சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 26, 2019

இல்லுமினாட்டி 15



க்ரிஷின் ரகசிய அலைபேசி நள்ளிரவு இரண்டு மணிக்கு அலறியது. அந்த ரகசிய அலைபேசி இல்லுமினாட்டி நபர்கள் மட்டுமே அழைக்கக்கூடியது என்பதால் க்ரிஷ் திகைப்புடன் கண்விழித்து அழைத்தது யார் என்று பார்த்தான். எர்னெஸ்டோ!

அவன் திகைப்பு அதிகரித்தது. இல்லுமினாட்டியின் ஆட்கள் மிக முக்கியமாகவும், அவசரமாகவும் இருந்தால் ஒழிய கூப்பிட மாட்டார்கள் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் அப்படி அழைத்தால் உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக அந்த ரகசிய அலைபேசியை எடுத்துப் பேச வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்கள். அவன் ம்யூனிக்கில் இருந்து வந்து மூன்று நாட்கள் கூட முழுமையாய் முடிந்து விடவில்லை. அதற்குள் இல்லுமினாட்டியின் தலைவரே அழைக்கிறார் என்றால்  அதிமுக்கிய அவசரத்தகவல் ஏதோ தான் இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே க்ரிஷ் பேசினான். “ஹலோ”

எர்னெஸ்டோவின் குரல் அமைதியாகவும், விளையாட்டாகவும் ஒலித்தது. “க்ரிஷ் உன் நண்பன் செத்த பிறகு கூட அசத்தி இருக்கிறான்”

க்ரிஷ் குழப்பத்துடன் கேட்டான். “எப்படி?”

எர்னெஸ்டோ நடந்ததை எல்லாம் தெரிவித்தார். க்ரிஷ் நம்ப முடியாமல் தடுமாறினான். பின் மெல்லக் கேட்டான். “சார் நடந்திருப்பதற்கும் அவனுக்கும் சம்பந்தமில்லாமல் கூட இருக்கலாம் அல்லவா? அந்தப் போதை மனிதன் டேனியல் பிழைத்துக் கொண்டது விஸ்வத்துக்குச் சம்பந்தமில்லாத ஒரு மருத்துவ அதிசயமாகக் கூட இருக்கலாம் தானே”

“இருக்கலாம். அந்த டேனியல் விஸ்வம் இறந்த அதே நேரத்தில் இறக்க ஆரம்பித்து உயிர் பிழைக்காமல் இருந்திருந்தால். அந்தக் கிதாரை யார் வாசித்தது என்று நமக்குத் தெரிந்திருந்தால். அந்த ட்யூன் வூடு சடங்கில் ஆவியை ஒரு உடம்பில் ஏற்றுவதாக இல்லாமல் இருந்தால். டேனியல் தன் வாழ்க்கையில் எப்போதுமே பயன்படுத்தாத மூளையின் சக்தி மையங்களில் அசாதாரண செயல்பாடுகள் இல்லாமல் இருந்தால். உயிர்பிழைத்த டேனியல் ரகசியமாக அதிகாலையில் ஆஸ்பத்திரியை விட்டுத் தப்பித்துச் செல்லாமல் இருந்திருந்தால். அந்த அதிகாலை நேரத்தில் அவனை அழைத்துப் போனது யார் என்பதில் எந்த ரகசியமும் இல்லாமல் இருந்தால்…”

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. அவர் சொல்வது அனைத்தும் உண்மை. இதில் விஸ்வத்தின் முத்திரை தெளிவாகவே தெரிகிறது. அவன் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையையும் விட்டு வைக்கவில்லை போலிருக்கிறது.

எர்னெஸ்டோ கேட்டார். “உனக்கு அவன் கூட்டாளி யாராக இருக்கும் என்ற யூகம் ஏதாவது இருக்கிறதா?”

