சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 12, 2021

யாரோ ஒருவன்? 27


க்யான் சந்த் அரசு அதிகாரிகளை எந்த இடத்திலும்சூழலிலும்
கண்டுபிடித்து விடுவான். அவர்களிடமிருக்கும் தோரணை அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும். தற்போதும் நரேந்திரன் அவனுடைய டிராவல் ஏஜென்சி அலுவலகத்தில் நுழைந்ததும் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே அவனை அறிந்து கொண்டு விட்டான். இந்த ஆள் போலீஸ் அதிகாரியாகவோ, வருமானவரி அதிகாரியாகவோ தானிருக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளில் இந்தப் பகுதி அதிகாரிகள் அனைவரையும் அவன் அறிவான். கம்பீரத் தோரணை தெரிவதால் இந்த ஆள் அவர்களுக்கெல்லாம் மேல்நிலை அதிகாரியாக இருக்க வேண்டும்.

உள்ளே வந்த நரேந்திரன்  தன் விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்ட க்யான் சந்த் அதை வாங்கிப் பார்த்தான். ரா அதிகாரி. ஐபிஎஸ் ஆபிசர்... அவன் தன் அடிவயிற்றில் இனம் காண முடியாத அச்சத்தை உணர்ந்தான். எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் சொன்ன அவன் மிக மரியாதையாக இருக்கையில் அமரச் சொன்னான்.

நரேந்திரன் அமர்ந்தவுடன் க்யான் சந்த்எங்கேயாவது போக வண்டி வேணுமா சார்?” என்று கேட்டபடி மெல்ல உட்கார்ந்து கொண்டான்.

வண்டி எதுவும் வேண்டாம். இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன்னால் உங்கள் கார் ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது இல்லையா. அதைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறேன்...”

ஒரு கணம் அப்படியே சிலை போல க்யான் சந்த் உறைந்தான். பின் கஷ்டப்பட்டு அதிர்ச்சியிலிருந்து மீண்டு சொன்னான். “கேளுங்க சார்

ஒரு கேள்வி ஒருவனிடம் ஏற்படுத்த முடிந்த மாற்றங்கள், அந்தக் கேள்விக்கு அவன் சொல்லும் பதிலை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மனிதன் கண்டிப்பாகச் சில ரகசியங்களைத் தன்னிடம் வைத்திருக்கிறான் என்பதை அந்த ஒரு கணம் தெரிவித்ததாக உணர்ந்த நரேந்திரன் கேட்டான். ”அந்த வெடிகுண்டை வைத்தது யார் என்று தெரியுமா?”

தெரியலை சார். போலீசாலும் கண்டுபிடிக்க முடியலை...”

உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? உங்களுக்கு எதிரிகள் யாராவது செய்த வேலையாயிருக்கும்னு நினைச்சிருக்கீங்களா?”

இல்லை சார்வெடிகுண்டு வைக்கிற அளவுக்கு எல்லாம் எனக்கு எதிரிகள் யாருமில்லை...”

அப்படின்னா உங்கள் டாக்சியில் பயணம் செய்த அந்த இளைஞனுக்காக வைக்கப்பட்ட வெடிகுண்டாக அது இருக்குமா?”

தெரியலை சார். இருக்கலாம்....”

அந்த நாள் நடந்ததை எல்லாம் ஞாபகப்படுத்திச் சொல்லுங்களேன்...”
ரொம்ப வருஷமானதால எத்தனை ஞாபகத்தில் இருக்கும்னு தெரியலை....” என்று சொல்லி ஆரம்பித்தவனிடம் குறுக்கிட்டு நரேந்திரன் சொன்னான். ”ஆனாலும் வெடிகுண்டு வைக்கிறதெல்லாம் வாழ்க்கைல தினசரி நடக்கிற சம்பவமில்லையேஅதிலும் பாதிக்கப்பட்ட ஆளுக்கு அந்த நாள் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்னும் கண்டிப்பா சாகற வரைக்கும் மனசிலிருக்கும்... அதனால சொல்ல ஆரம்பியுங்கள். எல்லாம் ஞாபகத்துக்கு வரும். இறந்து போன அந்த இளைஞன் பேர் என்ன?...”

