சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 23, 2018

சத்ரபதி – 30



டவுளை நம்புகிறவர்களிலேயே உலகில் இரண்டு வகை உண்டு. முதல் வகை மனிதர்கள் கடவுளிடம் ஒன்றை வேண்டி, அது கிடைக்கும் என்று நம்பிக் காத்திருந்து, அது கிடைத்தவுடன், அதைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் இலக்கை நோக்கிப் பயணிப்பார்கள். இரண்டாவது வகை கடவுளிடம் ஒன்றை வேண்டி, அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீ கொடுத்தால் நான் செய்வேன் என்ற பேரம் இங்கில்லை. நீ கொடுப்பாய் என்று தெரியும், அதனால் நான் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்ற பூரண நம்பிக்கை நிலையுள்ள இந்த இரண்டாம் வகை மிக அபூர்வம். சிவாஜி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவன்.  

டோரணா கோட்டையின் பழுது பார்க்கும் வேலையை அவன் ஆரம்பித்த போது ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ் இருவருமே அவன் கண்மூடித்தனமாய் இதில் இறங்கி விட்டானோ என்று சந்தேகப்பட்டார்கள். ஜீஜாபாய் அவன் நம்பிக்கைகளுக்கு எதிராக என்றுமே எதையுமே சொன்னதில்லை. இறைவன் கண்டிப்பாக வழிகாட்டுவான் தாயே என்று சொன்ன போது எதிராக எதையும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள். ஆனால் தாதாஜி கொண்டதேவ் கடவுளின் பெயரால் கூட ஒருவன் வாழ்வின் யதார்த்தங்களிலிருந்து விலக அனுமதிக்க அனுமதிக்காதவர். அதனால் “இறைவன் வழிகாட்டுவான்” என்ற வாசகத்தையே சிவாஜி அவரிடமும் சொன்ன போது சொன்னார்.

“வழி காட்டிய பிறகு அந்தப் பாதையில் போ சிவாஜி. அதற்கும் முன் என்ன அவசரம்?”

“அந்தராத்மாவில் வழி காட்டி விட்டான் ஆசிரியரே. அதற்குப் பிறகு தயங்குவது அவன் மீது சந்தேகப்படுவது போல. அதனால் தான் அவன் காட்டிய வழியில் போகிறேன். வேண்டியது வேண்டும் போது கண்டிப்பாகக் கிடைக்கும். அதையும் நான் அந்தராத்மாவில் உணர்கிறேன்”

”அந்தராத்மாவின் குரல் என்று நாம் நம்புவது சில சமயங்களில் சைத்தானின் குரலாய் கூட இருக்கலாம் சிவாஜி”

“சைத்தானின் குரலா, அந்தராத்மா அல்லது இறைவனின் குரலா என்று பிரித்தறிய முடியாத பக்குவத்தில் உங்கள் மாணவன் இருப்பதாக நினைக்கிறீர்களா ஆசிரியரே?”

தாதாஜி கொண்டதேவ் ஒரு நிமிடம் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மென்மையாகச் சொன்னார். ”நீ அப்படி இல்லை என்று எனக்குத் தெரியும் சிவாஜி. ஆனாலும் நீ வழிதவறி பின் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வை என்னால் கைவிட முடியவில்லை.”

சிவாஜி புன்னகைத்தான். அவன் பெற்றோருக்குப் பிறகு அவன் நலனில் உண்மையான அக்கறை கொண்ட அன்பான மனிதர் அவர். அவர் மனதை அவன் அறிவான்…..

அவன் இறைவன் மீது கொண்ட அசாதாரண நம்பிக்கை வீண் போகவில்லை என்று நிரூபிக்கும் சம்பவம் மறுநாளே நடந்தது. டோரணா கோட்டையை பழுது பார்க்கும் போது பூமிக்கடியில் புதையல் கிடைத்தது. ஒரு பவானி அம்மன் சிலையும், அதனுடன் சேர்ந்து ஏராளமான தங்கக்காசுகளும், நகைகளும் சேர்ந்து கிடைத்த செய்தி சிவாஜியை எட்டிய போது இறைவன் தன் ஆசியை பிரம்மாண்டமான வழியில் வெளிப்படுத்தியதாகவே உணர்ந்தான். தகவல் கிடைத்த போது ஜீஜாபாய் நிறைந்த மனதுடன் பவானி தேவியைப் பிரார்த்திக்க தாதாஜி கொண்டதேவ் மாணவனுக்காக அகமகிழ்ந்தார்.