க்ரிஷ் யோசனையுடன் சொன்னான். “அவன் நிறைய பேரை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனுக்குக் கூட்டாளிகள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை”

அவன் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்த ஆள் யாராவது தெரியுமா?” எல்லாவற்றையும் முன்பே அறிந்திருந்த போதும் எர்னென்ஸோ கேட்டார். 


“மனோகர் என்று ஒருவனைத் தெரியும்…” என்று ஆரம்பித்த க்ரிஷ் தன் காதலி ஹரிணியை மனோகர் கடத்திக் கொண்டு போனதையும், எப்படியோ சாமர்த்தியமாக போலீஸ் அதிகாரி செந்தில்நாதன் அவளை மீட்டு அவனைக் கைது செய்ததையும் விவரித்தான். இப்போது அவன் சிறையில் இருப்பதையும் தெரிவித்தான். ”ஆனால் அவனுக்கும் முதலாளியின் தனிப்பட்ட விஷயங்களோ, கூட்டாளிகள் யாராவது இருந்திருந்தால் அதைப்பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.”

எர்னெஸ்டோ சொன்னார். “ஆனால் அந்த வேலையாளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகவல் நினைவு வரலாம். அந்தத் தகவல் மூலம் நாம் இன்னொரு தகவலைக் கண்டுபிடிக்கலாம். இப்படிச் சங்கிலித் தொடராகப் போய் நாம் நமக்கு வேண்டிய தகவலைக் கண்டுபிடிக்கலாம்.”

அவர் கூறியது உண்மை என்றே க்ரிஷுக்கும் பட்டது. “நாளைக் காலையிலேயே அவனை விசாரிக்க ஏற்பாடு செய்கிறேன் தலைவரே”

எர்னெஸ்டோ சொன்னார். ”ஒருவேளை நாம் பயப்படுவது போல் விஸ்வம் டேனியல் உடம்பில் சேர்ந்திருந்தால் பழைய சக்திகள் அவனுக்கு எத்தனை எந்த அளவில் இருக்கும் என்பது தெரியாது. ஆனால் காலப்போக்கில் முழுவதுமாக இல்லா விட்டாலும் அவன் ஓரளவு அந்தச் சக்திகளைப் பெற்று விடலாம் என்பது திபெத்திய யோகியின் அபிப்பிராயம். அப்படி அவன் தயாரானால் முதலில் தொடர்பு கொள்ளும் நபர் மனோகராக இருக்கலாம். அல்லது நீயாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது க்ரிஷ்… நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே கூப்பிட்டுச் சொல்”

க்ரிஷ் கேட்டான். “ஒருவேளை விஸ்வம் டேனியலின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறதா?”

எர்னெஸ்டோ அமைதியாகச் சொன்னார். “டேனியலின் பாஸ்போர்ட், க்ரெடிட் கார்ட், அவன் பயன்படுத்தினால் முதலில் அது நம் கவனத்துக்கு வர ஏற்பாடு செய்திருக்கிறோம்…. அதை அவனும் எதிர்பார்த்திருப்பான். ஆனால் அவன் வேறு ஏதாவது போலி ஐ.டி, பாஸ்போர்ட்டில் உலாவ வாய்ப்பிருக்கிறது. அதை நாமும் எதிர்பார்த்தே இருப்பது புத்திசாலித்தனம்.”