நரேந்திரன் சொன்ன விதத்திலேயேமறதிக்கு வாய்ப்பேயில்லை. அதனால் ஒழுங்காக நினைவுபடுத்திச் சொல்என்ற கண்டிப்பு தெரிந்ததாக  க்யான் சந்த் உணர்ந்தான். ஆனால் அவனுக்கு உண்மையாகவே அந்த இளைஞனின் பெயர் ஞாபகம் இல்லை. அவன் மெல்லச் சொன்னான். ”பேர் ஞாபகம் இல்லை சார். தென்னிந்தியாவிலிருந்து வந்தவன்....”

சரி. அவனை எங்கேயிருந்து எந்த நேரத்தில் வண்டில ஏத்திகிட்டீங்க? அதுல இருந்து ஆரம்பிங்க

க்யான் சந்த் மிகவும் சிரமமான வேலையைக் கொடுத்தது போல உணர்ந்தான். பெயர் ஞாபகம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட இந்த அதிகாரி நிகழ்வுகளையும் நினைவில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நினைத்தவனாக எச்சிலை விழுங்கியபடி சொல்ல ஆரம்பித்தான். “நான் ஒரு சவாரி முடிஞ்சு காலைல வந்துகிட்டிருக்கறப்ப அவன் ஒரு லாட்ஜ்ல இருந்து வெளியே அவசரமாய் வந்துகிட்டிருந்தான். என் டாக்சியைப் பார்த்தவுடனே கைகாட்டி நிறுத்தினான். ஒரு நல்ல ஷூ கடைக்குப் போகணும், ட்ரெக்கிங் ஷூ வாங்கணும்னு சொன்னான்.  அவனைக் காரில் ஏத்திகிட்டு போனேன்....” இது வரை சரளமாகச் சொல்லிக் கொண்டே வந்தவன் மறுபடி எச்சிலை மென்று விழுங்கி விட்டுத் தொடர்ந்தான். “கொஞ்ச நேரத்துல வெடிகுண்டு வெடிச்சுது. பத்தடி தள்ளி விழுந்தேன். என்ன நடந்ததுன்னே தெரியாமல் மயங்கிட்டேன். எழுந்து பார்க்கிறப்ப ஆஸ்பத்திரில இருந்தேன்...”

அந்த இளைஞன் உங்க கார்ல எத்தனை நேரம் இருந்திருப்பான்....”

அந்த இளைஞன் சம்பந்தமாகக் கேட்கும் கேள்விகள் க்யான் சந்தைத் சங்கடப்படுத்தியது அவன் முக பாவனையிலிருந்தே தெரிந்தது. ”சுமார் இருபது நிமிஷம் இருந்திருப்பான்.” என்று அவன் சொன்னான்.

காரில் எப்போது அந்த வெடிகுண்டு வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?”

தெரியலை...” வேகமாக வந்தது பதில். “போலீஸ்காரர்களுக்கும் அதைக் கண்டுபிடிக்க முடியலை

வெடிகுண்டு வெடித்த நேரம் என்ன?”

காலைல பத்து மணில இருந்து பத்தே காலுக்குள்ளார இருக்கும்...”

இடையில் டாக்சியை எங்கேயாவது நிறுத்தினீர்களா?...”

அந்தச் சாதாரண கேள்வி அவன் முகத்திலிருந்த இரத்தத்தை வடிய வைத்து விட்டது போலத் தோன்றியது.  அவன் முகம் வெளுத்ததைக் கவனித்து நரேந்திரன் மனதில் குறித்துக் கொண்டான். ”சிக்னல்ல நிறுத்தியிருப்பேன். வேற எங்கேயும் நிறுத்தலை….”

அப்படியானால் அந்த வெடிகுண்டு அவனுக்காக வைக்கப்பட்டதாய் இருக்க வழியில்லை. அவன் ஏறுவதற்கு முன்னாலேயே வைக்கப்பட்டதாய் இருக்கும் போல அல்லவா தெரிகிறது?”

