறார். அவரைப் பற்றி யாரும் எந்தப் புகாரும் சொல்வதை உன் தந்தை விரும்புவதில்லை.”

“ஆனால் இளவரசனான என்னையே வேவு பார்ப்பதும், நான் யாரைச் சந்தித்து என்ன பேசினேன் என்று விசாரிப்பதும் எல்லை மீறும் செயல்களாகவே நான் பார்க்கிறேன். நான் மன்னனாகும் போது அவரை வைக்க வேண்டிய இடத்திலேயே வைத்திருப்பேன் தாயே”   


போருக்கான ஆயத்தங்கள் பற்றி நடந்த அடுத்த ஆலோசனைக்கூட்டத்தில் புதியவர்களாக இரண்டு இளவரசர்களும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கான இருக்கைகள் அரசருக்கு அருகிலேயே இருக்காமல் சேனாதிபதி அருகே இருந்ததை சுகேஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சுதானு மரியாதைக் குறைவாகவே நினைத்தான். அரசரின் தனி இருக்கைக்கு இருபுறமும் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒரு புறம் முதலாவதாக ராக்‌ஷசர் இருக்கையும், அவர் அருகே மற்ற அமைச்சர்கள் இருக்கைகளும் இருக்க இன்னொரு புறம் முதலாவதாக சேனாதிபதி இருக்கையும், அவனருகே சுகேஷ், அடுத்ததாக சுதானுவின் இருக்கைகளும் இருந்தன ’நீங்கள் இளவரசர்களாக இருக்கலாம். ஆனால் இங்கு உங்கள் இடம் எங்களுக்குப் பின்பு தான்’ என்று அது அறிவிப்பதாக சுதானுவுக்குத் தோன்றியது. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்பவர் ராக்‌ஷசர் என்பதால் அவர் மீது அவனுக்குக் கோபம் கூடியது.

தனநந்தன் கேட்டான். “எதிரிகள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எங்கே நம்மைத் தாக்க உத்தேசித்திருக்கிறார்கள்?”

ராக்‌ஷசர் சொன்னார். “இப்போது எல்லோரும் சந்திரகுப்தனின் வாஹிக் பிரதேசத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் திட்டம் என்ன என்பது தெரியவில்லை. மகதத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி எல்லைகளில் தான் அவர்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் ஒற்றர்கள் வாஹிக் பிரதேசத்திலும், நமது வடக்கு, மேற்கு பக்க எல்லைகளிலும் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.” சுதானு கேட்டான். “ஆனால் தகவல் தெரிந்த பின்பு நம் படைகள் அங்கே சென்று சேருமளவு நமக்கு காலம் போதாதே?”

ராக்‌ஷசர் சொன்னார். “உண்மை. எனவே வடக்கு, மேற்குப் பகுதிகளில் முன்பே கணிசமான படைகளை நிறுத்துவது நல்லதென்று நினைக்கிறேன். இரு திசைகளிலும் இரண்டிரண்டு இடங்களில் நாம் படைகளை நிறுத்தினால், அங்கிருந்து எங்கே தேவையோ அங்கே தேவைப்படும் நேரத்தில் நகர்த்திக் கொள்ள முடியும்…” சுகேஷ் சொன்னான். “அது நல்ல யோசனை”

ராக்‌ஷசர் தொடர்ந்து ஆயுதங்கள் தயாரிக்கும் பணி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னார். பத்ரசால் வீரர்களின் போர்ப்பயிற்சிகள் முழு வீச்சில் நடப்பதைச் சொல்லி விட்டு போருக்கு வீரர்கள் தயார்நிலையில் இருப்பதாகச் சொன்னான். விரிவான ஆலோசனைகளும், திட்டங்களும் தொடர்ந்தன.

மறுநாளே படைகளைப் பிரித்து அனுப்பும் ஆயத்தப்பணிகள் ஆரம்பித்தன. அது சேனாதிபதி பத்ரசாலின் பொறுப்பிலேயே நடந்தது என்றாலும் அந்த இடத்திற்கு ராக்‌ஷசரும் வந்து சேர்ந்தார். பத்ரசால் அவர் வருகையால் சஞ்சலம் அடைந்தான்.  ஒரு வார்த்தையும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவர் போல் அவர் நின்று கொண்டிருந்தாலும் அதில் அவன் ஆபத்தை உணர்ந்தான்.