அவர் பேச்சை முடித்துக் கொண்டார். அத்துடன் க்ரிஷின் தூக்கமும் முடிந்து போனது. அவன் இல்லுமினாட்டி கூட்டத்தில் பேச இந்தியாவிலிருந்து கிளம்பிய போது அவன் அண்ணன் உதய்க்கும், காதலி ஹரிணிக்கும் மட்டும் தான் சுருக்கமாக உண்மையைச் சொல்லி இருந்தான். ஆனால் அவன் ம்யூனிக்கில் இல்லுமினாட்டியில் இணைந்ததை அவர்களிடம் கூடச் சொல்லவில்லை. அவர்களைப் பொருத்த வரை அவன் கண்களைக் கட்டிக் கொண்டு இல்லுமினாட்டி கூட்டத்தில் பேசினான். பேச்சின் முடிவில் மர்மமான முறையில் விஸ்வம் இறந்திருந்தான். கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அவனைத் திரும்பவும் ஓட்டல் அறையில் கொண்டு வந்து விட்டார்கள். அவன் மறுநாளே அங்கிருந்து கிளம்பி இந்தியா வந்து விட்டான். இல்லுமினாட்டியில் இணைந்திருப்பது குடும்பத்தினருக்குக் கூடத் தெரிந்திருக்கக்கூடாது என்பது இல்லுமினாட்டியின் விதிமுறை என்பதற்காக மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தால் நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்ற காரணத்திற்காகவும் கூட அதை அவன் மறைத்திருந்தான்.

இப்போது விஸ்வத்தின் இந்தப் புதிய அவதாரம் பற்றி அனாமதேயமாக அங்கிருந்து தகவல் வந்ததாக உதயிடமும், ஹரிணியிடமுமாவது அவன் தெரிவிக்க வேண்டும். ஆபத்து இன்னும் முடிந்து விடவில்லை என்று எச்சரிக்க வேண்டும். அதை நினைத்த போதே மனம் சலிப்பை உணர்ந்தது. இனி விஸ்வம் என்ன செய்யப்போகிறான், அதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பும் கூடவே எழுந்தது. அதிகாலை வரை பல்வேறு அனுமானங்களில் அவன் மனம் அலைபாய்ந்தது.

அதிகாலையிலேயே அவன் போலீஸ் அதிகாரி செந்தில்நாதனுக்குப் போன் செய்தான். புதிய தகவல்கள் கிடைத்திருக்காததால் அவர் க்ரிஷுக்கு வாழ்த்து தெரிவித்தார். “விஸ்வம் செத்துட்டான்னு கேள்விப்பட்டேன். ஒரு பெரிய பீடை நம்மள விட்டது. வாழ்த்துக்கள்”.

”பீடை அவ்வளவு சீக்கிரம் விடற மாதிரி தெரியல சார். செத்த பிறகும் இன்னொரு உடம்புல புகுந்திருக்கிறதா ராத்திரி தகவல் கிடைச்சிருக்கு.”

செந்தில்நாதன் திகைத்தார். விஸ்வத்தைத் தவிர வேறு யாரைப் பற்றி இப்படி ஒரு செய்தி கிடைத்திருந்தாலும் செந்தில்நாதன் சிரித்து அந்தத் தகவலைக் கடந்து போயிருப்பார். ஆனால் விஸ்வத்தின் சக்திகள் பற்றியத் தகவல்கள் பல சேகரித்திருந்த அவருக்கு இதுவும் அவனால் முடியக்கூடிய காரியமே என்று தோன்றியது.

க்ரிஷ் சொன்னான். “அப்படி இன்னொரு உடம்புல அவன் நுழைய வேற யாரோ உதவியிருக்கிறதா தெரியுது. இப்போ அவன் புகுந்திருக்கிறதா அவங்க சந்தேகப்படறது ஒரு பலவீனமான உடம்பில். அதில் அவன் பழைய சக்திகளைப் பயன்படுத்தறதுல சில சிக்கல்கள் இருக்கலாம்கிறாங்க. ஆனா கொஞ்ச நாள்ல அவன் ஓரளவு சுதாரிச்சுடுவான்னும் சொல்றாங்க. அப்படி அவன் சுதாரிக்கிறதுக்கு முன்னாடி அவன் இன்னொரு உடம்புல நுழைய உதவியிருக்கிற கூட்டாளி அல்லது கூட்டாளிகள் பத்தி தெரிஞ்சுக்க முடியுமான்னு கேட்கறாங்க”

செந்தில்நாதன் சொன்னார். “அவன் தனியா தான் எல்லாத்தையும் கத்துகிட்டிருக்கான். எந்தச் சக்தி பெறவும் இன்னொரு கூட்டாளியோட அவன் போனதா இது வரைக்கும் நமக்குத் தகவல் இல்லை….”