அவன் தலையை மெல்ல அசைத்தான். அதை மறுக்க வழியில்லை.

நரேந்திரன் கேட்டான். “அன்றைக்குக் காலையில் எத்தனை மணிக்கு சவாரிக்குக் கிளம்பினீர்கள்?”

ஒன்பது மணியிருக்கும்.”

அந்தத் தென்னிந்திய இளைஞன் எத்தனாவது சவாரி?”

இரண்டாவது…”

முதல் சவாரி யார் என்று நினைவிருக்கிறதா? அது தெரிந்த ஆள் தானா?”

ஞாபகம் இல்லை சார். தெரிந்த ஆள் இல்லை. தெரிந்த ஆளாய் இருந்திருந்தால் எனக்கு நினைவிருக்கும்

அந்த விபத்தில் உங்கள் காயங்கள் ஆற எத்தனை காலம் தேவைப்பட்டது. நீங்கள் எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றீர்கள்?”

அரசாங்க ஆஸ்பத்திரியில் தான் இருந்தேன் சார். ஒரு மாசம் ஆச்சு காயங்கள் ஆற...” அவன் அதைச் சொன்ன போது அவனிடம் ஒருவிதப் பயம் தெரிந்தது போல் நரேந்திரனுக்குத் தோன்றியது. இதில் ஏதோ ஒரு தகிடுதத்தம் இருப்பதாக அவன் உள்ளுணர்வுக்குப் பட்டது. அதற்கேற்ற மாதிரி போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டுகளில் புகைப்படங்கள் இல்லை. எப்போதும் இது போன்ற வெடிகுண்டு விபத்துகளில் சம்பவ இடம், பாதிக்கப்பட்ட ஆட்கள், வாகனம் எல்லாவற்றின் புகைப்படங்களும் கூட வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த விபத்தின் புகைப்படங்களோ, காயப்பட்டு விழுந்து கிடக்கும் ஆட்களின் புகைப்படங்களோ கூடப் போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டுகளில் இல்லை என்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.   

டாக்சியை இரவில் எங்கே நிறுத்துவீர்கள்?” நரேந்திரன் கேட்டான்.

என் வீட்டின் முன்னால் தான் சார்

இரவிலிருந்து காலைக்குள் யாராவது வெடிகுண்டை வைத்திருக்கலாம். அப்படித் தானே?”

க்யான் சந்துக்கு இந்தக் கேள்விகள் போகும் போக்கு பிடிக்கவில்லை. ‘இந்த ஆள் கேள்விகளை நிறுத்தினால் தேவலைஎன்று தோன்றினாலும் அதை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் தவித்தபடி அவன் மெல்லத் தலையை ஆட்டினான்.

ஆனால் அந்த வெடிகுண்டு வைத்தவனின் இலக்கு நீங்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால் இருபத்தியிரண்டு வருடம் கழித்தும் நீங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்…”

க்யான் சந்த் தலையசைத்தான். நரேந்திரன் யோசனையுடன் சொன்னான்.  “அந்தத் தென்னிந்தியன் உங்கள் டாக்சியில் உட்கார்ந்த பின் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பில்லை என்பதால் இலக்கு அந்தத் தென்னிந்தியனாகவும் இருக்க வழியில்லை. அப்படி நீங்களும் இலக்கில்லை, அந்தத் தென்னிந்தியனும் இலக்கில்லை என்றால் வெடிகுண்டு ஏன் உங்கள் டாக்சியில் வைக்கப்பட்டது?”  

க்யான்சந்த் எச்சிலை விழுங்கியபடி பரிதாபமாக நரேந்திரனைப் பார்த்தான்.

  
(தொடரும்)
என்.கணேசன்  

2 comments:

  1. Narendran''s questioning is class. Gyan chand is hiding something. Very interesting.

    ReplyDelete
  2. நரேந்திரனைப் போல படிக்கும் எங்களையும் குழப்புகிறது...... சம்பந்தமே இல்லாமல் வெடிகுண்டு யாருக்கு தான் வைத்தார்கள்?

    ReplyDelete