அந்தச் சமயத்தில் சுதானுவும் அங்கே வந்து சேர்ந்தான். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரத்தைத் தந்தை தந்த பிறகு இனி முக்கியமான வேலைகளில் கலந்து கொள்வதும், பொறுப்புகளைத் தானாக ஏற்றுக் கொள்வதும் அவருக்கு அவன் மேல் இருக்கும் அபிப்பிராயத்தை உயர்த்தும் என்று அவன் கணக்குப் போட்டான். சுகேஷை விட அவன் மேலானவன், தகுதியானவன் என்கிற எண்ணத்தை அவருக்கு வர வைத்து விட வேண்டும் என்ற துடிப்போடு இருந்ததால் அங்கு வந்தவனுக்கு ராக்‌ஷசரும் அங்கிருப்பது திருப்தியை அளித்தது. அவன் ஈடுபாட்டை அவரும் அறியட்டும், சுகேஷை விடத் துடிப்பானவன், பொறுப்பானவன் என்ற அபிப்பிராயம் அவருக்கும் வரட்டும் என்று நினைத்தான். அவர் கருத்துக்கு அவன் தந்தையிடம் எப்போதுமே கூடுதல் மதிப்பு உண்டு.

குதிரைகள் வரிசை வரிசையாக வந்து நிறுத்தப்பட ஆரம்பித்த போது ராக்ஷசர் ஏதோ ஒரு பிழையை உணர்ந்தார். ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் கண்கள் விரிந்து பரந்து நின்ற குதிரைப்படையை அலச ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவருக்குப் பிழையாய் தெரிந்த விஷயம் என்ன என்பது புலப்பட்டது. அவர் அறிந்த வரை அவர்களது குதிரைப்படையில் ஏறத்தாழ பாதியளவு உயர்ஜாதிக் குதிரைகளான பாரசீகக்குதிரைகள் . ஆனால் இப்போது அவர் கண்முன் பாரசீகக் குதிரைகள் பாதியளவு இல்லை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவும், மற்ற குதிரைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் தெரிந்தது.

 (தொடரும்)

என்.கணேசன்   




Monday, February 17, 2025

யோகி 90

ல்பனானந்தாவை ஷ்ரவனும் அமைதியாகப் பார்த்தான். தன்னுடைய நியாயமான கேள்விக்கு அறிவுபூர்வமான பதில் அவளிடமிருந்து வரும் என்று காத்திருப்பது போல் காட்டிக் கொண்டான்.

 

கல்பனானந்தா சிறிது மௌனத்திற்குப் பிறகு சொன்னாள். “ஷ்ரவன் யோகாலயத்தில் யோகிஜி மட்டும் இல்லை. என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் யோகிஜிக்கு சமமானவர்கள் அல்ல. எங்களுக்கு எதிரிகள் இருக்கலாம். அவர்கள் எங்களுக்கு எதிராக ஏதாவது ஏவல் சக்தியை அனுப்பலாம். அப்படி யாராவது, ஏதாவது ஏவல் சக்தியை எங்களில் யாருக்காவது அனுப்பி, அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் சொன்னது போல யோகி வாழும் இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஏவல் சக்தியும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உங்களையே அந்த ஏவல் சக்தி தாக்கினாலும் கூட, நீங்கள் இங்கிருப்பதால், உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தி விடவில்லை பார்த்தீர்களா? மற்றபடி யோகிஜிக்கு நல்லவர் கெட்டவர் எல்லாம் ஒன்று தான். அனைவர் மேலும் அவர் கருணையே காட்டுவார். அதனால் அந்த ஏவல் சக்திகள் இங்கே உலாவுவதைக் கூட அவர் தடுக்கவில்லை. ஆனால் அந்த ஏவல் சக்திகள் இங்குள்ளவருக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்திவிட முயன்றால் அதை அவர் கண்டிப்பாகத் தடுப்பார்.”

 

ஷ்ரவன் மனதினுள் அவளுடைய வாதத்திறமையை மெச்சினான்.  நெஞ்சில் கை வைத்து பணிவு காட்டிச் சொன்னான். ” நன்றி சுவாமினி. நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை.”

 

கல்பனானந்தா தலையசைத்தாள். அவள் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அதே சமயம், அவனை அனுப்பவும் முயற்சிக்கவில்லை. அதனால் ஷ்ரவன் தனக்குச் சிலகாலமாய் தீவிரமாக இருக்கும் துறவற சிந்தனைகளைச் சொன்னான். இந்த முறை வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் துறந்து விட்டு இங்கேயே வந்து, மீதி வாழ்நாளை யோகிஜியின் நிழலில் கழிக்க விரும்புவதாகச் சொன்னான். இது போன்ற அமானுஷ்ய சக்திகளைக் காட்டிலும் யோகிஜியின் தெய்வீக சக்திகளில் கடுகளவாவது தனக்கு வாய்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாய் அவன் சொன்னான்.