க்ரிஷ் சொன்னான். “உண்மை தான். ஆனா யாரோ இப்ப அவன் கூடு விட்டு கூட பாய உதவியிருக்கிறாங்க. அதனால குறைந்த பட்சம் ஒரு கூட்டாளியாவது இருக்கறது நிச்சயம். ஜெயில்ல இருக்கற மனோகருக்கு அந்தக் கூட்டாளி பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கா?”

“அவனுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை…”

“விஸ்வத்தைப் பத்தி அவனுக்குத் தெரிஞ்சிருக்கிற தகவல்கள் ஏதாவது அந்தக் கூட்டாளியை நமக்கு அடையாளம் காட்டலாம் தானே?”

”அதுக்கும் வாய்ப்பு குறைவு தான். ஆனா முயற்சி செய்து பார்க்கலாம்”

“ஒருவேளை விஸ்வம் தன் வேலைகளை ஆரம்பிச்சுட்டா கண்டிப்பா அவன் தன் வேலைக்காரன் மனோகரைத் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பிருக்கு. அதனால இப்போதைக்கு மனோகர் நமக்கு முக்கியமான துருப்புச்சீட்டு. அவனைக் கவனமாவும் ஜாக்கிரதையாவும் பயன்படுத்தணும். பாதுகாக்கணும்…”

“சரி க்ரிஷ்…. நான் இன்னிக்கு காலைலயே போய் அவனைப் பார்த்து விசாரிக்கிறேன். அவனைக் கண்காணிக்கவும் ஆட்களை ஏற்பாடு செய்றேன்”

க்ரிஷ் கடைசியாக மெல்லச் சொன்னான். “சார் நீங்களும் ஜாக்கிரதையா இருங்க”

(தொடரும்)
என்.கணேசன்

13 comments:

  1. எனக்கு ஹார்ட் வீக். ஏதாவது இரண்டு வியாழக்கிழமைகளுக்கு நடுவில் இல்லுமினாட்டியில் அடுத்தது என்ன ஆச்சுன்னு டென்ஷனில் ஏதாவது ஆனால் கணேசன் சார் தான் பொறுப்பு. இதிலிருந்து தப்பிக்க அவர் இந்த நாவலை உடனடியாக வெளியிட வேண்டும். நான் படித்து முடிக்க வேண்டும்.
    இப்படிக்கு
    சுஜாதா

    ReplyDelete
    Replies
    1. yes yes intha suspense ippathan arambam innum namma thala amnushan entry irrugu aiting book sir

      Delete
  2. Nice... bcoz of curiousness u r posting very slowly seems... try to post twice a week

    ReplyDelete
  3. Viswam is really rocking. what he will do ?

    ReplyDelete
  4. அப்பாடி இப்பவாவது நம்ம க்ரிஷ கொண்டுவந்தீங்களே அது வரை சந்தோஷம்!!

    ReplyDelete
  5. விஸ்வம் இன்னும் செயலில் இறங்கவே இல்லை... அதற்க்குள் அனைவரும் கதி கலங்கி போய் விட்டார்கள்...
    இன்னும் அவன் செயலில் இறங்கினால்? அவர்கள் நிலைமை என்னவாகும்???

    ReplyDelete
  6. இதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்று திக் திக் என்று இருக்கிறது......

    ReplyDelete
  7. சஸ்பென்ஸ் தாங்க முடியலை புத்தகம் எப்போ வரும் சார்...

    ReplyDelete
  8. Oh my god oh my god.... BP எகிறுகிறது sir.... crores and crores like sir....

    ReplyDelete
  9. Hyo mudiyala sir... hats off to you sir . ,,

    ReplyDelete