சிவாஜி தனக்குக் கிடைத்த புதையலை மதிப்பிட்ட போது அது தாதாஜி கொண்டதேவ் டோரணாக் கோட்டையைப் பழுது பார்க்கத் தேவைப்படும் என்று சொன்ன தொகையை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. அன்னை பவானி அள்ளியே தந்திருக்கிறாள் என்று வணங்கி மகிழ்ந்த சிவாஜி ஆயுதங்களை வாங்கவும், தயாரிக்கவும் நிறைய செலவு செய்தான். அதன் பின்னும் நிறையவே மிஞ்சியது.

”மிஞ்சிய செல்வத்தை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறாய்?” யேசாஜி கங்க் கேட்டான்.

உடனடியாகப் பதிலெதுவும் சொல்லாமல் டோரணாக் கோட்டையின் உச்சியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருந்த சிவாஜியின் பார்வை சில மைல்கள் தொலைவில் இருந்த மூர்பாத் என்ற மலையின் மேல் விழுந்தது. பின் அங்கேயே சிறிது நேரம் நிலைத்தது. பிறகு சுற்றிலும் தொலைதூரம் வரை பார்த்த சிவாஜி மீண்டும் மூர்பாத் மலையையே பார்த்தபடி “இந்த மலையின் அமைப்பும் இது அமைந்திருக்கும் இடமும் என்னைப் பெரியதொரு கோட்டை கட்ட அழைப்பு விடுக்கின்றன யேசாஜி” என்று சொன்னான்.

“அதில் கோட்டை கட்ட தாதாஜி சம்மதிப்பாரா சிவாஜி?” பாஜி பசல்கர் கேட்டான்.

“அவர் அதிகார எல்லை நம் பழைய இருப்பிடத்தோடு முடிந்து விடுகிறது பாஜி. டோரணா கோட்டையிலிருந்து என் அதிகார எல்லை ஆரம்பிக்கிறது. அவரிடம் பணம் கேட்காத வரை அவர் சம்மதம் அவசியவில்லை”

“உன் தந்தை மற்றும் பீஜாப்பூர் சுல்தானின் அனுமதி” பாஜி பசல்கர் கேட்டான்.

“இருவர் அனுமதியும் இந்த விஷயத்தில் எனக்கு அவசியமில்லை பாஜி. அன்னை பவானியே தேவையான செல்வத்தையும் தந்து அனுமதித்த பிறகு மானிடர்களின் அனுமதி எனக்குத் தேவையில்லை…. ஒரு நல்ல நாளாகப் பார்த்து கோட்டை கட்டும் வேலையை ஆரம்பித்து விடப் போகிறேன்….”

தானாஜி மலுசரே எச்சரித்தான். “ஒற்றர்கள் மூலம் பீஜாப்பூர் சுல்தானுக்கு செய்தி எட்டாமல் இருக்காது”

சிவாஜி குறும்புப் புன்னகை ஒன்றை பூத்தான். இப்போது அவனுக்கு பீஜாப்பூர் சுல்தான் ஒரு பிரச்சினையே அல்ல. அவன் தாதாஜி கொண்டதேவுக்குத் தான் பயந்தான். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதை அவன் அறிவான். ஆனாலும் அவன் இந்த விஷயத்தில் முன் வைத்த காலைப் பின் வைக்கப் போவதில்லை. அவர் விருப்பத்திற்கு எதிராக நடந்து அவர் மனவருத்தத்தை சம்பாதிக்கப் போகிறோம் என்பதே அவனுக்கும் வருத்தமாக இருந்தது.

மூர்பாத் மலையில் அவன் கோட்டை கட்ட ஆரம்பித்த போது அவன் எதிர்பார்த்தபடியே அவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்றாலும் அந்த எதிர்ப்பில் தீவிரம் இருக்கவில்லை. அவன் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று அவர் அறிந்தது போலவும், ஆனாலும் தன் பொறுப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது கடமை தான் என்பது போலவும் இருந்தது. பின் அவர் அவனைக் கேட்டார். “நீ இதற்கும் பீஜாப்பூர் சுல்தானின் அனுமதியை வாங்கியிருக்கலாமே. காலி மலையில் நீ உன் செலவில் கோட்டை கட்டுவதற்கு முறைப்படி நீ அனுமதி கேட்டால் அவர் கொடுத்திருக்கவும் கூடுமே?”