 

அவள் அவன் சொன்னதை வரவேற்கவும் இல்லை, எதிரான கருத்தைச் சொல்லவும் இல்லை. ‘புரிகிறதுஎன்பது போல தலையசைத்துவிட்டுச் சொன்னாள். “நீங்கள் ஆசைப்படுவது நிறைவேற என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

 

அவன் நன்றி தெரிவித்து விட்டு விடைபெற்றான். அவன் வீசியிருக்கும் தூண்டில் எந்த அளவு அவர்களைக் கவரும் என்று அவனுக்குத் தெரியவில்லை.  ஆபத்தான விளையாட்டில் தான் அவன் இறங்கியிருக்கிறான் என்றாலும், எது வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது.

 

வன் கதையளக்கிறானா, இல்லை உண்மையைச் சொல்கிறானா?” பாண்டியன் பிரம்மானந்தாவிடம் கேட்டார்.

 

பிரம்மானந்தா சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “இவன்  சொல்றதைப் பார்த்தால், ஹைத்ராபாத் சோமையாஜுலு சம்பவம், சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் போல தான் தெரியுது. அது கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கு. ஆனால் உறுதியாய் சொல்ல முடியலை

 

நம்ம நாட்டுல இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்குது. ஒரே மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்கறதால, இந்தக் குழப்பம் தவிர்க்க முடியாததுபாண்டியன் சொன்னார்.

 

தேவானந்தகிரிக்கு சுமார் முப்பது வருஷங்களாவது மாந்திரீகத்தில் அனுபவம் இருக்கும். அதனால் இவன் சொல்கிற சோமையாஜுலு நிஜமான ஆளாய் இருந்தால் தேவானந்தகிரிக்குத் தெரியாமல் இருக்காது.” என்று சொன்ன பிரம்மானந்தா உடனடியாக தன் உதவியாளனை அழைத்து தேவானந்தகிரிக்குப் போன் செய்யச் சொன்னார்.

 

தலையசைத்து விட்டுச் சென்ற உதவியாளன் இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்து தயக்கத்துடன் சொன்னான். “சுவாமிஜியோட சீடன் தான் பேசினான். அவர் ஏதோ பிரஸ்னம் பார்த்துட்டு இருக்காராம். அது முடிஞ்சவுடன நீங்க கூப்பிட்டதாய்ச் சொல்றேன்னான்.”

 

பிரம்மானந்தா உள்ளுக்குள் எழுந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். அவர் அழைத்தவுடன் எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு ஒருவர் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அவரை விட தேவானந்தகிரி பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரஸ்னம், அவருடைய சீடனுக்கு முக்கியமாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை அவரால் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை.

 

பாண்டியன் சொன்னார். “இருக்கவே இருக்கு கூகுள். பார்த்துட்டா போச்சு

 

அவர் தன் ஆள் ஒருவனைக் கூப்பிட்டு கூகுளில் தேடச் சொன்னார். அவன் சிறிது நேரத்தில் கூகுளில் தேடி, தகவல்களைச் சேமித்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான். சோமையாஜுலு என்ற பிரபல மாந்திரீகர் ஹைதராபாத்தில் இருந்தது உண்மை, கூலிப்படையால் அவர் கொல்லப்பட்டதும் உண்மை என்று தெரிந்தது. அந்தச் சம்பவங்களின் காலமும் கிட்டத்தட்ட ஷ்ரவனின் பிள்ளைப்பருவமாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது.

 

ஆனால் சோமையாஜுலுவின் பக்கத்து வீட்டில் வசித்த ஷ்ரவன் என்ற சிறுவனைப் பற்றிய தகவல் ஒன்றும் இருக்கவில்லை. அவர் கொலைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள் அக்காலத்தில் பேசப்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பதும் பாண்டியனுக்குப் புரிந்தே இருந்தது.

 

பிரம்மானந்தாவின் உதவியாளன் வந்து சொன்னான். “தேவானந்தகிரி போன் செஞ்சிருக்கார் யோகிஜி. என்ன சொல்லட்டும்.”

 

பிரம்மானந்தாவின் மனநிலை அவருடைய இறுகிய முகத்தில் தெரிய, பாண்டியன் உடனடியாகச் சொன்னார். “நமக்குத் தான் காரியம் ஆகணும் யோகிஜி. சோமையாஜுலுங்கற மந்திரவாதி ஒரு காலத்துல ஹைதராபாத்தில் இருந்தானா, கொல்லப்பட்டானான்னு வேணும்னா நாம கூகுள்ல தெரிஞ்சுக்க முடியும். ஆனா இப்ப இந்த ஷ்ரவன் சொல்ற மத்த விஷயங்கள் எல்லாம் சரியாய் இருக்க வாய்ப்பிருக்கா, இல்லை இவன் எதோ கதையளக்கறானான்னு தெரிய தேவானந்தகிரியோட உதவி நமக்குத் தேவை.”