“ஆசிரியரே. என் செலவில் நான் பெரியதொரு கோட்டையைக் கட்டுவது எதற்காகவென்று அறிய முடியாத அளவு பீஜாப்பூர் சுல்தான் முட்டாள் அல்ல. மேலும் முன்பே அருகிலிருக்கும் இன்னொரு கோட்டையை நான் கைப்பற்றியிருக்கிறேன். அதனால் இனி என் எந்தப் புதிய முயற்சிக்கும் ஆதில்ஷாவின் அனுமதி கிடைக்காது….”

”சிவாஜி உன் தந்தையும் இதை அனுமதிக்க மாட்டார் என்பதை அறிவாயா?”

“அறிவேன் ஆசிரியரே!”

“பீஜாப்பூர் சுல்தான் ஒரு படையை இங்கே அனுப்பி வைத்தால் என்ன செய்வாய் சிவாஜி”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “உடனடியாகப் படையை சுல்தான் அனுப்பி வைக்கும் சூழல் பீஜாப்பூரில் இல்லை ஆசிரியரே. என் தந்தையுடன் முக்கிய ஒரு படையும் கர்நாடகத்தில் உள்ளது. தஞ்சாவூர் நாயக்கர் படை ஊடுருவக்கூடும் என்ற பயத்தில் அந்த எல்லையில் ஒரு படை உள்ளது. இந்த நிலைமையில் இன்னொரு படையை சிவாஜி என்ற சிறுவனுக்கு எதிராக அனுப்பி வைப்பது பீஜாப்பூர் சுல்தானுக்கு சமயோசிதமும் அல்ல, கௌரவமும் அல்ல….”

தாதாஜி கொண்டதேவ் தன் மாணவனின் அறிவுகூர்மையை எண்ணி உள்ளூர பெருமைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார். “உன் தந்தை எதிர்த்தால் என்ன செய்வாய்?”

"அவருக்கு என் நிலையைத் தெரிவிப்பேன். தந்தைக்கும் பிள்ளைக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது எங்கும் இல்லாததல்லவே ஆசிரியரே…. இது பவானி தேவியே எனக்குக் காட்டிய வழி. கடவுள் காட்டிய வழியில் நான் போவதை மனிதர்கள் எதிர்ப்பது கடவுளையே எதிர்ப்பது போலத் தானே ஆசிரியரே. இதையும் சுட்டிக் காட்டுவேன்....”
               
முகத்தில் இது வரை காட்டிக் கொண்டிருந்த கடுமையை தாதாஜியால் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. அவரையும் மீறி புன்முறுவல் ஒன்று அவர் முகத்தில் எட்டிப் பார்த்தது. அடுத்ததாக அவரும் எதிர்க்க வழியில்லை. அது கடவுளை எதிர்ப்பது போல் என்று சூசகமாகச் சொல்லி விட்டான். அன்றே சிவாஜியின் செயல்களைத் தெரிவித்து ஷாஹாஜிக்கு ஒரு மடலை அனுப்பி வைத்தார். நாளை ஷாஹாஜி அவரைக் குற்றப்படுத்தக்கூடாது…..

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. சுஜாதாJuly 23, 2018 at 6:14 PM

    சிவாஜியும் க்ரேட். அவன் ஆசிரியரும் க்ரேட். மாறுபட்ட பக்கங்களில் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் மதிப்பும் புரிதலும் மிக அருமை சார்.

    ReplyDelete
  2. Sivaji's greatness lies in his heart. A great son of our noble India. Your picturization of him is soul revealing. Nice work sir.

    ReplyDelete
  3. முதலில் குறிப்பிட்டது போல... கடவுள் வழிகாட்டிய விதம்...ரொம்ப..ரொம்ப அருமை...
    சிவாஜியின் செயலும்... அவனது ஆசிரியரின் செயலும் சூப்பர்...

    ReplyDelete
  4. இது போன்ற....கடவுளின் வழிகாட்டல்கள்...நம் அனைவரது வாழ்விலும் ஏற்பட்டிருக்கும்...
    அதனை நினைவுபடுத்தியதற்கு நன்றி ஐயா...
    இந்த பகுதி (சத்ரபதி-30) மிகமிக அருமை..
    பல விசயங்களை புரிய வைத்தது..

    ReplyDelete
  5. ஏதோ நேரிடையாக பார்ப்பது போல் உள்ளது

    ReplyDelete