 

பிரம்மானந்தா வேண்டா வெறுப்பாக அலைபேசியை உதவியாளனிடமிருந்து வாங்கினாலும், அவர் தேவானந்தகிரியிடம் பேசிய போது, பேச்சில் அவர் மனநிலை வெளிப்படவில்லை. அன்பும், பணிவுமே பேச்சில் வெளிப்பட்டன. “நான் அடிக்கடி அன்புத் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். உங்களுக்கு பல வருஷங்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் இருந்த மந்திரவாதி சோமையாஜுலுவைத் தெரியுமா?”

 

ஆந்திரால அவர் அந்தக் காலத்துல ரொம்பவும் பிரபலம் யோகிஜி. மாந்திரீகத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஆனால் கொலை செய்யப்பட்டு இறந்தார்னு கேள்விப்பட்டேன். ஏன் கேட்கறீங்க யோகிஜி?”

 

இங்கே யோகா தியான வகுப்புக்கு வந்த ஒருத்தனுக்கு ஓநாய் தெரிஞ்சுது, அவன் பிரக்ஞை இல்லாமல் கொஞ்ச நேரம் விழுந்து கிடந்தான்னு சொன்னேனில்லையா, அவன் ஹைத்ராபாத்காரன். அவன் சோமையாஜுலு வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்தவன். அவரோட ஏவல் சக்திகளைப் பார்க்க அவனுக்கு முடிஞ்சிருக்காம். அதனால அவர் அவனைப் பயன்படுத்திக்க முயற்சியும் செய்திருக்காராம். இது எந்த அளவு சரியாயிருக்கும்?”

 

சிறிது யோசித்து விட்டு தேவானந்தகிரி சொன்னார். “பல லட்சம் பேர்ல ஒருத்தனுக்கு அபூர்வமாய் அந்தச் சக்தி சின்ன வயசுலயே கிடைக்கறதுண்டு. அதுலயும் அந்த சக்தி இருக்குன்னு தெரிய வர்றது ரொம்ப ரொம்ப அபூர்வம். அந்தப் பையனே அவர் வீட்டுக்குப் பக்கத்துல இருந்ததால தான் அந்த ஏவல் சக்திகளை பார்க்கற வாய்ப்பு கிடைச்சு, அதனால தெரிஞ்சிருக்கு. அப்படிப் பார்த்தால் கோடியில ஒருத்தருக்கு தான் ரெண்டும் சேர்ந்து அமையும். அந்த மாதிரி ஒருத்தன் கிடைச்சா அவனை மாந்திரீகத்துக்குப் பயன்படுத்திக்கறது உண்டு. அதை என் குருவும் எனக்குச் சொல்லியிருக்கார். ஆனால் இதுவரைக்கும் நான் அப்படிப்பட்ட யாரையும் பார்த்ததில்லை. அதனால எனக்கே நீங்கள் சொன்ன ஆளைப் பார்க்க ஆர்வமாய் இருக்கு.”

 

அவனுக்கு அந்த சக்தி இருக்கறதுல மகிழ்ச்சியில்லை. அவன் ஆன்மீகத்துல ஆழமாய் போக ஆசைப்படறவன். நாளையோட அவன் தியான வகுப்புகள் முடிஞ்சு ஹைத்ராபாத் போயிடுவான்.”

 

நிஜமாவே மாந்திரீகத்துக்கு அது பெரிய இழப்பு தான். ஏன்னா விசேஷ பூஜைகள் செஞ்சு தெரிஞ்சுக்கற விஷயங்களை, ஒரு ஆளை வெச்சே தெரிஞ்சுக்கறது மாந்திரீகத்துல பாதி வேலையைக் குறைச்சுடுது. என்ன ஏவல் சக்தின்னு அவன் மூலம் தெரிஞ்சுகிட்டு, அதற்கு பரிகார பூஜைகள் மட்டும் செஞ்சால் போதுமே.”

 

மேலும் பேச்சை வளர்த்தாமல் சுருக்கமாகப் பேசி விட்டு, இணைப்பைத் துண்டித்த பிரம்மானந்தா பாண்டியனைப் பார்த்தார்.   பேச்சை முழுதும் கேட்டிருந்த பாண்டியன் யோசிக்க ஆரம்பித்தார்.


(தொடரும்)

என்.கணேசன்